22 டிசம்பர், 2010

டிசம்பர் 26 - இன்னொரு சுனாமி

2004ல் வந்த சுனாமி மாதிரியில்லை இது. கொஞ்சம் நல்ல சுனாமி.

நண்பர்கள் நர்சிம், நிலாரசிகன், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோரின் கவிதைத் தொகுதிகள் இந்த நாளில் உயிர்மை வெளியீடாக வெளியிடப்பட இருக்கின்றன.

நர்சிம் - தீக்கடல் - விலை ரூ.40

நிலாரசிகன் - வெயில் நின்ற மழை - விலை ரூ.50

பொன்.வாசுதேவன் - ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

என்னைப் பொறுத்தவரை 'கவிதை' என்றாலே கெட்டவார்த்தை. இருந்தாலும் நண்பர்கள் எழுதிய கவிதைகள் என்பதால் சகித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை. நண்பர் சரவண கார்த்திகேயனின் சமீபத்திய கவிதை நூலான 'பரத்தை கூற்று' வாசித்ததில் இருந்து ஓரளவுக்கு கவிதை மீதான அலர்ஜி குறைந்திருக்கிறது. கவிஞர்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கிடைப்பார்கள் என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. எனவே நானும் புதுவருடத்தில் கவிதை, கிவிதை எழுதலாமா என்று அபாயகரமாக யோசித்து வருகிறேன்.

நர்சிம்மின் இரண்டாவது நூல் இந்த 'தீக்கடல்'. முதலாவதாக அகநாழிகை வெளியீடாக வந்திருந்தது 'அய்யனார் கம்மா' சிறுகதைத் தொகுதி. ஆக்சுவலி, யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். அய்யனார் கம்மா-வுக்கு முன்பாக நர்சிம்மின் கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியாக இருந்தது. அந்த புரொடக்‌ஷன் டீமில் சுறுசுறுப்புக்குப் பெயர்போன நானும், மாடசாமி என்கிற என்னுடைய நண்பரும் இன்வால்வ் ஆகியிருந்ததால் அம்முயற்சி குறைப்பிரசவமாக லே-அவுட்டோடு நின்றுவிட்டது. இதுபோல நர்சிம்மின் முதல் முயற்சி நின்றுபோனது தமிழிலக்கிய வாசகர்களுக்கு அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்பதை எல்லாம் வல்ல இலக்கியமாதா தான் முடிவு செய்யவேண்டும்.

நண்பர் நிலாரசிகனோடு எனக்கு பெரியளவில் பரிச்சயமில்லை. சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் அடிக்கடி பார்ப்போன். 'ஹாய்' சொல்லிக் கொள்வோம். நீண்டகாலமாக தமிழிணையத்தில் இயங்கி வருபவர். ஸ்விட்ச்சு போட்டால் பேன் சுற்றுவதைப் போல, சொடக்குப் போட்டதுமே கவிதைகளை கொட்டக்கூடிய ஆற்றல் பெற்ற கவிஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சில கவிதைத் தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு திரிசக்தி பதிப்பகத்தில் இவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.

பொன்.வாசுதேவனைப் பொறுத்தவரை என்ன சொல்வது? வழக்கறிஞர். அச்சகத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இலக்கியத்தோடு இருபதாண்டு பரிச்சயம் கொண்டவர். பத்திரிகையாளர். அகநாழிகை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். இதுபோல எண்ணற்ற முகங்கள். சர்வநிச்சயமாக இவர் ஒரு சகலகலா வல்லவர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை'தான் இவருடைய முதல் நூல்.

கடைசியாக மச்சி சார்.

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புது வலைப்பதிவர் வலைபதிய வந்திருந்தார். எடக்கு முடக்கான மொழியில் தீவிர இலக்கியம் பேசுபவராக இருந்ததால் ட்விட்டர், பிளாக் போன்ற தளங்களில் அவரோடு தொடர்பினை வளர்த்துக்கொண்டேன். சோம்பலான ஒரு ஞாயிறு மதியத்தில் போன் செய்தார். "நான் தாம்பா விமலாதித்த மாமல்லன் பேசுறேன்" என்று ஆரம்பித்தார். ஒரு மணிநேர உரையாடல். அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் காதுகளை விரியவைத்து கேட்டுக்கொண்டே இருந்தேன். முன்பின் தெரியாதவர்களிடம் - குறிப்பாக ஒரு ஞானசூனியத்திடம் - அன்னியோன்னியமான உரையாடலை ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நிகழ்த்த முடிகிறதென்றால் அது கின்னஸ் சாதனையை விட சிறப்பானது.

ஆரம்பத்தில் சார் போட்டு பேசினால் கோபப்படுவார். "யோவ் நானும் யூத்துதான். உங்க சாருவை விட பத்து வருஷம் யூத்து. மாமு, மச்சின்னே கூப்பிடு" என்றார். அவரது வேண்டுக்கோளுக்கிணங்க மச்சி என்று கூப்பிட்டாலும், மரியாதைக்காக 'சார்' போட்டு 'மச்சி சார்' என்று அழைக்கிறோம். இன்று தமிழிணையத்துக்கே செல்லமான 'மச்சி சார்' அவர்.

80களில் தொடங்கி, 90களின் மத்தி வரையிலும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக இயங்கிய இலக்கியவாதி அவர். 35 வயதிலேயே இலக்கியத்தில் இருந்து வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். அவரது இருபத்து சொச்சம் வயதுகளிலேயே அமரப்புகழை இலக்கியத்தில் பெற்றுவிட்டவர். அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் கழிந்தும் இன்றும் வாசகர்கள் 'விமலாதித்த மாமல்லன்' என்ற பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவரது புகழுக்கு சான்று. தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று யார் பட்டியலிட்டாலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' கட்டாயம் இடம்பெறும். இந்தக் கதையை விட சிறந்த கதைகளை இவர் எழுதியிருந்தாலும் கூட, சிங்கத்தை ஏனோ சிறுமிக்குள்ளேயே அடக்கி வைக்கிறார்கள்.

சுந்தரராமசாமி அவருக்கு உயிர். அதனால்தான் என்னவோ இன்று தனது தோற்றத்தையும் கூட 'சுரா' பாணியிலேயே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா வழியும் ரோமுக்கே என்பது மாதிரி என்ன பேசினாலும் கடைசியாக 'சுரா'வில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். "எனக்கும், ராமசாமிக்கும் இடையிலே எவனையும் விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு பி.எஸ்.வீரப்பா பாணியில் கடகடவென சிரிப்பார்.

மச்சி சார் இலக்கிய உலகத்துக்குள் தொபுக்கடீரென்று தவளைக்காய் குதி குதித்து, ஆமை மாதிரி அவசரப்படாமல் பொறுமையாய், ஆழத்தில் நீந்தி மிகச்சரியாக இவ்வருடத்தோடு முப்பதாண்டுகள் ஆகிறது. ஒரு நாவல் கூட எழுதியதில்லை. அவருக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். இரண்டு மூன்று குறுநாவல் எழுதியிருக்கிறார். மீதியெல்லாம் சிறுகதைகள். தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத சக்திகளில் ஒருவரான இவரது மொத்தப் படைப்புகள் மொத்தமே முப்பதுதான்.

'விமலாதித்த மாமல்லன் கதைகள் - முழுத்தொகுப்பு', 30 படைப்புகளும், 300க்கும் மேற்பட்ட பக்கங்களில், ரூ.180/- விலையில் அதே டிச. 26ல், அதே விழாவில் வெளியிடப்படுகிறது. சுனாமியைக் கொண்டாட இதுவும் ஒரு காரணம். விமலாதித்த மாமல்லனின் இந்தத் தொகுப்பு நிச்சயம் பல விருதுகளை அள்ளிக் குவிக்க தகுதியானது. ஆனால் விருதுகளுக்குப் பின்னாலான அரசியல் அவருக்கு தெரியாது என்பதால், வாசகர்கள்தான் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

விழாவில் சிறப்புரை ஆற்ற இருப்பவர்கள் : அழகிய பெரியவன், சுகுமாரன், மணா, இந்திரன், ஜே.பி.சாணக்யா, ந.முருகேச பாண்டியன், ஷாஜி, சுப்ரபாரதி மணியன், அ.ராமசாமி, ந.முத்துக்குமார், பவா.செல்லத்துரை, ஸ்ரீநேசன்

நாள் : 26-12-2010, ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.30 மணி

இடம் : தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகம், எல்.எல்.ஏ. பில்டிங்,
735, அண்ணா சாலை, சென்னை.

குறிப்பு : முன்னதாக 25-12-2010 அன்று மாலை இதே அரங்கில் மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இருக்கிறது. சாரு இம்முறை பேசப்போகிறார். எந்தப் புத்தகத்தையும் கிழிக்காமல் சினிமா, அரசியல், இலக்கியத் தளங்களில் நடைபெறும் ஊழல்களை கிழிக்க இருக்கிறார். பல கனவான்களின் (கணவன்களின் அல்ல) முகமூடியை டார் டாராக கிழித்தெறியப் போகிறார்.

21 டிசம்பர், 2010

பேரறிஞர் அண்ணா குறித்த நூல் வெளியீடு!


'அறிஞர் அண்ணா - 100 அரிய தருணங்கள்' நூல் வெளியீட்டு விழா

இடம் :
தேவநேயப் பாவணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை.

நாள் :
24-12-2010
வெள்ளிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு

வரவேற்புரை :
என்.அசோகன்,
முதன்மை ஆசிரியர், தி சண்டே இண்டியன்

நூல் வெளியீடு, தலைமை :
மானமிகு கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

நூல் பெறுதல், சிறப்புரை :
தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்

ஜி. விஸ்வநாதன்
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்

தமிழச்சி தங்கபாண்டியன்,
கவிஞர்


நன்றியுரை :
சுந்தரபுத்தன்,
செய்தியாளர், தி சண்டே இண்டியன்

20 டிசம்பர், 2010

நாகவல்லி!


நம்ம வீட்டு கல்யாணத்துலே நிச்சயமா இந்த 'மேட்டர்' நடந்திருக்கும். பந்தி பரிமாறி சரக்கெல்லாம் தீர்ந்துட்டிருக்கும். கடைசியா ஒரு பத்து, பதினைஞ்சி பேருக்கு சாம்பார், பொறியல், ஊறுகாய் எதுவுமே மிச்சமிருக்காது. சோறு மட்டும் ரெண்டு, மூணு கூடை எக்ஸ்ட்ராவா இருக்கும். சமையல்கார மாமா சட்டுபுட்டுன்னு ஒரு வேலை செய்வாரு. மீதமிருக்கிற கத்தரிக்காய், லொட்டு, லொசுக்கையெல்லாம் போட்டு ஒரு இண்ஸ்டண்ட் வத்தக்குழம்பு வெச்சுத் தருவாரு. டேஸ்ட் பிரமாதப்பட்டு விடும்.

நாகவல்லி அந்த வகை. பொன் வைத்த இடத்தில் பூ வைத்தமாதிரி சூப்பர்ஸ்டார் கேரக்டருக்கு வெங்கடேஷ். ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்காவென்று கிடைத்த ஆட்களைப் போட்டு ஒருமாதிரியாக படத்தை தேத்திவிட்டார் இயக்குனர். பி.வாசுவுக்கு சமகாலப் போக்கில் படங்களை எடுக்க முடியவில்லையே தவிர, சந்திரமுகியை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பக்காவாக ரீமேக்க முடியுமென்று தோன்றுகிறது.

வெங்கடேஷ், ரஜினியை மேனரிஸம், உடையலங்காரம் என்று எல்லாவிதத்திலும் 'பிட்' அடித்திருக்கிறார். இருந்தாலும் சூப்பர்ஸ்டாரின் கம்பீரமும், வேகமும், ஸ்டைலும் வந்துவிடுமா என்ன? இரண்டாம் பாதியில் வரும் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் டேன்ஸ். என்னதானிருந்தாலும் சந்திரமுகி ரஜினியை ரசித்தவர்களுக்கு, வெங்கடேஷை பார்க்க கொஞ்சம் பாவமாகதானிருக்கிறது. வேட்டையனைப் பார்த்துவிட்டு வெங்கடேஷைப் பார்க்க கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது.

அம்புலிமாமா கதைதான் என்பதால் லாஜிக் ஓட்டைகளை மன்னித்து விட்டுவிடலாம். இருந்தாலும் சில ஓட்டைகள் ஓஸோன் ஓட்டை மாதிரி அடைக்கவே முடியாத லெவலுக்கு ரொம்ப பெருசு. சாமியார் வரும் காட்சிகளையும், பேசும் வசனங்களையும் கண்டால் பகுத்தறிவுவாதிகளுக்கு பி.பி. எகிறி, அப்போலாவில் போய் அட்மிட் ஆகவேண்டியதுதான்.

அருந்ததியில் அட்டகாசப்படுத்தியதால் 'சந்திரமுகி' கேரக்டர் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. அவரது அழகான அம்சமான சுழி கொண்ட வெண்ணிலவின் நிறம் கொண்ட பளீர் தொப்புளைத் தவிர்த்து வேறெதுவும் கவரும் அம்சம் இல்லை. அவரது காதலராக வரும் குணசேகரனை எங்கே போய் தேடிப் பிடித்தார்களோ தெரியவில்லை. செம த்ராபை.

க்ளைமேக்ஸுக்கு முந்திய அரைமணிநேரப் படம் திடுக் திருப்பங்களால் அசுரவேகம். இந்திரா சவுந்தர்ராஜன் கதை மாதிரி சற்றும் எதிர்பாராத 'கேரக்டர்' ஒன்று திடுமென்று உள்நுழைந்து படம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறது. அதே பழைய சந்திரமுகி டெக்னிக்தான் என்றாலும், இதற்காகவே இலக்கில்லாமல் முதல் பாதியை ஓட்டிய பி.வாசுவை மன்னித்துவிடலாம்.

ஒருவேளை இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால், பழைய சந்திரமுகியின் சாதனையை சர்வசாதாரணமாக முறியடித்திருக்கலாம். இருந்தாலும் ஓக்கே. நாகவல்லி நாராசமான படமல்ல. இரண்டரை மணி நேரம் களைப்படையாமல் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.

நாகவல்லி - சந்திரமுகி ரிப்பீட்டேய்!

18 டிசம்பர், 2010

சாரு நிவேதிதாவின் தேகம்!


சினிமாவில் எந்திரனுக்கு என்ன 'ஹைப்' இருந்ததோ, அதே அளவில் சாருவின் 'தேகம்' நாவலுக்கும் இலக்கிய வட்டத்தில் 'ஹைப்' நிச்சயமாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் சாரு எழுதிய முதல் நாவல் இதுவென்று தோன்றுகிறது. முப்பது வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் சாரு இதுவரை நான்கு நாவல்கள்தான் எழுதியிருந்தார். தேகம் ஐந்தாவது. ஒரு மாதத்துக்குள் எழுதப்பட்ட நாவல். இந்த அவசரம் கதையின் போக்கில் நன்றாகவே வெளிப்படுகிறது.

நிச்சயமாக இது முழுக்க 'வதை'யைப் பற்றிய நாவல்தான். நாவலின் தொடக்கம் உடல் வதை குறித்ததாக இருக்கிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலமாக 'மனவதை' குறித்த சித்தரிப்புகளுக்கு மாறிவிடுகிறது. வதையும், அதன் விளைவான வாதையும் நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் முன்னுக்குப் பின்னாக நான்லீனியராக சொல்லப்படுகிறது. வழக்கமான சாருவின் 'கொண்டாட்டம்' இதிலும் உண்டு. ஒரு விஷயத்தை ஒருவன் கொண்டாடும்போது, அதே விஷயம் இன்னொருவனை வதைப்படுத்துகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி அல்லது பட்டர்ஃப்ளை விளைவு அல்லது ஏதோ ஒரு கருமம்.

புரொபஷனல் கில்லர் மாதிரி, நாயகன் தர்மா புரொபஷனல் டார்ச்சர். 'நாய்' பாஸ்கருக்காக வேலை பார்க்கிறான். இந்த வேலையை தர்மா ஏன் விரும்பி ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் உன்னிப்போடு முழுவீச்சில் செய்கிறான்? பிளாஷ்பேக். சமூகத்தால் 'டார்ச்சர்' செய்யப்பட்டவன் தர்மா. டிரான்ஸ்ஜெண்டராக, ஜிகிலோவாக, ஜேப்படித்திருடனாக, அடியாளாக, எழுத்தாளனாக.. எப்படி எப்படியோ வதைப்பட்டிருக்கிறான். மற்றவர்களை வதைத்திருக்கிறான். எக்சிஸ்டென்ஷியலிஸமும், ஃபேன்ஸி பனியனும் சூர்யாதான் தேகத்தின் தர்மா. பாத்திரம் மட்டுமல்ல. பல சித்தரிப்புகளும் கூட (குறிப்பாக மலம் அள்ளும் பிளாஷ்பேக்) ஏற்கனவே சாருவின் படைப்புகளில் பலமுறை வாசித்ததுதான். எனவே ஒரு புதிய நாவலை வாசிக்கும் அனுபவம் கைகூடவில்லை.

சாரு சித்தரித்திருக்கும் பிரான்ஸ் செலின் பாத்திரம் ஓர் அற்புதம். செலின் - தர்மா தொடர்புடைய அத்தியாயங்களில் என்ன வதை இருக்கமுடியும், கவிதையான ரொமான்ஸ்தானே பிரதானமாக இருக்கிறது என்று முதல் வாசிப்பில் தோன்றியது. குறிப்பிட்ட அந்த சில அத்தியாயங்களை மீள்வாசித்ததில் செலின், தர்மாவை செய்யும் ரிமோட் டார்ச்சர் பளிச்சிடுகிறது. தன்னை ஆண் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய வதையாக என்ன இருக்க முடியும்? பாலியல்ரீதியாக ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியாததுதான். செலின் அந்த வதையை தர்மாவுக்கு செய்கிறாள். அவளது உடல் தர்மாவுக்கு 'எழுச்சி'யை ஏற்படுத்துவதில்லை. வேறு வகை பாலியல் உத்திகளால் அவளை திருப்திபடுத்த நினைக்கிறான் தர்மா. அதற்கு செலின் ஒப்புக்கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியால் குன்றிப்போகும் தர்மாவின் வாழ்வில் இருந்து திடீரென்று காணாமல் போகிறாள் செலின்.

முதல் நூறு பக்கங்கள் நிச்சயமாக சுவாரஸ்யம். அடுத்த 80 பக்கங்கள்தான் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போகிறது. நண்பர்கள், நண்பிகள். நண்பிகளின் நண்பர்கள். மது, மாது, மங்கை, மயக்கம், இத்யாதி, இத்யாதி.

செலினால் தனக்கு கிடைத்த வதைகளை நேஹாவுக்கு தருகிறான் தர்மா. நேஹா தர்மாவுக்கு எழுதும் காம-காதல் ரசம் சொட்டும் ஈ-மெயில்கள் அச்சு அசல் காமரூபக் கதைகள். தர்மாவின் 'புறக்கணிப்பு' என்ற வதையால், மனம் பிறழ்கிறாள் நேஹா. அந்த அத்தியாயம்தான் நாவலின் ஹைலைட். கத்தியின்றி, ரத்தமின்றி உச்சபட்ச வாதையை தரும் வதை. சீரோ டிகிரியின் முதல் அத்தியாயத்துக்கு இணையான கிளாசிக் ரைட்டிங். அவ்ளோதான். அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை.

காமரூபக் கதைகள் தவிர்த்து, சாருவின் வேறு எந்த நாவலையும் விட சிறப்பாக 'தேகம்' வந்துவிடவில்லை. அதே நேரத்தில் ராஸலீலாவுக்குப் பிறகு கொஞ்சம் சவசவ என்று (சில சிறுகதைகள் தவிர்த்து) புனைவு எழுதிக்கொண்டிருந்த சாரு மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர 'தேகம்' உதவியிருக்கிறது. இந்த ஃபார்ம் அடுத்து அவர் எழுதவிருக்கும் நாவல்களை மாஸ்டர்பீஸ்களாக மாற்ற உதவும். அவரது பழைய சாதனைகளை அவரே மீண்டும் முறியடிக்க வேண்டும் என்பதுதான், அவரது வாசகர்களின் விருப்பம்.

ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளே அரங்கில் 65,000/- ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக கேள்விப்பட்டேன். நிச்சயமாக சாரு தமிழ் இலக்கியத்தின் பெஸ்ட் செல்லராக மாறிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் 'தேகம்' நிச்சயமாக அவரது மற்ற நூல்களை விட அதிகம் விற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற நூல்களை விட எந்த விதத்திலும் 'தேகம்' சிறந்ததில்லை.

நூல் : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை

17 டிசம்பர், 2010

ஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்!


ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல். பம்ப்செட். கால்நடைகள். பண்ணையார். ஆலமரம். நாட்டாமை. பஞ்சாயத்து. சொம்பு. அய்யனார் கோயில். பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல.

இங்கு வசிக்கும் அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி கையிருப்பாக இருக்கிறது.

மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால் இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில் இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்' என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின் திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் ஹூவாக்ஸி எப்ப்டி இருந்தது என்று.

சில வருடங்களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுரகிலோ மீட்டர்தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை. அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில். சம்பாதிக்கும் சொற்பப்பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப் போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார். எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் ஹூ ரென்பாவ். அந்த கிராம கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.

ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்தார். முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர் காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராமவாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும் கடுமையான உழைப்பினைத்தர முன்வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பதுதான் ஹூவின் திட்டம். இதுதான் உண்மையான 'சோஸலிஸம்' என்று அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டுமொத்தமாக பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

ஹூவாக்ஸி வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். ஜியாங்சூ மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான் இருக்கின்றன.

இன்று ஹூவாக்ஸி கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான மூலப்பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும் பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில் இருக்கும் தொழில்கள்.

ஹூ ரென்பா, பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில் எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக் குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு – இவைதான் ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூ ரென்பா.

ஹூ ரென்பா உருவாக்கியிருக்கு ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்தான் என்கிறபோதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர். இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில் வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக் கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும் மறுத்துவிட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை  ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம். வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள். அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப் படும். அடிப்படை சம்பளத்தில் இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒருமுறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதிகளையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகிவிட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சிக்கலானதாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொருவரும் 82 வயதான ஹூ ரென்பா மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஹூவாக்ஸி வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரின் நடைபாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

(நன்றி : புதிய தலைமுறை)

15 டிசம்பர், 2010

திமுகவில் சாரு?


கனிமொழி, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், குஷ்பூ என்று திமுக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். போதாதற்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அழகுப்புயலும் (?) கருப்பு சிவப்பு உடை அணிந்திருந்தார். இதெல்லாம் போதாதா, சாரு திமுகவில் சேரப்போகிறார் என்பது உறுதி. விஜய் அதிமுகவில் சேரும்போது, சாரு திமுகவில் சேரக்கூடாதா என்ன?

ஒருவழியாக இலக்கிய உலகம் எதிர்ப்பார்த்திருந்த சூறாவளிப்புயல் காமராஜர் அரங்கத்தில் கரையைக் கடந்தது.

கிட்டத்தட்ட ஆயிரத்து எட்டுநூறு இருக்கைகள் கொண்ட காமராஜர் அரங்கில் பாதிக்கு மேல் இருக்கைகள் நிரம்பி வழிந்தது. மனுஷ்யபுத்திரன் காலியாக இருக்கும் இருக்கைகளை காட்டி தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தை நொந்துகொண்டார். சாருவின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசிலடிக்கப்பட, நாணத்தால் சாரு நாணி கோணி அமர்ந்திருந்தார். எஸ்.ரா மேடைக்கு வரும்போதும் செம விசில். வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது அவருக்கு. ஃபுல்மேக்கப்பில் தமிழச்சி தங்கபாண்டியன். 'பந்தா' இல்லாத கனிமொழி கருணாநிதி. சாதாரண கிராமத்தான் தோற்றத்தில் ச.ம.உ. ரவிக்குமார். கருப்பு ஷர்ட்டில் ஸ்மார்ட்டாக மதன். கூலிங்கிளாஸ் போட்ட நந்தலாலா மிஷ்கின். தில்லானா மோகனாம்பாள் மைனர் கெட்டப்பில் நல்லி செட்டியார். கூடவே இலவச இணைப்பாக ஏ.நடராசன். செட்டியாரும், நடராசனும் அதிஷா-லக்கிலுக் மாதிரி என்று தோன்றுகிறது. எங்கும் சேர்ந்தே வருகிறார்கள். சேர்ந்தே போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புக்பாயிண்ட் அரங்கில் சாருவின் புத்தகம் வெளியிடப்பட்டபோது 125 பேர் வந்திருப்பார்கள். கடந்த ஆண்டு ஃபிலிம் சேம்பரில் 250 முதல் 300 பேர் இருந்தார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1000 பேர் வந்திருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் சாரு சூப்பர்ஸ்டார்தான். வந்திருந்தவர்களில் ஊன்னா தான்னா போன்ற ஓரிரண்டு பெருசுகளை கழித்து கட்டிவிட்டால் மீதி எல்லோருமே இளைஞர்களாகவும், இளைஞிகளாகவும் இருந்தார்கள். சாருவின் போட்டி எழுத்தாளரான
 உ.த. எழுத்தாளரின் கடந்தாண்டு புத்தக நிகழ்வில் தென்பட்ட தலைகள் முழுக்க நரைதலைகளாக இருந்தன என்பது ஏனோ இப்போது சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது.

செட்டியாரின் பேச்சு யதார்த்தமானது. அவரை ஒரு இலக்கியவாதியாகவே (!) நினைக்க முடியவில்லை. அந்த காலத்துலே மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டிலே அரைகிலோ கருவாடு ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்கிற ரேஞ்சில் இயல்பாக, படுத்தாமல் பேசினார். ஏ.நடராசன் பேச மைக் அருகில் வந்ததுமே பலர் 'தம்' அடிக்க வெளியே போனது ஏனென்று தெரியவில்லை. நானும் வெளியே போய்விட்டதால் உள்ளே என்ன பேசினார் என்பது தெரியவில்லை. ரவிக்குமார் குட்டி குட்டியாக உள்குத்து வைத்து பேசினார். சென்னையில் இருந்த சாருவை ஈ.சி.ஆரில் காரில் பார்த்ததாக ஜோக் அடித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியனின் 'சாத்தர்' புராணம் துரதிருஷ்டவசமாக இந்த வருடமும் தொடர்கிறது. சாத்தர் பாவம். கனிமொழி பேச்சு சம்பிரதாயமானது. எஸ்.ரா வழக்கம்போல 'சமகால' விஷயங்களை சமரசமின்றி அசைபோட்டார். மதனின் பேச்சு அவரது கார்ட்டூனை போலவே கலக்கலானது.

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருப்பது மிஷ்கினின் பேச்சு. அவரது பேச்சில் என்ன குற்றமென்று எனக்குத் தெரியவில்லை. நண்பர் சரவண கார்த்திகேயனின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு எப்படி பேசினாரோ, அதைபோலவேதான் இன்று மிஷ்கினும் பேசியிருக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். 'சரோஜா தேவி புக்' என்று சொன்னதால் சாரு கவலைப்படுகிறாரோ, விமர்சனங்கள் குறித்து இதுவரை கவலைப்பட்டவர் அல்லவே அவர்? "ஆமாண்டா. அப்படித்தாண்டா!" என்று சொல்லும் சிங்கமாகதான் சாருவை இதுவரை பார்த்திருக்கிறோம். உ.த.எ.வும், சாருவும் வித்தியாசப்படும் முக்கியமான புள்ளி இது. மிஷ்கின் மீது கோபம் வேண்டாம் சாரு. அவரும் உங்களைப்போல வெள்ளந்தி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்.

'தேகம்' வாங்கினோம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஒரு 'பிட்' நிச்சயம். இன்னும் முழுமையாக படிக்கவில்லை. முதல் அத்தியாயத்தை மேய்ந்ததில் ஃபேன்ஸி பனியன் நினைவுக்கு வருகிறது. இதுமாதிரி பிட்டுகளால்தான் விடலைகள் விட்டில் பூச்சிகளாய் சாருவிடம் மாட்டுகிறார்கள். பிற்பாடு அவர்கள் விஷயம் தெரிந்துகொள்வதும் சாருவிடம்தான்.

இறுதியாகப் பேசவந்த சாரு வழக்கம்போல ஜோவியலாகப் பேசினார். 'கட்சிக்கலர்' குறித்து விளக்கம் தெரிவித்தார். பல்வேறு கட்சிகளிலும் தனக்கு நண்பர்களும், வாசகர்களும் இருக்கிறார்கள். அதுபோல திமுகவிலும் இருக்கிறார்கள் என்றார். எனவே இப்போதைக்கு சாரு திமுகவில் சேரமாட்டார் என்று தெரிகிறது.

எது எப்படியோ? சாருதான் இன்றைய இலக்கிய சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த புத்தக விழாவின் மூலமாக நிரூபித்திருக்கிறார். இரவு பத்தரை மணி வரையிலும் மகுடியை கண்ட நாகமாய் கூட்டம் திரண்டிருந்ததே இதற்கு சாட்சி.

13 டிசம்பர், 2010

பெரியார் திரை - குறும்படப்போட்டி


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் 
பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு
நுழைவுக் கட்டணம் இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள்: 
*     குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
*     ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பின் நலம்.
* DVD அல்லது CD வடிவில் தரமானதாக இருக்க வேண்டும். குறும்படத்தின் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
* போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
* போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும் படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வில் திரையிடப்படும்.
* குறும்படங்கள் 2008-2010 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
* தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விதிமுறைகளை
ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.
அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230

11 டிசம்பர், 2010

தமிழ் சமூகத்தின் அசலான கொண்டாட்டம் - அனைவரும் வருக!



சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு


நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி

இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

வெளியிடப்படும் நூல்கள் :

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் :
  • கனிமொழி எம்.பி.
  • மிஷ்கின்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • நல்லி குப்புசாமி செட்டியார்
  • ஏ. நடராஜன்
  • ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  • குஷ்பு
  • மனுஷ்யபுத்திரன்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • மதன் (கார்டூனிஸ்ட்)

விருதகிரி

"அரசியலில் எனக்குப் புடிச்சது வெறும் கலைஞர்
சினிமாவில் எனக்கு ரொம்ப புடிச்சது புரட்சிக் கலைஞர்"

விருதகிரி பற்றி எழுதும்போது 'பஞ்ச்' இல்லாமல் ஆரம்பிக்கவே படாது. பெரிய பாவம். படம் பார்த்த பத்திரிகையாள நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். "படத்துலே பஞ்ச் பார்த்திருக்கேன். படமே பஞ்சா இருக்கிறதை இப்போதான் பார்க்குறேன்"

உண்மைதான். படத்தின் ஹீரோ-கம் டைரக்டரான டாக்டர் கேப்டன் மட்டுமல்ல. வில்லன், அடியாள்,  அப்பா, அம்மா, சைட் கேரக்டர், சப்பை கேரக்டர், அட்மாஸ்பியருக்கு சும்மா போகிறவர்கள் வருகிறவர்கள் என்று ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்குகளாக அள்ளித்தெளிக்க, விசில் கும்மாளம் கொண்டாட்டத்தோடு பொழுதைப் போக்க, அருமையான அக்மார்க் கேப்டன் படம்.

எந்திரனின் 'சிட்டி'யாவது ரோபோ. கேப்டனின் விருதகிரி ரத்தமும், சதையுமான மனிதன். ஆனால் ரோபோவை விட சிறந்த 'பைட்டிங்' ஆற்றலோடு, பவர்ஃபுல்லாக விருதகிரி பாத்திரத்தை வடிவமைத்த கேப்டனின் சிந்தனையை தலைகீழாக நின்று தண்ணி அடித்து பாராட்டினாலும் தகும்.

ஸ்காட்லாண்டுயார்டு போலிசார் செம்மொழியில் பேசுகிறார்கள் என்று ஆரம்பக் காட்சியை கண்டதுமே இனம்புரியாத திகில் ஏற்படுகிறது. பதிலுக்கு அவர்களிடம் கேப்டன் இங்கிலீஷில் விளாசும்போது திகிலின் மடங்கு எக்குத்தப்பாக எகிறுகிறது. படம் கொஞ்சநேரம் ஓடியபிறகே புரிகிறது. சப்-டைட்டில் போடாமல், வாய்ஸாகவே மொழியாக்கம் செய்யும் புதுமையான தொழில்நுட்ப முறையை உலக சினிமாவுக்கு டைரக்டர் கேப்டன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

டிரைனிங்குக்காக ஸ்காட்லாண்டு யார்டுக்கு செல்லும் கேப்டன், அங்கே அவர்கள் நாட்டு பிரதமரின் உயிரைக் காப்பாற்றுகிறார். திக்கைத்தனமாக ஸ்காட்லாண்டு யார்டு போலிஸார் தீவிரவாதிகளை கோட்டைவிடும் நிலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தீவிரவாதிகளை தாயகம், உளவுத்துறை, நரசிம்மா போன்ற படங்களில் சமாளித்த அனுபவம் நம் கேப்டனுக்கு இருக்கிறது. அந்த அனுபவ ஆற்றலை கொண்டே ஸ்காட்லாண்டு தீவிரவாதிகளை நோண்டி நுங்கெடுக்கிறார். அடுத்த காட்சியே கேப்டன் டிவி செய்திகள். "ஸ்காட்லாண்டு யார்டு பிரதமரை காப்பாற்றி தமிழக ஏ.டி.ஜி.பி. விருதகிரி உலகசாதனை".

நாடு திரும்பி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். "வாழ்க்கை ஐஸ்க்ரீம் மாதிரி. உருகறதுக்குள்ளே சாப்பிட்டுடணும்"

அடுத்த கேமிராவைப் பார்த்து குளோஸப்பில் 'பாராட்டு விழா' குறித்து பஞ்ச்-பை-பஞ்சாக கலைஞருக்கு அட்வைஸ்.

இப்படியாகத் தான் இருக்கிறது விருதகிரி.

இண்டர்வெல் வரை எப்படி படத்தை நகர்த்துவது என்று இயக்குனருக்கு தெரியவில்லை. மன்சூர் அலிகான், சண்முகராஜ் என்று லோக்கல் லுச்சா வில்லன்களை துவம்சம் செய்கிறார். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சொல்லி, மன்சூர் அலிகான் வசனங்கள் மூலமாக அவர்களை கேவலப்படுத்தி இருக்கிறார் கேப்டன். உடல் உறுப்புகளை வெட்டி விற்கும் க்ரூப் ஏதோ கசாப்புக்கடை மெட்டீரியல்களை வைத்து இந்த வேலை செய்வது மாதிரி காட்டியிருப்பது கொடுமை. அதைவிட கொடுமை அந்த உடல்களை கருவாடு மாதிரி உப்புக்கண்டம் போட்டு அலமாரியில் வில்லன் அடுக்கி வைப்பது. கதைக்கு சம்பந்தமேயில்லாமல் வரும் இந்தக் காட்சிகளை கிளைமேக்ஸில் புத்திசாலித்தனமாக(?) இண்டர்நேஷனல் வில்லனுடன் 'கனெக்ட்' செய்வதில்தான் கேப்டனின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

இண்டர்வெல்லுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கேப்டன் கிளம்புகிறார். தெரிந்தோ, தெரியாமலோ என்ன கருமமோ. அல்பேனிய அகதிகளை அசிங்கப்படுத்தி கதையில் சில காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். இந்தியா உலகின் நெ.1 நாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டுபிடிக்கிறார். ஒட்டுமொத்தமாக அழிக்கிறார். உலகமே விருதகிரியைப் பார்த்து வியந்து நிற்கிறது. சுபம்.

இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளிலும் தமிழக போலிஸின் ஏ.டி.ஜி.பி.யான விருதகிரியை படத்தில் எல்லாருக்குமே தெரிகிறது. நம்மூரு இண்டலிஜெண்ஸ் ஐ.ஜி. ஜாபர்சேட்டை மடிப்பாக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியமாட்டேன் என்கிறது ஏனென்று தெரியவில்லை. படத்தில் கேப்டன் சோலோவாகவே வருகிறார். அவருக்கு ஜோடி இருந்திருந்தால் டான்ஸ், ரொமான்ஸ் என்று ஆட்டம் அருமையாக களைகட்டியிருக்கும். இந்த வாய்ப்பினை ஏனோ கேப்டன் புறந்தள்ளியிருக்கிறார். குடும்ப அரசியலை வசனங்களில் கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே விளாசுகிறார்கள். டைட்டிலில் கேப்டன், கேப்டனின் மனைவி, கேப்டனின் மச்சான், கேப்டனின் மகன்கள் என்று எல்லோரது போட்டோக்களும் காட்டப்படுகிறது.

உங்களுக்கு கேப்டனை பிடித்தால், விருதகிரியையும் பிடிக்கும்.

கலைஞருக்கு பெண்சிங்கம். கேப்டனுக்கு விருதகிரி.

கேப்டன் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு, அவசர அவசரமாக ஹாலிவுட்டில் இதே கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தப் படம் குறித்த தகவல்கள் இங்கே.

விருதகிரி திரைக்கதை பாணியிலேயே கேப்டனின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக ஒரு மொக்கைச்சாமியால் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன டெர்ரர் சாம்பிள் இங்கே.

9 டிசம்பர், 2010

ராஜா மாதிரி வாழணும் தம்பி..


மதுரை. புதுநத்தம் ரோடு. பாண்டி ஓட்டல் பின்புறம். பெருமழைக்கு முன்பான சுரீர் வெயில். நாக்கு வறண்டுப்போய் இருசக்கர வாகனத்தை நாம் ஓரங்கட்டியது ஒரு இளநீர் கடை முன்பு. கூரை வேய்ந்திருந்த கடையில் விற்பனை 'தூள்' பறந்து கொண்டிருந்தது.

"செவ்விளநியா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்"

"எளநி நிறைஞ்சிருக்குறா மாதிரி ஒரு வழுக்கையைப் போடுங்கண்ணேய்"

"பாதி எளநி, பாதி தேங்காய் இருக்குறதா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்" – வயசு வித்தியாசமில்லாமல் 'மதுர'யில் எல்லாருமே அண்ணேய்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

ஒரு இளநீரை உறிஞ்சிக்கொண்டே வியாபாரியை நோட்டமிட்டோம். ஏதோ ஒரு வித்தியாசம். குடித்து முடித்து நூறு ரூபாய் நோட்டை நீட்டினோம்.

தடவிப் பார்த்து வாங்கியவர், "நூறு ரூவாய்ங்களா தம்பி?" என்று கேட்டு, பணப்பெட்டியில் இருந்து மீதி எண்பத்து ஐந்து ரூபாயை கச்சிதமாக எடுத்துக் கொடுத்தார்.

ஆம். இளநீர் வியாபாரம் செய்யும் ராஜா பார்வை சவால் கொண்டவர். முற்றிலுமாக பார்வை தெரியாது. நன்றாக பார்க்க கூடியவர்களுக்கே இளநீர் வெட்டித் தருவது சவால் தரும் வேலை. வாடிக்கையாளர் கேட்கும் வகையில் நல்ல இளநீரை 'பார்த்து' எடுக்க வேண்டும். 'பார்த்து' வெட்டித் தர வேண்டும். கூர்மையான கத்தி. கொஞ்சம் தடுமாறினாலும் விரல்கள் எகிறிவிடும்.

ராஜா எப்படி சமாளிக்கிறார்?

"1974ல் இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சேனுங்க. இப்போ 54 வயசு ஆவுது. அப்போவெல்லாம் நல்லாதான் பார்வை தெரிஞ்சுது. கொஞ்ச வருஷத்துலே சாயங்காலத்துலே மட்டும் கண்ணு மங்கும். சரியா கவனிக்காமே விட்டுட்டேன்.

திடீர்னு பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா மங்கி சுத்தமா பார்வை தெரியாம போயிடிச்சி. பார்வை இல்லாதவங்க குறிப்பிட்ட சில வேலைகளைதான் செய்வாங்க. எனக்கு அந்த வேலை எதுவும் தெரியாது. தெரிஞ்ச வேலையை அப்படியே இத்தனை வருஷமா தொடர்ந்துட்டேன். 'கண்ணு பார்க்குது, கை செய்யுது' ஒரு பழமொழி சொல்வாய்ங்க. நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன், இப்பவும் செய்யுறேன். எங்கிட்டே இளநி வாங்கி குடிக்கிறவங்களுக்கு மத்த கடைக்கும் இந்த கடைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே?" என்கிறார்.

இளநீர் வெட்டித் தருவது மட்டுமல்ல. வண்டியை வாடகைக்கு பிடித்து தோப்புகளுக்குச் சென்று சரக்கு கொள்முதல் செய்வது வரை இவரே செய்கிறார். வியாபாரத்தில் உதவிக்கு அவ்வப்போது இவருடைய மனைவியும், அண்ணன் மகனும் வருவதுண்டு.

ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள். உறவினர் வீட்டில் படிக்கிறார்கள். வீரபாண்டி ரோடு, ஊமச்சிக்குளத்தில் குடிசை வீடு. "எங்க அக்கம் பக்கத்து வீடுங்களுக்கு எல்லாம் இலவசப் பட்டா கொடுக்க எழுதிக்கிட்டுப் போயிருக்காங்க. நாங்க வியாபாரத்துக்குப் போயிட்டதாலே எங்க பேரு லிஸ்ட்டுலே சேர்க்க முடியலை" என்று இருப்பிடப் பிரச்சினையை சொல்கிறார் ராஜாவின் மனைவி.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் இளநீர் வியாபாரம் நன்கு சூடு பிடிக்கும். மற்ற மாதங்களில் கொஞ்சம் 'டல்'தான். மழைக்காலங்களில் சுத்தம். கோடையில் சேமித்து, மழையில் உண்ணும் எறும்பு பாணி வாழ்க்கை. குடும்பப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜாவின் மனைவி வீட்டுவேலை செய்கிறார்.

ராஜாவுக்கு பார்வை இல்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு வேண்டிய வகையை கையால் தடவிப் பார்த்தே, உணர்ந்து எடுத்துத் தரும் அனுபவ ஆற்றல் ராஜாவுக்கு வாய்த்திருக்கிறது. இளநீர் குடிக்க ராஜா கடையை தேடி வரும் ரெகுலர் கஸ்டமர்களும் உண்டு.

இந்த வியாபாரத்தில் அவருக்கு ஒன்றே ஒன்றுதான் பிரச்சினை. அதிகாரப் பதவியில் இருக்கும் சிலர். அவ்வப்போது கடைக்கு வந்து ஓசியில் இளநீர் குடித்துவிட்டு போவார்கள். இருபத்தைந்து ரூபாய்க்கு இளநீர் குடித்துவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டுவார்கள். "சாரு யாருன்னு தெரியுமில்லே.. ரவுண்ட்ஸ் வர்றப்போ கடை இருக்காது!" என்று மிரட்டுவார்கள். சில நேரங்களில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்து கடையை பிய்த்துப் போட்டுவிட்டு போவார்கள்.

"எந்த வியாபாரத்துலேதான் தம்பி பிரச்சினை இல்லை? பிரச்சினைக்குப் பயந்தா வாழ முடியுமா? பார்வைதானே போச்சி. கைகால் நல்லாதானே இருக்கு. ராஜான்னு எனக்கு பேரு வெச்சிருக்காங்க. ராஜா மாதிரி வாழ்ந்து காட்டணுமில்லை?"

ராஜா கடையில் இளநீரை காசுக்கும், தன்னம்பிக்கையை இலவசமாகவும் வாங்கிக் கொண்டு வண்டியை எடுத்தோம். வெயிலின் வாட்டம் குறைந்திருந்தது.

(நன்றி : புதியதலைமுறை)

8 டிசம்பர், 2010

‘டாவோ’ ஒரு கலங்கரை விளக்கம்

சேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அரசுசாரா நிறுவனங்களை NGO (Non Government Organisation) என்கிறார்கள். இதைப்போலவே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை DPO (Disabled People Organisation) என்பார்கள். தமிழகத்தில் ஏராளமான என்.ஜி.ஓ.க்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், டி.பி.ஓ.க்கள் மட்டுமே முழுக்க முழுக்க அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக திட்டப் பணிகளை முன்னெடுப்பவை.

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்‌ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.

இதுபோன்ற தன்னார்வ சேவை நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு கோவையில் இருந்து செயல்பட்டு வருகிறது. டாவோ (DAVO - Disability Alliance of Voluntary Services) என்று அவ்வமைப்புக்கு பெயர்.  மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தன்னார்வு சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள, பயனர்களை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்துவதும் இவ்வமைப்பின் தலையாய பணிகளில் ஒன்று.

டாவோ அமைப்பின் கீழ் இயங்கும் UDIS (You and the Disabled) மன்றம் பல்வேறு செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது.

 "மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்" என்கிறார் இம்மன்றத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சூரிய நாகப்பன்.

இந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய - மாநில திட்டங்கள்,  பல்வேறு அமைப்புகளின் கல்வி மற்றும் இதர சேவைகள் ஆகியவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை எப்படி பல்வேறு தளங்களில் இருந்து பெறுவது என்பதும் சொல்லித்தரப்படுகிறது. மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் என்று எதைப்பற்றி கேட்டாலும் இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும்.

 
UDIS ஹெல்ஃப் லைன் எண்கள் :

0422 2405551 / 0422 2648006 (அல்லது) 99445 56168

(நன்றி : புதிய தலைமுறை)