22 டிசம்பர், 2010

டிசம்பர் 26 - இன்னொரு சுனாமி

2004ல் வந்த சுனாமி மாதிரியில்லை இது. கொஞ்சம் நல்ல சுனாமி.

நண்பர்கள் நர்சிம், நிலாரசிகன், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோரின் கவிதைத் தொகுதிகள் இந்த நாளில் உயிர்மை வெளியீடாக வெளியிடப்பட இருக்கின்றன.

நர்சிம் - தீக்கடல் - விலை ரூ.40

நிலாரசிகன் - வெயில் நின்ற மழை - விலை ரூ.50

பொன்.வாசுதேவன் - ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

என்னைப் பொறுத்தவரை 'கவிதை' என்றாலே கெட்டவார்த்தை. இருந்தாலும் நண்பர்கள் எழுதிய கவிதைகள் என்பதால் சகித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை. நண்பர் சரவண கார்த்திகேயனின் சமீபத்திய கவிதை நூலான 'பரத்தை கூற்று' வாசித்ததில் இருந்து ஓரளவுக்கு கவிதை மீதான அலர்ஜி குறைந்திருக்கிறது. கவிஞர்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கிடைப்பார்கள் என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. எனவே நானும் புதுவருடத்தில் கவிதை, கிவிதை எழுதலாமா என்று அபாயகரமாக யோசித்து வருகிறேன்.

நர்சிம்மின் இரண்டாவது நூல் இந்த 'தீக்கடல்'. முதலாவதாக அகநாழிகை வெளியீடாக வந்திருந்தது 'அய்யனார் கம்மா' சிறுகதைத் தொகுதி. ஆக்சுவலி, யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். அய்யனார் கம்மா-வுக்கு முன்பாக நர்சிம்மின் கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியாக இருந்தது. அந்த புரொடக்‌ஷன் டீமில் சுறுசுறுப்புக்குப் பெயர்போன நானும், மாடசாமி என்கிற என்னுடைய நண்பரும் இன்வால்வ் ஆகியிருந்ததால் அம்முயற்சி குறைப்பிரசவமாக லே-அவுட்டோடு நின்றுவிட்டது. இதுபோல நர்சிம்மின் முதல் முயற்சி நின்றுபோனது தமிழிலக்கிய வாசகர்களுக்கு அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்பதை எல்லாம் வல்ல இலக்கியமாதா தான் முடிவு செய்யவேண்டும்.

நண்பர் நிலாரசிகனோடு எனக்கு பெரியளவில் பரிச்சயமில்லை. சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் அடிக்கடி பார்ப்போன். 'ஹாய்' சொல்லிக் கொள்வோம். நீண்டகாலமாக தமிழிணையத்தில் இயங்கி வருபவர். ஸ்விட்ச்சு போட்டால் பேன் சுற்றுவதைப் போல, சொடக்குப் போட்டதுமே கவிதைகளை கொட்டக்கூடிய ஆற்றல் பெற்ற கவிஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சில கவிதைத் தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு திரிசக்தி பதிப்பகத்தில் இவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.

பொன்.வாசுதேவனைப் பொறுத்தவரை என்ன சொல்வது? வழக்கறிஞர். அச்சகத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இலக்கியத்தோடு இருபதாண்டு பரிச்சயம் கொண்டவர். பத்திரிகையாளர். அகநாழிகை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். இதுபோல எண்ணற்ற முகங்கள். சர்வநிச்சயமாக இவர் ஒரு சகலகலா வல்லவர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை'தான் இவருடைய முதல் நூல்.

கடைசியாக மச்சி சார்.

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புது வலைப்பதிவர் வலைபதிய வந்திருந்தார். எடக்கு முடக்கான மொழியில் தீவிர இலக்கியம் பேசுபவராக இருந்ததால் ட்விட்டர், பிளாக் போன்ற தளங்களில் அவரோடு தொடர்பினை வளர்த்துக்கொண்டேன். சோம்பலான ஒரு ஞாயிறு மதியத்தில் போன் செய்தார். "நான் தாம்பா விமலாதித்த மாமல்லன் பேசுறேன்" என்று ஆரம்பித்தார். ஒரு மணிநேர உரையாடல். அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் காதுகளை விரியவைத்து கேட்டுக்கொண்டே இருந்தேன். முன்பின் தெரியாதவர்களிடம் - குறிப்பாக ஒரு ஞானசூனியத்திடம் - அன்னியோன்னியமான உரையாடலை ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நிகழ்த்த முடிகிறதென்றால் அது கின்னஸ் சாதனையை விட சிறப்பானது.

ஆரம்பத்தில் சார் போட்டு பேசினால் கோபப்படுவார். "யோவ் நானும் யூத்துதான். உங்க சாருவை விட பத்து வருஷம் யூத்து. மாமு, மச்சின்னே கூப்பிடு" என்றார். அவரது வேண்டுக்கோளுக்கிணங்க மச்சி என்று கூப்பிட்டாலும், மரியாதைக்காக 'சார்' போட்டு 'மச்சி சார்' என்று அழைக்கிறோம். இன்று தமிழிணையத்துக்கே செல்லமான 'மச்சி சார்' அவர்.

80களில் தொடங்கி, 90களின் மத்தி வரையிலும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக இயங்கிய இலக்கியவாதி அவர். 35 வயதிலேயே இலக்கியத்தில் இருந்து வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். அவரது இருபத்து சொச்சம் வயதுகளிலேயே அமரப்புகழை இலக்கியத்தில் பெற்றுவிட்டவர். அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் கழிந்தும் இன்றும் வாசகர்கள் 'விமலாதித்த மாமல்லன்' என்ற பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவரது புகழுக்கு சான்று. தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று யார் பட்டியலிட்டாலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' கட்டாயம் இடம்பெறும். இந்தக் கதையை விட சிறந்த கதைகளை இவர் எழுதியிருந்தாலும் கூட, சிங்கத்தை ஏனோ சிறுமிக்குள்ளேயே அடக்கி வைக்கிறார்கள்.

சுந்தரராமசாமி அவருக்கு உயிர். அதனால்தான் என்னவோ இன்று தனது தோற்றத்தையும் கூட 'சுரா' பாணியிலேயே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா வழியும் ரோமுக்கே என்பது மாதிரி என்ன பேசினாலும் கடைசியாக 'சுரா'வில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். "எனக்கும், ராமசாமிக்கும் இடையிலே எவனையும் விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு பி.எஸ்.வீரப்பா பாணியில் கடகடவென சிரிப்பார்.

மச்சி சார் இலக்கிய உலகத்துக்குள் தொபுக்கடீரென்று தவளைக்காய் குதி குதித்து, ஆமை மாதிரி அவசரப்படாமல் பொறுமையாய், ஆழத்தில் நீந்தி மிகச்சரியாக இவ்வருடத்தோடு முப்பதாண்டுகள் ஆகிறது. ஒரு நாவல் கூட எழுதியதில்லை. அவருக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். இரண்டு மூன்று குறுநாவல் எழுதியிருக்கிறார். மீதியெல்லாம் சிறுகதைகள். தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத சக்திகளில் ஒருவரான இவரது மொத்தப் படைப்புகள் மொத்தமே முப்பதுதான்.

'விமலாதித்த மாமல்லன் கதைகள் - முழுத்தொகுப்பு', 30 படைப்புகளும், 300க்கும் மேற்பட்ட பக்கங்களில், ரூ.180/- விலையில் அதே டிச. 26ல், அதே விழாவில் வெளியிடப்படுகிறது. சுனாமியைக் கொண்டாட இதுவும் ஒரு காரணம். விமலாதித்த மாமல்லனின் இந்தத் தொகுப்பு நிச்சயம் பல விருதுகளை அள்ளிக் குவிக்க தகுதியானது. ஆனால் விருதுகளுக்குப் பின்னாலான அரசியல் அவருக்கு தெரியாது என்பதால், வாசகர்கள்தான் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

விழாவில் சிறப்புரை ஆற்ற இருப்பவர்கள் : அழகிய பெரியவன், சுகுமாரன், மணா, இந்திரன், ஜே.பி.சாணக்யா, ந.முருகேச பாண்டியன், ஷாஜி, சுப்ரபாரதி மணியன், அ.ராமசாமி, ந.முத்துக்குமார், பவா.செல்லத்துரை, ஸ்ரீநேசன்

நாள் : 26-12-2010, ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.30 மணி

இடம் : தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகம், எல்.எல்.ஏ. பில்டிங்,
735, அண்ணா சாலை, சென்னை.

குறிப்பு : முன்னதாக 25-12-2010 அன்று மாலை இதே அரங்கில் மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இருக்கிறது. சாரு இம்முறை பேசப்போகிறார். எந்தப் புத்தகத்தையும் கிழிக்காமல் சினிமா, அரசியல், இலக்கியத் தளங்களில் நடைபெறும் ஊழல்களை கிழிக்க இருக்கிறார். பல கனவான்களின் (கணவன்களின் அல்ல) முகமூடியை டார் டாராக கிழித்தெறியப் போகிறார்.

21 டிசம்பர், 2010

பேரறிஞர் அண்ணா குறித்த நூல் வெளியீடு!


'அறிஞர் அண்ணா - 100 அரிய தருணங்கள்' நூல் வெளியீட்டு விழா

இடம் :
தேவநேயப் பாவணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை.

நாள் :
24-12-2010
வெள்ளிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு

வரவேற்புரை :
என்.அசோகன்,
முதன்மை ஆசிரியர், தி சண்டே இண்டியன்

நூல் வெளியீடு, தலைமை :
மானமிகு கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

நூல் பெறுதல், சிறப்புரை :
தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்

ஜி. விஸ்வநாதன்
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்

தமிழச்சி தங்கபாண்டியன்,
கவிஞர்


நன்றியுரை :
சுந்தரபுத்தன்,
செய்தியாளர், தி சண்டே இண்டியன்

20 டிசம்பர், 2010

நாகவல்லி!


நம்ம வீட்டு கல்யாணத்துலே நிச்சயமா இந்த 'மேட்டர்' நடந்திருக்கும். பந்தி பரிமாறி சரக்கெல்லாம் தீர்ந்துட்டிருக்கும். கடைசியா ஒரு பத்து, பதினைஞ்சி பேருக்கு சாம்பார், பொறியல், ஊறுகாய் எதுவுமே மிச்சமிருக்காது. சோறு மட்டும் ரெண்டு, மூணு கூடை எக்ஸ்ட்ராவா இருக்கும். சமையல்கார மாமா சட்டுபுட்டுன்னு ஒரு வேலை செய்வாரு. மீதமிருக்கிற கத்தரிக்காய், லொட்டு, லொசுக்கையெல்லாம் போட்டு ஒரு இண்ஸ்டண்ட் வத்தக்குழம்பு வெச்சுத் தருவாரு. டேஸ்ட் பிரமாதப்பட்டு விடும்.

நாகவல்லி அந்த வகை. பொன் வைத்த இடத்தில் பூ வைத்தமாதிரி சூப்பர்ஸ்டார் கேரக்டருக்கு வெங்கடேஷ். ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்காவென்று கிடைத்த ஆட்களைப் போட்டு ஒருமாதிரியாக படத்தை தேத்திவிட்டார் இயக்குனர். பி.வாசுவுக்கு சமகாலப் போக்கில் படங்களை எடுக்க முடியவில்லையே தவிர, சந்திரமுகியை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பக்காவாக ரீமேக்க முடியுமென்று தோன்றுகிறது.

வெங்கடேஷ், ரஜினியை மேனரிஸம், உடையலங்காரம் என்று எல்லாவிதத்திலும் 'பிட்' அடித்திருக்கிறார். இருந்தாலும் சூப்பர்ஸ்டாரின் கம்பீரமும், வேகமும், ஸ்டைலும் வந்துவிடுமா என்ன? இரண்டாம் பாதியில் வரும் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் டேன்ஸ். என்னதானிருந்தாலும் சந்திரமுகி ரஜினியை ரசித்தவர்களுக்கு, வெங்கடேஷை பார்க்க கொஞ்சம் பாவமாகதானிருக்கிறது. வேட்டையனைப் பார்த்துவிட்டு வெங்கடேஷைப் பார்க்க கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது.

அம்புலிமாமா கதைதான் என்பதால் லாஜிக் ஓட்டைகளை மன்னித்து விட்டுவிடலாம். இருந்தாலும் சில ஓட்டைகள் ஓஸோன் ஓட்டை மாதிரி அடைக்கவே முடியாத லெவலுக்கு ரொம்ப பெருசு. சாமியார் வரும் காட்சிகளையும், பேசும் வசனங்களையும் கண்டால் பகுத்தறிவுவாதிகளுக்கு பி.பி. எகிறி, அப்போலாவில் போய் அட்மிட் ஆகவேண்டியதுதான்.

அருந்ததியில் அட்டகாசப்படுத்தியதால் 'சந்திரமுகி' கேரக்டர் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. அவரது அழகான அம்சமான சுழி கொண்ட வெண்ணிலவின் நிறம் கொண்ட பளீர் தொப்புளைத் தவிர்த்து வேறெதுவும் கவரும் அம்சம் இல்லை. அவரது காதலராக வரும் குணசேகரனை எங்கே போய் தேடிப் பிடித்தார்களோ தெரியவில்லை. செம த்ராபை.

க்ளைமேக்ஸுக்கு முந்திய அரைமணிநேரப் படம் திடுக் திருப்பங்களால் அசுரவேகம். இந்திரா சவுந்தர்ராஜன் கதை மாதிரி சற்றும் எதிர்பாராத 'கேரக்டர்' ஒன்று திடுமென்று உள்நுழைந்து படம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறது. அதே பழைய சந்திரமுகி டெக்னிக்தான் என்றாலும், இதற்காகவே இலக்கில்லாமல் முதல் பாதியை ஓட்டிய பி.வாசுவை மன்னித்துவிடலாம்.

ஒருவேளை இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால், பழைய சந்திரமுகியின் சாதனையை சர்வசாதாரணமாக முறியடித்திருக்கலாம். இருந்தாலும் ஓக்கே. நாகவல்லி நாராசமான படமல்ல. இரண்டரை மணி நேரம் களைப்படையாமல் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.

நாகவல்லி - சந்திரமுகி ரிப்பீட்டேய்!

18 டிசம்பர், 2010

சாரு நிவேதிதாவின் தேகம்!


சினிமாவில் எந்திரனுக்கு என்ன 'ஹைப்' இருந்ததோ, அதே அளவில் சாருவின் 'தேகம்' நாவலுக்கும் இலக்கிய வட்டத்தில் 'ஹைப்' நிச்சயமாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் சாரு எழுதிய முதல் நாவல் இதுவென்று தோன்றுகிறது. முப்பது வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் சாரு இதுவரை நான்கு நாவல்கள்தான் எழுதியிருந்தார். தேகம் ஐந்தாவது. ஒரு மாதத்துக்குள் எழுதப்பட்ட நாவல். இந்த அவசரம் கதையின் போக்கில் நன்றாகவே வெளிப்படுகிறது.

நிச்சயமாக இது முழுக்க 'வதை'யைப் பற்றிய நாவல்தான். நாவலின் தொடக்கம் உடல் வதை குறித்ததாக இருக்கிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலமாக 'மனவதை' குறித்த சித்தரிப்புகளுக்கு மாறிவிடுகிறது. வதையும், அதன் விளைவான வாதையும் நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் முன்னுக்குப் பின்னாக நான்லீனியராக சொல்லப்படுகிறது. வழக்கமான சாருவின் 'கொண்டாட்டம்' இதிலும் உண்டு. ஒரு விஷயத்தை ஒருவன் கொண்டாடும்போது, அதே விஷயம் இன்னொருவனை வதைப்படுத்துகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி அல்லது பட்டர்ஃப்ளை விளைவு அல்லது ஏதோ ஒரு கருமம்.

புரொபஷனல் கில்லர் மாதிரி, நாயகன் தர்மா புரொபஷனல் டார்ச்சர். 'நாய்' பாஸ்கருக்காக வேலை பார்க்கிறான். இந்த வேலையை தர்மா ஏன் விரும்பி ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் உன்னிப்போடு முழுவீச்சில் செய்கிறான்? பிளாஷ்பேக். சமூகத்தால் 'டார்ச்சர்' செய்யப்பட்டவன் தர்மா. டிரான்ஸ்ஜெண்டராக, ஜிகிலோவாக, ஜேப்படித்திருடனாக, அடியாளாக, எழுத்தாளனாக.. எப்படி எப்படியோ வதைப்பட்டிருக்கிறான். மற்றவர்களை வதைத்திருக்கிறான். எக்சிஸ்டென்ஷியலிஸமும், ஃபேன்ஸி பனியனும் சூர்யாதான் தேகத்தின் தர்மா. பாத்திரம் மட்டுமல்ல. பல சித்தரிப்புகளும் கூட (குறிப்பாக மலம் அள்ளும் பிளாஷ்பேக்) ஏற்கனவே சாருவின் படைப்புகளில் பலமுறை வாசித்ததுதான். எனவே ஒரு புதிய நாவலை வாசிக்கும் அனுபவம் கைகூடவில்லை.

சாரு சித்தரித்திருக்கும் பிரான்ஸ் செலின் பாத்திரம் ஓர் அற்புதம். செலின் - தர்மா தொடர்புடைய அத்தியாயங்களில் என்ன வதை இருக்கமுடியும், கவிதையான ரொமான்ஸ்தானே பிரதானமாக இருக்கிறது என்று முதல் வாசிப்பில் தோன்றியது. குறிப்பிட்ட அந்த சில அத்தியாயங்களை மீள்வாசித்ததில் செலின், தர்மாவை செய்யும் ரிமோட் டார்ச்சர் பளிச்சிடுகிறது. தன்னை ஆண் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய வதையாக என்ன இருக்க முடியும்? பாலியல்ரீதியாக ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியாததுதான். செலின் அந்த வதையை தர்மாவுக்கு செய்கிறாள். அவளது உடல் தர்மாவுக்கு 'எழுச்சி'யை ஏற்படுத்துவதில்லை. வேறு வகை பாலியல் உத்திகளால் அவளை திருப்திபடுத்த நினைக்கிறான் தர்மா. அதற்கு செலின் ஒப்புக்கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியால் குன்றிப்போகும் தர்மாவின் வாழ்வில் இருந்து திடீரென்று காணாமல் போகிறாள் செலின்.

முதல் நூறு பக்கங்கள் நிச்சயமாக சுவாரஸ்யம். அடுத்த 80 பக்கங்கள்தான் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போகிறது. நண்பர்கள், நண்பிகள். நண்பிகளின் நண்பர்கள். மது, மாது, மங்கை, மயக்கம், இத்யாதி, இத்யாதி.

செலினால் தனக்கு கிடைத்த வதைகளை நேஹாவுக்கு தருகிறான் தர்மா. நேஹா தர்மாவுக்கு எழுதும் காம-காதல் ரசம் சொட்டும் ஈ-மெயில்கள் அச்சு அசல் காமரூபக் கதைகள். தர்மாவின் 'புறக்கணிப்பு' என்ற வதையால், மனம் பிறழ்கிறாள் நேஹா. அந்த அத்தியாயம்தான் நாவலின் ஹைலைட். கத்தியின்றி, ரத்தமின்றி உச்சபட்ச வாதையை தரும் வதை. சீரோ டிகிரியின் முதல் அத்தியாயத்துக்கு இணையான கிளாசிக் ரைட்டிங். அவ்ளோதான். அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை.

காமரூபக் கதைகள் தவிர்த்து, சாருவின் வேறு எந்த நாவலையும் விட சிறப்பாக 'தேகம்' வந்துவிடவில்லை. அதே நேரத்தில் ராஸலீலாவுக்குப் பிறகு கொஞ்சம் சவசவ என்று (சில சிறுகதைகள் தவிர்த்து) புனைவு எழுதிக்கொண்டிருந்த சாரு மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர 'தேகம்' உதவியிருக்கிறது. இந்த ஃபார்ம் அடுத்து அவர் எழுதவிருக்கும் நாவல்களை மாஸ்டர்பீஸ்களாக மாற்ற உதவும். அவரது பழைய சாதனைகளை அவரே மீண்டும் முறியடிக்க வேண்டும் என்பதுதான், அவரது வாசகர்களின் விருப்பம்.

ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளே அரங்கில் 65,000/- ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக கேள்விப்பட்டேன். நிச்சயமாக சாரு தமிழ் இலக்கியத்தின் பெஸ்ட் செல்லராக மாறிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் 'தேகம்' நிச்சயமாக அவரது மற்ற நூல்களை விட அதிகம் விற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற நூல்களை விட எந்த விதத்திலும் 'தேகம்' சிறந்ததில்லை.

நூல் : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை

17 டிசம்பர், 2010

ஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்!


ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல். பம்ப்செட். கால்நடைகள். பண்ணையார். ஆலமரம். நாட்டாமை. பஞ்சாயத்து. சொம்பு. அய்யனார் கோயில். பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல.

இங்கு வசிக்கும் அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி கையிருப்பாக இருக்கிறது.

மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால் இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில் இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்' என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின் திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் ஹூவாக்ஸி எப்ப்டி இருந்தது என்று.

சில வருடங்களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுரகிலோ மீட்டர்தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை. அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில். சம்பாதிக்கும் சொற்பப்பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப் போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார். எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் ஹூ ரென்பாவ். அந்த கிராம கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.

ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்தார். முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர் காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராமவாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும் கடுமையான உழைப்பினைத்தர முன்வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பதுதான் ஹூவின் திட்டம். இதுதான் உண்மையான 'சோஸலிஸம்' என்று அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டுமொத்தமாக பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

ஹூவாக்ஸி வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். ஜியாங்சூ மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான் இருக்கின்றன.

இன்று ஹூவாக்ஸி கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான மூலப்பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும் பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில் இருக்கும் தொழில்கள்.

ஹூ ரென்பா, பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில் எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக் குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு – இவைதான் ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூ ரென்பா.

ஹூ ரென்பா உருவாக்கியிருக்கு ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்தான் என்கிறபோதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர். இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில் வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக் கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும் மறுத்துவிட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை  ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம். வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள். அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப் படும். அடிப்படை சம்பளத்தில் இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒருமுறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதிகளையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகிவிட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சிக்கலானதாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொருவரும் 82 வயதான ஹூ ரென்பா மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஹூவாக்ஸி வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரின் நடைபாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

(நன்றி : புதிய தலைமுறை)

15 டிசம்பர், 2010

திமுகவில் சாரு?


கனிமொழி, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், குஷ்பூ என்று திமுக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். போதாதற்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அழகுப்புயலும் (?) கருப்பு சிவப்பு உடை அணிந்திருந்தார். இதெல்லாம் போதாதா, சாரு திமுகவில் சேரப்போகிறார் என்பது உறுதி. விஜய் அதிமுகவில் சேரும்போது, சாரு திமுகவில் சேரக்கூடாதா என்ன?

ஒருவழியாக இலக்கிய உலகம் எதிர்ப்பார்த்திருந்த சூறாவளிப்புயல் காமராஜர் அரங்கத்தில் கரையைக் கடந்தது.

கிட்டத்தட்ட ஆயிரத்து எட்டுநூறு இருக்கைகள் கொண்ட காமராஜர் அரங்கில் பாதிக்கு மேல் இருக்கைகள் நிரம்பி வழிந்தது. மனுஷ்யபுத்திரன் காலியாக இருக்கும் இருக்கைகளை காட்டி தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தை நொந்துகொண்டார். சாருவின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசிலடிக்கப்பட, நாணத்தால் சாரு நாணி கோணி அமர்ந்திருந்தார். எஸ்.ரா மேடைக்கு வரும்போதும் செம விசில். வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது அவருக்கு. ஃபுல்மேக்கப்பில் தமிழச்சி தங்கபாண்டியன். 'பந்தா' இல்லாத கனிமொழி கருணாநிதி. சாதாரண கிராமத்தான் தோற்றத்தில் ச.ம.உ. ரவிக்குமார். கருப்பு ஷர்ட்டில் ஸ்மார்ட்டாக மதன். கூலிங்கிளாஸ் போட்ட நந்தலாலா மிஷ்கின். தில்லானா மோகனாம்பாள் மைனர் கெட்டப்பில் நல்லி செட்டியார். கூடவே இலவச இணைப்பாக ஏ.நடராசன். செட்டியாரும், நடராசனும் அதிஷா-லக்கிலுக் மாதிரி என்று தோன்றுகிறது. எங்கும் சேர்ந்தே வருகிறார்கள். சேர்ந்தே போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புக்பாயிண்ட் அரங்கில் சாருவின் புத்தகம் வெளியிடப்பட்டபோது 125 பேர் வந்திருப்பார்கள். கடந்த ஆண்டு ஃபிலிம் சேம்பரில் 250 முதல் 300 பேர் இருந்தார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1000 பேர் வந்திருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் சாரு சூப்பர்ஸ்டார்தான். வந்திருந்தவர்களில் ஊன்னா தான்னா போன்ற ஓரிரண்டு பெருசுகளை கழித்து கட்டிவிட்டால் மீதி எல்லோருமே இளைஞர்களாகவும், இளைஞிகளாகவும் இருந்தார்கள். சாருவின் போட்டி எழுத்தாளரான
 உ.த. எழுத்தாளரின் கடந்தாண்டு புத்தக நிகழ்வில் தென்பட்ட தலைகள் முழுக்க நரைதலைகளாக இருந்தன என்பது ஏனோ இப்போது சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது.

செட்டியாரின் பேச்சு யதார்த்தமானது. அவரை ஒரு இலக்கியவாதியாகவே (!) நினைக்க முடியவில்லை. அந்த காலத்துலே மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டிலே அரைகிலோ கருவாடு ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்கிற ரேஞ்சில் இயல்பாக, படுத்தாமல் பேசினார். ஏ.நடராசன் பேச மைக் அருகில் வந்ததுமே பலர் 'தம்' அடிக்க வெளியே போனது ஏனென்று தெரியவில்லை. நானும் வெளியே போய்விட்டதால் உள்ளே என்ன பேசினார் என்பது தெரியவில்லை. ரவிக்குமார் குட்டி குட்டியாக உள்குத்து வைத்து பேசினார். சென்னையில் இருந்த சாருவை ஈ.சி.ஆரில் காரில் பார்த்ததாக ஜோக் அடித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியனின் 'சாத்தர்' புராணம் துரதிருஷ்டவசமாக இந்த வருடமும் தொடர்கிறது. சாத்தர் பாவம். கனிமொழி பேச்சு சம்பிரதாயமானது. எஸ்.ரா வழக்கம்போல 'சமகால' விஷயங்களை சமரசமின்றி அசைபோட்டார். மதனின் பேச்சு அவரது கார்ட்டூனை போலவே கலக்கலானது.

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருப்பது மிஷ்கினின் பேச்சு. அவரது பேச்சில் என்ன குற்றமென்று எனக்குத் தெரியவில்லை. நண்பர் சரவண கார்த்திகேயனின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு எப்படி பேசினாரோ, அதைபோலவேதான் இன்று மிஷ்கினும் பேசியிருக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். 'சரோஜா தேவி புக்' என்று சொன்னதால் சாரு கவலைப்படுகிறாரோ, விமர்சனங்கள் குறித்து இதுவரை கவலைப்பட்டவர் அல்லவே அவர்? "ஆமாண்டா. அப்படித்தாண்டா!" என்று சொல்லும் சிங்கமாகதான் சாருவை இதுவரை பார்த்திருக்கிறோம். உ.த.எ.வும், சாருவும் வித்தியாசப்படும் முக்கியமான புள்ளி இது. மிஷ்கின் மீது கோபம் வேண்டாம் சாரு. அவரும் உங்களைப்போல வெள்ளந்தி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்.

'தேகம்' வாங்கினோம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஒரு 'பிட்' நிச்சயம். இன்னும் முழுமையாக படிக்கவில்லை. முதல் அத்தியாயத்தை மேய்ந்ததில் ஃபேன்ஸி பனியன் நினைவுக்கு வருகிறது. இதுமாதிரி பிட்டுகளால்தான் விடலைகள் விட்டில் பூச்சிகளாய் சாருவிடம் மாட்டுகிறார்கள். பிற்பாடு அவர்கள் விஷயம் தெரிந்துகொள்வதும் சாருவிடம்தான்.

இறுதியாகப் பேசவந்த சாரு வழக்கம்போல ஜோவியலாகப் பேசினார். 'கட்சிக்கலர்' குறித்து விளக்கம் தெரிவித்தார். பல்வேறு கட்சிகளிலும் தனக்கு நண்பர்களும், வாசகர்களும் இருக்கிறார்கள். அதுபோல திமுகவிலும் இருக்கிறார்கள் என்றார். எனவே இப்போதைக்கு சாரு திமுகவில் சேரமாட்டார் என்று தெரிகிறது.

எது எப்படியோ? சாருதான் இன்றைய இலக்கிய சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த புத்தக விழாவின் மூலமாக நிரூபித்திருக்கிறார். இரவு பத்தரை மணி வரையிலும் மகுடியை கண்ட நாகமாய் கூட்டம் திரண்டிருந்ததே இதற்கு சாட்சி.

13 டிசம்பர், 2010

பெரியார் திரை - குறும்படப்போட்டி


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் 
பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு
நுழைவுக் கட்டணம் இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள்: 
*     குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
*     ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பின் நலம்.
* DVD அல்லது CD வடிவில் தரமானதாக இருக்க வேண்டும். குறும்படத்தின் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
* போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
* போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும் படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வில் திரையிடப்படும்.
* குறும்படங்கள் 2008-2010 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
* தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விதிமுறைகளை
ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.
அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230

11 டிசம்பர், 2010

தமிழ் சமூகத்தின் அசலான கொண்டாட்டம் - அனைவரும் வருக!



சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு


நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி

இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

வெளியிடப்படும் நூல்கள் :

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் :
  • கனிமொழி எம்.பி.
  • மிஷ்கின்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • நல்லி குப்புசாமி செட்டியார்
  • ஏ. நடராஜன்
  • ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  • குஷ்பு
  • மனுஷ்யபுத்திரன்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • மதன் (கார்டூனிஸ்ட்)

விருதகிரி

"அரசியலில் எனக்குப் புடிச்சது வெறும் கலைஞர்
சினிமாவில் எனக்கு ரொம்ப புடிச்சது புரட்சிக் கலைஞர்"

விருதகிரி பற்றி எழுதும்போது 'பஞ்ச்' இல்லாமல் ஆரம்பிக்கவே படாது. பெரிய பாவம். படம் பார்த்த பத்திரிகையாள நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். "படத்துலே பஞ்ச் பார்த்திருக்கேன். படமே பஞ்சா இருக்கிறதை இப்போதான் பார்க்குறேன்"

உண்மைதான். படத்தின் ஹீரோ-கம் டைரக்டரான டாக்டர் கேப்டன் மட்டுமல்ல. வில்லன், அடியாள்,  அப்பா, அம்மா, சைட் கேரக்டர், சப்பை கேரக்டர், அட்மாஸ்பியருக்கு சும்மா போகிறவர்கள் வருகிறவர்கள் என்று ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்குகளாக அள்ளித்தெளிக்க, விசில் கும்மாளம் கொண்டாட்டத்தோடு பொழுதைப் போக்க, அருமையான அக்மார்க் கேப்டன் படம்.

எந்திரனின் 'சிட்டி'யாவது ரோபோ. கேப்டனின் விருதகிரி ரத்தமும், சதையுமான மனிதன். ஆனால் ரோபோவை விட சிறந்த 'பைட்டிங்' ஆற்றலோடு, பவர்ஃபுல்லாக விருதகிரி பாத்திரத்தை வடிவமைத்த கேப்டனின் சிந்தனையை தலைகீழாக நின்று தண்ணி அடித்து பாராட்டினாலும் தகும்.

ஸ்காட்லாண்டுயார்டு போலிசார் செம்மொழியில் பேசுகிறார்கள் என்று ஆரம்பக் காட்சியை கண்டதுமே இனம்புரியாத திகில் ஏற்படுகிறது. பதிலுக்கு அவர்களிடம் கேப்டன் இங்கிலீஷில் விளாசும்போது திகிலின் மடங்கு எக்குத்தப்பாக எகிறுகிறது. படம் கொஞ்சநேரம் ஓடியபிறகே புரிகிறது. சப்-டைட்டில் போடாமல், வாய்ஸாகவே மொழியாக்கம் செய்யும் புதுமையான தொழில்நுட்ப முறையை உலக சினிமாவுக்கு டைரக்டர் கேப்டன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

டிரைனிங்குக்காக ஸ்காட்லாண்டு யார்டுக்கு செல்லும் கேப்டன், அங்கே அவர்கள் நாட்டு பிரதமரின் உயிரைக் காப்பாற்றுகிறார். திக்கைத்தனமாக ஸ்காட்லாண்டு யார்டு போலிஸார் தீவிரவாதிகளை கோட்டைவிடும் நிலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தீவிரவாதிகளை தாயகம், உளவுத்துறை, நரசிம்மா போன்ற படங்களில் சமாளித்த அனுபவம் நம் கேப்டனுக்கு இருக்கிறது. அந்த அனுபவ ஆற்றலை கொண்டே ஸ்காட்லாண்டு தீவிரவாதிகளை நோண்டி நுங்கெடுக்கிறார். அடுத்த காட்சியே கேப்டன் டிவி செய்திகள். "ஸ்காட்லாண்டு யார்டு பிரதமரை காப்பாற்றி தமிழக ஏ.டி.ஜி.பி. விருதகிரி உலகசாதனை".

நாடு திரும்பி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். "வாழ்க்கை ஐஸ்க்ரீம் மாதிரி. உருகறதுக்குள்ளே சாப்பிட்டுடணும்"

அடுத்த கேமிராவைப் பார்த்து குளோஸப்பில் 'பாராட்டு விழா' குறித்து பஞ்ச்-பை-பஞ்சாக கலைஞருக்கு அட்வைஸ்.

இப்படியாகத் தான் இருக்கிறது விருதகிரி.

இண்டர்வெல் வரை எப்படி படத்தை நகர்த்துவது என்று இயக்குனருக்கு தெரியவில்லை. மன்சூர் அலிகான், சண்முகராஜ் என்று லோக்கல் லுச்சா வில்லன்களை துவம்சம் செய்கிறார். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சொல்லி, மன்சூர் அலிகான் வசனங்கள் மூலமாக அவர்களை கேவலப்படுத்தி இருக்கிறார் கேப்டன். உடல் உறுப்புகளை வெட்டி விற்கும் க்ரூப் ஏதோ கசாப்புக்கடை மெட்டீரியல்களை வைத்து இந்த வேலை செய்வது மாதிரி காட்டியிருப்பது கொடுமை. அதைவிட கொடுமை அந்த உடல்களை கருவாடு மாதிரி உப்புக்கண்டம் போட்டு அலமாரியில் வில்லன் அடுக்கி வைப்பது. கதைக்கு சம்பந்தமேயில்லாமல் வரும் இந்தக் காட்சிகளை கிளைமேக்ஸில் புத்திசாலித்தனமாக(?) இண்டர்நேஷனல் வில்லனுடன் 'கனெக்ட்' செய்வதில்தான் கேப்டனின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

இண்டர்வெல்லுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கேப்டன் கிளம்புகிறார். தெரிந்தோ, தெரியாமலோ என்ன கருமமோ. அல்பேனிய அகதிகளை அசிங்கப்படுத்தி கதையில் சில காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். இந்தியா உலகின் நெ.1 நாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டுபிடிக்கிறார். ஒட்டுமொத்தமாக அழிக்கிறார். உலகமே விருதகிரியைப் பார்த்து வியந்து நிற்கிறது. சுபம்.

இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளிலும் தமிழக போலிஸின் ஏ.டி.ஜி.பி.யான விருதகிரியை படத்தில் எல்லாருக்குமே தெரிகிறது. நம்மூரு இண்டலிஜெண்ஸ் ஐ.ஜி. ஜாபர்சேட்டை மடிப்பாக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியமாட்டேன் என்கிறது ஏனென்று தெரியவில்லை. படத்தில் கேப்டன் சோலோவாகவே வருகிறார். அவருக்கு ஜோடி இருந்திருந்தால் டான்ஸ், ரொமான்ஸ் என்று ஆட்டம் அருமையாக களைகட்டியிருக்கும். இந்த வாய்ப்பினை ஏனோ கேப்டன் புறந்தள்ளியிருக்கிறார். குடும்ப அரசியலை வசனங்களில் கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே விளாசுகிறார்கள். டைட்டிலில் கேப்டன், கேப்டனின் மனைவி, கேப்டனின் மச்சான், கேப்டனின் மகன்கள் என்று எல்லோரது போட்டோக்களும் காட்டப்படுகிறது.

உங்களுக்கு கேப்டனை பிடித்தால், விருதகிரியையும் பிடிக்கும்.

கலைஞருக்கு பெண்சிங்கம். கேப்டனுக்கு விருதகிரி.

கேப்டன் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு, அவசர அவசரமாக ஹாலிவுட்டில் இதே கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தப் படம் குறித்த தகவல்கள் இங்கே.

விருதகிரி திரைக்கதை பாணியிலேயே கேப்டனின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக ஒரு மொக்கைச்சாமியால் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன டெர்ரர் சாம்பிள் இங்கே.

9 டிசம்பர், 2010

ராஜா மாதிரி வாழணும் தம்பி..


மதுரை. புதுநத்தம் ரோடு. பாண்டி ஓட்டல் பின்புறம். பெருமழைக்கு முன்பான சுரீர் வெயில். நாக்கு வறண்டுப்போய் இருசக்கர வாகனத்தை நாம் ஓரங்கட்டியது ஒரு இளநீர் கடை முன்பு. கூரை வேய்ந்திருந்த கடையில் விற்பனை 'தூள்' பறந்து கொண்டிருந்தது.

"செவ்விளநியா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்"

"எளநி நிறைஞ்சிருக்குறா மாதிரி ஒரு வழுக்கையைப் போடுங்கண்ணேய்"

"பாதி எளநி, பாதி தேங்காய் இருக்குறதா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்" – வயசு வித்தியாசமில்லாமல் 'மதுர'யில் எல்லாருமே அண்ணேய்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

ஒரு இளநீரை உறிஞ்சிக்கொண்டே வியாபாரியை நோட்டமிட்டோம். ஏதோ ஒரு வித்தியாசம். குடித்து முடித்து நூறு ரூபாய் நோட்டை நீட்டினோம்.

தடவிப் பார்த்து வாங்கியவர், "நூறு ரூவாய்ங்களா தம்பி?" என்று கேட்டு, பணப்பெட்டியில் இருந்து மீதி எண்பத்து ஐந்து ரூபாயை கச்சிதமாக எடுத்துக் கொடுத்தார்.

ஆம். இளநீர் வியாபாரம் செய்யும் ராஜா பார்வை சவால் கொண்டவர். முற்றிலுமாக பார்வை தெரியாது. நன்றாக பார்க்க கூடியவர்களுக்கே இளநீர் வெட்டித் தருவது சவால் தரும் வேலை. வாடிக்கையாளர் கேட்கும் வகையில் நல்ல இளநீரை 'பார்த்து' எடுக்க வேண்டும். 'பார்த்து' வெட்டித் தர வேண்டும். கூர்மையான கத்தி. கொஞ்சம் தடுமாறினாலும் விரல்கள் எகிறிவிடும்.

ராஜா எப்படி சமாளிக்கிறார்?

"1974ல் இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சேனுங்க. இப்போ 54 வயசு ஆவுது. அப்போவெல்லாம் நல்லாதான் பார்வை தெரிஞ்சுது. கொஞ்ச வருஷத்துலே சாயங்காலத்துலே மட்டும் கண்ணு மங்கும். சரியா கவனிக்காமே விட்டுட்டேன்.

திடீர்னு பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா மங்கி சுத்தமா பார்வை தெரியாம போயிடிச்சி. பார்வை இல்லாதவங்க குறிப்பிட்ட சில வேலைகளைதான் செய்வாங்க. எனக்கு அந்த வேலை எதுவும் தெரியாது. தெரிஞ்ச வேலையை அப்படியே இத்தனை வருஷமா தொடர்ந்துட்டேன். 'கண்ணு பார்க்குது, கை செய்யுது' ஒரு பழமொழி சொல்வாய்ங்க. நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன், இப்பவும் செய்யுறேன். எங்கிட்டே இளநி வாங்கி குடிக்கிறவங்களுக்கு மத்த கடைக்கும் இந்த கடைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே?" என்கிறார்.

இளநீர் வெட்டித் தருவது மட்டுமல்ல. வண்டியை வாடகைக்கு பிடித்து தோப்புகளுக்குச் சென்று சரக்கு கொள்முதல் செய்வது வரை இவரே செய்கிறார். வியாபாரத்தில் உதவிக்கு அவ்வப்போது இவருடைய மனைவியும், அண்ணன் மகனும் வருவதுண்டு.

ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள். உறவினர் வீட்டில் படிக்கிறார்கள். வீரபாண்டி ரோடு, ஊமச்சிக்குளத்தில் குடிசை வீடு. "எங்க அக்கம் பக்கத்து வீடுங்களுக்கு எல்லாம் இலவசப் பட்டா கொடுக்க எழுதிக்கிட்டுப் போயிருக்காங்க. நாங்க வியாபாரத்துக்குப் போயிட்டதாலே எங்க பேரு லிஸ்ட்டுலே சேர்க்க முடியலை" என்று இருப்பிடப் பிரச்சினையை சொல்கிறார் ராஜாவின் மனைவி.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் இளநீர் வியாபாரம் நன்கு சூடு பிடிக்கும். மற்ற மாதங்களில் கொஞ்சம் 'டல்'தான். மழைக்காலங்களில் சுத்தம். கோடையில் சேமித்து, மழையில் உண்ணும் எறும்பு பாணி வாழ்க்கை. குடும்பப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜாவின் மனைவி வீட்டுவேலை செய்கிறார்.

ராஜாவுக்கு பார்வை இல்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு வேண்டிய வகையை கையால் தடவிப் பார்த்தே, உணர்ந்து எடுத்துத் தரும் அனுபவ ஆற்றல் ராஜாவுக்கு வாய்த்திருக்கிறது. இளநீர் குடிக்க ராஜா கடையை தேடி வரும் ரெகுலர் கஸ்டமர்களும் உண்டு.

இந்த வியாபாரத்தில் அவருக்கு ஒன்றே ஒன்றுதான் பிரச்சினை. அதிகாரப் பதவியில் இருக்கும் சிலர். அவ்வப்போது கடைக்கு வந்து ஓசியில் இளநீர் குடித்துவிட்டு போவார்கள். இருபத்தைந்து ரூபாய்க்கு இளநீர் குடித்துவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டுவார்கள். "சாரு யாருன்னு தெரியுமில்லே.. ரவுண்ட்ஸ் வர்றப்போ கடை இருக்காது!" என்று மிரட்டுவார்கள். சில நேரங்களில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்து கடையை பிய்த்துப் போட்டுவிட்டு போவார்கள்.

"எந்த வியாபாரத்துலேதான் தம்பி பிரச்சினை இல்லை? பிரச்சினைக்குப் பயந்தா வாழ முடியுமா? பார்வைதானே போச்சி. கைகால் நல்லாதானே இருக்கு. ராஜான்னு எனக்கு பேரு வெச்சிருக்காங்க. ராஜா மாதிரி வாழ்ந்து காட்டணுமில்லை?"

ராஜா கடையில் இளநீரை காசுக்கும், தன்னம்பிக்கையை இலவசமாகவும் வாங்கிக் கொண்டு வண்டியை எடுத்தோம். வெயிலின் வாட்டம் குறைந்திருந்தது.

(நன்றி : புதியதலைமுறை)

8 டிசம்பர், 2010

‘டாவோ’ ஒரு கலங்கரை விளக்கம்

சேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அரசுசாரா நிறுவனங்களை NGO (Non Government Organisation) என்கிறார்கள். இதைப்போலவே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை DPO (Disabled People Organisation) என்பார்கள். தமிழகத்தில் ஏராளமான என்.ஜி.ஓ.க்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், டி.பி.ஓ.க்கள் மட்டுமே முழுக்க முழுக்க அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக திட்டப் பணிகளை முன்னெடுப்பவை.

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்‌ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.

இதுபோன்ற தன்னார்வ சேவை நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு கோவையில் இருந்து செயல்பட்டு வருகிறது. டாவோ (DAVO - Disability Alliance of Voluntary Services) என்று அவ்வமைப்புக்கு பெயர்.  மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தன்னார்வு சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள, பயனர்களை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்துவதும் இவ்வமைப்பின் தலையாய பணிகளில் ஒன்று.

டாவோ அமைப்பின் கீழ் இயங்கும் UDIS (You and the Disabled) மன்றம் பல்வேறு செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது.

 "மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்" என்கிறார் இம்மன்றத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சூரிய நாகப்பன்.

இந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய - மாநில திட்டங்கள்,  பல்வேறு அமைப்புகளின் கல்வி மற்றும் இதர சேவைகள் ஆகியவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை எப்படி பல்வேறு தளங்களில் இருந்து பெறுவது என்பதும் சொல்லித்தரப்படுகிறது. மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் என்று எதைப்பற்றி கேட்டாலும் இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும்.

 
UDIS ஹெல்ஃப் லைன் எண்கள் :

0422 2405551 / 0422 2648006 (அல்லது) 99445 56168

(நன்றி : புதிய தலைமுறை)

27 நவம்பர், 2010

நந்தலாலா


'நந்தலாலா' வெளிவருவதற்கு ஒரு மாதம் முன்பாக ஒரு கூட்டத்தில் மிஸ்கின் பேசினார். "நான் முதலில் எடுத்த இரண்டு படங்களும் படமே அல்ல. நந்தலாலாதான் முதல் படம்". என்ன ஒரு ஆணவமான பேச்சு? இவரென்ன அவ்வளவு பெரிய டபாடக்கரா என்று நினைத்தேன். ஜெயமோகன் ஒரு படி மேலே போய் 'தமிழின் முதல் படம்' என்கிற அளவுக்கு சொல்கிறார். படம் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. இருவரின் கூற்றும் 100 சதவிகிதம் உண்மை.

அவதார் விமர்சனத்தின்போது சாரு எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. மனிதன் முதன்முதலாக திரையில் படத்தை கண்டபோது என்ன ஆச்சரியம் அடைந்தானோ, அதே ஆச்சரியம் 'அவதார்' காணும்போதும் ஏற்படுகிறது.

எனக்கு 'நந்தலாலா'வை காணும்போது அந்த ஆச்சரியம் ஏற்பட்டது. இதுவரை இந்தியத் திரையுலகில் யாரையெல்லாம், எதையெல்லாம் உச்சம் என்று நினைத்தோமோ, அத்தனை உச்சங்களையும் அனாயசமாக தாண்டியிருக்கிறது 'நந்தலாலா' குழு. இளையராஜாவின் இசை ஆயிரம் ஆஸ்கர்களுக்கு தகுதியானது.

சாகாவரம் பெறப்போகும் மாபெரும் காவியத்தை விமர்சிக்குமளவுக்கு அறிவோ, அருகதையோ நமக்கு இல்லை.

சில பகிர்தல்கள் :

பத்திரிகையாளரான அண்ணன் அருள் எழிலன் ஆட்டோ ஓட்டுனராக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பைக் காட்டிலும், அவரது குரல் வசீகரமானது. தோழர் லிவிங் ஸ்மைல் வித்யா, இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

அழகியல் இயக்குனர் டிராட்ஸ்கி மருது. இவருடைய ஸ்டோரி போர்ட் படத்தின் தீம் மற்றும் டோனை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது.

12 வினாடிகள் மட்டுமே தோன்றினாலும் திரைக்கதையில் திருப்பம் கொடுக்கும் பாத்திரத்தில் நாசர்.

80களில் தமிழ் சினிமாவில் வாயாடிப்பெண்ணாக பெயரெடுத்த ரோகிணிக்கு ஒரு வசனம் கூட இல்லை.

சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்.

படத்தில் இரட்டை ஹீரோக்கள். மிஷ்கின் மற்றும் சிறுவன் அஸ்வத்.

தமிழ் லேண்ட்ஸ்கேப்பை அதன் அப்பட்டமான அழகியல் பண்போடு, அனுபவித்து காட்சியாக்கி இருக்கிறார்கள்.

அன்பும், முரட்டுத்தனமும் மிகுந்த ஏராளமான முகங்கள் படம் நெடுகிலும்.

சினிமாஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தை முதன்முறையாக உருப்படியாக பயன்படுத்தியிருக்கும் தமிழ்ப்படம்.

படத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது 'ஸ்பாய்லர்' ஆகிவிடுமோவென்று அச்சமாக இருக்கிறது. மார்கழி மாச இரவுநேரப் பேருந்துப் பயணத்துக்கு ஒப்பான 'சிலீர்' அனுபவத்தை தருகிறது நந்தலாலா. கட்டாயம் பாருங்கள்.

இது இந்திய சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று.

26 நவம்பர், 2010

மந்திரப் புன்னகை, மகிழ்ச்சி, மைனா!


மந்திரப் புன்னகை


கிறிஸ்டபர் நோலன் மாதிரி தமிழில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற கரு.பழனியப்பனின் கனவு நியாயமானது. அதற்காக அவரே ஹீரோவாக நடித்திருக்க வேண்டாம். இந்தப் படத்தில் சேரன் நடித்திருந்தால் கூட தாங்கிக் கொண்டிருக்கலாம். உச்சபட்ச நடிப்பு உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரத்துக்கு தன்னையே எப்படி இயக்குனர் தேர்வு செய்திருக்கிறார் என்று புரியவில்லை.

தனித்தனி காட்சிகளாக யோசித்துப் பார்க்கும்போது நிச்சயமாக மந்திரப் புன்னகை ஒரு பக்காவான விஷூவல் ட்ரீட். ரிச்சாக படம் பிடித்திருக்கிறார்கள். திரைக்கதை வசனத்துக்கு அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள். உடல் உழைப்பைவிட மூளை உழைப்பு அதிகமாக செலுத்தப்பட்டிருக்கிறது.

சினிமாவில் 'கதை ட்ராவல் பண்ணனும்' என்று அடிக்கடிப் பேசுவார்கள். மந்திரப் புன்னகையில் அந்த ட்ராவல் சரியாக செய்யப்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்குமான தொடர்புச்சங்கிலி சரிவர பிணைக்கப்படவில்லை. பிற்பாடு கிளைமேக்ஸுக்கு முன்பாக இக்காட்சிகளுக்கெல்லாம் 'லாஜிக்' தருகிறார்கள். ஆனால் அதுவரை படம்பார்த்து ஏற்பட்ட அலுப்பினால் "எப்போதான் எண்ட் கார்ட் போடுவார்களோ?" என்று ஆயாசப்பட வைக்கிறது.

நடிப்பாசையை ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகச்சிறந்த இயக்குனராக பழனியப்பன் அடுத்தடுத்து சிறப்பான படங்களை இயக்க வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.

 

மகிழ்ச்சி

இன்னொரு இயக்குனர் ஹீரோ ஆகியிருக்கிறார். எந்த ஹோம் ஒர்க்குமின்றி நேராக ஷாட்டுக்குப் போய் "ரெடி. ஸ்டார்ட்" சொல்லி நடித்திருப்பார் போலிருக்கிறது. கவுதமனின் ரொமான்ஸ், டான்ஸ் சகிக்கவில்லை.

1990லேயே காலாவதி ஆகிவிட்ட குடும்பக்கதை. சம்சாரம் அது மின்சாரம் காலக்கட்டத்தில் வந்திருந்தால் ஒருவேளை ஓடியிருக்கும். நீல.பத்மநாபன், 'தலைமுறைகள்' எழுதிய காலத்தில் செல்போன் இல்லை என்பதால், இப்போது படமெடுக்கும் போதும் அது இருக்கக்கூடாதா? சமகால நாகரிகத்தின் சுவடுகள் சுத்தமாக தென்படாத படம் 'மகிழ்ச்சி'.

எல்லா வகையிலும் துன்பத்தை தரும் 'மகிழ்ச்சி'யில் இரண்டே இரண்டு ஆறுதல்கள். ஒன்று வித்யாசாகரின் இசையில் பாடல்கள். இரண்டு செந்தமிழன் சீமான்.

சமீபத்தில் நடிக அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர்களில் மிகச்சிறப்பாக நடித்து வருபவர் சீமான். கோபக்கார தலித் இளைஞன் பாத்திரத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக பொருந்துகிறார். இயல்பாகவே சிடுமூஞ்சியாக அமைந்துவிட்ட தோற்றம் இவருக்கு வாய்த்திருக்கிறது என்றாலும், எப்போதாவது அத்தி பூத்தாற்போல அபூர்வமாக சிரிக்கிறார். அறிஞர் அண்ணா, வைகோ பாணியிலான ஆண்மையான சிரிப்பு. கேமிராவுக்கு முன்பாக நடிக்கிறோம் என்கிற உணர்வில்லாமல் மிக யதார்த்தமாக இருக்கிறார். தொடர்ச்சியாக நடித்தால் மிகச்சிறந்த எதிர்காலம் இத்துறையில் சீமானுக்கு உண்டு.

மறுமணம், கலப்புமணம் ஆகியவற்றின் அவசியத்தை, கதையின் போக்கில் எந்த நெருடலும் வராமல் சொல்லியிருப்பதற்காக 'மகிழ்ச்சி' கொள்ளலாம்.

 

மைனா

பருத்தி வீரன் க்ளைமேக்ஸை பார்த்த வினாடியே இக்கதை இயக்குனருக்கு தோன்றியிருக்கலாம். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கப் போகும் படமென்றெல்லாம் சில விமர்சகர்களால் சொல்லப்படுவது கொஞ்சம் அதீதம் என்றே தோன்றுகிறது. 'மைனா'வும் ஒரு நல்ல படம். அவ்வளவுதான்.

ஒரு ஜெயில் சூப்பரெண்டின் பார்வையில் படம் தொடங்கும்போது, சீட்டில் இருந்து நிமிர்ந்து உட்கார்கிறோம். நல்லநாள், கெட்டநாள் பாரபட்சமின்றி அரசு அலுவலர்கள் சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகள் என்கிற ஐடியா வித்தியாசமானது. இந்த அதிகாரிதான் படத்தின் ஹீரோ என்று சித்தரிக்கப் பட்டிருந்தால் படத்தின் 'டிராவல்' உச்சத்தைத் தொட்டிருக்கும்.

துரதிருஷ்டவசமாக 'கைதி' பாத்திரம் நாயகனாக முன்மொழியப் படுகிறது. 'பருத்தி வீரன்' பாணி காதல், கசுமாலமென்று 'மைனா' வழக்கமான படம் ஆகிவிட்டது. முப்பது வயது மதிக்கத்தக்க முதிர்தோற்ற நாயகன், கொஞ்சும் இளமையோடு நாயகி (அப்போதுதான் வயசுக்கு வருகிறார்) என்று பாத்திரத்தேர்வு கடாமுடாவென்று இருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் என்று எல்லா வகையிலுமே படத்தின் தொழில்நுட்ப செய்நேர்த்தி அபாரம். இயக்குனர்-கம்-காமெடி நடிகரான தம்பி ராமையா, யாருமே எதிர்ப்பார்க்கா வண்ணம் குணச்சித்திர நடிகரான அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். க்ளைமேக்ஸுக்குப் பின்னான, இன்னொரு க்ளைமேக்ஸுக்கு தியேட்டர் முழுக்க கைத்தட்டல்களால் அதிர்கிறது.

மைனா – மனசை தொடுகிறது.

25 நவம்பர், 2010

2011 – கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டிங்

இன்னும் சரியாக ஆறு மாதங்கள் கூட இல்லை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு. பொதுவாக ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஓரளவு யார் யார் எந்த எந்த கூட்டணி என்று ஒரு தெளிவு தெரியும். 2006ஆம் ஆண்டின் வைகோவின் இறுதி நிமிட தாவல், பாமகவின் கிளைக்கு கிளை தாவும் ஆட்டமெல்லாம் இதில் சேர்த்தியில்லை. அதுபோலவே வேட்புமனுவுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்த கூட்டணியில் சேரும் சாதிக் கட்சிகளையும் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. நாம் சொல்ல வருவது முக்கியப் பங்காளி (Major Partner) கட்சிகள்.

'கூட்டணி' என்ற சொல் தமிழக அரசியலில் 67ல் இருந்தே முக்கியத்துவம் பெறுகிறது. அறிஞர் அண்ணாவின் வெற்றிக்கு அவர் அதிரிபுதிரியாக அமைத்த ஒரு கூட்டணியும் முக்கியக் காரணியாக இருந்தது. 72ல் காங்கிரஸ் உடைந்த நிலையில் இ.காங்கிரஸின் நிபந்தனையில்லா (அதாவது இதயத்தில் மட்டும் கூட்டணி) கூட்டணி, கலைஞருக்கு அமோக வெற்றியைத் தந்தது. இன்றுவரை அசுரபலத்தோடு கூடிய ஆளுங்கட்சி என்ற விதத்தில் அதுதான் சாதனை. 77ல் உல்டா. 80ல் யூ-டர்ன். 84லும் இந்திரா அனுதாப அலை, எம்.ஜி.ஆர். படுத்துக்கொண்டே ஜெயிக்க உதவியது.

89ல் மட்டுமே தேர்தல் வெற்றியில் கூட்டணிக்கு பெரிய பங்கில்லை. 91ல் ராஜீவ், சொல்லவே வேண்டாம். 96ல் த.மா.கா.வின் உதயம், உதயசூரியனை மலரச் செய்தது. 2001ல் அதிமுகவின் மெகா கூட்டணி புதிய 'கூட்டணி' ட்ரெண்டினை (முன்பே 98 பாராளுமன்றத் தேர்தலில் டிரைலர்) முன்வைத்து வென்றது. 2006ல் உல்டா. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் அவசியம் குறித்து அறிந்துகொள்ள, மொத்தமாக இவ்வளவு தெரிந்துகொண்டால் போதும்.

கூட்டணி மட்டுமல்ல. பிரச்சினைகள் அடிப்படையிலும் தேர்தல் முடிவுகள் வருவதுண்டு. 67ல் தமிழுக்கான உரிமை, 77ல் கலைஞர் மீதான ஏமாற்றம், 96ல் ஜெ. மீதான அதிருப்தி, 2001ல் பணப்புழக்கம் இல்லாமை என்று முக்கியமான சிலவற்றை குறிப்பிடலாம்.

கூட்டணி, பிரச்சினைகள் - இவை இரண்டு மட்டுமன்றி இன்னும் ஏராளாமான காரணிகள், நம்மை ஆளப் போவது யாரென்று தீர்மானிக்கக் கூடிய விஷயங்களாக இருக்கின்றன.

80ல் ஆட்சியைக் கவிழ்த்து விட்ட அனுதாப அலை எம்.ஜி.ஆருக்கு கைகொடுத்தது. 84ல் அரசின் சமூகநலத் திட்டங்கள் சிலவற்றை முன்வைத்து செய்யப்பட்ட பிரச்சாரங்களும் அவருக்கு பலனளித்தது போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்லாட்சியை முன்வைத்து 2001ல் திமுக செய்த பிரச்சாரம் எடுபடவில்லை என்பதும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

2011 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது? முதல்வரை முடிவு செய்யப்போகும் காரணியாக எது அமையும்?

- தொடர்ச்சியாக அலசுவோம்

23 நவம்பர், 2010

நகரம் மறுபக்கம்

பரபரவென்று நகரும் காட்சிகள். பிரேம்-பை-பிரேம் உழைத்து செதுக்கிய சீன்கள். ஃபாரின் கனவுப் பாடல்கள் இல்லை. பஞ்ச் டயலாக்குகள் இல்லை. பத்து பேரை தூக்கிப் போட்டு பந்தாடும் பம்மாத்து ஆக்‌ஷன் இல்லை. சுந்தர்.சி-யை வைத்து மற்ற இயக்குனர்கள் எப்படியெல்லாம் படமெடுப்பார்களோ, அப்படியெல்லாம் இந்தப் படம் இல்லவே இல்லை. ரியாக்‌ஷனே தரமுடியாத தன்னுடைய முகவெட்டுக்கு ஏற்றமாதிரியாக 'கேட் செல்வம்' பாத்திரத்தை வடிவமைத்து கச்சிதமாக 'கோல்' போட்டிருக்கிறார்.

சொந்தப்படம் என்பதாலோ என்னவோ, 'பக்கா'வாக திட்டமிட்டு பலாப்பழம் மாதிரி பந்தாவான படத்தை எடுத்திருக்கிறார். பதினைந்து கால ஆண்டு அனுபவம் தந்திருக்கும் செய்நேர்த்தி படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது. வெல்டன் சுந்தர்.சி.

சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகம் மாதிரி கிட்டத்தட்ட இருக்கிறது. அதே டெம்ப்ளேட் கதை. படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ். 'நாடோடி' ஸ்டைலில் இண்டர்வெல் பிளாக்குக்கு ஒன்றும், படத்தின் முடிவுக்கு மற்றொன்றும். சிறையில் இருந்து வெளியே வந்து திருந்தி வாழ நினைக்கும் கேங் லீடருக்கான பிரச்சினைகள். காவல்துறையில் பணியாற்றும் சில ஓநாய்களின் கருப்புப் பக்கம். துறைமுக 'சரக்கு' கடத்தல் கசமுசா. துப்பாக்கி. போட்டுத் தள்ளுதல் என்று சரசரவென்று ஹாலிவுட் பாணி திரைக்கதை.

படத்தின் முதல் பாகம் 'வீக்' என்று சுந்தர்.சி-க்கே தெரிந்திருக்கிறது. வடிவேலுவை வைத்து ஒப்பேற்றுகிறார். திரைக்கதையின் திடீர் ட்விஸ்ட்டுகள், காமெடி டிராக்குக்கும் அமைக்கப்பட்டிருப்பது தமிழுக்கு ரொம்பவே புதுசு. பொதபொதவென ஊதிவிட்ட வடிவேலு உடலை மூலதனமாக்கி காமெடி செய்கிறார். ஒரு கட்டத்தில் சிரித்து சிரித்து வயிறு வெடித்துவிடுமோவென்று அஞ்சி 'தம்' அடிக்க வெளியே செல்லக்கூடிய அளவுக்கு தடாலடி காமெடி. பர்ஸ்ட் ஹாஃப்பின் பெரும்பகுதியையும் வடிவேலுவின் தொப்பையே தனியாக நின்று சுமக்கிறது.

பாடல்கள் ரொம்ப சுமார் என்பதை இயக்குனர் உணர்ந்திருக்கிறார். புத்திசாலித்தனமாக எல்லா பாடல்களுக்கும் இடையே காட்சிகளை சொருகி, ரசிகனுக்கு ஏற்படவிருந்த அலுப்பையும், ஆயாசத்தையும் தவிர்க்கிறார்.

ஒரு சாதாரணக் காட்சி. சுந்தர்.சி. ஆட்டோவில் போகிறார். ஆட்டோ நிற்கும்போது 'டயருக்கு' அடியில் கேமிராவை வைத்து 'பிரேக்' அடிக்கிறார்கள். காட்சி கலக்கலாக 'ஜெர்க்' ஆகிறது. இம்மாதிரியான டெக்னிக்கல் இண்டெலிஜென்ஸ் படம் முழுக்க எல்லாக் காட்சிகளிலும் விரவிக் கிடக்கிறது.

படத்தின் சுவாரஸ்யத்துக்கு 'காஸ்டிங்' ஒரு முக்கியக் காரணம். ஹீரோவின் போலிஸ் நண்பராக வரும் போஸ் வெங்கட்டின் மீசை கூட வில்லத்தனத்தோடு நடிக்கிறது. இவரும் பாண்டிச்சேரி பாயாக வரும் சீனிவாசனும்தான் படத்தின் ரியல் ஹீரோக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் சீனிவாசன், சில நிமிடங்களே தோன்றினாலும் பல வருடங்களுக்கு நினைவுகூறத்தக்க நடிப்பை தந்திருக்கிறார்.

க்ளைமேக்ஸ் சோகம் தேவையற்றது. இனி 'சுபம்' போட்டு ஒரு நல்ல கமர்சியல் தமிழ்ப்படம் முடியும் நாள் எந்நாளோ? பருத்திவீரனின் ஆண்டி-க்ளைமேக்ஸ் ஜூரம் தொடர்ந்துகொண்டே போகிறது.

அனுயாவைப் பற்றி ஒரு பத்தி எழுதாவிட்டால் இந்த விமர்சனம் எழுதியவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது. சின்ன முகம். ஒடுங்கிப் போன உல்லான் கண்கள். மெகா சைஸில் (34? or 36?) கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பிரதேசம். இடுப்பு சைஸ் 28 தானிருக்கும். ஆல்ஃப்ஸ் மலை வண்ண தேகம். விரிவாக பி.எச்.டி. செய்யுமளவுக்கு ஆராயப்பட வேண்டிய சமாச்சாரமான குண்டுமல்லி மொக்கு வடிவ தொப்புள். அந்த மழைப்பாடல் காட்சியில் தாராள முதுகு காட்டி, திரும்பிப் பார்த்து ஒரு விழிவீச்சு கொடுக்கிறார் பாருங்கள். 87 வயது இளைஞர்களுக்கு கூட சித்தப்பிரமை பிடித்துவிடும். ச்சே.. க்ளைமேக்ஸுக்கு முன்பாக சுந்தருக்கு ஒரு லிப்-டூ-லிப். பொறாமையாகவும், ஆற்றாமையாகவும் இருக்கிறது. அனுயா ஐ லவ் யூ. 'ம்'மென்று சொல்லுங்கள். நீங்கள் போட்டிருக்கும் ப்ளூகலர் ஜாக்கெட்டின் பித்தளை ஊக்காக மாறி, எஞ்சிய வாழ்நாளை கழித்து விடுகிறேன். (அன்பார்ச்சுனேட்லி பேக் ஓபன், இட்ஸ் ஓக்கே)

நகரம் மறுபக்கம் – தவிர்க்க இயலாத படம். தமிழ் சினிமாவுக்கு ரியல் ஆக்சிஜன்.

19 நவம்பர், 2010

இடியுடன் கூடிய பலத்த மழை!


வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் என்னதான் செய்கிறார்கள்?
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட ஒரு ரிப்போர்ட்...


"கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கடலுக்குச் செல்லும் மீனவர்கள்..." – இப்படியாக வானிலைச் செய்திகளை கேட்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஒருவர் கூட இல்லை இல்லையா?

ஜோசியம் கூட குத்துமதிப்பாக சொல்லிவிடலாம். கண்ணுக்கு தெரியாத ஈரக்காற்று மழைமேகமாக உருவெடுக்கும், புயலாக வீசும் என்பதை எப்படி கணிக்கிறார்கள்? வாருங்கள். வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு நேராகவேப் போய்ப் பார்க்கலாம்.

இந்திய வானிலைத் துறை

இந்திய வானிலைத் துறை மொத்தம் 6 மண்டலங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தலைவர் டெல்லியில் இருக்கிறார். பெயர் டாக்டர் ஏ.வி.எம்.அஜித்தியாகி. நாம் இருப்பது தெண்மண்டல எல்லையில். வானிலைத் துறையின் தென்மண்டல உபத்தலைவர் டாக்டர் ஒய்.ஈ.ஏ.ராஜ். ஊடகங்களில் நாம் அடிக்கடி வாசிக்கும், கேட்கும் பெயர் ரமணன். இவர் நம் வட்டாரப் புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர்.

கிட்டத்தட்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு வானிலை மையம் இருக்கிறது. இதற்கு கீழே புயல் கண்டறியும் ராடார் நிலையம் மற்றும் வானிலை அலுவலகங்கள் இயங்குகின்றன.

இந்தியாவில் தரைநிலை கண்காணிப்பு கூடங்களின் எண்ணிக்கை 559. தமிழகத்தில் மட்டும் 39. இந்திய அளவில் வளிமண்டல வானிலை கண்காணிப்பு 99 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, காரைக்கால் ஆகிய 3 இடங்களிலும் செயல்படுகிறது.

வானிலைத் துறையின் எல்லா அமைப்புகளும், உலக வானிலை ஆய்வுக் கழகத்தின் (WMO) தர அளவுகோலின்படியே தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கிறது. எனவே அயல்நாடுகளில் துல்லியமாகவும், நம் நாட்டில் குத்துமதிப்பாகவும் வானிலை கணிக்கப்படுகிறது என்ற ஒரு பரவலான எண்ணம் முழுக்க முழுக்க தவறானது. உண்மையைச் சொல்லப் போனால் நம்முடைய தொழில்நுட்பம் அதிசமீபத்திய சர்வதேசத் தரம் கொண்டது. நம் அறிவியலாளர்கள் தலைசிறந்த அறிவும், அனுபவமும் கொண்டவர்கள். உலக வானிலை ஆய்வுக் கழகத்தின் தொடக்கக்காலத்திலிருந்தே நாம் அதில் உறுப்பினராக இருக்கிறோம்.

வானவியல் ஆராய்ச்சிக்கான பிரத்யேக அமைப்பு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில்தான் 1789ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 1792ல் இருந்து வானிலைத் தகவல்களை ஆராய்ந்து வருகிறது. இந்திய வானிலைத் துறை எனும் அமைப்பே 1875ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்திய வானிலை ஆராய்ச்சிக்கே நாம்தான் முன்னோடிகள்.

வானிலையை ஆராய்வது எப்படி?

மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் உதவி வானிலை விஞ்ஞானி கே.வி.பாலசுப்பிரமணியன் விளக்குகிறார் :

"வளிமண்டல வானிலையை கண்காணிக்க நாம் பலூனை பயன்படுத்துகிறோம். குழந்தைகள் விளையாடும் சிறிய பலூன்கள் அல்ல. ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட விசேஷ பலூன்கள். கண்காணிப்பு நிலையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 4 முறை இந்த பலூன்களை பறக்க விடுவோம். அவை பறக்கும் வேகம், திசை, உயரம் என்று பல அளவுகோல்களையும் தியோடலைட் டெலஸ்கோப் என்ற கருவி மூலமாக கண்காணிக்கிறோம்.

இதன் மூலமாக கிடைக்கும் தகவல்களை கணித அடிப்படையில் கணக்கிட்டு வளிமண்டல மாற்றங்களை வல்லுனர்கள் அறிகிறார்கள். இந்த பலூன்கள், தரையிலிருந்து 7 கி.மீ. வரையிலான வான்நிலவரங்களை அறிய உதவும்.

மற்றொரு 'பலூன்' முறையும் உண்டு. இந்த பலூனில் நிறைய மின்னணுப் பொருட்கள் இருக்கும். வெப்பநிலை, திசைவேகம், அழுத்தம் தொடர்பான தகவல்களை இந்த முறையில் துல்லியமாக பெறமுடிகிறது. தினமும் 2 முறை இந்த பலூன்கள் பறக்க விடப்படும். கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் முறை இதுவென்பதால் இந்தியாவில் 35 இடங்களில் மட்டுமே சென்சார் பொருத்திய பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, காரைக்கால் நகரங்களில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தினமும் இந்த இரண்டு முறைகளையுமே தவறாமல் கட்டாயம் கடைப்பிடிக்கிறோம். உலகம் முழுவதுமே குறிப்பிட்ட நேரங்களில்தான் இந்த வளிமண்டல மாற்ற கணக்கெடுப்பு நடத்தப்படும்"

இந்த பலூன் முறை மட்டுமல்ல. அதிநவீன ராடார், செயற்கைக்கோள், தானியங்கி வானிலை கண்காணிப்பு கூடங்கள் போன்ற பலவற்றின் தகவல்களையும் வானிலை வல்லுனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

புயல், மழை, எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் இருக்குமேயானால் அது மழை, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலாக மாற்றம் பெறுகிறது. அதிக காற்றழுத்தம் தெளிவான வானம், வெப்பமான நிலைக்கு காரணியாக இருக்கிறது. 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அனுமானிக்கப் பட்டால், அது புயல் எச்சரிக்கையாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தால் அறிவிக்கப்படுகிறது. புயல் வீச மழை பெய்ய வேண்டியது அவசியமேயில்லை. ஆனால் பெரும்பாலும் புயல் வீசும்போது மழையும் சேர்ந்தே வருகிறது.

வளிமண்டல சலனங்களை பலூன், செயற்கைக்கோள், ராடார் உள்ளிட்ட முறைகளில் அறிந்துகொள்வதால் மட்டுமே வானிலையை துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. மனித அறிவுக்குதான் இங்கே முதலிடம்.

அனுபவம், புவியியல் அறிவு, வானிலை அறிவு, காலநிலையியல் அறிவு ஆகிவற்றை ஒருங்கேப் பெற்ற வல்லுனர்களால் மட்டுமே, அடுத்த 48 மணிநேரத்துக்கு என்ன நடக்கும் என்பதை கணித்துச் சொல்ல முடியும். இவர்களுக்கு கடந்த கால இயற்கை மாற்றங்கள் குறித்த வரலாறும் தெளிவாக தெரிந்திருப்பது அவசியம்.

பொதுவாக வானிலைக்கு எல்லையே இல்லை. சர்வதேச நாடுகள் எந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறதோ இல்லையோ வானிலை தகவல் பரிமாற்றத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. அக்கம் பக்கம் நாடுகளில் இருந்து கிடைக்கும் வானிலைத் தகவல்கள் புயல் மாதிரியான இயற்கைச் சீற்ற காலங்களில் நமக்கு பெரிதும் பயன்படுகிறது.

புயல் வரப்போகிறது என்று தெரிந்ததுமே நாட்டை எச்சரிக்கும் அதிமுக்கியமான பணி வானிலைப் பணியாளர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கலாம் என்ற எச்சரிக்கையை புயல் தாக்கப் போகும் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சில நேரங்களில் தாசில்தார்களுக்கும் கூட.. அந்தந்த வட்டார மொழிகளில் அனுப்புகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மின் தடை ஏற்படலாம். கேபிள்கள் அறுந்து தொங்கலாம். எனவே தொலைபேசி, மின்னஞ்சல், ஃபேக்ஸ் போன்ற தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்துவது அவ்வளவு உசிதமானது அல்ல. எனவே செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலமாக வானிலைப் பணியாளர்கள் மேற்கண்டவர்களை தொடர்பு கொள்கிறார்கள்.

இவை மட்டும்தானா?

புயல், மழை, வெயில் இவற்றை கணிக்க மட்டும்தான் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நமக்குத் தெரியாமலேயே பலவகைகளில் நாம் வானிலைத் தகவல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, விமானப் போக்குவரத்தைச் சொல்லலாம். வானிலைத் தகவல்கள் இல்லாமல் ஒரு விமானம் பறப்பதோ, இறங்குவதோ கிடையாது. விமான நிலையங்களில் ஒரு வானிலை அலுவலகம் இருப்பது கட்டாயம். இல்லை. இவர்கள் தரும் தகவல்களை கொண்டுதான், எவ்வளவு எரிபொருள் விமானத்தில் எடுத்துச் செல்வது போன்ற விஷயங்கள் கூட தீர்மானிக்கப்படுகிறது. வானிலைத் தகவல்கள் இல்லாமல் வான்வழிப் போக்குவரத்து சாத்தியமே இல்லை.

வேளாண் விஞ்ஞானிகளுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும் பருவநிலை குறித்த கணிப்புகளை தருவதன் மூலமாக எந்தப் பருவத்தில், என்ன பயிரிடலாம் என்பதை தீர்மானிக்க முடிகிறது.

கடல்வழி போக்குவரத்துக்கும், மீனவர்களுக்கும் வானிலை ஆய்வுகள்தான் கலங்கரை விளக்கம். விண்ணில் ராக்கெட் பறக்க விடுவதற்கு கூட வானிலை ஆலோசனை கட்டாயம். குறிப்பிட்ட பகுதியில் தொழிற்சாலை அமைக்கலாமா என்பதற்கும் அரசுக்கு நீண்டகால பருவமாற்ற கணிப்பினை தருகிறார்கள். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, வானிலைத்துறையின் அறிவு பயன்படுகிறது. நில அதிர்வு தொடர்பான விஷயங்களையும் கண்காணிக்கிறார்கள். வறட்சி மாவட்டங்களை அரசுக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.

இவ்வளவெல்லாம் ஏன்? பஞ்சாங்கம் தயாரிப்பது கூட வானிலைத்துறையின் கொல்கத்தாவில் இருக்கும் ஒரு கிளை அமைப்புதான். அரசு காலண்டர்களில் இந்தப் பஞ்சாங்கம்தான் பயன்படுத்தப் படுகிறது.

இப்படியே நாம் உண்ணும் உணவில் தொடங்கி, இன்னும் எண்ணற்ற ஏராளமான தளங்களில் இந்திய வானிலைத் துறையின் சேவையினை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக இயற்கைச் சீற்றங்களின் போது நாட்டை எச்சரித்து காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பினை சுமந்தவர்கள் இவர்கள்.

வானிலை வேலைக்கு வர்றீங்களா?

இந்திய வானிலைத் துறையில் சுமார் 1800 பேர் நேரடியாகப் பணிபுரிகிறார்கள். கிட்டத்தட்ட 7000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இயற்பியல் இளங்கலை மற்றும் முதுகலை, பொறியியல் படித்தவர்களுக்கு இங்கே வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தவர்களுக்கு நேர்முகத்துக்கு அழைப்பு விடுத்து ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். கொஞ்சம் பெரிய பதவிகளுக்கு பணியாளர் தேர்வு எழுத வேண்டும்.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, வெவ்வேறு விதமான புவியியல் அமைப்பு கொண்ட இந்த தேசத்தில் வானிலைத்துறையில் பணிபுரிவதற்கு திடமான மனதும், சுறுசுறுப்பான உடலும், கூர்மையான அறிவும், முன்னெச்சரிக்கை மனோபாவமும் அவசியம். பேரிடர் காலங்களில் ஒரு வாரத்துக்கு கூட தொடர்ச்சியாக பொட்டுத் தூக்கம் இல்லாமல், பசிமறந்து பணியாற்றிட தெம்பு வேண்டும்.

துரதிருஷ்டவசமாக மிகக்குறைந்த அளவு பணியாளர்களை வைத்தே வானிலைத்துறை சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது. 1997ஆம் ஆண்டிலிருந்தே புதியதாக பணிநியமனம் இல்லாததால், ஒவ்வொருவரும் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மனதுவைத்து புதியதாக ஆட்களை நியமித்தால் வானிலைக் கணிப்புகளின் துல்லியமும், சேவையும் இன்னமும் பன்மடங்கு கைகூடும்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

கணிப்பு ஏன் பொய்க்கிறது?
- எஸ்.ஆர். ரமணன், இயக்குனர், வட்டாரப் புயல் எச்சரிக்கை மையம் –

பொய்க்கிறது என்ற சொல்லை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எங்களது கணிப்பு பொய்ப்பதில்லை. கடல், நிலம் சார்ந்த நிகழ்வுகளையும், மாற்றங்களையும் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு கவனிக்கிறோம். அவை அடுத்த சில நாட்களில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை கணித்து நாட்டுக்கு சொல்கிறோம். 'மாற்றம்' என்றாலே மாறிவருவது தானே இயல்பு? நேற்றைய காற்றின் மாற்றத்தை கணித்து நாளைக்கு ஏற்படக்கூடிய மாற்றத்தை பல்வேறு காரணிகளை முன்வைத்து, அனுபவம் கொண்டு யூகிக்கிறோம். நாளை அது கொஞ்சம் வேறுமாதிரியாக மாறினால் அது இயற்கையின் மாற்றமே தவிர, எங்களது கணிப்பு தவறு என்பதாகாது.

மேலும் நாங்கள் ஒரு பொறுப்பான அரசு நிறுவனம். தேவையில்லாமல் மக்களையும், நாட்டையும் பயமுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஆபத்து இருக்குமாயின், அதைச் சொல்லி எச்சரிக்காமல் இருக்கவும் முடியாது. புயலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருந்தால், அதை சொல்லியே ஆகவேண்டும். உடமைகளையும், உயிர்களையும் காப்பது அவசியமில்லையா?

வானம் இருட்டிக் கொண்டிருந்தாலே நாங்கள் புயல் எச்சரிக்கை தந்துவிட முடியாது. சலனம் என்பதுதான் புயல். மேகம் புயல் அல்ல. நாங்கள் எடுக்கும் கணக்கீடுகள் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலிருந்தும் தினமும் கணிப்புகளைப் பெற்று, அலசி ஆராய்ந்து நம் பிரதேசத்துக்கான கணிப்புகளை வெளியிடுகிறோம். இது சாதாரண காரியமல்ல.

நாம் வெப்ப மண்டலத்தில் வசிக்கிறோம். இங்கே மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். எனவேதான் நம்முடைய கணிப்பு சிலமுறை மாறுகிறது. மிதவெப்ப மண்டலங்களில் மாற்றங்கள் குறைவு என்பதால் அங்கே கணிப்புகள் துல்லியமானதாக தெரியும். ஆயினும் உலகம் முழுக்க ஒரே தொழில்நுட்பத்தைதான் வானிலை நிலையங்கள் பயன்படுத்துகின்றன.

நம்முடைய கணிப்பு முழுமையாக அறிவியல் சார்ந்தது. அறிவியலால் இயற்கையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. கணிப்பு பொய்க்கிறது என்று மட்டும் இன்னொருமுறை சொல்லாதீர்கள். வேண்டுமானால், சில நேரங்களில் இயற்கை அறிவியலை வெல்கிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

மழை தருமா இந்த மேகம்?
நீங்களும் கணிக்கலாம்!


இந்திய வானிலைத் துறையின் இணையத்தளம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை புதுப்பிக்கிறது. வானிலை கணிப்புகள், எச்சரிக்கைகள் போன்றவற்றை நீங்கள் உடனுக்குடன் இதில் தெரிந்துகொள்ளலாம். செயற்கைக்கோள் படங்களை தொடர்ச்சியாக கவனித்து வந்தாலே, நீங்களே கூட அம்பாசமுத்திரத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபொழியும் என்று உள்ளூர் அமெச்சூர் வானிலைத் தகவலாளராக மாறிவிட முடியும்.

இந்திய வானிலைத் துறையின் இணையத்தளம் : www.imd.gov.in

மண்டல வானிலை நிலையம், சென்னை இணையத்தளம் : imdchennai.gov.in

(நன்றி : புதிய தலைமுறை)

18 நவம்பர், 2010

ஒன்று, இருவன், இளமை, 3ஜி!

ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன்.

வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"

+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.

தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"

கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.

ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?

ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.

+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.

குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.

96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?

கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.

ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். பதலக்கூர் சீனிவாசுலுவாக காமம் கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அப்போது நான் 2ஜி. ஐ மீன் செகண்ட் ஜெனரேஷன். 90களின் மத்தியில் வெகுஜன இதழ்களில் ஏற்படுத்தப்பட்ட அப்படியொரு நடை/மொழித்தாக்க அலை, பின்னாளில் தொடராக வெளிப்பட்டதாக ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை (என்னுடைய வாசிப்பளவில்). ஜூ.வி.யின் ஆதிமங்கலத்து விசேஷங்களையும் தவிர்க்க முடியாததாக சொல்லலாம். ஆனால் இது வேற Genre. அவ்வப்போது இதே மாதிரியான ஃபீலிங்ஸ் ஒன்றிரண்டு இடங்களில் கிடைக்கும். உதாரணத்துக்கு சென்ற ஆண்டு தீபாவளி ஆ.வி. இதழில் ராஜூமுருகன் எழுதிய 'தீபாவலி' சிறுகதை.

இப்போது நடைபெறுவது 3ஜி. இடைப்பட்ட காலத்தில் சாஃப்ட்வேர் பீட்டர்கள் பெருகிவிட்ட காலக்கட்டம். இந்த தலைமுறைக்கான மொழி எதுவென்பதில் பெருத்த குழப்பத்தில் இருந்தேன். விடையாக ஆனந்தவிகடனில் ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. 'இருவன்' எழுதும் 'ஒன்று'.

'ஒன்று' முதல் அத்தியாயத்திலேயே ஆச்சரியப்படுத்தியது. தலைப்புக்கு ஒரு நீண்ட உபத்தலைப்பு. "ஒருமுறைதான் காதல் வரும். தமிழர் பண்பாடு. அந்த 'ஒன்று' எது என்பதுதான் கேள்வி இப்போது. கதை இப்படி தொடங்குகிறது. ஜெஸ்ஸி என்ற இளம்பெண்ணின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மெசேஜ் "முதல் காதலை மறக்கவே முடியாது. கடைசிக் காதலை மறுக்கவே முடியாது". வரிசையாக காய்ந்துப்போன தமிழ் இளைய சமூகத்தின் 'மொக்கை டெம்ப்ளேட்' பின்னூட்டங்கள். இதை வார்த்தைகளில் நீங்கள் வாசிக்க அசுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆ.வி.யின் லே-அவுட் டீம் கலக்கியிருப்பதை இதழில்தான் பார்க்க முடியும்.

சரி. தொடர் எதைப்பற்றி? குறிப்பாக இதைப்பற்றி என்று சொல்ல முடியவில்லை. எதைப்பற்றி வேண்டுமானாலும், அது பாட்டுக்கு அசால்ட்டாக ஓடுகிறது. ஆண்கள், பெண்கள், காதல், காமம்... குட்டிக் கதைகளாய், நீண்ட கதைகளாய், சம்பவங்களாய், பிரசங்கமாய்... 'ஒன்று' ஒரு காட்டாறு. ஆனால் அடித்துச்செல்லவில்லை. அணைத்துச் செல்கிறது.

முதல் அத்தியாயத்தில் ஒரு காட்சி.

மொட்டை மாடி இரவு...

"நச்சுன்னு ஒரு கேள்வி.. ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் எப்போ... யாரோட? தோடா... சும்மா சொல்லுங்கப்பா!" நள்ளிரவில் நண்பனின் கண்களில் நட்சத்திரங்கள்.

- இப்படியாகத்தான் பயணிக்கிறது 'ஒன்று'.

தமிழ் மசாலா சினிமாவின் அதிரடி பஞ்ச் டயலாக்குகள் மாதிரி தொடர்முழுக்க ஆங்காங்கே கலக்கல் ஒன்லைனர்கள் தூவப்படுகிறது. உதாரணத்துக்கு "பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்!". இப்படியான கவித்துவம் ஒரு தொடரில் மழையாகப் பொழிந்து எத்தனை வருஷங்கள்?

கணேஷ் என்றொரு கேரக்டரை 'இருவன்' அறிமுகப்படுத்துகிறார். ஒரே ஒரு வாசகத்தில் அவனது தன்மையை உணரலாம். 'எட்டாங் கிளாஸ் படிக்கும்போதே, "ஆமாடா... எங்க அம்மாவும் எங்க அப்பாவும் அப்பிடிப் பண்ணதாலதேன் நான் பொறந்தேன். சும்மா, சாமி குடுத்துச்சு, சந்தையில வாங்கினேன்னு ஆளாளுக்கு டூப் விடுறாய்ங்கடா!" - ஆதி ரகசியத்தை அரை டிராயர் காலத்தில் போட்டு உடைத்தவன். கணேஷ் அப்படித்தான் எப்போதும்.'

இன்னொரு பத்தியில் இப்படி ஒரு வர்ணனை. 'நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்.' இளமைப் பிரவாகம் போதுமா?

1000 பக்கங்களில் நாவல் கூட எழுதிவிடலாம். 'ஒன்று' ஒரே ஒரு அத்தியாயம் எழுதுவதென்பது பத்தாயிரம் பக்கங்கள் எழுதுவதற்கு இணையானது. வாசிக்க எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ, அதைவிட பன்மடங்கு இதுபோன்ற தொடரை எழுதுவது கடினமோ கடினம். நீங்கள் வேண்டுமானால் இந்த மொழியில் எழுதிப் பாருங்கள், புரியும்.

தொடர் என்றாலும் வாரம் ஒரு கதை. சிறுகதைத் தொடர் என்று சொல்லலாம். வெறும் எழுத்து என்றில்லாமல் வடிவமைப்பு, ஓவியங்களிலும் 3ஜி ஆடியன்ஸை கச்சிதமாக குறிவைத்துத் தாக்குகிறது ஆ.வி., தொடரை எழுதும் 'இருவன்' யாரென்பதுதான் கேள்வி இப்போது. நடையை வைத்து யூகிக்க முடிகிறது என்றாலும், ஆதாரமின்றி 'இருவர்' பெயரை வெளிப்படையாக சொல்லலாமா என்று தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை மாதிரி குன்ஸாக லூசுப்பையன் மற்றும் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலா ஆகியவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ எழுதுகிறார்கள் என்று கிசுகிசுக்க வேண்டுமானால் முடியும்.

இனி, வேறு ஏதாவது இண்டர்வியூவில் "என்ன லட்சியம்?" என்று கேட்கப்பட்டால், ப்ரியா கல்யாராமனை சொல்வதா இருவனை சொல்வதா என்று எனக்கு குழப்பம் ஏற்படலாம்.

காதலும், காமமும் இளமையின் அடையாளம். முதுமைக்கு ஸ்வீட் மெமரீஸ். வடிவத்திலும், வரிகளிலும் 'ஒன்று' அள்ள அள்ள குறையாமல் எடுத்துத் தருவது இதைத்தான். இதுவரை 'மிஸ்' பண்ணியிருந்தாலும், இனிமேல் 'மிஸ்' பண்ணிடாதீங்க. ஏன்னா இத்தொடரில் ஏகப்பட்ட 'மிஸ்'ஸுங்க வர்றாங்க. 3ஜி ஜோதியில் நீங்களும் 'மிக்ஸ்' ஆகுங்க பாஸூ.

16 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம்

CAG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்' என்று சொல்லுவது தவறு. அரசுக்கான வருமான இழப்பு என்ற வார்த்தையை வேண்டுமானால் இப்பிரச்சினையில் பயன்படுத்தலாம். அவ்வறிக்கையின் படியும் கூட, இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ட்ராயின் நடைமுறைகளை – அதாவது 2ஜிக்கு ஏலம் இல்லை - தொலைத்தொடர்பு அமைச்சகம் சரியாகவே பின்பற்றி இருக்கிறது. 1998/99 காலக்கட்ட்த்தில் இருந்தே இந்த நடைமுறைதான் பா.ஜ.க. ஆட்சியிலும் கூட பின்பற்றப் பட்டது.

2ஜி என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையும், உரிமையும் கூட. 3ஜி மாதிரியான ஆடம்பரச்சேவை அல்ல இது. எனவே 2ஜி, 3ஜி இவற்றுக்கு இடையேயான நடைமுறைகளை பொதுமைப்படுத்தி பேசுவது தவறு. முந்தையது லாபநோக்கமற்ற சேவையை அடிப்படையாகவும், பிந்தையது லாபத்தை எதிர்நோக்கிய சேவையையும் கொண்டது. வீடியோ கால் உள்ளிட்ட லொட்டு லொசுக்குகள் 3ஜியில். மொபைல் போனில் பேசுவதற்கான அலைவரிசை 2ஜியில். இந்த அடிப்படை தெரியாதவர்கள்கூட 'ஸ்பெக்ட்ரம் - ஊழல்' என்றெல்லாம் பேசுவது வினோதமானது.

ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.

2ஜி என்ற விஷயம் 2007ஆம் ஆண்டிலேயே காலாவதியாகக் கூடிய தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தப் பரிணாமமான 3ஜியை பற்றி அப்போது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை CAG அறிக்கை குறிப்பிடும் பணத்தை முதலீடாக செலுத்தி வாங்க பைத்தியக்காரன் கூட தயாராக இருந்திருக்க மாட்டான்.

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோமே?

எந்திரன் திரைப்படம் வெளிவந்து 50 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' திரைப்படம் வெளியாக இருக்கிறது. 200, 300 ரூபாய் டிக்கெட் கட்டணமாக 'மன்மதம் அம்பு' பார்ப்பீர்களா? அல்லது ஓடித் தேய்ந்துப்போன எந்திரனுக்கு இந்த தொகையை செலவழிக்க நினைப்பீர்களா? எந்திரனுக்கு இன்று சாதாரணத் திரையரங்குகளில் 50 ரூபாய் வைத்தால்தான் ரசிகன் தியேட்டருக்கு வருவான். 'புதுப்படம்' என்ற ஹோதாவில் 'மன்மதன் அம்பு'வுக்கு 100, 200 என்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர்காரர்கள் நிர்ணயிக்க முடியும். – இதுதான் சார் ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் லாஜிக். எந்தத் தொகை நியாயமான தொகையோ, அந்தத் தொகைக்குதான் 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.

இந்தப் பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழைமக்கள் மொபைல் போன் வசதியை பெறக்கூடாது என்று மறைமுகமாக வலியுறுத்துகிறவர்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை CAG அறிக்கையின் படியான விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்குமானால் ஒரு நிமிடத்துக்கு ரூ.10/- என்ற அளவில் கூட மொபைல்போனுக்கான கட்டணத்தை நிறுவனங்களால் உயர்த்தியிருக்க முடியும். அப்போதுதான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும்.

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சந்தை விலையில் கிலோ பதினோரு ரூபாய் என்பதால், இந்த பத்து ரூபாய் பணம் ஊழல் செய்யப்பட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இந்த அடிப்படையில் பார்த்தால் 'பல்லாயிரம் கோடி ரூபாய் அரிசி ஊழல்' என்று ஜெயலலிதா உளறுவாரேயானால், தமிழக ஏழை மக்கள் அவரை காறி உமிழ மாட்டார்களா?

அரிசி எப்படி சந்தை விலையை விட பத்து மடங்குக்கும் கீழாக தமிழகத்தில் வழங்கப்படுகிறது? இது அரசு ஏழை மக்களுக்கு தரும் சலுகை, உரிமை. இதே அடிப்படையில் தான் 2ஜி சேவையையும் நாம் பார்க்க வேண்டும். நவீன உலகம் தொலைதொடர்பால் நிர்மாணிக்கப் படுகிறது. தேசத்தின் கீழ்த்தட்டு குடிமகன் வரைக்கும் இந்த வசதி கிடைத்தாக வேண்டும்.

இல்லை. நான் அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவன். நேர்மை, கருமை, எருமைதான் என்னுடைய கொள்கை என்று சொல்லுபவர்கள் சலுகை விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இவற்றின் சந்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்க வேண்டும்.

நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில், லெசென்ஸு வழங்குவதில் சில 'தள்ளு-முள்ளு' மேட்டர்கள் நிச்சயமாக நடந்திருக்கலாம். எந்த ஒரு அரசு தொடர்பான விஷயத்திலும் இது சகஜம்தான். ஆயினும் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை, யூக அடிப்படையில் கூறி, அவற்றை மக்கள் நிஜமென்று நம்புமளவுக்கு ஊடகங்கள் பூசி, மெழுகுவது என்பது ராஜா என்ற தனிநபருக்கு எதிரான மனோபாவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே? தென்மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழர் - அதிலும் ஒரு தலித்.. நாட்டின் முக்கியமான துறையை ஆண்டால் கோபம் வராதா என்ன? நியாயம்தானே?

நண்பர் பிரதீப் ஜெயப்பிரகாஷ் 'ஸ்பெக்ட்ரம்' குறித்த அவரது அவதானிப்புகளை ஒரு நீண்ட மடலாக ஆங்கிலத்தில் எனக்கு தந்திருக்கிறார். அவரிடம் வலைப்பூ இல்லை. மொழியாக்கம் செய்து வெளியிட முடியுமா என்று கோரியிருந்தார். அவரது வேண்டுகோளையேற்று சில 'சரக்குகளை' சைட் டிஷ்ஷாக இணைத்து இந்தப் பதிவு...

12 நவம்பர், 2010

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்

நவம்பர் 12, 2010. பிற்பகல் 3.00.

நாடு படுக்கையில் உச்சா போய்க் கொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட அந்த பழையப் புத்தகத்தை கையில் எடுக்கிறேன். 1986 நவம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் கழித்து ஒருவன் அவசர அவசரமாக இந்தப் புத்தகத்தை எடுத்து 2வது கதையை மட்டும் உடனே படிக்கப் போகிறான் என்று அப்போது வெளியீட்டாளர் நினைத்துப் பார்த்திருப்பாரா?

இப்போது என்னிடம் இருக்கும் இந்தப் பிரதிதான் அந்தப் புத்தகத்தின் கடைசிப்பிரதி. வேறு யாரிடமாவது சேகரிப்பில் இருக்கலாம். ஆனால் என் கையில் இருக்கும் பிரதி சிறப்புப் பிரதி. ஏனெனில் இது அந்த எழுத்தாளரின் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு பிரதி. படித்துவிட்டு பத்திரமாக அவரிடம் திருப்பிச் சேர்க்க வேண்டும்.

18வது பக்கத்தில் ஆரம்பிக்கிறது நான் தேடிய கதை. கதையின் தலைப்பு : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்.

'மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம்' – கதை முதல் வரியிலேயே தொடங்கிவிட்டது.

இரண்டாவது பத்தியில் கொட்டாவி விடாதீர்கள் என்று வாசகனை வேண்டி கேட்டுக் கொள்கிறார் எழுத்தாளர். கதை சுவாரஸ்யமாகப் போகும் என்பதற்கு உத்தரவாதமும் அளிக்கிறார். ஆனால் ஏற்கனவே படித்த இரண்டு பத்தியும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

இன்னும் இரண்டு பத்தி தாண்டினால் கதை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்கிறார். கதை என்றுதான் நம்பிப் படிக்கிறோம். இரண்டாவது பக்கத்தின் இரண்டாம் பத்தியில் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஓ! இது கதைக்குள் கதையோ.. ஏதோ மேஜிக், ரியலிஸம் என்கிறார்களே? அதுமாதிரியாக ஏதாவது வகையா? கொஞ்சம் பொறுங்கள். மீதியைப் படிப்போம்.

கிழிஞ்சது கோவணம். வாசிக்கப் போகும் கதையை எழுதியது, கதையை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இல்லையாம். அடச்சே! நம்ம எழுத்தாளர் ஒரு குமாஸ்தாங்க. அதுவும் பயந்தாங்கொள்ளி குமாஸ்தா. ஏதாவது அரசுக்கு எதிரா ஓரிரு வாக்கியம் வந்து, அதாலே பிரமோஷன் கிரமோஷன் கட் ஆயிடுமோன்னு பயப்படுறாரு.

அடுத்த பாரா கொஞ்சம் நீளமானது. கொஞ்சமென்றால் கிரவுன்சைஸ் புக்கில் மொத்தம் 56 வரிகள். போதுமா? 'கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ?' என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே புரட்சி? வெடித்ததுமே இந்த எழுத்தாளரைப் பிடித்து தூக்கிலிடுங்கள்.

அடடே. ஆரம்பிச்சிட்டாரு, இலக்கிய நையாண்டியை. சிறு பத்திரிகை ஆட்களோட தகராறே இதுதான். இடையிடையே நான் குடிமகனா, குமாஸ்தாவா, எழுத்தாளான்னு அவருக்குள்ளேயே தத்துவ விசாரணை.

இப்படியே போவுது கதை(?). மன்னிக்கவும். இன்னமும் கதையைத் தொடங்கவில்லை என்கிறார் எழுத்தாளர். அடுத்த அத்தியாயத்தில் தொடங்கும் என்கிறார். நம்புவோம். ஆனால் இந்தக் கதையை எழுத்தாளர் எழுதவில்லை என்று என்னை நம்பச் சொல்கிறார். நீங்களும் நம்புங்கள்.

சும்மா சொல்லக்கூடாது எழுத்தாளர் நல்லா ரயில் ஓட்டுறாரு. அதுவும் எக்ஸ்பிரஸ் ரெயில். இந்த 7 பக்கங்களை வாசிக்க 10 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. நான் கொஞ்சம் வேகமான வாசகன்தான். இருந்தாலும் மூச்சிரைக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு இடைவெளியில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பியாக வேண்டும்.

இதை எழுதி என்ன செய்ய? எழுத்தாளர் ஆன்லைனில்தான் இருக்கிறார். அவருக்கே அப்படியே அனுப்பிப் பார்க்கலாமா?

 
பிற்பகல் 3.39

நாடார் கடையின் பழைய குப்பையில் அகஸ்மாத்தாக கிடைத்த கதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறாராம் எழுத்தாளர். அகஸ்மாத்தாக கிடைத்த அந்த நோட்டுப் புக்கில் தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் ரொம்ப அழகா எழுதியிருக்காம்.

கதைக்கு தலைப்பு வைக்க அந்த கதையை எழுதிய எழுத்தாளர் (இந்த கதையை எழுதும் எழுத்தாளர் வேற என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளவும்) தலைப்புக்கு குழம்பியிருக்க வேண்டும் என்று இவர் யூகிக்கிறார். எழுதப்பட்ட அந்த கதையை அப்படியே இவர் கையெழுத்தில் பிரதியெடுத்து நமக்கு தரப் போகிறாராம்.

அய்யோ. இந்த அத்தியாயத்திலும் கதை ஆரம்பிக்கப் போவதில்லையா? ஆமாம். படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு காபி குடியுங்கள் அல்லது ஒரு சிகரெட் பிடியுங்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார். நோட் திஸ் பாயிண்ட். இந்தக் கதை எழுதும்போது எழுத்தாளர் ஒரு செயின் ஸ்மோக்கர். மிகச்சரியாக 15 ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்தமாக புகைபிடிப்பதை நிறுத்தியிருக்கிறார்.

எழுத்தாளரை மாதிரியே நானும் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள். அவர் சொன்ன ஆலோசனையை ஏற்று ஒரு 'தம்' அடித்து விட்டு வந்து கதையை மீண்டும் தொடர்கிறேன்.

இரண்டாவது பகுதி கதை 2 பக்கம் + 3 லைன் கொண்ட சிறிய அத்தியாயம். 3.41 தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து விட்டேன்.
 

பிற்பகல் 4.02

ஒருமுறைதான் காதல் வருமென்பது தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எதுவென்பதுதான் கேள்வி இப்போது. தத்துவம் சொல்லும் நேரமல்ல இது. விமர்சனம் எழுதும் நேரமென்றாலும் நம் எழுத்தாளர் மாதிரி கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதலாம் என்று எண்ணம்.

மேற்கண்ட தத்துவத்தை இந்தவார விகடனில் படித்தேன். தம் அடிக்கும் பெட்டிக்கடையில் மாட்டியிருந்த விகடனைப் புரட்டியபோது கிடைத்தது. விகடனில் என்னுடைய ஹாட்கேக் இருவன் எழுதும் பரபரப்புத் தொடர்தான். அது தொடர்கதையா தொடர்கட்டுரையா என்று விளங்காவண்ணம் புதுமையாக எழுதப்படும் எழுத்துத் தொடர்ச்சி மலைகள் எனலாம்.

சரி. நம் கதைக்கு வருவோம். 3.41க்கு முந்தைய அத்தியாயத்தை வாசித்து முடித்து, 4.02க்கு அடுத்த அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு தம் அடிக்க கிட்டத்தட்ட 19 நிமிடங்களா என்றொரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஒரு தம் + ஒரு காஃபி. மேலும் லிஃப்டில், ஏறி இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம். 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடைக்கும், டீக்கடைக்கும் சென்றுவர எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தயைகூர்ந்து மன்னிக்க வேண்டும்.

நேராக கதைக்கு வந்துவிடலாம்.

"ஆகாயம் வெளிர்நீலத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது" என்று மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அணிசேரா நாடுகளின் தலைவராக இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், ஒரு விழாவில் பேசப் போகிறாராம். அந்த விழாவில் சில வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதும் அவர் திட்டம்.

புறாவுக்கு எங்கே போனார்கள்?

தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டிய விஷயமிது. தலைமைச் செயலாளர் தனக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் புறாக்களை பிடித்து வரும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆசிரியரை செயலாளருக்கு எப்படி தெரியும்? செயலாளரின் மனைவிக்கு ஏற்கனவே ஆசிரியரை தெரியும். செயலாளரின் மனைவிக்கு எப்படி தெரியும்? ஏனெனில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பருகே ஆசிரியரும் வசிக்கிறார். வசித்தால் மட்டும் போதுமா? எப்படி பழகினார்கள்... இப்படியே சில பக்கங்கள். ஆசிரியரின் வினோதப் பழக்கம் ஒன்றும் விஸ்தாரமாக எழுத்தாளரால் (அதாவது குமாஸ்தா எழுதாளரால் அல்ல. பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய எழுத்தாளரால்) விவரிக்கப் படுகிறது. 'பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லைதானே?' என்று போகிறபோக்கில் சொல்லப்பட்டாலும், பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது தலைகீழாக தண்ணி குடிக்கும் செயல்தான் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகிறது.

ஒரு முடவன் வீட்டில் சில வெள்ளைப் புறாக்கள் இருக்கிறது. ஆசிரியர் கேட்கிறார். முடவன் மறுக்கிறான். தனது வாழ்வு ஜீவனம் புறாக்களால்தான் என்கிறான். எப்படி? அவன் புறாக்களை விற்பதில்லை. ஆனால் புறாக்கள் முடவனுக்கு சோறு போடுகின்றன. இங்கேதான் கற்பனைக்கும் எட்டாத கற்பனை எழுத்தாளருக்கு கை கொடுக்கிறது.

ஒருவழியாக அதிகாரப் பயமுறுத்தலை பயன்படுத்தி புறாக்களை ஆசிரியர் கைப்பற்றுகிறார். அதிபர் பறக்க விடுகிறார். பறக்க விடப்பட்ட புறாக்கள் திரும்ப தன் வீட்டுக்கு வருமாவென்று முடவன் ஆகாயத்தை அண்ணாந்துப் பார்க்கிறான். ஆகாயம் வெளிர்நீலமாக இருந்ததாம்.

ஒரு நிமிடம். எனக்கும் ஆகாயத்தை இப்போது அண்ணாந்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சன்னலை திறந்து எட்டிப் பார்த்துக் கொள்கிறேனே? அடடே. நிஜமாகவே இந்த நொடியில் சென்னையின் ஆகாயம் வெளிர்நீலமாக தான் இருக்கிறது.

வெளிர்நீலத்தில் தொடங்கி அதே வெளிர்நீலத்தில் முடிகிறது மூன்றாவது அத்தியாயம். ஒருவேளையாக கதை மூன்றாவது அத்தியாயத்திலாவது தொடங்கியது. 9 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை வாசிக்க 9 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.

பரபரப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் க்ளைமேக்ஸுக்கு போவோமா?


பிற்பகல் 4.30.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் அல்லது எனக்கு அப்போது தெரியவில்லை. கதைக்குள் கதை போன அத்தியாயத்திலேயே முடிந்துவிட்டது.

நான்காவது அத்தியாயம் முழுக்க எழுத்தாளரின் உள்ளொளி தரிசனம். இந்த அத்தியாயத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். யாரோ எழுதிய கதை அல்ல இது. இவரே சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார். ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை கிண்டலடிக்கும் சுதந்திரம் இருந்ததை-இருப்பதை மெச்சிக் கொள்கிறார். 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை, இன்னமும் நீடிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு நமக்கு நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.

வாழ்க்கையை நாம் எப்படி எதிர்ப்பார்க்கிறோம். எதிர்ப்பார்ப்பில் நமக்கு எத்துணை மடங்கு தீவிரம் இருக்கிறதோ, அத்துணை மடங்கு பலமாக அடி விழும் என்று எச்சரிக்கிறார் எழுத்தாளர். அதே நேரத்தில் மனிதனுக்கு அத்தியாவசையமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை என்றும் குறிப்பிடுகிறார். கடவுள் அல்லது லட்சியத்தை நம்பலாம் என்பது அவர் சிபாரிசு. கடவுளை நம்பாதவன் லட்சியத்தை தீவிரமாக நம்புவான் என்று எழுத்தாளர் நம்புகிறார். ஏதேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக தோன்றுகிறதாம்.

மூன்றாவது அத்தியாயத்தில் குறியீடுகளாக எழுதிய ரோஜா, ரத்தச் சிவப்பு ஆகிய புரட்சி (அ) அதிகாரத்துக்கு எதிரான எழுத்துகளை சிலாகிக்க இந்த அத்தியாயத்தில் எழுத்தாளருக்கு மனமில்லை. நிஜமாகவே ஜனநாயகத்தை கிழித்து தோரணம் கட்டுவது அவருக்கு சலிப்பைத் தருகிறது. இன்று யார் வேண்டுமானாலும் சுலபமாக முற்போக்காகி விடலாமே என்று அலுத்துக் கொள்கிறார்.

எழுத்தாளரின் சமூகக்கோபம் குமுறலாக வெடிக்கிறது. அது பலதளங்களிலும் பரவுகிறது. கதையின் கடைசி சில வரிகளில் எழுத்தோடையாய் குறுகி சலசலவென்று நீட்டமாய், ஒழுங்காய் பாய்கிறது.

7 நிமிடங்களில் கடைசி அத்தியாயத்தை (8 பக்கங்கள்) வாசித்து முடித்தேன். இந்த அத்தியாயத்தையும் எழுத்தாளருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

-  விமலாதித்த மாமல்லன் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை (அ) குறுநாவலுக்கான விமர்சனம். அத்தியாயம், அத்தியாயமாக வாசித்து தனித்தனியாக தோன்றியதை விமர்சனம் போல எழுதுவது பைத்தியக்காரத்தனம். இந்தக் கட்டுரையை முழுக்க இப்போது படித்துப் பார்க்கும்போது, எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை அறியமுடிகிறது...