அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 நவம்பர், 2015

சுப்பாண்டியின் சாகசங்கள்!


சுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்?

சுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.

இந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.

அம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.

இந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.

சுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.

பல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்?

Imitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.

எதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.

விஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.

முதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.
வழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

ஹேப்பி ரீடிங் ஃப்ரண்ட்ஸ்!

2 ஜனவரி, 2015

கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015

தினகரன் இணைப்பிதழ்கள் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு :

தலைப்பை பார்த்ததும் அதிகப்படியாக தோன்றலாம். கோபமும் வரலாம்.

ஏனெனில் 'கோணல் பக்கங்கள்' என்னும் தலைப்பு சாரு நிவேதிதாவுக்கு சொந்தமானது. அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் - பத்திகள் இந்த பொது தலைப்பின் கீழ்தான் மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்ல, அவை விற்பனையிலும் இன்றுவரை சாதனை படைத்து வருகின்றன.

ஒருவகையில் இந்த 'கோ.ப'களை Trend Setter என்றும் குறிப்பிடலாம். காரணம், 2000க்கு பிறகான தமிழ் பத்தி / கட்டுரை எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை - பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த மூன்று பாகங்கள்தான். எனவேதான் புது வாசகர்களின் ஆரம்பகால 'கைடாகவும்', அறிமுக எழுத்தாளர்களின் தமிழ் நடையை தீர்மானிக்கும் காரணியாகவும் இந்த மூன்று பாகங்களே விளங்குகின்றன.

அவ்வளவு ஏன், 'சாரு நிவேதிதா' என்று சொன்னதுமே நினைவுக்கு வருவது 'கோணல் பக்கங்கள்'தானே?

அப்படியிருக்க அந்த தலைப்பை யுவகிருஷ்ணாவின் புதிய கட்டுரை தொகுப்பான 'சரோஜாதேவி' குறித்த அறிமுகத்துக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புருவத்தை உயர்த்துவம், சட்டையை பிடித்து கேள்வி கேட்க முற்படுவதும் இயல்புதான்.

இதற்கு ஒரே விடை, 45 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

யெஸ்... 'கோணல் பக்கங்களை' வாசிக்கும்போது என்னவகையான வசீகரிப்பை உணர்ந்தீர்களோ அதை அப்படியே யுவகிருஷ்ணாவின் 'சரோஜாதேவி'யிலும் உணரலாம். அதே துள்ளல் நடை. நக்கல். நையாண்டி.

ஆனால் -

எந்த இடத்திலும் இவர் சாருவின் மொழியை, நடையை காப்பி அடிக்கவில்லை என்பது முக்கியம். அதாவது முழுக்க முழுக்க இது 'லக்கி' பாணி.

சாம்பிளுக்கு கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சி தொடர்பான கட்டுரையை எடுத்து கொள்வோம். அதில் -

//சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.

கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.//

என்று நக்கல் அடித்துவிட்டு இப்படி முடித்திருக்கிறார்... //நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்//

இணையதளத்தில் சக்கை போடு போட்ட 'சவிதா பாபி' காமிக்ஸ் மற்றும் 'நேஹா ஆண்ட்டி' ஆகிய இரு 'ஏ'டாகூடமான கதைகள் / தளங்கள் குறித்தும் தனித்தனி கட்டுரை எழுதியவர் -

பெரிதும் வாசிக்கப்பட்ட 'மாலதி டீச்சர்' குறித்து எழுதாதது வருத்தமளிக்கிறது

'விர்ச்சுவல் விபச்சாரம்' கட்டுரை இணையத்தில் நடக்கும் மோசடி தொடர்பானது. சபலப் பேர்வழிகளை குறி வைத்து எப்படி சாட்டிங் மூலம் பணம் பறிக்கிறார்கள் என்று விவரித்திருக்கிறார்.

'Undie Party', ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கூத்தை சிரிக்க சிரிக்க சொல்கிறது. எப்படி என்கிறீர்களா?

//Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம்.//

இதே அதகளம்தான் -

'சரோஜாதேவி', 'போட்டுத் தாக்கு', 'சன்னி லியோன்', 'பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?', 'இந்தக் காதலுக்கு எத்தனை கோணம்?', 'பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை', 'தன்வி வியாஸ்', 'No Bra day', 'உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம்', 'ஹோல்டன்', 'அமலாபால்', 'நடுநிசி அழகிகள்', 'The Dirty Picture', 'இரண்டு முக்கிய செய்திகள்', 'தோழர் ஷகீலா', 'irony', 'பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?', 'அநாகரிகம்', 'நமீதா இட்லி ரெடி', 'சிலுக்கலூர்பேட்டை!', 'Hisss', 'என் கூட விளையாடேன்!', 'நிக்கி லீ!', 'அஜால் குஜால் டிவி', 'அடிக்கடி தொலையும் 'அந்த' மேட்டர்!', 'நல்லசிவம் செத்துட்டான் சதாசிவம் பொழைச்சிட்டான்!', 'முதல் பாவம்', 'மீசை!', 'ஷகீரா!', 'காண்டம்... காண்டம்...', 'ஒன்பது - ஒன்பது - ஒன்பது', 'ஆன்மீகம்', 'மிஸ் கிளாமர் வேர்ல்டு', 'வாணிகபூர்', 'எங்க சின்ன ராசா', 'கிராவிட்டி', 'தியேட்டர்லோ நல்குரு (தெலுங்கு)', 'கலகலப்பு', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'காஜல் அகர்வால்'

ஆகிய கட்டுரைகளிலும்.

மொத்தத்தில் பாலியல் சார்ந்த விவகாரங்களை அங்கதத்துடன் அனைத்து கட்டுரைகளிலும் யுவ கிருஷ்ணா பதிவு செய்திருக்கிறார். ஒருவகையில் இது நம் மரபின் நீட்சிதான். எப்படி கூத்துக்கலையில் கட்டியங்காரன் தீடீரென்று தோன்றி ஒரு சொல் அல்லது வாக்கியம் வழியாக ஆதிக்கத்தை கேள்வி கேட்டு நக்கல் செய்வானோ -

அப்படித்தான் இந்த நூல் முழுவதும் நையாண்டியுடன் இன்றைய உலகை எதிர்கொண்டிருக்கிறார்.

அதாவது, இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுப்படுத்தப்பட்ட பிறகு பிறந்தவர்களின் உலகப் பார்வையை புரிந்து கொள்ள உதவியிருக்கிறார்.

சொல்வதற்கில்லை நாளை எழுத வரும் எழுத்தாளனுக்கு கோனார் நோட்ஸாக இந்த நூல் அமையலாம். அதனாலேயே இந்த பதிவுக்கு தலைப்பாக 'கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015' என பெயர் வைத்திருக்கிறேன்.

வாழ்த்துகள் யுவ கிருஷ்ணா, நாளைய வாசகர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கப் போவதற்கு.

நூல் : சரோஜா தேவி,
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : ரூ.100 / -

ஜனவரி 3, 2015 அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நூல் வெளியிடப்படுகிறது. இடம் : சென்னை புக்பாயிண்ட் அரங்கம்.



ஆன்லைன் மூலமாக நூலினை வாங்க...

1 நவம்பர், 2014

இதழோடு இதழ் வைத்து

நம்ம பக்கத்து ஊரான கேரளாவில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நமக்குதான் தெரியாமல் போச்சு. உலகெங்கும் இன்று இதுதான் பேச்சு.

விஷயம் இதுதான்.

போன மாசம் கோழிக்கோடு நகரில் இருந்த காபிஷாஃப் ஒன்றினை கலாச்சார காவலர்கள் – அதாவது ஆர்.எஸ்.எஸ். மெண்டாலிட்டி அம்பிகள் - அடித்து நொறுக்கினார்கள். வன்முறைக்கு அவர்கள் சொன்ன நியாயம் முத்தாலிக் டைப். இங்கே கூடும் காதலர்களும், தம்பதிகளும் ஒருவருக்கொருவர் பப்ளிக்காக முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து கேரளாவின் இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்றொரு அமைப்பினை ஃபேஸ்புக்கில் உருவாக்கினார்கள். ‘முத்தம் நமது பிறப்புரிமை’ என்று இணையப் புரட்சி செய்தார்கள். அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் முத்தமிடுங்கள் என்று மக்களுக்கு தங்கள் புரட்சி அறிவிப்பினை செய்ததோடு இல்லாமல், முத்த நாளுக்கு முகூர்த்தமாக நவம்பர் இரண்டினை குறித்தார்கள். பல்லாயிரக்கணக்கில் கிஸ்ஸுகளை -அதாவது- லைக்குகளை அள்ளினார்கள்.

‘மாலை ஐந்து மணிக்கு கொச்சி மரைன் ட்ரைவ் பீச்சுக்கு துணையோடு வாருங்கள். முத்தமிட்டுக் கொள்ளலாம்’ என்கிற இவர்களது கவர்ச்சி அறிவிப்புக்கு ஏகத்துக்கும் ரெஸ்பான்ஸ். லவ்வர் இல்லாத பசங்கள்தான் பாவம். வாடகைக்கு ஏதாவது தேறுமா என்று தேடிக் கொண்டிருக்கிறார். கொச்சியின் சுத்துப்பட்டி பதினெட்டு ஊரிலும் இப்போது இதழ்களுக்குதான் ஏகத்துக்கும் டிமாண்ட். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ‘இதழாளர்கள்’ ஏகத்துக்கும் ரேட்டை ஏத்திவிட்டு விட்டார்களாம். ஒரே ஒரு இதழாளர் பத்து, பதினைந்து பேரிடம் அட்வான்ஸ் வாங்கி போட்டுக்கொண்ட ஊழல்கூட நடந்துவிட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த மாஸ் கிஸ்ஸிங் நிகழ்வுக்கு எப்படியும் ஒரு பத்தாயிரம் ஜோடிகளாவது தேறுவார்கள் என்று ஆர்கனைஸர்கள் நம்புகிறார்கள். இந்த ஒட்டுமொத்த முத்த நிகழ்வு, கலாச்சாரக் காவலர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ரெட் சிக்னல் என்று கொக்கரிக்கிறார்கள். முத்த நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்திருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை. பெங்களூரில் இருக்கும் சாஃப்ட்வேர் க்ரூப்புகள், வீக்கெண்டை என்ஜாய் செய்ய ஜோடி ஜோடியாக (ஓரினச் சேர்க்கையாளர்கள் உட்பட) கொச்சிக்கு காரை கிளப்பிவிட்டார்கள்.

கொச்சி டெபுடி கமிஷனரான நிஷாந்தினிக்குதான் ஏகத்துக்கும் தலைவலி. “(முத்தத்துக்காக) மொத்தமாக மக்கள் கூடுவதை எங்களால் தடுக்க முடியாது. ஆனால் இதனால் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அப்போதுதான் நடவடிக்கை எடுப்போம்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே மீடியாக்களிடம் சொல்கிறார். பாவம். அவரும் இளம்பெண் தானே?

இந்த முத்த மாநாட்டுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எந்த தொல்லையும் கொடுக்காது என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். அனேகமாக இந்த கலாச்சார காவல் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் ரகசியமாக கலந்துக் கொள்வார்களோ என்று அவர்களது மேலிடம் சந்தேகப்பட்டு கவலைக்கு உள்ளாகியிருக்கிறது. தேன்கூட்டில் அவசரப்பட்டு கல்லெறிந்துவிட்டோமோ என்று வருத்தப்படுகிறார்கள்.

கடவுளின் சொந்த தேசம் ஏகத்துக்கும் சூடாக இருக்கிறது. நம் இதழ்களுக்கு வெறும் ‘கோல்ட் ப்ளேக் கிங்ஸ்’தான் வாய்க்கிறது. நம்மூர் மெரினாவில் எப்போதுதான் இப்படியெல்லாம் சுபகாரியங்கள் நடக்குமோ தெரியவில்லை. தமிழனாக பிறந்ததுதான் நாம் செய்த பாவமா?

21 மார்ச், 2014

ஒரு சிடி 30 ரூபா

அப்போது கிழக்கு பதிப்பகத்தில் மாதநாவலுக்கு ஒரு இம்பிரிண்ட் தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். ‘கிழக்கு த்ரில்லர்’. நிறைய எழுத்தாளர்களிடம் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா 2011 டிசம்பர் 31ஆம் தேதியே திருட்டு டிவிடி வெளிவந்துடுது; இந்த ஒன்லைனரை வெச்சி ஒரு இருவதாயிரம் வார்த்தையிலே ஒரு கதை எழுதி கொடு பார்க்கலாம்” என்றார் பாரா.

அவர் சொன்ன காலக்கெடுவுக்குள் எழுத முடியவில்லை. கொஞ்சம் நாள் கழித்து கொடுத்தேன். இடையில் பாரா கிழக்கில் இருந்து விலகி சீரியல் உலகில் நுழைந்துவிட்டார். கிழக்கும் அந்த மாதநாவல் இம்ப்ரிண்டை நிறுத்திவிட்டது.

‘நண்பன்’ திரைப்படம் வெளியாக ஒரு மாத காலம் இருந்தபோது, என்னுடைய வலைத்தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக பதிய ஆரம்பித்தேன். அதை வாசித்த நண்பர் கே.ஆர்.பி.செந்தில், நண்பரும் இயக்குனருமான கேபிள்சங்கரிடம் இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார். அதை புத்தகமாக கொண்டுவர வேண்டும் என்று என்னிடம் பேசிய கேபிள், உடனடியாக நட்பு அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டார். நண்பர் உலகநாதன் தன்னுடைய பதிப்பகம் மூலமாக அழிக்கப் பிறந்தவனை கொண்டுவந்தார்.

அந்த நாவல் தமிழ் வாசக பரப்பில் பெரிய அதிர்வுகளை எல்லாம் ஏற்படுத்திவிடவில்லை என்றாலும், முக்கியமான பலர் என்னை கவனிக்க காரணமாக அமைந்தது. என்னுடைய ‘விசிட்டிங் கார்ட்’ என்றுகூட அழிக்கப்பிறந்தவனை சொல்லலாம். குறிப்பாக சினிமாக்காரர்கள் நிறையபேர் வாசித்துவிட்டு என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். ஒரு படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதக்கூடிய வாய்ப்புகூட கதவை தட்டியது.

“இந்த கதையை ஸ்க்ரிப்டாக எழுதிக் கொடுங்கள்” என்று நான்கைந்து உதவி இயக்குனர்கள் கேட்டார்கள். “என்னால் ஸ்க்ரிப்ட் எழுத முடியாது. அனுபவமும் இல்லை. யார் முதலில் எழுதி, படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் டைட்டிலில் ‘based on the novel அழிக்கப் பிறந்தவன், written by yuvakrishna’ என்று கிரெடிட் கொடுக்கவேண்டும் என்று மட்டும் நிபந்தனை விதித்திருந்தேன். அவர்களில் ஓர் உதவி இயக்குனர் ஸ்க்ரிப்ட் தயார் செய்து, ஒரு தயாரிப்பாளரை பிடித்து படம் இயக்கவும் வாய்ப்பு பெற்றுவிட்டார். ஆனால் படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பாக நான் ஸ்க்ரிப்ட்டை பார்வையிட வேண்டும். நாவலில் நெருடும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று என்னிடம் அனுமதி கேட்ட அத்தனை பேரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். உதாரணமாக இஸ்லாமிய தோழர்கள் மனம் புண்படுகிற விதமாக அதில் ஒரு காட்சியமைப்பு இருக்கிறது. இதை நண்பர் அப்துல்லா எனக்கு சுட்டி காட்டினார். நாவல் வேறு வடிவத்திலோ அல்லது இரண்டாம் பதிப்பு வருகையிலோ அதை சரிசெய்துவிடுவேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
நாவல் வெளிவந்திருந்தபோது பாடலாசிரியர் பா.விஜய், நாவலை வாசித்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி பேசினார். அதற்கு பிறகு சிலமுறை அவரிடம் போனில் பேசியிருக்கிறேன். நேரிலும் ஒருமுறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் விளம்பரத்தை ‘தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்தில் கண்டதுமே, அவருக்கு ‘வாழ்த்துகள்’ தெரிவித்து குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்தேன்.

நேற்று மாலை அழிக்கப் பிறந்தவனை வாசித்திருந்த நண்பர் ஒருவர் திடீரென ‘அழிக்கப்பிறந்தவனுக்கு வாழ்த்துகள்’ என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து எதற்கு வாழ்த்துகள் என்று கேட்டதுமே, உங்க நாவல் படமாகுது போல என்று சொன்னார்.
கூடவே மேற்கண்ட இமேஜையும் அனுப்பியிருக்கிறார். அந்த விளம்பரத்தை கண்டதுமே பா.விஜய் நடிக்கும் ‘ஒரு சிடி 30 ரூபா’ என்பது, அழிக்கப்பிறந்தவனை தழுவி எடுக்கப்படுவது நன்கு தெரிகிறது. இதில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, நாவலில் அப்படியே இருக்கின்றன. இதுவரை இப்படத்தின் கதையை எழுதி (?) இயக்கும் இயக்குனரோ அல்லது வேறு யாருமோ என்னிடம் இதுபற்றி பேசவில்லை. ‘அழிக்கப் பிறந்தவன்’ நாவலின் ஐந்து அத்தியாயங்கள் கீழ்க்கண்ட இணைப்புகளில் இருக்கிறது. முடிந்தால் அதை வாசித்து, மேற்கண்ட ‘ஒரு சிடி 30 ரூபா’ விளம்பரத்தைப் பாருங்கள்.

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |    அழிக்கப் பிறந்தவன்-5    |    அழிக்கப் பிறந்தவன்-6  |

நூல் வடிவில் வாங்க : ‘டிஸ்கவரி புக் பேலஸ்’

inspiration அல்லது தழுவுதலை பெரிய குற்றமாக நான் நினைக்கவில்லை. சினிமாத்துறை ஆரம்பத்தில் இருந்தே இப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழிலேயே, சில காலம் முன்புதான் வந்த ஒரு நாவலை தழுவி எடுக்கும்போது, ரத்தமும் சதையுமாக உயிரோடு இருக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்கூட்டியே பேசிவிடலாம் இல்லையா?

இந்த நாவலைப் பொறுத்தவரை, சட்டப்படி உரிமை எனக்குதான் சொந்தம் என்றாலும் தார்மீகரீதியாக முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் என்று நான் உரிமை கொண்டாடிவிட முடியாது. இதன் ஒன்லைனரை உருவாக்கி தந்தவர் எழுத்தாளர் பா.ராகவன். இதில் ஓர் முழு அத்தியாயத்தை எழுதித் தந்தவர் நண்பர் அதிஷா. கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் போன்றவர்கள் இதை புத்தக வடிவில் கொண்டுவர முயற்சித்தவர்கள். உலகநாதன் பதிப்பாளர். நண்பர் சுகுமார் அட்டைப்படத்தை வடிவமைத்தவர். டிஸ்கவரி புக் பேலஸ் நண்பர் வேடியப்பன் விற்பனை உரிமை பெற்றிருப்பவர். சிவராமன், நரேன் போன்ற இன்னும் நிறைய நண்பர்கள் மறைமுகமாக இதில் பங்களித்திருக்கிறார்கள். இந்நாவல் திரைப்படமாக வருகிறது என்றால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையப் போகிறவர்கள் அவர்கள்தான். அப்படியிருக்க எங்களுக்கு சம்பந்தமேயில்லாத யாரோ மொத்தமாக இதன் பலனை அறுவடை செய்வது நியாயமா?

என்ன செய்யலாம்? சொல்லுங்கள், நண்பர்களே!

5 அக்டோபர், 2013

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

27 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.
நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

14 ஆகஸ்ட், 2012

கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை


உரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை?

கலைஞர் தன்னுடைய டீனேஜில் தன் சக மாணவர்களோடு உரையாடத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அ முதல் ஃ வரை அலசினார். இத்தகைய உரையாடலுக்காகவே இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை தோற்றுவித்தார். அழகிரிசாமியின் அபாரப்பேச்சால் ஈர்க்கப்பட்டவர் தன் உரையாடலை கேட்போர் வசீகரிக்கும் வண்ணம் மெருகேற்றினார். தன்னுடைய அமைப்பினை மாணவர் மன்றமாக திராவிட இயக்கத்தின் சார்பு கொண்ட முதல் மாணவர் அமைப்பாக உருமாற்றினார். மன்றத்துக்காக ‘மாணவநேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை தோற்றுவித்தார். தனக்கே தனக்கான அந்தப் பத்திரிகையில் எழுத்து வாயிலாக உரையாடத் தொடங்கினார்.

பிற்பாடு அந்த கையெழுத்துப் பத்திரிகையை ‘முரசொலி’ என்கிற பெயரில், அவ்வப்போது கட்டுரைகளை எழுதி துண்டுப் பிரசுரமாக, அச்சடித்து வினியோகிக்கத் தொடங்கினார். பின்னர்முரசொலிவார இதழாக மாறி, திருவாரூரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சென்னைக்கு இடம்மாறிய பின்னர் நாளிதழாக வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தன் உடன்பிறப்புகளோடுமுரசொலிவாயிலாக கலைஞர் உரையாடிக் கொண்டேதானிருக்கிறார். உடன்பிறப்புகளோடு மட்டுமின்றி தன்னை எதிரிகளாக கருதுபவர்களோடும், எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களோடும், வசைபாடுபவர்களோடும், புறம் பேசுபவர்களோடும் கூட அவர் உரையாட மறுத்ததில்லை. கலைஞரே ஒருமுறை சொன்னார். “சவலைப்பிள்ளையாய் இருந்தாலும் முரசொலி என்னுடைய தலைச்சன் பிள்ளை”. மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ வசிக்கும் கிளியிடம் இருக்கிறது என்பார்கள். கலைஞரின் இதயம் என்றும் முரசொலியாக துடிக்கிறது. பிற்பாடு முரசொலியின் கிளைகளாக குங்குமம், முத்தாரம் என்று கிளைவிட்ட இதழ்கள் ஏராளம்.

கலைஞரின் உரையாடல் பத்திரிகைகளோடு மட்டும் நின்றுக் கொண்டதில்லை. உரையாடலுக்கு கிடைக்கும் எந்த வெளியையும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. ஓவியம், நாடகம், கவிதை, இலக்கியம், சினிமா, மேடை, சட்டமன்றம், தொலைக்காட்சி என்று எது கிடைத்தாலும், அதில் மற்றவர்களுடனான தன் உரையாடலை கூர்தீட்டிக் கொண்டார். கலைஞர் பங்குகொண்ட திரைப்படங்கள், மேடைநாடகங்கள், புத்தகங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை வெறும் பொழுதுபோக்குக்கு என்றில்லாமல், அவற்றினூடாக சமூகம் குறித்த தன் சிந்தனைகளை உரையாடலாக எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.

வெளிப்படையாக பதினான்கு வயதில் தமிழ் சமூகத்தோடு உரையாடத் தொடங்கியவர், தன் வாழ்நாளோடே இணையாய் வளர்ந்துவரும் ஊடகத்தின் வடிவங்கள் அத்தனையையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உதாரணத்துக்கு, தொண்ணூறுகளின் மத்தியில் ‘பேஜர்’ எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆர்வமாக அதை வாங்கினார். கலைஞர் வாங்கிய பேஜரில் தமிழில் செய்திகள் வரும் (இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட மிகச்சிலர்தான் தமிழ்பேஜர் பயன்படுத்தினார்கள் என்று நினைவு). கணினியில் தமிழ் உள்ளீடு குறித்து, ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக்கொள்வார். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிகிறது என்கிற காரணத்துக்காகவே நிறைய இளைஞர்களை தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்.

இன்றும் தாளில் எழுதுவதுதான் அவருடைய விருப்பமென்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. சமீபகாலமாக இணையத்தளங்களின் வளர்ச்சி, அவை சமூக வலைப்பின்னலாக உருவெடுத்து வருவது ஆகியவற்றையும் நண்பர்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறார். வலைத்தளங்களில் எழுதப்படும் முக்கியமான கட்டுரைகளை அவர் பிரிண்ட் எடுத்து வாசிப்பதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் கலைஞர் டி.வி. vs சன் டி.வி. மோதலையொட்டி, நாம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றினை (கலைஞர் தொ.கா.வில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டபோது) கலைஞர் வாசித்ததாக, அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டிருந்தோம். சமீபத்தில் கூட ‘டெசோ’ குறித்து நாம் எழுதியிருந்த கட்டுரையை அச்செடுத்து, தன்னுடைய கட்சி சகாக்களிடம் கொடுத்து உரையாடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தன்னையும், கட்சியையும் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுதப்படுவதையெல்லாம் நண்பர்கள் மூலம் அறிந்து வாசிக்கிறார்.

இப்போது உரையாடலுக்கான இந்த களத்தையும் அறிந்துக்கொண்டார் கலைஞர். எனவேதான் ட்விட்டர் இணையத்தளத்தில் தனது உரையாடலை தொடரும் வண்ணம் தன்னுடைய கணக்கினை தொடங்கியிருக்கிறார். தொடங்கிய முதல்நாளே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞரின் கணக்கை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞரின் ட்விட்டர் கணக்கு : http://twitter.com/kalaignar89. கலைஞர் எதைத் தொட்டாலும் பொன் தான்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய கலைஞரின் உரையாடல், அவரது எண்பத்தி ஒன்பது வயதில் இணையத்தில் ட்விட்டர் கணக்கு வரை தொடர்கிறது. உரையாடலில் இவரளவுக்கு காதல் கொண்ட இன்னொரு மனிதரை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம்.

28 பிப்ரவரி, 2012

திராவிடர்களுக்கு

ஏன் திராவிட இயக்கம் மலர்ந்தது?

1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பார்ப்பனர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர்  பார்ப்பனர்கள் . 1496 பொறியாளர்களில் 1096 பேர்  பார்ப்பனர்கள் . 3 சதவீதம் இருந்த  பார்ப்பனர்களில் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்தினருக்கு கல்வி மனுதர்மத்தை காட்டி மறுக்கப்பட்டதின் விளைவாக இந்த அடாத நிலை இருந்தது. மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது.


யாரெல்லாம் திராவிடர்கள்?
”திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் "நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாடால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்'' என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்” என்று கலைஞர் சொல்கிறார். தனிப்பட்ட முறையில் ‘நாடால் இந்தியர்கள்’ என்கிற பதத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அய்யா சுபவீ அவர்கள் சொல்வதைப் போன்று சமூகநீதித் தளத்தில் ‘திராவிடன்’ என்றும், மற்ற களங்களில் ‘தமிழன்’ என்கிற அடையாளத்தையும் சுமக்க விரும்புகிறேன். எவனெல்லாம் மனிதநேயத்துக்கு எதிரான சனாதன மூட வழக்கங்களை எதிர்க்கிறானோ, எவனெல்லாம் எல்லோரும் சமம் என்று நம்புகிறானோ அவனெல்லாம் திராவிடன் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. திராவிடம் என்கிற சொல் வெறுமனே நிலவியல் பரப்பினையும், மொழியையும் வைத்து மட்டுமே வரையறுக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல. பாட்டாளிகளுக்காக உருவான சித்தாந்தமான மார்க்ஸின் பொதுவுடைமையைப் போன்றே ஏழை எளியவர்களுக்காகவும், மதம்-சாதியால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்காகவும், கடந்த நூறாண்டுகளாக தென்னிந்திய அறிவுஜீவிகளால் Collective thoughts ஆக உருவான உயரிய கோட்பாடு இது.



’திராவிடம்’ என்கிற சொல்லை திகவினரும், திமுகவினரும்தான் உருவாக்கினார்களா?


1847ஆம் ஆண்டிலேயே ‘திராவிட தீபிகை’ என்கிற இதழ் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கியதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே. வங்காள மகாகவியானவரும், இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவருமான ரவிந்திரநாத் தாகூர் ‘திராவிட’ என்கிற சொல்லினை தேசிய கீதத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். இச்சொல்லை பயன்படுத்துங்கள் என்று அவரை பெரியாரோ, அண்ணாவோ வற்புறுத்தவில்லை. இந்திய தேசிய கீதத்திலேயே ‘திராவிடம்’ என்கிற சொல் இடம்பெற்றிருப்பதால், இந்திய தேசியம் திராவிட இனத்தை அங்கீகரிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

பிறப்பால் பார்ப்பனர்களும் திராவிடர்களாக முடியுமா?

மாநிலக் கல்லூரி வாசலில் இருக்கும் தமிழ்த்தாத்தா சிலையின் கீழ் ’திராவிட வித்யாபூஷணம்’ என்கிற அடைமொழியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களும் உணர்வு அடிப்படையில் திராவிடர்களாக முடியும் என்கிற பரந்த மனப்பான்மை இவ்வினத்துக்கு உண்டு என்பதற்கு இது மிக நல்ல சான்று. பிறப்பின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமே ஒருவன் திராவிடனாக வரையறுக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

திராவிடத்தால் விளைந்த நன்மை என்ன?

சாமானியர்களும் சிந்தித்து, இன்று இக்கேள்வியை கேட்கும் சுதந்திரத்தை திராவிடம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. திராவிடம் நமக்கு தந்த பரிசு கட்டற்ற கருத்து சுதந்திரம். இவனெல்லாம்தான் கல்வி கற்கலாம், இவனெல்லாம்தான் சிந்திக்கலாம் மாதிரியான பிற்போக்கு சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தது திராவிடம். பிறப்பின் அடிப்படையில் யாரையும் வரையறுத்து, அவனுடைய வாழ்வியலை கட்டுப்படுத்தும் போக்கினை திராவிடம் அகற்றியிருக்கிறது. இந்தியாவின் மகத்தான மாற்றமான இடஒதுக்கீடுக்கு 1920களிலேயே திராவிடம் அச்சாரம் இட்டது. சாதி, மத மறுப்பினை திராவிடம் சாத்தியமாக்கியது. முற்போக்கு சிந்தனைகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கியது.

நான் திராவிடன் என்று உணர்வதில் பெருமை கொள்கிறேன். இதே பெருமித உணர்வு உங்களுக்கும் இருப்பின், தமிழ் மண் உலகுக்கு தந்த மாபெரும் சித்தாந்த கோட்பாடான திராவிடத்தின் நூற்றாண்டினை கொண்டாடுங்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஃபேஸ்புக் திராவிடத் தோழர்கள் தயாரித்துத் தந்திருக்கும் கீழ்க்கண்ட இலச்சினையை உங்கள் வலைப்பூவிலோ, ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சமூகவலைப்பின்னல்களிலேயோ பயன்படுத்துங்கள்.




5 ஜனவரி, 2012

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!

கம்மி பட்ஜெட்டில் மொக்கைப்படம் எடுத்துவிட்டு ரிலீஸ் செய்யமுடியாத இயக்குனரின் அவஸ்தையான மனநிலையில் இருந்து ஒருவழியாக நேற்று கேபிள்சங்கர், உலகநாதன் போன்ற சன்பிக்சர்ஸ், ரெட்ஜயண்ட் மாதிரி ஆட்களால் விடுதலை பெற்றிருக்கிறேன்.

“ரொம்ப மொக்கை-ன்னு காறித்துப்பி விடுவார்களோ?” என்கிற அடுத்த அவஸ்தை நேற்று இரவிலிருந்து... நல்லவேளையாக வாசித்த நண்பர்கள் பலரும் காலையில் இருந்து தொலைபேசி, கூகிள் ப்ளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்குகளையெல்லாம் பயன்படுத்தி ஆறுதல் அளித்து வருகிறார்கள். மங்காத்தா லெவலுக்கு இல்லையென்றாலும், ‘அழிக்கப் பிறந்தவன்’ குறைந்தபட்சம் ‘காஞ்சனா’ அளவுக்கு ஹிட்டு என்பது நண்பர்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது. நானே வாசித்தபோது கூட ‘ஓக்கே’ என்று தோன்றிவிட்டதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ‘ஆபாச நாவல்’ என்பதால், மதிப்பிற்குரியவர்களிடம் இதை பெருமையாக “என் முதல் நாவல்” என்று தெகிரியமாக சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமும் ஒருபுறம் இருக்கிறது.

எது எப்படியோ, ‘கமர்சியல் ஹிட்’ கொடுத்த புதுமுக இயக்குனர் மாதிரி மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறேன். விலை, பக்கம் உள்ளிட்ட விவரங்கள் நேற்று மாலை புத்தகத்தை வெளியிடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் தெரிந்தது.

‘அழிக்கப் பிறந்தவன்’ - இன்று முதல் சென்னை புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டால் எண் : 334.  தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே (தள்ளுபடி 10% போக ரூ.45/-). பக்கங்கள் : 96.

இது மட்டுமல்ல. ‘உ’ பதிப்பகத்தின் மற்ற இரண்டு புதுவெளியீடுகளான கேபிள்சங்கரின் ‘தெர்மக்கோல் தேவதைகள்’ (தெர்ம-வா தெர்மா-வா?), உலகநாதனின் ‘நான் கெட்டவன்’ (எப்படித்தான் டைட்டில் புடிக்கிறாங்களோ?) ஆகியவற்றின் விற்பனை உரிமையையும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நிறுவனமே எடுத்திருக்கிறது. ‘அழிக்கப் பிறந்தவன்’ விரைவில் இணையம் மூலமாகவும் விற்பனைக்கு கிடைக்குமென நம்புகிறேன்.

நான் எழுதிய நூல் என்பதால் வாங்கியே ஆகவேண்டுமென யாரையும் வற்புறுத்த மாட்டேன். முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு, பிடித்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம், மொக்கையென்று நினைப்பவர்கள் காறித்துப்பிவிட்டு கிளம்பிக்கொண்டே இருக்கலாம். ஆனால் கேபிள்சங்கர் மற்றும் உலகநாதனின் புத்தகங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக பொருள் முதலீட்டையும், கடுமையான உடலுழைப்பையும் செலுத்திய நண்பர்கள் அவர்கள்.

ஹேப்பி ரீடிங் ஃபோல்க்ஸ்!

4 ஜனவரி, 2012

அனைவரும் வருக!


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12

நேரம் : மாலை 6 மணி

விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்



வெளியிடப்படும் புத்தகங்கள் :


சங்கர் நாராயண்
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)

என். உலகநாதனின்நான் கெட்டவன் (இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)

யுவகிருஷ்ணா
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)


சிறப்பு அழைப்பாளர்கள் :


இயக்குனர் மீரா கதிரவன்


இயக்குனர் கே.பிபி நவீன்


இயக்குனர் தனபாலன்


இயக்குனர் ஹரீஷ்



மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

தோழர் உலகநாதனின் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய்  பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது.  உங்கள் ஆதரவை தாரீர்.

3 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவனின் கதை!

போன வருடம் புத்தகக் காட்சியின் போது கிழக்கு முட்டுச் சந்தில் பாரா சொன்னார். “இந்த வருஷம் ஒரு கதை எழுதுடா! கதைப் புஸ்தகம் இப்போ நல்லா சேல்ஸ் ஆவுது”. நான் ஒரு மோசமான கதை சொல்லி என்று எனக்கே தெரியும். எனவே நழுவப் பார்த்தேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் கூப்பிட்டார். “கதை எழுத சொன்னேனே? என்ன டாபிக்குன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்லை சார். எனக்கு கதையெல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும். ஒன்லைனர் சொல்றேன். அப்படியே நூல் புடிச்சி போய், ஒரு இருவத்தி ரெண்டாயிரம் வார்த்தைலே எழுதிடு”

அவர் சொன்ன ஒன்லைன் தான் அழிக்கப் பிறந்தவன். “2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா டிசம்பர் 31-ஆம் தேதியே திருட்டு டிவிடி பர்மா பஜாருக்கு வந்துடுது”

இதை எழுதி முடிக்க பாரா கொடுத்த டெட்லைன் சரியாக ஒரு மாதம். ஆனால் இரண்டு மாதத்துக்குப் பிறகுதான் அவரிடம் கதையை முடித்து கொடுக்க முடிந்தது.

முதல் மூன்று, நான்கு அத்தியாயங்களை எழுதுவதில் பெரியதாக சிரமம் இருக்கவில்லை. க்ரைம், செக்ஸ் என்று பிடித்த ஏரியாவை பிடித்துக்கொண்டு கும்மியடிக்க முடிந்தது. அதற்குப் பிறகு நான் உருவாக்கிய பாத்திரங்கள் என்னையே அலைக்கழிக்கத் தொடங்கின. இஷ்டத்துக்கும் முடிச்சு போட்டுவிட்டு, எந்த முடிச்சை எங்கே போட்டோம் என்பது மறந்துவிட்டது. ஒவ்வொன்றாக பாதி கதைக்கு மேல் லாஜிக் இடிக்காமல் அவிழ்த்தாக வேண்டும். இது மாதிரி மசாலா நாவல் எழுதுவது ஆகக்கடினமான வேலை என்பது புரிந்தது. தேவையில்லாமல் சேர்த்துவிட்ட சில கேரக்டர்களை, சம்பவங்களை தணிக்கை செய்துக்கொண்டே வந்தேன். இறுதியாக மூன்று, நான்கு பாத்திரங்களை வைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் அழித்துவிட்டேன். ‘சிக்’கென்று நறுக்காக பிறந்தான் அழிக்கப் பிறந்தவன்.

ஜெயமோகனின் ‘உலோகம்’ இரண்டாம் முறையாக கிழக்கு த்ரில்லரில் அச்சிடப்பட்டபோது பின்னட்டையில் ‘அழிக்கப் பிறந்தவன்’ குறித்த விளம்பரம் வந்திருந்தது. ‘கிழக்கு த்ரில்லர்’ உடனடியாக அழிக்கப் பிறந்தவனை வெளியிடமுடியாததால், வலைப்பூவில் தொடராக பதிவிட்டு வந்தேன். ஏனெனில் 2012ன் தொடக்கத்தில் நண்பன் வெளியாகிறது. மேலும் திருட்டு டிவிடி என்கிற சந்தையே இவ்வாண்டின் இறுதியில் இருக்குமா என்கிற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. ‘டாபிக்கல்’ ஸ்டோரி என்பதால் ஆறப்போடுவதில் விருப்பமில்லை.

இதை பதிவாக வாசித்த கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் போன்ற நண்பர்கள் புத்தகமாக கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார்கள். புதியதாக “உ” பதிப்பகம் துவங்கும் நண்பர் உலகநாதனிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். கடைசியாக “புத்தகமாகப் போட முடிவெடுத்திருக்கிறோம். ஃபைலை அனுப்பி வைங்க” என்று கேபிள் கேட்டார். எனக்கே அப்போதுதான் இது புத்தகமாகப் போகிறது என்கிற தகவல் தெரியும். இதனால் நண்பர் உலகநாதனுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிற ஒரே கண்டிஷனின் பெயரில் ஃபைலை அனுப்பி வைத்தேன். மார்க்கெட்டிங், விற்பனை பற்றியெல்லாம் ஏற்கனவே ‘பக்கா’வாக பிளான் போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எழுதியதைத் தவிர்த்து, அழிக்கப் பிறந்தவன் புத்தகத்தில் வேறு எந்தப் பெருமையுமே எனக்கில்லை. எல்லாவற்றையுமே நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். உலகநாதன் நாவலை வாசித்ததோடு மட்டுமில்லாமல், வெளிவருவதற்கு முன்பே விமர்சனமும் எழுதிவிட்டார்.

’உ’ பதிப்பக நூல்களின் விற்பனை உரிமையை டிஸ்கவரி புக் பேலஸ் எடுத்திருக்கிறது. எனவே ‘அழிக்கப் பிறந்தவன்’ டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும். சென்னை புத்தகக் காட்சியிலும் டிஸ்கவரி ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். விலை, பக்கங்கள் உள்ளிட்ட எந்த விவரமும் இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. இணையத்திலும் விற்பனைக்கு கிடைக்குமென நினைக்கிறேன். நாளை ‘புத்தக வெளியீடு’ அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியமென்று யாரும் ஈஸியாக அவதூறு செய்துவிட முடியாத மொழிநடையிலேயே எழுதியிருக்கிறேன். ஒரு கதையை எழுத என்னென்ன மலினமான யுக்திகளை கடைப்பிடிக்க முடியுமோ அத்தனையையும் கடைப்பிடித்திருக்கிறேன். இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அழிக்கப் பிறந்தவனுக்கு என்னால் தர முடிந்த உத்தரவாதம் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை நூறு சதவிகித சுவாரஸ்யம் மட்டுமே.

பாரா, பைத்தியக்காரன், தோழர் அதிஷா (நாவலின் ஒரு அத்தியாயத்தை இவர் எழுதியிருக்கிறார்) ஆகியோருக்கும், நூலை வெளியிடும் உலகநாதன் மற்றும் கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் ஆகிய நண்பர்களுக்கும் நன்றி!

5 டிசம்பர், 2011

விஷ்ணுபுரம் விருது 2011

தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் ஆ.மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூலும் வெளியிடப்பட்டது.

2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள்.

26 நவம்பர், 2011

குடிவெறி

தமிழ்நாட்டில் இருந்துக் கொண்டு குடிவெறிக்கு எதிராகப் போராடுவது என்பது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு சமத்துவத்துக்காக குரல் கொடுக்கும் பேரறிஞர் நோம்சாம்ஸ்கி நிலைமை மாதிரி படு தர்மசங்கடமான நிலைமை.ம் அத்தகைய ஒரு நிலையில் சமீபகாலமாக நானும், தோழர் அதிஷாவும் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பிரபலமான அரசியல்/சமூக செயற்பாட்டாளர் அவர். ஏதேனும் பிரச்சினைகள் நேரும்போதெல்லாம் அது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களை சென்னையில் நடத்துவார். ஓசியில் டீயும், தம்மும் கிடைப்பதாக இருந்தால் கொலைகூட செய்யத் தயாராக இருக்கும் நாங்கள் அவ்வாறான கூட்டங்களில் கலந்துக் கொள்வதுண்டு. அந்த சமூக செயற்பாட்டாளர் மிகச்சரியாக ஒன்பது, ஒன்பதேகாலுக்கெல்லாம் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இருந்தாலும் முடித்துவிடுவதை கண்டோம். இம்மாதிரி கூட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் வாழப்பாடி வரை வாய் கிழிய பேசும் பேச்சாளர்களுக்கு இவர் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் ஏமாற்றம்தான். எப்படி இந்த பங்ச்சுவாலிட்டி அவருக்கு கைவந்தது என்று விசாரித்துப் பார்த்ததில் அதிர்ச்சிகரமான ஓர் உண்மை எங்களுக்கு தெரியவந்தது. பத்து மணிக்கு டாஸ்மாக் மூடிவிடுவார்கள் என்பதாலேயே, எந்தப் பிரச்சினையப் பற்றிய கூட்டத்தையும் ஒன்பது மணிக்கு அவர் முடித்துக் கொள்கிறார் என்றார்கள். குடிவெறி தீமைக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

இதுபோல குடிவெறியின் தீமைகளை கண்ணால் கண்டும், காதால் கேட்டும், மூக்கால் சுவாசித்தும் உணர்ந்த நாங்கள், அதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய ஓரியக்கம் ஒன்றினை தொடங்கினோம். வரலாற்றில் யாரெல்லாம் குடிவெறியை எதிர்த்திருக்கிறார்கள், அவர்களை பின் தொடர்வோம் என்று ஆராய்ந்தபோது, உத்தமர் காந்தியின் பெயர் முதலில் வந்தது. அவர் அந்தக் காலத்து அன்னா ஹசாரே என்பதால் அவரை பின் தொடர்வதா என்று யோசித்தோம்.

சமகாலத்தில் தனித்துவத்தோடு குடிவெறியை எதிர்த்தவர்கள் பா.ம.க.வினர் என்பதால், பா.ம.க.வில் இணைந்து குடிவெறியர்களை பந்தாடலாமா என்றும் திட்டமிட்டோம். சென்னைக்கு அருகில் அம்பத்தூரில் (பிரபல குடிவெறியர் ஜ்யோவ்ராம் வசிக்கும் ஊர் இது) நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட பா.ம.க. பெண் தொண்டர் ஒருவரின் இந்தப் படத்தைக் கண்டவுடன், பாமகவில் சேரும் திட்டத்தையே கைவிட்டோம். இந்த சமூகத்தீமையைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால், எங்களை அறியாமலேயே நாங்களும் கூட இக்காலக்கட்டத்தில் குடிவெறிக்கு பலியாகிவிட்டோம்.

ஆனாலும், இதுநாள் வரை குடிவெறியை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்துவந்த மக்கள் நலப் பணியாளர்கள் பதிமூன்றாயிரம் பேரை திடீரென புரட்சித்தலைவி பணிநீக்கம் செய்துவிட்டதால், அந்தப் பணியை நாம் இருவர் மட்டுமாவது செய்தாக வேண்டும் என்று திடீரென நாங்கள் சபதம் எடுத்தோம்.

ஓரிரு குடிவெறியர்களையாவது திருத்த முடிந்தால், அதுவே இந்தியா 2020ல் வல்லரசாகும்போது நம்முடைய பங்காக இருக்கும் என்கிற ஆவலில் களமிறங்கினோம். முதற்கட்டமாக மூக்கு முட்ட குடித்துவிட்டு இணையத்தில் ட்விட்டர், ப்ளாக் மற்றும் கூகிள் பஸ்களில் கருத்து வாந்தியெடுக்கும் குடிவெறியர்களை திருத்த முயற்சித்தோம்.

எங்களின் முதற்கட்ட முயற்சியில் ஹாஃப் அடித்துக் கொண்டிருந்த பல்வேறு குடிவெறியர்கள் குவார்ட்டர், கட்டிங் என்று தங்களுடைய லிமிட்டை குறைத்துக் கொண்டார்கள். எங்களுடைய இணையச் சேவையை கேள்விப்பட்ட கேப்டன் கூட இப்போதெல்லாம் ஹாட் அடிப்பதில்லை, பீரோடு திருப்தி கொள்கிறார் என்கிற வெற்றிச் செய்தியை பின்னர் அறிந்துக் கொண்டோம். தோழர் ரோஸாவஸந்த் கூட தன் வீட்டில் சரக்கிருந்தும் தான் அடிப்பதில்லை என்று ட்விட்டரில் ஒப்புக் கொண்டார். 24 மணி நேர ஆஸ்பத்திரி மாதிரி, நாள் முழுவதும் குடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த வரவனையான் செந்தில், எங்களது உபதேசத்தால் குடிவெறியை வெறுத்து ஒதுக்கி, வேறு ஒரு உருப்படியான தொழில் செய்ய போய்விட்டார். அகிம்சை முறையிலான எங்களுடைய குடிவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு இம்மாதிரி ஏராளமான வெற்றிகள் கிடைத்தது.

எந்த நல்ல விஷயம் நடந்தாலும், அதை கெடுக்க சில சாத்தான்கள் இருப்பது உலகம் தோன்றிய நாள் முதலாய் வழக்கம்தானே? எங்களது குடிவெறிக்கு எதிரான போரை கவிராஜன், சரண்கே, பொட்டீக்கடை சத்யா மற்றும் ஜ்யோவ்ராம் போன்ற குடிவெறியர்கள் முடக்க நினைத்தார்கள். ஹாலந்தில் இருக்கும் மெகா குடிவெறியரான மணிகண்டனும் இந்த சதிக்கு உடந்தை.

வெத்தலைப் பாக்கு பழக்கம் கூட இல்லாத எங்களிருவரையும் கஞ்சா புகைப்போம் என்று அவதூறு பரப்பினார்கள். ‘புழுதிவாக்கம் டாஸ்மாக்கில் நான் குடித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே வந்து குடிவெறிக்கு பிரச்சாரம் செய்து உதை வாங்கிச் செல்லுங்கள்’ என்றுகூட ஒரு குடிவெறியர் நேரடி மிரட்டல் விடுத்தார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சினால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

எனவே, அடங்காப்பிடாரி குடிவெறியர்களை நேரடியாக சந்தித்து, குடிவெறி தீமைகளை எடுத்துரைத்து திருத்துவது என்று முயற்சியை மேற்கொண்டோம். இந்த முயற்சியின் முதல்கட்டமாக நேற்று கவிராஜன், சரண்கே ஆகியோரைச் சந்தித்து இரண்டு மணி நேர பேருரையாற்றினோம். 1970லோ அல்லது 1972லோ மதுவிலக்கினை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கலைஞர் எடுக்கிறார். இந்த முடிவினை திரும்பப் பெறுமாறு கோரி, கலைஞரின் வீட்டுக்கே ராஜாஜி செல்கிறார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்குப் பிறகு, அதே மாதிரியான நிகழ்வு இந்த குடிவெறியர்களை நேரில் கண்டு குடிவெறி தீமை வேண்டாம் என்று நாங்கள் கெஞ்சியதுதான்.

இரவு ஒன்பது மணிவரை இந்த உரையைக் கேட்டு திருந்திய ஆடுகளாய் மாறினார்கள். இவர்கள் திருந்திவிட்டார்கள் என்று வெள்ளந்தியாய் நம்பி, நாங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, இருவரும் டாஸ்மாக்குக்கு சென்று, மிகச்சரியாக 9.59க்கு சரக்கு வாங்கி, மப்பு ஏத்திக் கொண்டதாக இன்று காலை அறிய முடிந்தது.

குடிவெறியரான ஜ்யோவ்ராமோ ஃபுல்லாக குடித்துவிட்டு, ‘மழையில் குடிப்பதை விட வேறென்ன பேரானந்தம் வேண்டும்’ என்று கூகிள் பஸ்ஸில் கவிதை எழுதி, அப்பாவி தமிழ் குடிமக்களை, டாஸ்மாக் குடிமக்களாக மாற்றம் செய்யும் வண்ணம் குடிவெறிக்கு ஆதரவான பிரச்சாரத்தை இன்றுமுதல் மேற்கொண்டிருக்கிறார்.

நேரடிப் பிரச்சாரமும் பயனில்லாவிட்டால், அடுத்ததாக காலில் விழுந்து கெஞ்சி குடிவெறியை கைவிடுமாறு கோருவதுதான் எங்களது ஒரே திட்டம். இதற்கும் குடிவெறியர்கள் தலை சாய்க்காவிட்டால், முள்ளை முள்ளால் எடுப்பதுபோல நாங்களும் குடிவெறியர்களாய் மாறி, மப்பு ஏத்திக்கொண்டு குடிவெறியின் தீமைகளை எடுத்துரைத்து அவர்களை மாற்றியே தீருவோம்.

குடிவெறிக்கு எதிரான எங்கள் போர், நாங்களே குடிவெறியர்களாக மாறினாலும் தொடரும் என்ற உறுதியை இப்பதிவின் வாயிலாக ஏற்கிறோம்.