28 பிப்ரவரி, 2010

இருள்நீக்கும் இந்தியச்சுடர்!


இருளை கண்டு நீங்கள் பயப்படலாம். இருளின் தன்மையும் இதுதான். இதிலிருந்து தப்பிக்க விடியும் வரை காத்திருப்பதுதான் ஒரே வழி. இவ்விதி இரவின் இருளுக்குப் பொருந்தும்.

வாழ்க்கை இருளுக்கு?

இருளின் இன்னொரு பெயர் குறைந்த வெளிச்சம் என்று சொல்லுவதெல்லாம் கவிதைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். விடியுமென்று காத்திருந்து மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் பல்லாயிரம் பேர். என்றாவது ஒருநாள் என் வாழ்க்கை அதுவாகவே விடியும் என்று காத்திருப்பது மூடநம்பிக்கை. முனைப்பான முயற்சிகள் மட்டுமே உங்கள் விடியலை விரைவாக்கும்.

அதுவரை வெளிச்சத்துக்கு ஒரு மெழுகுவர்த்தியாவது துணைக்கு வேண்டும் அல்லவா? பல ஆயிரம் பேருக்கு விடியும் வரை மெழுகுவர்த்தி வெளிச்சம் தந்து காத்து வரும் பணியைதான் செய்துவருகிறது இந்தியச் சுடர்.

சுடர் முதலில் எங்கே தோன்றியது?

உதயகுமார் என்ற இளைஞரும், அவருடைய நண்பர்களும் அப்போது சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். கிராமங்களில் இருந்து நகருக்கு படிப்பு நிமித்தமாக வந்தவர்கள். பெரும்பாலானவர்கள் அவரவர் குடும்பத்தில் முதல் தலைமுறையாக பட்டம் படிப்பவர்கள்.

இந்த கல்விக்காக தாங்கள் அடைந்த சிரமங்களை அவ்வப்போது பேசிக்கொள்வார்கள். போதுமான அறிவும், திறனும் இருந்தும் கூட பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல், பணிபுரிய சென்ற தங்களுடைய சகபள்ளித் தோழர்களை நினைவு கூர்ந்து கொள்வார்கள்.

“சரி. எப்படியோ அடித்துப் பிடித்து நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு?” அக்கறையோடு அவர்களுக்குள் எழுந்த இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்தார்கள்.

கல்லூரி முடிந்ததும், திசைக்கொரு பறவைகளாய் பறந்தார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விஸ்வரூபம் எடுத்து நின்ற காலம் அது. பெரும்பாலானவர்களுக்கு அதே துறையில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. தொலைபேசியிலும், நேரிலும் அவ்வப்போது சந்தித்து விவாதிக்கும்போது தங்களுடைய முந்தைய கேள்விக்கு இப்போது அவர்களிடம் பதில் இருந்தது. ஏனெனில் இப்போது இவர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தார்கள். தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இயலாதவர்களுக்கு தந்து உதவும் மனமும் அவர்களிடம் இருந்தது.

இப்படித்தான் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘இந்தியச் சுடர்’ நிறுவனம் பிறந்தது. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் மீண்டும் கிராமங்களுக்கே சென்று, தாங்கள் அடைந்த முன்னேற்றத்தை, தங்களுக்குப் பிறகு வருபவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்றிய சுடர் இது. உயர்ந்த நோக்கங்கள் தங்களை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் திறன் படைத்தவை.

தொடங்கப்படும்போது இந்தியச்சுடர் தமக்குள்ளாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் இவை :

- வலிமையான இந்தியாவை உருவாக்க கல்வியை பரவலாக்குவது.

- ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் கல்வியை அவர்கள் எட்டுமாறு வகை செய்து தருவது.

- குழந்தைகளின் திறனை சமூக-கலாச்சார மேம்பாட்டு நிகழ்வுகளின் மூலமாக அதிகரிப்பது.

- சுய ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் பணியை குழந்தைகளிடமிருந்தே துவங்குவது.

இந்த உறுதிமொழிகளை அரசுசாராத ஒரு அமைப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமென்ன, அதுவும் குறிப்பாக கல்வி குறித்த அக்கறையோடு? இங்குதான் இன்றைய கள யதார்த்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று வருடங்களாக தன்னாட்சி செய்துவந்தும் இந்தியாவின் நிலை கீழ்க்கண்டவாறுதான் இருக்கிறது.

- 65.4% மக்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். சுமார் முப்பத்தைந்து கோடி பேருக்கு எழுத்து, படிப்பு வாசனையே இல்லை.

- ஏழ்மை காரணமாக ஆயிரம் குழந்தைகளில் எண்பத்தி இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டிய வயதில் பணிக்கு அனுப்பப் படுகிறார்கள்.

- 2,390 லட்சம் பேருக்கு வெறும் ஐந்து லட்சம் பள்ளிகளே இருக்கின்றன.

- பதினான்கு சதவிகிதம் பள்ளிகளுக்கு முறையான கட்டிடம் இல்லை.

- முப்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளுக்கு கரும்பலகை கூட இல்லை.

- முப்பது சதவிகிதம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரோடு இயங்கி வருகின்றன.

- ஐம்பத்தியெட்டு சதவிகிதம் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.

- பள்ளிக்கு வரும் குழந்தைகளில் எழுபது சதவிகிதம் பேர் பதினான்கு-பதினைந்து வயதுகளில் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகிறார்கள்.

இந்த புள்ளி விவரத்தைப் பார்த்ததுமே, நாம் செய்யக்கூடிய விஷயம் இரண்டே இரண்டாகதான் இருக்க முடியும். ஒன்று நம் அரசுகளை திட்டித் தீர்த்துவிட்டு, மாலை முதல் காட்சி சினிமா பார்க்கப் போய்விடலாம். இரண்டாவது, அரசினை மட்டுமே முழுமையாக எதிர்பாராமல் இந்நிலை மாற நம்மாலான அதிகபட்ச பங்கினை தந்திட உறுதியேற்கலாம். இந்தியச் சுடர் இளைஞர்கள் இரண்டாவது உறுதியை ஏற்றார்கள்.

ஆறுவிதமான திட்டங்களை தீட்டினார்கள்.

ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துதல் : கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தங்கள் செலவில் நியமிப்பது. டியூஷன் மையங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பிரத்யேக கல்வி அளிப்பது.

கல்வி கருவிகளை வழங்குதல் : பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப்பை, சீருடை, மிதியணி உள்ளிட்ட செலவு பிடிக்கும் விஷயங்களின் சுமையை, ஏழைப் பெற்றோர்களிடமிருந்து நிறுவனம் தாங்கள் சுமக்கத் தொடங்குவது.

சுயமுனைப்பு பயிற்சி : சுயமுனைப்பு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குவிஸ், ஆசிரியர் பயிற்சி போன்ற நிகழ்ச்சிகளை தேவைப்படும் பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்த்துவது.

மாணவர்களை தத்தெடுத்தல் : ஒரு ஆண்டு முழுவதும் ஒரு மாணவனுக்கு ஆகும் கல்விச்செலவு மொத்தத்தையும் தத்தெடுத்தல்.

கணிப்பொறி பயிற்சி : கணிப்பொறி மையங்களை நிறுவி இலவச கணிப்பொறி பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குதல்.

நூலகம் : நூலகமற்ற பள்ளிகளில் நூலகங்களை உருவாக்குதல்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற இந்தியச் சுடரை, அரசு பதிவுபெற்ற நிறுவனமாக மாற்றி, அறங்காவலர்களை நியமித்தார்கள். கிராமங்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, அரசுப்பள்ளிகளுக்கு படையெடுத்தார்கள். யாருக்கு, எங்கே உதவி தேவைப்படுகிறது என்று கண்டறிந்தார்கள்.

உறுப்பினர்களிடையே நிதி பெற்று உதவினார்கள். மேலும் தேவைப்பட்ட நிதிகளை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலமாக சேகரித்தார்கள். ஆரம்பத்தில் எழுபது பேர் உறுப்பினர்களாக இருந்த அமைப்பு இன்று எண்ணூறுக்கும் மேற்பட்டவர்களாக வளர்ந்திருக்கிறது. உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு பெருகியே வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அமைப்பு இன்று பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்தியப் பிரதேசம் என்று மற்ற மாநிலங்களுக்கும் கிளைபரப்பு கல்விச்சேவையை வழங்கி வருகிறது.

கடந்த ஆறு வருடங்களில் இருபத்தி ஆறு ஆயிரம் மாணவர்கள் வாழ்வில் இந்தியச் சுடர் வெளிச்சம் ஏற்றியிருக்கிறது. முப்பத்தி நான்கு லட்ச ரூபாய் அளவிற்கு நிதி திரட்டி கல்விக்காக செலவழித்திருக்கிறார்கள்.

செலவு விஷயத்தில் சவுதி அரேபிய சட்டங்களுக்கு நிகரான கறார்த்தன்மை இருப்பதில் இந்தியச் சுடர் மற்ற அரசுசாரா நிறுவனங்களிடம் இருந்து வேறுபடுகிறது. திரட்டப்படும் நிதியின் ஒவ்வொரு காசும், பயனாளிக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுவரை இந்நிறுவனத்தின் நிர்வாகச்செலவு முழுவதையுமே உறுப்பினர்களே தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். பயணப்படியோ, வேறு படிகளோ இதில் பணியாற்றுபவர்களுக்கு இல்லை. ஒரு திட்டம் தொடர்பாக, ஒரு உறுப்பினர் மணிப்பூருக்கு செல்ல வேண்டுமானால் அவரது சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். நிறுவனம் தனது நிதியிலிருந்து பணம் தராது.

“கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் திரட்டும் ஒவ்வொரு காசும், யாருக்காக தரப்படுகிறதோ, அவருக்கு போய்சேர வேண்டும் என்பதால் இந்த கடுமையை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அறங்காவலர்களில் ஒருவரான சற்குணன். இந்த ‘சொந்தச்செலவில் சேவை’ திட்டத்துக்கு இதுவரை உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கூடுதல் தகவலை தருகிறார் இன்னொரு அறங்காவலரான சிவநாராயணன்.

இந்தியச் சுடர் உறுப்பினர்கள் தயாரித்திருக்கும் ‘உயர்கல்வி வழிகாட்டி’ என்ற பதினாறு பக்கநூல் அவர்களது குறிப்பிடத்தகுந்த முக்கியமான சாதனை. மேல்நிலை பள்ளிக்கல்வி முடித்த ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்படும் குழப்பங்களை போக்குகிறது. உயர்கல்வி குறித்த எல்லா வாய்ப்புகளையும் சுருக்கமாக, எளிமையாக அலசி ஆராய்கிறது. இந்நூலை இலவசமாகவே தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

“கல்வியால் முன்னேறியவர்கள், அடுத்த தலைமுறையின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த கல்விச்சேவையில் முன்னுரிமை வழங்கி வருகிறோம். கல்விக்காக ஆகும் செலவினை தடைக்கல்லாக நினைக்காமல் எங்களிடம் மாணவர்கள் வரலாம். எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்று வாக்கு கொடுக்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனரான உதயகுமார்.

அரசின் கையை எதிர்பார்க்காமல், தன் கையே மற்றவர்களுக்கு உதவும் என்று களமிறங்கியிருக்கும் இந்த இளைஞர்கள், கல்விப்புரட்சிக்கான விதையை விதைத்து வருகிறார்கள். எதிர்கால சமூகம் கனியை ருசிக்கும் என்று நம்பலாம்.

யாரோ ஒருவருக்கு விளக்கேற்றினால், நீங்கள் செல்லவேண்டிய பாதையும் ஒளிமயமாகிறது!

இந்தியச் சுடர் தொடர்புக்கு :
இணையம் : www.indiasudar.org
மின்னஞ்சல் : admin@indiasudar.org
வி.உதயகுமார், தலைமை நிர்வாகி : 9886733607
டி.சற்குணன், நிர்வாகி : 9884153800

(நன்றி : புதிய தலைமுறை)

26 பிப்ரவரி, 2010

ஆட்டோ ராமர்!


சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து சாந்தோமுக்கு செல்ல புகைப்படக் கலைஞரோடு நின்றிருந்தோம். அவசரத்துக்கு பஸ் கிடைக்கவில்லை. வந்த நான்கைந்து ஆட்டோக்களும் சாந்தோம் செல்லத் தயாராக இல்லை. “சாந்தோமா? நூறு ரூபாய் கொடு!” என்று ஒரு ஆட்டோக்காரர் கேட்க, மூன்று கிலோ மீட்டர்தானே, நடந்தே போய்விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

‘CALL AUTO 9941468215’ என்று எழுதப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று, நாம் கைகாட்டாமல் தாமாகவே அருகில் வந்து நின்றது.

“வணக்கம். நான் ஸ்ரீராமர். ஆட்டோவுக்காக காத்திருக்கீங்களா? எங்கே போகணும்?” என்று அந்த டிரைவர் கேட்டதுமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

“சாந்தோம்” என்றதுமே, “உட்காருங்க. போகலாம்” என்றார்.

உட்கார்ந்தவுடனேயே மின்விசிறியின் ஸ்விட்சைத் தட்டினார். “அக்டோபர் மாச வெயில்லு ஏப்ரலையே மிஞ்சிடும் போலிருக்கே?” என்று கமெண்டும் அடித்தார். காசு பற்றி பேசவேயில்லை. சாதாரண ஆட்டோவே நூறு ரூபாய் கேட்கும்போதும், மின்விசிறி வசதியெல்லாம் கொடுக்கும் ஆட்டோவில் சொத்தையே எழுதிவாங்கி விடுவார்களே என்று பயந்தபோது, மீட்டரை சொடுக்கினார்.

“பயப்படாதீங்க சார். மீட்டர் என்ன காட்டுதோ, அந்தப் பணத்தை மட்டும்தான் வாங்குவேன். இருபது ரூபாய்க்குள்ளே தான் ஆகும்!” என்றார் ஆட்டோ நண்பர்.

சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஸ்ரீராமரும் ஒருவர். “சைட்லே படிக்க பத்திரிகைங்க வெச்சிருக்கேன். தேவைப்பட்டா எடுத்துங்க சார்!” என்றவாறே வண்டியை கிளப்பினார். சில நாளிதழ்களும், வார இதழ்களும், கூடவே நம்ம புதியதலைமுறையும். நிமிர்ந்துப் பார்த்தால் ஒரு டைம்பீஸ். “எல்லாருமே வாட்ச் கட்டுறதில்லை. எவ்வளவு நேரத்துலே போகவேண்டிய இடத்துக்கு போகிறோம்னு பயணிகள் தெரிஞ்சுக்கணுமில்லே?”

சென்னையின் வரைபடம் ஒன்றும் செருகப்பட்டிருக்கிறது. “சென்னை ரொம்ப பெரிய ஊருங்க. புதுசா இங்கே வர்றவங்க குழம்பிடறாங்க. அவங்க வசதிக்காகதான் இந்த மேப்!”
அடுத்தடுத்து சதிஷ்குமார் என்கிற ஸ்ரீராமர் இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டே போக, அவரைப் பற்றி மெல்ல விசாரித்தோம்.

“முப்பத்தி மூணு வயசாகுது. எட்டாவது வரைக்கும்தாங்க படிச்சிருக்கேன். என்னோட அக்காவெல்லாம் ரெண்டு, மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவில் போகுறதுக்கே அநியாயமா காசு கொடுப்பதைப் பார்த்து மனம் வெதும்புவேன். ஆட்டோக்காரங்க கிட்டேருந்து பயணிகளை காப்பாத்தணும், நாமளும் ஏதாவது வேலை பார்க்கணும்னு ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். சுயநலத்திலும் ஒரு பொதுநலம்னு வெச்சிக்குங்களேன்.

மீட்டருக்கு மேலே அஞ்சு பைசா வாங்குறதில்லே. பயணிகளை மரியாதையா நடத்துறேன். என்னோட விருந்தோம்பலில் திருப்தியானவங்க சில பேர், அவங்க நண்பர்களுக்கு என்னைப் பத்திச் சொல்லுவாங்க. அதனாலே நிறைய பேர் என் ஆட்டோவைத் தேடி வந்து பயணிக்கிறாங்க. அவங்க வசதிக்காக இந்த ஆட்டோவை ‘கால் ஆட்டோ’வா மாத்தியிருக்கேன். என் செல் நம்பருக்கு போன் பண்ணா, வீட்டுக்கு வந்து பிக்கப் பண்ணிக்குவேன். பொதுவா மேற்கு மாம்பலம், தி.நகர், மயிலாப்பூர் ஏரியாக்கள் தான் நாம வேலை பார்க்குற இடம். என்னைப் பத்தி கமிஷனர் ஆபிஸ்லே கேள்விப்பட்டு கூப்பிட்டு பாராட்டியிருக்காங்க. ரோட்டரி சங்கத்தில் ‘சென்னையின் சிறந்த ஆட்டோ டிரைவர்’னு விருதுகூட கொடுத்திருக்காங்க!” சிக்னல்களை கவனமாக கவனித்தவாறே நம்மிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“எல்லா ஆட்டோக்காரங்களும் உங்களை மாதிரி இல்லாம ஏன் இப்படி அநியாயமா காசு வாங்குறாங்க?”

“ஒரு பயணியா நீங்க இப்படித்தான் நினைப்பீங்க. பத்துவருஷமா மினிமம் 7 ரூபாய், கிலோ மீட்டருக்கு ரூ.3.50 என்பதுதான் அரசு ஆட்டோக்காரங்களுக்கு நிர்ணயிச்ச கட்டணம். இப்போதான் மினிமம் ரூ.14.00, கிலோ மீட்டருக்கும் ரூ.6.00ன்னு உயர்த்தி இருக்காங்க. பெட்ரோல் விக்கிற விலையிலே இது ரொம்ப ரொம்ப குறைவான நிர்ணயம்.

ஆட்டோ சங்கங்கள் கேட்கிறமாதிரி குறைந்தக் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 10 ரூபாய்னு நிர்ணயிச்சா, பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க. அப்போதான் கட்டுப்படியும் ஆகும். எப்படி இருந்தாலும் ‘லாபமோ, நஷ்டமோ’ என்னைப் பொறுத்தவரைக்கும் மீட்டர் போட்டுதான் ஓட்டணும்னு உறுதியா இருக்கேன்!” என்கிறார்.

நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது. மீட்டர் காட்டிய இருபது ரூபாயை கொடுத்துவிட்டு விடைபெறும்போது, “இன்னமும் வாடகை ஆட்டோதான் சார் ஓட்டுறேன். பகல் வாடகை 150 ரூபாய், முழுநேரம் ஓட்டுனா 300 ரூபாய். அப்படியிருந்தும் எனக்கு சராசரியா தினமும் 150, 200 ரூபாய் வருமானம் கிடைக்குது. சீக்கிரமா சொந்த ஆட்டோ வாங்கணும். ஆட்டோ வாங்கிட்டா ஈஸியா பர்மிட் கொடுக்கறோம்னு துணை கமிஷனர் சொல்லியிருக்கார். வர்றது வாய்க்கும், வயித்துக்குமே சரியா போகுதே. எங்கிருந்து வாங்குறது?” என்று அங்கலாய்த்தார் ஸ்ரீராமர்.

விரைவில் சொந்த ஆட்டோ வாங்கி சிறப்பான சேவைபுரிய வேண்டுமென வாழ்த்தி விடைபெற்றோம்.

எக்ஸ்ட்ரா மேட்டர் : சென்னையில் மட்டுமே அறுபதாயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரிகிறார்கள். இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இத்தொழில் புரையோடிப் போயிருப்பதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே காரணமல்ல. யாரெல்லாம் சொந்த ஆட்டோ வாங்கி வைத்து, ஓட்டுனர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள் என்றொரு புலனாய்வு மேற்கொண்டால் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவரும். சென்னைக்கு வரும் பயணிகளும், வெளிநாட்டவர்களும் சென்னைவாசிகளை தங்கள் ஆட்டோ அனுபவங்களை வைத்தே மட்டமாக எடைபோடுகிறார்கள். போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு, சீர்த்திருத்த வேண்டிய உடனடி பிரச்சினை இது.

அக்டோபர் 29, 2009 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான செய்தி இது.

இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் ராமர், புதிய தலைமுறை அலுவலகத்துக்கு நேரில் வந்திருந்தார். ஆசிரியரை சந்தித்து, தன்னுடைய புதிய சொந்த ஆட்டோவை காட்டவேண்டுமென்பது அவரது வருகையின் நோக்கம். இப்போது ராமர் வங்கியில் கடன் பெற்று வாங்கிய சொந்த ஆட்டோ அது. கட்டுரையை வாசித்த பெங்களூர் வாசகர் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை ராமருக்கு செய்துத்தந்தார். வங்கியில் கட்டவேண்டிய முன்பணத்தையும் அவரே கட்டியிருக்கிறார்.

எழுதுவதால் மட்டுமே எப்போதாவது இதுபோன்ற மனதுக்கு திருப்தி தரும் ஓரிரு நல்ல விஷயங்களாவது நடைபெறுகிறது.

25 பிப்ரவரி, 2010

கான் - ஒரு எதிர்வினை!

Hi

I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?


Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.


Bye

Regards
Ramanujam Varaddhan

* - * - * - * - * - * - * - * - *

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

24 பிப்ரவரி, 2010

மை நேம் ஈஸ் கான்!


சரியாக எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக என்பது நினைவில்லை. 1999 உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. வெற்றி நிலை மாறிக்கொண்டே இருந்தது. அண்ணாசாலை விஜிபி ஷோரூமுக்கு முன்பாக சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியா தோற்பது போன்ற ஒரு சூழல்.

நடுத்தர வயதுடைய ஒருவர் வெறுப்பாக சொன்னார். “துலுக்கப் பசங்கள்லாம் கொண்டாடுவானுங்க! பாகிஸ்தான் ஜெயிக்கப் போவுது!!” இத்தனைக்கும் அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் முகம்மது அசாருதீன்.

இறுதியில் வென்றது இந்தியா. சாலை என்று பாராமலும் ‘ஹூர்ரே’ என்று குரலெழுப்பி, ஹைவோல்டேஜ் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவர் கமெண்டு அடித்த நடுத்தர வயதுக்காரர் அல்ல. அவருக்கு அருகில் இருந்த இளைஞர். தலையில் வெள்ளைத் தொப்பி. திருவல்லிக்கேணிகாரராக இருக்கலாம்.

நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.

* - * - * - * - * - *

ஷாருக்கின் ‘மை நேம் ஈஸ் கான்’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு சதவிகிதத்தை கூட என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஒரு இஸ்லாமியராகவே மனதளவில் வாழும் சாரு போன்றவர்களின் விமர்சனம் சரியான வெளிப்பாடாக அமையும் என்று நம்புகிறேன். அடையாளம் தொடர்பான அரசியலை மிக நுட்பமாக பேசும் படம் இது. உணர்வுகளை அலைக்கழிக்கும் இதுபோன்ற திரைப்படங்கள் வெளியாவது அரிதிலும் அரிதாக நடக்கும் அபூர்வம்.

ஏதோ வாயில் நுழையாத பெயருடைய நோய் கொண்ட ரிஸ்வான்கான் சூழ்நிலை காரணமாக அமெரிக்கா செல்கிறான். மூளை தொடர்பான நோய் அது. புரிந்துகொள்வதிலும், பேச்சிலும், நடத்தையிலும் மற்றவர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவன் ரிஸ்வான். ஆயினும் அவனுக்கு வேறு சில விஷயங்களில் அதீதமான மாற்று ஆற்றல் உண்டு.

அமெரிக்காவில் இளம் விதவையான மந்திராவை சந்திக்கிறான். இயல்பாக மலரும் காதல் திருமணத்தில் முடிகிறது. மந்திராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உண்டு. 2001 செப்.11 சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர் மீதான அமெரிக்கர்களின் விரோத மனோபாவம் நீறுபூத்த நெருப்பாய் மாறி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வன்முறையில் முடிகிறது. ஒரு இஸ்லாமியன் தனக்கு திடீர் தகப்பன் ஆனதாலேயே மந்திராவின் மகன் ஒரு வன்முறையில் உயிரிழக்கிறான்.

‘கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!’ என்று மந்திரா கோபத்தில் குற்றம் சாட்டுகிறாள். “உனக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்!” என்று கத்துகிறாள். கோபத்தில் விளைந்த இந்த அர்த்தமற்ற வார்த்தைகளை கான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறான். அமெரிக்க அதிபரை சந்திக்க தன் பயணத்தை தொடர்கிறான். இதையடுத்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கான் அமெரிக்க அதிபரை சந்திக்க முடிந்ததா? என்பதுதான் கதை.

தான் பிறந்த இனத்துக்கு ஒரு கலைஞனால் செய்யப்படக்கூடிய உச்சபட்ச கைமாறினை ஷாருக்கான் செய்து தந்திருக்கிறார். அமெரிக்க அரசியல், அதன் குடிமக்கள், வர்க்கம் - இவை தொடர்பான வேறுபாடுகளை நுணுக்கமாக பதிவு செய்கிறார். “அமெரிக்காகாரங்களே இப்படித்தான் எசமான்!” என்று புலம்பாமல், மனிதத்தை மதிக்கும் அமெரிக்கர்களையும் கருப்பின தாய் கதாபாத்திரத்தின் வாயிலாக படம்பிடித்து காட்டுகிறார்.

‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசனின் நடிப்பைக் கண்டு சிலாகித்தபோது, இனிமேல் இப்படி நடிக்க ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்தேன். ஷாருக்கான் எப்போதோ பிறந்துவிட்டார். ஒரு காட்சியிலாவது கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி ஷாருக்கின் ஹீரோயிஸம் எங்காவது வெளிப்படுமா என்று பார்த்தோமானால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அடுத்த ஆண்டு ஷாருக் வீட்டின் கதவுகளை வரிசையில் நின்று விருதுகள் தட்டும்.

ஒரு சினிமாவுக்கு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என்னவென்று படம் வரைந்து பாகம் குறித்து காட்டுகிறது ’மை நேம் ஈஸ் கான்’. குறிப்பாக கஜோலுக்கான ஒப்பனை, உடையலங்காரம் வழியே கதையின் வலிமை வெகுவாக கூட்டப்படுவது அபாரம். ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, ஷங்கர் என்லாயின் இசை என்றெல்லாம் தனித்தனியாக குறிப்பிட இயலாதவாறு, ஒட்டுமொத்தமாக ஒரு அதிசயத்தை சாதித்துக் காட்டியிருக்கின்றனர் இந்த படக்குழுவினர்.

ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.

அப்போது இந்தியர்களுக்கு?

கமல்ஹாசன் விரைவில் ‘மை நேம் ஈஸ் தெனாலி’ என்றொரு படம் எடுப்பார். 1991, மே 21-க்குப் பிறகு, சென்னையில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் சோனியா காந்தியை சந்தித்து, “நான் தெனாலி, நான் விடுதலைப்புலி அல்ல” என்று சொல்லுவது கதையாக இருக்கும். இந்தியத் தணிக்கைக்குழு அனுமதித்தால் இப்படத்தை இந்தியர்களுக்கு போட்டுக் காட்டலாம்.

23 பிப்ரவரி, 2010

தியாகம் மீதான வெறுப்பு!


சில நாட்களாக தியாகங்கள், தியாகிகள் மீதான பற்றோ, பிரமிப்போ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பயமேற்பட்டு இப்போது வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். ‘தன்னலமில்லாத பொதுநலம் பயனில்லாதது’ என்று கவுதம்சார் அடிக்கடி சொல்லுவார். அந்த கூற்றின் மீது ஆரம்பத்தில் எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. இப்போது இதுதான் யதார்த்தம் என்பதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

2007ஆம் ஆண்டு தமிழ்செல்வன் மறைந்தபோது, ”இனத்துக்காக உயிரிழந்தாரே? வாழ்ந்தால் இவரைப்போல வாழவேண்டும்!” என்று உருகியதுண்டு. 2009ன் தொடக்கத்தில் முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, தியாகங்களை கண்டு அஞ்சத் தொடங்கினேன். வரலாறு நெடுகிலும் தியாகிகளும், தியாகங்களும் போற்றப்படுகிறார்கள். ஆயினும் பெரும்பாலும் தியாகத்துக்குப் பிறகான அவர்களது குடும்பங்கள் என்ன ஆயின என்பது குறித்த குறிப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஓரிரு குறிப்புகளும் கூட வேதனையானவையே.

உச்சபட்சமாக மே 19. அடுத்தடுத்து தமிழீழத் தேசியத் தலைவரின் குடும்பத்தார் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள், அவரை தீவிரமாக எதிர்த்து வந்தவர்களுக்கும் கூட கலக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

’போராட்டமே தவறு!’ என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நான் அவசரமாக வந்துவிடவில்லை. நம்பியிருந்த இனத்துக்கான, வர்க்கத்துக்கான, மனிதகுலத்துக்கான தியாகங்கள் அனைத்துமே போற்றத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

பொதுநலவாதிகள் ஊருக்கு நல்லவர்களாக இருந்தாலும், குடும்பத்துக்கு வில்லன்களாகவே அறியப்படுகிறார்கள். நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர் யாரையாவது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரது மகனிடமோ, மகளிடமோ, மனைவியிடமோ பேசிப்பாருங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். மாணவப் பருவத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு நேர்மையான செயல்வீரராக வாழ்ந்த என் அப்பாவும் கூட குடும்பத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பெயர் எடுத்ததில்லை. நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி தோழர் உ.ரா.வரதராசன்.

1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரம் நினைவுக்கு வருகிறது. எனக்குத் தெரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உச்சபட்ச செல்வாக்கோடு இருந்த காலம் அது. தோழர் வரதராசன் வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளர். அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர். மார்க்சிஸ்ட் செயல்வீரர்கள் வில்லிவாக்கம் மட்டுமன்றி சென்னை முழுவதுமே சிகப்புக்கொடியோடு சைக்கிள் பேரணிகளை நடத்துவார்கள்.

அக்கட்சியில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவர் என்னையும் சைக்கிளில் அமரவைத்து அழைத்துப் போயிருக்கிறார். முடிவில் பிரச்சார பொதுக்கூட்டம். சேத்துப்பட்டுக்கு அந்தப் பக்கம் என்பதாக நினைவு. வரதராசனை அப்போது பார்த்திருக்கிறேன். அப்பாவோடு சென்ற கூட்டங்களில் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களையே அதுவரை பார்த்திருந்ததால், ஒரு கம்யூனிஸ்டு வேட்பாளர் எனக்கு வேறுமாதிரியாக தெரிந்தார். ‘வெற்றி வேட்பாளர்’ போன்ற அடைமொழிகளின்றி தோழர் என்றே அவரை பேசியவர்கள் அனைவரும் விளித்தனர். அந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிஜமான வெற்றி வேட்பாளர்.

கடந்த 18ஆம் தேதி மாலை நாளிதழ்களின் ’மார்க்சிஸ்ட் தலைவர் மாயம்’ என்ற போஸ்டரை கண்டபோது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படவில்லை. மாயமானவர் வரதராசன் என்று அறிந்தபோதுதான் இதயத்தைப் பிசைந்தது. குடும்ப வாழ்க்கையின் நெருக்குதல் காரணமாக தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார் என்று வாசித்தபோது, இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தியாகங்களின் மீதான வெறுப்பு எனக்கு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஊன், உறக்கமின்றி, நேர்மையாக ஒரு கட்சிக்கு உழைத்திருக்கிறார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் தலைவர்களைப் போலவே ஊழலுக்கு ஒவ்வாதவர். அவரது நேர்மையை ஊரே போற்றுகிறது. என்ன பிரயோசனம்?

இன்று தினகரன் நாளிதழின் தலையங்கத்தை வாசித்தேன். இம்மாத துவக்கத்தில் தோழரின் மனைவி மாநிலக்குழுக்கு அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் வரதராசன் மீது விசாரணை நடந்திருக்கிறது. பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் கட்சியின் மத்தியக்குழு சீரியஸாகவே விசாரித்திருக்கிறது. எல்லா குற்றச்சாட்டுகளையும் வரதராசன் மறுத்திருக்கிறார். ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தி, ஒட்டுமொத்தமாக பொறுப்புகளில் இருந்து விடுத்தி, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தலையங்கம் குறிப்பிடுகிறது.

மனைவியின் சந்தேகத்தால் கூட மன உறுதி குறையாத வரதராசன், விபரீத முடிவை எடுக்க கட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது. இத்தனை ஆண்டு உழைப்புக்கும், தியாகத்துக்கும் இதுதான் பரிசு. பாவத்தின் சம்பளமாக அல்ல, தியாகத்தின் சம்பளமாக அவருக்கு மரணம் வாய்த்திருக்கிறது. அவரை கட்சி கைவிட்டு விட்ட சூழலிலும் கூட கட்சியை விட்டுக்கொடுக்காத அவரது உயர்ந்த மனம், அவர் எழுதிய கடைசிக் கடிதங்களில் வெளிப்படுகிறது.

நீங்களே சொல்லுங்கள். தியாகத்தை வெறுக்காமல் போற்றவா முடியும்?

22 பிப்ரவரி, 2010

கற்றதும், பெற்றதும்!

அண்ணா மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து
திமுக மூன்றெழுத்து
சுஜாதா-வும் மூன்றெழுத்து



’அவரிடமிருந்து கற்றதும், பெற்றதும் எவ்வளவோ!’ என்று ஒருவார்த்தையில் புகழாரம் சூட்டலாம். க்ளிஷேவாக இருந்தாலும் உண்மையும் கூட. என்னுடைய ஹிஸ்டரி வாத்தியார் தண்டபாணியிடம் கற்றதும் கூட, இவரிடம் கற்றதில் பாதியளவுதான் இருக்கும். அவர்மீது சில காட்டமான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவர்தான் எனக்கு ஒரிஜினல் ‘வாத்தியார்’.

70களில் ஏதோ துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் பெரிய ஹீரோவாக வருவார் என்று கணித்ததில் ஆகட்டும், எங்கோ மூலையில் முடங்கிக் கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனின் திறனை உலகுக்கு அறிவித்ததில் ஆகட்டும்.. வாத்தியாரின் தீர்க்கதரிசனம் என்றுமே ‘மிஸ்’ ஆனதில்லை.

‘பெண்களூர்’ என்று விளிப்பதாகட்டும், சமத்துவம் பேசும் ஹீரோயினிடம், “ஆம்பளைன்னா சட்டையோட மேல் பட்டன் ரெண்டை திறந்துவிட்டுப்பேன். நீ செய்வியா?” என்று டயலாக் எழுதிய நக்கலாகட்டும். வாத்தியார் வாத்தியார்தான்! ஆணாதிக்கமாக இருந்தாலும் ரசிக்கக்கூடிய ஆணாதிக்கம்.

எழுத்தில் கணேஷ்-வசந்தில் தொடங்கி, சினிமாவில் விக்ரம், இந்தியன் தாத்தாவென்று பயணித்து ரோபோவரை தொடர்ச்சியாக இயங்கிய ஃபேண்டஸி சிங்கம். ‘கண்ணேதிரே தோன்றினாள்’ படத்தின் பட்டாம்பூச்சி வசனம் நினைவிருக்கிறதா?

எழுத்து, சினிமாவென்று குறுகிவிடாமல் சமூகத்தில் பரவலாக பல தளங்களில் அறிமுகமான சகலகலா வல்லவன். அப்துல்கலாமுக்கு கல்லூரித் தோழர். மின்னணு வாக்கு இயந்திர முறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ஸ்ரீரங்க நாயகன், ஸ்ரீரங்கநாதனோடு அடைக்கலமாகி, அதற்குள்ளாக இரண்டு வருடங்களாகிறதாம். இன்னும் அவர் எழுதிக்கொண்டே இருப்பதைப்போன்ற மாந்திரீக யதார்த்தம். அவரது வீச்சு அத்தகையது. மறைந்தும் மறையாமல் வாழ்பவர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடம் நிச்சயம் இவருக்கு.

அவரிடம் கற்றதையும், பெற்றதையும் அசைப்போட ஒரு சிறிய கூட்டம். பிப்ரவரி 27, சனிக்கிழமை, மாலை 5.30 மணி. காந்தி சிலை அருகில். சென்னை மெரீனா கடற்கரை. நிகழ்வு அமைப்பு : ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாதது நாராயணன்.

பிரபல (இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்) எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர்கள் சிறுந்திரளாக கலந்துகொள்கிறார்கள். யாவரும் வரலாம்.

20 பிப்ரவரி, 2010

சுவாரஸ்யமான வலைப்பூ!

ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கடைசியாக நிஜமாகவே சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்.

போதுமான ஹிட்டுகளோ, பின்னூட்டங்களோ, ஓட்டுகளோ விழவில்லை என்றாலும், எழுத்தில் நல்ல கன்சிஸ்டென்ஸி இவருக்கு இருக்கிறது!

http://ksurendran.wordpress.com

கீழே பார்க்கும் நட்சத்திரங்கள்!


‘ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு. படிப்பு எதுக்கு?’ என்று வசதி படைத்த மாணவர்களுக்கும், ‘சோத்துக்கே வழியில்லை, படிப்பு ஒரு கேடா?’ என்று ஏழை மாணவர்களுக்கும் அவரவர் நிலைக்கேற்ப கல்வியை பாதியில் கைவிட ஒருகாலத்தில் நியாயங்கள் கற்பிக்கப்பட்டன.

கல்வி கசந்த மாவட்டங்களாக பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்ட மாவட்டங்கள் தருமபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் இந்நிலை அதிகமாக இருந்தது. இம்மாவட்டங்கள் கல்வி வளர்ச்சியில் பின்தங்கியதால் ஒட்டுமொத்தமாக எல்லாத்துறைகளிலும் பின்தங்க வேண்டிய நிலையும் ஒரு காலத்தில் இருந்தது. பள்ளிகளில் இருந்து படிப்பை பாதியில் விடும் மாணவர்களின் சதவிகிதம், அப்போது மிக அதிகம் இங்கே.

மாநில அரசுக்கு இந்த நிலை காரமாக உறைத்தது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டன. மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று களநிலைகளை ஆராயத் தொடங்கினர். பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண முயற்சித்தனர். ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கம் தன்னுடைய முழு ஆற்றலையும் இம்மாவட்டங்களில் செயல்படுத்தத் தொடங்கியது. யூனிசெஃப் நிறுவனம் கிட்டத்தட்ட இம்மாவட்டங்களை தத்தெடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம்.

பலதரப்பட்டவர்களின் முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போகுமா? தர்மபுரியும், கிருஷ்ணகிரியும் இன்று கல்வி வளர்ச்சியில் அதிவேகமாக முன்னேறத் தொடங்கியிருக்கின்றன. ஏராளமான பொறியாளர்களையும், மருத்துவர்களையும் கடந்த பத்தாண்டுகளில் இம்மாவட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றன.

இன்றைய நவீன உலகில் அதிசயங்கள் சகஜம். ஆனாலும் அதிசயங்களை நேரில் காணும் ஆவல் மட்டும் மனிதனுக்கு குறைவதேயில்லை. நடப்புக் காலத்தில் கல்வி விழிப்புணர்வு நடந்து கொண்டேயிருக்கும் இம்மாவட்டங்களில் ஏதேனும் ஒரு குக்கிராமப் பள்ளியை ‘திக்விஜயம்’ செய்து வாசகர்களுக்காக பார்வையிட ஆசைப்பட்டோம். பள்ளிகளின் பட்டியலில் இருந்து ஆசிரியர் நமக்கு தேர்ந்தெடுத்து தந்த பள்ளி ‘கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளி’.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் இருக்கிறது கொட்டுக்காரம்பட்டி. திருவண்ணாமலையில் இருந்து இருபுறம் அடர்ந்த வனங்களும், தூரத்தில் தெரியும் நீலமலைகளுமான சாலையில் சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்தால், பாம்பாறு அணைக்கட்டுக்கு முன்பாக இடப்பக்கம் ஒரு சிறிய சாலை செல்லும். ஒரே ஒரு நகரப்பேருந்து மட்டுமே அத்திபூத்தாற்போல வந்து, செல்லும் அச்சாலையில் மூன்று, நான்கு கிலோ மீட்டர் நடந்துச் சென்றால் கொட்டுக்காரம்பட்டி.

வழியெங்கும் செங்கல் சூளைகள். ‘ஒருகாலத்தில் இச்சூளைகளில் ஏராளமான குழந்தைகள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கு அக்குழந்தைகளை திரும்ப அழைத்துவருவதே பெரும்பாடாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட சூளைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற நிலையை எங்கள் மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து விட்டோம், தலையை அடகுவைத்தாவது குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவேண்டும் என்ற விழிப்புணர்வு எங்கள் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்று கிராமவாசி ஒருவர் நமக்கு விளக்குகிறார்.

‘பளிச்’சென்று இருக்கிறது நடுநிலைப்பள்ளி. சுத்தமான மைதானம். பூந்தோட்டம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து குப்பைத் தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். வகுப்பறை, மைதானம், தண்ணீர், கழிவறை, சத்துணவு கண்காணித்தல் என்று பள்ளியின் பராமரிப்புப் பணிகளை மாணவர்கள் தாங்களே குழு அமைத்துச் செய்கிறார்கள்.

பள்ளியின் பசுமைப்படை தோட்டவேலையை கவனித்துக் கொள்கிறது. அவ்வப்போது ஊரின் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளையும் சிரமேற்கொண்டு செய்கிறார்கள். பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உடல்நலம், சுகாதாரம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறது.

‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் மூலமாக வண்ண தொலைக்காட்சி மற்றும் மூன்று கணினிகள் கிடைத்திருக்கிறது. இணைய வசதி இல்லாததால், தலைமையாசிரியர் தன் சொந்தப்பணத்தில் ஒரு ‘டேட்டா கார்ட்’ மூலமாக இணைய வசதி செய்து கொடுத்திருக்கிறார். குக்கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளிக்கு பிரத்யேகமாக ஒரு இணையத்தளம் நடத்தப்படுகிறது என்பது அடுத்த ஆச்சரியம். பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் http://pumskottukarampatti.blogspot.com என்ற இணையத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் பலரும் அடிக்கடி ‘விசிட்’ செய்யும் முக்கியமான இணையத்தளம் இது. பள்ளியின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களுக்கு இது உதவுகிறது.

நூற்றி இருபத்தி மூன்று மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஐந்து ஆசிரியர்கள். ஒரு ஆசிரியப்பணி காலியிடம். நாற்பத்தி இரண்டு வயது இளைஞரான ராஜேந்திரன் இப்பள்ளியின் தலைமையாசிரியர். தமிழிலக்கிய ஆர்வலரான இவருக்கு இலக்கிய உலகில் வேறு ஒரு பெயரும் உண்டு. கவி செங்குட்டுவன்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன். புதராக மண்டிக்கிடந்த பள்ளியின் சூழலை மாற்றியமைப்பது எனக்கு சவாலாக இருந்தது. மாணவர்களின், ஊர்மக்களின் ஒத்துழைப்போடு என்னால் முடிந்த பணிகளை செய்தேன். அரசு அதிகாரிகளுக்கு மனுபோட்டு நல்ல வகுப்பறைகள் கட்டினேன்.

நம் பள்ளி என்ற உணர்வு ஒவ்வொரு மாணவனுக்கும் இருப்பதால், காலை எட்டரை மணிக்கே வந்து, பள்ளி தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவனே செய்ய ஆரம்பித்து விடுகிறான். ஆரம்பத்தில் வழிகாட்டியதோடு சரி. அவனவன் பொறுப்பை அவனே உணர்ந்து செம்மையாக செய்கிறான். மகிழ்ச்சியோடு வேடிக்கைப் பார்க்கிறேன்!” என்று தனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளையும், மாணவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

எல்லா அரசு தலைமையாசிரியர்களைப் போல, இவரும் செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்விக்கு ஆதரவானவராக இருக்கிறார். “செயல்வழிக் கற்றலில் சிறப்பாக ஒருவன் செயல்பட்டுவிட்டால், படைப்பாற்றல் கல்வியில் எங்கோ போய்விடுவான். கல்வி கற்பது குறித்த ஆர்வம் மாணவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அவனது கற்றல் ஆர்வத்தை அதன்பிறகு யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது” என்கிறார்.

யூனிசெப் நிறுவனம் சுகாதாரமான பள்ளிகளுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கி வருகிறது. அதிகபட்சமாக ஒரு பள்ளிக்கு பத்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். ஒரு அரசுப்பள்ளி நான்கு, ஐந்து புள்ளிகள் வாங்கினாலே சுகாதாரத்தில் ஓரளவு தன்னிறைவுப் பெற்ற பள்ளியாக எடுத்துக் கொள்ளலாம். கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப் பள்ளி கடந்த ஆண்டு பத்து நட்சத்திர அந்தஸ்தும், இவ்வாண்டு ஒன்பது நட்சத்திர அந்தஸ்தும் யூனிசெஃபிடம் இருந்து பெற்றிருக்கிறது. ஒரு கிராமப்புறப்பள்ளி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாதிரியாக நாம் கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளியை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பகுதியில் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கல்வி விழிப்புணர்வு குறித்து தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “கல்வியைப் பொறுத்தவரை எங்கள் மாவட்டம் ஒரு காலத்தில் கேலியாக பார்க்கப்பட்டது உண்மைதான். அரசும், பல்வேறு அமைப்புகளும் இணைந்து இந்நிலையை இன்று மாற்றியிருக்கின்றன. கடந்த தலைமுறையில் கல்விகற்ற என்னைப் போன்றவர்களும் எங்கள் மாவட்டத்து கல்வி வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டு வருகிறோம். உதாரணமாக நான் படித்த ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்த விஷயத்தை சொல்கிறேன். அப்பள்ளியின் பொன்விழா பரிசாக முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு நூலகம் (தனிக்கட்டுரையாக காண்க) அமைத்துத் தந்திருக்கிறோம். எங்களது அடுத்த தலைமுறை எங்களைவிட உயர்வான கல்விவளர்ச்சியைப் பெறவேண்டும் என்ற அக்கறையே இதற்குக் காரணம்!” என்கிறார்.

பொதுவாக நாம் கவனித்தவகையில் 1989-90 காலக்கட்டத்தில், பத்தொன்பது, இருபது வயதுகளில் ஆசிரியராக ஏராளமான இளைஞர்கள் பணிநியமனம் பெற்றிருக்கிறார்கள். போதிய அனுபவம் பெற்று தலைமையாசிரியர்களாகப் பதவியேற்ற பல பள்ளிகளில் இதுபோன்ற வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார்கள். புதியதலைமுறையின் முதல் இதழிலேயே நாம் எழுதிய, புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுமைப்பள்ளியான மாங்குடி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமணியும் கூட இளைஞர்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

புதிய தலைமுறை இளைஞர்கள், முற்போக்கான மாற்றங்களின் மூலமாக புரட்சியை படைக்கவல்லவர்கள் என்ற கூற்று அடுத்தடுத்து மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது. தமிழக பள்ளிகளில் இப்போது ஆசிரியப்பணிக்கு ஏராளமான காலியிடங்கள் இருப்பதாக, நாம் செல்லும் இடங்களிலெல்லாம் அறியமுடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியதைப் போல, இப்போதும் உடனடியாக அப்பணிகளுக்கு இளைஞர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும் பட்சத்தில் அடுத்த இருபதாண்டுகளில் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான நட்சத்திரப் பள்ளிகளை நாம் பெற்றிருப்போம் என்பது உறுதி.

(நன்றி : புதிய தலைமுறை)

16 பிப்ரவரி, 2010

பசலை நோய்!

தலைவன் போருக்கு போகும்போது தனிமையில் தலைவிக்கு ஏற்படும் நோய் பசலையாம். பத்தாம் வகுப்பின் போது அறிந்துகொண்ட விஷயம். அதற்கு முன்பு பசலை என்பதை ஒரு கீரையாகதான் தெரியும். இது ஒரு காதல்நோய் என்றுதான் இத்துணை காலமும் நினைத்தேன். காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் இதே நோய் வரக்கூடும் என்பதை இப்போது அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மிக நெருக்கமாக நட்பு பாராட்டிய தோழனை கடந்த இரண்டு நாட்களாக ‘மிஸ்’ செய்கிறேன். இன்னும் குறைந்தது இரண்டு வார காலத்துக்காவது இந்த இடைவெளி தற்காலிகமாக இருக்குமென்று சென்னை மற்றும் கோவை வானிலை ஆராய்ச்சி நிலையங்களால் கணிக்கப்படுகிறது. தோழன் தலைவியை தேடி கோவைக்குப் போயிருக்கிறான். நானோ சென்னையில் இடது உள்ளங்கையை சொறிந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இதுதான் பசலைநோயின் அறிகுறியோ என்னவோ தெரியவில்லை. லேபில் பசலைநோய்க்கு டெஸ்ட் எடுப்பார்களா என்பதும் உறுதியாக அறியமுடியவில்லை.

2008ஆம் ஆண்டில், ஏதோ ஒரு பொன்மாலைப் பொழுதில் மெரீனா பீச்சில் அதிஷாவை முதன்முறையாகப் பார்த்தேன். பார்த்ததுமே பச்சக்கென்று கவருகிற தோற்றமில்லை. ஹலோ, ஹாய் என்ற ஓரிரு வார்த்தைகளோடு கைப்பேசி எண்ணை பரிமாறிக் கொண்டதோடு சரி. பின்னர் தொலைபேசியில் சிலமுறை பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் இருவரையும் நெருக்கமான நண்பர்களாக்கிய பெருமை, இன்னொரு நெருங்கிய நண்பரான செந்தழல்ரவியையே சேரும். அவரது இல்லவிழா பெங்களூரில் நடந்தபோது, என்னையும் அதிஷாவையும் அழைத்திருந்தார். இரவுநேரப் பேருந்து பயணத்தின் போதுதான் இருவரும் மனந்திறந்து பல விஷயங்களையும் பேசிக்கொண்டோம். ‘ஐஸ்பிரேக்’ நிகழ்ந்த இரவு அது. கிட்டத்தட்ட என்னுடைய ஆல்டர் ஈகோ அதிஷா என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

இருவருமே மிக மோசமான நிலையிலிருந்து நடுத்தர உயரத்துக்கு வந்தவர்கள். உரிய வயதுக்கு முன்பாகவே - பதினாறு வயதில் - குடும்பச்சூழலால் வருமானம் நிமித்தம் வேலை செய்ய தள்ளப்பட்டோம். இருவருமே குருவி தலையில் பனங்காய் என்பதுபோல இருபத்திரண்டு, இருபத்தி மூன்று வயதுகளில் உயிரை அடகு வைத்து, பணத்தைப் புரட்டி, வியர்வை சிந்தி அவரவர் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இதுமாதிரி ஒப்பிட்டுப் பார்க்க ஏராளமான கோ-இண்சிடெண்டுகள். ‘இவனும் நம்மளை மாதிரியே’ என்ற எண்ணமே எங்கள் நட்பை ஃபெவிகால் போட்டு ஒட்டவைக்க போதுமானதாக இருந்தது.

ரசனைகளில் நேரெதிர் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நான் தமிழ் சினிமாவின் அத்தனை மொக்கைகளையும் பார்த்தாகவேண்டும் என்று சபதம் பூண்டவன். அவரோ அல்பசினோ, குவாண்டின் டொரண்டினோ, ரோஸாமான் என்று உளறிக் கொண்டிருப்பவர். எனக்கு கலைஞரை பிடிக்கும். அவருக்கு புரட்சித்தலைவி.

இருவரும் நட்பானதின் விளைவு. எனக்காக ‘மேகம்’ என்று சூப்பர்பெஸ்ட் மொக்கையை அவர் உதயம் தியேட்டரில் பார்க்க வேண்டியிருந்தது. அவருக்காக தேவி தியேட்டரில் ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ பார்த்தேன். நட்புக்காக இதுவரை யாரிடமும் காம்ப்ரமைஸ் ஆகாத நான், முதன்முறையாக அதிஷாவோடு காம்ப்ரமைஸ் ஆகவேண்டியிருந்தது.

இருவருமே இப்போது ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிறோம். வெளியிடங்களில் ‘இரட்டையர்களாக’வே அறியப்படுகிறோம். என்னை தனியாக எங்காவது யாராவது பார்த்தால், “அதிஷா வரலையா?” என்று கேட்பது சகஜமாகிவிட்டது. அவருக்கும் அப்படியே.

இப்போது இதையெல்லாம் இங்கே செண்டிமெண்டு தடவி, வேண்டாவெறுப்பாக எழுதித் தொலைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த அதிஷாவுக்கு கல்யாணம். எல்லோரும் அவசியம் வந்துடுங்க.



திருமணம் கோவையில் நடைபெற உள்ளதால்  வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் அதிஷாவை தொடர்புகொள்ள   : 9884881824

15 பிப்ரவரி, 2010

தேவதைகள் மீதான வன்முறை!

பட்டர்ஃபிளை எஃபெக்ட்

எனக்கு இரண்டு நண்பிகள் உண்டு. அண்ணன் மகள்கள் மீரா, மேகா. இருவருமே தேவதைகள். மீரா ஏழாம் வகுப்பு. மேகா நான்காம் வகுப்பு. முன்னவள் கொஞ்சம் மூடி டைப். அளந்து அளந்து அறிவுபூர்வமாகப் பேசுவாள். அம்மா சாடை. பின்னவள் வாயாடி. லொடலொடவென்று சுவாரஸ்ய எக்ஸ்பிரஸ். அப்பா மாதிரி.

இருவரும் படிப்பில் சுட்டி. பத்து ரேங்குக்குள் கேரண்டி. மீராவை அம்மா அடிப்பதுண்டு. மேகா, ராஜேந்திரகுமாரின் வால்களுக்கு இணையான வால். இருந்தாலும் அம்மாவிடம் சாலாக்கு. அதனால் அடிவாங்காமல் அவ்வப்போது எஸ்கேப். அப்பா-அம்மா இருவருமே வேலைக்கு போவதால் மீரா வீட்டுவேலைகளில் அக்கறையாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறாள். அம்மா-அப்பா எதிரில் மட்டும் அக்காவுக்கு உதவுவதாக மேகா ’ஆக்டிங்’ கொடுப்பாள்.

இருவரோடும் ஐந்து நிமிடங்கள் விளையாடினால் போதும். இவர்களது உலகுக்குள் நுழைந்துவிடலாம். குழந்தைகளின் உலகத்தில் அன்புக்கு மட்டுமே இடம் உண்டு. அதுவும் அராஜகமான அன்பு. கண்களால் சாடைகாட்டி மேகா பேசும் ஒலியில்லாத மொழியின் இனிப்புக்கு எல்லையே இல்லை.

இந்த விஸ்தாரமான அறிமுகத்துக்கு காரணம் உண்டு. இவர்கள் இருவரும்தான் ’டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ’பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ சிறுகதையின் நாயகிகள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினேழு கதைகளில் ஆகச்சிறந்த படைப்பாக இதை மதிப்பிடுகிறேன். வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் பெரும்பாலானவை சுவாரஸ்யமற்ற பொழுதிலேயே நடந்தேறுகிறது. ஒரு டயரியில் குறித்து வைத்து விட்டு, சிலகாலம் கழித்து அசைபோடும்போது கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவம் வரம். அத்தகைய வரம் பரிசல்கிருஷ்ணாவுக்கும், அவரது திருமதிக்கும் இக்கதை மூலமாக சாத்தியமாகியிருக்கிறது.

இனி மீராவோ, மேகாவோ அம்மாவால் திட்டப்படவோ, அடிக்கப்படவோ கூடாது. அப்படி நிகழ்ந்தால் அப்பாவின் மொபைலில் இருந்து சித்தப்பாவுக்கு மெசேஜ் அனுப்பலாம். அண்ணி மீது தேவதைகள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு போடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.


Writer's block

தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஏற்படும் நோய் இது. அதிலும் புனைவு, கட்டுரை, விமர்சனம் என்று கலந்துகட்டி எழுதுபவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டிய விஷயம். தொடர்ச்சியாக நான்கு அபுனைவில்லாத எழுத்தை எழுதிவிட்டு, புனைவுக்கு திரும்பினால் தாவூ தீர்ந்துவிடுவதை தவிர்க்கவே இயலாது.

ரைட்டர்ஸ் பிலாக்கெல்லாம் அண்டவே முடியாத எழுத்தாளர்களும் அரிதாக உண்டு. புனைவின் உச்சத்தை தொட்டவர்கள் அவர்கள். தினமும் தூங்குவதைப் போல, தினமும் எதை வேண்டுமானாலும், எவ்வளவு பக்கங்க்ள் வேண்டுமானாலும் எழுதித் தள்ளுவது அவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். இவர்களது மூளைகளில் ஏதேனும் விசேஷ செல்கள் இருக்கக்கூடும். நமக்கு தெரிந்த நல்ல உதாரணம் : ஜெயமோகன்.

அடிக்கடி வரும் இந்தப் பிரச்சினை குறித்து, என் ரோல்மாடல்களில் ஒருவரான ஒரு எழுத்தாளருக்கு மடல் இட்டிருந்தேன். அவர் எனக்கு கொடுத்த அட்வைஸ் : இதுமாதிரி நேரங்களில் பயோ-பிக்‌ஷன் முயற்சியுங்கள். பரிசல்கிருஷ்ணாவின் புனைவுகள் தொண்ணூறு சதவிகிதம் பயோ-பிக்‌ஷன் முறையிலேயே அமைந்திருக்கிறது. இவருக்கு எழுத்து Block விபத்து நேர வாய்ப்பேயில்லை.


சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பின்றி எழுதுபவர்கள் இந்த தலைமுறையில் குறைவு. அவரது அத்தகைய வெற்றிக்கு என்னென்னவோ காரணங்களை பட்டியலிடுகிறார்கள். என் வாசிப்பின் வாயிலாக நான் உணர்வது என்னவென்றால், சுஜாதாவின் எழுத்துகளில் தேவையற்ற வர்ணனைகள் இருக்காது. சொல்லவேண்டிய விஷயங்களை கதைமாந்தர்களின் உரையாடல்களிலேயே ‘நறுக்’கென்று சொல்லிவிடுவார்.

பரிசலின் பாணியும் இதுதான். இத்தொகுப்பு முழுக்க இடம்பெற்றிருக்கும் எல்லா கதைகளுமே நச்சென்று உரையாடுகின்றன. உரையாடல்கள் குறைவாக இருக்கும் கதைகளிலும் கூட எழுத்தாளரின் தன்னிலை உரையாடலாகவே அமைந்துவிடுகிறது. இதனுடைய பயன் என்னவென்றால் ஒவ்வொரு வாக்கியத்தையும், வார்த்தையையும் வாசிப்பவனுக்கு சுவாரஸ்யமாக்கி தரமுடியும்.

உள்ளடக்க அடர்த்தி குறைவான சில கதைகளிலும்கூட சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் வைக்கவில்லை பரிசல். கடைசிவாக்கிய திருப்புமுனை பாணி சுஜாதா காலத்திலேயே காலாவதி ஆகிவிட்டது. கடைசிக்காலத்தில் அவரேகூட அவரது பாணியை மாற்றிக் கொண்டார். சிறுகதைக்கு சாத்தியமான மற்ற வடிவங்களையும் முயற்சித்துப் பார்த்தார்.

இடையில் சிறுகதைகளுக்கான வெளி வெகுஜன இதழ்களில் குறைந்துவிட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரியான நடையில், கடைசி பஞ்ச்லைன் வாசகத்தோடு முடியும் கதைகளை மக்கள் நிராகரிக்க முன்வந்ததாகதான் முடிவுக்கு வரமுடிகிறது.

இது நூலாசிரியருக்கு முதல் புத்தகம். பரிசலின் அடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


கிண்டல்

இசையோடு கூடிய வாழ்த்து அட்டைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று பேசக்கூடிய அட்டையை உங்கள் காதலிக்கு பரிசாக கூட கொடுத்திருக்கலாம். பரிசலிடம் இதே பேஜாராகப் போகிறது. முன்னட்டையை புரட்டியவுடனேயே காதில் ரீங்காரமடிக்கிறது எஸ்.ஏ.ராஜ்குமார் - விக்கிரமன் கூட்டணியின் பிரபலமான ‘லால்லா’ மியூசிக். பின்னட்டையை மூடிவைத்தவுடன்தான் ரீங்காரம் நிற்கிறது.

கதைகளை எழுதிய எழுத்தாளர் நல்லவரென்று நான் தனிப்பட்ட முறையிலேயே அறிவேன். அதற்காக நல்லவர் ‘நல்ல’ மாதிரியான விஷயங்களை, ’நல்ல’ மாதிரியான நடையிலேயேதான் எழுதவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. கொஞ்சம் ஜில்பான்ஸ் விஷயங்களையும் தொடலாம், தவறில்லை. பரிசலின் ஆதர்சம் சுஜாதாகூட தொட்டிருக்கிறார்.


பாராட்டு

புத்தகத்தின் கடைசி கதை சமூகக்கடமை. இடஒதுக்கீட்டுக்காக ஊடகங்களிலும், இணையத்திலும், இப்போது சினிமாவிலும் மார்வலிக்க கத்திக் கொண்டிருக்கிறோம். ‘இடஒதுக்கீடு’ என்ற பிராண்டிங் இல்லாமல், அந்தச் சொல்லை பயன்படுத்தாமலேயே, ஜனரஞ்சகமான நடையில் அதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார் பரிசல். எதிர்ப்பாளர்களை கூட ‘அட, ஆமாம்லே!’ என்று ஒத்துக்கொள்ள வைக்கும் லாவகம்.


குட்டு

பரிசலுக்கு அல்ல. பதிப்பாளருக்கு. அதாவது குகனுக்கு. ஒல்லியான எழுபத்தியிரண்டு பக்க நூலுக்கு ஐம்பது ரூபாய் விலை என்பது அநியாயமில்லையா? இன்றைய விலைவாசி நிலையில் ஒரு பக்கத்துக்கு ஐம்பது பைசாவை தருவதே கஷ்டம். இந்தப் புத்தகத்துக்கான நியாயமான விலை முப்பத்தைந்து ரூபாய். நாற்பது என்று நிர்ணயித்திருந்தால்கூட மோசமில்லை.

அடுத்ததாக லே-அவுட். எழுத்துரு வாசிக்க வாகாக இல்லை. சில இடங்களில் தேவையில்லாமல் ஐட்டலிக் டைப். பாயிண்ட் சைஸும் கூட பக்கத்துக்கு பக்கம் சீராக இருப்பதாக தெரியவில்லை. வரிகளுக்கு இடையேயான இடைவெளி எல்லாப் பக்கங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. சில கதைகளில் இந்த இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. ஆயினும் முன்னட்டை என்னை கவர்ந்திருந்தது. பின்னட்டையில் எழுத்துகளின் அளவு மிகப்பெரியது.

அடுத்தடுத்த வெளியீடுகளில் இக்குறைகளை நாகரத்னா பதிப்பகம் களையும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.


கொஞ்சம் ஜால்ரா

இந்நூலாசிரியருக்கும், எனக்கும் ஏதோ ஸ்நானபிராப்தி இருக்கவேண்டும். எங்களை அண்ணன் - தம்பி என்று சொன்னால், கேள்வி கேட்காமல் யாரும் ஒப்புக்கொள்ளும் தோற்ற ஒற்றுமை. ரசனைகளில் பெரிய மாறுபாடு இருவருக்குள்ளும் இல்லை. எனக்குப் பிடித்த சினிமா அவருக்கும் பிடிக்கிறது. அவருக்கு பிடிக்காத எழுத்தாளரை எனக்கும் பிடிப்பதில்லை. இருவரின் இயற்பெயரும் கூட ஒன்றேதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியே பெரிய பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆயினும், அது புத்தக விமர்சனத்துக்கான நியாயமில்லை என்பதால் டப்பென்று ஊசிப்பட்டாசு வெடித்து முடித்துக் கொள்கிறேன்.



நூல் : டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும்

ஆசிரியர் : பரிசல் கிருஷ்ணா

விலை : ரூ.50/-

பக்கங்கள் : 72

வெளியீடு : நாகரத்னா பதிப்பகம்,
3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,
பெரம்பூர், சென்னை - 600 011.

இணையத்தில் நூலினை வாங்க : http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=121

13 பிப்ரவரி, 2010

நேரு - கண்ணதாசன் - இளையராஜா!

சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!

வேறு

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளியைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எமகில்லையே…
நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…

நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடணே வைத்திருப்போம்

அம்மா…அம்மா….அம்மா…..!

- பண்டிதர் நேரு மறைந்தபோது கவியரசர் கண்ணதாசன் செலுத்திய கண்ணீர் அஞ்சலி.

இளையராஜாவின் குரலில் கீழே கேட்கலாம் :

12 பிப்ரவரி, 2010

பார்த்ததில் பிடித்தது!

கலையும், கல்வியும் சங்கமம்!


‘தத்தை தாம் தித்தைதாம்’ என்று அலங்காரமாய் அடவுச் சொல் கட்டுகள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. சலங்கையணிந்த பல ஜோடி கால்களின் ‘ஜல் ஜல்’ சத்தம் ஏற்படுத்தும் ஜூகல்பந்தி ஒருபுறம். ‘தட் தட்’டென தட்டுக்கழியின் தாளச்சத்தம் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஒலிக்கிறது. வீணையின் நாதம், வயலின் இசை, மிருதங்க ராஜாங்கம், தபதபவென முழங்கும் தபேலா, ‘ங்கொய்’யென காதில் ரீங்காரமிடும் ஹார்மோனியம் – நம் பாரம்பரியக் கலைகள் மொத்தமாக சங்கமிக்கிறது கலைக்காவிரியில்.

கலைக்காவிரி என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ என்று சொன்னால் தெரியுமில்லையா? 1982ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் வெளியிடப்பட்ட இந்த இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலக்த்துக்கு வழங்கிய கலை நிறுவனம் இந்த கலைக்காவிரி.

ஆரம்பத்தில் கலைக்குழுவாக செயல்பட்ட கலைக்காவிரி இசையிலும், நடனத்திலும் நவீன வடிவங்களை முயற்சித்துப் பார்த்த முன்னோடி நிறுவனம். ஆயிரத்து ஐநூறு மேடைகள் கண்ட பெருமை கலைக்காவிரிக்கு உண்டு. போப்பாண்டவர் முன்பாக கூட இந்திய பாரம்பரிய கலையை நடத்திக்காட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்த குழு இது. கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக அரசால் சிறந்த கலைநிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

“நாங்கள் வெறும் கலைக்குழு மட்டுமல்ல. கலைக்கல்லூரியும் கூட. தமிழ்நாட்டிலேயே நடனம், இசை இரண்டிற்கும் இணைந்து இளங்கலை பட்டப்பட்டிப்பு வழங்கும் முதல் நுண்கலைக் கல்லூரி நாங்கள் மட்டுமே. இக்கல்லூரியில் +2 படித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பட்டப்பயிற்சியும், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்பயிற்சியும் அளிக்கிறோம்” என்கிறார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மார்கரெட் பாஸ்டின்.

“நடனத்துக்குப் பட்டமா?” ஆச்சரியத்தோடு கலைக்காவிரிக்குள் நுழைந்தோம். ஆச்சரியங்கள் தொடர்ந்தது. திருச்சி பென்வெல்ஸ் சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைதியாக வீற்றிருக்கிறது கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி. 1977ல் கலைக்கல்லூரி தொடங்கியதிலிருந்தே அங்கே பணியாற்றும் தபேலா கலைஞரான திரவியம் நம்மை அழைத்துச் சென்று கல்லூரியை சுட்டிக் காட்டுகிறார். படிக்கட்டுகளில் தாவித்தாவி ஏறும் இந்த இளைஞருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒரே வயதாம்.

“மனிதனுக்கும், கடவுளுக்கும் பொதுவான ஒரே விஷயம் கலைதான். அதனால்தான் மதம் கூட இசை, நடனமென்று கலைவடிவிலான வழிபாட்டை கொண்டிருக்கிறது. வாழ்க்கையை சோர்வின்றி வாழ கொண்டாட்டம் தேவை. கலையை தவிர வேறு எதை நாம் பெரியதாக கொண்டாடிவிட முடியும்? அதனால்தான் எங்கள் நிறுவனர் ஜார்ஜ் அடிகளார் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்” - திரவியம் இடையிடையே தத்துவமழை பொழிகிறார். எதிர்ப்படும் மாணவியர்கள் “குட்மார்னிங் டாடி” என்று அவரைப் பார்த்து வணக்கம் வைக்கிறார்கள். “இங்கே படிக்குற எல்லாருமே என் குழந்தைங்க. என்னை டாடின்னு தான் கூப்பிடுவாங்க” என்கிறார்.

பரதநாட்டியம், வயலின் என்று வகுப்புகள் நடக்கும் ஒவ்வொரு வகுப்பறையாக அவர் சுற்றிக் காட்டிக் கொண்டே வர, ஒரு வகுப்பறையில் கல்லூரி முதல்வரே வாய்ப்பாட்டு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். இக்கல்லூரியின் வகுப்புச்சூழல் அலாதியானது. தலையணை சைஸ் புத்தகங்களும், நோட்டுக்களுமாகதான் இதுவரை நாம் கல்லூரியை பார்த்திருக்கிறோம். நாட்டிய உடை, வேட்டி, சட்டை, சலங்கைகள், வயலின், ஹார்மோனியம், வீணை என்று பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கண்டிப்பு என்கிற விஷயம் நிர்வாகத்திடம் கிஞ்சித்தும் இல்லை. “நாங்கள் கண்டிக்கக்கூடிய வாய்ப்பை எங்கள் மாணவர்கள் எங்களுக்கு வழங்குவதில்லை!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் முதல்வர்.

மாணவ மாணவியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நிறைய பேர் பொருளாதார நலிவுற்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கல்வி, வேலைக்கும், சம்பாதியத்துக்கும் கருவியாக பார்க்கப்படும் இன்றைய சமூகத்தில், கலையார்வத்தோடு இங்கே பயில வருபவர்கள் நம்மை நிரம்பவே ஆச்சரியப்படுத்துகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் கூட கலைக்கல்வி பயில தாகத்துடன் கலைக்காவிரிக்கு படையெடுப்பவர்கள் ஏராளம்.

கல்லூரியின் சூழல் இருக்கட்டும், மற்ற விஷயங்கள் என்னென்ன? விளக்க முன்வருகிறார் நிர்வாகப் பணியாளரான விண்சென்ட் தனராஜ்.

பயிற்சித் திட்டம் : பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த கல்லூரியில் பயிலலாம். ஐந்து ஆண்டுகள் படிப்பு முடிந்ததும், ஒருங்கிணைந்த நுண்கலைப் பட்டம் (Integrated Bachelor of Fine Arts) வழங்கப்படுகிறது. நடனம், இசை என்று கலந்துகட்டி வழங்கப்படும் கல்வி இது.
+2 முடித்தவர்கள் பரதத்திலும், இசையிலும் (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம்) இளநுண்கலைப் பட்டம் (Bachelor of Fine Arts) பயிலலாம். இப்பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகள் பயில வேண்டும்.

பட்டதாரி மாணவர்கள் நேரடியாக பரதம், இசை துறைகளில் முதுகலைப் பட்டத்துக்கு (Master of Fine Arts) படிக்கலாம். முதுநுண்கலைப் பட்டத்துக்கு இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். முதுநுண்கலை முடித்த மாணவர்கள் பரதத்தில் முனைவர் ஆய்வும் (P.hd) இங்கேயே செய்யலாம்.

மேற்கண்ட பட்டங்களை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்குகிறது.


நாட்டியத்துக்கு தொலைதூரக் கல்வி : நாட்டியத்தை தொலைதூரத்தில் கற்பிக்க முடியுமா என்று கேட்டால் ‘ஆம்’ என்று தைரியமாக சொல்லலாம். உலகிலேயே பரதநாட்டியத்துக்கு தொலைதூரக் கல்வி மையம் அமைத்த முதல் கல்லூரி கலைக்காவிரி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் வணிக மேம்பாட்டு மையத்தோடு இணைந்து இக்கல்வி நடத்தப்படுகிறது.
வேறு படிப்பு படிப்பவர்களும் பரதத்தை படிக்க இந்த வளாகம் கடந்த பரதநாட்டிய பட்டப்படிப்புத் திட்டம் உதவுகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் ஏராளமான பேர் இக்கல்வியை கற்கிறார்கள்.

நேரிடையாக ஒரு ஆசிரியர் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டிய பரதத்தை எப்படி தொலைதூரக்கல்வியாக கற்பிக்க முடியும்?

இங்கேதான் தொழில்நுட்பம் கலைக்காவிரிக்கு கைகொடுக்கிறது. பாடங்கள் டி.வி.டி.யில் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன் மூலம் பயிற்சி பெறுபவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சிகளை வாரயிறுதிகளில் நேரடியாக அந்தந்த நகரங்களிலும், நாடுகளிலும் அமைந்திருக்கும் கலைக்காவிரி பயிற்சி மையங்களில் நேரடியாக சரிசெய்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே பரதம் பயின்றவர்கள் பலரும் கூட அங்கீகாரச் சான்றிதழுக்காக இக்கல்வியை கற்கிறார்கள். இதுவரை இம்முறையில் 85 பேர் டிப்ளமோவும், 25 பேர் இளநுண்கலைப் பட்டமும், 65 பேர் முதுநுண்கலைப் பட்டமும் வாங்கியிருக்கிறார்கள்.

எப்படி சேருவது?

வழக்கமான கல்லூரிகளைப் போலவே ஜூன்மாதம் தான் இங்கேயும் கல்வியாண்டு தொடங்குகிறது. நுண்கலை போதிக்கும் கல்லூரி என்பதால் ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இப்போது சுமார் 150 மாணவர்கள் பயில்கிறார்கள். நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், வேறு கல்லூரிகளில் படிப்பவர்களும் நுண்கலை பயில வசதியாக மாலை வகுப்புகளும் உண்டு.

மிகக்குறைந்த அளவிலான மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதால் இக்கல்லூரி, மாணவர் நுழைவு அழைப்புக்கான விளம்பரங்கள் எதையும் நாளிதழ்களில் வெளியிடுவதில்லை. கல்வியாண்டு தொடங்கப் படுவதற்கு முன்பே கல்லூரியை அணுகுவதுதான் ஒரேவழி. www.kalaikavirifineart.com என்ற இணையத்தள முகவரியில் மேலதிக விவரங்கள் கிடைக்கும். அல்லது 0431-2460678 / 2412340 எண்களை தொடர்புகொண்டு பேசலாம்.

வேலைவாய்ப்புகள் என்னென்ன?

நாட்டியமும், இசையும் படித்தால் என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

பள்ளிகளில் இசை, நடனத்துக்கு இப்போதெல்லாம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுகிறார்கள். நல்ல சம்பளமும் கொடுக்கிறார்கள். நுண்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இங்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

சுயவேலைவாய்ப்பு அதிகம். சொந்தமாக நடனப்பள்ளிகளோ, இசைப்பள்ளிகளோ அமைக்கலாம். மாலைநேர வகுப்புகள் நடத்தினாலே ஆயிரங்களை சுலபமாக அள்ளலாம்.
வெளிநாடுகளில் நம் கலைகளுக்கு பெருத்த மரியாதை வழங்கப்படுவதால், இங்கே பயில்பவர்கள் நிறைய பேர் வெளிநாடுகளுக்கும் பறக்கிறார்கள். நுண்கலை பயில்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

சென்னைப் போன்ற நகரங்களில் நடத்தப்படும் நிறுவனங்களில் கூட நாட்டியத்துக்கும், இசைக்கும் ஒருங்கிணைந்த பட்டம் இல்லை. அதிலும் பார்க்கப்போனால் மற்ற இடங்களில் பட்டயம் (Diploma) தான் வழங்கப்படுகிறது. கலைக்காவிரியில் மட்டுமே நுண்கலைகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது என்பதில் இக்கல்லூரி தனித்து சிறப்படைகிறது.

“எங்களது நோக்கம், லட்சியம், குறிக்கோள் அனைத்துமே இக்கல்லூரியை வெகுவிரைவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதி உயர்த்துவதுதான்!” என்கிறார்கள் கலைக்காவிரியினர்.
‘தமிழகத்தில் பாரம்பரியக் கலைகளுக்கு மட்டுமேயான ஒரு பல்கலைக்கழகம்!’ – நினைத்துப் பார்க்கவே இனிப்பாக இருக்கிறது இல்லையா?

(நன்றி : புதியதலைமுறை)

11 பிப்ரவரி, 2010

இலங்கை - சீனா ஆடும் தில்லாலங்கடி ஆட்டம்!


டெலிகிராப் இணையத்தில் பீட்டர் போஸ்டர் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சுட்டியை தோழர் பிரகாஷ் மின்னுரையாடல் மூலமாக வழங்கியிருந்தார். முக்கியத்துவம் கருதி, அக்கட்டுரையை தமிழாக்கம் செய்யுமாறு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழாக்கமும் செய்து தந்திருக்கிறார். தோழர்கள் பார்வைக்கு அக்கட்டுரை...

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தன்னுடைய சகிப்புத்தன்மை இல்லாத வழக்கத்தினை காட்டி வருகிறது. விளைவு, சரத் பொன்சேகாவின் கைது. பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீன் நில்சன் என்பவர் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார். பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு அராஜகமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது. கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்‌ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது சரியான ஒரு உதாரணம்.

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் மோசமான முறையில் ஒடுக்கபட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை மாறி வருகிறது. இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கேவின் மரண சாசனமே தக்க எடுத்துக்காட்டு. அவரது மரணசாசனத்தை வாசிக்காதவர்கள் இங்கே வாசிக்கலாம்.

சரி. சீனாவிற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் ’மக்கள் சர்வாதிகார’ அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை காட்டுகிறது.

பூகோள ரீதியில் இலங்கைக்கான முக்கியத்துவம் மிகச்சிறியதுதான். என்றாலும் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்போது ஊழல் நிறைந்த எதேச்சாதிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது எல்லோருக்குமே மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.

பல்லாண்டு காலமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாமலேயே இருந்து வந்தது. இந்தியா சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இந்த நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கியது . அப்பயணத்தின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவின் உதவிகளை இலங்கை பெறும் வாய்ப்பு தோன்றியது. இரு அரசாங்கங்களும் ’தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம்’ ஆகியவற்றுக்கு எதிராக போராட ஒப்பந்தம் செய்து கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமாகவே ராஜபக்‌ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.

சீன அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்போது இலங்கையின் தென்மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புதிய துறைமுகம், விமான நிலையம் மற்றும் தலைநகர் கொழும்புவுடன் மற்றப் பாதைகளை இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் அமைத்து வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் ஏற்கனவே செய்து வருவதைப் போல, நேரடியாக ஈடுபடாமல் நாட்டுடைய ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது என்ற உத்தியின் மூலமாகவே இதை சீனா செய்துவருகிறது. ஹம்பண்டோட்டா ராஜபக்‌ஷேவின் சொந்தத் தொகுதி என்பதையும் நாம் இங்கே நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள், இலங்கையின் மீது சரியான அழுத்தம் கொடுக்காமல் இருக்க, சீனாவின் பணம் மற்றும் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கை அரசின் சமீபக்கால போர்க் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தின் போதும் கூட அந்நாட்டின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ஆயுதம் கொடுப்பது பற்றியும் பேச்சு வார்த்தை மும்முரமடைந்திருக்கிறது. சீனாவின் பங்காளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளை இலங்கைக்கு செய்துத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டன், இலங்கைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், பொருளாதார உதவிகளை ரத்தும் செய்து வருகிறது. ஆயினும் முன்பு கிடைத்து வந்த பிரிட்டனின் பொருளாதார உதவி சொற்பமானது என்பதால், இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவோ அடிக்கடி, ’நிலைமை மோசம்’ என்று முணங்கிக்கொண்டே இருக்கிறதே ஒழிய, அதன் பங்கிற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பு, மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, இலங்கையுடனான வர்த்தகங்களை ரத்து செய்துள்ளது. எப்படியிருந்தாலும் இதை நடைமுறைப்படுத்தும் தாமதத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் என்பதாக தெரிகிறது.

இப்பிரசினையில் சீனாவின் மூக்கு நுழைப்பைப் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு, ”இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும்” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். இவ்வகையில் எல்லாம்தான் வெள்ளை வேன்களுடன் பாசிஸம் புரிந்துவரும் ராஜபக்‌ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் மட்டுமே முடியும், ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

10 பிப்ரவரி, 2010

அசல் - ஜக்குபாய்


அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர். இரட்டை வேடத்தில் நடித்ததால் வாலி ஹிட் ஆகவில்லை. அதில் கதையும் இருந்தது என்பதை யாராவது அஜித்துக்கு எடுத்துச் சொல்லலாம்.

சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில் ‘கதை’ என்று வருகிறது. இல்லாத ஒரு சமாசாரத்துக்கு மூவரின் பெயரை போட்டிருப்பதை பின்நவீனத்துவம் என்று பாராட்டலாம். ’தல’ இணை இயக்கம் வேறு செய்திருக்கிறாராம். அவர் எதிர்காலத்தில் எதையும் இயக்கிவிடக்கூடாது என்று கர்த்தரிடம் ஜெபிப்பதை தவிர நமக்கு வேறுவழியில்லை.

படத்தில் அசலான சமாச்சாரம் அஜீத் மட்டுமே. இவ்வளவு மட்டமான படத்தில் கூட மிடுக்காக கவர்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. இருந்தாலும் யார் அடித்தாலும் தல அசராது அடித்துக் கொண்டேயிருக்கும் என்பது தெரிந்துவிடுவதால் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் அங்கிள் தோற்றத்தில் இருக்கும் அஜித்தை, நான் பாவனாவாக இருக்கும் பட்சத்தில் காதலிப்பது என்ன, சைட் கூட அடிக்க மாட்டேன். இளைய தளபதிக்கு ஆண்டுக்கு ஆண்டு வயது குறைந்து கொண்டே போகிறது. தலைக்கோ வருடா வருடம் நான்கைந்து வயது கூடுகிறது.

அஜித் பஞ்ச் டயலாக் எதையும் பேசவில்லை என்பது ஆறுதல் என்றாலும், கண்ட கேரக்டர்களும் தல, கொல என்று அச்சுபிச்சாக பேசுவது அக்குறும்பு. மொட்டையடித்த சுரேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரபுவின் தமிழ் சினிமா உலக வாழ்க்கை ஆராயப்பட வேண்டிய ஒன்று. சின்னத்தம்பி மாதிரி எவர்க்ரீன் ஹிட் படத்தில் நடித்தவர், இப்படியெல்லாம் கூட பரிதாபமான கேரக்டர்களில் நடிக்கிறாரே என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. முன்பு காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் இதுபோன்ற அக்கடா துக்கடா கேரக்டர்களில் ரஜினி படங்களில் நடிப்பார்.

துஷ்யந்தா பாட்டு சூப்பர். டொட்டடாய்ங்கும் கலக்கல். மற்றபடி பின்னணி இசை பில்லா-2007வையே மீண்டும் மீண்டும் ரீமேக்குகிறது. சமீரா ரெட்டி ஸ்டைலாக டிரெஸ் செய்கிறார். உயரமாக இருக்கிறார். பாவனாவுக்கும், சமீரா ரெட்டிக்கும் இடையேயான டெக்னிக்கல் டயலாக்ஸ் படமாக்கப்பட்ட காட்சிகளில் மட்டும் பழைய சரண் தெரிகிறார்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு, அஜித் நடிப்பு, சரண் இயக்கம் என்றெல்லாம் புரொஃபைல் பக்காவாக இருந்ததால் இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏக்குமாக்காக இருந்தது. ஓபனிங்கில் நல்ல கல்லா கட்டியிருக்கிறது. இருந்தாலும் அசல் தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு அடாசு என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

* - * - * - * - *

அசல் அடாசு ஆக்கிவிட்டாலும், ஜக்குபாய் மக்குபாயாக இல்லாமல் ஆச்சரியப்படுத்துகிறார். சமீபத்தில் பார்த்த தமிழ் மசாலாக்களில் உருப்படியான மசாலா. நீண்ட நெடிய காலமாக ஹிட்டே கொடுக்காத சரத் நடித்திருப்பது மட்டுமே இப்படத்துக்கு வசூல்ரீதியாக மைனஸ் பாயிண்டாக இருக்கலாம். ஒரு வேளை இதே கேரக்டரில் அஜித் நடித்திருந்தால் அசலான ஹிட்டை நிஜமாகவே அடித்திருக்கலாம்.

பட்டதாரி இளைஞராக விஜயகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் கூட, தன் வயதுக்கு ஏற்ற கேரக்டரை ஏற்று நடிக்க முன்வந்திருக்கும் சரத்குமாருக்கு, ஞாநி சார் ஒரு பூச்செண்டை ‘ஓ’ பக்கங்களில் வழங்கலாம். ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ற சிரத்தையையும் முழுவீச்சில் தருகிறார் சரத்.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் குளறுபடியாக இருந்தாலும், சரத் ஆஸ்திரேலியாவுக்கு ஃப்ளைட் ஏறியதில் இருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. ஆங்கிலப்பட விறுவிறுப்போடு அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு பாடல்கள்தான் ஸ்பீட் பிரேக்கர். ஸ்ரேயாவின் குழந்தமையான வேடம் புளித்தமாவு. ஜெனிலியா நடித்த எல்லாப் படத்திலும் அவர் இப்படித்தான் நடித்திருந்தார். ஜக்குபாயின் மகள் இண்டெலக்ச்சுவலாகவே இருந்திருக்கலாம்.

சரத்தோடு மோதுமளவுக்கு வில்லன் வெயிட்டாக இல்லை என்பதும் இன்னொரு மைனஸ். பெரிய இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி. வயிறு வலிக்குமளவுக்கு சிரிக்க வைக்கவில்லையென்றாலும் தனது வழக்கமான நக்கல், நையாண்டியில் எந்த குறையும் வைக்கவில்லை. சிங்கல் ஈஸ் ஆல்வேஸ் சிங்கம்.

’இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்’ என்று டைட்டில் போட்டிருந்தால் போதும். எதைப் பற்றியும் யோசிக்காமல் டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் தக்கவைத்துக் கொள்கிறார் கே.எஸ்.ஆர்.

8 பிப்ரவரி, 2010

கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் கில்லி!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.பி.எல் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் அது. ஒரு கிரிக்கெட் அறிவிலியான என்னை ஐ.பி.எல். குறித்து ஏதாவது எழுதித் தரும்படி ஒரு தமிழ் இணையத்தளம் கேட்டுக் கொண்டது. கிரிக்கெட்டைப் பற்றி தொழில்நுட்பரீதியாக தெரியாது என்று மறுத்தும், நண்பரான இணையத்தள நிர்வாகி தொடர்ச்சியாக என்னை வற்புறுத்தினார். குமுதம் பாணியில் நான் அப்போதைக்கு அடித்துவிட்ட உட்டாலக்கடி சரக்கு இது. இரண்டு ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போதுதான் எனக்கே கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதைப் போல படுகிறது!

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில் மாலைக்காட்சிகளில் கூட்டம் சேருவதில்லை. தசாவதாரம் படத்தின் வெளியீடு கூட 20-20 போட்டிகளால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

போட்டி நாட்களில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத திரை நட்சத்திரங்கள் தவறாமல் சேப்பாக்கத்தில் ஆஜராகிவிடுகிறார்கள். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திரங்களை காண மைதானத்துக்கு வந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்களும், தள்ளுமுல்லுகளும் நடக்கிறது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியோடு மோதியது. நேற்று மதியம் போட்டியைக் காண நமீதா வருகிறார் என்ற செய்தி நகரில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட பணியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் பலரும் அவசர அவசரமாக அலுவலங்களில் பொய்க்காரணம் சொல்லி பர்மிஷன் போட்டு சேப்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். நமீதா ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கம் மைதானத்தின் முகப்பில் கூடி நமீதா வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக நமீதா ரசிகர்கள் பலருக்கும் மைதானத்துக்குள் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. இவர்களில் பலர் விரக்தி அடைந்து போட்டி முடியும் வரை மைதானத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே ஜேம்ஸ்பாண்டு படநாயகி தோற்றத்தில் பெரும் ஆரவாரத்துக்கிடையே போட்டி தொடங்கும் நேரத்துக்கு சற்றுமுன்னர் நமீதா வந்தார். போட்டியை கவர் செய்ய வந்திருந்த கேமிராமேன்கள் சிலரும் நமீதா ரசிகர்கள் போலிருக்கிறது. போட்டியின் முக்கியமான கட்டங்களை கவர் செய்யாமல் அடிக்கடி நமீதாவை கவர் செய்துகொண்டிருந்தார்கள். நமீதாவின் அதிரடி ஆடையை கண்டு பயந்துவிட்டதாலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியும், அவரது குழுவினரும் நேற்று சொதப்பி விட்டார்கள். ரன் குவிக்க திணறிய அணி, பவுலிங் செய்யும்போது வள்ளல்களாக மாறி ரன்களை வாரி இறைத்தார்கள்.

டோனி குழுவினர் சோர்ந்துப்போனதை கண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்லி என்ற கில்கிறிஸ்ட் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய அவர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி சென்னை அணியை சேதாரத்துக்குள்ளாக்கினார். சென்னை அணியினர் ஓரிரு பவுண்டரிகள் அடித்தபோதும் கைத்தட்டி உற்சாகப்படுத்திய நமீதா, ஹைதராபாத் அணியினர் சிக்ஸர்கள் விளாசியபோதும் ஆரவாரம் செய்தார். இதனால் நமீதா எந்த அணியை ஆதரித்தார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இருப்பினும் நமீதா கைத்தட்டும் போதெல்லாம் தாங்களும் கைத்தட்டி, விசிலடித்து கொண்டாட்டமாக இருந்தனர். இறுதியில் கம்பீரமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து நான்கு ஆட்டங்கள் வென்று முதலிடத்தில் இருந்த சென்னை அணி, அதன் பின்னர் ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் சென்னை ரசிகர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். சென்னை அணியின் விளம்பரத் தூதர்களாக இளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நியமிக்கப்பட்டனர். நயன்தாராவை இடையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கியதால் தான் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறது என்ற புதிய கண்டுபிடிப்பை நேற்று மைதானத்தில் போட்டியைப் பார்த்து தலையில் துண்டு போட்டுக்கொண்ட நயன்தாரா ரசிகர் ஒருவர் கண்டறிந்து எல்லோரிடமும் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.


இதற்கிடையே ஆரம்பத்தில் தோற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியினர் திடீரென எழுச்சிப்பெற்று தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவே காரணம் என்கிறார்கள். பஞ்சாப் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அந்த அணியின் சீருடையுடன் செல்லும் ப்ரீத்தி, போட்டி நேரம் முழுவதும் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறாராம்.

தன் அணி போட்டியில் வெற்றி பெற்றால் அணியினரை மேற்கத்திய பாணியில் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இதனால் உத்வேகம் அடையும் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் மற்றும் அவரது அணியினர் ஆவேசமாக ஆடி இப்போது வெற்றிகளைத் தொடர்ந்து குவிக்கிறார்கள் என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் சொன்னார்.

இத்தொடரில் தொடர்வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருந்தாலும் மற்ற அணிகளுக்கு இருப்பது போன்ற நட்சத்திர ஆதரவும், சலுகையும் தன் அணிக்கு இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், கேப்டனுமான ஷேன்வார்னே நொந்துப் போய் இருக்கிறாராம்.

6 பிப்ரவரி, 2010

சென்னையில் 108க்கு ஒரு மாற்று!

எதிர்பாராமல் ஏதாவது நடந்தால்தான், அதற்குப் பெயர் விபத்து. இளைஞரான திலீப்புக்கு இருசக்கரவாகனம் ஓட்டுவது இலகுவானது மட்டுமல்ல, ரொம்ப பிடித்தமானதும் கூட. பல வருடங்களாக பைக் ஓட்டிவரும் அவர், ஒருமுறை கூட விபத்தை சந்தித்ததில்லை. இத்தனைக்கும் அன்று அலுவலகத்துக்கு நேரத்துக்கு செல்ல வேண்டிய அவசியமிருந்தும் மிதமான வேகத்தில்தான் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அண்ணாசாலை சாந்தி தியேட்டரை கடக்கும் வேளையில் திடீரென வண்டி மக்கர் செய்தது. பஞ்சரா என்ன ஏதுவென்று ஓரம் கட்டி சோதிப்பதற்குள் ‘விபத்து’. என்ன நடந்தது என்று திலீப்புக்கு இப்போது கூட தெரியாது. வண்டி எதன் மீதோ இடித்த சத்தம் மட்டுமே அவரது காதில் கடைசியாக கேட்டது.

சினிமாவில் விபத்தில் அடிபட்டவர்கள் கேட்பதைப் போலவே “நான் எங்கே இருக்கிறேன்?” என்று கேட்டவாறே கண் விழித்தார் திலீப். புன்னகையோடு அவர் எதிரில் நின்றுகொண்டிருந்தவர் கமல்ஹாசன். சினிமா நடிகரல்ல, இவர் வேறு. 24 வயதாகும் இளைஞர். சென்னையில் ஒரு பி.பி.ஓ. நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

திலீப்பைப் போல விபத்துக்களில் அடிபடுபவர்களை உடனடியாக காப்பாற்றி, அருகிலிருக்கும் ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்வது முதல், அடிபட்டவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிப்பது வரையிலான பணிகளை தன்னுடைய கடமையாக செய்துவருகிறார் கமல். இவரைப் போலவே இவருடைய நண்பர்களும் இச்சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள, ‘சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகியிருக்கிறது.

சுமார் ஐம்பது பேர் இவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாய் இணைத்துக்கொண்டு, விபத்துக்களில் அடிபடுபவர்களுக்கு முதலுதவிச் சேவை வழங்கி வருகிறார்கள். இதுவரை விபத்துகளில் அடிபட்ட சுமார் முன்னூறு பேருக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள்.

எப்படி இந்த எண்ணம் வந்தது?

சேவை செய்யவேண்டுமென்ற உந்துதல் இத்தலைமுறையில் எல்லோருக்குமே இருக்கிறது. இதை ‘கலாம் எஃபெக்ட்’ என்ற பிரத்யேக சொல்லாடலோடு சொல்கிறார் கமல். இவரும், இவருடைய நண்பர்களும் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி, மருத்துவத் தேவைக்கு உதவி என்று வழக்கமான உதவிகள்.

கமல் ஒருமுறை வண்டியில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பயங்கர இரத்த இழப்பு. வேடிக்கை பார்க்க நல்ல கூட்டம். வலியில் முனகிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தார் கமல்.

மருத்துவம் பார்த்த டாக்டர், கமலை அழைத்து “தம்பி சரியான நேரத்துலே இந்த அம்மாவை கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் கொஞ்சம் ரத்தம் வீணாகியிருந்தா இவங்க உயிரே போயிருக்கும். இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்’னு சொல்லுவோம். அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் முதலுதவி கொடுத்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம்னு சொல்ற அந்த பொன்னான நேரம். துரதிருஷ்டவசமா கோல்டன் ஹவர்க்குள் முதலுதவி செய்யப்படாதவர்கள்தான் விபத்துக்களில் அதிகமா மரணமடையுறாங்க”.

டாக்டர் சொன்ன ‘கோல்டன் ஹவர்’ கமலுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. யாராவது விபத்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் கிடந்தால், அதிகபட்சமாக 108-க்கு தொலைபேசி ஆம்புலன்ஸை கூப்பிடுவோம். சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் வர நேரமாகலாம். அதற்குள்ளாக அடிபட்டவருக்கு ரத்த இழப்பு அதிகமாகி, கோல்டன் ஹவரை தாண்டிவிட்டால்?

மரணம். ஒரு உயிர் மண்ணைவிட்டுப் பிரியும். அந்த உயிரை நம்பிய குடும்பம் நடுத்தெருவில் நிற்கலாம். குழந்தைகள் ஆதரவற்றுப் போகலாம். விபத்தை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய சமூகக் குற்றவாளிகள்?

அன்றிலிருந்து தன்னுடைய நண்பர்களிடம் கோல்டன் ஹவரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார் கமல். ஆங்காங்கே நடந்த விபத்துகளின்போது, அடிபட்டவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்க ஆரம்பித்தார்கள். இதுவரை இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் 300 பேர். “குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த முன்னூறு பேரில் ஒருவர் கூட மரணமடைந்தது இல்லை. சரியான நேரத்துக்கு சிகிச்சை கிடைத்தால் விபத்தில் உயிரிழப்பு என்ற விஷயமே இருக்காது” என்கிறார் கமல்.

கமல்ஹாசன் குறிப்பிடுவது போல ‘கோல்டன் ஹவர்’ என்பது மிக மிக முக்கியமானது. விபத்துக்களில் மட்டுமல்ல, திடீரென ஏற்படும் ஹார்ட் அட்டாக் போன்ற விஷயங்களின் போதும் கூட, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் உயிரைக் காப்பாற்றி விடலாம். மருத்துவமனைகளில் இதுபோல யாராவது உயிரிழக்கும்போது, “அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா பொழைச்சிருப்பார்!” என்று மருத்துவர் சொல்கிறார் இல்லையா? அந்த அரைமணி நேரத்துக்கு முன்னால் தான் இறந்தவரின் ‘கோல்டன் ஹவர்’ இருந்திருக்கும். இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் பல உயிரிழப்புகளை மருத்துவர்களால் தடுத்து நிறுத்த முடியும்.

வித்தியாசமான அனுபவங்களும் இவர்களுக்கு நேர்ந்ததுண்டு. ஒருமுறை ஒருவர் குடித்துவிட்டு வேகமாக வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாகி இருக்கிறார். ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கிக் கிடந்தவரை சுற்றி பெரியக் கூட்டம். “குடிச்சிட்டு வண்டி ஓட்டினா இப்படித்தான்!” என்று விபத்துக்கு வேடிக்கையாளர்கள் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அங்கிருந்த போக்குவரத்துக் காவலரும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கமல் உடனடியாக அடிபட்டவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.

இதுபோன்ற மீட்புப் பணிகளின் போது, பெரும்பாலும் ஆட்டோக்காரர்கள் காசு வாங்குவதில்லையாம். பொதுவாக அரசு மருத்துவமனைக்குதான் முதலுதவிக்கு எடுத்துச் செல்கிறார்கள். அருகில் அரசு மருத்துவமனை இல்லாதபட்சத்தில் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு போகிறார்கள். முதலுதவி செய்ய அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் வரை மட்டுமே தனியார் மருத்துவமனையில் ஆகுமாம். ஆம். கோல்டன் ஹவரின்போது ஒரு உயிரின் விலை வெறும் ஐநூறு ரூபாய்தான். எனவே சேஞ்ச் இந்தியா தோழர்கள் தங்கள் மணிபர்ஸில் எப்போதுமே ஒன்று அல்லது இரண்டு ஐநூறு ரூபாய்தாள்களை முதலுதவிக்கென்றே வைத்திருக்கிறார்கள்.

“இந்த சேவையைப் பற்றி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் விபத்து மாதிரியான விஷயங்களில் போலிஸ் தொல்லை அதிகமாக இருக்குமே? கோர்ட்டு - கேஸூ என்று இழுப்பார்களே?” என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். போலிஸ்காரர்களைப் பொறுத்தவரை யாரையுமே தொந்தரவு செய்வது அவர்களது இயல்பல்ல. ஒரு உயிரைக் காப்பாற்றினால் போலிஸ் என்ன, எல்லோருமே உங்களை பாராட்டத்தான் செய்வார்கள்.

அதிகபட்சமாக இதுபோன்ற விபத்து மீட்பாளர்களிடம் பெயரையும், முகவரியையும் மட்டும் போலிஸ் கேட்டு வாங்கிக் கொள்ளும். அவர்கள் கேட்கும் தோரணை வேண்டுமானால் கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி காவலர்கள் மக்களின் தோழர்களே. தப்பு செய்யாதவர்களை போலிஸ் எதுவுமே செய்யாது. இதை நாம் சொல்லவில்லை. கமலும், அவரது நண்பர்களும் சொல்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைகளிலும் போலிஸ் கேஸ் என்றால் முதலுதவி செய்யமாட்டார்கள் என்றொரு பொய்யான கருத்தாக்கம் நம்மிடையே நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கோல்டன் ஹவரில் கொண்டுவரப்படும் எந்த நபரையுமே உயிர்பிழைக்க வைக்கத்தான் ஒரு மருத்துவர் முயற்சிப்பார். முதலுதவிக்குப் பின்னரே என்ன ஏதுவென்று மற்ற விஷயங்களை விசாரிப்பார்கள். அதிகபட்சமாக ‘போலிஸுக்கு சொல்லிட்டீங்களா?’ என்றுதான் கேட்கிறார்கள்.

விபத்துக்களில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியாததற்கு நேரத்தைதான் நிறையபேர் காரணமாக குறிப்பிடுகிறார்கள். “பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போகணும். ஒருத்தரை ஆஸ்பிட்டல்லே சேர்த்துட்டு, அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு, போலிஸுக்கும் தகவல் சொல்லிட்டு ஆபிஸ் போக மதியம் ஆகிவிடுமே? லேட்டானா மேனேஜர் திட்டமாட்டாரா?” - பொதுவாக எழும் கேள்வி இது. மேனேஜர் நிச்சயமாக திட்டமாட்டார்.

மாறாக இதுபோல ஒருவரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு அலுவலகத்துக்கு சென்றுப் பாருங்கள். அலுவலகமே எழுந்து நின்று உங்களை கைத்தட்டி வரவேற்கும். சேஞ்ச் இந்தியா தோழர்களின் அனுபவம் இது. அதுவுமில்லாமல் தார்மீகரீதியாகப் பார்க்கப் போனாலும் ஒரு உயிரைவிட நம்முடைய வேலை பெரியதா என்ன?

எல்லாவற்றுக்குமே அரசையே சார்ந்திராமல், சமூகத்துக்கு தங்களாலான சேவைகளை, தங்களுக்கு தெரிந்த வழியில் செய்துக் கொண்டிருக்கும் கமலும், அவருடைய நண்பர்களுமே இன்றைய இளைய இந்தியாவைப் பிரதிபலிக்கக்கூடிய சரியான பிம்பங்கள். “இளைஞர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. பொழுதுபோக்குகளில் நாட்டமுடையவர்கள். சுயநலவாதிகள்” என்றெல்லாம் பழைய பஞ்சாங்கத்தை புரட்டிப் பார்த்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இவ்விளைஞர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

நீங்களும் முயற்சிக்கலாமே?

சென்னை பெருநகரில் கமலும், அவரது நண்பர்களும் இத்தகைய விபத்துமீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கென்று அமைப்பெல்லாம் வைத்துக் கொள்ளாமலேயே தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் ஆதங்கம். எந்த விஷயத்துக்குமே தனிமனித விழிப்புணர்வு ஒரு சமூகத்தில் ஏற்பட நீண்ட காலமாகும் என்பதால்தான் குழுவாக அமைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது.
மற்ற நகரங்களிலும் இளைஞர்கள் சேஞ்ச் இந்தியாவை முன்னுதாரணமாக்கி விபத்துக்களில் அடிபடுபவர்களின் உயிர்களை காப்பாற்றலாம் இல்லையா?

இதுபற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கமல்ஹாசனையே தொடர்புகொண்டு பேசலாம். அவரது எண் : 9841567893. மின்னஞ்சல் : changeindia@live.com / b.kamalhasan@live.com

(நன்றி : புதிய தலைமுறை)

5 பிப்ரவரி, 2010

கேமிரா ஜாக்கிரதை!

பின் ஹோல் கேமிரா (Pinhole Camera) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதை டெக்னிக்கலாக விளக்குவது எனக்கு கொஞ்சம் சிரமமான விஷயம். நாம் எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத வடிவங்களுக்குள் அதை வைத்து நமக்குத் தெரியாமலேயே படமெடுக்க முடியும் என்றவகையில் புரிந்துகொண்டால் போதும். நமக்கு தெரியாமலேயே நம்மை படம்பிடிப்பதை ‘கேண்டிட் கேமிரா’ என்கிறார்கள். பலருக்கு இது வெறித்தனமான பொழுதுபோக்கும் கூட.

இந்த வகை கேமிராக்களில் ரொம்பவும் அட்வான்ஸான தொழில்நுட்பம் எந்த காலத்திலேயோ வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்திருக்கும் பேனாவில் கூட கேமிரா உண்டு. சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழ் இந்த கேமிராவை பயன்படுத்தி, ஒரு பரபரப்பு ஸ்டோரி எழுதியது கூட உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

இப்போது மின்னஞ்சல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மடல் பகீர வைக்கிறது.

மிகப்பெரிய சில ஷாப்பிங்மால்களில் பெண்கள் உடைமாற்றிப் பார்க்கும் ‘டிரையல் ரூம்களில்’ இதுபோன்ற பின் ஹோல் கேமிரா மூலமாக படம் பிடிக்கிறார்களாம். இது நிர்வாகத்துக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது அங்கு பணியாற்றும் வக்கிரமனதுக்காரர்கள் யாராவது செய்கிறார்களா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

‘பெரிய சந்தை’ ஒன்றில் சமீபத்தில் படம் பிடித்ததாக கூறி ஒரு எம்.எம்.எஸ். சுற்றிக் கொண்டிருக்கிறதாம். ‘வாடிக்கையாளர் நிறுத்தத்தில்’ கூட இதுபோன்ற கசமுசா ஒருமுறை நடந்திருப்பதாகவும் வதந்தி உலவுகிறது. அயல்நாடுகளில் பெரிய ஷாப்பிங் மால்கள் பலவற்றிலும் நடப்பதாக கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ’டூவே மிர்ரர்’ போன்றவை அங்கே சகஜமாக இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம்மூருக்கும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது என்பது நட்சத்திர ஓட்டல் குளியலறையில் நடிகை படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தின்போதே உறுதியாகிவிட்டது.

டிரையல் ரூம்களில் ஆண்களை படம் பிடித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பெண்கள் இனி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரிய ஷாப்பிங் மால்களில் இதுபோன்ற கசமுசாக்கள் நடக்க வாய்ப்பில்லாத வண்ணம் காவல்துறையும் முடுக்கி விடப்பட வேண்டியது அவசியமாகிறது.

தமிழ் பத்திரிகைகளுக்கு சமீபகாலமாக கவர்ஸ்டோரி பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

4 பிப்ரவரி, 2010

கோவா!


அந்த காலத்தில் சுந்தர்ராஜன் படம் இயக்கும் ஸ்டைலைப் பற்றி சினிமாப்பெருசுகள் சிலாகிப்பதுண்டு. படப்பிடிப்புத் தளத்துக்கு போய்விட்டு யூனிட் ஆட்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பாராம். தலையில் போட்ட துண்டோடு தயாரிப்பாளர் வந்து, “நிலத்தை அடமானம் வெச்சி காசை போட்டிருக்கேன். ஏதாவது சீன் ஷூட் பண்ணு அப்பு!” என்று கெஞ்சியபிறகே, உட்கார்ந்து ‘சீன்’ எழுதுவாராம். இப்படியெல்லாம் சுந்தர்ராஜன் எழுதிய படங்கள் பலவும் வெள்ளிவிழா கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் என்ற ஆக்‌ஷன் ஹீரோவை, பெண்களுக்கு பிடித்த நூன்ஷோ ஹீரோவாக்கியதும் அவர்தான். மோகனை வெள்ளிவிழா நாயகன் ஆக்கியதும் அவர்தான்!

ஷூட்டிங்குக்கு போய் கிரிக்கெட் விளையாடுபவர்கள் எல்லாம் சுந்தர்ராஜன் ஆகிவிடமுடியாது என்பதற்கு வெங்கட்பிரபு நல்ல உதாரணம். தனக்கு சுத்தமாக சரக்கில்லை என்பதை சுத்தபத்தமாக நிரூபித்திருக்கிறார். எந்தவித முன் திட்டமும் இல்லாமல்தான் அவர் ’கோவா’வுக்கு ஹாலிடே போயிருக்கிறார் என்பதை பத்து ரூபாய் கொடுத்து முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்க்கும் பாமரன் கூட உணர்கிறான்.

தமிழ்பட ஸ்ஃபூபாக வரும் முதல் அரைமணிநேரக் காட்சிகள் மட்டுமே சுமார். ஜோக் என்ற பெயரில் கடி கடியென ஒவ்வொரு கேரக்டராக கடிக்க, ரசிகர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்து எடுத்த இயக்குனரை நினைத்து பாவமாக சிரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. துண்டு, துண்டாக எடுத்தக் காட்சிகளை எடிட்டிங்கில் கோர்த்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். இதற்குப் பதிலாக ஃபியாவுக்கு ஒரு துண்டாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். அம்மணியின் இடுப்புக்குக் கீழே உடை தொடர்பான வறுமை தலைவிரித்து ஆடுகிறது.

இளையராஜா பாடும் பாடலைத் தவிர்த்து, வேறெந்த காட்சியிலும் இசை யுவன்ஷங்கர்ராஜா என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. துள்ள வைக்கவில்லை, துவளவைக்கிறார். ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தாலும் சம்பத் சம்பந்தப்பட்ட ஹோமோசெக்ஸ் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நெளிகிறார்கள். நடிப்பில் சம்பத்தும், அவரது பார்ட்னரும் மட்டுமே தேறுகிறார்கள். தம்பி பிரேம்ஜிக்கு அண்ணன் வெங்கட்பிரபு கொடுக்கும் ஓவர் பில்டப் காட்சிகள் கடுப்போ கடுப்பு.

அந்த ஃபாரின் ஃபிகர் அழகாக இருக்கிறார். ஃபியாவின் கண்கள் ஷார்ப்னராய் நம் இதய பென்சிலை சீவுகிறது. பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்ததற்கு இதைத் தவிர்த்து உருப்படியாக வேறெந்தப் பயனுமில்லை. ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் முதல் தயாரிப்பே குப்பையாக வந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த குப்பையை கொண்டு மின்சாரம் என்ன சம்சாரம் கூட தயாரிக்க முடியாது.

என்னுடைய ஆச்சரியமெல்லாம் என்னவென்றால், கறாரான விமர்சனத்தையும், நியாயமான நிராகரிப்பையும் எனக்கு கற்றுத்தந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதை உலகளவிலான படமாக எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதே. இப்படம் கீழ்த்தட்டு இளைஞர்களை எந்தக் காரணமுமின்றி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறது. மேல்த்தட்டு இளைஞர்களையும் கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை என்பதே சோகம்.

என் உயிருக்கு உயிரான தமிழ் உடன்பிறப்புகளின் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். GOவாதே!