30 டிசம்பர், 2013

ஆ.ராசா எனக்கு அக்கா மகன்!

வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி பொழைக்கிறேன்” கணீரென கானாவோடு கடைக்குள் நுழைந்தார் அந்த விசிலவன்.

கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார். இடையில் மட்டும் ஜட்டியா அல்லது டவுசரா என்று இனங்கண்டு கொள்ள முடியாத உடை. குள்ளமென்று சொல்ல முடியாது. நடுத்தரமான உயரம். நல்ல கருப்பு. எண்ணெய் காணாத தலை.

எங்களுக்கு அருகில் வந்து அமர்ந்தார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஓடு ராஜா” வாத்யார் பாட்டை அச்சு அசலான டி.எம்.எஸ். குரலில் பாட ஆரம்பித்தார். “அந்த காலத்துலேயே என்னாமா பாடியிருக்காரு பாரு. அசீத், விசய்க்கெல்லாம் இப்படி பாடுறதுக்கு வக்கிருக்கா?” என்று ஆரம்பித்தார்.

“நல்லா பாட்டுலாம் பாடுவேன். டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சிதம்பரம் ஜெயராமன்னு எல்லாரு வாய்ஸும் நம்ம தொண்டைலே வரும்” சொல்லிவிட்டு “வாராய், நீ வாராய்” என்று லேசாக நாக்கை மடக்கி, சுத்தமான ராகத்தில் பாடினார்.

இடையில், “மாஸ்டர் ஒரு டீ!”

“பழைய பாக்கி என்னாச்சி?”

“டேய், வாத்யார் இல்லைன்னா மலையாளத்தானுங்கள்லாம் இங்கே வந்து இந்த அதட்டல் போடுவீங்களா? ஒழுங்கா டீயை கொடுர்றா. எஸ்.ஐ. வந்ததுமே எல்லாத்தையும் செட்டில் பண்ணிடறேன்”

“அதெல்லாம் கிடையாது. பழசுக்கு பதில் சொல்லிட்டு, புதுசா டீ கேளு” மாஸ்டரும் விடுவதாக இல்லை. சிவராமன் தன் கணக்கில் அவருக்கு ஒரு டீ சொன்னார்.

“எங்கே வேலை பார்க்குறீங்க? இங்கன உங்களையெல்லாம் பார்த்ததே இல்லையே?” என்று பேச ஆரம்பித்தார்.

“என்னை இங்கே எல்லாரும் எம்.ஜி.யாருன்னு கூப்பிடுவாங்க. வாத்யார்னு அவ்ளோ வெறி. ஒரு பாட்டு விடாம மனப்பாடமா பாடுவேன். பாடிக்காட்டறேன் பார். இந்த பாட்டு வந்தப்போ, நீங்கள்லாம் அம்மாவோட வவுத்துக்குள்ளே கூட இருந்திருக்க மாட்டீங்க....”

“அச்..ச்..சம் என்ப்பது மடையடாஆஆ.... அஞ்சாமை திராவிடர் உடமையடா.... ஆஆஆஅ... அஞ்சாமை திராவிடர் உடமையடா... டொக்.. டொக்.. டொக்.. டொக்...”

டீ வந்ததுமே கல்ப்பாக அடித்தார். மந்திரிகுமாரி டயலாக் ஒன்றை அப்படியே ஏற்ற, இறக்கத்தோடு படித்தார். “கலிஞ்சரு மாதிரி எழுதுறதுக்கு எவன் இருக்கான்? தமிழு.. தமிழு.. அருவி.. சொற்பொழிவு... பொன்முடி பார்த்திருக்கியா? பாவேந்தர் வசனம். அப்படியே காதல் கொட்டும்” அந்தப் படத்திலிருந்தும் ஒரு டயலாக்கை எடுத்துவிட்டார்.

“படம்னா படம்.. அது ரத்தக்கண்ணீருதான். அடியே காந்தா...” எம்.ஆர்.ராதா வாய்ஸில் பேசினார்.

“சினிமான்னா அம்புட்டு ஆசை. வாத்யாருன்னா இவ்ளோ (கைகளை அகல விரித்துக்காட்டி) உசுரு. அதாலேதான் அப்பவே மெட்ராசுக்கு வந்தேன். ரிச்சா ஓட்டுனேன். எழுபத்திரெண்டிலே கலைஞ்சர் ஃப்ரீயா ரிக்ச்சா கொடுத்தாரு. வாத்யாரு ரெயின்கோட், ஷூவெல்லாம் வாங்கித் தந்தாரு. லவ் மேரேஜி. வைஃபுக்கு நடக்க வராது. விதவைங்க, ஊனமுற்ற பெண்களை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நல்லா இருக்குற இளைஞர்கள் தயாரா இருக்கணும்னு பெரியார் பேசினாரு. நான் அவரை ஃபாலோ பண்ணேன். நாந்தான் இப்படியிருக்கேன். என் பசங்க நல்லாதான் இருக்காங்க. வியாசர்பாடிலே வீடு. வீடு கிடையாது குடிசை”

வரிசைக்கிரமமாக இல்லாமல் விட்டு விட்டு பேசினார். இடையிடையில் பாடத்தொடங்கி விட்டார். “தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்.... வாத்யார் படத்துலே சூப்பரா கார் ஓட்டுவார். ஒரு சீக்ரட் சொல்றேன் கேட்டுக்கோ. நெஜத்துலே அவரு கார் ஓட்டுனதே இல்லை”

“இன்னொரு டீ சாப்புடலாமா?” சிவராமன் கேட்டார்.

“வாணாம். நா சொல்றதை கேளு. ஆ.ராசா தெரியுமா? அப்படி சொன்னா தெரியாது. ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னு சொன்னாதான் தெரியும். என் அக்கா மவன்தான். வேணும்னா யாரையா கேட்டு பாரு. நா சொல்றேன். என் மருமவன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது. அவ்ளோ பணம் சம்பாதிக்கிற ‘தெரவசு’ இருந்தா, ராசாவோட சொந்த பந்தமெல்லாம் ஏன் இப்படி இருக்கப் போறோம்? அநியாயமா பலி போட்டுட்டானுங்க”

எனக்கு ஆச்சரியம் அளவற்றுப் போனது. வெயிட்டான ஒரு ‘ஸ்டோரி’ ரெடியென்று பரபரப்பானேன். திடீரென்று ஏதோ ஒரு அறச்சிக்கல். இவரைப் போய் எதற்கு எக்ஸிபிஷன் ஆக்க வேண்டும் என்று தோன்றியது.

“இப்போ என்னண்ணா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

“தோ.. இந்த ஸ்டேஷனுலேதான் வேலை பார்க்குறேன். பெருக்குறது, துடைக்கிறதுலே தொடங்கி எல்லா வேலையும் நான்தான். அய்யாமாருங்க டெய்லி துட்டு கொடுத்துடுவாங்க. ‘சரக்கு’ செலவு போவ மீதி காசு வூட்டுக்கு. இந்த ஸ்டேசனுக்கு வராத வி.ஐ.பி.ங்களே இல்லை. ஐஜிக்கெல்லாம் என்னை நல்லாத் தெரியும். வயசாயிடிச்சி. எனக்கு இன்னா வயசிருக்கும்னு நெனைக்கிறேன். எழுவது கிராஸ் பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன். ரிச்சா ஓட்டமுடியாது. ஆட்டோலாம் வந்ததுக்கப்புறம் ரிக்ச்சாவுக்கு கஸ்டமரும் கிடைக்கிறதில்லே”

சொல்லிவிட்டு மவுனமாக இருந்தார். நாங்களும் எதுவும் பேசவில்லை. மவுனத்தை உடைக்கும் விதமாக “காலங்களில் அவள் வசந்தம்” என்று பி.பி.எஸ்.ஸை பிரதியெடுத்து பாட ஆரம்பித்தார்.

“உலகத்துலேயே சந்தோஷமான மனுஷனை எங்காவது பார்த்திருக்கியா? இப்போ பார்த்துட்டே. நாந்தான் அது. ஸ்டேஷன்லே தேடுவாங்க. கெளம்புறேன். டீ வாங்கிக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்” பகபகவென சிரித்தவாறே சொல்லிவிட்டு கிளம்பினார்.

“அசல் திராவிடன்” என்றார் சிவராமன்.

பிற்பாடு இவரைப் பற்றி வெளியில் விசாரித்தேன். எங்கள் அலுவலக வாசலில் டீக்கடை வைத்திருப்பவர் பெரம்பலூருக்கு பக்கத்தில் குன்னத்தூர்காரர். அதிமுககாரர். அண்ணன் ஆ.ராசா பற்றி நிறைய பேசுவார். “நீ பார்த்தது அ.ராசாவோட தாய்மாமன்தான்னு நெனைக்கிறேன். மயிலாப்பூர் ஸ்டேஷனில்தான் இருக்காரு. வியாசர்பாடி ஊடுன்னு சொன்னதெல்லாம் கரெக்டுதான்” என்றார் அவர்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் முகம்கூட சரியாக நினைவில்லை. ஆனால் இந்த ஆண்டு நான் சந்தித்த மனிதர்களிலேயே சிறந்த மனிதர் அவர்தான்.

23 டிசம்பர், 2013

என்றென்றும் பிரியாணி

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் திரைவிமர்சனம் எழுதும் ‘எந்தரோ மாகானுபவலு’ யாரென்று தெரியவில்லை. உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் வரும் விமர்சனங்களைப் போலவே இலக்கியத் தரத்தோடு எழுதுகிறார். மொக்கை, சுமார் என்று இந்து எழுதும் விமர்சனங்களை வாசிக்கும் மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டு “அப்படின்னா படம் நல்லாதான் இருக்கும்” என்று அரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள். நேற்று இரவுக் காட்சிக்கு மடிப்பாக்கம் குமரனில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ ரேஞ்சில் அலை அலையாக, குடும்பம் குடும்பமாக ‘பிரியாணி’க்கு கூட்டம்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா?’, ‘நீதானே என் பொன் வசந்தம்?’ வரிசையில் மற்றுமொரு ஃபீல்குட் மூவி ‘என்றென்றும் புன்னகை’. சினிமா சமூகத்துக்கு தீமை என்று பிரச்சாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் தயாரிப்பு. யெஸ், படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனின் தந்தை வேறு யாருமல்ல. அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணிதான். ஒரு அரசியல் வாரிசு தயாரித்திருக்கும் இப்படத்தை இன்னொரு வாரிசான ‘ரெட் ஜெயண்ட்’ உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய சூழலில் திமுகவும், பாமகவும் அரசியல் களத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் திரையரங்குகளில் கூட்டணி அமைத்து வெற்றிக்கொடி ஏற்றுகிறார்கள்.

ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒரு முறைதான் தமிழில் படங்கள் ஹிட் ஆகுமென்ற நிலைமை மாறியிருக்கிறது. டிசம்பர் 20 தமிழ் சினிமாவுக்கு ஆடி அமாவாசை. ஒரே நாளில் ரெண்டு ஹிட்டு.

தமிழ் சினிமாவை அழிக்க வந்த கோடரிக்காம்பு திருட்டு டிவிடி கூட அல்ல. சென்சார் போர்ட்தான். இவர்கள் தணிக்கை செய்கிறார்களா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களா என்றே தெரியவில்லை. பிரியாணியில் “இந்தப் பாட்டுக்குதாண்டா எல்லாரும் காத்திக்கிட்டிருக்காங்க” என்கிற கார்த்தியின் அறிமுகத்தோடு வரும் பாட்டு ‘மிஸ்ஸிஸிப்பி’. அந்தப் பாட்டை சேட்டிலைட் சேனல்களில் ‘கட்’ செய்துவிட்டுதான் ஒளிபரப்புவோம் என்று தயாரிப்பாளர்களிடம் வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டுதான் ‘யூ/ஏ’ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். பாட்டு மோசமென்று தணிக்கைத்துறை கருதினால், அதை ‘கட்’ செய்ய சொல்லி தொலைக்க வேண்டியதுதானே? அதென்ன அதை திரையரங்குகளில் ஒளிபரப்பலாம். டிவிக்களில் ஒளிபரப்பக்கூடாது என்று வெட்டி நிபந்தனை? தமிழ்ப் படங்களை தணிக்கை செய்பவர்கள் இந்தி, தெலுங்குப் படங்களையெல்லாம் பார்க்கிறார்களா இல்லையா? தமிழ் திரையுலகினர் முதலில் போராடவேண்டியது ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு’ என்று செயல்படும் தணிக்கைத்துறையினரின் போக்கை எதிர்த்துதான்.

வருட இறுதியில் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் பைக் டோக்கன் போடுகிறவரும், கேண்டீன் விற்பனையாளரும் தொடர்ச்சியாக ‘பிஸி’யாகவே இருக்கிறார்கள். தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகையென்று வரிசையாக செம கல்லா. போதாக்குறைக்கு ‘தூம்-3’யின் தமிழ் டப்பிங் வேறு அதிரிபுதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் வருட தொடக்கத்திலேயே ‘வீரம்’, ‘ஜில்லா’வென்று உத்தரவாதமான வசூல் சுனாமி. கங்கிராஜுலேஷன்ஸ் தமிழ் சினிமா!
இணைய சம்பிரதாயப்படி “பிரியாணியில் பீஸ் இல்லை” என்று வழக்கம்போல இணைய விமர்சகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் மொக்கையான ‘வேர்ட்ப்ளே’ ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பாவம் அறிவுக் குருடர்கள். மாயாவாக வரும் மண்டி தாக்கரின் மெகா சைஸ் செஸ்ட் பீஸும், லெக் பீஸும் அவர்களது கண்களுக்கு தெரியவேயில்லை. ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’வுக்கு பிறகு ரசிகர்களுக்கு சிறப்பான எழுச்சி, புரட்சி.

கதை எழுதுபவர்கள் முதல் வரியிலேயே கதையை துவக்கிவிட வேண்டும் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவின் அறிவுரை. ‘பிரியாணி’ பர்ஸ்ட் ஃப்ரேமிலேயே தொடங்கிவிடுகிறது. பின்னர் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக கொஞ்சம் ‘ஸ்லோ’ செய்தாலும், விரைவாகவே டாப் கீர் போட்டு விரைகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

ஆரம்பத்தில் இது ஒரு காமெடி கதையென்கிற தோற்றத்தைத் தந்தாலும், போகப்போக ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவலுக்கான அத்தனை ‘திடுக்’ திருப்பங்களோடும் த்ரில்லிங்காக பயணிக்கிறது. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய நடிகரான நாசரை எவ்வளவு பாடு படுத்தவேண்டுமோ, அவ்வளவு பாடு படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவரை ப்ரிட்ஜுக்குள் பிணமாக முடக்கியதில் தொடங்கி, பிரேம்ஜி அமரனை இமிடேட் செய்து நடிக்கவைப்பதென்று அராஜகம், அதகளம்.

எப்படியோ கார்த்திக்கும் ஒரு மாமாங்கம் கழித்து சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஹிட். மங்காத்தா மாதிரி இல்லையென்று குறைப்பட்டுக் கொள்கிறவர்கள், ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். மங்காத்தாவில் ஹீரோ அஜித். யுவன்ஷங்கர் ராஜாவின் நூறாவது படமென்று சொல்லிக் கொள்ள பின்னணி இசையிலோ, பாடல்களிலோ சாட்சியங்கள் எதுவுமில்லை. அறிமுகப் படத்திலேயே இதைவிட சிறப்பான இசையை தந்தவர் யுவன். டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை டைட்டான பக்கா எண்டெர்டெயினர்.
ஐ.அஹமத் மீடியாவில் முக்கியமான ஆள். டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளில் நல்ல அனுபவம். பண்பலை வானொலியான ரேடியோ சிட்டியை தமிழகத்தில் நிறுவியவர். ‘திங் எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் பார்ட்னர். யூடிவி மாதிரி பெரிய நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராக இருந்தவர்.

எல்லோரைப் போலவும் இவருக்கும் சினிமா ஆசை. ‘வாமனன்’ என்கிற படத்தை இயக்கினார். “தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ்” என்று இப்படத்தைதான் ஹீரோ ஜெய் முன்பு ஒருமுறை சொல்லி, அவரது மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். நல்ல மேக்கிங் என்று வாமனன் பெயர் வாங்கியிருந்தாலும், கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பவில்லை. அந்த குறையைப் போக்க ‘என்றென்றும் புன்னகை’ எடுத்திருக்கிறார்.

பானுமதி, சாவித்ரி, குஷ்பு, சிம்ரன் வரிசையில் த்ரிஷாவும் ஏன் இடம்பெறுகிறார் என்கிற கேள்விக்கு விடை இப்படத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஃபீல்டில் இருந்தாலும் அந்த மூஞ்சூறு முகத்தில்தான் இன்னமும் எவ்வளவு அழகு, இளமை, உணர்ச்சிகள். நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்ட ஜீவாவேகூட காம்பினேஷன் காட்சிகளில் த்ரிஷாவிடம் படுதோல்வி அடைகிறார்.

ஜீவாதான் ஹீரோ. ஆனால் ஹீரோக்குரிய இலக்கணங்கள் எதுவும் அவரிடமில்லை. வாழ்க்கை குறித்த எதிர்மறையான நம்பிக்கை. பெண்கள் என்றாலே பேய்கள் எனும் அவநம்பிக்கை. அளவுக்கதிகமான ஈகோ. கட்டுக்கடங்காத திமிர் என்று முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். ‘sorry’ என்கிற வார்த்தையை உச்சரிக்கவே மாட்டேன் என்று வீம்பு. படத்தின் எண்ட் கார்ட் போடும்போது ‘ஐ லவ் யூ’ சொல்லுவதில் மட்டுமே சமரசமென்று தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய பாத்திரப் படைப்பு. ஜீவாவின் கேரியரில் ஒரு முக்கியமான படம்.

சமீபமாக நொண்டி அடித்துக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். பாடல்களில் இளமையும், இனிமையும் தாலாட்டுகிறது. போலவே சந்தானமும். “எங்கியாவது லேடீஸ் செருப்பைப் பார்த்தாகூட ஏறிடுவான்” மாதிரி பச்சையான டயலாக்குகள் இருந்தாலும், அது ஆபாசமாக தெரியாத அளவுக்கு சிறப்பான படமாக்கம். கிரேட் ஷோ. வாழ்த்துகள் அஹமத்!

20 டிசம்பர், 2013

பாக்கெட் நாவல் அசோகனுக்கு பாராட்டு விழா


17 டிசம்பர், 2013

கர்ணனோடு நாற்பது வாரங்கள்

ஜனவரி 1, 2013. அண்ணன் சிவராமனும், நண்பர் விஸ்வாவும் சோளிங்கர் மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “குங்குமத்துலே ஒரு தொடர் எழுதணும். கரு சிக்கவே மாட்டேங்குது” என்று கொஞ்சநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார் சிவராமன். அன்று காமிக்ஸ், அரசியல், சமூகம், சொந்த வாழ்க்கை, காதல், சினிமாவென்று கலந்துகட்டி மனசுவிட்டு பேசினோம்.
விஸ்வா ஏதோ ஒரு மொக்கை இந்திப்படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். “படம் பெருசா போகலை. ஆனா நல்ல ஐடியா” என்றார். அந்த ஐடியாவை அவர் சொன்னதுமே, சிவராமன் பிடித்துக் கொண்டார். “இந்த லைனை நான் கதை எழுத எடுத்துக்கட்டுமா?” என்று விஸ்வாவிடம் அனுமதி கேட்டார். “எங்கிட்டே ஏன் சார் கேட்குறீங்க. நானா படம் எடுத்தேன்” என்று விஸ்வா ஜோக் அடித்தார்.
கர்ணனின் கவசம் பிறந்தது.
ஆரம்பத்தில் எனக்கு இந்த டைட்டிலில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. ‘கர்ண கவசம்’தான் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘னின்’ தேவையில்லாமல் உறுத்திக் கொண்டிருப்பதாக தோன்றியது. ஆனால் போகப்போக இந்த டைட்டிலே சிறப்பானதாக இருப்பதாக பட்டது.
மயிலாப்பூர் தினகரன் அலுவலக வாசலில் இருக்கும் டீக்கடைதான் டிஸ்கஷன் ரூம். நண்பர் நரேனும், நானும் துணை இயக்குனர்கள் மாதிரி சிவராமனோடு பேசிக்கொண்டிருப்போம். கதை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படி நகரவேண்டும், வசனங்கள் எப்படி அமையவேண்டும் என்று ஒரு பக்காவான சினிமாவுக்கு ப்ளான் போட்டோம்.
உண்மையில் நாங்கள் திட்டமிட்டிருந்ததில் ஐம்பது சதவிகிதம் கூட கர்ணனின் கவசமாக வரவில்லை. தண்டகாரண்யா, நக்சல்பாரிகள் எல்லாம் கதையில் பிரதானமாக வருவதை போல ஆரம்பகால திட்டம். பாரதத்தின் பரம்பரைச் சொத்தை அபகரிக்க வெளிநாட்டு சதி என்பதுபோலெல்லாம் இண்டர்நேஷனல் லெவலில் டிஸ்கஷன் செய்தோம். கதை தொடங்கி, அதன் போக்கில் ஓடிவிட்டது. முதலில் நாங்கள் பேசிய லைனையே கூட மீண்டும் சிவராமன் எழுதலாம்.
கதையில் வரும் களத்துக்காக சில இடங்களுக்கு லொக்கேஷனை நேரில் சென்று பார்க்க விரும்பினோம். துரதிருஷ்டவசமாக முடியவில்லை. காஞ்சிபுரம் மட்டும் போய், யாத்ரிகர்கள் அவ்வளவாக அறியாத ஜீனகாஞ்சியில் கள ஆய்வு செய்தோம். கைலாசநாதர் கோயிலில் நிறைய நேரம் செலவிட்டோம்.
அசிஸ்டண்ட் டைரக்டர் போல அசிஸ்டண்ட் ரைட்டராக பணிபுரிந்த இந்த நாற்பது வாரங்கள் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலக்கட்டம். சிலிர்ப்பான நாட்கள். ஒரு வேளை இந்த வாய்ப்பு எனக்கு சில வருடங்களுக்கு முன்பாக கிடைத்திருந்தால், இந்நேரம் நானும் நாலு பேர் பேசக்கூடிய நான்கு நாவல்களை எழுதியிருக்க முடியும். ஏற்கனவே எழுதிய அழிக்கப் பிறந்தவனை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும். வேறு சில முக்கியமான எழுத்தாளர்களிடமும் இதுமாதிரி அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று வாய்ப்பு கேட்க வேண்டும். கதையென்று எதையாவது கீபோர்டில் தட்டும்போது, கொஞ்சம் அச்சமாக இருக்கும். இப்போது 2014ல் உருப்படியாக ஒரு நாவல் எழுதிவிட முடியுமென்று தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.
திங்கள் மதியம் சாப்டர் மெயிலுக்கு வரும். வாசித்துவிட்டு உடனடியாக போனில் நிறை, குறைகளை அலசுவோம். நான் குறிப்பாக ‘கண்டினியூட்டி’ கவனித்துக் கொண்டிருந்தேன். கதையின் ஆரம்ப நாட்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியும், பாத்திரங்களின் பெயர்களும் எதுவும் மாறிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இல்லாவிட்டால் வாசகர் கடிதங்களில் பல்லிளித்துவிடும். ஐந்தாவது சாப்டரில் ஆதித்த கரிகாலனாக இருந்தவர், முப்பத்தியெட்டாவது சாப்டரில் ஆதித்த‘க்’ கரிகாலனாக மாறிவிடுவார். இதையெல்லாம் மிகக்கவனமாக பழைய சாப்டர்களை ‘ரெஃபர்’ செய்து திருத்த வேண்டும்.
ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘எப்படி கதை எழுதுவது?’ நூலை நிறைய பேர் வாசித்திருக்கலாம். ‘கர்ணனின் கவசம்’ முழுக்க முழுக்க அந்த நூல் அறிவுறுத்தும் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாற்பது வாரங்களும் சிவராமன் மிக ரிலாக்ஸாகவே இருந்தார். ஞாயிறு முழுக்க யோசிப்பதை, திங்கள் காலையில் எழுதிவிடுவார். அத்தியாயத்துக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை வார்த்தைகள் இருக்கும். ஓவியருக்கு முன்கூட்டியே வரப்போகும் அத்தியாயத்தில் இருந்து ஒரு காட்சியை சொல்லிவிடுவார்.
தொடர் வந்துக்கொண்டிருந்த கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று நிறைய படங்கள் பார்த்தோம். கர்ணனின் கவசத்தில் குறைந்தபட்சம் பத்து படங்களின் பாதிப்பாவது இருக்கிறது. ‘கிராவிட்டி’ படத்தின் ஒரு காட்சிகூட கதையில் வருகிறது. அவ்வளவு ஈஸியாக யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், டிவி நிகழ்ச்சிகள், செய்திகள் என்று சமகால சங்கதிகள் சகலத்தின் தாக்கமும் கதையில் வெளிப்படுகிறது.
வாயால் எவ்வளவு வேண்டுமானாலும் வடை சுடலாம். ஆனால் தொழில் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. அசாத்திய பொறுமையும், கடுமையான உழைப்பும் அவசியம். எப்படி காட்சிகளை யோசிப்பது, அவற்றை எப்படி கதைக்குள் பொருத்தமான இடத்தில் செருகுவது என்று ஏராளமான எழுத்து நுட்பங்களை பிராக்டிக்கலாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்த அண்ணன் சிவராமனுக்கும், உடன் பணியாற்றிய தோழர் நரேனுக்கும் நாற்பது வாரங்கள் முடிந்த நிலையில் நெகிழ்ச்சியோடு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தொடர் தொடர்பாக பேசும் இடங்களில் எல்லாம் தவறாமல் என்னையும், நரேனையும் மறக்காமல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிவராமன். அது அவருடைய பெருந்தன்மை. எங்கள் மீதான அன்பு. உண்மையில் நாங்கள் அணில்கள். பாலம் அமைத்து லங்காவை வென்றவர் அவர்தான். இந்நூலுக்கு உரிய பெருமை முழுக்க முழுக்க அவரைதான் சாரும்.


இன்னும் சில நாட்களில் ‘கர்ணனின் கவசம்’ தடிமனான நூலாக, சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. நானும் பணியாற்றினேன் என்பதற்காக அல்ல. நாற்பது வாரங்கள் தவறாமல் வாசித்த வாசகனாக சொல்கிறேன். இந்த கதை உங்களுக்கு தரப்போவது இதுவரை நீங்கள் அனுபவிக்காத அனுபவத்தை. வரலாறு ஒரு பாத்திரமாக உங்களையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் அதிசயத்தை உணர்வீர்கள். புராண களத்தில் நீங்கள் அறிந்திருக்கும் புகழ்பெற்ற பாத்திரங்களோடு தோளோடு தோள் உரசி நடப்பீர்கள். குறிப்பாக, ஹாரிபாட்டர் மாதிரியெல்லாம் தமிழில் யாரு சார் எழுதறாங்க என்று அலுத்துக்கொள்ளும் ‘என்னத்த கன்னய்யா’ வாசகர்கள், தயவுசெய்து ஒருமுறை ‘கர்ணனின் கவசம்’ நூலை தவறாமல் வாசியுங்கள்.

’கர்ணனின் கவசம்’ தொடங்கியபோது எழுதிய பதிவை வாசிக்க இங்கே க்ளிக்குங்கள்...

16 டிசம்பர், 2013

பத்ரியின் அழும்பு

‘தமிழ் ஊடகங்களின் அழும்பு’ என்று பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) அருமையாக எழுதியிருக்கிறார். காமன்மேனாக அதை வாசித்ததுமே எனக்குள்ளும் எரிமலை வெடித்தது. ஆனால், இதை பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) எழுதியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத்தை தருகிறது. ஊடகங்கள் எப்படி இயங்குகிறது என்பதின் இன்னொரு பக்கத்தையும் அறிந்தவர் அவர். என்னைப் போன்ற ஏராளமான ஊடகத் தொழிலாளிகளோடு நெருக்கமாக பேசக்கூடியவர்.

க்ரிக் இன்ஃபோ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் அவர். ‘லைவ்’வில் தங்களுடைய ‘லோகோ’ தெரியவேண்டும் என்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு கோடி செலவழிக்கிறது என்பது பத்ரிக்கு (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) தெரியாமல் இருக்காது. Branding குறித்த பரவலான அறிவு அவருக்கு இருக்கிறது. நான் கிழக்குக்காக எழுதிய புத்தகமான ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலை மிகச்சிறப்பாக எடிட் செய்தவரே அவர்தான்.

மேலும் அவரே ‘ஆழம்’ என்றொரு பத்திரிகையையும் நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான புத்தகங்களை ‘நியூ ஹாரிசன் மீடியா’ குழுமத்தின் சார்பாக பதிப்பித்த பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), அப்புத்தகங்களின் பின்னட்டையில் எழுத்தாளர்களுக்கு தரும் அறிமுகத்தின்போது, எழுத்தாளர்கள் பணியாற்றும், நடத்தும் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து பதிப்பித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) குறிப்பிட்டிருக்கும் விஷயம் நிகழ்ந்தது குங்குமம் தோழி பத்திரிகையில். பத்ரியின் (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) சட்டையில் இருந்த கிழக்கு லோகோவை அழிக்கச் சொல்லி நிச்சயமாக தினகரன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ரமேஷ் சொல்லியிருக்க மாட்டார். தோழியின் ஆசிரியரான வள்ளிதாசனுக்கு, பத்ரியின்  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) சட்டையில் இருந்த லோகோ பற்றி தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. உண்மையில் பத்திரிகையின் மேல்மட்டத்தில் இயங்குபவர்களுக்கு இதெல்லாம் ‘சில்லி’ மேட்டர். அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) இப்படி ஒரு விதிமுறையை விதித்திருக்கிறார் என்று என்னைப் போன்ற நடுவாந்திர பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் கூட இதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் பேசமுடியாது. இம்மாதிரி சில்லி மேட்டரை ஒரு பெரிய பிரச்சினையாக எடிட்டோரியல் மீட்டிங்கில் விவாதிக்க முற்பட்டோமானால், “நீயெல்லாம் வேலைக்கே லாயக்கு இல்லே” என்று துரத்திவிடுவார்கள்.

என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. அங்கு பணிபுரியும் லே-அவுட் ஆர்ட்டிஸ்டிடம் எப்போதோ ஏதோ ஒரு நிறுவனத்தின் சின்னத்தை அழிக்க சொல்லியிருப்பார்கள். அதற்கு தகுந்த காரணம் இருந்திருக்கும். அந்த லே-அவுட் பணியாளர் இதையே தன் பணிக்கான standardising ஆக எடுத்துக் கொண்டிருப்பார். எந்த போட்டோ வந்தாலும், அதில் ஏதாவது ‘லோகோ’ இருக்கிறதா என்று உற்றுப்பார்த்து, அதை அழித்துவிடுவார். அல்லது லே-அவுட்டில் ஒரு படத்தை இடும்போது வண்ணச்சேர்க்கைக்கு ஒட்டாமல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட இடத்தில் திருத்தங்கள் செய்வது அவரது உரிமை. பத்திரிகை தயாரிக்கும் பணியில் இருக்கும் issue incharge (பொதுவாக பொறுப்பாசிரியர்கள், துணை ஆசிரியர்கள் இப்பொறுப்பில் இருப்பார்கள்) கூட இதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டார். கண்டுகொள்ள மாட்டார். பல பத்திரிகைகளில் அரசியல்வாதிகளின் கரைவேட்டியின் ‘கரை’ கூட வாசகர்களுக்கு உறுத்தும் என்று அழிப்பதுண்டு. இது வழக்கமான நடைமுறைதான். இதற்குப் பின்னால் பத்திரிகை நிர்வாகத்துக்கு ஏதேனும் பாலிசியோ, உள்நோக்கமோ இருக்குமென்று சந்தேகிப்பதில் அர்த்தமேயில்லை.

தினகரன் குழுமமும் ‘சூரியன் பதிப்பகம்’ என்கிற பெயரில் ஒரு பதிப்பகம் நடத்துகிறது. எனவே தங்களது போட்டி நிறுவனங்களின் ‘லோகோ’ advertorial எனப்படும் paidnewsகள் மற்றும் விளம்பரங்கள் தவிர்த்த வாசகர்களுக்கான பக்கங்களில் இடம்பெறக்கூடாது என்று ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

நீங்கள் நாளிதழ்களில் வரும் சினிமா விளம்பரங்களில் இதை கண்டிருக்கலாம். “அருமையான ஆக்‌ஷன் திரைப்படம் – நன்றி ஒரு நாளிதழ்” என்று போட்டிருப்பார்கள். அது தினகரனில் வெளிவந்த விளம்பரமாக இருக்கும்பட்சத்தில், மேற்கோள் காட்டப்பட்ட திரைவிமர்சனம் தினத்தந்தியிலோ அல்லது தினமலரிலோ வந்திருக்கக்கூடும். இது பல்லாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம்தான். விளம்பரம் பெறுவதிலேயே கூட இம்மாதிரி விதிமுறைகள் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதிரி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பிரத்யேகமாக சில கொள்கைகள் இருக்கக்கூடும். எங்களது ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் வெளிவரும் பேட்டியாளர்களின் படங்கள் எல்லாமே கண்ணியமான தோற்றத்தில்தான் இருக்கும். ஒருமுறை பேட்டியளித்த ஒரு பெண் பிரபலம் ஸ்லீவ்லெஸ் அணிந்த போட்டோ இருந்தது என்பதால், அந்த கட்டுரையே அச்சுக்கு செல்லுவது நிறுத்தப்பட்டு தாமதமானது என்கிற அளவுக்கு கடுமையான வழிகாட்டு நெறிகள் எங்களுக்கு இருக்கிறது. இவ்வளவு ஏன்? எனக்கு தெரிந்து ‘உடலுறவு’ என்கிற வார்த்தையேகூட, புதிய தலைமுறை இருநூறு இதழ்களை கடந்த நிலையில் ஒரே ஒருமுறைதான் (தவிர்க்க இயலாத வகையில் கலாப்ரியாவின் தொடரில் வந்துவிட்டது) எங்கள் பத்திரிகையில் இடம்பெற்றிப்பதாக ஞாபகம்.

சரி. இப்போது பத்ரிக்கு (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) வருவோம். எந்த ஒரு முதலாளிக்கும், நிர்வாகிக்கும் தன்னுடைய நிறுவனத்தின் பெயர் பிரபலப்பட வேண்டும் என்கிற ஆசை இருப்பது நியாயமானதுதான். எனக்கு ‘உயிர்மை’ நிறுவனத்தின் ‘சுஜாதா விருது’ வழங்கப்பட்டபோது, “நீங்க ‘புதிய தலைமுறை’யில் வேலை பார்க்குறீங்கன்னு அவங்க குறிப்பிட்டிருக்கலாமே?” என்றுதான் எங்கள் ஆசிரியரும் கேட்டார். மனுஷ்யபுத்திரனை போய் கேட்கவா முடியும்? மனுஷ்யபுத்திரன் எங்கள் பத்திரிகைக்கு எழுதும்போது கவிஞர், எழுத்தாளர் என்றுதானே அடைமொழி இட்டிருக்கிறோம். எங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட அதேமாதிரி அடைமொழிகள்தான் அவருக்கு தரப்படுகிறது. ஆனால் உயிர்மை சம்பந்தப்பட்ட ஒருவருக்கு பெருமை கிடைக்கிறது எனும்போது, அதில் ‘உயிர்மை’ என்கிற பெயருக்கு ஓரிடத்தை மனுஷ்யபுத்திரன் எதிர்ப்பார்ப்பது இயல்பானதுதான். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்பதுதான் தெரியவில்லை. எங்கள் ஆசிரியரின் கட்டுரையோ, பேட்டியோ வெளி இதழ்களில் வெளிவரும்போதும் எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தவிர்க்க முடியாத பொருத்தமான இடங்களில் மட்டுமே அவர் எந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் என்று குறிப்பிடப்படுகிறது. பத்ரி  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்)  பதிப்பகத்தொழில் தொடர்பான ஒரு கட்டுரையிலோ, பேட்டியிலோ பேசும்போது பதிப்பாளர் என்கிற அடைமொழிதான் அவரது நிறுவனத்தின் பெயரோடு சேர்த்து குறிப்பிடப்படும். நாங்களே கூட குறிப்பிட்டிருக்கிறோம்.

எங்களுடைய பத்திரிகை தொடங்கியதிலிருந்தே பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) எங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருபவர். குறைந்தபட்சம் பத்து முறையாவது அவரது படம் எங்கள் பத்திரிகையில் அச்சாகியிருக்கிறது. உலகின் சர்வ பிரச்சினைகளிலும் அவருக்கு ஒரு ஆழமான கருத்து இருக்கிறது. அவரே பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை அடைமொழிகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம். எங்கள் இதழைப் பொறுத்தவரை பத்ரி விதிக்கும் இந்த புதிய விதிமுறையால் எதுவும் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறேன். ஆனால் மற்ற ஊடகங்களில் நிலைமை எப்படியோ தெரியாது.

பத்ரியைப்  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) போலவே எல்லாரும் இதே விதியை விதிக்க ஆரம்பித்துவிட்டால் என்னாகும்? ஊடகங்களின் பாலிசி மாறிவிடுமென்று யாரும் நினைத்துவிடாதீர்கள். என்னை மாதிரி பத்திரிகை தொழிலாளிகளின் பொழைப்புதான் டப்பா டான்ஸாகிவிடும் :-(

12 டிசம்பர், 2013

கல்யாண சமையல் சாதம்

எவ்வளவு உருவினாலும்.. மன்னிக்கவும்.. உதைத்தாலும் ஸ்கூட்டர் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை என்பதுதான் படத்தின் ஒன்லைன். இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதே லைனை வைத்துக்கொண்டு காசிநாத்தின் ‘முதலிரவே வா வா’ கன்னடத்திலும், தமிழிலும் வூடு கட்டி அடித்து தயாரிப்பாளர் ஏக்நாத்தின் டப்பாவை கதற கதற ரொப்பியிருக்கிறது. ஆனால் காசிநாத்துக்கு இருந்த ‘தில்’ இயக்குனர் பிரசன்னாவுக்கு இல்லையென்பதால் வேலு மிலிட்டரியில் தயிர்சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டமாதிரி சப்பென்று ஆகிவிட்டது.

திரைக்கதையின் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. வெற்றிகரமான எந்தவொரு படத்திலும் இதை நீங்கள் கவனிக்கலாம். முரணை மிகச்சரியாக இண்டர்வெல் ப்ளாக்கில்தான் சொருக வேண்டும். ஹீரோ பிரசன்னாவின் பேட்டரி ‘செல்ஃப்’ எடுக்கவில்லை என்பதை படம் ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே ‘லீக்’ செய்துவிடுவதால், முழுப்படத்துக்கும் சுவாரஸ்யமாக ‘சீன்’ பிடிக்கமுடியாமல், ‘ஃபோர்ப்ளே’ செய்தே க்ளைமேக்ஸ் வரை ஜவ்வடிக்க வேண்டியதாகி விட்டது.

படத்தின் டைட்டிலில் தொடங்கி ஏதோ ஆவணப்பட எஃபெக்டில் ஒரு பெண் குழந்தை எப்படி வளர்ந்து பெரியவளாகிறாள் என்று வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது. படம் முழுக்க ஆங்காங்கே யார் யாரோ வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார்கள். ரொம்ப ஓவர். கதை சொல்வது யாரென்று பிடிபடாமல் ஒரு மாதிரியாக ‘நான்லீனியராக’ குழம்பிப் போகிறோம். அவசரத்துக்கு ஒரு போன் செய்யவோ, தம் அடிக்கவோ ரெண்டு நிமிஷம் வெளியே போய்விட்டு வந்தால், வேறு யாரோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மிக தைரியமான ஒரு தீமை எடுத்துக்கொண்டு, ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்துவிடுவார்களோ என்கிற பயத்திலேயே மிக பலவீனமான படத்தை கொடுத்திருக்கிறார்கள். இறங்கி குத்து, குத்துவென குத்தியிருக்க வேண்டாமா? எஸ்.ஜே.சூர்யாவும், பாக்யராஜும் இதே கதையில் களமிறங்கி இருந்தால் தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே எப்படிப்பட்ட ‘எழுச்சி’ ஏற்பட்டிருக்கும்.

ஹீரோ பிரசன்னாவுக்கு இம்மாதிரி ‘எழுச்சி’ சாத்தியப்படாமல் போனதற்கு ‘பிட்ச்’ சரியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாமென்று, சில குளோசப் ஷாட்களை கண்டபோது தோன்றியது. முந்தானை முடிச்சில் பாக்யராஜ் ஏன் தீபாவை போட்டார் என்பதை இளம் இயக்குனர்கள் ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்தால், அவர்கள் அனைவருமே வெள்ளிவிழா இயக்குனர்களாக பரிணமிக்கலாம்.

படம் ரொம்ப அந்நியமாக தெரிவதற்கு முக்கியமான காரணம், படத்தின் பார்ப்பனத்தன்மை. தமிழ்ச்சூழலில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் சின்சியராக இயக்குனர் பதிவு செய்ய நினைத்தாலும், ஏதோ உஸ்பெகிஸ்தான் படத்தை சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் பார்ப்பதைப் போன்ற எண்ணமே ரிச்சா வலிக்கும் முனுசாமிக்கு ஏற்படுகிறது. ஏற்கனவெ மேடைநாடகம், செவ்வாய்க்கிழமை தூர்தர்ஷன் நாடகம் என்று அடுத்தடுத்து பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து அந்த களங்களையெல்லாம் வெற்றிகரமாக சமாதி கட்டிவிட்டார்கள். எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான கதைக்கு பார்ப்பன குடும்பக்களம் (வியட்நாம் வீடு, ஆஹா போன்றவை உதாரணம்) இருந்தால் ஓக்கே. இப்படம் அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள் ‘ஹேப்பி’ ஆவதற்கு என்றே எடுக்கப்பட்டதுமாதிரி இருக்கிறது. ‘ஸ்கைப் வாத்தியார்’ மாதிரி சின்சியர் கிரியேட்டிவிட்டியை பார்த்து, தமிழ்நாட்டில் நூற்றுக்கு மூன்று பேர்தான் சிரிக்கிறார்கள். மீதி தொண்ணூற்றியேழு பேருக்கு வாத்யார் என்றால் எம்.ஜி.ஆரோ, சுஜாதாவோ அல்லது ஸ்கூல் வாத்யாரோதான்.

அடிக்கடி பிரசன்னாவின் வாய்ஸ் ஓவரில் கப்பல் கவிழ்ந்துவிட்டது மாதிரி ‘பெரிய பிரச்சினை’ ஏதாவது புதுசு புதுசாக சொல்லப்படுகிறது. ஏதோ சங்கீத்தோ என்ன எழவு சடங்கோ, அதில் காக்ராசோளி போடுவேன் என்று மணப்பெண் சொல்வதும், அதை மாமியார்காரி எதிர்ப்பதும் அவ்வளவு பெரிய பிரச்சினையா என்று தெரியவில்லை. க்ளைமேக்ஸில் ஹீரோயினை ஆச்சரியப்படுத்த, ஹீரோ எங்கேயோ படகில் அழைத்துப்போய் மெகாசீரியலுக்கு சீரியல் லைட் செட் போட்டமாதிரி தீவையெல்லாம் சுற்றிக் காட்டுகிறார். லோ பட்ஜெட் படமென்பதால் வேறு வழியில்லாமல் ஹீரோயின் ஆச்சரியப்பட்டு, ஹீரோவை செம லவ்வு லவ்வுகிறார் (ரோஜாவில் மதுபாலாவின் கண்களை மூடிக்கொண்டு போய், புதுவெள்ளை மழை சாங் ஸ்டார்ட் ஆகும்போது அரவிந்த்சாமி திறப்பாரே, மதுபாலா அப்படியே கவிழ்ந்திடுவாரே அதுமாதிரி). நமக்குதான் அக்கடாவென்று இருக்கிறது.

ஒரு வழியாக படம் முடியும் முடியுமென்று ஆத்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, டாய்லெட்டுக்கு போக முனையும்போது தேவையில்லாமல் பின்னிணைப்பாக காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருவழியாக ஹெலிகாப்டர் ‘ஷாட்’ அடித்து ஹீரோ பிரசன்னா ஆட்டத்தை முடிக்கிறார். நமக்குதான் முடியலை.

6 டிசம்பர், 2013

சமையல் மந்திரம்

பத்தோடு பதினொன்றாக ஏதோ ஒரு சமையல் நிகழ்ச்சி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். சரி அந்த கருமத்தை ஏன் நைட்டு பதினொன்று மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் என்கிற ஆர்வத்தில் என்றோ ஒருநாள் கேப்டன் டிவியின் உள்ளே நுழைந்தவுடன்தான் தெரிந்தது இது மன்மத மந்திரம் என்று. புதிரா புனிதமாவையெல்லாம் ஓவர்நைட்டில் பீட் செய்துவிட்டார்கள். கேப்டன் அரசியலுக்கு வந்ததால் தமிழர்களுக்கு இது ஒன்றுதான் பிரயோசனமான விஷயம்.

நீண்டகால செயல்பாட்டுக்காகவும், முறுக்குக் கம்பி மாதிரி வலிமையை பெறவும் ஏதோ பேருக்கு ஒரு சமையல் குறிப்பு. ‘இச்சையை கிளப்பும் மொச்சை’, ’ஆண்மை வீரியத்துக்கு அமோக கிழங்கு’, ‘நரம்பு ஸ்டெடியாக புடலங்காய் கூட்டு’, ’குஜால் குன்னூர் ஜாம்’ மாதிரி ஏதோ ஒரு கிக்கான சமையல் குறிப்பு. யாராவது சமைத்துப் பார்த்து ‘பலன்’ தெரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியே சும்மா கிர்ரென்றிருப்பது என்னவோ நிஜம்தான்.
கேமிராவை ஆன் செய்தவுடனேயே திருதிருவென்று முழித்தவாறே பேசுகிறார், நிகழ்ச்சியின் கதாநாயகன் டாக்டர் சின்னையா. இவர் ஒரிஜினல் டாக்டர் தானா என்று சி.பி.ஐ.தான் விசாரித்து சொல்லவேண்டும். குறுந்தாடி, பாக்யராஜ் பாணி குரல் என்று அவரது தோற்றமே ஒரு மாதிரியாக நிகழ்ச்சியோடு ரசிகர்களை ஒன்றவைத்துவிடுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிரிஜா ஸ்ரீதான் ஹைலைட். டாக்டரே கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், அம்மணி அநியாயத்துக்கு ஆட்டம் போடுகிறார்.

சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.
கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.

கடிதம் போடுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் ‘கேப்டனுக்கு வாழ்த்துகள்’ என்று ஆரம்பித்துவிட்டு, தங்கள் பாலியல் சந்தேகத்தை கேட்கிறார்கள் என்பதன் லாஜிக் மட்டும் புரியவில்லை. நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்.|

டோண்ட் மிஸ் இட்!

4 டிசம்பர், 2013

விடியும் முன் : மனநிலை பிறழ்ந்தவர்களின் சொர்க்கம்

இணையத்தின் வழியாக கட்டமைக்கப்படும் அபிப்ராயங்கள் ஏனோ எனக்கு பெருமளவு ஏமாற்றத்தையே வழங்குகின்றன. லேட்டஸ்டாக பல்பு வாங்கியது ‘விடியும் முன்’.

படம் பார்த்ததிலிருந்து ஒருமாதிரி மனம் நிலை கொள்ளாமல், இந்நொடி வரை பதட்டமாகவே உணர்கிறேன். ஒரு மாதிரியான மோசமான மனநிலை இது. எதிலும் மனதை முழுமையாக ஈடுபடுத்த முடியாதபடி தொந்தரவு செய்யக்கூடிய உளவியல் சிக்கல் இது. இந்நிலை உங்களில் யாருக்கும் வரவேண்டாம். தயவுசெய்து ‘விடியும் முன்’ படத்தை தியேட்டரிலோ, திருட்டு டிவிடியிலோ கூட பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படங்களை பற்றி எழுதுவதற்கு எனக்கு முன்மாதிரியாக விளங்கும் அமரர் எஸ்.ஏ.பி.யின் திரைப்பட விமர்சனக் கொள்கைக்கு எதிர்மாறான கோரிக்கைதான் இது என்றாலும் வேறு வழியில்லை.

விடியும் முன் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஒன்று : காமக்கதை எழுதுபவனோ, நீலப்படம் எடுப்பவனோ கூட நம் சூழலில் ‘ஆண்டி’களை வைத்துதான் எடுப்பானே தவிர, குழந்தைகளை முன்வைத்து கற்பனை செய்யமாட்டான். குறைந்தபட்ச அறம் என்பது அயோக்கியனுக்கும் உண்டு. பிட்டு படங்களையோ, கதைகளையோ விரும்பி வாசிக்கக்கூடிய நம்மைப் போன்ற அயோக்கியர்களும் அதில் ‘குழந்தை’ சம்பந்தப்படுவதை விரும்புவதில்லை.

இரண்டு : விலை மாது ஒருத்தி பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க பெண்குழந்தையை ஒரு நாள் ஒப்பந்தத்துக்கு ஒரு பெரிய மனிதருக்கு கூட்டிக்கொடுக்க அழைத்து வருகிறாள். அந்த குழந்தைக்கு ஒப்பனை செய்யும் காட்சியை எல்லாம் காட்டுவது என்பது மனநிலை பிறழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு இயக்குனரின் கற்பனையில் மட்டுமே உதிக்கும். அப்போது குழந்தை கேட்கிறாள் : “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. விலைமாதுவின் பதில் : “இன்னைக்கு நீ தான் ராணி”

மூன்று : மேலே அறையில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்கிறது. கீழே இருக்கும் விலைமாது ஓடிப்போய் பார்க்கிறாள். குழந்தை கைகள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறாள். பெரிய மனிதர் கையில் க்ளவுஸ் அணிந்து, ஒரு ப்ளேடு வைத்திருக்கிறார். ஆபாசமாக எடுக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும், கண்ணியமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் என்று ஏதோ ஒரு விமர்சன மாகானுபவன் இணையத்தில் எழுதியிருந்தார். நேரடிக்காட்சிதான் ஆபாசமா? கையில் ப்ளேடு வைத்திருக்கிறார், அடுத்து அவர் என்ன செய்ய உத்தேசித்திருப்பார் என்று ரசிகனை யூகிக்க வைப்பதை மாதிரி ஆபாசம் நேரடியான உடலுறவுக் காட்சியில் கூட வெளிப்படாது. நேரடிக் காட்சிகளில் உருவாகும் கிளர்ச்சியின் பாதிப்பு சில மணி நேரத்துக்குதான்.  ஆனால் இதுபோன்ற காட்சிகள் சாதாரணர்களையும் வக்கிரர்களாக மாற்றக்கூடிய ஆபத்தான ஆயுதங்கள்.

இந்தப் படத்தை ‘ஆகா, ஓகோ’வென்று பாராட்டுபவர்கள் எதற்காக பாராட்டுகிறார்கள் என்றே புரியவில்லை. தொழில்நுட்பரீதியாக இதைவிட பன்மடங்கு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த நடுநிசிநாய்களை கழுவிக் கழுவி ஊற்றியவர்கள் இவர்கள்தான். அதே மாதிரி.. இல்லை இல்லை.. அதைவிட மோசமான உள்ளடக்கத்தோடு கூடிய ஒரு குப்பையை ஏன்தான் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. இதெல்லாம் நடப்பதே இல்லையா, நடப்பதைதானே சினிமாவில் காட்டுகிறார்கள் என்று வாதாடுபவர்களுக்கு மாஸ் மீடியாவை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லையென்று அர்த்தம். மகாநதியிலும் இதேமாதிரி காட்சி உண்டு. அதை எப்படி கலை ஆக்கினார்கள், எவ்வகையில் சமூக அக்கறையை நோக்கும் காட்சியாக உருமாற்றினார்கள் என்பதை மீண்டும் அப்படத்தை பார்த்துதான் உணரவேண்டும்.

விலங்குகளை கூட திரைப்படங்களில் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் தேசம், குழந்தைகளை மோசமான முறையில் படம் பிடித்துக் காட்டும் ‘விடியும் முன்’ போன்ற திரைப்படங்களை எப்படி சகித்துக் கொள்கிறது? காரணகாரியமில்லாமல் கண்டதையும் வெட்டும் ‘சென்சார்’ எனும் மனமகிழ் அமைப்புக்கு ‘மூளை’ என்றொரு வஸ்து இருக்கிறதா? இந்த படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த அதிகாரிகள் யாருமே, அந்த பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள்.

மசாலாவே வாழ்க்கை!

தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும் இடைவெளிகளையும் நிரப்புகின்றன. எல்லா துறைகளுமே தொடர்ச்சியான இயங்குதலுலை நடத்த இது அத்தியாவசியமான பணியும் கூட.

துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. பல்வேறு காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் ஏற்பட்ட தொய்வு இதற்கு காரணமாகிறது. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்த எங்களுக்குதான் சமையலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ‘மசாலா’ எவ்வளவு அவசியமானது என்று தெரியும். நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது இதையெல்லாம் மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.  இதன் விளைவே LIPS (எ) Life is pulp society. நாங்கள் நம்பும் கருத்தாக்கங்களுக்கு எங்களுடைய பங்காக எதையாவது செய்யவேண்டும். அது நமது கடமையும் கூட.

LIPS அமைப்பின் தொடக்கம் வரும் ஞாயிறு (08-12-2013) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் நிகழ்கிறது.

எங்களது முதல் நிகழ்வே ‘வாசகருக்கு மரியாதை’

வாசகர்தான் வேர் என்கிற அடிப்படையில், வெகுஜன இதழ்களை வாசிக்கவும், வாசித்தபின் அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் (நம் மொழியில் சொல்லப்போனால் பின்னூட்டம், கமெண்ட்) கடந்த முப்பத்தைண்டு ஆண்டு காலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வாசக மனங்களின் மன்னன் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு சிறியளவில் பாராட்டு விழா நடத்துகிறோம். ‘அந்நியன்’ திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரத்துக்கு வாத்யார் சுஜாதா, அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களது பெயரை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்திரிகை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாராட்டு விழாக்கள் நிறைய நடைபெற்றிருக்கிறன. நாம் நடத்தப்போவது அப்படியே உல்டா. ஒரு பத்திரிகை ஆசிரியர், வாசகரை பாராட்டுகிறார். அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களை கவுரவித்து உரையாற்ற குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியர் அண்ணன் தி.முருகன் அவர்கள் பெருமனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறார். இடம் கொடுத்து உதவும் பனுவல் புத்தக நிலையத்தாருக்கும், பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவோ எழுத்தாளர்களோடு ‘வாசகர் சந்திப்பு’ நடைபெற்றிருக்கிறது. ஒரு வாசகரோடு வாசகர் சந்திப்பு நடத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தொடர்ச்சியாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். உங்களது அன்பான வருகையும், அவசியமான ஆலோசனையும் எங்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறோம். ஞாயிறு காலை உங்கள் அனைவரின் அப்பாயிண்ட்மெண்டும் எங்களுக்கு தேவை.

28 நவம்பர், 2013

வெள்ளை யானை

சென்னையின் ஆதிவாசிகள் யாரென்ற சர்ச்சைக்கு விடை காண முடியாத விவாதங்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நகரமாக நாகரிகமடைந்த சென்னை ‘தலித்’ மக்களின் உழைப்பாலும், உணர்வாலும் உருப்பெற்ற நகரம் என்கிற கோணத்தை, தகுந்த ஆதாரங்களோடு ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ வெளிப்படுத்துகிறது.

நாவலை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. சோம்பலின் காரணமாக தினம் இருபது, இருபத்தைந்து பக்கங்கள் என பாதியைதான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வரும் சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதற்குள்ளாக முழுமையாக வாசித்துவிடவேண்டும் என்று ஆசை. அடுத்த இருநாட்களில் ‘சோம்பேறித்தனம்’ தற்காலிகமாகவாவது விலகவேண்டும். வாசித்தவரையில் இது ஜெயமோகனின் முக்கியமான படைப்பு பங்களிப்பாகதான் தோன்றுகிறது.

இந்நூல் திராவிட இயக்கத்தின் தோற்றம், இருப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக்கூடும் என்று நாவல் வெளிவருவதற்கு முன்பாக நண்பர் ஒருவர் கணிப்பாக சொன்னார். இதுவரை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒருவேளை இறுதி அத்தியாயம் நெருங்கும்போது ஏதாவது ‘உள்குத்து’ வைத்திருப்பாரோ என்னமோ?

திராவிட இயக்கம் பார்ப்பனரல்லாதவர்களுக்கான இயக்கம் என்றாலும், சாதிய படிநிலையில் பழகிவிட்ட சமூகமரபின் காரணமாக, அந்த ‘பார்ப்பனரல்லாதவர்களில்’ தலித்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதியினர், சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே தன்னிறைவை அடைந்துவிட்ட நிலையில் அறுபதுகளில் தொடங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கம் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து வருகிறது. எனவே இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கம் என்றுகூட குறிப்பிடலாம் அல்லது விமர்சிக்கலாம். தர்மபுரி, மரக்காணம் நிகழ்வுகளுக்கு திராவிட இயக்கங்கள் காட்டிய எதிர்வினைகளின் தீவிரத்தை ஒப்பிட்டுப் பார்த்து இம்முடிவுக்கு யாருமே சுலபமாக வரலாம்.

சாதியை சகட்டுமேனிக்கு கேள்விக்குள்ளாக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலிலும் கூட தலித்களுக்கான இடம் முற்போக்கு இயக்கங்களான திராவிட இயக்கங்களில் கூட சிறுபான்மையாகதான் (பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளில்தான்) கிடைக்கிறது.

இந்த நடைமுறை பின்னணியோடு ‘வெள்ளை யானை’யை வாசிப்பதே சரியாக இருக்கும். இந்நாவல் சென்னையை உருவாக்கிய ‘தலித்’களின் பங்களிப்பையும், அந்தப் பங்களிப்புக்கு உரிய பலன் அச்சமூகத்துக்கு கிடைக்காத அவலத்தையும் சுட்டுவதாகவே புரிந்துக்கொள்கிறேன். இதை சொல்லும்போது, இது திராவிட இயக்கத்தை எதிர்ப்பதான தோற்றத்தை தருமே தவிர, உண்மையான நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன்.

முந்தைய ஜெயமோகன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் ‘இலக்கியத்தன்மை’, ‘படைப்பூக்கம்’ மாதிரியான உன்னதங்கள் இதில் குறைவாக இருப்பதாக தீவிர இலக்கிய வாசகர்கள் கருதக்கூடும். என்னைப்பொறுத்தவரை இதில் அம்மாதிரி கற்பிதங்களை காட்டிலும், அவருடைய எழுத்து நாலுகால் பாய்ச்சலில் செயல்வேகத்தோடு கூடியிருப்பதாக கருதுகிறேன். வர்ணனைகளும், உருவகங்களும், குறியீடுகளும் மட்டுமே இலக்கியம் ஆகிவிடாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ஒரு நிகழ்வில் இந்த நாவலை குறிப்பிட்டு, இது ஒரு நாவலாக இல்லாமல் ‘திட்டமாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் சங்கரராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார். அது பாராட்டா அல்லது எதிர்விமர்சனமா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் திட்டமிடாமல் ஒரு சிறு ஹைக்கூவை கூட எழுதமுடியாது என்பதுதான் என் புரிதல்.

வெள்ளை யானைக்கு ஆவணத்தன்மை சற்று கூடுதலாகவே இருக்கிறது. ஆவணங்கள் இலக்கியமாகுமா என்று விவாதித்து இனி நம் நேரத்தை போக்கிக் கொள்ளலாம் :-)

25 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

நல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக மற்றவர்களுக்கு வார்த்தையால் கூட சொல்லி புரியவைக்க முடியாத இரண்டாம் உலகத்தை திரையில் காட்சிகளாக்கி காட்டுவது என்கிற சவாலை செல்வராகவன் முயற்சித்திருக்கிறார்.

கனவுலகம் எல்லாருக்குமே பாதுகாப்பான உலகம். அந்த உலகின் இயக்கத்தை கனவு காண்பவன் தன் கையில் இருக்கும் ரிமோட்டால் கட்டுப்படுத்தலாம். நாம் நினைத்த பெண்ணை காதலிக்கலாம். நமக்கு பிடிக்காதவனை ரஜினி ஸ்டைலில் பறந்து பறந்து அடிக்கலாம். ஆடி காரில் உலா வரலாம். தம் அடிக்கலாம். பீர் குடிக்கலாம். அயல்நாட்டு அழகிகளோடு ஜல்சா செய்யலாம். கனவு காண பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. கனவுகள் அந்தரங்கமானவை. கனவு முடிந்து விழித்தபிறகு பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. தான் கண்ட கனவு என்று யாராவது விடும் கதை அனேகமாக புனைவாகதான் இருக்கும். முக்கியமாக கனவுக்கு வண்ணமில்லை. கருப்பு வெள்ளையில்தான் கனவு இருக்குமென்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கெல்லாம் கனவு வந்தே கால் நூற்றாண்டு இருக்குமென்பதால், அது கருப்புவெள்ளையா, வண்ணமா, சினிமாஸ்கோப்பா என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. மேலும், கனவில் ‘ஒலி’ உண்டா என்கிற குழப்பமும் இருக்கிறது. இப்படியிருக்கையில் அப்துல்கலாம் போன்றவர்கள் கனவுகாண சொல்லும்போது, அது எப்படி இந்திய இளைஞர்களுக்கு சாத்தியமாகும் என்று அயர்ச்சிதான் ஏற்படும்.

இது ஒரிஜினல் கனவு. பகல் கனவு என்றொன்று உண்டு. சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, பைக்கில் பயணிக்கும்போதோ, டாய்லெட்டில் இருக்கும்போதோ சுய இன்பம் மாதிரி நாமாக ‘விஷூவல்’ அமைத்து, சிந்தனையிலேயே ஓட்டும் ஃபிலிம் இன்னொரு வகை கனவு. ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வகை கனவுகள் அவர்களது பாலியல் வறட்சிகளுக்கு பசுமை பாய்ச்சக்கூடிய தன்மை கொண்ட கனவுகளாகவே இருக்கக்கூடும். இம்மாதிரி கனவிலேயே காலத்தை ஓட்டினால், பொழைப்பு நாறிவிடுமென்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவார்.

செல்வராகவன் காட்ட விரும்பிய இரண்டாம் உலகம் கனவாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ இருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தேன். அப்படியும் படம் ஓக்கே ரகம் கூட இல்லை.

இது நிஜமாகவே ‘பண்டோரா’ மாதிரி கிரகம் என்று அவர் எடுத்திருந்தால் அதற்கான உழைப்போ, ரசிகனுக்கு பரிமாறப்பட வேண்டிய ஃபேண்டஸியான உணர்வோ திரையில் தென்படவில்லை. ‘அவதார்’ எடுப்பதற்கான டெக்னாலஜி வரும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு கருவை அடைகாத்து சுமந்து, அதுவரை திரைக்கதையை செதுக்கிக் கொண்டிருந்தார் கேமரூன் என்பார்கள். செல்வராகவன் இரண்டாம் உலகத்துக்காக இன்னும் சிலவருடங்கள் பிள்ளைத்தாய்ச்சியாகவே இருந்திருக்கலாம்.

படம் பார்த்த கவிஞர் ராஜசுந்தரராஜன் புது ‘கான்செப்ட்’ சொன்னார். ஒரு உலகம் திராவிட உலகம். மற்றொன்று ஆரிய உலகம். அனுஷ்காவுக்கு அதனால்தான் ‘வர்ணா’ என்று பெயர் என்றார். அவரது இந்த பார்வைக்காகவே இன்னொரு முறை ஆரிய-திராவிட அரசியல் படமாக இதை அணுகிப் பார்த்தால் வேலைக்காகுமா என்று பார்க்கவேண்டும்.

அனுஷ்கா ஆண்ட்டி ஆகிவிட்டார். தொப்பை குலுங்க அவர் ஓடியாடி சண்டை போடுவதை காண அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே கூட படம் பிடிக்கவில்லையோ என்னவோ?

22 நவம்பர், 2013

தருண் தேஜ்பால்

இந்தியப் பத்திரிகையுலகில் பணிபுரியும் இளம் பத்திரிகையாளர்களின் Idol Journalistகளில் ஒருவரான தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செய்தியை வாசித்தவுடனேயே ஆத்திரம்தான் வந்தது. ஆத்திரம் அறிவிழக்கச் செய்யும். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிக இழிவான மொழியில் ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன். அதை வாசித்த என்னுடைய நலம் விரும்பியான, தமிழ் இதழியல் துறையில் மரியாதையாக மதிக்கப்படும் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக கண்டித்தார். தன் துறையின் இளையவர்கள் தடம் மாறிச் செல்லும்போது ஒரு ஆசான் எதை செய்யவேண்டுமோ அதைதான் அவர் செய்தார். ஏன் அவ்வளவு கேவலமான மொழியை பயன்படுத்தினேன் என்று கொஞ்சம் விரிவாக சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு மனிதனையோ, இயக்கத்தையோ, லட்சியத்தையோ, கொள்கையையோ வீழ்ச்சி அடைய செய்யவேண்டுமானால் ஓர் ஆதிகாலத்து தந்திரம் இருக்கிறது. மண், பொன், பெண். நாகரிக உலகில் மண்ணைக் காட்டி மயக்குவது இன்று கடினம். அப்படி மயங்கியவர்கள் நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே இருக்கிறார்கள். பொன்னுக்கு மயங்கியவர்கள் ஊழல் வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டைக் காட்டிலும் மூன்றாவதான ‘பெண்’தான் ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக வீழச்செய்கிறது. இதுதான் என்றுமே வெல்லக்கூடிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கிறது.

உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.

நிறைய உதாரணங்களை பட்டியலிட முடியும். கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த அற்புதமான திராவிட இயக்கம் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிளவுப்பட்டது என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்தால், ‘பெண்ணுடல்’ அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டதை உணர்ந்துகொள்ளலாம். உலகளவில் பார்த்தோமானால் சமகால உதாரணங்களாக ஆனானப்பட்ட கிளிண்டனும், ஜூலியன் அசாஞ்சேவுமே கூட இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.

குறிப்பாக அரசியல், சினிமா, ஊடகம் மூன்று துறைகளிலும் ஒருவரை முற்றிலுமாக அழித்தொழிக்க பெண் புகார் குற்றச்சாட்டு போதுமானது. நம்மூரில் கூட சமீபத்தில் இரு ஊடக குழுமங்களுக்கு இடையே நடந்த பனிப்போரில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்பது நமக்கே தெரியும்தானே.. இணையத்திலும்கூட சில இலக்கியவாதிகள் இதனால்தானே ‘டவுசர்’ கழட்டப்பட்டார்கள்? தன் நிழலைக்கூட நம்பாதவர்கள் மட்டுமே தங்கள் இமேஜை நல்லபடியாக வரலாற்றில் பதியவைக்க முடியும்.

உறுதிப்படுத்தப்பட்ட சில அரண்மனை ரகசியங்களை இதுமாதிரி பொதுவிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும். உறுதியானவர்களை உடையவைக்க காலம் காலமாக ‘காமம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் மதுர்பண்டார்க்கரின் திரைப்படங்கள் சில இப்பிரச்சினையை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.

தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு வருவதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக, ஓர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். பவா செல்லத்துரையின் பதினைந்து வயது மகனுக்கு சொல்வதைப்போல, எல்லாருக்குமாக ‘அட்வைஸ்’ செய்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் பிரபலம் அடைபவர்களுக்காக அவருடைய பேச்சு அமைந்தது. “வளர்ந்து வருபவர்கள் ‘பெண்’ விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். மொத்த உழைப்பும் வீணாகிவிடும். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்த உண்மை” என்றார். பாலுமகேந்திரா சொன்னதுமே நிறைய பேர் சிரித்தார்கள். அவரும் புன்முறுவலோடு சொன்னாலும், அதற்குப் பின்னான அவரது நிரந்தர வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அவருக்கு சமூகத்தில் இருக்கும் இமேஜ் அதுமாதிரியானது. ஏதாவது பழைய பாலுமகேந்திரா படங்களின் பாடல்களை டிவியில் போடும்போது, அவரை சிலாகித்துப் பேசுவேன். அம்மாவுக்கு கோபம் வரும். “அந்தாளு ஒரு அயோக்கியன்” என்பார்கள். அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. ஷோபா தலைமுறை ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது மூத்தப் பத்திரிகையாளர்களும் பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸைதான் எனக்கும் சொல்வார்கள். “இந்த துறையிலே ரொம்ப ஈஸியா கிடைக்கும் தம்பி. இந்த வேலையோட தன்மை அப்படி. சோத்து மூட்டைக்குள்ளே பெருச்சாளி பாய்ஞ்சா மாதிரி பாய்ஞ்சிடாதே. லைஃபே ஸ்பாயில் ஆயிடும்” என்பார்கள். சொன்னவர்கள் பெரும்பாலும் அவர்கள் லைஃபை ஏதோ ஒரு கட்டத்தில் ‘ஸ்பாயில்’ செய்துக்கொண்டவர்கள்தான். அனுபவம்தான் பெரிய ஆசான். தற்காலிக மகிழ்ச்சியையும், அதன் பிறகான முடிவேயில்லாத துயரத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சொன்னால் சரியாகதானிருக்கும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், ‘ஆணாகப் பிறப்பதே பாவம்’ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பொதுவில் அவமானப்படுகிறார்கள் என்பதோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லையே. காலத்துக்கும் குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பார்கள்?

தருண் மீது புகார் கொடுத்த பெண், தருணின் மகளுக்கு தோழர் என்கிறார்கள். எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் :-(

தருண் தேஜ்பாலின் தற்போதைய வீழ்ச்சி, கிளிண்டனுக்கு விரிக்கப்பட்ட ‘கண்ணி’ மாதிரி இருக்கக்கூடுமோ என்று எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது. இதற்காக புகார் கொடுத்த பெண்ணை நான் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமில்லை. புகார் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு ‘நிகழ்தகவு’க்கும் வாய்ப்பிருப்பதை நாம் பரிசீலித்தாக வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ‘Sting operation’க்கு பேர்போன தெஹல்காவும், அதனுடைய ஆசிரியரும் என்னென்ன பூதங்களை, விளக்கைத் தேய்த்து வெளிவரச் செய்வார்களோ என்கிற அச்சம் ஏராளமானோருக்கு இருக்கக்கூடும். இந்த குற்றச்சாட்டு தெஹல்காவை முடக்கச் செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். முறையாக புகார் தெரிவிக்கப்படாத நிலையில் அவசரம் அவசரமாக கோவா முதல்வர் இப்பிரச்சினையில் காட்டும் கூடுதல் ஆர்வத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால்.

மீண்டும் பாலுமகேந்திராவுக்கே வருகிறேன். பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு படத்தின் காட்சியை விவரித்துச் சொல்வார். ஒரு கலைஞன் தன் எதிரியிடம் சொல்வானாம். “என்னை என்ன வேண்டுமானாலும் அவதூறாக திட்டிக்கொள். அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என் உழைப்பை மட்டும் பழிக்காதே. நான் அதற்கு விசுவாசமாக இருக்கிறேன்”

தருண் தேஜ்பால் மீது எனக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.

19 நவம்பர், 2013

3D விகடன்

அந்த காலத்தில் விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் என்றொருவர் இருந்தார். ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்து எதிர்வினை ஆற்றும் ஆற்றல் பெற்ற தசாவதானியாம் அவர். காமெடி வெண்பாக்கள் நிறைய இயற்றுவாராம். அவருடைய கவிதைகளை பத்திரிகைகள் சீண்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார். ஆனந்த விகடன்.

உலகமும், தேசமும் சீரியஸாக சிடுமூஞ்சித்தனமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ‘சிரி’யஸாக இயங்கியது விகடன். அரசு வேலையை உதறி சுயத்தொழில்தான் என்று தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருந்தார் இளைஞரான திருத்துறைப்பூண்டி சுப்ரமணியன் ஸ்ரீனிவாசன். மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். அதாவது ‘துட்டு’ அனுப்பினால், வினோதமான பொருள் உங்கள் வீடு தேடி வரும். ஒரு ரூபாய்க்கு நூறு பொருள் மாதிரி கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் ஸ்ரீனிவாசனின் மெயில் ஆர்டர் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. இந்த தொழிலை அபிவிருத்தி செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் தரவேண்டும். அன்றிருந்த விளம்பர ஏஜென்ஸிகள் அடித்த கொள்ளை கமிஷனைப் பார்த்து, ஏற்கனவே இருந்த பிசினஸோடு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீனிவாசன்.

இப்படித்தான் விளம்பரத் தேவைக்காக விகடனும், புதூர் வைத்தியநாத அய்யரும் ஸ்ரீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகமானார்கள். ஒரு நாள் விளம்பரம் தருவதற்காக அய்யரை பார்க்க வந்திருந்தார் வாசன். சிரிக்க சிரிக்க பத்திரிகை நடத்தும் அய்யர் அன்று சீரியஸாக இருந்தார். “இனிமேல் விளம்பரம் கொடுக்க வேற பத்திரிகை பார்த்துக்கோப்பா. செலவு கட்டுப்படி ஆவலை. தனியாளா ஓடியாடி நடத்துறதுக்கும் கஷ்டமாயிருக்கு. ஆனந்த விகடனை இழுத்து மூடறதா இருக்கேன்”

வாசன் யோசித்தார். நாமே நடத்தினால் என்ன. இதுதான் வாசனின் ஸ்டைல். விளம்பரம் கொடுக்க விளம்பர ஏஜென்ஸிகள் எதற்கு. நாமே நடத்திவிட்டு போகலாமே. விளம்பரங்களை வெளியிட பத்திரிகைகளை ஏன் தொங்கவேண்டும். நாமே பத்திரிகை நடத்தலாமே. அய்யரிடம் பேரம் பேசினார். ஒரு எழுத்துக்கு இருபத்தைந்து ரூபாய் என்று கணக்கு போட்டு, ‘ஆனந்தவிகடன்’ என்கிற எட்டு எழுத்துகளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கினார். இது எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இன்று ஆனந்தவிகடன் ஒரே ஒரு பிரதியின் விலையே இருபது ரூபாய்.

வாசன் கைக்கு மாறியதுமே பத்திரிகையும் மாறத்தொடங்கியது. சித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், பத்திரிகைக்கு அஸ்திவாரமாக அய்யர் கருதிய ‘ஆனந்தம்’ மட்டும் அப்படியே இருந்தது. சிரிக்க வைக்கும் பத்திரிகை, சித்திரங்களும் அபாரம் என்று ஊர் பேசியது. வாசனுக்கு முழுமையான திருப்தி கிடைக்கவே கிடைக்காது. தன்னுடைய பத்திரிகையில் இடம்பெறும் எழுத்துகளும் சூப்பர் என்று எல்லோரும் பேசவேண்டும் என்று முயற்சித்தார். கல்கியை பிடித்தார். சிறந்த எழுத்தாளர்களுடன், சிறந்த ஓவியர்கள் என்கிற கூட்டணிதான் விகடனின் வெற்றி ஃபார்முலா. நல்ல எழுத்துகளை மிக நல்ல வடிவத்தில் வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற அமரர் வாசனின் தரக்கொள்கையை இன்றுவரை நூற்றாண்டை நெருங்கும் விகடன் அப்படியே கடைப்பிடித்து வருகிறது.

அதே நேரம் மாற்றங்களுக்கும் விகடன் அஞ்சியதே இல்லை.
ஐம்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட திராவிட எழுச்சியின் போது விகடன் அடைந்த மாற்றம் முக்கியமானது. வெகுஜன வாசகர்களை கவரும் எளிய தமிழில் திராவிட எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள். இந்த மாற்றத்தை உணர்ந்துக்கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத பத்திரிகைகள் பலவும் பொலிவிழந்தன. எண்ணற்ற பத்திரிகைகள் மக்கள் செல்வாக்கினை இழந்து கடையை இழுத்து பூட்டிக்கொண்டது. அரசியல்ரீதியாக காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தாலும் திராவிட தாக்கத்தை ஏற்றுக்கொண்டு, கவுரவம் பார்க்காமல் விகடனில் இந்த புதுத்தமிழ் நடையை புத்திசாலித்தனமாக புகுத்தினார் வாசன்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ரேடியோ-டிவி போட்டிகளை விகடன் தன்னுடைய புகைப்படக் கலைஞர்களின் திறமையைக் கொண்டு சமாளித்தது. ரேடியோவாலும், அந்தகால டிவியாலும் செய்யமுடியாத நேரடிகள அனுபவ சாகஸங்களை ஜூ.வி. மாதிரியான இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ பத்திரிகையை அறிமுகப்படுத்தி செய்தது. திரைப்படங்களும் ‘கலர்’ ஆகி பத்திரிகைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் நீடித்த இந்த காலத்தில் வாசனின் புதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரு பத்திரிகையில் செய்யக்கூடிய எல்லா சாத்தியங்களையும் கையாண்டு வெற்றிகண்டார்.

இப்போது மூன்றாவது தலைமுறை. வாசனின் பேரன் பா.சீனிவாசன் பொறுப்பிலிருக்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்கு பல்முனை போட்டி. மில்லெனியமின் ஆகச்சிறந்த புரட்சியான இணையத்தை மரபான அச்சுப் பத்திரிகைகள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் இருத்தலியத்தை தக்கவைத்துக்கொள்ளப் போகின்றன என்கிற கேள்விக்கு விடைகாணவேண்டிய காலம். தன் பங்காக ஆனந்த விகடன் 3D அனுபவத்தை வாசகர்களுக்கு முன்வைத்திருக்கிறது.
தொண்ணுறுகளில் ஸ்டீரியோகிராம் தொழில்நுட்ப முறையில் பின்னட்டையில் 3Dயை அறிமுகப்படுத்தியது விகடன். இப்போது ரெட், சியான் அனாக்லிப் கண்ணாடிகளை அணிந்து நேரடியாகவே விகடனில் அச்சிடப்படும் படங்களையும், ஓவியங்களையும் முப்பரிமாணத்தில் பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். விகடனுக்கு மட்டுமின்றி, தமிழ் இதழியலுக்கே நாலுகால் பாய்ச்சலை உருவாக்கித்தரும் முக்கியமான மாற்றம் இது. நீளம், அகலம் என்று இருபரிமாணத்தில் அடங்கியிருந்த வாசிப்புக்கு, ஆழத்தை உணரக்கூடிய கூடுதலான இன்னொரு பரிமாணத்தை சேர்த்திருக்கிறார்கள். விகடன் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தொழில்நுட்பத்தை எப்படி தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும். ஆனால், அனைவராலும் தமிழ் பத்திரிகைத்துறையில் இது எழுந்து நின்று இருகைதட்டி பாராட்டப்பட வேண்டிய முக்கியமான புரட்சி.

இந்த கனவை சாத்தியமாக்க விகடன் குழுவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருக்க வேண்டும். குறிப்பாக ரெஜிஸ்ட்ரேஷன் பார்க்கவேண்டிய அச்சு ஊழியர்கள், இமைக்க மறந்து வேலை பார்த்திருப்பார்கள். லே-அவுட் பணியாளர்களும் ஒன்றுக்கு பத்துமடங்கு உழைப்பை செலுத்தியிருப்பார்கள். 3டி பக்கங்களுக்காக எடிட்டோரியல் குழுவினர் கற்பனையை தாறுமாறாக பறக்க செய்திருப்பார்கள். ஒட்டுமொத்தமாக விகடன் தாத்தாவுக்கு அட்டென்ஷனில் ஒரு சல்யூட்.
ஓராண்டுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து திரும்பிய நண்பர் ஒருவர் 3டியில் அச்சிடப்படும் பத்திரிகை ஒன்றை காட்டினார். என் கையில் கூட கொடுக்காமல் மிகக்கவனமாக அவரே பக்கங்களை புரட்டிக் காண்பித்தார். Word’s most beautiful என்கிற அப்பத்திரிகையை கண்ணாடி போட்டு பார்த்தபோது, முதன்முதலாக ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னபோது ஏற்பட்ட பரவசத்தை மீண்டும் அடைந்தேன். “இதெல்லாம் உங்க ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாற்பது, ஐம்பது வருஷம் ஆவும்” என்றார். ஏக்கத்தோடு “ம்” கொட்டினேன். வெறும் இருபது ரூபாய் செலவில் அந்த ஏக்கத்தை இவ்வளவு சீக்கிரமாக விகடன் தாத்தா போக்குவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. 3டி விகடன் இதழ் கடைக்கு வந்த அன்று மாலை, அதே ‘ஐ லவ் யூ’ பரவசத்தை இரு மடங்காக உணர்ந்தேன். என்ன இருந்தாலும் என் தாய்மொழியில் 3டியை பார்க்கிறேன் இல்லையா. கல்வெட்டு, பட்டயம், ஓலைச்சுவடி, பேப்பர் என்று மரபான எல்லா அச்சு ஊடகவடிவங்களையும் தாக்குப்பிடித்து வாழும் என் தமிழ், முப்பரிமாண தொழில்நுட்பத்துக்கும் தயாராகிவிட்டதை காணும்போது எழும் உணர்ச்சியலைகளுக்கு அளவேயில்லை. ஒரே ஒரு குறைதான். எண்பது ஆண்டுகளாக விகடன் தாத்தா எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி, விதம்விதமாக தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டிருக்கிறார். 3டியில் அவரை ஒரு முழுப்பக்கத்துக்கு காட்டியிருக்க வேண்டாமா விகடன் ஓவியர்கள்? அப்புறம், ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு இன்னொரு கோரிக்கை. தயவுசெய்து ‘டைம்பாஸ்’ இதழையும் 3டி வடிவில் வெளியிட ஆவன செய்யவும். எவ்வளவு செலவு ஆனாலும் சரி. ஆவலோடு காத்திருக்கிறோம்.
அ-னா, ஆவன்னா வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உற்ற தோழனாக இருந்த ஆனந்த விகடன் மீது, சில ஆண்டுகளாக கடுமையான மனக்கசப்பு இருந்தது. ‘ஆனந்தம்’ போய், ‘அழுமூஞ்சி’ விகடனாக அதுமாறிவிட்டதால் ஏற்பட்ட கடுப்பு. ஜூ.வி.தான் அரசியலுக்கு என்று தண்ணீர் தெளித்துவிட்டபிறகு, ஆ.வி.யிலும் ஏன் பக்கம் பக்கமாக, குறிப்பாக கலைஞரை மட்டும் குறிவைத்து வன்மமான அரசியல் என்று ஓர் ஆதங்கம். கலைஞர் தாத்தாவும், விகடன் தாத்தாவும் சமகாலத்தவர்கள்தானே? ஒரு தாத்தாவை இன்னொரு தாத்தா இப்படி ஏதோ சொத்துத்தகராறு மாதிரி தனிப்பட்ட முறையில் அளவுதாண்டி தாக்கலாமா என்று கோபம். அதனாலேயே நான்கு ஆண்டுகளாக விகடனை காசு கொடுத்து வாங்குவதில்லை. அலுவலகத்துக்கு வந்து புரட்டுவதோடு சரி (அரசியல் கட்டுரைகளை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டேன்).

தாத்தாவுக்கும் பேரனுக்குமான இயல்பான ஊடல்தான் அது. விகடன் தாத்தா மீதிருந்த அந்த கோபம் இந்த 3டியால் மொத்தமாக ஓடியே போய்விட்டது. என்ன இருந்தாலும் நம்ம தாத்தா இல்லையா?

16 நவம்பர், 2013

கேன்சர் அகற்றப்பட்ட கதை

சமீபத்தில் குஜராத்தில் நடந்த வல்லபாய் படேல் சிலை அடிக்கல் நாட்டுவிழாவில் “சர்தார் வல்லபாய் படேல் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அவர் இருந்த கட்சியில் நானும் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவரை ‘மதச்சார்பு கொண்டவர்’ என்று நேரடியாக குற்றம் சாட்டியதாக ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி அத்வானி குற்றம் சாட்டுகிறார். இதெல்லாம் காங்கிரஸ் – பாஜக இடையிலான அரசியல் சடுகுடு. யார் வெல்லுவார்கள் என்பதை காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும்.

அத்வானி குறிப்பிடுகிற புத்தகம் எம்.கே.கே. நாயர் என்கிற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய மலையாளப் புத்தகம். அது ஆங்கிலத்தில் ‘The story of an era told without ill will’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தின் ஒரு பகுதி :

ஏப்ரல் 30, 1948. இந்திய ராணுவம் ஹைதராபாத்திலிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. உடனடியாக ஹைதராபாத் நிஜாமின் ‘ரஜாக்கர்கள்’ எனப்படும் ஆயுதக்குழு நிஜாம் பிரதேசம் மொத்தத்தையும் தங்கள் ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டனர். மக்களை கடுமையாக சித்திரவதை செய்யத் தொடங்கினர் ரஜாக்கர்கள்.

மவுண்ட்பேட்டன் இடத்தை காலி செய்ததுமே கவர்னர் ஜெனரலாக இராஜாஜி பதவியேற்றுக் கொண்டார். ஹைதராபாத்தின் அபாயநிலையை இராஜாஜி, நேரு மற்றும் படேல் மூவரும் உணர்ந்திருந்தனர். எனவே இராணுவத்தை அனுப்பி நிஜாமின் கொட்டத்தை அடக்கவேண்டுமென்று படேல் துடித்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே நிஜாம் தன்னுடைய பிரதிநிதியை பாகிஸ்தானுக்கு அனுப்பி நல்லுறவு ஏற்படுத்த முயற்சித்தார். தன்னுடைய அரசுப் பணத்தில் கணிசமான தொகையை பாகிஸ்தானுக்கு கொடுத்தார். அமைச்சரவை சந்திப்பில் இந்த நிலவரத்தை படேல் விலாவரியாக எடுத்துரைத்தார். ஹைதராபாத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர இராணுவத்தை அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுவாக கனிவாகவும், அமைதியாகவும் பேசக்கூடிய தன்மை கொண்ட நேரு திடீரென எரிச்சலடைந்தார். தன்னிலை இழந்த நிலையில் வல்லபாய் படேலை நோக்கி, “நீங்கள் ஒரு முழுமையான வகுப்புவாதி. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டேன்” என்று குரல் உயர்த்தி சொன்னார். படேல் ஆவேசப்படவில்லை. அமைதியாக அறையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஹைதராபாத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கவர்னர் ஜெனரலான இராஜாஜி இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். நேருவையும், பட்டேலையும் இணக்கமாக போகவைக்க முயற்சித்தார். அரசியல் ஆலோசனை அதிகாரியான வி.பி.மேனனை அழைத்துப் பேசினார். இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நிமிடத்திலும் ஆணை கிடைத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியுமென்றும் இராஜாஜியிடம் மேனன் சொல்கிறார். அடுத்த நாளே நேருவையும், பட்டேலையும் சந்திப்புக்காக இராஷ்டிரபதி பவனுக்கு வரவழைத்தார் இராஜாஜி. வி.பி.மேனனும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்.

இராஷ்டிரபதி பவனுக்கு வந்துக் கொண்டிருந்த நேரத்தில் மேனனிடம் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டது. திருவாங்கூர் மற்றும் கொச்சியை இந்தியாவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய ஐ.சி.எஸ். அதிகாரி பட்ச் என்பவர் இந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பிரிட்டிஷ் ஹைகமிஷனரிடம் இருந்து வந்த அந்த கடிதம், ஹைதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலர் ரஜாக்கர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை கண்டித்து வந்திருந்தது. மேனன் இந்த கடிதத்தை அப்படியே இராஜாஜியிடம் கொடுத்தார்.

நேரு, படேல் வருகைக்குப் பிறகு சந்திப்பு தொடங்கியது. இராஜாஜி தனக்கேயுரிய பாணியில் ஹைதராபாத் நிலைமையை கவலையோடு பேசினார். இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில் நடவடிக்கை வேகமாக இருக்கவேண்டுமென்கிற தொனி இராஜாஜியின் பேச்சில் இருந்தது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை நேரு வலியுறுத்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நேருவின் பேச்சை முழுமையாக கேட்ட இராஜாஜி, பொறுமையாக தன்னிடம் மேனன் கொடுத்த பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் கண்டனக் கடிதத்தை தருகிறார்.

கடிதத்தை வாசித்ததுமே நேருவின் முகம் மாறுகிறது. கோபத்தில் சிவக்கிறார். கன்னியாஸ்திரிகளை கூட விட்டுவைக்காத ரஜாக்கர்களின் கொடுஞ்செயல் அவரது உறுதியான இதயத்தை அசைத்துவிட்டது. கைகளால் வேகமாக மேசை மீது குத்தியபடியே குரலுயர்த்தி சொன்னார்.

“இனியும் நாம் பொறுக்க முடியாது. அவர்களுக்கு பாடம் கற்பித்தே தீரவேண்டும்”

நேருவிடமிருந்து இராஜாஜி எதிர்ப்பார்த்தது இதைதான். வி.பி.மேனனை பார்த்து இராஜாஜி சொல்கிறார்.

“மேனன், இராணுவ தலைமை அதிகாரியை களமிறங்கச் சொல்லுங்கள்”

ஆணை கிடைத்ததுமே மேனன் செயல்படத் தொடங்கினார். இராணுவ ஜெனரலுக்கு செய்தி பறந்தது. கவலையோடு தன்னுடைய தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் நேரு. தன் நிலையை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேனீர் அருந்தினார். நேருவின் நிலையை கண்ட இராஜாஜி புன்னகையோடு அவரிடம் சொல்கிறார்.

“கொடுமையான வலி ஏற்படுமென்றாலும் வேறு வழியில்லை. அறுவைச் சிகிச்சை செய்து, கேன்சர் கட்டியை நாம் அகற்றித்தான் ஆகவேண்டும்”

13 நவம்பர், 2013

பாட்ஷா

எண்பதுகளில் ஆட்டோ இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்தது. படித்துவிட்டோ அல்லது படிப்பில் கோட்டை விட்டோ திரிந்துக் கொண்டிருந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வரப்பிரசாதமாக ஆட்டோக்கள் அமைந்தன.

அப்போதெல்லாம் சாதாரணமாக காணக்கூடிய காட்சி இது.

“என்ன பண்ணுறே?”

“ஆட்டோ ஓட்டுறேன்” பதில் சொல்லும்போதே பெருமிதம் தென்படும். கேள்வி கேட்டவரும் பையன் பொறுப்பாதான் இருக்கான் என்று திருப்திப்படுவார்.

ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. எங்கள் தெருமுக்கில் இருந்த ஒரு குடும்பம் காலம் காலமாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேண்டில் குதிரைவண்டி வைத்திருந்தார்கள். மவுண்ட் டூ மடிப்பாக்கம் ட்ரிப்புக்கு நாற்பத்தி ஐந்து காசு கொடுத்து நானேகூட பயணித்திருக்கிறேன். அந்த குதிரைவண்டி குடும்பத்தில் வந்த இளைஞர் எண்பதுகளின் மத்தியில் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். கொஞ்ச நாளிலேயே சொந்த ஆட்டோ. இன்னும் சில காலம் கழித்து ரெண்டு ஆட்டோ கூடுதலாக வாங்கி வாடகைக்கு விட்டார். வீடு கட்டினார். கல்யாணம் முடித்து செட்டில் ஆனார். இப்போது வேறெங்கோ இடம்பெயர்ந்து டிராவல்ஸ் நடத்தி, பங்களா கட்டி பக்காவாக செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி.

அப்போதைய ஆட்டோக்காரர்கள் பெரும்பாலும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தில் இருப்பார்கள். அவர்களது தம்பிகள் வேலையில்லாமல் இருந்தால் டி.ஒய்.எஃப்.ஐ.யாகவோ அல்லது படித்துக் கொண்டிருந்தால் எஸ்.எஃப்.ஐ.யாகவோ இருப்பார்கள். சென்னையில் எம்.எம்.டி.ஏ.காலனி மற்றும் புழுதிவாக்கம் மா.கம்யூ அலுவலகங்கள் (அதாவது கொஞ்சம் பெரிய சைஸ் அறை) நமக்கு பரிச்சயமானது இதுபோன்ற தோழர்களால்தான். பொதுவாகவே அந்த காலத்தில் நாம் பார்த்தவர்களில் நான்கில் ஒருவராவது கட்சி வேறுபாடுகளை தாண்டி இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். எண்பத்தி ஒன்பது தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு தமிழகத்தின் இந்த பொதுவுடைமை போக்கும் முக்கியமான காரணமாக இருந்தது.

சி.ஐ.டி.யூ-வுக்கு அடுத்தபடியாக ஆட்டோக்காரர்களில் பெரும்பாலானோர் திமுகவின் தொ.மு.ச.காரர்களாக இருந்தார்கள். சி.ஐ.டி.யூ தோழர்களாக இருந்தவர்களும் கூட தீக்கதிர் படிப்பதற்குப் பதிலாக தினகரன் படிப்பார்கள். ‘யார்’ படத்தில் ரஜினிகாந்த் தினகரன் வாசித்ததுதான் இதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அக்காலக்கட்டத்து சினிமாக்களில் வரும் நாளிதழாக பெரும்பாலும் தினகரன் இருக்கும் அல்லது மக்கள்குரல் இருக்கும்.

அந்நாளைய ஆட்டோக்காரர்கள் தீவிரமான ஈழ ஆதரவாளர்கள். மத்திய அரசின் போக்குக்கு பெரும்பாலும் எதிரானவர்கள். எனவேதான் ஈழ ஆதரவுப் போராட்டங்களோ, பொதுப் பிரச்சினைகளுக்காக பாரத் பந்த் மாதிரி பெரிய வேலைநிறுத்தங்கள் நடந்தபோதோ நகரத்தை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

அருமையாக கானா பாடுவார்கள். இளையராஜா ரசிகர்கள். பிரபு, ராம்கி மாதிரி அந்த காலத்து இளைய ஹீரோக்களின் தாக்கம் கொண்டவர்கள். எனவேதான் ஸ்டைலுக்காக கோடையிலும்கூட கழுத்தில் மஃப்ளர் சுற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டினார்கள். காக்கி பேண்டும், கலர்ச்சட்டையுமாக டீக்கடைகளில் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். சவாரி வந்துவிட்டால் வண்டியில் மாட்டி வைத்திருக்கும் காக்கிச்சட்டையை மாட்டிக் கொள்வார்கள். அச்சட்டைக்கு பட்டன் போடமாட்டார்கள். கண்டிப்பாக ‘பேட்ஜ்’ விசிபிள் செய்துக் காட்டுவார்கள்.

ஏரியாவில் ஸ்டேண்ட்காரர்கள் ஹீரோவாக மதிக்கப்பட்டார்கள். ஏதாவது வம்பு, தும்பு என்றால் முதலில் வந்து நின்று நியாயம் கேட்பார்கள். குறிப்பாக பெண்களிடம் வம்பு செய்யும் ரோமியோக்களுக்கு இவர்கள்தான் வில்லன். ஏரியா பெண்களை (கிழவியிலிருந்து குமரிவரை – வயசு பாகுபாடில்லாமல்) பாதுகாக்கும் எல்லைச்சாமிகள். யாராவது மருந்து குடித்துவிட்டாலோ, தீக்குளித்துவிட்டாலோ முதலுதவிக்கு முதலில் வந்துக் கொண்டிருந்தவர்கள்.

அந்தகால ஆட்டோக்காரர்களை நினைத்தால் ‘ஆயுத பூஜை’யும் இயல்பாகவே நினைவுக்கு வரும். அதகளமான காலம். லைட் மியூசிக் கச்சேரியெல்லாம் வைத்து ஏரியாவையே எண்டெர்டெயின் செய்வார்கள்.

‘பாட்ஷா’ வெளிவந்த தொண்ணூறுகளின் மத்திய காலக்கட்டம்தான் ஆட்டோக்காரர்கள் உச்சத்திலிருந்த காலமென்று தோன்றுகிறது. இந்த சமூகநிலையை அழகாக கமர்சியல் ஆக்கியது ரஜினி-சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி. சூப்பர்ஸ்டார், நக்மாவை ‘உஷார்’ பண்ணியதைக் கண்டு கவரப்பட்டதாலோ, என்னவோ அதன்பிறகு நிறைய ஆட்டோக்காரர்கள் ரோமியோக்களாக மாறிவிட்டார்கள். பெண்களை கேலி செய்தவர்களை இவர்கள் தட்டிக்கேட்ட காலம் போய், இவர்களில் நிறைய பேரே ‘ஈவ் டீசிங்’ சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், ரெண்டாயிரங்களின் தொடக்கத்திலும் நிறையமுறை கேட்டவார்த்தை “ஆட்டோக்காரனோடு ஓடிப்போயிட்டா”

சமூக அநீதிகளை எதிர்க்கும் பொறுப்பான சிகப்பு மனிதர்கள் எப்போதிலிருந்து சமூகவிரோதிகளாய் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதை சரியாக கணிக்கமுடியவில்லை. லோக்கல் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டேன். இன்று ஆட்டோக்காரர்களுக்கு சமூகத்தில் கவுரவமான இடம் இருப்பதாக தெரியவில்லை. குடிகாரர்களாகவும், பெண்பித்தர்களாகவும், ரவுடிகளாகவும், அடாவடிக்காரர்களாகவுமே பொதுப்புத்தியில் உறைந்துப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நம்மால் ஹீரோக்களாக மதிப்பீடு செய்யப்பட்டவர்கள், அம்மதிப்பீட்டிலிருந்து வீழ்ந்துக்கொண்டே போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

12 நவம்பர், 2013

பெருகுகிறதா ‘மால்’ கலாச்சாரம்?

‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி காட்சி அபூர்வம். பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு நகரின் ஏதோ ஒரு தெருதான் பரபரப்படையும். அத்தெருவில் வரிசையாக கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி நமக்குத் தேவையானதை, திருப்திப்படும் விலையில் கறாராக பேரம் பேசி வாங்குவோம்.

அந்த காலம் மலையேறிவிட்டது. நுகர்வுக் கலாச்சாரத்தின் செல்லப் பிள்ளையாக நகரங்கள் தோறும் மால்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்திய நகரங்களில் நவீன அரண்மனைகளின் வடிவத்தில் புதுசு புதுசாக ஏராளமான மால், கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் –அதே நேரம் பர்ஸை பலமாக பதம் பார்க்கும் நோக்கிலும்- உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் பெருநகரமான சென்னையை தாண்டி கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை என்று அடுத்தடுத்த மட்டத்தில் இருக்கும் நகரங்களிலும் மால் கலாச்சாரம் பரவி வருகிறது.

ஒரே கூரையின் கீழ் சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லாமே கிடைக்குமென்ற நம்பிக்கையை மால்கள் உருவாக்குகின்றன. அயல்நாட்டு செண்ட் பாட்டிலில் தொடங்கி, மதுரை மல்லிவரை மாலில் வாங்கலாம். marketing for all என்கிற வார்த்தையே mall என்று சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. விற்பனையை வெறும் வியாபாரமாக அணுகாமல் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு பாணியில் வழங்குவதுதான் மால்களின் அடிப்படை ஐடியா. இதனால்தான் மால் அனுபவத்தை shoppertainment என்கிற புதிய கலைச்சொல்லை உருவாக்கி குறிப்பிடுகிறார்கள்.

தினம் தினம் பல லட்சம் பேர் மால்களில் குவிகிறார்கள். பல்லாயிரம் கோடிகளில் பணம் புரளுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே சுமார் நூற்றி இருபதுக்கும் புதிய மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது மால்கள் மூடுவிழா கண்டிருக்கின்றன என்பதுதான் இங்கே கவனித்தக்க அம்சம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் ஆங்காங்கே இயங்கும் கடைகளில் தெருத்தெருவாக ஏறி இறங்கி, மூட்டுவலியால் அவதிப்படும் தங்கள் வாடிக்கையாளர்களை கண்டு கண்ணீர் விட்டு கதறிய வியாபாரிகள் கண்ட தீர்வுதான் ‘மால்’. ஒரே வளாகத்தில் எல்லா கடைகளும் என்கிற இந்த ‘ஐடியா’வுக்கு வயது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள். ரோம் நகரில் கி.பி. நூறாம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட ‘டிராஜன்ஸ் சந்தை’தான் உலகின் பழமையான மால். ஒரே கட்டிடத்தில் என்றில்லாமல் பக்கத்து, பக்கத்து தெருக்களை இணைத்து ஒரே ஷாப்பிங் வளாகமாய் (நம்மூர் பர்மா பஜார் மாதிரி) உலகெங்கும் நிறைய உருவாகியிருக்கின்றன. இஸ்தான்புல் சந்தை (58 தெருக்களை இணைத்து சுமார் 4000 கடைகள்), பத்து கிலோ மீட்டருக்கு நீளும் டெஹ்ரானின் சந்தை என்று நூற்றாண்டுகள் கண்ட மால்கள் நிறைய உண்டு.

பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் மழையோ, வெயிலோ படாமல் பாதுகாப்பான ஷாப்பிங் வசதியை உருவாக்கும் எண்ணம் வணிகர்களுக்கு வலுத்தது. பாரிஸ் நகரில் 1628ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்ச்சே தே என்பேண்ட் ரோஹ்ஸ், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் 1774ல் இயங்கத் துவங்கிய ஆக்ஸ்போர்ட் கவர்ட் மார்க்கெட் போன்ற மால்கள் இன்னும்கூட சேவையை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1785ல் துவக்கப்பட்ட கோஸ்தினி த்வார் மால்தான் இன்றைய மால்களின் வடிவத்துக்கு முன்னோடியாக அமைந்தது.

ஸ்பென்ஸர் & கம்பெனி நிறுவனம், சென்னையில் சுமார் எண்பது தனித்தனி பிரிவுக்கடைகளை ஒன்று சேர்த்து, இந்தியாவின் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக துவக்கிய ஸ்பென்ஸர் பிளாஸாதான் நம் நாட்டின் முதல் மால் ஆக கருதப்படுகிறது (1895). தொடங்கப்பட்ட காலத்தில் தெற்காசியாவின் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இதுவே இருந்தது. 1990ல் புனரமைக்கப்பட்டு துவக்கப்பட்ட ஸ்பென்சர் ப்ளாஸா அன்றையக் காலத்தில் சென்னை நகரில் தரிசித்தே தீரவேண்டிய தலமாக இருந்தது.

“படிக்கும் காலத்தில் ஊரைவிட்டு வந்து சென்னையில் தங்கியிருந்தேன். தொண்ணூறுகளின் ஸ்பென்ஸர் பிளாஸா, அல்ஸா மால் போன்றவைதான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வாரயிறுதிகளின் வேடந்தாங்கல். பெரும்பாலும் வேடிக்கைதான். மாதத்துக்கு ஒரு முறை டீஷர்ட் மாதிரி ஏதாவது வாங்கினால் அபூர்வம். ஒவ்வொரு முறை இந்த மால்களுக்குள் நுழையும்போதும் கண்களை விரித்துக்கொண்டு ஆச்சரியமாக ஆசை ஆசையாக சுற்றுவேன்.

இன்றைய சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியை எல்லாம் பார்க்கும்போது இருபது வருடங்களுக்கு முன்பு நான் கண்டு ஆச்சரியப்பட்ட மால்கள் எல்லாம் மால்தானா அல்லது பெட்டிக்கடைகளா என்று சந்தேகம் வருகிறது. ஷாப்பிங் கட்டமைப்பு, வசதிகள் விஷயத்தில் நாம் மிகக்குறுகிய ஆண்டுகளிலேயே பலநூறு மடங்கு முன்னேறியிருக்கிறோம்” என்கிறார் டெல்லியில் நிம்பஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் ரவீந்திரன்.

கட்டமைப்பு விஷயமெல்லாம் ஓக்கேதான். ஆனால் உண்மையிலேயே மால்கள் நம் நாட்டில் வெற்றி அடைந்திருக்கிறதா என்றால் சந்தேகம்தான். நெரிசலற்ற பார்க்கிங், முழுக்க குளிர்சாதனம், எஸ்கலேட்டர் வசதி, விழாக்கள் நடத்துவதற்குரிய வளாகம், திரையரங்குகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அழகு நிலையம், ஆடை விற்பனை அங்காடிகள், வீடியோ கேம்ஸ், உணவகங்கள் என்றெல்லாம் பொழுதுபோக்கையும், ஷாப்பிங்கையும் இணைத்து திட்டமிடுபவர்கள், இதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது செயல்பாட்டில் கோட்டை விட்டு விடுகிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்க்கும் விதமாக ‘கலர்ஃபுல் காம்பினேஷனில்’ கடைகள் அமைவதில்லை. ஒரு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைக்கு, அடுத்து பெண்களின் உள்ளாடை விற்கும் கடை என்பதுமாதிரி எகனைமொகனையாய் அமைந்துவிடுகிறது.

எப்படியாவது துண்டு போட்டு பெரிய மால்களில் இடம்பெற்றுவிடும் சில்லறை விற்பனையாளர்கள் போதுமான விற்பனை செய்யமுடியாமல் அல்லாடுகிறார்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இண்டர்நேஷனல் பிராண்ட் அந்தஸ்துடைய பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். இவற்றை விற்கும் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட பெரிய நிறுவனங்களோடு சரிக்கு சமமாக வளர்ந்துவரும் சிறிய நிறுவனங்களும் போட்டியிட வேண்டியிருக்கிறது. மட்டுமில்லாமல் மால்களில் இயங்கி கிடைக்கும் லாபத்தில் 25 முதல் 35 சதவிகிதம் வரை, இங்கே இருப்பதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்பது சில்லறை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக இருக்கிறது.

சென்னையில் தனியாக கட்டிடம் கட்டி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு சில்லறை விற்பனை நிறுவனம், ஆசை ஆசையாக பிரும்மாண்டமாக கட்டப்பட்ட ஒரு மாலில் இடம்பெற்று குடியேறினார்கள். “எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம். பெரிய இடத்தில் வியாபாரம் செய்வதால், விலையை கூட்டி விற்கிறோமோ என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி நம்மிடம் கூறினார்.

வாரயிறுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மால்களில் கூடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ‘ஷாப்பிங்’ செய்வதைவிட உணவருந்தவும், பொழுதுபோக்கவும்தான் விரும்புகிறார்கள். சினிமா திரையரங்கங்கள் இடம்பெற்றிருக்கும் மால்களிலேயே கூட்டம் அதிகமாக இருப்பதை நாம் கவனிக்கலாம். ஆனால் அந்த கூட்டமும் குறையத் தொடங்கியிருக்கிறது என்கிறார் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ரமேஷ்.

“மல்ட்டிப்ளக்சுகளிலேயே இவ்வசதிகள் வந்துவிட்டது. வசதியான சூழலை அனுபவிக்க மாலுக்கு வருபவர்கள் மைனாரிட்டிதான். மற்ற திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காத பட்சத்திலேயே மால்களில் இருக்கும் திரையரங்குகளுக்கு கூட்டம் சேருகிறது. ஆனால் திரையரங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய்தான் பார்க்கிங் கட்டணம். மால்களுக்கு வந்துவிட்டால் மூன்று மணி நேரத்துக்கு 50 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. வாரயிறுதிகளில் இன்னும் கூடுதல் கட்டணம். கார் பார்க்கிங்கெல்லாம் கொள்ளை. படம் பார்க்க டிக்கெட்டுக்கு செலவிடும் காசையே பார்க்கிங்குக்கும் செலவிட வேண்டுமானால் எப்படி? எனவேதான் ஆரம்பத்தில் மால்களில் சினிமா பார்க்க இருந்த ஜோர் இப்போது குறைந்துவருகிறது” என்று லாஜிக்கலாக பேசுகிறார் ரமேஷ்.

ஏற்கனவே மால்களுக்கு வந்தவர்களை திரும்பத் திரும்ப வரவைப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனால் அம்மாதிரி திரும்ப வரவைக்கவிடாமல் பார்க்கிங் கட்டணம் பயமுறுத்துகிறது. பொழுதுபோக்கு, உணவு, சினிமா, பேஷன் ஆகிய நான்கும்தான் மால்களின் வெற்றிக்கான கச்சிதமான ஃபார்முலா. இவை சரியான விகிதத்தில் கலந்திருக்கும் மால்கள் மக்களை கவரவே செய்கின்றன. சென்னையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்கு சராசரியாக 70,000 பேர்வரை தினமும் வருகிறார்கள். ஆனால் மால்களுக்கு வருகிற கூட்டத்தை எதையாவது வாங்கச் செய்வது எப்படி என்கிற ரகசியம் புரியாமல்தான் விற்பனையாளர்கள் மண்டையை குழப்பிக் கொள்கிறார்கள்.

மால்களுக்கு வந்துவிட்டு வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு செல்வதை ‘விண்டோ ஷாப்பிங்’ என்கிறார்கள். இதுதான் மால்களின் வெற்றிக்கு அச்சுறுத்தலான விஷயம். “ஷாப்பிங் மால்களுக்கு ஷாப்பிங் பண்ணதான் வரணும்னு இல்லை. வீட்டுலே போர் அடிச்சாலே வந்துடலாம். சும்மா கொஞ்ச நேரம் கடைகளை வேடிக்கை பார்த்துட்டு, டைம்பாஸ் பண்ணலாம். வேணும்னா எதுவாச்சும் சாப்பிட்டுட்டு போகலாம். எதுவும் வாங்கலேன்னு நம்பளை யாராவது போலிஸ்லேயா புடிச்சி கொடுக்கப் போறாங்க?” என்று நக்கலாக கேட்கிறார் சேலத்தை சேர்ந்த சுபாஷ். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் அகமதாபாத் மால் ஒன்றில், உள்ளே நுழையவே நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றதுமே வழக்கமாக வரும் கூட்டமும் கூட சிதறி ஓடியதுதான் மிச்சம்.

மெட்ரோ நகரங்களை தவிர்த்து அடுத்தக்கட்ட நகரங்களிலும் மால்கள் நிறைய திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கை படுமோசம். மதுரையின் பெரிய மாலான விஷால்-டி-மால் இரண்டரை லட்சம் சதுர அடியில், ஐந்து தளங்களோடு பிரும்மாண்டமாக திறக்கப்பட்டது. வாரநாட்களில் தினத்துக்கு சராசரியாக 500 பேரும், வாரயிறுதிகளில் 800 பேரும்தான் வருகிறார்கள் என்று அங்கே கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகிறார். இங்கே ஐனாக்ஸ் தியேட்டர் திரைகள் திறக்க அரசு அனுமதிக்கு காத்திருக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர் திறந்தபின் கூட்டம் வரலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

“பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க இளைஞர்கள் வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. ஆனால் பொருள் வாங்குவது குறைவுதான். அடிக்கடி வர ஆரம்பிப்பவர்கள் வாங்க தொடங்குவார்கள் என்று நம்புகிறோம். அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார் இந்த மாலின் பொதுமேலாளரான செந்தில்குமார்.

பெங்களூரை சேர்ந்த ஏசியாபேக் என்கிற நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, நாட்டில் நாற்பது சதவிகித மால்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன. பெரிய மால்கள் உடனடியாக வெற்றி காண்பது சாத்தியமில்லை. ஆனால் அடுத்த சில வருடங்களில் ‘மால் ஷாப்பிங்’ சொகுசை அனுபவிப்பவர்களால் இந்த கலாச்சாரம் பெருகும் என்று நம்பலாம்.

2005-06 ஆண்டுகளில் உத்தேசிக்கப்பட்ட மால்களே இப்போது ஆங்காங்கே துவக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதியதாக மால்களை உருவாக்க யாரும் இப்போது திட்டமிடுவதில்லை. ஏற்கனவே திறக்கப்பட்ட மால்களில் கூட கடைகள் காலியாகவே இருப்பதால், அதை குடியிருப்பாகவும், அலுவலகத்தேவைக்காகவும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதைய தேக்கநிலைக்கு நாட்டின் பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணம். தவிர்த்து சில்லறை விற்பனை முறைகளில் நாம் இன்னும் புதியதொழில்நுட்பங்களுக்கு மாறாத நிலையும் பிரதான காரணம். நம் மக்கள்தொகை மற்றும் இன்றைய நகரமயமாக்கல் வளர்ச்சியை கணக்கிடும்போது இந்தியாவில் இரண்டாயிரம் மால்கள் வரை இயங்க முடியும். சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு குறித்த மத்திய அரசின் சமீபத்திய கொள்கை முடிவு, மந்தமாகிவிட்ட மால் கலாச்சாரத்தை சரிக்கட்டிவிடும் என்றொரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

இப்போதைக்கு கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் வசதியாக ‘ஷாப்பிங்’ செய்ய மால்களை நாடுகிறார்கள். நடுத்தர வர்க்கம் ‘விண்டோ ஷாப்பிங்’குக்காக மால்களில் குவிகிறார்கள். ஏழைகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டே பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலை மாறினால்தான் மால்கள் வாழமுடியும். இதற்கு மால் நடத்துபவர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அயல்நாடுகளில் மால்கள் எப்படி இயக்கப்படுகின்றனவோ, அதே முறையை அப்படியே இங்கும் காப்பி & பேஸ்ட் செய்யக்கூடாது. நம் மண்ணுக்கேற்ற முறையில் சில மாற்றங்களை சிந்திக்க வேண்டும். வேடிக்கை பார்க்கவரும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமான விற்பனைமுறைகளை விற்பனையாளர்கள் முயற்சிக்க வேண்டும். பார்க்கிங் கொள்ளை கட்டணத்தை நிறுத்த வேண்டும். இதெல்லாம் நடக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நாமும் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆரம்பத்தில் கோயில்கள். பின்னர் சுற்றுலாத் தளங்கள், பீச், பார்க், கண்காட்சிகள், மியூசியங்கள், சினிமா, தீம்பார்க். இப்போது மால்கள். நாம் வேடிக்கை பார்க்கவும், பொழுதைப் போக்கவும் எப்போதும் ஏதாவது ஒன்று தயாராகதான் இருக்கிறது. ஆனால் இப்போது பொழுதுபோக்கு கொஞ்சம் கொஞ்சமாக காஸ்ட்லி ஆகிக் கொண்டிருக்கிறது. அதுதான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை”

9 நவம்பர், 2013

தன்வி வியாஸ்

எப்படி மனசுக்குள் வந்தாரென்றே தெரியவில்லை. வசதியாக சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டார் தன்வி வியாஸ். குஜராத்தி பெண்களுக்கே உரிய உயரமும், உடற்கட்டும் அசலாக அமைந்திருக்கிறது. கிராஃபிக் டிசைனரான தன்வி, வதோதரா என்கிற சிறுநகரில் பிறந்து அடித்துப் பிடித்து எப்படியோ குறிப்பிடத்தக்க அழகிப்போட்டியான மிஸ் ஃபெமினாவில் முடிசூட்டிக் கொண்டார்.

தமன்னா கலர். ஆரம்பகால நமீதா உடல். சராசரி இந்தியப் பெண்களுக்கே உரிய மங்களகரமான முகம். சிரிக்கும்போது கன்னத்தில் கிளாமராக குழி விழுகிறது. உதடுகள் ஹாட்டின் வடிவம். சாராயத்தில் ஊறவைத்த கண்கள். பார்த்ததுமே டக்கீலாவை கல்ப் அடித்தது மாதிரி உடலெல்லாம் கிறுகிறுக்கிறது. கிட்டத்தட்ட 'கொமரம்புலி’ நிகேஷா பட்டேல் லுக். நமீதா, நிகேஷா, தன்வி என்று அடுத்தடுத்து குஜராத்தி அழகிகள் தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக கவர்ச்சி சுனாமி கிளப்பிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இங்கே மோடி அலை அடிக்குமோவென்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.

ஆர்.எம்.கே.வி., ஹீரோ சைக்கிள்ஸ், பேண்டலூன்ஸ், ஜேபி சிமெண்ட்ஸ் என்று குறிப்பிடத்தக்க டிவி கமர்சியல்களில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ அவருக்கு போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது.

’டைரக்டர் ஆஃப் காதலில் விழுந்தேன்’ பி.வி.பிரசாத்தின் எப்படி மனசுக்குள் வந்தாய்?’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ படத்தில் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஸ்கோப் இருக்கும் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஃபேமிலி டிராமா மொக்கைதானென்றாலும் தன்வி தனியாக கவனிக்கப்படுமளவுக்கு செம பெர்ஃபார்மண்ஸ் கொடுத்திருக்கிறார். தாவணி, சேலை, சுடிதார், மாடர்ன் ட்ரெஸ் என்று எந்த அலங்காரத்திலும் எடுப்பாக இருக்கிறார்.

‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா?’ என்று அர்த்தம். தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சேலை, ஜாக்கெட்டை துறந்து டூ-பீஸில் தன்வி தோன்றும் அதிரடிக் காட்சியில் ரசிகர்கள் கோரஸாக ‘நூவ்வு சின்னப் பிள்ளா லேது’ (நீ சின்னப் பொண்ணு கிடையாது) என்று கத்துகிறார்கள்.

தென்னிந்தியாவில் ஒரு ‘ரவுண்டு’ கட்ட வாய்ப்பிருக்கிறது. தெலுங்கின் மஞ்சு சகோதர்கள், தமிழின் சிம்புகள் க்ரூப்பில் சிக்காமல் இருக்கும் பட்சத்தில்.

8 நவம்பர், 2013

எழுத்துரு விவாதம்

தமிழின் எழுத்துருவை ரோமன் வடிவில் எழுதலாம் என்று ஒரு நாளிதழில் யோசனை கூறியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். முதலில் ‘எழுத்துரு’ என்று ஜெயமோகன் பயன்படுத்துவதே தவறு. எழுத்துரு என்பது font. இதை பலர் சுட்டிக் காட்டிய பிறகும் இன்னமும் எழுத்துருவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன் ஒரு புது யோசனையை சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையாவென்று விவாதிப்போம் என்று அவரது அபிமானிகள் சொல்லி வருகிறார்கள். மிக ஜாக்கிரதையாக ‘டிஸ்கி’ போட்டு ‘ஜெயமோகனின் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால்’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அரங்கசாமி போன்ற விஷ்ணுபுர பக்தர்களை குறை சொல்ல எதுவுமில்லை. ‘வெள்ளை காக்கா பறக்கிறது’ என்று ஆசான் சொன்னால், ‘ஆமாம்’ போட்டுவிட்டு செல்கிறவர்கள்தான்.

ஜெயமோகனை போலவே நான் ஒரு யோசனை சொல்கிறேன். இதை விவாதிப்போமா நண்பர்களே?

புவி சூடேறுதல் காரணமாக வருடாவருடம் வெயில் ஏறிக்கொண்டே போகிறது. கடுமையான வெக்கையில் உடைகள் உடலுக்கு பெரும் துன்பமாக படுகிறது. எனவே தமிழ் சமூகம் உடையணிய வேண்டுமா என்று தோன்றுகிறது. அந்தமானில் கூட பழங்குடி சமூகத்தினர் உடை அணிவதில்லை.

‘உடைகள் வேண்டாம்’ என்று நான் கூறியிருப்பது புது யோசனை. பைத்தியக்காரத்தனமான யோசனைதான். கேட்டதுமே என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்றுகூட நான்கு பேருக்கு தோன்றும். ஆனாலும் அந்தமானில் உடை அணிவதில்லை, ஆப்பிரிக்காவில் மேலாடை கிடையாது என்று உதாரணங்கள் காட்டி என்னுடைய கேணைத்தனமான யோசனைக்கு தர்க்கரீதியாக சில பக்கங்களுக்கு என்னால் பலம் சேர்க்க முடியும். ஜெயமோகன் செய்துக் கொண்டிருப்பது இதைதான். இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. அவர் எந்த சிந்தனையை முன்வைத்தாலும் இப்படி அரைகுறையாகதான் இருக்கும். ஏனெனில் ஜெயமோகன் தன்னை சிந்தனையாளர் என்று கருதிக்கொள்ளும் சராசரி. எழுதத் தெரிந்தாலே சிந்தனையாளர் ஆகிவிடலாம் என்கிற அபத்தமான ஆபத்தான முடிவுக்கு நிறையபேர் வந்துவிட்டதுக்கு இவரொரு முக்கிய காரணம். புண்ணாக்கு விற்பவரெல்லாம் தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்கிற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிந்தனையாளர் என்றால் இந்தியாவில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள்தான். ஜெயமோகன்கள் இந்த லெவலா என்று உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் என்று ஜெயமோகன் அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். சமகால தமிழிலக்கியத்தில் அவர் தவிர்க்கமுடியாதவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஜெயமோகனின் நாவல்களும், சிறுகதைகளும் சிறப்பானவை. வேறெவரையும் விட அதிகமாக உழைத்து அசுரவேகத்தில் நிறைய பக்கங்களை எழுதிக் குவிக்கிறார். இன்னும் ஒரு இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சிறுபத்திரிகை வாசகர்கள் ஜெயமோகனை நினைவு வைத்திருப்பார்கள். ஆனால் இது மட்டும் தமிழுக்கு பெரும் பங்கு ஆற்றிவிட்டதற்கு போதுமானதல்ல. வெறும் எழுத்து மட்டுமே பங்களிப்பாகிவிடாது இல்லையா? எழுத்தை தாண்டி பாரதியார், உ.வே.சா போன்றவர்கள் பங்களித்தார்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது. எழுத்தின் மூலம் சில நிரந்தர வாசகர்களை ஜெயமோகன் பெற்றிருக்கிறார். சினிமாவில் எழுதி நிறைய பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தாண்டி ஜெயமோகனால் தமிழ் என்ன வளம் பெற்றிருக்கிறது. தெருத்தெருவாக சைக்கிள் ஓட்டி குழந்தைகளுக்கு தமிழ் கணிமை சொல்லிக் கொடுக்கும் புதுவை பேராசிரியர் இளங்கோவன் போன்றவர்கள்கூட இவ்வளவு கர்வமாக தமிழுக்கு பங்காற்றியதாக சொல்லிக்கொள்வதில்லையே?

சில குறிப்பிடத்தக்க நாவல்களையும், சிறுகதைகளையும், அச்சுபிச்சுவென்று அரசியல் பேசும் கட்டுரைகளையும் எழுதியிருப்பதால் மட்டுமே தமிழுக்கென்றிருக்கும் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லும் தகுதி ஜெயமோகனுக்கு வந்துவிடவில்லை. தமிழ் மொழியை சீர்த்திருத்தவும், அடுத்தடுத்த தளங்களுக்கு எப்படி கொண்டுச் செல்லலாம் என்கிற கவலையையும் கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் ஏற்கனவே பல்லாண்டுகளாக பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக யோசித்து வருகிறார்கள். பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தும் வருகிறார்கள். முகுந்த், நாகராஜன் மாதிரி தமிழ் படித்த அடுத்த தலைமுறை இளைஞர்கள், தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி எதிர்கால எந்திரங்களில் எப்படியெல்லாம் தமிழை சாத்தியப்படுத்தலாம் என்றும் உழைத்தும் வருகிறார்கள். எனவே தமிழின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, ஜெயமோகன் முழு ஈடுபாட்டோடு மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதும் வேலையை பார்க்கலாம்.

பெரியார் தொடங்கி வா.செ.குழந்தைசாமி வரை இதே யோசனையை சில வேறுபாடுகளுடன் முன்பே சொல்லி விவாதிக்கப்பட்ட கருத்து என்று வடிகட்டிய புளுகுமூட்டையை வேண்டுமென்றே அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன். பெரியார் எங்குமே தமிழுக்கு பங்காற்றப் போவதாக சொல்லி எழுத்துச் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. அவர் பத்திரிகை நடத்தி வந்தவர். அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே ‘பெரியார் தமிழ்’ உருவானது. ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று பெரியாரா சொன்னார்? பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் யோசனை எழுத்து வடிவம் தொடர்பானது. கொம்பு, சுழி போன்றவற்றை நீக்கி எழுத்துகளை எளிமைப்படுத்தும் பட்சத்தில் கற்றல் எளிமையாக இருக்கும். கணினி தொடர்பான எந்திரங்களுக்கு தமிழை கொண்டுவருவதற்கு உதவியாகவும் இருக்குமென்பது பேராசிரியரின் யோசனை. அவர்களுக்கு இணையாக தன்னையும் தானே ஒப்பிட்டுப் பேசுவது அற்பத்தனமின்றி வேறில்லை. சீண்டுவதற்காக சொன்னேன் என்று சொல்லுபவரிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?

அடுத்து இந்த யோசனையை சொல்லியதற்காக தமிழகமே பற்றியெரிவது போன்ற மாயையை ஜெயமோகனும், அவரது சிஷ்யக்கோடிகளும் திட்டமிட்டு இணையத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை எங்குமே ஜெயமோகனின் கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி நடத்தி ‘ஜெயமோகன் ஒழிக’ என்று யாரும் கோஷமிடவில்லை. இதெல்லாம் நடக்கும் என்பதுதான் ஜெயமோகனின் எதிர்ப்பார்ப்பு. ‘அவர் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டார், அவ்வளவு ஒர்த்தும் இல்லை’ என்று வெறும் கண்டனத்தோடு தமிழர்கள் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இந்துமுன்னணி ஜெயமோகனை அச்சுபிச்சுவென்று வெறேதோ விவகாரத்துக்காக திட்டி வைத்த ஒரு பேனரை தன் வலைத்தளத்தில் போட்டு, என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் பாருங்கள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டின் அலுவலகத்துக்கு கூட்டமாகப் போய் கலாட்டா செய்தார்கள், வன்முறை செய்தார்கள் என்றெல்லாம் காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய தத்துவ மரபின் பிள்ளைகள். பதினைந்து பேர் என்பதை கூட்டமென்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியுமென்றே தெரியவில்லை. இவர்களது ‘சிகரெட் பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது’ சுவிசேஷக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து பழகிவிட்டவர்களுக்கு பதினைந்து பேர் என்பதும் பெரும் கூட்டமாக தெரிகிறது. தமிழுக்காக அணி திரளவேண்டுமென்றால் லட்சங்களில்தான் தமிழர்கள் அணிதிரள்வார்கள் என்பது வரலாறு.

தங்களுக்கு மடத்தனமாக பட்ட ஒரு யோசனையை கண்டித்து சம்பந்தப்பட்ட கட்டுரையை வெளியிட்ட நாளேட்டின் ஆசிரியரிடம் கண்டனக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் சுபவீ தலைமையிலான தமிழார்வலர்கள். இது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைதான். இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று ஒரு கோஷ்டி ஊளையிடுகிறது. தி ஹிந்து நாளேட்டின் ஆசிரியருக்கு, அன்று கடிதம் கொடுக்க வந்த அனைவருமே பழக்கமானவர்கள்தான். அந்த பத்திரிகையே கூட பதினைந்து பேர் கொண்ட பெரும் கூட்டம் தங்களை அச்சுறுத்தியாக கூறவில்லை. கண்டனக் கடிதம் கொடுக்கவந்தவர்களை மதித்து ஆசிரியரே நேரில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இம்மாதிரி சர்ச்சைக்குரிய கட்டுரைகளோ, கருத்துகளோ வரும் சமயங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போனிலோ, நேரிலோ எதிர்வினையை யாராவது செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘நடிகையின் கதை’ தொடர் வந்தபோது, குமுதம் அலுவலகத்துக்கு சண்டை போடும் நோக்கில் வந்த நடிகர்-நடிகையரை அப்போதைய ஆசிரியர் மாலன் வரவேற்று, அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டறிந்தார். சமீபத்தில் புதிய தலைமுறை அலுவலகத்துக்கு கூட முன்னூறு பேர் கொண்ட கும்பல் மொத்தமாக லாரியில் வந்திறங்கியது. அவர்களை அழைத்து தன்மையாக பேசி, அவர்கள் தரப்பை கேட்டறிந்து அனுப்பினார்கள். இது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம்தான். ‘மாட்டுக்கறி’ மேட்டரில் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவமாக பதினைந்து பேர் கூடி கடிதம் கொடுத்ததை ஜெயமோகனின் கும்பல் ஒப்பிட்டுப் பேசுவது விளம்பரவெறியே தவிர வேறல்ல.

திடீரென்று பெரியாரின் பகுத்தறிவு என்னானது என்று ஜெயமோகனுக்கு பெருங்கவலை ஏற்பட்டிருக்கிறது. அதை பெரியாரின் விசுவாசிகள் பட்டுக் கொள்வார்கள். ஏதாவது ‘தத்துபித்து’வென்று உளறிக்கொட்டி, அந்த அபத்தத்தை கண்டு ஊரெல்லாம் கைக்கொட்டி சிரிக்கும்போதெல்லாம் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி ‘நானும் ரவுடிதான்’ என்று ஜீப்பில் ஓடிப்போய் ஏறிக்கொள்வார் ஜெயமோகன்.

எதிர்வினை நாகரிகமாக இருக்கவேண்டுமென்று திரும்பத் திரும்ப ஜெயமோகனின் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், யாராவது அநாகரிகமாக திட்டுங்களேன் என்று கெஞ்சுவதைப் போல இருக்கிறது. ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. அந்த வரலாற்றை கொச்சைப்படுத்துவதைப் போன்ற கருத்தை வேண்டுமென்றே சீண்டலுக்காக சொல்லுவது என்பது, எப்படியோ தன் பெயரை நல்லபடியாகவோ, கெட்டபடியாகவோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அற்ப எதிர்ப்பார்ப்பே தவிர வேறில்லை.

செத்த மொழியான சமஸ்கிருதத்தை இப்போது இந்திய ஞான மரபாளர்கள் ஆங்கில லிபியில் வாசித்து, மனப்பாடம் செய்கிறார்கள். அப்படியிருக்கையில் தமிழை மட்டும் தனி வரிவடிவத்திலேயே தமிழர்கள் இன்னும் வைத்திருக்கிறார்களே என்கிற பொச்செரிச்சல்தான் இந்த ‘எழுத்துரு’ யோசனைக்கு பின்னாலிருக்கும் நிஜமான சூட்சுமம் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது.