23 செப்டம்பர், 2008

பரபரப்பான பத்து நிமிடங்கள்!



ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை பார்த்தவர்கள் மின்னலை கண்டதாக சொல்கிறார்கள். சபாஷ் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை. ஷூமேக்கர் வேகத்தில் ஒரு போலிஸ்காரர் காரை ஓட்டிச்செல்ல காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு உயிரைக் காக்க...

ஹிதேந்திரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள். மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அப்பாவின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?

மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.

மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!

இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!

மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.

5 செப்டம்பர், 2008

விகடன் தாத்தாவின் பரிசு



பரிசு பெறுவது என்றாலே மகிழ்ச்சி தானே? சிறுவயதில் எவ்வளவோ நாட்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், ஒரு பேனாவாவது தருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா ஏமாற்றியிருந்தாலும் இப்பொது விகடன் தாத்தா பரிசு தந்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார். என் தாத்தா கூட எனக்கு பரிசு எதுவும் தந்ததில்லை. பரிசு என்பதை விட பலரும் உயர்வாக மதிக்கும் பத்திரிகையின் அங்கீகாரம் என்பது தான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. இப்போது நான் கையில் கட்டிக்கொண்டிருக்கும் பாஸ்ட் ட்ராக் வாட்ச் விகடன் தாத்தா பரிசாக தந்தது. நேரம் பார்க்கும்போதெல்லாம் வாட்சுக்குள் இருந்து ‘நேரத்தை ஒழுங்காக பயன்படுத்து' என்று விகடன் தாத்தா அட்வைஸ் செய்வது போலவே இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் கவிதை (?) போன்ற தோற்றமளிக்கும் எனது எழுத்து கால் பக்கத்துக்கும் குறைவான இடத்தில் வந்திருந்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருந்த ஒவ்வொரு வீடாகப் போய் “விகடனில் என் எழுத்து வந்திருக்கிறது” என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன். வாசித்த சில பேர் பாராட்டுவதற்கு பதிலாக (என் குடும்ப உறுப்பினர்கள் உட்பட) நல்லவேளையாக காறி உமிழாமல் விட்டதே பெரிய விஷயமாக போய் விட்டது. ம்ம்ம்.. ஞானச்சூனியங்களுக்கு எங்கிருந்து பின்நவீனத்துவ இலக்கியங்கள் புரியப் போகிறது? அதன் பின்னர் அப்படி ஒரு கவிதை எழுதியதையே மறந்துவிட்டிருந்தேன்.

இன்று மதியம் சாப்பிட்டு முடித்தபிறகு கண்ணை திறந்துகொண்டே தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு போன். ”விகடனில் இருந்து ஜி.எம். சீனிவாசன் பேசுறேன். நீங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யூத் செக்‌ஷனில் எழுதியிருந்த கவிதைக்கு ஒரு வாட்ச் ப்ரைஸ் கிடைச்சிருக்கு. ஆபிஸ் வந்து கலெக்ட் பண்ணிக்குங்க”. தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையோடு மரியாதையாகவே “சரிங்க சார்.. ஓக்கே சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்று சொல்லி போனை வைத்தேன். எல்லாரும் திட்டுன ஒரு கந்தாயத்துக்கு விகடனாவது, பரிசு கொடுப்பதாவது என்று நினைத்தேன். அதுவும் விகடனின் ஜி.எம். (மார்க்கெட்டிங்) போன் செய்து ஒரு சாதாரண வாசகரோடு பேசுவாரா?

இருந்தாலும் ஒரு நப்பாசை. விகடனோடு தொடர்புடைய வேறொரு நண்பருக்கு தொலைபேசி, ”விகடனில் சீனிவாசன் என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இருக்கிறார். அவர் தான் ஓனர்” என்றார் நண்பர். “ஹலோ சீரியஸா கேட்குறேன்” என்று சொல்லி மேட்டரை சொன்னபின்பு, விகடனில் ஜி.எம்.மாக இன்னொரு சீனிவாசன் இருப்பது உறுதியானது. என் அலுவலகத்திலிருந்து பத்து நிமிட இருச்சக்கர வாகன பயண தூரம் தான், ஆனால் வழக்கமாக டிராபிக்கில் முப்பது நிமிடமாகும். ஆர்வம் தாங்காமல் நேராக விகடன் அலுவலகத்துக்கே சென்று விட்டேன்.

பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்று விகடன் ஊழியர் சொன்னபோது நம்பவே முடியவில்லை. முகத்தில் அந்த பிரமிப்பை காட்டாமல் 'எவ்வளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ரொம்ப சாதாரணம்' என்பது போல நடிப்பது கொஞ்சம் கடினம் தான். விருந்தினரை உபசரிப்பது போல வாசகர்களையும் உபசரிப்பதில் விகடனின் பாரம்பரியம் இன்னமும் கில்லி மாதிரி நின்று ஆடுகிறது. பரிசுக்கு பொறுப்பான அந்த ஊழியர் விகடனின் புதிய வடிவம் பற்றி கருத்து கேட்டார். விலை பதினைந்து ரூபாய்க்கு எகிறிவிட்டதால் சர்க்குலேஷன் குறைந்திருக்கிறதா என்று கேட்டதுக்கு, ”இல்லை, கூடியிருக்கிறது” என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

பரிசுகள் வழங்குவதில் எப்போதுமே விகடன் குழுமத்துக்கு இணையாக யாருமே இல்லை. பவளவிழா கொண்டாட்டத்தின் போது ஒரு கோடி ரூபாய்க்கு பரிசு வழங்கியிருந்தார்கள். இதெல்லாம் பத்திரிகைத் துறையில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. இப்போது விலை கூடியிருந்தாலும் லேப்டாப், செல்போன் என்றெல்லாம் அதிரடியாக பரிசுகள் வழங்குவதால் வாசகர்கள் அதிகரித்திருக்கிறார்களாம். சென்னையில் இருக்கும் வாசகர்களுக்கு அவர்களது அலுவலகத்துக்கே வரவழைத்து பரிசு கொடுத்து வருகிறார்கள்.

ஜி.எம். அறையில் விகடனின் உயரதிகாரி ஒருவர் எனக்கு பரிசினை கையளித்தார். ஜி.எம்.மும் விகடனின் புதிய வடிவம் குறித்து கேட்டார். அதுவுமில்லாமல் “புதிய விகடன் குறித்த கருத்துக்களை நேரடியாக விகடன் ஆசிரியரிடமே சொல்லிவிடுங்கள்” என்று போனில் லைனை போட்டு வேறு கொடுத்துவிட்டார். பத்திரிகையாளர்களிடம் பேசுவது என்றாலே எனக்கு கொஞ்சம் உதறல் தான். “விகடன் குறித்த எண்ணங்களை தயவுசெய்து எழுதியோ, நேரம் கிடைத்தால் அலுவலகத்துக்கு வந்து நேரிலோ சொல்லுங்கள். வாசகர்களது விருப்பு, வெறுப்புகளை என்றுமே விகடன் புறந்தள்ளியது இல்லை” என்று விகடனின் ஆசிரியர் அசோகன் சொன்னார். இருவருக்கும் நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

எனக்குப் பிடித்த கருப்பு நிறத்தில், அசத்தல் ஸ்டைலான டைட்டனின் பாஸ்ட் ட்ராக் வாட்ச் தான் பரிசு. சிலந்தி வலை படமெல்லாம் போட்டிருக்கிறது. ஸ்பைடர் மேன் ட்ரெஸ் போட்டுக்கொண்டு இந்த வாட்ச்சை கட்டிக்கொண்டால் செம மேட்ச்சாக இருக்கும். ஒரே ஒரு குறை. இதில் ஆனந்த விகடன் லோகோ இல்லை. யாரிடமாவது ஆனந்த விகடனின் பரிசு என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். விகடன் தாத்தா படம் பொறித்திருந்தால் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும்.