30 ஜனவரி, 2010

சாரு நிவேதிதா இதற்கு உங்கள் பதில் என்ன?

மறந்துப்போனவை-1

ரவுண்ட் டயல் டெலிபோன்!

”ஹல்லோ 459872ங்களா”

“இல்லீங்க மேடம். 459871”

“சார்ரீ மேடம்”

“மேடம் இல்லைங்க சார்!”

“மறுபடியும் சார்ரீங்க. உங்க வாய்ஸ் லேடி வாய்ஸ் மாதிரியே இருக்கு”

“நான் சின்னப்பையன் தாங்க மேடம். பதினேழு வயசுதான் ஆவுது”

”யோவ் நானும் சின்னப்பையன்தான். எனக்கும் 20 வயசுதான் ஆவுது. மேடம் மேடமுன்னு கூப்புடாமே ஒழுங்கா சார்னு கூப்பிடு!”

டொக்.



வீடியோ கேசட்!

ஒரு நாள் மூர்த்திக்கு திடீரென்று ஏனோ ஒரு Aக்கம் ஏற்பட்டது. "மச்சான், கேசட் வாங்கி சாமிப்படம் பார்க்கணும்டா" என்றான். சண்முகத்துக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும் போல. பலமாக ஆமோதித்தான். எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாக உதற ஆரம்பித்தது. எங்கள் ஏரியாவில் இதுமாதிரி சாமிப்படங்களுக்கு புகழ்பெற்ற தியேட்டர் ஆர்.கே. (ராமகிருஷ்ணா என்பதின் சுருக்கம், அந்த தியேட்டர் இப்போது ராஜாவாகியிருக்கிறது). அந்த தியேட்டருக்கு போகும் சில பசங்களை (சரவணா, மோகன்) கெட்ட பசங்க என்று ஒதுக்கி வைத்திருந்தோம். "இப்போ நாமளே அந்தக் காரியத்தை பண்ணுறது என்னடா நியாயம்?" என்று கேட்டேன். "மச்சான் யாருக்கும் தெரியாம நாம மட்டும் பாத்துடலாம், வெளியே மேட்டர் லீக் ஆவாது" என்று சண்முகம் சொன்னான். அப்போதெல்லாம் சிடி, டிவிடி கிடையாது. வீடியோ கேசட் தான்.

கடைசியாக சண்முகம் வீட்டில் கேசட் போட்டுப் பார்ப்பதாக முடிவு செய்தோம். காரணம் சண்முகத்தின் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஒர்க்கிங். 6 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள். மூர்த்தி வீட்டிலும், என் வீட்டிலும் எப்போதும் யாராவது இருந்து தொலைப்பார்கள் என்பதால் சண்முகத்தின் வீடு இந்த மேட்டருக்கு வசதியாக இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் நங்கநல்லூரில் ஒரு கேசட் கடையில் நானும், மூர்த்தியும் பக்கபலமாக இருக்க சண்முகம் தில்லாக (அவனுக்கு தான் அப்போது மீசை இருந்தது) "சாமிப்படம் இருக்கா" என்று கேட்டான். கடைக்காரர் எங்களை கலாய்ப்பதற்காக "சரஸ்வதி சபதம், திருவிளையாடல், ஆடிவெள்ளி இருக்கு. எது வேணும்?" என்று கேட்டார்.

நான் மெதுவாக மூர்த்தியிடம் "வேணாம் மச்சான். ஏதாவது பிரச்சினை ஆயிடப் போவுது" என்றேன். சண்முகமோ முன்பை விட செம தில்லாக "அண்ணே. நான் கேக்குற சாமிப்படம் வேற" என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். கடைக்காரரும் கடையின் பின்பக்கமாக போய் ஏதோ ஒரு கேசட்டை பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்தார். மூர்த்தி கடைக்காரரிடம், "அண்ணே இது இங்கிலிஷா, தமிழா இல்லை மலையாளமா" என்று கேட்டான். கடைக்காரர் ஏற்கனவே சண்முகத்துக்கு அறிமுகமானவர் போல. "தம்பி! இதுக்கெல்லாம் லேங்குவேஜே கிடையாதுப்பா. இருந்தாலும் சொல்லுறேன் இது இங்கிலிஷ்" என்று சொல்லிவிட்டு கேணைத்தனமாக சிரித்தார்.

கேசட் கிடைத்ததுமே சுமார் 3 மணியளவில் சண்முகம் வீட்டுக்கு ஓடினோம். இந்த மேட்டர் யாருக்கும் லீக் ஆகிவிடக்கூடாது என்று பிராமிஸ் செய்துக் கொண்டோம். மூர்த்தி தான் ஒருவித கலைத்தாகத்துடன் மூர்க்கமாக இருந்தான். கேசட்டை வி.சி.ஆரில் செருகிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தோம். ஏதோ ஆங்கிலப்பட டைட்டில் ஓடியது. "மச்சான் பேரை பார்வர்டு பண்ணுடா" என்று மூர்த்தி அவசரப்பட்டான். அந்த வி.சி.ஆரில் ரிமோட் வசதி இல்லாததால் ப்ளேயரிலேயே சண்முகம் பார்வர்டு செய்துக் கொண்டிருந்தான். திடீரென டி.வி. இருளடைந்தது. வி.சி.ஆரும் ஆப் ஆகிவிட்டது. போச்சு கரெண்ட் கட். அந்த கந்தாயத்து வி.சி.ஆரில் கரெண்ட் கட் ஆனவுடன் கேசட்டை வெளியே எடுக்கும் வசதி இல்லை.

கொஞ்ச நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என்று வெயிட் செய்தோம். வரவில்லை... நேரம் 4.... 4.30 என வேகமாக பயணிக்கத் தொடங்கியது. 5.30ஐ முள் நெருங்கும் வேளையில் கூட கரெண்ட் வருவதாகத் தெரியவில்லை. சரியாக 6 மணிக்கு சண்முகத்தின் அப்பா வேறு வந்து விடுவார். அவர் வந்துவிட்டால் போச்சு. சண்முகம் மாட்டிக் கொள்வான் (உடன் நாங்களும் தான்) மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. நானும் மெதுவாக "சண்முகம். ட்யூஷனுக்கு போனம்டா. டைம் ஆவுது" என்றேன். முகம் வெளிறிப் போயிருந்த சண்முகமோ, "டேய் ப்ளீஸ்டா... கொஞ்ச நேரம் இருடா" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா வரும்போது நானும் அருகில் இருப்பது Safe என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.

5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். சண்முகத்தின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் முருகனை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "முருகா கரெண்ட் வரணும்" "முருகா கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.

5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது. சண்முகம் ஒளிவேகத்தில் இயங்கி கேசட்டை எடுத்து என் பனியனுக்குள் திணித்தான். "மச்சான்! ஓடிப்போயி கேசட்டை கடையிலே கொடுத்துடு, அப்பா வர்றப்போ நான் இங்கே இல்லேன்னா அடி பின்னிடுவார்" என்றான். கேசட்டை செருகிக் கொண்டு என் சைக்கிளை எடுத்தேன். கேட் திறந்துக் கொண்டு சண்முகத்தின் அப்பா உள்ளே வந்தார். "குட்மார்னிங் அங்கிள்" என்று சொல்லிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தினேன். "குட்மார்னிங் இல்லேடா... குட் ஈவ்னிங்டா Fool" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் நல்ல பையன் மாதிரி சண்முகம் ஏதோ எகனாமிக்ஸ் டெபினிஷியனை சத்தம் போட்டு படிக்கும் சத்தம் வெளியே கேட்டது. தப்பித்த நிம்மதியில் மெதுவாக சைக்கிளை வீடியோ கடைக்கு மிதிக்க ஆரம்பித்தேன்.

29 ஜனவரி, 2010

'தீ ' வளர்த்தவன்!


வாழ்வில் மறக்க முடியாத தினங்கள் என்று சில தினங்கள் எல்லோருக்கும் உண்டு. பிறந்தநாள், திருமணநாள், குழந்தை பிறந்தநாள், நெருங்கியவர்களின் மறைவுநாள் என்று முக்கிய தினங்களின் தேதிப்பட்டியல் ஒவ்வொருவருக்கும் வெகுநீளம். சனவரி 29 எனக்கு மறக்கமுடியாத ஒரு தினமாகிப் போனது, உலகத் தமிழர்களை உலுக்கிய அந்த மாபெரும் தியாகத்தால், சோகத்தால். எனக்கு மட்டுமல்ல, பலரும் மறக்க இயலாத தினம் அது. உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள்.

2009இ சனவரி 29 எனக்கு சோம்பலானதாய் விடிந்தது. உடல்நலம் சற்று குன்றியிருந்தேன். பணிக்குச் செல்ல சோம்பலாக இருந்தது. பத்தரை அல்லது பதினோரு மணியிருக்கலாம். என் கைப்பேசி கிணுகிணுத்தது. ஒரு தமிழ் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய அண்ணன் பாலபாரதி அழைத்திருந்தார்.

பதட்டமான குரலில் “டேய் தம்பிஇ ‘பெண்ணே நீ’யிலே வேலை பார்க்குற முத்து செத்துட்டாண்டா!”

“எந்த முத்துண்ணே?” அதிர்ச்சியோடு கேட்டேன். அப் பத்திரிகையில் எனக்கு இரண்டு முத்து தெரியும். ஒருவர் உதவியாசிரியர் முத்துசூர்யா. அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. இன்னொருவர் லே-அவுட்டில் பணிபுரிந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்பாகதான் ஒரு தினப்பத்திரிகையிலிருந்து விலகி வந்து, இங்கே பணியில் இணைந்திருந்தார்.

பாலபாரதி எனக்கு பேசியதற்கு காரணமிருந்தது. அப்போது நான் ‘பெண்ணே நீ’யில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தேன். வாரம் ஒருமுறையாவது அங்கே பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும்.

“எந்த முத்துன்னு எனக்கெப்படி தெரியும். சாஸ்திரி பவன் வாசல்லே ஈழத்தமிழருக்காக தீக்குளிச்சிட்டான். என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு திரும்ப பேசு” என்றார்.

கவுதம் சாருக்கு பேசினேன். அவர் திண்டுக்கல்லில் இருந்தார். பெண்ணே நீ பத்திரிகையின் ஆலோசகர். “ஆமாண்டா. லே-அவுட்டுலே வேலை பார்த்தானே, அவனேதான்! ஒரு ஹெல்ப் பண்ணு. உடனே பெண்ணே நீ ஆபிஸுக்கு போய் ரெக்கார்ட்ஸ்லே அவனோட பயோ-டேட்டா இருக்கும். அதுலே அவனோட போட்டோவும் இருக்கும். அதை எடுத்துட்டுப் போய் மக்கள்டிவியிலே சேர்த்துடு. பிரஸ்காரங்க போட்டோ கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எல்லாருக்கும் கொடுக்கணும். அதுக்கு முன்னாடி மேடம் கிட்டே பேசிடு!” என்றார். மேடம், பத்திரிகையின் ஆசிரியர்.

மேடமுக்கு பேசுவதற்கு முன்பாக பாலபாரதிக்கு பேசினேன். ‘எந்த முத்து’ என்று உறுதி செய்தேன். எனக்குத் தெரிந்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டேன். மேடமிடம் பேசியபோது மறுமுனையில் விசும்பிக் கொண்டிருந்தார். “இந்தப் பையன் இப்படிப் பண்ணிட்டானே? நெனைச்சுக் கூடப்பார்க்கலையே” என்று திரும்ப திரும்ப அழுதவாறே சொல்லிக் கொண்டிருந்தார். கோபாலபுரம் ‘பெண்ணே நீ’ அலுவலகத்துக்கு செல்ல பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

முத்துக்குமார் ‘பெண்ணே நீ’ பத்திரிகைக்கு விண்ணப்பித்தபோது, அவரிடம் நேர்காணல் நடத்தியவர் கவுதம் சார். பயோ-டேட்டாவில் தன்னைப் பற்றி விசாரிக்க ‘நிழல்’ திருநாவுக்கரசு முகவரியை கொடுத்திருந்தார். ‘நிழல்’ அமைப்பு மூலமாக சிறுபடங்களையும், ஆவணப்படங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பணியை செய்துகொண்டிருப்பவர் திருநாவுக்கரசு. ‘நல்ல பையன். சினிமாவிலே இயக்குனர் ஆகணும்ங்கிற கனவோட இருக்கான்’ என்று திருநாவுக்கரசு முத்துக்குமாருக்கு சான்று கொடுத்ததன் அடிப்படையில் பத்திரிகைக்கு முத்து சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2008 நவம்பரில் பணிக்கு சேர்ந்தார் என்பதாக நினைவு. அவரது குடும்பப் பின்னணி அப்போதைக்கு யாருக்கும் பெரியதாக தெரியாது. ‘அவரது அப்பாவோடு ஏதோ பிரச்சினை’ என்ற அளவுக்கு மட்டுமே தெரியும். கொளத்தூரில் இருந்து தினமும் பேருந்தில் பணிக்கு வருவார்.

பத்திரிகை அலுவலகங்கள் பொதுவாக சோம்பலோடு பத்து, பத்தரை மணிக்குதான் விழிக்கும் என்றாலும், காலை 9.30க்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவார். வருகைப் பதிவேடில் ‘கு.மு’ என்று தமிழில் கையெழுத்திடுவார். வேலை தொடங்குவதற்கு முன்பே சீக்கிரம் வர அவருக்கு ஒரு காரணம் இருந்தது. இணையத்தில் செய்தித்தாள்களை வாசிப்பார்.

கூகிளில் வித்தியாசமான விஷயங்களை தேடுவார். ‘நீருக்கு அடியில் சுவாசிக்க என்னென்ன உபகரணங்கள் இருக்கிறது?’ என்பதுபோல வித்தியாசமான தேடுதல்கள். எதையாவது தேடிக்கொண்டேயிருந்த தேடல்மிக்க இளைஞர். மாநிறம், சராசரித் தோற்றம். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட பேசமாட்டார். முதன்முறை பார்ப்பவர்கள் அவரை ஒரு உம்மணாம்மூஞ்சியாகவே கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முழுமையாக வாசிக்க, இங்கே சுட்டவும்....

28 ஜனவரி, 2010

பேரு பெத்த பேரு!!

சினிமாவில் பெயர் வாங்குவது என்பது பெரிய விஷயம். இப்பதிவு அந்த பெயர் பற்றியல்ல, ஒவ்வொருவரையும் அழைக்கும் பெயர் பற்றியது. 'பக்கோடா' காதர், 'ஓமக்குச்சி' நரசிம்மன், 'படாபட்' ஜெயலஷ்மி என்று தமிழ் சினிமா கலைஞர்களின் பெயர்கள் அமைந்த விதம் நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அதுபோன்ற சில காரணப்பெயர்களின் காரணங்களை பார்ப்போமா?

'மவுனம்' ரவி - மவுனம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவர். அதனால் இவரோடு மவுனம் ஒட்டிக் கொண்டது.

'வெண்ணிற ஆடை' மூர்த்தி - இவர் நடித்த முதல் திரைப்படம் என்பதால் வெண்ணிற ஆடை இவர் பெயரின் மீது போர்த்தப்பட்டு விட்டது.

'மேஜர்' சுந்தரராஜன் - மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்ததால் ராணுவத்தில் பணிபுரியாமலேயே மேஜர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது இந்திய இராணுவத்துக்கு தெரியுமா என்று தெரியாது.

'குமரி' முத்து - சொந்தப் பெயர் முத்து. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் குமரி முத்து.

'மலேசியா' வாசுதேவன் - மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆனதால்.

'பக்கோடா' காதர் - மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் எப்போதும் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

'என்னத்த' கன்னையா - ‘நான்’ படத்தில் எப்போதும் "என்னத்தைச் செஞ்சி" என்று எப்போதும் சலித்துக் கொள்ளுவார். இன்றளவும் அவர் இந்த "என்னத்தை" விடவில்லை.

'சூப்பர்' சுப்பராயன் - ஒரு கெத்துக்காக தான் சூப்பரை சேர்த்துக் கொண்டாராம்.

'கனல்' கண்ணன் - இதுவும் ஒரு கெத்துக்கு தான்.

'விக்ரம்' தர்மா - முதலில் பணிபுரிந்த படம்.

'ராம்போ' ராஜ்குமார் - அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்ற ஆங்கில திரைப்பட வரிசையான "ராம்போ" இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ராம்போவாகி விட்டார்.

'காத்தாடி' ராமமூர்த்தி - இவரது உருவத்துக்காக அந்தப் பட்ட பெயர் வழங்கப்படவில்லை. இவர் நடித்த நாடகம் ஒன்றில் பிரபலமான இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அது.

'நிழல்கள்' ரவி - முதல் படத்தின் பெயர்

'தக்காளி' சீனிவாசன் - கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால் இவரது கல்லூரி நண்பர்கள் 'தக்காளி' என்று கிண்டல் செய்வார்களாம். 'இவர்கள் வருங்காலத் தூண்கள்' என்ற திரைப்படத்தில் இவரது கேரக்டரின் பெயரும் 'தக்காளி'.

'ஏ.வி.எம்.' ராஜன் - ஏ.வி.எம். என்பது இவரது இனிஷியல் அல்ல. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'நானும் ஒரு பெண்' படத்தில் அறிமுகமானதால் நன்றி விசுவாசத்துக்காக ஏ.வி.எம்.மை இணைத்துக் கொண்டார்.

'குண்டு' கல்யாணம் - காரணம் வேணுமா?

'ஓமக்குச்சி' நரசிம்மன் - காரணம் வேணுமா?

'மீசை முருகேஷ்' - காரணம் வேணுமா?

'ஆரூர் தாஸ்' - யேசுதாஸ் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மாவட்ட பாசம் காரணமாக 'ஆரூர் தாஸ்' ஆனார்.

'டெல்லி கணேஷ்' - டெல்லியில் இராணுவத்தில் வேலை பார்த்தவர். பேசாம இவருக்கு 'மேஜர்' பட்டம் கொடுத்திருக்கலாம்.

'யார்' கண்ணன் - சக்தி கண்ணன் 'யார்' படத்தை இயக்கியதால் 'சக்தி' போய் 'யார்' ஆனார்.

'ஒருவிரல்' கிருஷ்ணாராவ் - இவருக்கு பத்து விரல்களும் உண்டு. இவர் நடித்த முதல் படத்தின் பெயர் தான் 'ஒரு விரல்'

'கருப்பு' சுப்பையா - ஏற்கனவே திரையுலகில் ஒரு சுப்பையா கொஞ்சம் வெள்ளையாக இருந்ததால் இவர் 'கருப்பு' சுப்பையாவாகி விட்டார்.

'பயில்வான்' ரங்கநாதன்
- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இவரை இப்படித்தான் அழைப்பாராம். ஆளும் பயில்வான் தான்.

'பூர்ணம்' விஸ்வநாதன் - அவரோட இயற்பெயரே இது தாங்க.

கடைசியாக எல்லோருக்கும் தெரிந்தது தான். 'சிவாஜி' கணேசன். 'சத்ரபதி' என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்தார். அந்நாடகத்தையும், அதில் நடித்தவரையும் கண்டு வியந்த தந்தை பெரியார் வி.சி.கணேசனை 'சிவாஜி' கணேசனாக்கினார்.

உங்களுக்கு தெரிந்த பட்டப்பெயர்களையும், காரணங்களையும் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

RSS FEED!

நம் புண்ணியபூமியாம் பாரதத்தில் தோன்றியிருக்கும் இந்து மதத்தின் பெருமைகளை உலகுக்கு பறைஸாற்ற தேஸ விடுதலைக்குப் போராடிய தேஸபக்தர்களால் அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வகுப்புவாத அமைப்பு என்று சில திம்மிக்கள் அவதூறு பரப்பிய நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீமான் மருத்துவர் விண்ஸெண்டு என்பவர் ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்புவாத இயக்கம் அல்ல என்று கூறி விஷச்செடிகளின் வேருக்கு வெந்நீரை ஊற்றியிருக்கிறார். அவர் ஆய்வில் விடுபட்ட சில விஷயங்களை ஆய்வு செய்து நாமும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

- காந்திஜியை கொன்றவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாற்று மதத்தவர். காந்திஜியை அவ்வளவு காலமாக உயிர்போல காத்துவந்த அவரது மெய்க்காவலரான ஸ்ரீமான் கோட்சே அவர்கள் மீது அநியாயமாக திம்மிக்கள் பழியைப் போட்டு தூக்கு மேடைக்கு அனுப்பி விட்டார்கள்.

- 1992ஆம் ஆண்டு திம்மிக்களே பாபர் மஸூதியை இடித்து விட்டு தேஸபக்தி மற்றும் மதநல்லிணக்கத்தைப் பேணும் இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மீது பழிபோட்டு விட்டார்கள்.

- பாபர் மஸூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 3,500 மக்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். வன்முறை, மதக்கலவரம் எதுவும் நம் நாட்டில் நடக்காமல் பதட்டமான அந்தச் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகிம்ஸை தொண்டர்கள் அமைதி காத்தார்கள்.

- ஒரிஸ்ஸாவில் பாதிரியார் ஒருவர் சென்ற ஜீப் தீவிபத்தில் பற்றி எரிந்தபோது அந்த தீயை அணைக்கத் தான் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அருகே சென்றார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டர்கள் முயற்சி செய்தும் தீ அணையாமல் பாதிரியாரும், அவரது குழந்தைகளும் அநியாயமாக பலியானார்கள்.

- குஜராத்தில் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்படுத்திய போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசாபிமானி ஸ்ரீமான் நரேந்திர மோடி தலைமையில் அவர்களை ஸமாதானம் செய்து அமைதியாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

- தமிழகத்தில் கோயம்பத்தூரில் இஸ்லாமிய ஸகோதரர்கள் ஏதோ கோழித்தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டபோது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அமைதிப் படையினர் தலையிட்டு கோவையைக் காத்தார்கள்.

- பிள்ளையார் ஸதுர்த்தி போன்ற விழா நாட்களில் அமைதியான முறையில் தேச நன்மைக்காக, மதநல்லிணக்கத்துக்காக அமைதி பாதயாத்திரை நடத்தி தியாகம் செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.

- இவ்வாறாக மும்பை, கோவை, ஒரிஸ்ஸா, அயோத்தி, டெல்லி, குஜராத் என்று பாரத தேஸமெங்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அமைதிப்பூங்காவாக விளங்குகிறது.

27 ஜனவரி, 2010

பெயர் வரலாறு!


வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார்.

முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெறியில் இருந்திருக்கிறார். எனவே ”குமரன்” என்ற பெயரை சூட்டியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் நின்றிருக்கிறார். பெரியப்பா அப்போது மடிப்பாக்கத்தில் கிருஷ்ணனுக்கு ஒரு பஜனைக்கோயில் கட்டியிருந்தார். எனவே கிருஷ்ணன் பெயரை தான் தன் தம்பி மகனுக்கு சூட்டவேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார்.

மூன்றுத் தரப்பும் பெயர் சூட்டும் விழா அன்று முட்டிக்கொள்ள, யாரோ ஒரு நாட்டாமை பஞ்சாயத்து செய்து, கூப்பிட்டால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவில் “மோகன கிருஷ்ண குமார்” என்று நாமகரணம் செய்துவிட்டிருக்கிறார். பட்டுத்துணி போர்த்தி என்னை அலங்கரிக்கப்பட்ட கூடையில் கிடத்தி 'காஞ்சிபுரம் சிறுணை மோகனகிருஷ்ணகுமார்' என்று பெற்றோர் மூன்று முறை அழைக்க வேண்டும். தான் வலியுறுத்திய பெயரோடு இன்னும் இரண்டும் பெயர் எக்ஸ்ட்ராவாக சேர்ந்துக் கொண்ட கோபத்தில் இருந்த அப்பா “குமரா, குமரா, குமரா” என்று தான் சூட்ட விரும்பிய பெயரை மட்டும் சுருக்கமாக அழைத்திருக்கிறார். பாவம் அம்மா தான் வினோதமான என் பெயரை மூன்று முறை கஷ்டப்பட்டு சொல்லி அழைத்தாராம்.

* - * - * - * - * - * - * - *

எல்.கே.ஜி. சேர்க்கும்போது எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. பள்ளியில் சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அட்டெண்டனன்ஸில் பெயர் எழுதும்போது தான் முழுப்பெயரையும் எழுதமுடியாமல் மிஸ் அவதிப்பட்டார்.

”உன் பெயரை சுருக்கமா சொல்லு!”

சுருக்கம் என்ற வார்த்தைக்கு அப்போது பொருள் தெரியாத நான், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!” என்றேன்.

“அது புல் நேம். சுருக்கமா சொல்லு!”

மறுபடியும், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!”

எரிச்சலாகி, “சரி நானே சுருக்கிடறேன். இனிமே உன் பெயர் எல்.கிருஷ்ணகுமார்”

இந்த பெயர் எனக்கு கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.

* - * - * - * - * - * - * - *

கிருஷ்ணகுமார் என்று பள்ளியில் அறியப்பட்டாலும் கூட வீட்டிலும், தெருவிலும் அவரவர் வாய்க்கு வந்த பெயரை சொல்லி தான் அழைத்தார்கள். பள்ளியில் கூட ஆசிரியர்கள் தவிர்த்து கூட படிக்கும் மாணவ, மாணவிகள் ‘கிருஷ்ணா' என்று சொல்லியே அழைத்தார்கள். எனக்கு ‘கிருஷ்ணர்' அப்போது இஷ்டதெய்வம் என்பதால் ‘கிருஷ்ணா' பிடித்திருந்தது.

அப்பா மட்டும் கடைசி வரை ‘குமரா' என்றே அழைத்து வந்தார். அம்மாவும் சில நேரங்களில் ‘குமரா' என்றும் பல நேரங்களில் 'நைனீ' என்றும் அழைப்பார். ‘நைனீ' என்பதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை :-(

* - * - * - * - * - * - * - *

ரஜினி - கமல் உச்சத்தில் இருந்த நேரம் அது. தீவிர கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரசிகர்களோடு வாய்ச்சண்டையோடு, மல்யுத்தமும் போட்டிருக்கிறேன். சில நேரங்களில் முரட்டுத்தனமாக அடித்துக் கொண்டு சில்மூக்கு உடைந்து ரத்தமும் வந்ததுண்டு. துரதிருஷ்டவசமாக கூட படித்தவர்களில், தெருப்பசங்களில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்.

ரஜினி நன்றாக சண்டை போடுவதால் ரஜினியை அவர்களுக்கு பிடித்திருந்தது. கமல் அட்டகாசமாக காதலித்ததால் கமலை எனக்கு பிடித்திருந்தது. ”கமல் கெட்டவன். பொம்பளைங்களை எல்லாம் கட்டிப் புடிக்கிறான். ரஜினி நல்லவன். அதனாலே தான் கெட்டவங்க கிட்டே சண்டையெல்லாம் போடுறான்” என்று பக்கத்து வீட்டு கோவாலு விளக்கம் அளித்தான். ”சண்டை போட்டதுக்கப்புறமா ரஜினி கூட பூர்ணிமாவை கட்டி புடிச்சிருக்காரே?” என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது.

ரஜினி ஆண்மையின் அடையாளமாகவும், கமல்ஹாசன் பொம்பளைப் பொறுக்கியாகவும் என் சக பசங்களுக்கு தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டுமே கமலை ஹீரோவாக பார்க்கமுடிந்தது ஏனென்று தெரியவில்லை. கமல் ரசிகன் என்பதால் என்னை ரஜினி வெறியர்கள் “கமலா” என்று கூப்பிட்டு வெறுப்பேற்றத் தொடங்கினார்கள். “கமல்” என்று கூப்பிட்டிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும் “லா” சேர்த்து பெண்பாலில் கூப்பிட்டதால் கடுப்பாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு எனக்கு இந்த பட்டப்பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கோடைவிடுமுறையில் அம்மம்மா வீட்டுக்கு போய் வந்ததற்கு பிறகு பசங்களுக்கு இந்த பட்டப்பெயர் மறந்து தொலைத்ததால் தப்பித்தேன்.

* - * - * - * - * - * - * - *

கிருஷ்ணகுமார் என்ற பெயரில் கடைசியில் இருக்கும் ‘குமார்' என்ற பெயரை விளித்து கூட நிறையப் பேர் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் ஓக்கே என்றிருந்தாலும் ‘குமார்' குமாரு ஆகி காலச்சக்கரம் சுழன்று ”கொமாரு” ஆகியபோது வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

* - * - * - * - * - * - * - *

கல்யாணராமன் தான் என்னை “கிச்சா” என்று முதலில் அழைத்ததாக நினைவிருக்கிறது. அவன் அண்ணன் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் ஆத்தில் கிருஷ்ணமூர்த்தியை சுருக்கி “கிச்சா” என்று தான் அழைப்பார்களாம். அதனாலேயே கிருஷ்ணகுமாரையும் “கிச்சா” ஆக்கிவிட்டான் கல்யாணம்.

கல்யாணத்தை தொடர்ந்து நிறைய பேர் ”கிச்சா”வென்று அழைக்க ஒரு மாதிரியாக உணர்ந்தேன். இன்றுவரை பலரும் என்னை ”கிச்சா” என்றுதான் அழைக்கிறார்கள். கிரேஸி மோகன் ஆனந்தவிகடனில் “கிச்சா” என்றொரு கோமாளி கேரக்டரை வைத்து சில காமெடிக்கதைகள் எழுத அந்தப் பெயர் ஏனோ சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. நான் பணிபுரியும் நிறுவனங்களில் மேலதிகாரிகள் கூட ”கிச்சா” என்று கூப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பிடித்த ”கிருஷ்ணா” என்ற பெயரை புதியதாக அறிமுகமாகுபவர்கள் தான் அழைக்கிறார்கள். சில சந்திப்புகளுக்கு பின்னர் அவர்களும் “கிச்சா” என்று கூப்பிட தொடங்கிவிடுகிறார்கள்.

* - * - * - * - * - * - * - *

எட்டாவது வகுப்பு வரை எல்.கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்பட்ட எனக்கு ஒன்பதாவது வகுப்பில் தமிழய்யா ரூபத்தில் சோதனை வந்தது. தனித்தமிழில் பெருத்த ஆர்வம் கொண்ட தமிழய்யா தான் வகுப்பாசிரியர். அட்டெண்டன்ஸ் அவரது பொறுப்பில் வந்தபோது வடமொழி சொற்களை நீக்கி தூயத்தமிழில் எல்லோரது பெயரையும் எழுதினார். அஷோக் “அசோகன்” ஆனான். சுரேஷ்குமார் “சுரேசுகுமார்” ஆனான். எல். கிருஷ்ணகுமாராகிய நான் “இல.கிருட்டிணகுமார்” ஆகி தொலைத்தேன்.

“இல.கிருட்டிணகுமார்” என்று ஆசிரியர் அழைக்கும்போது வேறு யாரையோ அழைக்கிறார் என்று பல நேரங்களில் சும்மா இருந்து கொட்டு வாங்கியது உண்டு. என் அட்டெண்டன்ஸ் பெயரை லேடீஸ் செக்‌ஷனிலும் (லேடிஸ் எல்லாம் ”பி” செக்‌ஷன், நாங்கள் “ஏ” செக்‌ஷன்) சரவணனோ யாரோ பரப்பிவிட, என்னை காதலிக்க திட்டமிட்டிருந்த குமுதா என் தமிழ்ப்பெயரை கேள்விப்பட்டு என்னை வெறுக்கத் தொடங்கினாள்.

* - * - * - * - * - * - * - *

ஒன்பதாவது படிக்கும்போது சந்தானகிருட்டிணன் தான் என்னை ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அவர்களது ஊர் பக்கத்தில் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சொல்லி ”சீன்னா”, ”கான்னா” என்றெல்லாம் அழைப்பார்களாம். அதுபோலவே கிருஷ்ணகுமார் என்று அழைக்க சோம்பேறித்தனப்பட்டு ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அடுத்த இரு ஆண்டுகளுக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் ஆசிரியர்களும் ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். காமோசோமாவாக இருந்ததால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத பெயர் அது.

* - * - * - * - * - * - * - *

பத்தாவது படித்தபோது பாடப்புத்தகங்களை சுமந்ததை விட காமிக்ஸ்களை சுமந்தது அதிகம். ஆர்.டி.முருகன், சுந்தரவேலு, சேதுராமன், ஏ.சுரேஷ்குமார் (கிளாஸில் மொத்தம் 4 சுரேசு) என்று என்னோடு நிறைய காமிக்ஸ் ஆர்வலர்கள் இருந்தார்கள். எக்சேஞ்ச் செய்துகொள்வது, யாரிடமாவது இருக்கும் காமிக்ஸை நான் வாங்கி ஜெராக்ஸ் செய்துகொள்வது என்று காமிக்ஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நிறைய லஞ்ச் நேரத்தில் நடக்கும். புத்தகப் பையில் எப்போதும் பத்து காமிக்ஸ்களாவது இருந்த காலக்கட்டம் அது.

கொஞ்சம் ஒல்லியாக இருந்ததால் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு அப்போது இருந்தது. இந்த ‘ஒல்லி' குறைப்பாடை சரிசெய்ய எதையுமே கொஞ்சம் வேகமாகவும், ஸ்டைலாகவும் வேண்டுமென்றே செய்ய ஆரம்பித்தேன். படிக்கட்டு ஏறும்போது ரெண்டு படிக்கட்டு தாண்டி, தாண்டி குரங்கு மாதிரி வேகமாக ஓடுவேன். நண்பர்களோடு சேர்ந்து நடக்கவே மாட்டேன், ஓட்டம் தான். எல்லாருக்கும் முன்பு ஓடிப்போய் நின்றுகொண்டு அவர்கள் வரும்வரை காத்திருப்பேன். சைக்கிளை வேகமாக கட்டு கொடுத்து, கட்டு கொடுத்து ஓட்டுவேன்.

கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்ததாலோ என்னவோ என் காமிக்ஸ் நண்பர்கள் என்னை “லக்கிலுக்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். “லக்கிலுக்” என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் ஹீரோ. தன் நிழல் செயல்படும் வேகத்தை விட வேகமாக செயல்படும் வீரன். கோமாளி ஹீரோ என்றாலும் ஒல்லியாக, கொஞ்சம் நீளமுகவாட்டில் பார்க்க என்னைப் போல இருந்ததால் அந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். லக்கிலுக் என்பது சில நாட்களில் சுருங்கி “லக்கி” ஆகிவிட்டது.

* - * - * - * - * - * - * - *

மறக்கப்பட்ட இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. பல பெயர்களில் அழைக்கப்பட்டு விட்டதால் இந்தப் பெயர்களில் ஏதேனும் ஒன்று பொது இடங்களில் உச்சரிக்கப்படும் போதெல்லாம் என்னை தான் அழைக்கிறார்களோ என்று ஒருகணம் திரும்பி ஏமாந்து விடுவேன். பலமுறை ஏமாந்தப் பின்னர் இப்போதெல்லாம் என்னையே யாராவது கூப்பிட்டால் கூட “வேற யாரையோ கூப்பிடறாங்க” என்று நினைத்து விடுகிறேன். அக்கப்போர் செய்து பெருசுகள் எனக்கு வைத்த நீளமான பெயரால் எந்த பிரயோசனமும் இல்லை. அந்தப் பெயரை வைத்து யாரும் அழைத்ததுமில்லை. உண்மையில் அந்தப் பெயரால் அஞ்சு காசுக்கும் பிரயோசனமில்லை என்பதே நிதர்சனம்.

”பேர் எடுக்கணும், பேர் எடுக்கணும்” என்பார்கள். எவ்வளவோ பேர் எடுத்துவிட்டேன். இன்னமும் எவ்வளவு பேர் தான் எடுப்பேனோ தெரியவில்லை. இத்தனை பேர் இருப்பதால் உனக்கு என்ன தொல்லை என்று கேட்கிறீர்களா? சில நேரங்களில் யாராவது ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்கும்போது சட்டென்று விடை சொல்லத் தெரியாமல் முழிக்கும்போது நான் படும் அவமானம் உங்களுக்கெல்லாம் பட்டால் தான் தெரியும்!

25 ஜனவரி, 2010

கொள்ளையடிப்பது ஒரு கலை!


மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “மந்திரிகுமாரி”, மெகா ஹிட் திரைப்படமாகும். இதில் தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கலைஞர் எப்படி பட உலகுக்கு வந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.

திருவாரூரில் இருந்து 15 மைல் தூரத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜுன் 3_ந்தேதி பிறந்த கலைஞர், இளமையிலேயே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார். அவருடைய நாடகங்களில் ஒன்றைப் பார்த்தபெரியார், அவரைப் பாராட்டியதோடு, ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.

1949_ம் ஆண்டு தி.மு.கழகத்தை பேறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதில் முக்கியப் பங்கெடுத்துக்கொண்ட கலைஞர், பின்னர் தி.மு.க. தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

இந்த சமயத்தில், கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இந்தப்படத்தை டைரக்டர் செய்தவர் ஏ.எஸ்.ஏ.சாமி. அக்காலத்தில் இவர் புகழ் பெற்ற டைரக்டராகவும், வசன கர்த்தா வாகவும் விளங்கினார். ராஜகுமாரியின் வசனங்களின் பெரும் பகுதியை எழுதியவர் கலைஞர்தான் என்றாலும் “வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி” என்றும், “உதவி மு.கருணாநிதி” என்றும் படத்தில் “டைட்டில்” கார்டு போட்டார்கள்.

கலைஞருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. மனைவியுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். கருத்தாழம் மிக்க வசனங்கள் எழுதியும், படத்தில் வசன கர்த்தாவாக அவர் பெயர் இடம் பெறவில்லை.

இந்த சமயத்தில், கலைஞரின் எழுத்துத்திறமை பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் கவிஞர் கா.மு.ஷெரீப் கூறினார். அதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை_வசன இலாகாவில் சேர்ந்து பணிபுரியுமாறு கலைஞருக்கு தந்தி அடித்தார், டி.ஆர்.சுந்தரம். அந்த அழைப்பை ஏற்று, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கலைஞர் சேர்ந்தார்.

அப்போது, மாடர்ன் தியேட்டர்சார் “சண்டமாருதம்” என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்கள். அதன் பொறுப்பாசிரியராக கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே கலைஞரின் எழுத்துத் திறமையை அறிந்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர கலைஞர் வந்தபோது, அவரை கண்ணதாசன் அன்புடன் வரவேற்றார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த சமயத்தில், “பொன்முடி” படம் முடிவடையும் நிலையில் இருந்தது. அப்படத்தின் பின்பகுதிக்கான கதையை அமைத்துத் தருமாறு கலைஞரை சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதன்படி, பொன்முடி படத்தின் இறுதிப் பகுதியை (கபாலிகர் கூட்டம் வருவது) கலைஞர் அமைத்துத் தந்தார்.

ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கலைஞர் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கலைஞர் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கலைஞர் பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கலைஞர் எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்‌ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கலைஞரின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கலைஞர் கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கலைஞர் கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

(நன்றி : மாலைமலர்)

மூவர்ணக் கொடி!


தாயின் மணிக்கொடி பாரீர் – அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
பள்ளி நாட்களில் பாரதியாரின் இந்தப் பாடலை பாடாதவர் யார்?

ஒரு நாட்டின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருக்கும் பற்று தேசியக்கொடி வணக்கமாக வெளிப்படுகிறது. தேசியக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியபிறகே நம் மத்திய, மாநில அரசுகளின் விழாக்களும், நிகழ்ச்சிகளும் தொடங்குகின்றன. தேசியக்கொடி என்பது நாட்டின் தேசிய இனம், குடிமக்களின் பண்புகள், ஆட்சி, இறையாண்மை உள்ளிட்ட விஷயங்களை குறிக்கின்ற ஒட்டுமொத்த சின்னம்.

மூவர்ண இந்திய தேசியக்கொடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது. இது தேசப்பெருமையின் சின்னம். பல்லாயிரம் பேர் இன்னுயிர் தந்து மூவர்ணக்கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்திருக்கிறார்கள் என்று இந்திய தேசியக்கொடி மரபுச்சட்டம் சொல்கிறது.

தேசியக்கொடியின் நிறங்களையும், நடுவிலிருக்கும் அசோகச்சக்கரம் குறித்தும் அரசியல் சட்ட நிர்ணயசபையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. “காவிநிறம் தியாகத்தையும், பற்றில்லாத தன்மையையும் குறிக்கிறது. தேசத்தின் தலைவர்கள் தங்கள் சுகதுக்கம் மீது பற்றுகொள்ளாது முழு ஈடுபாட்டோடு நாட்டுக்கான கடமைகளை செய்ய இந்நிறம் வலியுறுத்துகிறது. வெள்ளை நிறம் ஒழுக்கத்தின் குறியீடு. இந்நாட்டின் மண்ணின் மீதும், மரங்களின் மீதும் நமக்கிருக்கும் உரிமையை பச்சை நிறம் போதிக்கிறது. இடையில் இருக்கும் நீலநிற அசோக சக்கரம், அசோகர் காலத்து தர்மத்தை நினைவுறுத்துகிறது, இயக்கத்தை முன்வைக்கிறது. அவ்வியக்கம் முன்னேற்றத்தை நோக்கியதாக பயணிக்க வேண்டும்”

இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் ஜனாதிபதி யார்? சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? சுதந்திரநாள் எது? குடியரசுநாள் எது? என்றெல்லாம் கேட்டால் சொடுக்கு போடும் நேரத்தில் சடக்கென்று பதில் சொல்லிவிடுவோம். தேசியக்கொடியை வடிவமைத்தது யார்? என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிகிறதா? இல்லைதானே!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்தது. ’நீங்கள் வேறு, நாங்கள் வேறு’ என்று வெள்ளையர்களுக்கு கோடிட்டுக் காட்ட இந்தியர்களுக்கு ஒரு கொடி தேவைப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா இந்தியர்களுக்காக ஒரு கொடியை உருவாக்க முனைந்தார். அக்கொடியில் ‘வந்தேமாதரம்’ என்ற சொல் வங்கமொழியில் பொறிக்கப்பட்டு இருந்தது.

1906, ஆகஸ்ட் 7ஆம் தேதி, வங்கப் பிரிவினையை எதிர்த்து போராடிய ஒரு போராட்டத்தின் போது முதல் மூவர்ணக் கொடி அறிமுகப்படுத்தப் பட்டது. காவி, பச்சை நிறங்களோடு இடையில் இப்போதிருக்கும் வெள்ளைக்குப் பதிலாக மஞ்சள் நிறம் இடம் பெற்றிருந்தது. இக்கொடி ’கல்கத்தா கொடி’ என்று வரலாற்றில் பெயர் பெற்றது.

கல்கத்தா கொடி பிரபலமடைந்ததை அடுத்து, ஒவ்வொரு பிராந்தியங்களில் இருந்தவர்களும் ஒவ்வொரு மாதிரியான கொடியை உருவாக்க முயன்றார்கள். சுயாட்சிப் போராட்டத்தின் போது பாலகங்காதர திலகர், அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் உருவாக்கிய கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடிகூட சிறியதாக இடம்பெற்றது.

1916ஆம் ஆண்டிலிருந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா என்பவர் எல்லோருக்கும் பொதுவான ஒரு தேசியக்கொடியை உருவாக்க முனைந்தார். மகாத்மா காந்தியிடம் இதற்கான ஆலோசனையை அவர் கேட்டபோது, இந்தியாவின் எழுச்சியையும், தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். சிவப்பு, பச்சை நிறங்களில் ராட்டைச் சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கொடியை வெங்கைய்யா உருவாக்கினார்.

காந்திக்கோ இக்கொடி அனைத்து மதத்தினரையும் பிரதிநிதிப்படுத்துவதாக தோன்றவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு கொடி உருவாக்கப்பட்ட்து. வெள்ளை, பச்சை, சிகப்பு நிறங்களுக்கு நடுவே ராட்டைச் சக்கரம் மூன்று வண்ணங்களிலும் இடம்பெறுமாறு உருவாக்கப்பட்ட இக்கொடி, தற்காலிகமாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் என்றாலே அந்தக் காலத்திலும் கோஷ்டிப் பூசல் அளவுக்கதிகமாக இருந்திருக்கிறது. கொடி விஷயத்திலும் கோஷ்டி சேர்ந்து ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் கொடியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினார்கள். ஆளாளுக்கு தனக்குப் பிடித்த வண்ணத்தில் கொடி அச்சிட்டு தூள்கிளப்பவும் ஆரம்பித்தார்கள். எனவே எந்த கொடி ‘ஒரிஜினல் கொடி’ என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டது.

ஒருவழியாக 1931ஆம் ஆண்டு கராச்சி நகரில் கூடிய காங்கிரஸ் குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களோடு நடுவில் ராட்டைச் சக்கரம் பொருத்தப்பட்ட கொடி ஒன்றினை ஒப்புக் கொண்டது. இன்றைய நம்முடைய மூவர்ணக் கொடிக்கு கிட்டத்தட்ட இக்கொடியே சரியான முன்னோடி எனலாம். இன்றும் இக்கொடியே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியாக அமைந்திருக்கிறது.

இதற்கிடையே இதே வண்ணங்களில் சுபாஷ் சந்திர போஸ் தன்னுடைய தேசியபடைக்கு ஒரு கொடியை உருவாக்கி பரபரப்பு ஏற்படுத்தினார். ராட்டைச் சக்கரத்துக்குப் பதிலாக பாயும் புலி சின்னத்தை பதிந்து உருவாக்கப்பட்ட கொடி அது. இக்கொடி வன்முறையை தூண்டுவதாக கூறி மகாத்மா காந்தியின் தொண்டர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

கடைசியாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இருபத்துநான்கு நாட்களுக்கு முன்பாக இந்திய தேசியக்கொடி முழுப்பரிமாணத்தையும் அடைந்தது. காவி, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை, வெள்ளை நிறத்துக்கு நடுவில் நீலநிறத்தில் அசோகரின் தர்மசக்கரம் என்ற பிங்கலி வெங்கைய்யாவின் வடிவமைப்பே இறுதிவடிவம் பெற்றது. இந்தியா குடியரசாக மாறிய 1950, ஜனவரி 26 அன்று இந்தியாவின் தேசியக்கொடியாக இக்கொடி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டுக்கு முன்புவரை தேசிய விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் தேசியக்கொடியை மக்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. நவீன் ஜிண்டால் என்ற தொழிலதிபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு இப்பிரச்சினையை தீர்க்குமாறு உத்தரவிட்டது. அதையடுத்து 2002 ஜனவரி 26 முதல், நாட்டு மக்கள் கொடியை எல்லா நாட்களிலும் உரிய மரியாதையோடு ஏற்றலாம் என்று இந்திய அரசு அறிவித்தது. தேசியக்கொடிச் சட்டம் 2002 அமல்படுத்தப்பட்டு கொடியை எப்படிப் பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்தக் கூடாது என்று வழிமுறைகள் வரையறுக்கப்பட்டது.

இந்தியத் தேசியக்கொடி ஏதாவது ஒருவகையில் அவமதிக்கப் பட்டாலோ, அல்லது தேசியக்கொடிச் சட்டத்தின் மதிக்காத வகையில் நடந்து கொண்டாலோ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம், இல்லையேல் இரண்டுமே சேர்த்தும் வழங்கப்படும் என்று தேச அவமதிப்புச் சட்டம் சொல்கிறது..

23 ஜனவரி, 2010

சைபர் க்ரைம் - ஒரு விமர்சனம்!


யுவகிருஷ்ணா எழுதிய "சைபர் க்ரைம்" புத்தகத்தை படித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த இந்த கட்டுரைகளை ஒரே கோப்பையில் பருகிய திருப்த்தி கிடைத்தது.

"தொழில்நுட்பம் கத்தி மாதிரி, காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்."

யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கும் இந்த வாசகங்கள் முற்றிலும் உண்மை. பரபப்பான இந்த உலக சூழ்நிலையில், வளர்ந்து வரும் சைபர் முன்னேற்றங்களுக்கு மனிதன் அடிமையாகி வருகின்றான். இன்டர்நெட் பயன்படுத்தும் வெகுஜென மக்களில் பலருடைய இரகசியங்கள் குறைந்த பட்சம் அரைநிர்வாணப் படுத்த படுகிறது, இதனை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எனினும் பிரச்சனை என்று வரும்போது புலம்பி அழுவதில் பலன் ஏதும் இல்லை. இத்தகைய பிரச்சனைகளை ஆராய்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த புத்தகம். இன்று கத்திரிக்காய் வாங்குவதில் தொடங்கி, மனிதனின் "காரக்டரை" அறிந்துகொள்வது வரை நாம் அனைவரும் நாடுவது கூகிள் சேவை, இவ்வாறு அனைத்தையும் தேடும் வசதி வந்துவிட்ட சூழ்நிலையில், நாம் நம்மை பற்றி எத்தகைய விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டால், அசிங்கபடுவதையோ அல்லது ஏமாறுவதையோ தவிர்க்கலாம் என்பது இப்புத்தகம் நமக்கு தரும் பாடம்.

சில வருடங்களுக்கு முன்னால் பெற்றோர்கள் "என் புள்ள இங்கிலீஷ்ல தான் பேசுது" என்று கூறி சந்தோஷ பட்டனர், தற்போது எல்லா பெற்றோரும், "என் புள்ள இன்டர்நெட்லதான் முழுநேரமும் கெடக்குது" என்று கூறி பெருமிதம் அடைகின்றனர். இதற்கு தேவையான அத்தனை வசதிகளையும் (தனி அறை உட்பட) செய்து தருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை, எனினும் தங்கள் பிள்ளைகள் இந்த சைபர் உலகத்தில் உண்மையில் என்ன செய்கின்றனர் என்பதனை கண்காணிக்க தவறும் போது, குழந்தைகள் "தவறும்" செய்ய தொடங்குகிறார்கள். குழந்தைக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க விளையும் அத்துனை பெற்றோரும் சற்று இந்த புத்தகத்தை படித்து வைத்துக்கொள்வது நல்லது.

இவ்வுலகில் உலவும் பல நுன்கருவிகளை பயன்படுத்த தெரிந்த, அனுபவம் மிகுந்த பலரும், சில நேரம் சில அறிவுரைகளை ஏற்க மறுத்து பின்பு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம், அறிவுரை கூறுபவர்கள் அதற்கான சான்றுகளை கூற தவறுவதால், பிறர் அதனை அலட்சியப்படுத்துகின்றனர். இதனை நன்கு அறிந்தவராக செயலாற்றி இருக்கிறார் யுவகிருஷ்ணா! "இதை செய்யாதே!" என்று கூறி நிறுத்தாமல் "இப்படித்தான் ஒருத்தன் செஞ்சு மாட்டிகிட்டான்" என்று புரிய வைத்திருக்கிறார். மகராசன் படத்தில் வரும் கவுண்டமணி-செந்தில் காமெடியில், "இப்படித்தான் எங்க ஊர்ல ஒருத்தன் இருமி இருமி, நுறையீரல் வெளிய வந்து விழுந்துருச்சி" என்று பொய் சொல்லாமல், நிகழ்வுகளை உண்மையான வழக்கு ஆதாரங்களால் யுவகிருஷ்ணா விளக்கியுள்ளார். சிறிய சில் முதல், செல், கம்ப்யூட்டர் வரை எத்தகைய ஆபத்துகள் இருக்கின்றன என்பது அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

கட்டற்ற மென்பொருள் மற்றும் ஒபன் சோர்ஸ் மென்பொருள்களின் மூலம் சில பாதுகாப்பு அம்சங்களை சாதிக்க முடியும் என்பதனை கூற தவறியிருந்தாலும், எப்படி நம்மை பாதுகாப்பது என்பதனை எளிய தமிழில் ஆங்காங்கே நகைச்சுவை தூவி மிகச் சிறப்பாக யுவகிருஷ்ணா எழுதி இருக்கிறார். "சைபர் க்ரைம்" - "பூஜ்ய குற்றம்" என்று மொழிபெயர்த்த யுவகிருஷ்ணாவின் இலக்கிய ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை :)

காலத்துக்கேற்ப மாற முயலும் அனைவரும் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அருமை செய்திகள் பொதிந்த இந்த புத்தகத்தை, ஒரு கோப்பை கொட்டை வடிநீராக மாற்றி, பருக கொடுத்த கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி!

(நன்றி : ஸ்டைல்சென்)

இணையத்தில் இப்புத்தகத்தை வாங்க : http://nhm.in/shop/978-81-8493-266-9.html

பீஷ்மா!


கடந்த சில குடியரசுத் தினங்களில் தொலைக்காட்சிகளில் நீங்கள் கண்டிருக்கலாம். டெல்லியில் வழக்கமாக நடக்கும் ராணுவ அணிவகுப்பில் ஒய்யாரமாக வீறுநடை போடும் பீஷ்மா பலரின் கண்ணையும், கவர்த்தையும் கவர்ந்துவருகிறார். மகாபாரத பீஷ்மரைப் போலவே கம்பீரமும், ஆளுமையும் கொண்டவர் இந்த பீஷ்மரும். போர்முனையில் இவர் ஒரு வெல்லமுடியாத சிங்கம். வேதியியல், உயிரியல், அணு ஆயுதங்கள் இவரின் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு எதிரிகளை களத்தில் ஓட ஓட விரட்டி, புறமுதுகிட்டு சிதறி ஓடச்செய்யப்போகும் இவர்தான் இந்திய ராணுவத்தின் இன்றைய ஹீரோ.

யார் இந்த பீஷ்மா?

இதுவரை இந்திய ராணுவத்துக்கு டாங்கிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. அல்லது உதிரிபாகங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பீரங்கி இந்த பீஷ்மா. ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் மட்டும் பெறப்பட்டிருக்கிறது. உலகளவில் போர்முனைகளில் பயன்படுத்தப்படும் டாங்கிகளில் இதுதான் லேட்டஸ்ட்.

இரவுகளிலும் துல்லியமாக போரிடவும், குண்டுகளை சுடும் அதே குழாயிலேயே குறிபார்த்து ஏவுகணைகளை ஏவவும் பீஷ்மாவில் வசதிகள் உண்டு. அணு ஆயுதங்களில் வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சினை தாங்கும் சக்தி பீஷ்மாவிடம் இருப்பதால், இந்த டாங்கியை இயக்கும் குழுவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக்குறைவு என்பது தனிச்சிறப்பு. அவசியம் தேவைப்படும் காலங்களில் போர்முனைகளுக்கு மின்னல்வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது இந்த பீஷ்மா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த டாங்கி, இந்திய ராணுவ வரலாற்றில் தனியிடத்தைப் பிடிக்கிறது. ஒரு பீஷ்மாவை உருவாக்க இந்தியாவுக்கு ஆகப்போகும் செலவு ரூபாய் பதினான்கு கோடி என்றால் இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு தலா 100 பீரங்கிகளை உருவாக்க சென்னை ஆவடி டாங்க் தொழிற்சாலை தயார்நிலையில் இருக்கிறது. 2020ஆம் ஆண்டு வாக்கில் 1,600 பீரங்கிகளோடு தனது தரைப்படையை உலகின் தன்னிகரற்ற, யாராலும் வெல்லமுடியாத படையாக உருவாக்க இந்தியா பெரும் முனைப்பு காட்டி வருகிறது.

ரஷ்யாவின் டி-90 டாங்கிகளின் தொழில்நுட்ப அடிப்படையில் பீஷ்மா டாங்குகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய ராணுவம் இதுவரை பயன்படுத்தி வந்த அர்ஜூன்ரக டாங்குகளை தயாரிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே குறைந்தகால அவகாசத்தில் அதிக டாங்குகளை தயாரிக்கும் சுலபமான – அதே நேரம் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை இந்திய ராணுவம் தேடிவந்தது. இடையில் உக்ரைன் நாட்டிலிருந்து 320 டி-80 யூடி ரக டாங்குகளை வாங்க பாகிஸ்தான் முடிவெடுத்ததால் இந்திய ராணுவத்துக்கு சக்திவாய்ந்த டாங்குகளை உடனடியாக உருவாக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.

எனவே கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் இரண்டு டாங்கி மாடல்களை (டி72 மற்றும் 90) வாங்கி பாலைவனப் பகுதிகளில் பரிசோதனை நடத்தியது. இதில் டி72 குறித்த திருப்தி இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு சுத்தமாக இல்லை. வெப்பத்தை தாங்கக் கூடிய பலம் அந்த டாங்கிக்கு இல்லை. டி90 டாங்குகளிலும் சில அதிருப்திகள் இருந்தது. தேவையான மாற்றங்களுக்கான தொழில்நுட்ப யுக்திகளை ரஷ்யாவிடம் இருந்து பெற்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டி90 ரக பீரங்கிகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. பீஷ்மா என்று பெயரிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் அதிநவீன டாங்கியின் கதை இதுதான்.

பாகிஸ்தான் தற்போது உபயோகிக்கும் டி80 யூடி ரக டாங்குகளை விட பீஷ்மாவில் அதிகவசதிகள் உண்டு. ஏவுகணைகளில் இருவகை உண்டு. இந்த இருவகை ஏவுகணைகளையும் பீஷ்மாவில் ஏவமுடியும். மாறாக டி80 யூடியில் ஒருவகை ஏவுகணையை மட்டுமே பயன்படுத்தலாம். பாதுகாப்பு அடிப்படையில் நம் பீஷ்மா தலைசிறந்தது. எதிரிகளால் சுலபமாக வீழ்த்திவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கனகச்சிதம். திட்டமிட்டபடி பீஷ்மா டாங்குகள் சரியான நேரத்தில் தயாரிக்கப்படுமானால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தரைப்படையை வெல்வது என்பது வல்லரசுகளுக்கே சாத்தியமில்லாததாக ஆகிவிடும்.

22 ஜனவரி, 2010

சங்கராச்சாரியார்!


எதிர்பார்த்தபடியே புதுவையில் நடந்து வரும் சங்கரராமன் கொலைவழக்கில் அடுத்தடுத்து சாட்சிகள் பல்டியடித்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக முக்கிய சாட்சியான ரவிசுப்பிரமணியம் ‘கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று நேற்று பல்டியடித்து விட்டார்.

இச்சூழலில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் முன்பு எழுதிய ஒரு சிறுநூல் நினைவுக்கு வருகிறது. அந்நூலில் ‘வரலாறு நெடுகிலுமே சாதாரண மக்கள் இயல்பாக உணரக்கூடிய உண்மையின் தரிசன்ங்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன என்ற வெளிச்சக்கீற்று விழுதுகளாய் எனக்குள் இறங்கியது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இறங்கிய வெளிச்சம் மீண்டும் இருளுக்குள் அமிழத் தொடங்கியிருக்கிறது. அன்றே சொன்னார் அண்ணா, ‘சட்டம் ஒரு இருட்டறை’.

2004, நவம்பர் 11 கைதுக்குப் பிறகான சில சம்பவங்களை மீள்பார்வை செய்துப் பார்க்கவே இப்பதிவு. சங்கராச்சாரியார் கைதின்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளை தனது துல்லிய ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார் சாவித்திரி கண்ணன். இவர் துக்ளக்கில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் என்பது இங்கே தேவையில்லாத, ஆனால் அவசியம் குறிப்பிட வேண்டிய ஒரு தகவல்.

ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவன் என்பவர்கள் மீது ஏற்கனவே கொலைதாக்குதல் முயற்சிகள் நடத்தியவர், பாலியல்ரீதியான பலவீனங்களை கொண்டவர், கூலிக்கு கொலை செய்யும் அடியாள் கூட்டத் தலைவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகின. பல்லாண்டுகளாக திரையிட்டு மறைக்கப்பட்ட புனிதம் வெட்டவெளிச்சத்துக்கு வந்து சிதைந்துப் போனது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களும், கொலையான சங்கரராமன் மீதான அனுதாபமும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, கைதுக்குள்ளானவரின் அந்தஸ்து பற்றியும், கைது செய்யப்பட்ட முறை பற்றியுமே அதிகமாக பேசப்பட்டது.

இத்தனைக்கும் பாரம்பரியமிக்க கோயிலில், இந்து நம்பிக்கையில் ஆழ்ந்தப் பற்று கொண்ட வைதீக பிராமணர் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் கள்ள மவுனம் காத்தன. இந்துமத எதிர்ப்பு இயக்கமான திமுகதான் அந்த ஏழை பிராமணரின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று மதத்தலைவரை கைது செய்யலாமா என்று கேணைத்தனமாக கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்துமஸ் வரும் வரை போலிஸ்காரர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் போலும். அயோத்தியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மத அரசியல் கட்சியான பிஜேபி ஒரே நாளில் ‘இஸ்லாமியர்களுக்கு மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், எங்களுக்கு காஞ்சி’ என்று கொதித்து எழுந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா கிறிஸ்தவ மதத்தவர் என்பதாலேயே இந்துமதத் தலைவரை அவமானப்படுத்துகிறார்கள் என்று புரளி பரப்பியது.

ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களின் உண்மை முகத்தை அறிய ஜெயேந்திரர் கைது துணைபுரிந்தது. “பத்திரிகைகள் பொறுப்பற்று எழுதுகின்றன. மடிப்பத்திரிகைகளுக்கும், மஞ்சள் பத்திரிகைகளுக்கும் இப்போது வித்தியாசம் தெரியவில்லை” என்று கொதித்து எழுந்தார். மடிப்பத்திரிகைகள் என்றால் பிராமணப் பத்திரிகைகளாம். அப்பட்டமான ஜாதியப் பார்வை இவ்வளவு நாட்களாக அறிவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக பாவனை காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்தது என்பதை மக்கள் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள்.

அந்தப் புத்தகத்தில் வலுவான ஒரு கருத்தை தனது சுயகருத்தாகவும் சாவித்திரி கண்ணன் சொல்லியிருந்தார். “சங்கராச்சாரியார்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”

இன்று விசாரணை போகும் போக்கைப் பார்த்தால், ‘இந்து மதத்தின் கதி அதோகதிதான்’ என்று தோன்றுகிறது. கையும் களவுமாக பிடிபட்டிருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் ‘அவர்களின்’ லாபி மிகச்சிறப்பாகவே செயல்படும் என்பது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிரூபணமாகியிருக்கிறது. வழக்கிலிருந்து விரைவில் விடுவிக்கப்படப் போகும் ஜெயேந்திரருக்கு நமது வாழ்த்துகள்!

நூல் : சங்கராச்சாரியார்களும், இந்துமதமும் - சிதைக்கப்பட்ட உண்மைகள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
பக்கங்கள் : 40
விலை : ரூ.10/-
வெளியீடு : மாணிக்க சுந்தரம் வெளியீட்டகம்,
522, 2வது மேற்கு தெரு, காமராஜர் நகர்,
திருவான்மியூர், சென்னை-600 041.

21 ஜனவரி, 2010

சாமியார் டி.வி.டி!


இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த சினிமாக்காரர்கள் திருட்டு வி.சி.டி, திருட்டு வி.சி.டி. என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. வி.சி.டி. என்ற தொழில்நுட்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப் போய்விட்டது. இனிமேல் 'திருட்டு டி.வி.டி' என்று சரியாக உச்சரிக்குமாறு சினிமாக்காரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஜக்குபாய் விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த கண்டனக்கூட்டத்தில் ‘நம்ம ஆளுங்கதான் இதை செய்யுறாங்க. அவங்களை கண்டுபிடிக்கணும்!' என்று ரஜினி கூறியதற்கு, பெருத்த கண்டனங்கள் சினிமாத் துறையில் எழுந்திருப்பதாக தெரிகிறது. யாராவது, எப்போதாவது தப்பித்தவறி உண்மையை பேசிவிட்டால் இதுபோல கண்டனங்கள் எழுவது சகஜம்தான். சொன்னது ரஜினி என்பதால் வெளிப்படையாக யாரும் சண்டை போடாமல், உள்ளுக்குள் நொணநொணவென்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் படம் வெளியானதுமே, அப்படத்தின் திருட்டு வீடியோ கேசட் வெளிவந்துவிட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வரை முட்டி மோதி சோர்ந்துவிட்டார் கமல். அதன்பிறகு இந்த திருட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் அதிசமீபத்திய தொழில்நுட்பங்களாக இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ என்ன செய்தாலும் இதைத் தவிர்க்க முடியாது. இதையும் தாண்டி எப்படி நாம் முன்னேறுவது என்பதைதான் சிந்திக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக கரடியாக கத்திக் கொண்டிருக்கிறார். யாராவது கேட்டால்தானே?

ஜக்குபாய் படத்தின் பிரிண்ட் இணையத்தில் வந்தபோதே பார்த்தேன். FX COPY என்ற வாட்டர் மார்க்கோடு இருந்தது. பின்னணி இசை சேர்க்கப் படுவதற்கு முன்பாக போஸ்ட்-புரொடக்‌ஷன் நிலையில் யாரோ ஆட்டையை போட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின் வேலையாக தான் இது இருக்க முடியும். ரஜினி இதைத்தான் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் லேட்டஸ்ட் படம் ஒன்று ஊத்திக் கொண்டது அல்லவா? அப்படத்தின் திருட்டு டி.வி.டியும் ரிலீஸ் ஆன நாளிலேயே பல நகரங்களில் தாராளமாக கிடைத்தது. வெளியூர் தியேட்டர்களுக்கு பயணமான பிரிண்ட் ஒன்றினை, நடுவழியில் ஆட்டையை போட்டு அடித்திருக்கிறார்கள். இது ரஜினிக்கும் தெரியும் என்பதால்தான் ‘முதலில் நம்ம ஆளுங்கள பிடிங்க' என்று சொல்லியிருக்கிறார்.

திருட்டு டி.வி.டி. தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு பாண்டிச்சேரி புள்ளி, ஜக்குபாய் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வார இதழில் வாசித்தேன். தயாரிப்பு நிலையிலேயே இதை கிள்ளி எறிய முயற்சிக்காமல், பதினைந்துக்கும் இருபதுக்கும் விற்றுக் கொண்டிருக்கும் ஏழை வியாபாரிகளின் மென்னியை பிடிப்பது எந்தவகையில் சரியான செயல் என்று தெரியவில்லை. திருட்டு டி.வி.டி.க்கு எதிராக பஞ்ச் வசனங்களை தங்கள் படங்களில் வைக்கும் இயக்குனர்களும், காமெடி காட்சிகளிலும் திருட்டு டி.வி.டி.க்கு எதிராக மெசேஜ் சொல்ல நினைக்கும் நடிகர்களும் முதலில் தங்கள் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகள் யாரென கண்டறிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

* - * - * - * - *

தமிழ்நாட்டின் இப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட் திருட்டு டி.வி.டி. எது தெரியுமா? வேட்டைக்காரன் என்று நினைத்தால் நீங்க ரொம்ப நல்லவ்வ்வர்ர்ரூ.

‘தேவநாதன் ஹிட்ஸ்' என்ற பெயரில் இருபத்தைந்து ரூபாய்க்கு பஜார்களில் கூவி கூவி விற்கப்படும் டி.வி.டி. தான், இந்திய திருட்டு டி.வி.டி. வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. வேட்டைக்காரன் டி.வி.டி. விற்பவர்களை மடக்கிப் பிடிக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மட்டும் இந்த டி.வி.டி. இன்னமும் மாட்டவில்லை என்பதில் எனக்கு எந்தவித ஆச்சரியமுமில்லை. ஏனெனில் நம் போலிஸார் ஸ்காட்லாந்துயார்டுக்கு திறமை அடிப்படையில் சவால் விடுபவர்கள்.

இந்த டி.வி.டி. சந்தைக்கு வந்த வரலாறு உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். கோயில் கருவறை உள்ளிட்ட பல இடங்களில் பக்தைகளுக்கு குருக்கள் ஆசிகள் வழங்கிய காட்சிகளை, அவரே அவரது செல்போனில் (நல்ல ஆங்கிளில்) படமாக்கியிருக்கிறார். ஒருமுறை செல்போன் ஏதோ மக்கர் செய்ய, அருகிலிருக்கும் சர்வீஸிங் சென்டர் எதிலோ பழுது பார்க்கத் தந்திருக்கிறார். பழுது பார்த்த மெக்கானிக், போனில் பதிவாகியிருந்த ‘சரக்குகளை' மொத்தமாக உருவி கைமாவாக்கியிருக்கிறார்.

யாரோ ஒரு திருட்டு டி.வி.டி. மொத்த வியாபாரிக்கு கொழுத்த விலைக்கு சரக்கு கைமாற்றப்பட்டு, அவர் மூலமாக சந்தைக்கு வந்தது. சந்தையில் வாங்கிய பக்தர் ஒருவர், கோயில் கருவறையிலேயே கும்மாங்குத்தா என்று பதறிப்போனார். வார இதழ் ஒன்றுக்கு அந்த டி.வி.டி.யின் காப்பியை அனுப்பிவைக்க, அதன்பிறகே எல்லாம் வெட்டவெளிச்சம் ஆனது என்பது வரலாறு.

சமீபத்தில் தோழர் ஒருவர் தீவிரக் கலையார்வம் காரணமாக இந்த டி.வி.டி.யை பர்மா பஜார் பகுதியில் வாங்கியிருக்கிறார். வீட்டில் அனைவரும் தூங்கியப் பிறகு அதிகாலை ஒரு மணிக்கு பூனைநடை போட்டு எழுந்து, டி.வி.யை ம்யூட் செய்துவிட்டு போட்டுப் பார்த்திருக்கிறார். துரதிருஷ்டவசமாக அது தேவநாதன் ஹிட்ஸ் ஆக இல்லாமல், பக்திப்பட பாடல்களின் எம்.பி.3 வகை டி.வி.டி.யாக இருந்திருக்கிறது. சவுண்டு வைத்துப் பார்த்ததில் ‘பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸாம்!'. பெருத்த சோகம் அடைந்த அவர் அன்றிரவு, குன்றத்திலே குமரனோடு கொண்டாட்டமாக இருந்திருக்கிறார்.

மறுநாள் டி.வி.டி. விற்ற கடைக்குப் போய் புகார் செய்திருக்கிறார். கடைபையனோ ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறான். “சார் வேற ஒரு கஸ்டமருக்கு எடுத்துட்டு வந்த டி.வி.டி. சார் அது. மாத்தி கொடுத்துட்டேன் போலிருக்கு”. நண்பருக்கு சரியான டி.வி.டி. கிடைத்துவிட்டது. ஒருவாரமாக தேவநாதன் புகழை காண்பவர்களிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார். தேவநாதனின் காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்பது இப்போது அவருடைய ஆசை.

அவர் காலையாவது அல்லது வேறு எதையாவது தொட்டு கும்பிட்டுக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை. என்னுடைய கவலையெல்லாம் பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸுக்கு பதிலாக தேவநாதன் ஹிட்ஸை தவறுதலாக எடுத்துச் சென்ற ஆன்மீக அன்பரைப் பற்றிதான். ஒன்று, அந்த கலைப்படைப்பை அவர் தெரியாத்தனமாக பக்தி பாடல் என்று நினைத்து குடும்பத்தினர் மத்தியில் போட்டுப் பார்த்து அவமானப்பட்டிருக்கலாம். அல்லது தேவநாதனால் ஈர்க்கப்பட்டு, இரண்டாம் தேவநாதனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.

20 ஜனவரி, 2010

க்ரீன் டெக்னாலஜி : ஒரு சுருக்கம்!


‘க்ரீன் டெக்னாலஜி’ என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.

எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.

எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.

இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்றவேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால்தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார்தான் தாங்கிவிட முடியும்?

எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!

19 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் (2010)


பொங்கலுக்கு முன்பாக திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. கோயம்பேட்டில் இருந்து அரசுப்பேருந்து. பூமோ, தூமோ ஏதோ ஒரு பிரத்யேக டிவி சேனல். குணா ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஐம்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டதால் அசுவாரஸ்யமாக ஹெட்போனை காதில் மாட்டினேன். ‘கரிகாலன் காலைப்போல...’ வேட்டைக்காரன் அலறினான்.

ஐந்துமுறைக்கும் மேலாக ‘மந்தரிச்ச உதடை’ திரும்ப திரும்ப கேட்டு, அலுத்துப் போனதால் ஹெட்போனை கழட்டினேன். செஞ்சியின் நெரிசலான போக்குவரத்தில் பேருந்து ஊர்ந்துக் கொண்டிருந்தது. எனக்கு பின்சீட்டில் ஒரு கிராமத்து இளைஞர், தன் புதுமனைவியிடம் வியப்பான குரலில், சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே கமல் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!”

2029லும் யாராவது என்னைப் போல திருவண்ணாமலைக்கு பேருந்தில் போகலாம். அப்போதும் யாராவது கிராமத்து இளைஞர், “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே செல்வராகவன் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!” என்று வியப்படையலாம்.

காலத்தை தாண்டி நினைவுகூறத்தக்க திரைப் படைப்புகள் தமிழில் குறைவு. ஆயிரத்தில் ஒருவனையும் தயங்காமல் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கமல்ஹாசனின் படங்கள் வெளியாகும் நேரத்தில் வசூல்ரீதியான வெற்றியை பெரும்பாலும் அடைவதில்லை. ஆயினும் பத்து, இருபது ஆண்டுகள் கழித்து அடுத்துவரும் தலைமுறையினர் சிலாகிக்கிறார்கள். செல்வராகவனும் சிலாகிக்கப்படுவார்.

* - * - * - * - * - *

புதுமைப்பித்தன் ஒரு மொக்கை எழுத்தாளர் என்று அடிக்கடி சாரு எழுதுவதுண்டு. ‘அப்படியென்ன மொக்கையாக எழுதியிருக்கிறார்?’ என்று அவரை வாசிக்க சாருவே தூண்டுகோலாக இருந்தார். வாசித்தபிறகே “புதுமைப்பித்தன் ஒரு லெஜண்ட், அவரை யாருடனும் ஒப்பிட இயலாது!” என்பது புரிந்தது.

சாரு யாரையாவது எதிர்மறையாக விமர்சித்தாலும் கூட, அவரது வாசகர்களுக்கு நல்லதையே செய்கிறார். நல்ல அறிமுகத்தை தருகிறார். சாரு ஆபத்தற்றவர். இன்னொரு எழுத்தாளர் நல்லமுறையிலேயே யாரையாவது அறிமுகப்படுத்தினாலும் கூட, அவர் ஆபத்தானவர் என்று உள்ளுணர்வு அடித்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் உள்ளுணர்வே வெல்கிறது.

புதுமைப்பித்தனை வாசித்த யாருமே கபாடபுரத்தை மறக்க முடியாது. ஒரு மேஜிக் கலைஞனின் நுணுக்கத்தோடு, அவர் கவனமாக இழைத்து, இழைத்து நெய்த படைப்பு. ‘மேஜிக்கல் ரியலிஸம்’ என்பதையெல்லாம் புதுமைப்பித்தன் அறிந்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் அப்படைப்பு அச்சு அசல் ‘மேஜிக்கல் ரியலிஸ’ கூறுகளைக் கொண்டது.

கபாடபுரம் வாசித்ததில் இருந்தே, புதுமைப்பித்தனின் வர்ணிப்பு என்னை தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தது. அவரது எழுத்தை காட்சியாக, மிகச்சரியாக கற்பனை செய்ய இயலாதது குறித்த என்னுடைய திறமைக்குறைவை நினைத்து அடிக்கடி நொந்துகொள்வேன். இதனாலேயே அப்படைப்பை அடிக்கடி மீள்வாசிப்பும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. கபாடபுரம் மாதிரியான தொல்லையை தந்த இன்னொரு படைப்பு ஜெயமோகனின் டார்த்தீனியம். மேஜிக்கல் ரியலிஸத்தின் தன்மையே வாசகனை இவ்வாறு தொந்தரவுக்கும், தொல்லைக்கும் ஆளாக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நீண்டகால தொந்தரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’. கபாடபுரத்துக்கு ஒப்பான ஒரு கனவு நகரத்தை கண்முன்னே காட்சியாக விரித்ததில் ஆயிரத்தில் ஒருவன் குழு அபாரவெற்றி கண்டிருக்கிறது.

* - * - * - * - * - *

இப்படம் வெளியான இரு தினங்களுக்குளாகவே பெற்றிருக்கும் விமர்சனங்கள் பலவும் நகைக்க வைக்கிறது. இதுவரை என்னவோ எல்லாப் படத்துக்கும் தமிழ் ரசிகன் ‘லாஜிக்’ பார்த்து ரசித்தது போலவும், இப்படம் லாஜிக்குகளை மீறியிருப்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்படுவது வேடிக்கையானதும் வினோதமானதுமான ஒரு விஷயம். மேஜிக்குக்கு லாஜிக் கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் ஒரு மேஜிக் கலைஞன்.

படத்தின் இரண்டாம் பாதி, ஈழத்தில் நடந்த கடைசிக்கட்ட சோகங்களை உருவி வணிகமாக்கியிருக்கிறது என்ற விமர்சனமும் அர்த்தமற்றது. படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்துக்கு முன்பே படமாக்கப்பட்டு விட்டது என்பதை செல்வராகவனே பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

* - * - * - * - * - *

தொழில்நுட்பரீதியாக ஏகப்பட்ட விஷயங்களை முதன்முறையாக தமிழில் செல்வராகவன் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் கிளாடியேட்டர் பாணியில் நடைபெறும் அந்த மைதான சண்டைக்காட்சி.

சுற்றிலும் ஆயிரமாயிரம் பார்வையாளர்கள். ஒரு தடியன் சங்கிலியில் இரும்புக் குண்டை கட்டி சுழற்றி, பலரின் தலைகளை சிதறவைக்கிறான் என்பதை சுலபமாக எழுத்தில் வடித்துவிடலாம். தத்ரூபமாக காட்சியாக்கிருப்பதில், ஒரே ஓவரில் எட்டு சிக்ஸர் (ரெண்டு பால் நோ பால்) அடிக்கிறார் செல்வா.

* - * - * - * - * - *

எல்லோரும் சொல்வதைப் போல ரீமா கலக்கியிருக்கிறார். அனாயசமாக இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சுடுவதில் தொடங்கி, நீருக்குள் டைவ் அடிப்பது, ஓடுவது, ஒரு நொடி நகைத்து மறுநொடி கடுத்து என்று அதகளம். ரீமாவின் உழைப்புக்கு நிஜமாகவே அவர் அணிந்திருக்கும் லெதர் டவுசர் கிழிந்திருக்க வேண்டும். ஆண்ட்ரியா அழகு. ஊட்டிரேஸில் ஓடும் உயர்ஜாதிக் குதிரை.

கார்த்தி ஆரம்பக்காட்சியில் இருந்தே அட்டகாசம். ‘பேலன்ஸ் அமவுண்டை கொடுத்துடுங்க!’ என்று அழுதுக்கொண்டே கேட்கும் காட்சியெல்லாம் கலக்கல். இரவில் இரண்டு ஃபிகரும் கட்டிக்கொண்டு தூங்க, அவர் முழிக்கும் முழி ‘ஏ’ க்ளாஸ். பார்த்திபனின் பாத்திரம் இதுவரை தமிழில் இல்லாதது.

* - * - * - * - * - *

ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான். விரைவில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறான். இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்!

18 ஜனவரி, 2010

ஆலத்தூர் காந்தி!


96ஆம் ஆண்டு காலவாக்கில் நடந்த விஷயங்கள் அவை.

திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? வழிநெடுக நிறைய செங்கல்சூளைகளை கண்டிருக்கலாம். அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இந்த சூளைகளில் வேலை பார்ப்பார்கள். அவற்றில் பாதி பேர் குழந்தைத் தொழிலாளர்கள். அருகிலிருந்த சேவாலயா போன்ற அமைப்புகள் இக்குழந்தைத் தொழிலாளர்களை மீண்டும் கல்வி கற்கச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

பிரச்சினை இப்படியிருக்க, செங்கல் சூளைகளால் அடுத்து ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அது சுற்றுச்சூழல்.

சூளைகளை எரியவைக்க அதுவரை விறகுகளை பயன்படுத்தி வந்த முதலாளிகள், தயாரிப்புச் செலவை குறைக்க க்ரூட் ஆயில் எனப்படும் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் அப்பகுதியின் நிலத்தடி நீர் கெட துவங்கியது. கரும்புகை சூழ்ந்து காற்றில் கலப்படம் ஏற்பட்டது. கிராமத்தவர்கள் பலரும் உடல்நலம் குன்றத் தொடங்கினார்கள்.

தங்கள் கிராமங்கள் மாசுபடுவதை அப்பகுதி இளைஞர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இளைஞர் மன்றம், சிறுவர் மன்றம் என்று அமைப்புகளை உருவாக்கி ஒருங்கிணைந்து போராட முடிவெடுத்தார்கள். சேவாலயா, எக்ஸ்னோரா போன்ற தன்னார்வு அமைப்புகள் இளைஞர்களின் போராட்டங்களுக்கு ஆதரவுதர, செங்கல் சூளைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டம் களைகட்டத் தொடங்கியது.

தொடர்ச்சியான போராட்டங்களின் தீவிரம், செங்கல் சூளை முதலாளிகளை பின்வாங்க வைத்தது. சூளை நட்த்துவதற்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியவர்கள், கச்சா எண்ணெய் மூலம் எரிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இளைஞர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

அடுத்ததாக, ஏரியில் மண் அள்ளும் பிரச்சினை. மூன்று அடி ஆழம் வரையே மண் அள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தும், ஏழு அடிக்கும் மேலாக தோண்டி மண்வளம் சுரண்டப்பட்டது. இதனால் விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இம்முறை இளைஞர்கள் தங்கள் போராட்ட அணுகுமுறையை மாற்றிக் கொண்டார்கள். ஊரை காலி செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.

இவ்வாறாக ஒவ்வொரு பிரச்சினைக்கும் விதவிதமான போராட்டங்கள். சில வெற்றியடைந்தால், பல நசுக்கப்பட்டது. வெற்றிகளின்போது மகிழ்ச்சி அடைந்தவர்கள், தோல்வி அடையும்போது விரக்தி அடைவதும் இயல்புதானே?

“எவ்வளவு காலத்துக்குதான் போராடிக் கொண்டே இருப்பது? எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய கிராமம் தன்னிறைவு அடைவது எப்போது?” என்றொரு சிந்தனை இளைஞர்களிடையே எழுந்தது. இந்த இளைஞர்களில் ஒருவரான சாரதி, அப்போது தொண்டு நிறுவனமான சேவாலயாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த மனமாற்றத்துக்கு அவர் படித்த எம்.ஏ., (காந்திய சிந்தனைகள்) கல்வியும் ஒரு காரணம். போராட்டங்கள் போதும் என்று முடிவெடுத்தார்கள் ஆலத்தூர் இளைஞர்கள். போராட்டங்களை நிறுத்தியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை செயல்பாடுகள் மூலமாக சரிசெய்ய முன்வந்தார்கள்.

2004ஆம் ஆண்டு ‘உதவும் நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்கள். பதிவு பெற்ற அமைப்பான உதவும் நண்பர்கள் கிராமப்பகுதி கல்வி, பொருளாதார முன்னேற்றம், சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, விளையாட்டு, விவசாயம் உள்ளிட்ட கிராம மேம்பாட்டு திட்டங்களை, கிராம மக்களின் பங்களிப்போடு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

சாரதிக்கு இப்போது வயது 40. நிர்வாக அறங்காவலராக இவ்வமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றுகிறார். கோதண்டன், மனோகரன், மதுரை, பிரகாசம், சிவக்குமார், செல்வகுமார், செந்தில்குமார், ராகவேந்திரன் என்று எட்டு இளைஞர்கள் அறங்காவலர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எட்டு பேருமே 96 போராட்டங்களின் போது சிறுவர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்கள்.

‘கனவு இந்தியா’ என்ற அமைப்பினைச் சார்ந்த நடராஜன் என்ற நண்பர் மூலமாக சாரதி நமக்கு அறிமுகமானார். சுளீர் வெயில் அடித்த ஒரு நாளில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் சாரதியை சந்தித்தோம். வெள்ளை கதர் ஜிப்பா, கதர் வேட்டியென்று அச்சு அசலாக ஒரு காந்தியவாதியின் தோற்றம். மீசைவைத்த சிறுவயது காந்தியைப் போலவே இருக்கிறார்.

கிராம முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர், சேவை தடைபட்டுவிடக் கூடாது என்று திருமணம் செய்துக் கொள்வதை தவிர்த்து விட்டார். விவசாயத் தொழில் புரிந்துவரும் சாரதி, உதவும் நண்பர்களின் முழுநேரப் பணியாளர். இவருக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. சகோதரனின் சேவையார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணமாக பதினைந்து செண்ட் இடத்தோடு கூடிய தங்களது பரம்பரை இல்லத்தை ‘உதவும் நண்பர்கள்’ அமைப்புக்கு எழுதி வைத்து விட்டார்கள்.

சாரதியும், அவரது அமைப்பும் இந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? ஆலத்தூருக்குப் போய் பார்ப்போமா?

* யாருக்காவது அவசரத்துக்கு இரத்தம் தேவைப்பட்டால் உடனே ஆலத்தூருக்கு போன் போடலாம். ஊரே இரத்த தானத்துக்கு இரத்தப் பிரிவு வாரியாக தங்களை தானம் செய்து வருகிறது. இதுவரை ஐந்துபேர் கண்தானமும் செய்திருக்கிறார்கள்.

* ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்று உருவாக்கி நடத்தி வருகிறார்கள். பெற்றோர் இல்லாத ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை இலவசம். சுமார் இருபது குழந்தைகள் இப்போது இல்லத்தில் பரமாரிக்கப் படுகிறார்கள்.

* காமராஜர் பெயரில் மாலைநேரக் கல்விமையம் ஒன்று செயல்படுகிறது. ஆலத்தூர், மேட்டுத்தும்பூர், எடப்பாளையம், பள்ளத்தும்பூர் என்று நான்கு இடங்களில் மாணவர்களுக்கு மாலையில் கல்வி போதிக்கப்படுகிறது. இந்த நான்கு ஊர்களிலும் ஒட்டுமொத்தமாக 320 குழந்தைகள் பயனடைகிறார்கள். இவர்களுக்கு கல்வி மட்டுமன்றி பேச்சு ஆங்கிலம், கம்ப்யூட்டர், தியானம், யோகா என்று பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தன்னார்வ அமைப்புகள் மூலமாக இக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், சீருடைகளும் இலவசமாகவே பெற்றுத் தரப்படுகிறது.

* விவேகானந்தர் பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் 30 பேர் கம்ப்யூட்டர் கற்கலாம். அலுவலகப் பயன்பாட்டுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை சொல்லித் தருகிறார்கள். இதுவரை நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பாரதியார் பெயரில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டும் உண்டு.

* காலையிலும், மாலையிலும் சமைப்பதுதான் வேலைக்கு செல்லாத கிராமத்து மகளிரின் வேலை. மீதி நேரம்? ஏதாவது வேலை பார்த்து சம்பாதிக்கலாம் இல்லையா? அதற்குதான் அன்னை தெரசா தையற்பயிற்சி மையம் நடக்கிறது. இங்கே பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இவர்களே ஏற்படுத்தித் தருகிறார்கள். எம்பிராய்டரிங் பயிற்சியும் உண்டு.

* இந்தியா சுடர், தி செவன் ஹெல்ப்பர்ஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு, உதவும் நண்பர்களுக்கு நல்ல நெருக்கம் உண்டு. இதுபோன்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று உயர்கல்வி படிப்பதற்கான கல்லூரிக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

* உடல் ஊனமுற்றோருக்கு அறுவைசிகிச்சை, செயற்கை உறுப்புகள் பொறுத்துதல் போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்களை அணுகி செய்துத் தருகிறார்கள். அரசின் உதவி யாருக்காவது தேவைப்படின், அதையும் செய்து கொடுக்கிறார்கள்.

* கால்நடை, விவசாயம், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறுதொழில் பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கு ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி என்று ஏராளமான பயிற்சிப் பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படுகிறது.

* இப்போது ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் தங்களுக்கென ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார்கள். இங்கே தாங்களே மருத்துவர்களை பணிக்கு அமர்த்தி குறைந்த செலவில் தங்கள் மருத்துவ தேவைகளை ஈடுசெய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இன்னமும் தேவையான பணம் கிடைக்காததால் இப்பணி பாதியில் நிற்கிறது. ஐந்தரை கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை தங்கள் பகுதியில் நிறுவி, மாவட்டத்துக்கே இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது இக்கிராம மக்களின் இலட்சியம்.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கண்ட சேவைகள் அனைத்துமே இலவசம்.

“நமக்கு நாமே என்பது மாதிரி எங்களுக்கு தேவையான விஷயங்களை நாங்களே செய்துக்கொள்கிறோம். இதற்கான திட்டங்களை தீட்டவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் கிராம வளர்ச்சி மன்றம் ஒன்றை தோற்றுவித்திருக்கிறோம். எங்கள் கிராமம் தன்னிறைவு அடைய மக்களின் பங்கேற்போடு, தன்னார்வலர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறோம். சுயராஜ்ய கிராமம் என்பதே எங்கள் இலட்சியம்” என்கிறார் சாரதி.
மகாத்மா காந்தியின் கனவு தன்னிறைவு பெற்ற கிராமங்கள். ஆலத்தூர் போன்ற கிராமங்களும், சாரதி போன்ற இளைஞர்களும் காந்தியின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை பலப்படுகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

லோக்கல் அரசியல்வாதிகளின் ஆதரவு இவர்களுக்கு நிறைய இருக்கிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஏழுமலை ஒருமுறை தன்னுடைய வக்கீல் நண்பரை பார்க்கச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு தம்பதிகள் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கள் சொத்தினை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு எழுதித்தர வந்திருந்தார்கள்.

அவர்களிடம் தங்கள் கிராம அமைப்பான உதவும் நண்பர்களை பற்றி பேசியிருக்கிறார் ஏழுமலை. இவர்களது செயல்பாடுகளால் கவரப்பட்ட அத்தம்பதிகள் தங்கள் சொத்தினை உதவும் நண்பர்கள் பெயரில் எழுதிவைத்து விட்டார்கள்.

கொடுமை என்னவென்றால், உயில் எழுதி வைத்த மறுநாளே பிரகாஷ் – கோமளவள்ளி தம்பதிகள் ஏதோ பிரச்சினையில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலைக்கு முன்பாக ஒரு நல்ல காரியம் செய்யவே தங்கள் சொத்தினை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு போய்விட்டார்கள் என்று சோகமாக சொல்லுகிறார்கள் ஆலத்தூர் கிராமவாசிகள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

உதவும் நண்பர்களை தொடர்புகொள்ள :
1/30, பஜனைக் கோவில் தெரு,”
ஆலத்தூர் கிராமம், பாலவேடு அஞ்சல்,
சென்னை – 55.
போன் : 9444511057

(நன்றி : புதிய தலைமுறை)

13 ஜனவரி, 2010

பெண்களோ பெண்கள்!


பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு என்று சொன்னால் ஆச்சரியமாக தானிருக்கும்.

பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம் என்பதை சினிமாவிலோ, டிவியிலோ பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன் நண்பர்களுடன் சியர்ஸ் சொல்லி பொங்கல் கொண்டாடுகிறோம்.

போகி அன்றும் எங்களது 'திருவிளையாடல்' தொடரும். பஞ்சர் சிவா கடையில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய பழைய சைக்கிள் டயர்களுடன் போகி கொண்டாடுவது எங்கள் பண்பாடு. அட்வெஞ்சரில் ஆர்வம் கொண்ட சில வாலிபர்கள் அந்த டயரின் ஒரு புறத்தை கொளுத்தி விட்டு அப்படியே ஒரு குச்சியால் எரிந்த டயரை ஓட்டிக் கொண்டு தெருவை வலம் வருவது வழக்கம். மார்கழிமாத கோலம் போடும் பிகர்களின் கவனத்தைக் கவர இதுமாதிரியான அட்வெஞ்சர்ஸ் அவசியம். சில ஆண்டுகளாக காவல்துறையினர் இந்த விளையாட்டுக்குத் தடை போட்டு எங்களது வாலிப வேகத்தை தடுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

போகி அன்று “மோளம்” அடித்துக் கொண்டே தெருவை வலம்வரும்போது நாம் வெட்டும் பிகரின் வீட்டின் எதிரில் நின்று “போகி போச்சி, பொங்கலும் போச்சி, பொண்ணு தாடா மாமோய்” என்று கோரஸாக கூச்சலிட்டு வருங்கால மாமனாரை கலாய்ப்பதும் உண்டு.

ஏதோ கிராமத்து இளைஞர்களுக்கு மட்டுமே வீரம் உண்டு. ஜல்லிக்கட்டில் தினவெடுத்த தோள்களுடன் பயமில்லாமல் முட்டும் மாடுகளை அடக்குகிறார்கள் என்ற மாயத்தோற்றம் அல்லது மாயவெளி அல்லது மாயபிம்பம் அல்லது என்ன எழவோ இருக்கிறது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாங்களும் ரவுடிதான்.

பொங்கலுக்கு பதினைந்து நாள் முன்பே எங்களது “ஜல்லிக்கட்டு” ஜல்ஸாவாக ஆரம்பமாகிவிடுகிறது. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கே அசுரவேகத்தில், புல் மப்புடன் கொலைவெறியுடன் சொந்த பைக்கிலோ அல்லது ஓசி பைக்கிலோ பயணித்து எங்கேயாவது, எவனோடவாவது வீரத்துடன் முட்டிக் கொண்டு சாவது என்பதை எங்கள் பண்பாடாகவே வைத்திருக்கிறோம். உயிர் எங்களுக்கு தயிர்.

இவ்வாறாக பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும் கொண்டாடும் நாங்கள் காணும்பொங்கலை மட்டும் விட்டுவிடுவோமா? மார்கழி மாதம் முழுவதுமே எங்களுக்கு காணும் பொங்கல் தான். அதிகாலை 4 மணிக்கே எழுந்து, கிடுகிடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்து, பட்டை அடித்து, அப்பா பாக்கெட்டிலிருந்து அம்பதோ, நூறோ லவட்டி தெருவலம் செல்வது வழக்கம். அப்போது தான் 5.30 மணிக்கு மார்கழிமாத கோலம் போட வரும் நைட்டி நந்தினியையும், மிடி மீனாட்சியையும் அதிகாலையிலேயே சந்திக்க முடியும். பிகர்களை மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் பர்சனாலிட்டியில் மீட் செய்ய முடிவது இந்த காணும் பொங்கலில் மட்டுமே சாத்தியம்.

அதற்குப் பின்பாக குளிருக்கு இதமாக ஒரு கிங்ஸ் வாங்கி 4 பேர் ஷேர் செய்துக் கொண்டு பயபக்தியுடன் அருகிலிருக்கும் ஏதாவது கோயிலுக்குச் சென்றால் சில வயோதிகர்கள் ஏதோ மார்கழி பஜனை செய்து வெண்பொங்கலோ அல்லது சுண்டலோ தருவார்கள். மார்கழி மாதம் முழுவதுமே அப்பாவின் தண்டச்சோறு திட்டு இல்லாமல் கோயில்களில் எங்களுக்கு ராஜமரியாதையுடன் “டிபன்” தருகிறார்கள்.

காணும் பொங்கல் ஸ்பெஷலாக பிகர் வெட்ட அரசாங்கம் சிறப்பு அனுமதியாக சுற்றுலாப் பொருட்காட்சி நடத்துவதை சென்னையின் வாலிபச் சிங்கங்கள் நன்றியுடன் வருடாவருடம் நினைத்துப் பார்ப்போம். சுற்றுலாப் பொருட்காட்சி மட்டுமா? கடற்கரையில் காணும்பொங்கல் அன்று வங்காள விரிகுடாவில் அடிக்கும் அலை எங்களது ஜொள் அலையே. சித்தாள் பிகரிலிருந்து சாப்ட்வேர் பிகர் வரை ஒரே இடத்தில் காணவேண்டுமா? சென்னைக்கு ஜனவரி 17 அன்று வாருங்கள். கடற்கரையில் பிகர்களுக்கு பிலிம் காட்டுவதற்காக நீச்சல் தெரியாவிட்டாலும் கடலில் குதித்து வீரத்துடன் உயிர்த்தியாகம் செய்யும் வாலிபர்களை சென்னையில் மட்டுமே காணுவது சாத்தியம்.

பிகர் கிடைக்காமல் அவதிப்படும் வாலிபர்களுக்கு வரப்பிரசாதம் இந்த காணும் பொங்கலே. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கோ அல்லது கிண்டி சிறுவர் பூங்காவுக்கோ சென்றால் அவரவர் பர்சனாலிட்டிக்கேற்ப தக்க எக்ஸ்போர்ட் பிகரையோ (எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் பிகர்), சித்தாள் ஃபிகரையோ கரெக்டு செய்ய முடியும். ஏற்கனவே பிகரை ரைட்டு செய்து வைத்திருக்கும் புண்ணியவான்களும் பிகர்களோடு கோவளம், மகாபலிபுரம் என்று ரவுண்டு கட்டி கொண்டாடும் வழக்கமும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்து விரைவில் வரும் காதலர் தினத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய பொங்கல் விடுமுறை சென்னை இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

"பெண்களோ பெண்கள்"

ஆயிரத்தில் ஒருவன்!


'வெற்றி! வெற்றி' என்ற செண்டிமெண்டலான வசனத்தோடு தொடங்குகிறது படம். மணிமாறன் என்ற சாமானிய வைத்தியர், பெரிய புரட்சிக்காரனாக உருவாவதை 'திடுக்' திருப்பங்களோடு, இனிய பாடல்களோடு படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் தாக்கம் ஐம்பதாண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களான கிளாடியேட்டர், பைரேட்ஸ் ஆஃப்ட த கரீபியன் ஆகியவற்றில் கூட இருப்பது ஆச்சரியமான ஒன்று.

சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது. பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.

கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.

படத்தைப் பற்றி நாம் பேசுவதைவிட, படத்தில் கதாநாயகியாக நடித்த புரட்சித்தலைவியே பேசுவது மேலானது அல்லவா? தலைவரோடு, தலைவி நெருக்கமாக நடித்த காதல் காட்சியைப் பற்றி பேசுகிறார்.

ஓவர் டூ புரட்சித்தலைவி...

சினிமா உலகை பொறுத்தவரையில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. வெண்ணிற ஆடையில் நடிக்கும் முன் சில கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுக்க பந்துலு திட்டமிட்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர் அவர்கள்தான் கதாநாயகன். பந்துலு அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நானே ஆயிரத்தில் ஒருவனிலும் நடிக்க வேண்டும் என்பது பந்துலுவின் விருப்பம். என்னைப் பற்றி மெதுவாக எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்லி விட்டார் பந்துலு. நான் நடித்த கன்னடப் படத்தை, தான் (எம்.ஜி.ஆர்) பார்க்க விரும்புவதாக சொன்னாராம். அவர் பார்த்து சம்மதம் தெரிவித்த பிறகுதான் என்னை நடிக்க வைப்பதுப் பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டார்கள்.

அவர்களோடு உட்கார்ந்து நானும் கன்னட படம் பார்த்தேன். படம் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள் எழுந்து பந்துலு பக்கம் திரும்பி சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு போனார். என் வாழ்நாளிலேயே அன்றுதான் பெரும் சந்தோஷம் அடைந்தேன்.

அவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குறையவே குறையாது. யாரிடமும் சமமாக பழகுவார். தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்.படசெட்டில் தன்னோடு நடிக்கும் அத்தனை பேரையும் கவனித்து சொல்லிக் கொடுப்பார். கலகலவென்று பேசுவார் தலைவர். அதில் நகைச்சுவை கலந்திருக்கும். பதிலுக்கு நானும் லொட லொடவென்று பேசி வைப்பேன். இதற்காக எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர் வாயாடி.

முதல் காதல் காட்சியில் நடிக்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது! என் முதல் படத்தில் காதல் காட்சிகளில் (வெண்ணிற ஆடை) நடிக்காமல் இருந்த எனக்கு அப்படியே எல்லாப் படங்களிலும் வரமுடியுமா? கூடாதல்லவா?

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகி ஓர் இளவரசி. அவளை வில்லன் வழக்கம்போல மணக்க விரும்புகிறான். தற்செயலாக அவளை கதாநாயகன் சந்திக்கிறான். வில்லனிடமிருந்து அவளை அவன் காப்பாற்றியாக வேண்டும்.

திருமணமான ஒரு பெண்ணை அந்த நாட்டின் ராஜாவான வில்லன் ஏறெடுத்து பார்க்க கூடாது. இப்படி ஒரு சட்டம் அந்த நாட்டில் உண்டு. சட்டத்தை மீற முடியுமா? மீறலாமா? தப்பு, தப்பு. எனவே, திருமணப் பத்திரிகை அச்சடிக்கபடாமலேயே இதில் வரும் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணம் நடந்தேறி விடுகிறது. வெளி உலகின் கண்களுக்கு இப்போது கணவன்-மனைவி.ஆனால் கதாநாயகன்- இளவரசியின் கரத்தை பிடித்தவன் மனநிலை என்ன? வில்லனிடமிருந்து தப்பிச் செல்லவே இதை செய்தோம். இது திருமணமல்ல, தந்திரம். எனவே, இளவரசியின் கணவன் என்ற உரிமையை கொண்டாடக் கூடாது என்று கதாநாயகன் நினைக்கிறான். இளவரசியின் காதலை ஏற்க சாதாரண குடிமகனான காதலன் அஞ்சுகிறான். நியாயத்தின் அடிப்படையில். இந்நிலையில் ஒருநாள் இரவு இளவரசி உள்ளே படுத்திருக்க, கதாநாயகன் வெளியே வந்து படுக்கிறான். வானம் சும்மா இல்லை, இருளாகிறது. மேகத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டு கர்ஜிக்கிறது. மின்னலைத் தூதனுப்பி மழையையும் கொட்டு கொட்டென்று கொட்ட செய்கிறது.

அப்போது நாயகி நாயகனை உள்ளே அழைக்கிறாள். அந்தப் பாடல், நாணமோ...... நான் நடித்த முதல் காதல் காட்சி. நான் பல திரைப்படங்களில் காதல் காட்சிகளை கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் படம், இந்திப் படம், தமிழ் படம், தெலுங்கு படம், கன்னடப் படம் இப்படி எல்லா படங்களிலும் காதல் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நானே காதல் காட்சியில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்த போதுதான், எனக்கு அதில் நடிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது தெரிய வந்தது. என்னையும் மீறிய ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அதுவும் என்னுடன் நாயகனாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் என்பதை எண்ணியபோது எனது நடுக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஒரு காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக ஒத்திகைப் பார்ப்பது வழக்கம். அதுவும் காதல் டூயட்டாக இருந்தால் நடன டைரக்டரும், அவரது உதவியாளரும், பாட்டுக்கேற்ப நடனமாடி, நாங்கள் எப்படி அக்காட்சியில் நடிக்க வேண்டுமென்பதை செய்து காட்டுவார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடன டைரக்டராகப் பணியாற்றியவர் தங்கப்பன். அவரது குழுவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், வாலிபரும் நாணமோ என்ற பாட்டுக்குரிய பாவனைகளை ஆடிக் காட்டினார்கள். ஆணும் பெண்ணுமாக அவர்கள் நெருக்கமாக நடித்துக் காட்டியபோது எனக்கு அது புதுமையாக இருந்தது. அவர்கள் செய்தபடி இப்போது நானும் எம்.ஜி.ஆரும் நடிக்க வேண்டும். ஏதோ இனம் தெரியாத உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. காட்சி படமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காமிரா முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன். டைரக்டர் ஸ்டார்ட் என்று சொல்லி படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. காதல் மயக்கத்தில் போதையோடு கதாநாயகனை நான் எனது விழிகளால் அளக்க வேண்டும். அதாவது அன்பு தோயப் பார்க்க வேண்டும். உடனே, கதாநாயகன் என்னை அப்படியே பதிலுக்குப் பார்த்தபடி நெருங்கி வந்து என்னை அணைத்துக் கொள்வார். இதுதான் படமாக்கப்படவிருந்த காட்சி. கேமிரா இயங்க ஆரம்பித்திருந்தது. கதாநாயகனான எம்.ஜி.ஆர் என்னை நெருங்கி வருகிறார். ஒன்றுமே ஓடவில்லை. திணறி போய்விட்டேன். எனது தவிப்பை தயாரிப்பாளரும் டைரக்டருமான பந்துலு சார் கண்டுக் கொண்டார் போலும்.என்னை கூப்பிட்டு, என்னம்மா குழந்தை நீ எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டாம். காமிராவைப் பார்த்தே நடிக்கலாம் என்று சொன்னதும் எனக்கு தைரியம் வந்துவிட்டது.

அந்த யோசனை எனக்கு கைக் கொடுத்தது. மீண்டும் எம்.ஜி.ஆருடன் அந்த காதல் கட்டத்தில் நடித்தபோது டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடி அன்றைய என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்தேன். இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக அடுத்த காட்சியை படமாக்க செட்டில் ஆட்கள் பம்பரமாக சுழன்றனர். எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே மலர் மஞ்சத்தில் நெருங்கி உட்கார்ந்து என்னருகில் நகர்ந்து நகர்ந்த வர, படுக்கையில் நான் மெல்ல சாய வேண்டும். இந்தக் காட்சியை படமாக்கும்போது எனக்கு குளிர் ஜுரமே வந்துவிட்டது போல் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆர். ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சோர்வாகவும் காணப்படறீங்க? என்று என்னை பார்த்து கேட்டார். ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று ஏதோ சொல்லி சமாளித்தேன். வாய் பேசியதே தவிர என் உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. கட்டிலில் சாயும்போது உடல் நடுக்கத்தை சமாளிக்க வலது கையால் யாரும் கவனிக்காதபடி தலையணைக்குள் என் கையை விட்டு கட்டிலின் காலை கெட்டியாக பற்றிக் கொண்டேன். என் நடுக்கம் இதனால் நின்றது.

அன்றைய அந்த காதல் காட்சி சரியாக அமைய, முழு ஒத்துழைப்பும் கொடுத்து, எனக்கு எவ்வித பயமும் ஏற்படாத வகையில் தைரியமான வார்த்தைகளை சொல்லி என்னை சரிவர நடிக்க வைத்த எம்.ஜி.ஆருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரைப்பட உலகில் ஆயிரக்கணக்கான நடிகைகள் நடித்த காதல் காட்சிகளில் ஒன்றுதான் அன்று நான் நடித்ததும், இருந்தாலும் நான் காதல் காட்சியில் அன்றுதானே முதன்முதலாக நடித்தேன். என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்ததும் என் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா? எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற பிரமைதான் என் நினைவைக் கவ்வி கொண்டிருந்தது. அந்த படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் தன் காதலனை ரகசியமாக சந்தித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்கே பிறர் தன்னை கண்டுபிடித்துவிட்டு போட்டோகாசம் செய்வார்களோ என பயந்த நிலையுடன் வருவாளோ, அதுமாதிரிதான் நானும் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், படப்பிடிப்பு குழுவினரும் ஸ்டுடியோ தொழிலாளர்களும்தான் இருந்தார்கள்.

அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. என் நடிப்பை அவர்கள் அப்படி அதிசயமாக பார்த்திருக்க மாட்டார்கள். தினம் தினம் இப்படி பல காட்சிகளை கண்டவர்களாயிற்றே. எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் காதல் காட்சியை காண தியேட்டரில் அமர்ந்திருந்தேன். வெள்ளித்திரையில் நான் நடித்த முதல் காட்சியைப் பார்த்தபோது ஏதோ அனுபவபட்ட நடிகை நடித்தது மாதிரிதான் எனக்கு பட்டது. நான் பயந்ததும். நடுங்கியதும் எனக்கே தெரியவில்லை.காதல் காட்சியில் நடித்த அன்று சில நடிகைகள் இரவு தூங்கவில்லை அந்தப் படப்பிடிப்பை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்த சலனமும் என் உறக்கத்தை பாதிக்கவில்லை. அன்றிரவு அருமையான தூக்கம் என்னைத் தழுவிக் கொண்டது.

(புரட்சித்தலைவி பேட்டிக்கு நன்றி : தமிழ்சினிமா.காம்)

12 ஜனவரி, 2010

ராஜவைத்தியம்!


'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை வாசித்த வாசகர் ஒருவர் ‘டிவி விளம்பரங்கள் தயாரிப்பது எப்படி?' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவரது தொலைபேசி எண்ணும் மடலில் இருந்ததால், தொலைபேசினேன். சினிமா போலவே இதற்கும் ஸ்க்ரிப்ட் எழுத வேண்டும் என்று சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.

ஒவ்வொரு ஏஜென்ஸியிலும் ஒவ்வொரு முறையில் ஸ்க்ரிப்ட் எழுதுவார்கள். இதற்காக காப்பிரைட்டர்கள் பணிக்கு அமர்த்தப் பட்டிருப்பார்கள். சினிமாவில் க்தை, திரைக்கதை, வசனம் எழுத ஒருவர் இருப்பார் இல்லையா? கிட்டத்தட்ட அதே பணியை காப்பிரைட்டர்கள் விளம்பரத்துக்கு செய்தாக வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்துக்கும் நான்கு, ஐந்து தீம்கள் எல்லாக் கோணத்திலும் அலசி பொதுவாக உருவாக்கப்படும்.

விளம்பரத்துக்கு எழுதுவதெல்லாம் பிரம்ம சூத்திரமல்ல. ஆனாலும் ஏனோ சிதம்பர ரகசியம் மாதிரி பொத்தி பொத்தியே மற்றவர்களுக்கு பெரிய பிரமிப்பினை ஏற்படுத்துகிறார்கள். நான் ஃப்ரீலான்சராக பணியாற்றியபோது ஒரு ஏஜென்ஸிக்கு கொடுத்த ஸ்க்ரிப்ட்டை கீழே தருகிறேன். இவ்வளவு சப்பை மேட்டரா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இது மட்டுமே விளம்பரத்தினை உருவாக்கும் முறையல்ல. ஆனால் இதுவும் ஒருமுறை. ஓரளவுக்கு கிரியேட்டிவாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் தரமான ஒரு விளம்பரத்தை உருவாக்கிவிட முடியும்.


ராஜ வைத்தியம்

Duration : 15 - 20 Seconds
Target Audience : 30 - 60 Age group (Particularly Megaserial audience)
Backdrop : அரசவை.

மந்திரிகள் புடைசூழ அரசர் அமர்ந்திருக்கிறார். நான்கு பேர் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட
சிம்மாசனங்களில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது உடை சாதாரண குடிமக்களின் உடை. முகத்தில் சோகம்.

மன்னர் பேசுகிறார் : குடிமக்களே உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை?

நால்வரும் தனித்தனியாக : “மன்னரே எனக்கு முடக்குவாதம், நடக்கவே இயலவில்லை.”

“மன்னா எனக்கு தீர்க்கமுடியாத தோல்வியாதி”

“அரசே எனக்கு ரகசிய நோய்”

“ராஜா எனக்கு மஞ்சக்காமாலை”

அரசர் எழுந்து : “தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்கத்தானே (நடந்தவாறே) உங்கள் ராஜா இருக்கிறேன்!” (கம்பீரமான குரலில்)

(நால்வருக்கும் அருகில் வரும் மன்னர் அவர்களை தொட்டு சிகிச்சை அளிக்கிறார்)

கருப்புத்திரையில் : நிஜமாகவே ராஜ வைத்தியம்! (வெள்ளையில் பெரிய எழுத்துக்கள்
வாய்ஸ் ஓவருடன்)

அடுத்த ப்ரேமிலும் வாய்ஸ் ஓவரோடு எழுத்துக்கள் தொடர்கிறது : வாதம், தோல் வியாதிகள், மஞ்சக்காமாலை, தீராத பாலியல் நோய்களுக்கு ராஜவைத்தியம்
நாங்கள் செய்கிறோம்.

மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்


பராமரிப்பு!

Duration : 20 - 30 Seconds
Target Audience : 25 - 65 Age group

Scene 1 : நடுரோட்டில் நடுத்தர வயதுடைய ஒருவர் ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கிறார். ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை. நெற்றி வியர்வையை துடைத்து மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

Backdrop voice : “என்னாச்சி?”

மனிதர் திரையை நோக்கி : “போனமாசம் மெக்கானிக் கிட்டே சர்வீசுக்கு விடலை. ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணுது”

மீண்டும் உதைத்து ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கிறார்...


Scene 2 : தொட்டியில் வைக்கப்பட்ட ரோஜா செடி பட்டுப்போன நிலையில் இருக்கிறது. பின்னணியில் சோகமுகத்தோடு ஒரு இளம்பெண்.

Backdrop voice : “என்னாச்சி?”

பெண் திரையை நோக்கி : ஒரு வாரமா தண்ணி விடலை. செடி காஞ்சிடிச்சி..

மீண்டும் சோகமாக செடியை பார்க்கிறாள்.

Scene Fade out திரையில் எழுத்துக்கள் வாய்ஸ் ஓவரோடு : பராமரிப்பு இல்லாத எதிலுமே பழுது ஏற்படத்தான் செய்யும்

அடுத்த பிரேம் எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : நாங்கள் உடல்களை பராமரிப்பதோடு பழுதும் பார்க்கிறோம், உயிர்களை காக்கிறோம்

அடுத்த பிரேம் எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : வாதம், தோல் வியாதிகள், மஞ்சக்காமாலை மற்றும் தீராத பாலியல் நோய்களுக்கு நிச்சயத் தீர்வும் அளிக்கிறோம். பக்க விளைவுகளில்லாத சித்தமருத்துவ சிகிச்சை!

Scene 3 : வண்டியை ஸ்டார்ட் செய்து நடுத்தர வயது மனிதர் மகிழ்ச்சியோடு ஓட்டிச் செல்கிறார்.

Scene 4 : தொட்டியில் வைக்கப்பட்ட ரோஜா செடியில் இருமலர்கள் பூத்து குலுங்குகிறது. பின்னணியில் இளம்பெண்ணின் மலர்ச்சியான முகம்.

மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Duration : 20 - 30 Seconds
Target Audience : All

Opening : கருப்பு வெள்ளை ஃபிலிம் ஸ்ட்ரிப்பில் அந்த காலத்து பாணியில் டைட்டில்- “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” - Montage Effect உடன் இசையும் பழைய திரைப்படங்களை நினைவுறுத்த வேண்டும்.

Scene 1 (Black & White) : ஹீரோ சிவாஜி போல உடை மற்றும் சிகை அலங்காரத்தோடு. ஹீரோவின் அம்மா (பண்டரிபாய் ஜாடையில்) தண்ணீர் குடம் சுமந்து செல்லும்போது சுமக்க முடியாமல் கீழே விழுகிறார். ஹீரோ கண்ணீர் விட்டு கதறி ஓவர் ரியாக்ட்டு செய்கிறார்.

Background Voice : அம்மாவுக்கு வாதம்...

Scene 2 (Black & White) : தாவணி அணிந்த ஹீரோவின் தங்கை கழுத்தையும், முதுகையும் தொடர்ந்து சொறிந்து கொள்கிறாள். அதைப் பார்த்த ஹீரோ வாயைப் பொத்திக் கொண்டு கதறுகிறார்.

Background Voice : தங்கைக்கு தோல்நோய்

Scene 3 (Black & White) : ஹீரோவின் அப்பா கயிற்று கட்டிலில் சோர்வாக படுத்திருக்கிறார். கண்களில் கண்ணீரோடு ஹீரோவை பார்க்கிறார். ஹீரோ தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்.

Background Voice : அப்பாவுக்கு மஞ்சள் காமாலை

Scene 4 (Black & White) : ஹீரோவின் தம்பி தூக்குக் கயிறை மாட்டிக் கொள்ளப் போகிறான். ஹீரோ ஓடிவந்து தடுக்கிறார். தரையில் புரண்டு புரண்டு அழுகிறார்.

Background Voice : ஏடாகூடமான தம்பிக்கு பால்வினை நோய்

(எல்லா காட்சிகளுக்குமே பின்னணியில் பயங்கர சோக இசை)

Background Voice (கருப்பு திரையில் வெள்ளை எழுத்து) : அய்யோ பாவம். குடும்பமே நோயில் மூழ்கிக் கிடக்க ஹீரோ என்னதான் செய்வார்?

Next Frame : எங்கள் மருத்துவமனைக்கு வருவார்.

Background Voice பக்கவிளைவில்லாத பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை உற்சாகமாக எல்லா நோய்களுக்கும் நிச்சய தீர்வு!

மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்

அடுத்த ப்ரேமில் வண்ணத்தில் ஹீரோவின் குடும்ப போட்டோ. எல்லோரும் மகிழ்ச்சியாக நோய்தீர்ந்து காணப்படுகிறார்கள்.


சஞ்சீவினி

Duration : 20 - 30 Seconds
Target Audience : All

Opening : ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வந்து ஒரு மருத்துவரிடம் தருகிறார். மருத்துவர் அந்த மலையில் முளைத்திருக்கும் மூலிகைச் செடியிலிருந்து சில இலைகளை பறித்து, அரைக்கிறார்.

Background Voice : மூலிகை என்பது வெறும் செடியல்ல. நம் உயிர்காக்கும் மாமருந்து.

Blank Screen எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : பாரதத்தின் பாரம்பரியத்தை நாங்கள் மறக்கவில்லை. பக்கவிளைவில்லாத பாரம்பரிய சிகிச்சை முறைகளையே அளிக்கிறோம்.

அடுத்த பிரேம் எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : வாதம், தோல் வியாதிகள், மஞ்சக்காமாலை மற்றும் தீராத பாலியல் நோய்களுக்கு நிச்சயத் தீர்வும் அளிக்கிறோம்.

மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்


இதுதான் விளம்பரம் உருவாக்குவதற்கான ஸ்க்ரிப்ட். இதில் ஒன்றோ, இரண்டோ க்ளையண்டால் அப்ரூவ் செய்யப்படும் பட்சத்தில் ‘ஸ்டோரி போர்டு' என்ற அடுத்தக் கட்டத்துக்கு நகரும். இதெல்லாம் தேவைப்படாமலேயே உப்புமா விளம்பரங்களையும் உருவாக்க முடியும். எல்லாமே துட்டின் அடிப்படையில்.

நீங்களும் ஏதாவது கற்பனை பிராடக்டுக்கு இதுபோல ஸ்க்ரிப்ட் எழுதிப் பழகலாம். மேலும் டெக்னிக்குகளை தெரிந்துகொள்ள, ஹி.. ஹி.. மேலே உள்ள புத்தகத்தை வாங்கவும்!