30 ஜனவரி, 2012

மனிதநேயக் கலைஞன்

இசைஞானி இளையராஜாவைப் பற்றி டிரம்ஸ் கலைஞர் சிவமணி எழுதுகிறார் :

அவரைப் பற்றி எழுத நான் யார்?

இந்தக் கேள்வியை எனக்குள் நானே இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு இசைக்கலைஞன். அவரோ இசைக்கே அரசர். அவரைப் பற்றிக் கட்டுரை எழுதக் கலைஞன் என்ற தகுதி மட்டுமே போதுமா? ராஜா அண்ணனைக் குறித்து யோசிக்கும்போதே பல்வேறு அனுபவங்களும், நிகழ்வுகளுமாக, என் இதயம் புயல் அலையில் ஆடும் ஓடம் போலத் தத்தளிக்கிறது

அவருக்கும் எனக்குமான உறவு என்பது இசையோ, தொழிலோ மட்டுமல்ல என்பதை அழுத்தமாக உணர்கிறேன். அவர் என்னுடைய குரு. என்னை ஆன்மீக வழியில் செலுத்திய சித்தர். கோடி சாமிகள் என்கிற மாபெரும் மகானை நான் அடையக் காரணமாக இருந்தவர். என் வாழ்வின் பாக்கியம் ராஜாவால் வந்தது. அவர் எனக்கு குருநாதர் மட்டுமல்ல. அண்ணனும் கூட.

இளையராஜாவுக்கு அப்போதெல்லாம் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தவர் நோயல். அவரது வேலை ராஜாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நோயலின் மறைவுக்குப் பிறகே நான் ராஜாவோடு பணியாற்ற ஆரம்பித்தேன். நோயலின் இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர் பாணியிலேயே நானும் வாசிப்பேன். எனவே, ராஜாவுக்கு என்னுடைய இசையும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை. "பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தைத் தேவர்கள் உண்டார்கள்" என்று படித்திருக்கிறோம். இளையராஜாவோடு பணியாற்றும் போது எனக்கும் அமிர்தம் உண்ட உணர்வு ஏற்படும்.

அவர் ரெக்கார்டிங் செய்யும் அழகைக் காண எத்தனையோ கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது. அவர் வயலின் அரேஞ் செய்த பிறகு பொழியும் இசையைக் கேட்கும்போது, என் கண்களில் கண்ணீர் கொட்டுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. ஏன், இளையராஜாவின் இசை ஜீவனுள்ள இசை என்று சர்வதேச அளவில் இசைமேதைகள் பேசுகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர முடியும். பணக்காரன் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசையை எத்தனை முறை கேட்டுப் பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இசையில் மட்டுமல்ல. நட்புகளை, உறவுகளைப் பேணுவதில் அவர் ராஜாதான். சிவா என்றுதான் என்னை அன்பாக அழைப்பார். வேலை பார்க்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சீரியஸாக வேலை வாங்குகிறாரோ, அதே சீரியஸ்னஸ்சை மற்ற நேரங்களில் அன்பைப் பொழியும்போதும் காட்டுவார்

’47 நாட்கள்’ என்றொரு படத்திற்கு இசையமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வர அன்று ஏதோ காரணத்தால் தாமதமாகி விட்டது. மதிய நேரம், எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. ஸ்டுடியோவில் இருந்த ராஜாவின் கம்போசிங் ரூமில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. டேபிளில் வாழை இலை விரிக்கப்பட்டு இருந்தது. 'உட்காரு சிவா! சாப்பிடு!' என்றார். எப்படித்தான் என் பசி அவருக்குத் தெரிந்ததோ? இதனால் தான் அவரை சித்தர் என்கிறேன். ஞானி என்கிறேன். ‘இல்லண்ணே..! எஸ்.பி.பி. வந்துட்டாருன்னா ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆயிடும்' என்று தயங்கினேன். நான் தயங்கியபடியே எஸ்.பி.பி.யும் வந்து விட்டார்.

உடனே ரெக்கார்டிங் ரூமில் இருந்த இஞ்சினியர்கள் இருவரையும் ஃபோன் செய்து அழைத்தார் ராஜா. அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டே இருந்தார்.

“பசியோட வேலை பார்க்கக் கூடாது. இப்போ உன்னாலே ரெக்கார்டிங் லேட்டுன்னு யாரும் சொல்லிட முடியாது. ஏன்னா ரெக்கார்டிங் பண்ண வேண்டிய இஞ்சினியர்கள் கூட நான் பேசிகிட்டு இருந்தேன். அதனால், என்னாலேதான் லேட்டு." என்றார். மனித நேயம் அருகிக் கொண்டிருக்கும் உலகில், ராஜாவுக்குள் இருக்கும் இந்த ஈரம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. சக மனிதர்கள் மீதான இந்தப் பண்பும், அன்பும் அரிதிலும் அரிதானது.

கலைஞர்களே பிரமிக்கும் கலைஞர் அவர். ரீ-ரெக்கார்டிங்கின்போது சில நொடிகளே வரும் அருமையான பிட் ஒன்றினைக் கொடுப்பார். அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அந்த சில நொடி பிட்டுகளையே நான் ஐந்து பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வாசித்துப் பழகுவேன். இதுபோலச் செய்வது ஒரு தியானத்துக்கு ஒப்பானது. இசைக்கு இதைப் போன்ற ஆன்மீகப் பலம் நிறைய உண்டு.

இளையராஜா பேசுவது, சிலருக்கு சில நேரங்களில் புரியாது. அவரது பேச்சில் நேரடி அர்த்தத்தை எதிர் பார்த்தால் அப்படித்தான். அவர் ஒரு யோகி. உன்னிப்பாக கவனித்தோமேயானால், அவரது பேச்சில் பன்முக அர்த்தங்கள் பொதிந்திருக்கும். வாழ்வுக்கு உபயோகமான கருத்துகள் அடங்கியிருக்கும். இவரைப் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றும், பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது என் பெற்றோர் செய்த புண்ணியமாகத் தான் இருக்கும்.

ஒரு முறை வாழ்த்து அட்டை ஒன்றில் இவ்வாறாக எழுதி எனக்குக் கொடுத்தார். "உன்னை இன்னொருவனால் உருவாக்க முடியாது. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்."

அண்ணன் என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு : யுவகிருஷ்ணா

(நன்றி : புதிய தலைமுறை)

இப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது!

'நண்பன்’ திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் திருட்டு டிவிடி ஜனவரி 1 அன்றே மார்க்கெட்டுக்கு வந்து விட்டது. அதிர்ந்துப் போன இயக்குனர் ஷங்கர் போலிஸ் கமிஷனிரிடம் புகார் கொடுக்க வருகிறார்...

இப்படியொரு அதிரடி தொடக்கத்துடன் ஒரு நாவல் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது. அந்த நாவலின் பெயர் ‘அழிக்கப் பிறந்தவன்’. விலை ரூ. 50. சென்னை கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸில்’ கிடைக்கும் இந்த நாவல், நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டிருக்கிறது.

திருட்டு டிவிடி எப்படி தயாராகிறது.. எப்படி கடைக்குச் செல்கிறது.. என்பதில் தொடங்கி பர்மா பஜாரில் இயங்கும் நிழல் உலக வாழ்க்கையை இன்ச் பை இன்ச்சாக தோலுரித்துக் காட்டும் இந்த நாவலை எழுதியிருப்பவர் யுவகிருஷ்ணா. ’வசந்தம்’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான இவரது முதல் நாவல் இதுதான் என்பது ப்ளசண்ட் சர்ப்ரைஸ்.

”புதுப்படங்களை யாரும் பார்ப்பதற்கு முன்பாக நாம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும்தான். எனக்கும் இருந்தது. ‘இன்னும் தியேட்டரில் ரிலீஸே ஆகாத புதுப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. பார்க்கிறாயா?’ என்று நண்பன் ஒருவன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நான் பார்த்த படம்தான் கார்த்திக் நடித்த ‘சுந்தர பாண்டியன்’. படம் வெளிவருவதற்கு முன்பாக திருட்டு விசிடி வந்துவிட்டதால், அப்படம் திரையரங்குக்கே வரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சினிமா நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான், திருட்டு விசிடி சமாச்சாரம் ஒரு சினிமாத் தொழிலையும், அத்தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதை நேரடியாக உணர்ந்தேன். எங்கள் நிறுவனம் பெரும் முதலீடு செய்து கையகப்படுத்திய ஒரு பெரிய படம், திருட்டு சிடி வந்துவிட்டதால், மிகப்பெரிய நடிகர் நடித்திருந்தும் ஓபனிங் கூட கிடைக்காமல் படுத்துவிட்டது.

இக்காலக்கட்டத்தில்தான் திருட்டு சிடி எந்த வழியிலெல்லாம் தயாராகிறது, எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். இந்த உலகம் விஸ்தாரமானது. உலகளாவியது. அவ்வப்போது காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் ரோட்டில் விற்பனை செய்யக்கூடிய அப்பாவிகள்.ஐம்பதுக்கும், நூறுக்குமாக உழைப்பவர்கள். மாஸ்டர் காப்பி போடும் ‘பாஸ்’கள் மாட்டுவதேயில்லை என்பதை தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிப்பவர்கள் உணரமுடியும்.

இப்படிப்பட்ட அப்பாவிகளில் உலகத்தைதான் நாவலில் களமாக்கியிருக்கிறேன். நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று அடிக்கடி பார்ப்பதற்கும், பஜாரின் பழைய கதைகளை தெரிந்துகொள்வதற்கும் ஒரு மாத காலம் செலவிட்டேன்.

சினிமாத் தொழிலை அழிக்கப் பிறந்த திருட்டு டிவிடியைதான் ’அழிக்கப் பிறந்தவன்’ என்று சுட்டியிருக்கிறேன்” என்கிறார் யுவகிருஷ்ணா.

(நன்றி : தினகரன் வசந்தம் 29.01.2012 இதழ்)

28 ஜனவரி, 2012

கீழ்க்கட்டளை தனலஷ்மி!

பேரும், ஊரும் கிக்காக இருக்கிறதே என்று அவசரப்பட்டு ஜொள்ளுவிட வேண்டாம். கீழ்க்கட்டளை தனலஷ்மி பெண்ணல்ல. தியேட்டர். இப்படிக்கூட சொல்லிவிடமுடியாது. எங்கள் ஊர் மொழியில் கொட்டாய். நகரத்தில் வளருபவர்கள் சினிமா பார்க்க நல்ல தியேட்டருக்கு போயிருப்பீர்கள். கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர்த்து பலருக்கு கீழ்க்கட்டளை தனலஷ்மி மாதிரியான தியேட்டர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தனலஷ்மி மடிப்பாக்கம் பாதாளவிநாயகர் கோயிலுக்கு எதிரில் தான் இருந்தது. இதெல்லாம் தற்காலிக தியேட்டர்கள். தனலஷ்மி போன்ற ’சி க்ளாஸ்’ தியேட்டர்களுக்கு ஐந்து ஆண்டுகள் லைசென்ஸ் கொடுப்பார்கள். லைசென்ஸ் முடிந்ததுமே அதிர்ஷ்டம் இருந்தால் புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையேல் சர்க்கஸ் கூடாரம் போல காலிசெய்து விட்டு போகவேண்டியது தான்.

தரை, பெஞ்ச், சேர் என்று மூன்று வகுப்பு டிக்கெட்டுகள் கிடைக்கும். தரை மணல் பரப்பப் பட்டிருக்கும். பெஞ்ச் என்றால் சவுக்கு கம்புகளுக்கு மேல் பலகை ஆணியால் அடிக்கப்பட்டிருக்கும். சேர் என்பது மடக்கக்கூடிய இரும்பு சேர். இருப்பதிலேயே காஸ்ட்லி சேர் தான். ரெண்டே ஷோ தான். பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ. பர்ஸ்ட் ஷோ என்பது மாலை ஆறு முப்பது மணி. செகண்ட் ஷோ என்பது நைட்டு பத்து மணி. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் மூன்று மணிக்கு மேட்னி காட்சி உண்டு.

படம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் "வினாயகனே.. வினை தீர்ப்பவனே..!" என்று உச்சஸ்தாயியில் பாட்டு போடுவார்கள். அந்த சத்தத்தை கேட்டபின்பே அவசர அவசரமாக வீடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கொட்டாய் நோக்கி வருவார்கள்.

கூரை அப்போதெல்லாம் தென்னை ஓலைகளில் வேயப்பட்டிருக்கும். அதனால் தான் அதை கொட்டாய் என்பார்கள். ஸ்க்ரீன் ரொம்ப சுமாராக அழுக்காக இருக்கும். ஸ்க்ரீனுக்கு பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் இருக்கும். ஒளி மோசமென்றால், ஒலி ரொம்ப படுமோசமாக இருக்கும். இதுபோன்ற கொட்டாய்களுக்கு அருகிலிருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் ரொம்ப பாவம். இரவுகளில் தூங்கவே முடியாது.

தனலஷ்மி மடிப்பாக்கத்தில் இருந்தபோது மிகக்குறைவான படங்களே பார்த்திருப்பதாக நினைவு. ஆயிரத்தில் ஒருவன், பூந்தளிர் படங்களை அங்கே பார்த்தது லேசாக நினைவிருக்கிறது. எனக்கு நன்கு நினைவு தெரிந்தபோது அந்த கொட்டாய் இடிந்து பாழடைந்து கிடந்தது.

எப்போதோ ஒருமுறை நான் தூங்கிய பிறகு ஒரு முறை அப்பாவும், அம்மாவும் தங்கையை தூக்கிக் கொண்டு செகண்ட் ஷோ போயிருக்கிறார்கள். என்னை பக்கத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் தூங்கவைத்திருக்கிறார்கள். நடு இரவில் முழித்துக் கொண்டு, செம கலாட்டா செய்ய, பெரியப்பா என்னை தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். "குழந்தை அழுகிறது, உடனே புரொஜெக்டர் ரூமுக்கு வரவும்" என்று அப்பாவின் பெயர் போட்டு ஸ்லைடு காட்டினார்களாம். அந்த மாதிரியான Facility எல்லாம் அப்போது இருந்திருக்கிறது. இன்றைய மல்டிப்ளக்ஸில் கூட இந்த வசதி இருப்பதாக தெரியவில்லை.

நான் ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படிக்கும் போது தனலஷ்மி கீழ்க்கட்டளையில் மீண்டும் புதுப்பொலிவோடு திறக்கப்பட்டது. புதுப்பொலிவென்றால் வேறு ஒன்றுமில்லை ஓலைக்கூரைக்கு பதிலாக தார்பாய். மற்றபடி அதே தரை, பெஞ்ச், சேர் என்ற நவீனவகுப்பு டிக்கெட்டுகள். டாய்லெட் எல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஒரு மறைப்பு மட்டும் இருக்கும்.

கீழ்க்கட்டளைக்கு போன தனலஷ்மியில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அப்பா அழைத்துக் கொண்டு போனால் சேர். நண்பர்களோடு போனால் தரை டிக்கெட். பாயும்புலி, சகலகலா வல்லவன், சட்டம் ஒரு இருட்டறை, நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, திருவிளையாடல் என்று வகைதொகையில்லாமல் ஏராளமான படங்கள். செகண்ட் ஷோ பார்க்கத்தான் ரொம்ப பிடிக்கும். செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது மறக்காமல் டிக்கெட்டை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நைட் ரவுண்ட்ஸ் வரும் போலிஸ்காரரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கவேண்டியிருக்கும்.

தனலஷ்மியில் புதுப்படம் என்பதெல்லாம் சான்ஸே கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களை தான் போட்டுத் தொலைப்பார்கள். ஓரளவுக்கு புதுப்படம் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது - பார்க்க வேண்டுமென்றால் நங்கநல்லூர் ரங்கா, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி மற்றும் மதிக்கு தான் போக வேண்டும்.

இதுபோன்ற கொட்டாய்களில் அதிகமாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களே ஓடிக்கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர் படத்துக்கு கவுண்டரில் கூட்டம் அலைமோதி க்யூவுக்காக பொருத்தப்பட்டிருக்கும் சவுக்கு கொம்புகளை உடைத்து விடுவார்கள். வாத்தியார் ஸ்க்ரீனில் வரும் காட்சியெல்லாம் விசில் பறக்கும். லாட்டரி டிக்கெட்டுகளை கிழித்து ஸ்க்ரீன் முன்னால் பறக்க விடுவார்கள். தரை டிக்கெட் வகுப்பில் வரும் ஆண்கள் பொதுவாக மப்பில் இருப்பார்கள் என்பதால் அடிதடிக்கு அந்த ஏரியாவில் பஞ்சமிருக்காது.

முன்னால் உட்கார்ந்திருப்பவன் கொஞ்சம் உயரமாக இருந்தால் ஸ்க்ரீன் மறைக்கும் என்பது நியூட்டனின் விதி. அவனை கொஞ்சம் குனியச் சொன்னால் நல்லவனாக இருந்தால் குனிந்து விடுவான். கொலைவெறியனாக இருந்தால் அடிதடி தான். இந்தப் பிரச்சினையெல்லாம் எதுக்கு நாம் கொஞ்சம் உயரமாகிவிடுவோம் என்ற எண்ணத்தில் தரையிலிருக்கும் மணலை கொஞ்சம் உயரமாக குவித்து அதன்மேல் உட்கார்ந்தால்.. நமக்கு பின்னால் இருக்கும் இரத்தவெறியனிடமிருந்து கொலைமிரட்டல் வரும். இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து தான் படம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும்.

ஊர்த்தலைவரோ அல்லது முக்கிய பிரமுகரோ படம் பார்க்க வந்தால் அவருக்காக ஸ்பெஷலாக படம் போடுவதை நிறுத்தி வைப்பார்கள். ஓடத் தொடங்கிய படத்தையே முக்கிய பிரமுகருக்காக திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து ஓட்டிய சம்பவங்களும் நடந்ததுண்டு. முக்கிய பிரமுகர்களுடன் வரும் பிகரை சைட் அடிப்பதற்காகவே சில தரை டிக்கெட் பார்ட்டிகள் பெஞ்ச் அல்லது சேர் டிக்கெட்டுகளுக்கு அடாவடியாக செல்வதும் உண்டு.

இதெல்லாம் அந்தக் காலம். இப்போது கீழ்க்கட்டளை தனலட்சுமியின் தோற்றமே மாறிவிட்டது. நகரமயமாக்கப்பட்ட எங்கள் பகுதி தனலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. நகரத்தின் தேவைக்கேற்ப தன் ஒப்பனையையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டுவிட்டது தனலஷ்மி. சில ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமிக்கு சில நண்பர்களுடன் சென்றேன். படத்தின் பெயர் குத்து.

தரை டிக்கெட்டு இப்போதும் இருக்கிறது. ஆனால் சிமெண்டு தரை. தார்ப்பாய் வேயப்பட்ட கூரையில்லை. பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட். ஏகப்பட்ட பேன் ஓடுகிறது. டாய்லெட் எல்லாம் கொஞ்சம் (ரொம்ப கொஞ்சம்) டீசண்ட் ஆகியிருக்கிறது. அதையெல்லாம் விட அதிர்ச்சி. "சார் பால்கனி டிக்கெட் வேணுமா?" என்ற கேள்வி தான். ம்ம்ம்... பால்கனி தனலஷ்மிக்கும் வந்துடிச்சி. அதை பால்கனி என்று சொல்லமுடியாது. பால்கனி மாதிரி.

ஒளி, ஒலி தரம் இப்போது பரவாயில்லை. முன்பைப் போல அடிதடி, வெட்டு குத்தெல்லாம் இல்லை. மக்களுடைய Attitude மாறியிருக்கிறது. ஓரளவுக்கு புதுப்படங்களாக போடுகிறார்கள். தியேட்டருக்குள் பீடி பிடிப்பதெல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் செய்திருக்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கூம்பு ஸ்பீக்கரில் சாமி பாட்டு போடுவதில்லை. கரெண்ட் கட் ஆனாலும் கூட ஜெனரேட்டர் உதவிகொண்டு படத்தை தொடர்கிறார்கள். தியேட்டரில் சைடு ஸ்பீக்கர் எல்லாம் வைத்திருப்பது கொட்டாய் வரலாற்றிலேயே அதிகபட்ச தொழில்நுட்ப வளர்ச்சி.

ம்ம்ம்... என்னதானிருந்தாலும் அந்தக் காலத்து தனலஷ்மி மாதிரி வருமா?

27 ஜனவரி, 2012

செய்தி, துயரம், மரணம்!

செய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.

அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு செய்தி அன்றைய தினத்தையே முழுவதுமாக பாதித்துவிடும். இன்று காலை தினகரன் நாளிதழில் வாசித்த ஒரு செய்தி உடனடியாக கண்களில் நீர் கோர்க்கச் செய்தது.

நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் முப்பது வயதான பாண்டியன். ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பங்குபெற்ற குடியரசுத்தின கொண்டாட்டத்தின் இறுதியில் பாண்டியனின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

ஒற்றைக்காலில் பைக்கில் நின்றவாறே வந்து மக்களுக்கு சல்யூட் அடிக்கிறார் பாண்டியன்.

அடுத்து பாய்ந்து, பறந்து வந்து கால்களால் ஓடுகளை அனாயசமாக உடைக்கிறார்.

கடைசியாக பதிமூன்று பேரை கடந்து பறந்துவருவது நிகழ்வில் அவரது கடைசி சாதனை. புவியீர்ப்புக்கு சவால் விட்டு அச்சாதனையையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

பாண்டியனின் சாகசங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைக்க, துரதிருஷ்டவசமாக இதுவே அவரது வாழ்வின் இறுதி சாதனையாகவும் முடிந்துவிட்டது. பதிமூன்றாவது ஆளை பறந்து கடக்கும்போது கை தவறுதலாக பட்டு, இவர் விழவேண்டிய மெத்தை நகர்ந்துவிட்டது. கழுத்து எலும்பு உடைந்து, மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தநாளம் அறுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டார் பாண்டியன்.

பாண்டியனின் மனைவி பெயர் சந்தியா. இத்தம்பதியினருக்கு நான்கு வயது ஆண் குழந்தையும், பதினோரு மாத பெண் குழந்தையும் உண்டு. பாண்டியனின் சாகசத்தை நேரில் காண அவரது மனைவியும் கைக்குழந்தையோடு வந்திருந்தார். சம்பவம் மொத்தத்தையும் அவர் நேரில் பார்த்தார்.

நொடியில் நடந்துவிடும் இதுபோன்ற விபத்துகள், பலியாகும் அப்பாவி உயிர்கள், விளைவாக வாழ்க்கை முழுக்க பாதிக்கப்படும் குடும்பம், குழந்தைகள்... கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

25 ஜனவரி, 2012

வேட்டை – கமர்சியல் கோட்டை

‘பப்பரப்பா’ பாட்டு தொடங்கும்போது ரைட் ஸ்க்ரீன் முழுக்க க்ளோசப்பில் காட்டப்படும் அமலாபாலின் பேரழகு தொப்புளை காண்பதற்காகவே இன்னொரு முறை சூரியன் தியேட்டரில் ஐம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும், இருபது ரூபாய் பைக் டோக்கனுக்கும், இருபத்தைந்து ரூபாய் வாயில் வைக்க சகிக்காத கண்ணறாவி காஃபிக்கும் அழலாம் போலிருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா என்று எல்லா மொழிகளிலுமே ஏறத்தாழ நூற்றி சொச்சமுறை படமாக்கப்பட்டுவிட்ட பயந்த அண்ணன், வீரம் செறிந்த தம்பி கதையை லட்சத்து சொச்சமாவது முறை படமாக்கியிருக்கும் லிங்குசாமியை, நண்பன் பாணியில் பேண்ட் அவுத்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ‘தலைவா கலக்கிட்டே!’ என்றுதான் பாராட்டித் தொலைக்க வேண்டும்.

‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொன்னாங்க. மூணு ஹீரோ இருக்காங்களே பாஸூ’ என்று கூட படம் பார்த்த தோழரிடம் சொன்னபோது, ‘முட்டாள். அது ஹீரோயின், பேரு சமீராரொட்டி’ என்று கடிந்துக் கொண்டார். ஹீரோயினைக் கண்டதுமே ரசிகனுக்கு காதல் எழும்ப வேண்டும். அட்லீஸ்ட் தரையிலிருந்து காலாவது அரை இஞ்சுக்கு பரவசத்தில் மேலெழும்பவேண்டும். சமீராவைக் கண்டதுமே பக்கத்துவீட்டு விடலைப் பையனைக் கண்டது மாதிரி எரிச்சல்தான் மண்டிக்கொண்டு வருகிறது. இந்த அழகில் அம்மணிக்கு அஞ்சு செகண்டுக்கு ஒருமுறை குளோசப் வேறு. திட்டு திட்டான மேக்கப்பில் சமீராவை ஜூம் செய்துப் பார்த்த நீரவ்ஷாவுக்கு சிக்கன் குனியா வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏமி லேது.

மிகச்சரியாக பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக லவ்வர் பாயாக அறிமுகமான மாதவனைப் பார்த்தால் ‘அங்கிள்’ என்றுகூட சொல்லத் தோன்றவில்லை. அடுத்த ஆண்டு ‘தாத்தா’ என்றே கூப்பிடலாம் போல. குட்டி கமல்ஹாசன்னு பேரு எடுத்தா மட்டும் போதாது பாஸூ. காதல் இளவரசனை பாருங்க. அறுபது வயசானாலும் இளவரசனாகவே இருக்கிறார். இவரைவிட மருதமலை வடிவேலுக்கு போலிஸ் யூனிஃபார்ம் பாந்தமாக இருந்தது. ஆர்யாவின் அதே ஸ்டீரியோ டைப் நடிப்பு. முகத்தில் வராத உணர்ச்சிகளை டப்பிங்கில் சரிகட்டும் உலகின் ஒரே நடிகராக இவர்தான் இருக்கவேண்டும்.

தூத்துக்குடியில் தினம் தினம் தீபாவளிதான் போல. படம் ஆரம்பித்ததில் தொடங்கி எங்காவது யாராவது பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருளான வானத்தைக் காட்டினாலே வானவேடிக்கைதான்.

மிக மிக பலவீனமான அல்லது ஆயிரம் முறை சலித்து, லட்சம் முறை அரைத்த அதே மாவை வைத்துக்கொண்டு சூடான சுவையான இட்லியை சுட்டுக் கொடுத்திருக்கிறார் லிங்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முழம் முழமாக காதில் பூ சுற்றி, ஒன்றரை சவரனுக்கு கம்மல் வாங்கி குத்தினாலும் சுவாரஸ்யமான படமாக்கலில் லிங்கு கிங்கு.

படத்தின் பட்ஜெட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகம் வைத்து ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு பெரும் தொகைக்கு தள்ளிவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஒருவேளை நியாயமான விலைக்கு விற்றிருந்தால், படத்தை வாங்கியவருக்கு கோடி கோடியாக கொட்டியிருக்கும். மாறாக வாங்கிய ரேட்டை நினைத்துப் பார்த்தால் இந்த கம்பெனியின் கதியும் தெருக்கோடிதானா என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

23 ஜனவரி, 2012

கயல்விழி

அவளிடம் இதை எப்படி கேட்பது என்பதில் நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான வேறு ஒரு பெயர் இல்லவேயில்லை. கயலின் விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழப்பான்.

அவள் வேலை பார்த்த கடையில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி டைட்டானிக் கேட் வின்ஸ்லட் மாதிரியே நல்ல கலர், செம்ம கட்டை. அவள் இவளை 'கைல்' என்று அழைப்பதே ஸ்டைலாக இருக்கும். அவளிடம்தான் முதலில் 'இதை' கேட்க நினைத்தான். ஆனாலும் கயலைப் பார்த்த பின் வேறு எந்தப் பெண்ணிடமும் 'இதை' கேட்க அவனுக்கு தோன்றவில்லை.

யதேச்சையாக ஒரு நாள் கர்ச்சிப்பை மறந்துவைத்து விட்ட தினத்தில் தான் அந்த கடைக்கு கர்ச்சிப் வாங்க வந்தான் அவன். அப்போது தான் அவளைப் பார்த்தான். தினமும் அவள் வேலை செய்யும் துணிக்கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் அவளிடம் வெட்கத்தை விட்டு இதை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாகரிகமான பணியில் இருக்கும் கணவானான அவன் இதை நாலு பேர் எதிரில் கேட்டு அவள் ஏதாவது சொல்லி.. பொது இடத்தில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று அச்சப்பட்டான். கடைமுதலாளி வேறு பயில்வான் ரங்கநாதன் மாதிரி க்ரிப்பாக இருந்தார்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்தால் 'இதை' தள்ளிப் போட்டுக் கொண்டே போகவேண்டும். எப்படியிருந்தாலும் இதை வேறு யாரிடமாவது கேட்கத்தான் போகிறோம், இவளிடமே கேட்டு விட்டாலென்ன? ‘அதை' அவளிடம் கேட்க ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்துக் கொண்டான். காலண்டரில் நல்ல நேரம் பார்த்தான். மனதுக்குள் ‘தில்'லை லிட்டர் லிட்டராக ரொப்பிக் கொண்டான். அவனுக்கு பிடித்த கருப்பு - சிவப்பு டீஷர்ட்டை அணிந்துகொண்டான். பெண்கள் மையல் கொள்வார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட நறுமண வஸ்துவை தாராளமாக உடலுக்கு உபயோகித்தான்.

நேராக கயல் வேலை பார்த்த அந்த துணிக்கடைக்கு போனான். அன்று கடையிலும் கூட்டம் குறைவு. கயலுக்கு பின்னால் கண்ணாடி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த ‘அந்த' துணிவகைகளை வெறித்துப் பார்த்தான். கயலின் அந்த கேட்வின்ஸ்லட் தோழி குறும்பாக பார்த்தாள். கயலிடம் மெதுவாக ”ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தொலைவுக்கு நகர்ந்தாள்.

கயலின் முகமும் லேசாக நாணத்தால் சிவந்திருந்தது போல தெரிந்தது.

“என்ன சார் வேணும்?” கோல்டன்பிஷ் வாய் திறந்து பேசினால் கயலைப் போலத்தான் பேசும்.

“ம்ம்... வந்து.. வந்து”

“சொல்லுங்க சார்!”

“கயல்.. நான் ஒரு எல்.ஐ.சி. ஏஜெண்ட். அன்னிக்கு ஏதோ பாலிசி போடணும்னு உங்க ஃப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்டிருந்ததை கேட்டேன்… என்கிட்டேயே பாலிசி எடுக்கலாமே?” கண்களைப் பார்த்து நேருக்கு நேராக, கடைசியாக ‘அதை’ கேட்டே விட்டான்.

(நன்றி : தினகரன் வசந்தம் 22-01-2012)

21 ஜனவரி, 2012

சாதி, வர்க்கம், சோஷலிஸம்

தெரியாத்தனமாக நண்பன் பார்த்துவிட்டேன். பார்த்துத் தொலைத்ததோடு விடாமல் ஏதோ ஒரு அறியாமையில் ‘விமர்சனம்’ மாதிரி எதையோ எழுதித் தொலைத்துவிட்டேன். ’உன்னைப் போல முட்டாளுக்கு படமெல்லாம் ஒரு கேடா?’ என்கிற அளவுக்கு நிர்வாண நண்டு என்கிற தோழர் பின்னூட்டத்தில் அறச்சீற்றத்தை கொளுத்திப் போட்டுவிட்டார். எனவே நேற்று மதுரை மாதிரி பற்றியெரிந்தது நம் இணையத்தளம்.

படத்தில் காட்டப்படும் பொறியியல் மாணவனான ‘விஜய் வசந்த்’ பாத்திரம், frustration தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சமீபத்திய சில வருடங்களில் மட்டும் 18 மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதை இக்காட்சி உருவகப்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் நண்டுவுக்கு இது ஏற்புடையதல்ல. ‘அப்பாத்திரம் தலித் என்கிற வசனம் இல்லாததால், நீயாக எப்படி தலித் என்று குறிப்பிடலாம்? படத்தில் இருப்பதை மட்டும் பேசு’ என்கிறார். நண்பர் குறிப்பிடுவது உண்மைதான். விஜய் வசந்த்தும், அவரது அப்பாவும் கருப்பாக இருப்பது மட்டும் தலித்துக்கான குறியீடல்ல. அவரது அப்பா ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்ப்பதால் மட்டுமே தலித் என்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் திரைப்படம் என்பது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது என்கிற வகையில், சமகாலச் சூழல்தானே வெளிப்படும்? ஒருவேளை ஷங்கர் இயக்கிய படமென்பதால் இம்மாதிரியான தலித் ஆதரவு சித்தரிப்புக்கு வாய்ப்பேயில்லை என்று நண்பர் நண்டு கருதக்கூடும். இங்கே குறிப்பிடும் சமகாலச் சூழல் என்னவென்று புரியாத நண்பர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

நண்பன் திரைப்படம் வெறும் கல்விப் பாடத்திட்டப் பிரச்சினையைத் தாண்டி, சமூகப் பிரச்சினையையும் (இயக்குனருக்கு தெரிந்தோ தெரியாமலோ) தொட்டிருக்கிறது என்பது என் நம்பிக்கை. இதையே நண்பர் கிருஷ்ணபிரபுவும் அவரது பின்னூட்டத்தில் குறியீடாக சில பாத்திரங்கள் வருவதை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இதை வெறும் சினிமாவாக விவாதிக்காமல், சமூகப் பிரச்சினையாகவும் விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தார். எப்போதும் விவாதித்துக் கொண்டிருப்பதுதான் என்றாலும், இம்மாதிரி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் தீவிரமாக விவாதித்துப் பார்ப்பதில் தவறேதுமில்லை. எத்தனை கோணங்கள், எவ்வளவு தீர்வுகள், எம்மாதிரியான பிரச்சினைகள் என்றெல்லாம் அறிந்துகொள்ள இவ்விவாதங்கள் உதவுகின்றன.

கிருஷ்ணபிரபுவின் சம்பந்தப்பட்ட பின்னூட்டத்தில் “பொருளாதாரத்தால், சமூகத்தால், சாதிப்பிரிவால் ஒடுக்கப்படும் எல்லோருமே தலித்துகள்தானே?” என்று கேட்டிருக்கிறார். சட்டென்று வாசிக்கும்போது ‘சரிதானே?’ என்று தோன்றக்கூடும். இப்படித்தான் இங்கே வெகுஜன கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதில் சாதியும், வர்க்கமும் ஒரே பிரச்சினை என்கிற தொனி இருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். இரண்டும் சர்வநிச்சயமாக வேறு, வேறு. வர்க்க வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவன், தன்னளவில் நேர்மையாகவோ அல்லது அநியாயமாகவோ எப்படியோ பொருள்சேர்த்து தன்னுடைய வர்க்கத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பொருள் சேர்ப்பதால் மட்டும் ஒரு தலித் தன் மேல் சுமத்தப்பட்ட சாதிய இழிவை துடைத்துக்கொள்ளவே முடியாது என்பதுதான் இங்கே யதார்த்தம். உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த ஒருவர் கூட, மற்றைய உயர்சாதி நீதிபதிகளால் அவமானப்படுத்தப்படுவது என்பது இங்கே நடைமுறை. நாட்டுக்கே குடியரசுத்தலைவராக தலித் உயர்ந்திருந்தாலும், ஒரு சாதாரண கோயில் கும்பாபிஷேகத்தில் கூட கோபுரத்தில் அமரமுடியாது என்பதுதான் நிதர்சனம். எனவே வர்க்கத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒரே தட்டில் நிறுத்தி விவாதிக்க முடியாது என்று கருதுகிறேன்.

நாட்டில் அவ்வப்போது எவ்வளவோ பிரச்சினைகள் கிளம்பிக் கொண்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் எதோ ஒருவகையில் தீர்வினை கண்டெடுக்க முடிகிறது. சாதிப்பிரச்சினைக்கு மட்டும் கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு எந்தத் தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. இதன் இந்துத்துவ கட்டுமானம் மிகவும் பலமானது. மனித மனங்களின் அடிப்படையில் சாதியம் இயங்குவதாலும், அது பரம்பரை பரம்பரையாக ஜீன்களின் வழியாக அறிவியல்பூர்வமாகவே கடத்தப்படுவதாலும் நவீன உலகிலும் பூதாகரமாக நமக்கு முன் வளர்ந்து நிற்கும் பிரச்சினையாக இருக்கிறது. மதம் மாறினாலும் சாதியம் மனதில் தங்குமளவுக்கு மிகப்பலத்த கட்டுமானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியொரு பிரச்சினை இந்திய சமூகத்தில் இருப்பதைச் சொன்னால், ஏழை-பணக்காரன் என்கிற வர்க்கப் பிரிவினை மற்றும் ஒரு சில இன, மொழிப் பிரிவினைகளை மட்டுமே கேள்விப்பட்ட மேல்நாடுகளில் இதையெல்லாம் நம்பக்கூட மாட்டார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம் சாதிகள் இங்கே உண்டு. முற்படுத்தப்பட்ட சாதி எனப்படும் பார்ப்பனர்களிலேயே கூட ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன.

‘எல்லோரும் சமம்’ என்கிற கருத்தியலைக் கொண்ட சோஷலிஸம் இதற்கு தீர்வாக தோன்றுகிறது. நேரு முன்நிறுத்திய போலி சோஷலிஸத்தை இங்கே நினைத்துக்கூட பார்க்க வேண்டாம். அது வெறும் வார்த்தையளவில் சொல்லப்பட்ட சித்தாந்தம். துரதிருஷ்டவசமாக சோஷலிஸத்தை இங்கே முன்னெடுக்கக்கூடிய வெகுஜன கம்யூனிஸ்ட்டு கட்சிகளோ வர்க்கத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஐரோப்பாவில் எப்படி கம்யூனிஸம் அமல்படுத்தப்பட்டதோ, அதே மாதிரியை அச்சு அசலாக இங்கே இயந்திரம் மாதிரி பொருத்திப் பார்ப்பது நம்மூர் கம்யூனிஸ்டுகளின் பலவீனம். ஐரோப்பாவில் முதலாளி-தொழிலாளி என்று இரண்டே இரண்டு வர்க்கப் பிரிவு. மாறாக இந்தியாவில் நாலாயிரத்து சொச்சம் சாதிப்பிரிவுகள். இந்தியாவுக்கு ஏற்ற கம்யூனிஸ சிந்தனைகளை புதியதாக உருவாக்கியிருக்க வேண்டும். இந்தப் போதாமையின் காரணமாகதான் மார்க்ஸால், சேகுவேராவால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸப் பாதைக்கு வந்த இந்திய தலித்துகளும், பழங்குடியினரும் பிற்பாடு நக்சலியப் பாதைக்குச் சென்றார்கள்.

கம்யூனிஸ்டுகள் செய்யத் தவறியதை திராவிட இயக்கம் தனக்கான பலமாக உருவாக்கிக் கொண்டது. சோஷலிஸ கம்யூனிஸ்ட்டு சிந்தனைகளை ‘பிட்’ அடித்து, தென்னிந்திய சமூக சாதிப்பிரிவுகளை கணக்கில் கொண்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாகான புதிய சிந்தனைகளை உருவாக்கி மக்களிடம் பிரபலமானது. ஆனால் திராவிட இயக்கம் கூட சாதிப்பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வினைதான் வழங்கியிருக்க முடிகிறது. பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சியை துரிதமாக்கி செயல்படுத்திக் காட்டிய இவ்வியக்கம், தலித்துகளின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளில் ஈடுபாடு காட்டவில்லை. மாறாக திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் வளர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகளை நசுக்குவதை (முன்பு முற்படுத்தப்பட்ட சாதியினர் பிற்படுத்தப்பட்ட சாதியினரை செய்தது மாதிரி) வழக்கமாகிக் கொண்டார்கள். திராவிட இயக்கங்கள் வளர்ச்சி பெற்றதில் பக்க விளைவாக இன்றைய பிற்படுத்தப்பட்டவர் – தலித்துகள் சமூக மோதல் சூழலை நாம் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம். எனினும் கூட மனுதர்மத்தை முழுமையாக செயல்படுத்தப்பட விடாமல் முட்டுக்கட்டையாக முன் நிற்பதால், திராவிட இயக்கத்தின் தேவை இன்றும், இன்னும் சில ஆண்டுகளுக்கும் அவசியமென்றே கருதுகிறேன். சாதியம் ஒட்டுமொத்தமாக ஒழிவதற்கான ஒளிக்கீற்று தெரியும் வரையாவது இங்கே திராவிட இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியாக வேண்டும்.

முதலாளித்துவம் ஓரளவுக்கு சாதியத்தை மற்றுக்கக்கூடிய பண்பு கொண்டதாக தெரிகிறது. அறிவோ, பணமோ, ஆற்றலோ கொண்டவனாக இருந்தால், அவனையும் மேல்தட்டுக்கு ஈர்த்துக் கொள்வதில் இது சாதி பாகுபாடு எதையும் பார்ப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்ளலாம். அதே நேரம் முதலாளித்துவத்தின் முக்கிய விளைவாக வர்க்க வேறுபாடு அதிகரித்துக் கொண்டே செல்லுவது பெரும் ஆபத்தில் முடிகிறது. இந்தியா ஏழை நாடாக 90களுக்கு முன்பாக இருந்தபோது கூட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டதில்லை. வளரும் நாடாக, இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசு ஆகப்போகிறது என்றிருக்கும் சூழலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கே தொழில் செய்யமுடியாமல் கொத்து கொத்தாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். டங்கலின் காட் ஒப்பந்தம் வந்த காலக்கட்டத்தில் உறுதி கூறப்பட்ட விஷயங்கள் இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தியாவில் நிறைய பணம் இருக்கும். லட்சாதிபதி கோட்டீஸ்வரன் ஆவான். ஏழை நடுத்தரவாதியாக உயர்வு பெறுவான் என்றெல்லாம் நாக்கில் தேன் தடவி சொன்னார்கள். இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் சொன்னதில் பாதி நிறைவேறியிருக்கிறது. இந்தியாவில் இப்போது நிறைய பணம் இருக்கிறது. லட்சாதிபதிகள் கோட்டீஸ்வரன்களாக மட்டுமல்ல, குபேரன்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் ஏழைகளோ சிரமப்பட்டு வாழமுடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். முதலாளித்துவத்துக்கு சொல்லிக் கொள்ளக்கூடிய சாதியப் பண்புகள் குறைவு என்பதற்காக, அதை வரவேற்றுவிட முடியாது. அதனுடைய மற்ற பக்கவிளைவுகள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட கொடுமையானதாக இருக்கிறது.

நாம் இப்போது வைத்துக் கொண்டிருக்கும் படு வீக்கான ஜனநாயகத்தைக் கொண்டு இந்த விஷயத்தில் புல்லு கூட புடுங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஸ்டாலின், மாசேதுங் மாதிரி யாரேனும் இரும்பு மனம் கொண்ட தலைவர் முற்போக்கு எண்ணங்களோடு கூடிய ஒரு சோஷலிஸ சர்வாதிகாரத்தை இங்கே அமல்படுத்தினால் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்திய சமூகத்தின் சாதியப் பிரிவுகளை அடித்து நொறுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு இன்னும் ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குள் எல்லாம் நடந்து விடும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

20 ஜனவரி, 2012

நண்பன்

மூன்று வருடங்களுக்கு முன்பு 3 இடியட்ஸ் வெளியானபோது ஊரே கொண்டாடிக் கொண்டிருந்தது. ‘இன்னும் 3 இடியட்ஸ் பார்க்கலயா?’ என்று கேட்பவர்களிடம் ‘இல்லை’ என்றபோது ஏதோ புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு படம் பார்க்காதது அவ்வளவு பெரிய குற்றமா என்று நொந்துக் கொள்வேன். இந்தியாவே கொண்டாடிய 3 இடியட்ஸை பார்க்காமல் கவனமாக தவிர்த்து வந்ததற்கு ஒரே ஒரு காரணம் அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிக்க தமிழில் தயாராகப் போகிறது என்பதை கேள்விப்பட்டதால்தான். ஒரு படத்தை ரீமேக்கில் பார்க்கும்போது ஒப்பிடுதல்கள் ஏற்படுத்தும் அசவுகரியம் எரிச்சலானது. ‘நண்பன்’ எரிச்சலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலேயே இடியட்ஸைப் பார்க்கவில்லை. ஒருவழியாக WAIT IS OVER

நண்பன் – ஷங்கரின் படமுமல்ல, விஜய்யின் படமுமல்ல. அதனாலென்ன? ALL IS WELL

குஷி வந்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஆகிறது. குஷியில் தெரிந்த விஜய்யைவிட நான்கைந்து வயது குறைந்த விஜய்யோ இவர் எண்ணுமளவுக்கு இளமை கொப்பளிக்கிறது விஜய்யின் தோற்றத்தில். பாபா தோல்வியால் மனமுடைந்துப் போயிருந்த ரஜினிக்கு அவரது கேரியரில் சந்திரமுகி எவ்வளவு முக்கியமான படமோ, அதே அளவுக்கு விஜய்க்கு நண்பன் முக்கியமான படம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து பிளாக்பஸ்டர் ஹிட். பொங்கல் எப்போதும் இளையதளபதியை கைவிடுவதேயில்லை. தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு விஜய் நடிப்பார் என்பதை நம்பவே இயலவில்லை. விஜய்யின் டயலாக் டெலிவரி பல நேரங்களில் எரிச்சலூட்டும். வாயில் மாவா போட்டுக் குதப்பிக்கொண்டே உதட்டை மட்டும் அசைப்பது மாதிரி தெரியும். நண்பனில் இந்த ஸ்டைல் மிஸ்ஸிங் என்பது பெரிய ஆறுதல். பஞ்ச் டயலாக், ஓபனிங் சாங், எலும்புகளை நொறுக்கும் ஃபைட் சீனெல்லாம் இல்லாமல் விஜய் நடித்திருக்கிறார். இருந்தாலும் ஓபனிங்குக்கு மட்டுமாவது ஒரு அதிரடி ஃபைட் வைத்திருக்கலாமோவென்று தோணத்தான் செய்கிறது. அதனாலென்ன? ANIL IS WELL

கொழுக் மொழுக் அழகுப்புயலான அனுயாவை அக்கா ஆக்கிவிட்டு, ஈர்க்குச்சி இலியானாவை ஹீரோயின் ரோலுக்கு புக் செய்த ஷங்கரின் ரசனை என்ன ரசனையோ? அனுயா ரசிகர்கள் தியேட்டரில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். ரவிதேஜாவின் ‘கிக்’கில் கிக் ஏற்றிய இலியானா ஏனிப்படி இளைத்துப்போனார் என்றே தெரியவில்லை. எப்படியிருந்த இலியான இப்படி சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஆகிவிட்டிருக்கிறார். முகத்தைக் கண்டு அடையாளம் காண இயலாத அளவுக்கு தோற்றம் மாறிவிட்டிருக்கிறது. கடைசியாக இடுப்பைப் பார்த்துதான் இது இலியானா என்று தெரிந்துகொள்ள முடிந்தது. இடுப்பு சைஸ் இருபத்து நாலு இஞ்சாக இருக்கலாம். ILIYANA IS BAD

இந்தப் படத்தில் சத்யராஜை அனைவரும் பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கமான சத்யராஜின் பாடி லேங்குவேஜூம், டயலாக் டெலிவரியுமே அபாரமாக இருக்கும். சத்யராஜின் கேரியரிலேயே அவர் நடித்த படா மொக்கை கேரக்டரான வில்லாதி வில்லன் ‘பூ’வை மறுபடியும் ரீமேக் செய்து பிரின்சிபலாக நடித்திருக்கிறார். வாயை வேறு கவுரவம் சிவாஜி மாதிரி வைத்துக்கொண்டு குரல் மாற்றிப் பேசும்போது எரிச்சல் மண்டிக்கொண்டு வருகிறது. SORRY VIRUS

2002ல் ரோஜாக்கூட்டத்தில் பார்த்த ஸ்ரீகாந்த் பத்து வருடம் கழிந்தும் அப்படியேதான் இருக்கிறார். ஒரு இன்ச் கூட நடிப்பாற்றல் அவருக்கு வளரவேயில்லை என்பதுதான் சோகம். நல்லவேளையாக ஜீவாவும், சத்யனும் மாறி, மாறி அசத்துவதால், ஸ்ரீகாந்த் ரொம்ப உறுத்தவில்லை. குறிப்பாக கவுன்சலிங் காட்சியில் அடக்கி வாசித்து, சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் அசத்தும் ஜீவா.. க்ளாஸ்.. JEEVA IS TOO WELL

படம் பார்த்த சில நண்பர்கள் இப்படம் மிக மோசமான அரசியலை முன்வைப்பதாக சொல்கிறார்கள். ஏனோ எனக்கு அப்படி எதுவும் உறுத்தவில்லை. அல்லது அம்மாதிரி அரசியல் பார்வையோடு படம் பார்க்கத் தெரியவில்லை. மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது. ஜீவாவின் குடும்பப் பின்னணியை காட்டும் காட்சிகளில் ஏழ்மையை கேலி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. போதுமான இரக்கம் கோரவில்லை என்பதைத் தவிர்த்து இதில் வேறு பிரச்சினை இருப்பதாக தோன்றவில்லை. ஏழ்மையை யதார்த்தமாக காட்டுவதாக சொல்லிக் கொள்ளும் சில படைப்புகள் மோசமான கருத்தியல் வன்முறையை உருவாக்கவல்லவை. கல்விமுறை மாறவேண்டும் என்கிற படத்தின் அடிநாதத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இது சேத்தன் பகத் எழுதிய ஏதோ ஒரு நாவலின் ‘தீம்’. அவருக்கு கிரெடிட் கொடுக்கவில்லை என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு மாலன் எழுதிய ‘தப்புக்கணக்கு’ என்கிற சிறுகதை ஒன்றும்கூட இதே தீமில் எழுதப்பட்டிருக்கிறது. என்ன, அதில் எல்.கே.ஜி. மாணவி. இதில் என்ஜினியரிங் மாணவன். தேடிப் பார்த்தால் இதே தீமை நிறையப் பேர் எழுதியிருக்கலாம். அரசியல்ரீதியாக ஷங்கரை திட்ட அவரது பழைய படங்களே போதுமானது. ஒப்பீட்டளவில் அவரது முந்தையப் படங்களோடு ஒப்பிட்டால் நண்பன் இந்த அரசியல் விஷயத்தில் ஓரளவுக்கு பெட்டர் என்றே கருதுகிறேன். I MAY BE BLIND IN THIS CASE


இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை பாடல்கள் என்றே புரியவில்லை. எல்லா பாட்டும் ஸ்பீட் பிரேக்கர் தான். படத்தில் இருக்கும் ஒரே உருப்படியான பாடலான ‘ஃப்ரெண்டை போல யாரு மச்சான்’ டைட்டில் பாடலாக வீணடிக்கப்பட்டு விட்டது. மற்ற பாடல்கள் எதுவும் திரும்பக் கேட்கக்கூடிய ரகமாக கூட இல்லை. ஷங்கரின் படங்களிலும் சரி. விஜய்யின் படங்களிலும் சரி. இதுதான் படுமோசமான இசை ஆல்பம். MUSIC IS WORST

பிரசவத்தில் ஷங்கருக்கு என்னதான் ஆர்வமோ தெரியவில்லை. முந்தையப் படத்தில் ரோபோ பிரசவம் பார்த்தது. இந்தப் படத்தில் அணில் பிரசவம் பார்க்கிறது. இந்தக் காட்சிக்கு இன்னும் டாக்டர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று தெரியவில்லை. இம்முறையில் பிரசவம் சாத்தியமா என்றும் புரியவில்லை. ஷங்கருக்கு ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களில் க்ளைமேக்ஸ்கள் ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ‘நாம சாதிச்சிட்டோம்’ என்று கூறி கடைசியில் ஒருவரையொருவர் அமெரிக்கர்கள் கட்டிக் கொள்வார்கள். அதே பாணி காட்சிகள் இவரது படங்களில் தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க இளையத் தலைமுறைக்கான அட்வைஸ் மழை கொட்டோ, கொட்டுவென்று கொட்டுகிறது. வசனம் எழுதியவர் அப்துல்கலாமா அல்லது இறையன்புவா என்று டவுட்டு வந்துத் தொலைக்கிறது. OVERDOSE


‘ஃபீல்குட் மூவிஸ்’ என்று சொல்லக்கூடிய வகை தமிழில் அருகிக்கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் கடைசி காட்சியில் எல்லாப் பாத்திரங்களும் (வில்லன் உட்பட) வாய்நிறைய சிரித்துக்கொண்டு சுபம் போடுவார்கள். அரிதாகிவிட்ட இந்த க்ளைமேக்ஸ் கலாச்சாரம் நண்பனில் மீண்டும் மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு அடுத்த சில நாட்களில் மக்கள் படையெடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. ALL ARE FEELING VERY GOOD

19 ஜனவரி, 2012

புத்தகக் காட்சி - நடந்தது என்ன?

புயலடித்து மண்ணை புண்ணாக்கிவிட்டதால், புது வருடத்துக்கு புண்ணியத்தலமான புதுச்சேரிக்கு போகமுடியாத புராண சோகத்தில், புதிய தலைமைச் செயலகம் என்று சொல்லப்பட்ட புது மருத்துவமனைக்கு பின்புறமாக புதுசாக திறக்கப்பட்ட புட்மாலில் புறாக்கறி சாப்பிட்டுவிட்டு புது புல்லட்டில் புர்ரென்று புயல்வேகத்தில் புதுப்பேட்டை வழியாக சேத்துப்பட்டுக்கு போய் சேர்ந்தோம். இந்த ஒரு வாக்கியத்தில் ‘ஏனிந்த ‘பு’லவெறிடி?’ என்று கேட்டால், இது புத்தகச் சந்தையைப் பற்றிய புத்தி... மன்னிக்கவும் பத்தி. ’பு’னாவுக்கு ‘பு’னா போட்டு பேசினால் ஒருமாதிரியாக இலக்கியப் பிரதிக்கான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.

மந்தை மந்தையாக மக்கள் நுழைந்துக் கொண்டிருந்த சந்தையின் வாயிலில் கந்தை கந்தையாய் புத்தகங்களை போட்டு ஃப்ளாட்ஃபார வியாபாரம் விந்தையாய் நடந்துக் கொண்டிருந்தது. “இங்கிட்டு வாங்கினா பத்துரூவா. உள்ளே போய் வாங்கினா நூறு ரூவா” என்று மிரட்டியே நடைபாதை வியாபாரிகள் கல்லாவை ஃபுல்லாக்கினார்கள். பெரிய பதிப்பகங்களின் இலக்கியப் புத்தகங்கள் கருக்குலையாமல், புது மெருகோடு அச்சு மை வாசனையோடு கிடைத்தது. நேராக அச்சகத்திலிருந்து பழைய பேப்பர்காரனுக்கு பார்சல் பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.

தமிழக சபாநாயகர் தலைமைதாங்கி துவக்கி வைத்தார். சட்டசபையில் சத்தமும், சபையுமாக தலைவலியால் சோர்ந்துப் போனவருக்கு, எதை சொன்னாலும் விசில் அடிக்கும் கூட்டம் எதிரில் இருந்ததைக் கண்டு ஏகத்துக்கும் குஷி. சென்னை புத்தகக் காட்சியின் நிரந்தர சிறப்புப் பேச்சாளரும், நாடறிந்த இலக்கியவாதியுமான நல்லி குப்புசாமி செட்டியார் வழக்கமான டெம்ப்ளேட் உரையை இவ்வருடமும் வாசித்தார். “ஜெயக்குமார் சாருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு எப்படி நடந்ததுன்னா...” ரீதியில் பேச்சு போய்க்கொண்டிருக்க, ‘கொட்டாவி’ விட்டவாறே பிரும்மாண்ட அரங்கத்துக்குள் கூட்டம் நுழைந்தது. நாதஸ்வரமும், திருமதி செல்வமும் இல்லங்களை ஆளும் நம் சமகாலத்திலும் நம்பிக்கையோடு லட்சக்கணக்கான புத்தகங்களை மொத்தமாக இங்கே கொண்டு வந்து குவித்து வைத்திருக்கும் தமிழ் பதிப்பாளர்களுக்கு தன்னம்பிக்கைக்கான நோபல் பரிசு வழங்கலாம்.

புத்தகச் சந்தைக்குள் நுழைய நுழைவுக் கட்டணம் ரூ.5 மட்டுமே. ஆனால் இருசக்கர வாகனத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.10 (உயிருள்ள மனிதனுக்கு 5, அஃறிணையான பைக்குக்கு 10 என்று இதை நீங்கள் தத்துவர்த்தமாகவும் விரித்து சிந்திக்கலாம்). இதைத்தான் சுண்டக்கா காலணா, சுமைக்கூலி எட்டணா என்பார்கள். பார்க்கிங் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு டாஸ்மாக் வசூல்தான்.

நம் மக்களும் சும்மா இல்லை. கார் போட்டுக் கொண்டு, குடும்பத்தின் நண்டு, சுண்டுகளை எல்லாம் அழைத்துக் கொண்டு, ரோட்டையெல்லாம் டிராஃபிக் ஜாம் ஆக்கிக் கொண்டு, சந்தையில் கும்பலாக நடைபாதையை அடைத்துக் கொண்டு, லிச்சி ஜூஸ் குடித்து, மிளகாய் பஜ்ஜியும், அசோகா அல்வாவையும் வெட்டு வெட்டென்று வெட்டிவிட்டு.. கடைசியில் நூறு ரூபாய்க்கு ‘சமைப்பது எப்படி?’யும், ‘ரங்கோலி’யும் வாங்கிச் சென்றார்கள். கண்காட்சி என்கிற வார்த்தையைப் பார்த்ததுமே ஏதோ ‘வித்தை’ காட்டப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தோடு குவிந்துவிடுகிறார்கள். “இங்கன ஒண்ணுமே பார்க்குற மாதிரி இல்லியேப்பா!” என்றொரு டீனேஜ் இளசு தன் அப்பாவிடம் சலித்துக் கொண்ட ஸ்டால் சாகித்திய அகாதெமியுடையது. “நாங்கள்லாம் நாலஞ்சி பேரா சேர்ந்து, விஜய் பாட்டை சவுண்டா போட்டு டேன்ஸ் ஆடி காமிச்சாதான் எங்க ஸ்டாலுக்கு கூட்டம் வரும் போலிருக்கு!” என்று ஒரு தீவிர இலக்கியப் பதிப்பாளர் நம்மிடம் குறைபட்டுக் கொண்டார்.

இந்த வேடிக்கைக் காட்சி ஆர்வலர்களுக்கு சற்றும் குறையாதது இலக்கியப் புத்தக வெறியர்களின் அடாவடி. கூட்டத்தில் நாலு பேரை இடித்து, மிதித்துத் தள்ளி, கண்களில் இலக்கியவெறியும், மூளைக்குள் கொலைவெறியும் சரிசமமாக தாண்டவமாட, இராணுவ அராஜகத்தோடு முன்னேறி, “மொராக்கிய எழுத்தாளர் மெரகேஜ் முராகுஷ் அல்-மஜ்ரிப் அல் அவ்ஸாத்-தோட தமிழ் மொழிப்பெயர்ப்பு இங்கே கிடைக்குமா?” என்று கேட்டு ஸ்டாலில் இருக்கும் விற்பனையாளர்களை தாலியறுத்தார்கள். “இங்கே இரும்புக்கை மாயாவியோட முத்து காமிக்ஸ் தாங்க விற்கிறோம். எங்களுக்கு வேறெதுவும் தப்பு தண்டா தெரியாதுங்க” என்று இன்ஸ்பெக்டர் ஐயாவிடம் பவ்யமாக பதில் சொல்லும் விசாரணைக் கைதியாக ஸ்டால்காரர்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது. இலக்கியவெறி முத்திப்போன கவிஞர்கள் ஒருவரையொருவர் விரல்கடித்து விளையாடும் விரல்கடி இலக்கியமும் இவ்வருடத்தின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன்.

சிலருக்கு இலக்கிய வெறியோடு, குடிவெறியும் சேர்ந்து விட்டதால் கிழிந்தது சேத்துப்பட்டு. இம்மாதிரி குடிவெறியர்களுக்கு சைட் டிஷ்ஷாக வெளியே காரம் தூக்கலான மசாலா வேர்க்கடலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் கவனித்த குடிவெறியர் ஒருவர் காதல்பொங்க வாங்கிச்சென்ற புத்தகம் ‘குடி’யின்றி அமையாது உலகு.

இம்மாதிரி மற்ற எல்லா வெறிகளையும் விட தலைசிறந்த கொடூர வெறி எழுத்துவெறி. கண்காட்சிக்கு வருபவர்களில் பாதி பேர் எழுத்தாளராகவோ/கவிஞராகவோ இருந்துத் தொலைத்தார்கள். ஓரமாக சிவனே என்று தலையில் துண்டுப்போட்டு நடந்துச் செல்பவர்களை கையைப் பிடித்து இழுத்து, “ஆளப்பிறந்தவன்னு ஒரு சூப்பர் த்ரில்லர் நாவல் சார். சல்லிசு விலையிலே கொடுக்குறோம்” என்று கையில் ஏதோ புக்கை திணித்து ரவுசு விட்டார்கள். புத்தகத்தை திணித்தவர்தான் பின்னட்டையில் சிரித்துக் கொண்டிருக்கும் ஆளப் பிறந்தவனின் எழுத்தாளராக இருப்பார். திணிக்கப்பட்ட புத்தகத்தைக் கையில் வாங்கி பலியாடாக திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவர் பதில்பேச வாய்ப்பே கொடுக்காமல், புத்தகத்தின் கதையை வாயாலேயே மொத்தமாகவே சொல்லிவிடுவார் எழுத்தாளர். கடைசியில் பலியாடு, “சார்! நான் எலெக்ட்ரீஷியனுங்க... நூத்தி பத்தாம் நம்பர் ஸ்டாலிலேயே ஏதோ பீஸ் போயிடிச்சாம்.. சரிபண்ண வந்தேன்” என்று ஹீனமான குரலில் வாக்குமூலம் கொடுக்கும் வரை எழுத்தாளரின் விற்பனைவெறி வூடு கட்டி ஊழித்தாண்டவமாடியது.

கவிதைத் தொகுப்புகளை வாங்காமல் நகர்ந்தோமானால், அங்கேயே மாறுவேடத்தில் அமர்ந்துக் கொண்டு நம்மை சி.ஐ.டி.யாய் கண்காணித்துக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட கவிஞர்கள் கவிதையிலேயே சாபம்விடத் தொடங்கினார்கள். “ஏய் மனிதா (அடுத்தவரி) உனக்கு (அடுத்தவரி) புத்தகக்காட்சி (அடுத்தவரி) ஒரு கேடா? (கேள்விக்குறி)” என்று இன்ஸ்டண்டாக அறச்சீற்றக் கவிதை பாடிவிடுகிறார்கள். இந்தக் கருமாந்திரக் கவிதையும் அடுத்த புத்தகக் காட்சியில் ஏதோ ஒரு தொகுப்பில் இடம்பெற்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இந்த எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஏதோ ஒரு பிளாக்கோ, ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டோ வைத்திருக்கிறார்கள். தினம் தினம் தங்கள் புத்தகங்களுக்கு வரும் ‘செட்டப்’ விமர்சனங்களையும், புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும், அந்த ஸ்டாலுக்கு எந்த வழியில் போவது என்றெல்லாம் மொக்கைப் பதிவு போட்டே இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்த, தெரியாத எல்லோருடைய மெயில் முகவரிகளையும் டேட்டாபேஸாக கலெக்ட் செய்து, ‘உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்?’ பாணியில் ‘பரபரப்பாக பல லட்சம் காப்பிகள் விற்பனை ஆன என் புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று மெயில் அனுப்பி டார்ச்சர் செய்கிறார்கள். இணையத்தில் இயங்கும் பலரும் இந்த குபீர்/திடீர் எழுத்தாளக் கவிஞர் பெருமக்களுக்கு பயந்து புத்தகக் காட்சி சீஸனில் சந்நியாஸம் வாங்கிக் கொண்டு எங்காவது தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக இவ்வாண்டிலிருந்து திடீர் மொழியார்வலர்களுக்கு இலக்கிய ஆர்வமும் தூண்டப்பட்டு விட்டது. இதனால் நாளொரு போராட்டமும், பொழுதொரு புரட்சியுமாக புத்தகக்காட்சி அரங்கில் அரசியல் கலகக் கோஷமும் ஆங்காங்கே கேட்டது. இம்மாதிரி கலகங்களால் தங்கள் மவுசின் பவுசு போய்விடுமோ என்று பயந்துவிட்ட, லேட்டஸ்ட் புரட்சியாளர்களான சில சுமார் பிரபலங்கள் அவ்வப்போது அதிரடி விசிட் அடித்து வைக்க, ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ ரேஞ்சில் அவரது ‘அல்லக்ஸ்’ பாண்டியன்கள் பேக்கிரவுண்டில் பின்பாட்டு பாட.. இதுமாதிரி ஏகப்பட்ட தீப்பொறி திருமுகங்களால் அனல் பறந்தது புத்தகக் காட்சியில்...

தலக்காணி சைஸில் நாவல் எழுதினால்தான் விருது என்று பாராளுமன்றத்தில் ஏதாவது சட்டம் போட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. ஆயிரத்துக்கும் குறையாத பக்கங்களில் ஆங்காங்கே ஸ்டார் எழுத்தாளர்களின் நாவல்கள் வாசகர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு ஸ்டாலில் சம்பந்தப்பட்ட புக்கையே தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்தார் பதிப்பாளர் ஒருவர். கடந்த ஆண்டில் விருது வாங்கிய இம்மாதிரியான தலக்காணி நூல் ஒன்றினை வாசகர் ஒருவர் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென புத்தகம் கைநழுவி அவரது காலில் விழுந்து கால் உடைந்து, அவர் கவலைக்கு இடமாகிவிட.. பெரும் களேபரம் ஆனது. இவ்வருடம் புதியதாக வந்த இன்னொரு தலக்காணி சைஸ் புத்தகத்தை வாங்கிய வாசகர் ஒருவர் தனது கார் டிக்கியில் வைத்து எடுத்துச் செல்ல, கார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரம் தாங்காமல், குடைசாய்ந்து கவிழ்ந்துவிட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலால் சென்னையே ஸ்தம்பித்தது. நிலைமை இவ்வாறிருக்க நோபல் பரிசு பெறவிருக்கும் தமிழின் நெ.1 எழுத்தாளர் என்று அவரது ரசிகர்களால் புளகாங்கிதப்பட்டு சிலாகிக்கப்படும் இந்திய ஞான மரபு எழுத்தாளர் ஒருவர் நாலாயிரத்து சொச்சத்து பக்கத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு சந்தைக்கு இப்புத்தகம் வந்துவிடுமென கிசுகிசுக்கப்படும் நிலையில், கண்டெய்னர் லாரியை வாடகைக்கு கொண்டுவந்துதான் இப்புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுச்செல்ல நேரிடுமோ என்று எதிர்காலத்தை நினைத்து பீதியடைந்துப் போயிருக்கிறார்கள் வாசகர்கள்.

வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு நேரில் வந்து தனது வாசகர்களுக்கு திருப்பள்ளியெழுச்சி நடத்தி தரிசனம் தரும் அல்டிமேட் ரைட்டர் ஒருவர் இவ்வருடம், புத்தகக்காட்சியில் கக்கூஸ் சரியில்லை என்று புறக்கணித்திருக்கிறார். இதனால் கொதித்துப் போன அவரது வாசகர்கள் சிலர் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட.. தமிழ்நாட்டில் பெரும் கலாச்சாரக் கலவரம் மூண்டுவிடுமோ என மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து எழுத்தாளரோடு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தகக் காட்சிக்கு எழுத்தாளர் வருகை தரும்போது, அவருக்கு மட்டும் ஏசி குளிர்காற்று வீசும் வண்ணமும், அவருக்கென பிரத்யேகமாக ஐந்து நட்சத்திர விடுதி வசதியிலான கக்கூசும் ஏற்பாடு செய்வதாக மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. இதையடுத்து அல்டிமேட் ரைட்டர் இரண்டு நாட்களுக்கு மட்டும் வாசகர்களுக்கு தரிசனம் தர ஒப்புக் கொண்டார்.

இன்னொரு உச்ச எழுத்தாளரோ வருடாவருடம் தன்னுடைய உச்ச இயக்குன நண்பர் சாரோடு பந்தாவாக வலம் வருவது வழக்கம். எழுத்தாளரைப் பார்க்க வருகிறார்களோ, இல்லையோ இயக்குன சாரைப் பார்க்க கூட்டம் கும்மும். துரதிருஷ்டவசமாக அந்த உச்ச இயக்குனர் சார் ஏதோ படவிவாதத்தில் பிஸியாகிவிட, தனியாகச் சென்றால் ‘ஜிலோ’வென ஈயடிக்குமே, இமேஜ் என்னாவது என்கிற தர்மசங்கடத்தில் புத்தகக்காட்சிக்கு வரவே இல்லை உச்சம்.

இம்மாதிரி நிறைய கூத்துக்கள் குரூப்பு சேர்ந்து கும்மாளமாக கும்மியடித்தாலும் ‘புத்தகக் காட்சி’ தனக்கே தனக்கேயான தணிக்குணத்தோடு வாசகக் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வனை இன்னும் தேடி வருகிறான் இளம் வாசகன். ஆராய்ச்சி நூல்களையும், அபுனைவு நூல்களையும், கிளாசிக்குகளை தேடித்தேடி வாசிக்கும் தீவிர வாசகர்கள் எந்தவித ஆரவாரமுமின்றி தங்களுக்குத் தேவையானதை அள்ளிச் செல்கிறார்கள். சிறுபதிப்பாளர்கள் மூச்சுவிட முடிகிறது. எவ்வளவு ஆடம்பரங்கள், அலங்காரங்கள் அலட்டிக் கொண்டிருந்தாலும் சந்தேகமேயில்லாமல் இது வாசகர்களின்/பதிப்பாளர்களின் திருவிழா. தொல்லைக்காட்சிகளும், மொக்கைச் சினிமாக்களும் அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வாசக மனப்பரப்பை மீண்டும் விழிப்படையச் செய்யும் முயற்சி என்பதால் அறிவுலகம் மட்டுமல்ல, அனைவருமே கொண்டாடவேண்டிய நம் விழா.

18 ஜனவரி, 2012

வன்முறைக்கு பலியாகிறதா வாலிபம்?

அந்த பேருந்துக்குள் இருந்து திடீரென்று திமுதிமுவென்று இறங்கியவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை, கத்தி மாதிரியான ஆயுதங்கள் இருந்தது. கீழே நின்றிருந்தவர்களை ஓட ஓட விரட்டி தாக்க அந்த வளாகம் முழுக்க இரத்தக்களரி. இருவருக்கு மோசமான காயம்.

ஒரு இருபது பேர் உருட்டுக்கட்டை மாதிரியான ஆயுதங்களோடு அந்த இளைஞனை துரத்திச் செல்கிறார்கள். துரத்துபவர்கள் கையில் கிடைத்த கற்களையும் வீசிக்கொண்டே துரத்துவதால், கண்களில் பீதியோடு உயிர்பிழைக்க ஓடுகிறான். இனியும் ஓடமுடியாது என்ற நிலையில் வழியில் இருந்த ஆற்றில் குதிக்க, மறுநாள் அவனது உடல் போலிஸாரால் கண்டெடுக்கப் படுகிறது.

இந்த இரண்டு சம்பவங்களுமே ஏதோ தெலுங்கு டப்பிங் படத்தில் இடம்பெற்ற காட்சியல்ல. தலைநகர் சென்னையில் அரசுக் கல்லூரி வளாகங்களில் நடைபெற்றவை. தாக்கியவர்களும், தாக்கப்பட்டவர்களும் மாணவர்களே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான மோதல் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டு தமிழகமே அதிர்ந்தது நினைவிருக்கலாம்.

அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் இதுபோன்ற செய்திகளால் அரசுக் கல்லூரி மாணவர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்கிற சித்திரம் சாதாரண பொதுஜனத்துக்கு ஏற்பட்டு விட்டது.

உண்மையிலேயே என்னதான் நடக்கிறது... மாணவ சமுதாயம் வன்முறை வெறியாட்டங்களுக்கு சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறதா.. பின்னணியில் ஏதேனும் சுயநல சக்திகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? மதம், சாதி, அரசியல் என்று வேறு ஏதேனும் பிரிவினைக் காரணிகள் இம்மாதிரி வன்முறைகளுக்கு காரணமா? கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களிடம் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம் – குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் – மிக மோசமான எல்லைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து ‘புதிய தலைமுறை’ களத்தில் இறங்கி அரசுக் கல்லூரிகளில் விசாரணை மேற்கொண்டது. தனியார் கல்லூரிகளிலும் வன்முறை உண்டு. ஆனால் அது வேறு மாதிரியானது. தனியார் கல்லூரிகளில் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்பட முடியாத ராக்கிங் பிரச்சினை, அரசுக் கல்லூரிகளில் சுத்தமாக இல்லவே இல்லை என்பதும் நம் விசாரணையில் தெரியவந்தது.

“நமது மாணவர்கள் சொக்கத் தங்கங்கள். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் காலத்தில் களிமண் மாதிரிதான் இருப்பார்கள். அவர்களை நல்ல முறையில் வடிவமைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கிறது. குறிப்பாக கல்லூரிக்கும், அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் செல்லும் பாதையை அவர்களது வாழ்க்கைச் சூழல்தான் முடிவெடுக்கிறது. மாணவ சமூகம் வன்முறைப் பாதைக்குச் செல்கிறது என்றால், வெறுமனே அவர்களை நோக்கி குற்றம் சாட்டிவிட்டு நாமெல்லாம் தப்பிக்க நினைப்பது அயோக்கியத்தனம். மாணவர்களிடையே வன்முறை என்பது சமூகம் உற்பத்திச் செய்த சாத்தான்” என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.

பேராசிரியரின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். அரசுக் கல்லூரிகளில் பயிலவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட நிலையில் இருந்து வருகிறார்கள். காட்டில் வளரும் செடிகளை ஒத்தவர்களாக பெற்றோர்களால் பாதுகாக்க, பரமாரிக்கப்படாத நிலையில் இருக்கிறார்கள். நிறைய பேர் முதல் தலைமுறையாக பட்டப்படிப்புக்கு வருகிறார்கள். கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு இவர்கள் என்ன படிக்கிறார்கள், கல்லூரிக்கு ஒழுங்காக செல்கிறார்களா என்றெல்லாம் கணிக்கவோ, கண்காணிக்கவோ இயலவில்லை.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, வீட்டுவேலை செய்யும் அம்மாவால் படிக்கவைக்கப்படும் இளைஞர்களும் அதிகம். Broken families என்று சொல்லப்படும் பெற்றோரின் கருத்துவேறுபாட்டால் சிதறிய குடும்பங்களில் இருந்து படிக்க வருபவர்கள், பெற்றோரே இல்லாமல் உறவினர்கள் உதவியோடு படிக்கும் மாணவர்கள் என்று ஒவ்வொரு கல்லூரியிலும் கண்ணீர்க் கதைகள் ஏராளம்.

உதாரணத்துக்கு மகேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எடுத்துக் கொள்வோம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார். இவரையும் சேர்த்து மூன்று குழந்தைகள். தாய் தனது பொறுப்பை துறந்துவிட்ட எங்கோ சென்றுவிட, மூவரும் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள். உறவினரும் ஏழ்மையானவர்தான். தங்களது உணவுக்கும், கல்விக்கும் இவர்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இரவு வேளைகளில் சில தொழிற்சாலைகளில் பணியாற்றி, பகலில் கல்லூரிக்குச் செல்கிறார் மகேஷ்.

“இம்மாதிரி மாணவர்களை தகப்பனாக நின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரியர்களுக்குதான் இருக்கிறது” என்கிறார் நம்மிடம் பேசிய பேராசிரியர். கண்காணிப்பு இல்லாததாலும், வறுமைச் சூழலும் இவர்களை எந்த குறுக்கு வழிக்கு வேண்டுமானாலும் திருப்பக்கூடும் என்பது அவரது அச்சம்.

பேராசிரியரின் அச்சத்துக்கு ஏற்ப ஆசிரியர்-மாணவர் உறவின் நெருக்கம் குறைந்து வருகிறது. வகுப்பில் பாடம் எடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியத் தொழிலை வருமானத்துக்காக எடுத்துக் கொள்பவர்களும் பெருகிவருகிறார்கள். வகுப்பறை தாண்டிய மாணவர்களின் செயல்பாடுகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மீது வைக்கப்படுகிறது. பெற்றோர்களால் கவனிக்கப்படாத மாணவர்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டாலே பெருமளவில் இப்பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

நாம் விசாரித்ததில் மாணவர்களுக்கிடையே விரோதம் ஏற்பட ‘பஸ் ரூட் கலாச்சாரம்’ முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. மிகச்சமீபத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக இதைதான் காவல்துறையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. சென்னையின் அம்பத்தூர், பாடி, அயனாவரம் ஆகிய தடங்களில் இருந்து வரும் 27-எச், 27-பி ஆகிய பேருந்துகளில் வந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், ராயபுரம், காசிமேடு, சுங்கச்சாவடி ஆகிய தடங்களில் இருந்து வரும் 6-டி பேருந்தில் வரும் மாணவர்கள் மற்றொரு குழுவாகவும் உருவெடுத்திருக்கிறார்கள். கல்லூரித் தேர்தலின் போது இந்த இரு தட மாணவர்களுக்குள்ளும் சிறு சிறு உரசல்கள் ஏற்பட, நீறுபூத்த நெருப்பாக இருதரப்பினரின் நெஞ்சிலும் வன்முறை பற்றியெரியத் தொடங்கியது. இதன் உச்சமாகதான் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கல்லூரி வளாகத்திலேயே ஆயுதங்களோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பஸ்ரூட் கலாச்சாரம் என்பது வாழையடி வாழையாக தொடர்கிறது. சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை உருவாக்குவது என்பது இக்கலாச்சாரத்தின் முக்கிய அங்கம். பகுதிவாரியாக இம்மாதிரி உருவாகும் குழுக்கள், மற்ற பகுதி குழுக்களோடு கேலி கிண்டலில் ஈடுபடுவது முற்றிப்போய்தான் வன்முறையில் இறங்குகிறார்கள். சென்னையில் பிரசித்தி பெற்ற ‘பஸ் டே’ கலவரங்கள் உருவாவது இம்மாதிரிதான். தொடக்கத்தில் மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய ‘பஸ் டே’ இன்று வன்முறை கலாச்சாரமாக உருவெடுத்து, தடை செய்யப்பட்டிருக்கிறது.

பஸ்ரூட் கலாச்சாரம் மாதிரியே மாணவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் இன்னொரு கலாச்சாரம் ஹாஸ்டல் கலாச்சாரம். வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ஒரு தரப்பாகவும், நகரங்களில் வீடுகளில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் இன்னொரு தரப்பாகவும் பிரிகிறார்கள். படுமோசமாக பராமரிக்கப்படும் ஹாஸ்டல்களில் இருந்து வரும் மாணவர்கள், வீட்டு மாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். இதனால் ஏற்படும் உரசல்களும் பெரும் சண்டையாக மாறுகிறது.

“இம்மாதிரி மோதல்களை பொறுக்கித்தனம், ரவுடித்தனமாக மக்கள் பார்க்கிறார்கள். இது சமூகத்தின் பிரதிபலிப்புதான். சமூகம் எப்படி இயங்குகிறதோ, அம்மாதிரிதான் மாணவர்களும் இயங்குவார்கள். இப்போதுதான் திடீரென இம்மாதிரி நடப்பதாக கருதுவது சரியல்ல. எல்லா தலைமுறையிலுமே வாலிபக் குறும்புகள் உண்டு. அரசியலற்றப் போக்கு திட்டமிட்டு உருவாக்கப் படுவதால் சமூகப் பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய மாணவர் இனம் இம்மாதிரி, வெட்டிச் சண்டைகளில் சக்தியை வீணடிக்கிறார்கள்” என்று கவலைப்படுகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் (RSYF) மாநில அமைப்பாளர் கணேசன். ஊடகங்கள் (குறிப்பாக சினிமா), அரசியல்வாதிகள், அரசு திட்டமிட்டு இம்மாதிரியான ‘விட்டேத்தி கலாச்சாரத்தை’ உருவாக்குகிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். தனியார் மய ஊக்குவிப்பிற்காக அரசுக் கல்லூரிகளை தரமிழக்க செய்ய வைக்கும் ஒரு முயற்சியின் விளைவாகவே மாணவர்களிடம் வன்முறை பெருகுகிறது என்கிறார் இவர்.

சமீபத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய ஒரு மாணவனிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. சினிமாக்களில் காட்டப்படும் கல்லூரி மாணவன் பைக் வைத்திருக்கிறான். நல்ல ஆடை ஆணிகிறான். நகைகள் அணிந்திருக்கிறான். அம்மாதிரி நானும் வாழ நினைத்தேன் என்கிறான். கடந்த ஆண்டு வெளியான சினிமாப்படம் ஒன்றில் காதலியோடு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குச் செல்ல கதாநாயகன் திருட்டில் ஈடுபடுவது போன்ற காட்சி இருந்தது. அந்தக் காட்சி இம்மாணவனைப் பாதித்து, அதேமாதிரியான வழிமுறையில் இறங்கினான் என்பதுதான் இங்கே அதிர்ச்சியான விஷயம். கடந்த ஆண்டிலேயே அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படும் திரைப்படம் ஒன்றும்கூட கொள்ளையையும், வன்முறையையும் தவறல்ல என்று போதிக்கிறது. சினிமா நாயகர்களை தங்கள் ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளும் இளைஞர்களின் மனதை இது பாதிப்பது இயல்பாக நடக்கக்கூடியதுதான். தன்னைத்தானே ஹீரோ என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவனும், தன்னைப் பாதித்த சினிமா ஹீரோவின் பாத்திரமாகவே மாறிவிடுகிறான்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாணவர்களை கூட்டம் சேர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்வதும், அவர்களை கல்வி சார்ந்த நோக்கத்தில் இருந்து தடம் மாற செய்கிறது. சில காலம் முன்பாக தென்மாவட்டம் ஒன்றில் நடந்த அரசியல் கட்சி மாநாடு ஒன்றுக்கு சென்னையின் அரசுக்கல்லூரி ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தபட்சம் ஐநூறு மாணவர்களை அழைத்து வந்தாகவேண்டும் என்கிற வாய்மொழி உத்தரவு அக்கட்சியின் மாணவர் அணிக்கு விடப்பட்டிருந்ததாம். இவ்வகையில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவர்கள், ஏதேனும் பிரச்சினைகளின் போது, “நான் யாரோட ஆளுன்னு தெரியுமில்லே?” என்று எதிர்த்தரப்பை பயமுறுத்துவது சகஜமாகிவிட்டது. ஒருக்கட்டத்தில் ஏதேனும் உள்ளூர் அரசியல் தலைக்கு அடியாள் மாதிரி செயல்படக்கூடியவனாகவும் அம்மாணவன் மாறிவிடுகிறான்.

இம்மாதிரி சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அப்பாவி மாணவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஐம்பது முதல் அதிகபட்சமாக நூறு மாணவர்கள் வரை மட்டுமே அடாத செயல்களில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்களும், நிர்வாகமும் இவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்கிறது. பேசிப்பேசியே இவர்களை சரியாக கொண்டுவந்துவிடலாம் என்றாலும் கூட, காவல்துறையிடம் பொறுப்பை தள்ளிவிட்டுவிடுகிறார்கள். இப்பிரச்சினையை காவல்துறையோ ‘க்ரைம்’ என்கிற வகையில் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. காவல்துறை கல்லூரிக்குள் நுழைகிறது என்றாலே மாணவர்களுக்கு வெறி ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் – நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தில், “நீங்கள் எங்களை என்ன வேணும்னாலும் திட்டுங்க, என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க. ஆனா போலிஸு மட்டும் உள்ளே வந்துடக்கூடாது” என்று ஆவேசமாக கல்லூரி முதல்வரை நோக்கி குரலெழுப்பினான் ஒரு மாணவன். போலிஸுக்கு அடிக்க மட்டுமே தெரியும் என்பது மாணவர்களின் வாதம்.

“பஸ் ரூட் மாதிரி தனித்தனி குழுவாக ஒன்றுபடும் மாணவர்களின் ஒற்றுமையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும்” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார்.

மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் விட மதுதான் மாணவர்களின் முதன்மையாக பிரச்சினையாக மாறியிருக்கிறது. மிக சுலபமாக ஒவ்வொரு மாணவனுக்கும் மது கிடைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் மாணவப் பருவத்திலேயே பலரும் மதுவுக்கு அடிமையாகிவிடக் கூடிய வாய்ப்பிருக்கிறது. குடிபோதைக்கு அடிமையாகிறவர்கள் எதற்கும் பயனில்லாமல் வன்முறை பாதைக்கு செல்வது தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. குடிக்க காசு கிடைக்காத மாணவர்கள் வீடுகளில் சண்டை போடத் தொடங்கி, தெருச்சண்டை வரைக்கும் தயாராகி விடுகிறார்கள். வாராவாரம் தன்னுடைய பணக்கார நண்பன் ஒருவனின் வீட்டுத் தோட்டத்தில் தோட்டவேலை செய்யும் சென்னை மாணவன் ஒருவன், அதில் கிடைக்கும் கூலியை டாஸ்மாக்குக்கு தாரை வார்க்கிறான் என்பதைக் கண்டபோது கிடைத்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

ஓடும் பஸ்ஸின் மீது ஏறி நிற்கும் தைரியம் நம் யாருக்குமில்லை. அம்மாதிரி நிற்கும் மாணவனின் தைரியத்தை சரியான பாதையில் திருப்பிக் கொள்ள முடியாதது சமூகத்தின் குற்றம்தானே தவிர, மாணவ சமூகத்தின் குற்றமல்ல. மாணவக் கலாச்சாரம் இங்கே சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்த கடமை கல்வியாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது.

அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மட்டுமல்ல. சமச்சீர்க் கல்வி, முல்லைப்பெரியாறு, ஈழம் என்று சமகாலப் பிரச்சினைகளிலும் நம் மாணவர்கள் நியாயமான முறையில் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே பிளவினை உண்டாக்கும் சக்திகளை அடையாளங்கண்டு வன்முறைப் போக்கினை தவிர்க்க வேண்டுமே தவிர, மாணவர்களை கிரிமினல்களாய் நடத்தும் போக்கு நிச்சயம் ஆதரிக்கத்தக்கதல்ல.

அரசியல் என்பது கெட்டவார்த்தை என்பதாக மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு, அவர்களது அறிவு திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகிறது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அரசியல் பேசும் சுதந்திரம் கல்லூரி மேடைகளில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜனநாயகம் அங்கே எல்லா மாணவர்களையும் மேடையேற்றி நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசும் திறனை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோன்ற சூழல் நம் கல்லூரி வளாகங்களிலும் மலரவேண்டும்.

கோஷ்டி சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து போராடிதான் புராதனப் பிரசித்திப் பெற்ற பச்சையப்பன் கல்லூரியின் இடங்களை, மெட்ரோ ரயில் திட்டத்திடமிருந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள்தான் இருள்சூழ்ந்த சமகாலத்தில் நமக்குத் தெரியும் நம்பிக்கை ஒளிக்கீற்று.


சில தீர்வுகள் :

1. அரசு கல்லூரிச் சூழல் கல்வி கற்க ஏதுவாக இருப்பதில்லை. ஆசிரியர்களே கூட பயன்படுத்த முடியாத மோசமான கழிப்பிடங்களை சென்னையின் மூன்று கல்லூரிகளில் கண்டோம். கல்லூரிகளிலேயே இந்த நிலைமைதான் என்றால் மாணவர்கள் தங்கும் விடுதிகளின் நிலைமை படுமோசம். மாணவர்கள் வாழ்வதற்கான, கல்வி கற்பதற்கான நிம்மதியான சூழலை ஏற்படுத்தியாக வேண்டும்.

2. பாடத்திட்டங்களில் மாற்றம் அவசியம். கடைசி ஒரு மாதம் படித்தாலே தேறிவிடலாம் என்கிற நிலை இருப்பதால், தன் கல்லூரிப் பருவத்தை ஜாலியாக வாழ்ந்துமுடிக்க முடிவெடுக்கிறான் மாணவன். ஆண்டு முழுக்க கல்வியில் கவனம் செலுத்தக்கூடிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் கல்வியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

3. வருகைப் பதிவேடு அட்ஜஸ்ட் செய்வது என்கிற மோசமான கலாச்சாரம் ஒன்று அரசுக் கல்லூரிகளில் இருக்கிறது. தனியார் கல்லூரிகளைப் போன்று யாரும் திருத்தமுடியாத ஆன்லைன் அட்டெண்டன்ஸ் உருவாக்கிட வேண்டும்.

4. நூலகங்களை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பெயருக்கு ஒரு நூலகமும், நூலகரும் இருக்கிறார்கள். மாணவப் பருவத்தில் வாசிப்பு பண்படுத்தும் என்பதால் போதுமான நூலகர்களை நியமனம் செய்து, நிறைய நூல்களும், அவற்றை வாசிக்க ஏதுவான சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

5. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது பெற்றோர் தங்களது மகனது வகுப்பு ஆசிரியரை சந்திக்க வேண்டும். இதன்மூலமாக கல்லூரியில் மகனது நடவடிக்கைகளை பெற்றோரும், கல்லூரி தாண்டிய அளவில் தன் மாணவனது நடவடிக்கைகளை வகுப்பாசிரியரும் அறிந்துக்கொள்ள முடியும்.

6. மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையும் தனித்தனியாக கண்டறியப்பட்டு, அவர்களது விருப்பமான துறையில் வளர்வதற்கு ஏதுவான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இசை, ஓவியம் போன்ற கலைத்துறைகளில் ஆர்வமிருப்பவர்கள் அத்துறையில் பயிற்சிபெறவும், தங்கள் திறமையை வெளிக்காட்டவும் களம் அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே விளையாட்டு வீரர்களையும் சரியாக அடையாளம் கண்டறிந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

7. ஒவ்வொரு கல்லூரியிலும் என்.சி.சி. சிறப்பாக செயல்பட்டாலேயே பல ‘அடாத’ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

16 ஜனவரி, 2012

நடுநிசி அழகிகள்!

போன மாசத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழேமுக்கால் மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் வாங்கப் போயிருந்தேன். ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் பொருத்தினேன். காலைக்கடனுக்கான உந்துதலுக்கு சிகரெட்தான் ஒரே கதி. தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அண்ணாச்சி பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.
“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுய்யா! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.
“சொல்லுங்கண்ணே!” தனியார் டிவி ஒன்றுக்கு செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து  (அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம்) எங்கள் ஊரில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள். அண்ணாச்சியும் இப்போது அப்படித்தான் ஏதோ ஒரு மேட்டரை ஆரம்பிக்கிறார்.
“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி தம்பி. நட்டநடு நைட்டுலே என்னென்னவோ அசிங்கமெல்லாம் நடக்குது.. சொல்லவே ஆபாசமா இருக்குது” காதல் பட தண்டபாணி தோற்றத்தில் இருந்த அண்ணாச்சி, வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னபோதும், அந்த காட்சி காண சகிக்கக்கூடியதாக இல்லை.
இருப்பினும், ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. டி.வி.யில் இன்னொரு பேட்டிக்கு சான்ஸு இருக்கே நமக்கு.
“என்னாச்சுண்ணே!”
“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுவளுக்கும், மொள்ளமாறிப் பயலுவளுக்கும் நல்லா வசதியாப் போச்சி”
எங்கள் ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஈஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பழம் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.
பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் முன்பை விட மோசமாக அசுத்தமாகிவிடும்.
அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊர்க்குளத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் அதிசயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போய் லம்பாக சம்பாதிக்கிறார்கள் எங்கள் ஊர் பார்ட் டைம் மீனவர்கள்.
ஊரிலிருக்கும் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்து வைத்துவிட்டு (நாய் ஊசி போடும் டாக்டர் செல்வமணியே தன் பினாமியான நர்ஸை வைத்து இந்நாய்களை வளர்ப்பதாக ஒரு தகவல்), இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே தினமும் நடக்கும்.
இத்தகைய வரலாற்று, சமகாலச் சிறப்புகள் வாய்தத குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேடான குளத்துக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாசம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது.
மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.
“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”
இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி கொஞ்சமாவது இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.
கடையை விட்டு பேசிக்கொண்டே வெளிவந்தோம். வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.
“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் ‘டுபுக்கு டுபுக்கு’ன்னு கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கன ஒரு ஷேர் ஆட்டோ நின்னுட்டு இருந்திச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க” மேட்டர் சூடுபிடித்தது.
“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ” - ‘உம்’ கொட்டுவதற்குப் பதிலாக சும்மா அண்ணாச்சியை தூண்டிவிட்டேன்.
“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. ஃபுல் மேக்கப்பு. இருட்டுலே கூட நல்லா முகம் தெரிஞ்சது. ஒரு மாதிரி பொண்ணுதான். அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்” – இத்தனை வயசானாலும் அண்ணாச்சிக்கு அறிவே இல்லை. பிட்டுப்படம் பார்ப்பது போல இதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துத் தொலைத்திருக்கிறார்.
“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”
“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். முகத்தைப் பார்த்தா எனக்கு தெரியாதா என்ன?”
“அப்புறம் என்னாச்சி?”
“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.
“நல்ல வேளை செஞ்சீங்க!”
“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. இந்தப் பிரச்சினை நமக்கு தினம் தினம் தொடரும் போலிருக்கு” என்றார்.
“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன். தலைவர் என்றால் பஞ்சாயத்துத் தலைவர். அவர்தான் எங்க ஊரு நாட்டாமை. பார்ப்பதற்கு நட்சத்திர ஆமை மாதிரி இருப்பார்.
 ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) ஏற்பட்டது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்.
ஆனாலும் பராபரியாக குளத்துக்குள் இரவுகளில் நடக்கும் கும்மாங்குத்து பற்றி தினமும் நிறைய செய்திகள் வந்துக் கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் ஆளாளுக்கு தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுமாதிரி ஏதாவது விஷயம் சொல்பவர்களிடம் ‘நியூஸ் சோர்ஸ்’ என்னவென்று கேட்டபோது, எல்லோருமே அண்ணாச்சியையே கைகாட்டினார்கள்.
போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று ஒரு கெத்துக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து, ஊருக்கு பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் நமக்குண்டு.
இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை போதிய தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.
அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத பாலுமகேந்திரா பாணி தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு வழக்கமாக நான் கொடுக்கும் சிக்னலை கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் அந்த மூதேவி. இவனுகளை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன்.
நக்சல்பாரிகளுக்காக ஆதரவாக களமிறங்கும் பழங்குடியினர் கெட்டப்பில் அவன் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பில் சிகப்பு பார்டர் போட்ட கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். விருமாண்டி பசுபதி மாதிரி நெற்றியில் அடர்த்தியான விபூதிப்பட்டை வேறு. பட்டைக்கு நடுவில் பெரிய குங்குமப்பொட்டு. கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாகதான் இருந்தது.
குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில், அசட்டுத் துணிச்சலில் இருவரும் பயணித்தோம். அதாவது பூனைநடை நடந்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.
அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.
“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் ஒரு கையில் பீர்பாட்டிலோடும், மறுகையில் சிகரெட்டோடுமாக சொன்னான்.
முரளி குரல் கொடுத்தான். “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”
“இல்லேண்ணா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.
இதெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்க வேண்டும். ஆனாலும் சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
 ன்று காலை பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன்.
தெருமுனை சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.

“ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி!”
“அத வுடுப்பா. விஷயம் தெரியுமா? நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”
“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”
“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”
ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.
(நன்றி : சூரிய கதிர் - பொங்கல் 2012 இதழ்)

14 ஜனவரி, 2012

பிசினஸ்மேன்

தொண்ணூத்தி மூன்றிலோ, நான்கிலோ டங்கலின் காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்போது சொன்னார்கள். இனிமேல் இந்தியாவில் பணம் மழையாக கொட்டப் போகிறது. ஏழைகளை அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியுமென. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தோமானால் அந்த கூற்றில் பாதி மெய்யாகியிருக்கிறது. இந்தியாவில் பணம் மழையாக கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழைகள் மறைந்துவிடவில்லை. மாறாக சாமர்த்தியம் இருப்பவன் எழுநூறு தலைமுறைக்கும் சொத்து சேர்த்துக் கொள்ளலாம், சாமர்த்தியமற்றவன் தூக்கு போட்டு சாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இச்சூழலை மிகச்சரியாக பிரதிபலித்து கடந்த ஆண்டு தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவ்வாண்டு தெலுங்கில் பிசினஸ்மேன்.

பிசினஸ்மேனுக்கு சரி/தவறு இரண்டுக்குமே அர்த்தம் தெரியாது. வாழத்தேவையான எதையும் செய்யலாம் என்பதே அவன் வேதம். இந்த நாட்டில் ஏராளமாக பணம் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள். கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ரவுடிகளும் ஏன் கொஞ்சம் அடித்துக்கொள்ளக் கூடாது? காலத்துக்கும் எவன் எவனுக்கோ அடியாளாக வேலைபார்த்து அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாட அவனுக்கென்ன தலையெழுத்தா? ரவுடியிஸத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நாடு முழுக்க கிளை அமைத்து விரிவுபடுத்துவதுதான் பிசினஸ்மேனின் பிசினஸ். கேட்கவே டெர்ரராக இருக்கும் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படம் என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகதானிருக்கும். ‘தடி எடுப்பவன் தான் தண்டல்காரனாக முடியும்’ என்பதோடு, நீயும் தடியெடு, இல்லாவிட்டால் தண்டம் கட்டு என்கிற படுமோசமான மேசெஜ் தான் படத்தின் ஒன்லைன்.

மூன்று மாதத்துக்கு முன்புதான் ஒரு ’தூக்குடு’ என்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு. அந்த எனர்ஜி லெவல் கொஞ்சமும் குறையாமல் அடுத்தப் படத்திலும் அதே பிக்கப்போடு வேலைபார்த்து, முந்தைய ஹிட்டை மிஞ்சும் இன்னொரு ஹிட்டடிக்க இந்தியாவிலேயே இன்று வேறு நடிகர் இல்லை. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திரை முழுக்க பிரின்ஸ் ராஜ்யம்தான். ஆக்டிங், ஆக்‌ஷன், டேன்ஸ், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடிக்கும் மாஸ் ஹீரோ அனேகமாக இன்று இவர் ஒருவர்தான். தன்னை முழுக்க இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதால், பூரிஜெகன்நாத் மாதிரி மாஸ் டைரக்டர்கள் கமர்சியலில் ‘எதை’ வேண்டுமானாலும் பரிசோதித்து பார்த்துக் கொள்ள முடிகிறது. தெலுங்குப் படங்கள் இன்று கமர்ஷியலில் தொட்டிருக்கும் உச்சம் மிகக்குறுகிய காலத்தில் நிகழ்ந்திருக்கும் சாதனை.

காஜல் அகர்வால் நாட்டுக்கட்டையாக இல்லாமல் இருந்தாலும், கைக்கு வாட்டமான அடக்கமான சைஸில் இருக்கிறார். பெரிய முண்டக்கண்களை தவிர்த்து செக்ஸியான அம்சங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இவரிடம் இல்லை. ஆனாலும் லிப்-லாக்குக்கென்றே அவரது உதடுகள் உருவானவையோ என்னவோ தெரியவில்லை. உலகின் மிக கவர்ச்சிகரமான உதடுகள் கொண்டவர்களை பட்டியலிட்டால், காஜலை மிஸ் செய்யவே முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டே லிப்-டூ-லிப் அடித்தார் மகேஷ்பாபு என்று படித்தேன். படத்தில் பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. ஸ்ட்ராங் டீப் கிஸ்.

ஹீரோ-டைரக்டரின் போக்கிரி காம்பினேஷன் பிரசித்தி பெற்றது என்பதால், கிட்டத்தட்ட அதே பாணி ஸ்க்ரீன்ப்ளே, டைரக்‌ஷன். பரபரவென்று ஓடும் திரைக்கதையில் ஒரு காட்சியை கூட மிஸ் செய்யமுடியவில்லை. படம் முழுக்க விரவியிருக்கும் ‘பஞ்ச்’களுக்கு விசிலடித்து விசிலடித்தே தம்மு தீருகிறது.

யோசித்துப் பார்த்தால் உருப்படியாக ஒன்றுமே இல்லாத படம். ஆனால் ஏதோ ஒரு விஷயம் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது. பூரிஜெகன்நாத்தின் மேஜிக்கே இதுதான்.