30 டிசம்பர், 2008

திருவண்ணாமலை

ஆக்‌ஷன் ஜோதியில் ஹாஃப் பாயில் போட்டிருக்கிறார் பேரரசு. ஆக்‌ஷன் தான் வேலைக்காகும். ஆன்மீகத்தால் ஆட்டையைப் போடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன் கிங் என்றாலே அதிரடி. ஒன்றுக்கு இரண்டு ஆக்‌ஷன் கிங்குகள், நிறைய பெப்பர் போட்டு டபுள் ஆம்லெட். இரட்டை கிங்குகள் இம்சை அரசர்களாக மாறி மாறி வில்லன்களை வதைக்க, பேரரசுவும் தன் பங்குக்கு டாக்டர் சுவாமிமலை என்ற டுபுக்கு வேடத்தில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி பஞ்ச் ஃபுட்பால் ஆடுகிறார். இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள். தாங்கலை சாமியோவ்.
 
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார். கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது. பேரரசு படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் ஒரு டெம்ப்ளேட்டில் அடக்கிவிடலாம். ஹீரோ, ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி மாற்றி ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
 
பாவம், நல்ல நடிகரான சாய்குமார் பேரரசுவு படத்தின் வில்லனாகி ஐசியூ பேஷண்ட் மாதிரி பரிதாபமாக ஆகிவிட்டார். கவுண்ட் டவுன் சொல்லி அர்ஜூன் அறிமுகமாகும் ஓபனிங் ப்ளாக்கெல்லாம் அரதப்பழசு. இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். பட்டாசுக் கிடங்கில் பஸ்பமான அர்ஜூன் டிரைனேஜ் வழியாக க்ளைமேக்ஸில் எழுந்துவருவது நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.
 
இந்தப் படத்தில் கருணாஸ் காமெடியன். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதியே சக்கைப்போடு போடுகிறது. திருவண்ணாமலை? வையாபுரி என்றொரு காமெடியன் முன்பு இருந்தார் நினைவிருக்கிறதா? அவரும் வந்துப் போகிறார். மருந்துக்கு கூட காமெடி இல்லை. அர்ஜுன் படங்களில் இதுவரை காமெடி மட்டுமாவது உருப்படியாக இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.
 
திக்குத்தெரியாத காட்டில் திசைபுரியாமல் குழம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்கள் இண்டர்வெல்லில் படம் திடுக்கென்று யூ டர்ன் அடித்து ஆன்மீகம் பக்கமாக திரும்பும்போது நிமிர்ந்து உட்காருகிறார்கள். அதுக்கப்புறமும் வழவழா கொழகொழா தான். வில்லன்கள் திரும்ப திரும்ப மோதுகிறார்கள். ஆக்‌ஷன் கிங் அடித்து உதைத்து ஓட ஓட விரட்டுகிறார். இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
 
தமிழினத்தின் பெருமைக்காக தமிழர்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர் துறந்திருக்கிறார்கள். தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?

23 டிசம்பர், 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு!


கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் 22-12-08 அன்று மாலை யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் வெளியிட விளம்பரத்துறை வல்லுநர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.

முதல் நூல் மதிப்புரையினை சோம.வள்ளியப்பன் நிகழ்த்தினார். 'தான் கண்டிப்பானவன், விமர்சனமென்று வந்துவிட்டால் கத்தியை தூக்கிவிடுவேன்' என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்து அந்நூலை எழுதிய எழுத்தாளரை பேதிக்குள்ளாக்கினார். ஸ்டிலெட்டோவால் அறுவைசிகிச்சை செய்துவிடுவாரோ என்று பீதியுற்ற நிலையில் இருந்தபோது, நல்லவேளையாக மயிலிறகால் தடவிக்கொடுத்தார்.

'ஒரு புத்தகம் என்பதை வாசகன் அணுகும்போது அவனை எழுத்தாளர் முதல் அத்தியாயத்திலிருந்து கையைப் பிடித்து கடைசி அத்தியாயம் வரை அழைத்துச் செல்லவேண்டும். இடையில் தம் அடிக்கலாமா, மூடிவைத்து விட்டு நாளைக்கு படிக்கலாமா என்று தோன்றக்கூடாது. இந்நூலாசிரியர் வாசகனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்' என்றவர், அவருக்குத் தோன்றிய ஓரிரு குறைபாடுகளை மட்டும் இறுதியாக சுட்டிக் காட்டினார். சோம. வள்ளியப்பன் நிகழ்த்தியது மதிப்புரையாக இல்லாமல் வாழ்த்துரையாகவே பட்டது. பேச்சின் இடையிடையே இயல்பாக நகைச்சுவையை நுழைக்கும் சாமர்த்தியம் அவருக்கு கைவந்த கலை.

அடுத்ததாக வாசகர்களோடு கலந்துரையாடல்.

விளம்பரங்கள் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு நூலாசிரியர் சுமாராக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணனும், பத்ரியும், சோம.வள்ளியப்பனும் அவ்வப்போது பதில் சொல்லி யுவகிருஷ்ணாவை காப்பாற்றினார்கள். "அரசியல்வாதிகளை ஏன் விளம்பரங்களுக்கு மாடல்களாக விளம்பர ஏஜென்ஸிகள் ஒப்பந்தம் செய்வதில்லை?" என்ற முத்துக்குமாரின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நூலாசிரியர் நொந்து நூடுஸ்லாகிப் போனார். விளம்பரங்களில் 'கருப்பு ஆகாது' என்ற பார்ஷியாலிட்டி இருப்பதாக முரளிகண்ணன் சொன்னார். இதற்குப் பின் அரசியல் இருப்பதாக பா.ராமச்சந்திரன் விமர்சித்தார்.

யுவகிருஷ்ணாவிடம் வாசகர்கள் சிலர் ஆட்டோகிராப் வாங்கியது தான் இரண்டாவது நாள் நிகழ்வில் நடந்த உச்சபட்ச காமெடி. வலைப்பதிவிலிருந்து ஒரு எழுத்தாளர் உருவாகியிருந்ததால் இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஏராளமான வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள்.

'எழுத்தாளர்கள் வலைபதிவது மிக சுலபம். ஆனால் ஒரு வலைப்பதிவாளர் புத்தகம் எழுதி எழுத்தாளராக உருமாறுவது மிக மிகக்கடினம்' என்பது என் சொந்த அனுபவம். வலைப்பதியும் போது ஒரு பதிவினை எழுதிக்கொண்டிருக்கும் போதே 300, 400 வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் மனசுக்குள் ஒரு மணி அடிக்கும், பஞ்ச் லைன் வைத்து முடித்துவிட்டு 100, 200 பின்னூட்டங்களை மிகச்சுலபமாக வாங்கிவிடலாம்.

150 பக்கங்களில் புத்தகம் எழுத 20,000 வார்த்தைகளும், குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதக்காலத்திலும், எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளும் ஏற்படும் உளவியல்ரீதியான சிக்கல்களை எழுத்துக்களால் விவரிப்பது சிரமமானது. புத்தகம் எழுதுவதற்கு பின்னான உழைப்பு என்பது அசுரத்தனமான சாதகமாக இருக்கவேண்டியது. ஒற்றைக்காலில் நின்று செய்யவேண்டிய தவம். அடிவருடி, சொம்புதூக்கி ரீதியிலான விமர்சனங்கள் ஆரம்பத்தில் மன உறுதியை குலைக்கவும் கூடும். இதுபோன்ற மொள்ளமாறி விமர்சகர்களால் 40 வார்த்தைகளில் வசைபாட மட்டும் தான் முடியும், நம்மால் மட்டும் தான் எழுதமுடியும் என்ற மன உறுதி இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முரட்டு வைத்தியம் துணைகொண்டு சமாளிக்க முடியுமானால் நீங்களும் ஒரு வாசகருக்கு கையெழுத்து போடக்கூடிய அந்தஸ்தை பெறமுடியும். கையெழுத்து போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் அதிர்வுகளை என்னவென்று சொல்வது? ரிக்டர் ஸ்கேலில் கூட அளக்கமுடியாது. 2009ல் எழுத்தாளர்களாக பரிணாமம் பெறக்கூடிய நிஜமான தகுதியிருக்கும் வலைப்பதிவர்களை இப்போதே வாழ்த்துகிறேன்.

21 டிசம்பர், 2008

ஒரு கடிதம்!

பர்சனல் கேள்விகள் -

லக்கிலுக்,

இப்படி மாய்ந்து மாய்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறீரே. உலக சினிமா எல்லாம் பார்ப்பதுண்டா? அதைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லையே!

அடல்ட் விஷயங்கள் எல்லாம் அழகாக எழுதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் யாரும் இதையெல்லாம் படித்துக் கண்டனம் தெரிவிப்பதில்லையா?

அப்புறம் உங்க வெப்சைட்டை ஏன் நான் டெய்லி படிக்கிறேன்னு யோசிச்சுப் பார்த்தா உங்ககிட்ட குமுதம் டச் இருக்கு.

என்னமோ காலங்கார்த்தால் இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.

- பெயர் சொல்ல விரும்பாத பிரபல எழுத்தாளர் **************


* - * - * - * - * - * - * - * - * - * - * - * -

அன்பின் **************** சார்!


இதுபோல தனிமடலில் அணுகும் உங்கள் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
இனிமேல் நானும் மற்ற வலைப்பதிவர்களை இம்முறையிலேயே அணுகலாமா என்று யோசிக்கிறேன்.

1) நான் சினிமா பார்ப்பது கொண்டாட்டத்துக்காக. உலக சினிமா பார்த்து நொந்துபோய் மூலையில் உட்கார்ந்த காலமும் உண்டு :-(

2) நான் பிலாக் எழுதுவது என் உறவினர்களுக்கு (குறிப்பாக குடும்பத்துக்கு)
தெரியாது என்பதால் அடிச்சி ஆடமுடிகிறது.

3) நான் குமுதம் வெறியன். தாய்ப்பாலோடு குமுதமும் ஊட்டப்பட்டிருக்கிறது (என்
அம்மா குமுதத்தின் தீவிர வாசகி)

4) நன்றி! :-)

19 டிசம்பர், 2008

திண்டுக்கல் சாரதி!


திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.

தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.

பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.

தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.

சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.

ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.

சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!

நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.

“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”

“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”

“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”

“போங்க டாக்டர்”

“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”

படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.

திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.

17 டிசம்பர், 2008

தமிழக அரசியல் நிலவரம்!

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!!  - என்ற செந்தழல் ரவியின் பதிவை வாசிக்க நேர்ந்தது. அதிமுக தொண்டர் ஒருவரே திமுக ஆட்சியை பாராட்டும் அளவுக்கு நிர்வாகம் நடந்துவருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களால் திமுக கூட்டணி 2004ல் வென்றதைப் போல 40க்கு 40 வெல்ல வாய்ப்பேயில்லை என்பது தான் நடைமுறை யதார்த்தம். உண்மையில் சொல்லப் போனால் கடந்த மாதம் வரை 40க்கு 40லும் திமுக கூட்டணி தோற்பதற்கான வாய்ப்பு தான் பிரகாசமாக இருந்தது.
 
அதே பதிவில் கார்க்கி என்ற நண்பர் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியிருக்கிறார், மின்சாரம் குறித்து. கார்க்கியின் கடந்த சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் கவனித்த வகையில் அவருக்கு கலைஞர் தலைமையிலான தமிழ்நாட்டின் முன்னேற்றம் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சியையே அளித்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது. மின்சாரத்தை கையாளுவதில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பது உண்மைதான்.
 
இதற்காக நிச்சயமாக ஆற்காடு வீராசாமியின் பதவியையும் மாற்றியிருக்க வேண்டியது அவசியம். டேட்டா குவெஸ்ட் சர்வேயில் மின் ஆளுகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் கூட அந்த நேரத்தில் தினமும் 7 மணிநேர மின்வெட்டு (சென்னையில் ஒரு மணிநேரம் தான்) இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஆனால் இதுவும் இப்போது பழைய கதையாகி விட்டது. மின்வெட்டை கண்டித்து அதிமுக கூட இப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இயலாத அளவிற்கு மின் ஆளுகை முன்பிருந்த நிலைக்கு வந்துவிட்டது. மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட எந்த தமிழனும் 'கருணாநிதி ஒழிக!' என்று சொல்லாமல் 'ஆற்காடு வீராசாமி ஒழிக!' என்று சொல்லுமளவுக்கு கலைஞரின் செல்வாக்கு ஸ்டெடியாகவே இங்கிருக்கிறது.
 
அடுத்ததாக அதே பதிவில் அத்திரி என்ற நண்பரின் பின்னூட்டம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. பாவம், மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்தோடு மீண்டும் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் வெளிவராதவர் இவர். அவர் காழ்ப்புணர்வில் கூறிய சில பிரச்சினைகளை தவிர்த்து பார்க்கப் போனால் மீதிப் பிரச்சினைகள் அனைத்துமே இந்தியாவுக்கே பொதுவானவை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளின் பாதிப்பு அதிகம். மக்கள் நிராகரித்துவிட்ட குடும்ப அரசியல் கோஷத்தை அத்திரி போன்றவர்கள் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
 
ஓக்கே இவர்களை விட்டுத் தள்ளுவோம். எந்த காலத்திலும் கலைஞரால் இவர்களை திருப்திபடுத்தி விடவே முடியாது. இவர்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் பிரச்சினை ஆட்சியின் பேரில் அல்ல. கலைஞரின் பேரில். முதல் பத்தியில் நான் குறிப்பிட்டதைப் போல 40க்கு 40ம் தோல்வி என்ற நிலையில் தான் நவம்பர் மாதம் வரை நிலை இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ் - திமுக கட்சிகளின் கூட்டணி ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை கணிக்க இயலாதவகையில் நிலை இருந்தது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து போதித்து வந்தன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாயையை தகர்த்தெறிந்திருக்கிறது. இந்த ட்ரெண்ட் பாராளுமன்றத் தேர்தலுக்கு பொருந்தாது என்று இப்போது அதே ஊடகங்கள் அவசர அவசரமாக ஊளையிட்டு வருகின்றன.
 
இந்த லாஜிக் தென்னிந்தியாவுக்கு தான் பொருந்தும். சட்டமன்ற தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ வென்றவர்கள் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வும் வகையில் மாற்றி ஓட்டளிப்பது தென்னிந்தியர்களின் இயல்பு. பொதுவாக வட இந்தியர்கள் கடைசியாக நடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ, அடுத்த தேர்தலிலும் அதே அணிக்கு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே பாஜக மெஜாரிட்டி பெறும் என்றெல்லாம் வாயால் கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வாய் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் காங்கிரஸ் பெற்ற இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுமைக்குமே காங்கிரசுக்கு ஆதரவான ட்ரெண்டை உருவாக்கக் கூடும். ஆயினும் தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ட்ரெண்டை யாராலும் சுலபமாக கணித்துவிட இயலாத நிலை சிரஞ்சீவியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
காங்கிரசுக்கு ஆதரவான இந்த ட்ரெண்ட் தமிழகத்தில் திமுகவை காப்பாற்ற உதவும். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியாக பாஜக - அதிமுக கூட்டணி உருவாகி இருக்குமேயானால் அது ஆளும் கூட்டணிக்கு சிக்கலை தந்திருக்கும். ஆனால் ஜெயாவோ யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அணு ஒப்பந்தம் சரியா தவறா என்று மக்களுக்கு முழுமையாக புரியவைக்காத நிலையில் மன்மோகன்சிங்கை கவிழ்க்க நினைத்தனர் இடதுசாரிகள். மக்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த மன்மோகன் மீது அனுதாப அலையை வீசச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். எந்த லாப-நஷ்ட அடிப்படையை கணக்கிட்டு ஜெ. இவர்களை சேர்த்துக்கொண்டார் என்பது புரியவில்லை. மதிமுக ஒட்டுமொத்தமாக ப்யூஸ் போன நிலையில் அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி சுமையாகவே இருக்கும். பாமகவை வளைத்துப் போடுவதின் மூலமாகவே அதிமுக கூட்டணியை ஜெ.வால் வலுவானதாக காட்ட இயலும். ஆனால் பாமகவோ காங்கிரஸ் மீது காதல் கொண்டிருக்கிறது.
 
தேமுதிகவின் விஜயகாந்த் இன்றுவரைக்கும் தனியாக நிற்பேன். எனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி என்று சொல்லிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக - அதிமுக இருதரப்புக்கும் பலமான அதிர்ச்சியை அளித்தவர் என்ற அடிப்படையில் விஜயகாந்தை நிராகரித்து இனி தமிழக அரசியல் பேசமுடியாது. 2016ல் கேப்டன் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பாஜக இவரோடு சேரக்கூடும். அப்படி சேரும் பட்சத்தில் அது அதிமுக கூட்டணிக்கு இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டுரக ஓட்டுக்களை தான் கடந்த தேர்தல்களில் பார்த்து வருகிறோம். கேப்டன் குறிவைத்து அடிப்பது கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களை. ஏற்கனவே இந்த ரக ஓட்டுக்களை கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு எதிரான அம்சம் இது. இதனாலேயே விஜயகாந்தை கலைஞர் உள்ளூர ரசித்து வருகிறார். திருமாவளவனும் இப்போதைக்கு கலைஞரை விட்டு நகர்வதாக இல்லை.
 
மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அதைவிட முக்கியமான பிரச்சினையாக தமிழகத்தில் திமுகவுக்கு இருந்த சன்குழுமத்துடனான மோதலும் முடிவுக்கு வந்திருக்கிறது. சன்குழுமத்தின் ஊடகப்பலம் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் வலுசேர்க்கும். இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.

16 டிசம்பர், 2008

பாவி ஆசிரியர் குழுவின் கும்தலக்கடி கும்மாங்குத்து!


ஒவ்வொரு இஷ்யூ முடிக்கறதுக்குள்ளேயும் தாவூ தீர்ந்து டவுசர் கிழிந்துவிடுகிறது மன்னனுக்கு. மன்னன் பாவியின் ஆசிரியர். தமிழ் சமூகத்தின் முழுசாக ஃபில் அப் ஆகாத முகவரி பாவி. குவளவிழா கண்ட வார இதழ். வாராவாரம் யாரையாவது வாரும் ஒரு வார இஷ்யூவை தயார் செய்ய மன்னன் குழு குத்தாட்டம் போடும் நாக்க முக்கா...

மன்னன் : என்னத்தை தலையங்கம் எழுதி.. என்னத்தை கிழிக்கிறது? போனவாரம் வரைக்கும் தலைவரை காய்ச்சிக்கினு இருந்தோம். இந்த வாரம் யூ டர்ன் அடிக்கச் சொல்லி மேலிடத்து ஆர்டர்...

கவிப்ரகாஷ் : பேசாம வழுக்கைத் தலையர்கள் திருப்பதியில் மொட்டை அடிப்பது சம்பந்தமா தலையங்கம் எழுதிருவோமா? ஜாவியில் இருந்தப்போ இப்படித்தான் ஒரு தடவை வழுக்கை ஸ்பெஷல் போட்டோம். கலைஞர், சோன்னு எல்லாரோட இண்டர்வ்யூம் நைண்டீன் எய்ட்டி நைனிலே நான் தான் எடுத்தேன்.

சதன் : சூப்பர் ஐடியா. சோ சுருள் சுருள் முடியோட மொட்டை அடிக்க சலூன்லே உட்கார்ந்திருக்கிறா மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டு தந்துடறேன். (வெத்தலையை குதப்பிக்கொண்டு கிஜய் டிவி ஆபிஸுக்கு கெளம்புகிறார்)

(சதன் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு) கரன் : அவுரு ஏற்கனவே மொட்டை தான் சார். வேணுமின்னா கலைஞருக்கு மொட்டை போட்டு நான் வரைஞ்சி தள்ளிடறேன்.

சூச்சூப்பையன் : ஓக்கே. ஒரு சலூன்கடைக்கு கலைஞர், ஜெயலலிதா, பாரதிராஜா, வைகோ, மணிரத்னம், முடிவெட்டிக்க வர்றாங்க. சலூன்லே ரண்டக்கா.. ரண்டக்கா தான். அவசரமா கெளம்பணும். அம்பத்தூர்லே ஒரு ப்ரொடியூசரை பார்க்கணும்.

மன்னன் (டென்ஷனாகி) : எதையாவது சென்சேஷனலா பண்ணனும்யா. ஜல்லியடிச்சி, ஜல்லியடிச்சி ஜன்னி வந்துடும் போலிருக்கே. எவ்ளோ நாளைக்கிய்யா படத்தை போட்டு பைசா பண்ணுறது?

சீ.ரிவக்குமார் : கீழ்ப்பாக்கத்துலே நரிக்குறவர்கள் கேம்ப் போட்டிருக்காங்க. அவங்களோட ஒருநாள் வாழ்க்கையை பதிவு செய்வோமா?

உ.ஆ.க்களில் ஒருவர் : பதிவு செய்யறதுக்கு இதென்ன வாரணம் ஆயிரம் பாட்டா?

சாரதிதம்பி : மீனவர்கள் அவலத்தை படம் புடிச்சி காட்டுவோம்.

காஜசேகரன் : ஆமா. அந்தமான் போயி அட்டகாசமா துள்ளிக் குதிக்கிற மீனையெல்லாம் படம் புடிச்சிட்டு வந்துடறேன். அலவுன்ஸ் கொடுங்க பாஸூ.

சுமேஷ் சைத்யா : திண்டுக்கல் சாரதி ஆடியோ சிடி ஓசியிலே அனுப்பியிருக்கானுங்க. எவ்ளோ நாளைக்கு தான் ஆடியோவையே கேட்டு கேட்டு ஆய் போறது. உருப்படாத பய புள்ளைங்க எழுதற ப்ளாக்குங்களை ஒருநாளைக்கு நானூறு வாட்டி பார்க்குறேன். ஏதாவது அஜக்கு மஜக்கா வேலை கொடுங்கய்யா. அசத்திப்புடறேன்.

”ஆளாளுக்கு வூடு கட்டுறானுங்களே?” மன்னன் நொந்துப்போய் யோசனையில் ஆழ்கிறார்.

கா.நதிர்வேலன் : புதுசா ஒரு பொண்ணை ஆனந்தம் ஆரம்பமிலே இண்ட்ரட்யூஸ் பண்ணுறாங்க. நேர்லே போய் பார்த்து ஜொள்ளிட்டு 'டக்கரு ஃபிகரு, டிக்கரு ஷாட்'னு கலர் கலரா கட்டுரை போட்டுடலாமா பாஸ்?

பை.மாரதிராஜா : மொக்கைப்பட ஹீரோ ஒருத்தன் மாட்டியிருக்கான். காஜசேகரன் அண்ணன் கூட வந்தாருன்னா ‘மொக்கைப்பட ஹீரோ ஆல்பம்'னு நாலு பக்கத்தை ரொப்பிடுவேன்.

உ.ஆ.க்களில் மற்றொருவர் : ரொப்புறதுக்கு இதென்னா பக்கெட்டா?

குருமாவேலன் : கேப்டனோட தமிழ்நாட்டை சுத்தி போரடிக்குது. ராகுல்காந்தியோட அமேதிக்கு போவட்டுமா?

மன்னன் : அடுத்த வாரம் சுமுதம் என்னா எக்ஸ்க்ளூசிவ் போடுறான்னா யாராவது விசாரிச்சீங்களாய்யா?

சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவர் : அவங்களுக்கின்னா கே செக்ஸு, லெஸ்பியன் செக்ஸு, அனிமல் செக்ஸுன்னு ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் இருக்கு. மூஞ்சை மட்டும் மறைச்சி போட்டோ போட்டு.. போட்டு தாக்கிடுவாங்க..

மார்க்கெட்டிங்கில் இருந்து மன்னன் சாருக்கு போன் : சார் தங்கம் விலை உசந்துடிச்சி. பளிச் கமெண்டுக்கெல்லாம் இனிமே தங்கக்காசு கட்டுப்படி ஆவாது. பித்தளைக் காசு தான்னு அறிவிச்சிடுங்க.

மன்னன் : அதெல்லாம் பிரச்சினையில்லை. அலுமினியக் காசுன்னு சொன்னாக்கூட ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துரும்.

டென்ஷனோடு டீமை நோக்கி திரும்ப, ஏரியாவில் டென்ஷன் எக்கு தப்பாகிறது.

சுமேஷ் சைத்யா : புள்ளிகள் மாதிரி ஜல்லிகள் ஆரம்பிக்கலாம். எங்க வீட்டு முன்னாடி கார்ப்பரேஷன் நிறைய ஜல்லி கொட்டியிருக்கான்.

குருமாவேலன் : திராவிடம் நீர்த்தது, திராவகம் இனித்ததுன்னு எட்டு பக்கத்துக்கு எடக்கு மடக்கா எழுதறேன்.

பா.வி. விமர்சனக் குழு : தேவி தியேட்டருலே புதுசா இண்ட்ரடியூஸ் பண்ணியிருக்கிற பெப்பர் கார்ன் சூப்பர். விலைதான் கொஞ்சம் அதிகம்.

கவிப்ரகாஷ் : மெலட்டூர் நடராசன் முப்பது பக்கத்திலே ஒரு சிறுகதை அனுப்பியிருக்காரு..

சீ.ரிவக்குமார் : பழங்குடி மக்களின் வாழ்வியல் தொடர்பா...

கந்தினி : எங்க ஊர்லே ஒரு வேப்பமரம் இருந்தது. அய்யோ.. அதோட இலையெல்லாம் பச்சையா இருக்கும்...

உ.ஆ.க்களில் இன்னொருவர் : சருதனோட பாஸ்போர்ட் வந்துருக்கு.

மன்னன் : வெரிகுட். இந்த வாரம் என்ன மேட்டர் எழுதியிருக்காரு?

அதே உ.ஆ. : நாசமாப் போச்சி. மனுஷன் ஏதோ ஞாபகத்துலே போனவருஷம் பாஸ்போர்ட் ஆபிஸில் அவரெடுத்த பாஸ்போர்ட்டையே அனுப்பி வெச்சிருக்காரு.

மன்னன் கொஞ்ச கொஞ்சமாக டர்ராகிக் கொண்டிருக்கும் போது எம்.டி. ரீனிவாசனிடமிருந்து போன் : ஜாநிக்கு சுமுதத்துலே லீசு முடிஞ்சிருச்சாம். மறுபடியும் நம்மகிட்டே லீசு எடுத்து 'சோ' பக்கங்கள் எழுதட்டுமான்னு கேட்குறாரு...

'க்ரீம்ஸ் ரோடு ஆத்தா என்னை காப்பாத்து!' என்று கதறியபடியே ஆளுக்கொரு திசையாய் தெரிக்கிறார்கள்.


அருஞ்சொற்பொருள் விளக்கம் : உ.ஆ = உதவி ஆசிரியர் என அறிக.

பொம்மலாட்டம்!

வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் இமயம். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் பார்த்த படம் எதுவென்பதே நினைவில் இல்லை. தாஜ்மஹால் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. பாரதிராஜா தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றாலும் 1980களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப மறுமலர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டார் அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இந்த ஒரு காரணத்தாலேயே தமிழில் அவுட்-ஆஃப்-ஷோ ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். கடைசியாக கிழக்குச்சீமையிலே தான் சூப்பர்ஹிட் என்பதாக ஞாபகம்.
 
பாரதிராஜாவின் பலம் மண்ணின் மனம் + கதை மாந்தர்களின் உளவியல் போக்கினை எளிமையாக சித்தரிப்பது. தன் மகனை கதாநாயகனாக்கி அழகு பார்க்கும் ஆசையில் தன்னுடைய பலத்தை சில ஆண்டுகளாக மறந்து தொலைத்திருந்தார். அப்போதிருந்த தமிழ் திரையுலகின் பெரிய ஜாம்பவான்களோடு கூட்டணி அமைத்து ஆசை மகன் மனோஜுக்காக உருவாக்கிய தாஜ்மஹாலில் தன்னுடைய இயல்பினை கோட்டை விட்டு விட்டார். இழந்த இயல்பை 'பொம்மலாட்டம்' மூலமாக கச்சிதமாகப் பெற்றிருக்கிறார். இப்படத்தில் நானா படேகர், ருக்மிணி, ரஞ்சிதா கதாபாத்திரங்கள் அச்சு அசல் பாரதிராஜாவின் டிரேட்மார்க். 'சினிமாவுக்குள் சினிமா' என்ற கல்லுக்குள் ஈரம் காலத்து கான்செப்ட்.
 
அனேகமாக தானே நடித்து இயக்க இக்கதையை பாரதிராஜா கையிலெடுத்திருக்கக் கூடும். நானாபடேகரின் ஒவ்வொரு பிரேமையும் பாரதிராஜாவோடு ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. நானாபடேகரின் நடிப்பை நடிப்புச்சுனாமி என்று சொல்லுவதா அல்லது நடிப்பு பூகம்பம் என்று சொல்லுவதா? 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது நானாபடேகருக்கு வழங்கப்படாவிட்டால் அவ்விருதினை தூக்கி குப்பையில் போடுவது தான் நியாயம். தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குனரே சினிமாத்துறையையும், அதன் போக்கையும் கிண்டலடிப்பது ரசிக்கக்கூடியது. குறிப்பாக தற்கால கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபைனான்ஸியர்களை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் பாரதிராஜா. அயல்நாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுடும் இயக்குனர்களையும் ஒரு பிடிபிடித்திருந்தால் தாராளமாக எழுந்து நின்று கைத்தட்டியிருக்கலாம்.
 
'பொம்மலாட்டம்' த்ரில்லராகவும் இல்லாமல், சராசரிப் படமாகவும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டிருக்கிறது. படம் முழுக்க ஆமைவேகத்தில் நகருகிறது. இடையிடையே சில பாடல்கள் கதையின் போக்குக்கு தொந்தரவாக இருந்தபோதிலும் ஹிமேஷ்ரேஷ்மையாவின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமை. ஹீரோயின் முகத்தை சூப்பர் இம்போஸ் செய்து பாடல்காட்சிகளில் காட்டும் உத்தி 1980களிலேயே காலாவதியாகி விட்டது என்று பாரதிராஜாவுக்கு யாராவது உதவி இயக்குனர் எடுத்துச் சொல்லியிருக்கலாம். படத்தின் இறுதிக்காட்சி வித்தியாசமானதாக இருந்தபோதிலும் 'சப்'பென்று முடிகிறது. க்ளைமேக்ஸ் இன்னும் வெயிட்டாக இருந்திருந்தால் பொம்மலாட்டம் ஜோராக நடந்திருக்கும்.
 
இப்படம் ஆங்கிலத்திலோ அல்லது பிரெஞ்சிலோ எடுக்கப்பட்டிருந்தால் உலகப்படமாக போற்றப்பட்டிருக்கும். பல உலகப்பட விழாக்களில் பங்குபெற்றிருக்கும். பின்நவீனத்துவக்கூறுகள் உள்ளடக்கப்பட்டதாக சினிமா சிந்தனையாளர்களால் பாராட்டப்பட்டிருக்கும். தமிழில் இதை பாரதிராஜா முயற்சித்திருப்பதால் 'தற்கொலை முயற்சி' என்று கூறி அவர்மீது காவல்துறை வழக்கே தொடரலாம்.
 
ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருப்பதாக சொன்னார்கள். படம் முழுக்கத் தேடிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. படம் பார்த்த யாராவது கண்டுபிடித்துத் தரலாம். ஒரு இரண்டாம் கட்ட நடிகர் நடிக்க வேண்டிய கேரக்டர் அது. படத்துக்குத் தொடர்பில்லாத அவரது காதல் மற்றும் கந்தாயத்து காட்சிகள் தாமரை இலை மேல் நீர்த்துளி. படத்துக்கு ப்ளஸ் : பாரதிராஜா + நானாபடேகர். மைனஸ் : மீதி எல்லாமே. நானாபடேகருக்காக ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம். ஆனால் சாருநிவேதிதாவுக்கு மட்டும் தான் இந்தப் படம் பிடிக்கும்.
 
பொம்மலாட்டம் - நவரசத் தாண்டவம்!

11 டிசம்பர், 2008

மூன்று மொக்கைப் படங்கள்!

சூப்பர் ஸ்டார் நடித்த குசேலன் தான் சென்ற வருடத்தின் சிறந்த மொக்கைப்படம் என்றாலும், 2008ல் வெளிவந்த படங்கள் பெரும்பாலானவை மொக்கைப் படங்கள் என்பதால் இப்போது 'மொக்கைப் படங்கள்' என்ற ஒரு கேட்டகிரியே அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உப்புமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அஞ்சும் நிலையில், சமீபத்தில் வெளியான மூன்று மொக்கைப் படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. யப்பா ஃபுல் ஸ்டாப் இல்லாம எவ்ளோ பெரிய வாக்கியம்?



மேகம்

தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய தேறாத நிலையில் அஜித்தின் ஏகனோடும், பரத்தின் சேவலோடும் வெளியான சூப்பர் படம். தமிழரசன் என்பவருக்கு சினிமாவில் நடிக்க ஆசையிருந்தது. அவரை வைத்து யாரும் படமெடுக்க முன்வராத நிலையில் அவரே அதிரடியாக தயாரித்து ஹீரோவாக நடித்தப் படம். கிட்டத்தட்ட ஒரு மேட்டர் படம். படத்தை வெளியிடமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தால் 'பிட்' இணைத்து ஜோதியிலும், பல்லாவரம் லஷ்மியிலும் வெளியிடப்பட்டிருக்கும்.

இப்படத்தின் கதை உலகத் திரைப்படங்களுக்கெல்லாம் சவால் விடக்கூடியது. மெக்கானிக்கான ஹீரோ பேங்கில் வேலை செய்யும் ஒரு சுமார் ஃபிகரை லவ்வுகிறார். கல்யாணமும் செய்துக் கொள்கிறார். இந்நிலையில் முதலிரவில் முக்கியமான கட்டத்தில் நெஞ்சுவலி என்று சொல்லி ஹீரோயின் மயங்கி விழுகிறார். ஹார்ட்டில் ஏதோ பிரச்சினையாம். ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகிறார்கள். ஹார்ட்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஹீரோயினின் கற்பை ஆட்டை போட்டு கொன்று விடுகிறார்.

அந்த டாக்டரின் மனைவியை பதிலுக்கு ஹீரோ வன்புணர்வு செய்து, அதை கேமிராவில் படமாக்கி டாக்டருக்கு போட்டு காட்டுவது தான் கதை. பழிக்குப் பழி! :-(

ஹீரோ தமிழரசனுக்கு 40 வயது இருக்கலாம். விக் வைத்து ஒப்பேற்றுகிறார். இவருக்கு இரண்டு டூயட்டும் உண்டு. ராஜ்கிரண் ரேஞ்சுக்கு இருக்கும் இவர் காதலிக்கும் காட்சிகள் படா கொடுமை. டாக்டரின் மனைவியாக வரும் ஃபிகர் நன்கு 'சீன்' காட்டுகிறார். ஃபேஸ் கட் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் மேற்படி மேற்படி மேட்டர்களில் இயக்குனருக்கு ரொம்பவும் ஒத்துழைப்பு 'காட்டி'யிருக்கிறார்.



எல்லாம் அவன் செயல்!

ஆர்.கே. என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ சில சினிமா கம்பெனிகளில் எடுபிடியாக இருந்தாராம். எப்படியோ அப்படி இப்படியென்று முன்னேறி கொஞ்சம் துட்டு சேர்த்துவிட்டாராம். ஆர்.கே.ஆர்ட்ஸின் 'எல்லாம் அவன் செயல்' படத்தில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார். கோயம்பேடு ரோகிணி வளாகத்தில் இவருக்கு வாழ்த்துப் பேனர்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கிறது. வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷே இவரிடம் தோற்றுவிடக் கூடிய லெவலுக்கு பிராண்ட் பில்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்.

மிகக்கொடூரமான குற்றவாளிகளின் கேஸ்களை எடுத்து சாமர்த்தியமாக வாதாடி விடுதலை வாங்கித் தருவது வழக்கறிஞர் எல்.கே.வின் வாடிக்கை. மகளையே வன்புணர்வு செய்தவன், டீச்சர் ஒருவரை கொடூரமாக வன்புணர்ந்து சாகடித்தவன் போன்ற கேப்மாறி, மொள்ளமாறி, முடிச்சவிக்கி, பொறம்போக்குகளுக்கெல்லாம் வாதாடி அவர்களை விடுதலை செய்ய வைக்கிறார் எல்.கே. விடுதலையான மொள்ளமாறிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே உலகத்திலிருந்தும் விடுதலை வாங்கித் தருகிறார். "இந்த கேசுலே நீ மாட்டிக்கிட்டாலும், உயர்நீதி, உச்சநீதி மன்றங்களுக்கெல்லாம் அப்பீல் பண்ணி, ஜெயில்லே சுகவாழ்க்கை வாழ்வே. அதனாலே என் வழியிலே நான் நீதியை தருகிறேன்!" என்று தன் செயலுக்கு நியாயமும் கற்பிக்கிறார்.

சிந்தாமணி என்ற மருத்துவக் கல்லூரி மாணவி ராக்கிங் கொடுமையால் சில பணக்கார மாணவிகளால் கொல்லப்பட அந்த வழக்கிலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகிறார் எல்.கே. கேசை உடைத்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறார். வழக்கம்போல தான் காப்பாற்றியவர்களை தானே கொல்கிறாரா? என்பது தான் க்ளைமேக்ஸ்.

மொக்கையான ஹீரோ என்றாலும் வலுவான கதை, திறமையான இயக்குனரால் (ஷாஜி கைலாஸ்) இப்படம் மொக்கைப்படம் என்ற கேட்டகிரியில் இருந்து விலகி நிற்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் நிஜமாலுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனாலும் ஹீரோ டிராகுலா குரலில் அவ்வப்போது க்ளோசப்பில் மந்திரங்கள் சொல்லும்போது தியேட்டரில் திருட்டுத்தனமாக காதலனோடு படம் பார்க்க வந்த காதலிகள் பயந்துவிடுகிறார்கள்.

'சிந்தாமணி கொலை கேசு' என்ற மலையாளப் படத்தின் தழுவல் இது. வணிகத்துக்காக வடிவேலுவின் காமெடி ட்ராக் படத்தோடு ஒட்டாமல் தனியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஹீரோ ஆர்.கே. தான் படுத்துகிறார் என்றால் வடிவேலு அதைவிட படுத்துகிறார். சமீபகால வடிவேலுக்கு இப்படம் ஒரு திருஷ்டி படிகாரம்.

நல்லவேளையாக ஆர்.கே.வுக்கு ஹீரோயினோ, டூயட்டோ இல்லாததால் ரசிகர்கள் தப்பித்தார்கள். வீரத்தளபதி ஜே.கே.ஆர் மட்டும் இப்படத்தில் நடித்திருந்தால் இப்படம் ஒரு ஆண்டு ஓடியிருக்கும் என்பது உறுதி.
சாமிடா!
முழுக்க முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியது விளம்பரங்களும், போஸ்டர்களும். விளம்பரங்களை கண்டவர்களுக்கு இது மொக்கைப்படம் என்பது விளங்கவே விளங்காத அளவுக்கு பக்கா பர்ஃபெக்‌ஷன். 'நான் கடவுள்' திரைப்படம் மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டேஏஏ... கொண்டிருக்க, அந்த கதையை நைசாக உருவி, தழுவி இப்படத்தை அவசரகதியில் எடுத்துத் தள்ளிவிட்டார்கள் என்று திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். நான் கடவுள் படத்தின் கதை என்னவென்று அப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாலாவுக்கே தெரியாத நிலையில் 'சாமிடா' படக்குழுவுக்கு எப்படி தெரிந்தது என்பது தான் ஆச்சரியம்.
டிவி நடிகரும், சினிமாக்களில் அடியாள் மற்றும் துண்டு கேரக்டர்களில் நடித்து வருபவருமான ஒருவரை ஹீரோவாக்கி விஷப்பரிட்சை எழுதியிருக்கிறார்கள். ஹீரோ பெயர் செம்பியாம். சொம்பு என்றே வைத்திருக்கலாம். காதல் காட்சிகளில் சொம்பு மாதிரி இருக்கிறார். இத்தனைக்கும் ஹீரோயின் அந்த காலத்து ஷோபா மாதிரி செம ஃபிகர். ஹீரோயின் அழகாக இருந்தாலும் ரியாக்‌ஷன் கொடுமை. மேட்டர் படங்களில் பலான காட்சிகளில் கொடுக்கப்படும் ரியாக்‌ஷனையே காதல் காட்சிகளில் கொடுக்கிறார். பின்னணி இசையும் மேட்டர் பட லெவலுக்கே இருக்கிறது. ஒரு சில அஜால் குஜால் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.
மிக மிக சாதாரணமான தாதா கதை. சொர்ணாக்கா மாதிரி கேரக்டருக்கு பிந்துகோஷ் மாதிரி ஒரு நடிகையை நடிக்கவைத்து ரசிகர்களை கேலி செய்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது 'அப்பாடா' என்று நிம்மதியோடு தியேட்டரை விட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடவேண்டியிருக்கிறது.
இந்தளவுக்கு கேணைத்தனமாக, மொக்கைத்தனமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்திலும் கேமிரா மேஜிக்கை செய்திருக்கிறது. அனேகமாக டிஜிட்டலில் படமாக்கியிருப்பார்கள் என்று தெரிகிறது. இயல்பான வெளிச்சம் கண்ணுக்கு இதமென்றாலும், நிழல் அதிகமாக இருக்கும் காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. காசியை கேமிரா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு பிரமாதமாக காட்டுகிறது. இந்த கேமிராமேனுக்கு நல்ல இயக்குனர் யாராவது வாய்ப்பளித்தால் தேவலை.

9 டிசம்பர், 2008

ஒபாமா பராக்!


'மாற்றம்' என்ற சொல் இன்று அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அதிபரை தந்திருக்கிறது. மாற்றத்தின் இன்னொரு பெயர் ‘பராக் ஹூசேன் ஒபாமா'. நாம் ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ.. அமெரிக்காவின் அதிபர் தான் உலகத்துக்கே ஆக்டிங் அதிபர் என்பது இன்றைய யதார்த்தம். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலகத்தை ஆளப்போகும் அதிபர் பற்றி தமிழில் நிறைய தரவுகளோடு வந்திருக்கும் நூல் ‘ஒபாமா பராக்!'

ஒபாமா

பராக் ஒபாமா

பராக் ஹூசேன் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் வென்ற கணத்தில் ஒரு கருப்பரினப் பெண் பெற்ற பரவசத்தோடும், ஆனந்தக் கண்ணீரோடும் தொடங்குகிறது நூல். தொடங்கியப் புள்ளியிலிருந்து இறுதிவரைக்கும் விறுவிறுப்பு, பரபரப்பு இதைத்தவிர வேறொன்றுமில்லை. ஒபாமா குறித்த நூலென்றாலும் ஒபாமாவின் கென்யா தாத்தாவை கூட விட்டுவைக்காமல் விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். கென்யாவின் அந்த பாரம்பரிய பழங்குடி இனம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வாசகர்களுக்கு தீபாவளி போனஸ்.

நூலின் கதையை இவ்விமர்சனத்தில் வைக்க விரும்பவில்லை. இனி நூல் வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு அது Spoiler ஆக அமைந்துவிடும். இந்நூல் என்னிடம் கையளிக்கப்படும்போது நூலின் பதிப்பாசிரியர் ஒரு சுவாரஸ்யமான சவால் விட்டார். இந்நூலில் இடம்பெற்றிருப்பதை தவிர்த்து ஒபாமா குறித்து இன்றைய தேதியில் புது தகவல்களை வேறும் யாரும் தந்துவிட முடியாது என்று. சவாலை அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் என்னுடைய தோல்வியை நூல் வாசித்து முடித்ததுமே மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு அமெரிக்கரால் கூட தங்கள் அதிபரைப் பற்றி இவ்வளவு சுருக்கமாக, தெளிவான தரவுகளோடு இன்றைய தேதியில் எழுதிவிட இயலாது. இந்நூல் உருவாக்கத்துக்காக முத்துக்குமார் உழைத்த உழைப்பு பின்னிணைப்பில் அவர் வாசித்த புத்தகங்களின் பட்டியலை கண்டாலே புரிகிறது. ஆங்கிலம் மட்டுமே வாசிக்கும் இந்தியர்களுக்காக உடனடியாக இந்நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டியது அவசியம்.

நிறைகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் இந்நூலில் சிறு சிறு குறைகளும் உண்டு. ஒரு மசாலாப்பட வேகத்தோடும், விறுவிறுப்போடும் ஓடும் ஒபாமாவின் கதைக்கு இடையிடையே அமெரிக்க கருப்பரின போராட்டங்கள் குறித்த பிளாஷ்பேக் இடையிடையே தோன்றுவது வாசிப்பின் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர். ஆயினும் பரிபூரணமான தகவல்களை வாசகனுக்கு தந்தே ஆகவேண்டும் என்ற அறம் நூலாசிரியருக்கு இருப்பதால் இதை மனப்பூர்வமாக மன்னித்து விடலாம்.

அமெரிக்கா குறித்த டாலர் தேசம் உள்ளிட்ட சில நூல்களை வாசிக்காதவர்களுக்கு இந்நூலில் அடிக்கடி இடம்பெறும் ஏழ்மை போன்ற சொற்கள் ஆச்சரியம் அளிக்கலாம். அமெரிக்காவிலும் ஏழைகள் உண்டு. இந்தியாவில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதெல்லாம் அமெரிக்காவிலும் கட்டாயம் உண்டு. சதவிகித வாரியாக வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அமெரிக்க தேர்தல் முறை குறித்து விலாவரியாக ஆனால் எளிமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் கமிஷனருக்கு இந்நூலை சிபாரிசு செய்கிறேன். அதே நேரத்தில் அங்கேயும் தேர்தல் முறையில் எப்போதாவது கோமாளித்தனம் நடக்குமென்பதையும் நூலாசிரியர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதிக வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்ற அல்கோர் 2000ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றதை இதற்கு உதாரணமாக நூல் காட்டுகிறது.

இரா. முத்துக்குமாரின் மொழிநடை குறித்து அவசியம் பாராட்டியே தீரவேண்டும். இவ்வளவு எளிமையாக வாக்கியங்களை அமைக்கும் வித்தையை எங்குதான் கற்றாரோ? வாசிப்புக்கு இடையூறு செய்யாத சுருக்கமான, அழகான, நல்ல தமிழோடு கூடிய நடை. எழுத விரும்பும் அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு இந்நூல் வாக்கியங்களை அமைக்க நல்ல பயிற்சியை அளிக்கும். வரலாறு மற்றும் சுயசரிதை நூல்கள் இதே நடையில் தொடர்ந்து வருமேயானால் இவ்வகை நூல்களுக்கான வாசகர்களை எண்ணிக்கையை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும். நியூ ஹொரிசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான மினிமேக்ஸ் புத்தகங்களுக்கு பொறுப்பாசிரியராக பதவி வகிக்கும் முத்துக்குமாருக்கு மிக உயரமான எதிர்காலம் பதிப்பகத்துறையிலும், எழுத்துத்துறையிலும் நிச்சயம் இருக்கிறது.

கருப்பு, வெள்ளை இனத்தவர் பிரச்சினை குறித்து மார்ச் 18, 2008 அன்று ஒபாமா பிலடெல்பியாவில் பேசிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உரையின் தமிழாக்கம் நூலின் பின்னிணைப்பில் இருப்பதாக 112ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் வாசித்த பிரதியில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அதுபோலவே 126 மற்றும் 127ஆம் பக்கங்களில் 88 மற்றும் 14 ஆகிய இரு எண்களைப் பற்றிய சில முக்கிய, குறிப்பிட வேண்டிய தகவல்கள் உண்டு. ஆனால் 126ஆம் பக்கத்தில் 88 என்பதற்குப் பதிலாக 84 என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருக்கிறது. கண்களுக்கு உடனடியாக 'பளிச்'சென்று தெரிந்த இரு குறைகள் இவை. அடுத்தடுத்த பிரதிகள் அச்சிடப்படும் போது இக்குறைகளை பதிப்பகம் நிவர்த்தி செய்துவிடுமென்று நம்புகிறேன்.

ஒபாமா பராக்! - அனைவருமே கட்டாயம் வாசித்தாக வேண்டிய நூல்.


நூலின் பெயர் : ஒபாமா பராக்!

நூல் ஆசிரியர் : ஆர். முத்துக்குமார்

விலை : ரூ.80

பக்கங்கள் : 152

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

நூல் குறித்த பதிப்பாசிரியரின் அறிமுகம்!

நூலாசிரியரின் குரு தன் மாணவன் குறித்து அடையும் பெருமிதம் இங்கே!

1 டிசம்பர், 2008

“சமீபத்தில்...” ஸ்கீஸோஃப்ரீனியா!

சில பெருசுகள் 1970களில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூட 'சமீபத்தில்' என்று சொல்லுவது வழக்கம். இது ஒரு வியாதி. மனப்பிறழ்வு. இந்த மனப்பிறழ்வுக்கு பெயர் ஸ்கீஸோஃப்ரீனியா. முரட்டு வைத்தியங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது. இந்த கருமாந்திர நோய்க்கு மருந்து மாத்திரை எதுவும் கிடையாது. எந்த காரணத்தால் இந்த மனோவியாதி வந்து தொலைத்ததோ அந்தக் காரணத்தை தவிர்த்தால் இதில் இருந்து வெளிப்படலாம். அல்லது மனதுக்கு ப்ரீத்தியான காரியங்களில் ஈடுபட்டாலும் ஸ்கீஸோஃப்ரீனியாவிலிருந்து வெளிவரலாம். இல்லையேல் நாக்கு நமைக்கும் அளவுக்கு ஒரு நாளைக்கு 1008 முறை 'ஸ்கீஸோஃப்ரீனியா' என்று உச்சரித்துப் பழகலாம்.

* - * - * - * - * - * - * - * - * - * - *

தீவிரவாதிகள் குறித்து ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் மிக அதிகமாக இப்போது விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 26க்கு பிறகாக. மிக மிக எளியமுறையில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் அடக்கும் வழியிருக்க ஏன் தான் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் தன் பதவியை ராஜினாமா செய்தாரோ தெரியவில்லை.

எங்காவது தீவிரவாதிகள் வாலை ஆட்டினால் அவர்களை ஒட்டநறுக்க ஆயிரம் யானை பலம் கொண்டவர் தமிழகத்தில் இருக்கிறார். எங்கள் தங்கம் கேப்டன். இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை. தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள். நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு. வீரப்பனை தமிழக போலிசார் சுட்டுக் கொல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தனிமனிதராக பிடித்த சாதனைக்கும் கேப்டன் சொந்ந்தக்காரர். இப்படிப்பட்ட ஆல்-இன்-ஒன் கமாண்டோ இருக்கிறார். அவரை புதிய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேப்டன் பிஸியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஆக்சன் கிங் அர்ஜூனையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒற்றன் படத்தில் கூட ஒண்டியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழித்தவர் அவர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

பூ

"தங்கச்சி மவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னே பொண்ணா பெத்துட்டே. கங்கிராட்ஸ்"
 
"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு கட்ட தங்கச்சியும் ஒரு பொண்ணு பெத்து தரணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்ப வழக்கம்"
 
* - * - * - * - * - * - * - *
 
"ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"
 
"ம்ம்ம்ம்... கொமாரைத் தான் கட்டிப்பேன்!"
 
"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"
 
"பெருசானப்புறம் கொமாரு மாமாவைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்!"
 
கொமாரு மாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அவளை அடிக்கத் துரத்தினான். அத்தைகள், சித்திகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்ட அவளைப் பிடிக்க இயலாத இயலாமையில் அழுதுகொண்டே, "ம்ம்ம்.. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அவளை அதுமாதிரி பேசாம இருக்கச் சொல்லு!"
 
அவனது அழுகை சொந்தங்களுக்கு சிரிப்பை தந்தது, குதூகலத்தை தந்தது. அடிக்கடி அவளை "யாரைக் கட்டிப்பே?" என்று கேட்டு அவனை வெறுப்பேற்றி விளையாடினார்கள்.
 
* - * - * - * - * - * - * - *
 
கொருக்கலிக்கா முந்திரிக்கா விளையாடும்போது சத்தத்தோடும், ராகத்தோடும், "கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கோ!"
 
நாலு பேர் எதிரில் அவமானப்படுத்தப்பட்ட சீற்றத்தில், "ச்சீ போடி மூக்குச்சளி. உன்னைப் போயி எவன் கட்டிப்பான்?"
 
* - * - * - * - * - * - * - *
 
தென்னை ஓலைகளுக்கு இடையே அவளைப் பார்த்தபோது புதிதாய் தெரிந்தாள். முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் நாணத்தால் சிகப்பிட்டிருந்தது. "கொமாரு மாமா என்னைக் கட்டிக்கோ!" என்று இப்போது அவள் கேட்கமாட்டாளா என்று முதல் தடவையாக ஏங்கினான்.
 
* - * - * - * - * - * - * - *
 
"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"

"என்ன பேசுறது?"

"சும்மா ஏதாவது பேசேன்"

"ம்ம்ம்ம்... உங்கிட்டே யாராவது 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?"

"செருப்பால அடிப்பேன்"

"............... :-( "

"ஆனா அது என் அத்தை பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்"
 
* - * - * - * - * - * - * - *
 
"அதெப்படி? பெரியவங்களுக்குள்ளே பிரச்சினைன்னா உறவு விட்டுப் போயிடுமா? என் அத்தைப் பையனுக்கு என்னை தூக்கிட்டு போயி கட்டிக்கக் கூட உரிமையிருக்கு!"
 
* - * - * - * - * - * - * - *
 
கடைசியாக அவளை அவளது திருமண வரவேற்பில் பார்த்தான். குமாரு மாமாவை தனியாக கூப்பிட்டு மணமகள் அறையில் ஏதோ பேசினாள். அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தாள். அவன் கண்களில் நீர் கோர்த்திருந்ததால். அவள் சோகமாக ஏதோ பேசினாள் என்றாலும் என்ன பேசினாள் என்பது இப்போது அவனுடைய நினைவில் இல்லை. அன்றைய அவனது இரவை மது ஆக்கிரமித்தது.
 
இப்போதும் இதே நகரத்தில் தான் வசிக்கிறாள். அவளது கணவனோடு சவுக்கியமாக. எங்கிருந்தாலும் வாழ்க!
 
* - * - * - * - * - * - * - *
 
தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?
 
கோமா ஸ்டேஜில் இருக்கும் தமிழ் சினிமா சூழல் 'பூ' போன்ற திரைப்படங்கள் வணிகரீதியிலான வெற்றியினை அடைந்தால் ஆரோக்கியமான பாதைக்கு திரும்ப இயலும். இப்படத்தை வெற்றியடையச் செய்வது சினிமா ரசிகர்களின் கடமை. விமர்சிக்க சில விஷயங்கள் இருந்தாலும் பூமாலையை, உன்னதப் படைப்பை கொத்துப்பரோட்டா போட மனதுக்கு இஷ்டமில்லை. உணர்வு குன்றாமல் உணர்ச்சிகளால் தவசிரத்தையோடு நெய்திருக்கிறார் இயக்குனர் சசி.
 
பூ - செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட முழுநீள காதல் கவிதை

28 நவம்பர், 2008

பெய்யெனப் பெய்திடும் மாமழை!

சென்னை முடங்கிக் கிடக்கிறது. ஒருநாள் மழையையே தாங்கமுடியாத லட்சணத்தில் இருக்கும் மாநகரத்தில் நான்கு நாட்கள் பேய்மழை பெய்தால் என்னவாகும்? வழக்கம்போல மடிப்பாக்கமும், வேளச்சேரியும் வெனிஸ் ஆகிவிட்டது. எப்போதும் அரசியல்வாதிகளை கண்டமேனிக்கு திட்டும் சென்னைவாசிகளுக்கு இப்போதுதான் அரசியல்வாதிகளின் அருமை புரிகிறது. குறிப்பாக திராவிட அரசியல்வாதிகள். அரசு எந்திரங்களை நம்பாமல் தன்னார்வலர்களாக மீட்புப்பணிகளில் அவர்கள் காட்டும் வேகம். இந்த மீட்புப்பணிகளுக்கு பின்னே அவர்களுக்கு ஆயிரம் அரசியல் ஆதாயங்கள் இருக்கட்டும். பசித்த வாய்க்கு சரியான நேரத்தில் சோறுபோடுகிறார்களே? வாழ்க. வாழ்க. வடசென்னையை அதிமுகவும், தென்சென்னையை திமுகவும் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மற்றநாட்களில் அரிவாளும், ஆசிட்டுமாக ஒருத்தரையொருத்தர் துரத்திக் கொள்பவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தளபதி எங்கே எப்போது திடீரென்று ரெயின்கோட்டில் பிரசன்னமாவார் என்று தெரியாமல் திமுகவினர் 24 மணிநேரமும் ஆக்‌ஷனில் இருக்க வேண்டிய நிலை. அம்மா வருவாரா வரமாட்டாரா என்று தெரியாவிட்டாலும் ‘அம்மா வெள்ளநிவாரணம்' என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டுகளோடு அதிமுகவினர். புறநகர் பகுதிகளில் காங்கிரஸாரும், பாஜகவினரும் குத்தும் கோமாளிக்கூத்து. தேசியக்கட்சிகளில் பதவி வாங்குவது மிக சுலபம். பேரிடர் காலங்களில் பத்திரிகையில் போட்டோ வந்தால் போதும். தேமுதிக சென்னையில் காணவே காணோம். கேப்டன் படப்பிடிப்பில் பிஸியோ? வாராவாரம் ஆனந்தவிகடனில் மட்டும் நாற்று நடுகிறார், நெசவு இயந்திரத்தை மிதிக்கிறார், காய்கறி கடையில் வியாபாரம் செய்கிறார். திருமாவேலரே நியாயம்தானா? கேப்டனை மடிப்பாக்கத்துக்கு படகில் கூப்பிட்டு வந்து போட்டோ எடுத்திருக்கக் கூடாதா? கோயம்பேடு - கத்திப்பாரா நூறடி சாலை இவ்வளவு வெள்ளத்தை இதுவரை கண்டதில்லை. ஜி.என்.செட்டி ரோடு ஸ்விம்மிங் பூலை விட ஆழமாக இருக்கிறது. நகரின் மழைநீர் வடிகால்கள் இரண்டுமாதங்களுக்கு முன்பு தான் தூர் வாரப்பட்டது. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு வெள்ளம்? கடல்நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் வெள்ளம் வடிவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். க்ளோபல் வார்மிங்? சில பெருசுகள் அமாவாசை நெருங்கும் நேரத்தில் கடல்நீர் மட்டம் உயர்வது சகஜம் என்று சால்ஜாப்பு சொன்னாலும் பயமாக இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டில் மாலத்தீவு இருக்காதாம். சென்னை இருக்குமா? * - * - * - * - * - * - * ஹாலிவுட் படங்களில் பார்த்தது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் இரண்டு மூன்று நாட்களாக பார்க்க முடிகிறது. மும்பை! போனவாரம் வாசித்த ‘என் பெயர் எஸ்கோபர்' நூலில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இந்தியாவிலேயே நடைபெறும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. தீவிரவாதம் ஏன்? தீர்வு என்ன? என்று பா.ராகவன் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது இந்தியில் மொழிபெயர்த்து டெல்லியில் விற்றால் தேவலை. நேற்று மும்பை மேரி ஜானும், வெட்னஸ்டேவும் டிவிடியில் பார்த்தேன். * - * - * - * - * - * - * சன் பிக்சர்ஸின் ‘தெனாவட்டு' படத்தில் ஒரு காட்சி. கைலாசம் சென்னையில் நெ.1 தாதா. அவரது மகன் சந்தோஷ் பார்க்கும் பெண்களையெல்லாம் பெண்டாளத் துடிப்பவன். ஹீரோ ஜீவாவின் ஃபிகர் மீதே கையை வைக்கும் சந்தோஷை கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் போட்டு மழையில் புரட்டியெடுக்கிறார் ஜீவா. நூற்றுக்கணக்கான பொதுமக்களோடு ஏ.சி.பி. சாய்குமாரும் வேடிக்கை பார்க்கிறார். ஒரு ஆட்டோக்காரர் ஏ.சி.பி.யை பார்த்து “இப்படி போட்டு ஒரு ஆளை புரட்டியெடுக்கிறானே? தடுக்கக்கூடாதா?” என்று கேட்கிறார். “தப்பு நடந்தா தட்டிக் கேட்குறது மட்டுமில்லை, நல்லது நடந்தா அதை தடுக்காம கண்டும், காணாமலும் போறது கூட போலிஸ்காரன் வேலைதான்!” என்கிறார் ஏ.சி.பி. :-))))) படத்தில் இதுபோல Current Affairsகளுடன் பொருத்திப் பார்க்க ஏராளமான காட்சிகள் உண்டு. எச்சரிக்கை : படம் செம மொக்கை. அரவாணிகளை நல்லவிதமாக காட்டுகிறேன் பேர்வழி என்று இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்திருக்கிறார் இயக்குனர். * - * - * - * - * - * - * முந்தாநாள் மாலை, வெள்ள மீட்புப்பணிகளில் (?) தீவிரமாக ஈடுபட்டு சோர்வாக வீட்டுக்கு வந்தேன். சோஃபாவில் அப்படியே விழுந்தபோது தாகம் எடுத்தது. மின்வெட்டு. அருகில் மிரண்டா பாட்டிலில் தண்ணீர் இருந்தது. மூடியை திறந்து அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டேன். இதுவரை என் நாக்கு சுவைத்திராத தீவிர உப்பு. அமில நெடி. மார்பெல்லாம் எரிந்தது. ஓடிச்சென்று பாத்ரூமில் வாந்தியெடுத்தேன். அமிலநெடி வயிற்றுக்குள் தீயாய் பரவியதை உணர்ந்ததால் கையை விட்டு அம்மாவிடம் குடித்த பால் உட்பட மொத்தமாக வாந்தியெடுத்தேன். தலையெல்லாம் கிறுகிறுத்தது. ஒரு ஃபுல் ஓல்டுமாங்கை அப்படியே கல்பாக அடித்தது போல போதை. முகம் கழுவிவிட்டு எதுவும் நடக்காதது போல வீட்டில் விசாரித்தேன். பாட்டிலில் வைத்து இருந்தது துணிதுவைக்க பயன்படுத்தும் ‘ஆலா' மாதிரியான ஏதோ ஒரு வஸ்துவாம். நல்லவேளை பாத்ரூம் கழுவப் பயன்படுத்தும் ஆசிட், கீசிட் எதையும் அங்கு வைத்திருக்கவில்லை.

26 நவம்பர், 2008

என் பெயர் எஸ்கோபர்!

எஸ்கோபரை உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளலாம். தில் - திகில் - திடுக்கிடலான ஆசாமி. சர்வதேச போதை நெட்வொர்க்கின் காட்ஃபாதர். சுண்டக்கஞ்சி காச்சப்படுவதிலும் அவருக்கு பங்கிருந்ததா என்று தெரியவில்லை. கொலம்பியா அவரது வேர். தென்னமெரிக்கா முழுவதும் அவரது விழுதுகள். அகில உலகத்துக்கும் ‘கோகெய்ன்' சப்ளை செய்த புண்ணியவான். உயிரோடிருந்திருந்தால் சந்திரயன் மூலமாக சந்திரனுக்கும் போதையை கடத்தியிருப்பார். மாஃபியாக்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தருவதாக இருந்தால் முதலில் இவருக்கு தந்திருக்க வேண்டும். நூலாசிரியர் பாரா நூல் முழுக்க 'அவன்', ‘இவன்' என்று ‘ன்' விகுதியிலேயே குறிப்பிடுகிறார். 'என் பெயர் எஸ்கோபர்' நூலை வாசித்த வாசகனுக்கோ எஸ்கோபர் மீது ஏற்படும் ப்ரேமையால் ‘ன்'னென்று விளித்த பாரா மீது பெருங்கோபம் ஏற்படுகிறது. பாருங்கள் எஸ்கோபர் என்ற பெயரில் கூட ‘ர்' விகுதி இயற்கையாகவே அமைந்திருக்கிறது. 1989ஆம் ஆண்டு உலகின் ஏழாவது பெரிய பணக்காரனாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அடையாளம் காட்டப்படுபவர் பாப்லோ எமிலியோ எஸ்கோபர். அப்போது அவருக்கு வயது ஐம்பதையெல்லாம் கடந்துவிடவில்லை ஜெண்டில்மேன். ஜஸ்ட் ஃபார்ட்டி. பில்கேட்ஸெல்லாம் கஷ்டப்பட்டு சாஃப்ட்வேர் விற்று சம்பாதித்தார். எஸ்கோபர் மிக எளிதாக போதையை விற்றார். பணம் சம்பாதித்தார். இன்றைய தேதியில் பல போதைபொருள் மாஃபியாக்கள் எஸ்கோபரை விட அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இந்த பிசினஸை இண்டர்நேஷனல் லெவலில் ஒரு கார்ப்பரேட் பிசினஸ் மாதிரி கட்டுக்கோப்புடன் நடத்திய முதல் ‘தொழில்' அதிபர் எஸ்கோபர் என்பதாலேயே அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம். கார்திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் எஸ்கோபர். திருட்டு அலுத்தது. சீக்கிரம் பணக்காரனாக துடித்தார். அப்போது கொலம்பியாவில் அறிவிக்கப்படாத தேசியத்தொழிலாக இருந்த கோகெய்ன் விற்பனையை கையில் எடுத்துக் கொண்டார். ஒரு மாஃபியாவிடம் அடியாளாக சேர்ந்தவர், குறுகிய காலத்தில் அமைதிப்படை அமாவாசை மாதிரி தடதடவென முன்னேறினார். முப்பது வயதுக்குள்ளாகவே உலகின் நெ.1 போதை மாஃபியா. நாற்பத்து மூன்று வயதிலேயே எல்லா புகழையும் தனக்குள் புதைத்துக்கொண்டு ஒரு துப்பாக்கித் தோட்டாவில் மண்டையைப் போட்டார். எஸ்கோபர் ஆட்டையில் இருந்த அந்த இருபது வருடங்களும் கொலம்பியாவின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத வருடங்கள். ”என் பெயர் எஸ்கோபர்” நூல் ஒரு க்ரைம் நாவலுக்கே உரித்தான த்ரில்லோடு தொடங்குகிறது. வரலாற்றை இதுபோல க்ரைம்நாவல் சுவாரஸ்யத்தோடு தொடங்கக் கூடாதென்று இ.பி.கோ.வில் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? கோழி குருடா இருந்தாலென்ன, முடமாயிருந்தாலென்ன? பிரியாணி டேஸ்ட்டா இருந்தால் போதாதா? 'கையிலே காசு, வாயிலே கோகெய்ன்' மாதிரியான பாராத்தன டயலக்குகள் மண்வாசனை தருகிறது. பிதாமகன் கஞ்சா வில்லனின் கதையை படிப்பதுபோல நேட்டிவிட்டி டச்சோடு நூலில் ஒன்றமுடிகிறது. த்ரில் மற்றும் திகிலோடு தொடங்கும் முதல் அத்தியாயம் சடக்கென்று கொலம்பியாவின் வரலாற்றைப் பேசும்போது திடுக்கிட வைக்கிறது. அமெரிக்காவுக்கு யாருமே ஆப்பு வைக்க வேண்டியதில்லை, அதுவே சி.ஐ.ஏ. மூலமாக வைத்துக்கொள்ளும். கொலம்பியாவின் போதை பிசினஸ் விவகாரத்திலும் அமெரிக்கா தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டதை புன்முறுவலோடு ரசிக்க முடிகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் முழுக்க நகைச்சுவை சுலபா புயல் மழை மாதிரி கொட்டோகொட்டுவென்று கொட்டி தீர்க்கிறது. நம்புங்கள். சத்தியமாக நூறு சதவிகிதம் எந்த கலப்புமில்லாத அக்மார்க் நகைச்சுவை. ஒருகட்டத்தில் நொந்துப்போன அமெரிக்க அதிபர் கொலம்பிய அரசுக்கு எழுதுவதாக பாரா சித்தரிக்கும் கடிதம் சரவெடி. ரீகன் எழுதும் அக்கடிதம் இப்படித் தொடங்குகிறது. “ஐயன்மீர்! உமக்கு சர்வமங்களம் உண்டாகட்டும்”. இப்படி முடிக்கிறார். “நமது நட்பு காலம் கடந்து நிற்க எல்லாம் வல்ல எம்பெருமான் இயேசுகிறிஸ்து அருள் பாலிப்பாராக. ஆமென்!” இம்சை அரசன் தனது வாயிற்காப்பாளனுக்கு தரும் தண்டனைகள் உங்களுக்கு அதிர்ச்சியை தந்ததா? இல்லை ரசிக்க வைத்ததா? எஸ்கோபர் செய்த கொலைகளை நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ரசிக்க செய்வான். நம் சட்டக்கல்லூரி சம்பவமெல்லாம் எஸ்கோபரை பொறுத்தமட்டில் ஜூஜூபி. வழிக்கு வந்தவரை வாழவைப்பதும், சரிபடாதவரை போட்டுத்தள்ளுவதும் எஸ்கோபரின் பாணி. எத்தனை பேரை சாகடித்திருப்பான் என்ற லிஸ்ட் சித்திரகுப்தனிடம் தான் இருக்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனுபோட்டு, எமதர்மனிடம் அனுமதி வாங்கி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி மாதிரி போதை மாஃபியாக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து போதைக்கூட்டணி அமைத்தது, அரசியலில் குதித்து அதகளப்படுத்தியதெல்லாம் எஸ்கோபர் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள். எஸ்கோபருக்கு இருந்த மக்கள் செல்வாக்குக்கு அவர் அந்நாட்டின் அதிபராகவே ஆகியிருக்க முடியும். நாயகன், காட்ஃபாதர் மாதிரியான கேரக்டர். சின்னக்கவுண்டர் ரேஞ்சுக்கு அவரை அந்நாட்டு மக்கள் மதித்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் கொலம்பிய போலிசாரிடம் எஸ்கோபர் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே எஸ்கோபரை அரணாக சுற்றி நின்று பாதுகாத்தது என்பது வரலாற்றில் கட்டாயம் குறிப்பிட வேண்டிய பெட்டிச்செய்தி. மேலவை உறுப்பினராக வலுக்கட்டாயமாக மாறிய எஸ்கோபர் மேலவையில் பேசிய முதல் பேச்சில் “போதை வர்த்தகத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சம்பந்தமில்லாத கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்று பேசுவது டென் தவுசண்ட் வாலா. நம்மூரு மாதிரியே கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது மாதிரி 1970களில் துப்பாக்கியெடுத்த எஸ்கோபர் 1992ல் சுட்டுக்கொல்லப்படுகிறார். கிராதகன் ஒழிந்தான் என்று வாசகனின் மனம் துள்ளாது. மாறாக நேசித்த ஒரு சிநேகிதனை என்கவுண்டரில் இழந்த சோகம் மனதை கவ்வுகிறது. சம்பிரதாயமாக கொலம்பியாவின் இன்றைய நிலையை கொஞ்சம் சீரியஸாக சொல்லி நூல் முடிகிறது. இந்நூலுக்காக நூலாசிரியர் பா.ராகவன் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்? எத்தகைய உழைப்பை முதலாக்கியிருப்பார் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம். எப்போதோ ஒருமுறை ‘இன்று தமிழில் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்' என்று இவரைக் குறிப்பிட்டிருந்தேன். பாராவின் ஒவ்வொரு எழுத்தும், அதன் பின்னால் இருக்கும் உழைப்புக்காக கொண்டாடப்பட வேண்டியதும், விற்கப்பட வேண்டியதும் நியாயமானதே. கொலம்பியா மேப்பை இந்நூலில் அசால்ட்டாக போடிநாயக்கனூருக்கு வழிசொல்வது மாதிரி கையாண்டிருக்கிறார். போதை பிஸினஸில் புழங்கும் பணம், எந்தெந்த நாடுகளில் புழக்கம் அதிகம் போன்ற செய்திகள் அட்சரம் பிசகாத அபார புள்ளிவிவரங்கள். ஒரு திரைக்கதைக்கான சுவாரஸ்யம் நூலின் ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது. பின்னிணைப்பில் இப்புத்தகம் எழுத ரெஃபரென்ஸுக்கு பாரா எடுத்துக்கொண்ட புத்தகங்களையும், இணைப்புகளையும் நாம் யாராவது வாசித்திருந்தால் இன்னேரம் கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு தீவிர வாசிப்பாளரென்றால் மூன்றரை மணி நேரத்தில் ஒரே மூச்சாக இப்புத்தகத்தை வாசித்துவிடலாம். ஒவ்வொரு இல்ல நூலகத்திலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய நூல். அடாதமழை விடாது அடித்துக்கொண்டிருந்த நேற்றைய இரவை இந்நூல் எனக்கு சுவாரஸ்யமாக்கியது. தடங்கலின்றி நூலை வாசிக்க வகைசெய்த ஆற்காட்டாருக்கு கோடி நன்றி. நூலின் பெயர் : என் பெயர் எஸ்கோபர் நூல் ஆசிரியர் : பா.ராகவன் விலை : ரூ.90 பக்கங்கள் : 224 வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும். நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப்பி 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

25 நவம்பர், 2008

இரும்பு குதிரைகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக இந்நாவலை வாசித்தபோது பாலகுமாரன் மீது செம கிறுகிறுப்பு இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை சிலாகித்து படித்தேன். காதலன், பாட்ஷா மாதிரியான சூப்பர்ஹிட் படங்களுக்கு வேறு வசனம் எழுதி பாலகுமாரன் என்னை ஆக்கிரமித்திருந்தார். ஒரு மனிதருக்கு ஒன்றுதான் மாஸ்டர்பீஸாக இருக்கமுடியும். பாலகுமாரனுக்கோ இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள் என்று இரண்டு மாஸ்டர்பீஸ்கள். என்னைப் பொறுத்தவரை 'பழமுதிர்க் குன்றம்' அவரது மாஸ்டர்பீஸ்களுக்கெல்லாம் மாஸ்டர்பீஸ். துரதிருஷ்டவசமாக அது சூப்பர்ஹிட் ஆகவில்லை. ஏதோ ஒரு ஆங்கிலநாவலை தழுவி எழுதியிருந்தார்.
பாலகுமாரனிடம் சிருங்கார வர்ணனைகள் குறைவு. எழுத்துக்கள் எளிமை. இந்த இரண்டையும் ப்ளஸ் பாயிண்டென்று சொன்னால், பெய்யெனப் பெய்யும் அவரது அட்வைஸ் மழையை மைனஸ் பாயிண்ட் என்று சொல்லலாம். கருத்து கந்தசாமி மாதிரி வாழ்க்கையைப் போதிக்க பாலகுமாரன் ஆரம்பித்தால் சரியாக இரண்டு பக்கங்களை இரக்கமேயின்றி திருப்பிவிடுவேன். டீனேஜில் இருந்தது போலவே இப்போது அட்வைஸ் என்றால் கசக்கிறது. ஏற்கனவே ஏதாவதொரு நாவலிலோ, தொடரிலோ சொன்னதை தான் வேறு வேறு வார்த்தைகளில் திரும்ப திரும்ப சொல்லுவார். திடீரென யோகா, ஆன்மீகம் என்று நியூஸ் ரீல் பாணியில் டாக்குமெண்டரியும் ஓட்டிவிடுவார்.
ஏனோ இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் பாலகுமாரனை வாசித்தேயாக வேண்டும் என்றொரு வெறிவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக கூட மெர்க்குரிப்பூக்களை மீள்வாசிப்பு செய்திருந்ததால் இம்முறை இரும்பு குதிரை. இரும்புக்கு பக்கத்தில் 'க்' இருக்காது. 'க்' போட்டால் ஸ்லோ ஆகிவிடுமாம். குதிரையென்றால் அசுரவேகத்தில் பறக்க வேண்டுமென்பதால் 'க்' மிஸ்ஸிங்.
கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்ட் தான் பாலகுமாரனின் பலம். நாயக்கர், முதலியார், ராவுத்தர், காந்திலால், விஸ்வநாதன், தாரிணி, கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய், வடிவேலு, நாணு அய்யர், காயத்ரி என்று ஏகப்பட்ட கேரக்டர்களை சரம் சரமாக இரும்புகுதிரைகளில் தொங்கவிட்டிருப்பார். ஒவ்வொரு கேரக்டரையும் சிற்பியின் நுணுக்கத்தோடு பேனாவால் செதுக்கு செதுக்கென்று செதுக்கியிருப்பார். விஸ்வநாதன் கேரக்டர் தான் பாலகுமாரன் என்பதை ஒரு சில அத்தியாயங்களிலேயே உணர்ந்துவிட முடியும்.
மனிதர் டாஃபேயில் இருந்தபோது நேர்ந்த அனுபவங்களை இரும்பு குதிரைகளாக ஓடவிட்டிருப்பார். லாரியும், லாரியை சார்ந்த மனிதர்களும், சம்பவங்களும் தான் கதை. இது கல்கியில் தொடராக வந்தது என்று அப்பா ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு. ஒரு தொடருக்குரிய அம்சங்கள், தொடரும் போடும்போது வைக்கவேண்டிய குட்டி சஸ்பென்ஸ் எதுவுமே இரும்பு குதிரைகளில் இல்லை. தொடர்கதை என்று சொல்ல இதில் தொடர்ச்சியான கதை கூட கிடையாது. ஒட்டுமொத்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட சாருவின் ராஸலீலா மாதிரி.
விஸ்வநாதன் கேரக்டரை ரொம்ப புனிதனாக காட்டியிருப்பார். விஸ்வநாதனுக்கு கிடைத்தமாதிரியான வாய்ப்புகள் கிடைத்தால் நான் கூட அயோக்கியனாகி விடுவேன். பாலியல் சேவகரான வசந்தாவோடு ஓரிரவில் பேசிக்கொண்டேயிருப்பார். நெற்றியில் லேசாக முத்தமிடுவார். 'இந்த குழந்தை வாழ்வில் எல்லா வளமும் பெறவேண்டும்' என்று இறையை வேண்டுவார். அடிக்கடி குதிரை கவிதை எழுதுவார். 'பனிவிழும் மலர்வனம்' பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பார். அலுவலகத்தில் நல்ல அதிகாரி. யோசித்துப் பார்த்தால் ஆர்ட்ஃபிலிம் ஹீரோ மாதிரியான கேரக்டர்.
நாவலில் அடிக்கடி வரும் குதிரைகவிதைகளை முதல்தடவை படித்தபோதே பொருள்புரியாமல் நொந்துவிட்டேன். அது மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற குழப்பம் வேறு. இம்முறை வாசிக்கும்போது கவனமாக குதிரைக்கவிதைகளை தவிர்த்தே வாசித்தேன். ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இத்தனைக்கும் குதிரைக்கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம்.
ஒரேநாளில் இரண்டு லாரிகளை இழந்துவிடும் ராவுத்தர், லாரித்தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் நஷ்டமடையும் காந்திலால், பாலியல் சேவகர் வசந்தா, இன்னொரு பாலியல் சேவகர் கவுசல்யா, வடிவேலு என்று எல்லா கேரக்டர்களையுமே லேசாக கோடுபோட்டுக் காட்டாமல் பின்னணிக் கதைகளை நேரில் பார்ப்பதுபோல படம்பிடித்துக் காட்டும் ஆற்றல் அப்போது பாலகுமாரனுக்கு இருந்திருக்கிறது. நாணு அய்யர் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவளது இரண்டாவது மகள் காயத்ரி அவருடைய ஜெராக்ஸ். கல்யாணம் வேணாம், எனக்கு குழந்தை மட்டும் குடு என்று விஸ்வநாதனை தைரியமாக கேட்பவள். மகளுடைய ஆசை நியாயமானதுதான் என்று நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். பாலச்சந்தர் ஏன் இந்த கேரக்டர்களை சினிமாவில் கொண்டுவராமல் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.
லாரி தொழிலின் தொழில்நுணுக்கங்களை எளிமையாக எழுதியிருப்பார். ஒரு லாரித் தொழிலாளி கூட இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம். பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகே இவ்வளவு நேர்த்தியைக் கொண்டுவந்திருக்க முடியும். இவ்விஷயத்தில் பாலகுமாரனின் உழைப்பு கொண்டாடப்பட வேண்டியது.
இரும்பு குதிரைகள் - வாசிப்பை நேசிப்பவர்களுக்கு எக்ஸ்பிரஸ்.

24 நவம்பர், 2008

விளம்பர உலகம்!

"ங்கா.. ங்கா..' என்று ஒரு குழந்தை அழுகிறது. என்ன காரணம்? குழந்தைக்குப் பசிக்கிறது, பால்வேண்டும் என்பதுதானே? பேசத் தெரியாத குழந்தைகூட குறிப்பாகத் தன்னுடைய தேவையை உணர்த்தி விடுகிறது இல்லையா? இதற்குப் பெயர்தான் விளம்பரம்.

நூலின் பெயர் : சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா

பக்கங்கள் : 152

விலை : ரூ. 70/- வெளியீடு : கிழக்கு பதிப்பகம், எண் 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 மின்னஞ்சல் : support@nhm.in இணையம் : www.nhm.in சினிமாத்துறையைப் போலவே விளம்பரத்துறையும் பிரம்மாண்டமானது. பல கோடிகள் புழங்கும் துறை. பிரபலங்களை மேலும் பிரபலங்களாக்கும் துறை. இத்துறைக்குள் நுழைவது ஒன்றும் சக்கரவியூகத்துக்குள் நுழைவதுபோலக் கடினமானதல்ல. கொஞ்சம் முயற்சி செய்தால், விளம்பரங்கள் குறித்து கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும். எளிதாக நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிவிடலாம். இப்போதெல்லாம் சினிமாத்துறைக்குள் நுழைய விரும்புபவர்கள் முன்னோட்டமாகத் தேர்ந்தெடுப்பது, விளம்பரத்துறையைத்தான் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. விளம்பரத்துறை குறித்த போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை. பல விளம்பர முன்னோடிகள் தமிழர்களாக இருந்தும் இந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், ஆங்கிலப் புத்தகங்களைத்தான் நாடவேண்டிய நிலை. ஆங்கிலத்தில் இந்தத் துறையின் ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் விரிவான பல நூல்கள் இருக்கின்றன. விளம்பரத்துறையின் மொழியே ஆங்கிலம்தான். அமெரிக்கப் பாணியில் நடத்தப்படும் விளம்பர ஏஜென்ஸிகளில் பணிபுரிய ஆங்கிலம் அத்தியாவசியமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழில் வாசிக்கும் சுகானுபவத்தை மற்ற மொழிகள் நமக்கு தந்துவிடுமா என்ன? நான் ஒரு ஏஜென்ஸியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கே நேர்முகத்தேர்வுக்காக ஓர் இருபது வயது இளைஞன் வந்திருந்தான். அவனது சொந்த ஊர் சிவகாசி. அங்கே சில அச்சகங்களில் ஓவியனாகப் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு இருந்தது. அருமையான ஓவியன். அவனிடம் ஒரு தயாரிப்பைப் பற்றிய சில விவரங்களைச் சொல்லி தலைப்புக் கொடுத்து ஒரு விளம்பரத்தை வரைந்து காட்டச் சொல்லியிருந்தேன். ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை வரைந்து தலைப்பு எங்கே வரவேண்டும், மற்ற விஷயங்கள் எங்கெங்கே வரவேண்டும் என்று வரைந்து காட்டியிருந்தானான். அவன் வரைந்து காட்டிய லேஅவுட் மிக அருமையாக வந்திருந்தது. "இந்த விளம்பரத்துக்கு எதற்காக கிரிக்கெட் வீரரை மாடலாக வைத்தாய்?' என்று கேட்டதற்கு, அவனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. "இவர்தான் இப்போது நிறைய விளம்பரங்களில் வருகிறார். இவரை மாடலாக வைத்தால் விளம்பரம் நன்கு கவனிக்கப்படும்' என்று பதில் சொன்னான். அவனுக்கு நல்ல ஓவியத் திறமை இருந்தது. ஆனாலும் விளம்பர நிறுவனத்தில் பணியாற்ற அதுமட்டும் போதாது. விளம்பரத்துறை குறித்த போதுமான அறிவு இருக்க வேண்டும். அருமையாக லேஅவுட் செய்வதும், மார்க்கெட்டிங் செய்வதும், டி.வி. விளம்பரங்களை படம்பிடித்துக் கொடுப்பதும் மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல. சுருக்கமாகச் சொல்லப் போனால் விளம்பரம் வெளியிடுவது மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல, அதையும் தாண்டி பொருளின் விற்பனையைப் பெருக்க உதவவேண்டும். நம்மில் நிறையப் பேர் விளம்பரங்கள் என்றாலே மாடல்கள்தான் என்று அந்த சிவகாசி பையனைப்போல நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் சொல்லப் போனால் மாடலிங் என்பது தனித்துறை. விளம்பரத்துறையைச் சார்ந்த இன்னொரு பெரிய துறை. அப்படியென்றால் எது விளம்பரத்துறை,? விளம்பரத்துறையில் யார் யார் இருக்கிறார்கள்,? என்ன என்ன செய்கிறார்கள்? போன்ற சந்தேகங்கள் வரலாம். அந்தச் சந்தேகங்களை எல்லாம் இந்தப் புத்தகம் வாயிலாகத் தீர்த்துக்கொள்ளப்போகிறோம். விளம்பரத்துறையின் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் தனித்தனியாகவே புத்தகமாக எழுதமுடியும் என்றாலும், தமிழில் இந்தத் துறை குறித்து அறிந்துகொள்ளப் போதுமான புத்தகங்கள் இல்லாத நிலையில் இந்தத் துறை பற்றிய பறவைப் பார்வையைப் பார்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவும். - யுவ கிருஷ்ணா சென்னையைச் சேர்ந்த யுவகிருஷ்ணா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். விகடன் குழுமத்தின் இணையத்தளமான யூத்ஃபுல்.விகடன்.காமில் தொடர்ந்து எழுதிவரும் யுவகிருஷ்ணா, இணைய வலைப்பூக்களிலும், சஞ்சிகைகளிலும் ஏராளமாக எழுதிவருகிறார். இணையத்தில் இவரது பெயர் லக்கிலுக்.

விளம்பர உலகம் - ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும்!...

18 நவம்பர், 2008

பகல் வேஷம்!

வாழ்க்கையில் இரட்டை வேடம் போடுபவர்களை "பகல் வேஷம் போடுறாண்டா!" என்று நாம் சொல்வதுண்டு. பகல் வேஷம் ஒரு காலத்தில் உன்னதக் கலையாக, தொழிலாக தமிழகத்தில் இருந்ததுண்டு. உத்திரமேருரூக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களில் இன்னமும் பகல்வேடக் காரர்கள் உண்டு. என்ன தொழிலை தான் மாற்றிக் கொண்டார்கள். பல பேர் விவசாயக் கூலிகளாகவும், கல்லுடைப்பவர்களாகவும் உருமாறியிருக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் திருப்புலிவனம் செல்ல நேர்ந்தது. அங்கே சில முன்னாள் பகல்வேடக் காரர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. சினிமா வரும் காலத்திற்கு முன்பாக மக்களுக்கு பொழுதுபோக்க பயன்பட்ட கலை தெருக்கூத்து. பண்டிகைக் காலங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் இரவுவேளைகளில் தெருக்கூத்து நடத்துவார்கள். தெருக்கூத்தின் சப்ஜெக்ட் பொதுவாக இதிகாசக் கதைகளாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் அமைந்திருக்கும். ராஜா வேடம் போடுபவரை ராஜபார்ட் என்றும், ராணி வேடமோ அல்லது பெண்வேடமோ தரிப்பவரை ஸ்த்ரீபார்ட் என்றும் அழைப்பார்களாம். பெண்கள் யாரும் தெருக்கூத்தில் பங்கேற்க அப்போது அனுமதியில்லை என்பதால் ஆண்களே பெண் வேடமும் அணியவேண்டிய நிலை இருந்திருக்கிறது. தெருக்கூத்து கட்டுபவர்கள் நல்ல பாடகர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை தெருக்கூத்து கலைஞர்கள் மட்டுமல்லாமல் பார்ட் டைமாக விழாக்காலங்களில் மட்டும் கூத்து கட்டுபவர்களும் இருந்திருக்கிறார்கள். வருமானத்துக்கு என்றில்லாமல் புகழுக்காக இத்தொழிலை பகுதிநேரமாக செய்திருக்கிறார்கள். எனது தாய்வழி பாட்டனார் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் அகரம்தூளி என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் அவர். கோயில் திருவிழாக்களில் ராஜபார்ட் வேடம் கட்டுவாராம். அவரது உறவினர் ஒருவர் ஸ்த்ரீபார்ட் போடுவாராம். திருவிழா முடிந்ததுமே அவரவர் வேலையை (பொதுவாக விவசாயம்) கவனிக்கப் போய்விடுவார்கள். ஆனாலும் கூத்தையே தொழிலாக கொண்டவர்கள் தெருக்கூத்து இல்லாத காலங்களில் வருமானத்துக்காக பகல்வேடம் பூணுவார்கள். அதிகாலை நான்கு மணியளவில் எழுந்து முகம் முழுக்க அரிதாரம் பூசி சிவன், கிருஷ்ணன், ராமன், ராவணர், அசுரர், நாரதன் என்றெல்லாம் வேடம் பூண்டு அருகிலிருக்கும் கிராமங்களுக்கு செல்வார்கள். ஒவ்வொரு வீடாக சென்று பாட்டு பாடியோ, வசனம் பேசியோ பணமாகவோ, நெல்லாகவோ ஏதாவது பொருளாகவோ பெறுவார்கள். உணவும் ஏதோ ஒரு வீட்டில் விருந்தாக கிடைக்கும். அக்காலங்களில் பகல்வேடக் காரர்களுக்கு மக்களிடையே நல்ல மதிப்பும் இருந்திருக்கிறது. கடவுள் வேடம் போட்டவர்கள் ஆசீர்வதித்தால் தங்கள் குடும்பம் விளங்கும் என்ற நம்பிக்கையும் பலபேருக்கு இருந்திருக்கிறது. சில பகல்வேடக் காரர்கள் கூட்டமாக மற்ற மாவட்டங்களுக்கு ஓரிரு மாதங்கள் சுற்றுப்பயணமாக சென்றும் தங்கள் தொழிலை செய்வதுண்டு. அவ்வாறு வேடம் இட்டுவரும் பகல்வேடக் காரர்களிடமே அந்த வருட திருவிழாவுக்கு தெருக்கூத்து கட்ட பேரம் பேசி கிராமத்து முக்கியஸ்தர்கள் அட்வான்ஸும் கொடுத்து விடுவார்களாம். இதெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. சினிமாத் தொழில் வளர்ந்ததால் பாதிக்கப்பட்டது நாடகக்கலை மட்டுமன்று, இக்கலையும் தான். இன்றைய தேதியில் மிக மிக குறைவானவர்களே பகல் வேடம் கட்டுகிறார்கள். தெருக்கூத்துக்கும் இளைய சமுதாயத்திடம் அவ்வளவாக வரவேற்பில்லை. ஒரு உன்னத கலையை தொழிலாக கொண்டவர்கள் மாறிவரும் சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு தெரியாமலேயே மறைந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முறை சாலையில் எங்கேயாவது ராமன் வேடம் போட்டவரோ, ராவணர் வேடம் போட்டவரோ உங்களிடம் காசு கேட்டால் தயவுசெய்து எரிந்து விழாதீர்கள். நம் முன்னோர்கள் பொழுதுபோக்க உதவிய ஒரு பெரும் கலையின் மிச்சமாய் அவர்கள் மட்டுமாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

17 நவம்பர், 2008

செய்திகள் வாசிப்பது!

1987 டிசம்பர் 24 அன்று தான் அந்த ஆசை எனக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சென்னை தொலைக்காட்சியின் செய்திகளில் கையில் கட்டோடு, ஷேவ் செய்யாத முகத்தோடு, கண்களில் தேங்கிய கண்ணீரோடு வரதராஜன் செய்தி வாசிக்கிறார். “தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் மரணம்” எங்களது பள்ளியில் தினமும் பிரார்த்தனைக் கூட்டம் காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன்பே நடக்கும். பிரார்த்தனை என்றால் தமிழ்த்தாய் வாழ்த்து, ஒருமைப்பாடு உறுதிமொழி, தலைமையாசிரியருக்கு சிறப்பு மரியாதை, தேசியகீதம் ஆகியவை இருக்கும். எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும். 9.30 மணிக்கு பள்ளி என்றால் 9 மணிக்கே எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் மைதானத்தில் குழுமிவிட வேண்டும். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது பிரார்த்தனையோடு “குறள் விளக்கம்” என்ற புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்றினை சேர்த்தார்கள். ஒரு குறள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லவேண்டும். பள்ளியில் யாருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருகிறது என்று கருப்பு தமிழய்யா தேடியபோது அதிர்ஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ என் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தினமும் பிரார்த்தனைக்கு வராமல் லேட்டாக வரும் மாணவன் என்பதால் என்னை சீக்கிரம் வரவைக்கும் யுக்தியும் இதில் இருந்திருக்கிறது. வீட்டில் அதிகாலையில் (ஆறரை மணி) எழுந்து “கற்க கசடறக் கற்பவை கற்றபின்” என்று கண்ணை மூடி மனப்பாடம் செய்து, மு.வ. எழுதிய விளக்கத்தையும் எழுதிக்கொண்டு அவசர அவசரமாக பள்ளிக்கு ஓடுவேன். தினமும் ஒரு குறள். காமத்துப்பால் தவிர்த்து ஒரு அறுநூறு, எழுநூறு குறள்களையாவது ஐந்து ஆண்டுகளில் மைக்கில் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஏழாவது படிக்கும்போதா, அல்லது எட்டாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தமிழய்யா பிரார்த்தனை கூட்டத்தின் போது 'செய்தி வாசித்தால்' வித்தியாசமாக இருக்கும் என்று தலைமையாசிரியரிடம் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியருக்கும் அந்த யோசனை பிடித்துப் போகவே “குறள் விளக்கம்” சொல்லும் பையனே அதையும் செய்யட்டும் என்று சொல்லிவிட்டார். கருப்பு தமிழய்யா உச்சரிப்புகள் குறித்து ஒரு வாரம் எனக்கு சிறப்பு வகுப்பு எடுத்தார். தினமும் இரவு ஏழரை மணிக்கு செய்திகள் ஓடும்போது, கூடவே நானும் சொல்லி பயிற்சி செய்தேன். எனக்கு செய்திகளை எழுதித்தர செந்தில் (என்னுடைய பெரியம்மா பையன்) என்ற மூத்த வகுப்பு மாணவருக்கு சொல்லப்பட்டிருந்தது. செந்தில் தினமும் மாநில செய்திகள் கேட்பார், தினமணி படிப்பார். பின்பு அவற்றிலிருந்து முக்கியச் செய்திகளை தலைப்பாக எழுதி வைத்துக் கொண்டு.. ஒவ்வொரு தலைப்புக்கும் நான்கு அல்லது ஐந்து லைனில் சுருக்கமாக செய்தி எழுதுவார். வாசிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக ரெண்டு, மூன்று முறை வாசித்துப் பார்ப்பேன். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும்போது பள்ளியில் அதிக ஒலியோடு ஆசிரியர் சொல்லுவதற்கு பின்பாட்டு பாடும் பாணியிலேயே ராகத்தோடு செய்தி வாசித்துக் கொண்டிருந்தேன். நாளாக, நாளாக கொஞ்சம் ஸ்டைலாக வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பாணியில் நிறுத்தி வாசிக்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்க தொடங்குவதற்கு முன்னால் “செய்திகள் வாசிப்பது உங்கள் லக்கிலுக்” என்று சேர்த்து சொல்ல ஆரம்பித்தேன். இதுபோல சொல்வதற்கு ஏதாவது ஆட்சேபணை வந்தால் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். நல்லவேளையாக தமிழய்யாவுக்கும் அது பிடித்திருந்ததால் தொடர்ந்தது. செய்திகள் வாசித்ததால் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தாலும் பள்ளியில் நல்ல பிரபலம் கிடைத்தது. பெரிய வகுப்பு மாணவர்கள், சிறிய வகுப்பு மாணவர்களை கிண்டல் செய்வார்கள். என்னை மட்டும் கொஞ்சம் மரியாதையோடு பார்க்க ”செய்திகள்” உதவியது. “செய்திகள்” புண்ணியத்தால் தமிழய்யாவின் அறிவிக்கப்படாத சீடனாகவும் கெத்தாக உலவ ஆரம்பித்தேன். எனக்கு செய்திகள் எழுதித்தந்த நியூஸ் எடிட்டரான செந்தில் பள்ளி இறுதி வகுப்புக்கு வந்து விட்டதால் காலையில் ட்யூஷன் செல்ல ஆரம்பித்தார். அவரை தொல்லை செய்யாமல், என்னையே செய்திகள் எழுதிக்கொள்ளும்படி தமிழய்யா சொன்னார். தயங்கியபோது அவ்வப்போது சில டிப்ஸ்களும் தந்து தன்னம்பிக்கையை அதிகரித்தார். நாளாக நாளாக நியூஸ் எடிட்டிங் கைவந்த கலை ஆகிப்போனது. தலைப்புகளை மட்டும் எழுதிக்கொண்டு வந்து என் சொந்த சொல்நடையோடு வாசிப்பது சுலபமாக இருந்தது. மிக கவனமாக ‘கலைஞர்' என்று சொல்லாமல் திரு.கருணாநிதி என்று சொல்வது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ”எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள்?” என்று பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேட்பது வழக்கம். ‘டாக்டர், இன்ஜீனியர், வக்கீல்' என்று என் வகுப்பு மாணவர்கள் சொல்லும்போது நான் மட்டும் ‘செய்தி வாசிப்பாளன், அரசியல்வாதி அல்லது லைப்ரேரியன்' என்று சொல்லி சொர்ணம் டீச்சரை ஒருமுறை ஆச்சரியப்படுத்தினேன். அவரை ஆச்சரியப்படுத்துவதற்காக அதை அப்போது சொல்லவில்லை. உண்மையில் நான் என்னவாக விரும்பினேனோ, அதை தான் சொன்னேன். செய்திவாசிப்பு பழக்கத்தால் ஒருமுறை பேச்சுப்போட்டியில் திடீரென்று கலந்துகொண்டு பரிசு வாங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆறாம் வகுப்பிலிருந்து கட்டுரை போட்டியில் மட்டுமே கலந்துகொள்வேன். மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்றவற்றில் கலந்துகொள்ள எனக்கு தயக்கம் இருந்தது. பத்தாம் வகுப்பு வந்தபோது என்னிடம் சொல்லாமலேயே என் பெயரை போட்டிக்கு தமிழய்யா சேர்த்து விட்டிருந்தார். ‘எனக்குப் பிடித்த தலைவர்' என்ற மொக்கை தலைப்பில் பேசவேண்டும். நானும் அவசர அவசரமாக வீட்டிலிருந்த சில புத்தகங்களைப் புரட்டி 'எனக்குப் பிடித்த தலைவர் கலைஞர்' என்று பேச ஸ்க்ரிப்ட் ரெடி செய்து தயாராகியிருந்தேன். பேச்சுப்போட்டியன்று நான் ‘எனக்கு பிடித்த தலைவர் டாக்டர் கலைஞர்' என்று சொன்னதுமே தண்டபாணி மாஸ்டர் ஆட்சேபித்தார். ”உயிரோடு இருக்கும் தலைவர்களை பற்றி பேசக்கூடாது” என்று ஒரு விதி இருப்பதாக சொன்னார். அவர் காங்கிரஸ்காரர். கலைஞரை அவருக்கு சுத்தமாக பிடிக்காது. சமூக அறிவியல் பாடம் நடத்தும்போது லைட்டாக கலைஞரை தாக்கி அரசியல் பேசுவார். நான் உட்பட சில திமுக சார்பு மாணவர்கள் உடனே எதிர்ப்பு தெரிவிப்போம். அந்த காண்டு அவருக்கு இருந்தது. எனக்கு முன்பு பேசியவர்களும் காந்தி, நேரு, காமராஜர் என்று தான் பேசியிருந்தார்கள். தமிழய்யாவை பரிதாபமாகப் பார்த்தேன். “அய்யாவைப் பற்றி என்ன தெரியுமோ, அதைப் பேசுடா” என்றார். நான் படித்த பள்ளியின் பெயரே ‘தந்தை பெரியார்' பெயரில் இருந்தது. தமிழய்யாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெரியார் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். இருப்பினும் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தட்டுத் தடுமாறி பேசி முடித்தேன். “பெரியார் வெறும் கடவுள் எதிர்ப்பாளர் மட்டுமே அல்ல. அவர் ஒரு சமுதாய சீர்த்திருத்த சிற்பி” என்பதை மட்டும் கொஞ்சம் முத்தாய்ப்பாக சொல்லி வைத்தேன். நானே எதிர்ப்பார்க்காத நிலையில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பத்தாம் வகுப்பு முடிந்த நிலையில் நான் மேல்நிலைக்கல்வி கற்க வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கே வாரம் ஒருமுறை தான் பிரார்த்தனை. குறள்விளக்கம், செய்திகள் எதுவும் அங்கே இல்லை. எனவே செய்திகளோடு எனக்கிருந்த தொடர்பு கொஞ்சம் அறுந்தது. பழைய பள்ளியிலும் எங்கள் 'செட்' வந்தப்பிறகு புது தலைமையாசிரியர் வந்து ”செய்திகளை” தூக்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். அதன்பின்னர் ஒரு ஐந்தாண்டு காலத்துக்குப் பிறகு தான் மீண்டும் செய்திவாசிப்பாளர் ஆகவேண்டுமென்ற எண்ணம் வந்தது. தூர்தர்ஷன் செய்திகளுக்கு மவுசு குறைந்து சன் செய்திகள் பிரபலமான நேரம் அது. உச்சரிப்பு மட்டுமல்லாமல் தோற்றமும் செய்தி வாசிப்புக்கு முக்கியம் ஆகிப்போனது. பல்லி மாதிரி இருந்த நான் செய்தி வாசித்தால் யார் பார்ப்பார்கள்? என்ற தாழ்வுமனப்பான்மை எனக்கு எழுந்ததால் நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்க ‘பட்டம்' பெற்றிருக்க வேண்டும் என்று சொன்னதால், வானில் மட்டுமே பட்டம் விடத்தெரிந்த நான் விரக்தி அடைந்துப் போயிருந்தேன். செய்தி வாசிப்பு ஆசையை எல்லாம் மறந்து ஏழெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இருமாதங்களுக்கு முன்பு ‘சன் நியூஸில்' என்னுடைய ஒரு பைட்டு காட்டப்பட்டதால் மீண்டும் அந்த ஆசை கிளர்த்தெழுந்திருக்கிறது. செய்திகள் சம்பந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் ”நான் செய்தி வாசிக்க இயலுமா?” என்று கேட்டபோது ”இன்னமும் உன் குரல் உடையவில்லையே தம்பி. ஆள் கொஞ்சம் பரவாயில்லை. குரல் தான் கம்பீரமா இல்லை” என்று சொன்னதுமே கொஞ்சம் அடங்கிவிட்டேன். நண்பர் சொல்வது உண்மை தான். க்ரெடிட்கார்டு, லோனுக்கு எனக்கு தொலைபேசும் கும்மிகள் சில நேரங்களில் “மேடம்” என்று கூட விளிப்பதுண்டு. சென்ற வாரம் தென்மாவட்டங்களுக்கு அலுவலகப் பணி காரணமாக போயிருந்தபோது அங்கிருந்த உள்ளூர் சேனல்களின் செய்தியைப் பார்த்தேன். குரல், உச்சரிப்பு, தோற்றம் எதையுமே கணக்கில் கொள்ளாமல் செய்திவாசிப்பாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் :-) அட்லீஸ்ட் அங்கிருக்கும் ஒரு சேனலிலாவது ஒரே ஒருநாளாவது செய்திகள் வாசித்துவிடவேண்டும் என்ற கொலைவெறி மீண்டும் வந்திருக்கிறது. பார்ப்போம்!

14 நவம்பர், 2008

வாரணம் ஆயிரம்

இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது. அப்பாவின் கல்லூரி காதலில் ஆரம்பித்து அவரது இறுதி மூச்சு வரைக்கான கதை என்று எடுத்துக் கொண்டாலும் இதில் மகன் வளர்வது, காதலிப்பது, மேட்டர் முடிப்பது, தண்ணியடிப்பது, டோபு அடிப்பது மாதிரியான கருமங்கள் எதற்காக? மகனின் பார்வையில் அப்பா என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டாலும் அப்பாவுக்கு நேரடி தொடர்பில்லாத மகனின் அந்தரங்கம் காட்சியாக்கப்பட்டிருப்பது எல்லாம் அனாவசியம். சுவாரஸ்யம் குறைவான ஒருவரின் வாழ்க்கை வரைபடம் இத்திரைப்படம். அனேகமாக இயக்குனர் கவுதமின் சொந்தக்கதையாக இருக்கலாம். மகன் சூர்யாவின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அனைத்திலும் அச்சு அசலாக கவுதம் வாசுதேவ் மேனன். இயக்குனருக்கு சினிமா சென்ஸ் ரொம்பவும் அதிகம். தனித்தனி காட்சிகளாக பார்த்தால் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது புலப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்கும்போது கொட்டாவிதான் வருகிறது. சாரி கவுதம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பா கேரக்டருக்கு ரகுவரன்; மகன் கேரக்டருக்கு கமல்ஹாசன் ஆகியோரின் உடல்மொழியை அப்பட்டமாக பின்பற்றுகிறார். இயக்குனர் கமல்ரசிகர் என்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'. அப்பா, மகன் இரண்டு கேரக்டரையும் சூர்யாவே எடுத்து நடித்தது ஏன் என்பதை அவராலும், இயக்குனராலும் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது. வேறொரு நடிகரை அப்பாவாக நடிக்க வைத்திருந்தால் தயாரிப்புச் செலவாவது குறைந்திருக்கும். ஆயினும் தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. வானில் ஹெலிகாப்டரில் மேஜர் சூர்யா பறக்கிறார் என்றால் அதை வானிலேயே சென்று படமாக்கும் மிஸ்டர் பர்ஃபெக்ட் இயக்குனர். அந்த ராணுவகாட்சிகளுக்கான டோன் அபாரம். திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டே பார்ப்பார்கள். அமெரிக்க காட்சிகளும், பாடல்களும் வாவ். படத்தைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆமையை விட மெதுவாக நகரும் காட்சிகள் ஏற்படுத்தும் கடுப்பின் எல்லைக்கு அளவேயில்லை. இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது. இறுதிக்காட்சிக்கு இடையே தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட இராணுவமீட்பு சண்டை சூப்பர் என்றாலும் தேவையே இல்லை. சமீரா ரெட்டி என்ற சப்பை ஃபிகரை எப்படித்தான் சூர்யாவுக்கு ஜோடியாக சேர்த்தார்களோ? காதலை சொல்லும் கட்டத்தில் பூ மாதிரி முகத்தை மலரவைக்க வேண்டாமா? ரியாக்‌ஷன் காட்டுவதில் கஞ்சத்தனம். நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு குத்து ரம்யா (எ) திவ்யாவின் எண்ட்ரி வருவதால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம். சிம்ரன் இளமையாக தோன்றும் காட்சிகள் நிறைவு. வயதான கெட்டப் மோசமென்றாலும், நடிப்பில் சோடைபோகவில்லை. கிராபிக்ஸில் பழைய சென்ட்ரல், அந்நாளைய ஸ்பென்ஸர் பிளாஸா ஆகியவற்றை பாடலில் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் 60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் அவை. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது, மேஜிக்கும் இருக்கிறது. சராசரி தமிழ் சினிமா ரசிகனால் பார்க்கவே முடியாத படமிது. தெலுங்கிலும் டப் செய்திருக்கிறார்களாம், அங்கே திரையை ரசிகர்கள் கிழிக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம். வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!

11 நவம்பர், 2008

யுவதா!

தெலுங்கில் அடிதடி, மசாலா, அஜால் குஜால் காலக்கட்டங்களை எல்லாம் தாண்டி காமெடிக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் பார்த்த 'யுவதா'வும் காமெடி மசாலா. காமெடி என்று இறங்கிவிட்டால் லாஜிக்கெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா? ஊரில் மாமா வீட்டில் இருந்து சிட்டிக்கு வரும் ஹீரோ பாபு. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கும்மாளம் - இதைத்தவிர அவனுக்கு வேறெதுவுமே தெரியாது. நட்புக்காக உயிரையும் கொடுப்பான். சிட்டியில் பட வாய்ப்பு தேடும் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர், காதலியை கைப்பிடிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு போக முயற்சிக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், வங்கிப் பணத்தை பாதுகாக்கும் ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் என்று அவனுக்கு மூன்று நண்பர்கள். நண்பர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே பாபுவின் வேலை. இடையில் எகனை மொகனை போன் கால் ஒன்றில் பேபி என்ற ஒரு அழகான காதலியும் பாபுவுக்கு கிடைக்கிறாள். மகிழ்ச்சியாக பயணப்படும் திரைக்கதையில் திடீரென்று ஒரு ஜெர்க் அடித்து அடிதடியை நுழைத்து படத்தை த்ரில்லர் ஆக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நண்பனின் உயிரைக் காக்க ஒரு வட்டிக்கார வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் மற்ற நண்பர்கள், வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து, யாரோ அடித்த இருபது கோடி கொள்ளைக்காக ஜெயிலுக்குப் போகிறார்கள். அதன் பின்னர் வரிசையாக தடாலடியாக இறக்கிவிடப்படும் கொடூர வில்லன்கள் ஒவ்வொருத்தராக காமெடியன்களாகி விட இறுதியில் ஒரிஜினல் வில்லன் ஜெயிலுக்குப் போகிறார். நண்பர்கள் மகிழ்ச்சியோடு தொடர்கிறார்கள். நட்பு தான் பெஸ்ட்டு என்று அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர். இடைவேளைக்கு முன்பு வேறுபடம், இடைவேளைக்குப் பின்பு வேறுபடம் என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் காட்சியமைப்புகள். நல்லவேளையாக ஹீரோ, ஹீரோயின் போன்றவர்கள் மாறாமல் இருப்பதால் ஒரே படம் தான் என்று நம்பமுடிகிறது. ஹீரோ நிகில் செம அசத்து அசத்தியிருக்கிறார். உங்கள் வீட்டருகில் பஸ் ஸ்டேண்டு பக்கத்தில் பொட்டிக்கடை இருந்தால் அங்கே யாராவது ஒரு பையனை அடிக்கடி பார்த்திருப்பீர்களே? அதுபோன்ற ஒரு சராசரி தோற்றம். தமிழில் மொழிமாற்றம் செய்தால் தனுஷ் நச்சென்று செட் ஆவார். சராசரித் தோற்றத்துக்கு அசாதாரண அழகியான அக்‌ஷா ஹீரோயின் -பாடல்களில் தாராளம். ரியாக்‌ஷன்களில் சிக்கனம். அடுத்தடுத்த தொடர்ச்சியான காட்சிகளாலேயே படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது அபாரம். தேவையில்லாமல் திணிக்கப்பட்ட சண்டைக்காட்சியோ என்று எண்ணும்போது, அந்த சண்டைக்காட்சியே கதையின் திருப்பத்துக்கு மூலகாரணமாக அமைகிறது. ஹாஸ்பிட்டலில் நடப்பதாக சொல்லப்படும் ஆள்மாறாட்டம் காதுல பூ! இரண்டு ஜோடி காதலர்கள் இருந்தாலே சாங்குகளாக போட்டு சாவடிப்பார்கள் தெலுங்கு இயக்குனர்கள். இந்தப் படத்தின் இயக்குனர் கவனமாக சதையை தவிர்த்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குனர், அவ்வளவாக அறிமுகமில்லாத கதாநாயகன் என்றாலும் கதை, திரைக்கதை, நகைச்சுவைக்காக குடும்பத்தோடு காணலாம். யுவதா - யூத்துடா!!

10 நவம்பர், 2008

காதை மட்டும் கொண்டாங்க!

இரட்டை கும்மிப்பதிவர்கள் இருவரையும் அடிக்கடி பெரியார் திடல் பக்கம் பார்க்க முடிகிறதாம். அமாவாசைக்கும் அப்துல்காதர்களுக்கும் என்ன சம்பந்தம்? நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்... * - * - * - * - * - * - * - * - * - * - * அவர் பிரபல செய்தியாளர். அவ்வப்போது வலைப்பதிவும் செய்கிறார். எங்கு செல்ல வேண்டுமானாலும் அலுவலக மகிழுந்து தயாராக இருந்தாலும், ஒரு இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். "PRESS" என்று வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரும் சென்னையில் ஹெல்மெட் அணிவதில்லை. இருந்தாலும் நம்ம ஆளு கவசகுண்டலத்தோடு கர்ணனைப் போல எப்போதும் ஹெல்மெட் அணிந்தே காட்சியளிக்கிறாராம். வண்டி ஓட்டும் நேரம் தவிர்த்தும் கூட மற்ற எல்லா நேரமும், பாத்ரூமுக்கு போகும்போதும் கூட ஹெல்மெட்டோடே எச்சரிக்கையாக செல்கிறாராம். ”சிக்னல்ல ஹெல்மெட் இல்லாம போறவங்களை கமிஷனர் ஆபிஸ்லே இருந்துக்கிட்டே மானிட்டர்லே பார்க்குறாங்க. வேலை விஷயமா அங்கே போறப்போ நீங்கள்லாம் கூடவா சார்னு கேட்குறாங்க. அதுனாலே தான்” என்று ஹெல்மெட்டுக்குள் இருந்து காரணம் சொல்கிறார். மனிதர் எப்போதும் ஹெல்மெட்டுக்குள் தலையை கொடுத்து விடுவதால் அவரது கைப்பேசிக்கு ஒரு ரூபாய் போனில் இருந்து முயற்சி செய்யும் அப்பாவி புதுப்பதிவர்கள் லைன் கிடைக்காமல் கடுப்பாகி டாஸ்மாக்குக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சிங்காரி சரக்கு.. நல்ல சரக்கு.. * - * - * - * - * - * - * - * - * - * - * ஆசை ஆசையாக சினிமா ஃபீல்டுக்கு வந்த வலைப்பதிவர் அவர். சீனியர் போஸ்டில் இருப்பதால் தினம் தினம் மொக்கைப்படங்களாக ஓசியில் பார்த்து சினிமாவையே வெறுத்துவிட்டாராம். பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருக்கிறாராம். கமல் ரசிகரான அவரின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர் அவதாரமாக இருக்கக்கூடுமாம். புத்தாண்டில் புது அவதாரம் என்று காதைக்கடிக்கிறது அவருக்கு நெருக்கமான ஒரு சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... * - * - * - * - * - * - * - * - * - * - * பெண் பெயரில் ஆ(சா)பாசமாக களமிறங்கி பல 'பெருசு' பதிவர்களிடம் காதல் கடிதம் பெற்றவர் அந்தப் பதிவர். பிரம்மச்சாரி வேடம் அலுத்துவிட்டதாம். அடுத்தாண்டு ஆரம்பத்தில் மாமன் மகளை கைப்பிடிப்பார் என்று மருதமலையில் பேசிக்கொள்கிறார்கள். முன்னோட்டமாக 'தனி வீடு கூட பார்த்தாச்சு' என்று சரவணா ஸ்டோரில் அவர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தபோது சந்தித்த பதிவர் ஒருவரிடம் கிசுகிசுத்திருக்கிறார். ரகசியம் பரமரகசியம்! * - * - * - * - * - * - * - * - * - * - * வயது நாற்பதை நெருங்கினாலும் அஜித் கலரில், ஜே.கே.ரித்தீஷ் தோற்றத்தில் ‘நச்'சென்றிருக்கும் பதிவர் அவர். அவரை நாயகனாக்கி ஒரு படம் இயக்க இரட்டை இயக்குனர்கள் கதை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்களாம். குறைந்தபட்சம் ஒரு ‘மேட்டர்' படத்திலாவது அப்பதிவரை நாயகனாக்கி பார்க்க இரட்டை இயக்குனர்கள் தொடர் குண்டுவெடிப்பு தீவிரத்தோடு அலைகிறார்கள். தயாரிப்பாளர் தான் இதுவரை மாட்டவில்லை. பேசாமல் நாயகனையே தயாரிப்பாளராக்கி ‘அஜால் குஜால்' படத்தை அவசரமாக முடித்து ரிலீஸ் செய்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். சிம்மா.. நரசிம்மா.... * - * - * - * - * - * - * - * - * - * - * பதிவர் சந்திப்புகளில் மட்டும் முன்பெல்லாம் கலந்துகொண்டவர் அவர். அவருக்கென்று ஒரு வலைப்பதிவு கூட இருப்பதாக தெரியவில்லை. வெறுமனே வாசகர் என்று சொல்லிக் கொள்வார். குறிப்பாக 'மூத்த' வலைப்பதிவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கண்டிப்பாக ஆஜராவார். கடந்த ஒரு வருடமாக ஆளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்தாலாவது அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள். பூபாளம் இசைக்கும்.... * - * - * - * - * - * - * - * - * - * - * இரண்டாண்டுகளுக்கு முன்பாக பலமான ‘திராவக' சிந்தனையோடு களமிறங்கிய பதிவர். அடித்து ஆடுவதில் வல்லவர். இடையில் குடும்பம், குழந்தை, குட்டி, வேலை என்று பிஸியாகிவிட்டதால் வலைப்பதிவுக்கு நீண்ட லீவ் விட்டிருந்தார். இப்போது அழகிகள் நிறைந்த அயல்நாட்டில் பணியாற்றுபவருக்கு சமையல் வேலையெல்லாம் முடித்தபினி நிறைய நேரம் மிச்சமிருக்கிறதாம். மீண்டும் வலைப்பதிய தொடங்கியிருக்கிறார். மெதுவாக டொக்கு வைத்து ஆடிக்கொண்டிருப்பவர் சந்தர்ப்பம் கிடைத்ததுமே பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாச ஆரம்பிப்பாராம். முன்பெல்லாம் பார்ட்னர்ஷிப்பில் அசத்திக் கொண்டிருந்தவர் இந்த முறை தனியாகவே கொளுத்து கொளுத்துவென்று கொளுத்த திட்டமிட்டிருக்கிறார். ஆடுங்கடா என்னை சுத்தி... * - * - * - * - * - * - * - * - * - * - * மொழிவாசனைக்குப் பிறகு பதிவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரட்டி அது. மொழிவாசனை கொஞ்சநாட்களாக அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்வதால் இத்திரட்டிக்கு நாளுக்கு நாள் ஹிட்ஸ் டபுள் ஆகிறதாம். வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் திரட்டியின் உரிமையாளர் அடுத்ததாக ஆங்கிலத்தில் வலைப்பதியும் தமிழர்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறாராம். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்....