புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜனவரி, 2020

கவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்!

ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது.

சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது.

‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஐம்பது கவிதைகளும் வாசகனை கொஞ்சம் அனுசரணையாகவேதான் நடத்துகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சிறுகதை ஆசிரியர் என்பதைவிட கவிஞராகதான் பா.ராகவன் கூடுதலாக மிளிர்கிறார் என்பதாக எனக்குப் படுகிறது.

கவிதைகள் குறித்து மேம்போக்கான எள்ளல் எண்ணம் கொண்டவர்கள் கவிதை எழுத முடியாது என்கிற மூடநம்பிக்கையை தைரியமாகவே பாரா கைவிட்டு விடலாம். தீவிரக் கவிஞர்கள் தவறவிடுகிற சில்லறை தருணங்களை கவிதையாக்குகிற கவிஞர்களும் இலக்கியத்துக்குத் தேவையே.

ஆறேழு பக்கட்டுகளில்
தண்ணீர் பிடித்துவைக்க

ஆயிரக்கணக்கில் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

பிடித்த நீரைச் சிந்தாமல்
நகர்த்தி வைக்கத்தான்

பா.ராகவன்கள் தேவைப்படுகிறார்கள். நவீனக் கவிதைகள் குறித்த எள்ளல்கள் மிகுந்த பா.ராகவன் போன்றவர்களே, அக்கவிதைகள் குறித்த ‘புரியும்படியான’ விமர்சனங்களையும் எழுதமுடியும் என்று கருதுகிறேன்.

‘அபாயகரம்’ கவிதைத் தொகுப்பு, தன்னளவில் ஒரு தொகுப்பாக மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே கவிதையுலகில் நுழைய விரும்பும் எல்.கே.ஜி. வாசகர்களுக்கு அகலமாக தன் கதவுகளை திறந்துவைத்து ‘வெல்கம் போர்டு’ வைத்திருக்கிறது.

பா.ராகவனின் கவிதைகள் உடோப்பியாவில் நிகழ்வதில்லை. அக்மார்க் குரோம்பேட்டை சரக்கு. பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. அபூர்வமாக சிந்திக்கவும் தூண்டுகின்றன. நேற்றைய நிலவைவிட இன்றைய நிலவு அழகாக இருக்கிறது எனும்போது இன்றைய கவிதை நாளை நன்றாயிருக்கக் கூடும் மாதிரியான கூற்றுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு புன்னகையைத் தருகிறாய்
ஒரு ஆர்வத்தைத் தருகிறாய்
ஒரு பதற்றத்தைத் தருகிறாய்
ஒரு பெருமூச்சைத் தருகிறாய்
ஒரு தரிசனத்தைத் தருகிறார்

மாதிரியான கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் வாசனை.

குள்ளமா யிருப்பதே
குரோட்டனுக் கழகு

மாதிரியான அறிவிப்புகளில்தான் அசல் பாரா வெளிப்படுகிறார்.

காதலும், கவிதையும் பாராவின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அநியாயமாக இரையாகின்றன.

காட்டாக,

காதல் ஒரு வெட்டிவேலை என்பது
காதலிக்கும்போது தெரியவில்லை
கவிதையெழுதும்போது
கண்டிப்பாகத் தெரிகிறது

என்கிறார்.

காதைத் தேடும் கவிஞன் அமானுஷ்யத்தை ஏற்படுத்துகிறான்.

ரயிலில் ஏறிய கவிஞன், கனவுப் பெட்டியிலிருந்து இறங்கும் அதீதம் அருமை.

இந்தியாவது தொந்தியாவது என முடியும் கவிதையின் பகடி, மொழித்திணிப்பின் மீதான தமிழ் மண்ணின் நிரந்தர கிண்டல்.

பாம்பு அசைந்துக் கொண்டிருந்தது
மரம் இறங்கி ஊர்ந்துப் போனது

வாசிப்பவனின் கற்பனைக்கு ஓவர்டைம் உழைப்பு வாங்குகிறது.

கவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள் என்று இந்த விமர்சனத்துக்கு கவித்துவமாக தலைப்பிட்டுவிட்டாலும், எழுபது பக்கங்களை வாசித்து முடித்தபிறகு கவிதைத் தொகுப்பை வாசித்த தன்னிறைவுதான் ஏற்படுகிறது.

பாராவுக்கு இனியும் தன்னடக்கம் அவசியமில்லை. தாராளமாகவே கவிஞர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளலாம். இவையும் கவிதைகள்தான். இவற்றுக்குரிய வாசகர்களும் நிச்சயம் இருக்கிறார்கள், என்னைப் போல.


நூல் : அபாயகரம்
வகை : கவிதை
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 70
கிடைக்குமிடம் : கிண்டில்

26 ஏப்ரல், 2019

காமிக்ஸாக ‘மெகா’பாரதம்!

“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.

உலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த அறிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.
குழந்தைகளுக்கு ஏன் மகாபாரதம்?

ஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

உங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.

* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.

* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.

* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.
* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.

* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.

* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.

வாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.
“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.

அப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை,  முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் கதையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.

மகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே?

(நன்றி : தினகரன் வசந்தம்)

25 அக்டோபர், 2016

புனைவில் ஒரு மங்காத்தா!

 தமிழ் சினிமாவில் ‘மங்காத்தா’வின் வெற்றி ஆகப்பெரிய ஆச்சரியம். அதுவரையிலான தமிழ் சினிமாவின் நாயகர்கள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், பெண்களிடம் நாணயமாக நடந்துக் கொள்வார்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக திமிறியெழுவார்கள், பழிக்குப் பழி வாங்குவார்கள், இத்யாதி.. இத்யாதி..

எதிர்நாயகனை மையமாக கொண்ட திரைப்படங்களில் கூட சட்டத்துக்கு புறம்பான, சமூகத்துக்கு எதிரான அவனது செயல்களில் ஓர் அறம் இருக்கும். இல்லையேல் முழுக்க கெட்டவனான நாயகன், கடைசியில் திருந்துவான் என்பதைப் போன்ற Conditions apply இருக்கும்.

‘மங்காத்தா’, எல்லாவற்றையும் உடைத்தெறிந்தது. மும்பை காவல்துறையில் ஒழுக்கக்கேடு மற்றும் வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அசிஸ்டெண்ட் கமிஷனர்தான் நாயகன். சுயநலத்துக்காக – பணத்துக்காக –- எதையும் செய்வான். தன் காதலியை கூட ஏமாற்றுவான். நட்பு, அன்பு மாதிரி எந்த நல்ல உணர்வுகளும் அவனுக்கு இல்லை. தான் அடைய விரும்பியதற்காக எந்த எல்லைக்கும் போவான். படம் முடிந்தபிறகும்கூட விநாயக் மகாதேவ் வில்லன்தான். அஜித்தை இரட்டை வேடமாக காட்டி ஒரு அஜித் நல்லவர், இன்னொருவர் வில்லன் என்கிற வழக்கமான ஜல்லியை எல்லாம் இயக்குநர் வெங்கட்பிரபு அடிக்கவில்லை.

அந்தப் படத்தின் பிரும்மாண்ட வெற்றி என்பது ‘பணத்துக்காக எதையும் செய்யலாம்’ என்கிற மக்களின் மில்லெனியம் காலத்து மனநிலையை அப்பட்டமாக பிரதிபலித்தது. நாயகன் என்பவன் ஒழுக்கசீலன் அல்ல. எப்படியோ கோடிகளை சம்பாதிப்பவன் என்கிற புதிய இலக்கணத்தை படைத்தது. விநாயக் மகாதேவுக்கு கிடைத்தது மாதிரி மங்காத்தா ஆட வாய்ப்பு கிடைத்தால், ரிஸ்க் எடுத்து ஆடுவதற்கு ஒவ்வொருவருமே தயாராகதான் இருக்கிறோம்.

உலகமயமாக்கலுக்கு பிறகு மக்களிடையே வளர்ந்திருக்கும் இந்த ‘கம்ப்ளீட் மெட்டீரியலிஸ்டிக் மெண்டாலிட்டியை’ உணராதவர்கள்தான் இன்னமும் இராமாயணம், மகாபாரதம் என்று டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு வாரமும் இதை பார்க்கும்போது, இவர்களை வைத்து டி.ஆர்.பி. கணக்கு காட்டி பின்னணியில் பலரும் கோடிகளை குவித்துக் கொண்டிருப்பது.. பாவம், இவர்கள் சாகும்வரை அறியப் போவதில்லை.

அறம் பேசுவதே இன்று மிகப்பெரிய வருவாய் கொடுக்கக்கூடிய பிசினஸ். முதுகில் குத்தும் துரோகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிசினஸ் டெக்னிக்.

நமக்கு இன்று பேச மொழி இருக்கிறது, எழுத எழுத்து இருக்கிறது, தகவல்களை பரப்புவதற்கு தொழில்நுட்பம் இருக்கிறது, மனித வாழ்வை இலகுவாக்க எந்திரங்கள் இருக்கின்றன, உலகளாவிய நாகரிகம் இருக்கிறது.

ஆனால், மனதளவில் மனிதனின் முதுகு நிமிர்ந்த கற்கால காலக்கட்டத்துக்குச் சென்றிருக்கிறோம். இன்றைய உலகில் இருவகை மனிதன்தான் உண்டு. வேட்டையாடுபவன், வேட்டையாடப்படுவன். வேட்டையாட திராணி இல்லாதவன் ‘சத்திய சோதனை’ படித்துக் கொண்டு காலத்தை கழிக்க வேண்டியதுதான். வேட்டையாடுபவனுக்கு இந்த உலகமே சொந்தம். பணம் சம்பாதிப்பவன்தான் மனிதனாக மதிக்கப்படுகிறான். மற்றவனெல்லாம் மரவட்டையை போல வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

இந்த மனப்பான்மை சமூகத்தில் உருவாகக்கூடிய காலக்கட்டத்தின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கதைதான் ‘ரோலக்ஸ் வாட்ச்’. அந்தஸ்தின் அடையாளமாக இந்த வாட்ச் கருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று வாட்ச் கட்டுவது என்பதே gadgetகள் குறித்த அறியாமை கொண்ட நாட்டுப்புறத்தானின் செயல்பாடாக ஆகிவிட்டது.

‘உலகில் தாய்ப்பாலை தவிர அனைத்திலுமே கலப்படமாகி விட்டது’ என்று தாய்ப்பாலின் மகத்துவத்தை சினிமாவில் வசனமாக வைத்தால் கைத்தட்டல் கிடைக்கிறது. ‘ரோலக்ஸ் வாட்ச்’, தாய்ப்பால் மாதிரி. அதற்கு 99 சதவிகிதம் டூப்ளிகேட்டே இருக்காது. அப்படி டூப்ளிகேட் செய்ய முயற்சித்தால், அம்முயற்சி பல்லிளித்து விடும்.

இந்த நாவலின் கதை சொல்லி தன்னை அதிகம் தாக்கப்படுத்திய நண்பன் ஒருவனின் நகலாக மாற முயற்சிக்கிறான். எங்கோ சாதாரணமாக கிடந்த இவனை சமூகத்தின் மேல்மட்ட தொடர்புகளுக்கு கொண்டுச் சென்றவன் சந்திரன் என்கிற அந்த நண்பன். பணம் எங்கே இருக்கிறது என்று அவன் வழி சொல்கிறான். அதை குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் அடைய இவன் முயற்சிக்கிறான்.

வாரமிருமுறை இதழ்களில் கழுகார், வம்பானந்தா, ராங்கால் பகுதிகளில் கிசுகிசுக்கப்படும் அத்தனை கேப்மாரித்தனங்களையும் செய்ய கதை சொல்லிக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், இவனது குருவான சந்திரனோ குறைந்தபட்ச அறவிழுமியங்களோடு நடக்கிறான்.

அவன் ஏன் அப்படி இருக்கிறான், இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பதற்கான சமூகப் பின்னணி, பிறந்த குடும்பம், வளர்ப்பு உள்ளிட்ட காரணிகளை விரிவாக அலசுகிறது ‘ரோலக்ஸ் வாட்ச்’. இது சரி, இது தவறு என்று போதிப்பதோ, சுட்டிக் காட்டுவதோ நாவலாசிரியரின் நோக்கமாக இல்லை. இது இது இப்படி இருக்கிறது, அது அது அப்படி இருக்கிறது என்று நாமறியாத இருட்டுச் சென்னையில் முரட்டுப் பக்கங்களை அவர் பாட்டுக்கும் எழுதிக்கொண்டே போகிறார். கொஞ்சமும் தொய்வில்லாத ட்வெண்டி ட்வெண்டி மேட்ச் நடையில் எழுதப்பட்டிருக்கும் அரசியல் மங்காத்தா இது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாம் வாசித்த பல கிசுகிசு புதிர்களுக்கான விடையை, ஓரளவுக்கு அரசியல் பிரக்ஞையுள்ளவர்கள் இந்நாவலில் கண்டுகொள்ளலாம்.

ஒருக்கட்டத்தில் தான் வெறும் நகலாகவே இருப்பதின் வெறுமையை கதை சொல்லி உணர்கிறான். தன்னை உருவாக்கியவனையே வெறுக்கிறான். தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறான். காலம் உருட்டும் தாயம் யார் யாரை என்னென்னவெல்லாம் செய்யக்கூடுமென்கிற நிகழ்தகவினை எந்த ஈவு இரக்கமுமின்றி முழுநீள நாவலாக எழுதியிருக்கிறார் சரவணன் சந்திரன். அசலாக இருப்பதே ஆளுமை என்கிற எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிந்தனையை இந்நாவல் வலியுறுத்துகிறது.
சரவணன் சந்திரன், யார் மாதிரியும் இல்லாத புது மாதிரி எழுத்தாளர். இவரது எழுத்தில் அவரது சாயல் தெரிகிறது, இவரது சாயல் தெரிகிறது என்று யாரையும் சுட்ட முடியவில்லை. இவரது முந்தைய நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’யும் சரி, இந்த நாவலும் சரி. தமிழ் இலக்கியத்தில் புனைவிலக்கியத்துக்கு என்றிருக்கும் பல வழமைகளை சட்டை கூட செய்யவில்லை. பழசு எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு முன்னேறும் வெறி தெரிகிறது.

சரவணன் சந்திரனின் எழுத்துகளை வாசிக்கும்போது, இரண்டாயிரங்களுக்கு பிறகு உருவானவர்களில் தவிர்க்கவியலாத ஓர் எழுத்தாளனை வாசிக்கும் பெருமிதம் ஏற்படுகிறது. எந்த இஸங்களும் சரவணனுக்கு இல்லை அல்லது இருப்பதாக எழுத்தில் காட்டிக் கொள்ளவில்லை. தன்னை வாசிப்பவனுக்கு, தன் எழுத்து புரியவேண்டுமே என்கிற ஒரே அக்கறை மட்டும்தான் அவரது எழுத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது. குறிப்பாக, தற்கால இலக்கியத்தில் அதிகம் உடைக்கப்படும் ஜல்லி, சரவணன் சந்திரனிடம் சற்றுமில்லை என்பதே இவரை தனித்துக் காட்டுகிறது.

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் வசனம் ஒன்று. “என்னை மாதிரி சாதாரணப் பசங்களுக்கு வாய்ப்பு அதுவா வராது. நாங்களாதான் தேடி வரவைக்கணும்”. இந்த வசனம் சரவணன் சந்திரனின் கதை நாயகர்களுக்கே எழுதப்பட்ட பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கிறது. தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்க முனைபவர்கள்தான் இவரது கதாபாத்திரங்கள்.

ஒரு மனிதனின் சூழல்தான் அவனுடைய நல்லது, கெட்டதுகளை தீர்மானிக்கிறதே தவிர, அவனல்ல என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது சரவணன் சந்திரனின் கதாபாத்திரங்கள். அவ்வகையில் பார்க்கப் போனால் உலகில் நல்லவன் கெட்டவன் என்று யாருமில்லை, மனிதன் மட்டுமே இருக்கிறான். பச்சை விளக்கொளியில் காட்டினால் நல்லவன், அவன் மீதே சிகப்பு விளக்கொளி பாய்ச்சினால் கெட்டவன். அவ்வளவுதான். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் நடுத்தரக் குடும்பங்களில் பிறந்தவர்களின் மன உளவியலை, முன்னேறுவதற்கான உந்துதலை, அதற்காக அவர்கள் செலவழிக்கும் உடல் மற்றும் மூளை ஆற்றலை... சரவணன் அளவுக்கு துல்லியமாக வேறு யாரும் தமிழிலக்கியத்தில் இதுவரை பதிவு செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

நூல் : ரோலக்ஸ் வாட்ச்
எழுதியவர் : சரவணன் சந்திரன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.150
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018.
போன் : 044-24993448 இணையத்தளம் : www.uyirmmai.com



9 ஜூன், 2016

சுந்தர ராமசாமியை அறிய...


மறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.

இந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.

என் மனதுக்கு எப்போதும் மிக நெருக்கமான எழுத்தாளராக சுந்தர ராமசாமி இருந்து வருகிறார். ஒரு படைப்பை, ஆளுமையை எப்படி புரிந்துக் கொள்வது என்பதற்கு ‘கோனார் நோட்ஸ்’ போட்டவர் அவர். குறிப்பாக அவரோடு பழகிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய ‘நினைவோடை’ நூல்வரிசை, தமிழிலக்கியம் குறித்த புரிதலுக்கான மனத்திறப்பாக அமைந்தன. தமிழில் புக்கர் பரிசு வாங்கக்கூடிய தகுதி கொண்ட இருநாவல்களை எழுதியிருப்பவர் (’ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நாவலை மட்டும் படிக்க ஏதோ மனத்தடை)

சுந்தர ராமசாமி குறித்து பலரும் எழுதியிருக்கிறார்கள். பவுத்த அய்யனார், தேவிபாரதி, ஜெயமோகன் ஆகியோர் அவர் குறித்து எழுதியவை என்னை மிகவும் கவர்ந்தவை.

சாகித்ய அகாதெமிக்காக ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசைநூலுக்கு அரவிந்தன் எழுதியிருப்பது, இதுவரை எழுதப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் கறாரானதாகவும், துல்லியமானதாகவும் சுராவை மதிப்பிட்டிருப்பதாக வாசிக்கும்போது தோன்றுகிறது. சுராவின் வாசகன் என்பதைவிட மாணவன்/தொண்டன்/ரசிகன் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு அவரை ஆராதிக்கக்கூடியவராகதான் அரவிந்தனை நினைக்கிறேன். ஆனால், தன்னையும், சு.ரா.வையும் தள்ளி வைத்துவிட்டு மூன்றாம் மனிதராக அவர் எழுதியிருக்கும் இந்நூல் ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டு எழுத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது.

ஏற்கனவே சுராவை அறிந்தவர்களுக்கும் சரி. புதியதாக அவரை வாசிக்க திட்டமிடும் வாசகர்களுக்கும் சரி. வாசிப்புக்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக திட்டமிட்டு பெருங்கடலை சிறு பாட்டிலுக்குள் அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் அரவிந்தன். 1950களின் முற்பகுதிகளில் தொடங்கி, இரண்டாயிரங்களின் மத்தி வரை வாழ்ந்த ஒரு மனிதரின் நீண்ட வாழ்க்கையையும், அவரது நெடிய இலக்கிய அனுபவங்களையும் குழப்பமில்லாத அழகிய கோலமாக வரைந்துக் கொடுத்திருக்கிறார்.

மிகச்சுருக்கமாக சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டிருக்கும் சுராவின் வாழ்க்கை குறித்த அறிமுகக் கட்டுரையில் தொடங்கி அவரது இலக்கியப் பணிகள் குறித்த மேலும் ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருக்கிறது.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பத்திரிகை என்று பன்முகமாக விரிந்த சுராவின் இலக்கியப் பணிகளை துறைவாரியாக எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகள், சுராவின் இலக்கியத்தை எவ்வாறு தாக்கப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டும் பகுதிகள் சுவாரஸ்யம்.

நீண்டகால இலக்கிய வாழ்வில் புதிது புதிதாக உருவாகும் போக்குகளை சுரா உன்னிப்பாக அவதானித்ததையும், அவற்றை அவர் எப்படி உணர்ந்து தன்னை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டு நீடித்தார் என்பதையும் அவரது எழுத்துகளில் இருந்தே உதாரணப்படுத்திக் காட்டியிருப்பதில் இருந்து சுராவை எவ்வளவு ஆழமாக அரவிந்தன் வாசித்திருக்கிறார் என்று உணரமுடிகிறது. சுராவின் எழுத்தில் வடிவம், மொழி, உள்ளடக்கம் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை காலவாரியாக தகுந்த எடுத்துக் காட்டுகளோடு வரிசைப்படுத்தி அடுக்கியிருப்பது அழகு.

‘அவசியம் வாசித்தே ஆகவேண்டிய நூல்’ என்று ஒரு புத்தக அறிமுகத்தை முடிப்பது தேய்வழக்கான சம்பிரதாயம்தான். ஆனால், இந்நூலைப் பொறுத்தவரை அதைதான் சொல்லியாக வேண்டும்.
நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள் : சுந்தர ராமசாமி
எழுதியவர் : அரவிந்தன்
பக்கங்கள் : 128
விலை : ரூ.50
வெளியீடு : சாகித்திய அகாடமி,
குணா பில்டிங்ஸ் (இரண்டாவது தளம்),
எண்.443 (304), அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018. போன் : 044-24311741

1 ஜூன், 2016

On that ground, I can divorce you!

எண்பத்தைந்து வயதில் தமிழில் முதல் நூலை எழுதுவதில் ஒரு சவுகரியம் இருக்கிறது. கதை விடுவதற்கு சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது. எண்பது ஆண்டு அனுபவம் கை கொடுக்கும். இரண்டாவதாக நாம் சொல்லும் கதைகளை வாசகர்கள் நம்பிதான் ஆகவேண்டும். சர்ச்சைகளை மறுத்துப் பேச நினைப்பவர்கள் ஏற்கனவே மரணித்து இருப்பார்கள்.

இதனால்தான் சாருஹாசன் இத்தனை ஆண்டுகளாக நூல்வெளியிடாமல் காத்துக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்டோ பயோகிராபியான ‘அழியாத கோலங்கள்’ அதகளமென்றுதான் சொல்ல வேண்டும். யாரையுமே விட்டுவைக்கவில்லை. போட்டுத் தாக்கி விட்டு போய்க்கொண்டே இருக்கிறார். தமிழின் முக்கியமான தன்வரலாற்று நூல்களில் இதையும் ஒன்றாக தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய ராமநாதபுரம் ஜில்லாவை எப்படி இவ்வளவு தத்ரூபமாக நம் கண் முன்பாக அவரால் நிறுத்த முடிகிறது என்று தெரியவில்லை. சாருஹாசனின் ஞாபகசக்தி அத்தனை துல்லியமாக ஆச்சரியப்படுத்துகிறது. அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் பார்த்த ஆங்கில, மவுனப் படங்களின் காட்சிளையும், வசனங்களையும் அப்படியே இப்போதும் நினைவுகூர்கிறார்.

பரமக்குடியின் பிரபல வக்கீல் சீனிவாசனின் மகன். அவருடைய அப்பாவுக்கு காமராஜரும் நெருக்கம், ராமநாதபுரம் ராஜாவும் நெருக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி, தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் உலகநாயகன் பிறப்பதற்கு பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகநாயகன் வீட்டில்தான் தங்குவார்கள்.

உலகநாயகனுக்கு அண்ணன், மணிரத்னத்துக்கு மாமனார், சுஹாசினிக்கு அப்பா... அதெல்லாம் சரிதான். ஆனால், ஒன்பது வயது வரை ஸ்கூலுக்கே போகாதவர் சாருஹாசன். பள்ளியிலும் கொஞ்சம் மந்தமான மாணவர்தான். அடித்துப் பிடித்து எப்படியோ வக்கீல் ஆகிறார். மேல்படிப்பு படித்து அயல்நாட்டுக்கெல்லாம் போய் நன்கு சம்பாதித்து வாழலாம் என்று ஆசைப்படுகிறார். ஆனால், வாழ்க்கை அது பாட்டுக்கும் அடித்துச் செல்ல, எதிர்நீச்சல் போடாமல் அதன் போக்கிலேயே வாழ்கிறார். கடந்த காலம் குறித்து கசப்போ, நிகழ்காலம் குறித்து இனிப்போ, எதிர்காலம் குறித்து எதிர்ப்பார்ப்போ எதுவுமில்லை. பெரிதும் சவால்கள் இல்லாத சராசரி வாழ்க்கைதான். எனினும், அதையே ரசித்து ருசித்து வாழ்ந்திருப்பதால்தான் சாருஹாசன் குறித்து வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

இவரை வாசிக்கும்போது ஒரு மாதிரி எடக்குமடக்கான ஆள் என்கிற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ‘கமலின் போர்க்கால மனைவிகளின் தாக்குதல்’ என்பது மாதிரி அவர் உபயோகப்படுத்தும் அதிரடி சொற்பிரயோகங்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.

சாருஹாசனுக்கு அப்போது வயது இருபத்து ஐந்தை கூட எட்டவில்லை.

“நீ ஸ்மோக் பண்ணுறேன்னு தெரியும். குடிப்பியான்னு சந்தேகப்படறேன். வேற என்ன என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. உனக்கு குடும்பப் பொறுப்பு வரணும்” என்கிறார் அப்பா சீனிவாசன்.

“எனக்கு கல்யாணம், குடும்பம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” விட்டேத்தியாக பதில் சொல்கிறார் இவர்.

“You need sex. You are born, because your parents had sex…”

“If you worried about my sex, I know where to find it and when to find it”

“நீயா தேடினா அதுக்குப் பேர் தேவடியாதனம். நாங்க பண்ணிவெச்சாதான் அதுக்குப் பேர் கல்யாணம்”

அப்பாவுக்கும், மகனுக்கும் இதுபோன்ற வாதப்போர் நடப்பது அதிசயமில்லை. ஆனால், இந்த விவாதம் நடந்த ஆண்டு 1954 என்பதுதான் ஆச்சரியம்.

அப்போது சாருவின் அம்மா முழுகாமல் இருக்கிறார். “டெலிவரிக்கு அப்புறம் இருப்பேனோ, இருக்க மாட்டேனோ தெரியலை. இப்பவே உன் கல்யாணத்தை பார்க்கணும்”

மறுநாளே பெண் பார்க்கிறார்கள். சில நாட்களில் கல்யாணம். சாருஹாசனுக்கு கல்யாணம் ஆகி சரியாக அறுபத்தைந்தாவது நாளில்தான் உலகநாயகன் பிறந்தார்.

(நான் உலகநாயகனுக்கு உயிர் கொடுக்குமளவுக்கு ரசிகன்தான் என்றாலும், இந்த கட்டுரையில் கமல் என்பதற்குப் பதில் உலகநாயகன் என்று அடிக்கடி சொல்லுமளவுக்கு மறைகழன்ற ரசிகனல்ல. இருப்பினும், சாருவே கமலை குறிப்பிடும்போதெல்லாம் பெரும்பாலும் ‘உலகநாயகன்’ என்றே குறிப்பிடுவதால் நானும் அப்படியே குறிப்பிட்டுத் தொலைக்கிறேன்).

சாருவின் மனைவி அந்த காலத்திலேயே சர்ச்பார்க் காண்வென்டில் படித்தவர். கொஞ்சம் தூரத்து உறவுதான் போலிருக்கிறது. அவரது அம்மா உறவுமுறை சொல்லியிருக்கிறார். “என் மாமன் மகன் சக்கரவர்த்தி அய்யங்காரோட மனைவியின் சகோதரி மகள்”. இந்த இடத்தில் ஓபன் பிராக்கெட்டுக்கும், குளோசிங் பிராக்கெட்டுக்கும் இடையில் சாருவின் கமெண்ட். “உலகநாயகனின் சொந்தக்காரர்களில் ஒருவர் பேசுவதை போல இருக்கிறதா? இது உலகநாயகனின் சொந்த தாய் அய்யா!”

கல்யாணம் ஆன கொஞ்சநாளில் மனைவிக்கு ஆங்கிலத்தில் ஒரு காதல் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு எந்த பதிலுமே இல்லை. ஒருமுறை ஆதங்கமாக அதைப் பற்றி கேட்டபோது, அந்த லெட்டரில் இருந்த கிராம்மர், ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையெல்லாம் சரிசெய்து - அதாவது ப்ரூஃப் ரீடிங் - கொடுத்து, இப்படியெல்லாம் செய்தால் எப்படி பதிலுக்கு லவ்வு வரும் என்று கேட்டிருக்கிறார். சாருஹாசன் அதற்கு பிறகு அறுபது ஆண்டுகளாக காதல் கடிதமே எழுதியதில்லை.

---

தொழில் வக்கீல்தான் என்றாலும் அப்பா அளவுக்கு பெருசாக சம்பாதித்தவர் இல்லை. திமுக உருவாகி வளர்ந்துக் கொண்டிருந்த காலத்தில் நிறைய கேஸ் எடுத்திருக்கிறார். அவர் ஃபேமஸான கேஸ் ஒன்று முக்கியமானது.

மதுரையில் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பார்ட்டைமாக கோர்ட்டுக்கும் போய் கேஸ் பார்க்கிறார். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் இவர் ரோட்டில் நடந்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு முன்பாக திடீரென்று ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்கிறது. அந்த ஜீப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருக்கிறார்.

“என்னை இமானுவேல் கேசுலே கைது பண்ணிட்டாங்க. அப்பா கிட்டே சொல்லி ஜாமீன் போடச் சொல்லு. நீயும் ஆஜராகணும்”

உடனே அடுத்த பஸ் பிடித்து ஊருக்குப் போய் அப்பாவிடம் விவரம் சொல்கிறார். “நான் காங்கிரஸ்காரன். கட்சிக்கு விரோதமா தேவருக்கு ஆஜராக மாட்டேன்” என்கிறார் அப்பா.

வீம்பாக இவரே மதுரைக்கு போய் மனுதாக்கல் செய்கிறார். தேவருக்கு ஜாமீன் கேட்டதால், சடாரென புகழ் பெற்று வெற்றிகரமான வக்கீல் ஆகிவிட்டார்.

---

சாருஹாசன் வெற்றிகரமான வக்கீலோ இல்லையோ, ஐம்பது வயதுக்கு மேல் நடிக்க வந்து தேசியவிருதெல்லாம் வாங்கிய நடிகர்.

நூலின் இரண்டாம் பாகம் முழுக்க சினிமாத்துறை நண்பர்கள், அவரை பாதித்த கலைஞர்களை பற்றி எழுதுகிறார். ஒரு மாதிரி மாற்று சினிமா ஆளாக அறியப்படும் சாருஹாசன் பாக்யராஜ், டி.ராஜேந்தர், சிலுக்கு, மணிவண்ணன் போன்றோரைப் பற்றியும் அவர்களுடனான தன்னுடைய அனுபவங்களையும் நறுக்காக குறிப்பிடுகிறார்.

டி.ஆருடன் ‘ஒரு தாயின் சபதம்’ படத்தில் சாருஹாசன் நடித்திருக்கிறார். ஒரே ஒரு துண்டு பேப்பர் கூட கையில் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர் உலகிலேயே இவர் ஒருவர்தான் என்கிறார்.

டி.ஆர் குறித்து சாருஹாசன் குறிப்பிடும் ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது.

கிரேனில் மேலே அமர்ந்து கேமிரா கோணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் டி.ஆர்.

சட்டென்று, “யாருடா அவன் ஃபீல்டுலே செருப்பைப் போட்டவன். கிரேனை இறக்குடா. அந்த செருப்பாலேயே அவனை நான் அடிக்கப்போறேன்” என்று சொல்லி கீழே இறங்குகிறார்.

கீழே வந்ததும்தான் தெரிகிறது. அந்த செருப்பு டி.ஆருடையதுதான். ஆனால், சொன்ன சொல்லை காப்பாற்ற அந்த செருப்பையெடுத்து தன்னைதானே மூன்று முறை தலையில் அடித்துக் கொள்கிறார்.

---

கமல் பற்றி சாரு எழுதியிருப்பதெல்லாம் அவுட் ஆப் த ஸ்டேடியம் சிக்ஸர்ஸ். குறிப்பாக வாணியோடு வாழ்ந்து கொண்டிருந்தபோது சரிகாவையும் கமல் மெயிண்டெயின் செய்ய பட்ட கஷ்டங்கள், அதற்கு இவரது உதவிகள் என்று ரொம்ப பர்சனலான விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் போட்டு உடைக்கிறார்.
ஆயினும், கமலை மிக நல்ல மனிதனாகவே மதிக்கிறார். திருமணம் குறித்த கமலின் சிந்தனைகளை, அதன் நியாயங்களின் அடிப்படையில் இவர் ஏற்றுக் கொள்கிறார்.

ஒருமுறை வீட்டில் நடந்த பஞ்சாயத்து ஒன்றை அப்படியே எழுதுகிறார் சாரு.

“என் வீடு, என் நாய், என் தோட்டம், என் டிவி, என் கேமிரான்னு சொல்லிக்கிட்டே போறாளே. காலையிலேருந்து சாயங்காலம் வரை ஷூட்டிங்கில் உடல் ஒடிஞ்சு சம்பாதிக்கறவன் நான். என்னோடதுன்னு எதுவுமில்லையா?” - கமல்.

“நேத்து ஈவ்னிங் இவர் ரெண்டு மணி நேரம் நடிகை சரிகாவோட அறையில் இருந்திருக்கார். ஆன் தட் கிரவுண்ட், ஐ கேன் டிவர்ஸ் யூ” - கமலை நோக்கி அவர் மனைவி வாணி.

எப்படியோ இருவரையும் சமாதானம் செய்து அப்போதைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சாரு, பாட்டிலை ஓப்பன் செய்கிறார். வேலையிலிருந்து திரும்பாத தன் மூத்தமகளின் நினைவு திடீரென வருகிறது. மனைவியிடம் கேட்கிறார்.

“ஒய் மை டாட்டர் ஈஸ் நாட் பேக் ஃப்ரம் ஹாஸ்பிடல்?”

“மிஸ்டர், அன்லெஸ் ஐ டெல் யூ. ஷீ காண்ட் பீ யுவர் டாட்டர்” மனைவியின் சுருக் பதில்.

“தட் வாஸ் குட் ஒன்” அடுத்த ரவுண்டுக்கு பாட்டிலை கவிழ்க்கிறார்.

“மிஸ்டர், யூ ஆர் கோயிங் ஃபோர்த் ரவுண்ட். ஆன் தட் கிரவுண்ட், ஐ கேன் டைவோர்ஸ் யூ”

“மேடம், ஐ வொர்ஷிப் தி கிரவுண்ட் ஆன் விச் யூ டிவோர்ஸ் மீ”

“குட் ஒன்! வாங்க சாப்பிடலாம்”

இப்போதும் இப்படிதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சாருஹாசன்.

‘குங்குமம்’ இதழில் ‘அழியாத கோலங்கள்’ என்கிற தலைப்பில் சாருஹாசன் எழுதிய சுயவரலாற்றுத் தொடர் நூலாகவும் வெளிவந்திருக்கிறது. ராவான ஒரு மனுஷனை பிடித்து படிக்க விரும்பும் வாசிப்பு சாகஸ அனுபவத்துக்காக இந்நூலை வாசிக்கலாம்.
நூல் : அழியாத கோலங்கள்
எழுதியவர் : சாருஹாசன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
போன் : 42209191 extn : 21125. மொபைல் : 7299027361

22 ஏப்ரல், 2016

நிறைந்த ஒளியில்

 சினிமாவுக்கு மட்டுமல்ல. நூல்களுக்கும் நெகட்டிவ்வாக ‘டைட்டில்’ வைக்கக்கூடாது. நிறைவான சமாச்சாரங்கள் அடங்கிய இந்த நூலுக்கு போய் ஏன் ‘குறைந்த’ டைட்டில் என்று தெரியவில்லை. இலக்கியம் என்பது மாதிரியெல்லாம் பம்மாத்து செய்யாமல், வெகுசுவாரஸ்யமாக - அதேநேரம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான நேர்மையான பத்தி எழுத்து பிரபுகாளிதாஸ் எழுதியிருக்கும் ‘குறைந்த ஒளியில்’.

சாருவின் சிஷ்யன். ஆனால், குருவே சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு எழுத்து நுட்பத்தில் அவரையும் தாண்டிச் செல்கிறார். 2000ங்களின் தொடக்கத்தில் விகடன் டாட் காமில் சாரு எழுதிய ‘கோணல் பக்கங்கள்’ பகுதியின் லேட்டஸ்ட் வெர்ஷன் மாதிரியிருக்கிறது. நூல் முழுக்கவே எந்த வகைப்பாட்டிலும் அடங்காத deconstructionதான்.

தூங்குவதற்கு முன்பு ஒரு நாற்பது, ஐம்பது பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்று விரதம். நேற்று இரவு இந்த நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் தூக்கத்தையே மறந்துவிட்டு, முழுக்க வாசித்த பின்புதான் வைத்தேன். ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்பது மாதிரி ‘குறைந்த ஒளியில்’ தரக்கூடிய வாசிப்பின்பத்துக்கு நான் கேரண்டி.

நூலில் என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியல் போட்டு, நீங்கள் படம் பார்க்கும் முன்பாகவே, நாம் பார்த்துவிட்ட படத்தின் கதையை காட்சிவாரியாக சொல்ல வரவில்லை.  ஒரே ஒரு சாம்பிள் மட்டும்.

பிரபு, ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார். பக்கத்தில் ஒரு வீடு. மாடியில் ஆள் அரவமே இல்லை. ஆனால், இரவுகளில் தொடர்ந்து இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நிஜமாகவே பாட்டுதான் கேட்கிறதா அல்லது அது தன்னுடைய மனப்பிராந்தியா என்று குழம்புகிறார்.

ஒருநாள் பிரபுவின் மகன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். என்னடா என்று இவர் கேட்கிறார். பக்கத்துலேருந்து பாட்டு கேட்குதுப்பா என்கிறான் அவன். எந்த சத்தமுமில்லாமல் அமைதியாக இருந்தது என்கிறார் இவர்.

உலகத்தரமான சிறுகதையாக வந்திருக்க வேண்டிய விஷயத்தை, ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாக முடித்துக் கொண்டிருக்கிறாரே என்று பிரபு மீது கோபம்தான் வருகிறது.

இப்படிதான் நூல் முழுக்கவே பிரபுவின் ரகளையான அனுபவங்களும், அபிப்ராயங்களும். Pulp என்பதை ஓரிடத்தில் குப்பை என்கிறார் பிரபு. ஆனால், இந்த நூலையும் pulp வகையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது. Pulpதான் எழுத்தில் மிகச்சிறந்தது, எழுதுவதற்கும் கடினமானது, ஆனால் வாசிப்பதற்கு இலகுவானது என்பது நம் அபிப்ராயம்.

பொதுவாக இதுபோல இணையத் தளங்களில் எழுதியவற்றை தொகுக்கும்போது பக்கத்துக்கு பக்கம் ஒருமாதிரியான தொடர்ச்சியில்லாத தன்மை வெளிப்படும். ஆனால், இந்நூல் முழுக்க திட்டமிட்டு ஒரே அமர்வில் எழுதியதைப் போன்ற கச்சிதமான எடிட்டிங்.

நூல் விமர்சனம் எனும்போது ஏதேனும் குறையை சொல்லியே ஆகவேண்டும். ‘குறைந்த ஒளியின்’ புத்தகத்துடைய பெரிய குறையே ‘நான்’தான். நூல் முழுக்க எத்தனை ‘நான்’கள் என்று கேட்டு வாசகர்களுக்கு போட்டிவைத்து, பரிசு கொடுக்கலாம். முன்பு ஒரு சினிமாவில் எத்தனை முறை ரகுவரன் ‘ஐ நோ’ சொல்லுகிறார் என்று இப்படிதான் போட்டி வைத்தார்கள்.

வெகுஜன எழுத்தில் இந்த தன்னிலைப் பிரச்சினையை சுலபமாக கடப்பார்கள். “வண்ணத்திரை சார்பாக ‘நாம்’ நமீதாவை சந்தித்தபோது, ‘வா மச்சான், இப்போதான் வழி தெரிஞ்சுதா?’ என்று பிரும்மாண்டமான தன் நெஞ்சை நிமிர்த்தி அமர்க்களமான வரவேற்பைக் கொடுத்தார்” என்று தன்னிலையை பன்மையாக்கி, ‘நான்’ என்கிற அகங்காரத்தின் காரத்தை குறைப்பார்கள். சில வாரங்கள் கட்டுரைகளை ‘நான்’ அடிப்படையில் வடிவமைத்து, ரொம்ப மொக்கையாக இருக்கிறது என்று ஆனந்தவிகடனே யூ டர்ன் அடித்த சம்பவம்கூட நடந்தது. ஒன்றுமில்லை. ‘நான்’ என்பதை வாசிக்கும்போது எழுதியவனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதோ என்கிற எண்ணத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். அதுதான் பிரச்சினை. இவர் Made in Charu Vasagar Vattam என்பதால் ‘நான்’ ‘நான்’ என்று ஏலம் போட்டிருக்கிறார். அடுத்தடுத்த நூல்களில் கொஞ்சம் தவிர்க்கலாம்.

முதல் நூல் என்பது ஓர் ஆசிட் டெஸ்ட். தன்னுடைய இலகுவான மொழிவன்மையாலும், அனுபவங்கள் தந்த content பலத்தாலும் அதை அசால்டாக கடந்திருக்கிறார் பிரபு காளிதாஸ்.
நூல் : குறைந்த ஒளியில்
எழுதியவர் : பிரபு காளிதாஸ்
விலை : ரூ.120
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

30 ஜூலை, 2015

கனவை நனவாக்குதல்!

அறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.

இந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்துவ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.

தன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”

நூல் : எனது பயணம்
எழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
விலை : ரூ. 150/-
பக்கங்கள் : 172
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,
7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,
புதுடெல்லி-110002.
E-mail : sales@manjulindia.com
 Website : www.manjulindia.com



நூலிலிருந்து...

“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”

25 ஜூன், 2015

நிலவை முத்தமிடு

சீனு, கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கிறான். அம்மா, அப்பா, அக்கா என கச்சிதமான குடும்பம்.

அப்பா, எழுபதுகளின் ஜாக்கிரதை உணர்வுகளோடே வாழ்க்கையை எதிர்கொள்கிறவர். பாட்டனும், பூட்டனும் சும்மாவா சொல்லியிருப்பான். எல்லாத்துக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட டெம்ப்ளேட் வாழ்க்கையை நிதானமாக வாழ்ந்து முடிக்க நினைக்கும் அந்த காலத்து ஆள். மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.

சீனுவோ, உலகமயமாக்கலின் விளைவு. நாலு ரவுண்டு ஆடினால், ஜோக்கர் நிச்சயம் வந்துவிடும். ரிஸ்க்கே எடுக்காமல், வருமுன் காப்போம் என்று வழவழா கொழகொழாவென்று வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைப்பவன். கல்லூரி நாடக விழாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல் பரிசினை வென்ற படைப்பாளி. மூன்றாவது முறையும் கோப்பையை வென்றுவிட்டால், நிரந்தரமாக அவனிடமே கோப்பை இருக்கும்.

அப்பாவுக்கு படிப்பு தவிர்த்த மகனின் மற்ற செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லை. எனவே, தன்னுடைய நாடக ஆர்வத்தை அப்பாவிடமிருந்து மறைக்கிறான் சீனு.

தான் பெற்ற மகன், தான் விரும்பும் வகையில்தான் வளரவேண்டும் என்று நினைக்கிறார் அப்பா. ஏனெனில் அவர், அவருடைய அப்பா விரும்பிய வகையில்தான் வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தனக்கு தனித்துவம் இருக்கிறது என்று நம்புகிறான் சீனு. அப்பாவின் நிழலில் ஆடு மாதிரி பாதுகாப்பாக வளர்ந்து கல்யாணம் கட்டி, குழந்தை பெற்று தானும் அதே அப்பா மாதிரி வாழ்வதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கலைத்துறைதான் தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதுகிறான்.

வென்றது சீனுவா, அவனுடைய அப்பாவா என்பதுதான் கதை.
1995ஆம் ஆண்டு ‘பாக்யா’ வார இதழில் தொடராக பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘நிலவை முத்தமிடு’.

வர்ணனைகள் எதுவுமின்றி வெறும் வசனங்களால் மட்டுமே இருநூறு பக்கங்களுக்கும் மேலான முழுநாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் இந்த வடிவில் வேறு ஏதேனும் நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்- வெறும் வசனங்களால் மட்டுமே தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர்கதை இதுதானென்று பட்டுக்கோட்டை பிரபாகர் முன்னுரையில் சொல்கிறார்.

வர்ணனைகள் இல்லாத இழப்பை வசனங்களில் புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. எனினும் அதற்காக திரும்பத் திரும்ப பாத்திரங்களின் பெயர்கள் எல்லா வசனங்களிலும் இடம்பெறுவது வாசிக்க கொஞ்சம் இடையூறாக இருக்கிறது. சீனுவின் நண்பன் அத்தியாய ஆரம்பத்தில் ‘சீனு’ என்று பெயர் சொல்லி அழைப்பது ஓக்கே. ஆனால், அவன் ஒவ்வொரு முறை இவனிடம் பேசும்போதும் “டேய் சீனு” “இங்க பார்றா சீனு” “என்னடா சொல்றே சீனு” என்று திரும்பத் திரும்பப் போடும் சீன் கொஞ்சம் தொல்லைதான். ஆனால்- இதைத் தவிர்த்திருந்தாலும் வர்ணனைகள் இல்லாத நாவலில், சில இடங்களில் வாசகனுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாசகனுக்கு வலிக்கக்கூடாது என்கிற அக்கறையில் தன்னுடைய எழுத்துவன்மையை மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் பிரபாகர்.

நாவலின் முடிவு, அபாரம். அனுபவமும் மண்ணை கவ்வுகிறது. துணிச்சலான இளமைத்துடிப்பும் வெற்றிவாய்ப்பை இழக்கிறது. நம்பிக்கைக்கான கீற்று நட்சத்திர ஒளியாய் தென்பட, அவர்களது பயணம் தொடர்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இளைஞர்களையும், அவர்களது பெற்றோரையும் பற்றிய கதை. இந்த கால ஃபேஸ்புக் தலைமுறை, இக்கதையை வாசித்தால், “வீட்டுலே காலேஜிலே எல்லாம் இப்படிதான் பக்கம் பக்கமாவா வசனம் பேசுவாங்க?” என்று நம்பாமலேயே போகலாம்.

ஆனால்-

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிதான் தமிழ் சமூகம் இருந்தது. வாயைத் திறந்தாலேயே எவனும் மூடமாட்டான். சிவாஜிக்கு ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் மாதிரி பக்கம் பக்கமாக பேசி தீர்த்த தலைமுறை அது. எல்லா வீடுகளுமே எப்போதும் சத்தமாகதான் இருக்கும். தாகம் எடுத்தால், “தண்ணி கொண்டு வா” என்று மணிரத்னம் படம் மாதிரி சுருக்கமாக கேட்டுத் தொலைக்க மாட்டார்கள். “தவிச்ச வாய்க்கு தண்ணி” என்று ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்கு உவமானம், எடுத்துக்காட்டு, அழகியல் என்று மொழியின் எல்லா எழவு சாத்தியங்களையும் பயன்படுத்திவிட்டு, கடைசியாக “கொஞ்சம் தண்ணி கொடேன், தாகமா இருக்கு” என்று முடிப்பார்கள்.

என் அப்பாவெல்லாம் அப்படிதான் பேசுவார். “படிச்சித் தொலையேண்டா” என்று சிம்பிளாக சொல்ல மாட்டார். “காமராஜர் படிச்சதில்லை, கலைஞர் படிச்சதில்லை, எம்.ஜி.ஆர் படிச்சதில்லை. ஆனா நாவலரும், பேராசிரியரும்...” என்று ஆரம்பித்து அவரது அரசியல் வரலாற்று சமூக அறிவினை எல்லாம் கொட்டி பத்து நிமிடங்களுக்கு தாலியறுத்து, “ஒழுங்காப் படிச்சி உருப்படுடா” என்று முடிப்பார். கிரிக்கெட் பேட்டை எடுத்து அப்படியே வழுக்கை மண்டையில் நாலு போடு போடலாமா என்று வெறிவரும்.

அப்பாவாவது பரவாயில்லை. அம்மா இன்னும் மோசம். பேச ஆரம்பித்தால், துலாபாரம் சாரதா மாதிரி குடும்பக் கஷ்டம், சரீரக் கஷ்டம், பெண்ணியம், லஷ்மி தொடர்கதை என்றெல்லாம் காண்டெக்ஸ்ட்டே இல்லாமல் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருப்பார். இப்போது மெகாசீரியல்களில் ஏன் பெண்கள் பக்கம் பக்கமாக பேசுகிறார்கள் என்றால், மெகாசீரியல் எழுதும் எழுத்தாளர்கள் எண்பதுகள்/தொண்ணுறுகள் தலைமுறை. நல்லவேளையாக இந்த சீரியலையெல்லாம் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், இப்போதைய பெண்கள் இப்படி பேசி புருஷன்களை/மகன்களை சாகடிப்பதில்லை.
அனேகமாக, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்தபோது, அவரது அப்பா நூறு, நூற்றி ஐம்பது பக்கங்களுக்கு வசனம் பேசியிருப்பார் என்று கருதமுடிகிறது.

‘நிலவை முத்தமிடு’ என்னுடைய டீனேஜ் வயதுகளை நினைவுறுத்துகிறது. அப்பாவோடு நான் போட்ட சண்டைகள், அம்மாவை டபாய்த்த சமயங்கள் எல்லாம் அப்படியே மாண்டேஜ் ஷாட்டுகளாக வந்து போகிறது.

இந்த நாவலின் கருமையம்தான் ‘இந்தியன்’ திரைப்படம் என்று தோன்றுகிறது. ஷங்கர் காப்பி அடித்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டவில்லை. பட்டுக்கோட்டையாரும், ஷங்கரும் ஒரே தலைமுறையினர்தானே? எனவே ஒரே மாதிரியாக சிந்தித்திருக்கலாம். அப்பா-மகன் முரண் என்கிற மைக்ரோ ஸ்டோரி மீது தேசத்தை உறிஞ்சும் ஊழல் என்று மேக்ரோ பிரச்சினையை பெயிண்ட் அடித்ததுதானே ‘இந்தியன்’ கதை. இந்த நாவலில் வரும் அகிலா எனும் அக்கா கேரக்டரை, ‘இந்தியன்’ படத்தில் வரும் கஸ்தூரியோடு அப்படியே பொருத்த முடிகிறது.

எனினும்-

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் ஒன்லைன் சத்தியமாக இதிலிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் நிச்சயமாக இந்த கதையை வாசித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

நாவலின் நடுவில் நாடகம் போடுவது பற்றி டிஸ்கஷன் செய்யும்போது வரும் ஒரு குட்டிக்கதை, அப்படியே ‘நீ வருவாய் என’ (99 தானே, இந்த நாவல் 95) படத்தின் ஒன்லைனராக இருப்பது இன்னுமொரு ஆச்சரியம்.

இதெல்லாம் யதேச்சையாகவும் நடந்திருக்கலாம். ஆனால் தோழர்களே, தமிழில் சமகால இலக்கியம் என்று நம்பப்படும் கதைகளை எல்லாம் சினிமாவாக்கினால் படுதோல்விதான். மாறாக இதுபோன்ற வெகுஜனக் கதைகளில் இருந்து எடுக்கப்படும் கரு, மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும். மேலே நான் ஒப்பிட்டிருக்கும் மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள் என்பதை கவனியுங்கள். இலக்கியம், சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறது?

நூல் : நிலவை முத்தமிடு
எழுதியவர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
பக்கங்கள் : 228
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்
விலை : ரூ.45

2 ஜூன், 2015

கொஞ்சம் மெய், நிறைய பொய்..

இந்தியா சுதந்திரம் வாங்கிய அதே ஆண்டில் அமெரிக்காவின் CBS ரேடியோவில் ஒலிபரப்பான candid microphoneதான் உலகின் முதல் ரியாலிட்டி கண்டெண்ட். அமெரிக்க குடிமகனான Allen funtதான் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.

Candid microphone என்கிற வானொலி நிகழ்ச்சி 1950களில் Candid camera என்கிற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ABC மற்றும் NBC தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. கேமிராவை மறைவான இட்த்தில் வைத்துவிட்டு சாதாரண மக்களின் அன்றாட சுவாரசியங்களைப் படம் பிடிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஒரு தொகுப்பாளர் களத்தில் புகுந்து விசித்திரமாக நடந்துக் கொள்வதும் அதைப் பார்க்கும் பொதுமக்களின் விசேஷ ரியாக்‌ஷன்களை படம் பிடிப்பதே நோக்கம். முழுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி இது.

அமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் வீதியில் போகிறவர்களிடம், “மணி என்ன?” என்று கேட்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் பொது மக்களின் வினோத முகபாவங்கள் மிகப் பிரபலம்.

1950களில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. 1960களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து நிகழ்ச்சியாக்கும் பைத்தியம் பிடித்தது. The American Family என்ற நிகழ்ச்சியை ஒரு தொடக்கம் எனலாம். 1970களில் காவல்துறையின் நடவடிக்கைகளை நோக்கி ரியாலிட்டி கேமரா திரும்பியது. அதுவரை நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்திய ரியாலிட்டி தயாரிப்பாளர்கள் கொலை – கொள்ளை – விசாரணை என இன்னொரு மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்கள். பல மணி நேரம் படம் பிடிப்பதை எடிட்டிங் செய்வதுதான் பெரிய தலைவலியாக இருந்தது. 1980களில் கண்டறியப்பட்ட புதிய படத்தொகுப்பு தொழில்நுட்பங்கள் இந்தப் பணியையும் எளிமையாக்கின.

1990களில்தான் ரியாலிட்டி வட்டத்திற்குள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. Pop idol என்ற talent reality நிகழ்ச்சி உருவாக்கிய பாட்டுப் போட்டி மேடையும் நாட்டாமை நடுவர்களும் ஆரவார பார்வையாளர்களும் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் வடிவமாகி விட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தயாரித்த Freemantle Media என்கிற தயாரிப்பு நிறுவனம், நரசிம்மராவின் புதிய பொருளாதார கொள்கையின் உதவியோடும் தனியார் தொலைக்காட்சிகளின் விஸ்வரூப வளர்ச்சியைப் பயன்படுத்தியும் 2004-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Pop Idol என்கிற தங்கள் நிகழ்ச்சியின் இந்தியப் பிரதியான Indian Idolஐ தயாரித்து அரங்கேற்றியது. தனி நிறுவனமாக இல்லாமல் பல துணை தயாரிப்பு நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்தது. தயாரிப்பு அவ்வப்போது கைமாறினாலும் Idol நிகழ்ச்சி வடிவத்தின் உரிமை அவர்களுடையதே. Indian Idol நிகழ்ச்சி வந்த அதே வழியில் India’s got talent நிகழ்ச்சியும் வந்தது. வட இந்திய ஊடகங்கள் உள்வாங்கிய வெளிநாட்டு நிகழ்ச்சி வடிவங்கள் விற்பனை மாறி ஒப்பனை மாறி சப்தஸ்வரங்கள், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, தமிழகத்தின் சேம்பியன் என்று தமிழ் தொலைக்காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது விக்கிப்பீடியா தரும் விவரங்கள் அல்ல. ஒரு தமிழ் நாவலின் கதைப்போக்கில் கிடைக்கக்கூடிய தகவல்கள்.
நாவல் என்பது, சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்களை உள்ளடக்கிய நீண்ட கதை வடிவம் என்கிற நீண்டகால தமிழ்நாவல் மரபு உடைந்துக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளமாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’யை பார்க்கலாம்.

இன்றைய தலைமுறைக்கு கதை கேட்பதை/வாசிப்பதை காட்டிலும், தகவல்களை பெறுவதில் ஆர்வம் அதிகம். மெகாசீரியல்களுக்கு மவுசு குறைந்து ரியாலிட்டி ஷோ-க்கள் தொலைக்காட்சிகளில் பெருகிவருவதை இதன் நீட்சியாக பார்க்கலாம். தகவல்களை தெரிந்துக் கொள்வது என்பது வெறுமனே பரிட்சைக்கு படிப்பதாக இல்லாமல், பொழுதுபோக்கே அதுதான் எனக்கூடிய infotainment சூழல் தொடங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாற்றம் இயல்பானதுதான்.

‘காட்சி ஊடகம் பற்றிய கதை விவாதம்’ என்று ‘மெய்நிகரி’, அதை வாசிக்கும் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

காட்சி ஊடகம் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி துறை குறித்த சித்தரிப்பு தமிழ் நாவல்களில் மிகக்குறைவு. சமீபத்தில் விநாயக முருகன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலில் ஒரு பகுதி காட்சி ஊடகத்தை பிரதானப்படுத்துகிறது. எனினும் அந்நாவலின் மையம் வேறு எனும்போது இப்பகுதி மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறது.

விநாயக முருகன் நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியவர் அல்ல என்பதால் தான் கேள்விப்பட்ட, வாசித்த, யூகித்த விஷயங்களை புனைவாக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் பின்னணி அரசியலை சாக்காக வைத்துக்கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தா வீடியோ விவகாரத்தை தன்னுடைய புனைவின் சட்டகங்களுக்குள் நுழைக்க முயன்றிருக்கிறார். அந்த வீடியோ ஏன் வெளிவந்திருக்கலாம் என்கிற தன்னுடைய யூகத்தை நாவலின் களத்துக்கு ஏற்புடையதாக மாற்ற முயன்றிருக்கிறார்.
‘மெய்நிகரி’ முற்றிலும் வேறான களத்தில் இயங்குகிறது. கபிலன் வைரமுத்துவுக்கே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவருக்கு இத்துறை குறித்த துல்லியமான சித்தரிப்புகளை உருவாக்க முடிகிறது. ‘இடியட் பாக்ஸ்’ எப்படி கோடிக்கணக்கானவர்களை இடியட்டுகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்கிற தேவரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் என்றுகூட சொல்லலாம். சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து சினிமா எடுக்கப்படுவதை எம்.ஜி.ஆர் அந்த காலத்தில் கடுமையாக எதிர்த்த சம்பவங்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

டெரன்ஸ் பால், மெய்நிகரியின் நாயகன். மாடப்புறா தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றியவன். டயரி எழுதுவதை போல தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் கொண்டவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எடுத்த புகைப்படங்கள், செல்போன் வீடியோக்களை எடிட் செய்து அடுக்குகிறான். இந்த படத்தின் பின்னணியாக தன்னுடைய voice over மூலம் வருணனை தருகிறான். டெரன்ஸ் பாலின் குரலாகவே ‘மெய்நிகரி’ வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாடப்புறா தொலைக்காட்சி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் பொறுப்புகளின் ஒரு பகுதி டெரன்ஸிடம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென்று ஒரு புதிய குழுவை டெரன்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வு நடத்தி ராகவன், பெனாசிர், மானசா, நிலாசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து தனக்கான குழுவை உருவாக்குகிறான்.

இந்த குழு புதிய ஷோவுக்கான ஐடியாக்களை உருவாக்குவதில் தொடங்கி, அது தொடர்பான நிர்வாகத்தின் சம்பிரதாயங்கள் முடிந்து, நிகழ்ச்சியை வடிவமைப்பது, பின்னணி பணிகள், படப்பிடிப்பு, எடிட்டிங் என்று ஒரு ரியாலிட்டி ஷோ எப்படி உருவாகிறது என்பதன் முழுமையான செய்முறையே மெய்நிகரி நாவல்.

இதற்கிடையே டெரன்ஸுக்கு, அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பெனாசிர் மீது ஏற்படும் காதல். ராகவனுக்கும், டெரன்ஸுக்கும் நடக்கும் சண்டை. குழுவிலேயே உள்கை ஒன்று செய்யும் துரோகம். பொதுமக்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டு பேசிக்கொள்ளும் தொலைக்காட்சித் துறை பாலியல் சுரண்டல்கள். நிறுவன உரிமையாளர்களுக்கு இடையேயான ஈகோ மோதல். அல்லக்கைகளின் ஆட்டம் என்று நாவலின் ஒவ்வொரு பக்கமும் கதையின் போக்கில் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போகிறது.

சர்வதேச அளவிலேயே படைப்பாளிகளுக்கும், மார்க்கெட்டிங் ஆட்களுக்குமான மோதல்தான் இன்றைய உலகின் அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர். எல்லா துறைகளிலும் கிரியேட்டிவ்வாக சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கும், கூவி கூவி சந்தையில் விற்பவர்களுக்கும் நடக்கும் சண்டை மீடியாவில் சற்றே அதிகம்.

நிகழ்ச்சியின் தலையெழுத்தை மட்டுமின்றி, அதை உருவாக்கிய கிரியேட்டர்களின் விதியையும் இன்று மார்க்கெட்டிங் தயவுதாட்சணியமின்றி தீர்மானிக்கும் போக்கினை தகுந்த சம்பவங்களின் துணையோடு மிக எளிமையாக முன்வைக்கிறார் கபிலன். Programs are effective support systems for the sponsor economy என்பதுதான் இன்று தொலைக்காட்சிகளை ஆளக்கூடிய கருத்தாக்கம் என்றால் படைப்பாளியின் இடம் இங்கே எதுவென்று நாமே புரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘டி.ஆர்.பி’ என்கிற சொல் அதன் அர்த்தம் புரிந்தோ, புரியாமலேயோ இன்று அனைவராலும் உச்சரிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் தொடர்பிலான TAM குறித்த விளக்கமும் மிக விரிவாக இந்நாவலில் வாசிக்க கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதற்கு தூர்தர்ஷன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அமைப்பே DART – Doordarshan Audience Research Team. முப்பத்தி மூன்று நகரங்கள் மட்டுமே அதன் இலக்கு. தொழில்நுட்பம் வளராத அந்த காலக்கட்டத்தில் மனிதர்களை மனிதர்களே சந்தித்து நேரடியாக பேசி ஒரு கணக்கீடு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1994ல் Indian National Television Audience Measurement என்கிற INTAM, 1997ஆம் ஆண்டு A.C.Nielsen துணையோடு உருவான TAM – என இரண்டு அமைப்புகள் TAM என்கிற பெயரிலேயே ஒருங்கிணைந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் தனிபெரும் தனியார் நிறுவனங்களாக வளர்ந்தது. இவர்கள் கணக்கீட்டுக்கு people meter என்கிற கருவியை பயன்படுத்தியே ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை கணக்கெடுக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும் முடிவை நம்பிதான் இந்தியாவில் தொலைக்காட்சி உலகமே இயங்குகிறது. தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தருபவர்களும் இவர்களது கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறார்கள். இது குறித்த முழுமையான வரலாற்றை இரண்டே பக்கங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளும் வசனங்களில் வாசகர்களுக்கு புரியவைக்கிறார் கபிலன்.

நாவலின் கடைசி ஒன்றரை பக்கம் பக்கா மங்காத்தா – இந்த ஒருவரி விமர்சனத்துக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் நீங்கள் நாவலை முழுக்க வாசித்துதான் ஆகவேண்டும்.
டிவி என்கிற துறை இன்று கனவுத்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறுமனே டிவி பார்த்து டிவியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் நம் இளைஞர்கள். எப்படியோ அடித்து பிடித்து வேலைக்கு சேர்ந்தபிறகுதான் நினைத்த மாதிரியாக இல்லையே என்று நொந்துப் போகிறார்கள். அம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு டிவி நிறுவனம் எப்படி செயல்படும் என்று பொறுமையாக தம்மும், டீயும் சாப்பிட்டபடியே கதையாக சொல்கிறார் கபிலன்.

இந்த நாவலுக்கு என்று எந்தவிதமான முஸ்தீபுகளும் செய்துக் கொள்ளாமல், நடையைப் பற்றியெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் freakyயான தமிழையே பயன்படுத்துகிறார்.
தமிழிலும் சேத்தன் பகத்துகள் சாத்தியமே என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்றை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’ அளிக்கிறது.



நூல் : மெய்நிகரி
எழுதியவர் : கபிலன் வைரமுத்து
பக்கங்கள் : 152
விலை : ரூ.125
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங்,
லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14
போன் : 044-42009603

குறிப்பு : இந்த நாவலுக்கென்றே ஒரு பிரத்யேக இணையத்தளத்தை கபிலன் உருவாக்கியிருக்கிறார். ஆர்வமிருப்பவர்கள் பார்க்கலாம் www.meinigari.com

(நன்றி : தமிழ் மின்னிதழ்)

30 மார்ச், 2015

சரோஜாதேவி - ராஜபோதை!

சென்னை புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது, மற்ற புத்தகங்களை எல்லாம் காட்சிக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். ‘சரோஜாதேவி’ புத்தகத்தை மட்டும் கண்ணுக்குத் தெரியாதபடி ‘சொருகி’ வைத்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகம், மஞ்சள் கலர் அட்டையில் பொம்மைப் படம் போட்டிருக்கும் என்றெல்லாம் அடையாளம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், என் தோழிதான் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். இது தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பொதுவான மனநிலையை வெளிச்சம் போட்டு இது காட்டுவதாகவே தோன்றியது.

பாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம். ‘முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து முயன்றுன்னை நோக்குகிறோம் காமா’ என்றெல்லாம் பாலுணர்வை அப்பட்டமான மொழியில் வெளிப்படுத்துகிற செழுமையான மரபில் வந்த நாம் எப்போது இந்த ‘இலைமறை காய்’ போக்கிற்குத் தாவினோம்? பாலியல் சார்ந்த சாதாரணமான விஷயத்தைக்கூட பேசவே தயங்குகிறோம். அஞ்சுகிறோம். வேறு வழியில்லாமல் முற்றிப் போன கட்டத்தில், டாக்டர் காமராஜ் வகையறாக்களிடம் மட்டும் பேசித் தொலைக்கிறோம். இந்தியாடுடே வருடா வருடம் ‘செக்ஸ் சிறப்பிதழ்’ கொண்டு வரும் போது வக்கிரம், ஆபாசம் என வசைக் கடிதங்கள் குவியும். ஆனால் அதேசமயம் உள்ளே பணிபுரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், ஒரு காப்பிகூட மிச்சமில்லாமல் அந்தச் சிறப்பிதழ் விற்றுத் தீர்கிற ரகசியம்.

“சலவைத் தொழிலாளியிடம் அகப்பட்ட வாழைக்கறை படிந்த வேட்டியைப் போல வெளுத்துவிடத் துடிக்கும் ரகசிய உள்மனம் தனக்கான பாலியல் வேட்கையை நுகர இணைய பால்வெளியில் சஞ்சாரிக்கும் பொழுதுகளில்...”இப்படி ஒரு இறுக்கமான நடையில் ஒருவேளை இந்தப் புத்தகத்தில் இந்த விஷயத்தை அணுகியிருந்தால், நூலக அந்தஸ்து கிடைத்திருக்குமோ என்னவோ? ஆனால் விஷயம் ஒருத்தருக்கும் புரிந்திருக்காது. இறுக்கமும் தயக்கமும் தட்டிப் போன இந்த விஷயத்தை கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாட்டமான மொழிநடையில் இந்தப் புத்தகத்தில் யுவகிருஷ்ணா அணுகியதால்தான், கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறுக்கம் தளர்ந்திருக்கிறது.

இத்தனை வருட தொலைக்காட்சி அனுபவத்தில் சொல்கிறேன். நேஹா ஆண்ட்டி, சபிதா அண்ணி, அக்கதைகளில் உலவும் ஆண்களெல்லாம் வெறும் கற்பனை பாத்திரங்கள் இல்லை. நம்மோடு நிஜ வாழ்க்கையில் உலவிக் கொண்டிருப்பவர்கள்தான். காதலில் ஏது நல்ல காதல், கள்ளக் காதல் என தமிழர்கள் கேட்க ஆரம்பித்து ஒரு ’மாமா’ங்க காலம் ஆகிவிட்டது. வயது வந்தவர்களுக்கு மட்டும் போன்ற கதைகளையும் எழுதிய கி.ராவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான கவனம் யுவகிருஷ்ணாவிற்கும் கிடைக்க வேண்டும். புனித பிம்பங்களோடு எத்தனை காலம்தான் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? சன்னிலியோனுக்கு இருக்கிற தைரியம் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ?

இணையத்தில் இதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அதைவிட முக்கியம் தைரியமாக நூலகத்தில் அதற்கு இடம் கொடுத்து உங்களது சிந்தனை உயரத்தை விசாலமாக்குங்கள். தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு வேண்டுகோள். உங்களது ‘தீவிரத்’தன்மையை சற்றே தளர்த்தி, உங்களது கதவுகளைத் திறந்து வைப்பீர். அக்னி வெப்பப் புழுக்கம் தாளவில்லை. இது போன்ற புதிய காற்று உள்ளே வரட்டும். வாசக எல்லைகள் விரிவடைய வேண்டிய தருணம் இது. இறுதியாய் படிப்பவர்களுக்கு. ஒரு குவார்ட்டர் பிராந்தி, ஒரு பொட்டுக் கடலை பாக்கெட், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு டம்ளர்... இவற்றிற்கு 152 ரூபாய் ஆகிறது. ‘சரோஜாதேவி’ புத்தகத்தின் விலை வெறும் நூறு ரூபாய்தான். ஒரு குவார்ட்டர் பிராந்தி தருவதை விட ராஜபோதை நிச்சயம்.

நன்றி : சரவணன் (பத்திரிகையாளர், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்)

16 மார்ச், 2015

கால் கிலோ காதல், அரை கிலோ கனவு!

ஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்?

அனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.

குணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின் காதலியை காதலிக்குமளவுக்கு நான் நாகரிகமற்றவன் இல்லை.

ஸ்ரீவித்யா – நோ சான்ஸ். வாழைக்காய் விஜய்யின் ஆளு.

எழிலரசி – வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். வெள்ளை என்றாலே அலர்ஜி.

சபிதா – மூன்றாவது படிக்கும்போது லவ் பண்ணிய பொண்ணு. நாலாவதிலேயே புட்டிக்கிச்சி.

கவிதா – பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுன்னு நெனைக்கிறேன். சபிதாவுக்கு முன்னாடி.

ஸ்ரீதேவி, கவுதமி, குஷ்பூ - இவர்களையெல்லாம் லவ் செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதா என்று குறிப்பாக நினைவில்லை.

கோவிலம்பாக்கம் குமுதா – யெஸ். இவளாகதான் இருக்கவேண்டும். கொஞ்சம் குள்ளச்சி. அதனால் என்ன. அப்போது நானும் கொஞ்சம் குள்ளம்தான்.

கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த பா.ராகவன்.. மன்னிக்கவும்.. பத்மநாபன் என்கிற குடுமிநாதன் வளர்மதியை லவ் செய்கிறான்.

நாவலின் முதல் சாப்டரே, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் வாலி எழுதியதாக டைட்டிலில் பெயர் போடப்பட்டு -ஆனால் உண்மையில் ஷங்கர் எழுதிய- பாடலின் சமாச்சாரம்தான். ‘எப்படி எப்படி? பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி?’

ஏற்கனவே வளர்மதி என்கிற குட்டச்சியை கிளாஸில் நான்கு பேர் லவ் செய்கிறார்கள். குடுமிநாதனுக்கு செம காம்பெடிஷன். போதாக்குறைக்கு அவள் வயசுக்கு வந்துவிட்டாள் என்கிற ப்ளாஷ் நியூஸ் வந்தபிறகு, மிச்ச சொச்சப் பயல்களுக்கும் அவள் மீது தெய்வீகக் காதல் வந்துத் தொலைக்கிறது.

சகப் போட்டியாளர்களை சமாளித்து, முப்பாட்டன் திருப்போரூர் முருகன் திருவருளால் வளர்மதியின் கடைக்கண் பார்வை, குடுமிநாதன் மீது விழுந்ததா என்பதே நாவல்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பள்ளிக்கூட காதல் படம் ஹிட் ஆகும். அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, காதல் என்று பெரிய பட்டியல். பா.ராகவன் எழுதியிருக்கும் ‘கால் கிலோ காதல், அரை கிலோ கனவு’ அந்த ஜானர். முன்னெப்போதோ கல்கியில் எழுதிய இந்த தொடர்கதையை சினிமாவுக்கு கொடுக்காமல், ஏன் நாவலாக இப்போது அச்சில் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. படமாக எடுத்தால் பட்டையைக் கிளப்பலாம்.

பத்மநாபன் என்கிற இளைஞனின் (!) ஓராண்டு வாழ்க்கைப் பயணம். படிக்கச் சொல்லி வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத ஆசிரியர்கள். மகன் உருப்படுவான் என்கிற நம்பிக்கையே இல்லாத தறுதலை அப்பா. பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டோமே என்பதற்காக கடனே என்று சோறு போட்டு வளர்க்கும் அம்மா. எங்கே இவனுக்கெல்லாம் லவ்வு செட் ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தில் அலையும் பொறாமைக்கார நண்பர்கள். குறிப்பாக பர்ஸ்ட் ரேங்க் பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட வாழத்தகுதியற்ற கொடூரமான உலகில், கண்ணுக்கு தெரிந்தமட்டும் பாலைவனமாய் நீண்டிருக்கும் துலாபார சோக வாழ்க்கையில் கானல்நீராய், பசுஞ்சோலையாய் வளர்மதி மட்டுமே.

கதை நடைபெறும் காலக்கட்டம் எண்பதுகளின் கரெக்ட்டான மத்தி. ஏனெனில் நாயகி வளர்மதி 1971ல் பிறந்தவள் என்கிற குறிப்பு கிடைக்கிறது. அவள் ஒன்பதாவது படிக்கிறாள் என்றால் 14 வயசு (வயசுக்கு வந்தது கொஞ்சம் லேட்டுதான்). எனவே, கதை நடக்கும் காலக்கட்டம் 1985 என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை வாசிக்கும்போது நாவல் கொஞ்சம் ‘அப்படி, இப்படி’ இருக்குமோவென்று உங்களுக்கு டவுட்டு வரலாம். பா.ராகவன் சுத்த சைவம். ஒரு இடத்தில் கூட அவரது பேனா வரம்பு மீறவில்லை. அதுவும் கல்கியில் தொடராக வந்த கதை. ஆனால் வாசிக்கும் வாசகரான நாம், ‘ப்ளெஷர் ஆஃப் டெக்ஸ்ட்’டுக்காக, ஆங்காங்கே லைட்டாக கூட்டிக் குறைத்து, ‘அப்படி, இப்படி’ கற்பனை செய்துக்கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புகளை கதையின் சம்பவங்கள் அனுமதிக்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘ராஜீவ்காந்தி சாலை’ (ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் ஓல்டு மகாபலிபுரம் ரோடு) எப்படியிருந்தது என்கிற வர்ணனை மிகத்துல்லியமாக இந்நாவலில் பதிந்திருக்கிறது. நாவலாசிரியர் வளர்ந்த பகுதி அது என்பதாலும் இருக்கலாம். புவியியல்ரீதியான வர்ணனை மட்டுமின்றி, அத்தலைமுறையின் கலாச்சாரம், மரபு, இத்யாதி லொட்டு லொசுக்குகளை எல்லாம் மலரும் நினைவுகளாக ரீவைண்ட் செய்து ஃபிலிம் ஓட்டுகிறார் பாரா. இந்த கதை குடுமிநாதனுடையது அல்ல. நம் அனைவருடையதும் கூட. மாங்காய் அடிப்பது, கிணற்றில் குதிப்பது, சினிமா, கிரிக்கெட் என்று அக்கால இளைய தலைமுறையினரின் அசலான வாழ்க்கைப் பதிவு. வாட்ஸப் யூத்துகள் தங்களுடைய சித்தப்பாக்களும், மாமாக்களும் எப்படிப்பட்ட உயர்வான இலட்சிய வாழ்வினை வாழ்ந்தார்கள் என்பதை அறிய அரிய வாய்ப்பு.

சிறுவனை நாயகனாகவும், சிறுமியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் இதை சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமா என்கிற குழப்பமும் இடையிடையே வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்து மயிரும் வேண்டாம் என்று அட்டையிலேயே முத்திரை போட்டு முகத்தில் அறைந்திருக்கிறார் பா.ராகவன். ‘கத புஸ்தகம்’ என்று சிகப்பு முத்திரையிட்டு கழுதைப் படம் போட்ட முகப்பு அட்டை. கமர்சியல் ரைட்டர்களின் வழக்கமான கொணஷ்டை.

உண்மையை சொல்லப் போனால் தீவிர இலக்கியம் என்று சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீவிர த்ராபைகளை விடவும், அக்கால இளைஞர்களின் பிரச்சினைகளை தீவிரமாகவே அலசியிருக்கக்கூடிய நூல் இது. ஆனால், இதை எழுதியவர் ‘இதெல்லாம் இலக்கியமா?’ என்கிற பாணியில் அசால்டாக இருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதினால் அது நிச்சயமாக இலக்கியமல்ல என்று அதை எழுதக்கூடிய எழுத்தாளர்களே நம்பக்கூடிய அளவுக்கு தமிழிலக்கியத்தின் நிலைமை இப்படி அபாயகரமாக போகுமென்று டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வாசிப்பும் இன்பம் தரும் என்பதற்கு இந்நாவல் நல்ல எடுத்துக்காட்டு. இது த்ரில்லர் அல்ல. ஆனால், த்ரில்லருக்கு இணையான வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கிறது. பத்திக்கு பத்தி சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை. வாசிப்பின் வழியாக ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராக இருப்பவர்கள் ‘மிஸ்’ பண்ணாதீங்க.
நூல் : கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.80
வெளியீடு : மதி நிலையம்
எண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம்,
சென்னை – 600 086.
போன் : 28111506
மின்னஞ்சல் : mathinilayambook@gmail.com

9 பிப்ரவரி, 2015

கறுப்பர் நகரம்

‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.

இந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்சிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.

கறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.

இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

எழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.

பெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.

அக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செங்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.

கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.

தான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க?” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.

மனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.

வரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.

வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.

இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.

நூல் : கறுப்பர் நகரம்

எழுதியவர் : கரன் கார்க்கி

பக்கங்கள் : 352

விலை : ரூ.195

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
போன் : 24332424, 24332924, 24339024

12 ஜனவரி, 2015

தமிழ்மகன் : இரு நூல்கள்

‘பத்திரிகையாளர்களுக்கு இலக்கியம் எழுதவராது’ – பொதுவாக தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கும் மூடநம்பிக்கை இது. நவீன தமிழிலக்கியத்தின் பிதாமகனான பாரதியாரே கூட பத்திரிகையாளர்தான். கடந்த நூறாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் கணிசமாக பங்காற்றியிருக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியல் மிகப்பெரியது.

வெகுஜனப் பத்திரிகைகள் என்றாலே ஒருமாதிரி ஒவ்வாமையோடு அணுகிவந்த இலக்கியவாதிகள் சமீபகாலமாக இப்பத்திரிகைகளில் பணியாற்ற முட்டி மோதிக்கொண்டு வருகிறார்கள் என்பதே ஆரோக்கியமான மாற்றம்தான்.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் தன்னுடைய இருப்பை உறுதியாகவே பதிவு செய்தாலும், இலக்கியவாதிகள் முடிந்தவரை அவரை இருட்டடிப்பு செய்வது வாடிக்கை. அம்மாதிரி தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப்படுபவர்களில் முக்கியமானவர் தமிழ்மகன்.

இவரது ‘வெட்டுப்புலி’ நாவலை வாசகர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரித்தார்களோ, இலக்கியவாதிகள் அவ்வளவுக்கு அவ்வளவு பதட்டம் அடைந்தார்கள். தனிப்பட்ட சந்திப்புகளில் ‘வெட்டுப்புலி’ குறித்து உயர்வாக பேசிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட, பொதுவில் அதுபற்றி ஒரு அபிப்ராயமும் தெரிவிக்காமல் தங்கள் நாகரிகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ‘நாவல்’ எழுதிவரும் தமிழ்மகன், தொழில்நிமித்தமாக வெகுஜன பத்திரிகைகளில் பணியாற்றுகிறார். சத்தமில்லாமல் தொடர்ச்சியாக இலக்கியம் படைத்து வருகிறார்.
அவருடைய முதல் நாவலான ‘மானுடப் பண்ணை’யே இதற்கு சாட்சி. தன்னுடைய 21வது வயதில் 1984ல் எழுதத் தொடங்கிய இந்நாவலை 25வது வயதில் 1989ல் முடித்திருக்கிறார். 1994ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. 1996ல் தமிழக அரசு விருதும் பெற்றிருக்கிறது.

எமர்ஜென்ஸிக்கு பிறகு – உலகமயமாக்கலுக்கு முன்பு என்று யாராலும் அவ்வளவாக விவாதிக்கப்படாத மிக முக்கியமான அரசியல் சமூகச் சூழலை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது. குறிப்பாக இது பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சி தொடங்கிய காலம்.

நாவலின் நாயகன் பாலிடெக்னிக் முடித்த சிவில் என்ஜினியர். இன்று புற்றீசல்களாக பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட காலம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவனுடைய சில நாட்களின் டயரிக்குறிப்பாக ‘மானுடப்பண்ணை’ விளங்குகிறது. திராவிட இனமான உணர்வு கொண்ட அவன் எதிர்கொள்ள நேரிடும் மார்க்சிய விவாதங்களோடு, தன்னுடைய கொள்கை சார்ந்த புரிதல்களை ஒப்பிட்டுக் கொள்கிறான். கொள்கைகளும், சித்தாந்தங்களும் லவுகீக வாழ்க்கைக்கு எவ்வகையிலும் உதவாத கையறுநிலையை இறுதியில் அடைகிறான். சாதியம் தமிழ் வாழ்க்கையில் எத்தகைய அதிகாரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறது என்பதை இலைமறை காய்மறையாய் சம்பவங்களின் ஊடாக நுழைத்திருக்கிறார் தமிழ்மகன்.

2009க்குப் பிறகு வானத்தில் இருந்து குதித்தவர்கள் திராவிடத்துக்கு ஏதேதோ அருஞ்சொற்பொருள் அகராதி தயாரித்து உளறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மண் எப்படி இருந்தது, திராவிடம் இங்கே என்ன சாதித்துக் கிழித்தது என்பதை அறிய ஆசை இருப்பவர்கள் ‘மானுடப்பண்ணை’ வாசிக்கலாம்.
‘ஆபரேஷன் நோவா’வுக்கு அறிமுகம் தேவையா?

‘ஆனந்தவிகடன்’ இதழில் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் வாசித்து சிலிர்த்த தொடர்.

ஒரே நூலில் அவதார், இண்டர்ஸ்டெல்லார் இரு படங்களையும் பார்த்த அசாத்திய அனுபவத்தை தருகிறார் தமிழ்மகன்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அல்ல. ஒவ்வொரு வரியிலுமே ‘ஆச்சரியங்கள்’ காத்திருக்கின்றன.

“சுஜாதாவுக்கு அப்புறம் யாரு சார் இண்டரெஸ்ட்டா எழுதறா?” என்று சலித்துக் கொள்பவருக்கு இந்த நாவல்தான் பதில்.

ஓர் எழுத்தாளனின் கற்பனை எந்தளவுக்கு உச்சத்தை எட்டமுடியும் என்பதற்கு ‘ஆபரேஷன் நோவா’வை உதாரணமாக காட்டலாம்.

* * * * * * * * * *

திராவிடனுக்கு இலக்கியமும் தெரியும், அதன் நெளிவுசுளிவுகளும் அத்துப்படி என்பதை பத்தாயிரத்தி ஒன்றாவது மனிதராக திரும்ப மீண்டும் நிரூபித்திருக்கும் ‘மக்கள் எழுத்தாளர்’ அண்ணன் தமிழ்மகனுக்கு வாழ்த்துகள்!

* * * * * * * * * *

இரு நூல்களையுமே உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மானுடப்பண்ணை : விலை ரூ.130

ஆபரேஷன் நோவா : விலை ரூ.150

10 நவம்பர், 2014

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நவம்பர் 8, 2014 அன்று சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்த, தாமிராவின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசியதின் வரிவடிவம் :

எல்லாருக்கும் வணக்கம்.

பேச்சுன்னா எனக்கு கலைஞரைதான் பிடிக்கும். மனசுலே நினைக்கிற வேகத்துலே மைக் முன்னாடி அவராலே பேசமுடியும். எந்த நெருக்கடியிலும் கச்சிதமா எடிட் பண்ணிப் பேசுவாரு. தான் உச்சரிக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன விளைவு ஏற்படும்னு அவராலே ஜோசியம் பார்த்துட்டு பேசமுடியும். ஆனா நான் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவோட ஜெனரேஷன். திட்டமிடாம பேசினா எதையாவது உளறிக் கொட்டிடுவோமோன்னு பயம். அதனாலேதான் முன்னாடியே எழுதிவெச்சிக்கிட்டு பார்த்து பேசுறேன். மன்னிக்கவும்.

நாலஞ்சி வருஷம் முன்னாடி இருக்கும். கற்பு பத்தி குஷ்பூ தைரியமா பேசியிருந்த டைம் அது. வழக்கம்போல தமிழ்நாடே கொந்தளிச்சிடிச்சி. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே கற்போடு வாழ்ந்த தமிழரின் பெருமையை ஒரு வடக்கத்திப் பொண்ணு இப்படி கேவலப்படுத்தினா, புலியை முறத்தாலே விரட்டின இனம் சும்மா இருக்குமா?

அந்த டயமில் ஒரு படம் வந்தது. அதிலே ஒரு குட்டிப் பாப்பாவோட பேரு குஷ்பூ.

“குஷ்பூ நீ பேசாதே!”

“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”

“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”

அட. இப்படியெல்லாம் கூட சினிமாவில் சமூக அரசியலை பேசலாமான்னு ஆச்சரியம்.

நானும் தமிழன்தான். இருந்தாலும் இந்த தமிழ் அடையாளத்தை வெச்சிக்கிட்டு ஒரு நூறு வருஷமா நாம பண்ணுற அலம்பல் நமக்கே புரியுது. அதை தைரியமா ஒத்துக்கிட்டவர் என்கிற முறையில் தாமிராவை அப்போதான் எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. அதுவரை அவரோட கதை சிலதை ஆனந்தவிகடனில் படிச்ச நினைவு. ஆனா, அவரு பேரு ரொம்ப ஸ்ட்ராங்கால்லாம் ரெஜிஸ்டர் ஆகலை. ‘ரெட்டச்சுழி’ படம் வந்தப்போ, அதை ஆதரிச்சி ரொம்ப பாசிட்டிவ்வா இண்டர்நெட்டுலே எழுதினது அனேகமா நான் மட்டும்தான்னு நெனைக்கிறேன்.

லேயர் லேயரா ரெட்டச்சுழியிலே தாமிரா வெச்சிருந்த உள்குத்துகள் வழக்கம்போல தமிழர்களுக்கு புரியலைன்னு தோணுது. அவங்களுக்கு டைரக்டா ‘பஞ்ச் டயலாக்’ சொல்லி, வயிறு நிறைய நாலு இட்லி சாப்பிட்டுட்டு எக்ஸ்ட்ராவது அஞ்சாவது இட்லி ஆர்டர் பண்ணுறவன் பூர்ஷ்வான்னு பப்பரப்பான்னு பேசுனாதான் புரியும்.

“அவுரு கட்சி ஆபிசுக்கு போயே பத்து வருஷம் ஆச்சி. அவராண்டே வந்து ராட்டையை காட்டிக்கிட்டு”ன்னுலாம் டயலாக் வச்சா அது எவ்ளோ பெரிய sattire. அதிர்ஷ்டவசமா இன்னிக்குவரைக்கும் அது காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. புதுசா வந்திருக்கிற தமிழ்மாநில காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. நல்லவேளை. தாமிரா தப்பிச்சார். இல்லேன்னா வேட்டி கிழிஞ்சிருக்கும்.

அண்ணன் தாமிராவோட எனக்கு பெருசா பழக்கவழக்கம் எதுவுமில்லை. ஓரிரு முறை அகஸ்மாத்தா பாத்துக்கிட்டப்போ கூட லேசா புன்னகை பண்ணியிருக்கேன். அவ்ளோதான். எனவே அப்போ ரெட்டைச்சுழியை பாசிட்டிவ்வா எழுதினதுக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லைங்கிறதை இப்போ சொல்லிக்கறேன். அப்புறம் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்கிற இந்த சிறுகதை தொகுப்பை பத்தியும் பாசிட்டிவ்வாதான் பேசப்போறேன். ஏதாவது தேடிக்கண்டுபிடிச்சி நெகட்டிவ்வா சொன்னா மட்டும்தான் அது விமர்சனம்னா, அப்படியொரு கலையே நமக்கு தேவையில்லை.

தாமிராவோட சில கதைகளை பத்திரிகைகளில் படிச்சப்பவும் சரி. ரெட்டச்சுழி படம் பார்த்தப்பவும் சரி. அவரோட அரசியல் என்னன்னு ரொம்ப சப்டிலா காமிக்கிறார். தமிழ் ஐடெண்டிட்டி மேலே எல்லாம் அவருக்கு பேரன்பு இருக்கு. ஆனா, ‘தமிழ், தமிழன்’னு சொல்லி கும்மி அடிச்சிக்கிட்டு மொழியை, இனத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்துறவங்க மேலே பெருங்கோபம் இருக்கு. இது நானா அவரைப்பத்தி guess பண்ணி வெச்சிருந்த இமேஜ்.

இந்த தொகுப்போட முன்னுரையை படிக்கறப்போ, அது கரெக்ட்டுதான்னு தோணுது.

பொதுவா எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அனேகமா அது மூடநம்பிக்கையா கூட இருக்கலாம். அதாவது படைப்பாளியோட படைப்புலே அவங்களோட பணிசார்ந்த தாக்கம் கண்டிப்பா இருக்குன்னு நம்பறேன்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா, சுந்தர ராமசாமியை படிச்சோம்னா அவ்வளவு பர்ஃபெக்ட்டா வார்த்தைகள் கட் பண்ணியிருக்கும். ஒவ்வொரு sentenceலேயும் எக்ஸ்ட்ராவாவும் இருக்காது. கம்மியாவும் இருக்காது. துணிக்கடையிலே ரெண்டு மீட்டர் துணி கேட்டோம்னா, ஒரு இஞ்ச் அப்படியும், ஒரு இஞ்ச் இப்படியுமா இல்லாமே ரொம்ப நறுக்கா வெட்டி கொடுப்பாங்க இல்லையா? அந்த கறாரான அளவீடு அவரோட எழுத்துகளில் இருக்கும்.

பத்திரிகையிலே வேலை செய்யுறவங்க கதை எழுதினாங்கன்னா அதுலே ரிப்போர்ட்டிங் வாசனை நிச்சயமா அடிக்கும். தினத்தந்தியிலே வேலை பார்க்குறவங்க எழுதுறப்போ ‘சதக், சதக்’, ‘கதற கதற’ ஆட்டோமேடிக்கா வந்துடும்னு எனக்கு தோணும்.

இதை கிண்டலுக்காக எல்லாம் சொல்லலை. நாம புழுங்கற மனுஷ்யங்களோட / ஏரியாவோட தாக்கம் நம்மோட கனவுகளிலேயே வர்றப்போ, கதைகளில் வர்றது ஆச்சரியமில்லை இல்லையா. ஒருவகையிலே கதைகளும் அந்த எழுத்தாளனோட கனவுகள்தானே?

படைப்பை பணிசார்ந்த அம்சம் தாக்கப்படுத்துது என்பதாலேதான் சமகால நவீன, பின்நவீனத்துவ தமிழிலக்கியத்துக்கு ஒரு குமாஸ்தா தன்மை இருக்குன்னு நெனைக்கிறேன்.

இதுக்கெல்லாம் புள்ளிவிவரம் எதுவும் எங்கிட்டே இல்லை. இது நானே உட்கார்ந்து சொந்தமா ரூம் போட்டு யோசிச்சப்போ தோணுச்சி. ஒருவேளை இதை யாராவது இண்டெக்ஸ் போட்டு, ஆராய்ச்சி பண்ணினா அனேகமா அவங்களுக்கு டாக்டர் பட்டம் கூட ஏதாவது பல்கலைக்கழகத்தாலே வழங்கப்படலாம்.

ஓக்கே. மேட்டருக்கு வர்றேன்.

தாமிராவோட கதைகளில் அவரோட பணியான சினிமா நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதை சொல்லதான் இப்படி காதை சுத்தி மூக்கை தொட்டிருக்கேன்.

ஒவ்வொரு பாராவும் ஒரு ஷாட்டா இருக்கு.

ஒவ்வொரு கதையும் ரெண்டு இல்லைன்னா மூணு சீன்.

கதைகளைப் படிக்கிறப்போ எனக்கு ரீரெக்கார்டிங் கூட கேட்குது. கன்ஃபார்மா மியூசிக் இளையராஜாதான். டவுட்டே இல்லை.

இடையிடையிலே பொருத்தமான இடங்களில் பாட்டு கூட போடுறாரு.

‘அமிர்தவர்ஷினி’ கதையை படிக்கிறப்பவே மழை வந்து நாம நனைஞ்சுட்ட ஃபீலிங்.

அதிலும் கேரக்டர் இண்ட்ரொடக்‌ஷனெல்லாம் பக்கா சினிமா.

‘அடிப்படையில் குமார் ஒரு நாத்திகர். ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடிகொண்டிருக்கும்’னு சொல்றப்பவே இந்த கேரக்டர் மணிவண்ணனுக்குன்னு தோண ஆரம்பிச்சிடுது.

சில கதைகளில் தாமிராவோட உருவகம் அநியாயத்துக்கு மிரட்டுது.

“யூனிஃபார்மை போட்டுக்கிட்டு ஒரு கல்லறையிலேருந்து இன்னொரு கல்லறைக்கு என்னாமா ஓடுதுங்க”ன்னு சொல்றப்போ பக்குன்னு இருக்கு. திருநெல்வேலி சுடலைக்கு நகரம் மொத்தமாவே நரகம்தான். கான்க்ரீட் வீட்டை கல்லறைன்னு சொல்றான். ஸ்கூலும் கான்க்ரீட்தானே. அதுவும் இன்னொரு கல்லறை. “வாக்கரிசையை கூட இனிமே இறக்குமதிதாண்டா பண்ணனும்னு” அவன் சொல்றப்போ நெஜமாவே நாமள்லாம் சுடுகாட்டுலே அலையற ஆவிங்களோன்னு டவுட்டு வருது.

சாட்டிங், பேஸ்புக்கு, வாட்ஸப்புன்னு மாறிட்ட நவீன உலகத்துலே நுணுக்கமான மனித உறவுகளோட பொசிஸன் என்னன்னு ‘மியாவ்… மனுஷி’ங்கிற கதையிலே ஆராயறாரு. அந்த கதையிலே இண்டர்நெட்டுக்கு தாமிரா கொடுத்திருக்கும் தமிழாக்கம் அட்டகாசம். ‘வலைவனம்’. கதை இப்படி முடியுது… “வலைவனங்களெங்கும் ஏதோ ஒரு பூனை மியாவ் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது”. நாமல்லாம் ரோபோவா மாறுகிற வரைக்கும் நம்மோட ஆதாரமான ஆதிகுணங்களை இழந்துட மாட்டோம்னு இந்த கதையோட மெசேஜை எடுத்துக்கிட்டேன்.

எப்பவும் தற்கொலைக்கு முயற்சிக்கிற தட்சணோட முயற்சிகள் ஊத்திக்குது. இருபத்தஞ்சி வாட்டிக்கும் மேலா அவனுக்கு மரணம் கண்ணாமூச்சி காமிக்குது. கடைசியிலே ஒருத்தன் அவங்கிட்டே வந்து புலம்பறான். “என்னை மன்னிச்சிடுங்க. உங்க கிட்டே தோத்துட்டேன். வெளியே சொல்லிடாதீங்க. மானம் போயிடும்”னு அழுவறான். அவன் தான் மரணம். சடார்னு சுஜாதா நினைவுக்கு வந்தாரு. ஒருமாதிரி குறுகுறுப்புலே மறுபடியும் கதையை முதல்லேருந்து படிச்சிப் பார்த்தோம்னா, கிறிஸ்டோபர் நோலன் லெவல் கிளாசிக். கதையோட பின்னிணைப்பா தாமிரா எழுதியிருக்கிற மரணசாசன கவிதை தீபாவளிக்கு டபுள் போனஸ் கிடைச்சமாதிரி இருக்கு.

தாமிராவோட உலகப் புகழ்பெற்ற கதை ‘ரஜினி ரசிகன்’. ரொம்ப நேரிடையான அட்டாக். பாப்புலர் லேங்குவேஜ்லே ஒரு சொசைட்டியோட ஒட்டுமொத்த ஆன்மாவை அம்பலப்படுத்துற கதை. குறைந்தபட்சம் ஒரு கோடி காமுவாவது தமிழ்நாட்டில் இருக்காங்கன்னு தோணுது. நம்பளைப் பத்தி நம்பளைவிட யாருக்கு ரொம்ப நல்லா தெரியும். நாம பொய் பேசுவோம். நாம பொறாமைப் படுவோம். நாம கோள் மூட்டுவோம். நமக்கு பர்சனலா நிறைய வீக்னஸ் இருக்கு. இதெல்லாம் மத்தவங்களுக்கு தெரியாது. நமக்கு மட்டும்தான் தெரியும்னு நெனைச்சிப்போம். ஆனா, “தம்பி. இதெல்லாம்தான் உன்னோட கேரக்டர்”ன்னு ஒருத்தரு புட்டுப்புட்டு வெச்சா எவ்ளோ கோவம் வரும். இந்த கதையை படிக்கிறப்போ அப்படிதான் எல்லாருக்கும் கோவம் வரணும். எனக்கு வரலை. நல்லவேளையா நான் கமல் ரசிகன். கமலைப் பத்தி அண்ணன் ஏதாவது எழுதினாருன்னாதான் டென்ஷன் ஆவேன்.

பொதுவா இதுமாதிரி சினிமாப் பைத்தியங்களை பத்தி வெளியிலேருந்து நிறைய பேர் விமர்சிச்சிருக்காங்க. குறிப்பா பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும். ஆனா ஒரு சினிமாக்காரரே ரொம்ப தெகிரியமா தன்னோட துறையின் சூப்பர்ஸ்டாரை, பலமான ஆதாரங்களை வெச்சிக்கிட்டு அம்பலப்படுத்துறது ரொம்ப துணிச்சலான முயற்சி. ரஜினி கிட்டே கால்ஷீட் வாங்கி, படமெடுக்கிற எண்ணமே அண்ணனுக்கு இல்லைன்னு தோணுது.

எல்லாத்தையும் விட தொகுப்போட க்ளைமேக்ஸ் கொடுக்குற அற்புத அனுபவம்தான் இந்த புத்தகத்தை தலைமேலே தூக்கிவெச்சி என்னை கொண்டாட சொல்லுது. எனக்கு வைரமுத்துவை ரொம்ப பிடிக்கும். இளையராஜாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அனேகமா காது கேட்குற தமிழனில் தொண்ணூறு சதவிகிதம் பேருக்காவது இவங்களை சேர்த்துவெச்சி பிடிக்கும். அவங்க சேர்ந்திருந்த ஆறேழு வருஷம் தமிழ் திரையிசையின் பொற்காலம் என்பதை யாரும் மறுத்துட முடியாது. இந்த பிரிவுக்கு என்ன காரணம்னு ஒவ்வொருத்தனுக்கும் இருவத்தஞ்சி வருஷமா மண்டை காய்ஞ்சிக்கிட்டிருக்கு. தமிழனோட இந்த உணர்வை சைக்காலஜிக்கலா அணுகற கதை அது.

ஒட்டுமொத்தமா இந்த தொகுப்பை பத்தி சொல்லணும்னா, பதினைஞ்சி படத்தை அடுத்தடுத்து பார்த்த இனிமையான அனுபவத்தை எனக்கு கொடுக்குது. பிழியப் பிழிய டிராமா பண்ணவேண்டிய விஷயங்களைகூட ‘லைட்டர் வெர்ஷனில்’ கொடுக்கிறாரு. சமகால அரசியல் சமூக அங்கதம் அங்கங்கே அழகா விரவியிருக்கு. குறிப்பா கடவுள், மரணம்னு விடை தெரியாத விஷயங்களுக்கு… அறிவியலால் ஒப்புக்கொள்ளப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாதது பத்தின அலசல் அடிக்கடி வருது.

தான் எழுதுறது இலக்கியங்கிற கான்சியஸ் எல்லாம் இல்லாமே இயல்பான வெளிப்பாடா எழுதியிருக்கிறாரு. ஒரு கதை இலக்கியம்னு ஒப்புக்கப்படணும்னா அதுக்கு நிறைய சங்கேதவார்த்தைகளை அங்கங்கே மானே, தேனேன்னு தூவணும்னாதான் இப்போ ஒத்துக்கிறாங்க. அதிலும் கதையை படிச்சதுமே வாசகனுக்கு புரிஞ்சிடக் கூடாதுன்னு எழுத்தாளர்கள் ரொம்ப தீவிரமா இருக்காங்க. சில கதைகளை படிக்கிறப்போ இந்த கதை எழுதினவருக்கே புரியுமான்னுகூட எனக்கு அப்பப்போ சந்தேகம் வரும். அந்த மாதிரி பாவனைகள் எதுவுமே இல்லாம நேரடியாக வாசகனோட மானசீகமா உரையாடுது தாமிராவோட எழுத்து.

லேங்குவேஜோட கொஞ்சம் இண்டெலெக்ச்சுவல் ஃபார்ம் - ‘மொழியின் அறிவுப்பூர்வமான வெளிப்பாடு’தான் இலக்கியம்னு நம்பறேன். அந்த வகையில் தாமிராவோட இந்தத் தொகுப்பு இப்போதைய சூழலுக்கு அவசியமான இலக்கியம் என்கிற எண்ணம் எனக்கிருக்கு. பரவலாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் என்கிற அபிப்ராயம் உருவாகியிருக்கு. முக்கியமா தாமிரா இனி எழுதற கதைகளையும் மோசமா அவராலே எழுதவே முடியாதுங்கிற ஸ்ட்ராங் ஃபீலிங் வந்திருக்கு.

இந்த கதைகளில் அவருக்கு கிடைச்சிருக்கிற ப்ளாக்பஸ்டர்ஹிட் விரைவில் சினிமாவிலும் கிடைக்கணும்னு, அவரோட முதல் படத்தை இன்னமும் நேசிக்கிற தரைடிக்கெட் ரசிகனாக வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
நூல் : தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்
ஆசிரியர் : தாமிரா
விலை : ரூ. 100
வெளியீடு : நாளந்தா

5 நவம்பர், 2014

காகிதப்படகில் சாகசப்பயணம் : நூல் வெளியீட்டு விழா உரை!

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுபவர்கள் (அதாவது எழுதுபவர்கள்), லைக் போடப்போகிறவர்கள், கமெண்ட் போடப்போகிறவர்கள், நிஜமாகவே வாசிக்கப் போகிறவர்கள், பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என் சிற்றுரையை தொடங்குகிறேன்.
நாளைக்கு சச்சின் புக் ரிலீஸ்.

இன்றைக்கே கருணாகரன் புக் ரிலீஸ்.

(விசில் சத்தம்)

சச்சின் கிரிக்கெட்டுக்கு வந்த அதே காலக்கட்டத்தில்தான் கருணாகரனும் பத்திரிகையுலகத்துக்கு வருகிறார். பேட்டை பிடித்தவனுக்கு உடல் ஒத்துழைப்பதை நிறுத்தினால் ரிடையர் ஆகிவிடலாம். பேனாவைப் பிடித்தவன் இதயம் துடிப்பதை நிறுத்துவதுவரை நாட் அவுட் பே(இங்கே ‘ட்’ போடணுமா ‘ன்’ போடணுமா)ஸ்மேனாக முடிவேயில்லாத டெஸ்ட்டில் விளையாடித்தான் ஆகவேண்டும். எல்லாருக்கும் கேரியர் என்பது 56, 58, 60 என்கிற வயதுகளில் முடிந்துவிடும். பேனா பிடித்தவன் மூச்சை விடும்போதுதான் அவனுடைய கேரியர் முடிவுக்கு வரும் என்பது சாபக்கேடு அல்லது வரம். இதுநாள் வரையிலான கால்நூற்றாண்டு கேரியரை பெரிய வம்பு, தும்பு இல்லாமல் முடித்த கருணாகரன் சாருக்கு முதலில் வாழ்த்துகள்.

உலக பதிப்புலக வரலாற்றிலேயே முதன்முறையாக இணையத்திலேயே வெளியீட்டுவிழா காணும் நூல் ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ என்றுதான் நினைக்கிறேன். இந்த வெளியீட்டு விழாவில் பேச (அதாவது எழுத) எனக்கு அருகதை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில் இப்போது உங்கள் கையில் தவழும் புத்தகத்தை வரிவரியாகதான் நீங்கள் அனைவரும் படிக்கிறீர்கள். இந்த நூலில் இருக்கும் மொத்த வார்த்தைகளையும் (இந்த நூலைவிட ஐந்து மடங்கு கூடுதலான டெக்ஸ்ட்டையும்) நூலாசிரியரின் வாய்வழியாகவே கடந்த ஐந்தாண்டுகளாக நேரிடையாக கேட்டிருப்பவன் என்கிற தகுதி எனக்கு இருக்கிறது.

நவம்பர் தொடங்கினாலே இப்படிதான் உற்சாகமடைந்துவிடுவேன். கலைஞருக்கு பிறகு அதிகம் மதிக்கும் ஆளுமையான கமலஹாசனின் பிறந்தநாள் வருகிறது என்பதால். எனவே கமல் மாதிரி கொஞ்சம் அப்படி, இப்படி சுற்றி உளறிதான் இந்த வெளியீட்டு விழாவில் focus இல்லாமல் பேசி (அதாவது எழுதி) சமாளிக்க இருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு வாசிக்கவும்.

ஒரு சீனியர் தன்னுடைய ஜூனியருக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவத்தை எனக்கு கருணாகரன் சார் கொடுத்திருக்கிறார், அவருடைய புத்தகத்தை வாழ்த்திப்பேச அழைத்ததின் மூலம். இந்த கவுரவம் என்கிற சொல் பிரபஞ்சனை அடிக்கடி புரட்டுவதால் வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘நல்லதொரு காலைப்பொழுதை காஃபி குடித்துதான் கவுரவப்படுத்தமுடியும்’ என்று கவித்தெறிப்போடு எங்கோ அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ‘லாங் சர்வீஸ்’ செய்த ஊழியர்களை நிறுவனங்கள் கவுரவப்படுத்தும். மற்ற தொழில்களுக்கு சரி. பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. நம் மக்களைப் பொறுத்தவரை தினமும் காலையில் அவர்களுக்கு பேப்பர் போடும் பையனும் ஒன்றுதான். அந்த பேப்பரில் எழுதியிருப்பவனும் ஒன்றுதான். இதற்காக பேப்பர் போடும் பையனை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. அவன்தான் ஒவ்வொரு எழுத்தையும் எண்ட் பாய்ண்டுக்கு கொண்டுச்சென்று கவுரவப்படுத்துபவன்.

ஓக்கே. எங்கே விட்டேன். பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே பத்திரிகையாளன் தன்னைத்தானே கவுரவப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. கருணாகரன் சார், அதைத்தான் செய்திருக்கிறார். கடந்துபோன தன்னுடைய இருபத்தைந்து ஆண்டுகால சொந்தவாழ்க்கையின் பெரும்பகுதியை பத்திரிகைப்பணிகள் எப்படியெல்லாம் பறித்துக் கொண்டது என்பதை ஏகப்பட்ட முறை, பல சம்பவங்களை சொல்லி சொல்லியிருக்கிறார். எல்லாருமே அவரவர் பணிரீதியான அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்றாலும், இத்துறை பலி கேட்கும் விஷயங்கள் கொஞ்சம் கொடூரமானவை. உண்மையில் இந்த நூலில் இந்த விஷயத்தை அவர் லேசாகதான் கோடிட்டுக் காட்டியிருக்கிறாரே தவிர, முழுக்க சொல்லவில்லை. சொல்லவும் விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.

நாற்பதை எட்டியவர்களுக்கு சொல்ல நிறைய இருக்கிறது. இருபதை தாண்டியவர்களுக்கு கேட்க நிறைய இருக்கிறது. நாற்பதை எட்டியவர்கள் சொல்ல தயாராக இருந்தாலும், இருபதை எட்டியவர்கள் பெரும்பாலும் காது கொடுக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். கவுதம் சாரிடம் நான் கற்றுக்கொண்ட பண்பு, வாயை திறக்கிறோமோ இல்லையோ. இரண்டு காதுகளையும் எப்போதும் திறந்துவைத்திருக்க வேண்டும். தேவையோ தேவையில்லையோ. எல்லாவற்றையும் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சீர்செய்து தேவையில்லாதவற்றை தூக்கி ரீசைக்ளிங் பின்னில் போட்டுக் கொள்ளலாம். முற்போக்கானவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினாலும் எனக்கு குருகுலக் கல்வியில் உள்ளூர நம்பிக்கையுண்டு.

முதன்முதலாக கருணாகரன் சாரை நான் சந்தித்தது ராயப்பேட்டையில் இருந்த ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில். கவுதம் சாரை அவர் சந்திக்க வந்திருந்தார். அப்போது நான் கவுதமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். “இவர்தான் பெ.கருணாகரன்” என்று கவுதம் சொன்னதுமே, “காதல்தோல்வி கதைகள் எழுதினவர்தானே?” என்று கேட்டு கைகுலுக்கினேன். இருபதாண்டுகள் கழித்து தன்னுடைய எழுத்துகளை ஒருவன் நினைவுகூர்வது எந்தவொரு எழுத்தாளனுக்கும் உவப்பான விஷயம்தான். என்னை இவனுக்கு ஏற்கனவே எழுத்துகள் வாயிலாக தெரியும் என்கிற எண்ணமே அவருக்கு என் மீது கூடுதலான அன்பை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் சில மாதங்கள் கழித்து, ‘புதிய தலைமுறை’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப ஊழியர்களாக ஒரே அலுவலகத்தில் இருந்தோம். ‘அ’னா போட்டு ஓர் இதழ் துவக்கப்படும்போது அதில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள், மற்ற பெரிய இதழ்களில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை காட்டிலும் கொஞ்சம் ‘ஒஸ்தி’தான். அனுபவமிக்க மாலன் சார், கருணாகரன் சார், உதயசூரியன் சார் போன்றவர்களின் வழிகாட்டலில் ஆரம்பத் திணறல்களை வெகுசுலபமாகவே எங்களால் கடக்க முடிந்தது.

கருணாகரன் சார் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மனைவியிடம் பேசியதைக் காட்டிலும் என்னிடம்தான் அதிகம் பேசியிருப்பார் என்று கருதுகிறேன். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் இது சாத்தியமானது. அலுவலகத்தில் டீ குடிக்க மாட்டோம். வெளியேதான் இருவரும் போவோம். டீ குடிக்க ஐந்து, பத்து நிமிடம் ஆகிறதென்றாலும் ஒவ்வொரு பிரேக்கிலும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். இதழ் தயாரிப்பு, கட்டுரைகள் முதலானவற்றை தாண்டி பர்சனல் லைஃப் குறித்தும் பேசியிருக்கிறோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் விகடனில் தொடங்கிய தன்னுடைய பத்திரியுலகப் பணிகளை பேசத் தொடங்கினார். கிசுகிசுக்கள் கேட்பதில் ஆர்வம் கொண்ட நான் (இது முக்கியமான வெகுஜனப் பண்பு) கேள்விப்பட்டவற்றை சரியா, தவறா என்று அவரிடம் கேட்பேன். அது தொடர்பாக அவருக்கு தெரிந்த விஷயங்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுத்து கொஞ்சம் விஸ்தாரமாக சொல்வார். இதன் வாயிலாக நான் பணிபுரிந்திருக்கா விட்டாலும் குமுதம், விகடன், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் எப்படி இயங்கின, அங்கு யாரெல்லாம் பணிபுரிந்தார்கள், அவர்களுடைய குணநலன்கள் என்று கருணாகரனின் ப்ளாஷ்பேக்கில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல.

குறிப்பாக குமுதம் – கமல் மோதல் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்பேன். ஏற்கனவே அவர் விலாவரியாக சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே புதியதாக கேள்விப்படுவது போல மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கேட்பேன். இவனிடம்தான் சொல்லிவிட்டோமே என்று சலித்துக் கொள்ளாமல் மீண்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை சொல்வார். போலவே பாபா காலத்து ரஜினி பற்றியும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்போது தமிழ் வெகுஜன இதழ்கள் குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அது தொடர்பான நூல்கள் வெகுகுறைவாகவே இருக்கின்றன என்கிற எண்ணம் ஏற்பட்டிருந்தது. “இதையெல்லாம் நீங்கள் எழுதலாமே சார்?” என்று கேட்டால், “எழுதினா யார் படிப்பா?” என்பார்.

ஃபேஸ்புக்கில் அவர் அக்கவுண்டு தொடங்கிய அந்த சுபயோக சுபதினத்தின் முகூர்த்த நேரம்தான் இன்று ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூல் வெளிவரவே காரணமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் மொக்கைதான் போட்டுக் கொண்டிருந்தார். இளங்கோவன் பாலகிருஷ்ணன் திடீரென்று அவர் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் தான் தன்னுடைய ப்ளாஷ்பேக்கை எழுதலாம் என்கிற எண்ணம் கருணாகரன் சாருக்கு வந்தது.

ஆரம்பத்தில் நூலாக தொகுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. இந்த ஸ்டேட்டஸ்களுக்கு பெரியளவில் இணைய வாசகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நூலாக வெளியிடவேண்டும் என்கிற கோரிக்கைகளும் அவருக்கு வைக்கப்பட்டபோதுதான், ஏன் நூலாக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார். ‘நூல்’ என்கிற எண்ணம் வந்தபிறகு, மிகவும் கவனமாக எழுத ஆரம்பித்தார் என்பதை கவனித்திருக்கிறேன்.

எழுத நினைத்து அவர் எழுதாமல் விட்ட சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது. ஃபாஸிட்டிவ்வான விஷயங்களைதான் ஃபோகஸ் செய்யப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் எழுதுவதற்கு முன்பாக அது தொடர்பான நெகட்டிவ்வான விஷயங்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்த நூலால் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்று ரொம்பவும் கவனமாக இருந்தார். புத்தகத்தை வாசிக்கும்போது அவரிடம் அந்த ஓர்மை எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரமுடிகிறது.

(சோடா ப்ளீஸ்)


உடன்பணிபுரிந்த சகாக்கள் பற்றி எழுதவேண்டுமா என்று அவருக்கு தயக்கம் இருந்தது. எழுதலாம் என்று ஊக்கம் கொடுத்தது நான்தான். இப்போது புத்தகத்தை வாசிக்கும்போது அந்த அத்தியாயம் கொஞ்சம் சோடை போனது போலதான் தோன்றுகிறது. காரணம் அவருடைய நெடும்பயணத்தில் எல்லாரையும் குறிப்பிட முடியவில்லை. போலவே, சில முக்கியமான விடுபடுதல்கள் இருப்பதாக தோன்றியதும் அவரிடம் தொலைபேசியில் கேட்டேன். “அவங்கள்லாம் முக்கியமானவங்கதான். ஆனா நீங்க குறிப்பிடறவங்களில் சிலரோட நான் வேலை கூட பார்த்ததில்லை. என்னோட அனுபவங்கள் என்கிறப்போ என்னோட பழகாதவங்களை பத்தி என்னன்னு எழுதறது. சில பேரை எனக்குத் தெரியும். ஆனா நினைவுப்படுத்திக்கிற மாதிரி முத்தாய்ப்பான சம்பவம் எதுவும் அவங்க தொடர்பா இல்லாததாலே எழுத முடியலை” என்றார். அந்த அத்தியாயம் கொஞ்சம் சுமார் என்று எழுத்தாளர் சுபா (சுரேஷ்) இன்று காலை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்ததை கவனித்தேன். இந்த பாவம் என்னையே சாரும்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டத்தின்போது வாசித்த இரண்டு கட்டுரைகளை சேர்த்திருக்கிறார். அதை பின்னிணைப்பாக கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். சுவாரஸ்யமான நாவலுக்கு இடையே இரண்டு கட்டுரைகளை அத்தியாயமாக செருகியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நூலில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் நக்கீரன் அண்ணாச்சியைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’. அண்ணன் கோபால் அவர்களைப் பற்றி கருணாகரன் சார் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பல விஷயங்களே ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு தேறும். அந்த அளவுக்கு அண்ணன் மீது அளவில்லா அன்பும், அளப்பறியா மரியாதையும் கொண்டவர் கருணாகரன். இந்த அத்தியாயத்தை அவர் ஃபேஸ்புக்கில் எழுதியபோது அவ்வளவு பாராட்டுகள். பிற்பாடு இந்த அத்தியாயம் அப்படியே ‘இனிய உதயம்’ இதழிலும் பிரசுரமானது. குமுதம் வரதராசன் குறித்து அவர் எழுதியிருக்கும் அத்தியாயமும் அபாரம். தன்னுடைய சீனியர்கள் பெரும்பாலானவர்கள் மீது கருணாகரன் சாருக்கு மரியாதையும் பக்தியும் உண்டு. மாலன் சார் குறித்து எழுதியிருக்கும் அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையுமே, மாலனிடம் பணிபுரிந்த அத்தனை பேரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரே ஒருவரி கூட மிகையாக இருக்காது.

மற்ற பணிகள் மாதிரி இல்லாமல் பத்திரிகையாளன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் பணி அனுபவங்கள் unique ஆனது. உலகில் வேறெவருக்குமே கிடைக்காத அனுபவங்கள் அவனுக்கு மட்டும்தான் சாத்தியம். பத்திரிகையுலகில் நீண்டகாலம் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த மனிதர்களையும் இதுபோல நூலாக எழுதவேண்டும். தங்கள் அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு என்றில்லாமல் இது அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயம்தான். தான் வாழும் காலத்தைதான் ஒவ்வொரு பத்திரிகையாளனும் தன்னுடைய பணியாக பதிவு செய்கிறான். அதுவே எதிர்கால வரலாறாகவும் ஆகிறது. நமக்கு பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து எவனோ ஒருவன் வரலாற்றை தொகுக்க தேடும்போது, இம்மாதிரி நூல்கள் அவனுக்கு வெகுவாக உதவும்.

அந்த கால கல்கியை தெரிந்துக்கொள்ள வாண்டுமாமாவின் ‘எதிர்நீச்சல்’, குமுதத்தை அறிந்துக்கொள்ள ‘எடிட்டர் எஸ்.ஏ.பி’, சாவியை உணர ‘சாவியில் சில நாட்கள்’ என்று பத்திரிகையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக முன்னுதாரண நூல்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்தவரிசையில் வரும் ‘காகிதப்படகில் சாகசப் பயணம்’ நூலும் மாபெரும் வெற்றி காணும் என்று வாழ்த்தி என்னுடைய நீண்ட உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பேச (எழுத) வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!

(பலத்த கைத்தட்டல்)

நூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர் : பெ. கருணாகரன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : குன்றம் பதிப்பகம்,
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1
மின்னஞ்சல் : pekarunakaran@gmail.com