திரைவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மார்ச், 2018

ராஜரதா!

ஓர் எழுத்தாளர் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். சில அரசியல் கட்சி இளைஞர்கள் (சாதிக்கட்சி மாதிரி காட்டுகிறார்கள்) அவரை சந்தித்து, அவர் எழுதிய நாவல் ஒன்று குறித்து மிரட்டுகிறார்கள். அந்த நாவலில் தங்கள் இனம் அவமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கடிதம் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் நிஜமாகவே நடந்த இந்த சம்பவத்தை கன்னடத்தில் ஒரு காட்சியாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ராஜரதா’.

கன்னட சினிமாவின் நியூவேவ் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக போற்றப்படும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, விமர்சகர்களால் ஆஹாஓஹோவென பாராட்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வசூலிலும் சாதனை படைத்தது. விருதுகளும் குவிந்தன.

‘ரங்கி தரங்கா’வில் தன்னுடைய தம்பியா நிரூப் பண்டாரியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டாவது படமான ‘ராஜரதா’விலும் அவர்தான் ஹீரோ. தம்பியுடையான் ஹீரோ கால்ஷீட்டுக்கு கவலைப்படான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்னையின் காரணமாக கே.பி.என். நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் கன்னட வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ராஜரதா’ எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைக்கு நேரடியாக சம்மந்தப்படாத வேறு பின்னணி பிரச்சினை இருந்திருக்கலாம் என்று இயக்குநர் கணிக்கிறார். அதாவது ‘முதல்வன்’ படத்தில் இடம்பெறும் வன்முறையை, வேறொரு பிரச்சினையை திசைமாற்ற முதல்வரே உருவாக்குவது மாதிரி.

கன்னடத்திலேயே கன்னடர்களின் வன்முறையை கண்டித்து படமெடுத்திருப்பது துணிச்சலான முயற்சிதான். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியின் வன்முறை பின்னணி இசையில் ‘தமிழண்டா’ என்றெல்லாம் கோஷம் ஒலிக்கிறது.

‘ராஜரதா’ என்பது பேருந்தின் பெயர். பேருந்தே கதை சொல்வதை போன்று (புனீத் ராஜ்குமார் குரலில்) திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாதிப்பும் இயக்குநருக்கு நிறைய இருக்கிறது.

கேட்பதற்கு சூப்பராக தெரியும் இந்த கதை, திரைக்கதையை ஐரோப்பிய ரொமான்ஸ் காமெடி பாணியில் ரொம்பவும் சுமாராகதான் எடுத்திருக்கிறார் பண்டாரி. ஒருவேளை உலகப்பட சூனாகானாக்கள், ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி மெச்சிக் கொள்ளலாம்.

வழக்கமாக கன்னட சினிமா ஹீரோக்கள்தான் சுமாராக இருப்பார்கள். ஆனால், இதிலோ ஹீரோயின் அவந்திகா ஷெட்டி, ‘தேவுடா’ என்று ரசிகர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் வகையில் ஆயா லுக்கில் இருக்கிறார். படம் முழுக்க லெக்பீஸ் தெரியும் வண்ணம் அவர் கவர்ச்சி காட்டியிருந்தாலும், ரசிகனுக்கு இந்த கவர்ச்சி இனம் தெரியா அமானுஷ்ய உணர்வையே முதுகுத்தண்டில் ஏற்படுத்துகிறது. குளோஸப்பில் காஞ்சனா பேய் கணக்காக பயமுறுத்துகிறார். கன்னட காஞ்சனாவான ‘கல்பனா’வின் ஹீரோயின் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக ஹீரோ நிரூப் பண்டாரி, அம்சமான அமுல் பேபி லுக்கில் ரசிகைகளின் கனவுகளை ஆளக்கூடிய தோற்றத்தில் சுறுசுறுவென்றிருக்கிறார்.

படத்தின் ஹைலைட்டே, ஆர்யாதான். தமிழில் நடிக்கத் தெரியாத ஹீரோ என்று பெயரெடுத்திருக்கும் இவர், கன்னடத்தில் அனாயசமான தாதாவாக நடிப்பில் பின்னுகிறார்.

அரசியல் படங்களை எடுக்க சினிமாவின் தொழில்நுட்பம் மட்டும் போதாது. அடிப்படை அரசியலும், கிராம கிளைக்கழகத்தின் வார்டு நிலவரம் வரை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘அரசியல்வாதிகள் என்றாலே மோசம்தான்’ என்று அமெச்சூராக ‘ராஜரதா’தான் எடுக்க முடியும், ‘அமைதிப்படை’கள் சாத்தியமாகாது போகும்.

14 நவம்பர், 2017

ஆலையில்லா ஊருக்கு அறம்!

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.

அப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

கோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.

ஆனால்-

இயக்கம்?

கிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்?) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்?

ப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும்? கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்?

படத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளைக் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.

ஆனால்-

படத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார்? பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.

படத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு?

இதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.

மாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

இயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத்தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.

ஆனால் –

ஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.

அடுத்து, தோழர்கள்.

இவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.

இப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.

‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

எந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா? மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.

சிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

காமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.
* * *

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.

பின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.

16 ஆகஸ்ட், 2017

படம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும் தரிசனம் இது.

வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.

அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய  அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.

புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான்.  இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.

காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *

போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள்  பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *

‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.

முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.

22 ஜூலை, 2017

ரஜினி - கமல்


ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றார்கள்.

அவ்வப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது எழுதும். ரஜினியோ, கமலோ அதை கண்டுகொண்டதே இல்லை.

பிறவி கமல் ரசிகனான எனக்கு ரஜினியோடு அவர் சேர்ந்து நடிப்பதில் விருப்பமே இருந்ததில்லை. ஏனெனில், ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என்று உறுதியாக இருந்தேன். தொண்ணூறுகளில் கொஞ்சம் ரசனை மேம்பட்ட காலத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான நடிகராக மனசுக்குள் உட்கார்ந்தார். இருவரது ஸ்டைலும் வேறு வேறு. இருவரையும் தனித்தனியாக தனித்தனி மனநிலைகளில் ரசிக்க முடியும் என்கிற முதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் எழுபதுகளின் இறுதியில் இருவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த ஃபுல் மீல்ஸ் விருந்து கிடைக்குமே என்று மனசு ஏங்கத் தொடங்கியது.

என்னுடைய தலைமுறைக்கு கிட்டாத விருந்து அது. இன்றுவரை எட்டா விருந்தும்கூட.

போகட்டும்.

ஓரளவுக்கு ‘விக்ரம் வேதா’ அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கமல்ஹாசன் – விக்ரமாதித்தன், ரஜினிகாந்த் – வேதாளம் என்கிற ஐடியாவே பரவசப்படுத்துகிறது. ரஜினியும், கமலும் இப்போதைக்கு இணைய சாத்தியமில்லை என்பதால் – இணைந்தாலும் வயது காரணமாக இருவருக்குமான பழைய கெமிஸ்ட்ரி உருவாக வாய்ப்பில்லை என்பதாலும் - நடிப்புப் பாணியில் அவர்களை முடிந்தளவுக்கு பிரதிபலிக்கக்கூடிய விஜய் சேதுபதி – மாதவன் இணையை தேர்ந்தெடுத்ததும்கூட நுணுக்கமான தேர்வுதான்.

ஆனால்-

இந்த அட்டகாசமான ‘ஐடியா’வை, ரசிகன் conceive செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் புத்திசாலித்தனமாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எடுத்துவிட்டதால், ஆஹாஓஹோவென்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ‘விக்ரம் வேதா’, ஓக்கே என்கிற லெவலில் நின்றுவிட்டது.
மாதவன், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட அப்படியே கமலை உரித்து வைத்திருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் சைமன் இறந்துவிட்ட தகவலை, சைமனின் மனைவியிடம் சொல்லும் காட்சி. விஜய் சேதுபதி, நடையில் தொடங்கி சிரிப்பு வரை அச்சு அசல் ‘பைரவி’ காலத்து ரஜினியேதான். எனினும் இவர்கள் இருவரும் ரஜினி – கமலை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதை ரஜினி – கமல் ரசிகர்களே உணரமுடியாதபடி ஏன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ‘விக்ரம்’, ‘வேதா’ என்கிற பெயர்கள்கூட அந்த காலத்து கமல், ரஜினி கதாபாத்திரங்களின் பெயர்களை ஒட்டியே இருக்கின்றன. சின்ன சின்ன ரெஃபரன்ஸ் கொடுத்து ரசிகனுக்கு தங்கள் ஐடியா இதுதானென்று புஷ்கரும், காயத்ரியும் மெனக்கெட்டு புரிய வைத்திருந்தால் தியேட்டர்களில் திருவிழாவே நடந்திருக்கும். சிம்பிள். படத்துக்கு டைட்டிலேகூட ‘ரஜினி – கமல்’ என்று வைத்திருக்கலாம்.

படம் நெடுக விரவியிருக்கும் புத்திசாலித்தனமும், பர்ஃபெக்ட்னெஸ்சுமே வெகுஜன ரசிகர்களிடமிருந்து படத்தை அந்நியப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. ஷங்கர் மாதிரி வெற்றிகரமான இயக்குநர்கள் வேண்டுமென்றே படத்தில் சில faultகளை, லாஜிக் மிஸ்டேக்குகளை திணிப்பதுண்டு. அவற்றை ரசிகனே கண்டுபிடித்து, இயக்குநரைவிட தான் புத்திசாலி என்று அவனுடைய ஈகோவை அவனே திருப்திபடுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் குறும்பு விளையாட்டு அது. ‘விக்ரம் வேதா’, அதிகபட்ச சாத்திய மிலிட்டரி ஒழுங்குடன் இருப்பதே, படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.

இயக்குநர்கள் அடிப்படையில் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும். ரசிகர்களும் தங்களுடைய wave lengthக்கு இணையாக இருப்பார்கள் என்கிற அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதே. இருந்தாலும், ஓவியா ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அளவுக்கே தமிழனின் அறிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க ஏகத்துக்கும் இறைக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, தத்தமது பங்கை பக்காவாக செய்திருப்பதால் பிரதானப் பாத்திரங்களான விக்ரம் – வேதா மீது குவிய வேண்டிய ஈர்ப்பு சிதறுகிறது. உதாரணத்துக்கு வரலட்சுமி பாத்திரம். அவர் இல்லாமலேயே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். இருப்பினும் அந்த பாத்திரத்தை வைத்துவிட்டதாலேயே அவருக்கென்று வலிந்து சில காட்சிகளை உருவாக்கி, அதை கதையோடு ஒட்டவைக்க முயற்சித்திருப்பது போன்றவை, பார்வையாளனுக்கு ஒரே டிக்கெட்டில் ஒன்பது படத்தை பார்ப்பது போன்ற ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு குற்றவாளியை ஒரு போலிஸ் அதிகாரி பிடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை மாட்டும்போதும் ஒரு புதிரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறான் குற்றவாளி. அந்த புதிர் முடிச்சுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அந்த அதிகாரி அவிழ்த்துக் கொண்டே வருவதுதான் கிளைமேக்ஸ். இதுதான் ஐடியா. இதைதான் புஷ்கர்-காயத்ரி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையை சொல்வதற்கு காதை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.

நான்லீனியர் வகை கதை சொல்லல், கேட்பவனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய உத்தியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கதைக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. ‘விக்ரம் வேதா’வில் அப்படி அமைந்துவிட்டது.

எல்லாவற்றையும் மீறி இது நல்ல படம். Hardcore சினிமா ரசிகன் ரசித்து ரசித்து சுவைக்க ஏராளமான ஐட்டங்களை கொண்டிருக்கும் படம். ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஃபேஸ்புக்கில் நீண்டகாலத்துக்கு பேசப்படும்.

4 ஜூலை, 2017

சினிமா வீரன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘சினிமா வீரன்’ பார்த்தேன். நீங்கள் சினிமா ரசிகராக (குறிப்பாக ஆக்‌ஷன் ரசிகராக) இருக்கும் பட்சத்தில், இந்த ஆவணப்படத்தின் எண்ட்கார்ட் போடப்படும்போது இருதுளி கண்ணீரையாவது சிந்துவீர்கள்.

இந்தப் படத்தில் ஃபெப்சி விஜயன் சொல்கிறார்.

“எங்க ஸ்டண்ட் யூனியன் சுவத்துலே வால்பேப்பர் ஒட்டுறதுக்கு தேவையே ஏற்படலை. ஏன்னா, சினிமாவில் ஸ்டண்ட் பண்ணுறப்போ செத்துப்போனவங்க படங்களை மாட்டியே சுவரெல்லாம் நிறைஞ்சிடிச்சி”

ஜூடோ ரத்தினம், ஃபெப்சி விஜயன், பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா ஆகிய மாஸ்டர்களும் ஏராளமான ஃபைட்டர்களும் சொல்லும் அனுபவங்கள் நம் முதுகெலும்பையே முறிக்கக்கூடிய அளவுக்கு த்ரில்லானவை. குறிப்பாக ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனாக பீட்டர் ஹெய்ன் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரிந்தது, ‘அந்நியன்’ விக்ரமாக ஸ்டண்ட் சில்வா நந்தனம் டெம்பிள் டவர்ஸ் பில்டிங்கில் இருந்து தாவித்தாவி உயிரைப் பணயம் வைத்தது, ‘முரட்டுக்காளை’ இறுதிக்காட்சிக்கு ஜூடோரத்தினம் அமைத்த ரிஸ்க்கான ரயில் சண்டைக்காட்சி என்று ஏகத்துக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவங்கள்.

வீரமும், காதலும், கண்ணீரும்தான் ஸ்டண்ட் நடிகர்களின் சொத்து. இந்த ஆவணப் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்து அவர்களது குடும்பத்தாரின் பார்வையும் இடம்பெற்றிருப்பது சிறப்பானது. எந்த ஸ்டண்ட் கலைஞருக்குமே அரேஞ்ச்ட் மேரேஜ் அமைவதில்லை. யாராவது காதலித்தால் மட்டுமே கல்யாணவரம் கிடைக்குமாம்.

புலிகேசி புருஷோத்தம்மன் என்கிற ஸ்டண்ட் கலைஞர். ஷூட்டிங்கின்போது இவரை புலி மார்பில் அறைந்துவிடுகிறது. பத்து நாள் ஜி.எச்.சில் கவலைக்கிடமாக இருந்து மறைகிறார். இவரை அடக்கம் செய்யக்கூட யாரிடமும் காசில்லை. ஸ்டண்ட் நடிகர்கள் தங்களிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போட்டு காசு திரட்டுகிறார்கள். சுடுகாட்டில் ஒன்றுகூடி கதறுகிறார்கள். எத்தனை காலத்துக்குதான் செத்துக்கொண்டே இருப்பது என்று குமுறியவர்கள் 1966ல் ஸ்டண்ட் யூனியன் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்குகிறார்கள். சுடுகாட்டில் தொடங்கப்பட்ட யூனியன் என்கிற பெருமை கொண்டது நம் ஸ்டண்ட் கலைஞர்களின் யூனியன். இன்றும் கூட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தோராயமாக ஒரு நாள் ஊதியம் 400 ரூபாய்தான்.

ஸ்டண்ட் யூனியன் கட்டிடத்தை காட்டும்போது அந்த காலத்தில் இறந்துப் போனவர்களில் புலி பாஷா என்கிறவரின் படத்தைப் பார்த்தேன். அனேகமாக இவர்தான் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும்.

சினிமாவில் ஸ்டண்ட் வேலை செய்பவர்கள், லைஃப் இன்சூரன்ஸ் செய்துக்கொள்ள முடியாது. தேசிய, மாநில விருதுகளில் இவர்களுக்கு இடமில்லை. ஏன், நம்மூரை விடுங்கள். ஆஸ்கரிலேயேகூட இவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் காலை காட்சியாக மக்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். அல்லது ஸ்டண்ட் யூனியனே செலவு செய்து, இந்த திரையிடலை தமிழகமெங்கும் நடத்த வேண்டும். தாங்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோக்களை, முன்னாள் மற்றும் நாளைய முதல்வர்களை உருவாக்கியவர்கள் இன்னமும் மரணக்குழிகளுக்குள்தான் வசிக்கிறார்கள் என்பதை மக்களும் அறியவேண்டாமா?

ரஜினியின் மகளாய் பிறந்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. Hats off!

7 பிப்ரவரி, 2017

எனக்கு வாய்த்த அடிமைகள்!

முதல்வர் பதவியின் மீது காதலாக இருக்கும் வைகோவுக்கு அந்த கனவு 1996லேயே புட்டுக் கொள்கிறது. எனவே 2016ல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவது குறித்து ஜி.ரா., முத்தரசன் மற்றும் திருமாவளவன் ஆகிய நண்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள், வைகோவை தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த தடுப்பு முயற்சியில் ஈடுபடும் ஈடுபடும் மூன்று நண்பர்களுமே ஒருக்கட்டத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமில் சிக்கி அவர்களும் வைகோவாகவே ஆகிவிடுகிறார்கள். மநகூ என்கிற பெயரிலான கொடிய விஷத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று அதிரடி முடிவெடுக்கும்போது, வைகோவுக்கு திடீரென இன்னொரு நண்பரான விஜயகாந்தின் நினைவு வருகிறது. அவரையும் இந்த செத்து செத்து விளையாடும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே என்று அவர் சொல்லும் ஆலோசனையை, நண்பர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘குகனோடு சேர்ந்து ஐவரானோம்’ கணக்காக தங்கள் மநகூ திட்டத்தை கேநகூவாக மாற்றி ஒட்டுமொத்தமாக கூட்டுத் தற்கொலை செய்துக் கொள்வதே பரபரப்பான இறுதிக்காட்சி. இந்த தற்கொலையை வேடிக்கை பார்க்கவரும் வாசனும் ஒரு வேகத்தில்  விஷப்புட்டியை கல்ப்பாக வாயில் கவிழ்த்துக் கொள்வது எதிர்பாராத திருப்பம்.

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டாக மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தோன்றி, “எனக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்” என்று பஞ்ச் டயலாக் அடிக்கும்போது, தற்கொலை செய்துக் கொண்ட அடிமைகள் புளங்காங்கிதப்பட்டு சொர்க்கத்தில் இருந்து தண்டனிடும் காட்சியில் விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக அந்த கூட்டுத் தற்கொலையில் வைகோ அருந்தியது விஷமே அல்ல என்பது தெரிய வருவதற்குள்ளாகவே மற்ற அடிமைகளுக்கு உயிர் போய் விடுகிறது. வைகோ பாட்டுக்கும் அருவாளை தூக்கிக் கொண்டு கருவேலமரங்களை வெட்டப்போய் விடுகிறார் என்கிற ஃபீல்குட் எஃபெக்டோடு படம் முடிகிறது.

அம்மாவுக்கு மட்டுமே அடிமைத்தனம் காட்டிவந்த இந்த கலிங்கப்பட்டி கருவேலம், இனி சின்னம்மாவின் அடிமையாகவும் சீறுகொண்டு எழும் என்கிற டைட்டிலுக்கு கீழே Written & Directed by : M.Natarajan, Co-Director : Pazha.Nedumaran என்கிற பெயர்கள் வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் கட்டுக்கடங்காமல் போகிறது.

அடிமைகளின் காமெடி அமர்க்களமாக எடுபட்டிருப்பதால், படம் குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு கோடியாவது வசூலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

9 நவம்பர், 2016

தெறிக்குது இளமை!

‘கீழ் மேல்’ கோட்பாடுதான் மலையாளிகளின் ஒரே கலை செயல்பாடு என்று இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மைவிட பெரிய முட்டாள்கள் யாருமில்லை. மலையாளிகள் என்றாலே கதகளி, வேட்டி, சேச்சி, மூக்கால் பேசும் முக்காத் தமிழ் என்கிற காலமெல்லாம் மலையேறி மாமாங்கமாகி விட்டது. மிக தைரியமாக ஹோமோசெக்ஸ் த்ரில்லர் எடுக்கிறார்கள். குறிப்பாக வினீத் சீனிவாசனின் வரவுக்குப் பிறகு மலையாளத் திரையுலகில் புதிய அலை சுனாமி வேகத்தில் கரைகடந்து வீசிக்கொண்டிருக்கிறது.

‘1983’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘தட்டத்தின் மறயத்து’, ‘மும்பை போலிஸ்’, ‘பிரேமம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘டயமண்ட் நெக்லஸ்’, ‘டிராஃபிக்’, ‘ஷட்டர்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, ‘த்ரிஷ்யம்’ என்று சமீப வருடங்களில் வேறெந்த திரையுலகிலும் வராத அளவுக்கு வகை வகையான கதைகளிலும், களங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது மாலிவுட்.

இந்த புதிய அலை ஜோதியில் லேட்டஸ்ட் வரவு ‘ஆனந்தம்’.

முற்றாக புதுமுகங்களோடு களமிறங்கியிருக்கும் இயக்குநர் கணேஷ்ராஜுக்கும் இதுதான் முதல் படம். வினீத் சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தவர், அதே வினீத் சீனிவாசனுக்கு கதை சொல்லி அவரையே தயாரிக்க வைத்திருக்கிறார். என்ன கதை சொல்லி கன்வின்ஸ் செய்திருப்பார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது. ஏனெனில் ‘ஆனந்தம்’ படத்தில் கதையென்று எதையும் குறிப்பாக சுட்டிக்காட்ட முடியவில்லை. தமிழில் எண்பதுகளின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ‘பன்னீர் புஷ்பங்கள்’ வகையறா கதைதான்.

காட்சிக்கு காட்சி திரையின் ஒவ்வொரு பிக்ஸெலிலும் தெறிக்கும் இளமைதான் ‘ஆனந்தம்’. படம் பார்க்கும் கல்லூரி மாணவர்கள், தங்களையே கண்ணாடியில் காண்பதாக உணர்வார்கள். முப்பது ப்ளஸ்ஸை எட்டிய அரைகிழங்கள், தங்களின் இருபதுகளை நினைத்து ஏங்குவார்கள். புத்திசாலித்தனமான திரைக்கதை யுக்தியோ, வலுவான காட்சியமைப்புகளோ இல்லாமலேயே ‘ஆனந்தம்’, ஒரு ‘ஆட்டோகிராப்’பை சாதித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு ‘ஆனந்தம்’ –- அதாவது கள்ளமில்லாத ஒரு சிரிப்பு - என்று மட்டும் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டதுதான் இயக்குநரின் சிறப்பு. சின்ன சின்ன உரசல்கள், கேலி, கிண்டல், சீண்டல், ஜாலி, நட்பு, காதல், ஜொள்ளு, லொள்ளு என்று ஒவ்வொரு உணர்வையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, சரிவிகிதத்தில் கலந்து பரிமாறியிருக்கிறார் கணேஷ்ராஜ். சேர்மானம் சரியாக அமைந்துவிட்டதால் ஆனந்தத்தின் சுவை அபாரம்.

என்ஜினியரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ அடிக்கிறார்கள். மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் எப்படியோ பிரின்சிபலை தாஜா செய்து, இந்த விசிட்டில் கோவாவையும் சேர்த்துவிடுகிறார். புதுவருடம் அன்று வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும் கோவாவில் பார்ட்டி கொண்டாடுவதுதான் திட்டம். கொச்சியிலிருந்து ஹம்பிக்கு போய், அங்கிருந்து கோவா என்று மாணவர்களின் நான்கு நாள்தான் ‘ஆனந்தம்’.

இந்த நான்கு நாட்கள் அவர்களில் சிலருக்கு எதிர்கால வாழ்க்கை குறித்த தெளிவினை ஏற்படுத்துகிறது. உம்மணாம் மூஞ்சி புரொபஸர் ஒருவர், எப்போதும் புன்னகையை மட்டுமே முகத்தில் ஏந்தியிருக்கும் சக புரொபஸரின் மீது காதலில் விழுந்து கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார். பப்பி லவ் முறிந்த ஒருவன், காதல் இல்லையென்றாலும் அப்பெண்ணோடு நட்பை தொடரமுடியும் என்று உணர்கிறான். இன்னொருவனோ தன்னுடைய உள்ளத்தை தான் விரும்பும் பெண்ணிடம் திறந்துகாட்டி அவளது காதலை வெல்கிறான். தான் தானாக இருக்கக்கூடிய சுயவெளிப்பாட்டின் சுதந்திரத்தை இன்னொருவன் அறிகிறான். தான் நேசிக்கக்கூடியவனை அவனை அவனுடைய தனித்துவத்தோடு மதிக்க ஒருத்தி கற்றுக் கொள்கிறாள். தன்னுடைய பெற்றோரின் மணமுறிவினை முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பான்மைக்கு மற்றொருத்தி வருகிறாள். இப்படியாக அந்த வகுப்பிலிருக்கும் பலரின் வாழ்க்கையை அந்த நான்கு நாட்கள் முற்றிலுமாக மாற்றுகிறது. கூட்டமாக இருப்பதின் சவுகரியத்தை அனைவருமே உணர்கிறார்கள். பொதுவாக இதுமாதிரி ஜானரில் படமெடுப்பவர்களுக்கு கை கொஞ்சம் துறுதுறுக்கும். லேசாக செக்ஸ் சேர்த்தால் ஜம்மென்று இருக்குமே என்று தோன்றும் (நம்ம ஊர் செல்வராகவன் நாசமா போனதே இதனால்தான்). ஆனால், கணேஷ்ராஜோ படத்தில் சின்ன கிளிவேஜ் கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். ஆங்காங்கே ‘நேவல்’ தெரியதான் செய்கிறது. ஆனால், காமமாக கண்ணுக்கு எதுவும் உறுத்தவில்லை.

தெலுங்கில் இயக்குநர் சேகர் கம்முலா எடுக்கும் ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்’ போன்ற ‘ஃபீல்குட்’ மூவிகளின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தாலும், கணேஷ்ராஜின் அசால்டான ஜஸ்ட் லைக் தட் ஸ்டைல் இயக்கம்தான் ‘ஆனந்தம்’ படத்தினை ரசிகர்களை காதலிக்க வைக்கிறது. சேகர் கம்முலாவுக்கு ரசிகனை இரண்டு காட்சியிலாவது அழவைத்து பார்த்துவிட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். கணேஷ்ராஜோ, எவ்வளவு சீரியஸான சீனுக்கு லீட் இருந்தாலும், அதையும் எப்படி காமெடியாக்கலாம் என்பதே கவலையாக இருந்திருக்கிறது. சின்ன சந்து கிடைத்தாலும் அதில் fun வந்தாக வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
படத்தின் இடைவேளையிலும், இறுதியிலும் வரும் இரண்டு காட்சிகள் அபாரமானவை.

தான் இன்னமும் காதலை தெரிவிக்காத பெண்ணின் அருகாமை யதேச்சையாக அவனுக்கு கிடைக்கிறது. ஆசை தீர அந்த பிரைவஸியை அனுபவிக்கிறான் (நோ வல்கர், பேசிப்பேசி தன்னை புரியவைத்து அவளை புரிந்துக்கொள்கிறான்). அவளுக்கு எதை கண்டாலும் பயம் என்பதை அறிகிறான். இவன் சொல்கிறான்.

“எனக்கும் சின்ன வயசுலே இருட்டுன்னா பயம். கரெண்ட் கட் ஆனதுமே ரொம்ப பயப்படுவேன். என்னோட அப்பாதான் அப்போ நட்சத்திரங்களை காண்பிச்சார். கண்ணுக்கு தெரியாத இருட்டை நினைச்சு பயந்துக் கிட்டிருக்கிறதைவிட, கண்ணுக்கு தெரியற மகிழ்ச்சியை அனுபவிக்க கத்துக்கோடான்னு சொன்னாரு”

சின்ன டயலாக்தான். கேட்கும்போது சட்டென்று ஒரு ஜென் கவிதை மாதிரி ஏதோ திறப்பை மனசுக்குள் ஏற்படுத்துகிறது இல்லையா? இந்த காட்சியில் கேமிரா நிலவுக்குச் செல்கிறது. அருகில் நட்சத்திரங்கள். இடைவேளை. வாவ்!

இதே போல கிளைமேக்ஸுக்கு முன்பாக ஒரு வசனம். இத்தனை மாணவர்களையும் மேய்த்து நல்லபடியாக திரும்ப ஊருக்கு கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்புணர்வில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறான் அவர்களது ஒருங்கிணைப்பாளர். காலேஜில் இருந்து கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு விஷயத்தையுமே அவன் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருப்பதை, அவர்கள் வந்த பேருந்தின் ஓட்டுநர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். டூரின் கடைசி நாளன்று, பேருந்து ஓட்டுநரிடம் வந்து ஊர் திரும்புவது பற்றி ஏதோ பேச ஆரம்பிக்கிறான். அவர் சொல்கிறார்.

“மவனே! உனக்கு ஒண்ணு சொல்றேன். எப்பவும் பொறுப்பை தலையிலே சுமந்துக்கிட்டு அலையாதே. பொறுப்பு எங்கேயும் போயிடாது. அது எப்பவும் நம்மளுக்கு இருந்துக்கிட்டேதான் இருக்கும். அதுக்குண்ணு உன் வயசுக்குரிய ஆனந்தத்தை இழந்துடாதே. இன்னும் கொஞ்ச நாளில் நரை விழுந்துடும். தொப்பை வந்துடும். அப்பவும் பொறுப்பு இருக்கும். ஆனா, இளமை இருக்காது. போ.. உன் பிரெண்டுங்களோட லைஃபை என்ஜாய் பண்ணு”

இவ்வளவுதான் படமே.

படம் பற்றி வேறென்ன சொல்வது? நடிகர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் திறமையாக இயக்கியிருக்கிறார். இப்படியே க்ளிஷிவாகதான் எதையாவது சொல்லிக் கொண்டு போகவேண்டும். படம் பாருங்கள். ஆனந்தமாக இருங்கள். அவ்ளோதான் சொல்லமுடியும்.

6 செப்டம்பர், 2016

இரண்டு படங்கள்!

ரொம்பநாள் கழித்து ஒரே நாளில் வெளியான இரண்டு படங்கள் நன்றாக இருந்தது என்பதே தமிழ் சினிமா தட்டுத் தடுமாறி தேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி (‘தகடு’ பார்க்கவில்லை. அது நன்றாக இருக்குமென்றும் தோன்றவில்லை). ‘கிடாரி’, ‘குற்றமே தண்டனை’ இரண்டுமே வழக்கமான பாதையில் திரைக்கதை ஓட்டும் பாதுகாப்பான பயணமில்லை என்பதால், ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள் பிரசாத் முருகேசன், எம்.மணிகண்டன் இருவருக்குமே சில காலமாய் யாருக்கும் தராமல் ஞாநி தன் கையிலேயே வைத்திருக்கும் பூங்கொத்துகளை வாங்கி பரிசளிக்கலாம்.
---
‘காட்ஃபாதர்’, ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’ போன்ற படங்களின் கதையை சாத்தூரில் கற்பனை செய்துப் பார்த்திருக்கிறார்கள். துக்கடா கேரக்டராக வரும் மு.ராமசாமிதான் படத்தின் கதை சொல்லும் பாத்திரம். ‘இன்று - அன்று’ கணக்காக (இதை ‘நான்லீனியர்’ என்றெல்லாம் இங்கிலீஷில் சொல்லி கோட்பாட்டாளர்கள் குழப்புவார்கள்) சுவாரஸ்யமான திரைக்கதை. ‘அன்று’ சசிக்குமாருக்கும், நிகிலாவுக்கும் நடந்த செம பிரைவஸியான சூடான ‘லிப்லாக்’ சமாச்சாரமெல்லாம் கதைசொல்லியான மு.ராமசாமிக்கு எப்படி தெரியும் என்றெல்லாம் லாஜிக்கலாக கேள்வி கேட்டால் நீங்கள்தான் அடுத்த சூனாகானா.

கராத்தே செல்வின், காட்டான் சுப்பிரமணியம் போன்ற பெயர்களை எல்லாம் நீங்கள் வாழ்நாளில் கேட்டதே இல்லை என்றால் லூஸில் விட்டு விடுங்கள். ‘கிடாரி’ உங்களுக்கு படுமொக்கையாக படலாம். ஒருவகையில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவரும் கூட. மதியம் லஞ்சுக்கு தயிர்சாதமும், வடுமாங்காயும் சாப்பிடும்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ‘ததாஸ்து’ சொல்லி உங்களை வாழ்த்துவார்கள்.

உங்களுடைய கேரக்டரை நிர்ணயிப்பது பிறப்பா, வளர்ப்பா என்கிற அலசலை செய்கிறது ‘கிடாரி’. பலி கொடுக்கப்பட வேண்டுமென்றே வளர்க்கப்படும் ஆடுதான் சசிக்குமார். ஆனால், ட்விஸ்ட்டாக வம்சம் தழைக்கவென்றே வளர்க்கப்படும் வசுமித்ர வெட்டப்படுகிறார். கசாப்புக் கடைக்காரரான வேல.ராமமூர்த்தியின் கதி என்னவாகிறது என்பதுதான் கிளைமேக்ஸ்.

கதை எண்பதுகளின் இறுதியில் நடக்கிறது. இதை நேரடியாக சொல்லாமல் குடும்பமே ‘வருஷம் 16’ பார்ப்பது, காட்சியின் பின்னணியில் ‘கார்த்திக் ரசிகர் மன்றம்’ காட்டுவது மாதிரி, ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் இயக்குநர். நாடார்களுக்கு காய்கறி மண்டி, தேவர்களுக்கு ஆட்டுதொட்டி என்று சமூகக் குணங்களை மிக துல்லியமாக வரையறுத்ததிலும் சபாஷ் பெறுகிறார்.

தமிழ் திரைப்படங்கள் என்பது ஹாலிவுட்டின் தழுவலாகவோ, இந்திய இதிகாச மரபின் தொடர்ச்சியாகவோதான் இருந்தாக வேண்டும் என்கிற விதியை பாரதிராஜாவில் தொடங்கி, பாலாஜி சக்திவேலில் தொடர்ந்து நேற்றைய சீனுராமசாமி வரை தங்கள் படைப்புகளின் வாயிலாக அடுத்தடுத்து மறுத்து வருகிறார்கள். இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் பிரசாத் முருகேசன்.

---
ஹீரோயினே இல்லாமல் படம் என்பதெல்லாம் தயாரிப்பாளர் தமிழில் எடுக்கக்கூடிய மிகப்பெரிய ரிஸ்க். ஹீரோவுக்கு இறுதியில் ஜோடி ஆகிறவர், ஒரு துணை பாத்திரமாகதான் வந்து போகிறார். ஒரு குற்றம் நடக்கிறது. அதற்கு சாட்சியான ஹீரோ தன்னுடைய கையறுநிலைக்கு அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற ஒன்லைனர் இந்தப் படத்தை தமிழ் சினிமா கலாச்சாரத்தில் இருந்து முழுக்க வேறுபடுத்துகிறது. ஆனால், இறுதிக் காட்சிகளில் அந்த குற்றத்தோடு ஹீரோவையும் சம்பந்தப்படுத்தி ஒட்டுமொத்தமாக அதுவரை கொடுத்துக் கொண்டிருந்த காட்சியனுபவங்களை நாசமாக்கி விட்டார் மணிகண்டன்.

கோர்ட் காட்சி முடிந்ததுமே, பொய்சாட்சி சொல்லுவதற்காக தான் வாங்கிய ஒரு லட்ச ரூபாயை சோமசுந்தரத்திடம் வேகமாக விதார்த் திருப்பிக் கொடுத்துவிடும் காட்சியிலேயே படம் முடிந்துவிட்டது. கொல்கத்தா வரை படத்தை இழுத்துப் போனது எல்லாம் தேவையற்ற பிற்சேர்க்கை. மிகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய ‘குற்றமே தண்டனை’, இதனால் ‘சிறந்த’ கேட்டகிரியை மட்டுமே எட்டுகிறது.

விதார்த், படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேன்சர் ஒரு தீர்க்க முடியாத வியாதி என்பது தெரியும். அடுத்ததாக எய்ட்ஸ், ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி மாதிரி விதவிதமான நோய்களை அறிந்திருக்கிறார்கள். நமக்கு முன்னுதாரணமே இல்லாத 'tunnel vision’ என்கிற பார்வைக் குறைபாடு நோயை அறிமுகப்படுத்தி, நமக்கே tunnel vision வந்துவிட்டதோ என்கிற பிரமையை விதார்த், உருவாக்கியிருப்பது நடிப்பில் ஒரு சாதனை.

விதார்த்தின் அந்த tunnel vision பாய்ண்ட் ஆஃப் வியூ காட்சிகளில் ஏதேனும் ஒன்றையாவது இயக்குநரோ, எடிட்டரோ கோட்டை விட்டுவிடுவார்கள், ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு லைக்கு அள்ளலாம் என்று பைனாகுலர் வைத்து பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. Well done!

இந்தப் படத்திலும்கூட இளையராஜாவின் இசையை குறை சொல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல ENT டாக்டர் அமையவேண்டும் என எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்.

8 ஜூன், 2016

இறைவி

டைட்டிலே பெருமழை சத்தத்தோடுதான் தொடங்குகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளோ கழித்து நடைபெறவிருக்கும் கல்யாணம் குறித்து கனவு காணும் ஓர் இறைவி, மறுநாளே கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் ஓர் இறைவி, கல்யாணம் முடிந்து கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து முடித்த ஓர் இறைவி.

அந்த மழைநாளில் இந்த இறைவிகளின் அப்போதைய மனநிலைதான் படத்தின் தொடக்கம். படம் முழுக்கவே பாத்திரங்களின் உணர்வுபூர்வமான எழுச்சியிலோ, வீழ்ச்சியிலோ சாட்சியாக ஜோவென மழை கொட்டுகிறது.

படத்தில் விஜய்சேதுபதி, “என்ன கான்செப்ட்?” என்று கேட்கிறார். ‘மழையில் நனைய விரும்பும் இறைவிகள்’ என்பதுதான் கான்செப்ட். இறுதியில் ஒரே ஒரு இறைவிதான் நனைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதா மூவருக்கும் tribute செய்யப்பட்டு படம் தொடங்குகிறது. நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பட்டியலில் மணிரத்னத்தையும், ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணனையும் கூட சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ‘மவுன ராகம்’ ரேவதிக்குப் பிறகு மழையை அதிகம் காதலிப்பவர்கள் இவர்கள்தான்.

இறைவிகளின் கதையாக மட்டும் ‘இறைவி’ இருந்திருக்கலாம். கான்செப்டை மீறி இறைவன்களின் திருவிளையாடலாக மாறிவிட்டதுதான் ‘இறைவி’யின் சோகம்.

‘கோவலன் அல்ல கேவலன்’ என்கிற பாபிசிம்ஹாவின் கோபம் ஒருவகையில் நியாயமே. ‘வயிற்றுக்குள் இருக்கும் குட்டியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புதுக்குட்டியை எப்படி பிரசவிக்க முடியும்?’ என்கிற எஸ்.ஜே.சூர்யாவின் லாஜிக்கும் சரிதான். படைப்பாளியின் வலியை இன்னொரு படைப்பாளியாக புரிந்துக் கொள்ளும் சிற்பியான ராதாரவியின் பாத்திர வார்ப்பும் அருமை. வைப்பாட்டி மீதிருந்த ஆசையும், மோகமும் அற்றுப்போக மனைவியை நாடிவந்து வாழ விரும்பும் நேரத்தில் எல்லாம் ஏதோ பிரச்சினைகளால் பிரிய நேரும் விஜய் சேதுபதியின் பரிதவிப்பும் உணரக்கூடியதுதான்.

எல்லாம் இருந்தும் ‘இறைவி’யை ஏன் வழிபட முடியவில்லை என்றால் படத்தின் மையத்துக்கு தொடர்பில்லாமல் அலைபாயும் காட்சிகளாக தயாரிப்பாளரின் ஈகோ, சிலை கடத்தல் என்று திரைக்கதை கோட்டை தாண்டி ஓடிக்கொண்டே இருப்பதால்தான்.

நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா?

இருபத்து நான்கு வயதில் தன் தலையை தவிர அத்தனையையும் அடகு வைத்து தங்கைக்கு திருமணம் செய்துவைத்த ஆணை எனக்குத் தெரியும். மனைவி உடல்நலிவுற்ற காலத்தில் urine pan பிடித்தவனையும் தெரியும். வாங்கும் சம்பளத்தை அப்படியே கவர் பிரிக்காமல் அம்மாவிடம் கொடுத்து, அம்மா கொடுக்கும் காசில் தன் செலவுகளை சுருக்கிக் கொள்பவனையும் தெரியும். எலாஸ்டிக் போன ஜட்டியை அரைஞாண்கயிறின் உதவியால் அட்ஜஸ்ட் செய்து மாட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கு பர்த்டே டிரெஸ்ஸை ஆடம்பரமாக எடுக்கும் ஆண்களை கார்த்திக் சுப்புராஜ் அறியமாட்டாரா என்ன?

அறிவார். ஆனால், பெண்ணியம்தான் இப்போது பேஷன். அது நிஜமான பெண்ணியமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. பெண்ணியம் மாதிரி ‘போலச் செய்துவிட்டால்’ போதும். ‘கல்யாணமெல்லாம் வேணாம், just fuck me’ என்று பூஜா திவாரியா, விஜய் சேதுபதியை கூப்பிட்டு கூடும்போது சத்யம் சினிமாஸில் ஐடி ரசிகர்கள் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். போதாதா?

‘வித்தியாச விரும்பி’ என்று நாலுபேர் புகழ்ந்து, அப்படியொரு பெயரெடுத்து தொலைத்து விட்டதாலேயே, இயல்பாக இருக்க முடியாமல் சொந்த வாழ்க்கையிலும் கூட ஏதாவது வித்தியாசமாக இருந்துத் தொலைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆட்பட்டு மெண்டல் ஆகிப் போனவர்கள் சினிமாவிலும், இலக்கியத்திலும் ஏராளம்.

சினிமாவை சினிமா என்று சினிமாக்காரர்கள் அழைத்துக் கொண்டிருந்த போதெல்லாம் தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டர் வாசலில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்கள் வரை சந்தோஷமாகதான் இருந்தார்கள். ‘படைப்பு’, ‘படைப்பாளி’ என்று எப்போது கெத்து கூட்ட ஆரம்பித்தார்களோ, அன்று பிடித்தது ஏழரை நாட்டு சனி. இன்றுவரை தொடர்கிறது.

இறுதிக்காட்சியில் பாபிசிம்ஹாவை விஜய்சேதுபதி கொல்கிறார். விஜய்சேதிபதியை எஸ்.ஜே.சூர்யா கொல்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரசிகர்களை கொன்றுவிட்டார்.

‘இறைவி’ முடிந்ததும் நல்ல மழையில் நனைந்தேன். ஆண்கள், நனைய விரும்புவதுமில்லை. மழையில் நனைய அச்சப்படுவதுமில்லை.

7 மே, 2016

24

‘டைம் மெஷின்’ என்பதே காதில் பூ சுற்றும் ஐடியாதான். அறிவியல்ரீதியாக காலத்தின் முன்னும் பின்னும் நகரவேண்டுமென்றால் ஒளியைவிட வேகமாக பயணிக்கக்கூடிய ஏதோ ஒரு சமாச்சாரத்தை நாம் கண்டறிய வேண்டும். அடுத்த நூறாண்டுக்குள் இது சாத்தியமாகும் வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.

எனவே, இப்போதைக்கு டைம்மெஷின் கான்செப்ட் என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டி வசிக்கும் கிளியின் கண்களில் மந்திரவாதியின் உயிர் இருக்கிறது என்பது மாதிரி லாஜிக்கில்லாத ஃபேன்ஸி கதைதான். அப்படிப்பட்ட மகா காதுகுத்தல் கதையை எடுத்துக் கொண்டு, திரையில் தெரியும் காட்சிகளை சாத்தியம் என்று மக்கள் நம்பும்படியான திரைக்கதையை எழுதுவது என்பது டைம்மெஷினை கண்டுபிடிப்பதைவிட சவாலான விஷயம். இயக்குநர் விக்ரம்குமார் இந்த சவாலை மிக சுலபமாக கடந்திருக்கிறார்.

“அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே”

என்று நடிகர் திலகம் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடும்போது அப்படியே உலக இயக்கம் freeze ஆகி நிற்கும் காட்சியை ஏ.பி.நாகராஜன் புனைந்திருப்பாரே நினைவிருக்கிறதா?

மீண்டும்-

“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று அவர் தொடரும்போது உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்த காட்சியை திரையில் பார்த்து நம் தாத்தாக்களும், அப்பாக்களும் எப்படி அசந்திருப்பார்களோ, அதே அசத்தலை மீண்டும் சாத்தியமாக்கி இருக்கிறது ‘24’. இந்தப் படத்தில் freeze ஒரு கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தோடு இயங்குகிறது.

ஷங்கரின் ‘ஐ’ ஒப்புக் கொள்வதற்கு முன்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘24’ படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் முடிவெடுத்திருந்தார். ‘யாவரும் நலம்’ வெற்றிக்குப் பிறகு விக்ரம் குமார் இதை இயக்க திட்டமிட்டிருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையென்று ஆடம்பரமாக ஆரம்பித்தார்கள். “சிக்கலான கதை. ஆனால், 6 வயது முதல் 60 வயது வரை இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றெல்லாம் விக்ரம் பேட்டி கொடுத்தார். பிற்பாடு திரைக்கதை விவாதத்தில் நடிகர் விக்ரமுக்கும், இயக்குநர் விக்ரமுக்கும் முரண்பாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டது என்று சொன்னார்கள்.

இதே கதையை தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு சொன்னார் இயக்குநர் விக்ரம். தமிழில் பெரும் வெற்றி பெற்ற sci-fi கதையான ‘நியூ’வில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த வேடத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுதான் நடித்திருந்தார். படம் அட்டர் ப்ளாஃப். எனவே, ‘தூக்குடு’வாக மசாலாவில் எகிறி அடித்துக் கொண்டிருந்த மகேஷ்பாபுவுக்கு அப்போதைக்கு அறிவியல் புனைகதையில் ஆர்வமில்லை. அது சரிதான். இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ‘நேனொக்கடினே’ என்கிற sci-fi த்ரில்லரில் நடித்தபோது அந்த படமும் அட்டர்ப்ளாப்தான் ஆனது.

வெறுத்துப்போன இயக்குநர் விக்ரம்குமார், ‘இதயத்தை திருடாதே’ பாணியில் செம ரொமான்ஸாக ‘இஷ்க்’ படத்தை தெலுங்கில் இயக்கி, பிரும்மாண்ட வெற்றி பெற்றார். ஆனாலும் காலத்தில் முன்னும் பின்னும் நகரும் ஆர்வம் அவரை தூங்கவிடவில்லை. அப்போது நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று மூன்று தலைமுறையும் சேர்ந்து நடிக்கக்கூடிய கதை ஒன்றினை இயக்குநர்களிடம் நாகார்ஜூனா கேட்டுக் கொண்டிருந்தார்.

விக்ரம்குமார் தான மனசில் நினைத்திருந்த ‘24’ பாணியில் ‘காலத்தை ஏமாற்றும்’ கதை ஒன்றின் ஒன்லைனரை பிடித்து நாகார்ஜூனாவிடம் சொன்னார். நாகேஸ்வரராவின் ஆலோசனையின் பேரில் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்து ‘மனம்’ எழுதப்பட்டது. விக்ரம் மீது நம்பிக்கை வைத்து வேறெதையும் விசாரிக்காமல் கோடிகளை கொட்ட தயாரானார் நாகார்ஜூனா. ‘மனம்’, ஆந்திர மனங்களை மயக்கியது. போட்ட காசை பன்மடங்காக திருப்பி எடுத்தனர் நாகார்ஜூனா குடும்பத்தினர். படம் வெளியாகும்போது நாகேஸ்வரராவ் உயிரோடு இல்லை. தெலுங்கு சினிமாவின் legendக்கு மகத்தான tribute செய்துக் கொடுத்தார் விக்ரம்குமார்.

ஒருவகையில் விக்ரமுக்கே மீண்டும் தன் ‘24’ மீது பூரண நம்பிக்கை ஏற்பட ‘மனம்’ அடைந்த சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிதான் காரணம். நடிகர் விக்ரமுக்கு முன்பு தயார் செய்திருந்த கதையை தூசு தட்டினார். திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து சூர்யாவுக்கு சொன்னார். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க். பெரிய பட்ஜெட் கோரும் கதை. தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரை காம்ப்ரமைஸ் செய்ய முடியாது. எனவே, தானே தயாரிக்க முன்வந்தார். அவருக்கு இந்தப் படத்தில் நடிப்புரீதியாக எதிர்கொண்ட சவால்கள்தான் ஆர்வத்தைத் தூண்டியது. கொஞ்சமென்ன நிறையவே காஸ்ட்லியான ஆர்வம்தான். எனினும் ‘நந்தா’வில் தொடங்கி, அடுத்தடுத்து சூர்யா நிகழ்த்திப் பார்த்த பரீட்சார்த்த முயற்சிகள் புதிதல்லவே. ‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்று எம்.ஜி.ஆர் கணக்காக தானே தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்தார்.

‘24’ படத்தின் பின்னணிக்கதை இதுதான்.
முன்பு தான் ஒளிப்பதிவு செய்யவிருந்த இந்தப் படத்தினை இப்போது திரு எப்படி செய்திருக்கிறார் என்று பார்த்துவிட்டு அசந்துப்போன கேமிரா பேரரசன் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் நெகிழ்ந்துப் போய் பாராட்டுகிறார். இன்று ‘24’ பார்த்துவிட்டு, இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் பொழியும் பாராட்டுமழையில் நனைய இயக்குநர் விக்ரம்குமாருக்கு எவ்வளவு அருகதை இருக்கிறதோ, அதே அருகதை இந்த கதையை நம்பி வாழ்க்கையை பணயம் வைத்த சூர்யாவுக்கும் இருக்கிறது.

‘ஆத்ரேயாடா’ என்று சர்ச்சில் சாத்தானாக மாறி விஸ்வரூபம் எடுக்கும் வில்லன் சூர்யா, ‘டேய் பெரியப்பா’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டும் இளைய சூர்யா, ‘சாதிச்சிட்டேன் ப்ரியா’ என்று யுரேகா கூச்சலிடும் விஞ்ஞானி சூர்யாவென்று தன் நடிப்பு வாழ்வின் அடுத்த பரிமாணத்துக்கு அசத்தலாக நகர்ந்திருக்கிறார். பரபரவென்ற த்ரில்லர் ஆக்‌ஷன் படத்தில் சண்டைக் காட்சிகளே திரைக்கதையில் இல்லை என்கிற பலவீனத்தை புத்திசாலித்தனமான காட்சிகளால் அசால்டாக கடந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம்குமார்.

24 மணி நேரம் முன்னும் பின்னும் நகரலாம் என்கிற அதிசயப் பொருள் கிடைத்தவுடன் சாமானியனான வாட்ச் மெக்கானிக், அதை எதற்கு எப்படி பயன்படுத்துவான் என்று தரைலோக்கலுக்கு சிந்தித்து, ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மைண்ட்வாரில் ரசிகர்களின் இதயத்தை ‘திக்’கிடவைத்து, இந்தியத் திரையுலகத்துக்கே கதை சொல்லும் பாணியில் புதிய வாசல்களை திறந்து கொடுத்திருக்கிறது விக்ரம்குமார் - சூர்யா கூட்டணி. சூர்யாவைப் பொறுத்தவரை இது ‘கஜினி’க்கும் மேலே.
இந்தப் படத்தைப் பார்ப்பதே கூட ஒரு வகையில் டைம் டிராவல்தான். நாம் மூன்று மாதம் காலத்தில் முன்னோக்கிப் போய் பார்க்கிறோம். ஏனெனில் கதை நடப்பது ஆகஸ்ட்டு 2016ல்.

‘24’ கொடுப்பது அனுபவம். அதை 626 வார்த்தைகளில் இதுபோல விமர்சனமாக எழுதியோ, வாயால் ஹெலிகாஃப்டர் ஓட்டியோ யாருக்கும் புரியவைத்துவிட முடியாது. தவறவிடாமல் நீங்கள் முதலில் போய் படத்தைப் பாருங்கள். பிடித்திருந்தால் குடும்பத்தோடு இன்னொரு முறை போய் பாருங்கள். வேறென்ன சொல்லமுடியும்?

15 பிப்ரவரி, 2016

விசாரணையின் மறுபக்கம்!

‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் என்றாலே இப்படிதான் என்று நினைத்துவிட மாட்டார்களா?”

வெற்றிமாறன் இதற்கு புத்திசாலித்தனமான பதில் ஒன்றினை சொன்னார்.

“போலிஸ்னாலே இப்படிதான்னு நான் சொல்லலை. பூ அல்லது தலைன்னு எந்த விஷயத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் இந்தப் படத்துலே காட்டியிருக்கேன். இன்னொரு பக்கத்தை வேற யாராவது காட்டுவாங்க”
தெரிந்தேதான் இந்த பதிலை சொன்னாரா என்று தெரியவில்லை. ‘விசாரணை’ வெளியான அதே நாளில்தான் மலையாளத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வெளியானது. போலிஸ் விசாரணையால் பாதிக்கப்படுபவர்களின் பார்வையில் நம் ‘விசாரணை’ விரிந்தது என்றால், மலையாளத்தில் போலிஸ் பார்வையில் விரிந்திருக்கிறது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

நம்மூரில் வெற்றிமாறன் எப்படியோ, அதுபோலதான் கேரளாவில் இயக்குநர் ஆப்ரிட் ஷைன். அவரது பெயரை சொன்னால் இங்கே யாருக்கும் உடனே தெரியாது. ஆனால், அவர் எடுத்த படம் ரொம்ப பிரபலம். ‘1983’. ‘பொல்லாதவன்’ நமக்கு எப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஜானரை கொடுத்ததோ, அதுபோலவே ‘1983’ மலையாளத்தில் நிகழ்ந்த புதிய முயற்சி. அதே இயக்குநரின் இரண்டாவது படம்தான் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’. முதல்பட ஹீரோவையே இரண்டாம் படத்துக்கும் புத்திசாலித்தனமாக வளைத்துப் போட்டுவிட்டார். ‘1983’ பெற்ற அபாரமான வணிக வெற்றி, நிவீன்பாலியை படம் தயாரிக்கவும் உந்தித் தள்ளியது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’வின் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவர்தான்.

‘விசாரணையை’ பற்றி இங்கே ஏகப்பட்ட விசாரணை நடந்துவிட்டது. எனவே, நேராக ‘ஆக்‌ஷன் ஹீரோ’வுக்கு போய்விடலாம்.

பி.எச்.டி முடித்து ஏதோ காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஜூவுக்கு போலிஸ் வேலை மீது காதல். எஸ்.ஐ. எக்ஸாம் எழுதி தேர்வாகி, எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனுக்கு பணிபுரிய வருகிறார்.

பிஜூவின் ஒரு மாதகால போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கைதான் ஒட்டுமொத்த படமுமே. இந்தப் படத்தில் கதை கிடையாது. வில்லன் கிடையாது. காட்சிகள் மட்டும்தான். அந்த காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, வசனங்கள் மூலமாக இல்லாத கதையை இருப்பதாக பார்வையாளனை நம்பவைக்கிறார் இயக்குநர்.

போலிஸ் படம் என்றாலே ஹீரோ தீர்க்கவேண்டிய பிரதான பிரச்சினை ஒன்று இருக்கும். அந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் தடுக்கும் வில்லனை அழித்து ஒழித்து சுபம் என்பதுதான் உலகம் முழுக்கவே இருக்கும் டெம்ப்ளேட். மசாலாத்தனமாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஆப்ரிட் ஷைன் நமக்கு காட்டியிருப்பது மாற்றுப்படம். ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் கேரியரில் அவன் சந்திக்கக்கூடிய வழக்குகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒருவரி. தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை ஒருவரும் மீறக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறான்.

குடித்துவிட்டு பொது இடத்தில் எல்லோருக்கும் ‘தரிசனம்’ காட்டும் குடிகாரனில் தொடங்கி, மாநிலமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் வரை பிஜூ டீல் செய்கிறான். அவன் விசாரணை செய்யும் ஒவ்வொரு வழக்குமே ஒரு சிறுகதை. ‘சடக்’கென்று தொடங்கி ‘படக்’கென்று முடிகிறது. சில கதைகளின் உருக்கம் நெஞ்சை தொடுகிறது. லாக்கப்பில் ஒருபுறம் கிரிமினல்களை போட்டு மிதித்துக்கொண்டே போனில் மறுபுறம் தனக்கு நிச்சயமான பெண்ணோடு காதல் கடலை போடுகிறான் பிஜூ. படத்தில் அட்மாஸ்பியருக்கு வரும் பாத்திரங்களை கூட அவ்வளவு சிறப்பாக எப்படி நடிக்க வைக்க முடிந்தது இயக்குநருக்கு என்கிற ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்கிற அதிரடியாக டைட்டில் வைத்து இருந்தாலும், ‘சிங்கம்’ ரேஞ்சுக்கு ரவுண்டுகட்டி விளையாட அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இல்லை. க்ளைமேக்ஸில் இதற்கு சமாதானம் சொல்லுகிறார் இயக்குநர். “பிஜூ ஒன்றும் சூப்பர் ஹ்யூமன் இல்லை. நம்மை மாதிரி வெறும் மனுஷன்தான்”

‘நேரம்’, ‘தட்டத்தின் மறையத்து’, ‘1983’, ‘ஓம் சாந்தி ஓசண்ணா’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘பிரேமம்’ என்று சகட்டுமேனிக்கு ஹிட்டுகள் கொடுத்துவரும் நிவின்பாலி ஒரு மோகன் என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னொரு கமல் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

21 ஜனவரி, 2016

குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா

குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.

நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...

சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.

இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே? எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.

மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.

நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்‌ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
அமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.

எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.

அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.

சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?

நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.

அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
இரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா?”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”

7 ஜனவரி, 2016

குடும்பங்களின் வெற்றி!

ஒரு திரைப்படத்தின் ஒரே ஒரு காட்சியிலாவது உங்களை அறியாமல், கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டால் போதும். அந்த படம் நிச்சயம் மெகாஹிட். இரண்டாம் நபருக்கு தெரியாமல் நீங்கள் கர்ச்சீப்பை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டது எந்தெந்த படங்களைப் பார்த்தபோது என்று யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை புரியும். ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது இப்படி உலுக்கியெடுக்கிறது.

ராம் பொத்தினேனிக்கு இப்போது வயது இருபத்தெட்டுதான். ஆனால் ஹீரோவாகி பத்தாவது ஆண்டு. முதல் படமான ‘தேவதாசு’, பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐநூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான சாதனை புரிந்தது. பதினெட்டு வயதிலேயே ஒரு ஹீரோவுக்கு இத்தகைய வெற்றி என்பது தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் சாத்தியம். இதே மாதிரி சாதித்த இன்னொருவர் ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கில் இதுமாதிரி ஏராளமான சாதனைகள் உண்டு. உலகிலேயே அதிக ஹிட் ரேட் கொண்ட ஹீரோ அங்குதான் இருக்கிறார். ‘விக்டரி ஸ்டார்’ வெங்கடேஷ். அவர் நடித்த முதல் 50 படங்களில் 45 படங்கள் நூறுநாள் ஓடியவை.
ராம் எத்தகைய ஹீரோ என்று வரையறுப்பது கொஞ்சம் கடினம். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கொஞ்சம் சிகப்பாக இருக்கிறாரே தவிர்த்து, நம்மூர் விமல் மாதிரிதான் சராசரித் தோற்றம். அதிக உயரமில்லை. கொஞ்சம் reduce to fit மாதிரிதான் இருப்பார். அதனாலோ என்னவோ சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் இரண்டாம் அடுக்கு நகர இளைஞர்கள், தங்களை சினிமாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாயகனாக இவரை கொண்டாடுகிறார்கள். ஒரு படம் மெகாஹிட் என்றால் அடுத்த படம் அட்டர் ப்ளாப் என்பதுதான் ராமுடைய பத்தாண்டு கேரியர் கிராப். இத்தகைய சிக்கலான சினிமா வாழ்க்கை என்றாலும் இதற்குள்ளேயே ‘ரெடி’, ‘காண்டிரேகா’ என்று தெலுங்கு இண்டஸ்ட்ரி பாக்ஸ் ஆபிஸையே சுக்குநூறாக்கிய இரண்டு ப்ளாக்பஸ்டர் மூவிகள் இவரது ஃபிலிமோகிராபியில் உண்டு.

ஓக்கே. லெட் அஸ் கம் டூ ‘நேனு சைலஜா’

சமீபமாக அடுத்தடுத்து ப்ளாப்களையே கொடுத்துவந்த ராம், தன்னுடைய ஆக்‌ஷன் இமேஜை (!) கைவிட்டு, ‘காதலுக்கு மரியாதை’ விஜய் கணக்காக காதல், குடும்பம், சென்டிமெண்ட் என்று களமிறங்கி இருக்கும் இந்தப் படம் 2016ன் முதல்நாளில் வெளிவந்து வசூல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சகர்கள், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘தில்வாலே துலானியா லே ஜாயங்கே’ என்று கொண்டாடுகிறார்கள். தமிழ், இந்தி மொழிகளுக்கு ரீமேக் உரிமை வாங்க போட்டாபோட்டி நடக்கிறதாம்.

தமிழில் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக புக் ஆனவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், ‘இது என்ன மாயம்’ வெளியானபிறகு என்ன மாயமோ தெரியவில்லை. கீர்த்தியின் கீர்த்தி அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இதுபோல கோலிவுட்டில் மவுசு இழந்த ஹீரோயின்களுக்கு ‘வந்தாரை வாழவைக்கும் வடுகதேசம்’தான் வேடந்தாங்கல். கீர்த்தி, தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் இந்த முதல்படமே ப்ளாக் பஸ்டர் ஹிட். அங்கு இன்னும் நான்கைந்து ஹிட்டுகளை அவர் கொடுத்தபிறகு, பல கோடிகளை கொடுத்து மீண்டும் கோலிவுட்டுக்கு கூப்பிடுவோம். ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, இலியானா என்று இந்த வரலாறுக்குதான் சமீபகாலத்திலேயே எவ்வளவு எடுத்துக்காட்டுகள்?
வழக்கமான, மிக சாதாரணமான காதல் கதைதான். அதில் எந்த சந்தேகமுமில்லை. குழந்தைப் பருவத்திலேயே ராமுக்கு கீர்த்தி மீது ஈர்ப்பு. ராமின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகு சந்திக்கிறார்கள். ராம், கீர்த்தியிடம் காதலை வெளிப்படுத்துகிறான். ‘ஐ லவ் யூ. பட், ஐ ஆம் நாட் இன் லவ் வித் யூ’ என்று வித்தியாசமாக குழப்புகிறார் அவர்.

குழம்பிப் போன ராமுக்கு, தற்செயலாக கீர்த்தியினுடைய குடும்பப் பின்புலம் தெரியவருகிறது. ஒரு மாதிரி வடகொரியா கணக்காக இரும்புக்கோட்டையாக இருக்கும் அவர்களது குடும்பத்தை இளகவைக்கிறார். கீர்த்தியை கைப்பிடிக்கிறார். தட்ஸ் ஆல்.

இந்த சாதாரண ரொமான்ஸ் ஃபேமிலி டிராமாவில் இயக்குநர் அடுக்கியிருக்கும் காட்சித் தோரணங்கள்தான் சம்திங் ஸ்பெஷல். சின்ன சின்ன ஃப்ரேமை கூட விடாமல் ஒவ்வொரு பிக்ஸெலாக செதுக்கித் தள்ளியிருக்கும் ரிச் மேக்கிங். ஒவ்வொரு காட்சியுமே புத்திசாலித்தனமான ஐடியாவால், நறுக்கான வசனங்களால் ‘அட’ போடவைக்கிறது.

“நல்லா இருக்குங்கிறது வேற. நமக்கு பிடிச்சிருக்குங்கிறது வேற” – இதுமாதிரி எளிமையான, ஆனால் சுரீர் வசனங்கள்.
படத்தின் க்ளைமேக்ஸுக்கு சற்று முன்பாக ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும் ஒரே காட்சியில் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொள்கிறார்கள் சத்யராஜும், ரோகிணியும். “பொண்ணுக்கு கல்யாணமானா பெத்தவங்களை விட்டுட்டு புகுந்த வீட்டுக்குப் போகணும்னு எவன்யா எழுதினான்? சத்தியமா சொல்றேன், அவன் பொண்ணு பெத்தவனா இருக்கமாட்டான்!” என்று சத்யராஜ் உருகும்போதும், “எல்லோரையும் மாதிரி என் புருஷனும் என்கூட நடந்துக்கணும்னுதான் ஆசை. ஆனா, அவரு என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருக்கணுங்கிறதுக்காக எவ்வளவோ இழந்திருக்காரு. அப்பா கிட்டே அவருக்கு கிடைக்காத கவுரவம், அவரோட பிள்ளைங்க கிட்டே கிடைச்சா போதும்” என்று ரோகிணி ஈரமான கண்களோடு பேசும்போதும் அதுவரை சிரித்து கும்மாளமாக படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். இவ்வளவு திறமையான இந்த கலைஞர்களை வைத்து தமிழில் இன்னமும் அம்மி கொத்திக் கொண்டிருக்கிறோமே என்கிற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது.

படம் முடியும்போது, இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சாயலையும் நம் உறவுகளில் தேடி ஒப்பிட்டு மகிழ்கிறோம். இரத்தமும் சதையுமான நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் நெருக்கமான கதையை சொல்லியிருப்பதாலேயே ‘நேனு சைலஜா’ எவரெஸ்ட் ஹிட்டை எட்டியிருக்கிறது. இது, நம் இந்திய குடும்பமுறை பாரம்பரியமாக தொடரும் வெற்றிகரமான வாழ்வியலை அடையாளப்படுத்தும் மகத்தான வெற்றியும் கூட.

1 ஜூன், 2015

காதல் + மழை + பட்டாம்பூச்சி = பிரேமம்!

The butterfly is mentally mental, so as love!

‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாதிப்பு நீடித்துக் கொண்டிருந்த 1996. நான் டீனேஜின் கடைசிக் கட்டத்தில் இருந்தபோது அண்ணனுக்கு திருமணம் ஆனது. பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் காதல் காதல் என்று கதறிக்கொண்டு சிறகடித்துக் கொண்டிருந்த பதினெட்டு வயசு.

கல்யாண மண்டபம் முழுக்க ஏதேனும் மாதுரிதீட்சித் தென்படுவாளா என்று – பர்சனாலிட்டிக்காக - கூலிங் க்ளாஸ் மாட்டிக்கொண்டு வெடவெடவென உடைத்தால் ஒடிந்துவிடுவேன் போலிருந்த உடல்வாகுடன் பைத்தியம் மாதிரி அலைந்துத் திரிந்தேன். அதற்குள்ளாகவே சில காதல்தோல்விகள் (!) ஏற்பட்டிருந்தாலும், அந்த சோகத்துக்கெல்லாம் தாடி வளர்க்க முயற்சித்து அது வளர்ந்துத் தொலைக்காத கூடுதல் சோகம் சேர்ந்துக் கொண்டதாலும், அந்த அவலத்தையெல்லாம் பீர்விட்டு மறந்திருந்ததாலும் அன்று கொஞ்சம் ப்ரெஷ்ஷாகவே இருந்ததாக ஞாபகம். லேசான ‘ஆண்ட்டி’மேனியா வேறு இருந்துத் தொலைத்தது.

மிகச்சரியாக அந்த திருமணம் நடந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து எனக்கு திருமணம் ஆனது. இடையில் அவ்வப்போது நமக்கு பழக்கப்பட்டு விட்ட சில லவ் ஃபெய்லியர்கள். ஒன்று ஊத்திக்கொண்டால், புதுசாக இன்னொன்று என்று சகஜமாகி விட்டது.

எப்படியோ காதல் என்கிற நெருப்பை அணைத்துவிட்டு கல்யாண சாகரத்தில் மூழ்கி ஓரிரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். வீட்டில் இல்லத்தரசி ஏதோ திருமண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணனுடைய கல்யாண டிவிடிதான். டொக்கு விழுந்த கன்னத்தோடு, அங்குமிங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்த கண்களோடு, லூசான ஷர்ட்டோடு லூசுமாதிரி பார்க்கவே சகிக்க முடியாத கோலத்திலிருந்த என்னை காட்டி வீட்டில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று ஒரு இடத்தை வீட்டுக்காரம்மா pause செய்தார். பாவாடைச் சட்டை அணிந்துக் கொண்டு, இரட்டைச் சடையோடு பதினொன்று, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி freeze ஆனாள். “அது நான்தான். அந்த கல்யாணத்துக்கு நானும் வந்திருக்கேன்போல” என்று அவர் சொல்ல கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன் (யெஸ், என்னுடைய மனைவி, அண்ணிக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி. அண்ணன் எங்கே சிறைபட்டாரோ, அதே சிறைச்சாலையில்தான் நானும் இப்போது ஆயுள்கைதி. முன்பு நாங்கள் பங்காளி, இப்போது சகலையும் ஆகிவிட்டோம்).

என்னுடைய பதினெட்டு வயதில் நான் சைட் அடிக்க கூட consider செய்ய முடியாத வயதிலிருந்த சிறுமி இன்று எனக்கு மனைவி. ஒருவேளை அப்போது, “பாப்பா, அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாம அப்படி ஓரமா போயி விளையாடும்மா” என்றுகூட நான் அதட்டியிருக்கக்கூடும்.

காலம், கறாரான காமெடியன்.

இதே சூழலை ஒரு சினிமாவில் பார்க்கும்போது, படைப்பாளி என்பவன் எவ்வளவு நுட்பமாக வாழ்க்கையை வாசிக்கிறான் என்று ஆச்சரியம் அள்ளுகிறது.

அழுதுப் பிழிந்து பிரிவு சோகத்தை சக்கையாக்கிப் போட்ட சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் 2015 வடிவம்தான் மலையாளப்படமான ‘ப்ரேமம்’. மலையாளப் படம் பார்த்தேன் என்று சொல்லவே ஒரு காலத்தில் மஜாவாக இருக்கும். இப்போது சொன்னால் ஜோல்னாப்பை அறிவுஜீவிக்கான இலக்கிய மதிப்பீடோடு கூடிய மரியாதை கிடைக்கிறது.

+2 படிக்கும்போது ஜோர்ஜுக்கு (ஜார்ஜ் அங்கே ஜோர்ஜ்தானே?) மேரியோடு முதல் காதல் பிறக்கிறது. அவளிடம் காதலை வெளிப்படுத்த செம காம்பெடிஷன். மேரியின் அப்பா ஹிட்லர் மாதிரி. வீட்டை சுத்தி சுத்தி வரும் பசங்களை துரத்தி துரத்தி விளாசுகிறார். அவருடைய கண்காணிப்பையும் மீறி ஒருமுறை மேரி, ஜோர்ஜிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். கவனிக்கவும். ‘காதலை’ சொல்கிறாள். காதலன் இவன் அல்ல.

அடுத்து காலேஜ் காதல். எழவு, மாணவிகளை விட்டு விட்டு லெக்சரர் மீது காதல் வந்து தொலைக்கிறது. மலர் என்கிற அந்த விரிவுரையாளர் தமிழ்ப்பெண். எனவே கனவில் ஒரு தமிழ் டூயட்டும் உண்டு. மலருக்கு ஜோர்ஜை பிடிக்கும். அது காதலா அல்லது சும்மா பிடிக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, ஒரு விபத்தின் காரணமாகவே மலருக்கு எல்லா நினைவுகளும் அழிந்துவிடுகிறது.

கதை, நிகழ்காலத்துக்கு வருகிறது. ஜோர்ஜ் இப்போது cafe நடத்தும் முதலாளி. கடந்தகால காதல்கள் கானல். செலினை பார்த்ததுமே டீனேஜ் ஜோர்ஜ் ஆகி ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறான். பழைய அனுபவங்களால் matured ஆகிவிட்டவன், நாகரிகமாக தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போதுதான் செலின் ஓர் அணுகுண்டை போடுகிறாள். ‘வர்ற சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட்’.

ஜோர்ஜுக்கும் அப்படி இப்படி எப்படியோ கல்யாணம் ஆகிறது. யாரை செய்துக் கொண்டான் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சேரன் மாதிரியே ஃபீலிங்ஸோடு நிவின்பாலி, ரசிகர்களின் இதயத்தை கீறிப் பார்த்திருக்கலாம். ஆனால், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மாதிரி நொடிக்கு நொடி வெடித்து சிரிக்க வைக்கிறார். கரைபுரண்டோடும் காமெடிதான் ‘ப்ரேமம்’ ஸ்பெஷல். ஆட்டோகிராப்பை காமெடியாக எடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். தமிழ்ப்படங்களின் தரை டிக்கெட்டு ரசிகர் போலிருக்கிறது. ‘குணா’ படம் நெடுக வருகிறது. சக்கைப்போடு போட்ட பழைய மோகன்லால் படங்களுங்கு ஆங்காங்கே tribute (‘மாஸ்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ வருவது மாதிரி) செய்யப்படுவது புத்திசாலித்தனமான யோசனை.

ஒரு காட்சி.

முந்தைய நாள் மேரியை சைட் அடிக்கப் போய், அவளது அப்பனிடம் அப்பு வாங்கி கன்னம் வீங்கிப் போய் டீக்கடையில் சோகமாக அமர்ந்திருக்கிறான் பையன் ஒருவன்.

டீக்கடை மாஸ்டர் கேட்கிறார். “கன்னத்தில் என்ன காயம்?”

“கொசு கடிச்சிடிச்சி!”

“கொசு கடிச்சா, இவ்ளோ வீங்குமா?”

“கடிச்ச கொசுவை அடிச்சதாலேதான் இப்படி ஆயிடிச்சி”

படம் முழுக்கவே இப்படிதான். ‘கடி’ ‘கடி’யென்று எஸ்.வி.சேகர், கிரேஸி மோகனையெல்லாம் பீட் செய்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினி, யுனிவர்சல் ஹீரோ கமல்ஹாசனுக்கு என்றெல்லாம் ஐந்து நிமிடத்துக்கு தொடர்ச்சியாக தேங்க்ஸ் கார்ட் போடுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது அவரது அதகளம்.

மூன்று ஹீரோயின்களில் மலர் டீச்சர்தான் டாப். சரோஜாதேவி மாதிரி கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். சில காட்சிகளில் முகப்பருவால் கன்னிப்போய் சிவந்திருக்கும் அவரது கன்னங்கள் அத்தனை அழகு. திடீரென்று ஜீன்ஸும், டீஷர்ட்டுமாக குத்தாட்டம் போடும்போது ஜோர்ஜ் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனை பேருமே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

நிவின்பாலியை பற்றி சொல்லவே வேண்டாம். சாதாரணமாகவே கலக்கி விடுவார். செமத்தியான கேரக்டர் கிடைத்தால் காட்டு, காட்டுவென்று காட்டுகிறார். அதுவும் வேட்டியை அருவாள் வீசுவது மாதிரி ஷார்ப்பாக தூக்கிக் கொண்டு மிதப்பாக நடப்பது மரண மாஸ்.

ஒவ்வொரு காதலின் போதும் மழையும், மழைக்குப் பின்னான பசுமையில் தேன் சேகரிக்கும் வண்ணத்துப் பூச்சிகளுமாய் காட்சிகள் கிறங்கடிக்கின்றன. மப்பும் மந்தாரமுமான கடவுளின் தேசத்து குளிர் அப்படியே படம் பார்க்கிறவனுக்கு ஊடுருவுவது மாதிரி பளிச் கேமிரா.

இதே படம் தமிழில் வந்திருந்தால், ‘மசாலா குப்பை’ என்று விமர்சிக்கக்கூடிய கொம்பு முளைத்த நம்மூர் விமர்சகர்கள், மலையாளத்தில் வந்திருப்பதால் மட்டுமே இதை கைப்பற்றி குறியீடுகளும், கோட்பாடுகளுமாக கொத்துக்கறி போட்டு தாலியறுத்து நம்மை கருத்து விதவையாக்குவதற்கு முன்பாக தயவுசெய்து பார்த்துவிடுங்கள். இல்லையேல், காதலுக்குள் பட்டாம்பூச்சியாய் பயணிக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

‘The second film in the history of world cinema with nothing fresh’ என்று இந்தப் படத்தை அதன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விமர்சித்தாலும் (முதல் படம், அவரது முந்தைய படமான நேரமாம்), இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்த எந்த அலுப்புமே இல்லாமல் தியேட்டரை விட்டு ப்ரெஷ்ஷாக வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஜோர்ஜையும், அவனது காதலிகளையும், கோமாளி வட்டத்து நண்பர்களையும் நீண்டகாலத்துக்கு மறக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான கமர்ஷியல் கல்ட் கிளாசிக்.

Premam : Must watch Malayalam movie!

18 ஏப்ரல், 2015

தாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா!

‘தாலியில்லா தமிழகம்’ என்கிற திராவிடர் கழகத்தின் கனவினை பிரச்சாரம் செய்ய வந்திருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. விழா வைத்து தாலி அகற்றிக் கொண்டிருக்கும் திராவிடர்களைவிட, ஆரியர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக மும்பையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

மணி சாருக்கு இது ‘கம்பேக் மூவி’ என்றெல்லாம் அவரது ரசிகர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு சொல்ல முடியாது என்றாலும், மணி சாரும் இன்னும் ரேஸில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கும் திரைப்படம். ஒருவகையில் சொல்லப்போனால் இராவணனும், கடலும் ஏற்படுத்திய சேதாரத்தில் இருந்து தப்பித்திருக்கிறார்.

கோபாலரத்தினம் என்கிற மணிரத்தினம் ஐம்பத்தி ஒன்பது வயதிலும் பத்தொன்பது வயது இளைஞனுக்காக படமெடுக்கிறார் என்பதே ஆகப்பெரிய ஆறுதல். ‘லிவிங் டூகெதர்’ குறித்து தமிழில் ஒரு படம் என்பதே கலாச்சார காவலர்களின் யுகத்தில் கொஞ்சம் துணிச்சலான முயற்சிதான். மணிசாரின் சின்ன மாமனார் கமல் சார் இதை சொந்த வாழ்க்கையிலேயே முயற்சித்துப் பார்ப்பதை துணிச்சலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

படத்தின் ப்ளஸ், முதல் காட்சியிலிருந்தே திரையில் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் ஆக்கிரமிக்கும் இளமை. கிழ போல்டுகளான மணிசாருக்கும், பி.சி.ஸ்ரீராம் சாருக்கும், அரைகிழமான ஆஸ்கர் நாயகனுக்கும் எப்படி இவ்வளவு இளமை ஆர்ட்டீஷியன் ஊற்றாக கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது என்பது ஆச்சரியமான உலகசாதனை.

இயக்குனர் மணிசாரை விட, வசனகர்த்தா மணிசார்தான் மார்க்குகள் அதிகம் பெறுகிறார். இதுமாதிரி குட்டி குட்டியான க்யூட்டான டயலாக்குகளை இருபதுகளில் இருப்பவர்கள்கூட சிந்திப்பது அசாத்தியம் என்றே தோன்றுகிறது. ‘துகில் உரிப்பியா?’ என்று பட்டாம்பூச்சியின் சிறகுகளை மாதிரியே படபடத்துக்கொண்டு நித்யாமேனன் கேட்கும்போது, சென்னையின் சூப்பர் ஏ சென்டர் ரசிகர்கள் விசிலடிக்கக் கற்றுக்கொள்ளாத தங்கள் இயலாமையை நொந்துக் கொள்கிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் சர்ச்சில் சாடை மொழியில் பேசும் மவுன டயலாக்குகள். அட.. அட.. அடடா...

‘தாரா.. த்த.. தத்தத்தா... த்தாரா த்தரா’ என்று தீம் மியூசிக்கில் தொடங்கி ‘மெண்டல் மனதில்’, லீலா சாம்சனிடம் நித்யாமேனன் பாடும் கர்நாடக தமிழிசை பாடல், குறும்பான பின்னணி இசை என்று ஆஸ்கர் வாங்கியதற்கு நியாயம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

ஸ்ரீகர்பிரசாத்தின் க்ரிஸ்பான எடிட்டிங் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று புரியாத அளவுக்கு உச்சமான தொழில் நேர்த்தி.

ஆனாலும்-

அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடுபவர் பி.சி.ஸ்ரீராம்தான். ரயில்நிலைய முதல் காட்சி தொடங்கி, மழை கொட்டும் க்ளைமேக்ஸ் வரைக்க ‘காதல் கண்மணி’ முழுக்க அவர் ராஜ்ஜியம்தான். கண்களை உறுத்தாத அமைதியான லைட்டிங்கில் முழுப்படமும் ஏற்படுத்தும் ரொமான்ஸ் மூடை உணர்கையில், இளையராஜாவுக்கு நிகரான மேதையான பி.சி. சாரை நாம் தகுந்த முறையில் கவுரவிக்கவில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.

படம் பார்க்கையில் ஓர் ஆச்சரியகரமான ஒப்பீடு தோன்றியது. ஏற்கனவே இந்த படத்தை குழந்தைப் பருவத்தில் பார்த்திருக்கிறோமோ என்கிற ஃபீலிங். இடைவேளையில் டாய்லெட்டில் பேண்ட் ஜிப்பை அவிழ்க்கும்போதுதான் பொறி பறந்தது. ‘புதுப்புது அர்த்தங்கள்’. கிட்டத்தட்ட அதுவும் ‘லிவிங் டூகெதர்’ சப்ஜெக்ட்தான். துல்கர் – நித்யா ஜோடி, ரகுமான் – சித்தாராவை நினைவுபடுத்துகிறார்கள். இளம் ஜோடியை சமப்படுத்த இங்கே பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் என்றால், பு.பு.அர்த்தங்களில் பூரணம் விசுவநாதன் – சவுகார்ஜானகி. எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியகரமான –அதே நேரம் யதேச்சையாக அமைந்த- மேட்டர், கே.பி.சாருக்கும் அந்தப் படத்தை இயக்கும்போது வயது ஐம்பத்தி ஒன்பதுதான். என்ன, ரகுமானுக்கும் சித்தாராவுக்கு அந்த படத்தில் ‘காந்தர்வ விவாகம்’ நடக்காது. மணிசார், ஓக்கே கண்மணியில் அதற்கும் ஓக்கே சொல்லியிருக்கிறார்.

துல்கர், ஜீன்களின் அறிவியல் ஆச்சரியம். அப்பாவை மாதிரியே பையன் இருப்பது சகஜம்தான். ஆனால் இப்படியா ‘ஃபிட் டூ பேப்பர்’ கமாண்ட் கொடுத்து பிரிண்ட் எடுத்தமாதிரி மம்முட்டியின் அச்சு அசலான இளமை காப்பியாக இருப்பார். தளபதி காலத்து மம்முட்டியே மீண்டும் ஜீன்ஸும், டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு நடித்தது மாதிரி விஷூவல் எஃபெக்ட்டை தருகிறார்.

சாண்டில்யனின் கதாநாயகிகள் மாதிரி (குறிப்பாக ‘ராஜதிலகம்’ மைவிழிச்செல்வி) சோமபானத்தில் திராட்சை மிதக்கும் கண்கள் நித்யா மேனனுக்கு. நுரைப்பஞ்சு மெத்தை மாதிரியான உடல்வாகு. ‘குஷி’ ஜோதிகா, ‘வாலி’ சிம்ரன், ‘அன்பே வா’ சரோஜாதேவி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதா, ‘நடிகன்’ குஷ்பூ ரேஞ்சுக்கு செமத்தியான ஃபெர்பாமன்ஸ்.

எல்லாம் சரி.

ஆனால்-

அழுத்தமேயில்லாமல் அது பாட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை. கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு போதுமான ஜஸ்டிஃபிகிஷேன்களே இல்லாமல் ‘ஜஸ்ட் லைக் தட்’டாக போய்க் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதெல்லாம் ஓக்கேதான். ஆனால் துல்கருக்கு இவர் ஏன் கண்மணியாகிறார், யாருக்கும் எளிதில் மடங்காத ஃபிகரான நித்யா தடாலென்று கசமுசா மூடுக்கு ஆளாகிறார், இருவரும் இணைந்து லிவிங் டூகெதராக வாழ என்ன எழவு நிர்ப்பந்தம் என்றெல்லாம் காட்சிகளில் விடையில்லை. துல்கர் உருவாக்கும் வீடியோ கேம் மாதிரி அது பாட்டுக்கும் எல்லாம் நடக்கிறது. ‘ஃபீல் குட்’ என்பதெல்லாம் சரிதான். சரவணபவனில் நெய் மிதக்கும் பொங்கல் சாப்பிட்டமாதிரி, காரசாரமான முரண் எதுவுமே இல்லாமல் மப்பாக படம் ஓடிக்கொண்டே இருப்பது (இத்தனைக்கும் வெறும் ரெண்டேகால் மணிநேரம்தான்) உறுத்துகிறது.

மோகன் தொட்டால் ரேவதிக்கு கம்பளிப்பூச்சி ஊறுவது மாதிரி இருந்ததற்கு பின்னால் இருந்த அழுத்தம், ‘நீ அலகா இருக்கேன்னு நெனைக்கலை’யென்று ஷாலினியிடம் ஜொள்ளு விடுவதற்கு பின்னால் மாதவனுக்கு இருந்த ரொமான்டிக் மைண்ட்செட், ‘ஓடிப்போலாமா?’ என்று நாகார்ஜூனனிடம் கிரிஜா செய்யும் குறும்பான ஃபன், கார்த்திக் வீட்டுக்கு வந்து ‘மூணுமாசம்’ என்று அலட்டும் நிரோஷா – இப்படியாக மணி சாரின் கடந்தகால வரலாற்றில் இருந்த சுவாரஸ்யம் எதுவுமே இல்லாமல் சவசவவென்றும், காமாசோமாவென்றும், எதிர்காலத்தில் நினைத்து நினைத்து உருகுகிற காட்சிகளோ, பாத்திரங்களோ இல்லாமல் காதல் கண்மணி அமைந்துவிட்டாள்.

சுஹாசினி மேடமுக்காக மவுஸ் நகர்த்தல் ஃபைனல் வெர்டிக்ட் : (இதையும் அவரது சித்தப்பா பாணியில்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது)

“படம் நல்லா இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா, நல்லா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னுதான் சொல்லுறோம்”

13 ஏப்ரல், 2015

மதிப்பீடுகளுக்கு மரியாதை

காரமான கோங்குரா சட்னி தேசம். சாதி மதம் மட்டுமல்ல, வம்ச கவுரவமும் கோலோச்சும் பிற்போக்கு நிலவுடைமை சமூகம். மலையூர் மம்பட்டியான் பாணியில் கருப்பு போர்வை போத்திக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கோடு காட்டிலும் மேட்டிலும் அலையும் நக்சல்கள் என்றொரு சர்வதேச தோற்ற மயக்கம். ரத்தம் தெறிக்க சண்டை போடுவார்கள். கலர் கலராக டிரெஸ் போட பிடிக்கும். சர்வசாதாரணமாக வாயில் வந்து விழும் பாலியல் வசவுகள். கதறக் கதற கற்பழிப்பு. சொர்ணாக்கா பாணி பெண் ரவுடிகள். விஜயசாந்தி பாணியில் சிகப்புத் துண்டை தலையில் கட்டிய பெண் போராளிகள். புரட்சிப் பாடகர் கத்தார். புழுதி பறக்க சுமோவிலோ, டொயோட்டாவிலோ சேஸிங் சீன். வெடித்து தெறிக்கும் டிரான்ஸ்ஃபார்மர். துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓட்டு பெட்டியை கடத்தும் தாதாக்கள்.

சராசரித் தெலுங்கன் எப்படியிருப்பான், தெலுங்கு நிலம் எப்படியிருக்கும் என்று யோசிக்கவே தாவூ தீருகிறது. மூளையில் நான்லீனியராக வந்து விழும் இமேஜ்கள் கொஞ்சம் டெர்ரராகதான் இருக்கிறன. அதிலும் சித்தூரில் தமிழர்கள் மீது நடந்திருக்கும் சீமாந்திர அரசின் அநியாய கொலை வன்முறைக்கு பிறகு தெலுங்கர்களை நினைத்தாலே சிங்களவர்களின் ரத்தம் வழியும் பற்களோடு கூடிய அரக்கத் தோற்றம்தான் (நன்றி : நக்கீரன் அட்டைப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலாக்கள்) நினைவுக்கு வருகிறது.

‘சன் ஆப் சத்யமூர்த்தி’ படம் பிடித்துக் காட்டும் தெலுங்கன் வேறு மாதிரியானவன்.

நவீனமானவன். ஆனால் பழைய மதிப்பீடுகள் மீது மரியாதை கொண்டவன். குடும்ப கவுரவம் காக்க வாழ்க்கையை பணயம் வைப்பவன். சுருக்கமாக சொன்னால் உள்ளுக்குள் கொல்டிதன்மை நிரம்பிய அல்ட்ரா மாடர்ன் காஸ்மோபோலிட்டன் இண்டியன்.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன். இவருடைய தாத்தாதான் சிரஞ்சீவியின் மாமனார். தெலுங்கின் செல்வாக்கான குடும்பத்து வாரிசுதான். பார்ன் வித் ப்ளாட்டினம் ஸ்பூன். எனவே குடும்பப் பெருமை பேசும் படத்தில் இவர் ஹீரோ என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஃபெவிக்விக் மாதிரி பச்சக்கென்று கேரக்டரில் ஸ்ட்ராங்காக ஒட்டிக் கொள்கிறார்.

அல்லு அர்ஜூன் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்தின் பெயர் விராஜ் ஆனந்த். அப்பா சத்தியமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) கோடிஸ்வரர். தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு உதவும் கோமான். திடீரென்று ஒரு விபத்தில் சத்தியமூர்த்தி மறைந்துவிடுகிறார்.

அவர் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களின் பங்கு, மார்க்கெட்டில் சடசடவென்று சரிகிறது. முதலீட்டாளர்களுக்கு பயங்கர நஷ்டம். தன்னுடைய அப்பாவை நம்பி முதலீடு செய்தவர்கள் நஷ்டமடையக் கூடாது என்று, சொந்த சொத்தை விற்று அந்த பங்குகளை தானே வாங்குகிறான் விராஜ்.

வெறும் பேப்பர்களாகிவிட்ட பங்குகளை முன்னூறு கோடி ரூபாயை கொட்டி வாங்கும் அவனது முடிவை பார்த்தவர்கள் பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள். சொத்துகளை காத்துக்கொள்ள சால்வன்ஸி கொடுத்துவிட்டு போகலாம், கார்ப்பரேட் யுகத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்றெல்லாம் யோசனை சொல்கிறார்கள். ஒரே ஒருவன்கூட தன்னுடைய அப்பாவால் நஷ்டமடைந்ததாக சொல்லக்கூடாது என்று மறுக்கிறான். அப்பாவே இல்லை, அவருடைய பெயரை காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பவர்களிடம் ‘வேல்யூஸின் வேல்யூ’ குறித்து பேசுகிறான் விராஜ்.

பில்லியனர் குடும்பம் ஒரே நாளில் கீழ்நடுத்தர நிலைக்கு வருகிறது. பங்களா இல்லை. கார் இல்லை. கணவனே உலகம் என்றிருந்த அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அப்பா இறந்ததில் இருந்து லேசான மனநிலைக்கு ஆளாகிவிட்ட அண்ணன். இந்த நிலையில் இந்த குடும்பத்தை விட்டு விலகமுடியாது என்று கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள தயாராகும் கோடிஸ்வர அண்ணி. பச்சைக் குழந்தையான அண்ணன் மகளுக்கு நிலைமையை புரியவைக்க முடியவில்லை. விராஜ், இழந்ததை மீட்டானா என்பதுதான் மீதி கதை. இடையில் ‘உன் அப்பாவால் எனக்கு நஷ்டம்’ என்று சொன்னவரின் பிரச்சினையை உயிரை பணயம் வைத்து தீர்க்கிறான்.

அண்ணாமலை, படையப்பா மாதிரி ஃபேண்டஸியாக எடுக்கப்பட வேண்டிய படத்தை முடிந்தவரை ரியலிஸ்டிக்காக அமைத்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். சுயநலத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் இடையேயான விவாதம் படம் முழுக்க ராஜேந்திர பிரசாத் பாத்திரத்துக்கும், அல்லு அர்ஜூன் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு தரும் விராஜ், தன்னுடைய எதிரிகளையும் தன்னை கேலி பேசியவர்களையும் கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை முறையில் வெல்கிறான். இறுதியில் காற்று அவன் பக்கம் அடிக்கிறது. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும் என்கிற ஃபீல்குட் மெசேஜ்தான்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹீரோயின் சமந்தாவை எந்தவித நெருடலுமின்றி ஹீரோ ஏற்றுக் கொள்வதாக ஒரு போர்ஷன். கமல்ஹாசன், வாசிம் அக்ரம் போன்றோர் இளமையிலேயே அந்நோயை எதிர்கொண்டு அவரவர் ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டியதே இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் என்று இயக்குனர் சொல்கிறார். த்ரிவிக்ரம் சீனிவாசை புதிய தலைமுறைக்கோ அல்லது பாலம் பத்திரிகைக்கோ கட்டுரை எழுத சொல்லவேண்டும். அந்தளவுக்கு அநியாயத்துக்கு நல்லவர்.

இம்மாதிரி படம் முழுக்கவே ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ ‘நான்தான் முகேஷ்’ பாணியில் ஒவ்வொரு கேரக்டரிலும் ஒவ்வொரு சீனிலும் ஏதோ ஒரு மெசேஜ் அதுவாக ஆட்டோமேடிக்காக வந்து விழுந்துக் கொண்டே இருக்கிறது. 165 நிமிஷத்தில் எப்படிப்பட்ட வில்லனையும் உத்தமனாக்கிவிடும் அகிம்சைவெறியோடு உழைத்திருக்கிறார்கள்.

படம் தொடங்கி பத்தே நிமிடத்தில் இறந்துவிடும் பிரகாஷ்ராஜ் பாத்திரம், க்ளைமேக்ஸ் வரை காட்சிக்கு காட்சி முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருப்பதைப் போன்ற புத்திசாலித்தனமான திரைக்கதை. படம் நெடுக ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். ஆனால், எல்லாமே பாசிட்டிவ்வான கேரக்டர்கள்தான். தமிழில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டி தேய்ந்த அப்பாவின் கவுரவத்தை மகன் காப்பது என்கிற அரதப்பழசான ரீல்தான். ஆனால் அதையே ஒழுங்காக ஸ்க்ரிப்ட் ஆக்கி, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற E வடிவத்துக்கு மாற்றி இருப்பதில்தான் தெலுங்கர்களின் சாமர்த்தியம் வெற்றியை எட்டியிருக்கிறது. தொண்ணூறுகளின் விக்ரமன் காலத்துக்கேற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வந்திருந்தால் இன்னேரம் சன் ஆஃப் சத்யமூர்த்தி மாதிரி அதிரடி வெற்றியை ருசித்துக் கொண்டிருப்பார்.

சன் ஆஃப் சத்யமூர்த்தி : ஃபேமிலி பிக்னிக்!