நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்காணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூலை, 2017

தேசத்துரோகிகளா ஜனரஞ்சக எழுத்தாளர்கள்?

“அந்த நாள் அப்படியே நினைவிருக்கிறது. 1985, ஜூன் 24. அன்று என் தந்தையார் மறைந்த நாள். அலுவலகத் தோழர்களோடு அமர்ந்து திவச உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

வாசலில் நிழலாடியது. கையில் ப்ரீப்கேஸ். கண்களில் கூலிங் கிளாஸ். சஃபாரி அணிந்த அவர், ‘ஐ ஆம் ராஜேஷ்குமார் ஃப்ரம் கோயமுத்தூர்’ என்று அறிமுகம் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

அப்பாவே நேரில் வந்து ஆசிர்வதிப்பதாக நினைத்து சிலிர்த்தேன்!”

நெகிழ்ச்சியாக தன்னுடைய ஆரம்பகால நினைவுகளோடு பேச ஆரம்பிக்கிறார் ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன். தமிழ் மாத நாவல் உலகின் முடிசூடா மன்னனாகிய இவர், கடந்த முப்பத்தி இரண்டு வருடங்களாக இத்துறையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்கெட் நாவல்’ பத்திரிகையின் 350வது இதழ் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே நம்மிடம் பேசினார்.

“அப்பா, பத்திரிகையுலகில் மிகவும் பிரபலம். ‘வாலிபம்’ எல்.ஜி.ராஜ் என்றால் எல்லாருக்குமே தெரியும். ஃப்ரீலான்ஸ் ஓவியர். ‘ராணி’ பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தை வரைந்தவர் அவர்தான். நிறைய பத்திரிகைகள் நடத்தினார். அப்போதெல்லாம் பத்திரிகையாளன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்குவது வழக்கம்தான்.

நாங்கள் நான்கு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். அடிப்படைக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும். மீதி விஷயங்களை வாழ்க்கை அனுபவத்தில்தான் கற்கவேண்டும் என்பது அப்பாவின் முடிவு.

அப்படிதான் நானும் அந்தகால எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அப்பாவின் சீடனாக அவரது பத்திரிகை வேலைகளுக்கு துணையாக வந்துவிட்டேன். அவரது ஓவியங்களை எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு போவதும், சன்மானம் வாங்கி வருவதுமாக இருந்ததால் இயல்பாகவே எனக்குள் பத்திரிகைகள் மீது ஈடுபாடு வந்துவிட்டது...” கண்சிமிட்டுகிறார் ஜி.அசோகன்.

“எப்போது ‘பாக்கெட் நாவல்’ ஆரம்பித்தீர்கள்?”

“1981ல் அப்பா காலமாகி விட்டார். அவர் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையை நான் ஆசிரியராகி தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியராகும்போது என் வயது இருபதுதான். சில வருடங்களிலேயே மாத நாவல் நடத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பா, அப்போது நிறைய டைட்டில்ஸை ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் ‘பாக்கெட் நாவல்’. 1971 வாக்கில் இந்த டைட்டிலில் சில மாத நாவல்களையும் கொண்டு வந்திருக்கிறார்.

அதையே மீண்டும் தூசு தட்ட முடிவெடுத்தேன். வெகுஜன இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் கடிதம் எழுதி கதை கேட்டேன். மகரிஷி, வாஸந்தி, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். ராஜேஷ்குமார் நேராகவே சென்னைக்கு வந்துவிட்டார். சில எழுத்தாளர்களை அவரவர் வசிக்கும் ஊருக்கே போய் சந்தித்து கதை கேட்டேன். அதுவும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் கதை வாங்க பட்டுக்கோட்டைக்கே போயிருந்தேன். பல எழுத்தாளர்கள் என்னை ஊக்குவித்தாலும், சிலரிடம் கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.
1985, நவம்பர் மாதம் ‘பாக்கெட் நாவல்’ முதல் இதழைக் கொண்டு வந்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஆகியோரின் படத்தைதான் இந்த 350வது இதழின் அட்டைப்படமாக கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட வேறெப்படி என்னால் நன்றியை தெரிவிக்க முடியும்?”

“இத்தனை ஆண்டுகளாக ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது போல சலிக்கவில்லையா?”

“எப்படி சலிக்கும்? விரும்பிதானே இந்த வேலையை செய்கிறேன். ‘பாக்கெட் நாவல்’ கொண்டு வந்த காலத்தில் சந்தையில் சுமார் ஐம்பத்தோரு மாத நாவல்கள் எனக்கு போட்டியாக இருந்தன. அவர்களோடு போட்டியிட்டு முன்னணிக்கு வந்ததே சுவாரஸ்யமான பயணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பிரபலமான எழுத்தாளர்களான பாலகுமாரன், சிவசங்கரி உள்ளிட்டோர் எனக்குதான் முதன்முதலாக மாத நாவல் எழுதினார்கள். அதற்கு முன்பாக அவர்கள் இதழ்களில் எழுதும் தொடர்கள்தான் புத்தகமாகும்.

‘பாக்கெட் நாவ’லைத் தொடர்ந்து ராஜேஷ்குமாருக்கு என்றே ‘கிரைம் நாவல்’, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு என்றே ‘எ நாவல் டைம்’ (பின்னர் பாலகுமாரன் இதில் எழுதினார்), ‘குடும்பநாவல்’ என்று வரிசையாக மாதநாவல்களை தொடங்கினேன்.

மாதநாவல்கள் மட்டுமின்றி வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்கும் ‘ஜாப் கைடுலைன்ஸ்’ மாத இதழ், பங்குமார்க்கெட் தகவல்களை தரும் ‘பங்கு மார்க்கெட்’ வார இதழ், ‘சினிமாலயா’ என்கிற சினிமா மாதப் பத்திரிகை, ‘சக்தி காமிக்ஸ்’ என்கிற காமிக்ஸ் பத்திரிகை, ‘சுபயோகம்’ என்கிற ஜோதிடப் பத்திரிகை என்று ஏகத்துக்கும் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கியவை நான் நடத்திய, நடத்தும் பத்திரிகைகள்தான்”

“மாத நாவல்களில் பெரிய வெற்றியை நீங்கள் எட்டியதற்கு என்ன காரணம்?”

“யார் நாவலை அனுப்பினாலும் வாசித்துவிட்டுதான் போடுவேன். பிரபலமான எழுத்தாளர் கொடுத்த கதையாக இருந்தாலும், வாசகர்களுக்கு தேவையான சுவாரஸ்யம் அதில் இல்லையென்றால், ‘வேறு கதை கொடுங்க’ என்று தைரியமாக கேட்பேன்.

எங்கள் பத்திரிகைகளை பெரிய பதவிகளில் இருப்பவர்கள் நிறைய பேர் வாசிக்கிறார்கள். குறிப்பாக காவல்துறையினர், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள். கிரைம், அவங்க சப்ஜெக்ட் ஆச்சே? அதனால்தான் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவே என்னுடைய வெற்றிக்கு காரணம்.

ஒன்று தெரியுமா? ‘வேறு நாவல் கொடுங்க’ என்று நான் சொன்னபோதும் கோபப்படாமல் வேறு கதையை பிரபலமான எழுத்தாளர்கள் கூட கொடுத்திருக்கிறார்கள். வாசகர் பார்வையிலேயே இப்படி நான் கேட்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும்தான் 350 இதழ்களை நான் கொண்டு வரக் காரணம்”

“அடிக்கடி இலக்கிய நாவல்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களே..?”

“எங்களுடைய ‘குடும்ப நாவல்’ வாசகர்களுக்கு இலக்கியமும் தேவைப்படுகிறது. சுந்தரராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’, ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ உள்ளிட்ட இலக்கிய நாவல்களை நாங்கள் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு. மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை கொடுத்து சம்பந்தப்பட்ட படைப்புகளுக்கு அனுமதி வாங்கி, உரிய சன்மானம் கொடுத்துதான் வெளியிடுகிறோம்.

இதுதவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’ மாதிரியான க்ளாசிக்குகளையும் பாகம் பாகமாக மாதந்தோறும் வெளியிட்டிருக்கிறோம்.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தின் மீதும் ஈடுபாடு உண்டு. இந்த உண்மையை இலக்கியத்தில் இருப்பவர்களாக சொல்லிக் கொள்பவர்கள்தான் உணராமல் இருக்கிறார்கள். வெகுஜன வாசகர்கள் மீது தீண்டாமை அனுசரிக்கிறார்கள்.

அதிலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களை இலக்கியவாதிகள், தேசத் துரோகிகளாகவே பார்க்கிறார்கள். இம்மாதிரி இடைவெளி தீவிர இலக்கியத்துக்கும், வெகுஜன இலக்கியத்துக்கும் ஏற்பட்டு விட்டதால்தான் புதியதாக வெகுஜன எழுத்தாளர்கள் உருவாவது குறைந்திருக்கிறது.

தீவிர இலக்கியம் என்னும் சீரிய இடத்துக்கு வாசகர்களை ஏற்றிவிடும் ஏணியே வெகுஜன இலக்கியம்தான். அது உதாசீனப்படுத்தப் பட்டால் எதிர்காலத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் மட்டுமே இருப்பார்கள். வாசகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அவரவர் எழுதியதை அவரவரே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்”

“புதியதாக எழுத வருபவர்களில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்..?”

“பெண் எழுத்தாளர்கள் அனைவரையுமே குறிப்பிடலாம். கீதாராணி, ஆர்.சுமதி, பரிமளா ராஜேந்திரன், ஜி.ஏ.பிரபா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆண் எழுத்தாளர்களில் ஜி.ஆர்.சுரேந்திரநாத், சுப.தனபால் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தொடர்ச்சியாக எழுதியும் வருகிறார்கள்.

இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நிறைய கதைகள் பரிசீலனையில் இருக்கின்றன”

“இத்தனை ஆண்டுகளில் மறக்கமுடியாத அனுபவம் ஏதாவது..?”

“ஒருமுறை பட்டுக்கோட்டை பிரபாகரோடு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபாகரின் அப்பா எங்கள் இருவரையும் அழைத்து, ‘தொழில் ரீதியாக உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், நீங்கள் இருவருமே எனக்கு மகன்கள்தான். தனிப்பட்ட முறையில் உங்கள் நட்பு சிதையக் கூடாது’ என்று கூறி எங்களிடம் வாக்கு கேட்டார். அதிலிருந்து பிரபாகரிடம் மட்டுமல்ல. அத்தனை எழுத்தாளர்களிடமும் எதிர்ப்பார்ப்பில்லாத நட்பினை தொடர்கிறேன்”

“அடுத்து?”

“எங்கள் நாவல்களை இப்போது ‘நாவல் ஜங்ஷன்’ என்கிற இணையத்தளத்தில் பதிவேற்றுகிறோம். அயல்நாடுகளில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கானோர் வாசிக்கிறார்கள். குறிப்பாக பழைய கிளாசிக் நாவல்கள் இந்தத் தளத்தில் சக்கைப்போடு போடுகிறது.

நீண்டகாலமாகவே அரசியல் விமர்சன பத்திரிகை ஒன்று கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. ‘கும்கி’ என்கிற மாத இதழின் மூலம் அந்த எண்ணம் விரைவில் நிறைவேறப் போகிறது.

பழம்பெரும் எழுத்தாளரும், காமிக்ஸ் உலகின் ஜாம்பவானுமாகிய முல்லை தங்கராசன் அவர்களின் அத்தனை படைப்புகளுக்கும் உரிமை வாங்கி வைத்திருக்கிறேன். வரிசையாக அவற்றை வெளியிடப் போகிறேன்” 

(நன்றி : குங்குமம்)

4 ஜூலை, 2017

சிவகாசி காமிக்ஸ் குடும்பத்தார்!

 இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது.

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்!

லயன் காமிக்ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம். 

“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.

தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன்.

லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?”  கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.
“உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?”

“கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம். 

அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.

எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம். 

அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்”
“வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?”

“அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க. 

ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்‌ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்”

“காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?”

“நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி  அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க”
“முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?”

“சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். 

எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன்  தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.

இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.

வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர்  வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு!”

(நன்றி : குங்குமம்)

16 ஆகஸ்ட், 2016

23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்!

ஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...
“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக முடியாது. என்னை விட்டுடும்மா”, பதிமூன்று, பதினான்கு வயது மாணவனாக இருந்தபோது தங்கம், அவரது அம்மாவிடம் கதறி அழுதுக் கொண்டே சொன்னார்.

அப்போதுதான் ‘கல்கி’ இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை ஆரம்பித்திருந்தார் கல்கி. அத்தொடருக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் மக்களிடையே பிரபலமாகி இருந்தன.

நாடு விடுதலை ஆவதற்கு பத்து ஆண்டுகள் முன்பே தங்கம் பிறந்துவிட்டார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அப்பா காலமானார். இவரை வளர்க்க அம்மா ரொம்பவும் சிரமப்பட்டார். தங்கத்துக்கு நிறைய படிக்க விருப்பம். அவருடைய அம்மாவுக்கும் இவரை படிக்க வைக்க ஆசை இருந்தாலும், குடும்ப வறுமை அதை அனுமதிக்கவில்லை. எனவே தொழிற்கல்வி எதிலேனும் மகனை சேர்த்துவிட்டு சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

கும்பகோணம் நகராட்சி அப்போது சித்திரகலாசாலை என்கிற பெயரில் பள்ளி நடத்திக் கொண்டிருந்தது. தங்கம் அதில் சேர்ந்தார். இந்த ஓவியப்பள்ளிதான் பிற்பாடு புகழ்பெற்ற கும்பகோணம் ஓவியக்கல்லூரியாக மாறி, ஏராளமான ஓவியர்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியது.

பள்ளியில் சேரும்வரை வரைவதில் எவ்வித ஆர்வமோ, அனுபவமோ இல்லாத தங்கம், ஓவியப்பள்ளியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய அம்மாதான் குடும்ப வறுமைநிலையை எடுத்துக்கூறி தொடர்ந்து அங்கே தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஓவியம் பழகினால், தன் மகன் விளம்பரப் பலகைகள் எழுதி பிழைத்துக் கொள்வான் என்று தங்கத்தின் அம்மா கருதினார். 1950ல் தொடங்கி 1956 வரை அந்தப் பள்ளியில் படித்த தங்கத்துக்கு ஒருகட்டத்தில் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு உண்டானது. சித்திரமும் கைப்பழக்கம்தானே?
“அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எந்த ‘பொன்னியின் செல்வன்’ ஓவியங்களை என்னாலே வரையமுடியலைன்னு அழுதேனோ, இப்போ அதே ‘பொன்னியின் செல்வன்’ கதையை சித்திரக்கதை நூலாகவே வரைஞ்சி வெளியிட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இருந்திருந்தா ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்கிறார் ஓவியர் தங்கம்.

அமரர் கல்கியின் எழுத்தை ஓவியத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமம். அந்த கதையின் சம்பவங்களை நன்கு மனதுக்குள் உள்வாங்கி, சித்திரமாக சிந்தித்து பதினோரு அத்தியாயங்களை வரைந்து முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறார் தங்கம். தன்னுடைய பதின்ம வயது கனவினை, எண்பதாவது வயதை எட்டும் பருவத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.

வந்தியத்தேவன் அறிமுகமாகும் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் ஆகிய அத்தியாயங்களின் முக்கிய நிகழ்வுகளை சித்திர விருந்தாக படைத்திருக்கிறார்.

ஓவியப்பள்ளியில் பத்தொன்பது வயதில் படிப்பை முடித்துக் கொண்ட தங்கம், பாலு பிரதர்ஸ் என்கிற ஓவியர்களிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். இந்த பாலு பிரதர்ஸ், அந்த காலத்தில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு வரைந்த பேனர் ஓவியங்கள் மிகவும் பிரபலம். அந்நாளைய திமுக மாநாடுகளுக்கும் இவர்கள்தான் ஓவியர்கள். ‘கலை’ என்கிற சினிமாப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுமே தங்கத்துக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.

1958ல் தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்தார் தங்கம்.

“இப்போ சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நீங்க அமர்ந்து வேலை பார்க்கிற இதே ‘தினகரன்’ அலுவலகம்தான் அப்போ ‘தினத்தந்தி’ அலுவலகமா இருந்தது. அங்கேதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். சி.பா.ஆதித்தனாரிடம் நேரிடையாக வேலை கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தினத்தந்தியில் கார்ட்டூன் போடவும் வாய்ப்பு கொடுத்தாரு. நான் முதன் முதலில் வரைஞ்ச கார்ட்டூன் எதுக்குன்னா, சினிமா தியேட்டரில் சிகரெட் பிடிச்சா காவல்துறை கைது செய்யும்னு அப்போ அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்குதான்.

‘கருப்புக் கண்ணாடி’ன்னு ஒரு சித்திரத் தொடரை தந்தியிலே ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் ‘இவள் இல்லை’ன்னு ஒரு தொடர். இதுவும் நல்லா பிரபலமாச்சி. அவங்களோட மாலை நாளிதழான ‘மாலை முரசு’வில் ‘பேசும் பிணம்’ அப்படிங்கிற சித்திரத் தொடர் வரைஞ்சு எழுத கூடுதலா வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்களோட வார இதழான ‘ராணி’யிலும் ‘முத்துத்தீவு மோகிணி’ங்கிற சித்திரத் தொடர் பண்ணினேன். அந்த இதழோட ஆசிரியர் அ.மா.சாமிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் அதிகம்”

“நீங்க ‘கன்னித்தீவு’ தொடருக்கும் படம் வரைஞ்சீங்க இல்லையா?”

“அது யதேச்சையா அமைஞ்ச வாய்ப்பு. ‘கன்னித்தீவு’ தொடங்கியபோது அதற்கு படம் வரைந்துக் கொண்டிருந்தவர் என்னுடைய சீனியரான கணேசன் என்கிற ஓவியர். ‘கணு’ என்கிற புனைபெயரில்தான் அவர் வரைவார். எனக்கும்கூட ‘அணில்’, ‘மின்மினி’ மாதிரி புனைபெயர்களை ஆதித்தனார் சூட்டியிருந்தார்.

திடீர்னு கணேசனுக்கு உடல்நலமில்லாம போயிடிச்சி. அவரை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. அவர்தான் என்னிடம், ‘தம்பி! கன்னித்தீவு எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்னுடக்கூடாது, தொடர்ச்சியா வரணும். நீ வரைஞ்சிக்கொடு’ன்னு கேட்டுக்கிட்டாரு.

அவர் உடல்நலம் பெற்று அலுவலகத்துக்கு திரும்ப ஒரு நாலஞ்சி மாசம் ஆயிடிச்சி. அதுவரைக்கும் நான்தான் ‘கன்னித்தீவு’க்கு வரைஞ்சிக்கிட்டிருந்தேன். அந்தத் தொடருக்கு அப்பவே நல்ல வரவேற்பு. ஆனாலும், ‘கன்னித்தீவு’ தமிழர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறப்போவுது, ஐம்பது வருஷத்தை தாண்டியும் முடிவே இல்லாம தொடர்ச்சியா வரப்போகுதுன்னுலாம் நாங்க நினைக்கவேயில்லை”
“டாக்டரோட மனைவி டாக்டர் என்பது மாதிரி ஓவியரான நீங்களும், இன்னொரு ஓவியரை திருமணம் செய்துக்கிட்டீங்க இல்லையா?”

“திட்டமிட்டெல்லாம் செய்யலை. யதேச்சையா அமைஞ்சது. அவங்களும் நான் படிச்ச அதே கும்பகோணம் பள்ளியில் ஓவியம் படிச்சவங்கதான். சந்திரோதயம்னு பேரு. தூரத்துச் சொந்தம். தஞ்சை கிறிஸ்தவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியரா பணியாற்றி ஓய்வு பெற்றிருக்காங்க. அவங்களும் ரொம்ப நல்ல ஓவியர். ‘மர்மவீரன் ராஜராஜ சோழன்’ என்கிற சித்திரநூலை வரைஞ்சி வெளியிட்டிருக்காங்க.

நாங்க ரெண்டு பேரும் ஓய்வு பெற்ற பிறகு ஓவியக் கலையில் தான் எங்க ஓய்வை கழிக்கிறோம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருவதில் என் துணைவியாருக்கு ஆர்வம் அதிகம். எங்களிடம் கற்ற குழந்தைகள் வரையும் ஓவியங்களை வெச்சு மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம்.

தஞ்சாவூரை சுற்றி இருக்கிற கோயில்களில் நாங்க வரைஞ்ச ஓவியங்களை நீங்க பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராகவேந்திரா கோயில் ஆகிய இடங்களில் நாங்க வரைஞ்ச தெய்வ திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கு. இருவருக்கும் ஒரே தொழில், ஒரே மாதிரியான கலைமனம் என்பதால் எங்க வாழ்வினை மனசு ஒருமிச்சு ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்”

“இடையிலே நீங்க பத்திரிகைகளில் பணிபுரியலை இல்லையா?”

“ஆமாம். அரசு வேலையில் சேர்ந்தேன். மதுரை, திருச்சின்னு ஓவிய ஆசிரியரா பணியாற்றிட்டு, அதுக்கப்புறம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரா 1963ல் தொடங்கி 33 வருஷம் வேலை பார்த்துட்டு ஓய்வு பெற்றேன்.

மருத்துவத்துறையில் வித்தியாசமான பணி. ஆபரேஷன்களை எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோ எடுக்கணும். இந்த போட்டோக்கள்தான், மருத்துவர்களுக்கு கேஸ் ஸ்டடி பண்ணி, நோயாளிகளுக்கு மேலதிகமா சிறப்புச் சிகிச்சை கொடுக்க உதவும். மருத்துவர் ரங்கபாஷ்யம் அவர்கள் மேற்பார்வை பார்த்து இந்த வேலையை சிறப்பா செய்ய கற்றுக் கொடுத்தார்.

அப்புறம் மைக்ரோஸ்கோப் வெச்சி போட்டோ எடுக்கிற ஒரு கலையையும் இங்கேதான் கற்றேன். இம்மாதிரி எடுக்கப்படும் படங்களை வெச்சி கேன்சர் முதலான நோய்களை உறுதிப்படுத்துவார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஊக்குவிப்பில் இந்த வேலையை செய்தேன். ஓவியத்தில் தேர்ச்சி இருந்ததால், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த வேலைகளை திறம்பட செய்து நல்ல பெயர் வாங்க முடிந்தது. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் மாதிரி இதழ்களிலும், அமெரிக்க இராணுவம் கேன்சர் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ நூல் முதலிய சர்வதேச இதழ்களில் எல்லாம் நான் எடுத்த படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

என்னோட பணி அனுபவங்களை, கலைப்பணிகளையெல்லாம் ‘ஓவியனின் கதை’ என்று சுயவரலாற்று நூலா எழுதி வெளியிட்டிருக்கேன். அமெரிக்காவில் பிசியோதெரபிஸ்டா என் மகன் ராஜேந்திரன் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க நாங்க அமெரிக்காவுக்கு போனப்போ கண்ட, கேட்ட அனுபவங்களை ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்று நூலாக எழுதி வெளியிட்டேன். தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருது அந்த நூலுக்கு கிடைத்தது”
“ஆனாலும், சித்திரம் வரையுற தாகம் தணியலை இல்லையா?”

“அதெப்படி தணியும்? எண்பது வயசை நெருங்குறப்பவும் வரைஞ்சுக்கிட்டுதானே இருக்கேன்? தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகும் போதெல்லாம் ராஜராஜசோழனை சித்திரக்கதையா வரையணும்னு தோணும். அவரோட ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது சின்ன அளவிலே வரைஞ்சி வெளியிட்டேன். ஓய்வுக்கு பிறகு நிறைய இதழ்களில் வரையறேன்.

உங்களோட தினகரன் வசந்தம் இதழில்கூட ‘வீர சோழன்’ என்கிற சித்திரத் தொடரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியா வரைஞ்சி எழுதிக்கிட்டிருந்தேன். நெடுநாள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்தொடர் எழுதும்போதுதான் என் மகன் கோயமுத்தூரில் படிச்சிக்கிட்டிருந்தார். அவரோட கல்விச் செலவுக்கு நீங்க மாதாமாதம் அனுப்பற சன்மானம் உதவிச்சி. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்”
“உங்க நூல்கள் கடைகளில் கிடைக்கிறதில்லையே?”

“உண்மைதான். எனக்கு வரையத் தெரியுது. அதை அப்படியே அச்சிடவும் தெரியுது. எப்படி எல்லாருக்கும் விற்பனைக்கு கொண்டுபோறதுன்னு தெரியலை. எங்களோட நூல்களை தஞ்சாவூரில் நேரில் பெறணும்னா தங்கபதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501 (கைபேசி : 9159582467) என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளியிட்டிருக்கிறதை கேள்விப்பட்டு நிறையபேர் விசாரிக்கிறாங்க. எல்லாருக்கும் கொண்டு போகணும்னு ஆசையாதான் இருக்கு”

“உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்காரு. மகள்?”

“சென்னை ராணிமேரிக் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. அவங்க பேரை சொல்ல மறந்துட்டேனே? பொன்னியின் செல்வி!”

படங்கள் : பி.பரணிதரன்

(நன்றி : தினகரன் வசந்தம்)

16 டிசம்பர், 2015

ஷகிலா பேசுகிறேன்!

ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்? 

சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.

இனி அவரே பேசுவார்.
ஏன் எழுதினேன்?

ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’

அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியானவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமளவென்று எழுதிவிட்டேன்.

‘மை டியர் குட்டிச்சாத்தான்’

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோமே இதே வீட்டில்தான். அப்பா, ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்பாவுக்கும் சரி. அம்மாவுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை என் சொந்த சகோதர சகோதரிகள் என்றுதான் என்னுடைய 12வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள்.

அருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் (இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப்போடு போட்ட ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்தார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.

டீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக்காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப்பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். இரண்டாயிரம் ஆண்டின் காலக்கட்டத்தில்தான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

படிப்புக்கு பதில் நடிப்பு

படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம்பாக்கம் முழுக்க சுற்றுவேன். ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ‘படிப்புதான் வரலை. நடிப்பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போடவில்லை. அதுவுமின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. சினிமாவில் நான் நடித்ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.

சிலுக்கு அறைந்தார்

‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னைவிட மிகச்சிறிய ஆடை அணிந்திருந்தார். அவரிடம் சங்கடத்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடையெல்லாம் வெளியே தெரியுது...’ என்றேன். சில்க் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இயக்குநர் உடனே, ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது...’ என்றார்.

சீன் படி நான் சில்க்குக்கு காஃபி கொடுக்க வேண்டும். அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங்கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமாகவே அறைந்தார். எனக்கு அவமானமாகி விட்டது. நான் அவரிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தில் அறைந்துவிட்டார் என்று கோபப்பட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினேன்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடுத்தார்கள். சில்க் வேண்டுமென்றே அடிக்கவில்லை என்று புரியவைத்தார்கள். அதன்பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யேகமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்திருப்பார்.

லட்சங்களை சம்பாதித்தேன்

நான் நடித்த படங்கள் கமர்ஷியலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தவை. பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பார்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையைவிட பன்மடங்கு வசூல் ஆகும். அந்த படம் தொடர்பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ சிறிதுமில்லை.

ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு புதுத் தயாரிப்பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிராகரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள்தான் நடிக்க முடியும் என்றேன். அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான்ஸாகவே கொடுத்து விட்டார்.

மூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். ஒருநாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ணயித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

முதுகில் குத்திய துரோகம்

நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்துக்காகதான் சம்பாதித்தேன். உறவுகளையும், நட்புகளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகையாகதான் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. என் குடும்ப நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வதைகூட அவர்கள் அவமானமாக கருதினார்கள்.

எனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக்கொண்டே இருந்தார்கள். துரோகங்கள் பழகிவிட்டது. எப்படியிருந்தாலும் நான் வாழ்ந்துதானே ஆகவேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மானித்தேன்.

இப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக்கிறேன். எல்லாமே என்னுடைய தேர்வுதான் என்பதால் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங்கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக்கிறேன். அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவுகளின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந்தறியாத பாதுகாப்பினையும், மகிழ்ச்சியையும் பெறுகிறேன்.

காமிக்ஸ் பிடிக்கும்

இளையராஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடுவது. சினிமா பார்ப்பது அரிது. தமிழில் கமல் சார் படங்களை தியேட்டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களை விரும்பி ரசிப்பேன். மாற்று சினிமாவாக மதிக்கப்படும் உலகப்படங்கள், கொரியப்படங்கள் எனக்கு விருப்பமானவை. பெரிய கலெக்‌ஷனே என்னிடம் இருக்கிறது.

காமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தகங்களைதான். ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்கு போகும்போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்துதான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.

பயணங்களின் காதலி

பயணங்கள்தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வனவிலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடியினரின் வீடுகளில் தங்கி, நாட்கணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்துவிட்டு வரவேண்டும் என்பது என் லட்சியம்.

ஆண்கள்

என்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறுப்பார்கள் என்றொரு பொதுப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ்வாகதான் பார்க்கிறேன். துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதுதான். என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் என் அப்பாவை தேடுகிறேன். நான் ஒரு depended child. ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது ஆதரவை மட்டுமே. வயதில் மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளையவர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பார்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா?

கடவுளுக்கு கடிதம்


கடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல்லாவோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்ல. கடவுள். அவ்வளவுதான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வதில்லை. கடவுள் என்பதால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும்? சமீபத்தில் கூட பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவுகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவதில்லை.

டைரக்‌ஷன் ஆசை

நடிக்க வாய்ப்பு குறைந்தவுடனேயே டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியிருக்கிறேன். டைரக்‌ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.

நிரூபிப்பேன்

நானாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக்கொண்டு வருகிறேன். இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடுக்கிறேன்.

எனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங்களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. எனக்குள் இருக்கும் கலையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிப்பேன்.

(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)



22 ஏப்ரல், 2011

சரவணன் எனும் சாதாரணன்!

புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ  ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம்- ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள் தங்கள் திறமைகளின் மூலம் வளர நினைப்பவர்களாக இருப்பார்கள். பழம் பெருமைகளைவிட புதிய முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மாற்றம் வேண்டும் என நம்புவார்கள். ஆனால் அந்த மாற்றத்தை மந்திரத்தால் கொண்டு வர முடியாது, கல்வியின் மூலம்தான் நிகழத்த முடியும் என்றும் எண்ணுவார்கள். அந்தக் கல்வியைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வார்கள். சமூக விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு இரண்டும் அவர்களின் அடையாளங்கள். 
இந்த மாதிரியான புதிய தலைமுறை இளைஞர்களில் ஒருவர் சூர்யா. இன்று திரை உலகில் பிரபலமாக இருக்கும் இந்த இளைஞர் வாழ்வில் இருந்து என்ன கற்றார்? அவரின் வெற்றியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?  
லட்சியம்: எதை செஞ்சாலும் அதோட சிறப்பான எல்லையை தொடணும்
சரவணன்னு ஒரு சாதாரணமான ஒரு பையன் இருந்தான். எல்லாப் பசங்களை மாதிரியே 12பி பஸ்சுலே காலேஜூக்கு போயி, பி.காம் படிச்சிட்டு.. அரியர்ஸ் வைக்காமே பாஸ் பண்ணிட்டு.. எது நம்மோட வாழ்க்கை, எது நம்மோட வேலை, எதிர்காலத்திலே என்னதான் பண்ணப் போறோம் என்கிற குழப்பங்களும், சந்தேகங்களுமாக, கேள்விகளுமாக வலம் வந்தவன்.
அப்பா பெரிய நடிகரா இருந்தாலும், சரவணன் காலேஜ் முடிச்சப்ப அப்பாவோட பேங்க் பேலன்ஸ் ரொம்ப கம்மிதான். மூணு இல்லைன்னா நாலு லட்சம். அவன் ஸ்கூல் படிக்கறப்பவே அப்பா, படங்களை ரொம்ப குறைச்சிக்கிட்டு, தேர்ந்தெடுத்து நல்ல படங்களா பண்ண ஆரம்பிச்சிருந்தாரு. அதாவது வருமானத்தை குறைச்சிக்கிட்டு, ஆத்ம திருப்திக்கு படம் பண்ண விரும்பினார்னும் சொல்லலாம்.
வீட்டுக்கு மூத்த பையன் சரவணன். தம்பி, தங்கச்சி எல்லாம் படிச்சிக்கிட்டிருந்தாங்க. குடும்பத்தோட பொறுப்புகளை தோள்ல தூக்கி சுமக்கணும்னு அவனுக்கு அப்படி ஒரு வெறி. ஏன்னா சரவணனோட அப்பா, ஒரு நடிகனின் மகனாக அவனை வளர்க்கலை. ஒரு சராசரி மிடில் கிளாஸ் பையனாகதான் சரவணன் வளர்ந்தான்.
எங்கேயாவது, எதையாவது ஆரம்பிச்சாகணும் இல்லையா? சரவணனோட சொந்தக்காரங்க நிறைய பேர் கார்மெண்ட் தொழிலில் ஈடுபட்டிருந்தாங்க. அவனும் ஒரு கார்மெண்ட் கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்தான். ஆரம்பத்துலே 700 ரூபாய் சம்பளம்.
செய்யும் தொழிலே தெய்வம்னு ரொம்ப சின்சியரா வேலை பார்த்தான். எதை செஞ்சாலும் அதோட சிறப்பான எல்லையை தொடணுங்கிறது மட்டும்தான் சரவணனோட லட்சியம். ரொம்ப சீக்கிரத்துலேயே 8000 ரூபாய் சம்பளம் வாங்குற அளவுக்கு முன்னேறினான். பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி, அது ரொம்ப நல்ல சம்பளம்.
அப்போவெல்லாம் சரவணனுக்கு சினிமாவில் நடிக்கணும்னு பெரிய லட்சியம் எதுவும் கிடையாது. ரஜினி, கமல் படங்களை தியேட்டரில் பார்க்கும் சாதாரண ரசிகன். சினிமா தொடர்பான குடும்பத்தில் இருப்பவன்னு அவனை சுத்தி இருக்கறவங்களுக்கு கூட தெரியாது. கதாநாயகனுக்கான முகவெட்டு தனக்கு இருப்பதா சரவணனும் ஒருநாளும் நினைச்சது கிடையாது.
நான்தாங்க அந்த சரவணன்.
ரிஸ்க் எடுக்கலாம், ஆனால் யோசித்து..
கார்மெண்ட்லே வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ சொந்தமா ஒரு ஃபேக்டரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சேன். அப்பவே அதுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டுது. அவ்வளவு பணத்தை வங்கியில் கடனோ, உடனோ வாங்கலாம். அவ்வளவு பெரிய ரிஸ்க்கை நான் தனியா எதிர்கொள்ளலாம். ஆனா அது குடும்பத்தை பாதிக்குமோன்னு ஒரு சஞ்சலம்.
இந்தச் சூழலில்தான், அப்பாவை பார்க்க வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்த இயக்குனர்கள் நிறைய பேர் “நடிக்கிறீங்களா?”ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. தொடர்ச்சியா மறுத்துக்கிட்டிருந்தேன்.
ஒரு என்ஜினியர் பையன் என்ஜினியர் ஆகணும், டாக்டர் பையன் டாக்டர் ஆகணும்கிற மாதிரி நடிகன் பையன் நடிகன் ஆவணுமான்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஏதோ வாய்ப்பு கிடைக்குதே என்பதற்காக எந்த ஒரு துறையிலும் ஈடுபட்டுடக்கூடாது. எதில் ஈடுபட்டாலும் முழுமனதோடு செய்யணும், மனசுக்கு ரொம்ப புடிச்சி பண்ணனும்னு எனக்கு ஆசை.
இயக்குனர் வசந்த் ‘ஆசை’ படம் எடுக்குறப்பவே என்னை கேட்டிருந்தாரு. என்னோட உடல் அமைப்பு, முகவெட்டு இதுக்கெல்லாம் சினிமா சரிப்படுமான்னு திரும்ப திரும்ப யோசிச்சிக்கிட்டிருந்தேன். அப்பா பண்ணுனதைதானே நீயும் பண்ணப்போறே? இதிலென்ன கஷ்டம்னு நிறைய பேரு கேட்டாங்க.
