கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஜனவரி, 2014

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

நலம் நலமறிய ஆவல்.

உங்கள் நெக்குருக்கும் கடிதம் வாசித்தேன். இரத்தக் கண்ணீரை அடக்கிக்கொண்டு படித்தேன். நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை காட்டிலும் மிகச்சிறந்த கடிதமாக மதிப்பிடுகிறேன். அழிந்து வரும் கடிதக்கலையை நீங்களும், கலைஞரும்தான் காக்க வேண்டும்.

//வேடியப்பன் என்ற நண்பருக்காக உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டுமென்ற உனது எண்ணத்தைப் பாராட்டுகிறேன்//

உங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்கு சென்ஷி எதிரியல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பழக்கமான நண்பர்தான். ஒன்றாக லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். போலவே உங்களுக்கும் வேடியப்பன் எதிரியல்ல என்று கருதுகிறேன்.

இந்த consipiracy theory எல்லாம் இணையத்தின் பிலக்கா பயல்கள் செய்துக் கொள்ளட்டும். உங்களுக்கு ஏன் அண்ணாச்சி. நீங்கள் நினைப்பது மாதிரி வேடியப்பனுக்கு நான் நெருக்கமான நண்பர் எல்லாம் அல்ல. சென்னையில் இருக்கும் உங்கள் இதர நண்பர்களிடம் நீங்கள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வேடியப்பனுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் சென்ஷிதான்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்தார் என்பதற்காக வளைகுடா பதிவர்களும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் தளபதிகளும், பண்புடன் குழுமத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் உறுப்பினர்களும் கச்சை கட்டிக்கொண்டு வருவதைப் போன்ற எந்தப் பின்னணியும் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கில்லை.

மொத்தமாக கூட்டம் சேர்ந்து, அநியாயமாக அராஜகமாக ஒருவர் அடிக்கப்படுவதை எதிர்த்து, நடைமுறை யதார்த்த நியாயம் என்ன என்பதை மட்டும்தான் பேசியிருக்கிறேன்.

//கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள்.. யார் யாரிடமோ யாசகம் பெற்று, ஒளி வருடி, செல் பேசியில் படமெடுத்து அனுப்பி அதனை வரியாக வரியாகத் தட்டச்சு செய்து என்று பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. அதனால்தான் அந்த உழைப்பு சுரண்டப்படும்போது மயிர் பிளக்கும் விவாதத்திற்கு அது வழி வகுத்து விட்டது//

சென்ஷிக்கு இந்த வேலையை வேடியப்பனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ ‘அசைன்’ செய்து உழைப்பை சுரண்டியிருந்தால் நானும் உங்களோடு வந்து கொடிபிடிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கும்.

//பகிரல் நோக்கமில்லாமல் இருந்திருந்தால் சென்ஷி இணையத்தில் இதனைத் தொகுத்திருக்க அவசியமேயில்லை..//

இணையம் என்பது மின் ஊடகம். அச்சு ஊடகத்தோடு வேறுபட்டது. பகிரல்தான் நோக்கம் எனும்போது, அது அச்சுக்கு வரும்போது அதை எதிர்க்கவோ, கசமுசா செய்யவோ அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அச்சில் வாசிக்கும் வாசகர்களும் பயனடைந்துவிட்டு போகட்டுமே. அதே நேரம் நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சியெல்லாம் தயார் செய்துவிட்டால் மட்டுமே ‘தொகுப்பாசிரியர்’ ஆகிவிட முடியாது என்கிற யதார்த்தத்தை எல்லாரும் உணரவேண்டும். தொகுப்புகளில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிறவர்தான் தொகுப்பாசிரியர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க அதுதான் நடைமுறை.

// ஒரு பைத்தியக்காரன் மொத்த கதையையும் தொகுத்து இணையத்துல அதிகப் பிழையேதுமில்லாமல் சேர்த்து வச்சிருக்கான். அப்படியே ’லபக்’கிட்டா எவன் கேக்கப் போறான்னு தெரிஞ்சதும் அனுமதி கேட்டிருப்பாரா இருக்கும். ஏற்கெனவே 50 கதைகள் மின்நூலா கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாசிரியரும் சம்மதம் சொல்லியிருப்பாராக இருக்கும் //

நீங்களெல்லாம் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள். சென்ஷி டைப்படித்த கதைகளை வேடியப்பன், Ctrl C + Ctrl V செய்துக்கொண்டார் என்று. தமிழ் இணையத்தில் மின்னல்வரிகள் பாலகணேஷ் என்றொருவர் பிரபலமானவர். டிசைனிங், டி.டி.பி. பணிகள் செய்கிறார். நிறைய பதிவர்களின் புத்தகங்களுக்கு ப்ரீப்ரொடக்‌ஷன் பணிகளை செய்துக் கொடுத்திருப்பவர். வேடியப்பன் கொண்டுவரும் தொகுப்புக்காக டைப்பிங் வேலை மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார். நானறிந்தவரை கணேஷ் பொய் சொல்லக்கூடிய நபர் அல்ல. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? கணேஷ் டைப் செய்துக்கொண்டிருப்பது வேறு ஏதோ எஸ்.ரா புத்தகம் எனப் போகிறீர்களா?

// அச்சிலேயே இல்லாத கதைகளைக் கூட பணம் கொடுத்து சென்ஷி வாங்கினான். நான் தான் அதை ஒன்றல்ல, இரண்டல்ல.. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? //

உண்மையிலேயே இப்படியான சூழல் இருப்பின், சென்ஷிக்கு இதுவரை இதற்காக ஆன செலவுகளுக்கு வேடியப்பனிடம் நிவாரணம் கேட்கலாம். தவறேயில்லை. இந்த விஷயத்தில் ஐ ஆல்சோ சப்போர்ட் சென்ஷி.

// நிச்சயம் அவர் படித்து தேர்வு செய்ததால்தான் சென்ஷி அதனைத் தொகுக்கவே தொடங்கினான். எனவே அந்த மரியாதை என்றுமே எஸ்.ராவுக்கு இருக்கும். ஆனால்.. அந்தக் கதைகளைத் தேடித் தொகுக்க நான்கரை ஆண்டுகள் உழைத்தவனுக்குண்டான அங்கீகாரத்தை ஒற்றை வரியில் நன்றி சொல்லி முடித்துக் கொள்வது முறையில்லை//

எஸ்.ரா படித்து தேர்வு செய்ததால்தான் அவர் தொகுப்பாசிரியர். இதுதான் என்னுடைய பாயிண்ட். சென்ஷிக்கு என்ன அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? தொகுப்பாசிரியர் என்று அவரை டெக்னிக்கலாக சொல்லிக் கொள்ள முடியாது.

வேண்டுமென்றால் நம்முடைய ஈ-புக்கில் நாமே அப்படி போட்டுக்கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள். கதைகளை எழுதிய எழுத்தாளர்களிடம் கூட முறையான அனுமதி கேட்காமல்தானே நாலரை ஆண்டுகளாக உழைத்து சென்ஷி இணையத்தில் ஏற்றியிருக்கிறார்.

// ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்வது ஏற்புடையதன்று. நியாயமாகப் பட்டதால் சென்ஷியை ஆதரிக்கிறார்கள் நீ எப்படி உன் தரப்பு நியாயத்துக்காக வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டுகிறாயோ அதைப் போல..//

வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டினேன் என்கிற உங்கள் அனுமானம் நியாயமானதல்ல. கடந்த ஞாயிறு அன்று எஸ்.ரா.வின் ‘நிமித்தம்’ நாவல் வெளியீடு நடந்தது. அந்த விழா முடிந்ததுமே ரஷ்ய கலாச்சார மையத்தின் வெளியே வைத்து ஒரு போலிஸ்காரன், திருடனை விசாரிப்பது மாதிரிதான் வேடியப்பனை விசாரித்தேன். “போடா மயிரு. நீ யாரு இதையெல்லாம் கேட்க” என்று வேடியப்பன் திருப்பிக் கேட்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக வேடியப்பன் இந்த நூலை கொண்டுவர என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பொறுமையாக விளக்கினார். இது நடந்தது என்பதற்கு அங்கிருந்த இணைய நண்பர்கள் செ.சரவணக்குமார், விநாயகமுருகன், சிவராமன், ரமேஷ் போன்ற நண்பர்களே சாட்சி.

வேடியப்பனிடம் பேசியபோது அவர் சொன்னது. “புத்தகத்தில் சென்ஷிக்கு மட்டுமல்ல. எங்களுக்கு இந்த கதைகள் யாரிடமிருந்து, எங்கிருந்தெல்லாம் கிடைத்ததோ அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றார்.

ஓக்கே, உங்கள் கடிதத்துக்கு இவ்வளவுதான் பதில். மீதி, பொதுவான நண்பர்களுக்காக.

ஒரு புத்தகம் தொகுப்பாக வருவதற்கு முன்பு பதிப்பாளர் என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்பது பொதுவான ஆட்களுக்கு தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

தொகுப்பு என்றால் அதில் இடம்பெறும் எழுத்தாளர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமான விதி. பி.டி.எஃப். என்பதால் அந்த விதியை சென்ஷி பின்பற்றவில்லையோ அல்லது சென்ஷிக்கு அது தெரியாதோ.. அதையெல்லாம் விட்டு விடுவோம். நாளைக்கு அவருக்கு இதனால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்பவர்கள் வெடிச்சத்தம் கேட்டதுமே பறக்கும் காக்காய்களாக பறந்துவிடுவார்கள். அல்லது சென்ஷியை குறிவைத்து குதறியெடுத்து விடுவார்கள். இணையத்தில் இதெல்லாம் சகஜம். நர்சிம் விஷயத்தில் எல்லாம் நாம் பார்க்காததா என்ன.

எழுத்தாளர் மாலனின் சிறுகதை ஒன்றும் இந்த தொகுப்பில் இடம்பெறுகிறது. இதற்காக வேடியப்பன் அவரிடம் தொலைபேசியில் பேசி அனுமதி வாங்கினார். வாங்கியதோடு இல்லாமல் ஒருமுறை நேரிலும் சந்தித்து ஒரு ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டார். கதை எழுதியவர்களுக்கு ராயல்டி தரமுடியாது. பதிலுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை (விலை ரூ.650) கொடுத்துவிடுகிறேன் என்பது வேடியப்பனின் டீலிங்.

இதைப் போலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களிடம் வேடியப்பன் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. லேசாக ஒரு வரியில் இதை கடந்து போய்விடலாம். அது எவ்வளவு பெரிய வேலையென்றால், நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சுவதை விட மிகப்பெரிய வேலை. பதிப்பகங்களுக்கும், நூல்களை தொகுத்தவர்களுக்கும்தான் இந்த வேலையை பற்றி தெரியும்.

நான் மேலே சொன்னது ஒரு தொகுப்பு உருவாகும் பெரிய பிராசஸிங்கில் இருக்கும் மிகச்சிறிய ஆரம்பக்கட்ட பணி. இதையடுத்து இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. அப்படியே டைப் செய்து இணையத்தில் ஏற்றுவது மாதிரி இது சுலபமான பணி அல்ல. ஏனெனில் இதில் நிறைய பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒருவரியில் சொன்னால் கொஞ்சமென்ன, நிறையவே ரிஸ்க்கான வேலைதான்.

பதிப்பாளரின் பணி மட்டுமல்ல. தொகுப்பாசிரியரின் பணியும் கடினம்தான். இணையத்தில் எழுதும்போது நூறு சிறந்த சிறுகதைகள் என்று ஜாலியாக லிஸ்ட் போட்டுவிடலாம். நாமெல்லாம் புது வருஷம் வந்ததுமே டாப் 10 தமிழ் மூவிஸ் என்று லிஸ்ட்டு போடுகிறோமே அதுபோல. ஆனால் ஒரு பட்டியல் முழுத்தொகுப்பாக புத்தகமாக வரும்போது, அந்த கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று விலாவரியாக, விளக்கமாக ஜஸ்டிஃபை செய்ய வேண்டும். இந்த தேர்வுகளில் ஏதேனும் தவறு என்று இருந்தால் தொகுத்தவரின் டப்பாவை மற்ற இலக்கியவாதிகள் ஒன்று சேர்ந்து டேன்ஸ் ஆட வைத்து விடுவார்கள்.

ஆகவே தோழர்களே! என்னுடைய இறுதி கருத்துகள் இவைதான்.

என்னைக் கேட்டால் ‘ஈகோ’வை விட்டு விட்டு வேடியப்பன் ஒருமுறை சென்ஷிக்கு போன் செய்து பேசிவிடலாம். அல்லது எஸ்.ரா.வே கூட சென்ஷியிடம் பேசிவிடலாம். இதில் யாருக்கும் கவுரவக் குறைச்சல் ஏற்பட்டு விடாது.

தொகுப்பு வெளியான பிறகு, ஒருமுறை எஸ்.ரா. தலைமையில் சென்ஷிக்கு வேடியப்பன் பாராட்டுவிழா நடத்தலாம். அவ்வாறு ஒரு விழா நடந்தால்கூட இணையத்தில் ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்று tag போட்டு எழுதுபவர்கள் நேரில் வந்தெல்லாம் பாராட்ட மாட்டார்கள். அவர்களால் லைக்கும், கமெண்டும்தான் போடமுடியும். இவர்களை நம்பி தேவையில்லாமல் தோழர் சென்ஷி எதிலும் ஏடாகூடமாக ஈடுபட்டுவிட வேண்டாமென்று அனுபவஸ்தன் என்கிற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன். இப்படியே ஏத்திவிட்டு, ஏத்திவிட்டுதான் உடம்பை ரணகளமாக்கி அனுப்புவார்கள். அம்மாதிரி ரணகளமாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது சென்ஷிக்கும் தெரியும்தானே?

27 ஜூன், 2011

மாரி பேசுகிறேன்!


அன்பான எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு கடிதங்கள் வருவதில்லை. அதனாலேயே யாருக்காவது நானாவது கடிதம் எழுதணும்னு உங்களுக்கு எழுதறேன். எனக்கு கடிதம் எழுத நீ யார் என்று கேட்காதீர்கள். என்னை உங்கள் மகனாகவோ, தம்பியாகவோ நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடிதம் எழுதாமல் வேறு யாருக்குதான் நான் எழுத முடியும்? அதுவுமில்லாமல் என்னுடைய கதையை, உறவுகளான நீங்களே கேட்காவிட்டால், வேறு யார்தான் கேட்பார்கள்?

என் பெயர் மாரிச்செல்வம். மூக்கையூர் என்கிற கடலோர குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். வயது பதினைந்து. என் அப்பா முனியசாமி ஒரு மீனவர். யாராவது கடலுக்கு மீன் பிடிக்க போகும்போது, கூட ஒத்தாசைக்கு போவார். கூலி வாங்கிக் கொள்வார். மீன் பிடிக்க அப்பாவுக்கு சொந்தமாக படகு எல்லாம் கிடையாது.

அம்மா அப்பாவோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பம். ஐந்து மகள்கள், இரண்டு மகன்கள். நான்தான் கடைசி. அண்ணனுக்கும், நான்கு அக்காக்களுக்கும் எப்படியோ சிரமப்பட்டு திருமணம் முடித்துவிட்டார் அப்பா. இவ்வளவு பெரிய குடும்பத்தை கூலிவேலை செய்து காப்பாற்ற வேண்டுமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்?

அப்பாவுக்கு ரெண்டே ரெண்டு கனவு உண்டு. ஒன்று, சொந்தமாக ஒரு கட்டுமரம் வாங்கி மீன்பிடித் தொழில் செய்யவேண்டும். இரண்டு, தன் குடும்பத்தில் ஒருவராவது நல்ல படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போகவேண்டும்.

எங்கள் ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் எட்டாவது வரை படித்தேன். உயர்நிலைப் பள்ளிக்கு வேறு ஊருக்கு போக வேண்டும். அதுவரை படிக்கவே PAD என்கிற அரசுசாரா அமைப்புதான் எனக்கு உதவிக்கிட்டிருந்தது. ஆமாங்க. Christian Children Fund of Canada (CCFC) என்கிற கிராமப்புற குழந்தைகள் உதவித்திட்டம் மூலமாதான் நான் படிச்சிக்கிட்டிருந்தேன். குடும்பச்சூழலை உணர்ந்து அப்பாவோடு மீன் பிடிக்க போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு ரொம்ப கோபம்.

நல்லா படிச்சிக்கிட்டிருந்த பார்வதி அக்கா கூட எட்டாவதோட படிப்பை ஏறக்கட்ட வேண்டியதாயிடிச்சி. நானாவது நல்லா படிச்சி பெரிய அதிகாரியா வருவேன்னு அப்பா எம்மேலே நம்பிக்கையை வெச்சிக்கிட்டிருந்தாரு.

பெரிய அக்கா முருகேஸ்வரியோட ஊருக்குப் போயி தங்கி, அங்கிருந்து படிக்கிறதுக்கு அப்பா ஏற்பாடு பண்ணினார். முத்துப்பேட்டையில் அக்கா வீடு. பக்கத்தில் இருந்த வேலாயுதபுரம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். படிப்புலே கவனம் இருந்தாலும், குடும்பச் சூழல் என்னை வருத்திக்கிட்டே இருந்தது. குடும்ப வருமானத்துக்கு நானும் ஏதாவது செய்யணுமேன்னு மெனக்கெடுவேன்.

லீவு நாள்லே அம்மாவோடு கரிமூட்டம் அள்ளுற வேலைக்குப் போவேன். கரிமூட்டம்னா ரொம்ப பேருக்கு தெரியாது. நிறைய ஊர்லே செங்கல் சூளை போடுறது மாதிரி, எங்க ஊரு பக்கம் கருவேல மரங்களை எரித்து கரி போடுற தொழிலுக்கு பேரு கரிமூட்டம். அப்புறம் மாமா முனியனோட கடல்வேலைக்கும் அப்பப்போ போவேன். இது அக்காவுக்கு புடிக்காது. “படிக்குற புள்ளை படிப்புலேதான் கவனம் செலுத்தணும். வேலை, வெட்டிக்கு போயிக்கிட்டிருந்தா படிப்பு கெட்டுடும்”னு திட்டும்.

அக்கா பத்தி இங்கே சொல்லியே ஆவணும். முருகேஸ்வரி அக்காதான் எங்க குடும்பத்துலே மூத்தது. முனியன் மாமாவுக்கு கட்டிக் கொடுத்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. மத்த அக்காங்களுக்கு கல்யாணம் பண்ணுறதுலே தொடங்கி, அப்பாவோட குடும்பப் பாரத்தை இவங்களும் சேர்ந்து சுமந்தாங்க. இவங்களுக்கு மூணு பெண் குழந்தை. ஒரு ஆண் குழந்தை. என்னையும் இவங்களோட மகன் மாதிரியே பார்த்துக்கிட்டாங்க.

பத்தாவது பரிட்சை நெருங்கிட்டிருக்கு. தீவிரமா படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போதான் திடீருன்னு எங்க குடும்பத்துமேலே அந்த இடி விழுந்தது. ஆமாங்க, அப்பா செத்துப் போயிட்டாரு. அவருக்கு மூளையிலே கட்டி. ஆஸ்பத்திரியிலே எவ்வளவோ ட்ரீட்மெண்ட் எடுத்தும் பிரயோசனமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே எனக்கு படிப்பு தேவையான்னு திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அம்மா சண்முகம்தான் என்னை தேத்தி மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனாங்க. அவங்களும் மகள் வீட்டுக்கே வந்து தங்கி விறகு வெட்டுறது, கரிமூட்டம் போடுறது, கூலிவேலைக்குப் போவுறதுன்னு அப்பாவோட குடும்பச் சுமையை முழுமையா சுமக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அம்மா, அக்கா, மாமான்னு என் சொந்தங்க ஆவலா எதிர்ப்பார்த்த பரிட்சையும் வந்துடிச்சி. முதல் ரெண்டு பரிட்சை எழுதிட்டு வந்தப்போ, அக்கா கேட்டுச்சி. “என்னா மாரி. எப்படிடா பரிட்சை எழுதறே”ன்னு. “நல்லாதான் எழுதிக்கிட்டிருக்கேன்”ன்னு சொல்லிட்டு, அக்கா முகத்தை பார்த்தேன். அக்காவோட முகம் ரொம்ப சோர்வா இருந்திச்சி. “உடம்பு சரியில்லை. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி கரிக்குது. கொஞ்ச நேரம் தூங்குறேன். நீ போய் படி”ன்னு சொல்லிட்டு போய் தூங்க ஆரம்பிச்சது. ஏற்கனவே ஒருவாட்டி அக்காவுக்கு ஹார்ட் ஆபரேஷன் வேற பண்ணியிருக்காங்க.

அன்னைக்கு நைட்டு மறுபடியும் அக்காவுக்கு நெஞ்சுவலி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கோம். போற வழியிலேயே செத்துடிச்சி. கதறி அழுவறேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?

“டேய். உன் அக்கா நீ நல்லா படிக்கணும்னுதான் ஆசைப்பட்டுது. நாளைக்கு பரிட்சைக்கு போய் படிடா”ன்னு மாமா என்னை தேத்தி அனுப்பறாரு. அன்னைக்கு நான் பரிட்சை எழுதிட்டு வந்தபிறகுதான் அக்காவோட இறுதிச்சடங்கையே மாமா தொடங்கினாரு. அம்மா மாதிரி என்னை வளர்த்த அக்கா சாவுக்கு பக்கத்துலே கூட இருக்க முடியாம பரிட்சை எழுதினேங்க.. இதே சோகத்தோடதான் அடுத்த ரெண்டு பரிட்சையையும் எழுதி முடிச்சேன்.

அப்பாவும் போயிட்டாரு, அக்காவும் போயிடிச்சி, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடிச்சி. அம்மாவோட உதவிக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். எல்லாத்தையும் கொஞ்சம், கொஞ்சமா மறக்கவும் ஆரம்பிச்சேன்.

பரிட்சை முடிவுகள் வந்த அன்னிக்கு, எனக்கு முடிவுகளை தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்லை. முதல்நாள் போட்ட கரிமூட்டத்துலே இருந்து நானும், அம்மாவும் கரி அள்ளிக்கிட்டிருந்தோம். “டேய் மாரி. உன்னைப் பார்க்க உன் ஸ்கூல் சிநேகிதங்க வந்திருக்காங்க”ன்னு அக்கா சொல்லிச்சி. வெளியே வந்துப் பார்த்தேன். “டேய் நீ தாண்டா ராமநாதபுரத்துலே டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்டு. 490 மார்க் வாங்கியிருக்கேடா”ன்னு சொல்லி கட்டி அணைச்சுக்கிட்டாங்க.

தமிழ் 95, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. அக்காவோட இறுதிச்சடங்கு அன்னைக்குதான் கணக்குப் பரிட்சை நடந்தது. அதுலே நூத்துக்கு நூறு வாங்கியிருக்கேன். என்னோட சேர்ந்து பரிட்சை எழுதின என்னோட அக்காமவ நிர்மலாவும் கூட 432 மார்க் வாங்கியிருக்கா.

அக்காவும், அப்பாவும் ஆசைப்பட்டமாதிரியே நல்ல மார்க் வாங்கியிருக்கேன். என்ன, அதைப் பார்க்கதான் அவங்க இல்லை. மாவட்டத்துலேயே முதலாவதுன்னு தெரிஞ்சதும் அம்மாவுக்கும், மாமாவுக்கும் ரொம்ப சந்தோஷம். இவங்களுக்கு இந்த சந்தோஷத்தைவிட பெருசா என்னாலே வேறு எதைக் கொடுத்துட முடியும்?

அடுத்து +1 படிக்கணும். PDA நிறுவனம்தான் இதுக்கும் உதவ முன்வந்திருக்காங்க. வறுமை, அப்பா-அக்கா மரணம்னு அடுத்தடுத்து சோகங்களையே சந்திச்சிக்கிட்டிருக்கிறதாலேயோ என்னவோ கொஞ்சநாளா எனக்கு தாங்கமுடியாத தலைவலி. உள்ளூர் டாக்டருங்கள்லாம் உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லப்பான்னு சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்லே ஒரு டாக்டர் கிட்டே காட்டுனப்போ, இருதயத்துலே ஏதோ பிரச்சினைன்னு சொல்றாரு. அறுவை சிகிச்சை செய்யணுமாம். அதையும் உடனே செய்ய முடியாதாம். 21 வயசுலேதான் செய்யணுமாம். பாருங்க சார். பட்ட காலிலேயே திரும்ப திரும்ப பட்டுக்கிட்டிருக்கு. என்னதான் வாழ்க்கையோ தெரியலை.

எது எப்படியோ, இவ்வளவு நேரம் என் கதையை பொறுமையா கேட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி. எவ்வளவு பெரிய சோகத்தையும் கல்வியாலேதான் என்னை மாதிரி மாணவர்கள் கடக்க முடியும் என்பதற்கு என்னோட கதைதான் நல்ல உதாரணம்.

என் மனசுலே இருந்த மொத்த பாரங்களையும், இந்த கடிதத்தில் கொட்டித் தீர்த்ததுலே மனசு ரொம்ப லேசாகியிருக்கு. அம்மாவும், மாமாவும்தான் எனக்காக கவலைப்பட்டுக்கிட்டிருக்காங்க. இனிமே நீங்களும் நான் நல்லாருக்கணும்னு நெனைப்பீங்க. உங்களோட ஆசியாலே, நான் நிச்சயம் நல்லா வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க.

என்றும் உங்கள் அன்புள்ள
மாரிச்செல்வம்
முக்கையூர் கிராமம்,
கடலாடி ஒன்றியம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

(நன்றி : புதிய தலைமுறை கல்வி மற்றும் பத்ரி)

மாரிச்செல்வத்துக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்கள் feedback@puthiyathalaimurai.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது தொடர்பு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

29 மார்ச், 2010

வானிலை அதிகாரி விளக்கம்!

கடந்த அக்டோபர் மாதம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பினை கேட்டுவிட்டு ரெயின்கோட் போட்டு வந்து மழையே வராமல், கடுமையான வெயில் அடித்த ஒரு தினத்தில் எழுதிய பதிவு இது.

சென்னை வானிலை ஆய்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியான திரு கே.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பதிவினை வாசித்துவிட்டு, தனது விளக்கத்தினை நம்முடைய மின்மடல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.

திரு. கே.வி.பி. அவர்களின் கடிதம் கீழே :


திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,

இது தங்களுடைய வானிலை ஆராய்ச்சிமையம் பற்றிய அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ள செய்தி பற்றிய மின்னஞ்சல், தாமதத்திற்கு மன்னிக்கவும், இடையில் நான் தங்களின் வலைப்பூவில் என்னுடைய கருத்துக்களைப் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன், ஆனால் அது உங்கள் வலைப்பூவில் பதிவாகவில்லை,  எனவே இந்த மின்னஞ்சல்.

என் பெயர் கு,வை, பாலசுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் உதவி வானிலையாளராகப் பணிபுரிகிறேன், முனைவர் எஸ்.ஆர்.இரமணன் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான பணிகளின் அதிகார பூர்வ ஊடகத் தொடர்பாளர். அவர் விடுமுறையில் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் வெளியில் சென்றாலோ அவருக்குப் பதிலாக முனைவர் எஸ், பாலச்சந்திரன் என்பவரும் திரு ஈ.குழந்தைவேலு என்பவரும் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றுவர்.

வானிலை ஆய்வு மையம் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானவை. பல்வேறு விதமான தலைப்புக்கள் பற்றிய தங்களின் வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் அறிவியல் படித்தவராக் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

வானிலை என்பது வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும், அதாவது பூமியை ஓட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றே இல்லாமல் அமைதியாக உள்ளதா? அல்லது புயல் வீசுகிறதா? வானம் மேகமற்று உள்ளதா அல்லது மேகமூட்டமாக உள்ளதா? என்பதனையே வானிலை என்கிறோம்.

வெதர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வானிலை மாற்றம். புயல். லேசான மழை. பெருந்துளி மழை.  துன்பங்களைச் சமாளித்தல். காற்றோடு கப்பலைச் செலுத்துதல்’  போன்ற பிற விளக்கங்களும் உள்ளன.

‘வானிலை. தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை. ஈர்ம்பதக்  குளிர்வாடை நிலை. காற்றின் திசை. காற்று விசையாலையின்  பாய்த்திரையின் சாய்கோண அளவு’ என்று பல விதமான பொருள் அளிக்கப்பட்டுள்ளது,

எனவே வானிலை என்பதனை ஓரு குறிப்பிட்ட இடத்தின் ஓரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக்கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாக சென்னையில் காலை எட்டு மணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி ஆகியவை உள்ளனவா? போன்ற வானிலைக் கூறுகளின் தொகுப்பே சென்னையின் அப்போதைய வானிலையாகும்.

எனவே வானிலையை அளவீட்டு முறையில் [Quantitative method] சொல்வதானால் இதனை பத்திற்கும் மேற்பட்ட மாறிகளால் [Variables] குறிப்பிடவேண்டும். இந்தியா முழுவதும் 559 தரைநிலைக் கண்காணிப்புக்கூடங்களிலிருந்து பெறப்படும் வானிலைத் தகவல்களை non linear equationஆக மாற்றி, கணினியில் கொடுத்து அடுத்தநாள் வானிலையின் சில கூறுகள் எவ்வாறு இருக்கும் என்று விடைகாண முயன்றால் தற்போது வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள கணினி வகைகள் 3 முதல் 12 மணி நேரத்தில் விடையளிக்கும். இவ்வகை கணினி வழி வானிலை முன் எச்செரிக்கைகளும் தவறாக இருக்கக்கூடும்.

இது தங்களின் குற்றச்சாட்டிற்கு ஓரு சிறிய விளக்கமே.  தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் எங்கள் அலுவலகத்திற்கு ஓரு நாள் வாருங்கள், மேலும் அதிக விளக்கங்ளைப் பெறலாம்.

இப்படிக்கு தங்கள்
கே.வி.பாலசுப்பிரமணியன்
M.Sc  (Physics), M.A (Tami), M.A(History,) M. Phil
Assistant Meteorologist,
Regional Meteorological Centre,
Chennai – 600006



கே.வி.பி. சார்!

நான் அறிவியல் படித்தவனல்ல. ஒரு சராசரி மனிதனுக்கு வானிலை ஆய்வு மையம் மீது இருக்கும் அசட்டு கோபமே அப்பதிவில் வெளிபட்டது. அது எவ்வளவு அபத்தமானது என்பதை தங்களது கடிதம் மூலமாக உணர்கிறேன். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இதுபோன்ற அசட்டுக் கோபங்களை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிப்பது என்பது அரசுத்துறை மீதான என்னுடைய மதிப்பினையும், நம்பகத்தன்மையையும்  மேலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது. தங்களைப் போன்ற அதிகாரிகளால் தேசம் பெருமையடையும். நன்றி!

சென்னையில்தான் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா