23 ஜூன், 2009

’அவள்!’


விக்கித்துப் போயிருந்தான்.

அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.

“நீ மட்டும் யோக்கியமா?”

யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?

ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்...


வார்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா.

”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” - அழுதுகொண்டே அரற்றிய அத்தை.

“மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” - மாமா மகன்.

தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான்.

மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் ‘அவள்’


லகமே மகிழ்ச்சியைக் கொண்டாடிய அந்த புத்தாண்டு இரவு அவளுக்கு மட்டும் துயர் தந்ததாய் இருந்தது.

“உங்க மாமா குடும்ப கவுரவம் உங்களுக்கு முக்கியமானதா இருக்கலாம். அதுக்காக நான்?”

“.................”

இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவளுக்கு திருவேற்காட்டில் ரகசியத் தாலி காட்டியிருந்தான். இரண்டாண்டு தெய்வீகக் காதல். இன்னும் திருமணமானது ரெண்டு வீட்டுக்கும் தெரியாது.

அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.

அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.


ழகான ஆண்குழந்தை.

“அப்பனை உரிச்சு வெச்சிருக்கு” சொன்னபோது திடுக்கிடலாய் நிமிர்ந்தாள் ’அவள்’. அவனும் கூட.

அவனுக்கும், அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் மட்டும்தானே தெரியும் அப்பன் யாரென்பது.

அவனுக்கு குழந்தை பிறந்தது என்று சுற்றம் கொண்டாடியது. யாரோ ஒருவனின் குழந்தைக்கு இனிஷியல் மட்டுமே தரவேண்டிய தன் விதியை நினைத்து மீண்டும் அழுதான். தனிமையில் அழுதான்.


குடும்பத்தோடு திருவேற்காடு போயிருந்தான். இனிஷியல் மகனை தோளில் சாய்த்திருந்தான்.

ஆயிரம் கல்யாணம் நடத்திவைத்த அர்ச்சகருக்கு இவன் முகம் மட்டும் நினைவில் இருந்து தொலைக்க வேண்டுமா?

“இதுதான் உன் ஆம்படையான்னா, அன்னைக்கு தாலி கட்டினியே? அந்தப் பொண்ணு யாருவோய்?”

உண்மை விளங்கி திரும்பவும் மாமா அழுதார்.

“உன் வாழ்க்கையையும் வீணடிச்சிட்டேனே?” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சந்நிதியில் அழுதார். சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறித்த பிரக்ஞ்சை இன்றி அழுதார்.

ச்சே. இந்த ஆளுக்கு அழமட்டும் தான் தெரியும்.

’அவள்’ இம்முறை பார்த்தாள். வெறுப்போடு பார்த்தாள். கண்களில் தீக்கங்குகளை வைத்துப் பார்த்தாள்.


“யாரு போனுலே?”

“யாரா இருந்தா உனக்கென்ன?” அவள்.

பேருக்கு கணவன் - மனைவியாக இருப்பவர்கள் பேசிக்கொள்வது இப்படித்தானே இருக்கும்? உடலைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்களால் உள்ளத்தை மட்டுமா பகிர்ந்துகொள்ள முடியும்?

அடிக்கடி அவளுக்கு போன் வந்தது. குழந்தை அழுவதைக் கூட சட்டை செய்யாமல் போனில் பேசினாள். சிரித்து சிரித்துப் பேசினாள். ஒருவேளை தான் இனிஷியல் கொடுத்த குழந்தையின் உண்மை அப்பனோ?


நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தாள்.

குழந்தையை க்ரெச்சில் சேர்த்திருந்தாள். எதையும் அவன் கேட்டதில்லை.

ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கேட்டான்.

”எங்கே போயிட்டு வர்றே?”

லேசான வார்த்தைகளில் தொடங்கிய உரையாடல் சூடுபிடித்து உச்சத்தை அடைந்தது.

அப்போதுதான் கேட்டாள் அவள்.

“நீ மட்டும் யோக்கியமா?”

முதல் பத்தியில் தொடங்கிய பிளாஷ்பேக் முடிவுக்கு வந்தது.


விடிந்த பொழுது மோசமான பொழுது.

அவள் ஓடிவிட்டிருந்தால் குழந்தையோடும், கட்டியச் சேலையோடும்.

குழந்தைக்கு உண்மையான இனிஷியல் ஒருவேளை கிடைத்திருக்கக் கூடும்.

மாமா திரும்ப அழுதார். அவர் குடும்பமே சேர்ந்து அழுதது. அழுமூஞ்சிக் குடும்பம்.

ஊரை காலி செய்தான். வீட்டை விற்றான். பணிமாற்றல் வாங்கினான்.

“இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணும் வேணும்னா பார்க்கட்டா?” விசும்பியபடியே கேட்ட மாமாவை முறைத்தான்.


டல் வேட்கையோடு அங்கே போனவனுக்கு உள்ளம் வெடித்தது. சுக்கு நூறாய். சுக்கு ஆயிரமாய். சுக்கு லட்சமாய்.

மூன்றாவது பத்தியில் பார்த்த ‘அவள்’ இவள்.

சினிமா ஆசையில் ஓடிவரும் இளம்பெண்களுக்கும், குடும்பத்தை மறந்து திருட்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலருக்கும் ஏற்படும் அதே கதி.

பாவத்தை மறைக்க, மறுக்க என்ன செய்வதென்று புரியவில்லை.. தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டான்.

அவளின் நகைகளை இவளுக்கு போட்டு அழகு பார்த்தான்.

“இனிமே நீயே வெச்சுக்கோ” அவனுக்கே கேட்காமல் முணுமுணுத்தான்.

அதன்பின் ஒருவரியும் பேசவில்லை இருவரும். முன்பு மனதால் இணைந்தவர்கள் இன்று உடலாலும் இணைந்தார்கள்.

அவள் முகம் பார்த்தான்.

அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.

அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், இப்போதும் ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.

உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!

22 ஜூன், 2009

தமிழ் வலையுலகம் - கார்ட்டூன்கள்!

படங்களில் காணும் வாசகங்களை படிக்கமுடியாத அளவுக்கு கண்ணு டொக்கு ஆகிவிட்டிருந்தால் படங்களை அழுத்தி பெரிதாக்கி படிக்கவும்!




19 ஜூன், 2009

மென்பொருள் கூலிகளின் அவலம்!

நம் தெருவில் நம்மை மாதிரியே சாமானியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்றிருக்கும். அந்த வீட்டு பசங்களும் நம்மை மாதிரியே கேரம்போர்டுக்கும், உட்டன் செஸ்போர்டுக்கும் ஏங்கும் பயல்களாக இருந்திருக்கலாம். திடீரென்று அந்த குடும்பத்தில் யாருக்கோ நல்லவேலை கிடைத்து நிறைய பணம் மரத்தில் காய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன நடக்கும்?

தெருவில் கோலியும், பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்த பயல்கள் விதம் விதமான விளையாட்டுப் பொருட்களோடு தெருப்பயல்களுக்கு போங்கு காட்டுவார்கள் இல்லையா? மற்ற பயல்கள் அவர்களை அதற்குப் பிறகு எப்படிப் பார்ப்பார்கள்? என்னமாதிரியாக மதிப்பிடுவார்கள்? இதே உதாரணம் உளவியல்ரீதியாக மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களையும், மற்ற தொழில்களில் அற்பசம்பளம் வாங்குபவர்களையும் ஒப்பிடும்போதும் பொருந்தும். பரம்பரை பணக்காரர்களை (வேறு வழியின்றி) சகித்துக் கொள்ளுபவர்கள், புதுப்பணக்காரர்களை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை? பெரியளவிலான உடலுழைப்பின்றி தகுதிக்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். சைக்கிளுக்கே லாட்டரி அடித்தவர்கள் காரில் பறக்கிறார்கள். ஃபிளாட் வாங்குகிறார்கள். விலைவாசியை ஏற்றுகிறார்கள். வாடகை இவர்களால் உயர்ந்துவிட்டது. ஆட்டோக்காரன் கூட இப்போதெல்லாம் நூறு ரூபாய்க்கு சில்லறை தரமாட்டேன் என்கிறான். பூமியில் கால்படாவண்ணம் ஒரு அடி அந்தரத்திலேயே நிற்கிறார்கள். அர்த்தராத்திரியிலும் வெய்யிலுக்கு குடைபிடிக்கிறார்கள். கிட்டத்தட்ட என் நினைப்பும் இதேதான், இரா.முருகனின் ‘மூன்று விரல்’ வாசிக்கும் வரை.

பிரச்சினை பொறாமைக்கார சமுதாயத்தின் மீது மட்டுமல்ல. மென்பொருள் அலுவலர்களிடமும் உண்டு. சமூகத்தை விட்டு அவர்கள் பொதுவாக விலகிச்செல்வது மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.டி.யில் வேலை பார்ப்பவன் பிராமணன் மாதிரி நாலுபேர் மத்தியில் தனித்து தெரிகிறான். இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ பிறந்த பரம்பரை மாதிரி ஃபிலிம் காட்டுகிறான். தன்னுடைய நியாயங்களை நிதானமாக புரியவைப்பதை தவிர்த்து தங்கள் மீதான சமூகத்தாக்குதலை மூர்க்கத்தனமாக எதிர்கொள்ளுகிறான். மென்பொருள் அலுவலர்களை குஷிப்படுத்துவதாக நினைத்து கடந்தவாரம் ஆனந்தவிகடனில் செல்வேந்திரன் எழுதிய கவிதை போன்ற தோற்றத்தில் இருந்த ஒரு விஷயம் கூட நிறையப்பேரை எரிச்சல் தான் படுத்தியிருக்கிறது. ”இவனுங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?” என்பதே மற்றவர்களின் மனோபாவம்.

இவர்களைப் போல இல்லாமல் இரா.முருகன் நயமாக மென்பொருள்துறைக்கு வக்காலத்து வாங்குகிறார். ’மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல்நாவல்’ என்ற அடைமொழியோடு, ஐடியில் வேலை பார்ப்பவனும் சாதாரண மனிதன் தான். எல்லோரையும் மாதிரி பிறந்தவன் தான். அவனுக்கும் காதல் உண்டு, காமம் உண்டு, பசியுண்டு, ஆசை ஆசாபாசங்கள் உண்டு, பிளேடால் கிழித்தால் அவனுக்கும் சிகப்பு கலரில் தான் இரத்தம் வழியும், அழுதால் உப்புச்சுவையோடு தான் கண்ணீர் வரும் என்றெல்லாம் பொறுமையாக பாடமெடுக்கிறார். புரியவைக்கிறார். மென்பொருள் பணியாளர்கள் தங்கள் மீது பொறாமைப்படும் சமூகத்தை எதிர்கொள்ளும் சரியான வழிமுறை இந்நாவல். நாவலாசிரியரும் ஒரு மூத்த தலைமுறை மென்பொருளாளர் என்றே தெரிகிறது.

சுதர்ஸன் மாயூரத்தில் பிறந்த அய்யங்கார் பையன். பணிநிமித்தமாக இங்கிலாந்துக்குப் போனாலும், தாய்லாந்துக்குப் போனாலும் வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் கிடைக்காதா என்று ஏங்குபவன். பணிச்சூழல் அவனை அவன் பிறந்த சமூகத்திடமிருந்து தள்ளிவைக்கிறது. காலம் காலமாக அவனது பரம்பரை அனுபவித்த இனிய விஷயங்களை அவனிடமிருந்து தட்டிப் பறிக்கிறது. அவனோடு படித்த மிளகாய் மண்டி ராஜேந்திரன் இரண்டு குழந்தை பெற்றுவிட்டான். இவனுக்கோ கல்யாணம் கூட பகல்கனவு. அம்மா மருத்துவமனையில் உயிருக்குப் போராடும்போதும், பொய்க்கேஸில் அப்பா லாக்கப்பில் தவிக்கும்போதும் எங்கோ தூரதேசத்தில் இருந்து அல்லல்படுகிறான்.

பணிக்கு வந்த தேசத்தில் விசா காலவதியாக கூட பணிபுரியும் நண்பன் ஜெயிலுக்குப் போகும் நிலை வரும்போது மூன்றாம்பிறை கமல்ஹாசன் மாதிரி மனம் பேதலித்துப் போகிறான். கழுத்தை இறுக்கும் டெட்லைன். கிட்டத்தட்ட ‘டெட்’ ஆகி, மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பிறந்த கலாச்சாரத்தை மறக்க முடியாமல், பணிச்சூழலால் வாழும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் வாழுகிறான்.

சுவாரஸ்யமான சம்பவங்களோடு கதை இவ்வாறே விரிவடைகிறது. 90களில் ஏற்பட்ட ஐ.டி மறுமலர்ச்சி, செப்.11 சம்பவத்துக்குப் பிறகான ஐ.டி. வீழ்ச்சி என்று கதையின் களமும், தளமும் அபாரம். குடிபோதையில் எவளோ ஒருவளை சம்போகித்துவிட்டு சுதர்சன் பிதற்றும் அத்தியாயங்களில் வாசகனுக்கும் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது. மிளகாய் மண்டி ராஜேந்திரன், இங்கிலாந்து ஜெஃப்ரி, மென்பொருள் காதலி சந்தியா, தாய்லாந்து அழகி னாய், சுபர்ணா, பாஸ்போர்ட் தொலைத்த ராவ் என்று கதாபாத்திரங்கள் கூர்மையான உளியால் செதுக்கப்பட்டவை.

ஒவ்வொரு விஷயத்தையும் விலாவரியாக எளிமையான மொழியில் கதை சொல்லிக்கொண்டே போகும் இரா.முருகன் சுஜாதாவின் இரண்டாவது வெர்ஷன். விகடன், குமுதம் மாதிரி வெகுஜன இதழ்கள் இவரொரு தீவிர இலக்கிய கும்மி என்று நினைத்து ஒதுங்கிப் போய்விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. முருகனின் எழுத்து நடுத்தர வர்க்கத்தை கச்சிதமாக டார்கெட் செய்து அடிக்கிறது.

சுவாரஸ்யமாக, விலாவரியான சம்பவங்கள் மற்றும் வசனங்களோடு ஜோராய் கிண்டி குதிரை மாதிரி ஓடிக்கொண்டிருந்த நாவல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போல தோன்றுகிறது. 2001 செப்.11க்குப் பிறகு வெகுவேகமாக எடிட்டப்பட்டு நாவல் நாடகத்தனமாய் ஓடுகிறது. க்ளைமேக்ஸ் வலிந்து திணிக்கப்பட்ட அநியாய சோகம். சுதர்ஸனை சாம்பார் வாளியெல்லாம் தூக்க வைத்திருக்க வேண்டியதில்லை.

மூன்று விரல் - மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் வாசித்து, மற்றவர்களுக்கு கட்டாயம் பரிந்துரைக்க வேண்டிய புத்தகம். இந்நாவலுக்கு ஏன் இந்த தலைப்பு என்று இந்த நிமிடம் வரை புரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன்.


நூலின் பெயர் : மூன்று விரல்

ஆசிரியர் : இரா.முருகன்

பக்கங்கள் : 368

விலை : ரூ. 150/-

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in
ஆன்லைனில் வாங்க : http://nhm.in/shop/978-81-8368-073-8.html

16 ஜூன், 2009

ஓட்ரா வண்டியை!


இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை' என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு வட்டவடிவ தொப்பி. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத மனிதர் இளைய கண்ணன்.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது அவருக்கு பிடிக்கும். வேகமாக செல்லும்போது முகத்தில் அறையும் சில்லென்ற காற்றுக்காக மட்டுமல்ல, இருசக்கர வாகனங்களில் செல்லும் சகப்பயணிய்களான நாகரிகமங்கைகளை கலைப்பார்வையோடு காணவும் அவருக்கு இந்த விருப்பமிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுனர் உரிமம் வாங்கியிருந்தாலும், அரசு சட்டம் போடுவதற்கு முன்பே விலையுயர்ந்த ஹெல்மெட் வாங்கி விட்டார் என்றாலும், சைக்கிள் தவிர்த்து வேறெதுவும் ஓட்டத் தெரியாது என்பது அவரது அந்தரங்க சோகம்.

பொல்லாதவன் பட தனுஷ் போல நகரில் இருக்கும் எல்லா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களுக்கும் சென்று புதியதாக வந்திருக்கும் வண்டி எது, எவ்வளவு விலை, எந்த வண்டியில் எவ்வளவு எரிபொருள் சேமிக்க முடியும் என எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பார். நகரின் அனைத்து இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளர்களுக்கும் இவரை தெரியும். எப்படியும் வண்டி வாங்கப் போவதில்லை, வாங்கினாலும் ஓட்டத் தெரியாது, ஆனாலும் இறைவனை கேள்வி கேட்ட தருமி மாதிரி எதையாவது மாதாமாதம் புதியதாக கேட்டு கடுப்பேத்திக் கொண்டேயிருக்கிறார் என்பதால் நகரிலும், புறநகரிலும் இருக்கும் இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் அனைத்திலும் 'இளைய கண்ணனுக்கு இங்கேவர அனுமதியில்லை!' என்று டிஜிட்டலில் பலகை வைத்திருக்கிறார்கள்.

இளைய கண்ணன் அப்படியும் விடுவதாக இல்லை. தன் அடிப்பொடிகள் யாரையாவது வைத்து ‘கடைசியாக வந்த இருசக்கர வாகனம் எது? எவ்வளவு விலை? என்னென்ன புதிய வசதிகள்' என்று கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்கிறார். இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூட தங்கள் வாகனங்களை பற்றி இளையகண்ணனுக்கு தெரிந்த அளவுக்கு தெரியாது.

தன்னை இளைஞனாக காட்டிக்கொள்ள அவர் செய்யும் இன்னொரு உபாயம் சுவாரஸ்யமானது. அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர்களாகவே இருப்பது போல பார்த்துக் கொள்வார். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசல்களிலும், டீக்கடை பெஞ்சுகளில் “ஹேய் மாம்ஸ், ஹாய் மச்சிஸ்!” என்று பேசிக்கொண்டு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த வாலிபன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்வார்.

இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞன் எவனாவது மாட்டினால் போதும், முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு நகர்வலம் வருவார். வண்டி ஓட்டுபவன் மனம் சோர்ந்துப் போய் அந்த வண்டியை விற்றுவிட்டு சைக்கிள் வாங்கிவிடலாமா என்று யோசிப்பான். வண்டியில் போகும்போது இருபக்கமும் பார்த்தவாறே வருவார். ஏதாவது பெண்கள் இருசக்கர வாகனங்களில் வந்துவிட்டால் போதும் தலைவர் குஷியாகி விடுவார். “மாப்புள்ளே, பேக் வியூல அசத்தலா இருக்கு. அந்த புள்ளை முகத்தை பார்க்கணும். வேகமா ஓட்ரா வண்டியை” என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி ஆணையிடுவார். இவரது கதறல் முன்னால் போகும் புள்ளைக்கே கேட்டுவிடும். வயதானவர் என்பதால் இவரை திட்டாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞனை “பொறுக்கி!” என்று அந்த புள்ளை திட்டிவிட்டு, காறி உமிழ்ந்துவிட்டுப் போகும்.

“இப்பவெல்லாம் எல்லாப் பொண்ணுங்களும் ஹெல்மெட் போட்டு முகத்தை மூடிக்குது. இல்லேன்னா துணியை எடுத்து தாலிபான் மாதிரி மறைச்சிக்குதுங்க...” என்று அவ்வப்போது வருத்தப்படுவார்.

என்னுடைய போதாத நேரம், ஒருநாள் இளையகண்ணனிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

“மாப்புள்ளே மவுண்ட்ரோடு போடா!”

“என்னண்ணே அங்கே ஏதாவது வேலையா?”

“சும்மா ஜாலியா போலாம்டா. நெறைய புள்ளைங்க ஸ்பென்சர்ஸ் வருவாங்க ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே டைம்பாஸ் பண்ணலாம். அப்படியே ஈவ்னிங் பீச்சுக்கு போயிட்டோம்னா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகும்”

“அண்ணே எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லைண்ணே” என்று முனகிக்கொண்டே வண்டியை கிளப்பினேன்.

மதிய நேரம் என்பதால் அனல்காற்று முகத்தில் அறைந்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் வியர்வை வழிந்து நசநசத்தது. பில்லியனில் உட்கார்ந்திருந்த அண்ணனோ சாலையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். “என்னாச்சி இன்னைக்கு சன் டிவியில் ஏதாவது விஜய் படமா? பொண்ணுங்க அவ்வளவா காணோமே?”

தலையெழுத்தே என்று முணுமுணுத்துக் கொண்டு மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தேன். எப்போதும் சிகப்பு நிற விளக்கு எரியும் நந்தனம் சிக்னலில் நிற்கவேண்டியதாயிற்று. என் வண்டிக்கு நான்கைந்து வண்டிகள் முன்பாக ஒரு கருப்புப்புடவை ஸ்கூட்டரில் ஒயிலாக அமர்ந்திருந்தது. அண்ணன் எப்படியோ எட்டிப் பார்த்துவிட்டார். “மாப்புள்ளே அந்த கருப்புப் புடவையை ஃபாலோ பண்ணுடா! செம கிளாமரா தெரியுது” என்றார்.

பச்சை சிக்னல் கிடைத்ததுமே நானும் வண்டியை விரட்ட ஆரம்பித்தேன். ம்ஹூம், புயல் வேகத்தில் சென்ற கருப்புப் புடவையை தாண்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அடுத்த சிக்னல்.. அடுத்த சிக்னல்.. என்று இரண்டு மூன்று சிக்னல்களை தாண்டிதான் தேனாம்பேட்டையில் பிடிக்கமுடிந்தது. அண்ணன் கருப்புப் புடவையை பார்க்க வசதியாக சிக்னல் எல்லைக்கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தினேன். இருபதடி தூரத்தில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர், இந்த வண்டியை மடக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

முகத்தை பவுடர் போட்ட கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டு தலையை ஸ்டைலாக, என்னவோ விருப்பமேயில்லாமல் திருப்புபவர்போல திருப்பி கருப்புப் புடவையை கண்டவர், “டேய், வண்டியை ஓட்ரா!” என்றார்.

“என்னாச்சிண்ணே! சிக்னல் இன்னும் விழலை? எப்படி போவமுடியும்?”

“எப்படியாவது போடா. ஃபைன் வேணும்னா நான் கட்டிக்கறேன். அந்த கருப்புப்புடவை வேற யாருமில்லே. உன்னோட அண்ணிதான்! வீட்டுலே பார்த்து சலிச்ச முகத்தை தான் இங்கேயும் பார்க்கணுமா? என்னை பார்த்துடப் போறா. சீக்கிரம் விடு”

பாவம். லென்சு மாமா மாதிரி வீட்டில் என்ன ரீல் விட்டுவிட்டு ஊர் சுற்ற வந்தாரோ என்று எண்ணிக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

14 ஜூன், 2009

தேவதைகளும், கண்ணாடிகளும்!


தேவதைகள் எப்போதும் அருள் மட்டுமே பாலித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது அச்சுறுத்தவும் செய்கிறார்கள். வாடிகன் தேவதைகள் ஏஞ்சல்ஸ் & டிமான்ஸில் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது மாதிரி.

போப்பாண்டவர் செத்துப் போகிறார். புதுப்போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் முக்கியமான நான்கு கார்டினல்கள் காணவில்லை. ஒரு ஆய்வுக்கூடத்தில் மிகமுக்கியமான ’வயல்’ (Vial) என்று சொல்லக்கூடிய விஷயம் ஒன்று கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. அந்த வயலால் வாடிகன் அழிவதை தடுக்க அமெரிக்காவில் இருந்து புரொபசர் ஒருவர் கிளம்பிவருகிறார். அவர் நாத்திகர். அவருக்கும் வாடிகனின் புனிதர்கள் சிலருக்கும் அவ்வப்போது நாத்திக, ஆத்திக விவாதம் நடைபெறுகிறது.

வாடிகனுக்கு புதியதாக வில்லன்கள் முளைத்துவிடவில்லை. அது முன்னூறு, நானூறு ஆண்டு பகை என்று புரொபசர் விளக்குகிறார். அவர்கள் பெயர் இலுமினாய்ட்ஸாம். அறிவியல் வெறியர்கள். மதஅடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிரான விஞ்ஞான தீவிரவாதிகள். கடத்தப்பட்ட கார்டினல் ஒவ்வொருவராக இலுமினாய்டிகள் கொன்றுகொண்டே வர, கடைசி கார்டினலையும் கொன்று விட்டு, அந்த வயல் மூலமாக வாடிக்கனையே அழிப்பது இலுமினாய்டுகளின் திட்டம்.

புரொபசரால் கார்டினல்களை காப்பாற்ற முடிந்ததா? வயலால் வாடிகன் அழியாமல் காக்கமுடிந்ததா என்பதே படம். படம் முழுக்க ஹிட்ச்காக் பாணியில் திடீர் திடீரென பலர்மீது சந்தேகத்தின் நிழல் விழுகிறது. யார் குணச்சித்திரம்? எவன் துரோகி? எவன் வில்லன்? என்பது யாரும் எதிர்பாராத அடுக்கடுக்கான சஸ்பென்ஸ்.

டான்பிரவுன் இந்த நாவலை எழுதியதுமே இதை தமிழில் தசாவதாரமாக உல்டா அடித்து எடுத்துவிட்டார்கள். ஹாலிவுட்காரர்கள் கொஞ்சம் சோம்பேறிகள். தசாவதாரம் வெளிவந்து ஒருவருடம் கழித்துதான் இப்படத்தை வெளியிட முடிந்திருக்கிறது.

* - * - * - * - * - * - * - *

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அவரவர் முக அழகை கண்ணாடிதான் வெளிக்காட்டும். முகத்தை மட்டுமன்றி பேய்களையும் கண்ணாடிகள் காட்டுவது பைபிள்கால சினிமா ஸ்ட்ரேட்டஜி. மிர்ரர்ஸ் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நியூயார்க் நகரில் டிடெக்டிவ்வாக பணியாற்றிய ஒருவர், ஒரு குற்றம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். வேறு பணி கிடைக்காத நிலையில் தீவிபத்தில் எப்போதோ எரிந்துப்போன மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நைட் வாட்சேமனாக பணியாற்றி வயிற்றைக் கழுவுகிறார்.

இரவு வேளைகளில் ரவுண்ட்ஸ் வரும்போது கிட்டத்தட்ட அழிந்துப்போன அந்த பிரம்மாண்ட கட்டத்தின் ஒரு பகுதியில் சில கண்ணாடிகள் மட்டும் பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். அக் கண்ணாடிகளுக்குள் அடைந்துக் கிடக்கும் ஆவிகள் அடுத்த சில நாட்களில் அவரது வாழ்க்கையில் ஆடும் பேயாட்டம் தான் மிர்ரர்ஸ். படத்தின் ஒலிப்பதிவு பயங்கரமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பயமென்னும் உணர்வை ஏற்படுத்திய படம் இது. இப்படத்தின் முடிவும் யாரும் எதிர்ப்பார்க்க இயலாதது.

கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கும் இப்படம், கடந்த வருடமே ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகுவதற்கு முன்பே இப்படத்தை அச்சு அசலாக, சில காட்சிகளோடு சேர்த்து 13பி என்று இந்தியிலும், யாவரும் நலம் என்று தமிழிலும் படமெடுத்து துட்டு பார்த்துவிட்டார்கள். இந்த அழகில் 13பி படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய யாரோ ஒரு கோயிந்து கேட்டிருப்பதாக இயக்குனர் பேட்டி வேறு தருகிறார்.

13 ஜூன், 2009

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு?


பாலக்காட்டில் பிறந்த த்ரிஷா இன்று பாரெங்கும் வாழும் மனிதர்களை பரவசப்பட வைக்கிறார். மல்கோவாவுக்கு பெயர் போன சேலம் தான் த்ரிஷாவின் பெயரை முதன்முதலில் கவனிக்க வைத்தது. 1999ல் அம்மணி மிஸ் சேலமாம். அதே ஆண்டு சிங்காரச் சென்னையும் அவரை “மிஸ் சென்னை” என்று ஒத்துக் கொண்டது. 2001ல் மிஸ் இண்டியா அமைப்பாளர்கள் “ரொம்ப சூப்பரா சிரிக்கிறாங்க” என்று கூறி "Miss India Beautiful Smile" பட்டம் கொடுத்தார்கள்.

த்ரிஷா அருமையான பாலே டேன்ஸர். மீனைப்போல நீந்துவார். பள்ளி நாட்களில் வாலிபால் சாம்பியனாம். ”ஜூனியர் ஹார்லிக்ஸ்” விளம்பரத்தில் இளம் அம்மாவாக இவர் நடித்தபோது எல்லாக் குழந்தைகளும் ஹார்லிக்ஸை விரும்பிச் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அக்காலக் கட்டத்தில் விஜய் டிவியின் யூகிசேதுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் “எக்காலத்திலும் சினிமாவில் நுழைய மாட்டேன். மாடலிங் துறையில் தான் இருப்பேன்” என்று சபதம் செய்திருந்தார்.

”ஜோடி” படத்தில் சிம்ரனின் தோழியாக துண்டு வேடத்தில் நடித்தவர் அடுத்தடுத்து லேசா லேசா, மனசெல்லாம், அலை, மவுனம் பேசியதே, எனக்கு 20 உனக்கு 18 என்று டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமானார். விக்ரமுடன் சாமி, விஜய்யுடன் கில்லி என்று மெகா சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவுடன் புகழின் உச்சிக்கே போனார். இதே உயரத்தை ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பெற்ற ஒரே நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும். தெலுங்கிலும் வர்ஷம், நூ ஒஸ்தானுண்டே நேனு ஒத்துண்டானா?, பவுர்ணமி, சைனிகுடு, ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேறுலே என்று ஹிட் படங்கள்!

விக்ரமோடு பீமா, விஜய்யோடு குருவி என்று த்ரிஷாவின் வெற்றிநடை(?) தொடர்ந்து உயர்ந்து கொண்டே தானிருக்கிறது.

இயற்பெயர் :
த்ரிஷா கிருஷ்ணன்

செல்லப் பெயர் :
ஹனி (தேனே உன்னை தேடி தேடி நான் அலைஞ்சேனே!)

பிறந்தநாள் :
04-05-1983 (இருபத்தி ஆறு வயசாவுதா?)

உயரம் :
5 அடி 7.5 இன்ச் (அண்ணாந்து தான் பார்க்கணுமா?)

எடை :
55 கிலோ
(55 கேஜி தாஜ்மஹால்)

சைஸ் :
34 - 26.5 - 37.5
:-) (நாட் பேட்)

கண்ணின் நிறம் :
லைட் ப்ரவுன்
(கிறங்கடிக்குதே?)

பள்ளி :
சர்ச் பார்க் காண்வெண்ட் (You know?)

கல்லூரி :
எத்திராஜா
(சின்னப் பொண்ணு இவ படிச்சது)

எதிர்காலத் திட்டம் :
எம்பி எம்பியாவது எம்பிஏ முடிக்கணும் (எம்பிஏ முடிச்சிட்டு எம்.பி ஆவணும்)

தொழில் :
விளம்பர மாடல், திரைப்பட நடிகை (அதான் எங்களுக்கும் தெரியுமே?)

இணையதளம் :
http://www.trisha-krishnan.com (லேட்டஸ்ட் போட்டோவெல்லாம் அப்டேட் பண்ணுறாங்க)

மின்னஞ்சல் :
trisha_krishnan@yahoo.com (காதல் கடிதம் அனுப்பிய ஒருவருக்கு பதில் மின்னஞ்சலில் செருப்பு அட்டாச்மெண்டாக வந்ததாம்)

பலம் :
யோசித்து முடிவெடுக்கும் தன்மை! (உங்களோட ஹிட் படங்களை பார்த்தாலே தெரியுது)

பலவீனம் :
சின்ன சின்ன விஷயத்துக்கும் ரொம்ப யோசிப்பது! (அதுதானே பலம்னு சொன்னீங்க?)

யாரோடு டேட்டிங் போக ஆசை? :
பில் க்ளிண்டன் (இது மோனிகா லெவின்ஸ்கிக்கு தெரியுமா?)

இரவு வேளைகளில் செய்ய விரும்புவது :
புத்தகம் படிப்பது, இணையத்தை மேய்வது, எப்போதாவது பார்ட்டிக்கு போவது (அட்ரா.. அட்ரா.. அட்ரா)

பயம் :
நெருங்கிய மனிதர்களை இழந்துவிடும்போது வருவது

அடிக்கடி வரும் கனவு :
இரவுவேளையில் தனியாக யாருமே இல்லாத சாலையில் நடந்து போகிறேன். வேகமாக சைக்கிளில் வரும் பையன் ஒருவன் என் கையை பிடித்து இழுக்கிறான் (பையன் அழகா என்னைமாதிரி இருக்கானா?)

பிடித்த உணவு :
சிக்கன் (த்ரிஷா சிக்குன்னு இருக்குற ரகசியம்?)

பிடித்த புத்தகம் :
சிக்கன் சூப் ஃபார் த ஃசோல் (இதுலயும் சிக்கனா?)

பிடித்த எழுத்தாளர் :
சிட்னி ஷெல்டன் / டேனியல் ஸ்டீல் (இவங்கள்லாம் யாரு?)

பிடித்த பத்திரிகை :
பெமினா / காஸ்மோபாலிட்டன் (குமுதம், விகடன்லாம் கூட படிப்பீங்களா?)

பிடித்த படம் :
தி இங்கிலிஷ் பேஷண்ட் / சைலன்ஸ் ஆப் த லேம்ப்ஸ் (ரெண்டும் நீங்க நடிச்ச படம் இல்லையே?)

பிடித்த திரை நட்சத்திரம் :
ஜூலியா ராபர்ட்ஸ் / மனிஷா கொய்ராலா (அது சரி!)

ரோல் மாடல் :
க்ளாடியா ஃஷிப்பர், ஐஸ்வர்யா ராய், மது சாப்ரே

10 ஜூன், 2009

ரெட்டை வால் குருவி!


வனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது.

அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து வைத்ததை யார் கண்டார்களோ, இல்லையோ அவன் கண்டுகொண்டான்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அவன் தங்கையோ விவஸ்தைகெட்ட தனமாக, “ஆமாம் அண்ணி. இவனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு குடுகுடுப்பைகாரனுங்க கூட சொல்லியிருக்கானுங்க. பையன் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. உஷாரா பார்த்துக்கங்க” என்றாள்.

மையம் கொண்ட புயல் வலுவடைந்து முதலிரவில் பலத்த காற்றோடு வீசியது!


முதன்முதலாக மனைவியோடு சினிமாவுக்கு போனான். “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிபேசக் கூடாதா?” என்று நாயகி நாயகனை திரையில் கொஞ்ச மெய்மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தலையில் ஒரு கொட்டு விழுந்தது.

“நான் பக்கத்துலே இருக்கும்போது அவளையே ஏன் முறைச்சிப் பாக்குறே? இங்கே பாரு.”

“எவளை? நான் யாரையும் பாக்கலையே?” அக்கம்பக்கத்தில் யாராவது கவனித்து விட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“அதான் ஸ்க்ரீன்லே அவளை மட்டுமே மொறைச்சி பார்த்துக்கிட்டிருக்கியே?”

வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை கதாநாயகி வந்தபோது தலையை குனிந்துகொண்டோ அல்லது புதுமனைவியை பார்த்தோ சமாளித்தான்.


டம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போதும் பிரச்சினை.

“ஹலோ! ஒழுங்கா வண்டியை ஓட்டு!”

“ஒழுங்காத்தானே ஓட்டுறேன்!”

”பின்னாடி நான் உட்கார்ந்துக்கிட்டிருக்கப்பவே முன்னாடி போற ப்ளாக் சாரி முதுகை முறைச்சி பாத்துக்கிட்டிருக்கே?”

“முன்னாடி போற வண்டியை பார்க்காம வண்டி ஓட்ட எனக்கு இன்னும் யாரும் சொல்லி கொடுக்கலை!”

“வண்டியை மட்டும் பாரு. வண்டி ஓட்டுற பொம்பளைங்களை ஏன் பார்க்குறே?”

அவனுக்கு புரிந்துவிட்டது. இனிமேல் தினம் தினம் கும்மாங்குத்து தான்.


வெள்ளிக்கிழமைகளில் அலுவலகத்தில் பூஜை போடப்பட்டு விபூதியும், ஏதோ கொஞ்சம் கதம்பப்பூவும் பிரசாதமாக அய்யர் தருவார். அய்யருக்கு தர்மசங்கடம் வரக்கூடாது என்பதற்காக அவர் தரும் ஒன்றிரண்டு பூவை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வான்.

அந்த வெள்ளிக்கிழமையும் அப்படித்தான், அய்யர் கொடுத்த பூவை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அதை மறந்தும் விட்டான். வீட்டுக்குப் போனதும் வழக்கம்போல Check-in-ல் மாட்டிக் கொண்டான். துரதிருஷ்டவசமாக அன்று அய்யர் கொடுத்தது ரெண்டு மூன்று மல்லிப்பூ என்பது தான் பிரச்சினைக்கு காரணம். ஆபிஸில் அய்யர் கொடுத்தது என்பதற்கு சர்ட்டிபிகேட் யார் தருவார்கள் என்று குழம்பிப் போனான்.


விடுமுறை நாட்களில் தனியே வெளியே செல்வதற்கு அவனுக்கு 144 உத்தரவு போடப்பட்டிருக்கிறது. வெளியே செல்வதென்றால் அவளோடு தான் செல்லவேண்டும். சினிமாவுக்கோ, கோயிலுக்கோ போனால் கூட அக்கம்பக்கம் இருக்கும் பெண்களை (ஆயாவாக இருந்தாலும் கூட) கலைக்கண்ணோடு கூட பார்த்து தொலைக்கக் கூடாது.


காலையில் அலுவலகத்துக்கு சென்றதிலிருந்து மதியம், சாயங்காலம் என்று குறிப்பிட்ட நேரங்களில் எந்த ஸ்பாட்டில் இருக்கிறான் என்ற ஸ்பாட் ரிப்போர்ட்டை தந்தாக வேண்டும். அக்கம்பக்கம் ஏதாவது பெண்குரல் போனில் அவளுக்கு கேட்டுவிட்டால் ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி'. அலுவலகம் விட்டு கிளம்புவதற்கு முன்னால் ‘கிளம்பிட்டேன்' என்றொரு மெசேஜ் தரவேண்டும். அவனைப் பொறுத்தவரை அவனுடைய செல்போன் ஒரு உளவுபார்க்கும் ஏஜெண்டாக தான் செயல்பட்டு வருகிறது.


ம்பவங்கள் ஏராளம், சொல்லிக்கொண்டே போனால் ஜெயமோகனின் மூவாயிரம் பக்க நாவல் அளவுக்கு எழுதவேண்டும். இப்போதும் கொடுமைகள் முன்பைவிட அதிகமாக தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

- ஷூவில் பீச்மணல் ஏதாவது ஒட்டிக்கொண்டிருக்கிறதா?

- செல்போனில் டயல்டு கால்ஸ், ரிசீவ்டு கால்ஸ் ஏதாவது பெண் பெயரில் இருக்கிறதா? காண்டாக்ட்ஸில் புதியதாக எந்தப் பெயராவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?

- சட்டைப் பையில் மல்லிகைப்பூ போன்ற வஸ்துகள் ஏதேனும் மிச்சமிருக்கிறதா?

போன்ற வழக்கமான சோதனைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டிருக்கிறது. முருகன், கிருஷ்ணன், சிவன் உள்ளிட்ட கடவுள்கள் உட்பட நாட்டில் பல பேர் குறைந்தபட்சம் ரெண்டு பொண்டாட்டிகளோடு நிம்மதியாக இருக்க, இராமனைப் போல ஒரிஜினல் ஏகபத்தினி விரதனான நமது பயலுக்கு தான் சோதனைக்கு மேல் சோதனை. அனுபவஸ்தர்கள் யாராவது அவனை இந்த ஒரு சிக்கலில் இருந்து மட்டுமாவது காப்பாற்ற ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன்!

9 ஜூன், 2009

சில விளம்பரங்கள்!

டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.


வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.

இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.


ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.


ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.


ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.


மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து நான் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.

கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.

அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓக்கே சீரியஸ் போதும், சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களுள் ஒன்றை சொல்கிறேன். சன் டிடிஎச்-காக எடுக்கப்பட்டிருக்கும் விளம்பரம் தொழில்நுட்ப அளவிலும், உள்ளடக்க அளவிலும் மிக தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்” என்ற வரிகளோடு தொடங்கும் கலக்கல் பீட் பாடல் சூப்பராக இருக்கிறது. பதிவு செய்த குரலை அப்படியே ஒலிபரப்பாமல் கம்ப்யூட்டரில் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால் குரலில் கஞ்சா தடவிய போதை இருக்கிறது. தமன்னா இவ்வளவு அழகா? என்று வியக்க வைக்கிறது இவ்விளம்பரம். சினிமாவில் கூட யாரும் தமன்னாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை. நடனம் இசைக்கு ஏற்றவாறு ஜாடிக்கேத்த மூடி மாதிரி செம ஃபிட் ஆக இருக்கிறது. விளம்பரத்தில் திருஷ்டி படிகாரம் மாதிரி பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையான ரேணுகா வருகிறார். அவர் சம்பந்தப்பட்டவற்றை மற்றும் அகற்றி, இன்னமும் கொஞ்சம் தமன்னாவை எக்ஸ்ட்ராவாக காட்டினால் செம சூப்பராக இருக்கும்!!

இதுமாதிரி நிறைய விளம்பர டெக்னிக்குகளையும், விளம்பரங்களையும் பற்றி தமிழில் முழுமையாக அறிந்துகொள்ள “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்” நூலை வாங்கி பயனடையுங்கள் :-)

8 ஜூன், 2009

குறிகள்!


பசுமரங்கள் சூழ்ந்த, நீலநீர் நிறைந்த அழகான ஏரி. நடுவில் ஒரே ஒரு இல்லம். அந்த இல்லத்தில் வசிப்பது ஒரு வயதான குருவும், குழந்தைப் பருவ சீடனும்.

குழந்தைப் பருவம் குதூகலப் பருவம். ஞானத்தை கற்பவனாக இருந்தபோதிலும் குழந்தைப் பருவத்துக்கே உரிய குதூகலம் அந்த சீடனுக்கும் இருந்தது. ஓடையில் ஓடும் ஒரு மீனைப் பிடிக்கிறான். அதன் உடலை கயிறால் கட்டி, கயிறின் மறுமுனையில் ஒரு கல்லை கட்டுகிறான். மீண்டும் ஓடையில் விடுகிறான். கல்லை இழுத்துச் செல்ல மீன் சிரமப்படுவதை கண்டு கைக்கொட்டி சிரிக்கிறான். இதே கதி ஒரு தவளைக்கும், ஒரு பாம்புவுக்கும். சீடனின் சேட்டைகளை மறைந்து நின்று கவனித்துக் கொண்டிருக்கிறார் குரு.

இரவானதும் சீடன் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கல்லை எடுத்து சீடனின் முதுகோடு சேர்த்து கட்டி வைத்து விடுகிறார் குரு. காலையில் எழும் சீடக்குழந்தை கல் தனக்கு பாரமாக இருப்பதாகவும், கழட்டும்படியும் குருவிடம் கேட்கிறான். நேற்று நீ பாம்புக்கும், தவளைக்கும், மீனுக்கும் எதை செய்தாயோ, அது எவ்வளவு சிரமமானது என்பதை உணர்கிறாயா? அந்த மூன்று உயிரில் எது மரணித்தாலும் இன்று நீ முதுகில் சுமக்கும் கல்லை, இதயத்தில் வாழ்நாள் முழுக்க சுமக்க நேரிடும் என்கிறார்.

- நேற்று, வலைப்பதிவர்களுக்காக சென்னையில் திரையிடப்பட்ட ’ஸ்ப்ரிங், ஸம்மர், பால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில்...

* - * - * - * - * - * - * - *

ஏற்கனவே பலமுறை நாம் கேட்ட, வாசித்த நீதிதான் இது. எதை விதைக்கிறோமோ, அது வளரும். குரு அந்த சீடனுக்கு சாதாரண கல்லை தான் கட்டினார். நம்மைப் போன்றவர்கள் முதுகில் நியாயமாகப் பார்க்கப் போனால் பல்லாவரம் மலை அளவுக்கான பெரிய பாறையை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டும்.

ஒரு காமிக்ஸை வாசிப்பது மாதிரி இப்படம் சொல்லவரும் விஷயத்தை மிக எளிமையாக சொல்லிவிடுகிறது. அதையும் தாண்டி படத்தில் குறியீடுகள் இருக்கிறது, பனுவலியல் அராஜகத்துக்கு எதிரான காட்சிகள் இருக்கிறது, விஷயங்களை கட்டுடைக்கிறது என்று படம் பார்த்தவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். பிரச்சினையில்லை.

படத்தின் ஒரு ‘பிட்’டில் உணர்ச்சிவசப்பட்டு படம் பார்த்துக்கொண்டிருந்த ஆசிஃப் அண்ணாச்சி, “அடடே. அருமையா படம் பிடிச்சிருக்காடே!” என்று மனமாரப் பாராட்டினார். அதே காட்சியை, அவருக்கு அடுத்த இருக்கையில் இருந்து பார்த்த ஹரன்பிரசன்னா, “அபச்சாரம். சிவ. சிவா” என்று தன்னுடைய (அ)திருப்தியை வெளிப்படுத்தினார். ஒரே காட்சிக்கான நேரெதிர் எக்ஸ்ட்ரீம் கார்னர்களில் வெளிப்படுத்தப்பட்ட ‘அபாரம்’, ‘அபச்சாரம்’ சொற்கள்தான் எனக்கென்னவோ இப்படத்துக்கான முக்கியமான குறியீடாகப் படுகிறது.

பிரதி நேரடியாக சொல்ல வரும் விஷயம், அதை உள்வாங்குபவனுக்கு, பிரதியை உருவாக்கிய ஆசிரியன் சிந்தித்த வகையிலேயே புரிந்தால் போதுமானது. மறைமுகமாக அழகியலோடு உணர்த்தப்படும் குறியீடுகள் உள்வாங்குபவனின் மனநிலைக்கும், கொள்கைக்கும் ஏற்ப வேறு வேறு வகைகளில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குறியீடுகள் ஏதும் தேவைப்படாமலேயே உள்வாங்குபவனை புரியவைக்கும் வகையில் எடுக்கப்படும் படம் உலகப்படம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். பிரதியும் சாகவேண்டாம், ஆசிரியனும் சாகவேண்டாம், வாசகனும் செத்துத் தொலைக்க வேண்டாம்.

* - * - * - * - * - * - * - *

இப்பதிவின் தலைப்பில் ஏதோ வார்த்தைப்பிழை இருப்பதாக புத்தி சொல்கிறது. மனசு மறுக்கிறது.

அரசியல்!


ந்தக் காலத்தில் அவர் அதிரடியான பெயர் பெற்ற அரசியல்வாதி. பருவமழை பொய்த்து அந்த ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் வரலாற்றுப் பிரசித்திப் பெற்றது. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் அவர் தொகுதி மக்கள் தினமும் அவர் வீடு தேடி வந்து தண்ணீருக்காக தாங்கள் படும் பாட்டை புலம்பிவிட்டு செல்வார்கள்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தார். முடிஞ்சவரைக்கும் தண்ணியை மக்களுக்கு கொடுக்கறோம். இதுக்கு மேல இருந்தாதானே தரமுடியும்? என்றார்கள். உடனே தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொகுதி முழுக்க லாரிகளில் தினமும் சப்ளை செய்தார் அவர். ஒருநாள் இருநாள் அல்ல. அடுத்து மழைக்காலம் வந்து தண்ணீர் சப்ளை சீராகும் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இந்தப் பணியை செய்துக் கொண்டிருந்தார்.

அரசாங்கத்தாலேயே முடியாத வேலையை தனிநபராக செய்த அவர் இன்றளவும் அப்பகுதி மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார்.


முன்னாள் முதல்வர் அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது முயற்சியில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் அது. மார்க்கெட் வந்துவிட்டாலே அதைசார்ந்து நடைபாதை வியாபாரிகளும் உருவாகிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த மார்க்கெட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் உருவாகிவிட மார்க்கெட்டில் கடை வைத்திருந்த கடை முதலாளிகள் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள்.

மார்க்கெட்டை கட்டித் தந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் அப்போது முதல்வராக இருந்தார். நடைபாதை வியாபாரிகள் முழுக்க அவரது கட்சிக்காரர்கள் என்பதால் மார்க்கெட் முதலாளிகளால் இவர்களை அரசியல்ரீதியாக அசைக்க முடியவில்லை. அரசியல் செயலிழக்கும் நேரங்களில் அதிகாரிகளே முதலாளிகளுக்கு துணை. அப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளோடு பேசினார்கள். தரவேண்டியதை தந்தார்கள். இதைத் தொடர்ந்து தினமும் நடைபாதை வியாபாரிகள் மீது அதிகாரப்பூர்வமான வன்முறை தொடர ஆரம்பித்தது.

ஐந்துக்கும், பத்துக்கும் தினமும் நடைபாதைகளில் கூவிக்கூவி விற்பவர்கள் அனாதைகள் ஆனார்கள். முதல்வரோ அயல்நாட்டு சிகிச்சைக்கு சென்றிருந்தார். எதிர்பாராவிதமாக இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்த வந்தவர் அப்பகுதியில் இருந்த பிரபலமான எதிர்க்கட்சிக்காரர்.

பல பேரை சந்தித்தார். நடைபாதை வியாபாரிகளின் அவலத்தை கோட்டை வரை எதிரொலித்தார். காவல்துறை மேலதிகாரிகளை தினமும் பார்த்து பேசினார். ஒருவழியாக நடைபாதை வியாபாரிகளுக்கு நீதி கிடைத்தது. மார்க்கெட்டிற்குள் இருக்கும் கடைகளின் வியாபாரத்தை பாதிக்காதவாறு அவர்களுக்கு போதிய இடம் மார்க்கெட்டை சுற்றி வழங்கப்பட்டது.

கட்சி பாகுபாடு பார்க்காமல் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வகை செய்த அந்த எதிர்க்கட்சிக்காரருக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆவலில் வியாபாரிகள் சிலர் அவரிடம் கேட்டார்கள். “அண்ணே உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. செய்யுறோம்”. அவர் பதிலளித்தார். “ஃபில்டர் வைக்காத ஒரே ஒரு சிகரெட்டு மட்டும் வாங்கிக் கொடுங்கப்பா. ஒரு வாரமா பேசிப்பேசி தொண்டை வரளுது”.


ன்றைய துணைமுதல்வர் அவர். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேளச்சேரி பகுதி மக்களுக்கு அவர் பக்கத்து வீட்டுக்காரர். வேளச்சேரி செக்போஸ்ட் அம்மன் கோயிலை தாண்டி அவரது கார் வந்துகொண்டிருக்கிறது. கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சாவு விழுந்திருக்கிறது. வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கார் கண்ணாடி வழியாக அவர் பார்க்கிறார். பால்மணம் மாறா குழந்தைகள் இருவரும் ஒரு இளம்பெண்ணும் கதறுவதை கண்டதுமே இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் என்பதை உணர்கிறார். உடனே காரை நிறுத்தச் சொல்கிறார்.

அந்த சாவு வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னவர் அந்த இளைஞரின் திடீர் மரணம் பற்றி கேட்டறிகிறார். விதவையான அப்பெண்ணுக்கு அவர் மேயராக இருந்த மாநகராட்சியில் பணி உறுதி கொடுக்கிறார். தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி உடனடி பண உதவியும் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார். இறந்தவர் வீட்டு வாசலில் பறந்து கொண்டிருந்தது எதிர்க்கட்சிக் கொடி.


டந்த மாதம் செய்தித்தாள்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் இருந்து 96 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 21 பேர் எஸ்.சி/எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இத்தேர்வில் வெல்லுபவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். திடீரென எப்படி இது சாத்தியம்?

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெல்ல இலவசப் பயிற்சி மையம் ஒன்றினை ஒரு அரசியல்வாதி, கட்சி/சாதி/வர்க்க பாகுபாடு எதுவுமின்றி நடத்திவருவதே இதற்கு காரணம். இதே அரசியல்வாதி சென்னை வேளச்சேரி பகுதியில் தன் கட்சித்தலைவி பெயரில் ஒரு தரமான இலவச திருமண மண்டபத்தையும் மக்களுக்காக நடத்தி வருகிறார். இந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணங்களில் பெரும்பாலும் அவருடைய எதிர்க்கட்சியை சார்ந்தவர்களுடையது. முதல் பத்தியில் நாம் சொன்ன அதே அரசியல்வாதி இவர்தான்.


ம் பதிவுகளில் மெசேஜ் இல்லை, மெசேஜ் இல்லையென்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பதிவு சொல்லவரும் மெசேஜ் : அரசியல் உட்பட எதையுமே கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியின் ஒற்றைப் பார்வையில் மட்டுமே அணுகக் கூடாது.