இயக்குனர் மணிரத்னம் சொந்தமா ‘நேருக்கு நேர்’ படத்தை தயாரிச்சார். என்னை கேட்டப்போ மறுக்க முடியலை. அவர் சினிமாவை பார்க்கும் பார்வையே வேற. தமிழ் சினிமாவை நிறைய மாற்றி அமைச்சிருக்கார். என் மேலே எனக்கு இருந்த நம்பிக்கையைவிட, அவருக்கு ரெண்டு மடங்கு அதிகமா இருந்தது. அவரோட பேசின ரெண்டு, மூணு சந்தர்ப்பங்களில் சினிமா என்னை ஈர்க்க ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி அப்பாவோடு போயி ஷூட்டிங் கூட பார்த்தது இல்லை. நடிகன் ஆகணும்னு சொல்லிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு என்னை நானே பார்த்துக்கிட்டது இல்லை.
நல்லா யோசிச்சேன். அப்பா முன்னாடி சொன்ன அட்வைஸ் நினைவுக்கு வந்தது. “ஒரு டிகிரியை முடிச்சிடு. அதுக்கப்புறம் என்ன ஆகலாம்னு யோசிச்சிக்கலாம்”
இப்போ எங்கிட்டே ஒரு டிகிரி இருந்தது. கூடவே கார்மெண்ட் எக்ஸ்போர்ட் தொழிலில் கொஞ்சம் அனுபவமும் இருந்தது. ஒரு படம் நடிச்சிப் பார்க்கலாமே, சரியாவந்தா தொடர்ந்து நடிக்கலாம். இல்லைன்னா மறுபடியும் கார்மெண்ட் தொழிலுக்கு போயிடலாம்னு நெனைச்சேன்.
சரவணனா இருந்த நான் ‘சூர்யா’ ஆனேன்.
தோல்விகளை விழுங்கு, அடையாளத்தை தேடு
சினிமாத்துறை ஆரம்பத்துலே ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. என்னோட பிளஸ் என்ன, என்னோட மைனஸ் என்னன்னு எனக்கே தெரியாது. எந்த மாதிரி படங்களை என்னால செய்யமுடியும். எப்படி டிரெஸ் பண்ணனும். எப்படி நடிக்கணும். இதையெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு நாலு வருஷம் ஆச்சி.
இடையில் நிறைய தோல்விகள். எனக்கான நேரத்துக்காக, மீனைப்பிடிக்க காத்துக்கிட்டிருக்குற கொக்கு மாதிரி அமைதியா இருந்தேன்.
இயக்குனர் பாலாவோட ‘சேது’ பார்த்தப்போதான் எனக்கு ஏதோ ஒரு பிடிப்பு கிடைச்சமாதிரி உணர்ந்தேன். எந்த மாதிரியான படங்களை நான் நடிக்கணும்னு ஒரு ‘ஐடியா’ அப்போதான் கிடைச்சது. “உங்க இயக்கத்துலே ஒரு படம் நடிக்கணும்னு சார்” னு பாலா சாரிடமே கேட்டேன். அவரோட அடுத்த படமான ‘நந்தா’வில் நடிக்க வெச்சார். அதுக்கப்புறம் தொடர்ச்சியா ஏறுமுகம்தான்.
ரொம்ப ஈஸியா சொல்லிட்டேன். ஆனா வெற்றிக்காக பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அந்த நாலு வருஷத்திலே எவ்வளவு கேலி, எவ்வளவு கிண்டல், எத்தனை போராட்டம்?
சினிமாத்துறைக்கு வந்தும் நான் சரவணனாவே இருந்தேன். எப்படியாவது சூர்யாவா மாறிடணும்னு வெறித்தனமா உழைச்சேன். எனக்கு அப்போ சரியா டான்ஸ்கூட வராது. ஒரு பத்திரிகையில் கூட எழுதினாங்க. ‘இவர் டான்ஸே ஆடாமல் இருந்தா புண்ணியமா போகும்’னு. 24 வயசுக்கு அப்புறமாதான் டான்ஸே கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் ஸ்டண்ட் கத்துக்கிட்டேன். இதெல்லாம் சின்ன வயசுலேயே கத்துக்கிட்டாதான் உண்டுன்னு சொல்லுவாங்க. ஒரு மனுஷனாலே பண்ண முடியறது இன்னொரு மனுஷனாலே நிச்சயம் முடியும்னு நம்பினேன்.
இதற்கிடையே வேற ஒரு பிரச்சினையும். ‘நீ பார்க்க உங்கப்பா மாதிரியே இருக்கே. அவரு 20, 25 வருஷம் நடிச்சதைதான் திரும்ப நீயும் நடிக்கப் போறே. அவரைதானே அப்படியே நீ ஜெராக்ஸ் பண்ணப்போறே’ன்னு நிறையபேர் பேசினாங்க. அவரோட ரத்தம் நான். அவரோட சாயல் என்னுடைய நடை, உடை, பாவனைகளில் இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனா எனக்கான ஒரு தனித்துவம் வேணும்னு விரும்பினேன்.
அப்பா நடிச்ச படங்களை பார்ப்பதை தவிர்த்தேன். அப்பா அப்போ டிவி சீரியல்களில் ரொம்ப நல்லா பண்ணிக்கிட்டிருந்தார். தினமும் வீட்டில் எல்லாரும் அப்பாவோட நடிப்பை பார்த்துக்கிட்டிருப்பாங்க. நான் வீட்டிலேயே இருந்தாலும் அதெல்லாம் பார்க்கமாட்டேன். அவரோட தாக்கம் எனக்குள்ளே ஊடுருவிடக்கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டேன். எனக்குன்னு ஒரு அடையாளத்தை நான் தேடிக்கிட்டிருந்த காலக்கட்டம் அது.
தொடர்தோல்விகளால் சோர்வடையும் போதெல்லாம் பாரதியார் கவிதைகள்தான் எனக்கு ஆறுதல்.
சுய அனுதாபம் கூடாது
யாருமில்லாத தனியறையில் சத்தமாகப் பாடுவேன். ஒருக்கட்டத்தில் என் உள்மன எழுச்சிகளை சமனப்படுத்த தியானம் செய்ய ஆரம்பித்தேன். அது மனதை ஒருமுகப்படுத்த, எனக்குள்ளேயே ஒரு சக்தியை வளர்க்க ரொம்பவும் உதவியது. என்னை நானே அப்போதுதான் நம்ப ஆரம்பித்தேன்.
அய்யோ நான் பாவம்னு அனுதாபத்தை எனக்கு நானே வளர்த்துக்காம இருந்தது என்னை சீக்கிரமா வெற்றி பெற வெச்சது. யாரிடமும் என் சோகத்தை பகிர்ந்துக்கிட்டதில்லை. ஏன்னா ஒருத்தரோட சோகம் இன்னொருத்தருக்கு அவ்வளவு முக்கியமா படாது.
நாம் எது நடக்கணும்னு விரும்புகிறோமோ, அதை உள்மனசுலே ஒரு விதையா விதைச்சிட்டு, செடியா வளர்க்கணும். அதுவே பூத்து, காய்ச்சி, பழம் தரும். அந்த நாலு வருஷம் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான பாடம் இது. அந்த காலக்கட்டத்துலே நான் என்னென்ன தப்பு பண்ணேன்னு எனக்கே தெரியும். திரும்பவும் எந்த காலத்திலேயும் அந்த தப்புகளை திரும்ப செய்யவே மாட்டேன்.
அப்பா கொடுத்த சுதந்திரம் என்னை பொறுப்புணர்வு கொண்டவனா மாற்றியது. என் குடும்பம் தந்த ஆதரவும், என்னோட போராட்டமான கட்டத்தில் ரொம்ப முக்கியமானது.
 கல்விதான் கரை சேர்க்கும்
சினிமாவில் அப்பாவின் அடையாளம் எனக்கு இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேனே தவிர, நான் பெரிதும் வியக்கும் ஆளுமை அவர். ஒரு எழுத்தாளர், ஓவியர், நடிகர்னு அவருக்கு ஏராளமான பரிமாணங்கள். அவரோட மற்ற பல திறமைகளை என்னாலே சரியா பின் தொடர முடியவில்லைங்கிற வருத்தம் எனக்கு இருக்கு.
ஆனா உடல்நலம் மீதான அக்கறை, சமூகம் மீதான பார்வைன்னு அப்பாவை அப்படியே பின் தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இதையெல்லாம் அப்பா எனக்கு தனியா டியூஷன் எடுக்கலை. ஆனா உணர வெச்சிருக்காரு.
காலுக்கு செருப்பு கூட இல்லாம ஸ்கூலுக்கு போய் படிச்ச மாணவர்கள் என்ன மார்க் எடுக்குறாங்க. பஸ்லயும், கார்லயும் ஸ்கூலுக்கு போன நாங்க என்ன மார்க் எடுக்கிறோம். கல்வி மட்டுமே தங்களை கரை சேர்க்கும்னு நெனைக்கிறவங்க கடைசியா எங்கே போய் சேரமுடியுது. இதுமாதிரியான விஷயங்களை எங்களுக்கு அனுபவப்பூர்வமா அப்பா காட்டியிருக்காரு. கல்விதான் சாமானிய மனிதனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய ஆயுதமா இருக்குங்கிறதை நல்லா புரிய வெச்சிருக்காரு. ஒரு ஏழை குடும்பத்தில் ஒரே ஒருவருக்கு நல்ல கல்வி கிடைச்சா, அவங்க குடும்பமே எப்படி மாறுதுங்கிறதை அப்பாதான் காமிச்சார். ஒவ்வொரு வருஷமும் நல்ல மதிப்பெண் வாங்குற மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு பலவருஷமா உதவித்தொகை வழங்கிட்டு வர்றாரு. வாழ்க்கையிலே ஒளி தெரியாம திரியறவங்களுக்கு கல்விதாங்க கலங்கரை விளக்கம்.
கிடைப்பதைத் திருப்பிக் கொடு
மனிதர்கள் எல்லாருக்குமே ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய்தான். ஆனா நடிகனை மட்டும் சமூகம் ஸ்பெஷலா கொண்டாடுது. திரையில் நான் சிரிச்சா, படம் பார்க்குற அத்தனை பேரும் சிரிக்கிறாங்க. நான் அழுதா அத்தனை பேரும் அழுறாங்க. நேருக்கு நேர் படத்தில் நடிச்ச சூர்யா இல்ல, இப்போ நான். நான் சொல்லுறதை நிறைய பேர் கேட்கிறாங்க. நான் சொன்னா, அது சரியா இருக்கும்னு நம்பறாங்க. இப்படி எனக்கு அவங்களோட நம்பிக்கையை அள்ளி கொடுக்குற சமூகத்துக்கு நான் என்ன பண்ணனும்னு எனக்குள்ளே கேள்வி எழுந்துச்சி. இப்போ நான் பண்ணிக்கிட்டிருக்கிற சமூகப்பணிகள்தான் அந்த கேள்விக்கான பதில்.
அப்பா ஏற்கனவே செய்துக்கிட்டிருந்த கல்வி உதவித்தொகைங்கிற விஷயத்தை கொஞ்சம் பரவலா, பெரிய அளவுலே செய்ய ஆரம்பிச்சோம். நல்ல மதிப்பெண் வாங்குறவங்களுக்கு ஊக்கத்தொகைன்னு முன்னாடி கொடுத்துக்கிட்டிருந்தோம். அப்பாவோட வழிகாட்டுதல்படி ஒவ்வொரு மாணவனின் பொருளாதாரச் சூழலை வெச்சி உதவ தொடங்கினோம்.
‘அகரம்’ என்கிற சமூகச்சேவை அமைப்பு இங்கேதான் தொடங்குது. முழுக்க முழுக்க இலவசக்கல்வி வழங்குகிற ஒரு பெரிய தரமான பள்ளியை உருவாக்கணும் என்பது எங்களோட லட்சியம். அந்த மாதிரி பள்ளியை நடத்த அனுபவம் தேவை. காஞ்சிபுரம் பக்கத்துலே பாலூர் என்கிற ஊர்லே இருந்த ஒரு ஆதிதிராவிடப் பள்ளியை தத்தெடுத்து உதவ ஆரம்பித்தோம். அடிப்படை வசதிகளே இல்லாத அந்தப் பள்ளியை, ரெண்டு வருஷத்துலே தலைகீழா மகிழ்ச்சிகரமான வகையில் மாற்றினோம். இந்தமாதிரி மாத்தினதுக்கு எதிர்ப்பும் ஒரு பக்கத்தில் இருந்து வந்தது. ஆனா அரசுத்தரப்பில் கிடைச்ச நல்ல ஆதரவோடு எல்லாத்தையும் சமாளிச்சோம்.
‘அகரம்’ அமைப்புக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பிச்சது. பள்ளிக்கு உள்ளே மட்டுமில்லாம, பள்ளிக்கு வெளியேயும் கல்வி தொடர்பான பணிகளை தொடர்ந்தோம். டியூஷன் மாதிரி இல்லே இது. பள்ளியிலே கல்வி. பள்ளியை விட்டு வெளியே வந்தா, கல்வியை தாண்டி ஒரு மாணவனுக்கு எதுவெல்லாம் தேவைப்படுமோ அதையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருந்ததாலே தமிழ்நாட்டுலே ஒரு பதினைந்து இடத்துலே இந்தமாதிரி செய்ய ஆரம்பிச்சோம்.
நிறைய தன்னார்வலர்கள் எங்களுக்கு பக்கபலமா வந்தாங்க. நாலாவது, அஞ்சாவது படிக்கிற குழந்தைகளை தத்தெடுத்து, அவங்க கல்விக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டாங்க. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அண்ணாவையோ, அக்காவையோ, சித்தப்பாவையோ, சித்தியையோ, மாமாவையோ, அத்தையையோ – இரத்த உறவு இல்லாத – புது உறவுகளா ‘அகரம்’ அறிமுகப்படுத்திச்சி. வாரத்துக்கு ஒரு முறையோ, மாசத்துக்கு ஒருமுறையோ இந்த உறவுகள் சந்திச்சி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. ‘வாழை’ என்கிற சமூக அமைப்பின் இந்த கான்செப்டை புடிச்சி, வழிகாட்டிகள் என்கிற பேருலே இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சோம்.
ஒத்த சிந்தனை உள்ளவங்க ஒண்ணு சேர்ந்தா எதையெல்லாம் நினைக்கிறோமோ, அதையெல்லாம் செய்ய முடியும். யாராவது நல்ல விஷயம் செய்யுறதா கேள்விப்பட்டோம்னா, அதை பாராட்டுறதோட நிறுத்திக்காம, தங்களையும் நிறையபேர் இணைச்சுக்கறாங்க.
பத்திரிகையாளரா அறிமுகமாகி, எனக்கு நல்ல நண்பரா மாறியவர் ஞானவேல். நான் எதையெல்லாம் செய்ய ஆசைப்படுகிறேனோ, அதையெல்லாம் அவர் செய்து முடித்துக் கொடுக்கிறார். இதற்காக அவரோட வேலையை விட்டுட்டு என்னோட வந்து சேர்ந்தார். அப்புறம் ஜெயஸ்ரீ வந்தாங்க. ஞானவேல் வேலைகளை அவங்களும் தொடர்ந்து செய்யுறாங்க. இப்போ அகரம் அமைப்பின் செயலர் இவங்க. என்னோட பணி என்னன்னா, கொஞ்சம் ஓய்வு கிடைச்சாலும் அகரத்துக்கு செலவிடறேன். பொருளாதாரரீதியா உதவக்கூடிய சக்தியும் எனக்கு இருக்கு. ‘அகரம்’ என்னோடதோ, வேறு யாரோடதோ கிடையாது. பல பேரின் உழைப்பு, சேவை மனப்பான்மையில் இயங்குகிற அமைப்பு இது. இது முழுக்க முழுக்க ஒரு மக்கள் இயக்கம்.
நல்ல மனிதர்களை உருவாக்கினால் நல்ல சமூகத்தை உருவாக்கலாம்
சரி. நிறைய பேருக்கு கல்விக்கான வழிகாட்டுதலை கொடுக்கிறோம். கல்வியை முடிச்சதுக்கப்புறம்?
ஒரு புள்ளிவிவரம் பார்த்தோம். பள்ளிக்கல்வியை முடிக்கும் ஏழை மாணவர்களில் வெறும் பதினைஞ்சு சதவிகிதம் பேருதான், உயர்கல்விக்கு போறாங்க. கையெழுத்து போடத் தெரிஞ்சா மட்டும் படிச்சவன் கிடையாது. பத்தாவதோ, பண்ணிரெண்டாவதோ படிச்சிட்டா மட்டும் படிச்சிட்டதா அர்த்தம் கிடையாது. பட்டப்படிப்பு முடிச்சாதான் ஒரு முழுமையான கல்வியை கற்றதா அர்த்தம்னு நம்பறேன்.
+2லே ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூத்தி ஐம்பது எடுத்த பசங்க கூட, காலேஜூக்கு எங்கே போறது, எப்படி விண்ணப்பிக்கிறது, காலேஜூக்கு போனா காசு செலவாகுமேன்னு பயந்துக்கிட்டு திருப்பூர் பனியன் பேக்டரிக்கோ, இல்லைன்னா ஆடு, மாடு வாங்கி தனியா தொழில் பண்ணவோ ஆரம்பிச்சிடறாங்க. யாரையாவது உதவி கேட்கணும்னு கூட தோணாதவங்க இவங்க.
இவங்களை தேடி கண்டுபுடிச்சு, “நீதானே +2லே இவ்வளவு மார்க் வாங்கினே? நீ காலேஜ் படிக்கணும், வா”ன்னு கூப்பிட்டு அவங்க பட்டப்படிப்பு முடிக்கிறதை எங்க பொறுப்பா எடுத்துக்கிட்டோம்.
டிகிரி முடிச்சதுக்கப்புறம்?
வேலை வேணும் இல்லையா? ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மாதிரி நடத்தி அவங்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்கிறோம். எங்க அகரம் பவுண்டேஷனுக்கு ஆதரவு கொடுக்கிற தன்னார்வலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்னு பலரும் இதுக்கு உதவறாங்க.
கல்வியை கொடுப்பது மட்டுமில்லை. வாழ்க்கையையும் ஒருத்தருக்கு வழங்கறதுதான் எங்களோட ‘விதை’ திட்டம். நல்ல மனிதர்களை நாமே உருவாக்கி விதைத்தால்தான் எதிர்காலத்தில் சமூகம் நல்லமாதிரியா வளர்ந்து நிற்கும் என்பது எங்களோட எண்ணம்.
மாற்றம் வெளியில் இருந்து வராது
கல்விதான் எல்லாத்தையுமே மாற்றும். வெறுமனே மாற்றம், மாற்றம்னு சொல்லிக்கிட்டிருக்கிறதுலே பிரயோசனம் இல்லை. மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தந்தாகணும். நம்ம சமூகத்தோட பிரச்சினை ஊழல்னு எல்லாரும் சொல்லுறோம். இதை எப்படி சமாளிக்கப் போறோம்? எல்லா கெட்ட விஷயத்துமே மூலம் அறியாமை. கல்வி என்கிற வெளிச்சம் மட்டுமே அறியாமை இருளை போக்கும். ரொம்ப கஷ்டப்படுற குடும்பங்களில் இருந்து வர்றவங்க கல்வியின் மூலமா நல்ல வாழ்க்கையை அடைஞ்சாங்கன்னா, நிச்சயமா வழிதவறவே மாட்டாங்க.
ஊழலை ஒழிக்கணும்னா யாராவது மூணாவது ஆளு வந்து ஒழிச்சிட மாட்டாங்க. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள்ளேதான் இதற்கான போராட்டத்தை நடத்தணும். எல்லாருமே கூடுதலான ஏதோ ஒரு வசதியை எதிர்ப்பார்க்கும்போதுதான் ஊழல் தொடங்குதுன்னு நெனைக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களிலே கூட நாம ஊழலுக்கு எதிரா நின்றாகணும். நீங்க வாங்குற ஒரு வீட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துலே பதிவு பண்ணும்போது கூட, முறையா எந்த விதிமுறையையும் மீறாம செய்யணும். இதுலே உங்களுக்கு ஒரு சின்ன லாபத்தை எதிர்ப்பார்த்து, லேசா மீறினாகூட அதுவும் ஊழல்தான்.
இப்போதைய பிரச்சினை என்னன்னா நாம யாரை பின் தொடரணும், யாரை முன் நிறுத்தணும் என்கிற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். இவர் ஒழுங்கா, அவர் ஒழுங்கான்னு மாத்தி, மாத்தி கேட்டுக்கிட்டிருக்கோம். நாம ஒழுங்கா இருந்தாதான் இவர், அவர் எல்லாம் ஒழுங்காவாங்கங்கிறதை நாம முதல்லே புரிஞ்சுக்கணும்.
அரசியல் தப்பில்லை, ஆனா எனக்கு வேணாம்
வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விட மாட்டேன். என் மனசுக்கு புடிச்ச விஷயங்களை செய்யணும். எனக்கு இப்போது சமூகத்தில் இருக்கும் இடத்தையும், அடையாளத்தையும் கொடுத்தவர்களுக்கு, எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன். நாங்க செஞ்சிக்கிட்டிருக்கிற வேலைகளை சேவையென்று சொல்லமாட்டேன். இது எங்களோட பொறுப்பு. இதுக்கு எந்த அரசியல் நோக்கமும் நிச்சயமா கிடையாது.
நான் அரசியலுக்கு போகமாட்டேன்னு சொல்றதாலே, அரசியலை வெறுக்குறதா அர்த்தமில்லை. மவுனமா, உன்னிப்பா அரசியலை கவனிக்கிறேன். மனசுக்குப் புடிச்சி, முழுமையா அர்ப்பணிப்பு உணர்வோட அரசியலில் ஈடுபட முடியும்னா, யார் வேணும்னாலும் ஈடுபடலாம். அரசியலை முழுமையாக தெரிஞ்சுக்கிட்டு இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். அரசியலின் கஷ்ட, நஷ்டங்கள் என்னென்ன என்பதை அறிஞ்சிக்கிட்டு வரணும்.
வெற்றியின் ரகசியம்
எனக்கு பெரிய ஆதர்சம் என்று சொன்னால் ஏ.ஆர்.ரஹ்மானும், டோனியும்தான். எவ்வளவு பெரிய வெற்றிகளை குவித்தும், அடக்கமா எப்படி இருக்க முடியும் என்பதை இவங்க கிட்டேதான் கத்துக்கணும். ஆஸ்கர் விருதை ரஹ்மானும், உலகக் கோப்பையை டோனியும் தள்ளிநின்று மூணாவது மனிதர்களாக பார்க்கக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருக்காங்க. இந்த மனப்பான்மையை வளர்த்துகிறதுதான் அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்க உதவும். இல்லேன்னா கிடைச்ச வெற்றியையே நினைச்சி, நம்மை நாமே மெச்சிக்கிட்டு தேங்கிடுவோம்.
எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்க செய்துக்கிட்டிருக்கிற வேலையோட சிறப்பான எல்லையை தொடணும். எதை எடுத்துக்கிட்டாலும், எதை கத்துக்கிட்டாலும், எதை நினைச்சாலும், எப்படி செயல்பட்டாலும் முழுமையாக, சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. நான் என்னுடைய துறையில் வெற்றி கண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பினால், இதுமட்டும்தான் என்னுடைய வெற்றி ஃபார்முலா.
நேர்காணல் : யுவகிருஷ்ணா, அதிஷா
(நன்றி : புதிய தலைமுறை)