29 ஜூன், 2015

விருது கேட்டு விசித்திர வழக்கு

இன்று சென்னையில் பிரசித்தி பெற்ற அந்த விருது விழா நடக்கிறது. யாருக்கு விருது, எந்தப் படம் சிறந்த படமென்று நாமினேட் ஆனவர்கள் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்-

கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் மட்டும் வயிறு எரிந்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அவர் இயக்கிய ‘ஹக்கட கோனே’ (கயிறுக்கு முடிவு) திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது. அதையடுத்து சர்வதேச அளவிலும் பல திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பாராட்டப்பட்டது. கன்னட ஊடகங்களும் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் என்று ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் பாராட்டுப் பத்திரம் வாசித்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் மேடையேறிய நாடகம் ஒன்றினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படம். மரணத் தண்டனை கைதி ஒருவனின் கடைசி நாட்கள்தான் கதை. தன்னுடைய இந்த நிலைமைக்கு யாரெல்லாம் காரணம் என்று நினைக்கிறானோ, அவர்களிடமெல்லாம் சில கேள்விகளை முன்வைக்கிறான். தன்னை இப்படி ஆக்கியது சமூகம்தான் எனும்போது தனக்கு மட்டும் ஏன் தண்டனை என்கிற வினாவுக்கு விடை தேட முயலுகிறான். தனக்கு மரணத் தண்டனை சரியென்றால், தான் செய்த கொலையும் சரிதான் என்று வாதிடுகிறான். இப்படியாக சிந்திக்கத் தூண்டும் காட்சிகள், வசனங்கள் வழியாக நகர்கிறது படம். நீதி என்பது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை தருவதா அல்லது அவர்களை சீர்த்திருத்துவதா என்கிற விவாதத்தை வலுவாக முன்வைக்கிறது ‘ஹக்கட கோனே’.

துரதிருஷ்டவசமாக இன்று நடைபெறும் விருதுவிழாவின் இறுதிச் சுற்றுக்கு இப்படம் நடுவர்களால் பரிந்துரைக்கப்பட வில்லை. ‘திருஷ்யம்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்காச்சாரி’, ‘உக்ரம்’, ‘உளிடவாரு கண்டதே’ ஆகிய படங்கள்தான் தேர்வாகி இருக்கின்றன. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட எந்த பிரிவுகளிலுமே தன் படத்துக்கு இடமில்லை என்றதும் கொதித்துப் போனார் இயக்குனர் தயாள் பத்மநாபன். உலகமே பாராட்டும் படத்துக்கு உள்ளூரில் அவமானமா என்று சீறினார்.

தயாள், நம் விழுப்புரத்து ஆள்தான். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, மிக ஏழ்மையான நிலையில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்தவர். ‘மர்ம தேசம்’ நாகாவிடம் சினிமா கற்றவர். கன்னட சினிமாவுக்கு இடம்பெயர்ந்து கதாசிரியரானார். இயக்குனர், தயாரிப்பாளர் என்று படிப்படியான வளர்ச்சி. சுயமரியாதையை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற கொள்கை உடையவர்.

எனவேதான், கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். “என் படத்தை நீதிமன்றமே பார்க்கட்டும். விருதுக்கு பரிந்துரைக்கப்படக்கூட தகுதியில்லாத படமா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லட்டும்” என்று கிளம்பியிருக்கிறார். எத்தனையோ வழக்குகளை சந்தித்த நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசித்திரமானது. ஏனெனில் இதுவரை யாருமே, ஒரு தனியார் வழங்கும் விருதில் நீதிமன்றத்தை தலையிட சொல்லி வழக்கு போட்டதில்லை.

தமிழ் சினிமாவில் ஊடகங்கள் தங்கள் படங்களை நியாயமாக விமர்சிக்கவில்லை என்று ‘கற்றது தமிழ்’ ராம், தங்கர்பச்சான் போன்றவர்கள் பொங்கியிருக்கிறார்கள். ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில், தன் படத்தின் பாடல் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அந்த விழா மேடையிலேயே கூட ராம் பொரிந்துத் தள்ளியிருக்கிறார்.

ஆனால்-

யாருமே இம்மாதிரி பிரச்சினைகளுக்காக இதுவரை நீதிமன்றத்தை நாடியதில்லை. ஒருவேளை தயாள் பத்மநாபனுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால், அவார்டு கொடுப்பவர்களின் கதி இனி அதோகதிதான்.

கடந்த 26-6-15 அன்று தினகரன் இணைப்பிதழான ‘வெள்ளி மலர்’ இதழில் நாம் எழுதியிருந்த சிறு கட்டுரை இது.

விருதுகளுக்காக ஒரு இயக்குனர் கோர்ட் படி ஏறினார் என்பது ஊடகங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர். ஏன் இந்த செய்தி தீயாக பரவவில்லை என்று தெரியவில்லை (எனக்குத் தெரியும், ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டேன்). எது எப்படியோ, குறைந்தது நாம் மட்டுமாவது ‘நியூஸ் வேல்யூ’ அறிந்து, அம்பலம் ஏற்றிவிட்டோம்.
இயக்குனர் தயாள் பத்மநாபன், இச்செய்தியை தினகரனில் வாசித்துவிட்டு வெள்ளிமலர் ஆசிரியர் குழுவினரிடம் தொலைபேசியில் பேசினார். தன்னுடைய தன்மான உணர்வை, தாய்மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகை அங்கீகரித்தது குறித்த நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அந்த செய்தியின் ‘ஃபாலோ-அப் நியூஸ்’ என்னவென்றும் போனில் தெரிவித்துவிட்டு, ஆதாரமாக சில கோர்ட்டு ஆவணங்களை மின்னஞ்சல் செய்திருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், இந்த விசித்திரமான வழக்கில் வெற்றி இயக்குனருக்கே.

பெங்களூர் சிவில் கோர்ட்டு (CCH-32), 24-06-2015 அன்று கொடுத்திருக்கும் தீர்ப்பில் ‘ஹக்கட கோனே’ திரைப்படத்தை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.

அனேகமாக, உலக அளவிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும். இந்த தீர்ப்பு திரையுலகில் இயங்கும் படைப்பாளிகளுக்கு, எதிர்காலத்தில் உதவக்கூடும். விமர்சனம் செய்யும் / விருது வழங்கும் ஊடகங்களும், நிறுவனங்களும் இனி கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால்-

26ந்தேதி மாலை சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில், கோர்ட்டின் ஆணை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

தயாள் பத்மநாபன் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. Our fingers crossed!

25 ஜூன், 2015

நிலவை முத்தமிடு

சீனு, கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கிறான். அம்மா, அப்பா, அக்கா என கச்சிதமான குடும்பம்.

அப்பா, எழுபதுகளின் ஜாக்கிரதை உணர்வுகளோடே வாழ்க்கையை எதிர்கொள்கிறவர். பாட்டனும், பூட்டனும் சும்மாவா சொல்லியிருப்பான். எல்லாத்துக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட டெம்ப்ளேட் வாழ்க்கையை நிதானமாக வாழ்ந்து முடிக்க நினைக்கும் அந்த காலத்து ஆள். மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.

சீனுவோ, உலகமயமாக்கலின் விளைவு. நாலு ரவுண்டு ஆடினால், ஜோக்கர் நிச்சயம் வந்துவிடும். ரிஸ்க்கே எடுக்காமல், வருமுன் காப்போம் என்று வழவழா கொழகொழாவென்று வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைப்பவன். கல்லூரி நாடக விழாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல் பரிசினை வென்ற படைப்பாளி. மூன்றாவது முறையும் கோப்பையை வென்றுவிட்டால், நிரந்தரமாக அவனிடமே கோப்பை இருக்கும்.

அப்பாவுக்கு படிப்பு தவிர்த்த மகனின் மற்ற செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லை. எனவே, தன்னுடைய நாடக ஆர்வத்தை அப்பாவிடமிருந்து மறைக்கிறான் சீனு.

தான் பெற்ற மகன், தான் விரும்பும் வகையில்தான் வளரவேண்டும் என்று நினைக்கிறார் அப்பா. ஏனெனில் அவர், அவருடைய அப்பா விரும்பிய வகையில்தான் வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தனக்கு தனித்துவம் இருக்கிறது என்று நம்புகிறான் சீனு. அப்பாவின் நிழலில் ஆடு மாதிரி பாதுகாப்பாக வளர்ந்து கல்யாணம் கட்டி, குழந்தை பெற்று தானும் அதே அப்பா மாதிரி வாழ்வதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கலைத்துறைதான் தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதுகிறான்.

வென்றது சீனுவா, அவனுடைய அப்பாவா என்பதுதான் கதை.
1995ஆம் ஆண்டு ‘பாக்யா’ வார இதழில் தொடராக பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘நிலவை முத்தமிடு’.

வர்ணனைகள் எதுவுமின்றி வெறும் வசனங்களால் மட்டுமே இருநூறு பக்கங்களுக்கும் மேலான முழுநாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் இந்த வடிவில் வேறு ஏதேனும் நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்- வெறும் வசனங்களால் மட்டுமே தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர்கதை இதுதானென்று பட்டுக்கோட்டை பிரபாகர் முன்னுரையில் சொல்கிறார்.

வர்ணனைகள் இல்லாத இழப்பை வசனங்களில் புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. எனினும் அதற்காக திரும்பத் திரும்ப பாத்திரங்களின் பெயர்கள் எல்லா வசனங்களிலும் இடம்பெறுவது வாசிக்க கொஞ்சம் இடையூறாக இருக்கிறது. சீனுவின் நண்பன் அத்தியாய ஆரம்பத்தில் ‘சீனு’ என்று பெயர் சொல்லி அழைப்பது ஓக்கே. ஆனால், அவன் ஒவ்வொரு முறை இவனிடம் பேசும்போதும் “டேய் சீனு” “இங்க பார்றா சீனு” “என்னடா சொல்றே சீனு” என்று திரும்பத் திரும்பப் போடும் சீன் கொஞ்சம் தொல்லைதான். ஆனால்- இதைத் தவிர்த்திருந்தாலும் வர்ணனைகள் இல்லாத நாவலில், சில இடங்களில் வாசகனுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாசகனுக்கு வலிக்கக்கூடாது என்கிற அக்கறையில் தன்னுடைய எழுத்துவன்மையை மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் பிரபாகர்.

நாவலின் முடிவு, அபாரம். அனுபவமும் மண்ணை கவ்வுகிறது. துணிச்சலான இளமைத்துடிப்பும் வெற்றிவாய்ப்பை இழக்கிறது. நம்பிக்கைக்கான கீற்று நட்சத்திர ஒளியாய் தென்பட, அவர்களது பயணம் தொடர்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இளைஞர்களையும், அவர்களது பெற்றோரையும் பற்றிய கதை. இந்த கால ஃபேஸ்புக் தலைமுறை, இக்கதையை வாசித்தால், “வீட்டுலே காலேஜிலே எல்லாம் இப்படிதான் பக்கம் பக்கமாவா வசனம் பேசுவாங்க?” என்று நம்பாமலேயே போகலாம்.

ஆனால்-

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிதான் தமிழ் சமூகம் இருந்தது. வாயைத் திறந்தாலேயே எவனும் மூடமாட்டான். சிவாஜிக்கு ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் மாதிரி பக்கம் பக்கமாக பேசி தீர்த்த தலைமுறை அது. எல்லா வீடுகளுமே எப்போதும் சத்தமாகதான் இருக்கும். தாகம் எடுத்தால், “தண்ணி கொண்டு வா” என்று மணிரத்னம் படம் மாதிரி சுருக்கமாக கேட்டுத் தொலைக்க மாட்டார்கள். “தவிச்ச வாய்க்கு தண்ணி” என்று ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்கு உவமானம், எடுத்துக்காட்டு, அழகியல் என்று மொழியின் எல்லா எழவு சாத்தியங்களையும் பயன்படுத்திவிட்டு, கடைசியாக “கொஞ்சம் தண்ணி கொடேன், தாகமா இருக்கு” என்று முடிப்பார்கள்.

என் அப்பாவெல்லாம் அப்படிதான் பேசுவார். “படிச்சித் தொலையேண்டா” என்று சிம்பிளாக சொல்ல மாட்டார். “காமராஜர் படிச்சதில்லை, கலைஞர் படிச்சதில்லை, எம்.ஜி.ஆர் படிச்சதில்லை. ஆனா நாவலரும், பேராசிரியரும்...” என்று ஆரம்பித்து அவரது அரசியல் வரலாற்று சமூக அறிவினை எல்லாம் கொட்டி பத்து நிமிடங்களுக்கு தாலியறுத்து, “ஒழுங்காப் படிச்சி உருப்படுடா” என்று முடிப்பார். கிரிக்கெட் பேட்டை எடுத்து அப்படியே வழுக்கை மண்டையில் நாலு போடு போடலாமா என்று வெறிவரும்.

அப்பாவாவது பரவாயில்லை. அம்மா இன்னும் மோசம். பேச ஆரம்பித்தால், துலாபாரம் சாரதா மாதிரி குடும்பக் கஷ்டம், சரீரக் கஷ்டம், பெண்ணியம், லஷ்மி தொடர்கதை என்றெல்லாம் காண்டெக்ஸ்ட்டே இல்லாமல் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருப்பார். இப்போது மெகாசீரியல்களில் ஏன் பெண்கள் பக்கம் பக்கமாக பேசுகிறார்கள் என்றால், மெகாசீரியல் எழுதும் எழுத்தாளர்கள் எண்பதுகள்/தொண்ணுறுகள் தலைமுறை. நல்லவேளையாக இந்த சீரியலையெல்லாம் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், இப்போதைய பெண்கள் இப்படி பேசி புருஷன்களை/மகன்களை சாகடிப்பதில்லை.
அனேகமாக, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்தபோது, அவரது அப்பா நூறு, நூற்றி ஐம்பது பக்கங்களுக்கு வசனம் பேசியிருப்பார் என்று கருதமுடிகிறது.

‘நிலவை முத்தமிடு’ என்னுடைய டீனேஜ் வயதுகளை நினைவுறுத்துகிறது. அப்பாவோடு நான் போட்ட சண்டைகள், அம்மாவை டபாய்த்த சமயங்கள் எல்லாம் அப்படியே மாண்டேஜ் ஷாட்டுகளாக வந்து போகிறது.

இந்த நாவலின் கருமையம்தான் ‘இந்தியன்’ திரைப்படம் என்று தோன்றுகிறது. ஷங்கர் காப்பி அடித்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டவில்லை. பட்டுக்கோட்டையாரும், ஷங்கரும் ஒரே தலைமுறையினர்தானே? எனவே ஒரே மாதிரியாக சிந்தித்திருக்கலாம். அப்பா-மகன் முரண் என்கிற மைக்ரோ ஸ்டோரி மீது தேசத்தை உறிஞ்சும் ஊழல் என்று மேக்ரோ பிரச்சினையை பெயிண்ட் அடித்ததுதானே ‘இந்தியன்’ கதை. இந்த நாவலில் வரும் அகிலா எனும் அக்கா கேரக்டரை, ‘இந்தியன்’ படத்தில் வரும் கஸ்தூரியோடு அப்படியே பொருத்த முடிகிறது.

எனினும்-

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் ஒன்லைன் சத்தியமாக இதிலிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் நிச்சயமாக இந்த கதையை வாசித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

நாவலின் நடுவில் நாடகம் போடுவது பற்றி டிஸ்கஷன் செய்யும்போது வரும் ஒரு குட்டிக்கதை, அப்படியே ‘நீ வருவாய் என’ (99 தானே, இந்த நாவல் 95) படத்தின் ஒன்லைனராக இருப்பது இன்னுமொரு ஆச்சரியம்.

இதெல்லாம் யதேச்சையாகவும் நடந்திருக்கலாம். ஆனால் தோழர்களே, தமிழில் சமகால இலக்கியம் என்று நம்பப்படும் கதைகளை எல்லாம் சினிமாவாக்கினால் படுதோல்விதான். மாறாக இதுபோன்ற வெகுஜனக் கதைகளில் இருந்து எடுக்கப்படும் கரு, மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும். மேலே நான் ஒப்பிட்டிருக்கும் மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள் என்பதை கவனியுங்கள். இலக்கியம், சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறது?

நூல் : நிலவை முத்தமிடு
எழுதியவர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
பக்கங்கள் : 228
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்
விலை : ரூ.45

22 ஜூன், 2015

நாளைய தீர்ப்பு முதல் புலி வரை!

அந்த கட்டவுட்டை பார்த்ததுமே எல்லாருக்கும் உடனடியாக பூஸ்ட் அடித்ததுமாதிரி ‘தன்னம்பிக்கை’ ஏற்பட்டது என்று சொன்னால் மிகையில்லை.

“இவனெல்லாம் ஹீரோ ஆயிட்டான். நாம ஆக முடியாதா?”

முப்பது அடி உயரத்துக்கு ஒல்லியான விஜய்யின் கட்டவுட். கீழே ‘அனைத்திந்திய விஜய் ரசிகர் மன்றம்’ என்று எழுதப்பட்டிருந்ததை கண்டவர்கள் காண்டு ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அறிமுகப் படத்திலேயே ‘அனைத்திந்திய ரசிகர் மன்றம்’ ட்ரெண்டினை கொண்டுவந்தவர் விஜய்தான். இன்று, ரஜத் (‘இயக்குனர்’ படத்தின் ஹீரோ கம் இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர், படத்தில் எட்டு ஹீரோயினாம்) என்பவருக்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால், 1992லேயே விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சி. செய்த அடாவடியான அமர்க்களங்கள்தான் காரணம். படம் வெளியான அரங்கங்கள் முழுக்க ‘ஸ்டார்’ டிசைனால் அலங்கரித்திருந்தார்கள். அப்போதெல்லாம் ரஜினிக்கு மட்டும்தான் ஸ்டார் அலங்காரம் (அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா?) என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

எக்சர்சைஸ் செய்து ஆர்ம்ஸ் காட்டி அறிமுகமாகும் விஜய்யை திரையில் பார்த்த அத்தனை பேரும் கை கொட்டி சிரித்தார்கள். ஒரு வகையில் பார்க்கப் போனால் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷூக்கும், பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் முன்னோடி இளையதளபதி விஜய்தான்.

அமெரிக்காவில் ஆக்டிங் படித்துவிட்டு வந்திருக்கிறார் மாதிரி பில்டப்புகள் எடுபடவில்லை. ‘நாளைய தீர்ப்பு’ அட்டர் ப்ளாஃப். விஜய்யின் அறிமுகம் கேலிக்குரியதாக ஆகிப்போனது.

கன்னி முயற்சியே படுதோல்வி எனும்போது, கொஞ்சம் ‘கேப்’ விட்டுதான் ஆடுவார்கள். ஆனால், விடாமுயற்சிக்கு பேர் போன எஸ்.ஏ.சி., எப்படியாவது மகனை தேற்ற விஜயகாந்திடம் சரணடைந்தார். ஏனெனில் தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் தோல்வியடைந்தவர்களின் வேடந்தாங்கல் கேப்டன்தான். விஜயகாந்துக்கு திரையுலகில் அடையாளம் பெற்றுத் தந்தவர் எஸ்.ஏ.சி. அந்த நன்றிக் கடனுக்காக ‘செந்தூரப் பாண்டி’ தயார் ஆனது (பிற்பாடு இதே மாதிரி சூரியாவுக்கும் வாழ்வு கொடுக்க, கேப்டன் ‘பெரியண்ணா’ நடித்தார். ஆனால், அப்போது கேப்டனுக்கே வாழ்வு இல்லை என்பதால், அது backfire ஆகிவிட்டது).

‘செந்தூரப் பாண்டி’, ஆஹா ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ‘ஹிட்’ ஆனது. யுவராணியோடு, விஜய்யின் கெமிஸ்ட்ரி கவர்ச்சியாக ‘கபடி’ ஆடியதில் பிக்கப் ஆனது. இந்த பாயிண்டை அப்படியே பிக்கப் செய்து, ‘ரசிகன்’ ஆக்கினார் எஸ்.ஏ.சி.

‘ரசிகன்’ படப்பிடிப்பில் இருந்தபோது, ஏதோ ஒரு சினிமா பத்திரிகையில் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை வாசித்திருந்தேன். அநேகமாக எஸ்.பி.ராஜ்குமார் என நினைவு. ‘இளைய தளபதி’ என்கிற வார்த்தையை முதன்முதலாக கேட்டது அப்போதுதான். ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமலேயே, இளைய தளபதி எப்படி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் என்பது அந்த பேட்டியில் விரிவாக பதிவாகி இருந்தது.

செந்தூரப் பாண்டியின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகியிருந்த விஜய்க்கு, ‘ரசிகன்’ ஓபனிங் பெரிய சவாலாக எல்லாம் இல்லை. ஸ்யூர் ஹிட் ஸ்க்ரிப்ட். வைல்டான செக்ஸ். ஸ்ட்ராங்கான காமெடி. லேசான செண்டிமெண்ட். ‘பம்பாய் குட்டி, சுக்கா ரொட்டி’ பாட்டுக்கு தமிழ்நாடே டேன்ஸ் ஆடியது. விஜயின் புயல்வேக நடன அசைவுகளே அவரது தனித்துவமானது. ‘ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் நானும் அமுக்கட்டுமா?’ பாடலில் ‘ஹாரனுக்கு’ சென்ஸாரில் தடா போட அதுவே பரபரப்பாகி படத்துக்கும் விளம்பரமாக அமைந்தது. சங்கவி, ஸ்ரீவித்யா, விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், ‘மடிப்பு அம்சா’ விசித்ரா என்று பிரபலமான நட்சத்திரப் பட்டாளத்தை எப்படி ஒரே படத்தில் கட்டி மேய்ப்பது என எஸ்.ஏ.சி. பாடமே எடுத்திருந்தார்.

விஜய்யின் முகத்தை மோசமாக எழுதிய குமுதத்தின் விமர்சனத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி ‘ரசிகன்’ வெள்ளிவிழா கொண்டாடியதால், விஜய்க்கு ஏகப்பட்ட கிராக்கி. தன் மகனை மாஸ் ஹீரோவாக வடிவமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ரசிகன் டைப் ஸ்க்ரிப்டுகளையே தேர்ந்தெடுத்தார் எஸ்.ஏ.சி. ‘தேவா’, ‘விஷ்ணு’ போன்ற படங்கள் வசூலில் குறைவைக்கவில்லை.

ரசிகனில் ‘பம்பாய் குட்டி’ பாடலை விஜய்யே பாடியிருந்தார். பாடல் ஓடும்போது ‘இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’ என்று உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக வித்தியாசமாக ஒரு டைட்டில் போட்டார் எஸ்.ஏ.சி.

பின்னணிப் பாடகராகவும் விஜய் (அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர், அவரும் சில படங்களில் விஜய்க்கு பின்னணி பாடியிருக்கிறார், அம்மாவும் நல்ல பாடகி) நிலைபெற்றுவிட, அடுத்தடுத்த படங்களில் விஜய்யையே பாடவைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர். நல்ல குரல்வளம், நளினமான நடன அசைவுகள், காமெடி என்று வழக்கமான நடிப்பை தாண்டிய ப்ளஸ் பாயிண்டுகள் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் இமேஜை பெற்றுக் கொடுத்தது.

இதே காலக்கட்டத்தில் விஜய்க்கு போட்டி நடிகர்கள் என்றால் அரவிந்த்சாமி, பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்கள்தான். அஜித்தெல்லாம் அப்போது ஆட்டையிலேயே இல்லை. யாருமே எதிர்ப்பார்க்காமல் சட்டென்று பிக்கப் ஆன ஆல்டைம் வொண்டர் அஜித். அப்போதிருந்த விஜய்யின் சகப்போட்டியாளர்களுக்கு அவ்வளவு சமர்த்து போதாது என்பதும் அவரது அதிரடிப் பாய்ச்சலுக்கு உதவியது.

மசாலா ரூட்டிலேயே போய்க்கொண்டிருந்த விஜய்க்கு காதல் படங்களிலும் நடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில் பிரசாந்தும், சில குட்டி நடிகர்களும் இந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மாதிரி அவர் தேர்ந்தெடுத்த சில ஸ்க்ரிப்டுகள் ‘ராஜாவின் பார்வையிலே’ (அஜித்துக்கு துக்கடா வேடம்), ‘சந்திரலேகா’, ‘பூவே உனக்காக’, ‘வசந்தவாசல்’, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ போன்றவை.

இதில் ‘பூவே உனக்காக’ யாருமே எதிர்பாராத அதிரிபுதிரியான ஹிட் (இயக்குனர் விக்ரமனுக்கும் இது ரீபர்த்). நல்ல இயக்குனரிடம் மாட்டினால், விஜய்யும் நல்ல நடிகர்தான் என்பது புரிந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது போதிய ஆர்வம் காட்டாமல் ஏனோதானாவென்றுதான் விஜய் நடித்தார். இதன் வெற்றியிலும் அவருக்கு ஏகத்துக்கும் சந்தேகமிருந்தது. மாஸ் ஹீரோவான தனக்கு க்ளாஸ் சரிப்படாது என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

ஆனால்-

அந்த ‘பூவே உனக்காக’தான் விஜய்யின் நடிப்புலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்த விஜய்யின் டெம்ப்ளேட் படமான ‘மாண்புமிகு மாணவன்’ (எஸ்.ஏ.சி. இயக்கம்) படுதோல்வி அடைந்தது. இனிமேல் விவரமான ஸ்க்ரிப்டுகளைதான் ஓக்கே செய்ய வேண்டும் என்று விஜய் முடிவெடுத்து விட்டதால், இயக்குனரான எஸ்.ஏ.சி.யின் திரையுலக வாழ்க்கையே ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. விஜய், கதையை நம்பி நடித்த ‘லவ் டுடே’வும் ஹிட்.

வசந்தின் ‘நேருக்கு நேர்’ பெரிய ஹிட் இல்லையென்றாலும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் குறித்த அறிவினை விஜய் அறிந்துக்கொள்ள உதவியது. ‘காதலுக்கு மரியாதை’ தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத நடிகர் என்கிற அந்தஸ்தை அவருக்கு பெற்றுத் தந்தது.

அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த இரண்டு ஸ்க்ரிப்டுகள் வெற்றி (நினைத்தேன் வந்தாய், பிரியமுடன்). அவருக்காக அப்பா ஓக்கே செய்திருந்த ‘நிலாவே வா’ படுதோல்வி அடைந்ததோடு, கே.டி.குஞ்சுமோன் என்கிற தயாரிப்பாளரை நிரந்தர வனவாசத்துக்கும் அனுப்பியது (இந்த அட்டர் ஃப்ளாபுக்கு பிறகு விஜய்யை வைத்து உடனடியாக இன்னொரு  அட்டர் ஃப்ளாபையும் தயாரித்தார் குஞ்சுமோன், ‘என்றென்றும் காதல்’).

‘துள்ளாத மனமும் துள்ளும்’ சூப்பர்ஹிட் படத்துக்கு பிறகு, விஜய் எதை தொட்டாலும் தோல்வி என்கிற நிலை ஏற்பட்டது. திரையுலகில் எல்லா பெரிய நடிகர்களுமே கடந்து வரவேண்டிய சோதனைக்காலம் இது. இத்தனைக்கும் ‘மின்சார கண்ணா’, ‘கண்ணுக்குள் நிலவு’ போன்ற படங்கள் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகக்கூடிய அம்சங்களை கொண்டிருந்தும் தோல்வி அடைந்தன. அப்பாவின் இயக்குனர் அந்தஸ்தை தக்கவைப்பதற்காக அவர் நடித்துக் கொடுத்த ‘நெஞ்சினிலே’, எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியது.

எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் வாலி. அஜித்தின் இடத்தை தமிழில் நிரந்தரமாக்கிய திரைப்படம். அடுத்து, விஜய்க்கு சூப்பர்ஹிட் படம் வேண்டும் என்கிற வெறியில் ‘குஷி’யை இழைத்து இழைத்து இயக்கினார். சில தோல்விகளை அடுத்தடுத்து பெற்றிருந்த விஜய், இந்த படத்தில் “என்னை மட்டுமல்ல, என் இமேஜை கூட உன்னால அசைக்க முடியாது” என்று அஜித்துக்கு பஞ்ச் கொடுத்துப்பேச, படம் பற்றிக் கொண்டது.

குஷியை அடுத்தே விஜய் – அஜித் மோதல் திரையில் சுறுசுறுப்பானது. ஒரு கட்டத்தில் இந்த ஆடுபுலி ஆட்டம் வெறுத்துவிட, அஜித்தே தன்னை போட்டியில் இருந்து கழற்றிக் கொண்டு தன் பாதை தனிப்பாதை என்று போய்விட்டார். விஜய் இன்னமும் பொத்தாம் பொதுவாக வானத்தைப் பார்த்து பஞ்ச் அடித்துக் கொண்டிருக்கிறார்.

‘குஷி’யின் மெகாவெற்றியை தொடர்ந்து ‘பிரியமானவளே’, ‘ஃபிரண்ட்ஸ்’ என்று ஹாட்ரிக் வெள்ளிவிழா கொண்டாடினார் விஜய்.

ஆனால்-

விஜய்க்கு ஒரு ராசி. ஓராண்டு முழுக்க வெற்றி என்றால், அடுத்த ஆண்டு முழுக்க படுதோல்வி காண்பார். மீண்டும் ஒரே ஒரு வரலாற்று வெற்றியை எட்டி, அத்தனை தோல்வியின் சுவடுகளையும் துடைப்பார். இந்த தோல்வி காலத்தில் அவர் நடித்த நல்ல படங்களும் கூட ஓடாது என்பது என்னமாதிரியான டிசைன் தெரியவில்லை (‘வசீகரா’ இன்றும் டிவியில் பெருவாரியாக ரசிக்கப்படும் படம், ஆனால் விஜய்யின் வனவாச காலத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது).

2003 தீபாவளிக்கு வெளியான திருமலை அவருக்கு திருப்புமுனை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ‘போக்கிரி’ வரை வெற்றிமழையிலேயே விஜய் நனைந்துக் கொண்டிருந்தார் (இடையில் ‘மதுர’, ‘ஆதி’யெல்லாம் திருஷ்டிபடிகாரங்கள்).

‘போக்கிரி’யின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு அடுத்த நான்காண்டுகள் சிரமதசை. இந்த காலக்கட்டத்திலும் கூட ஓரளவுக்கு தேறக்கூடிய படங்களான ‘வேட்டைக்காரன்’, ‘காவலன்’ போன்றவை போதுமான வெற்றியை ருசிக்க முடியவில்லை. ‘வேலாயுதம்’ வந்துதான் மீண்டும் இளையதளபதியின் ஆட்சி.

‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’யென்று சமீபவருடங்கள் ஆரோக்கியமாக தெரிந்தாலும் ‘தலைவா’, ‘ஜில்லா’வென்று அவ்வப்போது அவர் சறுக்கவும் தவறவில்லை.

சிம்புதேவன் இயக்கத்தில் புலி, அட்லி இயக்கத்தில் ஒரு படம், மீண்டும் பிரபுதேவாவுடன் இணைகிறார் என்று கிராப் உயர்ந்துக் கொண்டிருப்பது மாதிரிதான் தெரிகிறது.

எனினும் விஜய்யின் எந்த படத்தையுமே நிச்சயவெற்றி என்று உறுதியாக நம்ப முடியாத நிலை நீடிப்பதுதான் அவரது ஆகப்பெரிய பலவீனம். கிட்டத்தட்ட இதே நிலைதான் அவரது நேரெதிர் போட்டியாளரான அஜீத்துக்கும் என்றாலும், அஜித்தின் தோல்விப் படங்கள் வணிகரீதியாக பெரும் நஷ்டத்தை தருவதில்லை. ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு, அடுத்து விட்டதைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது மாதிரி இருக்கிறது. ஆனால் விஜய்யின் ஒரு படம் தோல்வியுற்றால், அந்த செயினில் வரும் அத்தனை ஆட்களுமே தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்பது நிலை. எனவேதான் அஜித்தைவிட விஜய்யின் படங்களுடைய வெற்றி, தோல்வியை இண்டஸ்ட்ரி முக்கியமானதாக கருதுகிறது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என்று தலைமுறைகளாய் தொடரும் வரிசையில் கிட்டத்தட்ட அஜித், ரஜினியின் இமேஜை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னமும் விஜய்யால் அடுத்த கமல் என்கிற இலக்கில் பாதி தூரத்தை கூட கடக்க முடியவில்லை. (இங்கே ரஜினி-கமல் என்று இதை ஆளுமைரீதியாக லிட்டரலாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அந்த brand positionஐ சுலபமாக சுட்டிக் காட்டவே இந்த பெயர்கள்)

ரஜினி ஆவது கமல் ஆவதை விட ரொம்ப ஈஸிதான் என்றாலும்கூட-

மிகத் திறமையான கலைஞரான விஜய், இருபத்து மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக திரைத்துறையில் பணியாற்றுகிறார். இன்னமும் அவருக்கு இயக்கம் மாதிரியான நடிப்பு தவிர்த்த மற்ற தொழில்நுணுக்கங்களில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூட அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது அப்பாவே வெற்றிகரமான இயக்குனர்தான். ஆனால், அஜித்தோ சரண் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றி இயக்கத்தின் அரிச்சுவடியை முறையாக கற்கிறார்.

கமலஹாசன் தன்னுடைய நாற்பதாவது வயதில் ‘மகாநதி’ செய்துக் கொண்டிருந்தார். விஜய்யோ ‘புலி’யில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாற்பதுக்குள் கமலஹாசன் பெற்ற விருதுகளும், செய்த சாதனைகளும் யாராலும் ஈடு செய்ய முடியாததுதான் என்றாலும், அவருடைய இடத்தை நிரப்பவேண்டிய இடத்தில் இருப்பவர், அதில் பாதியாவது செய்து முடித்திருக்க வேண்டாமா? அஜித்துக்கு நடக்கத்தான் வரும், நடிக்க வராது. நன்கு நடிக்கத் தெரிந்த விஜய் இன்னமுமா ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’யென்று பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருப்பது?

திரையுலகில் தோல்விகள் சகஜம்தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அந்த தோல்விகள் கவுரவமான தோல்விகளாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு கமல்ஹாசன், 1991ல் பெற்ற ‘குணா’ தோல்வி. அதை அவரால் பெருமையாக திரும்பிப் பார்க்க முடியும். ‘அன்பே சிவம்’, ‘ஹேராம்’ என்று கம்பீரமான தோல்விகளை படைக்கவே பிறந்தவர் அவர். இன்றைய ‘உத்தம வில்லன்’ கூட இருபது ஆண்டுகளுக்கு பிறகு கமலின் புகழை பறைசாற்றுவதாகவே இருக்கும்.

விஜய்யின் தோல்விகள் அத்தகைய தன்மை கொண்டவையா? ‘தலைவா’ மாதிரி வெற்றிக்காக முயற்சித்து, அடையக்கூடிய தோல்விகள் அசிங்கமானவைதானே?

மாஸ் படங்கள் நடித்து வசூலை வாரிக்குவிக்க அஜித் போதும். முன்பு ரஜினி இருந்தார். ஆனானப்பட்ட ரஜினியே இப்போது கோச்சடையான், லிங்காவென்று அடுத்தடுத்து அதிர்ச்சி கண்டு, தன்னை தானே மறுபரிசீலனை செய்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்.

திரையுலகில் எத்தனை படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அப்படி பார்த்தால் சிவாஜியை இன்னேரம் நாம் முற்றிலுமாக மறந்திருக்க வேண்டும். எண்பதுக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் – சிவாஜியின் படங்களை நினைவுகூறி எண்ணச் சொன்னால், பத்து படங்களுக்கு மேல் எம்.ஜி.ஆரின் படங்கள் தேறினால் யதேஷ்டம். ஆனால், சிவாஜியின் படங்களுக்கு நம்முடைய இரு கை, கால் விரல்களை இருமுறை எண்ணிய பிறகும் போதாது.

விஜய், சிவாஜி – கமல் வரிசையில் பொசிஸன் ஆகவேண்டிய நடிகர். திரைக்கு வெளியே உருவாகும் இமேஜ் அஜித்தை காப்பாற்றும். விஜய்யோ திரையில் உழைத்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

இன்று நாற்பதாவது பிறந்தநாள் காணும் விஜய், அடுத்த ஐந்தாண்டில்...

· ஒரு படமாவது இயக்கியிருக்க வேண்டும்.

· அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு படமாவது, நடிப்புக்காக தேசிய விருதுக்கு மோதியிருக்க வேண்டும்.

· தான் நடிக்காமல், இயக்காமல் (தனுஷ், ஷங்கர் மாதிரி) இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘காக்கா முட்டை’ மாதிரி பேசப்படக்கூடிய இரண்டு மூன்று படங்களையாவது தயாரித்திருக்க வேண்டும்.

வரலாற்றில் வாழவிரும்பினால் விஜய் இவற்றை பரிசீலிக்கலாம். வசூல்தான் டார்கெட், விசில்தான் லட்சியமென்றால் வழக்கமாக ஆடும் கபடியையே யூ கண்டினியூ விஜய்!

9 ஜூன், 2015

வசூல் வேட்டை @ காக்கா முட்டை

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி கம்யூனிஸ்டுகளுக்கும், ஏழைப் பங்காளர்களுக்கும், ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பீட்ஸா கடையின் ஓனரான பாபு ஆண்டனி மிக தந்திரமாக பிரச்சினையை முடித்துக் கொண்டது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் தன்மைக்கு ஒரு துண்டு பீட்ஸாவாக எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாக நினைக்கலாம்.

மக்கள் தொடர்புத்துறையில் crisis management என்றொரு கூறு உண்டு. ஒரு நிறுவனம் பல்வேறு வகையிலான இழப்புகளை சந்திக்கும். பொதுமக்களிடம் ஒரு நிறுவனம் தன்னுடைய நல்ல பெயரை (goodwill) இழப்பது என்பது அந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய சவால். அப்போது அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர்கள் அந்த crisisஐ எப்படி handle செய்யப் போகிறார்கள் என்பதே crisis management.

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு சிம்புவுக்கு இணையான மரியாதை கொடுத்து, பீட்ஸா ஊட்டும் காட்சிக்கு தியேட்டரில் நல்ல சிரிப்பலை. உண்மையில் இதுபோன்ற பிரச்சினையில் ஒரு நிறுவனம் மாட்டிக் கொண்டால், இதைவிட சிறப்பான தீர்வு வேறெதுவுமில்லை. அனேகமாக இயக்குனர் மணிகண்டன் விளம்பர நிறுவனம் எதிலாவது பணியாற்றி இருப்பார். அதனால்தான் அவருக்கு இந்த நடைமுறையை இவ்வளவு துல்லியமாக காட்சியாக்க முடிந்திருக்கிறது.

சில பேர் இந்த காட்சி டிராமாவாக மாறிவிட்டதாக இணையத்தில் விமர்சிக்கிறார்கள். என்னுடைய பத்தாண்டு விளம்பரத்துறை அனுபவத்தில் மூன்றாண்டுகள் முழுக்க முழுக்க public relations நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்படிப்பட்ட சிக்கலில் இருக்கும் பீட்ஸா கடை, இதைத்தவிர வேறெந்த முறையிலும் இந்த பிரச்சினையை கையாளாது. நாற்பத்தி ஐந்து ரூபாய்க்கு ‘மக்கள் பீட்ஸா’ ஐடியாவெல்லாம் பக்காவான PR activity.

எம்.எல்.ஏ.விடம் போவது, போலிஸுக்கு காசு கட்டி சரி செய்ய நினைப்பது, மீடியாக்கள் அச்சூழலை எப்படி கையாளக்கூடும் போன்ற சித்தரிப்புகள்தான் உண்மையில் dramatise செய்யப்பட்டிருக்கிறது. பாபு ஆண்டனி கேரக்டரின் வில்லத்தன்மைக்கு -அதாவது முதலாளித் தன்மைக்கு- கூடுதல் அழுத்தம் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவை சேர்க்கப்பட்டிருக்கலாம்.

Crisis management தொடர்பாக உள்ளூர், அயல்நாடுகளின் கேஸ் ஸ்டடிகளை பலநூறு கணக்கில் படித்திருக்கிறேன். Coca cola நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களை அவர்கள் தீர்த்துவைத்த முறையெல்லாம் படுசுவாரஸ்யமாக இருக்கும்.

ஆனால், கூடங்குளம் அணுவுலை பிரச்சினையை, நியூக்ளியர் ஃபவர் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா லிமிடெட் நிறுவனம் எப்படி கையாண்டது என்பதுதான் இதுவரை இந்திய அளவில் நானறிந்த crisis managementகளிலேயே மிகச்சிறந்தது. மிக சரியான விளம்பர நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, கச்சிதமான வழிமுறைகள் வாயிலாக இதுவரை கண்டிராத மாபெரும் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தார்கள். என்னென்ன செய்தார்கள், யார் யாரை குறிவைத்து எப்படி எப்படி வீழ்த்தினார்கள் என்று விலாவரியாக விளக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட சேகுவேராக்களின் முகங்களில் அப்பிக்கொண்டிருக்கும் நீலச்சாயம் வெளுக்கும். ’காக்கா முட்டை’ படத்தில் வரும் ரமேஷ் திலக், அவரது அல்லக்கையான பன்னிமூஞ்சி வாயனெல்லாம் யாரை சித்தரித்து என்று நினைக்கிறீர்கள். நாமறிந்த பிரபலமான போராளிகளைதான் அவை குறியீடாக சொல்கின்றன.

‘காக்கா முட்டை’ திரைப்படம் எதையும் எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ எனக்கு தோன்றவில்லை. இது இது இப்படி இப்படி இருக்கிறது என்று பிரச்சினைகளை தொட்டுக் காட்டுகிறதே தவிர, ஏழைகள் மீதான பச்சாதாபத்தை ஏற்படுத்தவோ, புரட்சி பேசவோ அதன் இயக்குனர் முயலவில்லை.

ஆனால்-

படம் பார்த்தவர்களுக்கு குற்றவுணர்ச்சி தோன்றுகிறது. காக்கா முட்டைகளுக்கு பரிதாபப்படும் இவர்களில் ஒருவர் கூட, வாழ்க்கையில் இதுவரை ஒரே ஒரு காக்கா முட்டைக்கு பீட்ஸா என்ன.. பன்னும் டீயும் கூட வாங்கித்தராதவர்களாகவே இருப்பார்கள். உண்மையைச் சொன்னால் ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உண்மையில் நமக்கு (அதாவது நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு) ஏழைகள் மீது பரிதாபமெல்லாம் எதுவுமில்லை. ‘காக்கா முட்டை’ மாதிரி சந்தர்ப்பங்களில், அவர்களுக்காக நெகிழ்வதெல்லாம் சும்மா நடிப்புதான். படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் முதலாளி பாபு ஆண்டனிக்கும், படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் ஏழ்மையை கடைபரப்பி ஸ்டேட்டஸ் போட்டு லைக்கு அள்ளுபவர்களுக்கு வித்தியாசமெல்லாம் பெரிதாக எதுவுமில்லை. நாமும் பீட்ஸா கடை ஓனராக இருந்தால் இப்படிதான் நடந்துக் கொள்வோம்.

இந்த நடுத்தர வர்க்கத்தின் குற்றவுணர்ச்சியை மிகச் சரியாக அறுவடை செய்வதாலேயேதான் ஏழைகளை பற்றி பேசும் ஏழைப்படம் வசூலில் கோடி, கோடியாக கொட்டி குவிக்கிறது. முன்னூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி சாப்பிட முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று இப்படம் சுட்டிக்காட்டும் விளிம்புநிலை காக்கா முட்டைகள் அண்ணாசாலை நெடுக வானுயர்ந்த கட்டிடங்களுக்கு பின்னால் அமைந்திருக்கும் சேரிகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களைப்பற்றி எடுக்கப்பட்ட இந்த படத்தைக் காண தேவியிலும், சத்யமிலும் நூற்றி இருபது ரூபாய் செலவு செய்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்கிலும் பத்து ரூபாய் டிக்கெட் குறைந்தது பத்து சதவிகிதம் தரப்பட வேண்டும் என்கிற விதியை காக்கா முட்டைக்கு மட்டுமாவது திரைத்துறையினர் கறாராக கடைப்பிடித்திருக்கலாம்.

ஏழ்மையை நல்ல பிசினஸாக மாற்ற முடியும் என்கிற சூத்திரத்தை காக்கா முட்டை கற்றுத் தந்திருக்கிறது. முன்பு, ‘வழக்கு எண் பதினெட்டு’க்கு இந்த விஷயத்தில் சுமாரான வெற்றிதான். விளிம்பு நிலைக் கதைகளை கையில் வைத்துக்கொண்டு அடுத்த ஓராண்டுக்கு வரிசை கட்டி படங்கள் வரப்போகின்றன. படம் பார்த்துவிட்டு உச்சு கொட்டவும், ஃபேஸ்புக்கில் ‘சாட்டையடி சகோதரி’ சமூக ஸ்டேட்டஸ்கள் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு கிடைக்கும். அடுத்து கொஞ்ச காலத்துக்கு கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் CSR ஆக்ட்டிவிட்டிகளில் கூடுதல் முனைப்பாக ஈடுபடுவார்கள்.

8 ஜூன், 2015

லிரில் கேர்ள் - நினைவில் இருக்கிறாரா?

‘லா... லாலலா... லாலலா... லால்லால்லா’

இது ஏதோ மழலைமொழி என்று நினைத்தால் உங்களுடைய வயது முப்பதுக்கும் கீழே.

மாறாக-

இது ‘லிரில் ராகம்’ என்று உணர்ந்து, மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தால்... நீங்கள் பக்கத்து வீட்டு குழந்தைகளால் அங்கிள் என்றோ ஆண்ட்டி என்றோ அழைக்கப்படும் நடுத்தர வயதை எட்டி விட்டீர்கள் என்று அர்த்தம்.

மறக்க முடியுமா அந்த லிரில் கேர்ளை?

லைம் க்ரீன் நிறத்தில் பிகினி அணிந்த இளம்பெண். சில்லென்று கொட்டித் தீர்க்கும் காட்டாற்று அருவியில் குதியாட்டம் போடுகிறாள். பின்னணியில் ‘லா... லாலலா... லாலலா... லால்லால்லா’ என்று மனசை மயக்கும் ஹம்மிங். லிரில் சோப்பின் புத்துணர்ச்சியை அனுபவிக்க வாருங்கள் என்கிற அழைப்போடு முடியும் அந்த நாற்பத்தியேழு நொடி டிவி விளம்பரம்.

டிவியிலும், சினிமா இடைவேளைகளிலும் இந்த விளம்பரத்தை கண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் குளிக்காமலேயே புத்துணர்ச்சியை அடைந்தார்கள். லிரில் சோப்பின் வாசனையை சுவாசித்தார்கள். இளசுகள் விசில் அடிப்பார்கள். பெருசுகள் விழிவிரிய ஆச்சரியத்தோடு ரசிப்பார்கள்.

காரணம், அந்த லிரில் கேர்ள்.

கரேன் லூனல்.

விளம்பரத்தை ரசித்து முடித்ததுமே, அப்போதெல்லாம் இல்லத்தரசிகள் ‘உச்சு’ கொட்டுவார்கள்.

“பாவம். இந்தப் பொண்ணு விளம்பர ஷூட்டிங் முடிஞ்சதுமே அந்த அருவிலேயே அடிச்சிக்கிட்டுப் போயிட்டாளாம்”

நாடே அப்படிதான் நம்பியது.

லிரில் கேர்ள், அதே அருவியிலேயே அடித்துக்கொண்டு போய் இறந்துவிட்டார் என்று. இன்றும் கூட ஐம்பதை கடந்த அம்மா, அப்பாக்களிடம் விசாரித்துப் பாருங்களேன். இதையேதான் சொல்வார்கள்.

லிரில் கேர்ளை சாக்கிட்டு லேசாக இந்திய விளம்பர உலகில் நிகழ்ந்த அந்த மகத்தான மக்கள் தொடர்பு புரட்சியை அறிந்துக் கொள்வோம்.

1975. இந்தியர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துக் கொண்டிருந்தது. விரிவடைந்துக் கொண்டிருந்த இந்தியச் சந்தையில் கடை விரிக்க ஏராளமான நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தன. நுகர்வோரின் தேவையை ஈடு செய்ய புதுசு புதுசாக சொகுசுப் பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு FMCG (fast moving consumer goods) நிறுவனங்கள் ஆட்பட்டன.

ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் ப்ரீமியம் வகை குளியல் சோப்பு ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. ஏற்கனவே ரெக்ஸோனா, லக்ஸ், லைஃபாய் (செங்கல் கூட நீரில் கரையும், அந்த காலத்து லைஃப்பாய் கரையவே கரையாது) என்று ஏகப்பட்ட ரகங்கள் இருந்தன. ப்ரீமியம் வகை சோப்பாக அந்த நிறுவனத்திடம் இருந்தது பியர்ஸ்தான். விலை சற்றே அதிகம் என்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டிய தேவை ஏற்படும் வெயில் காலங்களில் யாரும் பியர்ஸ் வாங்க மாட்டார்கள்.

ரெக்ஸோனாவுக்கும், பியர்ஸுக்கும் இடையில் எலுமிச்சை புத்துணர்ச்சியை (எலுமிச்சைதான் கோடைக்கு புத்துணர்வு தரும் என்பது இந்தியர்களின் மரபான நம்பிக்கை) தரும் சோப்பாக லிரிலை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

‘லிண்டாஸ்’ என்கிற விளம்பர நிறுவனத்திடம் இந்த சோப்பை பிரபலப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது. மார்க்கெட்டில் இதை கொண்டுச் செல்வதற்கு முன்பாக சில ஆய்வுப்பணிகளை லிண்டாஸ் மேற்கொண்டது.

அதில் வெளிவந்த முக்கியமான பாயிண்ட் இதுதான். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியப் பெண்மணி மூன்று புறம் சுவர், ஒரு புறம் கதவு மூடிய குளியலறைக்குள் ஒரு நாளைக்கு பத்து நிமிடம் மட்டுமே செலவழிக்கிறாள். மீதி நேரம் சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் கழிகிறது. குளியலுக்காக அவள் செலவழிக்கும் பத்து நிமிடம்தான் ஒரு நாளில் அவளுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச பிரைவசியாக இருக்கிறது. அந்த பத்து நிமிடங்களை ஒவ்வொரு நாளும் அவள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறாள்.

இந்த பாயிண்டை பிடித்துக் கொண்டது லிண்டாஸ். ‘சுதந்திரமான குளியல்’ என்று பெண்களை டார்கெட் செய்து, லிரிலுக்கு விளம்பரங்களை உருவாக்க வேண்டுமென்கிற ஐடியாவுக்கு மெனக்கெட்டார்கள். ‘டார்ஜான்’ படங்களில் டார்ஜானும், அவளுடைய கேர்ள் ஃப்ரண்ட் ஜேனும் இயற்கை எழில் சூழந்த அருவியில்தான் குளிப்பார்கள். இதைவிட சுதந்திரமான குளியல் வேறு இருக்க முடியுமா? இங்கிருந்துதான் அருவியில் குளிக்கும் பெண் என்கிற கான்செப்ட் உருவாகிறது.

அடுத்ததாக அருவியில் ‘தாராளமாக’ குளிக்க சம்மதிக்கக்கூடிய பெண் வேண்டும். நாற்பதாண்டுகளுக்கு முன்பு ‘பிகினி’ ‘கிகினி’ என்றால் சுளுக்கெடுத்து விடுவார்கள். அடுத்து இந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டிய பெண்ணுக்கு இதுமாதிரி சுதந்திரக் குளியலில் ஈடுபாடு இருக்க வேண்டும். அருவிநீர் தலையில் கொட்டும்போது கண்களை மூடிவிடக்கூடாது. நல்ல உயரமான பெண்ணாக இருந்தால்தான் விளம்பரங்களில் எடுபடும்.

நாடெங்கும் சல்லடை போட்டு தேடினார்கள். மும்பையில் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் கேர்ள் ஒருவர் அம்சமாக இருப்பதை கேள்விப்பட்டு, அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள்.

அவர்தான் கரேன் லூனல். சொந்த ஊர் பெங்களூர். மாடலிங் ஆர்வத்தில் மும்பைக்கு வந்தார்.

தயங்கி தயங்கி கேட்டார்கள்.

“பிகினி அணிந்து நடிக்க சம்மதமா?”

“பீச்சுக்கு போனால் அதைதான் அணிவேன். அதை அணிந்து ஒரு விளம்பரத்தில் நடிக்க எனக்கென்ன பிரச்சினை. நான் யார் என்பது எனக்கு தெரியும் எனும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை”

கரேன் நிறைய தத்துவம் பேசுவார் என்று தெரிந்தது. அதே நேரம் ‘எதற்கும்’ துணிந்திருக்கிறார் என்றதுமே, அவருக்கான துணியான ‘பிகினி’யை கொடுத்து ஷூட்டிங்குக்கு அள்ளிக்கொண்டுச் சென்றார்கள்.

மகாராஷ்டிராவில் இருக்கும் ‘கண்டாலா’ என்கிற ஊர் அருவியில்தான் விளம்பரங்களை படம் பிடித்தார்கள். குளிரில் நடுங்கி, சரியான ரியாக்‌ஷன் கொடுக்க முடியாமல் சிரமப்படுவார் கரேன். இதை சமாளிக்க லைட்டாக ‘பிராண்டி’யையோ, ‘ரம்’மையோ ஒரு கட்டிங் போடுவார். லிண்டாஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த விளம்பர ஜாம்பவான் பதம்ஸீ வேடிக்கையாக இதை குறிப்பிடுவார். “அவளது கண்களில் தெரிந்த குறும்புத்தனம் லிரில் சோப்பு போட்டு குளித்ததாலா அல்லது மதுவின் விளையாட்டா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை”
‘சுதந்திரக் குளியல்’ விளம்பரங்கள் சக்கைப்போடு போட, லிரில் சோப் சந்தையில் அடுத்த ஓராண்டுக்குள்ளேயே நெம்பர் ஒன் இடத்துக்கு வந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கு ‘லிரில் கேர்ள்’ ஆக கேரனே தொடர்ந்தார்.

பிளாக் & ஒயிட்டில் இருந்த டிவி வண்ணத்துக்கு மாறும்போது, இன்னும் கூடுதல் கவர்ச்சி விளம்பரத்துக்கான தேவை ஏற்பட்டது. ஏற்கனவே விளம்பரங்கள் எடுத்துக் கொண்டிருந்த கண்டாலா அருவியைவிட நல்ல லொக்கேஷன் தேடினார்கள். கடைசியாக நம்மூர் கொடைக்கானலில் பாம்பாற்று அருவி மாட்டியது. அங்கே எடுக்கப்பட்ட விளம்பரம்தான் நாம் டிவியில் பார்த்து பல்லாண்டுகளாக ரசித்ததும், இன்றும் யூட்யூப் போன்ற இணையத்தளங்களில் பல லட்சம் பேர் ரசித்துக் கொண்டிருப்பதும். லிரில் விளம்பரம் எடுக்கப்பட்டதாலேயே அந்த அருவி இன்றுவரை ‘லிரில் அருவி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கரேனுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, பூஜா பத்ரா, தாரா ஷர்மா என்று நிறைய லிரில் கேர்ள்ஸ் வந்துவிட்டார்கள். ஆனால் இன்றுவரை கரேனுக்கு இணையே இல்லை.

சரி. நடிகையின் கதைக்கு வருவோம்.

கொடைக்கானல் படப்பிடிப்பில் அருவி வெள்ளத்தில் கரேன் லுனால் அடித்துச் செல்லப்படவில்லை என்பதால், அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது வெறும் வதந்தி.

மாடலிங்கில் இவருக்கு கிடைத்த புகழின் காரணமாக இடையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பயணிகள் எல்லோருமே “லிரில் பெண் தானே நீ?” என்று கேட்டு, ஆட்டோகிராப் வாங்குவார்களாம். ஒருமுறை பிரதமர் ராஜீவ்காந்தி பயணத்தின் போது இவரை அடையாளம் கண்டுகொண்டு கைகுலுக்கி வாழ்த்தி இருக்கிறார்.

அந்த பிரபலமான டிவி கமர்ஷியலுக்கு பிறகு தொடர்ச்சியாக இவர் மாடலிங் துறையில் ஈடுபடவில்லை. ஏனெனில் மும்பையில் அப்போது நடந்த விபத்து ஒன்றின் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட தையல்கள் இவரது முகத்திலும், உடலிலும் போடப்பட்டது. லிரில் விளம்பரத்துக்கு பிறகு அவரை எங்கும் காணமுடியாத விரக்தியில் யாரோ ஒரு ரசிகர் கற்பனையாக கட்டிவிட்ட வதந்திதான் அருவியில் அடித்துச் சென்று மரணம்.

ஏர் ஹோஸ்டஸாக இருந்தபோது தஷி என்கிற திபெத்தியரை விமானப் பயணத்தில் சந்தித்தார். கண்டதும் காதல். ஐந்து ஆண்டுகள் காதலித்துவிட்டு 1985ல் திருமணம் செய்துக் கொண்டார். கரு தரித்ததுமே விமானப் பணிப்பெண் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஒரே மகன் ஸ்காட்.

பின்னர் டைம்ஸ் எஃப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிபெண்களுக்கு பயிற்சியாளராக இருந்தார். தற்போது நியூசிலாந்தில் குடும்பத்தோடு சகல செளபாக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

(நன்றி : தினகரன் வசந்தம் - ‘நடிகைகளின் கதை’ தொடர்)

2 ஜூன், 2015

கொஞ்சம் மெய், நிறைய பொய்..

இந்தியா சுதந்திரம் வாங்கிய அதே ஆண்டில் அமெரிக்காவின் CBS ரேடியோவில் ஒலிபரப்பான candid microphoneதான் உலகின் முதல் ரியாலிட்டி கண்டெண்ட். அமெரிக்க குடிமகனான Allen funtதான் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.

Candid microphone என்கிற வானொலி நிகழ்ச்சி 1950களில் Candid camera என்கிற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ABC மற்றும் NBC தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. கேமிராவை மறைவான இட்த்தில் வைத்துவிட்டு சாதாரண மக்களின் அன்றாட சுவாரசியங்களைப் படம் பிடிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஒரு தொகுப்பாளர் களத்தில் புகுந்து விசித்திரமாக நடந்துக் கொள்வதும் அதைப் பார்க்கும் பொதுமக்களின் விசேஷ ரியாக்‌ஷன்களை படம் பிடிப்பதே நோக்கம். முழுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி இது.

அமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் வீதியில் போகிறவர்களிடம், “மணி என்ன?” என்று கேட்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் பொது மக்களின் வினோத முகபாவங்கள் மிகப் பிரபலம்.

1950களில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. 1960களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து நிகழ்ச்சியாக்கும் பைத்தியம் பிடித்தது. The American Family என்ற நிகழ்ச்சியை ஒரு தொடக்கம் எனலாம். 1970களில் காவல்துறையின் நடவடிக்கைகளை நோக்கி ரியாலிட்டி கேமரா திரும்பியது. அதுவரை நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்திய ரியாலிட்டி தயாரிப்பாளர்கள் கொலை – கொள்ளை – விசாரணை என இன்னொரு மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்கள். பல மணி நேரம் படம் பிடிப்பதை எடிட்டிங் செய்வதுதான் பெரிய தலைவலியாக இருந்தது. 1980களில் கண்டறியப்பட்ட புதிய படத்தொகுப்பு தொழில்நுட்பங்கள் இந்தப் பணியையும் எளிமையாக்கின.

1990களில்தான் ரியாலிட்டி வட்டத்திற்குள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. Pop idol என்ற talent reality நிகழ்ச்சி உருவாக்கிய பாட்டுப் போட்டி மேடையும் நாட்டாமை நடுவர்களும் ஆரவார பார்வையாளர்களும் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் வடிவமாகி விட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தயாரித்த Freemantle Media என்கிற தயாரிப்பு நிறுவனம், நரசிம்மராவின் புதிய பொருளாதார கொள்கையின் உதவியோடும் தனியார் தொலைக்காட்சிகளின் விஸ்வரூப வளர்ச்சியைப் பயன்படுத்தியும் 2004-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Pop Idol என்கிற தங்கள் நிகழ்ச்சியின் இந்தியப் பிரதியான Indian Idolஐ தயாரித்து அரங்கேற்றியது. தனி நிறுவனமாக இல்லாமல் பல துணை தயாரிப்பு நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்தது. தயாரிப்பு அவ்வப்போது கைமாறினாலும் Idol நிகழ்ச்சி வடிவத்தின் உரிமை அவர்களுடையதே. Indian Idol நிகழ்ச்சி வந்த அதே வழியில் India’s got talent நிகழ்ச்சியும் வந்தது. வட இந்திய ஊடகங்கள் உள்வாங்கிய வெளிநாட்டு நிகழ்ச்சி வடிவங்கள் விற்பனை மாறி ஒப்பனை மாறி சப்தஸ்வரங்கள், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, தமிழகத்தின் சேம்பியன் என்று தமிழ் தொலைக்காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது விக்கிப்பீடியா தரும் விவரங்கள் அல்ல. ஒரு தமிழ் நாவலின் கதைப்போக்கில் கிடைக்கக்கூடிய தகவல்கள்.
நாவல் என்பது, சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்களை உள்ளடக்கிய நீண்ட கதை வடிவம் என்கிற நீண்டகால தமிழ்நாவல் மரபு உடைந்துக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளமாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’யை பார்க்கலாம்.

இன்றைய தலைமுறைக்கு கதை கேட்பதை/வாசிப்பதை காட்டிலும், தகவல்களை பெறுவதில் ஆர்வம் அதிகம். மெகாசீரியல்களுக்கு மவுசு குறைந்து ரியாலிட்டி ஷோ-க்கள் தொலைக்காட்சிகளில் பெருகிவருவதை இதன் நீட்சியாக பார்க்கலாம். தகவல்களை தெரிந்துக் கொள்வது என்பது வெறுமனே பரிட்சைக்கு படிப்பதாக இல்லாமல், பொழுதுபோக்கே அதுதான் எனக்கூடிய infotainment சூழல் தொடங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாற்றம் இயல்பானதுதான்.

‘காட்சி ஊடகம் பற்றிய கதை விவாதம்’ என்று ‘மெய்நிகரி’, அதை வாசிக்கும் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

காட்சி ஊடகம் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி துறை குறித்த சித்தரிப்பு தமிழ் நாவல்களில் மிகக்குறைவு. சமீபத்தில் விநாயக முருகன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலில் ஒரு பகுதி காட்சி ஊடகத்தை பிரதானப்படுத்துகிறது. எனினும் அந்நாவலின் மையம் வேறு எனும்போது இப்பகுதி மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறது.

விநாயக முருகன் நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியவர் அல்ல என்பதால் தான் கேள்விப்பட்ட, வாசித்த, யூகித்த விஷயங்களை புனைவாக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் பின்னணி அரசியலை சாக்காக வைத்துக்கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தா வீடியோ விவகாரத்தை தன்னுடைய புனைவின் சட்டகங்களுக்குள் நுழைக்க முயன்றிருக்கிறார். அந்த வீடியோ ஏன் வெளிவந்திருக்கலாம் என்கிற தன்னுடைய யூகத்தை நாவலின் களத்துக்கு ஏற்புடையதாக மாற்ற முயன்றிருக்கிறார்.
‘மெய்நிகரி’ முற்றிலும் வேறான களத்தில் இயங்குகிறது. கபிலன் வைரமுத்துவுக்கே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவருக்கு இத்துறை குறித்த துல்லியமான சித்தரிப்புகளை உருவாக்க முடிகிறது. ‘இடியட் பாக்ஸ்’ எப்படி கோடிக்கணக்கானவர்களை இடியட்டுகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்கிற தேவரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் என்றுகூட சொல்லலாம். சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து சினிமா எடுக்கப்படுவதை எம்.ஜி.ஆர் அந்த காலத்தில் கடுமையாக எதிர்த்த சம்பவங்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

டெரன்ஸ் பால், மெய்நிகரியின் நாயகன். மாடப்புறா தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றியவன். டயரி எழுதுவதை போல தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் கொண்டவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எடுத்த புகைப்படங்கள், செல்போன் வீடியோக்களை எடிட் செய்து அடுக்குகிறான். இந்த படத்தின் பின்னணியாக தன்னுடைய voice over மூலம் வருணனை தருகிறான். டெரன்ஸ் பாலின் குரலாகவே ‘மெய்நிகரி’ வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாடப்புறா தொலைக்காட்சி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் பொறுப்புகளின் ஒரு பகுதி டெரன்ஸிடம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென்று ஒரு புதிய குழுவை டெரன்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வு நடத்தி ராகவன், பெனாசிர், மானசா, நிலாசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து தனக்கான குழுவை உருவாக்குகிறான்.

இந்த குழு புதிய ஷோவுக்கான ஐடியாக்களை உருவாக்குவதில் தொடங்கி, அது தொடர்பான நிர்வாகத்தின் சம்பிரதாயங்கள் முடிந்து, நிகழ்ச்சியை வடிவமைப்பது, பின்னணி பணிகள், படப்பிடிப்பு, எடிட்டிங் என்று ஒரு ரியாலிட்டி ஷோ எப்படி உருவாகிறது என்பதன் முழுமையான செய்முறையே மெய்நிகரி நாவல்.

இதற்கிடையே டெரன்ஸுக்கு, அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பெனாசிர் மீது ஏற்படும் காதல். ராகவனுக்கும், டெரன்ஸுக்கும் நடக்கும் சண்டை. குழுவிலேயே உள்கை ஒன்று செய்யும் துரோகம். பொதுமக்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டு பேசிக்கொள்ளும் தொலைக்காட்சித் துறை பாலியல் சுரண்டல்கள். நிறுவன உரிமையாளர்களுக்கு இடையேயான ஈகோ மோதல். அல்லக்கைகளின் ஆட்டம் என்று நாவலின் ஒவ்வொரு பக்கமும் கதையின் போக்கில் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போகிறது.

சர்வதேச அளவிலேயே படைப்பாளிகளுக்கும், மார்க்கெட்டிங் ஆட்களுக்குமான மோதல்தான் இன்றைய உலகின் அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர். எல்லா துறைகளிலும் கிரியேட்டிவ்வாக சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கும், கூவி கூவி சந்தையில் விற்பவர்களுக்கும் நடக்கும் சண்டை மீடியாவில் சற்றே அதிகம்.

நிகழ்ச்சியின் தலையெழுத்தை மட்டுமின்றி, அதை உருவாக்கிய கிரியேட்டர்களின் விதியையும் இன்று மார்க்கெட்டிங் தயவுதாட்சணியமின்றி தீர்மானிக்கும் போக்கினை தகுந்த சம்பவங்களின் துணையோடு மிக எளிமையாக முன்வைக்கிறார் கபிலன். Programs are effective support systems for the sponsor economy என்பதுதான் இன்று தொலைக்காட்சிகளை ஆளக்கூடிய கருத்தாக்கம் என்றால் படைப்பாளியின் இடம் இங்கே எதுவென்று நாமே புரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘டி.ஆர்.பி’ என்கிற சொல் அதன் அர்த்தம் புரிந்தோ, புரியாமலேயோ இன்று அனைவராலும் உச்சரிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் தொடர்பிலான TAM குறித்த விளக்கமும் மிக விரிவாக இந்நாவலில் வாசிக்க கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதற்கு தூர்தர்ஷன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அமைப்பே DART – Doordarshan Audience Research Team. முப்பத்தி மூன்று நகரங்கள் மட்டுமே அதன் இலக்கு. தொழில்நுட்பம் வளராத அந்த காலக்கட்டத்தில் மனிதர்களை மனிதர்களே சந்தித்து நேரடியாக பேசி ஒரு கணக்கீடு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1994ல் Indian National Television Audience Measurement என்கிற INTAM, 1997ஆம் ஆண்டு A.C.Nielsen துணையோடு உருவான TAM – என இரண்டு அமைப்புகள் TAM என்கிற பெயரிலேயே ஒருங்கிணைந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் தனிபெரும் தனியார் நிறுவனங்களாக வளர்ந்தது. இவர்கள் கணக்கீட்டுக்கு people meter என்கிற கருவியை பயன்படுத்தியே ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை கணக்கெடுக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும் முடிவை நம்பிதான் இந்தியாவில் தொலைக்காட்சி உலகமே இயங்குகிறது. தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தருபவர்களும் இவர்களது கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறார்கள். இது குறித்த முழுமையான வரலாற்றை இரண்டே பக்கங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளும் வசனங்களில் வாசகர்களுக்கு புரியவைக்கிறார் கபிலன்.

நாவலின் கடைசி ஒன்றரை பக்கம் பக்கா மங்காத்தா – இந்த ஒருவரி விமர்சனத்துக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் நீங்கள் நாவலை முழுக்க வாசித்துதான் ஆகவேண்டும்.
டிவி என்கிற துறை இன்று கனவுத்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறுமனே டிவி பார்த்து டிவியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் நம் இளைஞர்கள். எப்படியோ அடித்து பிடித்து வேலைக்கு சேர்ந்தபிறகுதான் நினைத்த மாதிரியாக இல்லையே என்று நொந்துப் போகிறார்கள். அம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு டிவி நிறுவனம் எப்படி செயல்படும் என்று பொறுமையாக தம்மும், டீயும் சாப்பிட்டபடியே கதையாக சொல்கிறார் கபிலன்.

இந்த நாவலுக்கு என்று எந்தவிதமான முஸ்தீபுகளும் செய்துக் கொள்ளாமல், நடையைப் பற்றியெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் freakyயான தமிழையே பயன்படுத்துகிறார்.
தமிழிலும் சேத்தன் பகத்துகள் சாத்தியமே என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்றை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’ அளிக்கிறது.



நூல் : மெய்நிகரி
எழுதியவர் : கபிலன் வைரமுத்து
பக்கங்கள் : 152
விலை : ரூ.125
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங்,
லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14
போன் : 044-42009603

குறிப்பு : இந்த நாவலுக்கென்றே ஒரு பிரத்யேக இணையத்தளத்தை கபிலன் உருவாக்கியிருக்கிறார். ஆர்வமிருப்பவர்கள் பார்க்கலாம் www.meinigari.com

(நன்றி : தமிழ் மின்னிதழ்)

1 ஜூன், 2015

காதல் + மழை + பட்டாம்பூச்சி = பிரேமம்!

The butterfly is mentally mental, so as love!

‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாதிப்பு நீடித்துக் கொண்டிருந்த 1996. நான் டீனேஜின் கடைசிக் கட்டத்தில் இருந்தபோது அண்ணனுக்கு திருமணம் ஆனது. பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் காதல் காதல் என்று கதறிக்கொண்டு சிறகடித்துக் கொண்டிருந்த பதினெட்டு வயசு.

கல்யாண மண்டபம் முழுக்க ஏதேனும் மாதுரிதீட்சித் தென்படுவாளா என்று – பர்சனாலிட்டிக்காக - கூலிங் க்ளாஸ் மாட்டிக்கொண்டு வெடவெடவென உடைத்தால் ஒடிந்துவிடுவேன் போலிருந்த உடல்வாகுடன் பைத்தியம் மாதிரி அலைந்துத் திரிந்தேன். அதற்குள்ளாகவே சில காதல்தோல்விகள் (!) ஏற்பட்டிருந்தாலும், அந்த சோகத்துக்கெல்லாம் தாடி வளர்க்க முயற்சித்து அது வளர்ந்துத் தொலைக்காத கூடுதல் சோகம் சேர்ந்துக் கொண்டதாலும், அந்த அவலத்தையெல்லாம் பீர்விட்டு மறந்திருந்ததாலும் அன்று கொஞ்சம் ப்ரெஷ்ஷாகவே இருந்ததாக ஞாபகம். லேசான ‘ஆண்ட்டி’மேனியா வேறு இருந்துத் தொலைத்தது.

மிகச்சரியாக அந்த திருமணம் நடந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து எனக்கு திருமணம் ஆனது. இடையில் அவ்வப்போது நமக்கு பழக்கப்பட்டு விட்ட சில லவ் ஃபெய்லியர்கள். ஒன்று ஊத்திக்கொண்டால், புதுசாக இன்னொன்று என்று சகஜமாகி விட்டது.

எப்படியோ காதல் என்கிற நெருப்பை அணைத்துவிட்டு கல்யாண சாகரத்தில் மூழ்கி ஓரிரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். வீட்டில் இல்லத்தரசி ஏதோ திருமண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணனுடைய கல்யாண டிவிடிதான். டொக்கு விழுந்த கன்னத்தோடு, அங்குமிங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்த கண்களோடு, லூசான ஷர்ட்டோடு லூசுமாதிரி பார்க்கவே சகிக்க முடியாத கோலத்திலிருந்த என்னை காட்டி வீட்டில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று ஒரு இடத்தை வீட்டுக்காரம்மா pause செய்தார். பாவாடைச் சட்டை அணிந்துக் கொண்டு, இரட்டைச் சடையோடு பதினொன்று, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி freeze ஆனாள். “அது நான்தான். அந்த கல்யாணத்துக்கு நானும் வந்திருக்கேன்போல” என்று அவர் சொல்ல கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன் (யெஸ், என்னுடைய மனைவி, அண்ணிக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி. அண்ணன் எங்கே சிறைபட்டாரோ, அதே சிறைச்சாலையில்தான் நானும் இப்போது ஆயுள்கைதி. முன்பு நாங்கள் பங்காளி, இப்போது சகலையும் ஆகிவிட்டோம்).

என்னுடைய பதினெட்டு வயதில் நான் சைட் அடிக்க கூட consider செய்ய முடியாத வயதிலிருந்த சிறுமி இன்று எனக்கு மனைவி. ஒருவேளை அப்போது, “பாப்பா, அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாம அப்படி ஓரமா போயி விளையாடும்மா” என்றுகூட நான் அதட்டியிருக்கக்கூடும்.

காலம், கறாரான காமெடியன்.

இதே சூழலை ஒரு சினிமாவில் பார்க்கும்போது, படைப்பாளி என்பவன் எவ்வளவு நுட்பமாக வாழ்க்கையை வாசிக்கிறான் என்று ஆச்சரியம் அள்ளுகிறது.

அழுதுப் பிழிந்து பிரிவு சோகத்தை சக்கையாக்கிப் போட்ட சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் 2015 வடிவம்தான் மலையாளப்படமான ‘ப்ரேமம்’. மலையாளப் படம் பார்த்தேன் என்று சொல்லவே ஒரு காலத்தில் மஜாவாக இருக்கும். இப்போது சொன்னால் ஜோல்னாப்பை அறிவுஜீவிக்கான இலக்கிய மதிப்பீடோடு கூடிய மரியாதை கிடைக்கிறது.

+2 படிக்கும்போது ஜோர்ஜுக்கு (ஜார்ஜ் அங்கே ஜோர்ஜ்தானே?) மேரியோடு முதல் காதல் பிறக்கிறது. அவளிடம் காதலை வெளிப்படுத்த செம காம்பெடிஷன். மேரியின் அப்பா ஹிட்லர் மாதிரி. வீட்டை சுத்தி சுத்தி வரும் பசங்களை துரத்தி துரத்தி விளாசுகிறார். அவருடைய கண்காணிப்பையும் மீறி ஒருமுறை மேரி, ஜோர்ஜிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். கவனிக்கவும். ‘காதலை’ சொல்கிறாள். காதலன் இவன் அல்ல.

அடுத்து காலேஜ் காதல். எழவு, மாணவிகளை விட்டு விட்டு லெக்சரர் மீது காதல் வந்து தொலைக்கிறது. மலர் என்கிற அந்த விரிவுரையாளர் தமிழ்ப்பெண். எனவே கனவில் ஒரு தமிழ் டூயட்டும் உண்டு. மலருக்கு ஜோர்ஜை பிடிக்கும். அது காதலா அல்லது சும்மா பிடிக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, ஒரு விபத்தின் காரணமாகவே மலருக்கு எல்லா நினைவுகளும் அழிந்துவிடுகிறது.

கதை, நிகழ்காலத்துக்கு வருகிறது. ஜோர்ஜ் இப்போது cafe நடத்தும் முதலாளி. கடந்தகால காதல்கள் கானல். செலினை பார்த்ததுமே டீனேஜ் ஜோர்ஜ் ஆகி ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறான். பழைய அனுபவங்களால் matured ஆகிவிட்டவன், நாகரிகமாக தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போதுதான் செலின் ஓர் அணுகுண்டை போடுகிறாள். ‘வர்ற சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட்’.

ஜோர்ஜுக்கும் அப்படி இப்படி எப்படியோ கல்யாணம் ஆகிறது. யாரை செய்துக் கொண்டான் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சேரன் மாதிரியே ஃபீலிங்ஸோடு நிவின்பாலி, ரசிகர்களின் இதயத்தை கீறிப் பார்த்திருக்கலாம். ஆனால், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மாதிரி நொடிக்கு நொடி வெடித்து சிரிக்க வைக்கிறார். கரைபுரண்டோடும் காமெடிதான் ‘ப்ரேமம்’ ஸ்பெஷல். ஆட்டோகிராப்பை காமெடியாக எடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். தமிழ்ப்படங்களின் தரை டிக்கெட்டு ரசிகர் போலிருக்கிறது. ‘குணா’ படம் நெடுக வருகிறது. சக்கைப்போடு போட்ட பழைய மோகன்லால் படங்களுங்கு ஆங்காங்கே tribute (‘மாஸ்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ வருவது மாதிரி) செய்யப்படுவது புத்திசாலித்தனமான யோசனை.

ஒரு காட்சி.

முந்தைய நாள் மேரியை சைட் அடிக்கப் போய், அவளது அப்பனிடம் அப்பு வாங்கி கன்னம் வீங்கிப் போய் டீக்கடையில் சோகமாக அமர்ந்திருக்கிறான் பையன் ஒருவன்.

டீக்கடை மாஸ்டர் கேட்கிறார். “கன்னத்தில் என்ன காயம்?”

“கொசு கடிச்சிடிச்சி!”

“கொசு கடிச்சா, இவ்ளோ வீங்குமா?”

“கடிச்ச கொசுவை அடிச்சதாலேதான் இப்படி ஆயிடிச்சி”

படம் முழுக்கவே இப்படிதான். ‘கடி’ ‘கடி’யென்று எஸ்.வி.சேகர், கிரேஸி மோகனையெல்லாம் பீட் செய்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினி, யுனிவர்சல் ஹீரோ கமல்ஹாசனுக்கு என்றெல்லாம் ஐந்து நிமிடத்துக்கு தொடர்ச்சியாக தேங்க்ஸ் கார்ட் போடுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது அவரது அதகளம்.

மூன்று ஹீரோயின்களில் மலர் டீச்சர்தான் டாப். சரோஜாதேவி மாதிரி கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். சில காட்சிகளில் முகப்பருவால் கன்னிப்போய் சிவந்திருக்கும் அவரது கன்னங்கள் அத்தனை அழகு. திடீரென்று ஜீன்ஸும், டீஷர்ட்டுமாக குத்தாட்டம் போடும்போது ஜோர்ஜ் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனை பேருமே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

நிவின்பாலியை பற்றி சொல்லவே வேண்டாம். சாதாரணமாகவே கலக்கி விடுவார். செமத்தியான கேரக்டர் கிடைத்தால் காட்டு, காட்டுவென்று காட்டுகிறார். அதுவும் வேட்டியை அருவாள் வீசுவது மாதிரி ஷார்ப்பாக தூக்கிக் கொண்டு மிதப்பாக நடப்பது மரண மாஸ்.

ஒவ்வொரு காதலின் போதும் மழையும், மழைக்குப் பின்னான பசுமையில் தேன் சேகரிக்கும் வண்ணத்துப் பூச்சிகளுமாய் காட்சிகள் கிறங்கடிக்கின்றன. மப்பும் மந்தாரமுமான கடவுளின் தேசத்து குளிர் அப்படியே படம் பார்க்கிறவனுக்கு ஊடுருவுவது மாதிரி பளிச் கேமிரா.

இதே படம் தமிழில் வந்திருந்தால், ‘மசாலா குப்பை’ என்று விமர்சிக்கக்கூடிய கொம்பு முளைத்த நம்மூர் விமர்சகர்கள், மலையாளத்தில் வந்திருப்பதால் மட்டுமே இதை கைப்பற்றி குறியீடுகளும், கோட்பாடுகளுமாக கொத்துக்கறி போட்டு தாலியறுத்து நம்மை கருத்து விதவையாக்குவதற்கு முன்பாக தயவுசெய்து பார்த்துவிடுங்கள். இல்லையேல், காதலுக்குள் பட்டாம்பூச்சியாய் பயணிக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

‘The second film in the history of world cinema with nothing fresh’ என்று இந்தப் படத்தை அதன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விமர்சித்தாலும் (முதல் படம், அவரது முந்தைய படமான நேரமாம்), இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்த எந்த அலுப்புமே இல்லாமல் தியேட்டரை விட்டு ப்ரெஷ்ஷாக வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஜோர்ஜையும், அவனது காதலிகளையும், கோமாளி வட்டத்து நண்பர்களையும் நீண்டகாலத்துக்கு மறக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான கமர்ஷியல் கல்ட் கிளாசிக்.

Premam : Must watch Malayalam movie!