1 ஜூன், 2015

காதல் + மழை + பட்டாம்பூச்சி = பிரேமம்!

The butterfly is mentally mental, so as love!

‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாதிப்பு நீடித்துக் கொண்டிருந்த 1996. நான் டீனேஜின் கடைசிக் கட்டத்தில் இருந்தபோது அண்ணனுக்கு திருமணம் ஆனது. பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் காதல் காதல் என்று கதறிக்கொண்டு சிறகடித்துக் கொண்டிருந்த பதினெட்டு வயசு.

கல்யாண மண்டபம் முழுக்க ஏதேனும் மாதுரிதீட்சித் தென்படுவாளா என்று – பர்சனாலிட்டிக்காக - கூலிங் க்ளாஸ் மாட்டிக்கொண்டு வெடவெடவென உடைத்தால் ஒடிந்துவிடுவேன் போலிருந்த உடல்வாகுடன் பைத்தியம் மாதிரி அலைந்துத் திரிந்தேன். அதற்குள்ளாகவே சில காதல்தோல்விகள் (!) ஏற்பட்டிருந்தாலும், அந்த சோகத்துக்கெல்லாம் தாடி வளர்க்க முயற்சித்து அது வளர்ந்துத் தொலைக்காத கூடுதல் சோகம் சேர்ந்துக் கொண்டதாலும், அந்த அவலத்தையெல்லாம் பீர்விட்டு மறந்திருந்ததாலும் அன்று கொஞ்சம் ப்ரெஷ்ஷாகவே இருந்ததாக ஞாபகம். லேசான ‘ஆண்ட்டி’மேனியா வேறு இருந்துத் தொலைத்தது.

மிகச்சரியாக அந்த திருமணம் நடந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து எனக்கு திருமணம் ஆனது. இடையில் அவ்வப்போது நமக்கு பழக்கப்பட்டு விட்ட சில லவ் ஃபெய்லியர்கள். ஒன்று ஊத்திக்கொண்டால், புதுசாக இன்னொன்று என்று சகஜமாகி விட்டது.

எப்படியோ காதல் என்கிற நெருப்பை அணைத்துவிட்டு கல்யாண சாகரத்தில் மூழ்கி ஓரிரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். வீட்டில் இல்லத்தரசி ஏதோ திருமண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணனுடைய கல்யாண டிவிடிதான். டொக்கு விழுந்த கன்னத்தோடு, அங்குமிங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்த கண்களோடு, லூசான ஷர்ட்டோடு லூசுமாதிரி பார்க்கவே சகிக்க முடியாத கோலத்திலிருந்த என்னை காட்டி வீட்டில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று ஒரு இடத்தை வீட்டுக்காரம்மா pause செய்தார். பாவாடைச் சட்டை அணிந்துக் கொண்டு, இரட்டைச் சடையோடு பதினொன்று, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி freeze ஆனாள். “அது நான்தான். அந்த கல்யாணத்துக்கு நானும் வந்திருக்கேன்போல” என்று அவர் சொல்ல கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன் (யெஸ், என்னுடைய மனைவி, அண்ணிக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி. அண்ணன் எங்கே சிறைபட்டாரோ, அதே சிறைச்சாலையில்தான் நானும் இப்போது ஆயுள்கைதி. முன்பு நாங்கள் பங்காளி, இப்போது சகலையும் ஆகிவிட்டோம்).

என்னுடைய பதினெட்டு வயதில் நான் சைட் அடிக்க கூட consider செய்ய முடியாத வயதிலிருந்த சிறுமி இன்று எனக்கு மனைவி. ஒருவேளை அப்போது, “பாப்பா, அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாம அப்படி ஓரமா போயி விளையாடும்மா” என்றுகூட நான் அதட்டியிருக்கக்கூடும்.

காலம், கறாரான காமெடியன்.

இதே சூழலை ஒரு சினிமாவில் பார்க்கும்போது, படைப்பாளி என்பவன் எவ்வளவு நுட்பமாக வாழ்க்கையை வாசிக்கிறான் என்று ஆச்சரியம் அள்ளுகிறது.

அழுதுப் பிழிந்து பிரிவு சோகத்தை சக்கையாக்கிப் போட்ட சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் 2015 வடிவம்தான் மலையாளப்படமான ‘ப்ரேமம்’. மலையாளப் படம் பார்த்தேன் என்று சொல்லவே ஒரு காலத்தில் மஜாவாக இருக்கும். இப்போது சொன்னால் ஜோல்னாப்பை அறிவுஜீவிக்கான இலக்கிய மதிப்பீடோடு கூடிய மரியாதை கிடைக்கிறது.

+2 படிக்கும்போது ஜோர்ஜுக்கு (ஜார்ஜ் அங்கே ஜோர்ஜ்தானே?) மேரியோடு முதல் காதல் பிறக்கிறது. அவளிடம் காதலை வெளிப்படுத்த செம காம்பெடிஷன். மேரியின் அப்பா ஹிட்லர் மாதிரி. வீட்டை சுத்தி சுத்தி வரும் பசங்களை துரத்தி துரத்தி விளாசுகிறார். அவருடைய கண்காணிப்பையும் மீறி ஒருமுறை மேரி, ஜோர்ஜிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். கவனிக்கவும். ‘காதலை’ சொல்கிறாள். காதலன் இவன் அல்ல.

அடுத்து காலேஜ் காதல். எழவு, மாணவிகளை விட்டு விட்டு லெக்சரர் மீது காதல் வந்து தொலைக்கிறது. மலர் என்கிற அந்த விரிவுரையாளர் தமிழ்ப்பெண். எனவே கனவில் ஒரு தமிழ் டூயட்டும் உண்டு. மலருக்கு ஜோர்ஜை பிடிக்கும். அது காதலா அல்லது சும்மா பிடிக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, ஒரு விபத்தின் காரணமாகவே மலருக்கு எல்லா நினைவுகளும் அழிந்துவிடுகிறது.

கதை, நிகழ்காலத்துக்கு வருகிறது. ஜோர்ஜ் இப்போது cafe நடத்தும் முதலாளி. கடந்தகால காதல்கள் கானல். செலினை பார்த்ததுமே டீனேஜ் ஜோர்ஜ் ஆகி ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறான். பழைய அனுபவங்களால் matured ஆகிவிட்டவன், நாகரிகமாக தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போதுதான் செலின் ஓர் அணுகுண்டை போடுகிறாள். ‘வர்ற சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட்’.

ஜோர்ஜுக்கும் அப்படி இப்படி எப்படியோ கல்யாணம் ஆகிறது. யாரை செய்துக் கொண்டான் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சேரன் மாதிரியே ஃபீலிங்ஸோடு நிவின்பாலி, ரசிகர்களின் இதயத்தை கீறிப் பார்த்திருக்கலாம். ஆனால், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மாதிரி நொடிக்கு நொடி வெடித்து சிரிக்க வைக்கிறார். கரைபுரண்டோடும் காமெடிதான் ‘ப்ரேமம்’ ஸ்பெஷல். ஆட்டோகிராப்பை காமெடியாக எடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். தமிழ்ப்படங்களின் தரை டிக்கெட்டு ரசிகர் போலிருக்கிறது. ‘குணா’ படம் நெடுக வருகிறது. சக்கைப்போடு போட்ட பழைய மோகன்லால் படங்களுங்கு ஆங்காங்கே tribute (‘மாஸ்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ வருவது மாதிரி) செய்யப்படுவது புத்திசாலித்தனமான யோசனை.

ஒரு காட்சி.

முந்தைய நாள் மேரியை சைட் அடிக்கப் போய், அவளது அப்பனிடம் அப்பு வாங்கி கன்னம் வீங்கிப் போய் டீக்கடையில் சோகமாக அமர்ந்திருக்கிறான் பையன் ஒருவன்.

டீக்கடை மாஸ்டர் கேட்கிறார். “கன்னத்தில் என்ன காயம்?”

“கொசு கடிச்சிடிச்சி!”

“கொசு கடிச்சா, இவ்ளோ வீங்குமா?”

“கடிச்ச கொசுவை அடிச்சதாலேதான் இப்படி ஆயிடிச்சி”

படம் முழுக்கவே இப்படிதான். ‘கடி’ ‘கடி’யென்று எஸ்.வி.சேகர், கிரேஸி மோகனையெல்லாம் பீட் செய்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினி, யுனிவர்சல் ஹீரோ கமல்ஹாசனுக்கு என்றெல்லாம் ஐந்து நிமிடத்துக்கு தொடர்ச்சியாக தேங்க்ஸ் கார்ட் போடுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது அவரது அதகளம்.

மூன்று ஹீரோயின்களில் மலர் டீச்சர்தான் டாப். சரோஜாதேவி மாதிரி கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். சில காட்சிகளில் முகப்பருவால் கன்னிப்போய் சிவந்திருக்கும் அவரது கன்னங்கள் அத்தனை அழகு. திடீரென்று ஜீன்ஸும், டீஷர்ட்டுமாக குத்தாட்டம் போடும்போது ஜோர்ஜ் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனை பேருமே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

நிவின்பாலியை பற்றி சொல்லவே வேண்டாம். சாதாரணமாகவே கலக்கி விடுவார். செமத்தியான கேரக்டர் கிடைத்தால் காட்டு, காட்டுவென்று காட்டுகிறார். அதுவும் வேட்டியை அருவாள் வீசுவது மாதிரி ஷார்ப்பாக தூக்கிக் கொண்டு மிதப்பாக நடப்பது மரண மாஸ்.

ஒவ்வொரு காதலின் போதும் மழையும், மழைக்குப் பின்னான பசுமையில் தேன் சேகரிக்கும் வண்ணத்துப் பூச்சிகளுமாய் காட்சிகள் கிறங்கடிக்கின்றன. மப்பும் மந்தாரமுமான கடவுளின் தேசத்து குளிர் அப்படியே படம் பார்க்கிறவனுக்கு ஊடுருவுவது மாதிரி பளிச் கேமிரா.

இதே படம் தமிழில் வந்திருந்தால், ‘மசாலா குப்பை’ என்று விமர்சிக்கக்கூடிய கொம்பு முளைத்த நம்மூர் விமர்சகர்கள், மலையாளத்தில் வந்திருப்பதால் மட்டுமே இதை கைப்பற்றி குறியீடுகளும், கோட்பாடுகளுமாக கொத்துக்கறி போட்டு தாலியறுத்து நம்மை கருத்து விதவையாக்குவதற்கு முன்பாக தயவுசெய்து பார்த்துவிடுங்கள். இல்லையேல், காதலுக்குள் பட்டாம்பூச்சியாய் பயணிக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

‘The second film in the history of world cinema with nothing fresh’ என்று இந்தப் படத்தை அதன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விமர்சித்தாலும் (முதல் படம், அவரது முந்தைய படமான நேரமாம்), இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்த எந்த அலுப்புமே இல்லாமல் தியேட்டரை விட்டு ப்ரெஷ்ஷாக வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஜோர்ஜையும், அவனது காதலிகளையும், கோமாளி வட்டத்து நண்பர்களையும் நீண்டகாலத்துக்கு மறக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான கமர்ஷியல் கல்ட் கிளாசிக்.

Premam : Must watch Malayalam movie!

2 கருத்துகள்:

  1. சொல்லச் சொல்ல இனிக்கும் திரைப்படக் கதை போல் இருக்கிறதே ?

    பதிலளிநீக்கு
  2. சிவசுப்பிரமணி.K9:06 PM, ஜூன் 02, 2015

    அருமையான படம்.நீண்ட நாட்களுக்குப்பிறகு கேரளாவில் ஒரு சூப்பர் ஹிட் மலயாளப்படம்.நான் மூன்று நாட்களாக முயற்சிக்கிறேன்.இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு