16 ஜூலை, 2007

தினமலர் ரமேஷ் சார்!

"17 வயசு தான் ஆவுது. இந்த வயசுலே படிக்காம ஏன் வேலைக்கு வர்றே?"

"இல்லே சார். +2 பெயில் ஆயிட்டேன். டைப்ரைட்டிங் க்ளாஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ், ஸ்பீக்கிங் இங்கிலிஷ், எல்லாம் போறேன். அக்டோபர்லே எக்ஸாமும் எழுதறேன். இருந்தாலும் வீட்டிலேயே எப்பவும் தண்டச்சோறு மாதிரி இருக்குறமாதிரி பீல் பண்ணுறேன். ஏதாவது சம்பாதிக்கணும்னு தோணுது சார். அப்பாவோட சம்பாதியத்துலே சாப்புடுறதுக்கு செல்ப்-ரெஸ்பெக்ட் எடம் கொடுக்கலை. வேலை செஞ்சுக்கிட்டே படிக்கலாம்ணு முடிவெடுத்துருக்கேன்"

"வெரிகுட். ஆனாலும் பத்திரிகை வேலைங்கிறது அவ்வளவு சுலபம் இல்லே. எக்ஸ்பீரியன்ஸ், எலிஜிபிலிட்டி எதுவும் இல்லேன்னாலும் உன்னோட செல்ப் கான்பிடன்ஸ்காக வேலைகொடுக்கறேன். ஹார்ட் ஒர்க் பண்ணனும். ஒழுங்கா கொடுத்த வேலையை செஞ்சீன்னா சீக்கிரமா லைப்லே முன்னுக்கு வந்துடுவே!"

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. வேலை கொடுத்தவர் தினமலர் ரமேஷ் சார். +2 பெயில் ஆகிவிட்டு வேலை கேட்டவன் நான். இச்சம்பவம் ரமேஷ் சாருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் என்னைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் அவர். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருப்பாரா என்ன? என்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு "அன்னா, ஆவன்னா" எழுதியவர் அவர்.

* - * - * - * -

"என்னடா கண்ணா?"

"சார். தினமும் நைட் ஷிப்ட் வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போறேன். சரியா சாப்பிடமுடியலை. வெயிட் ரொம்பவும் லாஸ் ஆயிடிச்சி. வேலைக்கு போகவேணாம்னு வீட்டுலே சொல்றாங்க"

"நைட்ஷிப்ட் தானே உனக்கு பிரச்சினை? என்னோட வாரமலருக்கு வந்துடேன். நீ நல்லா ஒர்க் பண்றதா போர்மேன் சொன்னாரு. நாளைலேர்ந்து உனக்கு டே ஷிப்ட் மட்டும் தான். ஓகேவா?"

"ரொம்ப தேங்க்ஸ் சார்!"

* - * - * - * -

சனிக்கிழமை காலை 10 மணி.

"சார்! இன்னைக்கு விஸ்வநாதன் இல்லே. லீவ் போட்டுட்டாரு. அவரு கொழந்தைக்கு உடம்பு சரியில்லையாம்"

"சரி பரவாயில்லை. மேட்டர் இந்த வாரம் வேணாம். வேற ஏதாவது போட்டு லே-அவுட்டை முடிச்சிடுங்க"

"இல்லே சார். கிச்சான்னு பையன் ஒருத்தன் இருக்கான். நல்லா சுறுசுறுப்பா வேலை பார்ப்பான்"

"யாரு அந்த பொடியனா? வரச்சொல்லு"

சிறிது நேரம் கழித்து,

"வெரிகுட். ஒரு மிஸ்டேக் கூட இல்லை. கமா, புல்ஸ்டாப், கொட்டேஷன் எல்லாம் பக்காவா இருக்கு. கல்விமலருக்கு ஒரு ஆள் வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தாங்க. இவனைப் போட்டுருங்க"

* - * - * - * -

ரமேஷ் சார் கேள்வி பதிலும், பா.கே.ப. எழுதும் அழகே தனி. சனிக்கிழமை காலை தான் எழுத ஆரம்பிப்பார். தனித்தனி தாளாக எழுதுவார். ஒவ்வொரு தாள் எழுதிமுடித்ததும் கம்போஸிங்குக்கு வந்துவிடும். கையெழுத்து மணிமணியாக இருக்கும். இரண்டு மணிக்கு முன்பாக முடித்துவிடுவார். அவர் எழுதும் பகுதிகளுக்கான ப்ரூப், லே-அவுட் ஆகியவற்றை ரொம்பவும் கவனமாக பார்ப்பார். பயணக்கட்டுரைகளுக்கு புதுவடிவம் கொடுத்தது அவரது சாதனை. ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர்கதைக்கான சஸ்பென்ஸை அவரது தொடர்கட்டுரைகளின் இறுதியில் பார்க்கலாம்.

தொடர்களை அவர் எப்படித்தான் தேர்ந்தெடுப்பாரோ தெரியாது? வாரமலரில் வந்த தொடர்கள் எல்லாமே ஒரு நேரத்தில் சூப்பர் ஹிட். "கலையுலகில் கருணாநிதி" என்ற தொடர் நான் விரும்பிப் படித்த ஒன்று. அதே நேரத்தில் ராஜேஷ்குமார், ஆர்னிகாநாசர் போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகளும் கலக்கலாக இருக்கும்.

அவரால் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனேகம் பேர். ஆர்னிகாநாசர் போன்ற எழுத்தாளர்களை லைம்லைட்டுக்கு வரவழைத்த பெருமை ரமேஷ் சாருக்கே உண்டு. அவரது அலுவலகத்தில் தான் பல எழுத்தாளர்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவர் தான் ஜே.டி.ஆரா? இவர்தான் ஜி.ஏ.வா? என்று அவருடைய நண்பர்களை கண்டு வாய்பிளந்து நிற்பேன்.

முதன்முதலாக நாளிதழ்களுக்கு இணைப்பு என்ற கான்செப்ட்டை தமிழுக்கு கொண்டு வந்தவர் ரமேஷ் சார். சிறுவயதில் அவரது கைவண்ணத்தில் உருவான சிறுவர்மலரை விரும்பிப் படித்தவன் அவருடனேயே பணியாற்றுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை.

ரமேஷ் சார் கோக்கோ, பெப்ஸியோ அருந்தி நான் பார்த்ததில்லை. இளநீர் தான் அருந்துவார். அவருக்கு "பிளட் ரெட்" கலர் ரொம்பவும் பிடிக்கும். நான் பணியாற்றிய காலத்தில் அவர் வைத்திருந்த கார்கள் எல்லாம் பிளட் ரெட் நிறத்திலேயே இருக்கும். எப்பவும் ரமேஷ் சார் செல்ப் டிரைவிங் தான். டிரைவர் ஓட்டி அவர் அமர்ந்து நான் பார்த்ததேயில்லை.

மிகக்கடுமையான உழைப்பாளி அவர். இரவு நேரங்களில் அண்ணாசாலை அலுவகத்துக்கு திக்விஜயம் செய்து வேலை ஒழுங்காக ஓடுகிறதா என்று பார்ப்பார்.

* - * - * - * -

சமீபத்தில் அவர் குறித்து வந்திருக்கும் சர்ச்சை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழ் வலையுலகைப் போன்றே பத்திரிகையுலகமும் கேடுகெட்டு போய்க்கொண்டிருக்கிறது. மதுரை வன்முறை சம்பவங்களின் போது தினமலரின் பேனர் நியூசாக "பெருச்சாளிகள் தொல்லை" வந்திருந்தது.

தற்போது பெண் பத்திரிகையாளர் உமாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு தினகரனில் "பெருச்சாளிகள் ஊழல் அம்பலம்" என்று செய்தி வருகிறது. பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை அவர்களாகவே கெடுத்துக் கொள்ளும் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு முன்னாள் பெண் நிருபர் தினமலர் நிர்வாகி மீது புகார் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான். அந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா என்று நிரூபணமாகாத சூழ்நிலையில் புனைபெயரில் இயங்கிவரும் ஒரு பத்திரிகையாளர் மீது மோசமான வண்ணத்தில் வெளிச்சம் போட்டு அவரது படத்தையும் பிரசுரித்திருப்பது கேவலமான முன்னுதாரணம். இந்த முன்னுதாரணத்துக்கு தினகரன் நிறுவனம் பிள்ளையார் சுழி போட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

4 மார்ச், 2007

வாங்க 3க்கு போலாம்!

விளம்பரத் துறையில் “Teaser” என்ற வார்த்தை மிக பிரபலமானது. வாசகர்களை சீண்டும் வாசகங்கள் கொண்ட விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு அந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? எந்தப் பொருளை விற்க வருகிறது என்று சஸ்பென்ஸ் கொடுக்கும் விளம்பரங்களை Teaser Ad என்பார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான Teaser ad “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்பதே.
சமீபத்தில் (2005ல்) தமிழகத்தில் பிரபலமடைந்த இன்னொரு Teaser Adம் உண்டு. அது “சண்டேன்னா ரெண்டு” என்ற குறும்பான ஸ்லோகனைக் கொண்ட தினமலருக்கான விளம்பரம். முதல் மூன்று வாரங்களுக்கு வெவ்வேறான சூழ்நிலைகளில், வெவ்வேறான மனிதர்களைக் கொண்டு “சண்டேன்னா ரெண்டு” என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரங்கள் மட்டுமே வெளிவந்து மக்களை வெறுப்பேற்றியது. இது எய்ட்சு எதிர்ப்புக்கான விளம்பரம் என்றெல்லாம் ஒருவாறாக யூகித்த மக்கள் கடைசியில் அது தினமலர் விளம்பரம் என்றதுமே வெறுத்துப் போனார்கள்.

ஆரோக்கியா பாலின் “அர்ஜீனோட அம்மா யாரு?” Teaser விளம்பரமும் நல்ல கவனம் பெற்ற விளம்பரங்களில் ஒன்று.

மக்களை மட்டுமே Tease செய்யாமல் தங்களது போட்டி நிறுவனங்களை Tease செய்து விளம்பரங்கள் வெளியிடுவதும் உண்டு. கோகோ கோலா – பெப்சி இரு நிறுவனங்களுக்கிடையே ஆன Teaser விளம்பரங்கள் மிகப் பிரபலம். சுமார் 80 ஆண்டுகளாக இரு நிறுவனங்களும் மாறி மாறி மற்றொன்றை கிண்டல் செய்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. கோகோ கோலா நிறுவனம் பெப்சியை விளம்பரம் செய்து வெறுப்பேற்றுவதற்கென்றே Sprite என்ற புதிய தயாரிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. Sprite நிறுவனத்தில் “மசால் வடை ப்ரீ மாமே” விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கலாம். பெப்சி இலவசப் பரிகள் தந்துக் கொண்டிருந்த நேரத்தில் பெப்சியை வெறுப்பேற்றவே Spriteக்கு அதுபோன்ற விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் சும்மா கும்மிக்காக உருவாக்கப்பட்ட Sprite என்ற தயாரிப்பு Barகளில் மிக்ஸிங்குக்கு பக்காவாக செட் ஆகிறது என்ற காரணத்தால் கோக்குமாக்காக ஹிட்டாகி கோகா கோலா நிர்வாகத்தையே ஆச்சரியப்படுத்தியது.

அயல்நாடுகளில் தங்களது போட்டி நிறுவனங்களை கிண்டல் செய்து விளம்பரங்கள் வெளியிடுவது சகஜம். எடக்கு முடக்கான சட்டங்களை கொண்ட இந்தியாவில் அந்த அளவுக்கெல்லாம் செல்ல முடியாது. ஓரளவு லைட்டாக நக்கலடித்து விளம்பரங்களை வெளியிடலாம். பொதுவாக இங்கே வெளியிடப்படும் விளம்பரங்கள் சர்வே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது சகப் போட்டியாளர் தங்களை விட மட்டம் தான் என்று Comparison Chartகளை காட்டி விளம்பரம் போடுவார்கள்.

உதாரணத்திற்கு இங்கே தினமலர் தான் நெ.1 என்று காட்டுவதற்காக ஏராளமான விளம்பரங்களைப் போடும். காலையில் 4 மணிக்கு முன்பே பேப்பர் படிக்கிறவர்களில் 100க்கு 80 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள். அதிகாலையில் கக்கூசில் தம்மடிக்கும் 100க்கு 95 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்கு Category பிரித்து போட்டு தான் தான் நெ.1 என்று விளம்பரங்கள் வெளியிடுவது தினமலருக்கு வாடிக்கை. தினத்தந்தியோ Categoryகளை குறிப்பிடாமல் “மொத்தமா யாருய்யா நெ.1?” என்று கேட்டு தினத்தந்தி நெ.1 என்பதற்கான ஆதாரங்களை வெளியிடும். தினமலர் – தினத்தந்தி விளம்பரப் போர் கடந்த 15 ஆண்டுகாலமாக மிக மிக சுவாரஸ்யமாக நடந்து வருவது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

பொதுவாக எந்த Teaser Campaign வரும்போதும் நண்பர்கள் என்னைத் தொடர்புகொண்டு “எந்த கம்பெனி? எந்த Product?” என்று துளைத்தெடுப்பார்கள். நான் விளம்பர ஏஜென்ஸிகளில் வேலை செய்வதால் சுலபமாக சொல்லிவிடுவேன் என்பது அவர்கள் எண்ணம். நானும் பல நேரங்களில் யூகித்தே சொல்லவேண்டியிருக்கிறது. Teaser Ad வெளியிடும் விளம்பர நிறுவனங்கள் இந்த விடயத்தில் மிக மிக கவனமாக செயல்படுவார்கள்.

புள்ளிராஜா Campaign வந்தபோதும் சரி, ஆரோக்கியா, தினமலர் Teaser Campaignகளின் போதும் சரி எனது கணிப்பு சரியாகவே இருந்தது. இப்போது புதிய தலைவலி! ஒரு நண்பன் தொலைபேசி, “மச்சான் அது என்னடா 3க்கு போலாம் வாங்க?” என்றான். எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அதன்பின்னரே கொஞ்சம் விளக்கினான். சிலநாட்களாக விஜய் தொலைக்காட்சியில் “வாங்க 3க்கு போலாம்” என்று ஒரு விளம்பரம் வருகிறது. அது எந்த கம்பெனி? என்ன புராடக்ட்? என்று கொஞ்சம் தெளிவாக்கினான்.

நான் தொலைக்காட்சிகளை அதிகமாக பார்ப்பதில்லை என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் புரியவில்லை. நண்பன் குறிப்பிட்ட Teaser விளம்பரங்களை சற்று உற்றுநோக்க ஆரம்பித்தேன். இந்த விளம்பரங்களுக்கு பின்னால் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வது அதன் பின்னரே தெரியவந்தது.

சுமார் 14 ஆண்டுகளாக தமிழகத்தின் நெ.1 தனியார் தொலைக்காட்சியாக விளங்கும் சன் தொலைக்காட்சிக்கு சவால் விடும் தொடர் விளம்பரங்களே “வாங்க 3க்கு போலாம்” என்பது. (இது என் யூகம் மட்டுமே, வேறு கம்பெனி விளம்பரமாக இருந்தால் என்னை அடிச்சிடாதீங்க). சன் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அரைத்த மாவு நிகழ்ச்சிகளே 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியோ புதிது புதிதாக சிந்தித்து Innovative ஆன நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிமுகப்படுத்திய “கலக்கப் போவது யாரு” என்ற நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்தது. மக்களின் பெருவாரியான வரவேற்பைத் தொடர்ந்து முடிந்துவிட்ட அந்நிகழ்ச்சியை “கலக்கப்போவது யாரு-2” என்றும் சில மாதங்களுக்கு நடத்தி முடித்தது விஜய் தொலைக்காட்சி.

இந்நிலையில் மெகாசீரியல் மாயையிலிருந்து திடீரென்று முழித்துக் கொண்ட சன் தொலைக்காட்சி “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியில் பங்கு கொண்ட டீமை அப்படியே அழைத்து (துட்டா, மிரட்டலா தெரியவில்லை) விஜய் தொலைக்காட்சியை “பிட்” அடித்து “அசத்தப் போவது யாரு?” என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

சன் தொலைக்காட்சியின் இந்த கேவலமான போக்கை விமர்சித்தே விஜய் தொலைக்காட்சி சன்னை சீண்டும் வகையில் “3க்கு போலாம் வாங்க” “3 தான் ஒரிஜினல்” என்றெல்லாம் சீண்டல் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. “சன்” “மூன்” மேட்டர் புரிகிறதா? “3” என்பது வேறொன்றும் இல்லை. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 3-ம் பாகத்தையே விஜய் “3” என்று குறிப்பிடுகிறது. இதில் சன்னுக்கு எதிராக “மூன்” என்ற வார்த்தை ஜாலத்தையும் உள்குத்தாக வைத்திருக்கிறது.

அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக சன் தொலைக்காட்சி தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதோ என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் Trend setter என்ற பலமான இமேஜை தக்கவைத்துக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சிக்கு இதெல்லாம் தேவைதானா என்று தோன்றுகிறது. மக்களிடையே இன்று சன் தொலைக்காட்சி இந்த கேவலமான போக்கின் காரணமாக ஜோக்கர் ரேஞ்சுக்கு காட்சியளிக்கிறது.

மெகாத் தொடர்களாலும், மகா அறுவை விளையாட்டுகளாலும் தொலைக்காட்சி நேயர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் ராதிகாவை சன் தொலைக்காட்சியை விட்டே துரத்தினால் தான் நிலைமை சீர்படும் என்ற நிலையிலும் இன்னமும் அவரை வைத்து சன் டிவி மக்களை அறுத்துக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.

சன் டிவி பழைய மொக்கை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை துரத்தியடித்து விட்டு இளையத் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து நிகழ்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையேல் மக்கள் சன் தொலைக்காட்சியை இன்னொரு தூர்தர்ஷனாகத் தான் எதிர்காலத்தில் பாவிப்பார்கள்.

12 பிப்ரவரி, 2007

ஓரம் போ


தமிழுக்கு புதிய, வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கிய புதுமுக இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரிக்கு முதலில் கைகொடுத்து விட்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன். இதற்கு முன்பாக வந்த 'ஆட்டோ ஓட்டுனர்களை' ஹீரோக்களாகவும், பாத்திரங்களாகவும் வந்தப் படங்களை காட்டிலும் நிஜவாழ்வுக்கு மிக நெருங்கி வந்த படம் இது. இதுபோன்ற கதைக்களத்தை சரண் போன்ற கிரியேட்டிவ் டைரக்டர்கள் மட்டுமே சிந்தித்து, தைரியமாக படமாக்க இயலும். கையில் வெயிட்டான பட்ஜெட் இருந்தால் நிச்சயம் இந்த இரட்டை இயக்குனர்கள் கலக்குவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.

சன் ஆப் கன், பிகிலு இருவரும் சிட்டியில் பெரிய மெக்கானிக்குகள், தொழில்முறை போட்டியாளர்கள். இருவருக்குமிடையே அடிக்கடி தங்கள் பலத்தை காட்டிக்கொள்ள ஆட்டோ ரேஸ் நடக்கும். பிகிலிடம் ஷார்ப்பான ஆட்டோ ட்ரைவரான ஹீரோ இருப்பதால் இடைவேளை வரை ஜெயிக்கிறார். இடைவேளைக்குப் பின்பு தொடர்ந்து பல காரணங்களால் தோற்கிறார். க்ளைமேக்ஸ் ரேஸிலும் தோற்பது குறிப்பிடத்தக்கது. ரேஸில் தோற்கும் ஹீரோவும், பிகிலும் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இடையில் சுவாரஸ்யத்தைக் கூட்ட கருப்பு முத்து கடத்தல், பிரியாணி கடை ஹீரோயின், மும்பை அண்ணாச்சி என்று தோரணம் கட்டுகிறார்கள். எந்த கேரக்டருமே ரொம்ப சீரியஸாக இல்லாமல் எல்லோரும் கோமாளிகளே என்பதால் புன்னகைத்துக் கொண்டே படம் பார்க்க முடிகிறது.

ஹீரோ என்றால் ரொம்பவும் நல்லவன், வில்லன் என்றால் ரொம்பவும் கெட்டவன் என்ற வழமையான பொதுப்புத்தியை காட்டாமல் எல்லோரும் நார்மலான மனிதர்களே என்று காட்டியிருப்பது சிறப்பு. ஆர்யா ஆட்டோ ட்ரைவர்களின் பாடி லேங்குவேஜை அனாயசமாக காட்டியிருக்கிறார். கொஞ்சம் சிவப்பாக இருப்பது தான் மைனஸ் பாயிண்ட். பிகிலு கேரக்டரில் மலையாள லால் கண்களாலேயே நடித்து மனதை அள்ளுகிறார்.

ஜி.எஸ்.டி. ரோட்டில் பெரிய பெட்டிங்குடன் நடக்கும் ஆட்டோ ரேஸ், நைட்டு ரேஸ் என்று இதுவரை தமிழ் சினிமாவும் காட்டாத பக்கங்களை காட்டியிருப்பது சுவாரஸ்யம். ஆர்யாவுக்கு எதிராக ஆட்டோ ஓட்டும் ரேஸ் ஓட்டுனரான 'கோழி'யின் பேஸ்கட் சூப்பர்.

பிரியாணி கடையில் வேலை பார்க்கும் ஹீரோயின் பூஜா, தொடைக்கறி மாதிரி 'கிண்ணென்று' இருக்கிறார். டல் மேக்-அப், கண்ணை உறுத்தாத காஸ்ட்யூம்களில் மிளிர்கிறார். அவருக்கும், ஆர்யாவுக்கும் சமோசாவுக்குள் சொருகப்பட்ட மசாலா மாதிரி கெமிஸ்ட்ரி கலக்கலாக ஒர்க்-அவுட் ஆகிறது.

படத்தின் டைட்டில் காட்சி அருமை. Hulk படபாணியில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. டைட்டில் இசையும் சூப்பர். ஆட்டோ ட்ரைவர்களின் வாழ்க்கை தான் கதை என்பதால் படம் முழுக்க சென்னையின் எதிர் அழகியல் சொல்லாடல்கள் சென்சார் கண்ணுக்கு மண்ணைத் தூவி, அள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது. ஆடியன்ஸ் இவர்கள் தான் என்று இயக்குனர்கள் முன்முடிவோடு களமிறங்கி இருப்பதால் கிளுகிளு காட்சிகள் ஏராளம். கிட்டத்தட்ட மேட்டர் படம் லெவலுக்கு சில காட்சிகள் உண்டு.

ஜி.வி.ப்ரகாஷின் இசையமைப்பில் 'இதென்ன மாயம்?' பாடல் இதம், விஜய டி.ஆர். வாய்ஸில் கன் கன் கணபதி கலக்கல் காக்டெயில். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக க்ளைமேக்ஸ் பாடலான 'முயலுக்கும், ஆமைக்கும் ரேஸு.. ஜிஞ்சிக்காம்.. ஜிஞ்சிக்காம்.. ஜிக்காம்' அமர்க்களம். சிறுவயதில் பள்ளியில் பாடிய 'ரஜினிக்கும், கமலுக்கும் சண்டை... அதில் கிழிஞ்சது...' பாட்டு நினைவுக்கு வருகிறது.

எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படங்கள் ஏமாற்றங்களை தரும் நிலையில், 'ஓரம் போ' மாதிரியான சோட்டா படங்கள் அசத்துகின்றன.

கதையெல்லாம் லூசுல விடு மச்சி... ரெண்டு மணிநேர டைம்பாஸ் கேரண்டி..