28 மார்ச், 2016

ஷேவிங்!

கோடை உக்கிரம் சற்று முன்னதாகவே ஆரம்பித்து விட்டது. இப்போதே அக்னி வந்துவிட்டதோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு கதிரவன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான். சந்தேகமே இல்லை. இது சூரியனின் வருடம்.

ஃபுல் மேக்கப் போட்டு அலுவலகத்துக்கு கிளம்பும் பெண்களின் சாயம் பாதியிலேயே கலைகிறது. எதிர் பிளேடு போட்டு ஷேவ் செய்த ஆண்களுக்கு தாடை தீயாய் எரிகிறது. ஆக, கோடையால் இருபாலருமே பாதிக்கப்படுவதால் ஆண்-பெண் சமத்துவம் இயற்கையின் இயல்பு என்பதும் புரிகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஷேவிங்கில் அவ்வளவு ஆர்வம் இருந்தது கிடையாது. தாடியும், மீசையும் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை என்பதும் ஒரு காரணம். வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைத்தால் பிளேடால் ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கொள்வதுண்டு. அதுவும்கூட “ஷேவிங் பண்ணுடா. சீக்கு புடிச்ச மாதிரி இருக்கே!” என்று அப்பாவோ, அம்மாவோ கவனித்து சொன்னால்தான்.

என்னுடையது பிரபுதேவா தலைமுறை. எனவே, சைட் அடிப்பதற்கு க்ளீன்ஷேவெல்லாம் அவசியமானதாக இல்லை. பிற்பாடு அப்பாஸ், மாதவன் ஆகியோர் எழுச்சி அடைந்தபிறகே இது அத்தியாவசியமான தகுதியாக மாறியது.

முன்பு விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது அதுபாட்டுக்கும் தான்தோன்றித்தனமாக வளரும் தாடி, added valueவாக இருந்தது. வேலை செய்ய சோம்பேறித்தனமாக இருந்தால் தாடியை வருடிக்கொண்டு வானத்தைப் பார்த்து தம் அடித்துக் கொண்டிருக்கலாம். மேலதிகாரிகள், ‘அவன் திங்க் பண்ணுறான்’ என்று நினைத்துக் கொள்வார்கள். அம்மாதிரி ஒருமுறை தாடி வளர்த்தபோது எதிர்ப்பட்ட நிறைய பேர் “சலாம் அலைக்கும் பாய்” என்று சொல்ல, மதமாற்றத்துக்கு தயார் இல்லாத நான் தாடியை வழித்தேன்.

‘புதிய தலைமுறை’யில் சேர்ந்த பிறகுதான் தோற்றம் குறித்து ரொம்ப கவலைப்பட வேண்டியதாயிற்று. ஷேவ் செய்யாத முகம், ‘இன்’ செய்யப்படாத சட்டை, செருப்புக் காலோடு ஓர் ஆர்.ஜே.வை பேட்டி எடுக்கப் போயிருந்தோம். எங்களுடைய தோற்றமே அவருக்கு அலர்ஜி ஆகிவிட்டது. பேச்சிலேயே தீண்டாமையை கடைப்பிடித்தார் (obviously அவர் அந்த சாதிதான்). கசப்பான அந்த அனுபவத்துக்கு பிறகே, இனிமேல் கொஞ்சம் டீசண்டாக தோன்ற வேண்டும் என்கிற அக்கறை பிறந்தது.

எங்கள் ஆசிரியர் மாலன், எப்போதும் பளிச்சென்று இருப்பார். அவருடைய முகத்தில் 0.5 மிமீ அளவுக்கு தாடி வளர்ந்தால் கூட அதிசயம்தான். திங்கள் டூ வெள்ளி ஃபார்மல்ஸ் உடையில்தான் இருப்பார். வீக்கெண்டில் ஆபிஸுக்கு வந்தால் மட்டும் டீஷர்ட் அணிவார். ஏதாவது விழாவில் கலந்துக் கொள்கிறார் என்றாலும், அந்த விழாவின் தன்மைக்கேற்ப கோட்சூட்டோ அல்லது ஜிப்பா (இலக்கிய நிகழ்வுகள்) மாதிரியோ அணிவார்.

‘பளிச்’ தோற்றத்துக்காக அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் கம்பல்ஸரி ஃபார்மல்ஸ்தான். பேண்டில் டக்-இன் செய்த சட்டை, தினமும் இல்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஷேவிங், பாலிஷ் செய்த ஷூ என்று ஒருமாதிரி ஆபிஸ் கோயிங் ரோபோ மாதிரியான தோற்றத்தில் இருக்கிறேன். எப்போதாவது மின்தடை காரணமாக அயர்ன் செய்ய முடியாவிட்டால் மட்டும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஒருமாதிரி செமி ஃபார்மலில் சமாளித்துக் கொள்கிறேன். இப்போது சந்தித்து பேசுபவர்கள் (அந்த ஆர்ஜே மாதிரியில்லாமல்) கொஞ்சம் மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

ஒரே தொந்தரவு ஷேவிங்தான். விருப்பமே இல்லாமல் செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நமக்கு கடை ஷேவிங் செட் ஆகாது. செல்ஃப் ஷேவிங்தான் திருப்தி. முன்பெல்லாம் ஒரு பிளேடில் சைடுக்கு ஒரு முறை என்று நாலு முறை ஷேவ் செய்துக் கொண்டிருந்தேன். இப்போது தோல் கொஞ்சம் தடித்து விட்டது. முகத்தில் வளரும் மயிறும் தடியாக ஸ்டாப்ளர் பின் கனத்துக்கு வளருகிறது. ஒரு பிளேடில் இரண்டு ஷேவுக்கு மேல் இழுக்க ஆரம்பித்தால் ரத்தம் துளிர்க்கிறது. அதுவும் ஷேவ் செய்து முடித்தபிறகு கொஞ்சூண்டு சொரசொரப்பு தட்டுப்பட்டாலும் சோப்பு போடாமல் குளித்தது மாதிரி அன்ஈஸியாக இருக்கும். எனவே எதிர்ஷேவ் பார்ட்டி நான். எரிச்சலைத் தணிக்க ஆஃப்டர் ஷேவ் லோஷனுக்கு வேறு பெரிய பட்ஜெட் அழுதுத் தொலைக்க வேண்டியிருக்கிறது (ஓல்டு ஸ்பைஸ் ஆச்சே?).

ஏசி காரில் அலுவலகம் செல்பவர்களுக்கும்தான் டெய்லி ஷேவிங் செட்டாகும் போல. ஒவ்வொரு நாளும் தரமணி சிக்னலில் என் பைக் பத்து நிமிடம் நிற்கும்போது, முகம் முழுக்க அனலில் வேகுகிறது. இந்த எரிச்சலில் அட்ரினல் எக்ஸ்ட்ராவாக சுரந்து, டென்ஷன் கூடி பி.பி. வேறு இஷ்டத்துக்கும் எகிறுகிறது. இதனால் அப்படியே சுகர், ஹார்ட் அட்டாட், கிட்னி ஃபெய்லியர் என்று இந்த சாதாரண ஷேவிங் எழவால், பரம்பரை குடிவெறியனுக்கு வரவேண்டிய ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எழவு நோய்கள், டீடோடலரான எனக்கு வந்து சேருமோ என்றும் அச்சம் ஏற்படுகிறது.

சரி. நாலு நாளைக்கு ஷேவிங்கே வேண்டாமென்றால் 80% வெள்ளையாக தாடி முளைத்து இளமைக்கு வேட்டு வைக்கிறது. இந்த பாழாய்ப்போன மயிறு தலையில் வளர்ந்துத் தொலைந்தாலாவது, ஓரளவுக்கு வழுக்கைப் பிரச்சினையை அட்ஜஸ்ட் செய்யலாம். மாறாக தலையில் எவ்வளவுக்கு எவ்வளவு முடி கொட்டிக் கொண்டிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அடர்த்தியாக முகத்தில் வளர்ந்துத் தொலைக்கிறது.

பெண்களுக்குதான் நிறைய உடல்ரீதியான இஷ்யூக்கள் உண்டு என்பதைபோல பொதுப்புத்தியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்கு தினமும் இந்த ஷேவிங் பிரச்சினையே பெரும் பிரச்சினைதான். உள்ளாடைரீதியான பிரச்சினைகளை எல்லாம் பேச ஆரம்பித்தால் இராமாயணமே எழுதலாம். இதையெல்லாம் புலம்பிக்கொண்டா இருக்கிறோம்?

அந்த காலத்தில் முற்றும் துறந்து முனிவனாக போனவனெல்லாம் ஷேவிங் செய்ய சோம்பேறித்தனப் பட்டுதான் இமயமலைக்கு போயிருப்பான் என்று நினைக்கிறேன்.

23 மார்ச், 2016

டிவி விவாதம்

இந்த தேர்தலின் ஸ்பெஷல் காமெடியே டிவிக்களில் நடைபெறும் விவாதங்கள்தான். மிக சீரியஸான பாவனையில் நடத்தப்படும் இந்த காமெடிஷோக்களில் குறிப்பாக அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என்று பட்டங்கள் கொடுக்கப்பட்டு விவாதிக்கும் தேங்காய்மூடி பாகவதர்கள்தான் ஸ்பெஷலோ ஸ்பெஷல். ஒன்றுமே இல்லாத சப்பை மேட்டரை, அவர்களுடைய உள்மன விருப்பங்களை ஏதோ பெரிய வரலாற்றுப் பின்னணியோடு அரசியல் ஆய்வுகளை நடத்தி முடித்த பாவனையில் சிறுபத்திரிகை மொழி ஸ்டைலில் ஜாங்கிரி பிழிகிறார்கள். உரித்துப் பார்த்தால் ஒன்றும் தேறாது.

டிவி விவாதங்கள் எப்படி நடைபெறுகிறது என்று உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் ஸ்னாப்.

தங்கராஜ் போண்டா (நெறியாளர்) : நீங்க சொல்லுங்க. மக்கள்நலக் கூட்டணியோடு தேமுதிக சேர்ந்திருக்கு. பழம் விழுந்திருப்பது பாலிலா அல்லது பாமாயிலிலா?

பெருமாள் சனி : இது நிச்சயமா அதிமுகவுக்குதான் சாதகம். நாம இங்கே நடத்த வேண்டிய விவாதமே அதிமுக எப்படி ஜெயிக்கும், திமுக எப்படி தோக்கும்னுதான். இதுலே பார்த்தீங்கன்னா கேப்டன் ரெண்டு விஷயத்தை தெளிவுப் படுத்தியிருக்காரு. அதைதான் யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க. ஒண்ணு, அவரு மக்கள்நலக் கூட்டணியோடுதான் கூட்டு சேர்ந்து போட்டியிடறேங்கிறதை தெளிவா சொல்லியிருக்காரு. இதை ஏன் யாரும் பேசமாட்டாங்கறாங்கன்னு எனக்கு தெரியலை. இன்னொண்ணு திமுக கூட்டணியில் அவர் இல்லேங்கிறதை ரொம்ப தெளிவா சொல்லியிருக்காரு. அவர் சொன்னதை அப்படிதான் புரிஞ்சுக்க முடியும். அதிமுகதான் ஜெயிக்கும். 1967லேயும் அப்படிதான் நடந்தது.

போண்டா : சமந்த் சார், அதிமுகதான் ஜெயிக்கும்னு அவரு சொல்லுறாரு. நீங்க என்ன சொல்றீங்க?

சமந்த் சி. லட்சுமணன் : அவரு சொல்றதை அப்படியே ஏத்துக்க முடியாது. ஏன்னா பொலிடிக்கல் சினாரியோ ரொம்ப மாறியிருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா அதிமுகதான் எலெக்‌ஷனில் ஜெயிக்கப் போவுது. பார்லிமெண்டில் பிஜேபி ஜெயிச்சது. ஆனால் தமிழ்நாட்டில் பிஜேபி சொல்லிக்கறமாதிரி இல்லை என்பதால் திமுக தோற்கணும்னா அதிமுகதான் ஜெயிக்கணும். அப்படிதான் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பேசுது. மக்கள் இந்த அடிப்படையில்தான் ஓட்டளிக்கப் போறாங்க. அமெரிக்காவிலும் அப்படிதான் நடக்கப் போவுது. ஐரோப்பாவிலே கூட....

போண்டா : நீங்க வேற விவாதத்துக்கு போறீங்க. அதிமுக ஜெயிக்கும் என்று பெருமாள் சனி சொல்கிறார். அவரை மறுத்து அதிமுகதான் ஜெயிக்கும் என்று சமந்த் சி.லட்சுமணன் சொல்கிறார். இப்படி இருவேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்படுகிறது. யார் ஜெயிப்பார்கள் என்று சின்ன விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்ப்போம்.

(விளம்பரம் ஒளி-ஒலிபரப்பாகிறது : அதிமுக அமோக வெற்றி. தத்தி டிவியின் மாபெரும் கருத்துக் கணிப்பு. நாளை இரவு 7.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்)

போண்டா : மக்கள்நலக் கூட்டணியின் முடிவு திமுகவுக்கு பாதிப்பா, அதிமுகவுக்கு அனுகூலமா என்கிற இந்த விவாதத்தில் புது விருந்தினர் சேர்ந்திருக்காங்க. மக்கள், அதிமுக வெற்றி பெறும், அதிமுக அமோக வெற்றி பெறும்னு இருவேறு கருத்துகளை சொல்லிக் குழப்பறாங்க. பேனு ஜேம்ஸ், நீங்க இதை ஒத்துக்கறீங்களா?

பேனு ஜேம்ஸ் : அப்படி சொல்ல முடியாது. நாம முக்கியமா பார்க்க வேண்டிய விஷயம் இங்கே ஒண்ணு இருக்கு. டெல்லியிலே கேஜ்ரிவால் வின் பண்ணியிருக்காரு. அதுமாதிரி இங்கே விஜயகாந்த் வின் பண்ண மாட்டாரு என்பதால் அதிமுகவுக்கு எட்ஜ் இருக்கு. ஆனா காஷ்மீர் எலெக்‌ஷன் ரிசல்ட்ஸை நாம இங்கே கம்பேர் பண்ணி பார்க்கணும். அப்புறம் வெஸ்ட் பெங்கால்லே என்ன நடந்ததுன்னு பார்த்தோம்னாதான் எப்படி இங்கே ஏடிஎம்கே நிச்சயமா வின் பண்ண போகுதுங்கிறதை விளக்கமா சொல்ல முடியும்.

போண்டா : விவாதத்தையே வேற பரிமாணத்துக்கு கொண்டு போயிருக்கீங்க. பத்திரிகையாளர் பணி சார், நீங்க சொல்லுங்க. உங்க அனுபவம் என்ன சொல்லுது?

பணி : இவங்க மூணு பேரு சொல்றதையும் அப்படியே ஏத்துக்க முடியாது. அப்படியே நிராகரிக்கவும் முடியாது. கேப்டன் நிச்சயமா கருணாநிதியை தோக்கடிச்சிருக்காரு. ஆனா கேப்டன் ஜெயிக்கலே. ஜெயலலிதா, கருணாநிதியை 2011, 14னு ரெண்டு எலெக்‌ஷனில் ஜெயிச்சிருக்காங்க. 2016ம் அப்படிதான் இருக்கும்னு கெஸ் பண்ண முடியுது. பட், இன்னும் நிறைய டைம் இருக்கு. அந்த டைமெல்லாம் முடிஞ்சப்பவும் ஏடிஎம்கேதான் ஜெயிக்கும்னு யூகிக்கிறது ஒண்ணும் பெரிய பெட் இல்லை.

போண்டா : நிகழ்ச்சியை முடிக்க வேண்டிய நேரம் வந்துடிச்சி. கடைசியா ஒரு வரியிலே உங்க இறுதிக்கருத்தை சொல்லுங்க.

பெருமாள் சனி : ஏடிஎம்கே ஜெயிக்கும்

பேனு ஜேம்ஸ் (ஆவேசமாக) : இதை நான் மறுக்கறேன். அதிமுக வெற்றி பெறும்.

சமந்த் சி.லட்சுமணன் : நோ, நோ. என் பொலிட்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸை வெச்சு சொல்றேன். இவங்க ரெண்டு பேரும் சொல்றது தப்பு. ஏடிஎம்கே ஆட்சியமைக்கும்னுதான் மக்கள் நினைக்கறாங்க. நானும் நம்பறேன்.

பணி : மூணு பேரும் மூணுவிதமா பேசுறாங்க. மக்கள் பேசுறதைதான் பத்திரிகையாளன் பேசமுடியும். அதிமுக வெல்லும். ஆனா இப்பவே நான் இதை கமிட் பண்ணிக்க விரும்பலை.

போண்டா : நாலு பேரும் நாலு வெவ்வேறு கருத்துகளை சொல்லியிருக்காங்க. மக்கள் என்ன கருத்தை சொல்லுறாங்கன்னு மே 19 வரைக்கும் காத்திருப்போம். நன்றி!

21 மார்ச், 2016

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்

மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் திமுகவைவிட அதிமுகதான் பெரிய கட்சி என்று டிவி விவாதங்களிலும், அச்சில் கட்டுரை எழுதுகிறபோதும் சொல்லுகிறார்கள். அவ்வாறு சொல்வதற்கான ஆதாரமாக திமுகவைவிட அதிமுகவே அதிக வாக்குகள் வாங்குவதாக தேர்தலில் வாங்கும் வாக்குகளின் புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள். மூத்தப் பத்திரிகையாளர்கள் என்பதால் அவர்கள் அப்படிதான் சொல்லியாக வேண்டும். முன்பு எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக வென்றுக் கொண்டிருந்தபோது, உடன்பிறப்புகளுக்கு கலைஞர் இதுமாதிரி புள்ளிவிவரக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோது கிண்டலடித்தவர்கள்தான் இவர்கள்.

மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு ‘தொழில்’ சொல்லிக் கொடுக்குமளவுக்கு நமக்கு அனுபவம் இல்லையென்றாலும், ஒண்ணும் ரெண்டும் கூட்டினா மூணு என்று கணக்கு போடுமளவுக்கு கணிதவியல் அறிவு இருப்பதால் ஒரு சின்ன திருத்தத்தை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வாக்கு சதவிகிதம் என்பது ஒரு கட்சி ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறது என்பதை வைத்து சொல்லப்படும் புள்ளிவிவரம். பத்தே பத்து தொகுதியில் போட்டியிட்டு பத்திலும் ஒரு கட்சி வென்றிருந்தாலும்கூட 234 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் அக்கட்சியின் வாக்குசதவிகிதம் கணக்கிடப்படும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் அக்கட்சிக்கு வாக்குகள் இருக்கும் என்பதை தயைகூர்ந்து மூத்தப் பத்திரிகையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகளுக்கு விழுந்த வாக்குகளில் திமுக வாக்குகளும் உண்டு. மாறாக அங்கே திமுகவே இல்லை என்று பொருளல்ல. எனினும் ‘உதயசூரியன்’ நிற்காத தொகுதிகளில் விழுந்த திமுக வாக்குகள், அக்கட்சியின் வாக்குவங்கிக் கணக்கில் வராது.

கடந்த 2011 தேர்தலில் திமுக வாங்கியது 22.4 சதவிகிதம். இது அக்கட்சி போட்டியிட்ட 119 தொகுதிகளின் வாக்குகளில் கிடைத்த சதவிகிதம் மட்டுமே. மீதியிருக்கும் 115 தொகுதிகளிலும் அக்கட்சி நின்றிருந்தால், இந்த சதவிகிதத்தில் மேலும் ஒரு 8 சதவிகித அளவுக்காவது கூடுதலாக கிடைத்திருக்கலாம் என்பதை குமாரசாமியை தவிர வேறு யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வார்கள். திமுகவைவிட கூடுதலாக கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் நின்ற அதிமுகவுக்கு 38 சதவிகிதம் கிடைத்தது. ஒருவேளை அதிமுக 234ல் நின்றிருந்தாலும் கூடுதலாக 3 அல்லது 4 சதவிகிதம் கிடைத்திருக்கலாம்.

2006ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துக் கொண்டால்கூட வாக்கு சதவிகிதத்தில் அதிமுகவே திமுகவைவிட 6% கூடுதலாக இருந்தது. ஆனாலும், திமுகதான் ஆட்சி அமைத்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏனெனில் திமுக வெறும் 132 இடங்களிலும், அதிமுக 188 இடங்களிலும் போட்டியிட்டிருந்தன.

கடந்த சில தேர்தல்களாக திமுக 150க்கும் குறைவான இடங்களில்தான் போட்டியிடுகிறது. அதிமுக, 150க்கு குறைவதில்லை (2001 விதிவிலக்கு). அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதால் கூடுதல் சதவிகிதத்தை காட்ட முடிகிறது. திமுக குறைவான இடங்களில் போட்டியிடுவதால் அதிமுகவைவிட குறைவாக வாக்குகள் வாங்குவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவ்வளவே.

எனவே, மூத்தப் பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் வாக்குவங்கி கணக்கு என்பது அதிமுகவுக்கு ஆதரவாக ஏதேனும் பாயிண்டை முன்வைக்க வேண்டுமே என்கிற ஆர்வத்தில் சொல்லப்படுவதுதானே தவிர, கள நிலவரமோ உண்மையோ அல்ல.

குறைவான வாக்குகள் வாங்கிய கட்சி ஆட்சியே அமைக்க முடிகிறது (2006), அதிக வாக்குகள் பெற்ற கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாத நிலைமை (2011) ஏற்படுகிறது என்றால், ஒருவகையில் அது நம்முடைய ஜனநாயக முறையின் பலகீனம். அதாவது ஒரே ஒரு வாக்கில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள் கூட நம் ஜனநாயக அமைப்பில் கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளுக்கு ஒப்பாகும். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விழும் அந்த வாக்குகளுக்கு எப்படி மதிப்பு சேர்ப்பது?
அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் (proportional representation). இம்முறை ஒருவேளை நம் தேர்தல் ஜனநாயக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்படுமேயானால் இந்த கூட்டணிக் குழப்பங்களோ, லெட்டர்பேடு கட்சிகளுக்கான தேவைகளோ களையப்படும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் குறையும். நிஜமான மக்கள் செல்வாக்கு கொண்டவர்கள் சட்டசபை, நாடாளுமன்றத்துக்குள் கட்சிகளின் ஆதரவின்றியே நுழையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கொள்கை சார்ந்த அரசியலுக்கான தேவை கூடுதலாகும்.

திமுக, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்தே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இம்முறையை வலியுறுத்தி வருகிறது. இந்த சிந்தனையை இந்திய அரசியலில் தோற்றுவித்து, பெரும் விவாதமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

இங்கிலாந்து காலனியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் தவிர்த்து, ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் மற்ற பெரும்பாலான நாடுகளில் இந்த முறைதான் அமலில் இருக்கிறது. ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கோ / சட்டமன்றத்துக்கோ அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது தீர்மானிக்கப்படுவதே இம்முறை.

ஏன் இந்த முறை இந்திய ஜனநாயகத்துக்கு தேவை?

உதாரணத்துக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்தமாக 3.3 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. அதே அளவிலான வாக்குகளைதான் அதிமுகவும் பெற்றிருக்கிறது. ஆனால், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9. இந்த இரு கட்சிகளையும் விட அதிகமாக 4.1 சதவிகிதம் வாக்குகளை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதி யாருமே பாராளுமன்றத்தில் இல்லை.

அதுபோலவே பிஜூ ஜனதாதளம் பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதம் 1.70. திமுகவும் அதே வாக்கு சதவிகிதத்தைதான் பெற்றது. ஆனால் பிஜூ ஜனதாதளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20. திமுகவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளையும் இடங்களையும் இதுபோல புள்ளிவிவர அடிப்படையில் ஆராய்ந்தோமானால் நம் ஜனநாயகம் எத்தகைய விசித்திரமான வடிவத்தில் இருக்கிறது என்பது புரியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, தன்னுடைய ஜனநாயகத்தை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நிறைய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்களை பொதுத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதித்து அதன் சாதக பாதகங்களை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும்.

18 மார்ச், 2016

க்ளீனா பேசிடுவோம்!

நகரமயமாதல்தான் நாகரிகம் என்று நவீன உலகம் கருதுகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள், இருளை பகலாக்கும் ஒளிவிளக்குகள், குப்பை கூளம் கண்ணில் தென்படாத சீரான வீதிகள், வீடுகள், விடுதிகள், அரங்கங்கள் என்று நம்முடைய சுற்றுப்புறம் குறித்த கனவு நனவாகும் நூற்றாண்டு இது. இதெல்லாம் வெளிப்பார்வைக்குதான். உண்மையில் நாகரிகத்தின் பெயரால் நாட்டையே பிரும்மாண்டமான குப்பைத் தொட்டியாக நாம் மாற்றிக் கொண்டிருப்பதின் பின்னணியை இந்த நூல் அலசுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ‘ஸ்வச் பாரத்’ என்கிற கோஷத்தை திட்டமாக முன்வைத்த பிரதமர் மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மொத்தத்தையும் சுத்தப்படுத்தி காந்தியின் கனவினை நினைவாக்குவோம் என்று சபதம் மேற்கொண்டார். ‘சுத்தம் செய்வோம், வாருங்கள்’ என்று பிரதமர் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது, வெறும் கவர்ச்சி அரசியல் கோஷமல்ல, தீவிரமான சமகால பிரச்சினை. பல்வேறு துறையினை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அந்த காலக்கட்டத்தில்தான் தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர், ‘தினகரன் வசந்தம்’ இதழில் வாரந்தோறும் இந்த கட்டுரைகளை தொடராக கொண்டுவர திட்டமிட்டார். சுத்தம் செய்வது என்பதே வெறுமனே தெருவை பெருக்கித் தள்ளுவது என்று புரிந்துகொள்ளப்படக் கூடாது என்கிற அக்கறை அவருக்கு இருந்தது. எனவேதான் இத்தொடரில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்று யோசித்தார். அவ்வகையில் இந்த நூலின் ஆசிரியராக அவரையே குறிப்பிடலாம். எழுதியது மட்டுமே நான்.

‘Yes, we can’ என்கிற தலைப்பில் ‘தினகரன் வசந்தம்’ இதழில் இத்தொடர் வந்தபோது வாசகர்களிடையே இருந்து வந்த பாராட்டுக் கடிதங்களுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் அளவேயில்லை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனதுமே காலையில் கைப்பேசியை எடுத்து குறுஞ்செய்திகளை பார்ப்பேன். ‘நக்கீரன்’ வாரமிருமுறை இதழின் இணையாசிரியர் கோவி.லெனின் இத்தொடர் குறித்த தன்னுடைய கருத்தினை முப்பத்தைந்து வாரங்களும் அனுப்பிக்கொண்டே இருந்தார். சக பத்திரிகையாளர்களும் காணும்போதெல்லாம் இத்தொடர் குறித்து பாசிட்டிவ்வாகவே பேசுவார்கள். இம்மாதிரியான ஊக்குவிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் உற்சாகமாக என்னால் எழுத முடிந்திருக்கும் என தோணவில்லை.

ஆறுகள் மாசடைவது, மின்குப்பை பிரச்சினை, குட்கா ஆபத்து, பொது இடங்களை அசுத்தப்படுத்துவது, பிளாஸ்டிக் தொல்லை, காற்று மாசு, ஒலி மாசு, ஒளி மாசு, வாகனப்புகை, வாசனைத் திரவியங்களால் விளையும் விபரீதம், ப்ளெக்ஸ் பேனர்கள் ஏற்படுத்தும் சூழலியல் சீர்கேடு, இண்டோர் பொல்யூஷன் என்று சுத்தத்தை சாக்காக வைத்து இந்நூல் எத்தனையோ அவசியமான விஷயங்களை விவாதிக்கிறது.

புற சுத்தத்தை மட்டுமின்றி அக சுத்தத்தையும் வலியுறுத்துகிறது என்பதே மற்ற சுற்றுச்சூழல் தொடர்பான நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டக்கூடிய அம்சம். மொழிப்பிரச்சினை, சாதி, நுகர்வுக் கலாச்சாரம், அடிமைப்படுத்தும் இணையம் என்று பல்வேறு சமகால பிரச்சினைகளும் பேசப்பட்டிருக்கின்றன.

இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருந்தாலும், இவ்வளவு விஷயங்களையும் முப்பத்தைந்தே அத்தியாயங்களில் அடக்க முடிந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாகதான் இருக்கிறது.

நூலை சிறப்பான முறையில் வெளிகொண்டு வரும் சூரியன் பதிப்பகத்தாருக்கு நன்றியை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

- ’கங்கையில் இருந்து கூவம் வரை’ நூலின் முன்னுரை

‘தினகரன் வசந்தம்’ சீஃப் எடிட்டர் கே.என்.சிவராமனுக்கு நூல் சமர்ப்பிக்கப்படுகிறது. முகப்பு அட்டை : ஓவியர் ராஜா


பக்கங்கள் : 152 விலை : ரூ.120/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : kalbooks@dinakaran.com

15 மார்ச், 2016

மறுபக்கத்தையும் பேசுவோம்

கண்டனம் தெரிவிக்காதது ஆணவக்கொலைகளை ஆதரிப்பதாகாது. பெயரிலாவது திராவிடத்தை கொண்டிருப்பவர்கள் சாதிவெறியை எந்நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதிமுக ஆளும் கட்சி. திமுக ஆண்ட ஆளப்போகும் கட்சி. ஒரு சம்பவம் நடந்ததுமே அதன் முழுப்பின்னணியும் தெரியாமல், அடுத்தக்கட்ட எதிர்வினைகளை கண்காணிக்காமல் உடனடியாக கண்டிப்பதோ, ஆதரிப்பதோ நடைமுறை சாத்தியமில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் இவர்களுக்கு பாடம் கற்பித்திருக்கின்றன. ப்ளாஷ் நியூஸ் கணக்காக இவற்றை கண்டிக்க வேண்டிய அல்லது ஏதோ ஒரு கருத்தை உடனடியாக தெரிவித்து டி.ஆர்.பி. ஏற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஊடகங்களுக்கு இருப்பதை போல இந்த கட்சிகளுக்கு இல்லை. அவற்றை டெபாசிட் கூட வாங்க வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் மநகூ போன்றவர்கள்தான், நாம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதை போல செய்யமுடியும். ஒருவேளை திமுக, அதிமுகவுக்கு நிகரான செல்வாக்குக்கு மதிமுகவோ, விடுதலை சிறுத்தைகளோ உயர்ந்தாலும்கூட இதுபோன்ற சூழல்களில் இன்ஸ்டண்ட் கருத்து தெரிவிக்க முடியாது என்பதுதான் கள அரசியல்.

உடுமலை ஆணவக்கொலை குறித்து அதிமுகவின் நிலை என்னவென்பதை மாஃபா பாண்டியராஜனோ, சி.ஆர்.சரஸ்வதியோ டிவி விவாதங்களில் “எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க” என்று விளக்கமளிப்பார்கள்.

திமுகவை பொறுத்தவரை மத்தளம் கதைதான். கருணாநிதி மதத்தை, சாதியை எதிர்க்கிறாரே... இவர்களது ஓட்டெல்லாம் தனக்கு வேண்டாமென்று வெளிப்படையாக அறிவிப்பாரா என்று வருடம் முழுக்க சவால் விட்டுக்கொண்டே இருப்பார்கள். சாதியக்கலவரமோ, மதக்கலவரமோ, ஆணவப்படுகொலைகளோ நடக்கும் சந்தர்ப்பத்தில் திமுகவை குறிப்பிட்ட மதத்தோடு, சாதியோடு தொடர்பு படுத்திப் பேசுவார்கள். கொடுமை என்னவென்றால் கோயமுத்தூர் குண்டுவெடிப்பின் போது திமுகவை இந்துமத வெறி பிடித்த கட்சி என்றுகூட கூறினார்கள். ஆனால் எச்.ராஜாக்களோ திமுகவின் இந்துமத எதிர்ப்புக்காக அக்கட்சியின் தலைவர்களை தூக்கிலிட்டால்கூட மகிழ்வார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டுமானால் அகமணமுறையை அழிக்க வேண்டும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். சமூக மாற்றத்தை சட்டம் கொண்டு செய்வது கடினம். அப்படி செய்வதாக இருந்தால் சுயசாதி திருமணத்தை இந்திய அரசியல் சட்டத்திலேயே தடை செய்திருப்பார் அம்பேத்கர்.

பெரியார் பாணி பிரச்சாரம் ஒன்றே ஒரே வழி. இனப்பெருக்கம் செய்ய ஓர் ஆண், ஒரு பெண் தேவை. இவர்கள் இணைந்து குழந்தை பெற்றால் குடும்பம். பத்து பதினைந்து குடும்பங்கள் இணைந்தால் சமூகம். பல சமூகங்கள் இணைவதுதான் இனம். பல இனங்கள் இணைந்துதான் இந்திய தேசியம். இதில் மதத்துக்கோ, சாதிக்கோ மருந்துக்கும் இடமில்லை என்பதை அறிவியல்பூர்வமாக மக்களை நம்பவைப்பதே நடைமுறை சாத்தியமான வழி. நாளையே இது நடக்குமென்று எதிர்ப்பார்ப்பது மூடத்தனம். இரண்டாயிரம் வருட மூடநம்பிக்கைகளை ஒழிக்க இருநூறு ஆண்டுகளாவது தேவை.

மதத்துக்கும், சாதிக்கும் இடமில்லாத சீர்த்திருத்த திருமணங்களை நாம் சட்டரீதியாக அங்கீகரித்தே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை.

அதேநேரம்-

காதல் பற்றிய புரிதலையும் சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உடல்ரீதியாக.. சட்டரீதியாக பெண்ணுக்கு பதினெட்டு வயதும், ஆணுக்கு இருபத்தோரு வயதும் வந்துவிட்டாலே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதே மகா அபத்தம். திருமணம் செய்துக் கொண்டவர்களுக்காவது இந்த உண்மை தெரியவேண்டும். பாலியல் தேவை என்பது தம் அடிப்பதோ, டீ குடிப்பதோ போன்ற மிகசாதாரணமான அன்றாடத் தேவைகளில் ஒன்றுதான். திருமணம் என்பது அதற்கு மட்டுமேயான தீர்வல்ல. காதலிக்க காசு தேவையில்லை. ஆனால் கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த வலுவான பொருளாதார அடித்தளம் அவசியம். பொருளாதாரரீதியாக வலுவடையாத நிலையில் இருக்கும் இருவர் அகமணரீதியாகவோ அல்லது கலப்புமண முறையிலோ இணைவது என்பது இருவருக்குள்ளும் ஏகப்பட்ட முரண்களை உருவாக்கி இறுதியாக விவாகரத்தை நோக்கிதான் செல்லும். உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கும் அதிகமாக வெறுக்கக்கூடிய நிலை ஏற்படுவது சற்றும் சகிக்க இயலாதது. இம்மாதிரி வலுவற்ற திருமண பந்தங்கள் உருவாவது உருப்படியான குடும்பங்களை உருவாக்காது. உருப்படாத குடும்பங்கள், இலட்சிய சமூகத்தின் அங்கங்களாக மாறாது.

சாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள், காதலை ஆதரிப்பவர்கள் சரியான துணையை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் செய்ய வேண்டும். கண்டதும் காதல் என்பதெல்லாம் வெறும் ஃபேண்டஸி. காதலர்கள் சினிமாவுக்கோ, தீம்பார்க்குக்கோ போகும்போதெல்லாம் காசு பிரச்சினையில்லை. கல்யாணம் செய்து கர்ப்பமானபிறகு மாதாமாதம் செக்கப்புக்கு போகும்போது டாக்டருக்கு கொடுக்க காசு இல்லையென்றால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

அடுத்து, காதலிப்பவர்கள் கல்யாணத்துக்கு பெற்றோரை எப்படி கன்வின்ஸ் செய்வது என்பதையும் காதலிப்பதற்கு முன்பாகவே திட்டமிட வேண்டும். ‘ஓடிப்போதல்’ என்பது சம்பந்தப்பட்ட காதலன், காதலியோடு முடிந்துப் போய்விடுவதில்லை. ஒரு குடும்பம், அவர்களது சொந்தபந்தங்கள் உள்ளிட்டவர்களை பாதிக்கக்கூடிய முடிவு இது. நகர்ப்புறங்களில் பரவாயில்லை. கிராமப்புறங்களில் ஓடிப்போன ஒரு பெண்ணின் குடும்பம் தொடர்ச்சியாக அந்த ஊரில் வாழமுடியாது என்பதே நிலை. உண்மைதானே?

படிக்கும் காலத்தில் காதல் சரிதானா? இப்போது கவுசல்யாவுக்கு பிறந்த குடும்பத்தின் ஆதரவு இல்லை. புகுந்த குடும்பத்துக்கு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமோ, கடமையோ இல்லை. படிப்பு தடைபடும். இந்த ஆணவக் கொலையை ஒரு வாரத்துக்கு கண்டித்து ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, கட்டுரை எழுதிவிட்டு கவுசல்யாவை நாம் (அதாவது சமூகம்) மறந்துவிடப் போகிறோம். கவுசல்யாவின் எதிர்காலம் என்ன?

முற்போக்காக இருப்பதே பிற்போக்காக ஆகிவிடக்கூடிய அவலம் நேர்ந்துவிடக்கூடாது. ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. அது தொடர்பான மற்ற ஹைப்பர்லிங்க் இஷ்யூக்களையும் சேர்த்து பேசியாக வேண்டும். பேசுவோம்.

7 மார்ச், 2016

என்ன சொல்கிறது கூட்டணி வரலாறு?

பலமான கூட்டணியே வெற்றிக்கு அடித்தளம்
என்பதை நிரூபித்துள்ளது 1967 முதல் நடந்த தேர்தல்கள்...
தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் தேர்தல் மட்டுமே பலமுனை தேர்தலாக அமைந்திருந்தது. சென்னை மாகாணமாக இருந்தபோது சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கை 375. இதில் 367 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 131 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் 62 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கிஸான் மஸ்தூர் பிரஜா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கிரிஷிகார் லோக், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இரட்டை எண்ணிக்கையில் வென்றிருந்தன. இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆட்சியமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ‘ஆட்சியில் பங்கு’ ஆசை காட்டி, சில கட்சிகளை உள்ளே வாரி போட்டுக் கொண்டு, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதல் தேர்தலிலேயே ‘குதிரை பேரம்’ தமிழகத்துக்கு அறிமுகமாகி விட்டது.

1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. மொழிவாரிப் பிரிவினையின் காரணமாக சென்னை மாகாணத்தில் இம்முறை 206 இடங்களே இருந்தன. காமராஜர் தலைமையில் தேர்தலை சந்தித்த அந்த கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு, 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தமாகவே 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள். மாநில கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட திமுகவினர், 15 இடங்களில் வென்றனர்.

1962 தேர்தல்தான் முதன்முறையாக தமிழகத்தில் நடந்த இருமுனை தேர்தல். அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. இத்தனைக்கும் அக்கட்சியில் இருந்து ராஜாஜி பிரிந்துபோய் சுதந்திரா கட்சியை நிறுவி போட்டியிட்டார். இம்முறை காங்கிரஸுக்கு பலத்த போட்டியை கொடுத்த கட்சி திமுக. 143 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 50 இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

திமுக முதன்முதலாக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தல்தான், இன்றைய கூட்டணி கலாசாரத்துக்கு வித்திட்ட தேர்தல். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்த காங்கிரஸை வீழ்த்த புதிய உத்தி ஒன்றினை கைக்கொண்டார் அண்ணா. சுதந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர், ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், முஸ்லீம்லீக், பிரஜா சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளை இணைத்து திமுக தலைமையில் மெகா கூட்டணியாக உருவாக்கினார். இந்த ஒற்றுமைக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலன் கிடைத்தது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. மேலும் அக்கட்சியின் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், பூவராகன், கக்கன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவுமளவுக்கு இந்த கூட்டணியின் வீரியம் இருந்தது.

1971ல் நடந்த தேர்தலை ஒருமுனை தேர்தல் என்றே சொல்லலாம். 1962ல் காமராஜர் பெற்ற வெற்றியை போன்றே கலைஞரும் வென்றார். காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்கிற பெயரில் காமராஜர் இயங்கினார். முந்தைய தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதந்திரா கட்சி அவரை ஆதரித்தது. திமுக கூட்டணியில் இம்முறை சுதந்திராவுக்கு பதிலாக இந்திரா காங்கிரஸ் இணைந்தது. எனினும் தொகுதி எதுவும் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட, அந்த இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வந்து சேர்ந்தது. இம்முறையும் திமுக கூட்டணியே அபார வெற்றியை பெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே மகத்தான சாதனையாக ஒரு தனிக்கட்சி வென்ற அதிக இடங்கள் (184 எம்.எல்.ஏ.க்கள்) என்கிற இன்றுவரை உடைக்க முடியாத சாதனையை திமுக படைத்தது. எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் - சுதந்திரா கூட்டணிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த 1977 தேர்தல் நான்கு முனை தேர்தலாக அமைந்தது. இத்தேர்தலில் நெருக்கடி நிலையை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவோடு அமைத்த கூட்டணிதான் தமிழகத்தின் முதல் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி என்று அரசியல் ஆய்வாளர்களால் இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ‘சர்க்காரியா கமிஷன், திமுக தலைவர்களை ஊழல் புகார்களுக்காக விசாரித்துக் கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் இருக்க முடியாது’ என்கிற சப்பைக் கட்டை மா.கம்யூ தலைவர்கள் முன்வைத்தார்கள். ஆனால் இந்த தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே திமுகவோடுதான் கூட்டணி அமைத்து மா.கம்யூ போட்டியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்காரியா கமிஷன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே விசாரணை நடத்திக் கொண்டுதான் இருந்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிட்டது திமுக. காங்கிரஸ் –- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணி, அதிமுக -– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு அணி, மத்தியில் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி தனி என்று நடந்த நான்குமுனை போட்டியில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

1980 தேர்தலில் திமுக - இ.காங்கிரஸ் கூட்டணி உருவானது. காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், திமுக 112 தொகுதிகளிலும் ஏனைய சிறு கட்சிகளுக்கு மீதி தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சி, யார் முதல்வர் என்பதை தீர்மானிப்போம் என்று கூறப்பட்ட தெளிவில்லாத அறிவிப்புக்கு வாக்காளர்களிடையே வரவேற்பில்லை. மாறாக அதிமுகவோ இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், குமரி ஆனந்தனின் காமராஜர் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், பழ.நெடுமாறனின் காமராஜர் காங்கிரஸ் என்று பலமான கட்சிகளை கூட்டணிக்கு வைத்திருந்தாலும் 168 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜனதா கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் கண்டதால் மும்முனை போட்டியே நடந்தது. அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்கிற தெளிவு இருந்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி கிடைத்தது. 129 தொகுதிகளில் அக்கட்சி வென்றது.

எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் இருந்தபடியே 1984 தேர்தலை சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸோடு, மாநில ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உறவு மலர்ந்திருந்தது. அதிமுக –- இ.காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியை எதிர்த்து திமுக, மா.கம்யூ, இ.கம்யூ, ஜனதா, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக், காமராஜ் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை பலமாக அணி திரண்டன. இருப்பினும் இந்திரா காந்தி கொலை, எம்.ஜி.ஆர் உடல்நலமின்மை போன்றவற்றால் ஏற்பட்ட அனுதாப அலைக்கு முன்பு திமுக கூட்டணியால் சமாளிக்க முடியவில்லை. திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்று முதன்முறையாக ‘ஊழல் ஒழிப்புக் கூட்டணி’, அதிமுகவில் இருந்து பிரிந்திருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் இந்த தேர்தலில் களமிறங்கி காணாமல் போனது. இதே காரணத்தை சொல்லி இப்போதைய தேர்தலில் களமிறங்கி இருக்கும் மக்கள்நல கூட்டணிக்கு இதுவே முதல் முன்னுதாரணம் என்று சொல்லலாம்.

1989 தேர்தலில் திமுக, மா.கம்யூ, ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு அணி. இரண்டாக அதிமுக பிளவு பட்டிருந்தது. ஜெயலலிதா பிரிவு அதிமுகவோடு இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி. வி.என்.ஜானகி பிரிவு அதிமுகவோடு, சிவாஜிகணேசன் ஆரம்பித்த கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி. காங்கிரஸ் இம்முறை இரு திராவிடக் கட்சிகளோடு இணையாமல் தனி அணியாக நின்றது. அவ்வகையில் நான்கு முனை போட்டியாக நடந்த இத்தேர்தலில் 146 இடங்களில் வென்று திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

1991 தேர்தலில் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டது. அக்கட்சியோடு கூட்டணி வைத்த காங்கிரஸின் தலைவர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். திமுக கூட்டணியில் மா.கம்யூ, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்.திருநாவுக்கரசின் அண்ணா புரட்சித்தலைவர் திமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து சந்தித்த முதல் தேர்தல் இதுதான். ராஜீவ் கொலை அனுதாப அலை வீசியதால் 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 164 தொகுதிகளில் வென்று எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளை வாரி சுருட்டியது.

1996ல் வித்தியாசமான களம். அதிமுக பலவந்தமாக காங்கிரஸோடு கூட்டணி வைக்க முயல, அக்கட்சி உடைந்து தமிழ்மாநில காங்கிரஸ் என்கிற புதிய கட்சி மூப்பனார் தலைமையில் உதயமானது. இக்கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக, தமாகா, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக் ஆகியவை பலமான கூட்டணியை அமைத்தன. திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை தொடங்கியிருந்தார். திமுக - அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய அவரோடு மா.கம்யூ கூட்டணி கண்டது. இவர்களோடு ஜனதாதளமும் சேர்ந்துக் கொண்டது. முதலில் திமுக கூட்டணியோடு, பிற்பாடு மதிமுக கூட்டணியோடு பேசி உடன்பாடு காண முடியாத பாமக தனித்து நின்றது. நான்கு முனை தேர்தலாக நடந்ததில் எதிர்க்கட்சிகள் அத்தனையையும் முறியடித்து பிரும்மாண்ட வெற்றியை ருசித்தது திமுக. அக்கட்சி போட்டியிட்ட 182 இடங்களில் 173 தொகுதிகளை வென்றது. ஜெயலலிதா, வைகோ போன்ற தலைவர்கள், அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தோல்வியடைந்தனர். பாஜக, தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக தன்னுடைய கணக்கை துவக்கிய தேர்தல் இதுதான். மதிமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக வென்றார். பிற்பாடு ‘புதிய தமிழகம்’ கட்சியை உருவாக்கினார்.

2001ல் நடந்த முந்தைய தேர்தலை போன்ற பலமான கூட்டணியை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை. மதிமுக கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு தனித்துப் போய் நின்றது. பாஜக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தமாகாவில் இருந்து பிரிந்து புதுக்கட்சி கண்ட ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி என்று இக்கூட்டணி வலுவில்லாததாக அமைந்தது. மாறாக அதிமுகவோ காங்கிரஸ், தமாகா, பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலமான கூட்டணியை அமைத்து வென்றது. 141 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அதிமுக, 132 இடங்களில் வென்றது.

2006ல் முதன்முறையாக தேமுதிக தனித்து களமிறங்கியது. இரு கட்சிகளுக்கும் மாற்று என்று விஜயகாந்த் முழங்கினார். திமுக, காங்கிரஸ், பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலம் வாய்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, கடைசி நேரத்தில் போயஸ் தோட்டத்துக்கு போய் பொக்கே கொடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகளும் அதிமுக அணியில் சேர்ந்தார்கள். பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. கடுமையான பொட்டியில் 132 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக 96 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. 1952க்கு பிறகு தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு அமைத்தது.

2011ல் அதிமுகவோடு தேமுதிக, மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகள் கூட்டணி அமைத்தன. கடைசிநேர தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் ஒற்றை இலக்க சீட்டுகள்தான் கொடுக்கிறார்கள் என வெறுத்துப்போய் இக்கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறினாலும், அதிமுகவுக்கு சங்கடம் கொடுக்கக்கூடாது என்று தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது. திமுகவோடு காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாஜக தனித்துவிடப்பட்டது. அதிமுக - திமுக கூட்டணி சமபலத்தோடு மோதுவது போன்ற தோற்றம் தெரிந்தாலும், தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது.

இதோ 2016 தேர்தல் வந்துவிட்டது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம்லீக் கூட்டணி உறுதிப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிகிறது. கண்ணுக்கு தெரிந்த தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று இதுவரை முழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதிமுக கூட்டணிக்கு தயார் என்று சமீபமாக சிக்னல் காட்டியும் பலமான கட்சிகள் எதுவும் அவரோடு சேர விருப்பமாக இல்லை. முந்தைய தேர்தல்களில் திமுக - அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி அமைத்து எப்படியோ சட்டமன்றத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கட்சிகள், இப்போது இரு கட்சிகளுக்கும் மாற்று என்று களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சிகளுடனான கடந்தகால தேர்தல் உறவுகளே, அவர்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவில்லை.

1967ல் தொடங்கி பார்த்தோமானால், தேர்தலில் பல பிரச்சினைகள் எதிரொலித்தாலும் கூட பலமான கூட்டணிதான் ஆட்சியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதே போக்கு தொடருமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

(நன்றி : தினகரன்)

3 மார்ச், 2016

மிஸ்டர் ராங்!

தமிழக அரசியல் வரலாற்றில் சரியான சந்தர்ப்பத்தில் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கக் கூடியவர் என்று மற்ற கட்சியினரால் தொடர்ச்சியாக கிண்டலடிக்கப்படுபவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

1993ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்கினார். 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாதளம் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. வைகோவே கூட விளாத்திகுளம் தொகுதியில் தோல்வி அடைந்தார். சிவகாசி பாராளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட அவர் அங்கும் மூன்றாவது இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். 177 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. “காட்டாற்று வெள்ளத்தில் சந்தனமரங்களும் அடித்துச் செல்வது இயல்புதான்” என்று தன்னுடைய படுதோல்வியை இலக்கியத்தரமாக விமர்சித்து ஆறுதலடைந்தார்.

96 தேர்தலில் மிகக்கடுமையாக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சித்த வைகோ, அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டார். 1998 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அதிமுகவும், மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்” என்று அவர் உருகியதை கண்டு மதிமுக தொண்டர்களே முகம் சுளித்தார்கள்.

ஜெயலலிதாவால் ஓராண்டிலேயே வாஜ்பாய் அரசு கவிழ்ந்துவிட 1999ல் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல். இம்முறை, எந்த கட்சியிலிருந்து பிரிந்தாரோ அதே திமுகவுடன் மதிமுக கூட்டணி. இந்த முடிவு கட்சிசாரா வாக்காளர்கள் மத்தியில் மதிமுகவின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய வைகோ அடுத்தடுத்து அதே கட்சிகளோடு வெற்றிக்காக கூட்டணி அமைத்தது அவரது தலைமைப் பண்பையே கேலிக்குரியதாகவும் ஆக்கியது.

அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் வைகோ எடுத்த முடிவு அவரது அரசியல் தற்கொலை முயற்சியாக பார்க்கப்படுகிறது. இரண்டு சீட்டுக்காக சண்டை போட்டு திமுக கூட்டணியிலிருந்து விலகிப்போய் தனித்து நின்றது மதிமுக. மீண்டும் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் மிக கடுமையாக விமர்சித்த வைகோ, இனி எந்த காலத்திலும் இந்த கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்றார். 211 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, டெபாசிட்டையே விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில்தான் திரும்பப் பெற்றது.

1998ல் தேசியளவில் பாஜகவோடு மதிமுகவுக்கு ஏற்பட்ட கூட்டணிக்கு வைகோ மிகவும் விசுவாசமாக இருந்தார். பாஜக அரசு பொடா சட்டம் கொண்டுவந்தபோது அதை ஆதரிக்கவும் செய்தார். 2001ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக, பாஜகவுக்காக வைகோ ஆதரித்த அதே பொடா சட்டத்தை பயன்படுத்தி அவரையே சிறையில் தள்ளியது. அந்த சந்தர்ப்பத்தில் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக கோரியது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே, வேலூர் சிறையில் இருந்த வைகோவை நேரில் இருமுறை பார்த்து ஆறுதலும் சொன்னார்.

இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு வந்தது மதிமுக. “தந்தையைப் பிரிந்து தனிக்குடித்தனம் போன தனயன் திரும்பி வந்திருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் வார்க்கப்பட்டேன். வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம்தான் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்துப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துப் போனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது வைகோவின் வழக்கப்படி அப்படியே ‘யூ டர்ன்’ அடித்தார். கேட்ட தொகுதிகளை திமுக தரவில்லை என்றுகூறி, அதிமுக கூட்டணிக்கு தாவினார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, “பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை தூக்கியெறிவோம்” என்று அவர் முழங்கிய கோஷத்துக்கு மாறாக, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அவர் அமைத்த கூட்டணி, அரசியலில் வைகோ மீதான நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாகவே குலைத்தது. அவரை பொடாவில் உள்ளே வைத்து சித்திரவதை செய்த ஜெயலலிதாவை, ‘அன்பு சகோதரி’ என்று விளித்ததை, வைகோவின் தாயாரே எதிர்த்தார் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. 2006ல் வைகோ இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணி தோல்வியடைந்து, திமுக ஆட்சிக்கு வந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக தான் இடம்பெற்ற கூட்டணியிலேயே இரண்டாம் முறையாகவும் வைகோ தொடர்ந்தார். ஆனால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை என்றுகூறி வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தார் வைகோ. “ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறிய அவர், தேர்தலிலும் போட்டியிடாமல், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவளிக்காமல் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்.

அடுத்துவந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பாஜகவோடு சேர்ந்தார். நாடு முழுக்க மோடி அலை வீசியபோதும் கூட, ஏழு இடங்களில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. வழக்கம்போல விருதுநகரில் வைகோவே தோல்வியை தழுவினார்.

இப்போது 2016 தேர்தலில் இதுவரை தான் கூட்டணி கண்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அத்தனை கட்சிகளும் மாற்று இயக்கம் என்றுகூறி ‘மக்கள் நல கூட்டணி’யில் இணைந்திருக்கிறார். பெரிய கட்சிகளின் கூட்டணி சுனாமியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை தாங்குமா என்கிற சந்தேகத்தை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை மக்கள் நல கூட்டணி சிதையுமேயானால், வழக்கம்போல தனித்துவிடப் படுவது வைகோவாகதான் இருப்பார்.

கடந்தகால வைகோவின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய் மதிமுகவில் இருந்து மீண்டும் தாய்க்கழகமான திமுகவுக்கே அவரோடு வந்தவர்கள் போய்விட்டார்கள். என்ன செய்வது? வைகோ உப்பு விற்க போனால் மழை அடிக்கிறது, மாவு விற்க போனால் காற்றடிக்கிறது. இந்த அளவுக்கு அதிர்ஷ்டமே கொஞ்சமும் இல்லாத தலைவர் இந்திய அரசியலிலேயே வேறு யாரும் இல்லை என்று கிண்டலாக சமூகவலைத் தளங்களில் இவரை விமர்சிக்கிறார்கள் நெட்டிஸன்கள்.

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)