30 ஏப்ரல், 2011

போராட்டங்கள் - சாண்டில்யன்

ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையின் போதுதான் ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை நானே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு வானதிகளை தேட ஆரம்பித்த காலம் அது (பி செக்‌ஷன் குமுதா வானதி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினாள்). அடுத்தடுத்து பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கியை கரைத்துக் குடிக்க ஆரம்பித்தேன்.

கல்கி தாகம் தீர்ந்தபோதுதான் சாண்டில்யனை நாடினேன். கடல்புறா, ராஜதிலகம், கன்னிமாடம், யவனராணி, இளையராணி, ராணா ஹமீர் என்று அடுத்தடுத்து வாசித்த அவரது நாவல்களால் கிறங்கிப் போனேன். பதலக்கூர் சீனிவாசலுவை துரோணராக ஏற்றுக்கொண்ட ஏகலைவன் என்பதால் எனக்கு சாண்டில்யனை இயல்பாகவே பிடித்துப் போனது. அந்த காலத்தில் குமுதத்தில் தொடர்கதை எழுதுவதற்காகவே, இவருக்கு மாதசம்பளம் வழங்கப்பட்டு வந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். தமிழ் சரித்திரப் புதினங்களின் சாதனை மன்ன்ன் சாண்டில்யன் என்று சொல்வதில் தவறேதுமில்லை. அவர் எழுதுவது இலக்கியமா, வெறும் செக்ஸ் கதைகளா என்று அந்த காலத்தில் பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்ததாம்.

யவனராணியின் முல்லைக்கொடி போன்ற இடை, மைவிழிச்செல்வியின் பரந்து விரிந்த மார்புகள், வாழைத்தொடைகள், அம்சமான தொப்புள்கள் என்று ஜில்பான்ஸாக எழுதும் சரித்திர எழுத்தாளர் அவர் என்பதாகவே எனது மனதில் பதிந்துப்போனார். சாண்டில்யனின் சுயசரிதையான ‘போராட்டங்கள்’ நூலினை கடந்த இரவில் வாசிக்கும் வரை.

இவ்வளவு எளிமையான மொழியில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையை குமுதம் இதழில் இவர் தொடராக எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் எளிய, அசத்தலான தமிழ் இந்த இண்டர்நெட் யுகத்தில் கூட எனக்கு கைவரவில்லையே என்று பொறாமைப்படுகிறேன். வரிக்கு வரி இழையோடும் நகைச்சுவை, சுய எள்ளல், எதிர்க்கருத்து கொண்டோர் மீது மெல்லிய வன்மத்தோடு கூடிய நையாண்டி. சந்தேகமேயில்லை. சாண்டில்யன் ஒரு மன்னன்தான்.

சாண்டில்யன் என்றதுமே உங்கள் மனதுக்குள் எப்படியான ஒரு தோற்றம் கற்பனைக்கு வருகிறது?

கருத்த உயரமான கம்பீரத் தமிழ் தோற்றம். வெட்டறுவா மீசை. எதிரில் பேசுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்களது கழுத்துக்கு கீழேயே அலைபாயும் குறும்புக் கண்கள். இப்படித்தான் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அவரை அந்தக்காலத்தில் சந்திக்க வந்த சில கல்லூரி மாணவிகளும் இப்படியான கற்பனையிலேயே அவரை சந்திக்க வந்திருக்கலாம். அவர்கள் சந்தித்தது ஒரு அறுபத்தைந்து வயது கிழவரை. நெற்றியில் நாமம். வைணவப் பாரம்பரிய குடுமி. கீழே எட்டுமுழ வேட்டி. மேலே மூன்று முழத்துண்டு.

மாணவிகளில் ஒருவர் கேட்கிறார். “நீங்கள்தானா?”

சாண்டில்யன் சொல்கிறார். “ஆமாம். நானேதான்!”

திருக்கோயிலூரில் 1910ஆம் ஆண்டு, ராமானுஜம் அய்யங்கார் – பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த பாஷ்யம் அய்யங்காரை உங்களுக்கு தெரிந்திருக்காது. எனக்கும்தான். பிற்பாடு அவரைதான் சாண்டில்யனாக தமிழகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பாஷ்யம், திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லூரிப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்தில்தான் ராஜாஜியின் மூலமாக தேசிய எழுச்சி பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். 1929ல் இவருக்கும், ரங்கநாயகிக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்குப் பிறகு அப்பா காசிலேயே கும்மியடித்ததை, சாண்டில்யன் பெருமையாகவும், நகைச்சுவையாகவும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

சோற்றுக்குப் பிரச்சினை இல்லை என்பதால் அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். 1930ல் சென்னை தி.நகரில் குடியேறுகிறார். விகடனில் பின்னி, பெடலெடுத்துக் கொண்டிருந்த கல்கி இவரது தெருக்காரர். திரு வி.க.வின் நவசக்தியில் பணிபுரிந்த சாமிநாத சர்மா இவரது இலக்கிய வெறிக்கு சோளப்பொறி ஆன நண்பர். இடையில் சும்மா இருந்த காலத்தில் இவரது அப்பா தமிழ்பயில, திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்கிற தமிழறிஞரிடம் சேர்த்து விட்டதாகவும் தெரிகிறது.

சாண்டில்யனின் முதல் கதையை வெளியிட்டவர் தந்தை பெரியாரின் நண்பரான தோழர் சுப்பிரமணியம். பார்ப்பனர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நீதிக்கட்சியின் பத்திரிகையான ‘திராவிடன்’ இதழில்தான் இவரது முதல்கதை ‘சாந்த சீலன்’ வெளியானது. காங்கிரசுக்கு ஆதரவான கதை. இந்த கதையை வெளியிட்டதால் தோழர் சுப்பிரமணியத்துக்கு வேலைபோனது தனி கிளைக்கதை.

பின்னர் சிறுகதைகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடனில் அடுத்தடுத்து இவரது சிறுகதைகளை கல்கி வெளியிட, பாஷ்யம் அய்யங்கார் சாண்டில்யன் ஆனார். நவசக்தியில் சாமிநாத சர்மா மூலமாக கட்டுரைகளும் எழுதினார்.

இந்த கட்டத்தில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீநிவாசனை ஒருநாள் சந்திக்கிறார்.

“என்ன செய்கிறாய்?”

“கதை எழுதுகிறேன். உங்கள் பேப்பரில் கூட எழுதியிருக்கிறேன்”

“அதில் எப்படி பிழைக்க முடியும்?”

“முடியாதுதான்”

“நீ கிராஜூவேட்டா?”

“இல்லை” (கல்லூரிப் படிப்பை சுதந்திரப் போராட்ட வெறியில் – ஐ மீன் உணர்வில் - முழுமையாக முடிக்கவில்லை என்று தெரிகிறது)

“உனக்கு வேலை தருகிறேன். குமாஸ்தா வேலை என்றால் 35 ரூபாய் சம்பளம். பத்திரிகையாளன் ஆக வேண்டுமானால் ஆறு மாதங்கள் சம்பளமின்றி பயிற்சியாளனாக வேலை பார்க்க வேண்டும். எது வேண்டும்?”

“பத்திரிகையாளனாக எடுத்துக் கொள்ளுங்கள்”

சாண்டில்யனின் ‘போராட்டம்’ தொடங்கிய நொடி அதுதான்.

அந்த காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் நிருபர்களின் சம்பளம் இருநூற்றி ஐம்பது ரூபாயிலிருந்து தொடங்குகிறது. தினமணியில் கூட அறுபது ரூபாய். ஆறு மாதம் அல்லாடியபிறகே சாண்டில்யனுக்கு முப்பத்தைந்து ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

ஆனால் ஒரு பத்திரிகையாளன் சம்பாதிப்பதை, உலகில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் வேறு எவருமே சம்பாதிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அவன் சம்பாதிப்பது பணமல்ல. அனுபவம். நூறாண்டுகள் வாழும் சாதாரண ஒரு மனிதர் பெறும் அனுபவங்களை ஒரு பத்திரிகையாளன் நான்கைந்து ஆண்டுகளிலேயே பெற்றுவிட முடியும் என்பதுதான் இந்தப் பணியின் சிறப்பு (ஒழுங்காக வேலை பார்த்தால்).

சாண்டில்யனும் அனுபவங்களை சம்பாதிக்கிறார். மகாத்மா காந்தியை கூட சந்தித்து பேட்டி கண்ட புண்ணியம் அவருக்கு வாய்க்கிறது. யாரால் ஈர்க்கப்பட்டு, அரசியல் ஆர்வம் கொண்டாரோ, அதே ராஜாஜியை கட்டுரை எழுதி விளாசவும் அவர் தயாராகவே இருந்தார். கல்கியோடு கூட மோதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

1952ஆம் ஆண்டு சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில் ராஜாஜி பேசுகிறார்.

“சினிமா பார்ப்பது அபாயகரமான படிப்பு. அதனால் புத்தி கெடுகிறது. உண்மை மறைகிறது. கொலை, கொள்ளை அதிகரிக்கிறது. அவ்வளவு ஏன்? ‘கம்யூனிஸம்’ கூட உண்டாகிறது”

இந்தக் கருத்துக்கு எதிராக சுதேசமித்திரன் வார இதழில் சாண்டில்யன் ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்று எழுதுகிறார். கிட்டத்தட்ட கமல்ஹாசன் பாணி சிந்தனைகள் இவருடையது. சினிமா ஒரு தொழில்நுட்பம் அதை தவிர்க்க இயலாது. அதை நல்ல முறையில் மாற்ற வேண்டியதுதான் நமது கடமை என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார்.

ராஜாஜியையே எதிர்த்துவிட்டார் என்று சாண்டில்யன் மீது பலரும் பாய்ந்தார்கள். பிற்பாடு சாண்டில்யன்தான் வெல்கிறார். ஏனெனில் ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’ கூட சினிமா ஆனது.

அதேநேரம் சாண்டில்யனும் சினிமா விமர்சனங்களில் ரொம்பவும் கறாராகவே இருந்திருக்கிறார். திராவிட கருத்தாக்கங்களை தாங்கி வந்த படங்களை இவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. கல்கி, அறிஞர் அண்ணாவை ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அடைமொழியிட்டு அழைத்ததை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். ‘நாத்திகம்’ என்கிற சிந்தனையை சாண்டில்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக ‘கற்பு’ குறித்தான கற்பிதங்களை திராவிட எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலும், சினிமாவிலும் உடைத்தெறிந்ததை எதிர்த்து பெரும் போராட்டத்தையே சாண்டில்யன் நிகழ்த்த வேண்டியதாக இருக்கிறது. டி.கே.எஸ். சகோதர்களின் ‘மனிதன்’ நாடகமாகவும், பிற்பாடு திரைப்படமாகவும் வந்தபோது ‘விபச்சாரக்கதை’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். நவகாளி யாத்திரையின் போது நாட்டில் ஏற்பட்ட வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு என்கிற உயரிய நோக்கத்தில் ‘மனிதன்’ உருவானாலும், பிறப்பிலேயே பிற்போக்காளராக பிறந்துவிட்ட சாண்டில்யனால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவரது போராட்டங்களை வாசிக்கும்போது, சாண்டில்யன் ஒரு கண்டிப்பான பார்ப்பன பிற்போக்காளராகவே வாழ்ந்திருக்கிறார் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

சினிமா மீது சாண்டில்யனுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

காரணம் இருக்கிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்றிக்கொண்டே திரைத்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார் சாண்டில்யன். நிறைய டிஸ்கஷனில் கலந்துகொண்டிருக்கிறார். சுவர்க்க சீமா, என் வீடு ஆகிய படங்களில் திரைக்கதைப் பிரிவில் இவரது பங்களிப்பு நேரடியாகவே இருந்திருக்கிறது. தனது சினிமா அனுபவங்களை பிற்பாடு (1985) ‘சினிமா வளர்ந்த கதை’ என்கிற நூலில் பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்.

சுதேசமித்திரனில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாதி சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் டைமில் பணிக்கு சேர்ந்தது, பின்னர் மீண்டும் சுதேசமித்திரனுக்கே வந்தது என்று பத்திரிகை அலுவலக அரசியல், சாண்டில்யனின் வாழ்க்கையை ஏற்றமும், இறக்கமும் ஆனதாக மாற்றியமைத்தது. இன்றைய தினப்பத்திரிகைகளின் வார இதழ்களுக்கான வடிவமைப்பை தமிழில் முதலில் உருவாக்கியவர் சாண்டில்யன்தான் என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆம். மகா த்ராபையாக வந்துக்கொண்டிருந்த ‘அனுபந்தம்’ என்று சொல்லக்கூடிய இதழுடன் இணைப்புகளை வாரமலராக்கி, மணம் வீச செய்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.

ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்ல. பத்திரிகையாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் உருவாக்கம் என்று பலவிதங்களிலும் சாண்டில்யன் முன்னோடியாகவே இருந்திருக்கிறார். கிருஷ்ணகான சபா கூட இவரது வீட்டு வராந்தாவில்தான் தொடங்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். உழைக்கும் பத்திரிகையாளருக்காக கடுமையாகப் போராடி பல சலுகைகளை வாங்கித்தந்த இவரால், எந்த சங்கத்திலும் கடைசிவரை நீடிக்கவே முடியவில்லை. நிறுவனர்களில் ஒருவராக பல சங்கங்களிலும் இவர் இருந்திருந்தாலும், பிற்பாடு வந்து இணைந்தவர்களோடு மோதி பாதியிலேயே வெளியேறிவிடுவது சாண்டில்யனின் ராசி. இவர் யாரிடமெல்லாம் மோதுகிறாரோ, அவர்களெல்லாம் சாண்டில்யனை மிகவும் மதித்தவர்கள், அன்பு பாராட்டியவர்கள் (மோதல்களுக்குப் பிறகும்) என்பதுதான் இங்கே குறிப்பிடத்தகுந்தது. கொள்கை வேறு, நட்பு வேறு, அபிமானம் வேறு என்று வாழ்ந்த கண்டிப்பான மனிதராகவே சாண்டில்யனை பார்க்க முடிகிறது.

விருதுகள் குறித்த கேலியான பார்வை சாண்டில்யனுக்கு உண்டு. விருது தகுதியானவர்களுக்கு போய் சேருகிறது என்றாலும், அவர்களது தகுதியற்ற படைப்புகளுக்குதான் கிடைக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ‘ஆளுக்குதான் பரிசே தவிர, நூலுக்கு பரிசில்லை’ என்று அழகான சொற்றொடரை இங்கே பயன்படுத்துகிறார். சாகித்ய அகாடமி தமிழ்நாட்டுக்கு தேவைதானா என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்.

எழுபதுகளில் மலர்ந்த நவீன இலக்கியப் போக்கையும் சாண்டில்யனால் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது அவருக்கு பிடிக்கவில்லை. விமர்சனம் என்கிற சொல்லையே திறனாய்வு என்று மாற்றியதை கூட குறைபட்டுக் கொள்கிறார்.

இந்நூல் குறிப்பாக பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டியது. எழுத்து மற்றும் அலுவலகப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று இலகுவாக எடுக்கப்பட்ட பாடமாக இந்நூலை கருதலாம். பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைவரும் கூட ஒரு சுயமுன்னேற்ற நூலாக இந்நூலை வாசிக்கலாம். தவறேதுமில்லை. நல்லதொரு மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய கதைதான் சாண்டில்யனின் கதை.

சாண்டில்யன் உள்ளிட்ட 28 எழுத்தாளர்களின் எழுத்துகளை நாட்டுடமையாக்க 2009ல் கலைஞர் ஆணையிட்டார். அப்போது சுந்தரராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் இந்த ஆணையை கடுமையாக எதிர்த்தார்கள். நாட்டுடமைக்கு ஒத்துக்கொள்வது அவரவர் வாரிசுகளின் விருப்பம் என்று அரசு பல்டியடிக்க வேண்டியதாயிற்று. எனவே சாண்டில்யனின் வாரிசுகளும் அவரது எழுத்தை நாட்டுடமை ஆக்கவேண்டாமென்று மறுத்துவிட்டார்கள்.

போராட்டங்கள் என்கிற தலைப்பில் குமுதத்தில், 70களின் மத்தியில் இத்தொடர் எழுதும்போதே சாண்டில்யனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக கல்கி தரப்பிலிருந்தும், டி.கே.எஸ். வாரிசுகளின் தரப்பிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளை நூலிலேயே கொஞ்சம் குசும்போடு பதிவு செய்திருக்கிறார் சாண்டில்யன். இத்தொடர் திடீரென முடிந்ததும் ஏராளமான வாசகர்கள் “ஏன் முடித்து விட்டீர்கள்?” என்று சாண்டில்யனுக்கு கடிதம் எழுதினார்கள். “இது முடியவில்லை. எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவகாசம் கிடைக்கும்போது மீண்டும் எழுதுவேன்” என்று பிற்சேர்க்கையில் சாண்டில்யன் குறிப்பிட்டிருக்கிறார். எழுதினாரா என்றுதான் தெரியவில்லை.

நூலின் பெயர் : போராட்டங்கள்.
ஆசிரியர் : சாண்டில்யன்
வெளியீடு : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
விலை ரூ.32.

26 ஏப்ரல், 2011

ஜான் பாண்டியனும், ஜான் டேவிட்டும்!

ஜான் பாண்டியனுக்கு அறிமுகம் தேவையில்லை.

18 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஊத்துக்குளி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த விவேக் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜான் பாண்டியன் உள்ளிட்ட பதினோரு பேர் மீது கொலைவழக்கு தொடரப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் ஜான் பாண்டியன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திருச்சி, வேலூர், கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் சேலம் மத்தியச் சிறையில் தண்டனைக் காலத்தை கழித்தார்.

இது ஒரு சாம்பிள்தான். ஜான் பாண்டியன் மீது ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்துக்குள்ளேயே இவர் நுழையக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிட்ட ஒரு காலமெல்லாம் உண்டு.

கொலைவழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, புரட்சித்தலைவியால் 2001ஆம் ஆண்டு எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை அரிவாள் கொண்டு துரத்திய சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். சேலம் மத்தியச் சிறையில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை கொலைசெய்ய முயற்சித்த சம்பவமும் கூட நடந்தது.

கடந்தாண்டு ஐகோர்ட் இவருக்கு உறுதி செய்திருந்த ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, இவர் உள்ளிட்ட ஐந்துபேரை விடுதலை செய்தது.

தமிழக முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் கட்சியை நடத்திவரும் ஜான் பாண்டியன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு, தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்.


ஜான் டேவிட்டுக்கும் அறிமுகம் தேவையே இல்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுச்சாமி. இவரது மகன் நாவரசினை, சிதம்பரம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற சக மாணவர் ஜான் டேவிட். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது.

கடலூர் செஷன்ஸ் கோர்ட் வழக்கை விசாரித்து ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2001ல் விடுதலை செய்தது. கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலை ஆனார்.

தமிழக அரசு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. ஒன்பது ஆண்டுகள் தீவிர விசாரணை நடந்து கடந்த 20ஆம் தேதி தீர்ப்பு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தும், கடலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தின் இரட்டை ஆயுள் தீர்ப்பினை உறுதி செய்தும் இத்தீர்ப்பு அமைந்தது.

இடையில் ஜான் டேவிட் பாதிரியாராக மாறிவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார் என்றெல்லாம் புலனாய்வு பத்திரிகைகளில் செய்தி காணக்கிடைத்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபிறகு, ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல (?) உதவிய வி.ஐ.பி. யாரென்று கூட சில ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

மாறாக ஜான் டேவிட் கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னையில் வசித்ததாக இப்போது தெரியவந்திருக்கிறது. கொலைவழக்கில் ‘உள்ளே’ போய், பிரேமானந்தா சாமியாரின் ஜெயில்மேட்டாக இருந்த ஜான் டேவிட், ஆன்மீகம் பக்கமாக தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். வெளியே வந்த பின்னர் திருந்தி வாழ நினைத்த அவர், சென்னைக்கு வந்து தனது பெயரை ஜான் மாரிமுத்து என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னை வேளச்சேரியில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிக்கும் சேர்ந்திருக்கிறார். கடுமையான உழைப்பின் மூலமாக அதே நிறுவனத்தில் மேலாளராகவும் உயர்ந்து, கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ‘அந்த’ கொலைக்குப் பிறகு வேறேதும் வம்பு, தும்புகளில் ஜான் டேவிட் ஈடுபட்டதாக சாட்சியங்கள் ஏதுமில்லை.

உச்சநீதிமன்றம் இப்போது பழைய தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் சரணடைந்திருக்கிறார். இனி அவரது வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடும்.


இந்த இருவரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏதோ ஒரு முரண் தட்டுப்படுகிறது. நம்முடைய இந்திய சட்டத்தில் ஏதோ மிகப்பெரிய - அதே நேரம் கண்ணுக்கும் தெரியாத - ஒரு பெரிய ஓட்டை இருப்பதாகப் படுகிறது. உங்களுக்குப் படுகிறதா? நமது இந்தியச் சட்டத்தில் ஒரு குற்றவாளி திருந்திவாழ இடமிருக்கிறதா இல்லையாவென்று சட்டமேதைகள்தான் விளக்க வேண்டும்.

25 ஏப்ரல், 2011

கோ

படம் சூப்பர்ஹிட் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். ப்ரிவ்யூ பார்த்த ஷங்கர் ‘வடை போச்சே’ என்று நினைத்திருப்பார். சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி, பொலிடிக்கல் ஃபேண்டஸி, டெவோஷனல் ஃபேண்டஸி என்று எத்தனையோ ஃபேண்டஸி தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. இது சற்றே வித்தியாசமானது. ஃபேண்டஸி ஜர்னலிஸம்.

ஹீரோ புகைப்படக் கலைஞர். க்ளிக்கி, க்ளிக்கி நாட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார். பாலகுமாரனின் ‘உயிர்ச்சுருள்’ கதை நினைவுக்கு வருகிறது. அதிமுக உடைந்து, தலைமைக் கழகத்துக்கு இரண்டு கோஷ்டிகளும் அடித்துக் கொண்டபோது, ‘நக்கீரன்’ புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படங்களும், அதன் பின்னான பிரச்சினைகளுமே ‘உயிர்ச்சுருள்’. “எங்க கதையை எங்க அனுமதி இல்லாமே இந்தியா டுடேவுக்கு எழுதிட்டார்” என்று கோபால் அண்ணாச்சி கூட பிரச்சினை செய்ததாக நினைவு.

ஹீரோ வேலை பார்ப்பது ஒரு தின இதழில். பெயர் தின அஞ்சல். தினமலரை மனதில் வைத்துக்கொண்டு, காட்சிகளை அமைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆனால் பத்திரிகை அலுவலகம் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ரேஞ்சுக்கு இருக்கிறது. ஸ்பைடர்மேன் படத்தில் வரும் பத்திரிகை அலுவலகம் நினைவுக்கு வருகிறது. அனேகமாக ஏதோ கால் சென்டரிலோ அல்லது சேட்டிலைட் டிவி அலுவலகத்திலோ படப்பிடிப்பு நடந்திருக்கலாம். ஊமை விழிகள் படத்தில் காட்டப்படும் ரேஞ்சில் தமிழ் பத்திரிகை அலுவலகங்கள் மொக்கையாக சமகாலத்தில் இல்லையென்றாலும் (எது இருக்கிறதோ இல்லையோ, அங்கங்கே சம்பந்தா சம்பந்தமில்லாமல் கம்ப்யூட்டர்கள் நிறைய இருக்கும்), சர்வநிச்சயமாக ‘கோ’ ரேஞ்சில் இல்லை. நிருபர்களின் மேசை, பெண் நிருபர் கார்த்திகாவின் மேசை அளவுக்கு நிச்சயமாக நீட்டாக இருக்க வாய்ப்பேயில்லை. ஒருவேளை எந்த நிருபரின் டேபிளாவாது இவ்வளவு க்ளீனாக இருக்குமேயானால், சம்பந்தப்பட்ட நிருபர் வேலை பார்க்காமல் ஓபி அடிக்கிறார் என்று அர்த்தம்.

பத்திரிகை போட்டோகிராபரான ஜீவா, ஹீரோ என்பதால் பைக் வீலிங், ஸ்டண்ட் என்றெல்லாம் ஹீரோயிஸம் செய்வதை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னாள் பத்திரிகை புகைப்படக் கலைஞரான கே.வி.ஆனந்த், இந்த சீன்களை சிரித்துக்கொண்டே எடுத்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் பாருங்க சார். பிரஸ்மீட் ஒன்றில் பெண்நிருபர் ஃபியா டூபிஸில் அயிட்டம் டான்ஸ் ஆடுவதாக எடுத்திருப்பதெல்லாம் கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர். பத்திரிகையுலகப் பெண்போராளிகளே, எப்படி இந்த ஆட்டத்தையெல்லாம் சகித்துக்கொண்டு இன்னமும் அமைதியாக இருக்கிறீர்கள்?

எதிர்க்கட்சித் தலைவர், ஒரு பதிமூன்று வயதுப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்று ஒரு ‘ஸ்டோரி’ ரெடி செய்து கொடுக்கிறார் நிருபரான கார்த்திகா. எடிட்டர் கேட்கிறார் சோர்ஸ் என்னவென்று. உடனடியாக கார்த்திகா ஒரு ரெகார்டரை காட்டி, மொத்தமா ரெகார்ட் செய்திருக்கிறேன் என்கிறார். உடனே ஸ்டோரி ஓக்கே ஆகிறது. இப்படி ஒரு பத்திரிகையும், எடிட்டரும் எங்கிருக்காங்கன்னு சொல்லுங்க ஆனந்த் சார். உடனே ஓடிப்போய் வேலையில் சேர்ந்துக்கறோம். அதுபோலவே எடிட்டர், ஃபிரண்ட் பேஜை ரெடி பண்ணி வையுங்க. நான் ஒன் அவர்லே மெட்ராஸ் வந்து ஓக்கே பண்ணுறேன் என்று ஃப்ளைட்டில் இருந்து சொல்கிறார். கார்த்திகா மேட்டரை ரெடி செய்வதோடு இல்லாமல், பக்காவாக லே-அவுட்டெல்லாம் கூட செய்து வைக்கிறார். சூப்பர்.

இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ‘இந்தியா 2020’ மாதிரி புது லட்சியம் ஒன்று தோன்றும். ‘எப்படியாவது ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கணும்’ என்று. இளைஞர்களே. படம் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். சர்வசத்தியமாக இந்தப் படத்தில் காட்டப்படும் பத்திரிகைச்சூழல் நிஜத்தில் இல்லை. கே.வி.ஆனந்த் வேலைபார்த்த கல்கியில் மட்டும்தான் எய்ட் அவர் டூட்டி எல்லாம். பெரும்பாலான பத்திரிகைகளில், ஒரு பத்திரிகைக்காரன் ட்வெண்டி ஃபோர் அவர்ஸும் பத்திரிகைக்காரனாக இருக்கணும் என்று ராணுவ மேஜர் மாதிரி வசனம்தான் எடிட்டர் பேசுவார். பெட்ரோல் கன்வேயன்ஸ் கூட கிலோ மீட்டருக்கு ரெண்டேமுக்கா ரூபாதான் கொடுப்பாங்க. பார்த்துக்கோங்க. Be careful. அதேமாதிரி படத்தில் காட்டப்படும் பெண் நிருபர்கள் மாதிரி, ஃபுல் மேக்கப்பில், எப்போ பார்த்தாலும் உங்களை ‘லவ்’ பண்ண சுற்றி சுற்றி யாரும் வந்துக்கொண்டிருக்க வாய்ப்பேயில்லை. எனவே உங்க லட்சியத்தை ஒன்றுக்கு, ஆயிரம் முறை மீள்பரிசீலனை செய்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் ஓக்கே.

நக்சலைட்டுகளை ஏன் ஆனந்த் சார் அவ்ளோ மோசமா காட்டுனீங்க? கூலிப்படை மாதிரியும், கொலை, கொள்ளைக்காரர்கள் ரேஞ்சுக்கும். நிச்சயமா அவர்கள் சினிமாக்காரர்கள் மாதிரி இல்லை. குறைந்தபட்சம் அவர்களுக்கு ‘லட்சியம்’ என்று ஏதோ ஒன்று இருக்கிறது. நக்சல்பாரிகள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தனிமனிதர்களை அழிப்பதில்லை. அவர்களுக்கு பிரச்சினை அமைப்பின் மீதுதானே தவிர, மனிதர்கள் மீதல்ல. வேண்டுமானால் அமைப்பின் பிரதிநிதிகள் மீது சில சந்தர்ப்பங்களில் ‘அழித்தொழிப்பு’ நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம். பக்காவான க்ளீன் மர்டர் செய்யுமளவுக்கு கொடூரர்களாக எப்படி சித்தரித்தீர்கள்?

விடுங்கள். நீங்களே நக்சலைட் கதிர் பேசும்படி ஒரு வசனமும் வைத்திருக்கிறீர்கள். “ஒடுக்கப்பட்டவனை ஒருநாளும் நீங்கள்லாம் புரிஞ்சுக்கவே முடியாது”. அந்த வசனத்தை எதிர்கொள்ளும் ஹீரோ புரிந்துகொள்வானோ, இல்லையோ. எந்நாளும் கே.வி.ஆனந்த்களும், சுபாக்களும் புரிந்துகொள்ளவே மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

கோ – காதுலே பூவை சொருகிட்டு GO.

22 ஏப்ரல், 2011

சரவணன் எனும் சாதாரணன்!

புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ  ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம்- ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள் தங்கள் திறமைகளின் மூலம் வளர நினைப்பவர்களாக இருப்பார்கள். பழம் பெருமைகளைவிட புதிய முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மாற்றம் வேண்டும் என நம்புவார்கள். ஆனால் அந்த மாற்றத்தை மந்திரத்தால் கொண்டு வர முடியாது, கல்வியின் மூலம்தான் நிகழத்த முடியும் என்றும் எண்ணுவார்கள். அந்தக் கல்வியைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வார்கள். சமூக விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு இரண்டும் அவர்களின் அடையாளங்கள். 
இந்த மாதிரியான புதிய தலைமுறை இளைஞர்களில் ஒருவர் சூர்யா. இன்று திரை உலகில் பிரபலமாக இருக்கும் இந்த இளைஞர் வாழ்வில் இருந்து என்ன கற்றார்? அவரின் வெற்றியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?  
லட்சியம்: எதை செஞ்சாலும் அதோட சிறப்பான எல்லையை தொடணும்
சரவணன்னு ஒரு சாதாரணமான ஒரு பையன் இருந்தான். எல்லாப் பசங்களை மாதிரியே 12பி பஸ்சுலே காலேஜூக்கு போயி, பி.காம் படிச்சிட்டு.. அரியர்ஸ் வைக்காமே பாஸ் பண்ணிட்டு.. எது நம்மோட வாழ்க்கை, எது நம்மோட வேலை, எதிர்காலத்திலே என்னதான் பண்ணப் போறோம் என்கிற குழப்பங்களும், சந்தேகங்களுமாக, கேள்விகளுமாக வலம் வந்தவன்.
அப்பா பெரிய நடிகரா இருந்தாலும், சரவணன் காலேஜ் முடிச்சப்ப அப்பாவோட பேங்க் பேலன்ஸ் ரொம்ப கம்மிதான். மூணு இல்லைன்னா நாலு லட்சம். அவன் ஸ்கூல் படிக்கறப்பவே அப்பா, படங்களை ரொம்ப குறைச்சிக்கிட்டு, தேர்ந்தெடுத்து நல்ல படங்களா பண்ண ஆரம்பிச்சிருந்தாரு. அதாவது வருமானத்தை குறைச்சிக்கிட்டு, ஆத்ம திருப்திக்கு படம் பண்ண விரும்பினார்னும் சொல்லலாம்.
வீட்டுக்கு மூத்த பையன் சரவணன். தம்பி, தங்கச்சி எல்லாம் படிச்சிக்கிட்டிருந்தாங்க. குடும்பத்தோட பொறுப்புகளை தோள்ல தூக்கி சுமக்கணும்னு அவனுக்கு அப்படி ஒரு வெறி. ஏன்னா சரவணனோட அப்பா, ஒரு நடிகனின் மகனாக அவனை வளர்க்கலை. ஒரு சராசரி மிடில் கிளாஸ் பையனாகதான் சரவணன் வளர்ந்தான்.
எங்கேயாவது, எதையாவது ஆரம்பிச்சாகணும் இல்லையா? சரவணனோட சொந்தக்காரங்க நிறைய பேர் கார்மெண்ட் தொழிலில் ஈடுபட்டிருந்தாங்க. அவனும் ஒரு கார்மெண்ட் கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்தான். ஆரம்பத்துலே 700 ரூபாய் சம்பளம்.
செய்யும் தொழிலே தெய்வம்னு ரொம்ப சின்சியரா வேலை பார்த்தான். எதை செஞ்சாலும் அதோட சிறப்பான எல்லையை தொடணுங்கிறது மட்டும்தான் சரவணனோட லட்சியம். ரொம்ப சீக்கிரத்துலேயே 8000 ரூபாய் சம்பளம் வாங்குற அளவுக்கு முன்னேறினான். பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி, அது ரொம்ப நல்ல சம்பளம்.
அப்போவெல்லாம் சரவணனுக்கு சினிமாவில் நடிக்கணும்னு பெரிய லட்சியம் எதுவும் கிடையாது. ரஜினி, கமல் படங்களை தியேட்டரில் பார்க்கும் சாதாரண ரசிகன். சினிமா தொடர்பான குடும்பத்தில் இருப்பவன்னு அவனை சுத்தி இருக்கறவங்களுக்கு கூட தெரியாது. கதாநாயகனுக்கான முகவெட்டு தனக்கு இருப்பதா சரவணனும் ஒருநாளும் நினைச்சது கிடையாது.
நான்தாங்க அந்த சரவணன்.
ரிஸ்க் எடுக்கலாம், ஆனால் யோசித்து..
கார்மெண்ட்லே வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ சொந்தமா ஒரு ஃபேக்டரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சேன். அப்பவே அதுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டுது. அவ்வளவு பணத்தை வங்கியில் கடனோ, உடனோ வாங்கலாம். அவ்வளவு பெரிய ரிஸ்க்கை நான் தனியா எதிர்கொள்ளலாம். ஆனா அது குடும்பத்தை பாதிக்குமோன்னு ஒரு சஞ்சலம்.
இந்தச் சூழலில்தான், அப்பாவை பார்க்க வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்த இயக்குனர்கள் நிறைய பேர் “நடிக்கிறீங்களா?”ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. தொடர்ச்சியா மறுத்துக்கிட்டிருந்தேன்.
ஒரு என்ஜினியர் பையன் என்ஜினியர் ஆகணும், டாக்டர் பையன் டாக்டர் ஆகணும்கிற மாதிரி நடிகன் பையன் நடிகன் ஆவணுமான்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஏதோ வாய்ப்பு கிடைக்குதே என்பதற்காக எந்த ஒரு துறையிலும் ஈடுபட்டுடக்கூடாது. எதில் ஈடுபட்டாலும் முழுமனதோடு செய்யணும், மனசுக்கு ரொம்ப புடிச்சி பண்ணனும்னு எனக்கு ஆசை.
இயக்குனர் வசந்த் ‘ஆசை’ படம் எடுக்குறப்பவே என்னை கேட்டிருந்தாரு. என்னோட உடல் அமைப்பு, முகவெட்டு இதுக்கெல்லாம் சினிமா சரிப்படுமான்னு திரும்ப திரும்ப யோசிச்சிக்கிட்டிருந்தேன். அப்பா பண்ணுனதைதானே நீயும் பண்ணப்போறே? இதிலென்ன கஷ்டம்னு நிறைய பேரு கேட்டாங்க.
இயக்குனர் மணிரத்னம் சொந்தமா ‘நேருக்கு நேர்’ படத்தை தயாரிச்சார். என்னை கேட்டப்போ மறுக்க முடியலை. அவர் சினிமாவை பார்க்கும் பார்வையே வேற. தமிழ் சினிமாவை நிறைய மாற்றி அமைச்சிருக்கார். என் மேலே எனக்கு இருந்த நம்பிக்கையைவிட, அவருக்கு ரெண்டு மடங்கு அதிகமா இருந்தது. அவரோட பேசின ரெண்டு, மூணு சந்தர்ப்பங்களில் சினிமா என்னை ஈர்க்க ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி அப்பாவோடு போயி ஷூட்டிங் கூட பார்த்தது இல்லை. நடிகன் ஆகணும்னு சொல்லிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு என்னை நானே பார்த்துக்கிட்டது இல்லை.
நல்லா யோசிச்சேன். அப்பா முன்னாடி சொன்ன அட்வைஸ் நினைவுக்கு வந்தது. “ஒரு டிகிரியை முடிச்சிடு. அதுக்கப்புறம் என்ன ஆகலாம்னு யோசிச்சிக்கலாம்”
இப்போ எங்கிட்டே ஒரு டிகிரி இருந்தது. கூடவே கார்மெண்ட் எக்ஸ்போர்ட் தொழிலில் கொஞ்சம் அனுபவமும் இருந்தது. ஒரு படம் நடிச்சிப் பார்க்கலாமே, சரியாவந்தா தொடர்ந்து நடிக்கலாம். இல்லைன்னா மறுபடியும் கார்மெண்ட் தொழிலுக்கு போயிடலாம்னு நெனைச்சேன்.
சரவணனா இருந்த நான் ‘சூர்யா’ ஆனேன்.
தோல்விகளை விழுங்கு, அடையாளத்தை தேடு
சினிமாத்துறை ஆரம்பத்துலே ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. என்னோட பிளஸ் என்ன, என்னோட மைனஸ் என்னன்னு எனக்கே தெரியாது. எந்த மாதிரி படங்களை என்னால செய்யமுடியும். எப்படி டிரெஸ் பண்ணனும். எப்படி நடிக்கணும். இதையெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு நாலு வருஷம் ஆச்சி.
இடையில் நிறைய தோல்விகள். எனக்கான நேரத்துக்காக, மீனைப்பிடிக்க காத்துக்கிட்டிருக்குற கொக்கு மாதிரி அமைதியா இருந்தேன்.
இயக்குனர் பாலாவோட ‘சேது’ பார்த்தப்போதான் எனக்கு ஏதோ ஒரு பிடிப்பு கிடைச்சமாதிரி உணர்ந்தேன். எந்த மாதிரியான படங்களை நான் நடிக்கணும்னு ஒரு ‘ஐடியா’ அப்போதான் கிடைச்சது. “உங்க இயக்கத்துலே ஒரு படம் நடிக்கணும்னு சார்” னு பாலா சாரிடமே கேட்டேன். அவரோட அடுத்த படமான ‘நந்தா’வில் நடிக்க வெச்சார். அதுக்கப்புறம் தொடர்ச்சியா ஏறுமுகம்தான்.
ரொம்ப ஈஸியா சொல்லிட்டேன். ஆனா வெற்றிக்காக பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அந்த நாலு வருஷத்திலே எவ்வளவு கேலி, எவ்வளவு கிண்டல், எத்தனை போராட்டம்?
சினிமாத்துறைக்கு வந்தும் நான் சரவணனாவே இருந்தேன். எப்படியாவது சூர்யாவா மாறிடணும்னு வெறித்தனமா உழைச்சேன். எனக்கு அப்போ சரியா டான்ஸ்கூட வராது. ஒரு பத்திரிகையில் கூட எழுதினாங்க. ‘இவர் டான்ஸே ஆடாமல் இருந்தா புண்ணியமா போகும்’னு. 24 வயசுக்கு அப்புறமாதான் டான்ஸே கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் ஸ்டண்ட் கத்துக்கிட்டேன். இதெல்லாம் சின்ன வயசுலேயே கத்துக்கிட்டாதான் உண்டுன்னு சொல்லுவாங்க. ஒரு மனுஷனாலே பண்ண முடியறது இன்னொரு மனுஷனாலே நிச்சயம் முடியும்னு நம்பினேன்.
இதற்கிடையே வேற ஒரு பிரச்சினையும். ‘நீ பார்க்க உங்கப்பா மாதிரியே இருக்கே. அவரு 20, 25 வருஷம் நடிச்சதைதான் திரும்ப நீயும் நடிக்கப் போறே. அவரைதானே அப்படியே நீ ஜெராக்ஸ் பண்ணப்போறே’ன்னு நிறையபேர் பேசினாங்க. அவரோட ரத்தம் நான். அவரோட சாயல் என்னுடைய நடை, உடை, பாவனைகளில் இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனா எனக்கான ஒரு தனித்துவம் வேணும்னு விரும்பினேன்.
அப்பா நடிச்ச படங்களை பார்ப்பதை தவிர்த்தேன். அப்பா அப்போ டிவி சீரியல்களில் ரொம்ப நல்லா பண்ணிக்கிட்டிருந்தார். தினமும் வீட்டில் எல்லாரும் அப்பாவோட நடிப்பை பார்த்துக்கிட்டிருப்பாங்க. நான் வீட்டிலேயே இருந்தாலும் அதெல்லாம் பார்க்கமாட்டேன். அவரோட தாக்கம் எனக்குள்ளே ஊடுருவிடக்கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டேன். எனக்குன்னு ஒரு அடையாளத்தை நான் தேடிக்கிட்டிருந்த காலக்கட்டம் அது.
தொடர்தோல்விகளால் சோர்வடையும் போதெல்லாம் பாரதியார் கவிதைகள்தான் எனக்கு ஆறுதல்.
சுய அனுதாபம் கூடாது
யாருமில்லாத தனியறையில் சத்தமாகப் பாடுவேன். ஒருக்கட்டத்தில் என் உள்மன எழுச்சிகளை சமனப்படுத்த தியானம் செய்ய ஆரம்பித்தேன். அது மனதை ஒருமுகப்படுத்த, எனக்குள்ளேயே ஒரு சக்தியை வளர்க்க ரொம்பவும் உதவியது. என்னை நானே அப்போதுதான் நம்ப ஆரம்பித்தேன்.
அய்யோ நான் பாவம்னு அனுதாபத்தை எனக்கு நானே வளர்த்துக்காம இருந்தது என்னை சீக்கிரமா வெற்றி பெற வெச்சது. யாரிடமும் என் சோகத்தை பகிர்ந்துக்கிட்டதில்லை. ஏன்னா ஒருத்தரோட சோகம் இன்னொருத்தருக்கு அவ்வளவு முக்கியமா படாது.
நாம் எது நடக்கணும்னு விரும்புகிறோமோ, அதை உள்மனசுலே ஒரு விதையா விதைச்சிட்டு, செடியா வளர்க்கணும். அதுவே பூத்து, காய்ச்சி, பழம் தரும். அந்த நாலு வருஷம் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான பாடம் இது. அந்த காலக்கட்டத்துலே நான் என்னென்ன தப்பு பண்ணேன்னு எனக்கே தெரியும். திரும்பவும் எந்த காலத்திலேயும் அந்த தப்புகளை திரும்ப செய்யவே மாட்டேன்.
அப்பா கொடுத்த சுதந்திரம் என்னை பொறுப்புணர்வு கொண்டவனா மாற்றியது. என் குடும்பம் தந்த ஆதரவும், என்னோட போராட்டமான கட்டத்தில் ரொம்ப முக்கியமானது.
 கல்விதான் கரை சேர்க்கும்
சினிமாவில் அப்பாவின் அடையாளம் எனக்கு இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேனே தவிர, நான் பெரிதும் வியக்கும் ஆளுமை அவர். ஒரு எழுத்தாளர், ஓவியர், நடிகர்னு அவருக்கு ஏராளமான பரிமாணங்கள். அவரோட மற்ற பல திறமைகளை என்னாலே சரியா பின் தொடர முடியவில்லைங்கிற வருத்தம் எனக்கு இருக்கு.
ஆனா உடல்நலம் மீதான அக்கறை, சமூகம் மீதான பார்வைன்னு அப்பாவை அப்படியே பின் தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இதையெல்லாம் அப்பா எனக்கு தனியா டியூஷன் எடுக்கலை. ஆனா உணர வெச்சிருக்காரு.
காலுக்கு செருப்பு கூட இல்லாம ஸ்கூலுக்கு போய் படிச்ச மாணவர்கள் என்ன மார்க் எடுக்குறாங்க. பஸ்லயும், கார்லயும் ஸ்கூலுக்கு போன நாங்க என்ன மார்க் எடுக்கிறோம். கல்வி மட்டுமே தங்களை கரை சேர்க்கும்னு நெனைக்கிறவங்க கடைசியா எங்கே போய் சேரமுடியுது. இதுமாதிரியான விஷயங்களை எங்களுக்கு அனுபவப்பூர்வமா அப்பா காட்டியிருக்காரு. கல்விதான் சாமானிய மனிதனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய ஆயுதமா இருக்குங்கிறதை நல்லா புரிய வெச்சிருக்காரு. ஒரு ஏழை குடும்பத்தில் ஒரே ஒருவருக்கு நல்ல கல்வி கிடைச்சா, அவங்க குடும்பமே எப்படி மாறுதுங்கிறதை அப்பாதான் காமிச்சார். ஒவ்வொரு வருஷமும் நல்ல மதிப்பெண் வாங்குற மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு பலவருஷமா உதவித்தொகை வழங்கிட்டு வர்றாரு. வாழ்க்கையிலே ஒளி தெரியாம திரியறவங்களுக்கு கல்விதாங்க கலங்கரை விளக்கம்.
கிடைப்பதைத் திருப்பிக் கொடு
மனிதர்கள் எல்லாருக்குமே ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய்தான். ஆனா நடிகனை மட்டும் சமூகம் ஸ்பெஷலா கொண்டாடுது. திரையில் நான் சிரிச்சா, படம் பார்க்குற அத்தனை பேரும் சிரிக்கிறாங்க. நான் அழுதா அத்தனை பேரும் அழுறாங்க. நேருக்கு நேர் படத்தில் நடிச்ச சூர்யா இல்ல, இப்போ நான். நான் சொல்லுறதை நிறைய பேர் கேட்கிறாங்க. நான் சொன்னா, அது சரியா இருக்கும்னு நம்பறாங்க. இப்படி எனக்கு அவங்களோட நம்பிக்கையை அள்ளி கொடுக்குற சமூகத்துக்கு நான் என்ன பண்ணனும்னு எனக்குள்ளே கேள்வி எழுந்துச்சி. இப்போ நான் பண்ணிக்கிட்டிருக்கிற சமூகப்பணிகள்தான் அந்த கேள்விக்கான பதில்.
அப்பா ஏற்கனவே செய்துக்கிட்டிருந்த கல்வி உதவித்தொகைங்கிற விஷயத்தை கொஞ்சம் பரவலா, பெரிய அளவுலே செய்ய ஆரம்பிச்சோம். நல்ல மதிப்பெண் வாங்குறவங்களுக்கு ஊக்கத்தொகைன்னு முன்னாடி கொடுத்துக்கிட்டிருந்தோம். அப்பாவோட வழிகாட்டுதல்படி ஒவ்வொரு மாணவனின் பொருளாதாரச் சூழலை வெச்சி உதவ தொடங்கினோம்.
‘அகரம்’ என்கிற சமூகச்சேவை அமைப்பு இங்கேதான் தொடங்குது. முழுக்க முழுக்க இலவசக்கல்வி வழங்குகிற ஒரு பெரிய தரமான பள்ளியை உருவாக்கணும் என்பது எங்களோட லட்சியம். அந்த மாதிரி பள்ளியை நடத்த அனுபவம் தேவை. காஞ்சிபுரம் பக்கத்துலே பாலூர் என்கிற ஊர்லே இருந்த ஒரு ஆதிதிராவிடப் பள்ளியை தத்தெடுத்து உதவ ஆரம்பித்தோம். அடிப்படை வசதிகளே இல்லாத அந்தப் பள்ளியை, ரெண்டு வருஷத்துலே தலைகீழா மகிழ்ச்சிகரமான வகையில் மாற்றினோம். இந்தமாதிரி மாத்தினதுக்கு எதிர்ப்பும் ஒரு பக்கத்தில் இருந்து வந்தது. ஆனா அரசுத்தரப்பில் கிடைச்ச நல்ல ஆதரவோடு எல்லாத்தையும் சமாளிச்சோம்.
‘அகரம்’ அமைப்புக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பிச்சது. பள்ளிக்கு உள்ளே மட்டுமில்லாம, பள்ளிக்கு வெளியேயும் கல்வி தொடர்பான பணிகளை தொடர்ந்தோம். டியூஷன் மாதிரி இல்லே இது. பள்ளியிலே கல்வி. பள்ளியை விட்டு வெளியே வந்தா, கல்வியை தாண்டி ஒரு மாணவனுக்கு எதுவெல்லாம் தேவைப்படுமோ அதையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருந்ததாலே தமிழ்நாட்டுலே ஒரு பதினைந்து இடத்துலே இந்தமாதிரி செய்ய ஆரம்பிச்சோம்.
நிறைய தன்னார்வலர்கள் எங்களுக்கு பக்கபலமா வந்தாங்க. நாலாவது, அஞ்சாவது படிக்கிற குழந்தைகளை தத்தெடுத்து, அவங்க கல்விக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டாங்க. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அண்ணாவையோ, அக்காவையோ, சித்தப்பாவையோ, சித்தியையோ, மாமாவையோ, அத்தையையோ – இரத்த உறவு இல்லாத – புது உறவுகளா ‘அகரம்’ அறிமுகப்படுத்திச்சி. வாரத்துக்கு ஒரு முறையோ, மாசத்துக்கு ஒருமுறையோ இந்த உறவுகள் சந்திச்சி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. ‘வாழை’ என்கிற சமூக அமைப்பின் இந்த கான்செப்டை புடிச்சி, வழிகாட்டிகள் என்கிற பேருலே இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சோம்.
ஒத்த சிந்தனை உள்ளவங்க ஒண்ணு சேர்ந்தா எதையெல்லாம் நினைக்கிறோமோ, அதையெல்லாம் செய்ய முடியும். யாராவது நல்ல விஷயம் செய்யுறதா கேள்விப்பட்டோம்னா, அதை பாராட்டுறதோட நிறுத்திக்காம, தங்களையும் நிறையபேர் இணைச்சுக்கறாங்க.
பத்திரிகையாளரா அறிமுகமாகி, எனக்கு நல்ல நண்பரா மாறியவர் ஞானவேல். நான் எதையெல்லாம் செய்ய ஆசைப்படுகிறேனோ, அதையெல்லாம் அவர் செய்து முடித்துக் கொடுக்கிறார். இதற்காக அவரோட வேலையை விட்டுட்டு என்னோட வந்து சேர்ந்தார். அப்புறம் ஜெயஸ்ரீ வந்தாங்க. ஞானவேல் வேலைகளை அவங்களும் தொடர்ந்து செய்யுறாங்க. இப்போ அகரம் அமைப்பின் செயலர் இவங்க. என்னோட பணி என்னன்னா, கொஞ்சம் ஓய்வு கிடைச்சாலும் அகரத்துக்கு செலவிடறேன். பொருளாதாரரீதியா உதவக்கூடிய சக்தியும் எனக்கு இருக்கு. ‘அகரம்’ என்னோடதோ, வேறு யாரோடதோ கிடையாது. பல பேரின் உழைப்பு, சேவை மனப்பான்மையில் இயங்குகிற அமைப்பு இது. இது முழுக்க முழுக்க ஒரு மக்கள் இயக்கம்.
நல்ல மனிதர்களை உருவாக்கினால் நல்ல சமூகத்தை உருவாக்கலாம்
சரி. நிறைய பேருக்கு கல்விக்கான வழிகாட்டுதலை கொடுக்கிறோம். கல்வியை முடிச்சதுக்கப்புறம்?
ஒரு புள்ளிவிவரம் பார்த்தோம். பள்ளிக்கல்வியை முடிக்கும் ஏழை மாணவர்களில் வெறும் பதினைஞ்சு சதவிகிதம் பேருதான், உயர்கல்விக்கு போறாங்க. கையெழுத்து போடத் தெரிஞ்சா மட்டும் படிச்சவன் கிடையாது. பத்தாவதோ, பண்ணிரெண்டாவதோ படிச்சிட்டா மட்டும் படிச்சிட்டதா அர்த்தம் கிடையாது. பட்டப்படிப்பு முடிச்சாதான் ஒரு முழுமையான கல்வியை கற்றதா அர்த்தம்னு நம்பறேன்.
+2லே ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூத்தி ஐம்பது எடுத்த பசங்க கூட, காலேஜூக்கு எங்கே போறது, எப்படி விண்ணப்பிக்கிறது, காலேஜூக்கு போனா காசு செலவாகுமேன்னு பயந்துக்கிட்டு திருப்பூர் பனியன் பேக்டரிக்கோ, இல்லைன்னா ஆடு, மாடு வாங்கி தனியா தொழில் பண்ணவோ ஆரம்பிச்சிடறாங்க. யாரையாவது உதவி கேட்கணும்னு கூட தோணாதவங்க இவங்க.
இவங்களை தேடி கண்டுபுடிச்சு, “நீதானே +2லே இவ்வளவு மார்க் வாங்கினே? நீ காலேஜ் படிக்கணும், வா”ன்னு கூப்பிட்டு அவங்க பட்டப்படிப்பு முடிக்கிறதை எங்க பொறுப்பா எடுத்துக்கிட்டோம்.
டிகிரி முடிச்சதுக்கப்புறம்?
வேலை வேணும் இல்லையா? ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மாதிரி நடத்தி அவங்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்கிறோம். எங்க அகரம் பவுண்டேஷனுக்கு ஆதரவு கொடுக்கிற தன்னார்வலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்னு பலரும் இதுக்கு உதவறாங்க.
கல்வியை கொடுப்பது மட்டுமில்லை. வாழ்க்கையையும் ஒருத்தருக்கு வழங்கறதுதான் எங்களோட ‘விதை’ திட்டம். நல்ல மனிதர்களை நாமே உருவாக்கி விதைத்தால்தான் எதிர்காலத்தில் சமூகம் நல்லமாதிரியா வளர்ந்து நிற்கும் என்பது எங்களோட எண்ணம்.
மாற்றம் வெளியில் இருந்து வராது
கல்விதான் எல்லாத்தையுமே மாற்றும். வெறுமனே மாற்றம், மாற்றம்னு சொல்லிக்கிட்டிருக்கிறதுலே பிரயோசனம் இல்லை. மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தந்தாகணும். நம்ம சமூகத்தோட பிரச்சினை ஊழல்னு எல்லாரும் சொல்லுறோம். இதை எப்படி சமாளிக்கப் போறோம்? எல்லா கெட்ட விஷயத்துமே மூலம் அறியாமை. கல்வி என்கிற வெளிச்சம் மட்டுமே அறியாமை இருளை போக்கும். ரொம்ப கஷ்டப்படுற குடும்பங்களில் இருந்து வர்றவங்க கல்வியின் மூலமா நல்ல வாழ்க்கையை அடைஞ்சாங்கன்னா, நிச்சயமா வழிதவறவே மாட்டாங்க.
ஊழலை ஒழிக்கணும்னா யாராவது மூணாவது ஆளு வந்து ஒழிச்சிட மாட்டாங்க. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள்ளேதான் இதற்கான போராட்டத்தை நடத்தணும். எல்லாருமே கூடுதலான ஏதோ ஒரு வசதியை எதிர்ப்பார்க்கும்போதுதான் ஊழல் தொடங்குதுன்னு நெனைக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களிலே கூட நாம ஊழலுக்கு எதிரா நின்றாகணும். நீங்க வாங்குற ஒரு வீட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துலே பதிவு பண்ணும்போது கூட, முறையா எந்த விதிமுறையையும் மீறாம செய்யணும். இதுலே உங்களுக்கு ஒரு சின்ன லாபத்தை எதிர்ப்பார்த்து, லேசா மீறினாகூட அதுவும் ஊழல்தான்.
இப்போதைய பிரச்சினை என்னன்னா நாம யாரை பின் தொடரணும், யாரை முன் நிறுத்தணும் என்கிற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். இவர் ஒழுங்கா, அவர் ஒழுங்கான்னு மாத்தி, மாத்தி கேட்டுக்கிட்டிருக்கோம். நாம ஒழுங்கா இருந்தாதான் இவர், அவர் எல்லாம் ஒழுங்காவாங்கங்கிறதை நாம முதல்லே புரிஞ்சுக்கணும்.
அரசியல் தப்பில்லை, ஆனா எனக்கு வேணாம்
வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விட மாட்டேன். என் மனசுக்கு புடிச்ச விஷயங்களை செய்யணும். எனக்கு இப்போது சமூகத்தில் இருக்கும் இடத்தையும், அடையாளத்தையும் கொடுத்தவர்களுக்கு, எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன். நாங்க செஞ்சிக்கிட்டிருக்கிற வேலைகளை சேவையென்று சொல்லமாட்டேன். இது எங்களோட பொறுப்பு. இதுக்கு எந்த அரசியல் நோக்கமும் நிச்சயமா கிடையாது.
நான் அரசியலுக்கு போகமாட்டேன்னு சொல்றதாலே, அரசியலை வெறுக்குறதா அர்த்தமில்லை. மவுனமா, உன்னிப்பா அரசியலை கவனிக்கிறேன். மனசுக்குப் புடிச்சி, முழுமையா அர்ப்பணிப்பு உணர்வோட அரசியலில் ஈடுபட முடியும்னா, யார் வேணும்னாலும் ஈடுபடலாம். அரசியலை முழுமையாக தெரிஞ்சுக்கிட்டு இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். அரசியலின் கஷ்ட, நஷ்டங்கள் என்னென்ன என்பதை அறிஞ்சிக்கிட்டு வரணும்.
வெற்றியின் ரகசியம்
எனக்கு பெரிய ஆதர்சம் என்று சொன்னால் ஏ.ஆர்.ரஹ்மானும், டோனியும்தான். எவ்வளவு பெரிய வெற்றிகளை குவித்தும், அடக்கமா எப்படி இருக்க முடியும் என்பதை இவங்க கிட்டேதான் கத்துக்கணும். ஆஸ்கர் விருதை ரஹ்மானும், உலகக் கோப்பையை டோனியும் தள்ளிநின்று மூணாவது மனிதர்களாக பார்க்கக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருக்காங்க. இந்த மனப்பான்மையை வளர்த்துகிறதுதான் அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்க உதவும். இல்லேன்னா கிடைச்ச வெற்றியையே நினைச்சி, நம்மை நாமே மெச்சிக்கிட்டு தேங்கிடுவோம்.
எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்க செய்துக்கிட்டிருக்கிற வேலையோட சிறப்பான எல்லையை தொடணும். எதை எடுத்துக்கிட்டாலும், எதை கத்துக்கிட்டாலும், எதை நினைச்சாலும், எப்படி செயல்பட்டாலும் முழுமையாக, சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. நான் என்னுடைய துறையில் வெற்றி கண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பினால், இதுமட்டும்தான் என்னுடைய வெற்றி ஃபார்முலா.
நேர்காணல் : யுவகிருஷ்ணா, அதிஷா
(நன்றி : புதிய தலைமுறை)

20 ஏப்ரல், 2011

உன்னதம் உங்கள் இலக்கா?

நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சித்துக் கொண்டிருப்பவரா? தயவுசெய்து நம்புங்கள். உங்கள் இலக்கான உன்னத நிலையை மனப்பயிற்சி மூலமே அடைந்துவிடலாம். எதிலும் உன்னதம் என்ற மகத்தான நிலையை அடைய உங்களை தயார்படுத்துகிறது ‘எக்ஸலண்ட்’ என்ற புத்தகம்.

நெய்வேலி நகரில் ஒரு பாடாவதி தியேட்டரில் அந்த பத்திரிகையாளர் ஒரு படம் பார்க்கிறார். படம் பார்த்து முடித்ததும் அவரிடம் நம் நூலாசிரியர் கேட்கிறார். “எப்படி இருந்தது படம்?”. வந்த பதில் வித்தியாசமானதாக இருந்தது. “இந்த வருஷத்துக்கு இதுதான் படம்!” அந்தப் படம் ‘சுப்பிரமணியபுரம்’. “இதுதான் படம்!” என்று தமிழகமே கொண்டாடியது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

அந்தப் படம் இயக்குனர் சசிகுமாருக்கு முதல் படம். கிட்டத்தட்ட அந்தப் படத்தில் பங்கேற்ற பலருக்கும் அதுதான் முதல் படம். தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்ட ‘முதல் முயற்சிகளில்’ தலைசிறந்ததாக இம்முயற்சி திரைப்பட வல்லுனர்களால் போற்றப்படுகிறது. எப்படி இது சசிகுமாருக்கு மட்டும் சாத்தியமானது?

ஏனெனில் அவர் உன்னதமானவற்றை மட்டுமே முயற்சித்தார். அதனால் அவரால் நல்ல ஒரு விஷயத்தை பெறவும், மக்களுக்கு தரவும் முடிந்தது. ஒரு ‘சுமாரான’ சரக்கை உத்தேசிக்கும்போது அது நீங்கள் உத்தேசித்த சுமாரான அல்லது மோசமான தரத்திலேயே உற்பத்தியாகும். எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. அது ஒரு கட்டாயமும் கூட.

சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது எப்படி?

கொலம்பியாவை சேர்ந்த எழுத்தாளர் காபிரியேல் கார்ஸியா மார்க்குவேஸை துணைக்கு அழைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். ரொம்ப நாளாக எழுத உத்தேசித்திருந்த ஒரு நாவலின் மொழி அந்த எழுத்தாளருக்கு பிடிபடவேயில்லை. குடும்பத்தோடு காரில் சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்தபோது திடீரென தட்டுகிறது ஒரு பொறி. பாட்டி கதை சொல்லும் தொனிதான் அந்நாவலுக்கான மொழி.

காரை வீட்டுக்கு திருப்புகிறார். ஓர் அறைக்குள் புகுகிறார். எழுத ஆரம்பிக்கிறார். எப்போதாவது பசித்தால் சாப்பாடு. வீடு, மனைவி, குழந்தைகள் எல்லாமே மார்க்குவேஸுக்கு மறந்துபோகிறது. எத்தனை நாட்களுக்கு? கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு. குளிக்காமல், சாப்பிடாமல், தூங்காமல், சவரம் செய்யாமல், மனநிலை குன்றியவரைப் போல எழுதிக்கொண்டே இருப்பது அத்தனை அவசியமா என்ன? இந்த கேள்விக்கு 1967ல் வெளியான அந்த நாவல் பதில் கொடுத்தது.

நூற்றாண்டு கால தனிமை (One Hundred Years of Solitude) என்கிற அந்நாவல் இன்றுவரை விற்பனையில் சாதனை படைக்கும் மாபெரும் இலக்கியம். நவீன படைப்பிலக்கத்துறையில் இன்றுவரை தோன்றிய உன்னத படைப்புகளின் சிகரம். மார்க்குவேஸை படைப்பாளிகளும், வாசகர்களும் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

உன்னத இலக்கை அடைய எளிய குறுக்குவழி உழைப்புதான் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். சரி. கடுமையான உழைப்பாளி உன்னதநிலையை அடைந்துவிட முடியுமென்றால் நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக மூட்டை தூக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் மூட்டை மட்டுமே தூக்கிக் கொண்டிருப்பார்களா என்றொரு கேள்வி உங்களுக்கு எழுமே?

உன்னதமான நிலையை அடைவதற்கு உழைப்பு மட்டுமே ஒரே ஒரு பாதையல்ல. ஏராளமான வழிகள் உண்டு. வழிகளை அறிய இப்புத்தகத்தை வாசிப்பதுதான் உங்களுக்கு நாம் சொல்லக்கூடிய எளியவழி. வழுக்கும் மொழி நடையில், வாழ்வியல் உதாரணங்களோடு, நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு பக்கமும் சிலையை செதுக்கும் நேர்த்தியோடு எழுதப்பட்டிருக்கிறது.

இளையராஜா, கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், இசைக்கலைஞர் யானி, இயக்குனர் ஜி.வி.ஐயர், ஒசாமா பின்லேடன், பாரதிராஜா, மகாத்மா காந்தி என்று பலரும், இதுவரை நாம் கண்டிராத பல்வேறு பரிமாணங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.

இந்த புத்தகம் உருவான பின்னணிக்கதை சுவாரஸ்யமானது. தன் மனதுக்கு உகந்த சிந்தனைகளை நண்பர்களுக்கும், அலுவலக சகாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அவ்வப்போது எழுத்தாளர் பா.ராகவன் பகிர்ந்துகொள்வார். ஒரு சில ஆண்டுகளில் அவர் அனுப்பிய மின்னஞ்சல்களை, மீள்பார்வை செய்துபார்த்தபோது அவருக்கே அவை உன்னதமானவையாக தோன்றியிருக்கின்றன. உன்னதத்தை போதிக்கும் ஒரு உன்னதப் புத்தகம் தயாரான கதை இதுதான்.

நூல் வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-600 018. விலை ரூ.70. நூலாசிரியர் : பா.ராகவன்.

இணையத்தில் நூலை வாங்க...

19 ஏப்ரல், 2011

நன்றியோ நன்றி!





ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனுஷ்யபுத்திரன் தொலைபேசி சொன்னபோது நம்பவே இயலவில்லை. “சொக்கா, சொக்கா... பத்தாயிரம் எனக்கா?” என்று மகிழ்ச்சியில் குதித்தேன்.

ஆம் நண்பர்களே. விருது, பாராட்டுப் பத்திரம், இதனால் கிடைக்கப்போகும் பெயர் இதையெல்லாம் விட ‘பத்தாயிரம்’தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஏனெனில் கடனட்டை நிலுவைத்தொகை கழுத்தை நெரிக்கிறது. இதுதான் சார் யதார்த்தம். மத்ததெல்லாம் சும்மா பதார்த்தம்.

‘நாட்டாமை’ கவுண்டமணியின் பிரச்சினை அப்போதுதான் எனக்கு புரிய நேரிட்டது. விஷயம் தெரிந்ததிலிருந்தே “டீச்சரை நாட்டாமை தம்பி வெச்சிருக்காரு டோய்” என்கிற டைப்பில் விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல்.. நேற்று மாலை ஆறு மணி வரை நான் தவித்த தவிப்பை எழுதிட தமிழில்/இங்கிலீஷில்/ஸ்பானிஷ் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை. எகிறிக்குதித்து, தலையால் வானத்தை இடித்துப் பார்த்துவிடும் வண்ணம் சூப்பர்மேனாக பிறந்துத் தொலைக்கவில்லையே என்கிற ஆற்றாமை ஏற்பட்டது.

விருது பெற்றவர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பது பொதுவிதி. சைக்கிள் கிடைத்தாலே மிதிமிதியென மிதிக்கும் அடங்காப்பிடாரியான எனக்கு புல்லட்டு கிடைத்திருக்கிறது. டபடபவென ஒலி எழுப்பி, ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துவிட மாட்டோமா?

குருநாதர் கெளதம்
காட்ஃபாதர் பா.ராகவன்
ஆசிரியர் மாலன்
அண்ணன்கள் யெஸ்.பாலபாரதி, சிவராமன்
பின் தொடரும் நிழலின் குரலான தோழர் அதிஷா

ஆகியோரே இவ்விருதுக்கான பெருமைக்கும், இனி எனக்கு எழுத்து அடிப்படையில் ஏதேனும் சிறப்புகள் நேர வாய்ப்பிருந்தால் அதற்கும் உரித்தானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நான் இயங்கிக் கொண்டிருக்க காரணமாக இருப்பவர்கள்.

பிறந்தவீடான கிழக்கையும், புகுந்த வீடான புதிய தலைமுறையையும் இவ்வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். எனது எழுத்துகளை பிரசுரித்த குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்தவிகடன், அகநாழிகை, பில்டர்ஸ் வேர்ல்டு, பெண்ணே நீ, குங்குமம், தினகரன் வசந்தம், கீற்று, 4தமிழ்மீடியா, யூத்ஃபுல் விகடன் உள்ளிட்ட அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கும் நன்றியோ நன்றி.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், எழுத்தாளர் சாருநிவேதிதா, தினமலர் வாரமலர் ஆபிஸ்பாய் அந்துமணி, எழுத்தாளர் ராஜூமுருகன், க.சீ.சிவக்குமார் ஆகியோரின் எழுத்துக்களை பிட் அடிப்பதைத் தவிர்த்து வேறெதையும் இதுவரை புதியதாக செய்துப் பார்த்ததில்லை. கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனக்கான தனித்துவம் ஒன்றினை தேடிக்கண்டிட ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

குறைந்தபட்சம் 50 வயதுவரை இலக்கியவாதி ஆகும் எண்ணம் இல்லை என்பதைக்கூறி எனது வலைப்பூவை வாசிக்கும் தோழர்கள் வயிற்றில் இவ்வேளையில் பாலை வார்க்கிறேன்.

மேலும், இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆதரவும், ஊக்கமும் அளித்த தோழர்கள் முத்து (தமிழினி), முத்துக்குமரன், குழலி, பொட்டீக்கடை சத்யா, வரவனையான் செந்தில், செந்தழல் ரவி, சுகுணாதிவாகர், கோவி.கண்ணன், கேபிள்சங்கர், அகநாழிகை, பொன் வாசுதேவன், கார்க்கி, முரளி கண்ணன், பரிசல்காரன், அப்துல்லா, தமிழ்குரல், பகுத்தறிவு, லெனின், மதன் செந்தில், அருண், சுத்தத்தமிழ், வேக்கப்கால் உள்ளிட்ட ஏராளமான இணையத் தோழர்களும் எனது நன்றிக்குரியவர்கள். (விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்)

வலைப்பூ எழுதுவதற்கு முன்பாக நான் எழுதிப் பழகிய கருத்துக் களங்களான சிஸ் இந்தியா, தட்ஸ் தமிழ் மற்றும் தமிழ்நாடுடாக் ஆகிய தளங்களுக்கும் நன்றி.

எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை.

எனது வலைப்பூவை 2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகளுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் சாருநிவேதிதா, தமிழ்மகன் மற்றும் ஷாஜி ஆகியோருக்கு 100 மடங்கு நன்றிகள். உயிர்மை பதிப்பகத்துக்கும், அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் கோடி நன்றிகள்.

பி.கு : என்னுடைய தனித்துவ அடையாளமாக (?) நான் திரும்பிப் பார்க்கும் திமுக கொடி கலர் சர்ட்டு போட்ட படம் சமீப ஆண்டுகளாக உருவெடுத்திருக்கிறது. நான் எழுதும் புத்தகங்களின் பின்னட்டையிலும், விக்கிப்பீடியா பக்கத்திலும், இன்னும் ஏராளமான இடங்களிலும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை 2007ஆம் ஆண்டு எடுத்த தோழர் மோகன்தாஸ். லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணாவுக்கு முகம் கொடுத்த அத்தோழருக்கும் இவ்வேளையில் ஸ்பெஷல் நன்றி.

18 ஏப்ரல், 2011

ஐந்து குட்டிக் கதைகள்!

மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால் ஒரே கதையாகவும் விளங்கும்.



மாப்பிள்ளையும், பொண்ணும்!

"பொண்ணு உன் தங்கச்சி மவனுக்குதானே?"

"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு அவ பொண்ணை தந்தாவணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்பத்து வழக்கம்"

“சொந்தத்துலே கொடுத்தா அதுகளுக்கு பொறக்குற புள்ளைகளுக்கு ஊனம் வரும்னு சொல்றாங்களே?

“சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதுக்கோசரம் உறவை வுட்டுத் தந்துட முடியுமா?

பிறந்து ஒரு நாள் கூட ஆகாத ‘பொண்ணுதூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வந்திருந்த ‘மாப்பிள்ளைகுச்சி மிட்டாய் சப்பிக் கொண்டிருந்தான்.


யாரைடி கட்டிப்பே?

"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"

"கொமாருமாமாவைத்தான் பெரியவளானா கல்யாணம் கட்டிப்பேன்!"

கொமாருமாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அடிக்கத் துரத்தினான். அத்தைகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டவளை பிடிக்கவியலாத இயலாமையில் அழுதுகொண்டே, "நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அதுமாதிரி பேசவேணாம்ணு சொல்லு!"

அவனது அழுகை சிரிப்பையும், குதூகலத்தையும் சொந்தங்களுக்கு தந்தது. திரும்ப கேட்டார்கள். "ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"

ம்.......இம்முறை அவள் யோசித்துக் கொண்டேயிருக்க...

அரண்டுபோன அவன் மனசுக்குள் கத்தினான். கொமாரு மாமாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுடி சனியனே!


கொருக்கலிக்கா, முந்திரிக்கா!

தென்னை ஓலைகளுக்கு இடையே பார்த்தபோது புத்தம் புதுசாய் தெரிந்தாள். ஓலை பின்னிக் கொண்டிருந்தான் முறைமாமன்.

முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் சிகப்பிட்டிருந்தது. போனவாரம் விளையாடும் போதுகூட, கொருக்கலிக்கா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டுவா!ராகத்தில், கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ! என்று பாடி, செமஅடி வாங்கினாள். பெண் உடனே பெரியவள் ஆகிவிடுகிறாள். ஆண் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவள் கட்டிக்கச் சொல்லி கேட்கமாட்டாளா என்று ஏங்கினான்.

“மாமாமெல்லிசாக கூப்பிட்டாள்.

‘என்ன?

“என்னைக் கட்டிக்கிறியா மாமா?

 "போடி மூக்குச்சளி. உன்னை எவன் கட்டிப்பான்?"


செருப்பால அடிப்பேன்!

"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"

"
என்ன பேசுறது?" சொல்லியாக வேண்டும் என்று தோன்றினாலும், எப்படி சொல்லுவது என்கிற தயக்கத்தில் இருந்தான்.

"
சும்மா ஏதாவது பேசேன்" அவளே தூண்டினாள்.

"
உங்கிட்டே திடீர்னு 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?" நூல்விட்டான்.

"
செருப்பால அடிப்பேன்" மிரண்டுப்போய் எழுந்து விட்டான்.

"சொன்னது என் அத்தைப்பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்" சத்தமின்றி, முணுமுணுப்பாய் தலைகுனிந்து சொன்னாள்.

அத்தைப்பையனான அவனுக்கு கடற்காற்றின் சத்தத்தில் அவள் சொன்னது கேட்கவேயில்லை.


பஜாரியான தேவதை!

"நீ பார்க்க எப்படி இருப்பே?"

"
ஜோதிகா மாதிரி இருப்பேன்"

"
நானும் சூர்யா மாதிரி இருப்பேன்"

"
அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"

"
ஆமாம். சூர்யா மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"

"
அதானே பார்த்தேன்?"

"
சூர்யாவை விட சூப்பரா இருப்பேன்"

"
அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"

"
நேர்ல வேணா பாப்போமே?"

"
பார்க்கலாம் சார். நேரா உங்க வீட்டுக்கு வாங்க"
“அய்யய்யோ பொண்டாட்டி. நீயாடி? இது என்ன புது நம்பர்?

“என் பிரெண்டோட நம்பர். முதல்லே வீட்டுக்கு வாடா. வெச்சுக்கறேன்

தேவதைகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. மாமன்களுக்கு மகள்களாக பிறக்கிறார்கள். என்ன? கல்யாணம் கட்டிக் கொண்டதற்குப் பிறகுதான் பஜாரிகளாக மாறிவிடுகிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம் 17-4-2011)