1 ஏப்ரல், 2008

கண்ணும் கண்ணும்


மக்களின் ஆதரவைப் பெறாமல் தோல்வியடையும் படங்களில் பத்துக்கு ஒன்பது குப்பையாக இருக்கும், சில பல அரிய நேரங்களில் ஏதாவது ஒரு மாணிக்கமும் இந்த குப்பைகளோடு சேர்ந்துவிடுவது ஒன்று. அப்படிப்பட்ட ஒரு படம் கண்ணும் கண்ணும். இது வெளியான நேரத்தில் படம் குறித்த பெரிய எதிர்ப்பார்ப்பில்லை என்பதால் இப்படத்தை தவறவிட்டேன். ஊடகங்களில் நல்லமுறையில் விமர்சனம் வந்தபோது படம் பார்க்க ஆசைப்பட்டேன். விமர்சனம் வெளிவருவதற்குள்ளாகவே பல திரையரங்குகளில் படம் தூக்கப்பட்டு விட்டதால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை ஃபிலிம் சேம்பரில் திரையிடப்பட்டதால் பார்க்க முடிந்தது.

குற்றால அருவிகளுக்கும், தென்பொதிகைச் சாரலுக்கும் நன்றிகூறி, வில்லன் விதியாக அறிமுகம் என்று டைட்டில் கார்டு போடும்போதே இயக்குனர் மாரிமுத்துவுக்கு கவிதைகள் குறித்த பரிச்சயம் உண்டு என்பது தெரிகிறது.

ஓபனிங் சாங், அதிரவைக்கும் டிடிஎஸ் இசை இல்லாமல் கதாநாயகனின் அறிமுகம் பார்த்து ரொம்ப காலமாகிறது. கதாநாயகிக்கு மட்டும் ஓபனிங் சாங். பாடல் வரிகள் இசையால் அழுத்தப்படாமல் அட்சர சுத்தமாக காதில் விழுகிறது. ‘Cleavage' காட்டுவதெல்லாம் நார்மலாகிவிட்ட தமிழ்ச்சூழலில் நான்கு இளம்பெண்கள் இருந்தும் ஒரு நொடி கூட எந்தப் பெண்ணின் இடுப்பையோ, மார்புப்பிளவையோ காட்டாமல் படமெடுத்திருப்பது இயக்குநருக்கு சவலாக இருந்திருக்கக் கூடும். விரசம் தான் வில்லன் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

விரசத்தை விரட்டிய இயக்குனர் வணிகத் தேவைக்காக படத்தோடு பொருந்தாத வடிவேலுவின் காமெடிக் காட்சிகளை இணைத்திருக்கிறார். வாய்விட்டு சிரிக்கும் காமெடி தான் என்றாலும் படத்தின் கதையோடு ஒன்றி பார்க்கும் பார்வையாளர்களுக்கு இடையூறு.

படம் முழுக்க குற்றால அருவி ஒரு பாத்திரமாகவே வந்துப் போகிறது. அஃறிணைகளை கதையோடு ஒன்றவைப்பது இயக்குனர் சரண் பாணி. மாரிமுத்து அதே பாணியை வேறு கோணத்தில் அணுகியிருக்கிறார். பாலசுப்பிரமணியெம் பார்வையில் நாம் காணும் குற்றாலம் நேராகப் பார்ப்பதை விட கொள்ளை அழகாக இருக்கிறது.

அனைவரும் குடும்பத்தோடு காணக்கூடிய திரைப்படம். படத்தில் நம்மை கவரக்கூடிய எல்லா அம்சங்களையும் தாண்டி இயக்குனர் மாரிமுத்துவே ஒவ்வொரு ப்ரேமையும் வியாபித்திருக்கிறார். லாபம் எதுவும் சம்பாதிக்கா விட்டாலும் நல்ல இயக்குனரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு ஹேட்ஸ் ஆப்!! இந்த இயக்குனரிடம் ஒரு ஐந்து கோடியை கொடுத்து படமெடுக்கச் சொன்னால் எல்லாத் தரப்பு மக்களையும் கவருவது போல படத்தை கண்டிப்பாக எடுத்துத் தருவார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

வெகுவிரைவில் ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' போடாமலா இருந்துவிடப் போகிறார்கள்?

இப்படம் வணிகரீதியான வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு சில காரணங்கள் இருக்கலாம் :

- சண்டை இல்லை, குத்துப்பாட்டு இல்லை என்பது போன்ற நிறைய ‘இல்லை' படத்தில் உண்டு. நல்ல படமென்றாலும் கூட தற்போதைய ட்ரெண்டுக்கு சம்பந்தமில்லாத களமாகவும், படைப்பாகவும் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு பழைய படத்தை பார்க்கும் அனுபவம் ஏற்படுகிறது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை இருபடங்களுக்கு இடையே வந்திருந்தால் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

- பின்னணி இசை மகா மோசம். பாடல் காட்சிகளுக்கு இதே இசையமைபாளர் தான் இசையமைத்தாரா என்ற சந்தேகம் வருகிறது. பல காட்சிகளில் பின்னணி இசை வசனத்தை விழுங்குகிறது. வசனங்கள் இல்லாத காட்சிகளில் நம் காதுகளுக்கு தொந்தரவும் தருகிறது.

- படம் தயாராகி மிக தாமதமாக வெளியானால் வெற்றிபெறும் வாய்ப்பு நூற்றில் ஒன்று தான் என்பது தமிழ் சினிமாவின் விதி. நவம்பர் 2006லேயே பலகாட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது தெரிகிறது, படம் வெளியானதோ 2008.

- படம் மார்ச் 21 அன்று வெளியாகியிருக்கிறது. வருடம் முழுவதும் புத்தகத்தை புரட்டிப் பார்க்காத தறுதலை மாணவன் கூட விழுந்து விழுந்து படிக்கும் பரிட்சை நேரமது. பரிட்சை நேரங்களில் வெளியிடப்படும் படங்கள் வெற்றிவாய்ப்பை இழப்பது சகஜமே. பத்தாதற்கு தமிழக வரலாறு காணாத கோடைமழையும் அந்த வாரம் கொட்டித் தீர்த்தது. தியேட்டர் ஈயடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

- இழவு வீட்டுக் காட்சிகள் மெகாநீளம். சீரியலில் இந்தக் காட்சிகளை ரசிக்கும் தாய்க்குலங்கள் கூட சினிமாவில் இழவுக்காட்சிகளை நிராகரிக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணனும், அப்பாவும் தனித்தனியாக இறந்துப் போனாலும் இரண்டு மரணங்கள் குறித்த கதாபாத்திரங்களின் ரியாக்‌ஷன் தனித்தனியாக நேரத்தை விழுங்கும் வகையில் நீளமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

- கதாநாயகி அழும்போது அசிங்கமாக இருக்கிறார். சிரிக்கும்போது கூட ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி அழகாக இல்லை.