31 மே, 2010

வருது.. வருது.. விலகு.. விலகு..

மாஞ்சா வேலு!

அந்த இயக்குனரை வைத்து தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் அவர். மூன்றாவது படத்துக்கு திட்டமிடும்போது ஈகோ மோதல். படங்களின் வெற்றி இயக்குனருடையதா, தயாரிப்பாளருடையதா என்பது குறித்த சர்ச்சை. புது இயக்குனரை உருவாக்கி ஹிட் அடித்து காட்டுகிறேன் என்று தயாரிப்பாளர் விரலை சொடுக்குகிறார். வேறு தயாரிப்பாளரின் படத்தை இயக்கி நான் தலைநிமிர்ந்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் பதிலுக்கு பஞ்ச் டயலாக் அடிக்கிறார்.

அடுத்த தயாரிப்புக்கு மும்முரமாக கதை கேட்க ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர். முந்தைய இயக்குனரின் அசிஸ்டெண்டாக இருந்த ஒருவர் கதை சொல்ல வருகிறார். கதையை கேட்ட தயாரிப்பாளருக்கு கடுமையான எரிச்சல். இதையெல்லாம் படமா எடுத்தா வேலைக்கு ஆகுமா?

மறுநாள் இரண்டாவதாக இன்னொரு இளைஞர் கதை சொல்ல வருகிறார். கதை பிரமாதம். உடனே ஆரம்பிச்சுடலாமா? ஹீரோவா சரத்குமாரை போடலாமா? பட்ஜெட்டை பத்தி கவலையே இல்லை! தயாரிப்பாளர் உற்சாகமடைகிறார்.

இளைஞர் மென்மையாக புன்னகைத்தவாறே சொல்கிறார். “நேத்து ஒருத்தரு சொன்னாரில்லை. அதே கதைதான் சார் இது. அவரு என்னோட நண்பர்தான். நல்லா படமெடுப்பாரு. ஆனா சரியா கதை சொல்ல தெரியாது. அவரை நம்பி வாய்ப்பு கொடுங்க!”

தயாரிப்பாளர் இவரை நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்!

படத்தின் பெயர் ‘ஜெண்டில்மேன்!’

முதலில் கதை சொன்ன இளைஞரின் பெயர் இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாவதாக அதே கதையை தன் பாணியில் சொல்லி வாய்ப்பு வாங்கியவர் வெங்கடேஷ். வாய்வழியாக சினிமாவில் வேலை பார்ப்பவர்கள் மூலமாக சொல்லப்படும் கதை இது. நிஜமாவென்று தெரியாது.

வெங்கடேஷுக்கு மசாலா படம் மட்டும்தான் எடுக்கத் தெரியும் என்று இதுவரை அவர் எடுத்த எல்லா படங்களையும் பார்த்தால் தெரிகிறது. கொடுத்த பட்ஜெட்டில் கனகச்சிதமாக யார் கால்ஷீட்டையும் வீணாக்காமல் நறுக்கென்று படமெடுப்பவர் என்று கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெயரெடுத்திருக்கிறார். இவரை வைத்து படமெடுத்தால் லாபம் கொட்டுகிறதோ இல்லையோ, நஷ்டம் நிச்சயமாக இருக்காது என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். அங்காடித்தெரு மூலமாக நல்ல நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எனவேதான் அருண்விஜய்யின் எதிர்காலத்தை வெங்கடேஷிடம் தந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அருண்விஜய் திறமையான நடிகர். புத்தன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் அவரது நடிப்பாற்றல் நன்றாக வெளிபட்டிருந்தது. நடனமும் அருமையாக ஆடுவாரென்று ப்ரியம் போன்ற படங்களில் தெரிந்தது. சுந்தர் சி இயக்கிய முதல் படத்தின் ஹீரோ இவர். ஏனோ செண்டிமெண்டலாக பதினைந்து ஆண்டுகளாகியும் மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தவம் படத்தின் விளம்பரப் பணிகளின் போது இவரது கமிட்மெண்டான உழைப்பை நேரிலேயே கண்டிருக்கிறேன்.

வெங்கடேஷ் - அருண் விஜய்யின் முந்தைய கூட்டணி படைப்பான ’மலை மலை’ ஒரு குறைமசாலா பிரசவம். ஆனாலும் பி அண்ட் சியில் நன்றாகவே ரீச் ஆனது. வெங்கடேஷ் மேஜிக். இதே கூட்டணியின் மாஞ்சாவேலு ஒரு முழுமையான மசாலாவாக வந்திருக்கிறது. இன்னும் ஓரிரண்டு படங்கள் இதே டெம்போவில் வருமானால் அருண் விஜய்யும் மிகச்சுலபமாக முன்னணிக்கு வந்துவிடலாம். மினிமம் கேரண்டி வசூல் நாயகனாகி விடலாம்.

கருப்பழகிகளை தமிழர்கள் சீண்டமாட்டார்கள், மும்பையின் சிகப்பு இறக்குமதிகளுக்குதான் கோயில் கட்டுவார்கள் என்றொரு தவறான கருத்தாக்கம் நிலவுகிறது. சரோஜாதேவி, சரிதா, நதியா, ரஞ்சிதா, ரோஜா, சிம்ரன்-னென்று ஏராளமான கிளியோபாட்ராக்களை கண்மூடித்தனமாக ஆதரித்து இந்த கருத்தாக்கத்தை ஏற்கனவே தமிழர்கள் கட்டுடைத்திருக்கிறார்கள். ஹன்சிகாவும் இந்த லிஸ்டில் சேரலாம் (இவர் கருப்பு என்றுதான் மாஞ்சாவேலுவை கண்டு யூகிக்க முடிகிறது)

சுடிதாரிலும், தாவணியிலும் சுமாராக இருப்பவர், திடீரென்று ட்ரீம்ஸ் சாங் டூபீஸ்ஸில் ஜெனிபர் லோஃபஸ், நவோமி கேம்பல் ரேஞ்சுக்கு பளபளவென ஃப்லிம் காட்டுகிறார். வெய்யிலில் டேனிங் ஆகாத அவரது நெஞ்சுப்பகுதி ரசிகர்களை அசரடிக்கிறது. இடையும் அமோகம். விஜய் அல்லது அஜித்தோடு ஒரே ஒரு படத்தில் புக் ஆனாலும் சடாரென ஓவர் நைட்டில் முன்னணிக்கு வந்துவிடலாம்.

படத்தைப் பற்றி..

ம்ம்...

மசாலா வேலு!

29 மே, 2010

மு.க. ஸ்டாலின் - ஒரு பார்வை!


தமிழகத்தின்  துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்று இன்று ஒரு வருடமாகிறது. இந்த நிறைவினையொட்டி இன்று காலை முதல்வர் கலைஞரைச் சந்தித்து, துணை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசியலின் அடுத்த  தலைமுறையினர் மத்தியில் சற்று வித்தியாசமான தலைவராகத் தென்படுபவர்  மு.க. ஸ்டாலின். துணைமுதல்வராக அவர் பொறுப் பேற்றுக் கொண்ட இந்த ஒரு வருடகாலப் பகுதிகளில், நிர்வாகத் திறன்மிக்கத் தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்தி வருகின்றார் என்றே சொல்லப்படுகிறது.
அவர் குறித்த ஒரு பார்வையாக இக் கட்டுரை அமைகிறது.

1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்புக்கு காரணம் மிசா, ஜனநாயகத்தின் கோரமான இன்னொரு முகம். இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய கொடுங்கோல் பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம். திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை. 

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை தாக்கி தைரியமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அவர் தந்தையின் பேச்சை போல மடைதிறந்த வெள்ளமாக கொட்டவில்லை. தமிழ்நடை படுமோசம். இருப்பினும் அவர் பேசிய விஷயங்கள் நேரடியாக மக்களின் நெஞ்சை தொட்டது. அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். அவர்தான் தற்போதைய தமிழகத்தின் துணைமுதல்வர்.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், எதிர்கால முதலமைச்சர் என்றும், தளபதி என்றும், சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் எரிச்சலோடும் பார்க்கப் படுபவர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக முதல்வர் கலைஞரின் மகன் ஸ்டாலின்!

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக  வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவையே. சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர். ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியின் சிகரத்தை அவரால் எட்டமுடியவில்லை. கலையுலக வாழ்க்கையிலும் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இளைய மகன்   மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சி  கலைக்கப்பட்டு, 'மிசா' சட்டத்தில் திமுக முன்னணியினர் கைது செய்யப்படுகிறார்கள். கலைஞரின் மகன் என்பதால் ஸ்டாலினும் கைது செய்யப்படுகிறார். சிறைக்காவலர்களிடம் ஒரு ஹிட்லிஸ்ட் இருக்கிறது, யார் யாரை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டுமென்று. அந்த ஹிட் லிஸ்டில் அவர் பெயரும் இருந்தது. இருட்டில் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் ஸ்டாலின் துவண்டார். தலைவர் மகனின் உயிரை காக்க வேண்டுமென்று 'மிசா' சிட்டிபாபு குறுக்கே புகுந்து, அவர் மீது விழுந்த தடியடிகளை தாங்கினார். சிறைச்சாலை கொடுமைகளுக்கு சாட்சியாக தன் இன்னுயிரை நீத்தார். இன்றும் ஸ்டாலினும், கலைஞரும் 'மிசா' சிட்டிபாபுவை நன்றியோடு நினைவு கூர்வதை காணலாம்.
சிறைச்சாலை அனுபவங்கள் ஸ்டாலினை அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மிசா கைதியாக இருந்தவர் வெளிவந்ததும் , திமுகவின் மாநில இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தொண்டர்களால் முடிவெடுக்கப்பட்டார்.

அரசியல் ஒரு  சதுரங்க களம். நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றி காண்பதும் இங்கே அதிசயமல்ல. ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், அவர்களுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் தோற்றத்துக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இதற்கு சரியான உதாரணங்களாக ஸ்டாலினையும், அதிமுகவின் ஜெயலலிதாவையும் சொல்லலாம்.

ஸ்டாலினோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே  அவரது வெள்ளை மனம் தெரியும். அவரது அண்ணன் அழகிரி மாதிரி அடாவடியான ஆசாமி அல்ல இவர். இன்னொரு அண்ணன் முத்து போல  அப்பாவுக்கு அடங்காத பிள்ளையும் இல்லை. அவருடைய உண்மையான சுபாவத்துக்கு நேரெதிரான ஒரு தோற்றம் தான் மக்கள் மத்தியில் ஸடாலின்  குறித்து நிலவுகிறது. இந்த தோற்றத்தை மாற்ற ஸ்டாலினும், துளிகூட முயற்சி எடுத்ததில்லை என்பது தான் சோகம்.

ஸ்டாலினோடு ஒரு செய்தி வாசிப்பாளரை இணைத்து கிசுகிசு வந்தபோது அதை மறுத்து இவர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இந்த வதந்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படாமல் வாய்மொழியாக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தது. தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஸ்டாலினோடு, அந்த செய்தி வாசிப்பாளர் இணைந்து நடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். அப்பொதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பவர்கள் நாடகம் முடியும் வரை செய்தி வாசிக்கக் கூடாது என்பது விதி. உடனே ஸ்டாலின் செய்தி வாசிப்பாளரை ஏதோ செய்துவிட்டார் என்றொரு பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஒரு அறிக்கை மூலமாக கூட இதை பொய்யென்று அவர் சொல்லியிருக்கலாம். ஏனோ மவுனமாகவே இருந்துவிட்டார்.

ஸ்டாலினுக்கு ஊடகத் தொடர்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்று லைம்லைட்டில் இருந்தாலும் கூட பத்திரிகைகளில் இவரைப் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை காண்பது அரிது. ஸ்டாலின் தந்தை கலைஞர் எண்பதைக் கடந்த நிலையிலும் கூட தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஊடகத் தொடர்பு விஷயத்தில் தந்தைக்கு நேர்மாறாக ஸ்டாலின்  இருப்பது அவரது வளர்ச்ச்சிக்கு பெரிய தடைக்கல் தான். துணை முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்த ஊடகத் தொடர்பில் கொஞ்சம் பரவாயில்லை.

வாழைமரத்துக்கு  கீழே வளர்ந்த கன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின்  இன்னேரம் இன்னொரு  மரமாகியிருப்பார். இவரோ கலைஞர் என்ற ஆலமரத்தில் விழுதாக  கட்சியில் இன்னமும் பத்தோடு  பதினொன்றாக இருக்கிறார். கலைஞரை மீறி கலைஞரை தவிர்த்து யாராலும் திமுகவில் வளரமுடியாது  என்பதும் ஒரு காரணம். எதிர்க்கட்சிகளோடு, தன் கட்சியினரே கூட சில சமயம் பேசும் 'குடும்ப அரசியல்' குற்றச்சாட்டுக்கு பயந்து கலைஞரே ஸ்டாலினின் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1996ல் திரும்ப ஆட்சிக்கு வந்தபோதும் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தராமல் பொறுமை காத்தார் கலைஞர். அப்போதே அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இன்று திடீரென்று 'குடும்ப ஆட்சி' என்று யாரும் முணுமுணுத்துவிட முடியாது. அப்பா தான் தரவில்லை, நாமே கேட்டு வாங்கிவிடுவோம் என்று ஸ்டாலின் முயற்சிக்கவேயில்லை. வாய்ப்பு கிடைத்ததுமே அழகிரி, தயாநிதி போன்றோர் முண்டியடித்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதைப் போன்ற தந்திரங்கள், மென்மையான குணம் கொண்டஸ்டாலினுக்கு கைவரவில்லை.

ஆனால் நிர்வாகம்  என்பதில் ஸ்டாலின்  கில்லி. சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற  போதும் சரி. பின்னாளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணைமுதல்வராகவும் எதிர்தரப்பினரும் பாராட்டும் வண்ணமே சிறந்த நிர்வாகியாக பெயரெடுத்திருக்கிறார். ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த பின்னர் ‘ஊழல்’ என்பதின் நிழல் படியாத, குற்றச்சாட்டுகள் கூட இல்லாத ஒரே இந்திய அரசியல் தலைவர் இவராக மட்டும்தான் இன்றைய தேதியில் இருக்க முடியும் என எதிரணியில் சிலரே சொல்கின்றனர்.
1989 மார்ச் மாதம் கலைஞர் சட்டமன்றத்திலே தாக்கப்பட்ட போதும் சரி, 2001 சட்டமன்றத் தொடரின் போது அவரை சட்டமன்றத்திலே கீழ்த்தரமாக விமர்சித்தபோதும் சரி.. ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே திமுக உறுப்பினர் ஸ்டாலின்  மட்டுமே. இதுபோன்ற நிதானமான இவரது அணுகுமுறை ஒரு எதிர்க்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபடுமா என்று தெரியவில்லை. 'ஜால்ரா' அடித்து நெருக்கமாகுபவர்களுக்கு உடனே கட்சிப் பதவியோ, தேர்தல் சீட்டோ வாங்கித் தந்துவிடுவது ஸ்டாலினின் இன்னொரு பலகீனம். இதனால் அனுபவசாலிகள் பலரை அவருக்கு தெரியாமலேயே அவர் ஓரம் கட்டி வருகிறார்.

கோபம், பழிவாங்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வஞ்சம் - இந்த குணங்கள் எல்லாம் இல்லாத தற்போதைய தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி துணைமுதல்வர் ஸ்டாலின் .  தன்னை அவமானப்படுத்திய எதிரியை கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சுபாவம் படைத்தவர் அவர். கராத்தே தியாகராஜன் மூலமாக கடுமையான அவமானங்களை சந்தித்த ஸ்டாலின், பின்னாளில் அவரையே நண்பராக ஏற்றுக் கொண்டார்.

எப்படியும்  வென்றாக வேண்டும் என்ற வெறி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவை. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இந்த வெறி இருந்ததால் தான் அவர்கள் வெற்றிகாண முடிந்தது. இப்படிப்பட்ட உணர்வு எதுவும் ஸ்டாலினிடம் இன்று இருப்பதாக தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு ஸ்டாலினுக்கு அரசியல் களத்தில் எதிரிகளாக இருக்கப்போவதில் முக்கியமான இருவர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த். வெற்றிக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். மென்மையான அரசியல் நடத்தும் ஸ்டாலின் இவர்களை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.

ஸ்டாலின் இவ்வளவு  பலகீனமாக இருக்கிறாரே? கலைஞரைப் போல திறமையான தலைவராக இவரால் ஆக முடியாதா என்ற ஐயம் இதுவரை வாசித்தவர்களுக்கு தோன்றலாம். இதற்கு விடை காலத்தின் கையில் தானிருக்கிறது.

ஸ்டாலினையும், இந்திராவையும் பல வகைகளில் ஒப்பிட முடியும். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். மிசா சட்டத்தில் சிறைக்கு சென்றதை தவிர்த்து ஸ்டாலின் அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்ததில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி இந்திராவை அரசியலில் ஈடுபட வைத்ததோ, அதுபோலவே தான் ஸ்டாலின் திடீரென கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியதாகியது. 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறையும்போது இந்திரா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக தானிருந்தார். 1964 முதல் 1969 வரை லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்தபோதும் இன்றைய ஸ்டாலின் போல அரசியல் பதுங்கிதான் கிடந்தார். 1969ல் காங்கிரஸை பிளந்து அவர் எடுத்த விஸ்வரூபம் யாருமே எதிர்பாராதது. இந்திராவுக்குள் அப்படியொரு ஆளுமைத்திறன் இருந்ததை காமராஜர் கூட கணிக்கத் தவறி விட்டார்

ஒரு தலைவன் உருவாக அவனது திறமையும், அனுபவமும் மட்டுமே முக்கியமல்ல. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் தலைவர்களை உருவாக்குகிறது. தமிழகத்தின் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்குமா..?
(நன்றி : 4tamilmedia.com)

ஸ்டைலு.. மயிலு..

ஸ்டைலு ஸ்டைலுதான்
இது சூப்பர் ஸ்டைலுதான்
இந்த ஸ்டைலுக்கேத்த
மயிலு நானுதான்!

28 மே, 2010

கே.எஃப்.சி. சிக்கன்!

“ப்ரெட் பீஸ் மாதிரி சாஃப்ட். செம டேஸ்ட்” என்று இந்திய நகர்ப்புற மேல்தட்டு இளசுகளின் நாக்குக்கு மோகம் கூட்டுவது கே.எஃப்.சி. சிக்கன். நவீன வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டுகள், பரிமாற சுறுசுறுப்பான இளைஞர்கள், உச்சஸ்தாயியில் ஒலிக்கப்படும் மேற்கத்திய இசை, டேபிள் முழுக்க இளசுகளின் ஆக்கிரமிப்பு என்று ஒவ்வொரு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுமே பார்ட்டி மூடில் பரவசமாக இருக்கின்றன. சாப்பிட வருபவர்களை சத்தம் போட்டு அதிரவைத்து வரவேற்பதிலேயே கே.எஃப்.சி.யின் கஸ்டமர் கேர் தொடங்கிவிடுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?

“அது மட்டும் சீக்ரட்!” என்று சிரிக்கிறார்கள் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள். கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள். இந்த சேர்மான விகித பார்முலா வேறு யாருக்குமே தெரியாதாம். கே.எஃப்.சி.யின் சீக்ரட் எக்ஸ்க்யூடிவ்களுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, சிக்கன் சமைக்கும் அந்த பார்முலாதான் கே.எஃப்.சி.யின் ஸ்பெஷல்.

“இதெல்லாம் சும்மா. பொதுவாக சிக்கனை பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும், கே.எஃப்.சி.யில் பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும் சற்று வேறுபாடு உண்டு. அதுவுமில்லாமல் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்ப அளவில் ஒரு நிமிடம் பொறிக்க வைத்து, பிறகு 120 டிகிரி செல்ஸியசுக்கு வெப்பநிலையை குறைப்பார்கள். சர்க்கரை, மாவு, மிளகு, உப்பு – இதுதான் இவங்க சொல்ற சீக்ரட் பார்முலா” என்று வில்லியம் பவுண்ட்ஸ்டோன் என்பவர் பிக் சீக்ரட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

1930ல் சாண்டர்ஸ் என்பவரால் அமெரிக்காவில் சிறியளவில் துவக்கப்பட்டது இந்த தொழில். மடமடவென்று வளர்ந்து முப்பது வருடங்களில் அமெரிக்காவிலும், கனடாவிலும் 600 கிளைகளாக பெருகியது கே.எஃப்.சி. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளோடு ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. உலகின் பெரிய உணவு நிறுவனங்களில் கே.எஃப்.சி.க்கு தனியிடம் உண்டு. ஓராண்டுக்கு சராசரியாக நூறு கோடி கோழிகள் கே.எஃப்.சி. கடைகளில் உயிரிழப்பதாக சொல்கிறார்கள்.

கே.எஃப்.சி.யில் பிரதானம் வறுத்த சிக்கன் தானென்றாலும், கிளைகள் அமைந்திருக்கும் நாடுகளுக்கேற்ப அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் உணவுகளையும், தங்களது டிரேட் மார்க் சுவையில் தருகிறார்கள். சாண்டர்ஸ் ஆரம்பித்த காலத்தில் வறுத்த கறியும், உருளை ப்ரெஞ்ச் சிப்ஸும் மட்டும்தான் ஸ்பெஷல்.

இந்தியாவிலும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பிஸ்ஸாஹட் ரெஸ்டாரண்டுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதற்கு எதிரில் அமையுமாறு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுக்கு இடம் பார்க்கிறார்கள். இதென்ன லாஜிக் என்றே புரியவில்லை.

27 மே, 2010

தமிழ்மொழி!

தமிழை தமிழர்கள் தாய் என்பார்கள். நான் மட்டும் இறுமாப்போடு சொல்லிக் கொள்ளலாம். அவள் எனக்கு மகள். பாரதரத்னாவை விட மிகப்பெரிய இந்த அந்தஸ்து கிடைத்து இன்றோடு மிகச்சரியாக ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு மழலை மகிழ்ச்சியை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

26 மே, 2010

என் முதல் பயணம் – நந்தினி ஜே.எஸ்

சினிமாவில் துரதிருஷ்டவசமாக பெண் இயக்குனர்கள் ரொம்ப குறைவு. தமிழ் சினிமாவில் என்றில்லை. உலகளவிலேயே பெண் இயக்குனர்கள் மிக மிகக்குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழில் எத்தனை பெண்கள் படமியக்கி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் விரல் விட்டு எண்ணிப் பார்த்தோமானால் ஐந்து விரல்களுக்கு மேல் எண்ணுவது கொஞ்சம் சிரமம்.

சினிமா அதிநிச்சயமாக ஒரு ஆணாதிக்க உலகம்.

ஒரு பெண் படம் இயக்க வரும்போது என்னமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.

'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி சொல்கிறார்.

“பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி… ‘ஒரு பெண்ணாக இயக்குனர் பணியில் வேலை செய்வது கஷ்டமாக இல்லையா?’ என்பதுதான். நான் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது என் gender’ரைப் பற்றி யோசிப்பதில்லை. ஒரு பெண்ணாக, பெண்ணின் பார்வையில் மட்டும் படங்களை இயக்குவதில்லை. ஒரு படத்தின் எல்லா கடினமான வேலைகளையும் மற்ற இயக்குனர்கள் செய்வது போல் நானும் இயல்பாக செய்கிறேன். ஒரு படப்பிப்பில் ஒரு இயக்குனர் எந்த அளவு தைரியத்துடன், நிதானத்துடன், ஆளுமையுடன் மற்றவர்களிடம் வேலை வாங்க வேண்டுமோ, நானும் அவ்வாறே செய்கிறேன். அதானால் மற்றவர்கள் எனக்கு எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்லை. ஆரம்பத்தில் அஜ்மலுக்கோ மற்ற ஆண் பாத்திரங்களுக்கோ நான் ‘ஆண்’ போல் நடித்துக் காட்டும் போது, சுற்றியிருந்த எல்லோரும் வித்தியாசமாக வேடிக்கை பார்த்தார்கள். பின்பு அவர்களுக்கே பழகிப்போய் எல்லாம் சகஜமாகி விட்டது. முதலில் சந்தேகப்பட்டவர்களுக்குக் கூட என்னோட உழைப்பையும், உறுதியையும், திறமையையும் பார்த்த பிறகு நம்பிக்கை வந்து விட்டது.”

இதை வாசிக்கும்போது, அனேகமாக அவர் சந்தித்த பிரச்சினைகளை மிகவும் எளிமைப்படுத்தி சொல்வதாக எனக்குப் படுகிறது. ஒரு இயக்குனராக உருவெடுக்க பெண் சந்திக்கும் மன உளைச்சல்கள் கட்டுக்கடங்காததாக இருக்குமென்று நினைக்கிறேன். ஜே.எஸ்.நந்தினி இயக்கிய முதல் படம் எனக்கு பிடித்திருந்தது. விளம்பரத்துறை குறித்த சுமாரான அறிமுகத்தை வசந்த் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தில் கொஞ்சம் நெகடிவ்வாகவே கொடுத்திருந்தார். கிரியேட்டிவ் பிரிவில் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் பிரச்சினைகளை நகைச்சுவையாகவும், கொஞ்சம் விஸ்தாரமாகவும் நந்தினி வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் வாசித்த மிக நல்ல கட்டுரையை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த பில்டப். தோழர் ஒருவர் தொடங்கியிருக்கும் புதிய பல்சுவை இணையத்தளமான நறுமுகையில் ஜே.எஸ்.நந்தினியின் சுவாரஸ்யமான ஒரு பிரத்யேகக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. சினிமா ஆர்வலர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாசிக்கலாம்.

25 மே, 2010

தேசிய வேளாண் நிறுவனம்!


இலீயிடு கிராமத்தைச் சேர்ந்த சத்யா நன்றாக சமைப்பார். சமைப்பதற்கென்றே பிறவி எடுத்தவர் என்று சொல்லலாம். யார் வீட்டிலாவது விசேஷம் என்றால் சத்யாவை சமைக்க அழைப்பார்கள். அக்கம்பக்கத்தவர்களும், உறவினர்களும் அவரது சமையலை பாராட்டுவதுண்டு.

அருமையான சமையல் திறன் கொண்டவருக்கு வெறும் பாராட்டுகளோடு திருப்தி அடைந்துவிட முடியுமா என்ன? அவருடைய திறமை அவருக்கு போதுமான வருமானத்தை தரவேண்டாமா? தேசியவேளாண் நிறுவனம் மூலமாக உருவாக்கப்பட்ட சுய உதவிக்குழு அவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாயை சிறுகடனாக வழங்கியது.

வீட்டிலேயே சுடச்சுட சத்யா பிரியாணி சமைக்கத் தொடங்கினார். தினமும் 12 மணியிலிருந்து 2 மணி வரை சூடான இலீயீடு பிரியாணி, கிராமத்தின் பிரியாணி பிரியர்களுக்கு நியாயமான விலையில் தினமும் பிரியாணி கிடைக்கத் தொடங்கியது. சத்யாவோடு உழைப்பை பகிர்ந்துகொள்ள அவரது கணவர் தயாராக இருந்தார். அருகிலிருக்கும் அரசு அலுவலக ஊழியர்களுக்கும் இப்போது பிரியாணி சப்ளை செய்யப்படுகிறது. சத்யாவுக்கு தினமும் ரூபாய் நூறு முதல் நூற்றி ஐம்பது வரை வருமானமும் கிடைக்கிறது.

இன்று அந்த கிராமப் பெண்களுக்கு இன்று சத்யா ஒரு ரோல்மாடல்!

சூனாம்பேடு மார்க்கெட்டில் சரோஜா காய்கறி சில்லறை வியாபாரம் செய்துவந்தார். வியாபாரம் என்னவோ நன்றாகதான் நடந்த்து. ஆனாலும் சரோஜாவிடம் சேமிப்பாக கொஞ்சம் கூட பணமில்லை. வயதுவந்த மகள் சித்ராவுக்கு திருமணம் வேறு செய்யவேண்டும். காய்கறிகளை வாங்கி, விற்க சிறிய முதலீடு செய்யவேண்டும். அம்முதலீட்டுக்கு வகையில்லாததால், உள்ளூர் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவார். வியாபாரத்தில் வந்த லாபத்தின் பெரும்பகுதி வட்டிக்கே சரியாகப் போனது.

அப்பகுதியில் தேசியவேளாண் நிறுவனம் சுய உதவிக்குழுக்களை நிறுவிக்கொண்டிருந்த வேளை இது. சரோஜாவுக்கு நிறுவனம் கைகொடுத்தது. குழுவிடம் சிறுகடன் பெற்று, அப்பணத்தை முதலீடாக வியாபாரத்தில் போட்டார். வட்டித்தொல்லை தீர்ந்தது. வியாபாரமும் அமோகம். இப்போது தினமும் நூறு ரூபாய்க்கு மேல் லாபம் பார்க்க முடிகிறது. ஒரு சில வருடங்களிலேயே பணம் சேர்த்து மகளுக்கு திருமணமும் செய்துவைத்துவிட்டார்.

வாழ்வின் அடித்தட்டில் போராடிக் கொண்டிருந்த சரோஜா, இன்று தன்னம்பிக்கையால் முன்னேறி சூனாம்பேடு மார்க்கெட்டில் மரியாதைக்குரிய வியாபாரியாக தலைநிமிர்ந்து வியாபாரம் செய்கிறார்.

சத்யாவும், சரோஜாவும் உதாரணங்கள். இவர்களைப் போல நூற்றுக்கணக்கான கிராம மகளிர் இன்று விழிப்புணர்வு பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போதுமான வழிகாட்டுதல் இல்லாததால் மட்டுமே தங்கள் திறமையை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். தேசிய வேளாண் நிறுவனம் இவர்களுக்கு சரியான பாதையை மட்டுமே காட்டியது.

இடையே, ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...

1960களின் முற்பாதியில் நம் நாட்டில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயிகள் கடுமையாக உழைத்தும் போதுமான விளைச்சல் இல்லை. அரிசிப்பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

அந்நிலையைப் போக்க அரசு முற்பட்டது. உழைப்பும், முதலீடும் இருந்தும் ஏன் விவசாயிகளால் அமோக விளைச்சலை அடைய முடியவில்லை என்று ஆராயப்பட்டது. பிரச்சினை விவசாயிகள் விதைக்கும் விதைகளில் என்று கண்டறியப்பட்டது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் விதைகளில் தேவையான மரபணு மாற்றங்களை செய்து விதைக்கத் தொடங்க, விளைச்சல் பன்மடங்கானது. உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது. அறுபதுகளின் பிற்பகுதியில் நிகழ்ந்த இந்த நிகழ்வே நம் வரலாற்றில் பசுமைப் புரட்சி என்று வழங்கப்படுகிறது. இப்புரட்சியின் குறிக்கோள் ‘விதையிலிருந்து விளைச்சல்’ என்பதாக இருந்தது. இது நிகழ முக்கியக் காரணமாக இருந்தவர், அன்று மத்திய அமைச்சராக இருந்த சி.எஸ். என்று வழங்கப்படும் ‘பாரதரத்னா’ சி.சுப்பிரமணியம்.

உணவுப் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தது. ஆனால் பசுமைப் புரட்சியினால் பலனடைந்தவர்கள் யார்? இதை சி.எஸ். 90களில் ஆராயத் தொடங்கினார். அதிர்ச்சி தரும் விஷயங்கள் அவருக்கு தெரியவந்தன.

பசுமைப் புரட்சியின் விளைவாக பெரிய பணக்கார விவசாயிகள் நல்ல பலன் பெற்றார்கள். ஆனால் எல்லாத் தரப்புக்கும் இதன் பலன்கள் முழுமையாக போய் சேரவில்லை. பசுமைப்புரட்சியின் பலன்கள் சிறுவிவசாயிகளுக்கு கிட்டவில்லை. நம் நாட்டில் சிறுவிவசாயிகளே விவசாயத்தொழில் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள்.

ஏன் சிறு விவசாயிகளால் தன்னிறைவை அடைய முடியவில்லை என்று சி.எஸ். ஆராய்ந்தபோது அவருக்கு சில விஷயங்கள் பிடிபட்டது. அவர்களது நிலங்களில் விவசாயத்துக்கு அடிப்படையான மண்வளம் இல்லை என்பதை கண்டறிந்தார். மண் வளமாக இருந்தால்தான் விவசாயத் தொழிலை நடத்த முடியும். விவசாயத்துக்கு தோதான பருவநிலை மாற்றங்கள் குறித்த போதுமான அறிவும் அவர்களிடம் காணப்படவில்லை. உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த தகவல்கள் அவர்களிடம் இல்லை.

மண்வளம், பருவநிலை, தொழில்நுட்பங்கள் என்று எல்லா விஷயங்களையும் ஒருங்கிணைத்து புத்திசாலித்தனமாக விவசாயம் செய்யும் நிலை இந்திய விளைநிலங்களில் இல்லை என்பதை சி.எஸ். உணர்ந்தார்.

நாட்டுக்கு இரண்டாம் பசுமைப்புரட்சி ஏற்பட வேண்டியதின் அவசியம் சி.எஸ்.சுக்கு புரிந்தது. அவருக்கோ கிட்டத்தட்ட தொண்ணூறு வயது. அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். முதலாம் பசுமைப் புரட்சியின் போது அவரிடம் அதிகாரம் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன்னால் நாடு முழுக்க இருக்கும் எல்லா கிராமங்களையும் ஒரேயடியாக மாற்றிவிடமுடியாது என்பது அவருக்குத் தெரியும்.

எல்லா மாநிலங்களும் பின்பற்றக்கூடிய மாதிரி கிராமங்களை தமிழ்நாட்டில் உருவாக்குவது சாத்தியமானதுதானே? இதையே தனது லட்சியமாக கொண்டார். விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக ஊரக மேம்பாட்டினை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார். ‘மண்ணிலிருந்து சந்தைக்கு’ என்ற குறிக்கோளை, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு நிர்ணயித்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் சி.எஸ். அவர்களை நிறுவனத் தலைவராக கொண்டு தேசிய வேளாண் நிறுவனம் (NAF) இந்த உன்னத லட்சியங்களுக்காக தொடங்கப் பட்டது. இந்நிறுவனத்தின் ஆக்கப் பணிகளுக்குத் தேவையான மண் மற்றும் உணவுப் பரிசோதனைக்கான அதிநவீன லேட்டஸ்ட் உபகரணங்கள் மற்றும் கருவிகளை டாக்டர் கலாம் பெற்றுத் தந்தார். இதன் மூலமாக விரிவான விளைமண் பரிசோதனை மூலமாக தொழில்நுட்பம் சார்ந்த விவசாய மேம்பாட்டுப் பணிகளை தொடங்க முடிந்தது.

* கிராமப்புற மக்களின் ஏழ்மைநிலையை மாற்றி அவர்கள் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல். குடும்பத்தின் வருட வருமானத்தை குறைந்தபட்சம் ரூபாய் ஐம்பதாயிரமாக உயர்த்துதல்.

* நாட்டின் எல்லா இடங்களிலும் செயல்படுத்தக் கூடிய ‘முன்மாதிரி செயல் திட்டத்தை’ உருவாக்குதல்.

இதுவே நிறுவனத்தின் ஆரம்பக்கால குறிக்கோளாக இருந்தது. விவசாய மேம்பாடு, கால்நடை மேம்பாடு, சமூக மேம்பாடு – இந்த மூன்று வழித்திட்டத்தை குறிக்கோளை அடைவதற்கான பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தில் அமைந்துள்ள சுமார் பதினெட்டாயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய அறுபது முன்மாதிரி கிராமங்களை உருவாக்க முன்வந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாற்பது கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருபது கிராமங்களும் இதற்காக நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ப்ளாஷ்பேக் ஓவர்.

கிராமப்புற முன்னேற்றத்தை செயல்படுத்த, அப்பகுதியிலேயே ஒரு மையம் இருந்தால் மட்டுமே சாத்தியம். தமக்குள் ஒருவராக மாறுபவர்களை மட்டுமே கிராமத்தவர்கள் அங்கீகரிக்கிறார்கள். கிராம வளர்ச்சிக்கான தேசியவேளாண் நிறுவனத்தின் மையம், காஞ்சிபுரம் மாவட்டம் இலீயீடு கிராமத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது.

விசாலமான பயிற்சி அறைகள், நவீன விவசாய இயந்திரங்களுக்கான பிரத்யேக அறைகள், அலுவலகப் பயன்பாட்டுக்கான அறைகள், திறந்தவெளி திரையரங்கம், சமையலறை என்று அடிப்படை கட்டுமானங்களோடு அமைந்திருக்கிறது.

விவசாய தொழில்நுட்பம் மற்றும் கால்நடை மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள், சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள், வருமானத்துக்கு வகை செய்யும் திட்டங்கள் என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி தினமும் மையத்தில் நடந்துகொண்டேயிருக்கிறது. நாம் சென்றிருந்தபோது விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. மகாராஷ்டிராவின் விதர்பா விவசாயிகள் கூட இங்கே வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு சென்றதாக சொல்கிறார்கள்.

பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு வசதியாக எல்.சி.டி. புரொஜெக்டர், டிஜிட்டல் கேமிரா, கலர் டிவி, சிடி பிளேயர், கம்ப்யூட்டர் என்று லேட்டஸ்ட் வசதிகள் அத்தனையும் இங்கே உண்டு. விவசாயிகள் களப்பயிற்சி வழங்குவதற்கு வாகாக மையத்தின் பின்புறத்தில் விசாலமான இடம் இருக்கிறது.

இதுவரை சுமார் நானூறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஒன்பதாயிரம் பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றதாகவும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரிகேடியர் ரகுநாதன் சொல்கிறார்.

மனிதவள மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி இம்மையத்தில் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டு நடக்கிறது. முதல் கட்டமாக தோட்டக்கலையில் சான்றிதழ் படிப்பு துவக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பினை ஏற்படுத்தக்கூடிய பண்ணை இயந்திரவியல் கணினிப் பயிற்சி, உணவுப் பாதுகாப்பு, செல்போன் பழுதுபார்ப்பு போன்றவற்றிலும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் வெகுவிரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

மையத்தில் மழலையர் பள்ளி ஒன்றும் நடக்கிறது. அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து குழந்தைகள் இங்கே வந்து படிக்கிறார்கள். பெருநகரங்களில் தனியாரால், அதிக கட்டணம் வாங்கி நடத்தப்படும் மழலையர் பள்ளிகளை விட மிகச்சிறப்பாக இப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.


விவசாய வளர்ச்சி

அறிவியல்பூர்வமான முறைகளில் விளைச்சலை அதிகப்படுத்தி, விவசாயிகளுக்கு வருமானத்தை பெருகச்செய்வதே நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு விளைநிலங்களிலேயே பயிற்சி கொடுப்பது, மண்வளப் பரிசோதனை, மண்ணுக்கான ஊட்டச்சத்து போன்றவைகளை விளக்கி சொல்வது, நீராதார மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, மையத்திலேயே நேரடி களப்பயிற்சி போன்றவற்றின் மூலமாக குறிக்கோளை அடையும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இங்கே பயிற்சியும், ஆலோசனைகளும் பெற்ற ராஜன் என்பவரின் விளைநிலத்தை பார்வையிட்டோம். தன் நிலத்துக்கு அருகிலிருக்கும் நிலங்களை விட தன்னால் இப்போது அதிக விளைச்சலை பெற முடிவதாக மகிழ்ச்சியோடு நம்மிடம் சொல்கிறார். மற்ற விவசாயிகளுக்கும் இந்த நவீனமுறைகளைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டுமென்று, அவரிடம் கேட்டுக்கொண்டார் தேசிய வேளாண் நிறுவனத்தின் துணை இயக்குனராக பணிபுரியும் ராமசுப்பிரமணியன்.

நிறுவனம் தந்த பயிற்சியின் மூலமாக இதுவரை ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்ட நெல், சோளம், கரும்பு, நிலக்கடலை, மிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், மல்லி, ரோஜா போன்ற பூவகைகள் ஆகியவை நவீன தொழில்நுட்பத்தில் அமோக விளைச்சலைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வழக்கமான முறையில் பயிரிடப்பட்டதை காட்டிலும் சோளம் 150%, தர்ப்பூசணி 116%, நிலக்கடலை 113%, நெல் 55%, கரும்பு 40% கூடுதலான விளைச்சலை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

ஏழாயிரத்து நூறுக்கும் மேற்பட்ட மண்பரிசோதனைகள் மிகக்குறைவான கட்டணத்தில் விவசாயிகளுக்கு செய்துதரப்பட்டிருக்கிறது. நீர்வள மேலாண்மைக்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


கால்நடை மேம்பாடு

விவசாயத்தோடு தொடர்புடைய கால்நடை மேம்பாட்டிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அதிகளவில் பால் கறக்கக் கூடிய கலப்பின மாடுகளை உருவாக்குவதின் மூலமாக அபரிதமான பால் உற்பத்தியை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு கால்நடை மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கிராமப்புற குடும்பங்களுக்கு நிலையான மாத வருமானத்தை ஏற்படுத்த முடியும்.

செயற்கைமுறை கருவூட்டல், கால்நடைகளுக்கான மருத்துவம், ஊட்டச்சத்து வழங்குதல், பால் உற்பத்தி தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி ஆகியவை தொடர்ச்சியாக நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்களால் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுவரையிலான செயல்பாடுகள் நல்ல பலனை அளித்துள்ளன. இதுவரை ஒன்று முதல் இரண்டு லிட்டர் வரை கறந்துகொண்டிருந்த மாடுகள் இப்போது 6 முதல் 9 லிட்டர் வரை கறக்கின்றன. புதியதாக பால் சேகரிப்பு நிலையங்களை உருவாக்கி, சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடிகிறது. கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானம் வருவதால், ஆர்வமுள்ளவர்களுக்கு கால்நடை வாங்க வங்கியில் கடன் வாங்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது. பசுமைப் புரட்சியோடு இணைந்த வெண்மைப் புரட்சியும் தேசிய வேளான் நிறுவனம் கவனம் செலுத்தும் கிராமங்களில் சத்தமில்லாமல் நடந்தேறி வருகிறது.


சமூக முன்னேற்றம்

விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எழுத்தறிவு, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பயிற்சிகள் மற்றும் குழந்தை வளர்ப்பு சுகாதாரம் தொடர்பான பயிற்சிகள் மூலமாக கிராமப்புற சமூக முன்னேற்றத்தை உருவாக்குவது தேசிய வேளான் நிறுவனத்தின் இலக்கு.

எழுத்தறிவுப் பாடம், சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், மேலதிக வருமானம் உருவாக்குவதற்கான திட்டங்கள், சுகாதார விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத நாலாயிரத்து இருநூறு பேருக்கு இன்று எழுத்தறிவு ஏற்படுத்த முடிந்திருக்கிறது. ஏழாயிரத்து நூறு பேரை உறுப்பினர்களாக கொண்டு 470 சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். சுமார் 50 மருத்துவ முகாம்கள் நட்த்தப்பட்டு ஏழாயிரத்து இருநூறு பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

புத்திரன் கோட்டை என்ற கிராம மக்களை முழுச்சுகாதார திட்டத்தை அமுல்படுத்துவதில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக பிரத்யேகமாக அம்மக்களுக்கு கூட்டங்கள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மூலமாக பொதுச்சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, உடல்நலன், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை இருக்க வேண்டிய அவசியம், அவற்றை பராமரிப்பது குறித்த விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டு வந்தது. இன்று இக்கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருக்கிறது. இந்திய அரசின் முழுச்சுகாதார திட்டத்தை முழுமையாக பின்பற்றியதால் ‘சுத்தமான கிராமம்’ (நிர்மல் கிராம புரஸ்கார்) என்ற குடியரசுத் தலைவரின் விருது புத்திரன் கோட்டைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு நிறுவனம் பதினெட்டாயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய 60 முன்மாதிரி கிராமங்களை தமிழகத்தில் உருவாக்கி இந்தியாவுக்கு வழிகாட்டியிருக்கிறது. காந்தி கனவு கண்ட நிஜமான கிராம ராஜ்யம் இங்கே அறிவியல் துணைகொண்டு, திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிராமங்களின் மாட்டுத் தொழுவங்களிலும், விவசாய விளைநிலங்களிலும், ஏரி, குளங்களிலும் கடுமையாக வேலை பார்த்து மட்டுமே இம்மாபெரும் சாதனைகள் சாத்தியமாகி விடவில்லை. சென்னை நகரின் மத்தியில், நவீன ஆய்வகங்களிலும் கூட இதற்கான பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இப்போது சென்னை தரமணியில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு நேரடியாக சென்று பார்ப்போம். ஒன்பதாயிரம் சதுர அடி பரப்பளவில் ஆய்வகங்கள் அமைந்துள்ளன.

இந்நிறுவனத்தின் துணை இயக்குனர் ராமசுப்பிரமணியன் அங்கே கட்டமைக்கப்பட்டுள்ள வசதிகளை சுற்றிக்காட்டிக் கொண்டே விளக்குகிறார்.

மண்வள ஆய்வு, உணவு பாதுகாப்பு ஆய்வு, பாசனநீர் ஆய்வு, தாவர திசு வளர்ச்சி தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை இங்கே அமைந்திருக்கிறது. வெகுவிரைவில் தானிய விதைகள் ஆய்வு மற்றும் தாவர சிசு ஆய்வு ஆகியவை தொடங்கப்பட உள்ளது. இவற்றுக்கான உபகரணங்கள் பலவும் அதிசமீபத்தியவை. அயல்நாடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவில் தருவிக்கப்பட்டவை.

மண்வளத்தை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? காலம் காலமாக நாம் பயிரிடும் மண் இதுதானே என்று விவசாயிகள் எண்ணக்கூடும். மண்ணின் வளம் என்னவென்று அறிந்தால், அதற்கேற்ப பயிர்களை பயிரிடலாம். நெல் நன்றாக விளைச்சல் தரக்கூடிய மண்ணில், அம்மண்ணோடு சேர இயலாத வேறு பயிர்களை பயிரிட்டு இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது இல்லையா? அதுவுமில்லாமல் மண்வளப் பரிசோதனை மூலமாக இடவேண்டிய உரத்தை, தேவையான அளவு மட்டும் அளித்து தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம். சமச்சீர் சத்துக்கள் அளிப்பதின் மூலமாக பயிர் வீரியமாக வளரும். பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செழிப்பான பயிர் வளர்க்க முடிவதால் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும். உற்பத்திச் செலவு குறைந்து விவசாயி அதிக லாபம் ஈட்டமுடியும்.

தேசிய வேளாண் நிறுவனத்தின் ஆய்வகம் கணினிமயமாக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலமாக துல்லியமான முடிவுகளை கணிக்க முடிகிறது. அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற ஆய்வகம் ஒன்றில் இந்நிறுவனத்தின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இத்துல்லியம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை ஏழாயிரத்துக்கும் மேலான மண்மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. சிறு விவசாயிகளின் நலன் கருதி மிகக்குறைந்த செலவுக்கு மண்வள ஆய்வு செய்துத்தருகிறார்கள். வேறு நிறுவனங்களில் இதே ஆய்வுக்கு இவர்கள் வாங்கும் தொகையை விட மூன்று, நான்கு மடங்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

மண்மாதிரியை பரிசோதித்து ‘ரிப்போர்ட்’ தருவதோடு இந்நிறுவனம் நின்று விடுவதில்லை. தங்கள் நிபுணர்கள் மூலமாக ஊட்டச்சத்து உரப்பரிந்துரைகளையும் தருகிறார்கள். விளைமண் ஆய்வுக்கு மண்மாதிரி எடுக்கும் வழிமுறைகளையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும் கூட விவசாயிகள் மண்வளப் பரிசோதனைக்கு இங்கே மாதிரி எடுத்து அனுப்புகிறார்கள். ஆய்வுக்கு மட்டுமே கட்டணம். மற்றதெல்லாம் முற்றிலும் இலவசம்.

அடுத்ததாக உணவு பாதுகாப்பு ஆய்வகத்துக்குள் நுழைகிறோம். இங்கே உணவு தானியங்கள், காய்கறிகள், பழவகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து கழிவுகளை துல்லியமாக கண்டறியும் வசதி உள்ளது.

உணவுப்பொருட்கள் அதற்குரிய தரத்தில் தயாரிக்கப்படுகிறதா? கலப்படம் ஏதேனும் இருக்கிறதா? அனுமதிக்கப்பட்ட உணவு வண்ணங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறதா? சேர்க்கப்பட்ட வண்ணங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு இங்கே விடை கிடைக்கும்.

உணவுப் பொருட்களின் தரம் பற்றிய பகுப்பாய்வு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உணவு கலப்பட தடை சட்டப்படி உணவின் தரம் மற்றும் லேபிள் செய்வது குறித்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் இங்கே வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினர் தயாரித்து விற்கும் உணவுப்பொருட்களையும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் ஏற்றுமதிக்கான தர அளவுக்கோல்களை அடைய இந்த ஆய்வு முக்கியமானதாகும்.

உணவு நுண்ணுயிர் பகுப்பாய்வு வசதிகளும் இங்கே செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பான உணவிற்கு நுண்ணுயிர் பகுப்பாய்வு இன்றியமையாதது. ஹோட்டல்களில் சுகாதாரம் மற்றும் உணவை கையாள்வோரின் சுத்தம் குறித்த கண்காணிப்பு மற்றும் ஆய்வக பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிர் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகமாகவும் இது செயல்பட்டு வருகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த நுண்ணுயிர் பகுப்பாய்வு வசதிகளுக்கு உதவியிருக்கிறது.

“”யாரையும் எளிதில் இங்கே அனுமதிக்கமாட்டோம்”“ என்று சொல்லியபடியே அடுத்ததாக நம்மை ஒரு ஆய்வகத்துக்குள் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவுள்ள ஒரு குடுவையை நம்மிடம் காட்டுகிறார்கள். உள்ளே சிறிய அளவில் நூற்றுக்கணக்கில் ஏதோ ஒரு செடி வளர்ந்திருக்கிறது.

“இது என்ன செடி?“” என்று கேட்டால், “செடி இல்லைங்க, மரம். கிட்டத்தட்ட ஐநூறு வாழைமரம்!””” என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள். ‘ஒரு பாட்டிலுக்குள் ஒரு வாழைத்தோப்பா?’ என்று வாயைப் பிளக்கிறோம். இதுதான் தாவர திசு வளர்ச்சி ஆய்வுக்கூடம். தாவர திசு வளர்ச்சி மூலமாக தாவரங்களை வளர்த்து விவசாயிகளுக்கு பயிர் செய்ய கொடுக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு 2,00,000 செடிகள் இங்கே சிறிய ஆய்வறைகளுக்குள் உருவாக்கப்படுகிறது.

2020ல் நம் நாட்டில் விவசாய நிலப்பிரப்பு குறைந்துவிடும். விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். ஆனால் மக்கள்தொகை அதிகமாக இருக்கும். எனவே தற்போதைய உணவு உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். இதற்கு ஒரே வழி தொழில்நுட்பம்தான்.

தொடர்ந்து ஒரே பயிராகப் பயிர் செய்யாமல் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி, மாற்றி பயிர் செய்யவேண்டும். ஒருமுறை நெல் பயிரிட்டால் மறுமுறை சோளம், கம்பு. இடையில் காய்கறிகள் என்று பயிரிட வேண்டும். அப்போது அதிக உற்பத்தி கிடைப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கும்.

இன்றைய நிலையில் விவசாயிகள் அதிக வட்டி வாங்கும் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். கடனை திருப்பி கட்ட முடியாமல் கடனாளி ஆகின்றனர். இது சரியல்ல. பல வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தருகின்றன. விவசாயிகள் தங்களுக்கென்று சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு வங்கிகளின் முலம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து பயன்பெற வேண்டும்.

ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தின் மண்வளத்தை பாதுகாக்க வேண்டும். இதற்காக அவ்வப்போது மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கிராமங்களில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. இந்த ஊருணிகளுக்கு உயிர் கொடுத்தால், அவை விவசாயிகளுக்கு உயிர் கொடுக்கும். எனவே நீர்நிலைகளை விவசாயிகள் பராமரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தரமான விதை என்பது அவசியம். கலப்படம் செய்யப்பட்ட விதைகளை பயிரிடுவதால் பலன் குறையும். தரமான விதைகளை கண்டறிய தேசிய வேளாண் நிறுவனத்தின் உதவியை நாடலாம். அவர்கள் நிச்சயமாக இதற்கான ஆலோசனைகளை கூறுவார்கள்

நம் நாட்டில் சளைக்காமல் உழைக்கக்கூடிய விவசாயிகள் இருக்கிறார்கள். ஏராளமான விளைநிலம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கும், உலகளவில் லேட்டஸ்டாக வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏராளமான இடைவெளி இருக்கிறது. தேசிய வேளாண் நிறுவனத்தின் முயற்சிகள் அந்த இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வருகிறது.

விவசாயிகள் குறைந்த செலவில் விளைமண் பரிசோதனை செய்ய, உணவுப்பொருள் தர ஆராய்ச்சிக்கும் மற்றும் ஏனைய இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

தேசிய வேளாண் நிறுவனம்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்
அண்ணா பல்கலைக்கழக தரமணி வளாகம்,
தரமணி, சென்னை – 600 113.
தொலைபேசி : 044-22542598, 22542803
மின்னஞ்சல் : nationalagro@gmail.com
இணையத்தளம் : www.nationalagro.org

24 மே, 2010

மொழி விவசாயி!

சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தால் போதும். தமிழகத்தின் ஏதோ ஒரு நகருக்கு, ஏதோ ஒரு கிராமத்துக்கு அவர் பேருந்து ஏறிவிடுவார். இல்லையேல் புதுவைக்கு அருகிலிருக்கும் ஏதாவது பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள்.

யார் இவர்?

எந்த அமைப்பின் பின்புலமுமின்றி தனிமனிதராக தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி கூட்டங்களை தமிழகமெங்கும் நடத்தி வரும் முனைவர் மு.இளங்கோவன். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிகிறார். நாற்பத்தி மூன்று வயது.

மாணவர்களை சந்தித்து இணையத்தில் தமிழை பரவலாக்குவதை தன்னார்வத்தோடு தனிநபர் இயக்கமாகவே செய்துவரும் இவரது பின்னணிக் கதையும் சுவாரஸ்யமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரசோழன் உருவாக்கிய வெற்றி நகரான கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகிலிருக்கும் இடைக்கட்டு கிராமத்தில் பிறந்தவர் இளங்கோவன். படிப்பறிவு இல்லாத குடும்பம். பெற்றோர் விவசாயிகள். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாம். இவரது முன்னோர் ஒரு காலத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலத்தை கட்டி ஆண்டவர்கள். வெள்ளையர் காலத்தில் அப்பகுதியில் பொன்னேரி என்ற பெயரில் செயற்கை ஏரி ஒன்று உருவாக்கப்பட்ட போது இவர்களது நிலங்களை அரசு எடுத்துக் கொண்டது.

மிச்சமிருந்த சொச்ச நிலங்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள் இளங்கோவன் குடும்பத்தினர். பரம்பரை பரம்பரையாக செல்வத்தில் கொழித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதால் கல்வியின் அவசியம் யாருக்கும் தெரியவில்லை. இளங்கோவனின் பெற்றோர் முதன்முதலாக தங்கள் மகனுக்கு கல்வி போதிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்கள்.

அருகிலிருந்த உள்கோட்டை கிராமப் பள்ளிக்கு இளங்கோவனை கல்விகற்க அனுப்பி வைத்தார்கள். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தவர் மேல்நிலைக் கல்விக்காக மீன்சுருட்டி கிராமத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. தினமும் 13 கிலோ மீட்டர் நடந்து சென்று பள்ளிக்கு செல்வார் இளங்கோவன். மாலையில் அம்மாவுக்கு உதவியாக வீட்டுவேலைகள்.

+2வில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி. இருந்தாலும் தங்களது மகன் +2 வரை படித்ததே பெரிய விஷயம் என்று பெற்றோர் எண்ணினார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானதாகவும் இருந்தது. இரண்டு மாடு வாங்கி கொடுத்து, மகனை விவசாயம் செய்ய சொன்னார் தந்தை முருகேசன்.

மூன்று வருடங்கள் விவசாயமே எதிர்காலம் என்று உழைத்தார் இளங்கோவன். அவ்வப்போது அருகிலிருக்கும் நகருக்கு செல்வார். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை சீசன்களில் நகரிலிருக்கும் துணிக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிபுரிவார். தமிழார்வம் கொண்ட இளங்கோவன் ‘தென்மொழி’போன்ற இலக்கிய இதழ்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

ஒருமுறை துணிக்கடைக்கு வந்த தமிழாசிரியர் ஒருவர் இவரது கையில் இருந்த தென்மொழியை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். அவர் வாழ்நாளில் துணிக்கடையில் பணி செய்யும் ஒருவரின் கையில் தீவிர இலக்கிய இதழை கண்டதேயில்லை. ஆச்சரியப்பட்டு இளங்கோவனின் பின்னணியை விசாரித்திருக்கிறார்.

“தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ் படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கும் வரலாம்” என்று அறிவுறுத்தி நெறிப்படுத்தினார். அவரது வழிகாட்டலில் திருப்பனந்தாள் காசி திருமடம் நடத்திய செந்தமிழ் கல்லூரியில் தமிழ் படிக்கச் சென்றார் இளங்கோவன்.

மகன் என்ன படிக்கிறான், அதை படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் அவரது பெற்றோருக்கு தெரியாது. பட்டம் படிக்கப் போகிறேன் என்று சொன்னதுமே வீட்டில் இருந்த எதையோ விற்று காசு கொடுத்து அனுப்பி வைத்தார் அப்பா.

அங்கே இளங்கலை படிக்கும்போது தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். கல்லூரி, பல்கலைக்கழக அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ள ஆரம்பித்தார். ஆய்வுக்கட்டுரைகளாக எழுதித்தள்ளி பல்வேறு ஆராய்ச்சிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களாக வென்று குவித்தார். திருப்பனந்தாள் மட நிர்வாகம் இளங்கோவனை ஊக்கப்படுத்திக் கோண்டே இருந்தது. அங்கேயே முதுகலையையும் முடித்தார்.

முதுகலை முடித்த பின்னரும் கூட உயர்கல்வி பற்றியோ, வேலைவாய்ப்பு பற்றியோ இளங்கோவனுக்கு ஏதும் தெரியாது. மதுரை இளங்குமரன் என்ற தமிழறிஞரிடம் குருகுல வாசம் செய்து, தமிழ் கற்க முடிவெடுத்தார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழறிஞர்கள் குருகுலவாசம் மூலமாகவே தமிழ் கற்றார்கள். அந்த அடிப்படையில் மரபுத்தமிழில் பயிற்சிபெற குருகுல வாசமே சிறந்த்து என்று இளங்கோவன் எண்ணினார்.

இந்த காலக்கட்டத்தில் தூயதமிழில்தான் இளங்கோவன் பேசுவார். அவரது நடை உடை பாவனைகள் நூற்றாண்டுக் காலத்துக்கு முந்தைய தமிழறிஞர்களை ஒத்த்தாக இருக்கும். கேலி, கிண்டல்கள் பற்றி இளங்கோவன் கவலைப்படுவதேயில்லை.

அப்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு நாளிதழில் கண்டு விண்ணப்பித்தார். பேராசிரியர் க.ப.அறவாணன் தலைமையிலான தமிழியல் துறையில் ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’எனும் தலைப்பில் ஆய்வுசெய்து இளம் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்பட்ட ஆய்வினையும் நிறைவுசெய்தார்.

மாணவப் பருவத்தில் இருந்தபோது இவர் எழுதிய மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீர்ர் வெ.துரையனார் அடிகள் முதலான நூல்கள் வெளிவந்தன.

ஒருவழியாக கல்வி, முனைவர் பட்டம் எல்லாம் முடிந்தது. அடுத்து?

தமிழ்நாட்டின் எல்லா பட்டதாரி இளைஞர்களைப் போலவே இளங்கோவனும் சென்னைக்குப் படையெடுக்கிறார். சென்னையின் பிரம்மாண்டம் அவரை தன்னுள் விழுங்கிக் கொள்கிறது. திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்று இளங்கோவனுக்கு ஆர்வம் அதிகம்.

ஏனெனில், நாட்டுப்புறப் பாடல்களில் நிறைய ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். ஒப்பாரிப்பாடல், நடவுப்பாடல்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கில் சேகரித்து ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். நம் மண்ணின் வரிகளை வெள்ளித்திரையில் ஒலிக்கச் செய்யவேண்டுமென்பது இளங்கோவனின் ஆசை.

தமிழை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு சரணாலயம் கவிஞர் அறிவுமதியின் அறை. இளங்கோவனும் அவரது அறையில்தான் தங்கியிருந்தார். அறிவுமதிக்கு இளங்கோவன் திரைத்துறைக்கு செல்வதில் விருப்பமில்லை. “தமிழில் ஆராய்ச்சி செய்பவர்கள் மிகக்குறைவு. தமிழறிஞர்களும் சினிமாவுக்குப் போய்விட்டால் யார்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது?” என்று இளங்கோவனிடம் அக்கறையோடு கூடிய கண்டிப்பு காட்டினார்.

தமிழ் மட்டுமே தெரிந்த இளங்கோவனுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளர் பணி கிடைத்தது. அதுவும் தற்காலிகப் பணியே. ‘தமிழியல் ஆவணம்’ என்ற திட்டப்பணியில் ஒரு ஆண்டு பணிபுரிந்தார். ஒப்பந்தம் முடிந்ததும் மறுபடியும் குருகுல வாசம். இம்முறை இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நூல் வெளிவர அவரிடம் ஓராண்டு உதவியாளராகப் பணி.

பேச்சும், மூச்சும், வாழ்வும் தமிழாகவே கழிந்துகொண்டிருந்தது இளங்கோவனுக்கு. வருமானத்தை தவிர எல்லாமே கிடைத்தது அவருக்கு. என் தமிழ் என்னை கைவிடாது என்ற நம்பிக்கையோடு மட்டுமே வாழ்வை அணுகிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வில் வென்றதுமே வாழ்க்கை இவருக்கு வசப்பட்டது. இவர் கேட்டதை எல்லாம் தமிழ் வாரி வாரி கொடுத்தது. இன்று புதுவையின் புகழ்வாய்ந்த கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

2006ஆம் ஆண்டு வாக்கில் இணையம் இவருக்கு அறிமுகமானது. இணையம் உலகத் தமிழர்களை ஓர் புள்ளியில் திரட்டுகிறது என்பதை உணர்ந்தார். குறிப்பாக இளைஞர்களை இணையம் கட்டி வைத்திருக்கிறது. அன்றாட வாழ்வில் தமிழைப் புறக்கணிக்கும் இளைஞர்கள் கூட இணையத்தில் தமிழை கொண்டாடும் நிலையை கண்டார்.

நண்பர்களின் உதவியோடு வலைப்பூ ஒன்றினை உருவாக்கி (http://muelangovan.blogspot.com/) தமிழறிஞர்கள் குறித்த அறிமுகத்தினை தொடர்ச்சியாக பதிய ஆரம்பித்தார். கல்வெட்டுகள் வாயிலாக பழந்தமிழ் அறிஞர்களை குறித்து இன்று அறிகிறோம். இன்று நவீன கல்வெட்டாக செயல்படுவது இணையம்தான். எனவே தமிழுக்காக உழைப்பவர்களை, உழைத்தவர்களை ஆவணப்படுத்த வலைப்பூ இளங்கோவனுக்கு வசதியாக இருக்கிறது.

உலகின் எதிர்காலம் இணையத்தை பெருமளவில் சார்ந்திருக்கும் என்று சொல்லப்படும் இக்காலக்கட்டத்தில் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலமாக மொழியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லமுடியும் என்று நம்பினார். ஊர் ஊராகச் சென்று இவர் இன்று இணையத்தமிழை பரப்பும் பணியை செய்துவருவதற்கு இதுவே காரணம்.

அந்தமானில் இருந்து ஒருவர் கூட தமிழில் இணையத்தில் இயங்காத நிலை இருந்தது. சமீபத்தில் அங்கு சென்றிருந்த இளங்கோவன், அங்கிருந்த தமிழர்களிடம் கணியில் எப்படி தமிழை உள்ளிடுவது, இணையத்தில் தமிழ் மூலமாக இயங்குவது போன்றவற்றை கற்றுத் தந்துவிட்டு திரும்பியிருக்கிறார். எல்லா தமிழர்களுக்கும் தமிழ் - இணையம் குறித்த தெளிவு வேண்டுமென்பதற்காக ‘இணையம் கற்போம்’ என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

நாம் விரும்பினாலும் சரி. விரும்பாவிட்டாலும் சரி. எத்துறையாக இருந்தாலும் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கத்தானே செய்யும்?

பல்வேறு அமைப்புகளின் விருதுகளோடு முத்தாய்ப்பாக, இந்திய அரசின் செம்மொழி மத்திய உயராய்வு நிறுவனம் 2006-07 ஆண்டுக்கான ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’இவருக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது.

விருதுகளும், பாராட்டுகளும் வரவேற்பறையை அலங்கரிக்க, இன்னமும் திருப்பனந்தாள் மட கல்லூரியில் படித்தபோது இருந்த அதே எளிமையோடே இருக்கிறார் மு.இளங்கோவன். “சட்டையை கழட்டிட்டா இன்னும் நான் விவசாயி தாங்க” வெள்ளந்தியாக சிரிக்கிறார்.

புதுச்சேரியில் அவரை சந்தித்தபோது வருத்தம், மகிழ்ச்சி, வியப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகளில் ஆங்கிலம் கலக்காத அழகுத்தமிழில் பேசிக்கொண்டே போகிறார்.

“தமிழ் வளர நம்முடைய கல்விச்சூழலில் மாற்றம் தேவை. தமிழ்வழிக் கல்வியால் மட்டுமே தமிழின் இருப்பை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கும் உறுதி செய்யமுடியும். அதுபோலவே தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையையும் எடுத்துவரவேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் தான் செய்யமுடியும்.

தமிழ் என்பது இன்று பட்டிமன்றங்களில் நகைச்சுவை செய்ய பயன்படுகிறது. மக்களுக்கு தமிழ்ச்சுவையை சூடாக, சுவையாக கொடுத்த பட்டிமன்றங்கள் இன்று சில தமிழறிஞர்களாலேயே வணிகமயமாகி விட்டது எத்தகைய அவலம்?

அயல்நாடுகளுக்கு சென்றிருக்கும் நம் தமிழர்கள் எப்படி தமிழ் வளர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால், தமிழ் சினிமாக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அவற்றை பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு விற்கிறார்கள்.

தமிழர்களுக்கு தமிழில் நடத்தப்படும் அச்சு ஊடகங்களோ பிழைகளோடு வருகிறது. முழுக்க முழுக்க வேற்றுமொழிக் கலப்போடு தமிழ்க்கொலை செய்கிறது. வானொலி, தொலைக்காட்சி தமிழைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை”

”அப்படியானால் தமிழின் எதிர்காலம் குறித்து அச்சப்பட வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?”

“அப்படியெல்லாம் நாம் அச்சப்பட்டு விட வேண்டாம். இன்று இணையம் இருக்கிறது. இணையம் என்பது இளைஞர்களுக்கு இதயமாக இருக்கிறது. அவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகவோ, கற்பிக்கும் ஊடகமாகவோ மட்டுமில்லை. எனவே இணையத்தில் தமிழை பரவலாக்கினோமானால் அது அடுத்த தலைமுறைக்கு தமிழை சரியாக கொண்டு சேர்க்கும் பணியாக இருக்கும். தமிழறிஞர்கள் தங்கள் எழுதுகோல்களை மூடிவைத்துவிட்டு கணினியை கற்றுக்கொண்டு, கணினியில் தமிழ் பரப்ப முன்வரவேண்டும். தமிழ் வளர்க்க என்னென்ன சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவோ, எதையும் புறக்கணிக்காமல் அத்தனையையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவேதான் கணினியில் தமிழை எப்படி உள்ளிடுவது? இணையத்தில் தமிழை கொண்டுசெல்வது என்று ஊர் ஊராக போய் கற்பித்து வருகிறேன். வளர்ந்தவர்களுக்கு ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ எரிச்சலைத் தரும் என்பதால் மாணவசமுதாயத்துக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் தமிழை வாழவைப்பார்கள்.

இணையம் இவ்வளவு இன்றியமையாதது என்பதால்தான் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டோடு இணையமாநாடும் நடத்தப்படுகிறது. இதனால் இணையத்தமிழ் பயன்பாடு தமிழர்களுக்கு நல்லமுறையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்!”

அரியலூருக்கு செல்லும் அவசரத்தில் இருந்தவர் நம்மிடம் கைகுலுக்கி விடைபெறுகிறார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள். பேருந்தை பிடிக்கும் அவசரம். எந்தப் பயணமாக இருந்தாலும் தமிழ் அவருக்கு வழிதுணையாக இருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

22 மே, 2010

கனகவேல் காக்க!

இந்தியனையும், ரமணாவையும் ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி, லைட்டாக கலர் சேர்த்து, ப்ரீஸரில் வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் சில்லென்று கனகவேல் கதை ரெடி! ஷூட்டிங்கில் சூடாக்கி, திரையரங்குகளில் பரிமாறிக் கொள்ளலாம். திரைக்கதைக்கு? இருக்கவே இருக்கிறார் எண்பதுகளின் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டத்தை தூக்கி, விட்டத்தில் மாட்டி, உண்டிவில்லில் - மன்னிக்கவும் - ஏ.கே.74 துப்பாக்கியில் குறிபார்த்து காட்சிக்கு காட்சி கச்சிதமாக அடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

கரண் - கண்களுக்கு கீழே கருவளையம். அக்னிநட்சத்திரம் காலத்து பிரபு மாதிரியே அச்சு அசலாக இருக்கிறார். அநீதியை கண்டு கண்களை இறுக மூடி திறந்தால், கிராபிக்ஸில் இரத்தச் சிவப்பு. கோபக்கார இளைஞன் என்பதால் ரொமான்ஸில் கோட்டை விடுகிறார். நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் ரேஞ்சுக்கு ஹீரோயினும் கும்மென்று இல்லை. பட்ஜெட். பட்ஜெட்.

படத்தின் பலவீனமே பட்ஜெட்தான். படத்தில் வரும் டிவி லைவ் ஷோ கூட வசந்த் டிவியில்தான் என்றால் பட்ஜெட் எந்தளவுக்கு லோ என்று புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பாடல் காட்சிகள் தாய்லாந்தில். அனேகமாக ஹீரோ ஹீரோயினோடு, டைரக்டரும், கேமிராமேனும், நடன இயக்குனரும் என்று ஐந்தே ஐந்து பேர் ஷூட்டிங்குக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது. எக்ஸ்ட்ராஸ் கூட இல்லை.

கொடுத்த காசுக்கு இதுபோதுமென்று ஹிட்மேக்கர் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கக் கூடும். சுத்தும் பூமி பாட்டு தேவலை. மின்சாரமே சூப்பர்ஹிட். மற்றதெல்லாம் சும்மா லுலுவாயிக்கு. பின்னணியில் காது கிழிந்து இரத்தம் கொட்டுகிறது. அதுபோலவே கேமிரா. டிராலி கூட இல்லாமல் படமாக்கியிருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது. விறுவிறுப்பான காட்சிகள் கூட கேமிரா கோணங்களால் அசமஞ்சமாக தெரிகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் தமிழ் சினிமாவுக்கு காதலன் காலத்திலேயே வந்துவிட்டதை யாராவது இயக்குனர் கவின்பாலாவுக்கு நினைவுபடுத்தியிருக்கலாம். தொழில்நுட்ப அடிப்படையில் இப்படம் இருபது ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது.

வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.

“களை எடுக்கலேன்னா பயிரும் சேர்ந்து அழிஞ்சுடும்”

“நீங்க களைங்கறீங்க. போலிஸ் கொலைன்னு சொல்லுதே”

“அப்போன்னா கார்ப்பரேஷன்லே கொசு மருந்து அடிக்கறவனெல்லாம் கொலைகாரனா?”

அனேகமாக கலைஞரின் சில பல படங்களுக்குப் பிறகு நீளமான கோர்ட் காட்சிகள் இப்படத்தில்தான் வந்திருக்குமென்று தெரிகிறது. இருபத்தைந்துக்கு இருபத்தைந்து சைஸ் கோர்ட். பட்ஜெட். பட்ஜெட். படத்தின் களமே கோர்ட் தானென்பதால் வசனகர்த்தா தன்னுடைய பேனாவுக்கு ஆயிரக்கணக்கான ரீஃபில்களை பயன்படுத்தியிருக்கக் கூடும். படத்தின் இரண்டாம் பாதி கைத்தட்டல்களை முழுக்க முழுக்க தன்வசப்படுத்திக் கொள்கிறார் வசனகர்த்தா.

நகைச்சுவைக்கென்று தனி டிராக் இல்லாததால் வில்லனை வைத்தே புத்திசாலித்தனமாக சமாளித்திருக்கிறார்கள். “நீ படிச்சு லாயரானவன். நான் படிக்காமலே கிரிமினல் ஆனவன்” என்று வில்லத்தனமாக காமெடி செய்கிறார் கோட்டா சீனிவாசராவ். க்ளைமேக்ஸில் மெரீனா பீச். பிரியாணி சகிதம் உண்ணாவிரதம் என்று ஓவர் கலாய்ப்பு. சிந்து நதியை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கோரி சாகும்வரை உண்ணாவிரதமாம். தூள் எஃபெக்ட். சம்பத் ஆண்மையான, அழகான இரண்டாவது வில்லன். ஓவர் புத்திசாலி லாயரான இவர், க்ளைமேக்ஸில் உணர்ச்சிவசப்பட்டு கத்தியைத் தூக்குகிறார் என்பதில் கேரக்டர் லாஜிக் அவுட் ஆகிறது.

கதை, வசனத்தில் கச்சிதமாக ஈடுபாடு காட்டிய டீம் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். மீசையையும், தாடியையும் ஒட்டிக்கொண்டால் அது மாறுவேடம். மாறுவேடத்தில் டான்ஸ் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர், ராமராஜன், அர்ஜூன் என்று பலரும் செய்து சலித்துப்போன விஷயங்கள். அதுபோலவே சஸ்பென்ஸ் விஷயத்திலும் இயக்குனர் ரசிகனுக்கு சுருக்குமுடி போடவேண்டும். பேரரசு இதில் கில்லி. மாறாக இப்படத்தில் முடிச்சு போட்டதுமே, ரசிகன் சுலபமாக அவிழ்த்துவிடும் வண்ணம் பலவீனமான முடிச்சுகள்.

பட்ஜெட், இசை, திரைக்கதை, கேமிரா என்று பலவீனமான விஷயங்கள் பல இருந்தாலும், படத்தின் மையப்புள்ளியான மசாலா நல்ல காரமாக இருப்பதால் இரண்டரை மணிநேரம் திரையரங்கு இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்க முடிகிறது. சுறாக்களும், சிங்கங்களும் தமிழ் சினிமா ரசிகனை கடித்து, குதறி படுகாயப்படுத்தும் சினிச்சூழலில் முழுமையாக பார்க்கும்படி ஒரு படத்தை தந்திருப்பதில் அறிமுக இயக்குனர் கவின்பாலா தேறுகிறார்.

கனகவேல் பார்க்க!

21 மே, 2010

நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!

உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக வருந்துகிறோம். இப்போதைய சூழலில் எங்கள் வலி, நம்பிக்கை இரண்டுமே உங்கள் இரங்கலை எதிர்த்து நிற்கின்றன. எங்களுக்கு வழங்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான, எங்களுக்கு தேவைப்படுவதும், தேவைப்படாததுமான உஙகளின் இரங்கல் செய்திகளை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நடந்தவற்றையோ, நடக்கவிருப்பவற்றையோ அவை எதுவும் செய்யப்போவதில்லை.

எங்களின் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விளக்கவல்ல ஆற்றல் இரஙகலுக்குக் கிடையாததால், ‘நினைவஞ்சலி’ என்ற சொல் எங்களுக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறது.

வெளிச்சத்தில் நாங்கள் எங்கள் இல்லஙக்ளை விட்டு வெளியேறினோம்; இருளில் எங்கள் இல்லங்களிலிருந்து மறைந்து போனோம்; வாழ்க்கைப் பாதை மாறுமென்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பங்களை விட்டு தூர வெளியேறி ஆயுதங்களை நோக்கி நடந்தோம்; தற்போது பூமியில் நாங்களே கண்டறிய முடியாத இடங்களுக்குள் எங்கள் உடல்கள் நுழைந்ததால் வெடித்துச் சிதறி துகள் துகளாய் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறோம். இங்கே நாங்கள் செத்துக்கொண்டும், உயிரோடும் இருப்பதால் உஙகள் தொண்டைக்குழிக்குள் பேயாக சிக்கிக்கொண்டு வெளிப்படாமலிருக்கும் உஙகள் இரங்கல் வார்த்தைகளுக்குப் பின்னும் நாங்கள் வாழ்வோம்.

விரும்பியும் விரும்பாமலும் அடுத்தவர்களின் போர்களில் நாங்களும் இணைந்தோம்; நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக அருகிலிருந்த போதும் அடுத்தவர்களின் பாதையில் முன்னேறி நடந்தோம்; நாங்கள் உதிரிகளாய் இருந்தோம்; முக்கியமானவர்களாய் இருந்தோம்; நாஙகள் நண்பர்களாய் இருந்தோம்; பகைவர்களாய் இருந்தோம்; நாஙகள் பிரச்சினைக்குரியவர்களாய் இருந்தோம்; எண்ணிக்கையிலடஙகாதவர்களாய் இருந்தோம்; இச்சிறிய நாட்டில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; இச்சிறிய உலகில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; உங்கள் மக்கள் நாங்கள்; உங்கள் மக்களல்லாதவரும் நாங்கள்.

நீங்கள் எங்களை நினைவுகூர்வீர்கள் என்று உங்களுக்காக காத்திருக்க முடியாது

நாங்கள் அழிந்தோம்; வாழ்ந்தோம்; அழிவதற்கும் வாழ்வதற்கும் நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள், அழிவதற்கும் வாழ்வதற்கும் அதிகமானோரும் நாங்கள். எங்களில் சிலருக்கு குறைவான பணமும், குறைவான உணவும் இருந்தது; எங்களுக்கு பிள்ளைகள் இருந்தனர்; விரும்பியும் விரும்பாமலும் எங்கள் பிள்ளைகளை இழந்தோம்; எங்கள் கரங்களிலிருந்து அவர்கள் கிழித்து எடுத்துச்செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்களோடிருக்க நாங்கள் போராடினோம்; அவர்களைக் காப்பாற்ற எஙகளிடமிருந்து பிரித்து எறிந்தோம்; அவர்களை நோக்கிய துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் உடலில் தாங்கி அவர்களுக்கு முன்பாக மரித்துப்போக எண்ணி அவர்களை எங்களின் பிடிக்குள் வைத்திருந்தோம்.

எங்களில் சிலர் மரித்தோம்; ஆனால் எங்களில் சிலர் வாழ்ந்தோம்; வாழ்வதற்காக பிள்ளைகளிடம் போரிட்ட நினைவுகளும் எங்களுடன் வாழ்ந்தது. போர் எனப்படும் இந்த ரத்தவெள்ளத்திலிருந்து வெளியேறும் வேகத்தில் எங்கள் செவிகள் நிலத்தில் வீழ்ந்துவிட்டன. எனவே உங்கள் இரங்கலை நாங்கள் செவிமடுக்க முடியாது. எங்கள் இருத்தல் நிமித்தம், எங்கள் விழிகளையும் மூடிக்கொள்ள நேர்ந்ததால் உங்களுக்குள் என்னவிருக்கிறது என்பதயும் காண இயலவில்லை. பசியினாலும் கோபத்தாலும் எங்கள் வாயையும் மூடிக்கொண்டோம். எங்கள் குடும்பஙகளைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, தோழர்களைப்பற்றி, எங்களை வேட்டையாடிய, எங்களோடு ஓடிவந்த, எஙகளோடு மடிந்த தலைவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்திருந்தது; தெரியாமலுமிருந்தது.

எல்லா திசைகளுக்கும் நாங்கள் முகங்கொடுத்தோம். எங்களில் சிலர் வாழ்ந்தோம். இன்னும் நாங்கள் இருக்கிறோம். உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு வருந்துகிறோம்.

ஆங்கில மூலம் - வி.வி.கணேசநாதன்

தமிழில் : தோழர் கவின் மலர்

(20-05-2010 அன்று சென்னையில் நடந்த பானுபாரதியின் ‘பிறத்தியாள்' கவிதைத்தொகுப்பு வெளியீட்டில் வாசிக்கப்பட்டது)

கோலிவுட் கோடைமழை!

ஆச்சரியமான விஷயம். கோலிவுட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ஐந்து படங்கள் வெளியாவதாக சொல்கிறார்கள். இப்போதெல்லாம் தீபாவளிக்கே கூட மூன்று அல்லது நான்கு படங்கள் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. 87 தீபாவளி நினைவுக்கு வருகிறது. பத்தொன்பது படங்கள். ம்.. அதெல்லாம் அந்த காலம்!

கடந்த ஒரு மாதமாகவே புதுப்படங்கள் நிறைய வந்தாலும், வசூல் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் கடந்தவாரம் அதிகபட்ச வசூலை ஈட்டிக் கொண்டிருப்பதே ‘சுறா’ தானென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பர்ஸ்ட் ரன் அடிப்படையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் மொத்தம் எட்டு. சென்னையிலேயே அவற்றின் தற்போதைய வசூல் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

அங்காடித்தெரு - ஏழுவார முடிவில் ஒண்ணேமுக்கால் கோடி. திரையரங்குகளில் நாற்பது சதவிகித இருக்கைகள் கூட நிரம்பாத நிலையில் வேறு வழியின்றி ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா - பதினோரு வார முடிவில் ஐந்தேமுக்கால் கோடி. அனேகமாக இந்த வருடத்தின் முதல் சூப்பர்ஹிட் படம் இதுதான். ஓபனிங்கிலேயே மொத்தமாக அள்ளிவிட்டதால் அரங்குகள் காத்தாடிக் கொண்டிருக்கிறது. நூறாவது நாள் போஸ்டர் ஒட்டும் வரை ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் திரையரங்குகள்.

பையா - ஆறுவார முடிவில் ஐந்து கோடி. விதாவ-வுக்கு இணையான வசூல். இன்று 50வது நாள். ஐ.பி.எல். காய்ச்சலைத் தாண்டி வெற்றி கண்டது இப்படத்தின் சாதனை. இன்னமும் பாதி இருக்கைகள் நிறைவதால் ஓடிக் கொண்டிருக்கிறது.

கோரிப்பாளையம், குருசிஷ்யன் - ஒரு வார முடிவில் கால் கோடி கலெக்‌ஷன். இதற்கு மேல் செல்ஃப் எடுக்க வாய்ப்பில்லை.

குட்டிப்பிசாசு - ஒரு வார இறுதியில் முப்பது லட்சத்தை வசூல் தாண்டியிருக்கிறது. லோபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இருமொழிப்படமான குட்டிப்பிசாசு இவ்வளவுதான் அதிகபட்சமாக வசூலிக்க முடியும்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - ஒருவார முடிவில் அரைகோடியை வசூல் அனாயசமாக தாண்டியிருக்கிறது. ஆவரேஜ் தானென்றாலும் லாரன்ஸ் ஹீரோவாக நடித்தப் படத்துக்கு இது எதிர்பார்க்க முடியாத வசூல்தான். மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு காட்சி, இரண்டு காட்சியாக வெளியிடப்பட்ட இப்படம் இரண்டாவது வாரத்தில் இருந்து காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு ஓட்டப்படுகிறது.

சுறா - இரண்டுவார முடிவில் இரண்டே முக்கால் கோடி. விஜய் மேஜிக். தென்சென்னையில் காத்தாடிக் கொண்டிருக்கும் இப்படம் வடசென்னையின் மகாராணி, ஐட்ரீம்ஸ்களில் வார இறுதியில் ஃபுல் ஆகிறது. இன்னும் கொஞ்சம் முக்கினால் அதிகபட்சமாக ஒன்று அல்லது ஒன்றரை ’சி’ பார்க்கலாம்.

இன்று வெளியாகும் படங்களில் கனகவேல் காக்க, மாஞ்சாவேலு ஆகியவற்றுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஓபனிங் கிடைக்கக்கூடும். இப்படங்கள் சுமாராக இருந்தாலும் கூட ஹிட் அடிக்கலாம். கொல கொலயா முந்திரிக்கா, மகனே என் மருமகனே படங்களுக்கு எந்த கேரண்டியும் இல்லை. குற்றப்பிரிவு நன்றாக இருக்கும் பட்சத்தில் கருப்புக் குதிரையாக முன்னணிக்கு வரலாம்.

தீபாவளி, பொங்கல் ரிலீஸ் படங்கள் இப்போதெல்லாம் காலைவாரிவிட்டு விட்ட நிலையில் ஓரளவுக்கு வசூலை தந்துகொண்டிருந்த கோடை ரிலீஸும் இவ்வருடம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ‘சிங்கம்’ வரும்வரை எதுவும் பரபரப்பாக நடந்துவிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

20 மே, 2010

மருத்துவம், மனிதகுலத்துக்கு மகத்துவம்!

பேசல் மிஷன் (Basel Mission) மருத்துவமனை. 1834ல் சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் நிறுவப்பட்ட சேவை அமைப்பின் ஒரு கிளை. 1901ஆம் ஆண்டு வாக்கில் வடக்கு கர்நாடகப் பகுதிகளில் மிஷனரி அமைப்புகள் பரவலாகப் பணியாற்றியது. ஏனெனில் அப்போது அப்பகுதி மக்கள் பிளேக், மலேரியா போன்ற தொற்றுநோய்களால் கடுமையான உயிரிழப்பை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

நிரந்தரமான மருத்துவ உதவி தேவைப்பட்ட அப்பகுதியில், பேட்கேரி என்ற ஊரில் 1902ஆம் ஆண்டு பேசல் மிஷன் அமைப்பினரால் இம்மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை மக்களுக்கு தொடர்ச்சியான மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது. உள்ளூர் மக்களால் இன்றும் ‘ஜெர்மன் ஆஸ்பத்திரி’ என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் இங்கே பணிபுரிந்த பெரும்பாலான மருத்துவர்கள் ஜெர்மானியர்கள். மருத்துவமனையோடு ஒரு ஆதரவற்றோர் இல்லமும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விடுதியும் இயங்குகிறது.

1970 வரை இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். மிஷனரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்துகொண்டிருந்த பொருளாதார உதவிகள் நாளடைவில் நின்றுவிட்டன. மருத்துவமனை தொடர்ச்சியாக இயங்க, சிரமப்பட்டது. 1970களின் இறுதியில் மூடக்கூடிய நிலையும் ஏற்பட்டது.

1980லிருந்து 85 வரை தொடர்ச்சியாக இங்கே பணிபுரிந்த இந்தியப் பெண் மருத்துவர் ஒருவரின் தன்னலமில்லாத உழைப்பால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர் பணிபுரிந்த காலக்கட்டத்தில் நிறைய மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை இப்பகுதி மக்களுக்கு தர தாமாகவே முன்வந்தார்கள். முழுநேர மருத்துவர்களாக சிலரும், பகுதிநேர மருத்துவர்களாக பலரும் பணிக்கு வந்தார்கள்.

1980-83 வருடங்களில்தான் டாக்டர் சாலமன் செல்லையா இங்கே மருத்துவ அதிகாரியாக பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவம் முடித்து 1986ல் மருத்துவ சூபரிண்டெண்ட் ஆக இங்கே மீண்டும் பணிக்கு சேர்ந்தார். சுற்றுப்பகுதிகளில் சுகாதாரக்கேட்டால் பரவும் நோய்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமை, பாம்புக்கடி, தற்கொலை என்று கிராமப்புற மக்கள் இன்னமும் இறந்துகொண்டே இருந்தது அவருக்கு தாங்கமுடியாத வேதனையை தந்தது.

டாக்டர் சாலமன் தலைமையில் இளம் மருத்துவப்படை திரண்டது. மருத்துவமனையை தரம் உயர்த்தி மக்களுக்கு மகத்தான சேவையை வழங்கிட உறுதிபூண்டது.

உடனடியாக செய்யவேண்டிய பணிகளை பட்டியல் இட்டார்கள். அவசரச்சிகிச்சைப் பிரிவு அவசியம். எக்ஸ்ரே எடுக்கும் வசதி வேண்டும். நோயாளியின் இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும். தங்கி சிகிச்சை பெற நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். அறுவைச் சிகிச்சைக்கான கூடம் தேவை. நவீன லேப், மருந்தகம் முக்கியம். நகர்ப்புற மக்களுக்கு என்னென்ன மருத்துவ வசதிகள் கிடைக்கிறதோ, அவை எல்லாவற்றையும் இங்கேயே ஏற்படுத்த வேண்டும்.

பட்டியலிட நன்றாகதானிருக்கிறது. கிராமப்புறத்தில் எல்லா வசதிகளோடும் ஒரு நவீன மருத்துவமனை. ஏற்படுத்த வேண்டுமே? எப்படி?

டாக்டர் சாலமன் கனவு கண்டார். கனவினை நனவாக்க இரவுபகலாக உழைத்தார். முப்பது வருடங்களாக இங்கேயே தங்கியிருக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மிகக்குறைந்த கட்டணத்தையே வாங்கினார். சிறுதுளி, பெருவெள்ளம். ஒரு நாளைக்கு குறைந்தது 250 பேர் சிகிச்சைக்காக வர ஆரம்பிக்க, சொல்லிக் கொள்ளும்படி வருமானம் வந்தது. மருத்துவமனை வெளியே எந்த உதவியையும் பெறாமல் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. நல்ல கனவு தன்னைத்தானே நனவாக்கிக் கொள்ளும்.

இன்று அம்மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கிறது. எப்படி இயங்குகிறது?

• சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற ரூ.25/- மட்டுமே கட்டணம். இருபது வருடங்களாக இது மட்டுமே கட்டணம்.

• மருத்துவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உழைக்கிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் இரவுப்பணியையும் சேர்த்து தொடருகிறார்கள்.

• அவசரச் சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சைப் பெற கட்டணம் ஒரு நாளைக்கு ரூ.100/- மட்டுமே பெறப்படுகிறது.

• மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணிகளை மட்டுமே பார்க்காமல் மற்றப் பணிகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள். உதாரணமாக எக்ஸ்ரே எடுப்பவர், அவசரத்துக்கு கவுண்டரில் அமர்ந்து பணம் கூட வசூலிக்கிறார்.

• மருந்தகம் மற்றும் நவீன லேப் ஆகியவற்றின் மூலமாக வரும் வருமானத்தை வைத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்தக் கட்டண சிகிச்சை செலவை ஈடு கட்டுகிறார்கள்.

• குறைந்த கட்டணம்தான் நோயாளிகளிடம் பெறப்படுகிறது என்றாலும், மருத்துவமனையில் பணிபுரியும் எல்லோருக்கும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.

நகர்ப்புற மருத்துவக் கூடங்களில் நல்ல வருமானம் வருகிறது. அதனால் நல்ல கட்டமைப்பை ஏற்படுத்த முடிகிறது. நகர்ப்புற மருத்துவமனைகள் நவீன வசதிகளோடு இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பெசல் மருத்துவமனையைப் போல கிராமப்புறங்களில், குறைந்த கட்டணம் வாங்கி இயங்கும் ஒரு மருத்துவமனை நவீனமாக செயல்படுவதுதான் ஆச்சரியமானதும், பாராட்டத்தக்கதும் ஆகும். கலாமின் பாராட்டுகளைப் பெற டாக்டர் சாலமனும், அவரது குழுவினரும் இதனாலேயே தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

மருத்துவம் என்பது சேவை. பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. இதை உணர்ந்ததால் தான் இன்று டாக்டர் சாலமன் குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்கிறார். ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் அவரை தினம் தினம் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டாக்டர் சாலமன் இன்று ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மருத்துவமனை எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு மாதிரியாக பேசல் மருத்துவமனை தனது சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ரமணா.. ரமணா..

இவர் சினிமா ரமணா இல்லை. சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். இவர் பொறுப்பேற்றபின், மழைக்காலங்களில் இவரது பெயர் வானொலியிலும், தூரதர்ஷனிலும் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம். மழையை மழை என்று சொல்லலாம். இனி ரமணா என்றும் சொல்லலாம்.

புயல் வருமா மழை வருமா என்று மிகத்துல்லியமாக கணித்துச் சொல்லக்கூடியவர். இவரது கணிப்பு எல்லாம் சயண்டிஃபிக்காக கரெக்ட்டுதான். ஆனால் இவருக்கும் புயல் மழைத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் வருணபகவானுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மவரை ஏமாற்றி டகால்ட்டி காட்டுவதே வருணபகவானின் பொழைப்பாக போகிறது.

ரமணாவை ஏமாற்றுவதற்காகவே வங்கக்கடல் பகுதியில் கடுமையான மேகமூட்டத்தை வருணபகவான் அவ்வப்போது உருவாக்குவதுண்டு. அதைக்கண்டு உற்சாகமடைந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பொழியும் என்று ரமணா டிவியில் சொல்வார். உடனே ரமணாவுக்கு பழிப்பு காட்டும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 108 டிகிரி வெய்யில் கொல்லு கொல்லுவென கொல்லும் விதமாக வெதரை வருணபகவான் மாற்றி வைத்து விடுவார். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பு மாறுவதின் பின்னணி உண்மை இதுதான்.

வருணாவுக்கும், ரமணாவுக்கும் இது காலம் காலமாக நடந்து வரும் மரபுப்போர்.

இரண்டு நாட்களாக 'அழகிய லைலா' வங்கக் கடலோரமாக பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, நம் ரமணாவை டிவியிலும், ரேடியோவிலும் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினருக்கு கடுமையான ஏமாற்றமும், மன உளைச்சலுமே பரிசாக கிடைத்தது. ரமணாவுக்கு பதிலாக ஒரு குழந்தை மழைச்செய்திகளை வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை என்றால் Child அல்ல. அந்த அதிகாரியின் பெயரே அதுதான்.

கத்தரி வெய்யில் சுட்டெரிக்க வேண்டிய இந்த மே மாதத்தில் அதிசயமாக கோடைமழை, லைலா பிராண்டிங்கில் வந்தது எப்படி என்று நாம் புலனாய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சிகரமான பின்னணித் தகவல்கள் நிறைய கிடைத்திருக்கிறது.

மழைக்காலத்தில்தான் வருணா, ரமணாவைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் கோடைக்காலத்திலும் தன்னுடைய திருவிளையாடலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். நல்ல வெயில் காலமாயிற்றே என்று ரமணன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்துக்கு நேற்று தேதி குறித்திருக்கிறார். இது பொறுக்கவில்லை அவரது பரமவைரியான வருணபகவானுக்கு.

விஸ்வாமித்ரனின் தவத்தை மேனகையை வைத்து கலைக்க இந்திரன் முற்பட்ட அதே டெக்னிக்கை வருணபகவான் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரமணா இல்லத் திருமணத்தை சொதப்ப லைலாவை அனுப்பி வைத்திருக்கிறார். ரம்பா வந்தால் கூட அசந்துவிடாத மனஉறுதி கொண்ட நம் ரமணா தன்னுடைய வானிலை நுண்ணறிவை பயன்படுத்தி லைலாவை சென்னைக்கு வரவிடாமல் மசூலிப்பட்டணத்துக்கு துரத்தி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

லைலா மசூலிப்பட்டணத்துக்கு பயணப்பட்டாலும் தன்னுடைய சைடு எஃபெக்ட்டை நேற்று சென்னையில் காட்ட தவறவில்லை. இருப்பினும் கொட்டும் மழைக்கு இடையே ரமணா அவர்களின் மகள் திருமணம் வெற்றிகரமாக நல்லமுறையில் நடந்திருக்கிறது. வருணபகவானின் சதியும் அதிரடியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. மாமனாரான வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரமணன் அவர்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும் நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்து ஜல்ப்பு பிடித்தோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்!

புலனாய்வு செய்திக்கு உதவி : தட்ஸ்தமிழ்.காம்

19 மே, 2010

மில்லியன் டாலர் வெப்சைட்!


அலெக்ஸ் ட்யூ என்றொரு இருபத்தோரு வயது இளைஞன் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். தனது கல்வித்தேவைகளுக்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க அவன் விரும்பினான். அவனிடம் ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே இருந்தது. ஒரு மில்லியன் டாலரை இந்த வெப்சைட்டை வைத்து சம்பாதிக்க முடியுமா? என்று திட்டம் தீட்டினான்.

என்னுடைய வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு பிக்ஸெலையும் (அளவை குறிக்கும் கணினி தொடர்பான சொல்) விற்கப்போகிறேன். என்னிடம் பத்து லட்சம் பிக்ஸல் இருக்கிறது. ஒவ்வொரு பிக்ஸலும் ஒரு டாலர் என்று அறிவித்தான். குறைந்தபட்சமாக ஒருவர் 10 x 10 பிக்ஸல் அளவே வாங்கமுடியும் என்றும் அறிவித்தான். இந்த 10 x 10 பிக்ஸெல் அளவுக்கு ஒரு நிறுவனம் 100 டாலரை செலுத்தினால் அவனது வெப்சைட்டில் நிறுவனம் தங்கள் விளம்பரத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். அவ்விளம்பரம் ஐந்து ஆண்டுகளுக்கு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அவ்விளம்பரத்தின் மூலமாக நிச்சயமாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தான்.

பொதுவாக பார்க்கப் போனால் இப்படி ஒரு திட்டமே பைத்தியக்காரத்தனமான திட்டம் என்று நாம் சொல்லிவிடுவோம். அலெக்ஸின் நண்பர்கள் பலரும் கூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே தன் வெப்சைட்டில் (http://www.milliondollarhomepage.com) இருந்த பத்து லட்சம் பிக்ஸல்களையும் அலெக்ஸால் விற்றுவிட முடிந்தது. அலெக்ஸின் தளத்தில் விளம்பரம் செய்தவர்கள் அத்தனை பேருமே ஒட்டுமொத்த குரலில் எங்களுக்கு இது உபயோகமான முதலீடு என்றார்கள்.

அலெக்ஸின் தளத்தில் டி.எஸ். லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் 800 பிக்ஸல்களை வாங்கியிருந்தது. “அலெக்ஸின் தளத்தில் எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியவுடனே எங்களது இணையத்தளத்துக்கு பல லட்சம் பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஒருவாரத்துக்குள்ளாகவே நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்தது. இன்றளவுக்கும் அதே விற்பனையை நாங்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் கூட பலபேர் அலெக்ஸின் தளம் மூலமாக எங்கள் இணையத்தளத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் கேலோ சொன்னார்.

அவரிடம் விளம்பரம் செய்தவர்கள் மட்டுமல்ல, உலகளவில் இருக்கும் பல மீடியாக்களும் அலெக்ஸின் இந்த புதுமையான முயற்சியை பாராட்டினார்கள். பல விளம்பர ஜாம்பவான்கள் எப்படி இந்த திட்டம் வெற்றியடைந்தது? உட்கார்ந்த இடத்திலிருந்தே பத்து லட்சம் டாலரை அந்த பையன் எப்படி சம்பாதித்தான்? என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் குறித்த எந்த பொதுவான நுணுக்கங்களும் தெரியாத அலெக்ஸ் ஜெயித்துக் காட்டியது இன்றைக்கும் கூட புதிராகவே இருக்கிறது.

அலெக்ஸ் செய்ததைப் போலவே, கிட்டத்தட்ட அதே முயற்சி ஒன்று தமிழ் வலைப்பதிவர்களுக்காக பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/ இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக 50 பிரபல(எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகள் இப்போதைக்கு அவர்களை கேட்காமலேயே இலவச அடிப்படையில் திரட்டப்படுகிறது. இன்னும் 51 பேர் தங்களுடைய புகைப்படமும் இடம்பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். பின்னர் பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் 100 பிக்ஸல் அடங்கிய ஒரு பெட்டிக்கு ஒரு டாலர் என்று வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்மினியில் ஏன் இணைய வேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதில் ஏதுமில்லை. கேபிள் சங்கர் போல குறுகிய காலத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ்களை விரைவில் பெற விரும்பும் வலைப்பதிவர்களுக்கு இத்தளத்தை பரிந்துரைக்கிறேன். இதனால் வலைப்பதிவர்களுக்கு ஹிட்ஸ் தவிர்த்து வேறு எந்த பெரிய பலனையும் எதிர்ப்பார்த்து விட முடியாது என்று நினைக்கிறேன். வணிக நிறுவனங்கள் ஏதேனும் வலைப்பதிவு நடத்தினால் மின்மினி மூலமாக வணிகத்தை ஓரளவு வளரவைக்கலாம். எனினும் தமிழில் வலைப்பதிவர்களை வைத்து வித்தியாசமான விளையாட்டு ஆட வந்திருக்கும் நண்பர் கலையழகன் அவர்களை பாராட்டுகிறேன்.

மேலதிக தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பாவிக்கலாம்.

17 மே, 2010

நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!

முன்பெல்லாம் தமிழ்மணம் நட்சத்திரம் என்று சொன்னால் ஒரு கெத்து இருந்தது என்பது உண்மைதான். நானெல்லாம் கூட தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கொஞ்சம் பரவலாக தெரிந்தேன். அப்போதெல்லாம் பதிவர்கள் தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர அழைப்பு கடிதம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். குசும்பன் போன்ற பதிவர்கள் சும்மானாச்சுக்கும் யாருக்காவது தமிழ்மணத்தில் இருந்து அஞ்சல் போடுவதைப் போல போட்டு ஃபேக் நட்சத்திர அழைப்பு அனுப்பி கலாய்ப்பார்கள். அதெல்லாம் கனாக்காலம்.

நர்சிம், கேபிள்சங்கர், அகநாழிகை, வால்பையன், அதிஷா, தண்டோரா போன்ற நிறைய நிஜமான ‘ஸ்டார்' பதிவர்கள் நட்சத்திரங்கள் ஆனதே இல்லை எனும்போது பாமரன், க.சீ.சிவக்குமார் போன்றவர்கள் நட்சத்திரங்களாகக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பதிவே போடாமல் நட்சத்திர சாதனை நிகழ்த்தியதுகூட உண்டு. சிலர் இருமுறை கூட நட்சத்திரத்தமான அதிர்ஷ்டமும் நடந்ததுண்டு. நட்சத்திரப் பதிவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற விஷயம் இன்னமும் சிதம்பர ரகசியமாகதான் இருக்கிறது.

கடந்தவார நட்சத்திரம் தமிழ்சசி. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பதிவுகளில் இருந்து விலகியிருந்தவர். தமிழ்மணத்தின் அட்மின்களில் ஒருவர் நட்சத்திர வாரத்தில் வந்ததுமே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது. சித்தார்த்த 'சே' க்வாடா என்ற பதிவர் நட்சத்திரமாகியிருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. இவரும் தமிழ்மண அட்மின்களின் ஒருவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.

என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் நட்சத்திர அன்பர் 2009 அக்டோபரில் இந்த வலைப்பூவை தொடங்கி ஒரே ஒரு பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மூன்றாவது பதிவை நட்சத்திர வாரத்தில் இடுகிறார். நல்ல வேகம்தான். இவரிட்ட இரண்டே பதிவுகளின் தரத்தில் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம். ஆனால், ஒரு சின்ன சந்தேகம். ஒரு பதிவர் புதியதாக வலைப்பூ தொடங்கி தமிழ்மணத்தில் இணைக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று பதிவுகளாவது தமிழில் எழுதியிருக்க வேண்டும் என்றொரு விதி இருப்பதாக நினைவு. ஆனால் இரண்டே இரண்டு பதிவுகளை மட்டுமே எழுதியவர் எப்படி தமிழ்மண நட்சத்திரம் ஆக முடியும்? சரி. விதியை விடுங்கள். விதிகள் எல்லாமே உடைக்கப்படுவதற்காக ஏற்படுத்தப்படுபவைதானே?

எனக்கு ஒரு ‘ஸ்டார்' வலைப்பதிவரை தெரியும். ஆங்காங்கே அடர்த்தியாக பின்னூட்டமிடுவார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பின்னூட்ட சுனாமியாக இருந்தவர். அமெரிக்காவில் இருந்து வந்த அவரை ஒருமுறை நேரில் சந்தித்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சம்பிரதாயத்துக்காக எல்லா பதிவர்களிடமும் சொல்வது மாதிரி, “அண்ணே உங்க பதிவையெல்லாம் படிச்சிருக்கேன். அட்டகாசம்” என்று அப்பாவித்தனமாக சொன்னேன். “அடப்போய்யா. எனக்கெங்கே வலைப்பூ இருக்கு? சும்மா ஒரு அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணி வெறுமனே பின்னூட்டம் மட்டும்தானே போட்டுக்கிட்டிருக்கேன்!” என்றார். அப்போதுதான் அவருக்கென்று ஒரு வலைப்பூவே இல்லாதது தெரிந்து என்னை நானே நொந்துகொண்டேன். இப்போதும் கூட அவருக்கென்று வலைப்பூ எதுவும் இல்லையென்று தெரிகிறது.

அடுத்தவார நட்சத்திரமாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம். நட்சத்திரமாவதற்கு வலைப்பூவெல்லாம் இருப்பது ஒரு முக்கியமா என்ன? நாம் நட்சத்திரம் என்று யாரையாவது நினைத்தால் நட்சத்திரமாக்கி அழகு பார்த்துவிட வேண்டியதுதான். சொல்ல மறந்துவிட்டேனே. இந்த வலைப்பூ இல்லாத பின்னூட்ட சுனாமியின் பெயர் சுடலைமாடன். அவரும் கூட அட்மினாகதான் இருக்கிறார். ஹாட்ரிக் அடிக்க அருமையான வாய்ப்பு.

“நீதான் இப்போது தமிழ்மணத்திலேயே இல்லையே? தமிழ்மணப்பட்டையைக் கூட தூக்கிவிட்டாயே? நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்?” என்று பராசக்திபட க்ளைமேக்ஸில் வக்கீல் சிவாஜியை பார்த்து கேட்டதுமாதிரி நீங்கள் யாராவது பின்னூட்டத்தில் கேட்கலாம். நானும் சிவாஜி மாதிரிதான் பதில் சொல்லவேண்டும். “நான் தமிழ்மணத்தில் இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தாலும் என் பதிவுகள் ‘எப்படியோ' தமிழ்மணத்தில் கொஞ்சநாளாக வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய தொல்லையாக போகிறது. இப்படியெல்லாம் பேசினால் 'அது' மாதிரி வராமல் சுத்தபத்தமாக செய்துவிடுவார்கள் இல்லையா?”