8 ஜூன், 2011

வேம்புலி!

வேம்புலியை முதன்முதலாக பார்த்தபோது எனக்கு வயசு ஆறு அல்லது ஏழுதான் இருக்கும். வேம்புலிக்கு அப்போதே வயது நாற்பதுக்கும் மேல் இருக்கலாம். முன்மண்டையில் முடி சுத்தமாக இருக்காது. பின்மண்டை முடி பஞ்சு பஞ்சாக பறந்துகொண்டே இருக்கும். நைஜீரிய நிறம். நாகேஷ் உடல்வாகு. காக்கிச்சட்டை, காக்கிபேண்ட். பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் வேளச்சேரிக்கு அந்தப் பக்கமாக இருந்ததெல்லாம் பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகள் என்றுதான் சென்னைவாசிகளுக்கு தெரியும். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பின்வந்த ஆளுநர் ஆட்சி சென்னைநகரை விரிவாக்கிக் கொண்டிருந்தது. மடிப்பாக்கத்தையும், வேளச்சேரியையும் இணைத்துக் கொண்டிருந்த ஒத்தையடிப் பாதையை வேளச்சேரி மெயின்ரோடாக புனரமைத்துக் கொண்டிருந்தது. லேசுபாசான வேலையல்ல அது.

முதற்கட்டமாக செம்மண் சாலை அமைத்து சைதாப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வழியாக மடிப்பாக்கத்துக்கு பஸ் விட்டது. ரூட் எண் 51E. வேம்புலிதான் முதல் அதிகாரப்பூர்வ ஓட்டுநர் என்பதாக எனக்கு நினைவு இருக்கிறது.

கோக்குமாக்காக ஓட்டுவார். ஒரு பஸ் சாலையில் வந்தால் எதிரில் இன்னொரு வாகனத்துக்கு வழியே இருக்காது. சைக்கிளில் வருபவராக இருந்தாலும் கூட சாலையை விட்டு இறங்கியாக வேண்டும். இருபுறமும் வேலிகாத்தான் முட்புதர்கள் நிறைந்திருக்க, ஆளேயில்லாத ஓட்டை உடைசலான பச்சைநிற பேருந்தை செம்மண் புழுதிப் பறக்க ஸ்டைலாக வாயில் பீடியை செருகியபடி வேம்புலி ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாக ஒடித்து ஓட்டும் அழகுக்கு பாரதரத்னா விருதையே வழங்கலாம்.

பல்லவன் போக்குவரத்துக் கழகம் நகருக்குள்ளான குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நிலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டிருந்த காலம். ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் கிராமத்து நாட்டாமைகளும், தலையாரிகளும், தலைவர்களும், இன்னபிற அல்லக்கைகளும் கொடுத்த தொல்லை கொஞ்சநஞ்சமல்ல.

உதாரணத்துக்கு நம் வேம்புலிக்கு பூந்தமல்லிக்கு பக்கத்தில் எங்கோ குக்கிராமத்தில் கிடைத்த அனுபவத்தையே பார்ப்போமே? 51Eக்கு வருவதற்கு முன்பாக அந்த ரூட்டில்தான் தலைவர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாராம். ஏதோ ஒரு கிராமத்தை கடக்கும்போது, அங்கிருந்த பஞ்சாயத்துத் தலைவர் சொன்னாராம். “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ட்ரைவரு. எம் பொண்டாட்டியை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவணும். புடவை கட்டிக்கிட்டு இருக்கா”

கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் புடவை கட்டுவதென்பது திருவிழாதானே? அதுவும் புருஷனோட மவுண்ட்ரோட்டில் படம் பார்க்கப் போகும் பெண் கும்பமேளா ரேஞ்சுக்கு ரசித்து ரசித்து கொசுவம் வைத்துக் கொண்டிருந்திருப்பார் போல. ஐந்து நிமிடம் காத்திருந்தும் பஞ்சாயத்துத் தலைவரின் மனைவி வந்து சேரவில்லை. இளைஞராக இருந்த வேம்புலிக்கு செம டென்ஷன். ஒரு கவர்மெண்டு ஸ்டாஃபையே ஒரு பொம்பளைக்காக வெயிட் பண்ண வைக்கிறானுங்களே என்ற அறச்சீற்றத்தில் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஆக்ஸிலேட்டரை ஆத்திரத்தோடு மிதித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணரவில்லை.

‘நம்ம ஊரு தலைவருக்கு கவர்மெண்டு கொடுக்குற மரியாதை இவ்ளோதானா?’ என்று அந்த ஊரே கொதித்துப் போய் கலவரபூமியாகி இருக்கிறது. மறுநாள் திரும்ப அதே ரூட்டுக்கு வேம்புலி போகும்போது நூற்றுக்கணக்கானோர் பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் சாலையில் ‘சாமான்களோடு’ குழுமியிருக்கிறார்கள். வேம்புலியையும், கண்டக்டரையும் லேசாக இரத்தம் வருமளவுக்கு தட்டிவிட்டு, பேருந்தை அடித்து நொறுக்கி துவம்சப் படுத்தியிருக்கிறார்கள். ‘தலைவர் பொண்டாட்டி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாத பஸ்ஸூ நமக்கு இருந்தா என்னா? இல்லாங்காட்டி என்னா?’

அதன்பிறகு பல வருட காலங்களுக்கு அந்த ரூட்டுக்கு பல்லவன் போக்குவரத்துக் கழகம் பேருந்தே விடமுடியவில்லையாம். பொதுமக்களுக்கும், கழகத்துக்கும் இடையே இருந்த நல்லுறவைக் கெடுத்த குற்றத்துக்காகதான் வேம்புலியை தண்ணியுள்ள காட்டில் பணி செய்ய மடிப்பாக்கத்துக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சவால்கொண்ட வரலாற்றுப் பின்னணியோடு கூடிய காலக்கட்டத்தில்தான் வேம்புலி பணிபுரிந்தார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மடிப்பாக்கம் மட்டும் அவரை நிம்மதியாக விட்டு வைத்திருக்குமா என்ன? இங்கேயும் ஏகப்பட்ட கூத்துகள். சைதாப்பேட்டையில் கால்நடை மருத்துவமனை ஒன்று உண்டு. ஆடு, கோழி மாதிரியான விலங்குகளுக்கு சீக்கு வந்துவிட்டால், அதன் உரிமையாளர் சைக்கிளில் கட்டிக் கொண்டு வருவார். மாடுகளுக்கு சீக்கு வந்தால்? அப்படியே பண்ணிரெண்டு கிலோ மீட்டர் ஓட்டிக் கொண்டு வரவேண்டியதுதான். ஊருக்குதான் பஸ் வந்துவிட்டதே? சீக்கு வந்த எருமை மாடுகளையும் பஸ்ஸில் ஏற்றியாக வேண்டும் என்று மடிப்பாக்கம் மக்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். முந்தைய அனுபவங்களால் நொந்துப் போயிருந்த வேம்புலி எருமைகளை ஏற்றிக்கொண்டு போக ரெடி. ஆனால் எருமைகள் பஸ்ஸில் ஏற தயாராக இல்லையே? அதுமட்டுமல்லாமல் ‘பஸ் வர்றது வசதியாதானிருக்கு. ஆனா படிக்கட்டு ரொம்ப உயரமா இருக்கு!’ என்று அதிருப்தி அடைந்தார்கள் பொதுமக்கள். அப்போது ஊரில் இருந்த பெண்களில் அதிகபட்ச உயரம் கொண்டவரே நாலேமுக்கா அடிதான்.

இதுமாதிரியான பிரச்சினைகளுக்கு நடுவேயும் வேம்புலி பணிவிஷயத்தில் சிறப்பாகவே செயல்பட்டார் என்று நம்புகிறேன். பேருந்து நிலையம் இருந்த இடத்துக்கு அருகேதான் பஞ்சாயத்து அலுவலகமும் இருக்கும். பயணிகளை ஏற்றிக்கொள்ள காத்திருக்கும் நேரத்தில் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வேம்புலி செல்வார். அங்கிருந்த தலைவரோடு அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. தலைவரோட ஃப்ரெண்டு என்கிற அந்தஸ்து வேம்புலிக்கு தெனாவட்டையும் தந்தது.

பயல்கள் யாராவது ஃபுட்போர்டில் தொங்கி அழும்பு செய்தாலோ, பஸ்ஸுக்குள் கலாட்டா செய்தாலோ உடனடியாக வேம்புலி சொல்லும் டயலாக் “டாய் ரொம்ப ஆடினீங்கன்னா தலைவர்கிட்டே சொல்லிடுவேன்”. தலைவர் கொஞ்சம் மென்மையானவர்தான். அவருக்கு அடாவடி இமேஜ் எதுவுமில்லை என்றாலும் அவர்மீதிருந்த மரியாதையால் இந்த டயலாக்கை கேட்டதுமே அடங்கிவிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல், தலைவரே இல்லாமல் மடிப்பாக்கம் பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்திலும் வேம்புலி இதே டயலாக்கையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை அந்த ஊர் தலைவர் நிரந்தரத் தலைவர்.

அப்போதிருந்த பஸ்கள் எல்லாம் பெரும்பாலும் பாடாவதி பஸ்கள். நீண்டதூர ரூட்டுகளில் ஓடி உழைத்து ரிட்டையர்ட் ஆன பஸ்களை மடிப்பாக்கம் ரூட்டுக்கு அனுப்புவார்கள். வாரத்துக்கு ஒருமுறையாவது எங்காவது உட்கார்ந்து கொள்ளும். பயணிகள் டிரைவரைதான் சபிப்பார்கள்.

மடிப்பாக்கம் ரூட்டுக்கு வந்தபிறகு அருகிலிருந்த வானுவம்பேட்டையில் நிலம் வாங்கி வீடு கட்டினார். காலையில் நாலு மணிக்கு ரெண்டு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்தே பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்வார். டிரெயின் பிடித்து சைதாப்பேட்டையில் இறங்குவார். அங்கிருந்து ஒன்று ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சின்னமலை பஸ் டிப்போவுக்கு நடந்து சென்று ஐந்தரை மணிக்கு வண்டியை எடுப்பார். வேம்புலி தீவிரமான அம்மன் பக்தர். எப்போதுமே பர்ஸ்ட் ஷிப்ட்தான் ஓட்டுவார். காலையில் வண்டியை எடுத்ததுமே நேராக சைதாப்பேட்டை பஸ்ஸ்டாண்டில் இருக்கும் பிடாரி இளங்காளியம்மன் கோயில் வாசலில் நிறுத்துவார். அம்மனுக்கு ஒரு கற்பூரம் ஏத்திவிட்டுதான் அன்றைய வேலையை தொடங்குவார். ரெண்டு ரெண்டரை மணிக்கு வேலை முடியும்.

காலை நாலு மணியிலிருந்து ரெண்டு ரெண்டரை மணி வரை நீங்கள் இதுவரை பார்த்த வேம்புலி வேறு. அதற்குப் பிறகு பார்க்கப் போகும் வேம்புலி வேறு. நல்ல டிரைவரான வேம்புலிக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் குடி.

ட்யூட்டி முடிந்ததுமே அவர் ஆர்வமாக நாடிச்செல்லும் இடம் சைதாப்பேட்டை சப்வே பக்கமாக இருந்த ஒயின்ஷாப்பாக இருந்தது. கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு அலம்பல் செய்வார். கண்ணுக்கு பட்ட பஸ்ஸில் எல்லாம் ஏறி டிரைவர்களோடும், கண்டக்டர்களோடும் வம்புக்குப் போவார். எல்லாருக்கும் ஆபாச அர்ச்சனைதான். வேம்புலியை தெரிந்தவர்கள் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போனார்கள். ஒருமுறை நல்ல மப்பில் டிப்போவுக்கு போய் அங்கிருந்த அதிகாரியை அடித்துவிட்டு சஸ்பெண்ட் கூட ஆனதாக சொல்வார்கள். வீட்டுக்கு இரவு பத்து, பதினோரு மணிக்குதான் போவாராம். அவர் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரும் சொன்னதில்லை.

நகர விரிவாக்கத்தால் மடிப்பாக்கம் நாகரிகமடையத் தொடங்கியது. முன்புபோல இல்லாமல் நிறைய பஸ்கள். கிராமத்தின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. முன்பெல்லாம் ஊரில் இருக்கும் எல்லாரையுமே வேம்புலிக்கு தெரியும். இப்போது வேம்புலியின் பயணிகள் பெரும்பாலானவர்கள் அவர் அறியாதவர்களாகவே இருந்தார்கள்.

வேம்புலியோடு எனக்கு ஒரு நான்கைந்து வருடங்கள் நெருக்கமான நட்பு இருந்தது. போய்யா வாய்யா என்று கூப்பிடுமளவுக்கு. பஸ் பாஸ் எடுத்துவர அடிக்கடி மறந்துப்போய்விடும் வயது அது. ‘பரவாயில்லை. டிக்கெட் எடுக்காதே. அதுக்குப் பதிலா பான்பராக் வாங்கி கொடுத்துடு. செக்கிங் வந்தானுங்கன்னா நான் பார்த்துக்கறேன்’ என்பார். பயணிகளிடம் அவர் பெற்ற அதிகபட்ச கையூட்டு பான்பராக்தான்.

அவர் சில வேளைகளில் செகண்ட் ஷிப்ட் அடிஷனலாக நண்பர்களுக்காக பார்ப்பதுண்டு. ஒருநாள் இரவு 10.10 பஸ்ஸை எடுத்தார். இன்ஜினிக்கு பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சரக்கு விட்டிருந்தாரா தெரியவில்லை. 10.25க்கு மடிப்பாக்கம் வந்துவிட்டார். வழியில் ஓரிரு நிறுத்தங்களில் இத்தனைக்கும் பஸ் நின்றது. அனேகமாக அந்த ரூட்டிலேயே வேகம் அடிப்படையில் இதுதான் உச்சபட்ச சாதனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். மோசமான சாலை காரணமாக அப்போதெல்லாம் சைதை டூ மடிப்பாக்கம் செல்ல பஸ்ஸில் 45 நிமிடங்கள் ஆகும். இப்போதெல்லாம் சாலை பக்காவாக இருக்கிறதென்றாலும் சில நேரங்களில் போக்குவரத்து காரணமாக ஒன்றரை மணி நேரம் கூட ஆவதுண்டு.

ரன்னிங்கில் இருக்கும் பஸ்ஸை எப்படி ஒரு பயணி சுலபமாக நிறுத்துவது என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார். “பொதுவா கைய நேராக்கா நீட்டுனா நிறுத்த மாட்டானுக. பீச்சாங்கையை இடுப்புக்கு கீழே நல்லா எறக்கி மேலும் கீழும் வேகமா ஆட்டணும். அப்படி ஆட்டுன்னா நீ டிபார்ட்மெண்ட்காரன் இல்லேன்னா போலிஸ்காரன்னு நெனைச்சி நிறுத்துவானுங்க. இதுதான் டெக்னிக்”

நிஜமாகவே இப்படி ஒரு கோட் சிக்னல் இவர்களுக்குள் இருந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதனாலேயே ஸ்பெஷலாக சிலமுறை பஸ்ஸ்டேண்டை தாண்டிப்போய் நின்று ஓடும் பஸ்ஸை நிறுத்தி பரீட்சித்து பார்த்து உணர்ந்துகொண்டேன்.

வண்டி வாங்கியபிறகு நான் பஸ்ஸில் செல்வதே அரிதாகிவிட்டது. எப்போதாவது ஓரிருமுறை சென்றபோதும் கூட டிரைவர்களாகவும், கண்டக்டர்களாகவும் நிறைய புதுமுகங்கள் வந்திருந்ததை கண்டேன். வேம்புலி மாதிரியான சூப்பர்ஸ்டார்கள் ஃபீல்டிலேயே இல்லை. ஒன்று ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது எங்காவது மாற்றல் ஆகியிருக்கவேண்டும். கடைசியாக நான் வேம்புலியோடு சுற்றிக் கொண்டிருந்த காலங்களில் அவருக்கு கண்பார்வை கொஞ்சமாக மங்கத் தொடங்கியிருந்தது. எனவே விருப்ப ஓய்வு கூட பெற்றிருக்கலாம்.

ஒரு வருடம் முன்பாக பழைய பஸ் சகா ஒருவரை நந்தனத்தில் பார்த்தேன். F51, 51E, ஃபுட்போர்டில் தொங்கி என் மண்டை உடைந்தது என்று பசுமைக்கால பஸ் நினைவுகளை பேசிக்கொண்டிருந்தபோது வேம்புலியைப் பற்றியும் பேச்சு வந்தது. “அவர் செத்துட்டாரு தெரியுமா?” என்றதுமே கடுமையான அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒருசேர அடைந்தேன்.

எப்படி இறந்தார் என்று சகா சொன்னதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஒருநாள் நடுஇரவில் ஃபுல் மப்பில் சைதாப்பேட்டைக்கும், கிண்டிக்கும் இடையில் நடுரோட்டில் நின்று பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கைகாட்டியிருக்கிறார். இதுபோல வேம்புலி மப்பில் அலம்பல் செய்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். சடன்பிரேக் அடித்து வேம்புலியை முட்டிக்கொண்டு கூட பஸ் நிற்கும். டிரைவரை ஆபாசமாக திட்டிக்கொண்டே பஸ்ஸுக்குள் ஏறுவார்.

துரதிருஷ்டவசமாக அன்றிரவு சாலையில் நின்று பஸ்ஸுக்கு கைகாட்டுவதாக நினைத்து, தண்டவாளத்தின் நடுவில் நின்று எலெக்ட்ரிக் டிரெயினுக்கு கைகாட்டியிருக்கிறார்.

26 கருத்துகள்:

  1. படிக்கிறப்ப நானும் மடிப்பாக்கம்,சைதை எல்லாம் சுத்தி பார்த்த மாதிரி இருந்தது.ஆனாலும் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

    சரவணகுமார்! கதையென்றால் கருத்து ஏதாவது இருக்கணுமா?

    பதிலளிநீக்கு
  3. லக்கி சார்,

    அப்படியே அந்தக் காலத்துப் பல்லவன் நினைவெல்லாம் வருது!
    இது உண்மைக் கதையா அல்லது கற்பனை கலந்ததா?

    நன்றி!

    சினிமா விரும்பி

    பதிலளிநீக்கு
  4. அருமை யுவா.

    கடைசியில் பன்ச் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தண்டவாளத்தை எதிர்பார்க்கவில்லை. :)

    பதிலளிநீக்கு
  5. அந்தக் கால மடிப்பாக்கம் டூ சைதை வர்ணனை எல்லாம் அபாரம்.

    அருமையாக இருக்கு!

    பதிலளிநீக்கு
  6. ஒரு மாதிரி பத்தி நடையிலான கதை - நல்லா இருக்கு லக்கி.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா7:00 PM, ஏப்ரல் 22, 2010

    இந்த மாதிரி எழுதும் வாழ்வனுபவ கதைகள் டெம்லேட் போல போரடிக்குது ,

    பத்தியை சுவாரஸ்யமாக எழுதும் சாருவிடம் கற்றுக்கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  8. கடைசி பத்தி தீடீர் அதிர்ச்சி....

    நல்ல பதிவு

    மனோ

    பதிலளிநீக்கு
  9. //“பொதுவா கைய நேராக்கா நீட்டுனா நிறுத்த மாட்டானுக. பீச்சாங்கையை இடுப்புக்கு கீழே நல்லா எறக்கி மேலும் கீழும் வேகமா ஆட்டணும். அப்படி ஆட்டுன்னா நீ டிபார்ட்மெண்ட்காரன் இல்லேன்னா போலிஸ்காரன்னு நெனைச்சி நிறுத்துவானுங்க. இதுதான் டெக்னிக்”//
    இது பெரும்பாலும் உண்மை! எனது தந்தை (முப்பது வருட டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்!) இப்படித்தான் நிறுத்துவார் :-). இவ்வளவு கொள்கை விளக்கமெல்லாம் கொடுக்கவில்லையென்றாலும், 'அது நேக்கா நிறுத்தனும்டா'னு சொல்வார்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  10. கற்பனை செய்யவே அருமையாக இருக்கிறது, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை எல்லாம் காடுகள், கருவேல மரங்கள்.

    இன்று எல்லாம் கான்க்ரீட் கூடாரங்கள் ஆகி விட்டன.

    கதையில் , பஞ்சாயத்து தலைவர் ஈ ப்ன்னுசாமி பற்றியும் நாலு வரிகள் எழுதி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12:47 PM, ஜூன் 08, 2011

    namba oorula KARUTHU illama story ya. Edhavadhu advice vidunga boss. saravanakumar happy avaru.

    THEE

    பதிலளிநீக்கு
  12. உண்மை நிகழ்வு போலவே எழுதியிருக்கீங்க. (உண்மை நிகழ்வே தானா!) நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  13. சொல்லவரும் கருத்து....சிகப்பு கொடி காட்டினால் தொடர் வண்டி (ரயில்) நின்றுவிடுவது போல் எதற்கு குறுக்காக சிகப்பு கொடியை காட்டினாலும் பேதி மட்டும் நிற்பதில்லை.

    :))))))

    பதிலளிநீக்கு
  14. தலைவரே ஒரு சின்ன டவுட்டு,
    இது உள்குத்தா இல்ல வெளிகுத்தா ....... ஆஹாககாகா......

    பதிலளிநீக்கு
  15. நல்ல பதிவு.
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  16. கதை நன்றாக இருந்தது.ஆனால் அதில் இடம் பெற்றுள்ள பஸ் படம் பொருத்தமாக இல்லையே. ஏதோ கேரளா பஸ் அல்லது கோவை வட்டாரத்தில் ஓடும் பஸ் போல் இருக்கிறதே. பல்லவன் பஸ் படமே போட்டிருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா8:00 PM, ஜூன் 09, 2011

    Anne, ithu repeatu... Already unga blogla padichirukken... Anyways marubadium padichappa athe inimaiyana ninaiugal.

    பதிலளிநீக்கு
  18. K.V. balasubramanian6:37 AM, ஜூன் 10, 2011

    You have already posted this in your website Yuvakrishna. Is it not the second time?
    K V B, Assistant Meteorologist

    பதிலளிநீக்கு
  19. பஸ் பயணங்க்லை மறக்க முடியதவை நாம் படிக்கும் போது நம் ஹீரோக்கள் தான் அவர்கள் அப்படி ஒரு ஹீரோ வாலாஜாபத் டு செங்கல்பட்டு டி 22 வழிதடத்தில் இருந்தார் அவரை பற்றி தெரிந்தல் யாரவது சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. பஸ் பயணங்க்லை மறக்க முடியதவை நாம் படிக்கும் போது நம் ஹீரோக்கள் தான் அவர்கள் அப்படி ஒரு ஹீரோ வாலாஜாபத் டு செங்கல்பட்டு டி 22 வழிதடத்தில் இருந்தார் அவரை பற்றி தெரிந்தல் யாரவது சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு