8 ஜூன், 2009

குறிகள்!


பசுமரங்கள் சூழ்ந்த, நீலநீர் நிறைந்த அழகான ஏரி. நடுவில் ஒரே ஒரு இல்லம். அந்த இல்லத்தில் வசிப்பது ஒரு வயதான குருவும், குழந்தைப் பருவ சீடனும்.

குழந்தைப் பருவம் குதூகலப் பருவம். ஞானத்தை கற்பவனாக இருந்தபோதிலும் குழந்தைப் பருவத்துக்கே உரிய குதூகலம் அந்த சீடனுக்கும் இருந்தது. ஓடையில் ஓடும் ஒரு மீனைப் பிடிக்கிறான். அதன் உடலை கயிறால் கட்டி, கயிறின் மறுமுனையில் ஒரு கல்லை கட்டுகிறான். மீண்டும் ஓடையில் விடுகிறான். கல்லை இழுத்துச் செல்ல மீன் சிரமப்படுவதை கண்டு கைக்கொட்டி சிரிக்கிறான். இதே கதி ஒரு தவளைக்கும், ஒரு பாம்புவுக்கும். சீடனின் சேட்டைகளை மறைந்து நின்று கவனித்துக் கொண்டிருக்கிறார் குரு.

இரவானதும் சீடன் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கல்லை எடுத்து சீடனின் முதுகோடு சேர்த்து கட்டி வைத்து விடுகிறார் குரு. காலையில் எழும் சீடக்குழந்தை கல் தனக்கு பாரமாக இருப்பதாகவும், கழட்டும்படியும் குருவிடம் கேட்கிறான். நேற்று நீ பாம்புக்கும், தவளைக்கும், மீனுக்கும் எதை செய்தாயோ, அது எவ்வளவு சிரமமானது என்பதை உணர்கிறாயா? அந்த மூன்று உயிரில் எது மரணித்தாலும் இன்று நீ முதுகில் சுமக்கும் கல்லை, இதயத்தில் வாழ்நாள் முழுக்க சுமக்க நேரிடும் என்கிறார்.

- நேற்று, வலைப்பதிவர்களுக்காக சென்னையில் திரையிடப்பட்ட ’ஸ்ப்ரிங், ஸம்மர், பால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில்...

* - * - * - * - * - * - * - *

ஏற்கனவே பலமுறை நாம் கேட்ட, வாசித்த நீதிதான் இது. எதை விதைக்கிறோமோ, அது வளரும். குரு அந்த சீடனுக்கு சாதாரண கல்லை தான் கட்டினார். நம்மைப் போன்றவர்கள் முதுகில் நியாயமாகப் பார்க்கப் போனால் பல்லாவரம் மலை அளவுக்கான பெரிய பாறையை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டும்.

ஒரு காமிக்ஸை வாசிப்பது மாதிரி இப்படம் சொல்லவரும் விஷயத்தை மிக எளிமையாக சொல்லிவிடுகிறது. அதையும் தாண்டி படத்தில் குறியீடுகள் இருக்கிறது, பனுவலியல் அராஜகத்துக்கு எதிரான காட்சிகள் இருக்கிறது, விஷயங்களை கட்டுடைக்கிறது என்று படம் பார்த்தவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். பிரச்சினையில்லை.

படத்தின் ஒரு ‘பிட்’டில் உணர்ச்சிவசப்பட்டு படம் பார்த்துக்கொண்டிருந்த ஆசிஃப் அண்ணாச்சி, “அடடே. அருமையா படம் பிடிச்சிருக்காடே!” என்று மனமாரப் பாராட்டினார். அதே காட்சியை, அவருக்கு அடுத்த இருக்கையில் இருந்து பார்த்த ஹரன்பிரசன்னா, “அபச்சாரம். சிவ. சிவா” என்று தன்னுடைய (அ)திருப்தியை வெளிப்படுத்தினார். ஒரே காட்சிக்கான நேரெதிர் எக்ஸ்ட்ரீம் கார்னர்களில் வெளிப்படுத்தப்பட்ட ‘அபாரம்’, ‘அபச்சாரம்’ சொற்கள்தான் எனக்கென்னவோ இப்படத்துக்கான முக்கியமான குறியீடாகப் படுகிறது.

பிரதி நேரடியாக சொல்ல வரும் விஷயம், அதை உள்வாங்குபவனுக்கு, பிரதியை உருவாக்கிய ஆசிரியன் சிந்தித்த வகையிலேயே புரிந்தால் போதுமானது. மறைமுகமாக அழகியலோடு உணர்த்தப்படும் குறியீடுகள் உள்வாங்குபவனின் மனநிலைக்கும், கொள்கைக்கும் ஏற்ப வேறு வேறு வகைகளில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குறியீடுகள் ஏதும் தேவைப்படாமலேயே உள்வாங்குபவனை புரியவைக்கும் வகையில் எடுக்கப்படும் படம் உலகப்படம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். பிரதியும் சாகவேண்டாம், ஆசிரியனும் சாகவேண்டாம், வாசகனும் செத்துத் தொலைக்க வேண்டாம்.

* - * - * - * - * - * - * - *

இப்பதிவின் தலைப்பில் ஏதோ வார்த்தைப்பிழை இருப்பதாக புத்தி சொல்கிறது. மனசு மறுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக