25 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

நல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக மற்றவர்களுக்கு வார்த்தையால் கூட சொல்லி புரியவைக்க முடியாத இரண்டாம் உலகத்தை திரையில் காட்சிகளாக்கி காட்டுவது என்கிற சவாலை செல்வராகவன் முயற்சித்திருக்கிறார்.

கனவுலகம் எல்லாருக்குமே பாதுகாப்பான உலகம். அந்த உலகின் இயக்கத்தை கனவு காண்பவன் தன் கையில் இருக்கும் ரிமோட்டால் கட்டுப்படுத்தலாம். நாம் நினைத்த பெண்ணை காதலிக்கலாம். நமக்கு பிடிக்காதவனை ரஜினி ஸ்டைலில் பறந்து பறந்து அடிக்கலாம். ஆடி காரில் உலா வரலாம். தம் அடிக்கலாம். பீர் குடிக்கலாம். அயல்நாட்டு அழகிகளோடு ஜல்சா செய்யலாம். கனவு காண பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. கனவுகள் அந்தரங்கமானவை. கனவு முடிந்து விழித்தபிறகு பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. தான் கண்ட கனவு என்று யாராவது விடும் கதை அனேகமாக புனைவாகதான் இருக்கும். முக்கியமாக கனவுக்கு வண்ணமில்லை. கருப்பு வெள்ளையில்தான் கனவு இருக்குமென்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கெல்லாம் கனவு வந்தே கால் நூற்றாண்டு இருக்குமென்பதால், அது கருப்புவெள்ளையா, வண்ணமா, சினிமாஸ்கோப்பா என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. மேலும், கனவில் ‘ஒலி’ உண்டா என்கிற குழப்பமும் இருக்கிறது. இப்படியிருக்கையில் அப்துல்கலாம் போன்றவர்கள் கனவுகாண சொல்லும்போது, அது எப்படி இந்திய இளைஞர்களுக்கு சாத்தியமாகும் என்று அயர்ச்சிதான் ஏற்படும்.

இது ஒரிஜினல் கனவு. பகல் கனவு என்றொன்று உண்டு. சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, பைக்கில் பயணிக்கும்போதோ, டாய்லெட்டில் இருக்கும்போதோ சுய இன்பம் மாதிரி நாமாக ‘விஷூவல்’ அமைத்து, சிந்தனையிலேயே ஓட்டும் ஃபிலிம் இன்னொரு வகை கனவு. ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வகை கனவுகள் அவர்களது பாலியல் வறட்சிகளுக்கு பசுமை பாய்ச்சக்கூடிய தன்மை கொண்ட கனவுகளாகவே இருக்கக்கூடும். இம்மாதிரி கனவிலேயே காலத்தை ஓட்டினால், பொழைப்பு நாறிவிடுமென்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவார்.

செல்வராகவன் காட்ட விரும்பிய இரண்டாம் உலகம் கனவாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ இருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தேன். அப்படியும் படம் ஓக்கே ரகம் கூட இல்லை.

இது நிஜமாகவே ‘பண்டோரா’ மாதிரி கிரகம் என்று அவர் எடுத்திருந்தால் அதற்கான உழைப்போ, ரசிகனுக்கு பரிமாறப்பட வேண்டிய ஃபேண்டஸியான உணர்வோ திரையில் தென்படவில்லை. ‘அவதார்’ எடுப்பதற்கான டெக்னாலஜி வரும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு கருவை அடைகாத்து சுமந்து, அதுவரை திரைக்கதையை செதுக்கிக் கொண்டிருந்தார் கேமரூன் என்பார்கள். செல்வராகவன் இரண்டாம் உலகத்துக்காக இன்னும் சிலவருடங்கள் பிள்ளைத்தாய்ச்சியாகவே இருந்திருக்கலாம்.

படம் பார்த்த கவிஞர் ராஜசுந்தரராஜன் புது ‘கான்செப்ட்’ சொன்னார். ஒரு உலகம் திராவிட உலகம். மற்றொன்று ஆரிய உலகம். அனுஷ்காவுக்கு அதனால்தான் ‘வர்ணா’ என்று பெயர் என்றார். அவரது இந்த பார்வைக்காகவே இன்னொரு முறை ஆரிய-திராவிட அரசியல் படமாக இதை அணுகிப் பார்த்தால் வேலைக்காகுமா என்று பார்க்கவேண்டும்.

அனுஷ்கா ஆண்ட்டி ஆகிவிட்டார். தொப்பை குலுங்க அவர் ஓடியாடி சண்டை போடுவதை காண அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே கூட படம் பிடிக்கவில்லையோ என்னவோ?

1 கருத்து: