30 ஏப்ரல், 2010

அன்ன கரீனா - அனைவரும் வருக!

ஒரு தொடர் நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக நடைபெற அதன் அமைப்பாளர்கள் மட்டுமே காரணமாகி விட முடியாது. அந்நிகழ்வு யாருக்காக நிகழ்த்தப்படுகிறதோ அவர்களின் பங்கேற்பும், ஆர்வமும் மட்டுமே வெற்றியை தேடித்தர முடியும். அவ்வகையில் 'உரையாடல்' அமைப்பு, நியூ ஹாரிசன் மீடியா பத்ரியோடு இணைந்து நடத்திவரும் உலகப்பட திரையிடல் வெற்றிகரமாக ஓராண்டை வரும் மாதத்தோடு நிறைவுசெய்வதை பங்கேற்பாளர்களின் வெற்றியாக நாம் கொண்டாடலாம்.

இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதை பைத்தியக்காரன் பதிவு போட்டு விளக்கியிருக்கிறார்.

முதல்வருட நிறைவு கொண்டாட்டத்தை முன்வைக்கும் விதமாக உங்கள் சிந்தனைகளை ஒட்டுமொத்தமாக டவுசர் அவிழ்க்கும் (இட் மீன்ஸ் கட்டவிழ்த்தல்) திரைப்படம் ஒன்றினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் உரையாடல் அமைப்பாளர்கள். லியோ தால்ஸ்தாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நாவல் பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. உரையாடல் அமைப்பு திரையிடப்போகும் படமோ அரதப்பழசானது. 1935 கிறிஸ்துமஸுக்கு வெளியானது. நெஞ்சில் மாஞ்சா சோறு இருப்பவர்கள் வரும் ஞாயிறு அன்று திரையிடலுக்கு வரலாம். படம் பார்த்து தாவூ தீருபவர்களுக்கு உரையாடல் அமைப்பு சோடா வாங்கித்தர தயாராக இருக்கிறது.


படத்தின் பெயர்: Anna Karenina (1935)
Director: Clarence Brown
Actors: Greta Garbo (Anna Karenina), Fredric March (Vronsky)
Language: English
பட நேரம் : 95 min
நாள் : மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 6 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, சென்னை

அனைவரும் வருக...

29 ஏப்ரல், 2010

அஜால் குஜால் டிவி!

ஜோதியில் இப்போதெல்லாம் ‘பிட்டு' படங்கள் போடுவதில்லையே என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்க, கனடா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது. உலகின் முதல் நேக்ட் நியூஸ் (அம்மணக்கட்டை செய்திகள் - செய்திவாசிப்பாளர்கள் 0% உடை அணிந்திருப்பார்கள்) சேனலை உலகத்துக்கு அர்ப்பணித்த நாடு. அடுத்ததாக முழுக்க முழுக்க அஜால்-குஜால் மேட்டருக்காகவே ஒரு டிவி சேனலையும் ரசிகர்களுக்கு தாரைவார்க்கப் போகிறதாம்.

வரும் அக்டோபர் மாதம் முதல் விண்ணிலிருந்து ‘பிட்டு' மண்ணுக்கு ஒளி-ஒலிபரப்பாகும். குஜாலுக்கு மொழி ஒரு தடையில்லை. எனினும் முதற்கட்டமாக கனாடாவில் வாழும் பிரெஞ்சு பேசும் க்யூபிக் மக்களுக்காக பிரெஞ்சு மொழியில் தனது ஒளிபரப்பை துவக்குகிறது வேனஸ்ஸா டிவி. அடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலமும். ”பிரெஞ்சோ, ஆங்கிலமோ. குருமா ருசியா இருந்தா சரிதான்” என்று நாக்கை சப்பு கொட்டுகிறார் அந்த ஊரில் வசிக்கும் ஒரு உண்மை பிரெஞ்சுக்காரன்.

ஹை-டெபனிஷனில் வேனஸ்ஸா டிவியின் ஒளிபரப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பலரும் கண்களை அகல விரித்துக் கொண்டு பெருத்த எதிர்ப்பார்ப்புகளோடு தயாராக இருக்கிறார்கள். நாடகங்கள், ஆவணப் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களாக நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. செக்ஸ் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து பரபரப்புடன் கூடிய சூடு கோக்குமாக்காக க்யூபிக் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

”இவ்வளவும் ஓசியா?” என்று ஓசியில் ஒட்டடை அடித்துக் கொள்ளும் ஆர்வத்தோடு டொரண்டோவை சேர்ந்த கஞ்சன் ஜங்கா என்பவர் எழுப்பியிருக்கும் கேள்விக்கு, “இல்லை. மாதத்துக்கு பதினைந்து டாலர்” என்று ஆப்பு அடித்திருக்கிறது டிவி நிர்வாகம்.

நாட்டின் முதல் அஜால் குஜால் தொலைக்காட்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாலும், வயிற்றில் கொஞ்சம் நெருப்பை கட்டிக்கொண்டே நடப்பவற்றை கவனத்தோடு பார்த்து வருகிறது Canadian Radio-Television and Telecommunications Commission. ”வன்முறையை காமிக்க கூடாது. அப்புறம் செக்ஸை ரீஜண்டா காமிக்கோணும்னு கண்டிஷன் போட்டிருக்கோம்” என்கிறார் அந்நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர். ஆயினும் இவரும் வரப்போகும் டிவி நிகழ்ச்சிகளை காணப்போவதில் பணிதாண்டிய ஆர்வத்தில் இருப்பதை அவரது உற்சாகத் துள்ளலின் மூலமாக அறியமுடிகிறது.

நிகழ்ச்சிகளுக்கான காண்டெண்ட் எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இருபது சதவிகிதம் லோக்கல் ஆட்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தே தீரவேண்டுமாம். மீதியிருக்கும் எண்பது சதவிகிதத்தை கலிஃபோர்னியா அஜால் குஜால் இண்டஸ்ட்ரியான சாண் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இறக்குமதி செய்ய நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அந்த பள்ளத்தாக்குதான் அமெரிக்காவின் பலான பொழுதுபோக்குத் தேவையை ஈடு செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்க பலான சேனல்களை கேபிள் டிவி மூலமாக பார்த்து ரசித்து வந்த கனடிய ஜொள்ளர்கள் அக்டோபருக்காக வயது வித்தியாசமில்லாமல் தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நம்ம ஊருக்கு இதெல்லாம் எந்த காலத்தில் கிடைக்குமோவென்று ஷகிலா, ரேஷ்மா மற்றும் மரியா ரசிகர்மன்ற கண்மணிகள் வாயில் விரலை சப்பிக் கொண்டு ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான்!

டீச்சரம்மா!

சிறுவயதில் வீட்டில் டீச்சர் விளையாட்டு விளையாடியிருப்பீர்கள். பசங்க எப்பவுமே பசங்கதான். முதலில் பிறந்துவிட்ட காரணத்தால் அக்காக்கள்தான் இந்த விளையாட்டில் எப்பவுமே டீச்சர். பத்து, பண்ணிரெண்டு வயசு அக்காக்கள் கையில் குச்சியோடு பாடம் நடத்த, மருண்ட மான்களை போல முழித்துக் கொண்டிருந்த அனுபவம் அனைவருக்குமே உண்டு.

பீகாரின் உள்ளடங்கிய கிராமமான குசும்பாராவில், ஒரு மாமரத்துக்கு அடியில் இதுபோன்ற காட்சி இப்போது தினமும் நடந்து வருகிறது. நான்கு முதல் பத்து வயதுக்குட்பட்ட ஐம்பது குழந்தைகள் மரத்தடியில் குழுமியிருக்க பண்ணிரெண்டு வயது டீச்சரம்மா பாரதிகுமாரி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நம் டீச்சர் விளையாட்டுக்கும், பாரதியின் வகுப்புக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. இவர் நிஜமாகவே வகுப்பெடுக்கிறார். விளையாட்டல்ல. இவரிடம் கல்வி கற்ற குழந்தைகள் இப்போது ஏ, பி, சி எழுதுகிறார்கள். இந்தியில் சரளமாக வாக்கியங்களை எழுதுகிறார்கள். பாரதியின் வகுப்பு மட்டும் இல்லையென்றால், இந்தியாவின் கல்வி அறிவற்றவர்களின் பட்டியலில் இந்த ஐம்பது குழந்தைகளும் எதிர்காலத்தில் இடம்பெறுவார்கள்.

யார் இந்த பாரதி?

பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு ரயில்நிலைய வாசலில் அனாதரவாக விடப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார் விவசாயக்கூலித் தொழிலாளியான ராம்பதி. இவரது கிராமமான குசும்பரா பீகாரிலிருந்து 87 மைல் தொலைவில் இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்கள் தலித் குடும்பங்கள்.

மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பெற்ற பகுதி இது. கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே இங்கே முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் இதர அரசு கட்டடங்கள் அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே நடைபெறும் மோதலில் சிதைக்கப்பட்டிருக்கின்றன என்றால் பாருங்களேன்.

பள்ளிக்கு கட்டிடம் இல்லை. பள்ளியை நடத்த அலுவலர்களுக்கும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோரும் அச்சப்படும் கலவர சூழல். ராம்பதியின் வளர்ப்பு மகள் பாரதிகுமாரி இப்படியான ஒரு சூழலில்தான் டீச்சர் ஆகிறார்.

பால்ய விவாகம் அங்கே சகஜம். எனவே பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ராம்பதி கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்டவர். தன்னுடைய மகள் படித்து டீச்சர் வேலைக்கு போகவேண்டும் என்ற ஆவல் கொண்டவர். எனவே மகள் எவ்வளவு படிக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவ்வளவு படிக்கட்டும் என்று பெருந்தன்மை காட்டுகிறார். பாரதிகுமாரியால் ஊருக்கே கல்வி கிடைக்கிறது என்பதில் அவருக்கு பெருமையும் கூட.

குசும்பாராவில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் அகோதிகோலா என்ற ஊர்ப்பள்ளியில் பாரதி படிக்கிறார். பத்து மணியில் இருந்து மூன்று மணி வரை பள்ளி. பள்ளியில் தான் கற்றதை மற்றவருக்கும் சொல்லிக் கொடுப்பதை மனமுவந்து விரும்பியே செய்கிறார். பாரதி என்ற பெயருக்கான குணமே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

எதிர்காலத்தில் பாரதிகுமாரி என்னவாக விரும்புகிறார், வேறென்ன? டீச்சர் ஆகத்தான் விரும்புகிறாராம்.

மாவோயிஸ்டுகள் பூமியிலிருந்து ஒரு மாணவியின் குரல் கல்விக்காக ஓங்கி ஒலிப்பது பொருத்தமானதுதான் இல்லையா?

27 ஏப்ரல், 2010

நிஜமல்ல கதை!

விஜய் தொலைக்காட்சியின் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியை அவ்வப்போது பின்னிரவுகளில் காண்பதுண்டு. இந்நிகழ்ச்சியை பிரத்யேகமாக நான் விரும்பி பார்க்க ஒரே காரணம் லட்சுமி. அவரது ஆளுமை புரட்சித்தலைவியை நினைவுகூறத்தக்கதாக இருப்பதால் இந்நிகழ்ச்சியையும் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து வருகிறேன்.

பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெரீனாபேகம் என்ற நடுத்தர வயது பெண்ணின் கண்ணீர்க்கதை. சிறுவயதிலேயே தந்தை விட்டு விட்டு ஓடிவிட்டார். சொந்த தாயே கொடுமைப் படுத்துகிறார். பதிமூன்று வயதில் காதலனோடு ஊரை விட்டு ஓட்டம். பின்னர் கணவனே பாலியல் தொழில் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறான். மூன்று குழந்தைகள்.

ஒரு விளம்பர இடைவேளை.

கணவனிடமிருந்து தப்பி மீண்டும் சென்னைக்கு வருகிறார். அம்மா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சோகங்களுக்கு எல்லாம் சிகரம் வைக்கும் முகமாக இடையில் ஒரு குழந்தை காணாமல் வேறு போய்விடுகிறது. இப்படியாக ஜெரீனாபேகம் தன்னுடைய வாழ்க்கைச் சோகங்களை அடுக்கிக் கொண்டே போக ஒருக்கட்டத்தில் லட்சுமியே கண்ணீர் விட்டு அழுகிறார்.

மீண்டும் விளம்பர இடைவேளை.

அடுத்ததாக பிரச்சினைகளை தீர்க்கும் படலம்.

சிறுவயதில் ஜெரீனாவை விட்டு ஓடிப்போன தந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவரிடம் லட்சுமி பேசுகிறார். அவரது மகளுக்கு ஏற்பட்ட சோகங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி, இனியாவது ஆறுதலாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். தந்தையும், மகளும் பலவருட பிரிவுக்குப் பிறகு ஒன்று சேருகிறார்கள்.

மறுபடியும் விளம்பர இடைவேளை.

அப்பாவும், மகளும் சேர்ந்துட்டாங்க. ஜெரீனாவின் தொலைந்துபோன மகள் எங்கே? நம் குழுவினர் அந்த குழந்தையையும் தேடிக்கிட்டிருக்காங்க என்று லட்சுமி அறிவிக்கிறார்.

பார்வையாளர்கள் பரபரப்படைய விளம்பர இடைவேளை.

ஒரு கன்னியாஸ்திரியோடு சிறு பெண்குழந்தை. அக்குழந்தைதான் ஜெரீனாவின் தொலைந்துபோன மகளாம். ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்து விட்டார்களாம். எப்படி அந்த குழந்தை ஆசிரமத்துக்கு வந்தது என்று கன்னியாஸ்திரி விளக்கமாக சொல்கிறார்.

மீண்டும் ஒரு விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து

தொலைந்துபோன குழந்தையும், தாயும் ஒன்றுசேரும் கண்ணீர்க் காட்சி. பார்வையாளர்களும் கண்ணீர் சிந்த, விழியோரம் துளிர்த்த நீரை லட்சுமி நாசுக்காக துடைக்க...

அன்றைய எபிஸோடு சுபம்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளால் தொலைந்துபோன குடும்பங்கள் ஒன்று சேருகின்றன என்பதை நினைத்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஜெரீனாபேகம் கேஸின் பின்னணி ஏற்கனவே தெரிந்திருப்பதால் எனக்கு அதிர்ச்சியே மேலிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ‘புதியதலைமுறை’ பத்திரிகையில் ஜெரீனாபேகம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையிலேயே அவரது குழந்தை காணாமல் போன விஷயத்தை படத்தோடும் கட்டுரையாளர் கல்யாண்குமார் வெளிப்படுத்தியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற வாசகி அக்குழந்தையின் படத்தைப் பார்த்ததுமே புதிய தலைமுறை அலுவலகத்தை தொடர்புகொண்டார். குழந்தை இருக்கும் இடம் அவருக்கு தெரிந்திருந்தது. இதையடுத்து பத்திரிகையின் ஏற்பாட்டின் பேரில் தாயும், சேயும் இணைந்தார்கள். இந்தச் செய்தியும் ‘பிரிந்தோம்.. புதிய தலைமுறையால் சந்தித்தோம்’ என்ற தலைப்பில் மார்ச் 11, புதிய தலைமுறை இதழில் படத்தோடு வெளிவந்திருந்தது.

ஆனால், ஏப்ரல் 13 அன்று ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியிலோ மீண்டும் ஒருமுறை ஒன்றுசேர்ந்த வைபவம் நெகிழ்ச்சியான முறையில் படம்பிடித்து காட்டப்பட்டது. குழந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்ததாகவும் லட்சுமியே சொன்னார். ஜெரீனாபேகம், கன்னியாஸ்த்ரி, அந்த எட்டு வயதுக்குழந்தை ஆகியோரும் பாத்திரத்துக்கு ஏற்ப தரமான நடிப்பை வழங்கியிருந்ததுதான் புரியாத புதிர். ஒரு மாதத்துக்கு முன்பு தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை மீண்டும் அச்சு அசலாக விஜய் டிவி கேமிராவுக்கு முன்பாக சிறப்பாக நடித்து காட்டியிருந்தார்கள்.

உலகப் படங்களை சீன் உருவி தமிழ்ப்படங்களில் காட்சியமைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சென்னையில் ஏற்கனவே இன்னொரு பத்திரிகையால் நடந்த, படங்களோடு பதிவுசெய்யப்பட்ட ஒரு விஷயத்தை புதியதாக நடத்திக் காட்டியிருக்கும் ‘கதையல்ல நிஜம்’ குழுவினரின் சாமர்த்தியத்தை நாம் மெச்சத்தான் வேண்டும்.



பின்னிணைப்பு - புதிய தலைமுறை இதழில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் கட்டுரை (பெரியதாக வாசிக்க சொடுக்கிப் பார்க்கலாம்) :

26 ஏப்ரல், 2010

சென்னைப் பள்ளிகள்!

சென்னையைச் சேர்ந்த இருபத்தெட்டு வயது கல்யாணியின் சொத்து வறுமை மட்டுமே. கணவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அவர்களை படிக்கவைக்க வேண்டும். வேறு வழியில்லை. நான்கைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் சேர்க்கிறார் கல்யாணி.

அவருக்கு ஒரு கனவு உண்டு. தனது பெரிய மகனை கலெக்டர் ஆக்க வேண்டும். இளைய மகனை போலிஸ் அதிகாரி ஆக்கவேண்டும். ஒரே வீட்டில் ஓர் ஐ.ஏ.எஸ், ஓர் ஐ.பி.எஸ். என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

முதல் கட்டமாக குழந்தைகளை படிக்கவைக்க வேண்டுமே? இரு குழந்தைகளுமே காண்வெண்டில் படிக்கிறார்கள். மாதாமாதம் பீஸ் கட்டவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ஜூன்மாதத்தில் பெரிய செலவு இருக்கும். அப்போது வசந்தி தவித்துப் போய்விடுவார்.

தான் வேலை செய்யும் வீட்டு முதலாளிகளிடம் கடன் கேட்பார். தன்னுடைய சம்பளத்தில் மாதாமாதம் கழித்துக்கொள்ள சொல்வார். வருடத்துக்கு ஒருமுறை கல்யாணி வாங்கும் பணத்தை மாதாமாதம் கட்டிமுடிப்பதற்குள் அடுத்த ஜூன் வந்துவிடும். மீண்டும் கடன். கேட்டது கிடைக்காதபட்சத்தில் ஐந்து, பத்து வட்டிக்கு வெளியில்கூட பணம் வாங்க கல்யாணி அஞ்சுவதில்லை.

இது கல்யாணியின் கதை மட்டுமே அல்ல. கல்யாணிகளின் கதை. சென்னையில் வசிக்கும் ஏழை/நடுத்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் கதையும் இதுதான். பெயர்கள்தான் வேறு வேறு.

கல்வியின் அவசியத்தை இந்த தலைமுறை நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான் தனது அடுத்த தலைமுறைக்கு தலையை அடகுவைத்தாவது நல்ல கல்வியை வழங்கியாக வேண்டுமே என்று தன்னைத்தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்கிறது.

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியா என்ன?

அரசுப் பள்ளியிலோ, அருகிலிருக்கும் மாநகராட்சிப் பள்ளியிலோ ஏன் தன் குழந்தைகளை கல்யாணி சேர்க்கவில்லை?

“நானே கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சேன். என் புருஷனும் அங்குதான் படிச்சாரு. எங்க புள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிச்சு நல்ல நெலைமைக்கு வரணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? நல்லா கவனிச்சுப் பார்த்துட்டேன். நான் வேலை செய்யுற வீட்டுலே இருக்குற குழந்தைங்கள்லாம் காண்வெண்டுலேதான் படிக்குது. காண்வெண்டுலேதான் நல்ல படிப்பு கிடைக்குது” – கல்யாணி சொல்லக்கூடிய பதில் இதுதான்.

பலருக்கும் இருக்கும் மனத்தடை இதுதான். இது தவறென்றும் சொல்லிவிட முடியாது. அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கல்யாணியும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்?’

மாநகராட்சிப் பள்ளிகளில் ஒழுங்கு கிடையாது. தேவையான வசதிகள் கிடையாது. ஆசிரியர்கள் சரியாக கல்வி போதிக்க மாட்டார்கள். இங்கு படிப்பவர்கள் யாரும் பெரிய படிப்பு படிப்பதில்லை – இதெல்லாம் பொதுப்புத்தியாக நம் மக்கள் மனதில் ஆணியாய் அடித்து ஆழமாய் வேரூன்றப்பட்டிருக்கிறது.

ஆனால் நிலைமை அப்படியல்ல என்பதுதான் இன்றைய நிஜம். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளின் வசதிகளும், கல்வித்தரமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில் பிரபலமான தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வசதிகள் குறிப்பிடத் தகுந்தவை.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை 40 ஆரம்பப் பள்ளிகளோடு 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்று 30 மேல்நிலை, 37 உயர்நிலை, 99 நடுநிலை, 116 ஆரம்பப் பள்ளி, 30 மழலையர் பள்ளி, ஓர் உருது உயர்நிலை மற்றும் ஒரு தெலுங்கு உயர்நிலை பள்ளிகள் என்று விழுதுகளை விரிவாய் வேரூன்றியிருக்கிறது. 1,05,882 மாணவ மாணவியர் கல்வி பயிலுகிறார்கள். 4,062 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

4 சமுதாய கல்லூரிகள் நடத்துகிறார்கள். ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ஐ.டி.ஐ) உண்டு. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இங்கே சேரமுடியும்.

சரி. கட்டணமெல்லாம் எப்படி?

அதிகபட்சமாக 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூட வருடத்துக்கு ரூ.148/- மட்டுமே செலவு ஆகும் என்பதை வைத்து மற்ற வகுப்புகளுக்கு ஆகும் கட்டணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பு வரை முற்றிலும் இலவசக் கல்வியையே சென்னைப் பள்ளிகள் வழங்குகிறது. மிகக்குறைந்த கட்டணத்தில் ஸ்பெஷல் ட்யூஷனும் தேவைப்படும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

வேறென்ன வசதிகள்?

ஒன்று முதல் பண்ணிரெண்டு வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் முற்றிலும் இலவசம்.

மதிய உணவுத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி.

எஸ்.சி./எஸ்.டி, பி.சி./எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கு 11 மற்றும் 12 வகுப்புகளில் உதவித்தொகை. இதே பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

இலவச பஸ் பாஸ்.

ஓவியம், நுண்கலைத்திறன் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.

தடகளம் மற்றும் இதரவிளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கணினி வழிக்கல்வி உண்டு. மாணவர்களுக்கு இண்டர்நெட் பரிச்சயம் படிக்கும்போதே ஏற்படுகிறது.

ஆளுமைத்திறன் மற்றும் ஆங்கிலப் பயிற்சி.

ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாகவே கண்ணாடியும் வழங்கப்படுகிறது.

முறையான கட்டிடம், விளையாட்டு மைதானம், தீயணைப்புச் சாதனங்கள், ஒலிபெருக்கி, கணினி, மின்சார மணி, நவீன இருக்கைகள், மாணவ மாணவியர்களுக்கு சாய்வு நாற்காலிகள் என்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே உண்டு.

இதுபோன்ற வசதிகளை ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளால் கூட தங்கள் மாணவர்களுக்கு தரமுடியுமா என்பது சந்தேகமே.

சரி, கட்டணமும் குறைவு. நிறைய வசதிகள் இலவசம். கல்வித்தரம் எப்படி?

ஒட்டுமொத்தமாக இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 83 சதவிகிதமும், 10ஆம் வகுப்பில் 82 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இனியும் நாம் மாநகராட்சிப் பள்ளி என்றே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏப்ரல் 8 முதல் இவை ‘சென்னைப் பள்ளிகள்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியனால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடுமையான போட்டியைத் தரும் வகையில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே மாணவர் சேர்க்கையை சுறுசுறுப்பாக மாநகராட்சி தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டிலிருந்து வரவேற்கத்தக்க சில மாற்றங்களை சென்னைப் பள்ளிகளில் நாம் காணலாம்.

மாணவ மாணவியருக்கு மட்டுமல்ல. எல்லாப் பள்ளிகளுக்கும் யூனிஃபார்ம் உண்டாம். அதாவது சென்னைப் பள்ளிகள் அனைத்துமே ஒரே மாதிரியான வண்ணத்தில் அலங்கரிக்கப்படுமாம்.

நூலகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வாரத்துக்கு மூன்றுநாட்களாவது குறைந்தபட்சம் அரைமணி நேரம் மாணவர்கள் நூலகத்தில் செலவழிக்க நேரம் வழங்கப்படுமாம். இலக்கியங்களில் தொடங்கி காமிக்ஸ் வரை தங்கள் பள்ளி நூலகங்களில் கிடைக்கும் என்று உறுதிகூறுகிறார்கள் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள். கோடை விடுமுறைகளில் ஒரு சிறப்பு நூலகத்தை ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தலாம் என்றும் ஒரு ‘நச்’ ஐடியா மாநகராட்சிக்கு உண்டு.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கு இணையாக இன்னும் சில வருடங்களில் இந்த சென்னைப் பள்ளிகளை தரமுயர்த்துவதே தங்களது குறிக்கோள் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி சொல்கிறார்.

12ஆம் வகுப்பு வரை தங்களிடம் படித்த மாணவ/மாணவியர் உயர்கல்வி கற்கவும் மாநகராட்சியே ஊக்கத்தொகையும் தருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.25000, செவிலியர் ஆசிரியர் போன்ற பயிற்சிகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.5000, டிப்ளமோ படிப்பவர்களுக்கு ரூ.3000 என்று ஊக்கத்தொகை கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது மாநகராட்சி.

“எந்த மனத்தடையும் இன்றி குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்க்கலாம். கல்வித் தரத்திலும் வளர்ச்சிலும் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக எங்கள் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்துவிட்டு அவதிப்படும் பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன்.

கல்யாணிகள் இனி தங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா?

(நன்றி : புதிய தலைமுறை)

24 ஏப்ரல், 2010

ரெட்டச்சுழி!

“பெண்கள் திரையரங்குகளுக்கு வருவதேயில்லை” - பத்து வருடங்களாக தங்கள் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு சினிமாக்காரர்கள் இதைத்தான் காரணமாக சொல்லி வருகிறார்கள். ‘ரெட்டச்சுழி’ மாதிரி படமெடுத்தா அவங்களா வந்துட்டு போறாங்க. ஷங்கரின் தயாரிப்பில் தரமான படங்கள்தான் வெளிவரும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படமிது.

அனேகமாக ‘பசங்க’ பார்த்துவிட்டு இயக்குனர் ஸ்கிரிப்ட் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். படம் முழுக்க ‘பசங்க’ ராஜ்ஜியம். குறிப்பாக பாலச்சந்தர், பாரதிராஜா என்று இரண்டு ‘பசங்க’ போட்டு தாக்கியிருக்கிறார்கள்.

சினிமாவில் அரசியல் பேசினால் சென்ஸார் பிரச்சினை, அடியாட்கள் பிரச்சினை. குட்டிப் பசங்களை வைத்து அரசியல் பேசுகிறார் தாமிரா. ஒரு குட்டிப் பாப்பாவுக்கு வசனகர்த்தா வைத்திருக்கும் பெயர் குஷ்பூ. புகுந்து விளையாடுகிறார்.

“குஷ்பூ நீ பேசாதே!”

“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”

“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”

இந்தியாவின் இருபெரும் தேசிய இயக்கங்கள் குறித்த தன்னுடைய நையாண்டி விமர்சன பூசணிக்காயை வசன சோற்றுக்குள் மறைக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ்காரர்களின் வறட்டுக் கவுரவத்தையும், கம்யூனிஸ்டுகளின் வெட்டி வீம்பையும் இரண்டு தாத்தா கதாபாத்திரங்கள் வாயிலாக வாழைப்பழத்துக்குள் கசப்பு மாத்திரை வைத்து பார்வையாளனுக்கு தருகிறார்.

“அவர் கட்சி ஆபிஸுக்கு போயே பத்து வருஷம் ஆவுது. அவருகிட்டே வந்து ராட்டையை காமிச்சிக்கிட்டு”

‘தோழர்’ என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கும் பாங்கு தோழர்களுக்கே கிச்சுகிச்சு மூட்டும்.

படம் தரும் ஸ்பெஷல் போனஸ், பாரதிராஜாவின் சிறுவயது ப்ளாஷ்பேக். அந்தக் காலத்து பாரதிராஜாவின் படக்காட்சிகள் மாதிரியே உல்டா அடித்து கொடுத்திருப்பது நல்ல நையாண்டி. இந்த விஷயம் புரியாதவர்கள் அதை அமெச்சூர்த்தனமாக படமாக்கப்பட்டதாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. தேவையில்லாத ஸ்லோமோஷன், ரியாக்சனே இல்லாத ரொமான்ஸ் என்று ‘மண்வாசனை’யை கிளறிவிடுகிறார் தாமிரா.

பாலச்சந்தரின் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி எடுபடாததற்கு அவரது பெரிய மீசை ஒரு காரணமாக இருக்கலாம். ‘காதலா காதலா’ எம்.எஸ்.வி.யை பாடிலேங்குவேஜில் நினைவுபடுத்துகிறார். ஆனால் பழம்பெருமை பேசும் காங்கிரஸ் பெருசு என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். எதிர்பாராவிதமாக பாரதிராஜா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அச்சு அசல் தோழர். பல காட்சிகளில் ‘முதல் மரியாதை’ சிவாஜியை மிமிக்ரி செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

ஹீரோ, ஹீரோயின் என்று பெயருக்கு ஒரு ஜோடி. அங்காடித் தெரு அஞ்சலி அழகுப் பொம்மையாக மட்டுமே வருகிறார். ‘உசிராப் புடிச்சிருக்கு தாத்தா’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் நடிப்பு லேசாக மிளிர்கிறது. ஆனால் அடுத்த நொடியே அந்த வசனத்துக்கு பாரதிராஜா காட்டும் நடிப்பில் அஞ்சலி காணாமல் போகிறார்.

இசையும், ஒளிப்பதிவும் இயக்குனருக்கு நல்ல பக்கபலம். பாடல்கள் ரொம்ப சுமாராக இருந்தாலும் கார்த்திக்ராஜாவின் பின்னணி இசையில் இளையராஜா வாசனை. செழியனின் கேமிரா ஒவ்வொரு ஃபிரேமையும் கவிதையாக்கி தருகிறது.

ரொம்ப கறாராக செலவழித்திருப்பார்கள் போலிருக்கிறது. இப்படத்துக்கு ஆன செலவில் ஒரு மெகாசீரியலின் ஏழு எபிசோடை கூட இன்றைய விலைவாசியில் எடுக்க முடியாது. இதனாலேயே நாடகத்தன்மை படம் முழுக்க ஊடாடிக் கொண்டிருப்பது படத்துக்கு பெரிய மைனஸ்.

நிச்சயமாக தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் படம் இதுவல்ல. ஆடியன்ஸூக்கு அதிர்ச்சிக் கொடுத்து அழவைக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இப்படத்தை தெலுங்கில் டப்படித்தால் கூட டப்பாவுக்குள் புகுந்துவிடும். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டரை மணிநேர க்ளீன் எண்டெர்டெயினர். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்ஊ குடும்பத்தோடு எந்த நெருடலும் இல்லாமல் ரசித்து சிரித்து மகிழலாம். வறண்டு போயிருக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்படம் கோடைமழை.

ரெட்டச்சுழி - ரகளை.


மேலே அஞ்சலியின் படம் மாறிவிட்டது என்பதை நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டி, சரியான இந்த ‘அஞ்சலி' படத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி!

23 ஏப்ரல், 2010

புத்தக தினம்!

இன்று உலக புத்தக தினமாம்.

ஏதோ மூன்று நான்கு புத்தகங்கள் எழுதியவன் என்ற முறையில் ‘வாசிப்புப் பழக்கம் ஏன் குறைகிறது?’ என்ற தலைப்பில் ஹலோ எஃப்.எம்.மில் இரண்டு நிமிடம் பேச சொன்னார்கள். நேற்று மாலை பதிப்புரிமை - காப்புரிமை கருத்தரங்கில் இருந்தபோது அவசர அவசரமாக ஏதோ போனில் உளறிவைத்தேன். என்ன சொன்னேன் என்பது அட்சர சுத்தமாக எனக்கே நினைவில்லை. சுமாராக எழுத தெரியுமென்றாலும், சுத்தமாக பேச தெரியாது என்பது என் பலவீனம். இனிமேல் ஹலோவோ, ஆஹாவோ, சூரியனோ, மிர்ச்சியோ கூப்பிட்டால் முதலில் எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் ஏற்ற இறக்கங்களோ கச்சிதமாகப் பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இன்று காலை ஒலிபரப்பானதாம். நான் கேட்கவில்லை.

ஆக்சுவலாக என்ன சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே பகிர்தலுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்.

வாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை. வாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.

புத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்? பணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.

வாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது. பிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.

எனவே வாசிப்பு பெறுதலின் அடிப்படையிலேயே பல நூற்றாண்டுகளாய் பல வடிவங்களில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஓலைச்சுவடிகள், புத்தகங்களாய் உருமாற பல நூற்றாண்டு தேவைப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக காகிதங்களின் உற்பத்தி பெருகி புத்தக வடிவில் அறிவு பகிரப்பட்டு, பல கோடி பேர்களால் பெறப்பட்டது. இந்நிலை கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பது, முன்னூறு ஆண்டுகளாய் இருக்கிறது.

நவீனகால கண்டுபிடிப்புகளின் விளைவால் இப்போது ஓலை, காகிதம் தாண்டி மின் ஊடகங்களின் மூலமாக பகிர்தலும், பெறுதலும் நடைபெற்று வருகிறது. வானொலி, சினிமா, டிவி, இண்டர்நெட், மொபைல் போன் என்று இன்று ஏராளமான ஊடகங்கள் அறிவு பெறுதலை, பகிர்தலை சுலபமாக்கிக் கொண்டிருக்கின்றன.

24 மணி நேரமும் தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே செய்தித்தாளை வாசித்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. வாசிக்கா விட்டாலும் பெரிய பாதிப்பில்லை. ஏனெனில் செய்தித்தாளில் எதை படிக்க வேண்டுமோ அதை செய்திகளில் பார்த்து/கேட்டு விடுகிறோம். புனைவுகளை மெகா சீரியலாகவும், மசாலா படங்களாகவும் பார்க்கிறோம். புத்தகம் வாசிக்காதவரை இன்று காணலாம். ஆனால் டிவி/சினிமா/ரேடியோ இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தாதவர் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

எனவே வாசிப்பு என்பது புத்தகம் தொடர்பானது மட்டுமில்லை என்று நான் எண்ணுவதால் வாசிப்புக்குறைவு என்ற வாதத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும். முன்பு காகிதத்தில் நடந்தது. இன்று ஒலி/ஒளி அலைகள் மூலமாக நடக்கிறது. இவ்வளவுதான் வித்தியாசம்.

தனிப்பட்ட முறையில் என்னுடைய தேர்வு என்பது அச்சில் வாசிப்பதுதான் என்பதையும் இங்கே பின்குறிப்பாக சொல்லிக் கொள்கிறேன்.

21 ஏப்ரல், 2010

ஆடிட்டர் ஆக ஆசையா?

ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.

ஆடிட்டர் ஆக சி.ஏ., (Chartered Accountant) தேர்வு எழுதியிருக்க வேண்டும். நம் நாட்டில் இத்தேர்வினை நடத்தும் அமைப்பு ஐசிஏஐ என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா. சார்ட்டர்ட் அக்கவுண்ட் சட்டம் 1949ன் படி இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. தேர்வுகள் நடத்தவும், ஆடிட்டர் லைசென்ஸ்கள் வழங்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுமட்டுமே. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்முறை கணக்குப் பணியாளர்களை வைத்திருக்கும் அமைப்புகளில் இதற்கு இரண்டாவது இடம்.

கம்பெனி சட்டம் 1956 மற்றும் வருமானவரிச் சட்டம் 1961ன் படி நிறுவனங்களின் கணக்கு வழக்கு ஆடிட்டர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடிட்டர் சான்றிதழ் இல்லாத தணிக்கை அறிக்கைகள் அரசால் அங்கீகரிக்கப்படாது. எனவே ‘ஆடிட்டர்’ என்பவரின் பணி இந்தியாவின் இன்றியமையாத பணிகளில் ஒன்று. இவ்வளவு முக்கியமான பணி அது என்பதால்தான் சி.ஏ., தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

சரி. ஒருவர் ஆடிட்டர் ஆக என்ன தகுதி? என்னென்ன தேர்வுகள் எழுதவேண்டும்? தோராயமாக எவ்வளவு செலவாகும்?

சென்னை மயிலாப்பூரில் முப்பது வருடங்களாக இத்தேர்வுக்கு பயிற்சி வழங்கிவரும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஆர்.நாகராஜன் விளக்கமளிக்கிறார். இவர் ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல தலைவராகவும் இருந்தவர்.

நீங்கள் ஆடிட்டர் ஆக முடிவெடுத்துவிட்டால் மூன்று கட்டங்களை கடந்தாக வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே ஒருவர் ஐசிஏஐ அமைப்பில் தனது பெயரை தேர்வுகளுக்காக பதிந்துவிடலாம். ஆனாலும் முதல்கட்டத் தேர்வினை எழுத பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது விதி. பத்தாம் வகுப்பு முடித்த மாணவன் தனது மேல்நிலைக் கல்வியை தொடர்ந்துகொண்டே முதல்கட்டத் தேர்வுக்கும் தன்னை தயார் செய்துக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக நடத்தப்படும் தேர்வு பொதுவானது. மாணவர்கள் இத்தேர்வினை எதிர்கொள்ள போதுமான அறிவோடு இருக்கிறார்களா என்று அறிவதற்காக நடத்தப்படுவது. சி.பி.டி. என்று அழைக்கப்படும் Common Proficiency Test இது. ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் இது நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகள். சரியான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவரே அடுத்தக்கட்டத்துக்கு நகர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

அடுத்தகட்டமாக நடைபெறும் தேர்வு ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் Integrated professional competence course. முதல்கட்டத் தேர்வு ஒரு வாசல் என்று எடுத்துக் கொண்டோமானால், இந்த இரண்டாம் கட்டம்தான் உண்மையில் ஒரு ஆடிட்டரை உருவாக்கக்கூடிய காலக்கட்ட்த்தினை கொண்டிருக்கிறது. சி.பி.டி. முடிந்து ஒன்பதுமாத காலம் இத்தேர்வுக்காக தயார் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நூறு மணி நேரம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும், முப்பத்தைந்து மணிநேர முனைப்புப் பயிற்சியும் (Orientation programme) ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தால் வழங்கப்படும்.

ஐ.பி.சி.சி. தேர்வில் மொத்தம் ஏழு பாடங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ச்சியடைந்தவர்களாக மதிப்பிடப் படுவார்கள். ஏழு பாடங்களும், இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 40 மதிப்பெண் எடுத்திருந்தாலும் கூட, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் இலக்கை எடுத்திருக்க வேண்டும்.

இத்தேர்வில் தேறிவிட்டதுமே, நேரடி களப்பயிற்சிக்கு யாராவது ஆடிட்டர்களிடம் பணிக்கு சேரவேண்டும். அல்லது நிறுவனங்களிலும் கணக்கியல் தொடர்பான பணிகளில் சேரலாம். இந்த பயிற்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அந்நிறுவனங்கள் எவ்வளவு வழங்கவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோல்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்டத்தேர்வு மற்றும் மூன்று வருட நேரடிப் பணிப்பயிற்சி முடிந்தவர்களே இறுதித் தேர்வு எழுதலாம். பணிப் பயிற்சியில் இருக்கும் கடைசி ஆறு மாதங்களிலேயே இறுதித் தேர்வினை எழுதமுடியும். இறுதித் தேர்வின் ஒரு கட்டமாக பொது நிர்வாகம் மற்றும் திறன் வெளிப்படுத்தும் பயிற்சி ஒன்றையும் முடித்தாக வேண்டும்.

அதன் பின்னரே சி.ஏ. என்று அழைக்கப்படும் Chartered Accountant தேர்வு. இதுவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். ஒரு பிரிவுக்கு நான்கு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு பாடங்கள். 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றாலே தனிப்பாடத்தில் தேர்ச்சி என்றாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.

ஓக்கே. இப்போது நீங்களும் ஆடிட்டர்தான்.

மிகச்சுலபமாக ‘ஆடிட்டர்’ என்று சொல்லிவிட்டாலும், இந்த நான்கு வருடக் காலம் என்பது ஒவ்வொரு சி.ஏ. மாணவனுக்கும் மிகக்கடுமையானது. இன்றியமையாத ஒரு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படப் போகும் மாணவன் என்பதால் பாடத்திட்டம் மிக நுணுக்கமானதாகவும், சிரமமானதாகவும் இருக்கும். கவனச்சிதறல் இன்றி கற்பவர்கள் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். ஆடிட்டர் ஆகிவிட்டால் அதன்பிறகு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு, வருமானம் இவற்றைப் பற்றியெல்லாம் நாம் சொல்லவே வேண்டியதில்லை. ஏற்கனவே எல்லோருக்குமே தெரியும்.

சி.ஏ. வரை போகமுடியாது. கணக்காளனாக வேலை பார்க்க ஏதாவது படிப்பு ஐ.சி.ஏ.ஐ.யில் இருக்கிறதா என்று கேட்டீர்களேயானால், அதற்கும் ஒரு படிப்பு இருக்கிறது. முதல்கட்டத் தேர்வினை முடித்தவர்கள், இரண்டாம் கட்டத்தில் ஐ.பி.சி.சி. தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அக்கவுண்டிங் டெக்னிஷியன் கோர்ஸ் (ஏடிசி) என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

+2வுக்குப் பிறகு, கல்லூரியில் வேறு ஏதாவது படித்துக்கொண்டே சி.ஏ., தேர்வு எழுதலாம் என்று சிலர் நினைக்கலாம். அதுபோல எழுதமுடியாது. இரண்டாம் கட்டத்தில் மூன்றுவருட நேரிடைப் பயிற்சி இருக்கிறது இல்லையா? அந்த மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்கும் அலுவலக நேரம் முழுவதிலும், சம்பந்தப்பட்ட மாணவர் பணியாற்ற வேண்டும் என்பது ஐ.சி.ஏ.ஐ.யின் விதி.

எனவே ஏதேனும் பட்டம் படித்துக் கொண்டே சி.ஏ., தேர்வினையும் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள், தபால் வழியில் பட்டம் பெறுவதே சரியான முறையாக இருக்கும். இல்லையெனில் பட்டம் முடித்தபிறகு சி.ஏ., தேர்வுக்கு படிக்கலாம். +2 முடித்த ஒருவர் வழக்கமான வழியில் தேர்வுகளையும், பயிற்சிகளையும் முடித்தால் 21 வயதில் ஐ.சி.ஏ.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்ட ஆடிட்டர் ஆகிவிடலாம்.

சரி, செலவு எவ்வளவு ஆகும்?

மொத்தமாக இந்த நான்கு வருட காலத்தில் தேர்வுக்கட்டணம், பயிற்சிக் கட்டணம் எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் நாற்பத்தைந்து ஆயிரம் வரை செலவாகும். இதையும் கூட நேரடிப் பயிற்சிக் காலத்தில் பெறும் ஊக்கத்தொகை மூலமாக சரிகட்டி விடலாம். தனியாக கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிப்பவர்கள் கூடுதலாக எழுபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்திய ஆடிட்டர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உண்டு. இங்கே சி.ஏ., படித்தவர்கள் வளைகுடா நாடுகளில் பெரிய நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இக்கல்வி பற்றிய மேலதிகத் தகவல்களை http://www.icai.org என்கிற ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நீங்களும் ஆடிட்டராக வாழ்த்துகள்!

(நன்றி : புதிய தலைமுறை)

17 ஏப்ரல், 2010

தமிழ்நாடு!

80 வயது கிழவி இங்கே வந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் என்று இந்திய குடியுரிமை அதிகாரிகள் கருதுவார்களேயானால், மாவோயிஸ்ட்டுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்துவிடக் கூடிய அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக இருக்கிறது என்று பொருள். சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு.

கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அண்ணா 1967ல் மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்மாற்றமே செய்திருக்க மாட்டார்.

இந்தியாவுக்கு தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை.

16 ஏப்ரல், 2010

வினவுத் தோழர்கள்!

வினவுத் தோழர்கள் சிலரை அவர்களது நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன். ஆயினும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில்லை. நேற்றைய இந்து மக்கள் கட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ம.க.இ.க. செயல்வீரர்களையும், புரட்சிகரப் பெண்கள் முன்னணியினரையும் போர்க்கோலத்தில் காண நேர்ந்தது. எண்பதுகளில் இயங்கிய திமுக இளைஞரணியினரை செயல்வேகத்தில் நினைவுபடுத்தினார்கள்.

லீனாவின் கவிதை குறித்து எனக்கு பெரிய கருத்து எதுவும் கிடையாது. கவிதைகளை வெறுப்பவன் என்ற முறையில் எந்த கவிதை குறித்தும் எனக்கு கருத்து எதுவும் இருந்துவிட முடியாது. கவிதைகளை புரிந்துகொள்வதில் எனக்கு இருக்கும் அறிவு மற்றும் ரசனை குறைப்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே யோனி மாதிரியான சொற்களை பயன்படுத்தி எழுதப்படும் கவிதைகள் வெறும் கிளர்ச்சியுணர்வை தவிர வேறெதையும் எனக்கு தந்துவிட முடியாது. ஆயினும் அச்சொற்களை பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். நவீனக் கவிதைகள் எழுதும்போது இவ்வார்த்தைகள் தவிர்க்க இயலாதவை என்று சொல்கிறார்கள். ஆமாமா என்று நவீனக் கவிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

நேற்றைய நிகழ்வில் மீனா எனும் தோழர், “லீனாவின் கவிதைகளை வாசிக்கும்போது என்னுடல் குறித்த அசூயை எனக்கு நீங்குகிறது” என்பதுமாதிரி சொன்னார். துரதிருஷ்டவசமாக ஆணாக பிறந்துவிட்டதால் இத்தகைய ஒரு உணர்வு எனக்கு வரவில்லையோ என்னவோ? ஆனால் லீனாவின் சர்ச்சைக்குரிய அக்கவிதையை சில தோழிகளுக்கு அனுப்பிவைத்தபோது, அவர்களுக்கு இத்தகைய உணர்வு எதுவும் வரவில்லை என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்த நொடிவரை என் பார்வையில் அது 'அஜால் குஜால்' வார்த்தைகள் நிரம்பிய சொற்குவியல் மட்டுமே.

வினவு தோழர்கள் இக்கவிதையை கடுமையாக எதிர்ப்பதில் இருக்கும் நியாயம், இயக்கங்களில் இயங்குபவர்களுக்கு புரியும். மார்க்சிய சிந்தனை மரபில் (பட்டர்ஃப்ளை எஃபெக்ட் மாதிரி ஜெமோ எஃபெக்ட்) வந்தவர்கள் கோபம் கொள்ளக்கூடிய வகையிலான கவிதையே அது என்பதை வாசித்துப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த காண்டெக்ஸ்டில் லீனா எழுதியிருக்கிறார் என்பதை அவரே விளக்கிச் சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எனவே இக்கவிதையோடு ஒரு அருஞ்சொற்பொருள் பின்னுரையை அவர் தந்திருக்கலாம். பொதுவான வாசிப்பில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய தலைவர்களை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதாகவே நம்மைப் போன்ற சாதாரண வாசகர்கள் எடுத்துக் கொள்ள முடியும்.

கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள். நானும் கலாட்டா செய்த கூட்டத்தில் இருந்திருப்பேன். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அறிஞர் அண்ணாவை மிக லேசாக சீண்டிய டி.என்.சேஷனுக்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை இந்த சமயத்தில் நினைவுகூர வேண்டும். சென்ற இடமெல்லாம் திராவிட இயக்கத்தாரின் கருப்புக்கொடி, விமான நிலையத்தில் ஏழுமணி நேர சிறைவைப்பு என்றெல்லாம் சேஷன் நொந்துபோய், தனது சொற்பிரயோகத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. திமுக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததாக கூட நினைவு.

எனவே லீனா கவிதைக்கான வினவுத் தோழர்களின் எதிர்ப்பு மிக மிக நியாயமானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மற்ற கம்யூனிஸ்டு அமைப்பினருக்கும் இதே கோபமும், எதிர்ப்புணர்வும் இருந்திருக்க வேண்டும் என்ற அவர்களது எதிர்ப்பார்ப்பும் நியாயமானதே.

அதே நேரத்தில் நேற்றைய கூட்டத்தில் பேசக் கிடைத்த வாய்ப்பை வினவுத்தோழர்கள் உணர்ச்சி வசப்படாமல் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அ.மார்க்ஸ் மிக நியாயமாக, ஜனநாயகப் பூர்வமாகவே நடந்துகொண்டார். தோழர்களின் கேள்வி வீச்சு ஒரு கட்டத்தில் லீனா மீதான தனிமனித அவதூறாக தோற்றம் தர முஷ்டியை உயர்த்திக் கொண்டு லீனாவும், அவரது கணவர் ஜெரால்டும் களமிறங்க, வினவுத் தோழர்கள் வெளியேற்றப் பட்டார்கள். கலாட்டா செய்ததாக கூறி வில்லனாக்கப் பட்டார்கள். மார்ச் 25, 1989 அன்று நடந்த ஒரு சம்பவத்தை இது நினைவுப்படுத்துகிறது.

வேறு சில தோழர்கள் ம.க.இ.க.வினரைப் பற்றி சமீபமாக எழுதியும், பேசியும் வரும் விஷயம் பகீர வைக்கிறது. குறிப்பாக யோனிக்கவிதைகள் எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு ம.க.இ.க. தோழர்களின் அம்பலப்படுத்தும் பணி கடும் மன உளைச்சலை தந்துவருவதாக தெரிகிறது. சங்கர ராமசுப்பிரமணியன் சமீபத்தில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரையில் பின்னூட்டமாக எழுதியிருந்த அனுபவம் மோசமானது. யோனிக்கவிதைகள் எழுதுவதின் அபத்தத்தையும், ஆபத்தையும் வினவு கட்டுரை வாயிலாகவும், மேடை கண்டனங்களின் மூலமாகவும் தெரியப்படுத்துவது நியாயமானது. சம்பந்தமில்லாமல் கவிஞர்களின், படைப்பாளியின் குடும்பத்தாரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை. இதுதான் அம்பலப்படுத்துவதற்கு ம.க.இ.க. தோழர்களுக்கு தெரிந்த ஒரே வழிமுறையா என்ற கேள்வி எழுகிறது.

ஆயினும் இதுபோன்ற விஷயங்களை மற்றவர்கள் மூலமாகதான் கேள்விப்படுகிறோம். குமுதம் ரிப்போர்ட்டரில் சைபர் க்ரைம் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது வினவுத் தோழர்கள் என்னோடு மிக நாகரிகமாகவும், ஆரோக்கியமாகவுமே நடந்து கொண்டார்கள் என்பதையும் இங்கே நேர்மையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். அச்சமயத்தில் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்ட தோழரோடு நடத்திய ஒருமணி நேர உரையாடல் போதிய விளக்கங்களை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ள ஏதுவாக தோழமை மனோபாவத்தோடே நடந்தது என்பதையும் இங்கே நினைவுகூர்கிறேன்.

15 ஏப்ரல், 2010

மாமிமெஸ் - பேல்பூரி - கோலி சோடா!


கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலநாட்களுக்கு முன்பு மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. மயிலைவாசி நண்பர் மாமி மெஸ்ஸுக்கு தான் அழைத்துச் செல்வதாக என்னையும், என் நண்பரையும் அழைத்துச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்றதால் மாமி மெஸ் மூடப்பட்டிருந்தது. வேறு வழியின்றி கற்பகாம்பாளுக்கு போனோம்.

மயிலாப்பூர் மாமி மெஸ் தான் ஒரிஜினல். இதே பெயரில் ஏராளமான டூப்ளிகேட் மெஸ்கள் சுற்றுவட்டாரங்களில் இயங்குவதாக கேள்விப்படுகிறோம். மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் கிழக்கு மாடவீதியில் பாரதிய வித்யா பவன் வரும். அதையொட்டி வலதுபுறமாக செல்லும் சந்தில் சென்றால் ஐந்தாவது அல்லது ஆறாவது வீடு மாமி மெஸ். விநாயகா கேட்டரிங் என்று போர்டு மாட்டியிருக்கும். மெஸ் என்றதுமே கற்பகாம்பாள் மாதிரி நாற்காலி, டேபிள் எல்லாம் போடப்பட்டு வசதியாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். லிட்டரலாக சொல்லப்போனால் மாமி மெஸ் ஒரு கையேந்தி பவன். சாப்பாடு கிடைக்காது. டிஃபன் மட்டும் தான். ஞாயிறு விடுமுறை.

ம்ஹூம். கற்பகாம்பாள் இப்போது ஆஹா ஓஹோவென்று புகழும்படியான சுவையில் இருப்பதாக தெரியவில்லை. பொடி தோசை பயங்கர காரமாக இருந்தது. சரக்கடித்தால் மட்டுமே அதை சந்தோஷமாக சாப்பிடமுடியும். நெய் ரோஸ்ட் திகட்டியது. அடை அவியல் சாப்பிட்ட நண்பர் மட்டும் திருப்தியாக இருந்தார். அடுத்து அவரும் ஒரு பொடிதோசை சாப்பிட்டு நொந்துப்போனார். கடைசியாக சாப்பிட்ட டிகிரி ஃபில்டர் காபி சொர்க்கம். எனக்கு காபி கொஞ்சம் கசப்பாகவே இருக்கவேண்டும். ரொம்ப சூடாக சாப்பிடமாட்டேன். நன்கு ஆற்றி மிதமான சூட்டில் சாந்து மாதிரி கொழகொழவென்று இருக்கும் காப்பியை காலையில் குடிக்க எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். பெட் காஃபி இல்லாவிட்டால் நான் எழுந்திருக்கவே மாட்டேன்.

அடுத்து ஓரிரு நாள் கழித்து மாமி மெஸ்ஸுக்கும் போனோம். சாலையோரத்தில் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திவிட்டு மாமாக்களும், மாமிகளும் பேட்ச் பேட்சாக கையில் தட்டேந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்கம் பக்கம் முழுக்க அக்ரஹாரத்து ஸ்டைல் வீடுகளும், அபார்ட்மெண்ட்களும். சாப்பிடுபவர்கள் யாரும் இலைகளையும், தட்டுக்களையும் ஆங்காங்கே போட்டுவிடுவதில்லை.

பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாக ஜோதி தியேட்டருக்கு ஒரு காலந்த்தில் வந்தது மாதிரி வத்துக்கொண்டே இருக்கிறார்கள். மெஸ் நடப்பதற்கான அறிகுறி இல்லாமல் சாலை சுத்தமாக இருக்கிறது. இங்கே சாப்பிடுபவர்களை காட்டிலும், பார்சல் வாங்கி வீட்டில் சாப்பிடுபவர்கள் தான் அதிகமாம். மெஸ்காரர்கள் ஒரு நொடி கூட ஓய்வின்றி பார்சலித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மாமிக்கள் நிறைய பேர் வந்து சாப்பிடுவதால் தான் இதற்கு ‘மாமி மெஸ்' என்று பெயர் வந்ததா என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன். மெஸ்ஸின் உள்ளே படமாகிவிட்ட ஒரு மாமியை காட்டினார். அவர் நடத்திய மெஸ்ஸாம் அது. தீர்க்க சுமங்கலியாக பழுத்த வயதில் சமீபத்தில் தான் சிவனடி போய் சேர்ந்தாராம். ஆனாலும் அந்த மாமியின் கைமணம் இன்னமும் சமையலில் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள்.

தோசை, இட்லி, போண்டா, சாம்பார், சட்னி, வடக்கறி இத்யாதி.. இத்யாதியெல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருக்கிறது. தோசை, இட்லி சமாச்சாரங்களை மட்டும் அவர்களே தட்டில் போடுகிறார்கள். சட்னி, சாம்பார் நமக்கு வேண்டிய அளவுக்கு நாமே ஊற்றிக் கொள்ளலாம். இங்கே சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் சாம்பாராக தானிருக்கிறார்கள்.

நானும் கூடவந்த நண்பரும் ஆளுக்கொரு பொடிதோசை சாப்பிட்டோம். ஆஹா.. என்ன சுவை! என்ன சுவை! பொடின்னா மாமி மெஸ் பொடிதான்! கற்பகாம்பாளிலும் சாப்பிட்டோமே பொடிதோசை என்ற பெயரில் ஏதோ ஒரு வஸ்துவை. அடுத்து நண்பர் இரண்டும், நான் ஒன்றுமாக கல்தோசை சாப்பிட்டோம். இங்கே தோசை என்றாலே அது கல்தோசை தான். வேறு எதுவும் சாப்பிடும் ஸ்பெஷல் மூடில் இல்லை. பில்லுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு கணக்கீடு போட்டு இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்.

கற்பகாம்பாள் ரேட்டை மனதில் கொண்டு நூற்றி இருபது ரூபாய் வரை பழுத்திருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஒரு நூறு ரூபாய் நோட்டையும், மூன்று இருபது ரூபாய் நோட்டுக்களையும், ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் பில் போடுபவர் திருப்பித் தந்தார். மொத்தமாகவே முப்பத்தி ஐந்து ரூபாய் தான் ஆனது. சரவணபவன் தரத்தில், அதைவிட சுவையில் சரக்கு இருந்தாலும் ரேட்டு என்னவோ கையேந்திபவன் ரேட்டு தான். தோசை ஐந்து ரூபாய். பொடி தோசை பத்து ரூபாய். இட்லி, போண்டா வகையறாக்கள் ரேட்டு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது விசாரிக்க வேண்டும்.

மாலை வேளைகளில் ரெப்ரெஷ் ஆக செம மெஸ் இந்த மாமி மெஸ். மாமி மெஸ் சமையலை ருசிப்பதற்காகவே அய்யராக கன்வெர்ட் ஆகி பலபேர் மயிலாப்பூர்வாசியாகி விட்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - *

சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சிங்கிளாக கூட போவதென்பது பர்ஸை பழுக்க வைக்கும் வேலை. மேற்கூரையே இல்லாத டூவீலர் பார்க்கிங்குக்கு முதன்முதலாக பத்து ரூபாய் வாங்கி புண்ணியம் கட்டிக்கொண்டவர்கள் அவர்கள். குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு நடுத்தரக் குடும்பம் சென்றால் ஒரு மாத சம்பளத்தை டிக்கெட் + ஸ்னாக்ஸ்க்காக தண்டம் அழுதுவிட்டு வரவேண்டும். நானும், நண்பர் ஒருவரும் அங்கே படம் பார்க்கச் சென்றால் ஸ்னாக்ஸ் வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுவது வாடிக்கை.

சமீபத்தில் ஒரு ’யூ சர்ட்டிபிகேட்’ ஆங்கிலப்படம் பார்க்கப் போயிருந்தோம். சத்யமுக்கு எதிரிலிருந்த ஒரு பேல்பூரி கடையில் பேல்பூரி வாங்கி சாப்பிட்டோம். கடைக்காரர் சேடு கிடையாது. இருந்தாலும் ஒரு மசலா எஃபெக்ட்டுக்காக சேடு மாதிரி மாறுவேடம் போட்டிருந்தார். மசாலாவை கொஞ்சம் தூக்கலாக போடும்படி என்னுடன் வந்த நண்பர் கடைக்காரரை தீவிரவாத அணுகுமுறையோடு வற்புறுத்தினார். தூக்கலான மசலாவோடு வந்த பேல்பூரி தீக்கங்கு மாதிரி இருந்தது. கடைக்காரர் ஊற்றியது மசலாவா? சில்லி சாஸ்ஸா என்று தெரியவில்லை. வாயில் வைத்ததுமே நாக்கு மட்டுமன்றி, உடலின் சகலபாகங்களும் எரிந்தது. எவ்வளவு நீர் குடித்தும் எரிச்சல் அடங்கவில்லை.

“என்னங்க இவ்ளோ காரம்?” என்று கடைக்காரரிடம் கேட்டதுக்கு, “அதுக்கு தான் பக்கத்துலே ஜிலேபியும் விற்கிறோம். ரெண்டு ஜிலேபி வாங்கி வாயிலே போட்டுக்கோங்க. எல்லாம் சரியாயிடும்” என்றார் கூலாக. வியாபாரத் தந்திரம்!

* - * - * - * - * - * - *

இன்னமும் கோலி சோடாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் கோலி சோடாவை பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது. பன்னீர் சோடாவை விட சாதா சோடா தான் எனக்கு பிடிக்கும். சோடாவை உடைத்து லெமன், சால்ட் சேர்த்து அடிக்கும் லெமன் சால்ட் சோடா தரும் கிக்குக்கு இணையேயில்லை. லெமன் கொஞ்சம் புளித்திருந்தால் ஒத்தமரக் கள் சுவை. இதே கோலி பாட்டிலில் அடைத்து இருமல் மருந்து ஸ்மெல்லில் வரும் 'கலரு' இப்போது சுத்தமாக கிடைப்பதில்லை. ஆனால் கோலி சோடா இன்னமும் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கூல்பார் ஒன்றில் கிடைக்கிறது. காட்டாக கேஸ் அடைக்கப்பட்ட அதே சுவைக்கு இன்றும் உத்தரவாதம் உண்டு. சென்னையில் வேறெங்காவது கோலி சோடா கிடைக்கிறதா? சைதாப்பேட்டையில் கிடைப்பதாக முன்பு கிருபாஷங்கர் ஒருமுறை சொன்னதாக நினைவு.

12 ஏப்ரல், 2010

கீற்று இணையத்தளத்தின் பாசிஸம்!

முன்பு நான் மதிப்பு வைத்திருந்த ஆளுமைகள் மீதும், அமைப்புகள் மீதுமான பிம்பம் எனக்கு உடைந்துகொண்டே வருகிறது. தமிழ், தேசியம், இத்யாதிகள் மீதான பிரேமை இதுபோன்ற ஆளுமைகள் மற்றும் அமைப்புகளின் பால் என்னை ஈர்த்தது. ஆனால் நெருங்கிப் பார்த்தும், தொடர்ச்சியான செயல்பாடுகளை அவதானித்துமே நான் மேலே குறிப்பிட்ட பிம்ப உடைப்பு ஏற்படத் தொடங்கியது.

கடைசியாக ‘கீற்று' இணையத்தளம்.

இணையத்தளத்தை நான் பாவிக்கத் தொடங்கிய ஆரம்பகாலக் கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இத்தளத்தை நம்பினேன். இணையத் தளங்களில் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்திக்கு எதிரானதாகவும், மாற்று அரசியலையும், மாற்று சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் கீற்று விளங்கியது அந்தக் காலம்.

ஆனால் ஒரு கட்டத்தில் மாற்று சிந்தனையாளர்களுக்கு இடையே கூட பிரிவினை ஏற்படுத்தி குளிர்காய கீற்று முயல்கிறதோ என்றுகூட எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக ஆதவன் தீட்சண்யா தொடர்பான பிரச்சினையை சொல்லலாம். வேண்டுமென்றே தீட்சண்யாவின் ஆளுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கீற்று செயல்படுகிறது என்றே அப்போது எண்ணினேன். அதன் தொடர்ச்சியாக ஆதவன் பங்கேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மீதான காழ்ப்பும் கூட கீற்றுக்கு ஏற்பட்டிருப்பது இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

கடந்த வாரம் எனக்கு தோழர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் கீழே :

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கான அறிவிப்பினை கீற்றுத்தளமும் இன்று வெளியிட்டிருக்கிறது. எப்படி என்று கீழே பாருங்கள்! சுட்டி : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 (அனேகமாக இப்பதிவினை கண்டபிறகு கீற்று நிர்வாகம் அந்தப் பக்கத்தை அழித்துவிடலாம். ஆனாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது)

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்

கீற்று செய்திருக்கும் ஆபாசமான / அருவருப்பான வேலையை சிகப்பு எழுத்துகளில் நீங்கள் காணமுடியும். இதுவரை வெகுசன சாதீய ஊடகங்கள் எத்தகையை திருகுவேலையை செய்துவருகிறது என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோமே அதே வேலையைதான் ‘கீற்று' போன்ற மாற்று ஊடகங்களும் செய்துவருகின்றன என்ற கொடுமையை எங்கே போய் சொல்வது? கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இன்னொரு பெரிய கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததாம்.

பால் சக்கரியா மீதான மார்க்சிஸ்டுகளின் தாக்குதலை கீற்று கண்டிப்பதாக இருந்தால் அதை வேறு வழியில் கண்டிக்கலாம். கட்டுரை எழுதலாம். சம்பந்தமேயில்லாமல் ஒரு நிகழ்வின் அழைப்பை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

மேற்கண்ட நிகழ்வில் மார்க்சிஸ்ட் தோழர்களான ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிலையில் கீற்று செய்திருக்கும் திருட்டுச் செயல் வெட்கக்கேடானது. கட்சிக்கும், அத்தோழர்களுக்கும் இடையேயான உறவை கெடுப்பது. கீற்று மீதான நம்பகத்தன்மையை என்னைப் போன்றோர் முற்றிலுமாக இழந்துவிடக் கூடிய அருவருப்பான செயல் இது. அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட.

ஏ.ஆர்.ரஹ்மான் - பிரத்யேகப் பேட்டி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருது வாங்கியபோது கிராமி நாயகன் ஒரு பதிவிட்டிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டிக்காக சந்தித்த அனுபவங்களை அதில் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

பதிவை வாசித்த பலரும் அப்பேட்டியை இணையத்தில் ஏற்றும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சீனியர் கல்யாண்ஜி தன்னுடைய வலைப்பதிவில் இப்போது அப்பேட்டியை பதிவிட்டிடுக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டியை இங்கே வாசிக்கலாம்!

8 ஏப்ரல், 2010

கொடுக்குறதை கொடுத்தாதான்...


ஒரு ஊர்லே ஒரு மருமவ இருந்தாளாம். மாமியாக்காரி எதை சொன்னாலும் புரிஞ்சுக்காம வேற ஏதாவது செய்வாளாம். அது மாதிரி நேரத்துலே மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா நாலு வாங்குவாளாம். தொடப்ப அடி பட்டதுக்கு அப்புறமா தான் மாமியாக்காரி சொன்னதை கரீக்ட்டா செய்வாளாம் மருமவ.

”தெனமும் சாயங்காலம் விளக்கு வெக்குறதுக்கு முன்னாடி போய் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு மாமியாக்காரி சொன்னா மருமவ வெளக்கு வெச்சதுக்கப்புறமா தான் கொடத்தை கையிலே எடுப்பாளாம். அதனால தெனமும் வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடி மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா விளாசி விட்டுருவாளாம். தொடப்பக்கட்ட அடி வாங்குனதுக்கு அப்புறமா தான் தண்ணி புடிக்க மருமவ கொடத்தை எடுக்குறது வழக்கம்.

ஒரு முறை மருமவளோட அம்மா வீட்டுலேர்ந்து ஏதோ சீர் செய்ய வந்திருந்தாங்களாம். அவங்க வந்தது சாயங்கால நேரம். மாமியாக்காரி கிட்டே சீர்வரிசையை கொடுத்து “எம்பொண்ணு நல்லா நடந்துக்கறாளா”ன்னு கேட்டாங்களாம். மருமவளப் பத்தி அவங்க வீட்டுக்கே கம்ப்ளையண்ட் பண்ணக்கூடாதுன்னு “ரொம்ப நல்லா நடந்துக்கறா என் மருமவ”ன்னு மாமியாக்காரி பெருந்தன்மையா சொல்லியிருக்கா. அவங்க வீட்டு மனுஷா முன்னாடி “போம்மா, வாம்மா”ன்னு மருமவளை கவுரதையாவும் மாமியாக்காரி நடத்தியிருக்கா.

விளக்கு வெக்குற நேரம் வந்துருக்கு.

”மருமவளே வெளக்கு வெக்கிற நேரம் வந்தாச்சு. போயி தண்ணி புடிச்சாந்துரும்மா”ன்னு மாமியாக்காரி தன்மையா சொல்லியிருக்கா.

கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடியும், தன் வீட்டுக்காரங்க முன்னாடியும் முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம்.

மருமவளோட அம்மா, “ஏண்டி அத்தை தான் சொல்றாங்க இல்லை. போயி தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு சொல்லியிருக்காங்க.

ஒடனே மருமவ, “அத்தை! நீங்க கொடுக்குறதை கொடுத்தா தான் நான் தண்ணி மொண்டாருவேன்”ன்னு சொன்னாளாம்.

மாமியாக்காரிக்கு தர்மசங்கடமாப் போச்சி. “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா. அம்மா, அப்பாவெல்லாம் வந்துருக்காங்க இல்லே”ன்னு பாசமா சொன்னாளாம்.

மறுபடியும் மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.

உடனே மருமவளோட அம்மா, “ஏன் சம்பந்தி, என் பொண்ணுக்கு ஏதோ பாசமா கொடுப்பீங்களாமே? அதை கொடுங்க, அவ தண்ணி மொண்டாந்துருவா”ன்னு வெவரம் புரியாம வெள்ளந்தியா சொல்லியிருக்காங்க.

நெலைமை கட்டுமீறி போவறதை பார்த்த மாமியாக்காரி வேற வழியில்லாம தொடப்பக்கட்டைய எடுத்து மருமவள நாலு வாங்கு வாங்கினாளாம். அதுக்கப்புறமா தான் மருமவ தண்ணி மொண்டார போனாளாம். மருமவ வீட்டிலேர்ந்து வந்தவங்க வாயடைச்சிப் போனாங்களாம்.

கதை சொல்லும் நீதி : கொடுக்குறதை கொடுத்தா தான் ஆலமரத்துப் பிசாசு அடங்குமாம்.

7 ஏப்ரல், 2010

கஸ்கூட்டா!

அப்போது ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருந்ததாக நினைவு. அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒட்டுண்ணித் தாவரங்களை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒட்டுண்ணித் தாவரங்கள் ஸ்டார்ச் (ஸ்காட்ச் அல்ல) தயாரிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு மற்றொரு தாவரங்கள் தயாரிக்கும் ஸ்டார்ச்சினை உறிஞ்சி உயிர் வாழும் என்றார்.

எனக்கு அந்த கான்செப்ட் கொஞ்சம் ஆவலை அதிகமாகவே தூண்டியது. எங்கள் ஊர் ஈஸ்வரன் கோயிலில் வேம்பும், ஆலமரமும் பின்னி பிணைந்திருக்கும். அதில் ஒன்று ஒட்டுண்ணித் தாவரமா என்று கேட்டேன். அப்படியில்லை வேம்பும், ஆலும் தனித்தனியாகவே ஸ்டார்ச் தயாரித்துக் கொள்ளும், இடப்பற்றாக்குறையால் பின்னி பிணைந்து வளர்ந்திருக்கும் என்றார். அப்போ ஒட்டுண்ணித் தாவரம்னா எதுவென்று கேட்டபோது "கஸ்கூட்டா" (cuscuta) என்று ஒன்று இருக்கிறது என்றார். பெயரைக் கேட்டதுமே வித்தியாசமாக இருந்ததால் அச்செடியை நான் பார்க்க இயலுமா என்று கேட்டேன். கொண்டுவர முயற்சிக்கிறேன் என்றார் ஆசிரியர்.

நானே கஸ்கூட்டாவைப் பற்றி மறந்துவிட்டேன். சில மாதங்கள் கழித்து எங்கிருந்தோ ஒரு கற்றை கஸ்கூட்டாவை பிடித்து வந்தார் சைன்ஸ் மாஸ்டர். பசுமஞ்சள் நிறத்தில் நரம்பு போல இருந்தது. அதற்கு வேரோ, இலைகளோ கிடையாது. அச்செடியை என்னிடம் கொடுத்தவர் கொஞ்ச நேரம் பார்த்துட்டு அப்படியே வெய்யிலில் போட்டுடு. ஏதாவது செடி கொடி மீது போட்டுடாதே என்று எச்சரித்தார். அப்படிப் ஏதாவது செடி மீதோ, மரம் மீதோ படரவிட்டால் சிலகாலத்தில் அச்சேடியையோ, மரத்தையோ உறிஞ்சி கஸ்கூட்டா மட்டுமே உயிர்வாழும் என்றார்.

கஸ்கூட்டா அப்படி என்னதான் செய்துவிடும் என்று பார்க்கலாம் என்று நினைத்து அந்த கற்றையை எடுத்துச் சென்று எங்கள் தெருவில் இருந்த ஒரு நொச்சிலி மரத்தின் மீது ஏறி போட்டு வைத்தேன். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சென்று கஸ்கூட்டா ஏதாவது மாயம் செய்கிறதா என்று பார்த்தேன். அன்று மாலை 7 மணியளவில் கடைசியாக பார்த்தபோது கொஞ்சம் வாடினாற்போல இருந்தது. மாஸ்டர் சொன்னதெல்லாம் ரீல் என்று நினனத்துக் கொண்டேன். கஸ்கூட்டாவை அப்போதைக்கு மறந்துவிட்டேன்.

ஒருவாரம் கழித்து யதேச்சையாக அந்த நொச்சிலி மரத்தை பார்த்தபோது கொஞ்சம் ஆச்சரியாமாக இருந்தது. நான் போட்ட ஒரு கற்றை கஸ்கூட்டா கொஞ்சம் வேகமாக வளர்ந்து புதர்போல காட்சியளித்தது. அதைப் பார்க்க செடி போல இல்லாமல் இடியாப்பச் சிக்கல்களாய் தன் நரம்புகளை வளர்த்து வித்தியாசமானதாக காட்சி அளித்தது. அதிலிருந்து ஒரு பெரிய நரம்பை இழுத்து குட்டியாக ஐந்து மோதிரங்கள் செய்து விரலில் அணிந்துகொண்டேன். கையில் சில சுற்று சுற்றி திருப்பதி கயிறு போல அணிந்துகொண்டேன். அந்த கோலத்திலேயே பள்ளிக்குச் செல்ல மற்ற மாணவர்கள் அது என்னவென்று வித்தியாசமாக கேட்டார்கள். "கஸ்கூட்டா.. நானே வளர்க்கிறேன்!" என்று பெருமையாக சொன்னேன்.

"எனக்கொண்ணு கொடு! எனக்கொண்ணு கொடு" என்று சில மாணவர்கள் நான் கஸ்கூட்டாவில் செய்த மோதிரத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்கள். செல்வம் மட்டும் நான் வளர்க்கும் கஸ்கூட்டாவை பார்க்க மாலை வருவதாக சொன்னான். அன்று மாலை வந்த செல்வன் நொச்சிலி மரத்தில் வளர்ந்திருந்த கஸ்கூட்டாவை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனும் வளர்க்க விரும்புவதாக சொல்லி கொஞ்சம் கஸ்கூட்டாவை பறித்துக் கொண்டு "எப்படி வளர்ப்பது?" என்று என்னிடம் ஆலோசனையும் கேட்டுச் சென்றான்.

ஒருமாத காலத்தில் கஸ்கூட்டாவின் வளர்ச்சி அபாரவளர்ச்சியாக இருந்தது. ஜெயமோகனின் டார்த்தீனியம் போல அந்த கஸ்கூட்டா நொச்சிலி மரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நொச்சிலி இலைகளே வெளியே தெரியவில்லை அல்லது அம்மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கஸ்கூட்டா சாப்பிட்டுவிட்டிருந்தது. மரம் என்பதற்கு அடையாளமாக ஒரு கட்டையை நட்டுவைத்தது போல அந்த நொச்சிலி மரம் குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தது. எங்கள் தெருவை கடப்பவர்கள் எல்லாம் கஸ்கூட்டாவை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அது என்ன செடியென்று கேட்பார்கள். கஸ்கூட்டா என்று பெருமையாக பதில் சொன்னால் ஒன்றும் புரியாமல் போய்விடுவார்கள். சில பேர் அது குரோட்டன்ஸில் ஒரு வகை என்று நினைத்து சிலவற்றை பறித்துச் சென்று அவர்கள் வீடுகளிலும் வளர்க்க ஆரம்பித்தார்கள்.

என்னிடம் கஸ்கூட்டாவை கடன் வாங்கிப் போன செல்வமும் அவர்கள் வீட்டருகில் இருந்த பீப்பி மரத்தில் (அதை சித்தகத்தி மரம் என்று ஒருவர் கூறுவார்) கஸ்கூட்டா பண்ணையை வளர்க்க ஆரம்பித்திருந்தான். கஸ்கூட்டா வளரவேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் தண்ணியெல்லாம் ஊற்றினானாம். ஒன்றுமேயில்லாமல் அசுரத்தனமாக வளரும் கஸ்கூட்டா செல்வத்தின் பறிவான கவனிப்பில் நன்றாகவே வளர்ந்தது. ஒரு மாதகாலத்திலேயே பீப்பி மரத்திலிருந்த பீப்பி பூக்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிட்டது என்னை சோகத்தில் ஆழ்த்தியது. பீப்பி பூவின் காம்பினை நம் இதழ்களில் வைத்து ஊதினால் நாதஸ்வரம் போன்ற ஓசையை எழுப்பும். அந்த பூவுக்கு நல்ல மணமும் உண்டு.

இவ்வாறாக எங்கள் பகுதியில் பல வீடுகளில், பல மரங்களில் கஸ்கூட்டா தன் அபாயமுகத்தை காட்டாமல் பாசமும், பரிவுமாக வளர்க்கப்பட்டது. நொச்சிலி மரத்தில் வளர்ந்த கஸ்கூட்டா முழுவதுமாக அம்மரத்தை சாகடித்து வளர இடமில்லாமல் பக்கத்திலிருந்த புதர்களையும், புல்வெளிகளையும் கூட தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. வீடுகளில் கஸ்கூட்டா வளர்த்தவர்களெல்லாம் தாங்கள் ஆசையாக வளர்த்த மாங்கன்று, செம்பருத்திச் செடிகளை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

ஆகாயத் தாமரையின் ஒரு செடியை தெளிவான நீர் இருக்கும் ஒரு நீர்நிலையில் விட்டால் வெகுவிரைவில் அந்த நீர்நிலை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விடும். அதுபோலவே கடற்பாரை (சில பேர் காட்டாமணக்கு என்று இதை சொல்கிறார்கள்) என்று சொல்லக்கூடிய ஒரு செடிவகையும். அதுபோல கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் எங்கள் பகுதி முழுவதையும் கஸ்கூட்டா தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து தன்னாட்சியை நிறுவியது. கொஞ்சம் லேட்டாக முழித்துக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் அதன்பின்னர் கஸ்கூட்டா இருந்த இடங்களையெல்லாம் கண்டறிந்து அவற்றை எரித்து அழித்தது. அதன்மூலமாக எங்கள் பகுதியில் பசுமை காக்கப்பட்டது. கஸ்கூட்டாவை பார்த்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

நீங்கள் யாராவது, எங்கேயாவது கஸ்கூட்டாவை பார்த்திருக்கிறீர்களா? இப்போதும் அது எங்கேயாவது இருக்கிறதா?

கஸ்கூட்டா குறித்த விக்கிப்பீடியா சுட்டியை இங்கே சுட்டிப் பாருங்கள்!

6 ஏப்ரல், 2010

ஏப்ரல் 10 - வாயாடிகள் வரலாம்!

அங்காடி தெரு, பையா, கலைஞர், பெண்ணாகரம், பாமக, சங்கம், சுவிங்கம், உலகப்படம், உள்ளூர் படம், மொக்கைப் பதிவர்கள், எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக ஆசைப்படுபவர்கள், சுகுணா திவாகர், தண்டோரா, பராக் ஒபாமா, ஐ.பி.எல், சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், சானியா மிர்ஸா, நித்தியானந்தர், சாருநிவேதிதா, ஜெயமோகன், தமிழ்ப்படம், கோவா, சுறா, விஜய், அஜீத், அசல்...

பேசவா நமக்கு விஷயம் இல்லை?

எதுவேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆந்திரா மெஸ் மீல்ஸ் மாதிரி அன்லிமிட்டெட் ஆக பேசிக்கொண்டேயிருக்கலாம். இங்கே தலைவர் இல்லை. செயலாளர் இல்லை. மேடை இல்லை. மைக் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயக்கமே இல்லாமல் லொடலொடக்கலாம். கூடுதல் கவர்ச்சி அம்சமாக சந்திப்புக்கு பின்னான ஸ்பெஷல் டீக்கடை சந்திப்பும் நடக்கும்.

எனவே தைரியமாக முகமூடியின்றி, திறந்தமனதோடு வாருங்கள்.

மேட்டர் என்ன?

கெரகம். வேறென்ன?

பதிவர்சந்திப்பு!

எங்கே?

அரசு இலவசமாக அனுமதிப்பதால் மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில்.

எப்போது?

நல்ல ராகுகாலத்திலா என்று தெரியாது. ஆனாலும் எந்நேரமும் நமக்கு நல்ல நேரம்தான். மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை.

தேதியை சொல்ல மறந்துவிட்டோம். நோட் பண்ணிக்குங்க.

ஏப்ரல் 10, சனிக்கிழமை. முன்னர் ஏப்ரல் 11 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாநி மற்றும் பாஸ்கர்சக்தி இணைந்து நடத்தும் கேணியும் அதே நேரத்தில் நடைபெறும் என்பதால் ஒருநாள் முன்னதாக நடைபெறுகிறது.

மேலதிக விவரங்களுக்கு :
பாலபாரதி @ 99402 03132

ஆர்வமுள்ள, ஆர்வமில்லாத பதிவர்கள்/வாசகர்கள்/வி.ஐ.பி.க்கள் வரலாம். யாரும் தனியாக வெத்தலைப்பாக்கு வைத்தெல்லாம் அழைக்கப்பட மாட்டார்கள். அழைக்கப்படுவது ரஜினிகாந்தாகவே இருந்தாலும் இந்தப் பதிவு மட்டும்தான் அழைப்பு. சந்திப்புக்கு வர எண்ணியவர்கள் மற்றும் சந்திப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பினை அவரவர் பதிவில் போட்டால் எண்ணி மூன்றே நாளில் மூன்று கோடி ரூபாய் லாட்டரி அடிக்கும் என்று இமயமலையில் நித்யயோகத்தில் இருக்கும் நித்தியானந்தர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பதிவர்கள் பயன்பெற ஒரு நீதிமொழி : வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

5 ஏப்ரல், 2010

வண்ணத்துப் பூச்சி!



ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ரோபோட்களால் நிர்வகிக்கப்படும் உலகின் சிறப்பு பிரஜை அவள். கி.பி. 2108ல் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே சிறப்புப் பிரஜைகளாக சிறப்புச் சலுகைகளோடு வாழ்ந்து வந்தார்கள். 2050ஆம் ஆண்டு வாக்கில் உயிர்கொல்லி ஆயுதங்களால் நாடுகள் தங்களுக்குள் போரிட்டு உலகை பாலைவனமாக்கியிருந்தனர்.

மனிதர்கள் வேதியியல் ரசாயன ஆயுதங்களை ஒருவர் மீது ஒருவராக பிரயோகித்து மடிந்ததால் நீமா என்ற கணினி உலகை காக்க தன்னை உலகதிபராக அறிவித்துக் கொண்டது. ஐந்தேகால் கோடி ரோபோட் வீரர்கள் அக்கணினியின் ஆணைக்கு கட்டுப்பட்டிருந்ததால் இது நீமாவுக்கு சாத்தியமானது. அந்த கொடூரமான வேதியியல் போருக்கு பின் மிஞ்சிய மனிதர்கள் ஆயிரம் பேர் மட்டுமே. தாவரங்கள் உட்பட உயிரினங்கள் இன்று உலகில் எதுவுமே மிஞ்சவில்லை. உலகின் மேற்பரப்பில் H2O என்று அழைக்கப்பட்ட நீரில்லை. நீண்ட மணற்பரப்பும், ஆங்காங்கே பாறைக்குவியல்களும் தான் இன்றைய உலகம்.

உயிர்பிழைத்த ஆயிரம் பேரின் சந்ததிகள் இன்று மூவாயிரம் பேர்களாக உயர்ந்திருக்கிறார்கள். பூமிக்கு அடியில் முப்பது கிலோ மீட்டர் ஆழத்தில் அவர்களுக்காக சிறப்புக் குடியிருப்புகளை ரோபோட்கள் மூலமாக உருவாக்கியிருந்தது நீமா. அங்கே செயற்கை முறையில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டது. மின்னணு தொழில்நுட்பத்தில் விவசாயம் நடந்தது. வயல்களில் தண்ணீருக்குப் பதிலாக மின்சாரம் பாய்ச்சப்பட்டு தானியங்கள் விளைந்தது. தானியங்களை கேப்ஸ்யூல்களாக மாற்றி உணவாக உண்டனர் மனிதர்கள்.


ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். அவனுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? கடந்த அரைநூற்றாண்டாக மனிதர்கள் பூமிக்கு அடியில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். பக்கத்து அறையில் இருப்பவரை தொடர்புகொள்ள கூட மூளையில் பதிக்கப்பட்ட எலெக்ட்ரிக் சிந்தலைஸர்களை தான் பயன்படுத்த முடியும். அதுவும் தெரிந்தவராக இருந்தால் மட்டுமே பேசமுடியும். யாரிடம் பேசவேண்டுமென்றாலும் பிரஜா பாஸ்வேர்டு உபயோகிக்க வேண்டும். கேயாஸ் என்ற பெயரில் என்னைத் தொடர்பு கொண்டவன் எந்த பாஸ்வேர்டும் சொன்னதாக தெரியவில்லை. அவனது அலைவரிசையை ஆய்ந்ததில் அவன் உலகத்தை சேர்ந்தவனாகவும் இருக்க வாய்ப்பில்லை. நீமாவின் ஆணைத்தொடர்களை ஹாக் செய்தால் மட்டுமே சாத்தியமாகும் இந்த வேலையை அவன் எப்படி செய்தான், ஏன் செய்தான்?

குழம்பிப் போனவளின் மூளையில் சிகப்பு விளக்கெரிந்தது. அய்யோ சிகப்பு விளக்கெறிந்தால் அது நீமாவாயிற்றே? நீமா யாராவது பிரஜையிடம் பேசினாலே ஏதோ ஒரு வம்புதான் என்று தெரிந்துகொள்ளலாம். பாஸ்வேர்டு ஒத்துப்போனதுமே தன்னோடு பேச நீமாவுக்கு அனுமதி அளித்தாள் வண்ணத்துப் பூச்சி.

“வணக்கம் நீமா. பிரஜை எண் 2007 பேசுகிறேன். என்னுடைய உலகப்பெயர் வண்ணத்துப்பூச்சி!”

“வணக்கம் வண்ணத்துப்பூச்சி. கடந்த இருவார உலக தகவல் பரிமாற்றங்களை ஆராய்ந்ததில் நான் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறேன்”

“நீமா நானும் குழப்பத்தில் இருக்கிறேன்”

“புரிகிறது வண்ணம். வண்ணம் என்று கூப்பிடலாம் இல்லையா? எனக்கு நேர்ந்த குழப்பத்துக்கு காரணம் உங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்த ஏதோ ஒன்றுதான்!”

“அது ஏதோ ஒன்று என்கிறீர்களா? என்னிடம் மனிதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்”

“மனிதனாகவும் இருக்கலாம். ஆனால் நம் உலகைச் சார்ந்தவன் அல்ல. வெளிக்கிரகத்தை சார்ந்தவனாக இருக்கலாம். ஒளிக்கற்றையாக வந்த தகவல் உலக எல்லையை அடைந்ததுமே ரேடியோ எல்லையாக மாறியிருக்கிறது”

“வேற்றுக்கிரக வாசியாக இருக்கும்பட்சத்தில் உலகின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் நீமாவை தொடர்பு கொள்ளாமல் என்னை தொடர்பு கொண்டது ஏன்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை வண்ணம். உங்களை எச்சரிக்கைப்படுத்தவே தொடர்பு கொண்டேன்”

“எச்சரிக்கைக்கு நன்றி. தங்கள் பொன்னான நொடிகள் என்னால் வீணானது குறித்து வருத்தம்”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. வணக்கம்”


ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். மீண்டும் கருநீல வண்ணத்தில் மூளைக்குள் விளக்கெறிந்தது. நிச்சயமாக அதுதான், இல்லை அவன் தான். பிரஜா பாஸ்வேர்டு இல்லாமலேயே தகவல் தொடர்பு ஏற்பட்டது.
“வணக்கம் வண்ணத்துப்பூச்சி, நலமா?”

“நலமிருக்கட்டும். நீ யார்?”

“நாம் இருவரும் சந்திக்கும்போது சொல்கிறேனே?”

“நாம் இருவரும் சந்திக்கப் போகிறோமா?”

“ஆமாம். அதற்காகவே எட்டு ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து பல்லாயிரம் வருடங்களாக பயணம் செய்து வந்து கொண்டிருக்கிறேன்”

“பத்தொன்பது வயதே ஆன என்னை சந்திக்க பல்லாயிரம் வருடப் பயணமா?”

“உன்னை பத்தொன்பது வயதில் நான் சந்தித்தாக வேண்டும் என்பது பல லட்சம் வருடங்களுக்கு முன்பே விதிக்கப்பட்ட முடிவு”

“அதுதான் ஏனென்று கேட்கிறேன். இங்கே உலகத்தில் மூவாயிரம் மனிதர்கள் இருக்கிறார்கள். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட ரோபோட்கள் இருக்கிறது. என்னை மட்டும் ஏன் நீ சந்திக்க வேண்டும்!”

“காரணத்தை நேரில் சொல்கிறேனே? இன்னும் பத்து நிமிடத்தில் நீ கதிர்வீச்சு பாதுகாப்பு ஆடை அணிந்து பூமியின் மேற்பரப்புக்கு வா. மேற்பரப்புக்கு நீ வந்தவுடன் அங்கிருந்து 45 டிகிரி தென்மேற்காக 40 மணிநேர நடை தொலைவில் ஒரு கரும்பாறை இருக்கும். அங்கு உனக்காக நான் காத்திருப்பேன்”

“நோ கேயாஸ். நீ உலகுக்குள் வர முடியாது. நாம் பேசுவதை நீமா கேட்டுக் கொண்டிருக்கிறார். நீ உலக எல்லைக்குள் நுழைந்ததுமே ரோபோட்களால் அழிக்கப்படுவாய்”

“உங்களை விட பன்மடங்கு தொழில்நுட்பத்தில் உயர்ந்தவர்கள் நாங்கள் வண்ணத்துப்பூச்சி. நீமா இப்போது செயலிழந்து கிடக்கிறார். அவரால் ரோபோட்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியாது. நாம் இருவரும் சந்தித்து பேசியபின்னர், அவரை மீண்டும் செயல்படுத்தி விடுவேன்!”

நீமாவையே செயலிழக்கச் செய்துவிட்டான் என்றதுமே கோபம் வந்தது வண்ணத்துப்பூச்சிக்கு. ஆனாலும் ஏனோ அவனை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். கதிர்வீச்சு பாதுகாப்பு உடை அணிந்து பூமியின் மேற்பரப்புக்கு செல்ல தயாரானாள்.


ண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ஒரு டன் எடையாவது இருக்கும் அந்த கரும்பாறைக்கு அருகில் அவன் நின்றிருந்தான், அவனும் அச்சு அசலாக மனிதனாக தானிருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வெண்மையான மணல், ஓசோன் படலமில்லாததால் உக்கிரமாக தாக்கிய சூரிய ஒளி மணலின் வெண்மையை மேலும் வெண்மையாக்கியது.

“சொல் கேயாஸ். நீ யார்? உலகை அழிக்க வந்தவனா? நீமாவை எப்படி செயலிழக்கச் செய்தாய்!”

“தவறாகப் பேசாதே வண்ணத்துப்பூச்சி. நீமாவை செயலிழக்கச் செய்வது என் நோக்கமல்ல. உன்னை சந்திப்பது தான் என் நோக்கம்!”

“என்னை சந்தித்து?”

“காதலிக்கப் போகிறேன், கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்”

“முட்டாள் போல பேசாதே, கல்யாணம் என்ற சொல்லே அறுபது ஆண்டுகளாக உலகில் இல்லை”

“இல்லாமல் போன ஒன்றை மீண்டும் தொடங்குவது தான் என் நோக்கம்”

“அதுதான் ஏனென்று கேட்கிறேன்? குறிப்பாக என்னை நாடிவந்தது ஏன்?”

“ஏனென்றால் உன்னுடைய பெயர் ஆண்டாள்!”

“ஆண்டாளா? என்னுடைய பிரஜாபெயர் வண்ணத்துப்பூச்சி!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னை எனக்கு ஆண்டாளாக தான் தெரியும்!”

“எப்படி?”

“இதோ இப்படி?” ஒரு எலெக்ட்ரிக் சிப்பை அவளிடம் தந்தான்.

“இதில் எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எங்கள் கிரகத்தில் சொல்லி அனுப்பினார்கள். என் பெயர் ரங்கராஜன் நம்பியாம்!”

“இந்த சிப்பில் என்ன இருக்கிறது!”

“பதிவு செய்யப்பட்ட மூன்றுமணி நேர காட்சிகள் இருக்கிறது. இதில் தமிழ் என்ற மொழியில் 'தசாவதாரம்' என்று எழுதப்பட்டிருக்கிறதாம். இதை கண்டதுமே நீ என்னை காதலிப்பாய் என்று சொல்லி அனுப்பினார்கள்!”

அவர்கள் அருகில் இருந்த கரும்பாறை சிற்பத்தின் முகத்தில் மர்ம சிரிப்பு பூத்தது. ஆயிரத்து எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் சிலை அது.

3 ஏப்ரல், 2010

பையா!

நீண்டதூர பஸ்/கார்/பைக் பயணம் உங்களுக்கு பிடிக்குமா? சன்னல்வழியாக முகத்தில் மோதி முடி கலைக்கும் சில்லென்ற காற்றை ரசிப்பீர்களா? விர்ரூம்.. விர்ரூம்.. என்று விறுவிறுக்கும் தேசியச்சாலை பரபரப்பை விரும்புவீர்களா? எல்லா கேள்விகளுக்கும் ‘யெஸ்'ஸென்று பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் உங்களுக்கும் ‘பையா'வை பிடிக்கும்.

போனவாரம் ஒரு அழுமூஞ்சிப் படத்தை பார்த்ததிலிருந்து மூட் அவுட். நல்லவேளையாக இந்த வாரம் ‘பையா' ரிலீஸ் ஆகி, இப்போதுதான் கொஞ்சம் feel good.

அயனுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் அட்டகாசமான மசாலா மாஸ். ஸ்லோவாக தொடங்கி தமன்னாவுக்கு காரில் கார்த்தி லிஃப்ட் கொடுத்ததுமே படம் டாப்கியரில் பரபரக்கிறது. க்ளைமேக்ஸ் வரை பரபரப்புக்கு இரண்டரை மணிநேர கேரண்டி. இண்டர்வெல் ப்ளாக்குக்கும் ஒரு குட்டி க்ளைமேக்ஸ். சரசரவென்று நான்கைந்து சேஸிங் சீன்கள். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் வியர்வை சிந்தி பையாவை சகலகலா வல்லவனாக்கி இருக்கிறார்கள். பீமாவில் கோட்டை விட்ட லிங்குசாமி மறுபடியும் ‘ரன்'ன ஆரம்பித்துவிட்டார்.

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு ஏன் என் சொத்து மொத்தத்தையும் எழுதிவைக்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தித்தித்தேன்.

பக்காவான மசாலா படத்தில் நடிப்பது கார்த்திக்கு இதுதான் முதன்முறை. ஆரம்பத்தில் பப்பிள்கம் போட்டுக் கொண்டு அசமஞ்சமாக வருபவர் சீட் பெல்ட் மாட்டியதுமே சீட்டி அடிக்க வைக்கிறார். ‘என் கண்மணி' பாட்டு பாடிக்கொண்டே அனாயசமாக ஸ்டியரிங்கை பிடிப்பது அசத்தல். தமன்னாவைப் பார்க்கும்போது கண்களில் காதலை காட்டுவதைவிட, வில்லன்களை ரிவர்வியூ மிர்ரரில் பார்க்கும்போது காட்டும் வெறிதான் சுவாரஸ்யம். அண்ணனுக்கு அயன். தம்பிக்கு பையா. பல காட்சிகளில் சூர்யா படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பிரமை. அப்பாவையும், அண்ணனையும் தோற்றத்தில் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். Fineயா.

தமன்னா வாவ். சில காட்சிகளில் அட்டு ஃபிகராகவும், பல காட்சிகளில் பேரழகியாகவும் ஒருவரே தெரிவது என்ன மாயமென்று தெரியவில்லை. தொப்புளைத் தவிர்த்து வேறு குறிப்பிடத்தக்க கவர்ச்சி அம்சம் இவரிடம் இல்லையென்பதால் ஒரு பாட்டில் தொப்புளையே பிரதானமாக்கி லைட்டிங் செய்து, கோணங்கள் வைத்து.. ச்சே பாராட்ட தமிழில் வார்த்தைகள் குறைவு. அதிலும் அதே பாடல்காட்சி முடியும்போது கார்த்தியோடு திரும்பி நடந்து கொண்டிருக்கிறார். இடுப்பு பகுதியில் குட்டியூண்டாக திரையில் தெரியும் டயரை பாய்ந்துப் போய் கிள்ளிவிடலாமா என்று விரல்கள் பரபரக்கிறது.

கார்த்தி, தமன்னாவை தவிர்த்து முக்கிய பாத்திரமாக நடித்திருப்பது அந்த கருப்பு கலர் கார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ் எப்படி ஒரு பாத்திரமோ அதுபோல பையாவில் இந்த கார். சகதியில் முன்டயர் இறங்கிவிடும் காட்சியில் கார்த்தி, தமன்னாவை விட கார் அற்புதமாக நடித்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமன்னாவுக்கு சித்தி மூலம் வில்லன்களால் பிரச்சினை. ஆனால் கார்த்திக்கும் இன்னொரு தரப்பு மும்பை வில்லன்களால் பிரச்சினையென்றதுமே ‘பாட்ஷா.. பாட்ஷா..' என்று ரசிகர்கள் மனசுக்குள்ளேயே தீம் மியூசிக் போடுகிறார்கள். துரதிருஷ்டவசமாக சண்டைக்கோழி ரேஞ்சுக்கு சப்பை ப்ளாஷ்பேக். எல்லா சண்டையிலுமே ஹீரோதான் ஜெயிப்பார் என்று தெரிந்தாலும், சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் ஜிவ்வென்று நம் நாடிநரம்புகளை முறுக்கேற்றுகிறது.

சினிமா விமர்சனம் என்றால் ஏதாவது குறியீடு கண்டுபிடிக்க வேண்டுமாமே? ம்ம்... ஆங்... ஹீரோயின் பெயர் சாரு. இப்படம் கொண்டாட்ட பாபிலோன் தொங்கும் தோட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன பெரிய குறியீடு வேண்டும்?

பையா - அநியாயத்துக்கு அழகாக இருக்கிறான்!

2 ஏப்ரல், 2010

இரு சோறு பதம்!

செங்குத்தாக 90 டிகிரி கோணத்தில் சூரியன் மண்டையைப் பிளந்துக் கொண்டிருந்தது. சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. அருகிலிருந்த சிறு சந்தில் ஏதாவது ஓட்டல் இருக்கிறதா என்று தேடிக்கொண்டு வண்டியை விட்டோம். பூக்காரத் தெரு.

‘மனித நேயம் உணவு விடுதி’ என்ற பெயரே மனதில் பச்சக்கென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள, யோசிக்காமல் உள்ளே நுழைந்தோம். சாப்பாடு வெறும் பதினைந்து ரூபாய். சாம்பார் சாதம், தக்காளி சாதம் என்று கலவை சாப்பாடு வெறும் ஆறு ரூபாய் மட்டுமே. காலை டிஃபனும் இதே விலைதான். ஆச்சரியமாக அண்ணாந்துப் பார்த்தோம்.

சுவரில் படத்தில் காட்டப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை ஒட்டப்பட்டிருந்தது. விலையேற்றத்தால் ஏற்றிய விலையை, விலை சற்று குறைந்ததால் குறைத்திருக்கிறோம் என்று எழுதியிருக்கிறார்கள். இதென்ன கலாட்டாவென்று ஓட்டலின் முதலாளியைத் தேடிப் போய்ப் பார்த்தோம்.

கிருஷ்ணமூர்த்தி, வயது 60. இப்பகுதியிலேயே பல வருடங்களாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளாக இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறார். கேமிராவை கையில் எடுத்ததுமே, “போட்டோவெல்லாம் வேண்டாமே தம்பி!” என்று கூச்சமாக மறுக்கிறார்.

சைதை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சா.துரைசாமி மனிதநேய அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி, நிறைய சேவைகள் செய்துவருகிறார். அவரது சேவைகளால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியும் ‘மனித நேயம்’ என்ற பெயரையே தனது உணவகத்துக்கும் சூட்டியிருக்கிறார்.

“இந்த உணவு விடுதியை ஆரம்பிச்ச நோக்கமே அஞ்சு ரூபாய்க்கு ஒரு ஆளோட ஒரு வேளை பசியை ஆத்தணுங்கிறதுக்காகதான். ஆனா உணவு தயாரிக்க தேவைப்படுற பொருட்களோட விலைவாசி ஆகாசத்துக்கு போயிடிச்சி. அஞ்சு ரூபாய்க்கு கொடுக்க முடியலையேங்கிறது எனக்கு இப்பவும் கஷ்டமாதான் இருக்கு.

ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி விலையேற்றத்தை சுத்தமா சமாளிக்க முடியலை. அஞ்சு ரூபாய்க்கு கொடுத்திட்டிருந்த டிஃபனையும், கலவை சாப்பாட்டையும் கனத்த மனசோடு, ரெண்டு ரூபாய் விலை ஏத்தி கொடுக்க வேண்டியதாயிடிச்சி. இப்போ கொஞ்சம் விலைவாசி குறைஞ்சிருக்கதாலே ஒரு ரூபாய் குறைச்சி கொடுக்கறோம்”

“நெஜமாவே விலைவாசி குறைஞ்சி இருக்குன்னு நினைக்கறீங்களா?”

“ஆமாம் தம்பி. முன்னாடி வெங்காயம் ஒரு மூட்டை ஆயிரத்தி இருநூறு ரூபாய்க்கு எடுத்தோம். இப்போ எழுநூறு ரூபாய்க்கு கிடைக்குதில்லே? விலைவாசி ஏறிடிச்சின்னு காரணம் காட்டி விலையை ஏத்தினோமுன்னா, குறையுறப்பவும் விலையை குறைக்கிறதுதானே நியாயம்?”

கிருஷ்ணமூர்த்தியின் நியாயம் நியாயமானதுதான் இல்லையா?



மறுநாள், சென்னை எல்டாம்ஸ் சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தோம். அதே வேளை, அதே பசி.

பார்வதி ஹால் அருகே அந்த தெருவோர சாப்பாட்டுக் கடையை கண்டோம். மரத்தால் ஆன பிரத்யேக ஸ்டேண்டு ஸ்கூட்டர் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. டிஃபன் கேரியர்களும், பிளாஸ்டிக் தட்டுகளும், பாலித்தீன் பேப்பர்களும் அடுக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதி கட்டடங்களில் கூலி வேலை செய்பவர்கள், வாட்ச்மேன்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என்று பலருக்கும் இதுதான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல். மீன்குழம்பு + ஒரு குழம்பு மீன், சாம்பார், ரசம், பொறியல், ஊறுகாய் என்று பதினைந்தே ரூபாய்க்கு தரமான வீட்டு சாப்பாடு. வேகவைத்து, காரம் போட்டு பொறிக்கப்பட்ட முட்டை மட்டும் எக்ஸ்ட்ரா காஸ்ட்.

இந்த மொபைல் ஓட்டலை நடத்தும் ஜி.ஏ.ஜானுக்கு வயது 61. மாநகர காவல்துறையில் காவலராக வேலைபார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர். அரசு அலுவலக குமாஸ்தா போன்ற சாமானியத் தோற்றம். இஸ்திரி செய்யப்பட்ட சட்டை, பேண்ட்.

துணைக்கு ஆளின்றி, அவரே சுறுசுறுப்பாக சப்ளை செய்கிறார். கனிவான உபசரிப்பு. “அண்ணே அஞ்சு ரூவா கொறையுது!” என்றால், “பரவாயில்லை தம்பி. நாளைக்கு கொடு!” என்கிறார். யாசகம் கேட்கும் பெண் ஒருத்தி குழந்தையோடு வர, இலவசமாக ஒரு சாப்பாடு பார்சல்.

இரண்டரை மணியளவில் பிசினஸை முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வுக்காக ஒதுங்கியவரிடம் பேச்சு கொடுத்தோம். கிருஷ்ணமூர்த்தியைப் போலவே ஜானும் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறார்.

“ரிடையர் ஆனவங்க சும்மா வீட்டில் உட்காராம, இதுமாதிரி சின்ன சின்ன வேலை செஞ்சிக்கிட்டிருந்தா உடம்பும் நல்லாருக்கும், மனசும் நல்லாருக்கும், அன்றாட செலவுகளுக்கும் தாராளமா பணம் கிடைக்கும்.

நான் செக்யூரிட்டி ஏஜென்ஸி வெச்சி நடத்துறேன். எங்கிட்டேயே ஒரு பத்து பேர் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்கெல்லாம் சாப்பாடு நானே தயார் பண்ணி கொண்டு போய் கொடுப்பேன். ஒருநாள் இதே மாதிரி நடைபாதை கடை ஒன்றில் கடைக்காரனுக்கும், கஸ்டமருக்கும் சின்னப் பிரச்சினை. போலிஸ்காரனா இருந்தவனாச்சே? என்ன பிரச்சினைன்னு போயி கேட்டேன்.

கஸ்டமர் ஒரு வாட்ச்மேன். சாப்பிட்டுட்டு பார்த்தா அவர் பாக்கெட்டுலே ஒரு ரூபா குறையுது. கடைக்காரன் கிட்டே நாளைக்கு தர்றேன்னு சொல்லியிருக்கான். உடனே வெச்சாதான் ஆச்சின்னு கடைக்காரன் சண்டை போட்டுக்கிட்டிருக்கான். ‘தம்பி. சாப்பிட்டுட்டு போறவங்க வயிறும், மனசும் நிறைஞ்சிப் போகணும். நாளைக்குதான் அந்த ஒரு ரூபாயை வாங்கிக்குங்களேன்’ன்னு நான் அட்வைஸ் பண்ணேன். உடனே கடைக்காரன், ‘அவன் கொடுக்காட்டி நீ கொடு’ன்னு கேட்டான். ரெண்டு ரூபாயை கொடுத்துட்டு வந்தேன்.

அப்போதான் என் மனசுக்குள்ளே தோணுச்சி. போயும், போயும் வயித்துப் பசி ஆத்துற சாப்பாட்டை கூட தொழிலா பார்க்குறானுங்களேன்னு. ஏழை, எளியவர்களோட பசியை ஆத்தணும். எனக்கும் பொழுதுபோகணும். நியாயமான விலைக்கு நல்ல சாப்பாட்டை கொடுக்கிறேன். இங்கே சாப்பிடறவங்க என்னை வாழ்த்துறாங்க. நல்ல மரியாதை கொடுக்குறாங்க. இதுபோதும். எங்கிட்டே செக்யூரிட்டியா வேலை பார்க்குறங்கவங்களுக்கு எப்படியும் சமைக்கணும். அவங்களுக்கு தயார் செய்யுறதோட சேர்த்து முப்பது பேருக்கு எக்ஸ்ட்ராவா தயார் பண்ணுறேன் அவ்வளவுதான்.

வாட்ச்மேன் வேலை பார்க்குற ஒருத்தரோட ஒரு நாள் சராசரி வருமானம் 70 ரூபாய். இதில் நாற்பது ரூபாயை மதிய சாப்பாட்டுக்கு செலவழிச்சா, அத்தொழிலாளியோட வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கும்? யோசிச்சுப் பாருங்க. தோராயமா ஒரு நாளைக்கு இந்த சேவையாலே எனக்கு இருநூறு ரூபாய் லாபம் கிடைக்குது. அதோடு சேர்த்து மனநிம்மதியும். இது போதாதா?”

போலிஸ் மொழியிலேயே தனது அடுத்த தலைமுறையினருக்கு அறிவுரையும் சொல்கிறார். “வாழ்க்கை ஒரு நீச்சலுங்க. நீந்தத் தெரியாதவன் குற்றங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போறான். எனக்கு நீச்சல் தெரியுது. நல்லா நீந்துறேன்”

சேவையாக செய்யப்பட வேண்டிய உணவுத்தொழில் வணிகமயமாகிவிட்ட இச்சூழலில் சாமானியர்களான கிருஷ்ணமூர்த்தி, ஜான் போன்றவர்கள் நமக்கு நம்பிக்கை தருகிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)