30 ஜூன், 2016

விஜயமகேந்திரன் படைப்புகள்

விஜயமகேந்திரனை எனக்கு எப்போதிலிருந்து தெரியும் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் டிசம்பர் 26, 2009 அன்று அவரது முதல் நூலான ‘நகரத்திற்கு வெளியே’ சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து தெரியும். அந்த நூல் மிகச்சிறப்பாக அச்சிடப் பட்டிருக்கிறது என்று அவரிடம் பாராட்டுதல்களை தெரிவித்தேன். அதற்கு பிறகு அவர் எந்த நூலையும் இதுவரை ஏன் அச்சிடவில்லை என்பது தெரியவில்லை. பிற்பாடுதான் தெரிந்தது அந்நூலை அச்சிட்டவர்கள் உயிர்மை பதிப்பகத்தார் என்று. உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர்தான். அவரை தேடிச்சென்று இதற்காக பாராட்டினேன். இந்த பாராட்டுதல்கள் எனக்குரியவை அல்ல. அந்நூலை அச்சிட்ட மணி ஆப்செட்டாருக்கு போய் சேரவேண்டும் என்று பெருந்தன்மையாக அவர் ஒதுங்கிக் கொண்டார். இந்த பெருந்தன்மை ஏற்படுத்தும் முரண்தான் இலக்கியப் புனைவின் சுவாரஸ்யமே. அதனால்தான் நாமெல்லாம் இலக்கியத்தில் இருந்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது. மணி ஆப்செட்டாரின் முகவரி என்னிடம் இல்லாததால் அவர்களுக்கான என் பாராட்டுதல்களை ஏழு வருடமாக அப்படியே காத்து வருகிறேன்.

ஒருமுறை சென்னை அசோக்பில்லர் வழியாக நான் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு டீக்கடை இருந்தது. டீக்கடை வாசலில் விஜயமகேந்திரனும் இருந்தார். “டீ சாப்பிடலாமா?” என்று அவர் கேட்டார். “சாப்பிடலாமே” என்று நான் சொன்னேன். இருவரும் சாப்பிட்டோம். எனக்கு சர்க்கரை கொஞ்சம் கூடுதலாக வேண்டும். அவரோ கொஞ்சம் சர்க்கரை குறைவாக போட்டு குடித்தார். அப்போது ஒரு டீயின் விலை நான்கு ரூபாய்தான். விஜயமகேந்திரன் டீக்கடைக்காரருக்கு பத்து ரூபாய் தந்தார். நான் மீதம் இரண்டு ரூபாயை கொடுத்தேன். டீக்கடைக்காரரோ அதை மறுத்து, நான்தான் உங்களுக்கு மீதம் இரண்டு ரூபாய் தரவேண்டும் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக எங்கள் இலக்கிய நட்பு ஆழமாக வளர்ந்தது.

2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சிற்றேடுகளில் சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று எழுதிவரும் விஜயமகேந்திரனுக்கு இலக்கியத்தில் இது பத்தாம் ஆண்டு. ஆனால் அவரை 1978லிருந்தே சிற்றேடு வட்டாரம் அறியும். ஏனெனில் அவர் அப்போதுதான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பே புதுமைப்பித்தன் மறைந்துவிட்டார்.

எனினும் புதுமைப்பித்தனின் வரிசையில்தான் விஜயமகேந்திரனையும் சேர்க்க வேண்டியிருக்கிறது. இருவரும் சிறுகதை மரபின் வேர்கள் என்கிற அடிப்படையில் இந்த ஒப்பீட்டை நான் செய்ய வேண்டியிருக்கிறது. சிலர் இதை ஒப்புக் கொள்ளலாம். பலர் இதை மறுக்கலாம். ஆனால், உண்மை என்பது உண்மைதான்.

விஜயமகேந்திரனின் படைப்புகள் பெரும்பாலும் பெண் புனைவை அடிப்படையாக கொண்டவை. புதுமைப்பித்தனின் கதைகளில் பெண் புனைவும் உண்டு. பேய் புனைவும் உண்டு. அவ்வகையில் பார்க்கப் போனால் நகுலனின் சுசிலாவே விஜயமகேந்திரனின் பாத்திரவார்ப்புகளுக்கு முன்னோடி என்பது பூடகமாக அவரது ‘நகரத்திற்கு வெளியே’ தொகுப்பில் தொக்கி நிற்கிறது.

நகுலனுக்கும், விஜயமகேந்திரனுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் திருவனந்தபுரத்தில் வசித்தார். இவர் சென்னையில் வசிக்கிறார். இருவரையும் ஒப்பிட வேண்டுமானால், இருவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள் என்கிற அம்சத்தைதான் குறிப்பிட வேண்டும்.

அசோகமித்திரனின் தாக்கம் விஜயமகேந்திரனுக்கு உண்டு என்று நினைக்கிறேன். அசோகமித்திரனை நான் பிறந்தபோதே அறிவேன். ஏனெனில் நான் பிறந்தபோதே அசோகமித்திரனுக்கு என்னுடைய தாத்தா வயது ஆகியிருந்தது. அவர் அப்போது கணையாழியில் நிறைய எழுதிக் கொண்டு இருந்தார்.

அசோகமித்திரனின் மிகப்பெரிய பிரச்சினையே அவர் அறுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். சுமார் முன்னூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அந்த கதைகளின் தலைப்பை மட்டுமாவது மனப்பாடம் செய்துக் கொண்டு கூட்டங்களில் பேசுவதற்குள்ளாகவே விஜயமகேந்திரன் யாரென்பதே மறந்துவிடும்.

மாறாக மெளனியும், மாமல்லனும் நம்முடைய ஆட்கள். இவர்களை குறிப்பிட்டு கூட்டங்களில் பேசுவதோ, சிற்றேடுகளில் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவதோ சுலபம். இருவருமே தலா முப்பது கதைகள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு துண்டுச் சீட்டில் எல்லாக் கதைகளின் தலைப்பையும் எழுதி கையில் மறைத்து வைத்துக் கொண்டோமானால், கூட்டங்களில் பேசும்போது அப்படியே பார்த்து கதைகளின் தலைப்பை ஒப்பித்து கைத்தட்டல்களை அள்ளிவிடலாம்.

மெளனியின் கதை புரியாது என்பதே மெளனியின் பிரச்சினை. மெளனியே அதை வாசித்துப் பார்த்தாலும் அவருக்கே புரியாது என்றுதான் கருதுகிறேன். மாறாக மாமல்லனின் கதைகள் எளிதில் புரிந்துவிடுகிறது என்பதே மாமல்லனின் பிரச்சினை. மெளனியோ மாமல்லனோ என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஏதாவது எழுதியிருக்கிறார்கள் என்பதே இலக்கிய உலகத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜயமகேந்திரனையும் நாம் இதே மரபில் கொண்டு நிறுத்தலாம். ஆனால், அவர் கவிதையும் எழுதியிருக்கிறார். மெளனியோ மாமல்லனோ கவிதை புனைந்ததாக எனக்கு நினைவில்லை. அப்படி எழுதியிருப்பார்களேயானால் அதை நான் வாசிக்கவில்லை. வாசித்த வாசகர்கள் என்ன ஆனார்களோ என்றும் தெரியவில்லை.

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். அவர் சிரித்தார். நான் சிரித்தேன். அவர் முறைத்தார். நான் பதிலுக்கு முறைக்கவில்லை. ஏனெனில் இதுதான் இலக்கிய பண்பாடு. இப்படிதான் ந.பிச்சமூர்த்தியும், க.நா.சு.வும், சிலம்பொலி செல்லப்பாவோ எழுத்து செல்லப்பாவோ யாரோ ஒருவரும் இருந்தார்கள். நாம் மட்டும் ஏன் வேறுமாதிரி இருக்க வேண்டும்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் மரபில் வந்தவர் விஜயமகேந்திரன் என்பதை நிறுவுவதற்காக நான் இந்தப் பெயர்களை இங்கே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மணிக்கொடியும், வானம்பாடியும் இருவேறு துருவங்கள். உயிர்மையும், காலச்சுவடும் கூட அதே மாதிரிதான். விஜயமகேந்திரன் உயிர்மையில் எழுதினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

பிரமிளை எனக்கு நேரடியாக தெரியாது. அவரை எனக்கு தெரியாது என்கிற செய்தி அவருக்கு தெரிவதற்கு முன்பாகவே காலமாகி விட்டார். ஒருவேளை தெரிந்திருந்தால் ஆத்மாநாம் அகாலமரணம் அடைந்திருக்க மாட்டார். ஆத்மாநாம் அம்பத்தூரில் வசித்த கவிஞர். ‘ழ’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. ஆனால், இங்கே எதையாவது குறிப்பிட நினைத்தால் எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. இதுவும் இலக்கியம் ஏற்படுத்தும் சுவாரஸ்யமான புதிர்தான். என் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஆத்மாநாமை பிடிக்கும். சுந்தரும் அம்பத்தூரில்தான் வசிக்கிறார் என்பதால் இருக்கும்.

வைத்தீஸ்வரனின் கவிதைகளில் கதைத்தன்மை இருக்கும். விஜயமகேந்திரனின் கதைகளில் கவிதைத்தன்மை இருக்கும். இந்த பொதுவான புள்ளியே இருவரும் இணைக்கும் நேர்க்கோடாக அமைகிறது.

ஞானக்கூத்தனின் கவிதைகளை ‘யாத்ரா’வில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் யாத்ராவில் எழுதியிருக்கிராறா என்று தெரியவில்லை. அவரது கவிதைகள் higher standard என்பார்கள். அவர் ஐயரா, ஐயங்காரா என்று தெரியாமல் எப்படி ஐயர் ஸ்டேண்டர்டில் அவர் கவிதைகளை reposition செய்ய முடியும் என்கிற கேள்வி எனக்கு தொக்கி நிற்கிறது. எனினும் அவரது கவிதைகளில் நுணுக்கமும், நுட்பமும் பூடகமாக செயல்படும் என்பதே வாசகர்களுக்கு முக்கியமானது. நுணுக்கத்துக்கும், நுட்பத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியாது. இரண்டுமே சிற்றேடுகளில் அதிகம் பிரயோகிக்கப்படும் சொற்கள் என்பதால் நூதன சிருஷ்டியாக இதை உபயோகப்படுத்த வேண்டி வருகிறது.

இந்த நுட்பமும், நுணுக்கமும் நகுலனுக்கு அலாதி. அவர் இறந்துவிட்டார். இருந்திருந்தால் இப்படியொரு கவிதை எழுதியிருப்பார்.

விஜயமகேந்திரன்

--

வி




கே

ந்

தி


ன்

--

ன்


தி

ந்

கே




வி

--

இது நானாக நகுலன் எப்படி எழுதியிருப்பார் என்று கருதி புனைந்த கவிதை. பிரமிள் உயிரோடு இருந்திருந்தால் இது கவிதையா என்று கேட்டு என் சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பார். இது ஏன் கவிதையில்லை என்று பதிலுக்கு நான் கேட்டிருப்பேன். வெங்கட்சாமிநாதன் என்னை ஆதரித்து கடிதம் எழுதியிருப்பார். அவரை டெல்லியிலேயே நான் அறிவேன். பிற்பாடு மடிப்பாக்கத்தில் வசித்தார். கடைசிக்காலத்தில் பெங்களூரில் இருந்தார். நல்ல மனிதர். சிறந்த விமர்சகர். இறந்துவிட்டார்.

விஜயமகேந்திரன் இப்போது ‘ஊடுருவல்’ என்றொரு நாவலை ஏழு ஆண்டுகளாக எழுதிவருகிறார். அது வாசகர்களை எப்போது ஊடுருவும் என்பதை விஜயமகேந்திரனும் அறிய மாட்டார். நானும் அறியமாட்டேன். பிரமிளோ, நகுலனோ, ஆத்மாநாமோ, ந.பிச்சமூர்த்தியோ, புதுமைப்பித்தனோ, சுந்தரராமசாமியோ, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்த அறியாத்தன்மை இலக்கிய உணர்வின் இன்னொரு வெளிப்பாடு.

ஒட்டுமொத்தமாக விஜயமகேந்திரனின் இலக்கிய வாழ்வையும், படைப்புகளையும் ஒருவரியில் எப்படி சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவரியில் அவரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால், ‘விஜயமகேந்திரன்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தலாம்.

9 ஜூன், 2016

சுந்தர ராமசாமியை அறிய...


மறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.

இந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.

என் மனதுக்கு எப்போதும் மிக நெருக்கமான எழுத்தாளராக சுந்தர ராமசாமி இருந்து வருகிறார். ஒரு படைப்பை, ஆளுமையை எப்படி புரிந்துக் கொள்வது என்பதற்கு ‘கோனார் நோட்ஸ்’ போட்டவர் அவர். குறிப்பாக அவரோடு பழகிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய ‘நினைவோடை’ நூல்வரிசை, தமிழிலக்கியம் குறித்த புரிதலுக்கான மனத்திறப்பாக அமைந்தன. தமிழில் புக்கர் பரிசு வாங்கக்கூடிய தகுதி கொண்ட இருநாவல்களை எழுதியிருப்பவர் (’ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நாவலை மட்டும் படிக்க ஏதோ மனத்தடை)

சுந்தர ராமசாமி குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். பவுத்த அய்யனார், தேவிபாரதி, ஜெயமோகன் ஆகியோர் அவர் குறித்து எழுதியவை என்னை மிகவும் கவர்ந்தவை.

சாகித்ய அகாதெமிக்காக ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசைநூலுக்கு அரவிந்தன் எழுதியிருப்பது, இதுவரை எழுதப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் கறாரானதாகவும், துல்லியமானதாகவும் சுராவை மதிப்பிட்டிருப்பதாக வாசிக்கும்போது தோன்றுகிறது. சுராவின் வாசகன் என்பதைவிட மாணவன்/தொண்டன்/ரசிகன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு அவரை ஆராதிக்கக்கூடியவராகதான் அரவிந்தனை நினைக்கிறேன். ஆனால், தன்னையும், சு.ரா.வையும் தள்ளி வைத்துவிட்டு மூன்றாம் மனிதராக அவர் எழுதியிருக்கும் இந்நூல் ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டு எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது.

ஏற்கனவே சுராவை அறிந்தவர்களுக்கும் சரி. புதியதாக அவரை வாசிக்க திட்டமிடும் வாசகர்களுக்கும் சரி. வாசிப்புக்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக திட்டமிட்டு பெருங்கடலை சிறு பாட்டிலுக்குள் அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் அரவிந்தன். 1950களின் முற்பகுதிகளில் தொடங்கி, இரண்டாயிரங்களின் மத்தி வரை வாழ்ந்த ஒரு மனிதரின் நீண்ட வாழ்க்கையையும், அவரது நெடிய இலக்கிய அனுபவங்களையும் குழப்பமில்லாத அழகிய கோலமாக வரைந்துக் கொடுத்திருக்கிறார்.

மிகச்சுருக்கமாக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டிருக்கும் சுராவின் வாழ்க்கை குறித்த அறிமுகக் கட்டுரையில் தொடங்கி அவரது இலக்கியப் பணிகள் குறித்த மேலும் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்திரிகை என்று பன்முகமாக விரிந்த சுராவின் இலக்கியப் பணிகளை துறைவாரியாக எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகள், சுராவின் இலக்கியத்தை எவ்வாறு தாக்கப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகள் சுவாரஸ்யம்.

நீண்டகால இலக்கிய வாழ்வில் புதிது புதிதாக உருவாகும் போக்குகளை சுரா உன்னிப்பாக அவதானித்ததையும், அவற்றை அவர் எப்படி உணர்ந்து தன்னை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டு நீடித்தார் என்பதையும் அவரது எழுத்துகளில் இருந்தே உதாரணப்படுத்திக் காட்டியிருப்பதில் இருந்து சுராவை எவ்வளவு ஆழமாக அரவிந்தன் வாசித்திருக்கிறார் என்று உணரமுடிகிறது. சுராவின் எழுத்தில் வடிவம், மொழி, உள்ளடக்கம் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை காலவாரியாக தகுந்த எடுத்துக் காட்டுகளோடு வரிசைப்படுத்தி அடுக்கியிருப்பது அழகு.

‘அவசியம் வாசித்தே ஆகவேண்டிய நூல்’ என்று ஒரு புத்தக அறிமுகத்தை முடிப்பது தேய்வழக்கான சம்பிரதாயம்தான். ஆனால், இந்நூலைப் பொறுத்தவரை அதைதான் சொல்லியாக வேண்டும்.
நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுந்தர ராமசாமி
எழுதியவர் : அரவிந்தன்
பக்கங்கள் : 128
விலை : ரூ.50
வெளியீடு : சாகித்திய அகாடமி,
குணா பில்டிங்ஸ் (இரண்டாவது தளம்),
எண்.443 (304), அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018. போன் : 044-24311741

8 ஜூன், 2016

இறைவி

டைட்டிலே பெருமழை சத்தத்தோடுதான் தொடங்குகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளோ கழித்து நடைபெறவிருக்கும் கல்யாணம் குறித்து கனவு காணும் ஓர் இறைவி, மறுநாளே கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் ஓர் இறைவி, கல்யாணம் முடிந்து கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து முடித்த ஓர் இறைவி.

அந்த மழைநாளில் இந்த இறைவிகளின் அப்போதைய மனநிலைதான் படத்தின் தொடக்கம். படம் முழுக்கவே பாத்திரங்களின் உணர்வுபூர்வமான எழுச்சியிலோ, வீழ்ச்சியிலோ சாட்சியாக ஜோவென மழை கொட்டுகிறது.

படத்தில் விஜய்சேதுபதி, “என்ன கான்செப்ட்?” என்று கேட்கிறார். ‘மழையில் நனைய விரும்பும் இறைவிகள்’ என்பதுதான் கான்செப்ட். இறுதியில் ஒரே ஒரு இறைவிதான் நனைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதா மூவருக்கும் tribute செய்யப்பட்டு படம் தொடங்குகிறது. நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பட்டியலில் மணிரத்னத்தையும், ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணனையும் கூட சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ‘மவுன ராகம்’ ரேவதிக்குப் பிறகு மழையை அதிகம் காதலிப்பவர்கள் இவர்கள்தான்.

இறைவிகளின் கதையாக மட்டும் ‘இறைவி’ இருந்திருக்கலாம். கான்செப்டை மீறி இறைவன்களின் திருவிளையாடலாக மாறிவிட்டதுதான் ‘இறைவி’யின் சோகம்.

‘கோவலன் அல்ல கேவலன்’ என்கிற பாபிசிம்ஹாவின் கோபம் ஒருவகையில் நியாயமே. ‘வயிற்றுக்குள் இருக்கும் குட்டியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புதுக்குட்டியை எப்படி பிரசவிக்க முடியும்?’ என்கிற எஸ்.ஜே.சூர்யாவின் லாஜிக்கும் சரிதான். படைப்பாளியின் வலியை இன்னொரு படைப்பாளியாக புரிந்துக் கொள்ளும் சிற்பியான ராதாரவியின் பாத்திர வார்ப்பும் அருமை. வைப்பாட்டி மீதிருந்த ஆசையும், மோகமும் அற்றுப்போக மனைவியை நாடிவந்து வாழ விரும்பும் நேரத்தில் எல்லாம் ஏதோ பிரச்சினைகளால் பிரிய நேரும் விஜய் சேதுபதியின் பரிதவிப்பும் உணரக்கூடியதுதான்.

எல்லாம் இருந்தும் ‘இறைவி’யை ஏன் வழிபட முடியவில்லை என்றால் படத்தின் மையத்துக்கு தொடர்பில்லாமல் அலைபாயும் காட்சிகளாக தயாரிப்பாளரின் ஈகோ, சிலை கடத்தல் என்று திரைக்கதை கோட்டை தாண்டி ஓடிக்கொண்டே இருப்பதால்தான்.

நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா?

இருபத்து நான்கு வயதில் தன் தலையை தவிர அத்தனையையும் அடகு வைத்து தங்கைக்கு திருமணம் செய்துவைத்த ஆணை எனக்குத் தெரியும். மனைவி உடல்நலிவுற்ற காலத்தில் urine pan பிடித்தவனையும் தெரியும். வாங்கும் சம்பளத்தை அப்படியே கவர் பிரிக்காமல் அம்மாவிடம் கொடுத்து, அம்மா கொடுக்கும் காசில் தன் செலவுகளை சுருக்கிக் கொள்பவனையும் தெரியும். எலாஸ்டிக் போன ஜட்டியை அரைஞாண்கயிறின் உதவியால் அட்ஜஸ்ட் செய்து மாட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கு பர்த்டே டிரெஸ்ஸை ஆடம்பரமாக எடுக்கும் ஆண்களை கார்த்திக் சுப்புராஜ் அறியமாட்டாரா என்ன?

அறிவார். ஆனால், பெண்ணியம்தான் இப்போது பேஷன். அது நிஜமான பெண்ணியமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. பெண்ணியம் மாதிரி ‘போலச் செய்துவிட்டால்’ போதும். ‘கல்யாணமெல்லாம் வேணாம், just fuck me’ என்று பூஜா திவாரியா, விஜய் சேதுபதியை கூப்பிட்டு கூடும்போது சத்யம் சினிமாஸில் ஐடி ரசிகர்கள் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். போதாதா?

‘வித்தியாச விரும்பி’ என்று நாலுபேர் புகழ்ந்து, அப்படியொரு பெயரெடுத்து தொலைத்து விட்டதாலேயே, இயல்பாக இருக்க முடியாமல் சொந்த வாழ்க்கையிலும் கூட ஏதாவது வித்தியாசமாக இருந்துத் தொலைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆட்பட்டு மெண்டல் ஆகிப் போனவர்கள் சினிமாவிலும், இலக்கியத்திலும் ஏராளம்.

சினிமாவை சினிமா என்று சினிமாக்காரர்கள் அழைத்துக் கொண்டிருந்த போதெல்லாம் தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டர் வாசலில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்கள் வரை சந்தோஷமாகதான் இருந்தார்கள். ‘படைப்பு’, ‘படைப்பாளி’ என்று எப்போது கெத்து கூட்ட ஆரம்பித்தார்களோ, அன்று பிடித்தது ஏழரை நாட்டு சனி. இன்றுவரை தொடர்கிறது.

இறுதிக்காட்சியில் பாபிசிம்ஹாவை விஜய்சேதுபதி கொல்கிறார். விஜய்சேதிபதியை எஸ்.ஜே.சூர்யா கொல்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரசிகர்களை கொன்றுவிட்டார்.

‘இறைவி’ முடிந்ததும் நல்ல மழையில் நனைந்தேன். ஆண்கள், நனைய விரும்புவதுமில்லை. மழையில் நனைய அச்சப்படுவதுமில்லை.

1 ஜூன், 2016

On that ground, I can divorce you!

எண்பத்தைந்து வயதில் தமிழில் முதல் நூலை எழுதுவதில் ஒரு சவுகரியம் இருக்கிறது. கதை விடுவதற்கு சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது. எண்பது ஆண்டு அனுபவம் கை கொடுக்கும். இரண்டாவதாக நாம் சொல்லும் கதைகளை வாசகர்கள் நம்பிதான் ஆகவேண்டும். சர்ச்சைகளை மறுத்துப் பேச நினைப்பவர்கள் ஏற்கனவே மரணித்து இருப்பார்கள்.

இதனால்தான் சாருஹாசன் இத்தனை ஆண்டுகளாக நூல்வெளியிடாமல் காத்துக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்டோ பயோகிராபியான ‘அழியாத கோலங்கள்’ அதகளமென்றுதான் சொல்ல வேண்டும். யாரையுமே விட்டுவைக்கவில்லை. போட்டுத் தாக்கி விட்டு போய்க்கொண்டே இருக்கிறார். தமிழின் முக்கியமான தன்வரலாற்று நூல்களில் இதையும் ஒன்றாக தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய ராமநாதபுரம் ஜில்லாவை எப்படி இவ்வளவு தத்ரூபமாக நம் கண் முன்பாக அவரால் நிறுத்த முடிகிறது என்று தெரியவில்லை. சாருஹாசனின் ஞாபகசக்தி அத்தனை துல்லியமாக ஆச்சரியப்படுத்துகிறது. அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் பார்த்த ஆங்கில, மவுனப் படங்களின் காட்சிளையும், வசனங்களையும் அப்படியே இப்போதும் நினைவுகூர்கிறார்.

பரமக்குடியின் பிரபல வக்கீல் சீனிவாசனின் மகன். அவருடைய அப்பாவுக்கு காமராஜரும் நெருக்கம், ராமநாதபுரம் ராஜாவும் நெருக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி, தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் உலகநாயகன் பிறப்பதற்கு பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகநாயகன் வீட்டில்தான் தங்குவார்கள்.

உலகநாயகனுக்கு அண்ணன், மணிரத்னத்துக்கு மாமனார், சுஹாசினிக்கு அப்பா... அதெல்லாம் சரிதான். ஆனால், ஒன்பது வயது வரை ஸ்கூலுக்கே போகாதவர் சாருஹாசன். பள்ளியிலும் கொஞ்சம் மந்தமான மாணவர்தான். அடித்துப் பிடித்து எப்படியோ வக்கீல் ஆகிறார். மேல்படிப்பு படித்து அயல்நாட்டுக்கெல்லாம் போய் நன்கு சம்பாதித்து வாழலாம் என்று ஆசைப்படுகிறார். ஆனால், வாழ்க்கை அது பாட்டுக்கும் அடித்துச் செல்ல, எதிர்நீச்சல் போடாமல் அதன் போக்கிலேயே வாழ்கிறார். கடந்த காலம் குறித்து கசப்போ, நிகழ்காலம் குறித்து இனிப்போ, எதிர்காலம் குறித்து எதிர்ப்பார்ப்போ எதுவுமில்லை. பெரிதும் சவால்கள் இல்லாத சராசரி வாழ்க்கைதான். எனினும், அதையே ரசித்து ருசித்து வாழ்ந்திருப்பதால்தான் சாருஹாசன் குறித்து வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

இவரை வாசிக்கும்போது ஒரு மாதிரி எடக்குமடக்கான ஆள் என்கிற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ‘கமலின் போர்க்கால மனைவிகளின் தாக்குதல்’ என்பது மாதிரி அவர் உபயோகப்படுத்தும் அதிரடி சொற்பிரயோகங்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.

சாருஹாசனுக்கு அப்போது வயது இருபத்து ஐந்தை கூட எட்டவில்லை.

“நீ ஸ்மோக் பண்ணுறேன்னு தெரியும். குடிப்பியான்னு சந்தேகப்படறேன். வேற என்ன என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. உனக்கு குடும்பப் பொறுப்பு வரணும்” என்கிறார் அப்பா சீனிவாசன்.

“எனக்கு கல்யாணம், குடும்பம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” விட்டேத்தியாக பதில் சொல்கிறார் இவர்.

“You need sex. You are born, because your parents had sex…”

“If you worried about my sex, I know where to find it and when to find it”

“நீயா தேடினா அதுக்குப் பேர் தேவடியாதனம். நாங்க பண்ணிவெச்சாதான் அதுக்குப் பேர் கல்யாணம்”

அப்பாவுக்கும், மகனுக்கும் இதுபோன்ற வாதப்போர் நடப்பது அதிசயமில்லை. ஆனால், இந்த விவாதம் நடந்த ஆண்டு 1954 என்பதுதான் ஆச்சரியம்.

அப்போது சாருவின் அம்மா முழுகாமல் இருக்கிறார். “டெலிவரிக்கு அப்புறம் இருப்பேனோ, இருக்க மாட்டேனோ தெரியலை. இப்பவே உன் கல்யாணத்தை பார்க்கணும்”

மறுநாளே பெண் பார்க்கிறார்கள். சில நாட்களில் கல்யாணம். சாருஹாசனுக்கு கல்யாணம் ஆகி சரியாக அறுபத்தைந்தாவது நாளில்தான் உலகநாயகன் பிறந்தார்.

(நான் உலகநாயகனுக்கு உயிர் கொடுக்குமளவுக்கு ரசிகன்தான் என்றாலும், இந்த கட்டுரையில் கமல் என்பதற்குப் பதில் உலகநாயகன் என்று அடிக்கடி சொல்லுமளவுக்கு மறைகழன்ற ரசிகனல்ல. இருப்பினும், சாருவே கமலை குறிப்பிடும்போதெல்லாம் பெரும்பாலும் ‘உலகநாயகன்’ என்றே குறிப்பிடுவதால் நானும் அப்படியே குறிப்பிட்டுத் தொலைக்கிறேன்).

சாருவின் மனைவி அந்த காலத்திலேயே சர்ச்பார்க் காண்வென்டில் படித்தவர். கொஞ்சம் தூரத்து உறவுதான் போலிருக்கிறது. அவரது அம்மா உறவுமுறை சொல்லியிருக்கிறார். “என் மாமன் மகன் சக்கரவர்த்தி அய்யங்காரோட மனைவியின் சகோதரி மகள்”. இந்த இடத்தில் ஓபன் பிராக்கெட்டுக்கும், குளோசிங் பிராக்கெட்டுக்கும் இடையில் சாருவின் கமெண்ட். “உலகநாயகனின் சொந்தக்காரர்களில் ஒருவர் பேசுவதை போல இருக்கிறதா? இது உலகநாயகனின் சொந்த தாய் அய்யா!”

கல்யாணம் ஆன கொஞ்சநாளில் மனைவிக்கு ஆங்கிலத்தில் ஒரு காதல் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு எந்த பதிலுமே இல்லை. ஒருமுறை ஆதங்கமாக அதைப் பற்றி கேட்டபோது, அந்த லெட்டரில் இருந்த கிராம்மர், ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையெல்லாம் சரிசெய்து - அதாவது ப்ரூஃப் ரீடிங் - கொடுத்து, இப்படியெல்லாம் செய்தால் எப்படி பதிலுக்கு லவ்வு வரும் என்று கேட்டிருக்கிறார். சாருஹாசன் அதற்கு பிறகு அறுபது ஆண்டுகளாக காதல் கடிதமே எழுதியதில்லை.

---

தொழில் வக்கீல்தான் என்றாலும் அப்பா அளவுக்கு பெருசாக சம்பாதித்தவர் இல்லை. திமுக உருவாகி வளர்ந்துக் கொண்டிருந்த காலத்தில் நிறைய கேஸ் எடுத்திருக்கிறார். அவர் ஃபேமஸான கேஸ் ஒன்று முக்கியமானது.

மதுரையில் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பார்ட்டைமாக கோர்ட்டுக்கும் போய் கேஸ் பார்க்கிறார். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் இவர் ரோட்டில் நடந்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு முன்பாக திடீரென்று ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்கிறது. அந்த ஜீப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருக்கிறார்.

“என்னை இமானுவேல் கேசுலே கைது பண்ணிட்டாங்க. அப்பா கிட்டே சொல்லி ஜாமீன் போடச் சொல்லு. நீயும் ஆஜராகணும்”

உடனே அடுத்த பஸ் பிடித்து ஊருக்குப் போய் அப்பாவிடம் விவரம் சொல்கிறார். “நான் காங்கிரஸ்காரன். கட்சிக்கு விரோதமா தேவருக்கு ஆஜராக மாட்டேன்” என்கிறார் அப்பா.

வீம்பாக இவரே மதுரைக்கு போய் மனுதாக்கல் செய்கிறார். தேவருக்கு ஜாமீன் கேட்டதால், சடாரென புகழ் பெற்று வெற்றிகரமான வக்கீல் ஆகிவிட்டார்.

---

சாருஹாசன் வெற்றிகரமான வக்கீலோ இல்லையோ, ஐம்பது வயதுக்கு மேல் நடிக்க வந்து தேசியவிருதெல்லாம் வாங்கிய நடிகர்.

நூலின் இரண்டாம் பாகம் முழுக்க சினிமாத்துறை நண்பர்கள், அவரை பாதித்த கலைஞர்களை பற்றி எழுதுகிறார். ஒரு மாதிரி மாற்று சினிமா ஆளாக அறியப்படும் சாருஹாசன் பாக்யராஜ், டி.ராஜேந்தர், சிலுக்கு, மணிவண்ணன் போன்றோரைப் பற்றியும் அவர்களுடனான தன்னுடைய அனுபவங்களையும் நறுக்காக குறிப்பிடுகிறார்.

டி.ஆருடன் ‘ஒரு தாயின் சபதம்’ படத்தில் சாருஹாசன் நடித்திருக்கிறார். ஒரே ஒரு துண்டு பேப்பர் கூட கையில் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர் உலகிலேயே இவர் ஒருவர்தான் என்கிறார்.

டி.ஆர் குறித்து சாருஹாசன் குறிப்பிடும் ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது.

கிரேனில் மேலே அமர்ந்து கேமிரா கோணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் டி.ஆர்.

சட்டென்று, “யாருடா அவன் ஃபீல்டுலே செருப்பைப் போட்டவன். கிரேனை இறக்குடா. அந்த செருப்பாலேயே அவனை நான் அடிக்கப்போறேன்” என்று சொல்லி கீழே இறங்குகிறார்.

கீழே வந்ததும்தான் தெரிகிறது. அந்த செருப்பு டி.ஆருடையதுதான். ஆனால், சொன்ன சொல்லை காப்பாற்ற அந்த செருப்பையெடுத்து தன்னைதானே மூன்று முறை தலையில் அடித்துக் கொள்கிறார்.

---

கமல் பற்றி சாரு எழுதியிருப்பதெல்லாம் அவுட் ஆப் த ஸ்டேடியம் சிக்ஸர்ஸ். குறிப்பாக வாணியோடு வாழ்ந்து கொண்டிருந்தபோது சரிகாவையும் கமல் மெயிண்டெயின் செய்ய பட்ட கஷ்டங்கள், அதற்கு இவரது உதவிகள் என்று ரொம்ப பர்சனலான விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் போட்டு உடைக்கிறார்.
ஆயினும், கமலை மிக நல்ல மனிதனாகவே மதிக்கிறார். திருமணம் குறித்த கமலின் சிந்தனைகளை, அதன் நியாயங்களின் அடிப்படையில் இவர் ஏற்றுக் கொள்கிறார்.

ஒருமுறை வீட்டில் நடந்த பஞ்சாயத்து ஒன்றை அப்படியே எழுதுகிறார் சாரு.

“என் வீடு, என் நாய், என் தோட்டம், என் டிவி, என் கேமிரான்னு சொல்லிக்கிட்டே போறாளே. காலையிலேருந்து சாயங்காலம் வரை ஷூட்டிங்கில் உடல் ஒடிஞ்சு சம்பாதிக்கறவன் நான். என்னோடதுன்னு எதுவுமில்லையா?” - கமல்.

“நேத்து ஈவ்னிங் இவர் ரெண்டு மணி நேரம் நடிகை சரிகாவோட அறையில் இருந்திருக்கார். ஆன் தட் கிரவுண்ட், ஐ கேன் டிவர்ஸ் யூ” - கமலை நோக்கி அவர் மனைவி வாணி.

எப்படியோ இருவரையும் சமாதானம் செய்து அப்போதைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சாரு, பாட்டிலை ஓப்பன் செய்கிறார். வேலையிலிருந்து திரும்பாத தன் மூத்தமகளின் நினைவு திடீரென வருகிறது. மனைவியிடம் கேட்கிறார்.

“ஒய் மை டாட்டர் ஈஸ் நாட் பேக் ஃப்ரம் ஹாஸ்பிடல்?”

“மிஸ்டர், அன்லெஸ் ஐ டெல் யூ. ஷீ காண்ட் பீ யுவர் டாட்டர்” மனைவியின் சுருக் பதில்.

“தட் வாஸ் குட் ஒன்” அடுத்த ரவுண்டுக்கு பாட்டிலை கவிழ்க்கிறார்.

“மிஸ்டர், யூ ஆர் கோயிங் ஃபோர்த் ரவுண்ட். ஆன் தட் கிரவுண்ட், ஐ கேன் டைவோர்ஸ் யூ”

“மேடம், ஐ வொர்ஷிப் தி கிரவுண்ட் ஆன் விச் யூ டிவோர்ஸ் மீ”

“குட் ஒன்! வாங்க சாப்பிடலாம்”

இப்போதும் இப்படிதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சாருஹாசன்.

‘குங்குமம்’ இதழில் ‘அழியாத கோலங்கள்’ என்கிற தலைப்பில் சாருஹாசன் எழுதிய சுயவரலாற்றுத் தொடர் நூலாகவும் வெளிவந்திருக்கிறது. ராவான ஒரு மனுஷனை பிடித்து படிக்க விரும்பும் வாசிப்பு சாகஸ அனுபவத்துக்காக இந்நூலை வாசிக்கலாம்.
நூல் : அழியாத கோலங்கள்
எழுதியவர் : சாருஹாசன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
போன் : 42209191 extn : 21125. மொபைல் : 7299027361