27 ஜூன், 2011

மாரி பேசுகிறேன்!


அன்பான எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு கடிதங்கள் வருவதில்லை. அதனாலேயே யாருக்காவது நானாவது கடிதம் எழுதணும்னு உங்களுக்கு எழுதறேன். எனக்கு கடிதம் எழுத நீ யார் என்று கேட்காதீர்கள். என்னை உங்கள் மகனாகவோ, தம்பியாகவோ நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடிதம் எழுதாமல் வேறு யாருக்குதான் நான் எழுத முடியும்? அதுவுமில்லாமல் என்னுடைய கதையை, உறவுகளான நீங்களே கேட்காவிட்டால், வேறு யார்தான் கேட்பார்கள்?

என் பெயர் மாரிச்செல்வம். மூக்கையூர் என்கிற கடலோர குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். வயது பதினைந்து. என் அப்பா முனியசாமி ஒரு மீனவர். யாராவது கடலுக்கு மீன் பிடிக்க போகும்போது, கூட ஒத்தாசைக்கு போவார். கூலி வாங்கிக் கொள்வார். மீன் பிடிக்க அப்பாவுக்கு சொந்தமாக படகு எல்லாம் கிடையாது.

அம்மா அப்பாவோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பம். ஐந்து மகள்கள், இரண்டு மகன்கள். நான்தான் கடைசி. அண்ணனுக்கும், நான்கு அக்காக்களுக்கும் எப்படியோ சிரமப்பட்டு திருமணம் முடித்துவிட்டார் அப்பா. இவ்வளவு பெரிய குடும்பத்தை கூலிவேலை செய்து காப்பாற்ற வேண்டுமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்?

அப்பாவுக்கு ரெண்டே ரெண்டு கனவு உண்டு. ஒன்று, சொந்தமாக ஒரு கட்டுமரம் வாங்கி மீன்பிடித் தொழில் செய்யவேண்டும். இரண்டு, தன் குடும்பத்தில் ஒருவராவது நல்ல படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போகவேண்டும்.

எங்கள் ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் எட்டாவது வரை படித்தேன். உயர்நிலைப் பள்ளிக்கு வேறு ஊருக்கு போக வேண்டும். அதுவரை படிக்கவே PAD என்கிற அரசுசாரா அமைப்புதான் எனக்கு உதவிக்கிட்டிருந்தது. ஆமாங்க. Christian Children Fund of Canada (CCFC) என்கிற கிராமப்புற குழந்தைகள் உதவித்திட்டம் மூலமாதான் நான் படிச்சிக்கிட்டிருந்தேன். குடும்பச்சூழலை உணர்ந்து அப்பாவோடு மீன் பிடிக்க போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு ரொம்ப கோபம்.

நல்லா படிச்சிக்கிட்டிருந்த பார்வதி அக்கா கூட எட்டாவதோட படிப்பை ஏறக்கட்ட வேண்டியதாயிடிச்சி. நானாவது நல்லா படிச்சி பெரிய அதிகாரியா வருவேன்னு அப்பா எம்மேலே நம்பிக்கையை வெச்சிக்கிட்டிருந்தாரு.

பெரிய அக்கா முருகேஸ்வரியோட ஊருக்குப் போயி தங்கி, அங்கிருந்து படிக்கிறதுக்கு அப்பா ஏற்பாடு பண்ணினார். முத்துப்பேட்டையில் அக்கா வீடு. பக்கத்தில் இருந்த வேலாயுதபுரம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். படிப்புலே கவனம் இருந்தாலும், குடும்பச் சூழல் என்னை வருத்திக்கிட்டே இருந்தது. குடும்ப வருமானத்துக்கு நானும் ஏதாவது செய்யணுமேன்னு மெனக்கெடுவேன்.

லீவு நாள்லே அம்மாவோடு கரிமூட்டம் அள்ளுற வேலைக்குப் போவேன். கரிமூட்டம்னா ரொம்ப பேருக்கு தெரியாது. நிறைய ஊர்லே செங்கல் சூளை போடுறது மாதிரி, எங்க ஊரு பக்கம் கருவேல மரங்களை எரித்து கரி போடுற தொழிலுக்கு பேரு கரிமூட்டம். அப்புறம் மாமா முனியனோட கடல்வேலைக்கும் அப்பப்போ போவேன். இது அக்காவுக்கு புடிக்காது. “படிக்குற புள்ளை படிப்புலேதான் கவனம் செலுத்தணும். வேலை, வெட்டிக்கு போயிக்கிட்டிருந்தா படிப்பு கெட்டுடும்”னு திட்டும்.

அக்கா பத்தி இங்கே சொல்லியே ஆவணும். முருகேஸ்வரி அக்காதான் எங்க குடும்பத்துலே மூத்தது. முனியன் மாமாவுக்கு கட்டிக் கொடுத்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. மத்த அக்காங்களுக்கு கல்யாணம் பண்ணுறதுலே தொடங்கி, அப்பாவோட குடும்பப் பாரத்தை இவங்களும் சேர்ந்து சுமந்தாங்க. இவங்களுக்கு மூணு பெண் குழந்தை. ஒரு ஆண் குழந்தை. என்னையும் இவங்களோட மகன் மாதிரியே பார்த்துக்கிட்டாங்க.

பத்தாவது பரிட்சை நெருங்கிட்டிருக்கு. தீவிரமா படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போதான் திடீருன்னு எங்க குடும்பத்துமேலே அந்த இடி விழுந்தது. ஆமாங்க, அப்பா செத்துப் போயிட்டாரு. அவருக்கு மூளையிலே கட்டி. ஆஸ்பத்திரியிலே எவ்வளவோ ட்ரீட்மெண்ட் எடுத்தும் பிரயோசனமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே எனக்கு படிப்பு தேவையான்னு திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அம்மா சண்முகம்தான் என்னை தேத்தி மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனாங்க. அவங்களும் மகள் வீட்டுக்கே வந்து தங்கி விறகு வெட்டுறது, கரிமூட்டம் போடுறது, கூலிவேலைக்குப் போவுறதுன்னு அப்பாவோட குடும்பச் சுமையை முழுமையா சுமக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அம்மா, அக்கா, மாமான்னு என் சொந்தங்க ஆவலா எதிர்ப்பார்த்த பரிட்சையும் வந்துடிச்சி. முதல் ரெண்டு பரிட்சை எழுதிட்டு வந்தப்போ, அக்கா கேட்டுச்சி. “என்னா மாரி. எப்படிடா பரிட்சை எழுதறே”ன்னு. “நல்லாதான் எழுதிக்கிட்டிருக்கேன்”ன்னு சொல்லிட்டு, அக்கா முகத்தை பார்த்தேன். அக்காவோட முகம் ரொம்ப சோர்வா இருந்திச்சி. “உடம்பு சரியில்லை. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி கரிக்குது. கொஞ்ச நேரம் தூங்குறேன். நீ போய் படி”ன்னு சொல்லிட்டு போய் தூங்க ஆரம்பிச்சது. ஏற்கனவே ஒருவாட்டி அக்காவுக்கு ஹார்ட் ஆபரேஷன் வேற பண்ணியிருக்காங்க.

அன்னைக்கு நைட்டு மறுபடியும் அக்காவுக்கு நெஞ்சுவலி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கோம். போற வழியிலேயே செத்துடிச்சி. கதறி அழுவறேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?

“டேய். உன் அக்கா நீ நல்லா படிக்கணும்னுதான் ஆசைப்பட்டுது. நாளைக்கு பரிட்சைக்கு போய் படிடா”ன்னு மாமா என்னை தேத்தி அனுப்பறாரு. அன்னைக்கு நான் பரிட்சை எழுதிட்டு வந்தபிறகுதான் அக்காவோட இறுதிச்சடங்கையே மாமா தொடங்கினாரு. அம்மா மாதிரி என்னை வளர்த்த அக்கா சாவுக்கு பக்கத்துலே கூட இருக்க முடியாம பரிட்சை எழுதினேங்க.. இதே சோகத்தோடதான் அடுத்த ரெண்டு பரிட்சையையும் எழுதி முடிச்சேன்.

அப்பாவும் போயிட்டாரு, அக்காவும் போயிடிச்சி, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடிச்சி. அம்மாவோட உதவிக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். எல்லாத்தையும் கொஞ்சம், கொஞ்சமா மறக்கவும் ஆரம்பிச்சேன்.

பரிட்சை முடிவுகள் வந்த அன்னிக்கு, எனக்கு முடிவுகளை தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்லை. முதல்நாள் போட்ட கரிமூட்டத்துலே இருந்து நானும், அம்மாவும் கரி அள்ளிக்கிட்டிருந்தோம். “டேய் மாரி. உன்னைப் பார்க்க உன் ஸ்கூல் சிநேகிதங்க வந்திருக்காங்க”ன்னு அக்கா சொல்லிச்சி. வெளியே வந்துப் பார்த்தேன். “டேய் நீ தாண்டா ராமநாதபுரத்துலே டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்டு. 490 மார்க் வாங்கியிருக்கேடா”ன்னு சொல்லி கட்டி அணைச்சுக்கிட்டாங்க.

தமிழ் 95, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. அக்காவோட இறுதிச்சடங்கு அன்னைக்குதான் கணக்குப் பரிட்சை நடந்தது. அதுலே நூத்துக்கு நூறு வாங்கியிருக்கேன். என்னோட சேர்ந்து பரிட்சை எழுதின என்னோட அக்காமவ நிர்மலாவும் கூட 432 மார்க் வாங்கியிருக்கா.

அக்காவும், அப்பாவும் ஆசைப்பட்டமாதிரியே நல்ல மார்க் வாங்கியிருக்கேன். என்ன, அதைப் பார்க்கதான் அவங்க இல்லை. மாவட்டத்துலேயே முதலாவதுன்னு தெரிஞ்சதும் அம்மாவுக்கும், மாமாவுக்கும் ரொம்ப சந்தோஷம். இவங்களுக்கு இந்த சந்தோஷத்தைவிட பெருசா என்னாலே வேறு எதைக் கொடுத்துட முடியும்?

அடுத்து +1 படிக்கணும். PDA நிறுவனம்தான் இதுக்கும் உதவ முன்வந்திருக்காங்க. வறுமை, அப்பா-அக்கா மரணம்னு அடுத்தடுத்து சோகங்களையே சந்திச்சிக்கிட்டிருக்கிறதாலேயோ என்னவோ கொஞ்சநாளா எனக்கு தாங்கமுடியாத தலைவலி. உள்ளூர் டாக்டருங்கள்லாம் உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லப்பான்னு சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்லே ஒரு டாக்டர் கிட்டே காட்டுனப்போ, இருதயத்துலே ஏதோ பிரச்சினைன்னு சொல்றாரு. அறுவை சிகிச்சை செய்யணுமாம். அதையும் உடனே செய்ய முடியாதாம். 21 வயசுலேதான் செய்யணுமாம். பாருங்க சார். பட்ட காலிலேயே திரும்ப திரும்ப பட்டுக்கிட்டிருக்கு. என்னதான் வாழ்க்கையோ தெரியலை.

எது எப்படியோ, இவ்வளவு நேரம் என் கதையை பொறுமையா கேட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி. எவ்வளவு பெரிய சோகத்தையும் கல்வியாலேதான் என்னை மாதிரி மாணவர்கள் கடக்க முடியும் என்பதற்கு என்னோட கதைதான் நல்ல உதாரணம்.

என் மனசுலே இருந்த மொத்த பாரங்களையும், இந்த கடிதத்தில் கொட்டித் தீர்த்ததுலே மனசு ரொம்ப லேசாகியிருக்கு. அம்மாவும், மாமாவும்தான் எனக்காக கவலைப்பட்டுக்கிட்டிருக்காங்க. இனிமே நீங்களும் நான் நல்லாருக்கணும்னு நெனைப்பீங்க. உங்களோட ஆசியாலே, நான் நிச்சயம் நல்லா வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க.

என்றும் உங்கள் அன்புள்ள
மாரிச்செல்வம்
முக்கையூர் கிராமம்,
கடலாடி ஒன்றியம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

(நன்றி : புதிய தலைமுறை கல்வி மற்றும் பத்ரி)

மாரிச்செல்வத்துக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்கள் feedback@puthiyathalaimurai.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது தொடர்பு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

25 ஜூன், 2011

தோழர்கள்



கே.கே.நகரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் நடந்த நிகழ்ச்சி அது. ஒரு அதிதீவிர இடதுசாரி முற்போக்கு புரட்சித் தோழர், இன்னொரு ‘சாதாதோழரை சந்தித்தார்.

“வணக்கம் தோழர். முதல் தடவையா சந்திக்கிறோம். நீங்க இப்படி இருப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை

வணக்கம் தோழர். நான் எப்படி இருப்பீன்னு எதிர்ப்பார்த்தீங்க?

“உங்களோட பிலாக் ப்ரொஃபைல் போட்டோவில் ஜம்முன்னு தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம் வெச்சுக்கிட்டு சூப்பரா இருந்தீங்க. நேர்லே ரொம்ப சுமாரா இருக்கீங்களே?


நாற்பதை தொட்ட
சாதாதோழர் கொஞ்சம் தொப்பையும், கிப்பையுமாக மொக்கையாகதானிருப்பார். ஆனாலும் புரட்சித்தோழர் நேர்ப்பேச்சில் திடீரென சூட்டுக்கொட்டையாய் சுட்டுவிட, குழம்பிப் போனார்.

“அது சின்ன வயசுலே எடுத்த போட்டோ தோழர்
என்று சொல்லி சமாளித்தார்.

“அதானே பார்த்தேன். சின்ன வயசுலே நல்லா இருந்திருக்கீங்க

இவ்வகையாக சம்பாஷணை முடிந்தது.

சொல்ல மறந்துவிட்டோமே? நம் ‘சாதாதோழரின் ப்ரொஃபைல் போட்டோவில் இருந்தவர் தோழர் சேகுவேரா. புரட்சித் தோழரோ இன்னமும், சின்ன வயசில் சாதா தோழர் சுருட்டெல்லாம் பிடித்துக் கொண்டிருந்தவர் என்று ‘சீரியஸாகநம்பிக் கொண்டிருக்கிறார்.

 ‘ஒயிட் நைட்ஸ்எழுதிய தஸ்தாவேஸ்கி இருந்திருந்தால், இச்சம்பவத்தை கேள்விப்பட்டு தூக்கு மாட்டி செத்திருப்பார்.


* - * - * - * - * - *


இவர் இன்னொரு தீவிர இடதுசாரி புரட்சித் தோழர். இந்துத்துவா சொம்பு தூக்கி அலையும் ஜெயமோகனை டவுசர் அவிழ்த்து ஓடவிட தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வகையாக சிக்கியது ‘அவன் இவன்

முதல் நாள் முதல் காட்சியே படத்தை பார்த்தார். படம் பார்த்த எஃபெக்டில் நேராக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். மூளையை கசக்கி யோசித்து ஒரு டைட்டிலை வைத்தார். அவன் இவன் – ஜெயமோகனின் கிழிந்த முகத்திரை!

வேகவேகமாக பதிவினை தட்டச்சினார். பாலாவின் ஆணாதிக்கத் திமிர், ஜெயமோகனின் முகம் சுளிக்க வைக்கும், காது கூச வைக்கும் வசனங்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு என்று கலந்துக்கட்டி புரட்சிகர திரைவிமர்சனத்தை வலைப்பதிவில் பதிவிட்டு விட்டார்.

முதல் பின்னூட்டமே படத்துக்கு வசனம் ஜெயமோகன் அல்ல, எஸ்.ரா என்று சுட்டிக் காட்டுகிறது. உடனே தோழர் ஜெயமோகன் என்று தட்டச்சிய இடத்தையெல்லாம் Find போட்டு கண்டுபிடித்து, எஸ்.ரா என்று மாற்றிவிடுகிறார். கோழி குருடா இருந்தாலென்ன, செவிடா இருந்தாலென்ன, ருசியாக இருந்தால் சரிதான் என்பது தோழரின் நிலைப்பாடு. தலைப்பும்  ‘எஸ்.ரா.வின் கிழிந்த முகத்திரைஆனது. ஒருவழியாக யாருடைய முகத்திரையாவது கிழிக்க வேண்டும் என்கிற தோழரின் ஆவலும் பூர்த்தியானது.

அந்த தவறுக்கு தோழர் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். டைப் அடிக்கும்போது தவறுதலாக எஸ்.ரா என்பது ஜெயமோகன் ஆகிவிட்டதாம். டைப் அடிப்பவர்களே! நீங்களே சொல்லுங்கள். எஸ்.ரா என்று தட்டச்சும் போது, அது ஜெயமோகன் என்று மாற ஒரு சதவிகிதமாவது ஆவது வாய்ப்பு இருக்கிறதா?


* - * - * - * - * - *


இந்த புரட்சித் தோழர் ஆரம்பத்தில் சினிமா, கினிமாவென்றுதான் ஏதோ காமாசோமாவாக எழுதிக் கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஓவர் நைட்டில் புரட்சிக்காரராய் மாறிப்போனார். எதை செய்தாலும் அதை ‘புரட்சியாகவே செய்ய நிரம்பவும் மெனக்கெட்டார்.

எந்த லெவலுக்கு என்றால்...

சிலர் பின்னூட்டம் போடும் போது, கடைசியாக தங்கள் பெயரோடு பின்னூட்டம் இடுவார்கள். ‘அன்புடன் டோண்டு ராகவன் என்பது மாதிரி. நம் தோழர் இப்படி பின்னூட்டம் இடம் ஆரம்பித்தார். “இப்படிக்கு தோழர் ஃபயர்லுக்கு

எங்காவது அநீதியைக் கண்டு உன் நெஞ்சு கொதித்தால், நீயும் என் தோழன் என்பார் சே. இணையம் முழுக்க நடக்கும் அநீதிகளை கண்டு மனம் வெதும்பிப் போனதாலேயோ என்னவோ, நம் தோழர் ஃபயர்லுக்கு தன்னைத்தானே கூட தோழர் என்றே அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோயிலில் அர்ச்சனை செய்ய அய்யர் பெயரை கேட்கும்போது கூட ‘தோழர்என்கிற ஃப்ரீபிக்ஸோடுதான் தன் பெயரை தோழர் சொல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


* - * - * - * - * - *


இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதங்கள்.

இதுபோல இன்னும் ஏராளமான தீவிர இடதுசாரி மொக்கைகளை உருவாக்கியிருக்கிறது வினவு இணையத்தளம். மக்கள் கலை இலக்கிய கழகம் என்கிற அமைப்பின் செயல்பாடுகளின் மீது ஏராளமானோர் வைத்திருந்த மரியாதை, அபிமானம் எல்லாவற்றையும் காலி செய்வதற்கென்றே வினவு இணையத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.

ஒருவன் நாத்திகனாக வாழ்வதுதான் உலகிலேயே மிகக்கடினமான செயல். முழுக்க போர்த்திய ஊரில், நிர்வாணமாய் அலைவது மாதிரி. அதைவிட கடினம், தீவிர கம்யூனிஸ்டாக இருப்பது. இதை உணர்ந்திருப்பதாலேயே, கம்யூனிஸம் பற்றிய சரியான புரிதல் கொண்ட பலரும் கூட மனசுக்குள்ளாக மட்டுமே கம்யூனிஸ்ட்டாக வலம் வருகிறார்கள். சில பேர் சமரசம் செய்துக்கொள்ளாத வாழ்க்கைச் சூழல் அமையும்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக தீவிர கம்யூனிஸ்டுகளின் இணைய செயல்பாடுகள், மேற்கண்ட தோழர்களை போல மேனாமினுக்கி கம்யூனிஸ்ட்களை உருவாக்கித் தொலைக்கிறது. கம்யூனிஸ்ட், நக்சல்பாரி என்று சொல்லிக் கொள்வது இவர்களுக்கு சேகுவேரா டீஷர்ட் போடுவது மாதிரி ஒரு Passion. இவர்களில் யாரும் போலிஸிடம் தடியடி பட்டவர்கள் அல்ல. தடியடி படுபவர்களை வேடிக்கை பார்ப்பவர்கள்.

அரசு இயந்திரம் என்றேனும் இவர்களை நெருங்கும் என்று தெரிந்தால், டீ ஷர்ட்டை தலைக்கு மேலே கையை தூக்கி அவிழ்த்துப் போடுவதைப் போல, கம்யூனிஸத்தை அவிழ்த்துப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

பதிவுலகத்தைப் பற்றி நிறைய எழுதினால் ஹிட்ஸ் கிடைக்கும் என்பதற்காக, ஒரு ப்ளூ ஃப்லிம் எழுத்தாளரை, பிராக்ஸியாக எழுதவைத்து பதிவுகள் வெளியிட்டு வருகிறது வினவு. இப்படிப்பட்டவர்களால், ஒரே ஒரு உருப்படியான கம்யூனிஸ்ட்டையாவது இணையத்தில் உருவாக்க முடிந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

22 ஜூன், 2011

இன்டர்நெட் ரோமியோ!


இப்போதெல்லாம் தோழர் டமாரு குமாரு ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டான். பார்க்கும் ஃபிகர்களை எல்லாம் தன்னுடைய ஃபிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியாகவும் உருவெடுத்துவிட்டான். சகாக்களின் ஃபிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவனுக்கு வாய்த்திருந்தது. வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் 'ஏ'ய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளன் நம்ம டமாரு. காதல் திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாலும் டமாருக்கு ஏனோ சைட் அடிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவேயில்லை.

இளைஞர்கள் பலரும் ‘சாட், சாட்’ என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட டமாருவுக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆர்.கே. மட் ரோடில் இருந்த டமாருவின் நண்பன் விஜி ஒரு பிரவுசிங் சென்டர் வைத்திருந்தான். டமார் குமாருக்கு ஓரளவுக்கு இங்கிலீஷ் தெரியும், ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீ காண்ட்ராக்ட் எடுத்திருந்ததால் ஓரளவுக்கு ஆங்கிலப் பரிச்சயம் ஏற்பட்டிருதது. முன்பு போலில்லாமல் இப்போது டமாரு கொஞ்சம் டீசன்ட் வேறு ஆகிவிட்டிருந்தான். விஜி கடைக்கு அவ்வப்போது சென்று சாட்டிங் செய்ய கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் டமாரிடம் சாட்டிங்கில் மாட்டியதில் நிறையப் பேர் அமெரிக்க ஃபிகர்களாக இருந்தார்கள். வெள்ளைத் தோல் மீது பிறப்பிலேயே குமாருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் கொஞ்ச நாள் சாட் செய்ததுமே டமாரு கேட்கும் ஒரு கோரிக்கையை (அது ஒரு மோசமான ஆங்கில நாலெழுத்து கோரிக்கை) கண்டு காரித்துப்பி அனுப்பி விடுவார்கள் வெள்ளைக்கார ஃபிகர்கள். நாம இருக்கறதோ மெட்ராஸ்? அமெரிக்காவில் இருக்குற பிகர்களிடம் போயி ஜொள்ளுவிடுவதால் என்ன பயன்? என்று திடீரென்று டமாருவுக்கு ஒருநாள் பகுத்தறிவு ஏற்பட்டது.

இதனால் டமார் குமாரின் பார்வை இந்திய ஃபிகர்கள் மீது திரும்பியது. ஆனாலும் மாட்டணுமே? ஒரு நாள் தோழர் டமாரு மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டான்.

‘என்ன மேட்டர்?’ விஜி வினவினான்.

"விஜி, சாட்டிங்ல மெட்ராஸ்லேயே ஒரு ஃபிகர் மாட்டிக்கிச்சி’’

‘‘இன்னா சொல்றே டமாரு. உன் ஏஜுக்கும், முகத்துக்கும் இதெல்லாம் ஓவராத் தெரியலை’’

‘‘இன்னாடா ஒனக்கு மட்டும் மாட்டிக்கிட்டா ......................... இருப்பியா?" (கோடிட்ட இடத்தில் ஆக்சுவலாக இடம் பெற்றது ஒரு மோசமான தமிழ் வார்த்தை. நாகரிகம் கருதி தனிக்கை செய்திருக்கிறேன்)’’

‘‘அப்புறம் ஒன் இஷ்டம்டா குமாரு. ஆனாலும் ஒனக்கு கொழந்தை, குட்டின்னு இருக்கு. பாத்துக்கோ’’

விஜியின் ஆலோசனையை எல்லாம் கேட்கும் நிலையில் டமாரு இல்லை. சாட்டிங் பைத்தியம் முத்திவிட்டிருந்தது.

அவள் பெயர் நந்தினி. வயது பத்தொன்பதாம். சாட்டிங்கில் பசங்களை மடக்கும் ஃபிகர்கள் எல்லோருக்குமே பத்தொன்பது வயதாக இருப்பது ஒரு ஆச்சரியகரமான ஒற்றுமை. சென்னையின் நுழைவாயிலில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாளாம். டமாரு தினமும் 4 மணிநேரமாவது நந்தினியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டான். ஒரு நாள் அவள் பிரவுசிங் சென்டருக்கு கீழிருந்த துணிக்கடைக்கு வருவதாகச் சொன்னாள். டமாரு ரொம்பவும் பரபரப்பாகி விட்டான்.

அன்று அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது. அவனது மனைவி கருவுற்றிருந்தாள். கன்சல்டேஷனுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. நந்தினியைச் சந்திக்க இயலாத சூழ்நிலை. எனவே விஜியிடம் ஒரு கோரிக்கை வைத்தான். ‘‘பச்சைத் தாவணியில் அவள் அக்காவோட வருவா. எப்படி இருக்கிறான்னு மட்டும் பார்த்து வைச்சுக்கோ. அவ இன்னால்லாம் செய்றான்னு நோட் பண்ணிக்கோ. மறுநாள் நான் சாட்டிங் பண்றப்போ அவளை நானே மறைஞ்சு நின்னு பார்த்தா மாதிரி ஃபிலிம் காட்டிக்கிறேன்’’ என்றான். விஜியும் பெரிய மனது வைத்து நண்பருக்காகச் சம்மதித்தான். இருந்தாலும் போயும் போயும் டமாருக்கு ஒரு ஃபிகர் சாட்டிங்கில் செட் ஆன வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

அன்றிரவு டமாருவை செல்லில் பிடித்து நந்தினியின் உடல்வாகு, அவள் பேசும் ஸ்டைல், அவளது அக்கா குண்டாக இருந்தது, அவர்கள் வாங்கிய சுடிதார் கலர் போன்ற விவரங்களை விஜி சொன்னான். அவன் காலத்தாற் செய்த அந்த உதவிக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தழுதழுத்துச் சொன்னான் டமாரு. நாட்கள் கடந்தன. டமாருவின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. லேசாக முன் மண்டையில் விழுந்த வழுக்கையை மறைக்கும் விதத்தில் தலைவார ஆரம்பித்தான். சைடில் இருந்த நரைமுடியை மறைக்க ‘டை’ அடித்தான். டைட்டாக ‘டக்-இன்’ செய்ய ஆரம்பித்தான். அப்போதுதான் தொப்பை தெரியாதாம்.

ஒரு நாள் சாட் செய்துக் கொண்டிருந்தபோது ‘‘நாகேஸ்வரராவ் பார்க்கில் சந்திக்க விருப்பமா?’’ என்று நந்தினியிடம் கேட்டிருக்கிறான் டமாரு. நந்தினியோ ‘‘பார்க்குக்கு எல்லாம் வர முடியாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாயுங்காலம் 6 மணிக்கு வர்றேன். பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறாள். டகாரு காத்திருந்தான். வெள்ளியும் வந்தது. மாலை 5 மணிக்கே பரபரப்பாகி விட்டான். வேர்க்க விறுவிறுக்க விஜியின் பிரவுசிங் சென்டருக்கு வந்தவன் ஃபேர் அண்டு லவ்லியும், பவுடரும் போட்டுக்கொண்டான். ஃபுல் மேக்கப்பில் டமாரு ஆஜர். சுமார் 2 மணிநேரம் கழித்து சோர்வாக வந்து சேர்ந்தான்.

‘‘என்ன டமாரு ஒர்க் அவுட் ஆயிடிச்சா?’’

‘‘அவளைப் பார்த்தேன் மாமு. ஆனாப் பேசலை’’

‘‘ஏன்டா?’’

"பாத்ததும் வயசைத் கண்டுபிடிச்சுட்டான்னா, அப்புறம் சாட்டிங்க்ல கூட வராமப் போயிட்டான்னா என்ன செய்ய?"

ஆனால் விதி யாரை விட்டது? நந்தினி குமாரை விடவில்லை. அவளது நச்சரிப்பாள் மெரீனாவின் கூட்டமற்ற இருண்ட முன்னிரவொன்றில் ஒருநாள் இருவரும் சந்தித்தார்கள். கிட்டத்தட்ட தன் உருவத்துக்கு சுடிதார் போட்டுவிட்டதைப் போன்றதொரு தோற்றத்துடன் இருந்த நந்தினியைக் கண்டு டமாரு 'டமால்' ஆனான். தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் அளவுக்கு அவன் மனம் விசாலமாக இல்லை.

விஜியுடன் அன்று இரவு டாஸ்மாக்கில் விடிய, விடிய கச்சேரி. விடிந்ததும் எழுந்து நேராக விஜி கடைக்கு வந்தான் குமாரு. யாஹூவின் சென்னை சாட்ரூம்.

"Hi"

"Hi"

"ASL Pls?" (Age, Sex, Location)

"I am kumaru 22/M/Chennai. Your ASL?"

"I am Bhuvana 19/F/Chennai"

புவனாவின் பூர்வீக புனைப்பெயர் 'நந்தினி' என்கிறது யாஹூ சாட் ஹிஸ்ட்ரி.

(நன்றி : யூத்ஃபுல் விகடன்)

21 ஜூன், 2011

அநாகரிகம்

ஒரு காலத்தில் பிட்டு படம் பார்க்க நாய் படாத பாடு படவேண்டியிருந்தது. எந்த தியேட்டரில் பிட்டு ஓட்டுவார்கள் என்பதை மோப்பம் பிடிப்பதற்குள் டங்குவார் அறுந்துவிடும். பரங்கிமலை ஜோதி தியேட்டரில் சிலவேளைகளில் அரிதாக பிட்டு இருக்கும். பலவேளைகளில் சும்மா மேலுக்கு காட்டி ஏமாற்றி விடுவார்கள். மவுண்ட்ரோடு கெயிட்டி சுத்தம். போஸ்டர் லெவலுக்கு கூட சீன் இருக்காது. ஆதம்பாக்கம் ஜெயலட்சுமியில் நினைத்தால் பிட்டு ஒட்டுவார்கள். இரும்புலியூர் அனுராக்கும் இப்படித்தான்.

காசியில் மட்டும் ஓர் அருமையான டீலிங் இருந்தது. சனி, ஞாயிறு காலை 9.30 காட்சிகள் மட்டுமே பிட்டு. சைக்கிள் டோக்கன் போடும் தாத்தாவிடம் நேராகப் போகவேண்டும். எதுவும் பேசாமல் ஒரு ரூபாய் காயினை அவரது கையில் திணித்தால், “இருக்கு” அல்லது “இல்லை” என்று ஒருவரியில் அன்றைய தலையெழுத்தை நிர்ணயித்து விடுவார். இந்த வசதி வேறெந்த தியேட்டரிலும் இல்லை.

பிட்டுபட ரசிகர்களுக்கு வாராது வந்த மாணிக்கம் போரூர் பானு. ஒரே ஒரு பிட்டு லட்சியம். குறைந்தது பத்து பிட்டு நிச்சயம். ஆபரேட்டருக்கு மூடு இருந்தால் மட்டுமே பிட்டுக்கு நடுவே படம் ஓட்டுவார். காஞ்சிபுரத்தில் இருந்தெல்லாம் ரசிகர்கள் படையெடுத்து வருவார்கள்.

ம்.. அதெல்லாம் ஒரு வசந்தக் காலம். சிடி, டிவிடி மலிவாகி தியேட்டர்களுக்கு மவுசு போயே போயிந்தி. ஆயினும் ஒரிஜினலான அக்மார்க் பிட்டுப்பட ரசிகர்கள் மட்டும் மீண்டும் அந்த கனாக்காலம் நனவாகாதா என்கிற ஏக்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கனவுகள் மெய்ப்படும் காலமிது.

அப்போதெல்லாம் அடித்து அடித்து தேய்ந்துப்போன ரீலில் ‘பிட்டு’ க்ளியராக தெரியாது. நவீன தொழில்நுட்பம் அக்குறையினை போக்கியிருக்கிறது. க்யூப் டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில், டி.டி.எஸ். சவுண்ட் மிக்ஸிங்கில் நமக்கு காணக் கிடைக்கிறது ‘அநாகரிகம்’.

சென்னை கே.கே.நகர் விஜயா திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. குஜால் படம் திரையிடும் திரையரங்குகளின் பெயர்கள் மட்டும் விஜயா, ஜெயலட்சுமி, ஜோதி, பானு என்று கவர்ச்சிகரமான நாமகரணங்களை சூட்டியிருப்பது யதேச்சையாக நடந்த நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதெல்லாம்தான் ஆண்டவன் சித்தம்.

அநாகரிகம் படத்தின் சதையைப் பார்ப்போம்.

நாயகன் விபு ஒரு லெக்சரர். நாட்டுக்கட்டை மனைவி வகிதா. முதல் காட்சியே முதலிரவுதான். நாயகியின் வசனம், “முதலிரவுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு நெஞ்சு..”. நாயகன் அதிர்ச்சியோடு பார்க்க, “இன்னொன்னு இந்த மஞ்சு” என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார். தியேட்டர் முழுக்க பரவச அலை சுனாமியாக அடித்து ரசிகர்கள் ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக விசில் அடிக்கிறார்கள்.

விபுவை விட்டுவிடுவோம். வழக்கமான பிட்டுபட ஹீரோவாகதான் இருக்கிறார். வகிதா வாவ். இவ்வளவு களையான முகம் கொண்ட பெண்ணை இதுவரை சினிமாவில் பார்த்ததே இல்லை. முகம் வரைக்கும் லட்சுமிகரமாக இருக்க, கழுத்துக்கு கீழே தொடங்கி ஜோதிலட்சுமிகரம். முதுகிலும், அதற்கு நேரெதிராக முன்னாலும் நச்சென்று அவருக்கு அமைந்திருக்கிறது அழகாக இரு மச்சம். தொப்புளிலிருந்து இரண்டே முக்கா இஞ்ச் இறக்கிதான் கொசுவம் வைக்கிறார்.

ஒரு காட்சியில் கணவரை புடவை கட்டி விடச் சொல்கிறார் வகிதா. கைகளையே பயன்படுத்தாமல் கொசுவம் சொருக வேண்டும் என்பது கண்டிஷன். இந்தக் காட்சியில் இயக்குனர் தனது படைப்பாற்றல் திறனை முழுமையாக கொட்டித் தள்ளியிருக்கிறார். க்ளோசப்பில் இக்காட்சியை படம் பிடித்த கேமிராமேனுக்கு வகையான இடத்தில் நிச்சயம் ஒரு மச்சம் இருக்க வேண்டும்.

ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும் ‘இல்லற’ வாழ்வில் திடீர் புயலாய் நுழைகிறார் தொங்கும் தோட்டமான பாபிலோனா. ஹீரோயினுக்கு இவர் தோழி. ஏதோ வேலை விஷயமாக சென்னைக்கு வருகிறார். அடிப்படையில் இவரது கணவர் ஒரு டொக்கு. இனி கதை எப்படிப் போகுமென்று யூகிப்பதில் உங்களுக்கு சிரமமிருக்காது. லெக்சரரை கணக்கு பண்ண ஜாக்கெட், பாவாடை மட்டுமே அணிந்து புடவைக்கு இஸ்திரி போடுகிறார். துண்டு மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோவிடம் கசமுசாவுக்கு ‘ட்ரை’ செய்கிறார். ஹீரோ முரண்டு பிடிக்க.. எசகுபிசகான சந்தர்ப்பத்தில் வகிதா பார்த்துவிட.. முடிச்சு மேல் முடிச்சாக விழுகிறது திரைப்பாவாடையில். கணவன், மனைவி பிரிகிறார்கள்.

பின்னர் தனியாக வசிக்கும் லெக்சரரிடம் ட்யூஷன்(!) படிக்க வருகிறார் ஒரு ஏழைப்பள்ளி மாணவி. கெமிஸ்ட்ரி எடுக்கும் மாஸ்டருக்கு மாணவியிடம் கெமிஸ்ட்ரி பற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரேயடியாக ‘மேட்டரை’ முடிக்காமல், துண்டு துண்டாக ‘பிட்டு’ ஓட்டி, திருமணத்துக்கு வற்புறுத்துகிறார் லெக்சரர். தன்னையும், தன் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் மாஸ்டரிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறாள் மாணவி. கடைசியில் காதலனை கைபிடித்தாளா, லெக்சரர் மனைவியோடு இணைந்தாரா என்பதை கே.கே.நகர் விஜயா திரையரங்கில் ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கிப் பார்த்துக் கொள்ளவும்.

மாணவி பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் நாலு குழந்தைக்கு அம்மா மாதிரியான சைஸில் ஒருமாதிரியாக தொளதொளவென இருக்கிறார். இதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.

கச்சிதமாக மூன்று ஃபிகர்களையும் மாற்றி மாற்றி புரட்டி எடுக்கும் ‘கவுரவமான’ வேடம் கிடைக்க, ஹீரோ எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தாரோ தெரியவில்லை.

புனேவில் ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், மக்களுக்கு ‘விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணதேவன். படத்தின் தயாரிப்பாளர் ஒரு டாக்டர். அதென்னவோ தெரியவில்லை, பிட்டு படம் எடுப்பவர்களெல்லாம் டாக்டர்களாகவே இருக்கிறார்கள். இயக்குனர் எதிர்ப்பார்க்கும் ‘விழிப்புணர்வு’ நிச்சயம் ஏற்படும். ஏனெனில் படம் பார்த்த ஒரு ரசிகனும் இரவு முழுக்க தூங்க இயலாமல், விழித்துக் கொண்டே படம் ஏற்படுத்திய அதிர்வுகளை உணர்வான்.

‘ஏதோ மோகம், ஏதோ தாகம்’ பாடல் மிகப்பொருத்தமான இடத்தில் சொருகப்பட்டு, அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஒரிஜினல் கூட இவ்வளவு சிறப்பாக அமைந்ததில்லை. பின்னணி இசையும் ஓக்கே. பிட்டு படங்களுக்கேயான பிரத்யேக மரபார்ந்த இசைமரபை உடைத்தெறிந்திருக்கிறார் இசையமைப்பாளர்.

வெறுமனே ‘சதை’யை மட்டும் நம்பி படம் எடுக்காமல், ‘கதை’க்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், பிட்டுபட பாரம்பரியத்தில் அநாகரிகத்துக்கு தனி இடம் நிச்சயமுண்டு. இவ்வகையிலான சாஃப்ட் போர்ன் படங்கள் நிறைய வரும் பட்சத்தில் விஜயா, ஜெயலட்சுமி போன்ற திரையரங்குகள் மறுமலர்ச்சி அடையக்கூடும்.

அஜால், குஜால் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்!

18 ஜூன், 2011

‘நூல்’ பாண்டியன்

சென்னை கே.கே.நகரில் இருக்கும் அந்தக் கடையின் கதவை திறந்ததுமே ‘குப்’பென்று அடிக்கிறது புத்தகவாசனை.

“இது வெறும் பேப்பரோட வாசனை இல்லைங்க. அறிவு வாசனை” சிரிக்கிறார் கடைக்காரர் ‘நூல்’ பாண்டியன். ‘நூல்’ என்பது அவர் படித்து வாங்கிய பட்டமல்ல. மக்களாக முன்வந்து அளித்த பட்டம்.

நாற்பத்தியாறு வயதான பாண்டியன், ஒரு வித்தியாசமானத் தொழிலை செய்துவருகிறார். பழைய புத்தகங்களை சல்லிசான விலையில் விற்று வருகிறார். இதுதான் வித்தியாசமா என்று அவசரப்பட்டு கேட்காதீர்கள்.

அரிய நூல்களை தேடிக் கண்டுபிடித்து, தனது வாடிக்கையாளர்களுக்கு தருவதுதான் பாண்டியனின் தொழில். அதிலும் அந்நூல் வெளியான முதல் பதிப்பகத்தின், முதல் பதிப்பை தேடிக்கண்டுபிடித்து வாங்கித் தருவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே. இவர் வெறும் விற்பனையாளர் மட்டுமல்ல, அரியநூல்கள் சேகரிப்பாளரும் கூட. 1826ல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பஞ்சாங்கம் கூட இவரது சேகரிப்பில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நூற்றாண்டு கண்ட நிறைய நூல்களை நூல் பாண்டியனின் கடையில் நீங்கள் நிறைய பார்க்கலாம்.

இவரது சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? உத்தேசமாக யூகித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒரு லட்சம், ரெண்டு லட்சம், ஐந்து லட்சம்?

தயவுசெய்து நம்புங்கள். சகட்டுமேனிக்கும் எல்லாவகை நூல்களுமாக, சுமார்அரை கோடி நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார் பாண்டியன். ‘நூல்’ பட்டம் இவருக்கு பொருத்தமானதுதானே?

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நூல்களை வைத்திருந்தாலும், தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு நூலையும் இவருக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாடிக்கையாளர் தேடிவருகிறார் என்றால், அதைவிட சிறந்த புத்தகம் தன்னிடம் இருந்தால், அதைப்பற்றிச் சொல்லி சிபாரிசு செய்கிறார்.

கல்லூரி-பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், ஆன்மீகம், வைத்தியம், சித்தாந்தம், சுயமுனைப்பு நூல்கள், சிறுபத்திரிகைகள், காமிக்ஸ்கள், வார இதழ்கள், நாவல்கள் என்று எல்லாவகை நூல்களையும், எல்லா மொழிகளிலும் சேகரித்து வைத்திருக்கிறார்.

கே.கே. நகர் கடை தவிர்த்து, ஒரு கிடங்கிலும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கும் இடம்போதாமல் பாண்டியன் வாடகைக்கு குடியிருக்கும் வீடு முழுக்க நூல்மயம்தான். மனைவியும், இரண்டு மகன்களும் நூல்கள் போக மீதமிருக்கும் இடத்தில்தான் புழங்குகிறார்கள்.

தேவக்கோட்டை இவரது பூர்வீகம். சென்னையில்தான் பள்ளிப் படிப்பு. உறவினர்கள் பலரும் பதிப்பகம் நடத்தி வருகிறார்கள். ‘நூல்’ தொடர்பான தொழில்தான் தனது வாழ்க்கை என்று அப்போதே முடிவு எடுத்து விட்டார். அதிலும் அரிய, பழைய நூல்கள் மீது அடாத காதல்.

“ஆரம்பத்தில் வீடு வீடா பேப்பர் போட்டுகிட்டு இருந்தேன். அப்புறம் சொந்தமா பேப்பர் ஏஜென்ஸி நடத்தினேன். இது தவிர்த்து நிறைய சின்ன சின்ன வேலைகளும் செய்துக்கிட்டிருந்தேன். என்ன வேலை செஞ்சாலும் பழைய புத்தகங்களை நோக்கியே திரும்ப திரும்ப வந்துக்கிட்டிருந்தேன்.

இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி அப்பா என்னை அரசு நூலகத்தில் நூலகரா சேர்த்து விட்டாரு. நூலகத்துலே இருக்குறது பெரும்பாலும் புதிய புத்தகங்கள். அதனாலே ஏனோ அந்த வேலையும் ஒட்டலை.

சேகரிப்பில் இருந்த புத்தகங்களை வெச்சு தனியா ‘ஆதிபராசக்தி பழைய புத்தகக்கடை’னு கடை ஆரம்பிச்சிட்டேன். விளையாட்டா முப்பது வருஷம் ஓடிடிச்சி...” நினைவுகளில் மூழ்குகிறார் பாண்டியன். பாருங்கள், நினைவுகள் கூட ‘பழையவை’தான்.

சென்னையின் கல்வியாளர்கள், சினிமா இயக்குனர்கள், புத்தகப் பிரியர்கள் என்று பலருக்கும் ‘நூல்’ பாண்டியன் அறிமுகமானவர்தான். வெளியூர்களில் இருப்பவர்களும் கூட தங்களுக்கு எந்த புத்தகம் வேண்டுமென்றாலும், போன் அடித்து சொல்லிவிடுவார்கள். தனது சேகரிப்பில் இல்லாத புத்தகமென்றாலும் இரண்டு மூன்று நாட்களில் ‘எப்படியோ’ வரவழைத்துக் கொடுத்துவிடுகிறார். ஆராய்ச்சி மாணவர்கள் பலருக்கும் இவரது கடை அட்சயப் பாத்திரம். அரிய நூல்கள் என்றால் விலையும் எக்குத்தப்பாக இருக்குமே என்று அஞ்சவேண்டாம். நூல்களைப் போலவே விலையும் கூட ‘பழைய’ விலைதான்.

இவ்வளவு நூல்களை சேகரிக்க முடிகிறதென்றால், இவரிடம் ஒரு பெரிய படையே இருக்கவேண்டும் இல்லையா? இல்லை. ‘நூல்’ பாண்டியன் ஒரு ஒன்மேன் ஆர்மி. காலையில் எல்லோரும் அலுவலகத்துக்கு கிளம்புவதைப் போல, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிடுகிறார். ஒவ்வொரு பழைய கடையாக சென்று, அரிய நூல்கள் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறார். மாலை மூன்று மணிவரை தேடலும், சேகரிப்பும்தான்.

மாலையில் கூடு தேடி வரும் பறவையைப் போல கடைக்கு வருகிறார். நாலு மணி முதல் இரவு ஒன்பதரை வரைதான் இவரது கடை திறந்திருக்கும். வார விடுமுறை எல்லாம் இல்லை. வேலைக்கும் தனியாக ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை.

இத்தொழிலில் வருமானம் என்று பெரியதாக எதுவும் கிடைப்பதில்லை. இவரிடம் புத்தகம் வாங்கிச் சென்று படித்து தேர்ந்த மாணவர்கள், இனிப்பு கொடுக்க வருவதுண்டு. பழைய புத்தகம் வாங்கிப் படித்து போட்டித்தேர்வுகளில் வென்று வேலைக்குச் சேர்ந்தவர்களும் இவரை மறப்பதில்லை. இந்த ஆத்மத் திருப்திக்காகதான் இப்பணியை விடாமல் செய்துக் கொண்டிருக்கிறார்.

ஊருக்கெல்லாம் புத்தகம் விற்கிறாரே, ‘நூல்’ பாண்டியன் என்ன புத்தகங்களை படிக்கிறார்?

“முழுக்க முழுக்க ஆன்மீகப் புத்தகங்களைதான் படிப்பேன். ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லணும்னு, மத்த புத்தகங்களை பத்தி மேலோட்டமா வாசிச்சி தெரிஞ்சி வச்சிப்பேன்.

இப்பல்லாம் மக்கள் புத்தகம் வாசிக்கிறது ரொம்ப குறைஞ்சிடிச்சி சார். எல்லாரும் டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அச்சிலே வாசிக்கிறது மனசுலே பதியறது மாதிரி, டிவியிலே பார்க்கிறது பதியாதுன்னு அவங்களுக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதுன்னு தெரியலை” என்று அலுத்துக் கொள்கிறார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க ‘வாசகர்’ உள்ளே நுழைகிறார்.

“சார். பொன்னியின் செல்வன் கிடைக்குமா?”

“கிடைக்கும் தம்பி. மொத்தம் அஞ்சி பாகம். இப்போ வர பதிப்புகளில் எல்லாம் படமே இருக்காது. அந்த காலத்துலே கல்கியில் வந்ததையெல்லாம் சேர்த்து வெச்சி ‘பைண்டிங்’ பண்ணி புக்கா கிடைக்கும். மணியமோட படங்கள் அட்டகாசமா இருக்கும். அதை வாங்கிக்குங்க” – இதுதான் ‘நூல்’ பாண்டியன்.

நூல் பாண்டியனின் தொடர்பு எண் : 9444429649

நூல்களை காப்பது எப்படி?

வீட்டில் சிறியளவில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பெரிய தொல்லை. புத்தகத்தை அரிக்கும் பூச்சிகள். புத்தக அடுக்குகளில் படித்துவிட்டு வைத்த பல புத்தகங்களை, சில காலம் கழித்து எடுத்துப் பார்த்தோமானால் மொத்தமாக அரித்து வீணாகிவிட்டிருக்கும்.

ஐம்பது லட்சம் புத்தகங்களை எந்தவித சேதாரமுமில்லாமல் பாதுகாக்கும் ‘நூல்’ பாண்டியன் சுலபமான ஒரு வழிமுறையை சொல்கிறார்.

“ஆறு மாதம் ஒரு புத்தகம் ஒரே இடத்தில் எந்த அசைவுமின்றி வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதில் பூச்சிகள் குடிபுகும். ஒன்றுமே செய்யவேண்டாம். அடுக்கில் இருக்கும் புத்தகங்களை மூன்று மாதத்துக்கு ஒருமுறை சும்மா கையில் எடுத்து, மேலோட்டமாக பிரித்து பார்த்துவிட்டு அப்படியே வையுங்கள் போதும். எந்தப் பூச்சியும் வராது. நான் புத்தகங்களை பாதுகாக்கும் ‘டெக்னிக்’ இதுதான்”

(நன்றி : புதிய தலைமுறை)

16 ஜூன், 2011

திமுக ஏன் தோற்றது?

ஒரு மாத கால மவுனத்தை கட்டுடைக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று. இன்று இதை பேசாவிட்டால், நாளையாவது பேசித் தொலைக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டுவிடும். இல்லாவிட்டால் நாளன்னைக்காவது பேசியாக வேண்டும். திராவிட இயக்கத்துக்கு வாக்கப்பட்டு விட்ட ஒரே பாவத்துக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திமுக தோற்றுவிட்டதைப் பற்றி நீ என்ன எழுதி கிழித்தாய் என்று இந்த சமூகம் தினம் தினம் குனியவைத்து கும்மிக் கொண்டிருக்கும்.

திமுக ஏன் தோற்றது?

கலைஞர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை திரும்ப திரும்ப இக்கேள்வியை தனக்குதானே கேட்டுக் கொண்டிருக்கிறான். இலவச டிவி கொடுத்தோம். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம். மளிகைப் பொருள் கொடுத்தோம். அவ்வளவு ஏன் தேர்தலில் ஓட்டுப்போட ஊக்கத்தொகையாக ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கூட கொடுத்தோம். அப்புறமும் ஏன் தோல்வி?

ஊடகங்கள் சில பட்டியல்களை தருகிறது. அறிவுஜீவிகள் வேறு பட்டியல்களை தருகிறார்கள். பொதுமக்கள் ஏதேதோ காரணங்களை அடுக்குகிறார்கள். கலைஞரோ 1950களின் ஸ்டைலில், பார்ப்பனர்களால்தான் தோற்றோம் என்கிறார். எந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் இவரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள், இந்த தேர்தலில் மட்டும் குறிவைத்து தோற்கடிக்க?

ரஜினிகாந்த் ஒருவரை தவிர தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும், சூரியனுக்குதான் வாக்களித்தோம் என்கிறார்கள். அப்படியென்றால் சூரியனுக்கு பட்டனை அமுக்க, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்ததா என்று மாண்புமிகு புரட்சித்தலைவிக்கே கூட சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இருநூறு இடம் தம் கூட்டணிக்கு கிடைத்ததை இன்னமும் நம்பாமல், “சசி.. என் கையை ஒருவாட்டி கிள்ளு...என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாராம். எதிர்க்கட்சித் தலைவர் கேப்டனோ, இதெல்லாம் சோமபான மாயையோ என்று குழம்பி, அடிக்கடி முகத்தில் தண்ணீர் தெளித்து தான் நிதானமாக இருப்பதை உறுதி செய்துக் கொள்கிறாராம்.

மின்வெட்டு, ஈழப்பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், பல்வேறு தொழில்களில் குடும்ப ஆதிக்கம், மணல் கொள்ளை, சரமாரி ஊழல், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் குறுநில மன்னர் மனோபாவம், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அராஜகம் என்று ஆயிரம் காரணங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிகச்சுலபமாக உடைக்க முடியும், அவையெல்லாம் தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்திருக்க முடியாதென்று.

உதாரணத்துக்கு மின்வெட்டை எடுத்துக் கொள்வோம். திமுகவுக்கு வாக்கு விழாததற்கு காரணமாக மின்வெட்டினை பொதுமக்கள் பலரும் பரவலாக சொல்லுவதை கேட்கமுடிகிறது. குறிப்பாக திமுக ஆண்ட காலத்தில் திருமணம் முடித்த பலரும், மாமனார் வீட்டில் முதலிரவில் கூட மின்சாரம் இல்லாததால் இருட்டில் தடவி, தட்டுத் தடுமாறி கடுப்பாகியிருக்கிறார்கள். மனைவியின் கையை பிடிப்பதாக நினைத்து, மாமியாரின் கையை (வேண்டுமென்றே?) பிடித்துவிட்ட அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளைகளும் கூட உண்டு. ‘துப்பு கெட்ட மனுஷாவென்று முதல்நாளே பொண்டாட்டியிடம் திட்டும் வாங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாவமே திமுக ஆட்சியை தலைமுழுகியது என்பது ஒரு சாரார் வாக்கு.

தயவு தாட்சணியமின்றி இக்காரணத்தை எல்லாம் நீக்கிவிடலாம். ஆட்டைக்கே சேர்க்க வேண்டியதில்லை. மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் ஏதோ கடைசி இரண்டு வருடங்களில்தான் கிடாவெட்டு மாதிரி மின்வெட்டை போட்டுத் தள்ளியதாகவும், அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் தமிழ்நாட்டையே ஜெகஜ்ஜோதியாக வைத்திருந்தது மாதிரியான தொனி இந்த கணிப்பில் தெரிகிறது. ஆற்காட்டார் அமைச்சராக கையெழுத்திட்ட அடுத்த நொடியே கோட்டையிலேயே மின்வெட்டு நிகழ்ந்தது என்பதுதான் வரலாறு.

மின்வெட்டும், ஈழத்தமிழர் பிரச்சினையும் தேர்தலில் பாதிப்பு உண்டாக்கியிருந்தால் 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே திமுக, ‘கப்புவாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லையே? அதென்ன கடைசி இரண்டு வருடங்களில்தான் இப்பிரச்சினை மக்களை புளியமரத்தை புளிக்காக உலுக்குவது மாதிரி உலுக்கியதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகம் தழுவிய அளவில் தோழர்களை வைத்து, திமுக ஏன் தோற்றது என்கிற கேள்வியை முன்வைத்து ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினோம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்தாலும், பெரிய மனது வைத்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகாவது கருத்துக் கணிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் என்று கமிஷனரை நாம் கேட்டுக் கொண்டோம். அவரிடமிருந்து உரிய பதில் வராததால் மவுனம் சம்மதம்என்று எடுத்துக்கொண்டு நம்முடைய கருத்துக் கணிப்புப் படையினர் தமிழகமெங்கும் கரும்புத் தோட்டங்கள், வாய்க்கா வரப்பு, கண்மாய் கரையென்று இண்டு இடுக்கு விடாமல் புகுந்து கணிப்பெடுத்து, கள்ள ஜோடிகள் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிய சில இடங்களிலும் கணிப்புக்காக நோட்டை நீட்டி, தர்ம அடி வாங்கியும் கூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இந்த கணிப்பில் எல்லாக் காரணங்களையும் ஓரம் கட்டி, ஒரு முக்கியமான காரணம் தெரிய வந்திருக்கிறது. இக்காரணத்தைப் பற்றி எந்த ஊடகமும், அறிவுஜீவிகளும் இன்னமும் வாய் திறக்காதது நமக்கு அதிர்ச்சியையும், அயர்ச்சியையும், அலுப்பையும் ஒருசேர அளிக்கிறது.

இம்முறை வாக்களித்தவர்களில் சுமார் 30 லட்சம் பேர் இளைஞர்கள். ஓட்டு போடும் மெஷின் என்பது எடை பார்க்கும் மெஷின் மாதிரி இருக்கும் என்று நினைத்து வாக்குச்சாவடிக்குப் போனவர்கள். கொளத்தூர் தொகுதியில் இளைஞர் ஒருவர் மெஷின் மீது ஏறிநின்று எடை பார்த்த காரணத்தாலேயே, அந்த மிஷினில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கையில் தெரியாமல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடியான சம்பவம் நீங்கள் அறிந்ததே. இவர்களில் சுமார் 29 லட்சத்து தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது பேர் இரட்டை இலைக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த இளைஞர்கள் அனைவருமே கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதிவிடுவாரோ என்று அஞ்சியே, அம்மா ஆட்சிக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார்கள். அம்மா ஆட்சிக்கு வந்தால் சசிகலா சத்தியமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லையென்று சத்தியப் பிரமாணம் செய்து, ஒவ்வொரு இளைஞருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் நம்முடைய கருத்துக் கணிப்பின்போது அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது (ஜாஃபர் சேட் என்னத்தைதான் உளவுத்துறையை வைத்து கணிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை)

இளைஞர்களின் அச்சம் நியாயமானதுதான்.

கலைஞரும் கொஞ்சம் நஞ்சமாகவா ஆடியிருக்கிறார்? கடந்த ஐந்து ஆண்டுகளில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் என்று புகுந்து விளையாடியிருக்கிறார் அல்லவா? வசனம் எழுதுவது மட்டுமன்றி சினிமா பிரத்யேகக் காட்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொண்டு சினிமாக்காரர்களை ஹிட்லர் மாதிரி சித்திரவதையும் செய்திருக்கிறார். அந்த சித்திரவதைகளை நேரடியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பி, தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனும் இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்று சபதம் மேற்கொள்ளுமாறும் செய்திருக்கிறார்.

எந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியமோ, இன்றுவரை ‘உளியின் ஓசைகேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. ஆனால் பெண் சிங்கத்துக்கு இரையாகிவிட்டோம். ஒரு ஞாயிறு மதியம் அலுப்பாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, “தலைவரின் ஆணை. ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் பெண் சிங்கம்பார்த்தே ஆகவேண்டும் என்று கூறி, இளம்பெண்ணை கதற கதற கற்பழிக்க இழுத்துப் போவது மாதிரி இழுத்துக் கொண்டுப் போனார்கள் கட்சி நிர்வாகிகள். ஒரு நாடறிந்த பத்திரிகையாளனையே இப்படி கைதியாக்கி இழுத்துப் போனார்களே, சாதாரணத் தமிழ் இளைஞர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? இவர்கள் படுத்திய பாட்டை விட, கலைஞர் படத்தில் வசனம் எழுதி படுத்திய பாடு அமோகமானது. (படம் பற்றிய நம்முடைய திரைப்பார்வையை ஏற்கனவே விலாவரியாக எழுதியிருக்கிறோம். இங்கே அமுக்கி அவஸ்தைப்படவும்).

இளைஞன்திரைப்படத்தை காணும் விபத்தும் கூட இதேபோல நமக்கு தவிர்க்கவியலா சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டது. இளைஞனைப் பொறுத்தவரை கலைஞரின் வசனம் என்பதைவிட கொடுமையான விஷயம் கவிஞர் பா.விஜய் நாயகன் என்பதுதான். பொன்னர் சங்கரையும் தவிர்க்க இயலாத சூழலில் பார்த்துவிட்டு, நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

ஏதோ கலைஞர் ஆசைப்பட்டு வசனம் எழுதினார், படம் வெளியானது என்றில்லாமல் ஒரு நாளைக்கு 248 முறை கலைஞர் டிவியில் ட்ரைலர் காட்டியதும், படங்கள் அமோகமாக ‘அவதார்வசூலை முறியடித்துவிட்டதாக கலைஞருக்கு சில அல்லக்கைகள் கணக்கு காட்டியதும், நம் முப்பது லட்சம் இளைஞர்களையும் எரிமலையாய் குமுறச் செய்துவிட்டது. ரஜினியின் ரோபோவுக்கே 100வது நாள் போஸ்டர் ஒட்டப்படாத நிலையில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் ஆகிய படங்களுக்கு 100, 175, 250 நாட்களுக்கு போஸ்டர் அடித்து கும்மியடித்தார்கள் உடன்பிறப்புகள். கலைஞரும் நிஜமாகவே தனது படங்கள் ஓடுவதாக நினைத்து பொன்னர் சங்கர் என்கிற அடுத்த படத்துக்கும் உற்சாகமாக வசனம் எழுதிவிட்டார். நல்லவேளையாக தேர்தலுக்குப் பிறகே இப்படம் வெளிவந்ததால், திமுக 20 ப்ளஸ் சீட்டுகளையாவது வெல்ல முடிந்தது.

கலைஞர் மீண்டும் ‘தீரன் சின்னமலைஎன்கிற திரைக்காவியத்துக்கு எழுத்தோவியம் தீட்டவிருப்பதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே, அம்மா ஆட்சி வந்தும் கூட தங்களுக்கு விடிவுக்காலம் இல்லையா என்று இளைஞர்கள் மனம் வெதும்பி போயிருக்கிறார்களாம்.

கலைஞரே; தமிழினத் தலைவரே! கழகத்தையும் நாட்டையும் காக்கும் மாபெரும் பொறுப்பை அறிஞர் அண்ணா தங்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறார். சினிமா வசனம் எழுதுவதிலிருந்து உங்கள் பேனாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பிறகு, தமிழினமே தங்களை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடப் போவதைப் பாருங்கள்.

13 ஜூன், 2011

ஆரண்ய காண்டம்

படத்தில் ‘கதைஎன்கிற வஸ்து இல்லாததாலேயோ என்னவோ, தலைப்பிலேயே முழு கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நாடு ஒரு காடு, மனிதர்கள் விலங்குகள் இதுதான் ஒரு வரி கதை. இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் இருப்பவன், எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற எளிய சூத்திரம் இறுதியில் வலியுறுத்தப்படுகிறது.

சினிமா என்பது ஒரு கதைசொல்லி ஊடகம் என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகள் அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழில் சினிமா வந்து எண்பதாண்டுகள் கழித்து, ‘இல்லை. சினிமா என்பது ரசிகனுக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் ஊடகம்என்று ஆரண்ய காண்டம் அழுத்தம் திருத்தமாக மறுத்திருக்கிறது.

இப்படம் எந்த கதையையும், கருத்தையும் வலியுறுத்தவில்லை. முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை உங்களுக்கு பிரேம்-பை-பிரேமாக வழங்குவது காட்சியனுபவத்தை மட்டுமே. முதல் காட்சி, அடுத்தக் காட்சிக்கு சங்கிலிப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்பது அழுத்தமான விதி. அனாயசமாக இவ்விதியை உடைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. லீனியர் அல்லது நான்லீனியர் என்கிற இரண்டே சாத்தியங்கள் கொண்ட திரைக்கதை கட்டமைப்பை, அசால்ட்டாக odd வரிசையில் அடுக்கியிருக்கிறார் (வானம் படத்தில் மொக்கையான காட்சிகளால் சப்பையாகிவிட்ட மேட்டர் இது).

கமல்ஹாசனும், விக்ரமும் நடித்திருக்க வேண்டிய படம். நம்ம ஷோதான் நல்லா இருக்காதேஎன்பதால் ஜாக்கிஷெராப்பும், சம்பத்தும். தனக்கு தொடர்பே இல்லாத கலாச்சாரத்தை கூட நன்கு உள்வாங்கி, சிறப்பான திறமையை நல்ல நடிகனால் வெளிப்படுத்த இயலும் என்பதற்கு ஜாக்கி நல்ல உதாரணம்.

படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறையாளர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், வசனங்கள் மூலமாக அக்குறையை போக்க இயக்குனர் முற்பட்டிருக்கிறார். நிழல் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் கும்பலின் தலைவனுக்கு முதுமை ஏற்படுகிறது. துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கிறார். அவரது தளபதியாக இயங்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் “டொக்கு ஆயிட்டீங்கஎன்கிறான். அவசரத்தில், ஆத்திரத்தில் உதிர்க்கப்பட்ட இந்த டொக்குஎன்கிற சொல்தான் படத்தின் காட்சி விளைவுகளுக்கான மையப்புள்ளி.

அவசரக் காரியமாக காரில் பயணித்துக் கொண்டிருக்கும் சம்பத்திடம், அவரது மனைவி “என்ன சமையல் செய்யட்டும்?” ரேஞ்சில் கைப்பேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார். எரிச்சலோடு ஏதோ சமாதானப்படுத்தும் பதிலை சொல்லி அழைப்பை நிறுத்துகிறார். கூட இருக்கும் சகா கேட்கிறான். “அண்ணியா?”. சம்பத்தின் பதில் “சுண்ணி”.

‘டொக்குஎன்று நாலு பேர் மத்தியில் விமர்சித்துவிட்ட சம்பத்தை முடித்துவிட, அவனது சகாக்களுக்கே ஆணையிடுகிறார் ஜாக்கி. அவர்களிடமிருந்து சம்பத் தப்ப, முன்காட்சியில் ‘அண்ணியா?என்று கேட்டவனே, “கஸ்தூரியை தூக்கிடுறோம் பசுபதிஎன்கிறான். சொன்னபடியே தூக்கிவிடுகிறான். சம்பத் இப்போது ஜாக்கியை போனில் அழைக்கிறார். ‘ஹலோவுக்குப் பதிலாக அவர் போனில் சொல்லும் முதல் வார்த்தை “தேவடியாப் பையா”. படம் முழுக்க இப்படியான வசனங்கள்தான். படத்தின் எடிட்டரை விட தணிக்கை செய்த அதிகாரிகள்தான் அதிகம் உழைத்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் பாஷையென்றாலே தமிழ் சினிமா வசனகர்த்தாக்களுக்கு லூஸ்மோகன் பாஷைதான். இந்த வழக்கத்தை இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி, ‘ஓரம்போ படத்தில் தாறுமாறாக தகர்த்து எறிந்தார்கள். அந்தப் படத்தைவிட இதில் வசனங்களின் துல்லியம் கூடியிருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சகலமும் சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இசை. நாயகியின் அறிமுக காட்சியிலும், நாயகன் ‘ஐ லவ் யூ சொல்லும் காட்சிகளிலும் இதுவரை நாம் கேட்ட இசையை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு அள்ளித் தெளித்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. படத்தின் முக்கியக் காட்சியான சேஸிங் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் ஒற்றை புல்லாங்குழல் க்ளாசிக்.

அளவாக பயன்படுத்தப்பட்ட காமம், தேவையில்லாத செண்டிமெண்ட் – அழுகையை தவிர்த்திருப்பது, கலையாக கைக்கொள்ளப்பட்டிருக்கும் வன்முறை, இயல்பாக நடித்திருக்கும் நடிகர்கள், எளிமையான காட்சிகள், அதே நேரம் ரிச்லுக் படமாக்கம் என்று படம் பார்க்கும் ரசிகனின் மூளைக்கு ஃப்ரெஷ்ஷான சமாச்சாரங்கள்.

குவென்டின் டொரண்டினோ பாணியிலான திரைக்கதை யுக்தி. இதையெல்லாம் பல்ப் ஃபிக்‌ஷனிலேயே பார்த்துவிட்டோம் என்று படம் பார்த்த சில நண்பர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். பல்ப் ஃபிக்‌ஷனை பார்க்காத தமிழர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே தொண்ணூறு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்றி மூன்று. எனவே ஆரண்ய காண்டம் அடித்துப் பிடித்து ஓடினால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.


எச்சரிக்கை : அடுத்த சில நாட்களில் அறிவுஜீவி திரைப்பார்வையாளர்கள் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், இயக்குனரே சிந்தித்திராத குறியீடுகளை எல்லாம் எடுத்தியம்பி, உங்களை கதறக் கதற கற்பழிக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை.

10 ஜூன், 2011

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

(நன்றி : புதிய தலைமுறை)

கல்விக்காக ஏந்தப்பட்ட உயிராயுதம்!

கலப்பு மணம் செய்துக்கொண்ட காதல் தம்பதிகள் அவர்கள்.

ஆரம்பத்தில் எல்லாமே மகிழ்ச்சியாகவே கழிந்தது. நல்லறமான இல்லறத்துக்கு சாட்சியாக அழகிய மகன் பிறந்தான்.

தர்மராஜ் பஞ்சாலை ஒன்றில் கடைநிலைத் தொழிலாளி. கெட்டப்பழக்கம் எதுவுமில்லை. வாங்கும் சம்பளத்தை அப்படியே மனைவி சங்கீதாவிடம் தந்துவிடுவார். குழந்தை பிறந்தபிறகு பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகரித்தது. எல்லா ஏழை பெற்றோருக்கும் இருக்கும் அதே கனவுதான். மகனை டாக்டராகவோ, என்ஜினியராகவோ, ஐ.ஏ.எஸ்.ஸாகவோ, ஐ.பி.எஸ்.ஸாகவோ கற்பனை செய்து மகிழ்ந்தார்கள்.

கல்வி ஒன்றே தங்கள் குடும்பத்தை கரை சேர்க்கும் என்று நம்பினார்கள். மகனுக்கு நல்ல கல்வியை வழங்கியாக வேண்டும். தர்மாராஜின் சொற்ப சம்பளம் போதாது. சங்கீதாவும் வேலைக்கு போக ஆரம்பித்தார்.

குழந்தை தர்ஷனை கோவை உப்பிலிப்பாளையத்தில் இருக்கும் பெயர்பெற்ற ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். எல்.கே.ஜி. கட்டணத்தை கட்டி முடிக்கவே பெற்றோருக்கு இடுப்பு ஒடிந்து விட்டது.

இந்த வருடம் யூ.கே.ஜி.யும் தேறிவிட்டான். முதல் வகுப்புக்கு சென்றாக வேண்டும். சீருடை, புத்தகங்களோடு பள்ளிக்கட்டணமும் கட்டியாக வேண்டும். கட்டணம் மட்டுமே பண்ணிரெண்டாயிரம் ரூபாய். தர்மராஜ், சங்கீதா இருவரின் ஒரு மாத சம்பளத்தையும் விட இந்தத் தொகை அதிகம்.

தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார்கள். ஐயாயிரம் ரூபாய் வரைதான் சேர்க்க முடிந்தது. இன்னும் ஏழாயிரம் தேவை. முழி பிதுங்கிப் போனார் தர்மராஜ். ஒன்றாம் வகுப்பு சேர்க்க கூட வக்கற்றுப் போனோமே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார்கள் பெற்றோர். பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.

குஞ்சுக்கு ஆபத்து என்றால் தாய்ப்பறவை சீற்றத்தோடு காணப்படுவது இயற்கைதான். இந்த தாய் இயலாமை காரணமாக வேறு முடிவு எடுத்தாள். சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் தலை மீது ஊற்றிக் கொண்டாள். தீக்குச்சியை பற்றவைத்தாள். மகனின் கல்வி மீது பெருங்கனவு வைத்திருந்த அந்த தாய் ஊழித்தீயாய் ஜெகஜ்ஜோதியாய் எரிந்தாள். தடுக்க நினைத்த காதல் கணவருக்கும் பெரும் தீக்காயம். சங்கீதாவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. எரிந்தது சங்கீதாவின் உடல் மட்டுமல்ல. அவரது மகன் தர்ஷனின் எதிர்காலமும்தான். கடந்த வாரம் கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தில் நடந்த சம்பவம் இது.

எங்கே போகிறோம் நாம்?

குழந்தைகளின் கல்விக்காக உழைப்பை, உடமைகளை இழந்து வந்த பெற்றோர் உயிரையும் இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோரின் வயிற்றில் பற்றியெறிந்துக் கொண்டிருக்கும் தீ இது.

சங்கீதாவின் உயிர் எப்படியும் திரும்ப கிடைக்கப் போவதில்லை. எனினும் இன்னொரு சங்கீதா உயிராயுதத்தை கல்விக்காக ஏந்திவிடக்கூடாது என்கிற அக்கறையால் இரண்டு விஷயங்களை முதன்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1) ஒன்றாவது படிக்கும் மாணவனுக்கே 12,000 ரூபாய் கட்டணம் வாங்கும் அளவுக்கு ஒரு பள்ளி கோவையின் புறநகரில் இருக்கிறது. ஒருவேளை இது ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகள் அடங்கிய பள்ளியாக இருக்குமோ? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்கிக் கொண்டிருக்கிறது என்றால், கல்வித்துறை அதிகாரிகள் என்னத்தைதான் அங்கே கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்?

2) தர்மராஜ் – சங்கீதா போன்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசுப் பள்ளிகளை புறக்கணிக்க என்ன காரணம்? தவறு பெற்றோர் மீதா, அல்லது தரமான அருகாமைப்பள்ளிகளை உருவாக்காத அரசாங்கத்தின் மீதா?

குடிமக்களான நாம் சிந்திக்க மட்டுமே முடியும். முடிவெடுக்க வேண்டியதும், செயலாற்ற வேண்டியதும் அரசாங்கம்தான்.