30 நவம்பர், 2009

யோகி!


உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?

அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை ரொம்பப் பிடிக்குமா?

குழந்தையின் சில்லென்ற பாதத்தை எடுத்து உங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளப் பிடிக்குமா?

உங்கள் புதுச்சட்டையின் மீது உச்சா போனாலும், கோபித்துக் கொள்ளாமல் குழந்தையை ‘அம்முக்குட்டி, தாச்சிக்குட்டி’ என்று கொஞ்சக் கூடியவரா?

குழந்தைக்கு கொஞ்சமே வளர்ந்த லேசான முடியை உச்சிமுகர்வீர்களா?

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு குழந்தையின் அழுகைக்குரலை கேட்டாலே உங்கள் இதயவீணையின் நரம்புகள் அறுந்துவிடுமா?

நீங்கள் ஐந்தரை மாத பெண் குழந்தைக்கு அப்பாவாகவோ / அம்மாவாகவோ இருக்கக் கூடும். இல்லையா?

உங்களுக்கு இன்னமும் குழந்தையில்லை. ‘அட இன்னும் கண்ணாலமே ஆகலைப்பா’ என்றும் சொல்லக்கூடும். பரவாயில்லை. ஆனாலும் உங்களுக்கு உங்கள் அக்காள் மகளோ, எதிர்த்த வீட்டு குழந்தையையோ, பக்கத்து வீட்டு குழந்தையையோ அல்லது டிராஃபிக் சிக்னல்களில் பிச்சையெடுக்கும் தாயின் மடியிலுள்ள குழந்தையையோ பிடிக்கும் இல்லையா?

- மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது ‘யெஸ்’ என்று நீங்கள் பதில் சொல்லக் கூடுமானால், தயவுசெய்து ‘யோகி’ பார்க்காதீர்கள்.

இந்த எச்சரிக்கையை மீறி ஆவல்மேலிட நீங்கள் படம் பார்க்கலாம். பிரச்சினையில்லை. ஆயினும் நீங்கள் மனநோயாளி ஆகிவிடக்கூடிய சாத்தியம் அதிகம். பரவாயில்லையா?

”இந்தப் படத்தை பார்க்காதீர்கள்!” என்ற என்னுடைய பரிந்துரையே படத்தை இயக்கிய இயக்குனருக்கும், அமீருக்குமான உண்மையான பாராட்டு. எந்தத் தமிழ் படத்துக்கும் இல்லாத Uniqueness இப்படத்துக்கு உண்டு. மிகத்தரமான உருவாக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம். சந்தேகமேயில்லை. அமீர் நடிகராகவும் வெற்றி கண்டிருக்கிறார்.

இருந்தாலும் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் ராஜா குதிரை ஓட்டினார் என்று தடை செய்ய முன்வந்த தணிக்கைக்குழு, ‘யோகி’யை எப்படி U/A சான்றிதழோடு அனுமதித்தது என்று புரியவில்லை.

மீண்டும் என்னுடைய வேண்டுகோள் : தயவுசெய்து இப்படத்தை பார்க்காதீர்கள். இப்படம் வசூல்ரீதியாக வெற்றியடையும் பட்சத்தில், திரைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மேலும் கொடுமை செய்யும் கொடுமையான ட்ரெண்ட் தொடரக்கூடும்.

26 நவம்பர், 2009

விமர்சனம் எனும் அரிப்பு!


கால்நடைகள் புல்லை அசைப்போடுவதை போல மனிதனுக்கு எதையாவது விமர்சித்துக் கொண்டோ அல்லது கிசுகிசுத்துக் கொண்டோ இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று எந்த வேதாளமோ எந்த யுகத்திலோ சாபமிட்டிருக்க வேண்டும். அரசு, அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் துறையாக திரைத்துறை மாறியிருக்கிறது. திரையில் மின்னும் நட்சத்திரங்களின் தொழில் திறமை மீதான விமர்சனம் மட்டுமல்லாது அவர்களின் அந்தரங்க கிசுகிசுகளை ஆவலோடு வாசித்து அதுகுறித்தும் விமர்சிக்காவிட்டால் நமக்கும் பொழுதுபோவதில்லை.

சமீபகாலமாக அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் சிலர் நடத்தும் திரைத்துறை மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின்னால் “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!” கதை மட்டுமே பின்னணியில் தெரிகிறது. திரையில் கதை எழுதவோ, வசனம் எழுதவோ வாய்ப்பு பெறும் அறிவுஜீவிகள் அவசர அவசரமாக தங்களது அறிவுஜீவி அரிதாரத்தை அழுந்தத் துடைத்து “பஞ்ச் டயலாக்” எழுதும் அழகையும் நாம் இருகண் திறந்து ரசிக்க முடிகிறது. ஆதலால் ‘வாய்ப்பு பெற்றவர்கள் வசனம் எழுதுகிறார்கள்', 'வாய்ப்பு கிடைக்காதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள்' என்று இருபிரிவுகளாக சினிமா குறித்த அறிவுஜீவிகளின் கருத்துக்களை மிக சுலபமாக பிரித்துக் கொள்ளலாம். முன்பு இதே அறிவுஜீவிகள் வெகுஜன இதழ்களில் கதை எழுத சான்ஸூ எதிர்பார்த்து, சான்ஸூ மறுக்கப்பட்டதும் அப்பத்திரிகைகளை ஆபாசப்பத்திரிகைகள் என்று விமர்சிப்பார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக மாற்று திரைப்படம் (Parrallel Cinema) என்ற பெயரில் அறிவுஜீவிகளுக்கான திரைப்படங்கள் பத்து பேர் மட்டுமே நிரம்பிய திரையரங்குகளில் திரையிடப்படும். படம் பார்த்த பத்து பேரும் தலா நூறு பேர் வாசிக்கக்கூடிய அவரவருக்கு தோதான சிற்றிதழ்களில் நாற்பது அல்லது ஐம்பது பக்கங்களுக்கு மிகாமல், அப்படம் குறித்த தங்களது பார்வையை பதிப்பார்கள். இதனால் பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு அதிகமாக இல்லாமல் இருந்தது.

’உலக சினிமா க்ரூப்’ இதே காலக்கட்டத்தில் தோன்றியது. இந்த க்ரூப்பால் பெரிய பிரச்சினையில்லை. ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் இந்திய சினிமாக்களை பார்ப்பதில்லை. பார்த்தாலும் ரகசியமாக பார்த்துவிட்டு, கமுக்கமாக இருந்து விடுகிறார்கள். இவர்களில் ஒரு சில அரைகுறைகள் மட்டுமே, அவ்வப்பொது வில்லு ரேஞ்சு படங்களையும் பார்த்துவிட்டு “இந்த தமிழ் சினிமாவே இப்படித்தான்!” என்று விமர்சிக்க கிளம்பிவிடுகிறார்கள். பி.எச்.டி. முடித்தவர்கள், ஏன் எல்.கே.ஜி. பாடப்புத்தகத்தை புரட்டிவிட்டு, நொட்டை சொல்ல வேண்டும்? எல்.கே.ஜி. பையன் வேண்டுமானால் ஒரு குறுகுறுப்புக்கு அவ்வப்போது பி.எச்.டி. தீஸிஸை புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும். உலக சினிமா ஆர்வலர்கள் தயவுசெய்து வெகுஜன தமிழ் சினிமாவோ, தெலுங்கு சினிமாவோ பார்த்து தொலைக்கவே வேண்டாம். பார்த்தால் உங்களுக்கெல்லாம் பேதியாகும் என்று எந்த முனிவராலோ, எந்த ஜென்மத்திலேயோ சாபம் இடப்பட்டிருக்கிறீர்கள்.

சமீபகாலமாக மாற்றுத் திரைப்படங்கள் படைத்தவர்களும் சில வணிகலாபங்களை முன்னிட்டோ அல்லது வயிற்றுப்பாட்டினை முன்னிட்டோ வெகுஜன சினிமாவை நெருங்கி வந்து, வெகுஜன சினிமாவுக்குள்ளே கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்டார்கள். இன்றைய தேதியில் மாற்று திரைப்படம் என்பது புதியதாக திரைத்தொழிலை கற்கும் மாணவர்களுக்கும், வெகுஜன சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத ஒரு சில திறமையாளர்களுக்கும் மட்டுமே என்ற அளவில் குறுகிப்போய் கிடைக்கிறது. மாற்று திரைப்படம் எடுப்பவர்களும் கூட வெகுஜன பத்திரிகைகளின் ஆதரவில் தங்களுக்கு வேண்டிய விளம்பர வெளிச்சத்தை பெற தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் முன்பு மாற்றுப் படங்களுக்கு திரைப்பார்வை எழுதிக்கொண்டிருந்த அறிவுஜீவிப் பறவைகளுக்கு குளம் வற்றி விட்ட நிலையில், வேறுவழியில்லாமல் ‘வெகுஜன சினிமாவுக்கான விமர்சனம்' என்ற வேடந்தாங்கலை நாடிவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வந்தவர்கள் சும்மா இருந்தால் பரவாயில்லை. 'தமிழ் சினிமா அபத்தத்தின் உச்சம்', ‘சித்தாந்தங்களுக்கும் சினிமாக்களும் என்ன தொடர்பு?', ‘நடிகைகளின் தொப்புள்களிலா ஆம்லெட் போடுவது?' ‘பெண்மையை இழிவுப்படுத்துகிறார்கள்', ‘அதிகார ஆண்மய்யத் திமிர்' ‘விளிம்புநிலை' என்றெல்லாம் ஏதேதோ நமக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளாலும், வாக்கியங்களாலும் திரைப்பார்வை (அவர்கள் எழுதினால் மட்டுமே அது திரைப்பார்வை. மற்றவர்கள் எழுதுவது விமர்சனம்) எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். வெகுஜன சினிமா குறித்து இவர்கள் எழுதுவதால் வெகுஜன பத்திரிகைகளும், அவசரத்துக்கு அல்லது பரபரப்புக்கு பக்கத்தை நிரப்ப இவர்களது விமர்சனங்களை பிரசுரித்து விடுகின்றன. படிக்கும் வாசகர்களுக்கு தான் தாவூ தீருகிறது.

எழுபத்தைந்து ஆண்டுகால சினிமா வரலாற்றில் இப்போது தான் புதியதாக ஆண்மய்யத் திமிரையும், அபத்தங்களையும் சினிமா காட்டுவது போல இவர்கள் பேசுவது நல்ல நகைச்சுவை. ஹரிதாஸ் காலத்திலிருந்து இதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பது அவர்களுக்கு தெரியாது. பாவம். அப்போதெல்லாம் உலகப் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ”இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை!” என்று எம்.ஜி.ஆர் பாடியதெல்லாம் துயிலில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்போது “கைய வெச்சுக்கிட்டு சும்மா இருடா” என்று ரீமாசென் பாடும்போது தான் கொதித்தெழுந்து, மாய்ந்து மாய்ந்து ஐம்பது, அறுபது பக்கங்களில் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இவர்களது திரைப்பார்வையை படித்தபின்னர் தான் படத்தை இயக்கிய இயக்குனருக்கே அவரது படம் குறித்த பல பரிமாணங்கள் தெரிகிறதாம். ”இப்படி எல்லாம் கூட நாம எடுத்திருக்கோமா?” என்று இயக்குனர்கள் அதிசயிக்கிறார்களாம்.

வெகுஜனப் படங்கள் மக்களின் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்படுபவை. சராசரி பார்வையாளன் தான் எதையெல்லாம் அடையவில்லையோ அதையெல்லாம் திரைநாயகன் அடையும்போது அதை கண்டு மகிழ்கிறான். தனக்கு தான் காதலி கிடைக்கவில்லை தன் அபிமான நாயகனாவது படத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறானே? என்று சிலிர்க்கிறான். மரத்தை சுற்றி டூயட் பாடுவதெல்லாம் நமக்கு நடக்கக்கூடிய காரியமா? திரையில் வண்ணமயமாக நடக்கும்போது அதை நம் மனது கொண்டாடுகிறது. சோனி உடம்பை வைத்து அவனால் ஒருத்தனை கூட அடிக்கமுடியாது. அவனை மாதிரியே சினிமா ஹீரோவும் ஒரே ஒருத்தனிடம் அடிவாங்குகிறான் என்றால் அந்த கருமத்தை அவன் ஏன் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? அவனுடைய ஹீரோ சூப்பர்மேனாக ஐம்பது பேரை பறந்து, பறந்து அடித்தால் தானே அவனுக்கு சுவாரஸ்யம்? அவனுடைய சூழலில் ஒரு பெண்ணின் தொப்புளையோ, Cleavageயோ பார்ப்பது அவனுக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அது சினிமாவில் கிடைக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே?

வெகுஜன சினிமா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டத்துக்கான ஊடகம். அதில் லாஜிக்கோ, மேஜிக்கோ பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம். வெகுஜன சினிமாவுக்கான விமர்சனங்களும் வெகுஜன பாணியிலேயே அமைவது தான் சரியானது. மாறாக ரஜினி படத்திலோ, விஜய் படத்திலோ யதார்த்தம், பின்நவீனத்துவம், சமூக அக்கறை இத்யாதிகளை எதிர்பார்த்து அறிவுஜீவிகள் யாராவது ஏமாந்து கொதித்தெழுவதில் எந்தப் பயனும் இல்லை. வணிக லாபத்துக்காக எடுக்கப்படும் சினிமா அதன் பார்வையாளர்கள் எதை கேட்டாலும் தர தயாராகவே இருக்கும். மாறவேண்டியது சினிமாக்காரர்கள் மட்டும் அல்ல, சமூகமும் சமூகத்தின் ரசனையும்! சமூகத்தை இந்த நிலையில் வைத்திருப்பது அச்சமூகத்தில் தோன்றிய அறிவுஜீவிகளின், சிந்தனையாளர்களின் குற்றமே தவிர சினிமாக்காரர்களின் குற்றமல்ல.

25 நவம்பர், 2009

நீங்க நல்லவரா? கெட்டவரா?

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் ‘தெரியலியேப்பா!’ என்று நாயகன் கமல் மாதிரி பதில் சொல்லக்கூடும். சென்னை கோடம்பாக்கத்துக்குப் போய் தெருமுக்கில் நின்றுகொண்டு, இதே கேள்வியைக் கேட்டால் ‘நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!’ என்று நெஞ்சை நிமிர்த்தி, பெருமிதமாய் பதில் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘நல்லோர் வட்டத்தை’ சேர்ந்தவர்கள்.

தெற்கு சிவன் கோயில் பகுதிக்கு சென்றபோது நமக்கே ஆச்சரியம். சென்னையிலா இருக்கிறோம்? ஒவ்வொரு வீட்டு வாசலும் சுத்தமாக, கோலம் போடப்பட்டு, ‘பளிச்’சென்று இருக்கிறது. சுவர்களில் சுவரொட்டிகளும், ‘கோடம்பாக்கத்தார் அழைக்கிறார்’ பாணி அரசியல் சுவர் விளம்பரங்களும் அறவே இல்லை. பொன்மொழிகளும், தத்துவங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சாலையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு கண்களுக்கு பசுமையையும், உடலுக்கு சில்லிப்பையும் ஏற்படுத்துகின்றன. கீழ்நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்டால் ‘நல்லோர் வட்டத்தை’ கைகாட்டுகிறார்கள்.

அதென்ன நல்லோர் வட்டம்?

கோடம்பாக்கம் சிவன் கோயில் அருகே டீக்கடை நடத்திவரும் பாலசுப்பிரமணியன் சொல்கிறார். “இந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். என் கடையில் பாரதியார், மகாத்மா என்று தேசத்தலைவர்களின் படங்களை வைத்திருப்பேன். பொன்மொழிகளை எழுதி வைத்திருப்பேன். கடைக்கு வரும் இளைஞர்கள் பலரும் அரசியல், உலக நடப்பு என்று பேசுவார்கள். ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அக்கறை அவர்களின் பேச்சில் தொக்கி நிற்கும். ஆனால் வெறுமனே தங்களது ஆதங்கங்களை கொட்டிவிட்டு செல்வதில் என்ன பலன் இருக்க முடியும்?

அந்த இளைஞர்களோடு பேசி, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு அமைப்பை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கினோம். அதற்கு நல்லோர் வட்டம் என்று பெயரும் இட்டோம். ‘நல்லது நடக்க வேண்டும்’ என்று விரும்புகிறவர்கள் அனைவருமே இந்த அமைப்பின் உறுப்பினர்கள். இந்த அமைப்புக்கு சந்தா கிடையாது. காசு என்று வந்தாலே அதை நிர்வகிக்க ஏராளமான மனித உழைப்பும், நேரமும் தேவைப்படுகிறது. அந்த உழைப்பையும், நேரத்தையும் உபயோகமாக பயன்படுத்த சந்தா என்ற ஒரு விஷயத்தையே நீக்கிவிட்டோம். நிர்வாகச் செலவுகளை இந்தப் பகுதியில் இருப்பவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். நல்லது நடக்குதுன்னா எல்லோருக்குமே பிடிக்குது. அதனால கேட்காமலே செலவு பண்ணுறாங்க.

ஆரம்பத்தில் ஏழெட்டு பேர்களாக இருந்த நாங்கள் எங்களது செயல்பாடுகள் மூலமாக நிறைய பேரை கவர்ந்தோம். இன்று பார்த்தீர்களென்றால் கிட்டத்தட்ட நூறு பேர் தீவிரமாக செயல்படுகிறோம். ஆயிரம் பேர் எங்கள் நல்லோர் வட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு உறுப்பினராக விதிமுறைகள் எதுவும் கிடையாது. அமைப்பை பதிவும் செய்யவில்லை. ஒரு மாதிரியான அன்கான்ஃபரன்ஸ் வடிவில் இருப்பதாலேயே மக்கள் பலரும் அச்சம் ஏதுமின்றி எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகி வருகிறார்கள்”

அப்படி என்னதான் செய்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்?

அப்துல் கலாமிற்கு ‘இந்தியா 2020’ என்று கனவு இருப்பதைப் போல, இவர்களுக்கு ‘கோடம்பாக்கம் 2020’ என்றொரு கனவு உண்டு. தாங்கள் வசிக்கும் பகுதி, நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு ‘மாதிரிப் பகுதி’ ஆக இருக்க வேண்டும் என்பது இவர்களது கனவு. உதாரணத்துக்கு திருவள்ளூர் மாவட்ட குத்தம்பாக்கத்தை காட்டுகிறார்கள். தங்கள் கனவு மெய்ப்பட சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரத்ததானம், உடல்தானம், கண்தானம், அன்னதானம், மரம் வளர்த்தல் போன்ற வழக்கமான செயல்பாடுகளோடு சில குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் மூலமாக இவர்கள் மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

‘அதிரடிச்சேவை’ என்ற பெயரில் நடைபெறும் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. அமைப்பினர் நூறு பேர் இச்சேவைக்கு தயாராகிறார்கள். ஒரு பகுதியில் இருக்கும் குப்பைகள் மொத்தத்தையும் அகற்றி தூய்மைப் படுத்த வேண்டுமா? மூன்றே மணி நேரத்தில் அதிரடி வேகத்தில் அகற்றி விடுகிறார்கள். ‘ஒரு பகுதியை சீர்ப்படுத்த மூன்று மணி நேரத்துலே முடியலேன்னா, நிச்சயமா முன்னூறு மணி நேரம் ஆனாலும் முடியாது! அதனாலே தான் இந்த மூன்று மணி நேரத்தை எங்களுக்கு அடையாளமா எடுத்துக்கிட்டிருக்கோம்!’ என்கிறார் பொறுப்பாளர்களில் ஒருவரான வெங்கடேசன். இந்த அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளே இல்லை. பணிகளின் தன்மைக்கேற்ப பொறுப்பாளர்கள் மட்டும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகை செயல்பாடுகளை இவ்வமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

‘ஒரு ரூபாய் திட்டம்’ மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம். இப்பகுதியில் இருப்பவர்களிடம் மாதம் ஒரு முறை ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வசூலிக்கும் பணத்தை பகுதியில் இருக்கும் அன்பு இல்லம் எதற்காவது (அனாதை இல்லம் என்ற சொல்லை நல்லோர் வட்டத்தினர் உபயோகிப்பதில்லை) தருகிறார்கள். ஒரு ரூபாய் என்பது மிகக்குறைந்த தொகை என்பதால் ஏராளமானோர் இத்திட்டத்துக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் பலமான வரவேற்பு இருக்கிறது.

மாநகராட்சி, காவல்துறை என்று அதிகார அமைப்புகளோடு நல்லோர் வட்டத்தினருக்கு நல்ல தொடர்பு இருப்பதால், இவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் எந்த சிக்கலுமின்றி நிறைவேறி விடுகிறது. “எங்களுக்கு இதுவரை எதிர்மறையான அனுபவம் எதுவுமே இல்லை!” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகளை கேட்டறிந்த டாக்டர் கலாம், இவ்வமைப்பினரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார். நல்லோர் வட்டத்தினரின் செயல்பாடுகள் சிலவற்றைக் கேட்கிறபோது விக்கிரமன் படக்காட்சிகளைப் போல எல்லாமே பாசிட்டிவ்வாக இருக்கிறது. “2020ல் நிச்சயமா கோடம்பாக்கம் வளர்ச்சி அடைந்தப் பகுதியா இருக்கும். இங்கே வசிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், நல்ல சிந்தனைகளோடும் வாழ்வாங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்.

மாற்றம், மாற்றம் என்று வறட்டுத்தவளையாக கத்திக் கொண்டிருப்பதை விட, நல்லோர் வட்டத்தினரைப் போல செயல்படுவதின் மூலமாக நாம் நினைக்கும் மாற்றங்களை நிறைவேற்றிவிட முடியும். ஊருக்கு ஒரு நல்லோர் வட்டம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு ஊரும் 2020-ஐ இலக்காக கொண்டு செயல்படுமேயானால் ‘இந்தியா 2020 கனவு', 2020க்கு முன்பே நிறைவேறிவிடும் என்பது உறுதி.

23 நவம்பர், 2009

சேவைக்கு ஓர் ஆலயம்!


இளையராஜாவுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது தந்தை மறைந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் இரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர். வேர்க்கடலை விற்று கிடைக்கும் காசில் மகனின் ஒருவேளை சாப்பாட்டுத் தேவையைக் கூட அந்த தாயால் பூர்த்தி செய்ய இயலவில்லை. அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றினை நாடினார். மனமகிழ்ச்சியோடு இளையராஜாவை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இளையராஜா அந்த இல்லத்தில் தங்கி தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. இன்று இளையராஜா, நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இப்போது தனியாக ஒரு வீடு எடுத்து வயதான தன் தாயை தாங்கிக் கொண்டிருக்கிறார். “என் மகனை வளர்க்க அந்த இல்லம் மட்டும் இல்லையென்றால் அவன் என்னவாகியிருப்பான் என்றே நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை என்னைப் போல அவனும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்திருக்கலாம்” என்கிறார் அவரது தாய்.

வாராவாரம் தான் வசித்த / படித்த இல்லத்துக்கு வந்து இப்போதிருக்கும் குழந்தைகளிடம் பேசிச்செல்வது இளையராஜாவுக்கு வழக்கம். இன்று தான் வளர்ந்த அந்த இல்லத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் இளையராஜா இருக்கிறார்.

அந்த இல்லம் சேவாலயா. சென்னையிலிருந்து நாற்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அருகில் கசுவா என்றொரு கிராமத்தில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது. இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பாக ஐந்தே ஐந்து குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட சேவாலயா இன்று நூற்றி அறுபது ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அறுபது முதியவர்களும் வாழும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

இவர்களால் இந்த வளாகத்தில் நடத்தப்படும் பாரதியார் மேனிலைப்பள்ளியில் ஆயிரத்து ஐம்பது மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். கல்விக்கட்டணம், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாகவே பேருந்து வசதியும் செய்துத் தரப்பட்டிருக்கிறது.

பள்ளியை நமக்கு சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம்.

“மழலையர் வகுப்பில் தொடங்கி, பிளஸ் டூ வரை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்று எங்கள் தரத்தை உலகறியச் செய்திருக்கிறார்கள் எங்கள் மாணவர்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக கல்வி கற்பவர்கள் என்பது முக்கியமான விஷயம்.

இங்கே கல்வி கற்று செல்லும் மாணவர்கள் வறுமையில் உழல்பவர்கள் என்பதால் அவர்களது மேற்படிப்புக்கும் சேவாலயா உதவுகிறது. எங்கள் மாணவர்களுக்கு சர்வமதப் பிரார்த்தனையை கற்றுத் தருகிறோம். எல்லா மதங்களின் விழாக்களையும் இங்கு கொண்டாடுகிறோம். மதச்சார்பற்ற ஒரு ஸ்தாபனமாகவே சேவாலயா வளர்ந்து நிற்கிறது.

கல்விமுறையிலும் எங்கள் நிறுவனர் புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார். காந்தி, விவேகானந்தர், பாரதியார் மூவரின் சிந்தனைகளையும் எங்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோமேத்ஸ், வேளாண்மைன்னு மூன்று பிரிவுகளில் கல்வி கற்றுத் தருகிறோம்”

“என்னது வேளாண்மையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டால்,

“ஆமாங்க. வேளாண்மை இங்கே மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாகவே இருக்கு. அதுவும் இயற்கை வேளாண்மை. எங்களோட அறிவியல் ஆய்வுக் கூடங்கள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை.

இங்கே பயிலும் மாணவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் தண்டனைகள் எதுவும் கிடையாது. கல்வியை விட ஒழுக்கத்தை போதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறோம். சேவாலயாவில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறோம். இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள் பலரும் இங்கேயே விருப்பப்பட்டு பணிபுரிகிறார்கள். காந்திய சிந்தனைகளை மாணவர்களுக்கு விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊழியர்கள் வாரத்துக்கு ஒருமுறை கதராடை மட்டுமே அணிகிறோம்” என்றார் தும்பைப்பூ நிறத்தில் கதர் வேட்டி, கதர் சட்டையோடு இருந்த சண்முகம்.

சேவாலயா மாணவர்கள் ‘கொட்டு முரசே!’ என்ற பெயரில் ஒரு கலைக்குழு நடத்துகிறார்கள். விழிப்புணர்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை அவ்வப்போது மாவட்டம் முழுவதும் நடத்துகிறார்கள். இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்த பிரச்சாரத்தையும் செய்கிறார்கள்.

பள்ளிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தால் பளிச்சென்றிருக்கிறது சுவாமி விவேகானந்தா இலவச நூலகம். பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகிறது. பள்ளி, விடுதி மாணவர்கள் மட்டுமின்றி கிராமத்தவர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் நூல்களை அவ்வப்போது வண்டிகளில் ஏற்றி சுற்று வட்டார கிராமங்களுக்கு நடமாடும் நூலகமாக எடுத்துச் செல்கிறார்கள். சுமார் இருபது கிராமங்களுக்கு விவேகானந்தா நூலகம் சேவை செய்கிறது.

கஸ்தூரிபாய் தையலகம் கிராமப்புற மகளிருக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இலவசமாகவே இங்கே தையல் கற்கலாம். இதற்காக சுமார் இருபத்தைந்து தையல் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. வளாகத்தில் கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் நேரப்போக்குக்காக இவற்றை உருவாக்குகிறார்கள்.

மகாத்மா காந்தியின் பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ மையம் விடுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, கசுவா கிராம மக்களுக்கும் முதலுதவி அடிப்படையில் பயன்படுகிறது. அத்தியாவசிய மருந்துகளும், மாத்திரைகளும் இங்கே இலவசம்.

முதியோர் இல்லத்தில் தாத்தா – பாட்டிகளுக்கு பொழுது போக்க தொலைக்காட்சி, ஓய்வெடுக்க படுக்கை, மருத்துவ வசதிகள் உண்டு. அவ்வப்போது மருத்துவர்கள் வந்து உடல்நிலையை பரிசோதித்து செல்கிறார்கள். குழந்தைகள் இல்லாத சரோஜா மாமி ஒன்பது வருடங்களுக்கு முன்பாக தன் கணவரோடு வந்து இந்த இல்லத்தில் சேர்ந்தார். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக அவரது கணவர் காலமாகிவிட்டார். இங்கே காலமாகும் முதியவர்களின் இறுதிச்சடங்குகளையும் இவர்களே செய்துவிடுகிறார்கள். “எங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தா கூட இவ்வளவு நல்லா கவனிச்சிட்டிருப்பாளான்னு தெரியலை” என்று சொல்லி கண்கலங்குகிறார் சரோஜா மாமி.

தாங்கள் யாருமற்றவர்கள் என்ற உணர்வு இங்கிருப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை இங்கே அழைத்துவந்து ஓவ்வொரு தாத்தா பாட்டிக்கும், ஓரிரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து, “இனிமே இவங்க தான் உங்களோட பேரன், பேத்தி” என்று சொல்லிவிடுகிறார்கள். இதன் மூலமாக புதிய உறவுமுறைகளையும், வாழ்க்கைக்கான பிடிப்பையும் இருதரப்புக்கும் ஏற்படுத்த முடிகிறது.

இந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்ள வாரிசுகள் இல்லாத முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடுத்ததாக வாரிசுகளால் கைவிடப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

முதியோர் இல்லம் தொடங்கப்பட்டதிலிருந்தே நாகராஜன் என்பவர் தன் மனைவியோடு தன்னார்வத்தோடு முன்வந்து இங்கே பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். இவர் ஐ.சி.எஃப். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தன்னுடைய ஓய்வுக்காலத்தை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தோடு இங்கே பணியாற்றுகிறார்.

சேவாலயாவின் நேயம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. கறவை வற்றிய மாடுகளின் கதி நம்மூரில் என்னவாகும் என்று தெரியுமில்லையா? அடிமாடாக்கி கசாப்பு கடைக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோன்ற அடிமாடுகளை கொண்டுவந்து ‘வினோபாஜி கோஷாலா’ என்றொரு பண்ணை வைத்திருக்கிறார்கள்.

இந்த மாடுகளின் சாணத்தை கொண்டு ‘பயோ-கேஸ்’ என்ற இயற்கை எரிவாயு உருவாக்கி, தங்களின் எரிவாயுத் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். சாணம் வைத்து மண்புழு உரம் என்ற இயற்கை உரத்தை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். ஒரு மாட்டினை பராமரிக்கும் செலவையும் தாண்டி, கூடுதல் லாபத்தை இந்த கறவை வற்றிய மாடுகளே தந்துவிடுகிறதாம். தொழுவத்தில் மாடுகளுக்கு மின்விசிறி கூட உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மனிதாபிமானம், சேவை என்பதைத் தாண்டியும் கிராமப் பொருளாதார மேம்பாடு என்ற நிலைக்கு சேவாலயா பயணித்துக் கொண்டிருக்கிறது. நிறுவனர் முரளிதரனும், அவரது மனைவி புவனாவும், சேவாலயா ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வளர்ச்சிகளுக்கு அச்சாணி.

முரளிதரனிடம் பேசும்போது, “பாரதியார், விவேகானந்தர், காந்தி – இந்த மூன்று பேரும்தான் என் ஆதர்சம். எழுத்தறிவித்தலின் முக்கியத்துவத்தை பாரதியிடமும், அன்னதானத்தின் அவசியத்தை விவேகானந்தரிடமும், கிராமங்களின் தேவையை காந்தியிடமும் கற்றேன். இருபத்தேழு வயதில் இந்த அமைப்பை உருவாக்கினேன்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன தடங்கல்கள். இவ்வளவு பெரிய பொறுப்பை நான் திறம்பட செய்யவேண்டுமே என்று என் பெற்றோர் அஞ்சினார்கள். எங்களது பள்ளிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. நன்கு வளர்ந்து இப்போது திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை என்று தெரிகிறது. எனினும் எதிர்காலம் குறித்த அக்கறையோடும், பொறுப்போடுமே செயல்படுகிறோம்.

திருமணத்துக்குப் பிறகு இப்பணி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் சேவை மனப்பான்மை கொண்ட ஒருவரையே வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தேன். புவனாவும், நானும் எக்காலத்திலும் சேவைகளிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டே திருமணமும் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பாக ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்த புவனா, வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுமையாக இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

டாட்டா கன்சல்டண்ஸி நிறுவனத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக பணியாற்றினேன். எனக்கும், என் குடும்பத்துக்கும் சம்பாதித்தது போதும், பொருளாதார ரீதியாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு நானும் இப்போது முழுநேர ஊழியனாக இங்கே பணிபுரிய ஆரம்பித்து விட்டேன்” என்றார்.

அரசுகளின் நலத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்று அடையாத நிலை இருக்கும்போது, சேவாலயா போன்ற அமைப்புகளின் சேவை நம் மனதில் நம்பிக்கை ஒளியை பரவச்செய்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

21 நவம்பர், 2009

பழசிராஜா - கேரளத்துப் பிரபாகரன்!


பழசி, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று கொரில்லா முறையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிடுகிறார். அவரது படையில் ஆர்வத்தோடு சேர்பவர்கள் பழங்குடிகள். ஒரு கட்டத்தில் வில்லும், வாளும் மட்டும் போதாது, துப்பாக்கிகளும் வேண்டுமென்று சொல்லி, வெள்ளையர்களை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றுகிறார் பழசி. நவீன ஆயுதங்களோடு பழசியின் பெரும்படை தாக்கும்போது வெள்ளையர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒப்பந்தத்துக்கு அழைக்கிறார்கள்.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் போடப்படும் ஒப்பந்தம் வெள்ளையர்களால் மீறப்பட, மீண்டும் போர்க்கோலம் காண்கிறார். சில அதிரடி வெற்றிகளை ஈட்டுகிறார். வெள்ளையர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி கேரள நாட்டைச் சேர்ந்த சிலரை ஆட்காட்டிகளாக பணிக்கு சேர்க்கிறார்கள். பழசியின் ரகசியங்களை அறிந்து, அவரது ஒவ்வொரு சகாக்களாக பிடித்து தூக்கிலிடுகிறார்கள். இறுதியில் தோல்வி உறுதி என்ற நிலையிலும் வீரத்தோடு மோதி இறவாப்புகழ் அடைகிறார் பழசிராஜா.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுக்கால ஈழநடப்பை வைத்துப் பார்த்தால், பழசிராஜாவையும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பலவகைகளில் ஒப்பிடலாம். (ஒரு காட்சியில் பழசிராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துகொண்டவர் என்றுகூட வசனக்குறிப்பு இருக்கிறது. அதை பழசியே மறுக்கும் வசனமும் உண்டு)

படத்தின் கதை இவ்வாறு இருக்க, வலைமனை ஒன்றில் வாசித்த பழசிராஜாவின் ஒரிஜினல் கதை சற்று வேறாக இருக்கிறது. பிரெஞ்சுப்படையே படத்தில் வரவில்லை. இறுதியில் பழசிராஜா தற்கொலை செய்துகொண்டதாக கதையில் இருக்கிறது. படத்திலோ வீரமரணம். எம்.டி.வாசுதேவன் மாற்றினாரா அல்லது படத்துக்காக மாற்றினார்களா என்றும் தெரியவில்லை.

‘இந்திய சுதந்திரத்துக்கு போராடிய முதல் வீரன்’ என்றெல்லாம் படம் வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ஆனால் படத்தில் இடம்பெறும் காலக்கட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கிறது. திப்புசுல்தான் மற்றும் கட்டபொம்மன் வாழ்ந்த காலத்திலேயே பழசியும் வாழ்ந்திருக்கிறார். தென்னிந்தியாவிலிருந்து வெள்ளையர்களை துரத்தியடிக்க திப்பு தலைமையில், குறுநில மன்னர்கள் திரண்டது குறித்த குறிப்புகளையும் படத்தின் வசனங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியவில்லை. மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரில்லாப் போரை ஒளிப்போர் (ஒளிந்துத் தாக்கும் போர்) என்று அழகாக மொழிபெயர்க்கிறார். தமிழ்படம் என்றாலும் சரத்குமாரை தவிர மற்றவர்கள் மூக்காலேயே பேசுவதால் மலையாளத்தில் படம் பார்க்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

தசாவதாரம் தொடங்கியது மாதிரியே கமல்ஹாசனின் கம்பீரக்குரலோடு படம் தொடங்கும்போது எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பு மடங்காகிறது. ஒருவேளை கமல் இப்படத்தை தயாரித்திருந்தால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். இருபது வருடங்களுக்கு முன்பு ராமனந்த்சாகர் எடுத்த ராமாயணம் மாதிரியிருக்கிறது பழசிராஜா. வெயிட்டான சப்ஜெக்ட்டை, வெயிட்டாக பணமிறக்காமல் கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்கள் கூட ரொம்ப சீப் ரேட்டில் மாட்டினார்கள் போலிருக்கிறது. காலையில் ஏழு மணிக்கே டாஸ்மாக் வாசலில் நிற்கும் நோஞ்சான்கள் மாதிரி பாவமாக இருக்கிறார்கள். அசிஸ்டெண்ட் கலெக்டராக நடித்திருப்பவர் வெள்ளைக்காரரா என்றே சந்தேகமாக இருக்கிறது.

படத்தின் முதல்பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. பழசிராஜா, ராணியைப் பார்க்கப் போகும்போது கூட முன்னால் நீட்டிய வாளோடே போகிறார். புகுந்து விளையாடப் போகிறார் என்று நினைத்தால், வெறும் ஐடியா மணியாக படையினருக்கு ஐடியா சொல்லியே காலத்தைத் தள்ளுகிறார். ராஜாவுக்கான ஆக்‌ஷன் பிளாக்குகள் ரொம்ப குறைவு. ஆனால் மம்முட்டியின் மெஜஸ்டிக் லுக்கும், ராயல் நடையும் அட்டகாசம். இரண்டாவது ஹீரோவாக வந்தாலும் சரத்குமார், கொடுக்கப்பட்ட வாய்ப்பை கனகச்சிதமாக கவ்விக் கொண்டார். மம்முட்டியோடு வாள்பயிற்சியில் ஈடுபடும்போது சரத்குமார் நான்கைந்து செண்டிமீட்டர் முந்துகிறார். சுமனுடனான மோதலிலும் அனல் பறக்கிறது.

கனிகா எவ்வளவு அழகாக நிஜமான ராணியைப் போலவே இருக்கிறார். பச்சைத் தமிழச்சியான இவரை ஏன் தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பாடலுக்கான லீடிங் காட்சியில் குளத்தில் குளித்துவிட்டு முண்டோடு படிக்கட்டில் ஓடி வருகிறார். டாப் ஆங்கிள் கோணத்தில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சி. விரிந்த திரையில் கண்கள் நிறைகிறது. இதற்கு இணையான ஒரு காட்சியை சொல்ல வேண்டுமானால், பம்பாய் படத்தின் உயிரே பாடலில் மனிஷா ஓடிவரும் காட்சியை சொல்லலாம். அழகான ராணியை ராஜா எப்போதும் அழவைத்துக்கொண்டே இருப்பது எரிச்சல்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ இளையராஜா. பழசிராஜாவுக்கான இசையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆஸ்கர் என்ன, நோபல் பரிசு கூட இளையராஜாவின் இசைக்கு தூசு. இளம் இசையமைப்பாளர்கள் பின்னணி இசை அமைக்க பழசிராஜாவை பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

உளியின் ஓசை தரத்தில் இருப்பதால் இப்படம் கலைஞருக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மருதநாயகம் ரேஞ்சுக்கு வரவேண்டிய பழசிராஜா, பட்ஜெட் குறைவால் கொஞ்சம் சூம்பிப்போயிருக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் என்னவாக இருக்குமென்பது படம் ஆரம்பித்த நான்காவது ரீலிலேயே யூகித்துவிட முடிகிறது. ஆகையால் இரண்டாம் பாதி இழுவையை சகித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டேமுக்கால் மணிநேரம் ஒரு சரித்திரப் படத்தை பார்த்துக்கொண்டு தமிழனால் பொறுமையாக ஒரு இடத்தில் இன்று அமரமுடியுமா என்பது சந்தேகமே.

20 நவம்பர், 2009

நக்சல்பாரிகள் - இன்றைய நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!
ஒன்பதாவது பாகம் :நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!


எமர்ஜென்ஸி யாரை பாதித்ததோ இல்லையோ, நக்சல்பாரிகளையும், அவர்கள் இயக்க வளர்ச்சிகளையும் மிகக்கடுமையாக மட்டுப்படுத்தியது. எமர்ஜென்ஸிக்கு பிறகான ஜனதா கட்சியின் கூட்டு அரசாங்கம் விசாரணையின்றி நாடெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நக்சல்பாரிகளை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்குப் பின்னணியில் பல்வேறு மனித உரிமை குழுக்களின் குரல் இருந்தது.

கடந்த கால கசப்பான அனுபவங்கள் நக்சல்பாரிகளை புடம் போட்டிருந்தது. பல்வேறு இயக்கங்களும், இயக்கத் தலைவர்களும் ஒன்று கூடி தாங்கள் ஏற்கனவே சென்று கொண்டிருந்த பாதையை மறுபரிசீலனை செய்தனர். ஒரு சில கட்சிகள் தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த அழித்தொழிப்பு முதலான நடவடிக்கைகளிலிருந்து தடம்மாறி பாராளுமன்றத்தில் மக்கள் ஆதரவோடு பிரதிநிதித்துவம் செய்ய முடிவெடுத்தார்கள். பீகாரில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) போன்றவர்கள் இவர்கள்.

இன்னொரு தரப்போ தங்களது வழக்கமான கொரில்லா போர்முறையை தொடர முடிவெடுத்தது. ஆந்திராவில் பிரபலமான மக்கள் போர்க்குழு, பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய குழுக்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நக்சல்பாரிகள் இருவேறு பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்புமே அவ்வப்போது அமையும் அரசுகளை எதிர்த்தே அரசியல் செய்து வந்தாலும், வழிமுறைகள் வேறு வேறு. இரு தரப்பும் கூட பல பிரச்சினைகளில் மூர்க்கமாக மோதிக்கொள்வதுண்டு.

ஆனாலும், கடந்த கால் நூற்றாண்டில் பார்க்கப் போனால் ஆயுதம் தாங்கிய நக்சல்பாரி குழுக்களே பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பது தான் யதார்த்தம். இந்த குழுக்கள் தான் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் தலைவலியை தந்து வருகிறார்கள். எழுபதுகளில் மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம் என்று சில மாநிலங்களில் மட்டுமே பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர்கள் இன்று ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும் அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக சுலபமாக நக்சல்பாரிகளால் காலூன்ற முடிகிறது. புதிய தொழில் திட்டங்களால் தங்கள் விளைநிலங்களை இழக்கும் விவசாயிகள், காடுகளை இழக்கும் பழங்குடியினரும் அடைக்கலமாகும் குழுக்கள் நக்சல்பாரி குழுக்களாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் நக்சல்பாரி குழுக்களின் தாய்வீடான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதில்லை. ஆனால் மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தயார் படுத்தும் விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவின் மக்கள் போர்க்குழு மற்றும் பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய நக்சல்பாரி குழுக்கள் தான் வலுவான ஆயுதவழிப் போராட்ட குழுக்களாக வளர்ந்திருக்கின்றன.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு பீகாரிலும், ஜார்க்கண்டிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே மக்கள் போர்க்குழு ஒரிஸ்ஸாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல பல மாநிலங்களிலும் பல நக்சல் குழுக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தடையை உடைத்தெறிய இக்குழுக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாநில அரசுகளின் தடையே கொரில்லா போர்க்குழுக்களை ஒன்றிணைய வைத்து விட்டது.

கட்சியாக உருவெடுத்தப் பின் முன்பை விட மூர்க்கமாக நக்சல் குழுக்கள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முழு பலத்தோடு இப்போது இருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காலூன்றும் பணிகளையும் சமீபகாலமாக செய்துவருகிறார்கள்.

நக்சல் குழுக்கள் அடிக்கடி தங்களது கட்சி பெயர்களை மாற்றியோ அல்லது குழுக்களை ஒன்றோடு ஒன்றாகவோ இணைத்துக் கொள்வது காவல்துறையையும், ஆட்சியாளர்களையும் குழப்பி வருகிறது. புதிய பெயர்களில், புதிய குழுக்களில் நக்சல் குழுக்களுக்கு போராளிகளை சேர்த்து மொத்தமாகப் போய் மீண்டும் பழைய குழுவில் இணைந்துகொள்வது அவர்கள் வழக்கம். நக்சல்குழுக்களுக்கு போராளிகளும், செய்தித் தொடர்பாளர்களும் மாதச்சம்பளம் வாங்கி பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு போராளிக்கு இப்போது ஆறாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை நக்சல் குழுவில் பணியாற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் எட்டாயிரம் முதல் ரூபாய் பதினாறாயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இணையான அல்லது உயர்ந்த சம்பளத்தையே நக்சல்பாரிகள் தங்கள் போராளிகளுக்கு வழங்குகிறார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கூட செய்தி சேகரிக்க இன்•பார்மர்களாக பணிக்கு அமர்த்துகிறார்கள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

நாடுகளுக்கிடையே இருக்கும் தீவிரவாதக் குழுக்களை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை நக்சல்பாரிகளின் வளர்ச்சி குறித்து கவலை தெரிவிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நிறைய பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்பதை அவ்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. இக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடமுடியவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம் 31,000 பேர் இருக்கலாம் என்று அவ்வறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை 2006ஆம் ஆண்டு வந்தது. அதன் பின்னர் இருமடங்காகவும் ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆயுதம் தாங்கிய நக்சல் குழுக்கள் ஒருங்கிணைந்து 2004ல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்த பிறகு, ஒரு அரசியல் கட்சிக்கேயுரிய கட்டமைப்போடு பிராந்திய கமிட்டிகளை உருவாக்கினார்கள். ஆந்திரா - ஒரிஸ்ஸா எல்லை சிறப்புக் கமிட்டி, ஜார்கண்ட் - பீகார் - ஒரிஸ்ஸா சிறப்புக் கமிட்டி, டாண்டகரன்யா சிறப்புக் கமிட்டி என்று தேசிய கட்சிகளுக்கு மாநில கமிட்டிகள் இருப்பது போல நக்சல்கள் செயல்படும் மாநிலங்களுக்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கமிட்டிகள் செயல்பட நிர்வாகிகளை நியமித்தார்கள். குழுக்களின் நிர்வாகம் சீர்பட்டது.

கட்சியின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதால் திட்டமிட்ட தாக்குதல்களை இப்போது மிகத்துல்லியமாக நிகழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த டிரெயின் ஹைஜாக்கிங்கையும் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது இந்தியாவின் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நக்சல்பாரி குழுக்கள் காலூன்றியிருக்கின்றன. இவைகளில் 62 மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்காடு இருக்கின்றனர். வெளிப்படையாகவே காவல்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் சவால் விடும் அளவுக்கு நக்சல்பாரிகளின் வளர்ச்சி இருக்கிறது.

(முற்றும்)


பின்குறிப்பு :

1. நக்சல்கள் குறித்து வாசிக்க நினைத்தபோது தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் கூட மிகக்குறைவான தரவுகளே வாசிக்க கிடைத்தது. அச்சுபாணி பிரச்சாரம் நக்சல்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தோன்றுகிறது.

2. இத்தொடரில் சிறுசிறு தகவல் பிழைகள் நிறைய இருக்கலாம். எனக்கு வாசிக்க கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். எப்பிழையும் என்னால் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்காது என்று நிச்சயமாக கூறமுடியும்.

3. நக்சல்கள் குறித்த விரிவான வாசிப்புக்கு போதுமான புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொடர் எழுதிய தினத்திலிருந்து இன்று வரை குறைந்தது பத்து தொலைபேசி அழைப்புகளாவது தொடர் குறித்து பேசும் நோக்கத்தோடே எனக்கு வந்துகொண்டே இருக்கிறது.

4. இந்த நிமிடம் வரை நான் நக்சல்களின் ஆதரவாளனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. வேண்டுமானால் அனுதாபி என்று சொல்லிக் கொள்ளலாம். இத்தொடர் என் பார்வையில் எழுதப்பட்டது என்பதால் அரைவேக்காடாகவும் சிலருக்கு தோன்றலாம்.

5. இறுதியாக, என் புரிதலில் பணக்காரர்களால் ஆனது தேசம் என்று அரசும், தேசமென்பது ஏழைகளுக்கானது என்று நக்சல்பாரிகளும் புரிந்துகொண்டதாலேயே இப்பிரச்சினைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக்கும் இடைப்பட்ட சிந்தனைகளோடு கூடிய ஒரு அமைப்பே இந்தியாவின் இன்றைய தேவை என்றும் கருதுகிறேன்.

18 நவம்பர், 2009

சூரிய(க்) கதிர்!

சில காலமாக தமிழில் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படுகிறது. அல்லது விற்கப்படுவது மாதிரியான ஒரு மாயையாவது இருக்கிறது. ஆனந்த விகடன் புதிய அளவுக்கு மாறியதற்குப் பிறகாக புதிய பத்திரிகைகளின் படையெடுப்பு அதிகமாகியிருப்பதை உணரமுடிகிறது. பழைய வாசகர்களை விகடன் இழந்துவிட்டது, அவர்களை கைப்பற்றிவிடலாம் என்றொரு நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்.

எனக்கென்னவோ, புதிய வாசகர்கள் சொல்லிக்கொள்ளும்படி பெருகாவிட்டாலும், விகடன் தன் பழைய வாசகர்களை இழந்ததாக தெரியவில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் புத்தகத்தின் விலையேற்றம் காரணமாக வாங்குவதை நிறுத்திவிட்டு ஓசியில் படித்துக் கொண்டிருக்கலாம். வடக்கு வாசல் என்றொரு பத்திரிகையை பார்த்தேன். தொண்ணூறுகளில் வந்த விகடன், குமுதம் கலவை. பத்து ரூபாய் விலையென்று நினைக்கிறேன். வாசிக்க நன்றாகவே இருக்கிறது. காலச்சுவடு, உயிர்மை போன்றவை இடைநிலை அந்தஸ்தை எட்டிவிட அகநாழிகை மாதிரி சிற்றிதழ்களும் கூட கொஞ்சம் தெம்பாக களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஐந்து ரூபாய்க்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் புதிய தலைமுறையும் ஆரம்பத்திலேயே ஒரு லட்சத்தை தாண்டிய பிரதிகளை விற்றுக் கொண்டிருக்கிறது. விலை, விளம்பர வெளிச்சத்தின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, தமிழகத்தில் சன் குழுமத்தைத் தவிர வேறெவரும் எட்டமுடியாத சாதனையை புதிய தலைமுறை எட்டியிருக்கிறது. “சினிமா இல்லை. நடப்புச் செய்திகள் இல்லை, தகவல் களஞ்சியமாக இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது விமர்சனம் அல்ல பாராட்டு. ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியான ஜாம்பவான்கள் மற்றுமே பெற்ற பாராட்டு இது. “இளைஞர் மலர் மாதிரியிருக்கிறது” என்பது இன்னொரு விமர்சனம். ‘இளைஞர் இதழ்’ என்று விளம்பரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இதழ் இளைஞர் மலர் மாதிரி தானிருக்கும். எப்படியிருப்பினும், பத்திரிகையுலகத்தின் இவ்வருட வரவுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக ‘புதிய தலைமுறை’ மலர்ந்திருக்கிறது.

குழந்தைகள் தினமன்று ஒரு குஜாலான புதியப் பத்திரிகையை வாங்க முடிந்தது. ‘சூரிய கதிர்’ (க்-கன்னா மிஸ்ஸிங்) என்று பெயருக்காகவே, பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இன்று பல பத்திரிகைகளில் பணிபுரியும் பல்வேறு பத்திரிகையாளர்களும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் மூத்த பத்திரிகையாளர் ராவ் அவர்களால் பட்டை தீட்டப்பட்டவர்களே. ஒரு பத்திரிகையாளத் தலைமுறையை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். ‘ஆசிரியர் : ராவ்’ என்பதே சூரிய கதிரின் மிகப்பெரிய பலம்.

ஆசிரியர் குழுவில் வாசுதேவின் பெயரை பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. குமுதத்தில் அவர் கலாட்டா அடித்த பக்கங்கள் என்னுடைய பள்ளிநாட்களை சுவாரஸ்யமாக்கிய விஷயங்கள். குறும்புக்காக பெண் வேடத்தில் ஆண்களை அணுகி, அவரது கற்பு ஜஸ்ட்டில் தப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பத்திரிகையின் இம்ப்ரிண்டில் எனக்குப் பிடித்த வாசுதேவ். நமீதா, இலீயானா என்று ஜொள்ளு எழுத்துகளால் விகடன் பக்கங்களை ஈரமாக்கிய தோழர் மை.பாரதிராஜா, கோவக்காரப் பொண்ணு மு.வி.நந்தினி, சென்னைத் தமிழில் கொஞ்சும் பாண்டிச்சேரி நண்பர் மரக்காணம் பாலா என்று என்னுடைய நண்பர்களும் ஆசிரியர் குழுவில் இருப்பது பத்திரிகையை கொஞ்சம் மனசுக்கு நெருக்கமாக்கியது.

2004 தீபாவளிக்குப் பிறகு முதன்முறையாக ஜெயேந்திரரின் பிரத்யேகப் பேட்டி, எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், அரசியல் குறைவான வைகோவின் அதிரடி, சின்னக்குத்தூசியின் கட்டுரை, இச்சுக்கு இலியானா, லொள்ளுக்கு விவேக் என்று உள்ளடக்க அளவில் முதல் இதழிலேயே சிகரம் தொட்டிருக்கிறது சூரிய கதிர். பாலகுமாரனின் தொடர் ஒன்று கூடுதல் அட்ராக்‌ஷன். எல்லா அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை கூட இல்லை என்பது சற்றே நெருடல். பார்த்திபனும் கடைசிப் பக்கத்தில் ஒருபக்கத் தொடர் ஒன்றை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல என்ன எழுதியிருக்கிறார் என்பது நான்குமுறை வாசித்தும் புரியவில்லை. கடைசிப் பக்கம் கச்சிதமாக இருக்க வேண்டியது தற்கால பத்திரிகைச் சூழலில் அவசியம்.

வெகுஜன இதழாக மலர்ந்துவிட்டப் பிறகு விகடன், குமுதம், குங்குமம் மட்டுமன்றி வாரமலர், ராணி ஆகியவற்றிலும் இருந்தும் கூட மாறுபட்டு தெரியவேண்டிய சவால் சூரிய கதிருக்கு இருக்கிறது. முதல் இதழ் தீபாவளி சிறப்பிதழ் போல ஜூகல்பந்தியாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்த இதழ்கள் முதல் இதழைவிட சிறப்பாக அமையவேண்டியது கட்டாயம். அரசியல் – சினிமா – சமூகம் – கலை என்று சூரிய கதிருக்கான வெளி பரந்ததாக இருப்பதால், சிறந்தவர்களை கொண்ட ஆசிரியர் குழு சிறப்பாகவே இயங்கும் என்று நம்புகிறேன்.

லே-அவுட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது பெரியக்குறை. ராவ் சார் ஜூ.வி. ஆரம்பித்தபோது ஏதாவது க்ரிட்டிகலான டாபிக்கல் மேட்டர்களுக்கு கம்பிவேலி கட்டி லே-அவுட் போட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் லே-அவுட் செய்யும் இந்தக் காலத்திலும் அந்த கம்பிகளையே பிடித்து வாசகன் தொங்கிக் கொண்டிருக்க முடியாது இல்லையா? அட்டைப்படமும் ரொம்ப சுமார், இலியானா அழகாகவே இல்லை. ஆர்ட் பேப்பரில் இல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்டில் 80 பக்கங்கள். பதினைந்து ரூபாய் என்பது கொஞ்சம் அதிகம் என்று வாசகர்கள் அணுக அஞ்சுவார்கள். எனினும் மாதமிருமுறை இதழ் என்பதால் விலை ரெகுலர் வாசகர்களுக்கு பெரிய பொருட்டாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பத்திரிகை தொடக்கத்துக்கான விளம்பரங்கள் போதுமானவையாக இல்லை என்பது என் அவதானிப்பு. சென்னை நகரில் சொற்ப இடங்களிலேயே சூரிய கதிர் சுவரொட்டிகளை கண்டேன். டிவி விளம்பரங்களும் போதுமானவையாக இல்லை. சன் நியூஸ், கலைஞர் நியூஸ் போன்ற உப்புமா சேனல்களில் விளம்பரம் செய்தால் மட்டும் பத்தவே பத்தாது. அதுபோலவே வினியோகமும் சரியாக இருப்பதாக தெரியவில்லை. லயன் காமிக்ஸ் கூட கிடைக்கும் தி.நகர் ஏரியாவிலேயே கூட சூரிய கதிர் சரிவர கிடைக்கவில்லை.

சூரிய கதிர் – எனக்குப் பிடித்திருக்கிறது, வாசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே பிடிக்கும் என்று நம்புகிறேன்.

16 நவம்பர், 2009

நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!

நக்சல்களை ஒரேயடியாக அரசாங்கம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நக்சல்பாரிகளும் மக்களுக்காக தான் போராடுகிறார்கள். ஆனால் அவர்களது அழித்தொழிப்பு வகையிலான வன்முறைகளை சட்டத்தின் பேரில் நாட்டை ஆளும் அரசாங்கத்தால் எந்நாளும் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தான் நக்சல்கள் மீது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. நக்சல் பிரச்சினையை முள் மீது விழுந்த சேலையாக அரசாங்கம் பார்க்கிறது.

நக்சல் குழுக்கள் குறிப்பாக நிலம் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டே தங்கள் வழியில் போராடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நக்சல்களின் கோரிக்கையான ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினாலும் கூட நக்சல்கள் அதை எதிர்பார்ப்பார்கள் என்று அரசு சொல்கிறது. அதாவது அரசு எதை செய்தாலும் அதை எதிர்ப்பதே நக்சல்பாரிகளின் கொள்கையாக மாறிவிட்டது என்பது அரசு தரப்பு பேசும் நியாயம்.

சமத்துவம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சுதந்திரம், வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று அரசு தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இத்துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால் ஒட்டுமொத்த நூற்றி இருபது கோடி இந்தியர்களையும் திருப்தி படுத்துவது மிகக்கடினம். இப்படிப்பட்ட நிலையில் நக்சல்களையும் சமாளிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

மக்கள் பணத்தை மக்களுக்காக செல்வழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரியாக பெறப்படும் பகுதியை ஏழைமக்களுக்கான திட்டங்களுக்காக தான் அரசு பெரும்பாலும் செலவழித்து வருகிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் கூட மத்திய அரசு ரூபாய் 2,475 கோடியை நக்சல்கள் ஆதிக்கத்திலிருக்கும் பின் தங்கிய 55 மாவட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. இப்பணம் ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக இம்மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 15 கோடி என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இது போன்ற திட்டங்கள் மூலமாக பின் தங்கிவிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே சமூகரீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறது. நக்சல்களின் வன்முறைப் போராட்டங்கள் இல்லாவிட்டால் எந்த இடையூறுமின்றி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடையச் செய்ய முடியும். நக்சல்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வன்முறை தான் ஆயுதம் என்று சட்டத்தை அவரவர் வசதிக்கு கையில் எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏறத்தாழ 76 மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இம்மாநிலங்களில் ஏழை மற்றும் பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்த வைக்கிறார்கள். எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள். அரசு மற்றும் சட்டங்களை மதிக்காமல் எதற்கெடுத்தாலும் ஆயுதங்களை தூக்குகிறார்கள். ஆயினும் அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இல்லை. நக்சல்பாரிகளின் தாக்குதல் பொதுவாக காவல்துறை மீதே அதிகமாக இருக்கிறது.

நக்சல்பாரிகளின் பிரச்சினைகளை அந்தந்த பிராந்திய சூழலுக்கேற்பவே கையாள வேண்டியிருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சரியான புரிந்துணர்வு இப்பிரச்சினையை வென்றெடுக்க அவசியமாகிறது. பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்கிவரும் நம் நாட்டில் சட்டத்தை காப்பது இன்றியமையாததாக இருக்கிறது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சட்டமீறல்கள் ஆங்காங்கே நடைபெறுமென்றால் இந்தியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தாகி விடும். நக்சல்பாரிகளை அடக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மாநில காவல்துறையை நவீனமயமாக்க வேண்டியது நக்சல்களை ஒடுக்க அவசியமாகிறது. கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, நவீனரக ஆயுதங்கள் என்று காவல்துறைக்கு அரசு வழங்கி வருகிறது.

2) உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அவ்வப்போது கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

3) மத்திய பாரா ராணுவவீரர்களை நக்சல் பாதிப்பு பகுதிகளில் ரோந்து சுற்ற வைக்கிறது.

4) மத்திய ரிசர்வ் போலிசார் பணிக்கு நிறைய ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை நவீன ஆயுதங்களோடு நக்சல் பாதிப்பு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்புகிறது.

இவையெல்லாம் பாதுகாப்புரீதியாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள். சமூகநீதி, சமூக பொருளாதார வளர்ச்சி போன்ற ரீதியில் பார்க்கப் போனால் கீழ்க்கண்ட சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

1) நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல்

2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல்

3) உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஊழலற்ற, மக்கள்நல நிர்வாகம்

4) மத்திய - மாநில அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

மக்களை மட்டுமன்றி இல்லாமல் நக்சல்பாரிகளையும் கருணைப்பார்வையோடு தான் அரசுகள் பார்க்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் நக்சல்பாரி போராளிகளுக்காக அறிவித்திருக்கும் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டம் மூலமாக போராளிகளும் திருந்தி சராசரி குடிமகன்களாக வாழும் வாய்ப்பிருக்கிறது. இத்திட்டம் மாநில அரசுகள் மூலமாக நக்சல்பாரி குழுக்களில் இருந்து வெளிவருபவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநில அரசாங்கம் இத்திட்டத்தின் மூலமாக சில சலுகைகளை முன்னாள் நக்சல்பாரிகளுக்கு வழங்கியது. மாத உதவித்தொகை ரூ.2000, ரூ.10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு, இரண்டாண்டு தொழிற்கல்வி, ஒரு ஏக்கர் விவசாய நிலம், போராளிகளின் குடும்ப குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்று ஏராளமான சலுகைகள் குழுக்களில் இருந்து வெளிபவர்களுக்கு அள்ளித் தெளித்தது.

இதுபோன்ற திட்டங்கள் மூலமாக நக்சல் பிரச்சினையை அடக்கிவிட முடியும் என்று அரசு நம்புகிறது. நக்சல்களின் தீவிரம் குறைந்திருப்பதாகவே அரசு தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் நாடெங்கும் 510 காவல் நிலையங்கள் நக்சல் அபாயத்தில் இருந்ததாகவும், கடந்தாண்டு அது 372 ஆக குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரணடைய விரும்பும் நக்சல்பாரி போராளிகளை கருணையோடு நடத்துவதால் நக்சல் குழுக்கள் பலவீனமடைந்து போராளிகள் சராசரி வாழ்வுக்கு திரும்புவார்கள் என்று அரசு நம்புகிறது.

(அடுத்த பாகத்தோடு முடிகிறது)

13 நவம்பர், 2009

அடிக்கடி தொலையும் ‘அந்த’ மேட்டர்!


கந்தனுக்கு ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே போகிறது. தேடிக்கொண்டேயிருக்கிறான். எங்கேதான் போயிருக்கும்? ச்சே.. தம்மாத்தூண்டு மேட்டரு, இதைப் போயி அடிக்கடி தொலைக்கிறோமே என்று அவனை அவனே நொந்துகொண்டான். அவன் குட்டிப்பையனாக இருந்தபோது அடிக்கடி இதை தொலைத்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்குவானாம். இன்னும் கூட வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களிடம் சொல்லி சிரித்து மானத்தை வாங்குகிறார் அம்மா.

”போனமாசம் தான் வாங்கியது. புத்தம்புதுசு. அதைப் போய் தொலைத்துவிட்டேனே? எனக்கு பொறுப்பேயில்லை” மனதுக்குள் பேசியவாறே தேட ஆரம்பித்தான். இது அடிக்கடி தொலைந்து போகிறது என்று நண்பர்களிடம் சொன்னால் வாய்விட்டு சிரிப்பார்கள். “இதைப்போயி ஏண்டா கழட்டுறே? அப்படியே போட்டுக்கிட்டிருக்க வேண்டியது தானே?” என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்?

24 மணி நேரமும் அதை போட்டுக் கொண்டிருந்தால் அரிக்காதா? சொறிந்து சொறிந்து சிவந்து விடுகிறது. சில நேரங்களில் புண்ணும் ஆகிவிடுகிறது. சூரிய வெளிச்சம் படாமல் அந்தப் பகுதியின் நிறமே வெளிர்நிறமாய் மாறிவிடுகிறது. காற்றாவது படட்டும் என்றுதான் இரவுவேளைகளில் மட்டும் கழட்டிவிடுகிறான் கந்தன். அதுபோல கழட்டுவது பிரச்சினையில்லை, காலையில் எழுந்ததுமே அதை எங்கே கழட்டி வைத்தோம் என்பதை மறந்துவிடுவது தான் அவனது பிரச்சினை.

அய்யோ. ரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட வேண்டும். அதற்குள் கிடைத்துவிடாதா?

நேற்று இரவு 12 மணிக்கு அறைக்கு வந்தேன். லைட்டுக்கு ஸ்விட்ச் போட்டேன். சட்டையை கழட்டினேன். பேண்டை கழட்டினேன். லுங்கி எடுத்து மாட்டிக் கொண்டேன். அதன்பிறகு தான் ‘அதை' கழட்டி இருக்க வேண்டும். வழக்கமாக அதுதான் நடக்கும். கழட்டி பொதுவாக எங்கே வைப்பேன்? டேபிள் மேல் வைப்பேன்? இல்லை தம் அடிக்க அந்த வேளையில் பாத்ரூமுக்கு போனால் பாத்ரூமில் சோப்பு பெட்டி வைக்கும் இடத்துக்கு அருகில் ஓரமாக வைத்திருப்பேன். அங்கேயும் காணோமே? எங்குதான் போயிருக்கும். சரி நேரம் ஆகிவிட்டது. ஊருக்கு போகவேண்டியதுதான். ஒரு வாரம் கழித்து வந்து ஓய்வாக தேடிக்கொள்ளலாம். பையை எடுத்துக் கொண்டு கந்தன் கதவை சாத்திக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினான்.

கந்தன் தேடிக்கொண்டிருந்த அந்த சிகப்புக்கல் மோதிரம் கட்டிலுக்கு கீழே கிடந்தது.

12 நவம்பர், 2009

ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்!

எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அலுவலகம். அதற்கு பக்கத்தில் பூசாரிவீடு. பூசாரி வீட்டுக்கு அடுத்ததாக மிஷின்காரம்மா வீடு. அவர்கள் வீட்டுக்கு முன்பாக கடையில் வாடகைக்கு ஒரு ஒயின்ஷாப்பும், பாரும் இருந்தது.

அவ்வப்போது குடிகாரர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். சில குடிகாரர்கள் போதையில் விசில் அடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். சிலபேர் உரத்தக் குரலில் பழைய பாடல்களை பாடியபடியே தள்ளாடியபடியே நடப்பார்கள். இன்னும் சிலரோ போதையில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தெருவில் புரள்வார்கள். சில பேர் பச்சை பச்சையாக எதிரில் இல்லாத எதிரி எவனையாவது திட்டியபடியே நடப்பார்கள். என் பெரியப்பாவும் அந்த பாரில் அவ்வப்போது 'கட்டிங்' விட்டு திராவிட இனமான வரலாறு சொல்ல ஆரம்பிப்பார். தினம் தினம் ஜாலியான கண்காட்சி தான். தெருப்பெண்கள் இரவு ஏழுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக செல்லமாட்டார்கள். குடிகாரர்கள் யாரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதில்லை என்றாலும் பெண்களுக்கு குடிகாரர்களை பார்த்தாலே வெறுப்பு.

ராதிகா நடித்த சித்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்பா சித்தி ரசிகர். எம்.ஆர்.ராதா எங்களுக்கு தூரத்து உறவினர் என்பதால் ராதிகா நடித்த படம், சீரியல் எதையும் வீட்டில் விட்டு வைப்பதில்லை. எங்கள் வீடே 'சித்தி'யை பார்த்துக் கொண்டிருக்க, நான் குமுதத்தின் நடுப்பக்கத்தை அரைமணி நேரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு +2 பெயிலான பிறகு நடுப்பக்கத்தை மட்டும் அப்பா 'சென்சார்' செய்து கிழித்து தந்ததுண்டு :-(

ஒயின்ஷாப்பில் பாட்டில்கள் உடையும் சத்தமும், 'ஆய்.. ஊய்' என்று பலமான சத்தமும் கேட்டது. சித்தியில் மூழ்கியிருந்ததாலும், ஒயின்ஷாப்பில் வழக்கமாக கலாட்டாக்கள் நடந்தவண்ணம் இருந்ததாலும் யாருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் மட்டும் கதவைத் திறந்துகொண்டு சென்று பார்த்தேன். பக்கத்து பூசாரிவீட்டு காம்பவுண்டை எகிறிக் குதித்து இரண்டு பேர் எங்கள் வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் உடைக்கப்பட்ட பீர் பாட்டில் முனைகள் கூர்மையாக பளபளத்தது. ஒருவனின் சட்டை முழுக்க இரத்தம். அவர்கள் ஓடிவருவதை கண்டதுமே யாரோ துரத்தி வருகிறார்கள் என்பது புலப்பட்டது. எப்படியும் எங்கள் வீட்டில் தான் பாட்டில்முனையில் கட்டாய அடைக்கலம் அடையப் போகிறார்கள் என்று தெரிந்தது. துரத்துவது போலிசாக இருந்தால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை வரும்.

வேகமாக ஓடிவந்து கதவை மூடி தாளிட்டேன். அப்பாவும், அம்மாவும் வித்தியாசமாக பார்த்தார்கள். உள்ளறைக்கு ஓடி, மரம் வெட்டும் இரண்டு அடி நீள கத்தியை (சாணை பிடிக்காமல் மொக்கையாக இருந்தது) எடுத்துக் கொண்டு கதவுக்கு அருகில் ஓடிவந்து நின்றேன். எங்கள் வீட்டு காம்பவுண்டை அவர்கள் எகிறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. நான்கைந்து நொடிகளில் கதவை நெருங்கி விடுவார்கள். "த்தா.. ங்கொம்மா.. வெட்டிடுவேன்.. குத்திடுவேன்" என்று பீதியில் வெறிக்கூச்சல் இட்டவாறே கத்தியை தரையில் சரக் சரக்கென இழுத்து பயங்கர சத்தம் எழுப்பினேன். கதவுக்கு அருகில் வந்தவர்கள் உள்ளே ஒரு 'பெரிய ரவுடி' இருக்கக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அல்லது பதட்டத்தில் உள்ளே எழுந்த கூச்சல் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குழம்பிப் போனவர்கள் எங்களது பின்வாசல் கேட்டை எகிறிக் குதித்து ஓட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஓட ஆரம்பித்ததுமே எனக்கு தெம்புவந்துவிட்டது. கதவை திறந்துகொண்டு அவர்களை கத்தியோடு துரத்த ஆரம்பித்தேன். வெற்றுடம்பு. வீட்டில் இருக்கும்போது சட்டையோ, உள்பனியனோ போடுவதில்லை. கேட்டை தாண்டி ஓட ஆரம்பிக்கும்போது 'லுங்கி' தடையாக இருந்தது. அதை அவிழ்த்து தூக்கியெறிந்துவிட்டு 'டாண்டெக்ஸ்' ஜட்டியோடு அவர்களை வெறியோடு துரத்தினேன். மூன்று பெரியப்பா வீடுகளும் எங்கள் வீட்டுக்கு அருகருகே இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து வந்த வினோத சத்தத்தை கேட்டவர்களும் துணுக்கிட்டிருக்கிறார்கள். பெரிய பெரியப்பாவின் மகன் என்னவென்று பார்க்க சாலைக்கு வந்தபோது தம்பி ஜட்டியோடு கத்தியை எடுத்துக்கொண்டு இருவரை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன ஏதுவென்று தெரியாத அவரும் அந்த 'இருவரை' துரத்த ஆரம்பித்தார். உண்மையில் அவர்களை ஏன் கத்தியோடு துரத்தினேன் என்று எனக்கும் அப்போது தெரியாது.

குடிகாரர்கள் இருவர் மூச்சுவாங்க முன்னால் ஓட.. அவர்களை துரத்தியவாறே நாங்கள் இருவரும் பின்னால் ஓட.. ஒன்றும் புரியாமல் எங்கள் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணனாவது சைலண்டாக ஓடிவந்தார். நானோ அபோகலிப்டோ வேட்டை ஸ்டைலிலும், அப்பாச்சே செவ்விந்தியர்கள் ஸ்டைலிலும் ஆய்.. ஊய்.. என்று கொடூர சத்தம் எழுப்பியவாறே துரத்தினேன். துரத்தப்பட்டவர்கள் மடிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகிலிருக்கும் குளத்துக்குள் நுழைந்து ஓட ஆரம்பித்தார்கள். குளத்தை தாண்டினால் அவர்கள் ஊருக்குள் தப்பி ஒளிவது எளிது. ஓட்டம்.. ஓட்டம்.. மரண ஓட்டம்.. அந்த அளவுக்கு வேகமாக வெறிநாய்கள் துரத்தியபோது கூட நான் ஓடியதில்லை. என்னைவிட என் அண்ணன் வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கிட்டத்தட்ட அவர் நெருங்கிய வேளையில், அவர்களில் ஒருவன் சடன் பிரேக் போட்டு திரும்பி உடைந்த பாட்டிலை காட்ட இருவரும் திகிலடித்துப் போனோம். நோஞ்சான்களாக இருவர் இவ்வளவு தூரம் அவர்களை துரத்திவந்தது குறித்து அவன் கருடகர்வ பங்கம் பட்டிருக்க வேண்டும். "அப்படியே திரும்பி ஓடுங்கடா... முன்னாடி ஸ்டெப் வச்சா இறக்கிடுவேன்" என்று பாட்டிலை குத்துவது போல காட்ட..

முன்னால் ஓடிய வேகத்திலேயே அப்படியே அபவுட் டர்ன் போட்டு திரும்பி பின்னால் ஓட ஆரம்பித்தோம். அந்த குடிகாரர்கள் காரிய மண்டபம் பக்கமாக ஓடி ஒளிந்து எஸ்கேப் ஆனார்கள். திரும்பி ஓடிவரும்போது அண்ணன் கேட்டார். "எதுக்குடா அவனுங்களை கையில கத்தியோட துரத்துனே?". என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவர்களை துரத்த வேண்ட அவசியம் எதுவுமில்லாமலேயே துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறேன். "தெரியலையே!" என்று சொன்னபோது மண்டையில் நங்கென்று குட்டினார். மேலதிக விசாரணைகளுக்கு அப்புறம் தான் தெரிந்தது. அந்த ரெண்டு பேரும் குடிபோதையில் ஒயின்ஷாப் மாடியில் இருந்து தெருவில் பாட்டில் விட்டிருக்கிறார்கள். அவர்களது போதாதநேரம் ரோந்துவந்த போலிஸ் ஜீப் ஒன்றின் மீதே பாட்டில் விழுந்து உடைந்திருக்கிறது. போலிஸ் துரத்த, இந்த அப்பாவிகள் தப்புவதற்காக எங்கள் வீட்டுப் பக்கமாக ஓடிவந்திருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் நின்றிருந்த அப்பா சொன்னார். "நல்லா சவுண்டு உடறே. அரசியலுக்கு போனா அசத்திடுவே!". அதுவரை ஓ.வில் ஆரம்பிக்கும் ஸ்லோகத்தையெல்லாம் என் வாய் உச்சரிக்கும் என்பது என் வீட்டுக்கு தெரியவே தெரியாது. என்னோடு அந்த குடிகாரர்களை துரத்தி வந்த எனது அண்ணன் இப்போது அரசியல்வாதி.

நக்சல் தரப்பு நியாயங்கள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!


ஒரு இயக்கம் திடீரென்று ஒரே நாளில் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளானைப் போல தோன்றிவிடுவதில்லை. நக்சல்பாரிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் 1960 காலக்கட்ட நாட்டு நடப்போடு பொருத்திப் பார்த்தோமானால் அந்த இயக்கம் தோன்றியிருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடியும்.

எந்த ஒரு நாட்டிலுமே அரசினை எதிர்க்கக் கூடிய மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அம்மக்களது அன்றாடத் தேவைகள் கூட அவர்களை ஆளும் அரசாங்கங்களால் நிறைவேற்றி வைக்கப்படாத நேரங்களில் அரசினை எதிர்த்து கலகக்குரல் எழுப்புகிறார்கள். முன்னேறிய பல நாடுகளில் கூட இதுபோன்ற புரட்சியாளர்களை காணமுடியும். எல்லாத் தரப்பு மக்களையுமே அரசாங்கங்களால் திருப்திபடுத்திவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது ஆராயக்கூடிய கேள்வி. வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் சில தரப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு கண்கூடாகவே தெரிகிறது. எனவே இங்கே புரட்சிக்குரல் எழுந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் புரட்சிகர சிந்தனைகளை வழிதொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சிந்தனைகளை தேடி, தேடி வாசிக்கிறார்கள். சமுதாய நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மனதளவில் தயாராகிறார்கள். கம்யூனிஸம் மக்கள் மனங்களில் ஒரு மதமாகிறது. இந்த மனப்பான்மை வியட்நாமில் எதிரொலித்து புரட்சி மலர்கிறது, அமெரிக்காவை வியட்நாமிய கொரில்லாக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

ஐரோப்பாவில் மாணவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர்போராட்டங்கள், பொலிவியக் காடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் தொடுத்து உயிரிழந்த சேகுவேரா, சீனாவில் மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று உலகளாவிய செய்திகளாலும், 1940களின் இறுதியில் ஆந்திராவில் நடந்த தெலுங்கானா போராட்டங்களாலும் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனதில் ‘புரட்சி' நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்தது. இவையெல்லாம் மனரீதியாக இந்திய விவசாயிகளையும், பாட்டாளிகளையும் புரட்சிக்கு தயார் செய்துவந்தன.

இமயம் முதல் குமரி வரை இந்தியாவில் சுரண்டப்பட்ட விவசாயிகளும், பாட்டாளிகளும் தங்களை காக்க ஒரு தேவமைந்தன் வரமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்களில் கதாநாயகன் விவசாயியாக, தொழிலாளியாக நடித்து வில்லன்களான பண்ணையார்களையும், தொழில் அதிபர்களையும் தட்டிக்கேட்டு, அடித்து உதைத்தபோது சந்தோஷமாக கைத்தட்டி ரசித்தார்கள். அதே வேலையை ஒரு அமைப்பு செய்கிறது என்றபோது ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி அந்த அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தனிமனிதனாக அதிகார வர்க்கத்தை யாரும் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நக்சல்பாரியாக மாறி அமைப்புரீதியாக இயங்கத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸம் - லெனினிஸம் - மாவோயிஸம், இந்த மூன்று முப்பெரும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நக்சல்பாரிகளின் கொள்கைகள் கட்டமைக்கப்படுகிறது. காரல்மார்க்ஸின் சிகப்புச் சிந்தனைகளை செயலாக்கிக் காட்டியவர் ரஷ்யாவின் லெனின். லெனினுக்கு பின்பாக இச்சிந்தனைகளை ஆயுதவழியிலும், ஏனைய வழிகளிலும் சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் மாவோ என்று கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்படுகிற மாசேதுங்க்.

மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் நக்சல்பாரிகள் பின்பற்ற விரும்புவது மாசேதுங்கையே. மாசேதுங் சீனாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய ‘மக்கள் போர்' தான் மாவோயிஸ்டுகளின் குறிக்கோள். மக்களுக்கான உரிமைகளை மக்களே ஆயுதம் தாங்கி, கொரில்லா போர் முறையில் வென்றெடுப்பது தான் மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் புரட்சி. இந்திய நக்சல்பாரிகளின் நதிமூலமாக போற்றப்படும் சாருமஜூம்தாரின் மொழியில் சொன்னால், “துப்பாக்கி முனையில் மக்களுக்கான அதிகாரம்!”

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!” என்பது நக்சல்பாரிகளின் இன்னொரு கோஷம். இது ஜனநாயகமுறையில் தேர்தல் நடக்கும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் கோஷம். தேர்தல் புறக்கணிப்பை நீண்டகாலமாக நக்சல்பாரிகள் பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தேர்தல் முறையால் நாட்டில் புரட்சி ஏற்படுவது தாமதமாகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஏழ்மை தான் ஒருவனை நக்சல்பாரியாக, புரட்சியாளனாக மாற்றியது, மாற்றுகிறது. இந்தியாவில் இன்றும் செல்வாக்கோடு நக்சல்பாரிகள் இருக்கும் மாவட்டங்களை சற்று கவனத்தோடு நோக்கினோமானால் ஒரு விஷயம் புரியும். எங்கெல்லாம் ஏழ்மை தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நக்சல்பாரிகள் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாபம் ஏழ்மை. இந்தியர்களின் ஏழ்மைக்கு ஆட்சியாளர்கள் காரணமா, அரசு அதிகாரிகள் காரணமா, நிலப்பிரபுக்கள் காரணமா, முதலாளிகள் காரணமா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய, விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் ஏழ்மை ஆயுதம் தூக்கவும் செய்யும் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நிலையைப் பாருங்கள். பழங்குடி கிராமத்தவர் அதிகம் வசிக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செல்வாக்காக இருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடல்ரீதியாக அதிகம் சுரண்டப்படும் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக மட்டுமே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரிஸ்ஸாவில் அசுரத்தனமாக காலூன்றி வருகிறார்கள்.

அடுத்ததாக கலாச்சாரத் திணிப்பும் கூட ஆயுதமேந்த செய்கிறது என்று சொல்லலாம். இந்தியா யாருக்கு சொந்தமோ இல்லையோ, இந்தியாவின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு சொந்தம் என்பதை நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டாக வேண்டும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீன பொருளாதாரத் திட்டங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், அவர்களது சொந்த நிலமான கிராமங்களையும், காடுகளையும் விட்டு துரத்தப்படுகிறார்கள். காடுகளை நகரமயமாக்கல் விழுங்குகிறது. கிராமங்களை தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்துவந்த பரம்பரைத் தொழில்கள் அந்நிய சந்தையாளர்களால் அழிக்கப்படுகிறது. “நீ வாழவேண்டுமா? நகரவாசியாக மாறு. உன் கலாச்சாரத்தை, தொழிலை மாற்றிக்கொள்” என்று மறைமுகமான அச்சுறுத்தல் அவர்களுக்கு விடப்படுகிறது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நகரவாசிகளால் நாட்டிலிருந்து காட்டுக்கு துரத்தப்பட்டவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வேரையும் விட்டுத்தர இயலாமல் நக்சல்பாரிகளாக மாறினார்கள். பழங்குடியின மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கங்கள் செல்வாக்காக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நக்சல்பாரி இயக்கங்களில் பணியாற்ற ஆதிவாசிகளும், தலித்துகளுமே அதிகமாக குறிவைக்கப் படுகிறார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கவும்.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஏழ்மை, வர்க்க வேறுபாடு, நிலப்பங்கீடு குறித்த அரசுகளின் முரட்டுத்தனமான அணுகுமுறை, சாதிய அடக்குமுறை, நீதிமறுப்பு என்று பல காரணிகள் நக்சல் இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பரவலாக கடைக்கோடி இந்தியனுக்கும் சரியாக கிடைத்திருந்தால், இன்று ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகளால் சரியான கட்டமைப்பும் - வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தால், நீதி அனைவருக்கும் சமமாக காவல்துறையாலும் - நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டிருந்தால், முதலாளிகள் - நிலப்பிரபுக்கள் மீது அரசுகள் காட்டும் முரட்டுத்தனமான பரிவை விவசாயிகள் - பாட்டாளிகள் மீது காட்டியிருந்தால்.. ஒருவேளை நக்சல்கள் உருவாகாமலேயே இருந்திருப்பார்கள்.

(அரசுத் தரப்பு நியாயங்கள் அடுத்த பாகத்தில்)

11 நவம்பர், 2009

நல்லசிவம் செத்துட்டான், சதாசிவம் பொழைச்சிட்டான்!


ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் நீரஜூக்கு ‘அது’ தேவைப்பட்டது.

“டேய் சத்ரூ. சிந்தனைக்கு நெப்போலியன். சிற்றின்பத்துக்கு?”

“வேணும்னா சொல்லுங்க அண்ணே. உடனே ஏற்பாடு பண்ணிடலாம். கைவசம் ஒரு பச்சைக்கிளி காண்டாக்ட் இருக்கு!”

நீரஜூம், சந்த்ருவும் பிரபல இயக்குனர்கள். நீரஜ் சீனியர் என்பதால் சந்துருவுக்கு அவன் ‘அண்ணே’. தண்ணியைப் போட்டால் சந்துரு எப்போதுமே நீரஜூக்கு சத்ரூ. இடம் : பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரம். குறிப்பான இடம் : ஹோட்டல் பல்லவாஸ், ரூம் நம்பர் 13. சூழல் : அடுத்த படத்துக்கான டிஸ்கஷன். இருவருமே ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்தவர்கள் என்பதால், ‘ஈகோ’ பார்க்காமல் ஒருவரின் படத்துக்கு, இன்னொருவர் அசோசியேட்டாக வேலை பார்ப்பது சகஜம். இரண்டு பேருமே சொல்லிவைத்தாற்போல அவரவர் முதல் படத்தில், தங்களின் குருவான டைரக்டரையே ஹீரோவாக்கி படமெடுத்து வென்றவர்கள். ஓக்கே அட்மாஸ்பியர் போதும், சீனுக்கு வருவோம்.

“சத்ரூ.. பச்சைக்கிளின்னு சொல்றப்பவே உடம்பெல்லாம் ஜிவு ஜிவுன்னு ஏறுதுடா. சீக்கிரமா போனை போடு!”

“ரொம்ப அவசரப் படாதீங்கண்ணே. நானே கிளியைப் பார்த்ததில்லை. நம்ம சவுண்டு கொடுத்த காண்டாக்ட்டு அது. ரெண்டு மூணு வாட்டி போனில் பேசினதோட சரி. அடையார்லே இருக்கா. எப்படி இங்கன இந்த நேரத்துலே அங்கிட்டுருந்து கொத்திக்கிட்டு வர்றது?” – சவுண்டு ஒரு குணச்சித்திர/காமெடி நடிகர். வாய்ப்புகளுக்காக அவ்வப்போது இயக்குனர்களுக்கு இதுபோல ‘காண்டாக்ட்’ ஏற்படுத்தித் தருவதுண்டு.

“அதெல்லாம் பார்த்துக்கலாம்டா. நம்ம சித்தன் கிட்டே சொல்லிட்டா கார்லே அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடமாட்டானா? அதிருக்கட்டும் பார்ட்டி எப்படி? செம்ம கண்ட்ரி வுட்டா?” – சித்தன் பிரபலமான சீரியல் நடிகன். சினிமாவில் கிடைக்கும் ஓரிரு துண்டுக் காட்சிகளுக்காக இதுபோன்ற சேவைகளை செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

சந்துரு சித்தனுக்கு போனைப் போட்டான். கோட்டூர்புரத்தில் ஷெட்யூல் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த சித்தனின் செல்போன் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்!’ என்று சிணுங்கியது. சந்துருவின் எண்ணைப் பார்த்ததுமே சித்தனுக்கு குஷி. ‘படம் ஏதாச்சும் கமிட் ஆயிடிச்சோ!’ சில்வர் ஸ்க்ரீன் கனவில் ஆன்ஸரை அமுக்கினான். “சொல்லு பங்காளி!”

“எங்கேடா இருக்கே சித்தா?”

“கோட்டூர்புரம்”

“அப்படியே காரை எடுத்துக்கிட்டு அடையார் போ. நான் சொல்ற அட்ரஸை நோட் பண்ணிக்கோ” அட்ரஸ் சொன்னான்.

“அங்கே ஏதாவது ஷூட்டிங்கா பங்காளி? ஏதாவது முக்கியமான கேரக்டர்லே நடிக்கணுமா?”

“அதெல்லாம் இல்லேடா. டிஸ்கஷனுக்கு நீரஜ் அண்ணனோட வந்தேன். தண்ணியைப் போட்டுட்டு அண்ணன் ரவுஸ் உட்டுக்கிட்டிருக்காரு. நான் சொல்ற அட்ரஸ்லே ஒரு பச்சைக்கிளி இருக்கும். அப்படியே கொத்திக்கிட்டு பல்லவாஸுக்கு வந்துடு. ரூம் நம்பர் தர்ட்டீன்!”

பயங்கர கடுப்பானான் சித்தன். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் நீரஜ் அவசரம் தாங்காமல் சந்துருவிடம் போனை பறித்துப் பேசினான். “சித்தா. அடுத்த படத்துலே உனக்கு செகண்ட் ஹீரோ கேரக்டர் கிரியேட் பண்ணியிருக்கேண்டா. ஆனா நல்ல ‘சீன்’ மாட்ட மாட்டேங்குது. அதுக்குதான் இந்த டிஸ்கஷன். தம்பி சொன்ன கிளியை பிக்கப் பண்ணிட்டு வந்துடு. காரைக் கிளப்பினதுமே, கிளி நங்குனு இருந்தா ‘சதாசிவம் பொழைச்சிட்டான்’னு எஸ்.எம்.எஸ். பண்ணு. சுமாராவோ, சப்பையாவோ இருந்தா ‘நல்லசிவம் செத்துட்டான்’னு மேசேஜ் பண்ணு! செல்லம், நேரத்துக்கு வந்துர்றா... உனக்கு சீன் புடிக்க தாண்டா இவ்ளோ உழைக்கிறோம்!” போனை கட் செய்தான்.

“நம்ம பய முக்கா மணி நேரத்துலே அள்ளிட்டு வந்துடுவான் பாரு. ஆரோக்கியமான கோழியான்னு கேட்டுதான் நமக்கு பிரியாணி சாப்புடறதே வழக்கம். அதனாலேதான் மெசேஜ் அனுப்பச் சொன்னேன்” – வறுத்த முந்திரியை விண்டு வாயில் போட்டான்.

ஐந்து நிமிடத்தில் சித்தனிடமிருந்து மெசேஜ் வந்தது.

“நல்லசிவம் பொழைச்சிட்டான்!”



இது வெறும் கதையென்றால், இத்தோடு நிறுத்திவிட்டிருக்கலாம். நான் கதை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நீங்கள் யாரும் நம்பப் போவதில்லை. இந்த கதையை எழுதிய கசுமாலம் க்ளூ கொடுக்காத போதிலும் நீரஜ், சந்துரு, சித்தன் எல்லோரையும் புத்திசாலித்தனமாக கண்டுபிடித்துவிடுவீர்கள். ஏற்கனவே கோடம்பாக்க ஆட்களின் போண்டா வாய்களுக்கு, சிலநாட்களாக இந்த ‘நல்லசிவம், சதாசிவம்’ கதை, அவலாக மெல்லப்பட்டு வருகிறது.

ஒன்று. கடுப்பில் வேண்டுமென்றே மெசேஜை மாற்றி அனுப்பி நீரஜை சித்தன் வெறுப்பேற்றியிருக்கலாம்.

இரண்டு. நிஜமாகவே சித்தனுக்கு கோர்ட் வேர்ட் குழப்பம் இருந்திருக்கலாம்.

மூன்று. சித்தனும் தண்ணியைப் போட்டு விட்டு மெசேஜ் செய்திருக்கலாம்.

எப்படியிருந்தாலும், நாம் யாரும் இதற்காக கவலைப்படுவதில் அர்த்தமில்லை. நீரஜூக்கும், சந்த்ருவுக்கு கொஞ்சநேர டென்ஷனை கொடுத்துவிட்டு, சித்தன் பத்திரமாக கிளியை இறக்கிவிட்டதாகவே தகவல். கிளி எப்படி இருந்தது என்றால் ‘நல்லசிவம் செத்துட்டான்’ – நீரஜ் ஃபுல் மூட் அவுட் - கிளியை தனக்கு காண்டாக்ட்டிய சவுண்டினை சபித்துக் கொண்டிருந்தானாம் சந்துரு ஆறாவது ரவுண்டு இறுதியில்.

“அப்பாலிக்கா இன்னா ஆச்சி? இஸ்த்துக்கீனே போரீயே. கதிய சீக்கிரமா முடி வாத்யாரே!” என்று யாரோ சொல்லுவது கேட்கிறது. முடிக்கிறேன், நீரஜின் பஞ்ச் டயலாக்கோடு.

“எது எப்படியிருந்தாலும் போடப்போறது நானில்லை. எனக்குள்ளே இருக்குற நெப்போலியன்!”

வேளாண்மை கற்றால் வேலை நிச்சயம்!


திருச்சி மாநகரிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளடங்கி இருக்கிறது போதாவூர். மலைப்பாம்பின் உடல்போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை. வழியெல்லாம் கண்ணுக்கு தெரியும் எல்லை வரை அடர்பச்சையில் வாழைத்தோப்புகள். பிராதான சாலையிலேயே பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இந்தியாவிலேயே வாழை ஆராய்ச்சிக்காக இயங்கும் ஒரே தேசியமையம் இதுமட்டுமே.

வேளாண்மைத் துறையில் இந்தியாவின் சிறந்த பெண் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கே வேலை பார்க்கிறார் என்பது அங்கே வசிப்பவர்களுக்கு கூட தெரியவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆச்சரியப் படுகிறார்கள்.

மெட்ரிக்குலேஷன் பள்ளி டீச்சர் மாதிரி சிம்பிளாக பாப் கட்டிங், காட்டன் சேலையோடு இருக்கிறார் எஸ்.உமா. 46 வயது. ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கியை இந்த மையத்தில் உருவாக்கியிருக்கிறார். இதன் பொருட்டே இவரை ஊக்குவிக்கும் விதமாக ‘பஞ்சாபரோ தேஷ்முக் வேளாண்மைக்கான பெண் விஞ்ஞானி விருது’ கடந்த 2008ஆம் ஆண்டுக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்விருது இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட பயோவெர்ஸிடி, பிரான்ஸ் மற்றும் பனானா ஏசிய பசிஃபிக் நெட்வொர்க், பிலிப்பைன்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கும் ‘பிசாங் ராஜா’ சர்வதேச விருதினை வென்றெடுத்திருக்கிறார்.

மலைவாசஸ்தலங்களான வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, பலவித ஆபத்துக்களை எதிர்கொண்டு வாழையின மரபுகளை தேடித்தேடி கண்டறிந்திருக்கிறார்கள் உமா தலைமையிலான குழுவினர். ஆயிரத்து அறுநூறுக்கும் மேலான வாழையினங்களை கண்டறிந்து, முன்னூற்றி அறுபது வகைகளை தொகுத்து மரபணு வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் புதியதாக கண்டறிந்த ‘உதயம்’ என்ற பெயரிலான கற்பூரவள்ளி வகை வாழைப்பழம் இன்று நாடு முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பிராண்ட்.

போதாவூரில் இருக்கும் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். விருதுகளுக்கும், பாராட்டு மழைகளுக்கும் இடையே, திணறி நனைந்துக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து ‘மினி பேட்டி’ எடுத்தோம்.

“மரபணு மாற்ற வேளாண்பொருட்களால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்களே?”

“விஷயம் தெரியாதவர்கள் இதுபோல பேசுகிறார்கள். மரபணு மாற்றங்கள் மூலமாக புதிய, நல்ல விஷயங்கள் நிறைய கண்டுபிடிக்கலாம். மாற்றம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுவதுதான் முறை. இதுபோல மரபணுக்களை மாற்றி உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பலவித சோதனை நிலைகளை தாண்டியே மக்களின் பயன்பாட்டுக்கு எந்தவொரு பொருளும் வருகிறது. மக்களுக்கு கெடுதல் தரும் விஷயமென்றால் அரசு அனுமதித்து விடுமா என்ன?

“கடைகளில் விற்கப்படும் பச்சை வாழைப்பழம் இப்போதெல்லாம் மஞ்சளாகத் தெரிகிறதே? இதுவும் கூட மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் மாற்றமா?”

“ஒருசில வகைகளைத் தவிர்த்து, வாழைப்பழத்தின் அசல் நிறமே மஞ்சள்தான். நம் நாட்டு தட்பவெட்ப சூழலின் காரணமாக முழுமையாக மஞ்சள் நிறத்தை அடைவதற்குள் பழுத்து விடுகிறது. தோல் பச்சையாக இல்லை, மஞ்சளாக இருக்கிறது என்பதற்கெல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” (சிரிக்கிறார்)

பழம் தவிர்த்து, வாழையின் பயன்கள் என்ன?

வாழை மரத்தை கல்பதரு என்று சொல்லுவதே பொருத்தம். பழம், பூ, இலை, தண்டு, நார், வேர் என்று எல்லாமே பணம் தரக்கூடிய விஷயங்கள். உங்களுக்கே தெரியும். நம்மூரில் வாழை இலை மிகப்பெரிய வருவாயைத் தரக்கூடிய தொழில். பழமும் இப்படியே. மற்றப்பழங்கள் விற்கப்படாத பெட்டிக்கடைகளில் கூட வாழைப்பழங்கள் விற்கப்படுகின்றன.

வாழைப்பூவும், தண்டும் சமையலுக்கு பயன்படுகிறது. வாழைப்பழத் தண்டு சிறுநீரகக் கற்களை அகற்றக்கூடிய மருந்து என்பது மருத்துவமுறையில் நிரூபணமான ஒன்று. வாழைத்தண்டை ஜூஸ் வடிவிலும் குடிக்கலாம்.

வாழைநாரில் இருந்து ஃபைபரை பிரித்தெடுத்து கயிறு செய்யலாம். கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிறு இவ்வகையானது. இந்தக் கயிறுக்கு மட்டும்தான் கடல்நீரின் உப்பால் அரிக்கப்படாத தன்மை இருக்கிறது. அதுபோலவே நாரில் பிரித்தெடுத்து உருவாக்கப்படும் கார்க் எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது. கப்பல்களில் எண்ணெய் கசிந்தால் இந்த கார்க் வைத்தே அடைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? நீங்களே பார்த்திருப்பீர்கள். எண்ணெய்க் கடைகளில் டின்னில் இருந்து எண்ணெய் வாய்வழியாக கசியாமல் இருக்க வாழைத்தாரின் ஒரு துண்டினை வைத்துதான் அடைத்திருப்பார்கள். அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் வாழைத் தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்கள். உங்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் விளங்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தரக்கூடியது வாழைசாகுபடி. இதை எப்படியெல்லாம் பணமாக்கலாம் என்பதையே அவர்களுக்கு சொல்லித்தந்து வருகிறோம்.

வேளாண்மைக்கு இங்கே என்ன எதிர்காலம் இருக்கிறது? மாணவர்கள் மேற்படிப்புக்கு வேளாண்மையைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறதே?

இதற்கு மாணவர்களை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பள்ளிக் கல்விப்பாடத் திட்டத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று இருக்கிறது. வேளாண்மை இல்லையே? அவர்கள் பண்ணிரண்டு வகுப்பு வரை எது படிக்கிறார்களோ, அதையே மேற்படிப்பில் படிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வேளாண்மை அடிப்படை நாடான இந்தியாவில், பள்ளியிலேயே வேளாண்மை தனிப்பாடமாக அமையவேண்டியது அவசியம்.

வேளாண்மைத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வேளாண்மை படித்தவருக்கு வேலை இல்லை என்ற நிலையே இங்கு இல்லை. ஆதியிலிருந்தே உலகில் ‘டல்’ அடிக்காத ஒரே துறை உணவுத்துறை மட்டுமே. மற்ற எந்தத் துறை வேண்டுமானாலும் எழலாம், வீழலாம். காற்று, நீர், உணவு இன்றி வாழமுடியுமா என்ன? உள்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், பல தனியார் நிறுவனங்களிலும் வேளாண்மை படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வெளிநாடுகளிலும் கூட இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. படித்து முடித்தால் வேலை நிச்சயம் என்ற உத்தரவாதம் இருக்கும்போது இதைவிட சிறந்த கேரியர் ஒரு மாணவனுக்கு வேறு எந்தப் படிப்பில் கிடைக்கும்?


ஆராய்ச்சிக்காக செலவழித்துக் கொண்டிருக்கும் அவரது பொன்னான நேரத்தை நமக்காக ஒதுக்கி, பேசியதற்காக நன்றி தெரிவித்து கிளம்பினோம். வாழைமரங்கள் வரிசையாக தலையசைத்து நமக்கு ‘டாட்டா’ காட்டுகிறது.

10 நவம்பர், 2009

லுங்கி!


“லுங்கியுடன் ஆபீஸ் போவதற்கு மனத்தடை இருக்கிறது. அரை டிராயரில் அது இல்லை!” –சமீபத்தில் டவுசர் பற்றிய விவாதம் ஒன்றின்போது ட்விட்டரில் எழுத்தாளர் பாரா சொன்னது இது.

’லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கும் போராட்டம் நடத்துவேன்!’ சில வாரங்களுக்கு முன்பாக எழுத்தாளர் ஞாநி குமுதத்தின் ’ஓ’ பக்கங்களில் சென்னை கமலா தியேட்டர் நிர்வாகத்தை இவ்வாறாக எச்சரித்திருந்தார். அதாவது புதுப்பிக்கப்பட்ட கமலா தியேட்டருக்கு லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு ஞாநி எச்சரித்திருந்தார். பிற்பாடு கமலா தியேட்டர் ’லுங்கி கட்டிக்கொண்டு வரலாம்’ என்று ஞாநிக்கு சிறப்பு அனுமதியும், மற்றவர்களுக்கு சாதா அனுமதியும் தந்தது, தொடங்கவே தொடங்காத அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் வெளியானபோது தங்கர்பச்சான் புலம்பினார். சென்னை ஐநாக்ஸில் அப்படத்தை திரையிட மறுத்திருந்தார்கள். ‘வேட்டி, லுங்கியெல்லாம் கட்டினவங்க எல்லாம் உங்கப் படத்தைப் பார்க்க வருவாங்க!’ என்று மறுப்புக்கு நியாயம் சொன்னதாம் ஐநாக்ஸ் நிர்வாகம்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக லுங்கி கட்டி வருகிறேன். பத்து வயதில் அப்பா, இரண்டு மாஸ்டர் லுங்கி (ஒன்று வெள்ளைப்பூ போட்ட ப்ளூ, இன்னொன்று பச்சை என்று நினைவு) வாங்கித் தந்தார். கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டு டியூஷனுக்கு கூட அந்த லுங்கியோடு போய் வந்ததாக நினைவிருக்கிறது. பிற்பாடு ஏஜூக்கு வந்து நைட் ஷோக்களாக பார்த்துத் தள்ளியபோது, குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கும் லுங்கியோடே போய்வந்தேன்.

முதல் பாராவில் பாரா சொன்ன அந்த மனத்தடை எனக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இத்தனைக்கும் லுங்கி தான் ‘எல்லாவற்றுக்குமே’ வசதியான உடையாக இருக்கிறது என்றபோதிலும், வீட்டுக்கு நூறு அடி தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்லக்கூட இப்போது ‘முழுநீளக் கொழாய்’ மாட்டிக்கொண்டு தான் போகிறேன். ஆனால் ரெண்டு, மூன்று அரை நிஜார் இருந்தாலும் (ஒன்லி ஃபார் ஸ்விம்மிங் பூல்ஸ்), லுங்கிதான் இன்னும் ஃபேவரைட் உடை. வீட்டிலிருக்கும்போது கீழாடை மட்டுமே, நோ மேலாடை.

சரி, இந்த மனத்தடைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

ஒன்று. நான் எட்டுப்பட்டிராசா மாதிரி தொடை தெரிய ஒரு காலத்தில் லுங்கியை தூக்கிக் கட்டுவேன். ‘ரவுடிப்பய மாதிரி லுங்கி கட்டுறான் பாரு!’ என்ற அப்பாவின் அப்போதைய எரிச்சல் காரணமாக இருக்கலாம், இப்போது அதுமாதிரி சொல்ல அவர் இல்லாவிட்டாலும்.

இரண்டு. லுங்கி கட்டுபவர்கள் எல்லாம் லும்பன்கள் என்று கமலா, ஐனாக்ஸ் மற்றும் சத்யம் நிர்வாகங்கள் நினைப்பது மாதிரி ஒரு பொதுப்புத்தி வெகுமக்களுக்கும் பரவலாக இருப்பதை உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

எப்படிப் போனாலும் ஒரு அற்புதமான, நிகரற்ற உடை ஒன்றினை என் மனத்தடை காரணமாக பொது இடங்களில் நிராகரிக்கிறேன் என்பதே உண்மை. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் லுங்கி பிரபலமான ஆடையாக இருப்பதாகவே தெரிகிறது. பொதுவிடங்களில் லுங்கி கட்டி வருவதும் கூட கவுரவமான விஷயமாகவே பல நாடுகளில் இருக்கிறது. பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், ஏமன், சோமாலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல தெற்காசிய நாடுகளில் லுங்கியின் பயன்பாடு பரவலாக இருக்கிறது. நம்மூரை மாதிரியில்லாமல் இந்நாடுகளில் பெண்களும் லுங்கிவாலாக்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உடையாக மட்டுமன்றி திருமணம் போன்ற விழாக்களிலும் லுங்கியின் பயன்பாடு இருந்து வந்தது. அரை டிராயருக்கு ஏற்பட்ட மவுசால் இப்போது ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. உலகின் மிகச்சிறந்த வசதியான உடைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். அரை டிராயரைப் போல இதற்கு நாடாவோ, எலாஸ்டிக்கோ தேவையில்லை. தலைக்கு மேல் கவிழ்த்து, இழுத்துப் பிடித்து ஒரு சொருகு சொருகினால் போதும். நாய் துரத்தினாலும் கூட கவுரவமாக அவிழ்ந்துவிடாமல் ஓடித் தப்பிக்கலாம். டீக்கடை நாயர்கள் கட்டும் பாலியஸ்டர் லுங்கி மட்டும் விதிவிலக்கு. இடுப்பில் நிற்கவே நிற்காது.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பார்ட்டிவேராக லுங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவிலேயோ, மலேஷியாவிலேயோ இதை தேசிய உடையாகக் கூட அங்கீகரித்திருப்பதாக செவிவழி கேள்வி. திருப்பூர்தான் லுங்கி தயாரிப்புக்கான புண்ணிய ஷேத்திரம். இந்தியாவின் லுங்கித் தேவையில் எழுபது சதவிகிதத்தை கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் கவனித்துக் கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லுங்கியை இழுத்து மடித்து கட்டுவது எப்படியென்று மம்முட்டியும், மோகன்லாலும் பல படங்களில் கிளாஸே எடுத்திருக்கிறார்கள். வெயில் காலங்களில் லுங்கியை விட காற்றோட்டமான உடை ஒன்று உண்டா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

லுங்கி எங்கே தொடங்கியது என்று வரலாற்றில் தேடிப்பார்த்தால், அதுவும் கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழோடே தோன்றியிருக்கும் என்பதாகத் தெரிகிறது. வேட்டி என்றழைக்கப்பட்ட துண்டுதான் பிற்பாடு பரிணாம வளர்ச்சியடைந்து லுங்கியாக மாறியிருக்கிறது. எனவே லுங்கியை கண்டறிந்த பெருமையும் தமிழனையே சேருகிறது.

மஸ்லின் துணியால் நேயப்பட்ட வேட்டி பாபிலோனுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகியிருக்கிறது. பாபிலோனை தொல்பொருளாராய்ந்த அறிஞர்கள் இதை ‘சிண்டு’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். மேலும் மீனவர்களான பரதவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் மெசபடோமிய பகுதிகளுக்கு லுங்கி ஏற்றுமதி செய்ததாகவும் உலக வரலாறு செப்புகிறது. கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பே லுங்கியில் கலர்ஃபுல் டிசைன்கள் போடப்பட்டு (அனேகமாக ஆந்திரவாலாக்கள் டிமாண்ட் செய்திருக்கலாம்) தயாராகி வருகிறது.

தமிழர்கள்தான் லுங்கியை கண்டறிந்தார்கள் என்பதை இந்துத்துவா மறுக்கிறது. லுங்கியை கண்டறிந்தவர் அர்ஜூனர் என்பது இந்துத்துவாவின் வாதம். ஒருமுறை அர்ஜூனர் வில்லை எடுத்துக்கொண்டு மலைப்பாங்கான இடத்தில் உணவுக்காக வேட்டையாட அலைந்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஏதோ ஒரு சுனைக்கு அருகே பாறையில் சில சேலைகள் காயவைக்கப் பட்டிருந்ததாம்.

அந்த சுனையில் யாரோ பெண்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள் என்ற நினைத்த அர்ஜூனர், பயணத்தைத் தொடராமல் அங்கேயே சில மணி நேரம் நாகரிகமாக நின்றிருக்கிறார். யாரும் வந்து புடவைகளை எடுக்காமல் போகவே, அந்தப் புடவையை தானே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

வாசலில் குந்திதேவி கண்களை மூடி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தாராம். அர்ஜூனனின் அரவத்தைக் கேட்டவர், ‘நீ எது எடுத்து வந்திருந்தாலும், அதை எல்லா சகோதரர்களுக்கும் சமமாகப் பகிர்ந்துக் கொடு!’ என்று சொல்லியிருக்கிறார். புடவைகளோடு வந்த அர்ஜூனனோ, தாய் சொல்லைத் தட்ட மனமின்றி தான் கொண்டு வந்தப் புடவைகளை சரிபாதியாக கிழித்து, சகோதரர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அரையும், காலுமாக கிடைத்த புடவையை இடுப்பில் சுற்றி அணிந்துக் கொண்டனர் பஞ்ச பாண்டவர்கள். லுங்கி தோன்றிய வரலாறு இதுவென்று இந்துத்துவா சொல்கிறது.

எது எப்படியோ, லுங்கி ஒரு சுவாரஸ்யமான உடை என்பதைப் போலவே, அதனுடைய பின்னணிக் கதைகளும் சுவாரஸ்யமானவையாகவே இருக்கிறது.

தமிழ் நக்சலைட்டுகள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட இந்திய மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் இருந்த அளவுக்கு நக்சல்பாரிகளால் செல்வாக்கு பெற இயலவில்லை. இத்தனைக்கும் சாரு மஜூம்தார் கட்சி ஆரம்பித்தபோது தமிழ்நாட்டிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தலைவர்கள் இருந்தார்கள். 1970களின் இறுதியில் இங்கிருந்த நக்சல் இயக்கங்கள் தீவிரமாக இயங்கின. 70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் கடுமையான போலிசாரின் வேட்டைகள் காரணமாக நக்சல் இயக்கம் பெரிய அளவில் இன்றுவரை இங்கே வளர இயலவில்லை.

இருப்பினும் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லையோரமாக இருக்கும் வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நக்சல்பாரிகள் அவ்வப்போது ஊடுருவது உண்டு. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால் அங்கு நக்சல்பாரிகள் செல்வாக்கு பெறுவது சுலபம். தேனி, பெரியகுளம் பகுதிகளில் போர்ப்பயிற்சி வழங்கப்படுவதாகவும், போலிசார் தேடுதல் வேட்டையென்றும் அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற பெயரில் செயல்பட்ட குழு ஒன்று காவல்துறையால் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. அக்குழுவின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைபிடிக்கப்பட்டார்கள்.

70களின் இறுதியில் கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு காரணமான நிலமுதலாளி ஒருவரை நக்சல்பாரிகள் அழித்தொழிப்பு மூலமாக அப்புறப்படுத்தினார்கள். அழித்தொழிப்புப் பணிகளை மார்க்சிஸ்டு - லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஓரங்கட்ட நினைத்திருந்த நேரத்தில் நடந்த அழித்தொழிப்பு இது. அதிகாரப்பூர்வமாக நடந்த கடைசி அழித்தொழிப்பு என்றும் சொல்லலாம். கீழே சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘அழித்தொழிப்பு’க்கான சூழலே, நாடுமுழுவதும் அன்று இருந்தது. கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் தான் மாறியிருக்குமே தவிர, கொல்லப்பட்டதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் நிலமுதலாளிகள்!!

1968, டிசம்பர் 25. உலக மக்களின் பாவ பாரங்களை தன் முதுகில் சுமந்து பாவிகளை இரட்சிக்க தேவமைந்தன் அவதரிக்கப் போகும் கிறிஸ்துமஸ் தினம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுக்காவில் இருந்த அந்த குக்கிராமத்துக்கு மட்டும் இருள்நீங்கவேயில்லை. நீண்ட இருளுக்குப் பின்வந்த விடியல் தந்தது அதிர்ச்சி. ஒரே குடிசையில் போட்டு எரிக்கப்பட்டு, கருகிப்போன நாற்பத்தி நான்கு பிணங்களை தான் கிறிஸ்துமஸ் பரிசாக கீழ்வெண்மணி கிராமம் பெற்றது. பதினான்கு பேர் பெண்கள். இருபத்தி இரண்டு பேர் குழந்தைகள். மனித இனம் காட்டுமிராண்டி காலத்திலிருந்து முற்றிலுமாக நாகரிகமடைந்து விடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த ஒட்டுமொத்த படுகொலைகளால் நாடே அதிர்ந்தது. நாற்பத்தி நான்கு உயிர்களை பதற, பதற நெருப்பில் எரித்துக் கொன்றதற்கு என்ன காரணம்.. மதமா? சாதியா?

மதமும், சாதியும் கூட படுகொலைகளுக்கு சாக்குகளாக சொல்லப்படுபவை தான். உண்மையான காரணம் அவர்கள் உழைக்கும் வர்க்கம். தங்கள் உழைப்புக்கு தகுந்த கூலி கேட்கும் வர்க்கம். இந்த படுகொலைச் சம்பவத்தில் தன் உறவு, சுற்றத்தை இழந்தவர் ஒருவர் தெளிவாக சொன்னார், “இது ஜாதி, மதம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. வர்க்கப் பேதத்தால் நடந்த கொடிய சம்பவம்!”

தஞ்சை மண்ணில் அப்போது அதிகார வர்க்கம் ஆழமாய் வேரூன்றி இருந்த காலம். அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களுக்கு பெயர் பண்ணையார். கோயில்களுக்கும், மடங்களுக்கும் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கூட பண்ணையார்களின் மேற்பார்வையில், கட்டுப்பாட்டில் இயங்கின. பெருநிலம் கொண்ட இந்த நிலக்கிழார்களிடம் அநியாயமான கூலிக்கு தங்கள் வாழ்க்கையை விவசாயக் கூலிகள் அடகு வைத்திருந்தார்கள்.

சவுக்கால் அடித்தால் வலிக்கும் என்று நிலத்தில் உழும் மாடுகளுக்கு கூட பரிதாபம் பார்த்த பண்ணையார்கள் மனிதர்களுக்கு பார்க்கவில்லை. வேலையில் சுணங்கினால் சவுக்கடி, சாணிப்பால். உணவுக்காக உழைப்பை மூலதனமாக்கிய கூட்டம் பண்ணை அடிமைகளாய் தலைமுறை தலைமுறையாய் வாழ்க்கையை தொடர்ந்தது. எவ்வளவு நாட்களுக்கு தான் அரைவயிற்று கஞ்சியோடு காலம் தள்ள முடியும்?

உரிமைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு விவசாயக் கூலிகள் ஒரு அணியில் திரள தொடங்கினார்கள். செங்கொடி ஏந்தத் தொடங்கினார்கள். கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டு சங்கம் போராட்டக்களம் கண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. கூலிகளின் குடிசைகள் எரிக்கப்படுவதும் தொடர்கதையானது.

தங்கள் அதிகாரத்தை, ஆதிக்கத்தை நிலைநாட்ட பண்ணை உரிமையாளர்கள் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு எதிர்சங்கம் உருவாக்கினார்கள். செங்கொடிக்கு மாற்றாக இவர்கள் மஞ்சள் கொடியை உயர்த்திப் பிடித்தார்கள். இந்த சங்கத்தின் பெயரால் விவசாயக் கூலிகள் கிராமந்தோறும் மிரட்டப்பட்டார்கள், உயிரெடுக்கப்பட்டார்கள். அப்போதிருந்த ஒரு அதிமுக்கிய அரசியல் தலைவர் கூட “தஞ்சை மாவட்ட விவசாயிகளை பேய் பிடித்திருக்கிறது, கம்யூனிஸ்ட்டு என்ற பேய் பிடித்திருக்கிறது” என்று காட்டமாக சொன்னார். ஆளும் வர்க்கமென்றால் அரசும், அரசாள நினைக்கும் அரசியல்வாதிகளும் கூட உள்ளடக்கம் தானே?

ஆங்காங்கே விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும், நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் கூலி உயர்வு விவகாரத்தில் முட்டல் மோதல் நடந்து கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. கூலியை உயர்த்திக் கொடு, சேற்றில் கால் வைக்கிறோம் என்றார்கள் விவசாயக் கூலிகள்.

இந்நிலையில் தான் விடிந்தால் கிறிஸ்துமஸ் என்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கீழ்வெண்மணி கிராமத்துக்குள் கையில் நாட்டுத் துப்பாக்கி ஏந்திய அடியாள்கள் டிராக்டரில் நுழைந்தார்கள். கண்ணில் கண்டவர்களை குருவியை சுடுவது போல சுட்டார்கள். குண்டடி பட்டவர்கள் சுருண்டு விழ எஞ்சியவர்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். அங்கே இருந்ததிலேயே பெரிய வீடு ராமையா என்பவரின் குடிசை வீடு. குழந்தைகளும், பெண்களும், வயோதிகர்களும் அந்த குடிசையில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது ஜீப்பில் வந்த நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணநாயுடு “ஒருத்தனையும் விடாதீங்கடா. தீ வெச்சு எரிச்சுக் கொல்லுங்கடா!” என்று வெறியோடு கத்துகிறார். குடிசை அடியாட்களால் இழுத்து பூட்டப்படுகிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்படுகிறது. தீயின் நாக்குகள் மேனியை சுட ஒட்டுமொத்த பரிதாபக்குரல் அந்தப் பகுதியை அலற வைத்தது. தீவைத்த கொடியவர்களுக்கு நெஞ்சு இரும்பால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயில் இருந்து தப்பி வந்த நான்கு பேரை மீண்டும் தீக்குள்ளேயே தள்ளிவிட்டார்கள். தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்கட்டும் என்று தீயில் இருந்து தன் குழந்தையை ஒரு தாய் தூக்கி வெளியே எறிந்தாள். அந்த குழந்தையை கூட ஒரு கொடூரமனதுக்காரன் மீண்டும் தீக்குள் தூக்கியெறிந்தான்.

மக்களுக்கு ஏதாவது கொடுமை நடக்கிறதென்றால் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கடவுள் வந்து காப்பார். சினிமாக்களில் கதாநாயகர்கள் வந்து வில்லன்களை புரட்டியெடுப்பார். கீழ்வெண்மணி விவசாயக் கூலிகள் தீயில் கருகும் நிலையில் எந்த கடவுளோ, கதாநாயகனோ அவர்களை காக்க வரவில்லை. காவல்துறை வந்தது, தீயில் நாற்பத்தி நான்கு பேர் கருகி முடித்தப்பிறகு. இருபத்தி ஐந்து குடிசைகள் எரிக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையாவது வெள்ளையர் ஆட்சியில் நடந்தது. கீழ்வெண்மணி படுகொலைகள் சுதந்திரம் வாங்கி இருபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘தேசத்தின் அவமானம்’ என்று தலைப்பிட்டு இந்தியத் தலைநகரிலேயே பத்திரிகைகள் அரசை தாக்கின. அவசர அவசரமாக நூற்றி ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையோ இது மக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சம்பவம் என்றது. அந்தப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள் கோர்ட்டில் சாட்சியம் சொன்னார்கள். ஏழைச்சொல் எந்த காலத்தில் அம்பலம் ஏறியிருக்கிறது?

1973ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. “அதிக நிலத்தை சொத்தாக வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட சம்பவத்தை செய்திருக்க முடியாது. அவர்கள் குற்றவாளிகள் அல்ல” அதிகார வர்க்கத்திடமிருந்து அரசோ, சட்டமோ தங்களை காக்கும் என்ற நம்பிக்கையை அம்மக்கள் முற்றிலுமாக இழக்கும் வண்ணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியும் அவர்களில் தவிர்க்கவே முடியாத பத்து பேருக்கு மட்டும் பெயருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. கீழ்வெண்மணி சம்பவத்தின் வில்லனாகிய கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவர்களில் ஒருவர்.

சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோபாலகிருஷ்ண நாயுடு பழைய செல்வாக்கோடு கீழத்தஞ்சையில் வலம் வருகிறார். பழைய அதிகாரத்தை கையில் எடுக்கிறார். முன்பை விட முனைப்பாக உழைப்பாளிகளை ஒடுக்கிறார். நீதித்துறையும் கூட பணத்துக்கும், அதிகாரத்துக்கும் வாலாட்டும் நிலையில் தங்களை காக்க, அயோக்கியர்களை ஒழிக்க யாராவது வரமாட்டார்களா என்று ஏழைக்கூலிகள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அணக்குடி என்ற பகுதியில் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டி சாய்க்கப்படுகிறார். கீழ்வெண்மணி சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் முகமாக செய்யப்பட்ட இக்கொலையை செய்தவர்கள் நக்சல்பாரிகள். நந்தன் என்பவரது தலைமையில் ஒரு குழு செயல்பட்டு கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது.

(தொடர்ந்து வெடிக்கும்)

9 நவம்பர், 2009

தீபாவளி சினிமா கலெக்‌ஷன்!


இந்த வருடமும் சினிமாவுலகத்துக்கு தீபாவளி சரியாக களைகட்டவில்லை. ஆதவன் வெற்றிக்காக வேட்டைக்காரன் தியாகம் செய்யப்பட்டதாக சொன்னாலும், வேட்டைக்காரன் வேறு சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்கு மூன்று சீசன் வசூலுக்கு மிக முக்கியமானது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லப்பட்ட ஏப்ரல் 14. தீபாவளிக்கு போனஸ் புரளும், எனவே வசூலை அள்ளலாம். பொங்கலைப் பொறுத்தவரையும் ஓரளவுக்கு கிராமப்புறங்களில் பணம் ஃப்ளோட் ஆகிக் கொண்டிருக்கும். ஏப்ரலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்டூடண்ட்ஸ் கலெக்‌ஷன் அள்ளலாம்.

உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவதாலும், இப்போதெல்லாம் தீபாவளிக்கு பலருக்கும் போனஸ் நஹி என்பதாலோ என்னவோ, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தீபாவளி ரிலீஸில் முன்புபோல ஆர்வம் காட்டுவதில்லை. 1987 தீபாவளியில் பத்தொன்பது படங்கள் வந்ததே எனக்குத் தெரிந்து ரெக்கார்ட் ப்ரேக். 90களின் ஆரம்பத்தில் கூட குறைந்தபட்சம் பத்து படங்களாவது வெளியாகும்.

இம்முறை வெளியான படங்கள் மூன்றே மூன்று. ஆதவன், பேராண்மை, ஜெகன்மோகிணி.

ஆதவன் வெற்றிக்கு காரணம் சொல்லவே தேவையில்லை. சூர்யா, நயன்தாரா, வடிவேல், கே.எஸ்.ரவிக்குமார். முதல் இரண்டு வாரத்தில் சென்னையில் மட்டுமே மூன்று கோடியை வசூல் தாண்டிவிட்டது. எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிட் படமான ஈரம், ஏழு வாரங்களில் வசூலித்த தொகை இது. பொதுவான பார்வையில் படம் சுமார் என்றாலும், குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு மக்கள் முற்றுகையிடுவதின் காரணம் என்னவென்றே தெரியவில்லை. புதுப்பிக்கப்பட்ட தேவி காம்ப்ளக்ஸில் வாரநாட்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகிறது.

பேராண்மை - பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு புஸ்ஸான படம். ஆதவனின் கலெக்‌ஷனில் பாதியை எட்டுவதற்கே, இப்படம் திணறிக் கொண்டிருக்கிறது. மூன்று தீபாவளிக்கு முன்பாக ‘ஈ’ கொடுத்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜனநாதன் சறுக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியை சீட்டில் நெளியாமல் பார்ப்பவர்களுக்கு ‘சிறந்த திரைப்பட ரசிகர்’ விருது கொடுக்கலாம். இரண்டாம் பாதி அட்டகாசமாக ஆக்‌ஷன் பேக். முதல்பாதியை தட்டிவிட்டு, இரண்டாம் பாதியையே முழுநீளத்துக்கும் இழுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ? எப்படிப் பார்த்தாலும் ஜெயம் ரவிக்கு மட்டும் இப்படம் நல்ல கேரியர் ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது.

ஜெகன்மோகிணி - ரொம்ப ரொம்ப மொக்கையான படம். நமீதாவை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்தப் படம் கூட இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டும் அரை கோடியை குவித்தது வினியோகஸ்தர்களுக்கே ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயமாக இருந்திருக்கும்.

தீபாவளி முடிந்து இருவாரங்கள் கழித்து வேட்டைக்காரனை இறக்குவதற்கு முன்பாக எவ்வளவு ஆழம் என்று கால்விட்டுப் பார்க்கும் விதமாக ‘கண்டேன் காதலை’யை நைசாக சன் வெளியிட்டது. முதல் மூன்று நாட்களில் மட்டுமே சென்னையில் கால் கோடியை வசூல் எட்டிப் பிடித்திருக்கிறது. ‘சன்’னின் வீரியம் பிரமிப்பு தருகிறது. அனேகமாக வேட்டைக்காரன் முதல் நாள் வசூலே ஐந்து கோடியை எட்டினாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.