19 ஜூலை, 2013

துரத்தும் துயரம்

ரோம். 1960. ஒலிம்பிக். 400 மீட்டர். ஓட்டப்பந்தயம். மில்காசிங். ஆரம்பித்த சில நொடிகளிலேயே முடிவு தெரிந்துவிடுகிறது. “தங்கம் மில்காசிங்கின் பாக்கெட்டில்” என்று வர்ணனையாளர்கள் அலறுகிறார்கள். வெற்றிக்கோட்டுக்கு இன்னும் சில தம்படி தூரம்தான். அப்போதுதான் பன்னிரெண்டு வயதிலிருந்து சாத்தானாய் மில்காவை துரத்தும் துயரம், மீண்டும் அவரை துரத்துகிறது. கண்கள் இருள்கிறது. கால்கள் ஓடமறுக்கிறது. ஒலிம்பிக், தங்கம் எல்லாமே மறந்துவிட கடைசியில் கிடைத்தது நான்காவது இடம்தான். மயிரிழையில் வெண்கலம் நழுவினாலும் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்றுவரை ஒரு தனிநபர் இந்தியரின் சாதனை இதுதான். 45.73 நொடிகளில் முடிந்த அவரது ஓட்டம் இந்திய தேசிய சாதனையாக நாற்பது ஆண்டுகளுக்கு வீழ்த்த முடியாததாகவும் இருந்தது.

இந்த காட்சியில் இருந்துதான் விரிகிறது ‘பாக் மில்கா பாக்’. அதாவது ‘ஓடு மில்கா ஓடு’. மில்காசிங்கின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட கதையென்றாலும் சினிமாவுக்காக கொஞ்சம் லேசாக டிங்கரிங் பார்த்திருக்கிறார்கள். முன்பின்னாக நான்லீனியர் வடிவம்தானென்றாலும், அது எவ்விதத்திலும் பார்வையாளனை குழப்பாத அளவில் சீரான இடங்களில் காட்சிமாற்றத்தை சிறப்பாக செருகியிருக்கிறார்கள்.

மில்காவுக்கு பன்னிரெண்டு வயதாக இருக்கும்போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கிறது. அவர் பிறந்த குக்கிராமமான கோவிந்த்புரா, பாகிஸ்தானில் அமைகிறது. அங்கிருக்கும் சீக்கியர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒன்று; இஸ்லாமியனாக மாறிவிடு. இரண்டு; குழந்தை குட்டிகளை தூக்கிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடிவிடு. ஒரு லட்சம் பேர் கொண்ட மாபெரும் சைனியத்தை, நாற்பதே பேர் கொண்ட படையோடு குரு கோவிந்த் சந்தித்தார். அந்தப் பரம்பரையில் வந்தவர்கள் பயந்து ஓடுவதா என்று அங்கிருப்பவர்கள் போராடி பார்த்துவிட முடிவெடுக்கிறார்கள். எதிரிகள் வெல்கிறார்கள். கழுத்தை கூரிய வாள் வெட்டுவதற்கு சில நொடிகள் முன்பாக மில்காவின் அப்பா சொல்கிறார். “ஓடு மில்கா ஓடு”. திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிய அப்பாவின் அறிவுரையை மில்கா மீறுகிறார். திரும்பிப் பார்த்ததால்தான் கடைசிவரை அவரை அத்துயரம் துரத்திக்கொண்டே இருந்தது.

உயிர்வாழ்வதைத் தவிர்த்து வேறெந்த குறிப்பிட்ட லட்சியமும் இல்லாமல் இந்தியாவுக்கு அகதியாய் வந்தது. இங்கு பிற்பாடு உயிர்பிழைத்து வந்த அவரது அக்காவோடு சேர்ந்தது. சிறு அளவிலான திருடனாய் பொறுப்பற்று திரிந்தது. ராணுவத்தில் சேர்ந்தது. யதேச்சையாய் அவருக்குள்ளிருந்த ஓட்டத்திறமையை இராணுவ அதிகாரிகள் கண்டுகொண்டது. சிறுசிறு தடைகளை வென்று சரித்திரம் படைத்தது என்று படம் மில்காவின் எல்லா கோணங்களையும் இண்டு, இடுக்கு விடாமல் படம் பிடித்திருக்கிறது.

இது மில்கா சிங்கின் கதை மட்டுமல்ல. சீக்கிய இனத்தின் கதையும் கூடத்தான். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்த்தெழுந்து உருவான இயக்கம் அது. பிற்பாடு வெள்ளையர்களோடு சண்டை. சுதந்திரத்துக்குப் பிறகு பிரிவினை காரணமாக தாய்மண்ணில் இருந்து பல்லாயிரம் பேர் விரட்டப்பட்டார்கள். இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இல்லாமல் சீக்கியனாக அவர்கள் இருந்ததுதான் பிரச்சினை. அந்த அடையாளத்தை துறந்துவிடச்சொல்லி வன்முறையால் வலியுறுத்தப்பட்டார்கள். சர்தார்ஜி ஜோக்குகளை உருவாக்கி அவர்களை கேவலப்படுத்தினோம். தனிநாடு உரிமை கோரியவர்களை கொன்றுக் குவித்தோம். அவர்களது உயிரினும் மேலான பொற்கோயிலுக்குள் இராணுவத்தின் பூட்ஸ்கால்கள் நுழைந்தன. ஆனாலும் இன்று அயல்நாடுகளில் எல்லாம் கிளைபரப்பி இந்தியர்கள் என்றாலே சீக்கியர்கள் என்று சொல்லுமளவுக்கு எல்லாத்துறையிலும் உயர்ந்திருக்கிறார்கள். எந்த டெல்லியில் மூவாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டு, அந்நகரின் சாலைகளில் இரத்தவெள்ளம் ஓடியதோ.. இன்று அதே டெல்லியின் செங்கோட்டையை ஆளுபவர் ஒரு சீக்கியர்.

ஒரு சுயசரிதையை எப்படி திரைப்படம் ஆக்க வேண்டும் என்று எதிர்கால சினிமா மாணவர்களுக்கு ‘பாக் மில்கா பாக்’ பாடமாக கற்பிக்கப்படலாம். படம் பார்க்கும் பார்வையாளனும் மூன்று மணி நேரம் மில்காவோடே ஓடிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தும் துல்லியமான இயக்கம். இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹரா, இசையமைப்பாளர்கள் ஷங்கர் எஷான்லாய், ஸ்க்ரிப்ட் எழுதிய ப்ரசூன் ஜோஸி என்று வெயிட்டான டீம். கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் அப்பா யோக்ராஜ்சிங் கோச்சாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜுக்கும் முக்கியமான வேடம்.

ஐம்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் பெரும் மனித உழைப்பை கோரியிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம். மில்காவாக நடித்திருக்கும் ஃபரான் அக்தர் கிட்டத்தட்ட ஓர் ஓட்டப்பந்தய வீரனுக்குரிய எல்லா பயிற்சிகளையும் எடுக்க வேண்டியிருந்தது. இப்படத்தில் நடிப்பதே பெரும் கவுரம் என்றுகூறி சம்பளமாக வெறும் பதினோரு ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்தார் சோனம் கபூர். “நாங்கள் எல்லோருமே மில்காசிங்கின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டோம். எந்தக் கட்டத்திலும் எங்களுக்கு எதுவுமே கடினமாக தோன்றவில்லை” என்று ஃபரான் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். பட்ட சிரமங்களுக்கு பலன் இருக்கிறது. முதல் நான்கு நாட்களிலேயே நாற்பது கோடி ரூபாய் வசூலை அள்ளித்தந்து, ‘ஓடு மில்கா ஓடு’ என்று படத்துக்கு மாபெரும் வரவேற்பை தந்து ஓடவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரோம் ஒலிம்பிக்கில் நான்காவது இடம் கிடைத்த மனச்சோர்வில் மில்கா இருந்தபோது, இந்திய-பாக் நட்புறவு விளையாட்டுப் போட்டிகளுக்கு அவர் தலைமை தாங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நேரு விரும்புகிறார். ஏற்கனவே தன்னை துரத்திக் கொண்டிருக்கும் துயரத்திடமிருந்து தப்பித்து ஓடமுடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மில்கா பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. நேருவின் வற்புறுத்தலில் பாகிஸ்தானுக்கு சென்று, அவர்கள் மண்ணிலேயே அந்நாட்டின் தலைசிறந்த தடகளவீரரான அப்துல்காலித்தை வெல்வதுதான் க்ளைமேக்ஸ். இம்முறை ஓடத்துவங்கும் போதும் ரோமில் துரத்தியதைப் போலவே துயரம் மில்காவை துரத்துகிறது. முடிந்தவரை வேகமாக ஓடி சாதிப்பதின் மூலமாக மட்டுமே இத்துயரத்தை விட்டு விலகி நீண்டதூரம் ஓடமுடியும் என்கிற நிர்ப்பந்தத்தில் மில்கா ஓடுகிறார். அதுவரை அவர் ஓடிய ஓட்டங்களிலேயே சிறந்த ஓட்டம் அது. நானூறு மீட்டர் தொலைவை ஒரு மின்னல் கடப்பதைப் போல கடக்கிறார். போட்டியை நேரில் கண்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஜெனரல் அயூப்கான் மில்காவை ‘பறக்கும் சீக்கியர்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். வெற்றிக் கோட்டை தாண்டி வெற்றி பெற்ற மிதப்பில் மெதுவாக ஓடுகிறார் மில்கா. அவருடன் கூடவே பன்னிரெண்டு வயதில் பாகிஸ்தானை விட்டு உயிர்பிழைக்க ஓடிய சிறுவன் மில்காவும் ஓடுகிறான். இம்முறை அவனது முகத்தில் அச்சமோ, துயரமோ இல்லை. மாறாக வெற்றிக்களிப்பு தரும் மந்தகாச சிரிப்பு மட்டுமே உதட்டில் மிஞ்சுகிறது.

12 ஜூலை, 2013

969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்!

அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம்.
ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...


இஸ்லாமியர்களின் புனித எண் 786. அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (three jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராக கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக்குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.

பவுத்த தத்துவங்களை பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்கு திரும்பியிருக்கிறது. 1968ல் பிறந்த விராத்து பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003ல் கைது செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உலகம் முழுக்க பரவலாக பரப்பினார்.

விராத்துவின் விபரீத கருத்துகள்

· நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக்கொண்டு தூங்க முடியாது.

· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்

· கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக பவுத்த-இஸ்லாமிய கலப்பு.

· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.

· மதமும், இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.

· இஸ்லாமியரின் கடைகளில் எந்த பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.
மியான்மர் அதிபர் தைன் சைன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வினோதமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கே வசிக்கும் வங்காளர்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது மியான்மருக்கு இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்) நாடு கடத்துவதுதான் அவரது திட்டம். இதை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக 969 இயக்கம் மூலமாக புத்த துறவிகளை திரட்டி மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தினார் விராத்து. இதன் விளைவாக அடுத்த சில நாட்களில் ராக்கின் மாகாணத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினரிடையே பகை நீறுபூத்த நெருப்பாக கனன்றுக் கொண்டே இருந்தது. விளைவாக கடந்த மார்ச் மாதம் ஒரு பவுத்த துறவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். வெடித்தது வன்முறை வெடிகுண்டு. மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களின் கடை, வீடு மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டன. தீக்கிரையாயின. 969 தூண்டிவிடும் வன்முறையால் ராக்கின் மாகாணத்தில் மட்டுமே கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட இருநூறு இஸ்லாமியர் கொல்லப்பட்டு விட்டனர். உறவுகளை, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அகதிமுகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்திக்க விடாமல் மியான்மர் அரசாங்கம் அராஜகம் செய்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மெஜாரிட்டியான பவுத்தர்களின் ஆதரவோடு, சிங்கள அரசு 2009ல் விடுதலைப்புலிகளை மொத்தமாக துடைத்தெடுத்து வீழ்த்தியதற்குப் பிறகே ‘பவுத்த தேசியம்’ என்கிற கருத்துருவாக்கம் மியான்மரில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையாலோ, அரசாலோ தங்களுக்கு எந்த பாதுகாப்புமில்லை என்று இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் பல இஸ்லாமிய தொழிலதிபர்கள் ஏற்கனவே பறந்துவிட்டார்கள்.
இச்சூழல்களை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ‘டைம்’ பத்திரிகை 969 தலைவரான விராத்துவின் படத்தை அட்டையில் இட்டு ‘பவுத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்று தீவிரமான விமர்சனத்தை வைத்தது. பர்மாவின் பின்லேடன் என்றும் இவரை சுட்டிக் காட்டியிருக்கிறது. இக்கட்டுரையை தொடர்ந்து ‘டைம்’ பத்திரிகைக்கு மியான்மரில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மரின் அதிபர் தைன் சைன் 969 இயக்கத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். குறிப்பாக விராத்துவை பாதுகாக்கிறார். அரசால் அனுமதிக்கப்பட்ட வன்முறையாகவே இன்றுவரை இது நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைகளை மிஞ்சும் வகையிலான வெறியாட்டம் மியான்மரில் நிகழக்கூடும். அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த இனவன்முறையை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் நடுநிலையாளர்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

8 ஜூலை, 2013

சிங்கம்-2

ஜேம்ஸ்பாண்டு மாதிரி, சங்கர்லால் மாதிரி ஒரு யூனிக்கான கேரக்டர் என்பது தமிழ் சினிமாவுக்கு கனவு. தமிழ் சினிமாவுக்கு என்றில்லை. பொதுவாக இந்திய சினிமாவிலேயே தொடர்திரைப்படங்களை எடுக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை வெற்றிகரமாக நம் படைப்பாளிகளால் உருவாக்க முடியவில்லை. சினிமாவில் சீக்குவல் என்பதும்கூட தமிழில் அரிதிலும் அரிதான நிகழ்வுதான். ஜெய்சங்கர் காலத்தில் சாத்தியமாகியிருக்கக்கூடிய இதையும் அந்த காலத்திலேயே கோட்டை விட்டுவிட்டோம். உலகம் சுற்றும் வாலிபன் ‘ராஜூ’ கேரக்டரை வைத்தே, சீக்குவலாக ‘ஆப்பிரிக்காவில் ராஜூ’ எடுக்க எம்.ஜி.ஆருக்கு எண்ணம் இருந்தது. உ.சு.வா. படத்தின் எண்ட் கார்டாக ‘எமது அடுத்தத் தயாரிப்பு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்றும் அறிவித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில் சர்வசக்தி படைத்த சக்கரவர்த்தியான எம்.ஜி.ஆரால் கூட அதை செய்ய முடியவில்லை. தரை டிக்கெட் டைரக்டரான ஹரி இதை சாதித்திருக்கிறார்.

‘சிங்கம்’ தயாரிப்பில் இருந்தபோது ஹரிக்கு இந்த சீக்குவல் சிந்தனை வந்திருக்க வாய்ப்பேயில்லை. ‘துரைசிங்கம்’ பாத்திரம் நண்டு சிண்டுவில் தொடங்கி தாத்தா, பாட்டி வரை அனைவரையும் கவர்ந்துவிட்டதாலும், படத்தின் அதிரிபுதிரி வசூலும்தான் இந்த எண்ணத்தை அவருக்கும், துரைசிங்கமான சூர்யாவுக்கும் தோற்றுவித்திருக்கக்கூடும். அடுத்து இன்னும்கூட நான்கைந்து பாகங்களையும் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு சிங்கம்-2 மிரட்டுகிறது.

சிங்கத்தை நமக்கு ஏன் பிடிக்கிறது?

ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டு என்பது மட்டுமில்லை. சிறுவயதிலேயே கூட நம் அனைவருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ‘பேசாம போலிஸ் ஆயிட்டா என்ன?’ என்றொரு லட்சியம் இருந்திருக்கும். காக்கி உடுப்பும், மிடுக்கும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நேர்மையான போலிஸாக மட்டுமில்லாமல் துரைசிங்கம் லவ்வர் பாயாகவும் இருக்கிறார். அவராக விரும்பாவிட்டாலும் பேரழகியான அனுஷ்காவே துரத்தித் துரத்தி அவரை காதலிக்கிறார். மட்டுமின்றி பரம்பரையாக தொடரும் நம் தமிழ் குடும்ப மதிப்பீடுகளுக்கு உருவம் கொடுத்தால் அது துரைசிங்கமாகவே இருக்கும். அப்பா மீது அளவு கடந்த மரியாதை. அம்மா, அக்கா, அப்பத்தா மீது பாசம். உற்றம், உறவு, ஊர் மீது செண்டிமெண்டலான பிணைப்பு. நவரச உணர்வுகளும் கொண்டவர். டயலாக் பேசினால் ரைமிங்காக ஏற்ற இறக்கத்தோடு பேசுகிறார். இன்னும் காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சிங்கம்-2 ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கிறது. குடும்பப் பிரச்சினைகளால் தமிழுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அஞ்சலி அதிரடியாக ஆ(ட்)டுகிறார். அவ்வப்போது அஞ்சலியோடு ஆடிக்கொண்டு, பாடிக்கொண்டும் மியூசிக் வரும் கேப்பில் பைனாகுலரை வைத்துக்கொண்டு கடற்கரையை வேடிக்கை பார்க்கிறார் துரைசிங்கம். எடுத்தவுடனேயே துரைசிங்கம் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். அண்டர்காப் ஆபரேஷனில் இருக்கும் ஆபிஸர் இப்படியெல்லாம் பைனாகுலர் வைத்துக்கொண்டு புதர்மறைவை தேடி திரிந்துக் கொண்டிருப்பாரா என்று மல்ட்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் நாம் சுலபமாக லாஜிக் தேடலாம். ஏ, பி, சி என்று மூன்று சென்டர்களிலும் பட்டையைக் கிளப்பவேண்டிய நிர்ப்பந்தம் இயக்குனருக்கு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ப்ளாக் டிக்கெட் வாங்கி பார்ப்பவனுக்கு சிங்கத்தின் வேலை இதுதானென்று தெளிவாக புரியவைக்க வேண்டியது இயக்குனரின் கடமை. அவனிடம் போய் அண்டர்காப், ஹோம் மினிஸ்டர் ஸ்ட்ராட்டஜி என்றெல்லாம் அவனுக்குப் புரியாத மொழியில் ஏகப்பட்ட இங்கிலீஷ் வார்த்தைகளை அடுக்கி, பாடமெடுக்க முடியாது (இதையெல்லாம் கமல்ஹாசன் பார்த்துக் கொள்வார்). ‘சி’ சென்டர் ரசிகனை ஒரு படைப்பாளி திருப்திபடுத்த வேண்டுமா என்கிற கேள்வி, இந்த விமர்சனத்தை இண்டர்நெட்டில் வாசிக்கும் உங்களுக்கு வருகிறதா?  அப்படியாயின் அக்கேள்விக்கான விடை ஜூலை மாத ‘காட்சிப்பிழை’ இதழில் குட்டிப்புலி ஏன் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது என்று ராஜன்குறை எழுதியிருக்கும் விமர்சனக்கட்டுரையில் கிடைக்கும். எனவே இப்படத்தில் லாஜிக் பார்க்காமல் மேஜிக்கை பார்த்து மட்டும் வாய்பிளந்து நிற்பது சாலச்சிறந்தது.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சிங்கம்-1ல் துரைசிங்கத்துக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்து நம் கல்மனம் கூட இளகிவிடுகிறது. எனவே அவருக்கு ஒரு புதுகாதலியாக ஹன்சிகா. எம்.ஜி.ஆர் ஃபார்முலா நாயகனான சிங்கம் அந்த காதலை நிர்தாட்சண்யமாக நிராகரிக்கிறான். அனுஷ்காவும் அவரது குடும்பமும் சிங்கம்-1ல் உருவான தெய்வீகக்காதலை காக்க அவர்களது உயர்ந்த அந்தஸ்தை விட்டு இறங்கி, மாபெரும் தியாகவேள்வி நடத்துகிறார்கள். இந்தச் சிக்கலுக்கு காரணம் சென்னையில் ஏ.சி.பி.யாக முதல் பார்ட்டில் அதகளம் செய்த சிங்கம் வேலையை ரிசைன் செய்ததுதான். அவர் வேலையை ரிசைன் செய்ததும் அவரது வேலையில் ஒரு அங்கமே. அவ்வாறு செய்தது எதற்காக என்று அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள் மூலமாக வரிசையாக செங்கல் வைத்து முதல் பாதியில் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார் ஹரி. குட்டி குட்டியான கேள்விகளை எழுப்பி, உடனே அதற்கு ஒன்லைனில் ஆன்ஸர் வைக்கும் க்யூ & ஏ ஃபார்மேட்தான் ஹரியின் திரைக்கதை பாணி.

இடைவேளைக்குப் பிறகு வழக்கமான ஆக்‌ஷன் எண்டெர்டெயின்மெண்ட். கை சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு கண்டவனை எல்லாம் போட்டுத் துவைக்கிறார் துரைசிங்கம். அவர்தான் பாய்ந்து அடித்தால் பத்து டன் வெயிட் ஆயிற்றே. இண்டர்நேஷனல் டானே கூட சுனாமி தாக்கியதைப் போல நிலைகுலைந்துப் போகிறான். சிங்கத்தை பார்த்து பயந்து பயந்து பதுங்குவதைத் தவிர்த்து தூத்துக்குடி வில்லன்களுக்கு வேலையே இல்லை. இடையில் மத்திய ஹோம் அமைச்சர் இண்டர்நேஷனல் டானை பாதுகாக்க நினைப்பது, அதை ஓவர்டேக் செய்து உள்ளூர் ஹோம் மினிஸ்டரின் உதவியோடு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்று கமர்சியல் அதலெடிக்காக அமர்க்களம் செய்கிறார் சிங்கம். இண்டர்நேஷனல் லெவலில் இந்தியன் போலிஸின் மதிப்பை பறைசாற்றுகிறார். படம் முடிகிறது. அனேகமாக சிங்கம்-3 டெல்லியில் நடக்கும். அங்கிருக்கும் ஹோம் மினிஸ்டரோடும், இந்தி டான்களோடும் துரைசிங்கம் கபடி ஆடக்கூடும்.

தமிழில் டாக்கி ஆரம்பித்த ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளிலேயே எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டு போலிஸ் திருடன் கதைதான் என்றாலும் அதை எடுக்கும் ஹரியின் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்தான் மேட்டர். தேவையான இடங்களில் பாடல்கள், கவர்ச்சி, ஃபைட்டு, காமெடி என்று அவர் கலக்கும் மசாலா விகிதம்தான் அவருடைய ஹிட் ஃபார்முலா. இது ஒன்றும் சீக்ரட் ஃபார்முலா இல்லை, எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஹரி கலக்கும்போது மட்டும் டேஸ்ட் அதிரிப்போகிறது. ‘வாழைக்காய் நறுக்குபவனிடம் பார்த்து சேர்த்து வெட்டிடப் போறே’ என்று போகிறபோக்கில் பச்சையாக சந்தானம் டயலாக் அடித்தாலும், ஹரியின் குடும்பப் பிராண்டு படங்களில் அது வக்கிரமாகவோ, ஆபாசமாகவோ தெரிவதில்லை. குடும்பம் குடும்பமாக கைத்தட்டி கும்மாளம் போடுகிறார்கள்.

நமக்கு ஒரே ஒரு கவலைதான். அனுஷ்காவுக்கு வயசாயிடிச்சி. ஹன்ஸிகாவுக்கு என்ன ஆச்சி? முதல் பாகத்தில் இருந்த கவர்ச்சி எலிமெண்ட் இதில் மிஸ்ஸிங்தானென்றாலும், சிங்கத்தின் கர்ஜனை முன்பைவிட கம்பீரம்.

சிங்கம் டூ : ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்டுக்கான வாரண்டு

2 ஜூலை, 2013

தீ குளிக்கும் பச்சை மரம்

சமீபமாக தமிழ்த் திரையுலகம் காமெடியை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. சமகால சமூக நிகழ்வுகள் சீரியஸாகவும், அவநம்பிக்கை படரச் செய்வதாகவும் இருப்பதால், பார்க்கும் படமாவாவது காமெடியாக இருக்கட்டுமே, என்று தமிழர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

சில காலம் முன்பாக கேரளாவில் அலைகளை கிளப்பிய குறும்படம் ஒன்றை இயக்கியவர்கள், சகோதரர்களான வினீஷ்-பிரபீஷ். பிணவறையில் வேலை பார்த்த ஒரு இளைஞனின் நிஜக்கதை அது. பரவலான கவனத்தையும், ஏராளமான விருதுகளையும் இந்த குறும்படத்துக்காக அவர்கள் பெற்றார்கள். நம்மூரில் இருந்து அடிக்கடி கேரளாவுக்கு ஷார்ட்-ட்ரிப் அடிக்கும் இயக்குனர் சமுத்திரக்கனியும், இப்படத்தை பார்த்தார். இயக்குனர்களை அழைத்து பாராட்டியதோடு மட்டுமில்லாமல், இதை ஏன் சினிமாவாக எடுக்கக்கூடாது என்று ஐடியாவும் கொடுத்தார். இப்படித்தான் ‘தீ குளித்தது பச்சை மரம்’.

படத்தை தமிழில் எடுத்தால், நிறைய பேரை போய்ச்சேரும் என்று இயக்குனர்கள் நினைத்தார்கள். பழம்பெரும் கேமிராமேனான மதுஅம்பாட்டை தங்களுக்கு பணிபுரிய கேட்டார்கள். ஏகப்பட்ட தேசிய விருதுகளை குவித்தவர். நாற்பது ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருப்பவர் (அஞ்சலியை மறக்கமுடியுமா?) இப்போது மிகக்குறைவான படங்களையே செலக்டிவ்வாக ஒப்புக்கொள்கிறார். உடல்நலமும் முன்பு போல ஒத்துக்கொள்வதில்லை. வினீஷும், பிரபீஷும் தாங்கள் எடுத்த குறும்படத்தை அவருக்கு போட்டுக் காட்டினார்கள். “இதைத்தான் முழுநீளப்படமாக எடுக்கவிருக்கிறோம், நீங்கள் செய்துக் கொடுக்கிறீர்களா?” மறுபேச்சு பேசாமல், சம்பளம் பற்றியெல்லாம் விசாரிக்காமல் கதைக்காக மட்டுமே மது ஒப்புக்கொண்டார்.

லோ பட்ஜெட் படங்களே எள்ளி நகையாடக்கூடிய அளவுக்கு, லோ லோ பட்ஜெட். இது படமாக வந்தால் எப்படியும் காசு தேறாது என்று தெரிந்தும் கலைத்தொண்டாக நினைத்து தைரியமாக படமாக்கியிருக்கிறார்கள். இதே கதையை மிகச்சுலபமாக மசாலா எண்டெர்டெயிண்ட்மெண்ட் த்ரில்லராகவும் எடுத்திருக்கலாம். ஆனால் எவ்வித வணிகசமரசத்துக்கும் இயக்குனர்கள் இடம் கொடுக்கவில்லை. கறாரான கலைத்தன்மையோடே வெளிவந்திருக்கிறது தீக்குளிக்கும் பச்சை மரம்.

ms
புதுமுக நடிகரான பிரஜன் தான் அறிமுகமாக இப்படத்தை தேர்ந்தெடுத்தது துணிச்சலான முயற்சி. டிவி காம்பியரராக புகழ்பெற்ற பிரஜனுக்கு முயற்சித்தால் லவ்வர் பாயாகவோ, கல்லூரி மாணவனாகவோ பாத்திரங்கள் தாராளமாக கிடைத்திருக்கும். இயல்பிலேயே அழகான பிரஜன் இப்படத்துக்காக கறுத்து, இளைத்து (சேது விக்ரம் மாதிரி) பாண்டியாகவே கிட்டத்தட்ட மாறியிருக்கிறார். பாண்டி என்கிற ஒரு மனிதன் ஏன் பிணவறைக்கு வேலை பார்க்கவேண்டும், அதற்குக் காரணமான அவனுடைய சமூகப் பொருளாதார பின்னணி என்னவென்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. இதை முழுமையாக உணர்ந்து ஏற்று நடித்து, தன்னுடைய திரைப்பட வருகையையே மாற்று முயற்சியாக தொடங்கியிருக்கிறார் பிரஜன்.


பாண்டி, சார்லி, துரை மூவரும் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து ஆறாண்டு தண்டனையை முடித்து வெளிவருகிறார்கள். சார்லியும், துரையும் குற்றப்பாதைக்கு திரும்ப முடிவெடுக்கிறார்கள். தன்னுடைய அப்பாவைப் போலவே அறம் சார்ந்த மதிப்பீடுகளோடு வாழ விரும்பும் பாண்டி தன்னுடைய சொந்தக் கிராமத்துக்கே போய் சேருகிறான். இவர்கள் சீர்த்திருத்தப் பள்ளிக்கு ஏன் வந்தார்கள் என்பது ப்ளாஷ்பேக்.

ஊருக்கு வந்த பாண்டிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. சாராயம் குடித்துவிட்டு, கிடைத்த கூலிவேலைகளை செய்துக்கொண்டு கடனுக்கே என்று வாழுகிறான். எதிர்பாராவிதமாக அவனையும் ஒருத்தி காதலிக்கிறாள். இவனுக்கும் அவளை திருமணம் செய்துக்கொள்ளத் தோன்றுகிறது. செய்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை நெருக்குதல்களை சமாளிக்க வேறு வழியின்றி, அரசு மருத்துவமனையின் பிணவறையில் பணத்துக்காக வேலைக்கு சேருகிறான். வேலையே பிணங்களோடுதான் என்பதை சுலபமாக ஒருவரியில் சொல்லிவிடலாம். ஆனால் நினைத்துப் பார்ப்பதே கொஞ்சம் கொடூரமான திகிலை கொடுக்கிறது. உடலை அறுப்பது, மண்டையைப் பிளப்பது என்று ரத்தமயமான பணி. ஆரம்பத்தில் தடுமாறும் பாண்டி போகப்போக இந்தப் பணியில் சகஜமாகிவிடுகிறான்.
                           3
சில நாட்களிலேயே பிணவறையின் அதிர்ச்சியான மறுபக்கம் அவனுக்கு தெரியவருகிறது. உடல் உறுப்புகள் வியாபாரம், பிணங்களோடு உடலுறவு என்று கற்பனைக்கும் எட்டாத ‘பகீர்’களை நேரடியாக பார்க்கிறான். இறந்தவர்களை கூட நிம்மதியாக இருக்கவிடாமல் கொடுமைப்படுத்தும், இந்த அநியாயங்களை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. தட்டிக்கேட்டு சில எதிரிகளை சம்பாதிக்கிறான். இப்படியாகப் போகும் கதையில் கொடூரமான, எதிர்பாராத பயங்கர க்ளைமேக்ஸ்.

prajan
கதையை கேட்கும்போது வக்கிரமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கலாம் என்று நீங்கள் யூகிக்கலாம். இயக்குனர்களும், கேமிராமேனும் மிக கவனமாக இக்கதையை கையாண்டிருக்கிறார்கள். முடிந்தவரை ரத்தத்தை காட்டாமல் இருப்பது, லேசாக காட்சியைத் தொடக்கி மீதி என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகனின் கற்பனைக்கே விட்டுவிடுவது என்று லாகவமாக படமெடுத்திருக்கிறார்கள். டி.பி.கஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என்று காமெடி நடிகர்கள் இருந்தும்கூட எவ்வித எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூவையும் சேர்க்காமல், சொல்ல வந்த படத்தின் கதை பாதையில் இருந்து சற்றும் விலகவே இல்லை.


வெளியாகி ஒருவாரம் கழிந்த நிலையில் வெளியான தியேட்டர்கள் எதிலும் இன்று தீக்குளிக்கும் பச்சை மரம் ஓடுவதாக தெரியவில்லை. மாற்று சினிமாவின் இடம் இதுதான். மாற்று சினிமாக்கள் வெகுஜனங்களின் ஆதரவைப் பெற்று ஓடுவதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை, அமாவசைக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்தான். அதில் பிரச்சினையில்லை. ஆனால் தமிழில் மாற்று சினிமாவுக்காக வாய் கிழியப் பேசும் மாற்று சினிமா ஆர்வலர்கள் ஏன் இன்னமும் இப்படத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இது தமிழில் வெளிவந்திருப்பது குற்றமாக இருக்கலாம். கேரளாவிலோ, வங்கத்திலோ, ஈரானிலோ, லத்தீன் அமெரிக்க நாடுகளிலோ மட்டுமே மாற்று சினிமா சாத்தியம் என்று நினைக்கிறார்களோ என்னமோ?
              prajan2
போஸ்ட்மார்ட்டம், பிணங்களோடு உறவு மாதிரி காட்சிகளை சினிமாவில் காட்டவேண்டுமா என்று இப்படம் பார்த்த சில தோழர்கள் இணையத்தளங்களில் கடுமையான அதிர்ச்சியோடும், எதிர்ப்போடும் எழுதி வருகிறார்கள். பொழுதுபோக்கு சினிமாவுக்கு இதெல்லாம் அவசியமில்லைதான். ஆனால் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்கு அல்ல, ஆவணப்படுத்தவும்தான் என்கிற கோணத்தில் பார்க்கும்போது இதுவும் தேவைதான். ஆவணப்படுத்துதல் கலைக்கு முக்கியமான ஒரு அம்சம் இல்லையா. பிணவறைக்குள் என்னதான் நடக்கிறது என்பதை மக்களும் தெரிந்துகொண்டால், குடியா முழுகிவிடப் போகிறது. தமிழில் மதுபானக்கடைக்குப் பிறகு வந்திருக்கும் மிக முக்கியமான முயற்சி தீ குளிக்கும் பச்சை மரம். அசாத்திய துணிச்சலோடு களமிறங்கியிருக்கும் இப்படக் குழுவினர் சர்வதேச விருதுகளுக்கு தகுதியானவர்கள். ஆனால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.
end
 
(நன்றி : cinemobita.com)