31 டிசம்பர், 2011

சோழிகள் - குறுநாவல் விமர்சனம்!

"சிரித்தபடி சிதறின சோழிகள்" இவ்வளவு எளிமையான ஒரு அறிமுகத்தோடு கூடிய ஒரு கதையை வாசித்ததாக நினைவேயில்லை.

ரேகை ஜோசியம் பார்த்திருக்கிறேன். கிளி ஜோசியம் பார்த்திருக்கிறேன். எலி ஜோசியம் பார்த்திருக்கிறேன். ஏன் கொஞ்சநாட்களுக்கு முன்பாக ஆக்டோபஸ் ஜோசியம் கூட பார்த்திருக்கிறேன். சோழிகளை உருட்டி ஆரூடம் சொல்லுவது எனக்கு புதிது. நாவலுக்கான காலம் ஐம்பதுகள் என்பதால், அப்போது ஒருவேளை இம்முறை பரவலாக இருந்திருக்கலாம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் வார்த்தைகளை கொண்ட இந்த நெடுங்கதையில் மொத்தமே ஐந்தே ஐந்து பாத்திரங்கள். இவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களும் ரொம்ப குறைவு என்பதால், மீதி இடங்களை எழுத்தாளரே எடுத்துக்கொண்டு பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம். சலசலவென்று ஓயாமல் ஓடைபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மனித வாழ்வு தொடர்பான எதிர்மறை நியதிகளை விசாரிக்கும் நேர்மறை சிந்தனைகள். கொஞ்சம் நவீனமாகச் சொல்லவேண்டுமானால், 'பார்ப்பனத் தமிழில் புரட்சிவாதம்' என்றுகூட சோழிகளை சொல்லலாம்.

திருவல்லிக்கேணி கதைக்கான களம். அறுபதைக் கடந்த ராயர் நாயகன். ஜோசியம் முழுநேரத் தொழிலல்ல என்றாலும், கேட்பவர்களுக்கு சோழிகளை உருட்டித் துல்லியமாக சொல்கிறார். வாழ்வின் இறுதிக்காலத்தை மற்றவர்களுக்கு உதவி நிம்மதியாக வாழநினைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர். திருவல்லிக்கேணி இடையர்களுக்கு அடிக்கடி மாடு தொலைந்துபோவது பெரியப் பிரச்சினை. ராயரிடம் ஆரூடம் கேட்பார்கள். "மந்தவெளி காடுதாண்டி நடைபோடுது. சாயரக்‌ஷைக்குள்ளே பிடிச்சாந்துடு. கோபதாபத்துலக் குச்சிய வீசிடப் படாது. வாயில்லா ஜீவனை அடிக்கறதுக்கான ஆயுதமில்லையே இதுசும்மா அதட்டதான் புரியறதோ" - பெரும்பாலும் இதுதான் ராயரின் ஜோசியம்.

ஒருநாள் சூர்யஸ்தமனத்துக்குப் பிறகு கைக்குழந்தையோடு ஒரு பெண் வருகிறாள். வெள்ளிக்கிழமை கார்த்தாலே வேலைக்குப் போன ஆத்துக்காரர் ரெண்டு நாளா வீடு திரும்பலை. "ஆரூடம் பார்க்கோணும் ஸாமி" எப்படி கேட்கக்கூடாதோ அப்படிக் கேட்கிறாள். ராகவேந்திரசாமிகள் மீது பாரத்தை போட்டுவிட்டு சோழிகளை உருட்டுகிறார் ராயர். அவராலேயே நம்பமுடியவில்லை. உருண்ட சோழிகள் உண்மையை சொல்கிறது. இதுவரை இப்படியொரு ஆரூடம் சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்ததில்லை. ஒருவேளை சோழிகள் பொய் சொல்கிறதோ?

மீண்டும் உருட்டுகிறார். மீண்டும் அதே பதில். இவர் கேட்க கேட்க சோழிகள் எந்த உணர்வுமில்லாமல் சொன்ன பதிலையே திரும்ப சொல்கிறது. சோழிகள் அஃறிணை. உணர்ச்சியோ நெகிழ்ச்சியோ கிடையாது. ராயர் மனிதர் ஆயிற்றே? அந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்வார்? குழந்தைக்கு ஒன்று, ஒன்றரை வயதுதான் இருக்கும். "என்னமோ தெரியல. கணக்கு தப்பாவே வந்துண்டிருக்கு. செத்த ஸ்ரமம் பாக்காம காத்தால வர முடியுமாம்மா" என்று சமாதானம் சொல்லி அனுப்புகிறார்.

அந்த கிருஷ்ணபட்சத்து இரவு ராயருக்கு தூங்கா இரவு. அவரது பத்தினி சுலோசனா பாய் தனது பர்த்தாவை இந்தக் கோலத்தில் கண்டதேயில்லை. கடவுளோடு மனதில் பேசுகிறார். அல்ப மனித வாழ்வு குறித்த ஆத்ம விசாரம். தர்ம நியாயம். காற்றில் வெறுமனே கத்தி சுத்தி களைப்படைகிறார். இவ்வளவுதானா மனிதவாழ்வு? காலையில் அந்தப் பெண் வந்துவிடுவாள். மகள் வயதில் இருப்பவளிடம் என்ன பதில் சொல்வது? சோழிகள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடலாமா? நல்ல ஆரூடம் சொல்வேன் என்று என்னை நம்பி வந்தவளை நானே ஏமாற்றலாமா?

இப்படியாகப் போகிறது கதை. கடைசியில் "நதி எதுவாய் இருந்தாலும் சங்கமித்தாக வேண்டிய இடம்தானே கடல்" என்ற யதார்த்த வரியோடு முடிகிறது.

விமலாதித்த மாமல்லன் எடுத்தாண்டிருக்கும் பார்ப்பன மொழி மிக மிக அழகானது. தூர்தர்ஷன் நாடகங்களிலும், தமிழ் சினிமாவிலும் நாம் கண்ட, கேட்ட மொழியல்ல இது. நாவல் முழுக்கவே இம்மொழியாளுகை மிகச்சிறப்பாக எழுத்தாளருக்கு கைவந்திருக்கிறது. ஆனாலும் ஒரு நறுக்கென்ற சிறுகதைக்கான புள்ளியை குறுநாவலாக - வேறு சில சம்பவங்களை புத்திசாலித்தனமாக கோர்த்திருந்தாலும் - நீளமாக இழுத்திருப்பதால், இடையில் மெகாசீரியல் அலுப்பு வாசகனுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கதையின் தொடக்கத்தில் பார்த்தசாரதி கோயில் பட்டரோடு ராயர் பேசும் சமூக விவாதம் இக்கதையின் ஹைலைட் என்று எடுத்துக் கொள்ளலாம், அது கதைக்கு சம்பந்தமற்ற, இடைச்செருகலான நிகழ்ச்சி என்றபோதிலும்.

"பிராம்மண குலத்தையே வாய்க்கு வந்தபடி தூஷிக்கிற துடைப்பக்கட்டைப் பயல்களுக்கெல்லாம் சோழி உருட்டி ஜோசியம் சொல்றீரே சொரணை இல்லையோ உமக்கு" - பட்டர்.

ராயர் சிரிக்கிறார்.


"நேக்கு வயத்தப் பத்திண்டு வரதுக்கு சிரிப்பா இருக்காங்காணும்"

"படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்னு இருக்கறவாளைப் பாத்து சிரிக்காம வேற எண்ணப் பண்ணச் சொல்றேள்"

"நாத்தழும்பேற நாஸ்திகவாதம் பேசற நாய்களைப் போய் சப்போர்ட் பண்றீரே நியாயமாய்ப் பட்றதா உமக்கு"

ராயர் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கிறார். பூணூல் போட்டிருந்தா பார்ப்பானா? போட்டவாளுக்குப் பொறந்துட்டா பார்ப்பானா? எத்தனை பேரு வேளை தவறாம சந்தி பண்றான்? எத்தனை பேரு அர்த்தம் புரிஞ்சி காயத்ரி சொல்றான்? முக்காலே மூணு வீசம் பேருக்கு முதுகு சொறியத்தான் பூணூல் உபயோகப்பட்டுண்டிருக்கு என்று பிராமண நிந்தனை செய்கிறார்.

"க்ருஷ்ண. க்ருஷ்ண" என்று தலையில் அடித்துக் கொள்ளும் பட்டர், "என்னங்காணும் நீர். நாயக்கரை (பெரியாரை) தோக்கடிச்சிடுவீர் போலிருக்கே? உம்ம பூணூலை கழட்டிப் போட்டுற வேண்டியதுதானே?" என்று சொல்லிவிட்டு பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறார்.

டீடெய்லிங் கொடுப்பதில் விமலாதித்த மாமல்லன் கிங். கதாபாத்திரங்களுக்கான விவரணை ஆகட்டும், போலவே சம்பவங்களுக்கான விவரணை ஆகட்டும். மிக சுவாரஸ்யமாக, விஸ்தாரமாக - திண்ணையில் அமர்ந்து வெத்தலைப்பெட்டி செல்லத்தை திறந்து இலையின் காம்பை ஒடித்து, விரலில் சுண்ணாம்பு சுரண்டி இலையின் பின்பக்கத்தில் அளவுப் பார்த்து தடவி, ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு சேர்த்து, சொகுசாக வெத்தலைப்போடும் லாவகம் அவரது எழுத்துகளில் மிளிர்கிறது.

1994ல் எழுதப்பட்ட இந்த குறுநாவல் 1996ல் மாலைக்கதிர் இதழில் வெளிவந்திருக்கிறது. இருபது வயதுகளிலேயே தீவிர இலக்கியத்தில் முத்துக்குளித்து, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கவனிக்கப்பட்ட இவர் அடிக்கடி வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவரின் பதினாறு ஆண்டுகால வனவாசத்தை அகநாழிகை இலக்கிய இதழ் முடித்து வைத்திருக்கிறது. 'சோழிகள்' குறுநாவல் செப்டம்பர் - நவம்பர் 2010 தேதியிட்ட அகநாழிகை இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இவரின் கும்பகர்ண இலக்கியத் தூக்கத்தை நீர் தெளித்து எழுப்பியிருக்கிறார் அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன். இதன் மூலமாக அடுத்த இலக்கிய இன்னிங்சை துவக்குவதற்கான வாய்ப்பு விமலாதித்த மாமல்லனுக்கு வாய்த்திருக்கிறது. இச்சூழலில் இது ஒரு முக்கியமான இலக்கிய நடவடிக்கையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

இடைப்பட்ட காலத்தில் ஒன் டே மாட்சுகள் மட்டுமின்றி, டி20 மாட்சுகளும் பிரபலமாகி விட்டது மாமல்லன் சார். இதையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு விளையாடுங்க. உங்க அடுத்த இன்னிங்ஸுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!


விமலாதித்த மாமல்லன் கதைகள் - கடந்தாண்டு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதிய மொத்த முப்பது கதைகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. விலை ரூ.180. பக்கங்கள் : 312

சில இணைப்புகள் :


30 டிசம்பர், 2011

காசி


இரண்டு நாட்களாக காசியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.

ஏனெனில் போனவருஷம் இதே மாதத்தில் தான் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.

அவனுக்கு இலக்கியம் தெரியும். கதை கவிதை எழுதுவான். காதலிக்க தெரியும். வியாபாரம் தெரியும். எல்லாமே தெரியும். Jack of all. Master of none.

சிகரெட்டும், மாஸ்டர்பேஷனும் அவனால் விடமுடியாத சங்கதிகள். நிக்கோடினைப் பொறுத்தவரைக்கும் பால்வராத காம்பை உறிஞ்சுவதை மாதிரி இருக்கிறது என்கிறான். மாஸ்டர்பேஷன் கொஞ்சம் மோசம். தலையணையை அணைச்சுக்கிட்டு.. தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகள நினைவில் அடைச்சிக்கிட்டு...

திடீரென்று தத்துவம் மாதிரி ஏதோ பேசுகிறான். “தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்.. எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்குற மாதிரி.. சில சமயம் எனக்குள்ளே இருக்குற ‘நான்’தான் நிஜம் - இந்த வெளியிலே ‘நான்’ சூட்சுமம்னு பயமா தோணுதுடா...” அவன் தமிழில்தான் பேசுகிறான். இருந்தாலும் உணர்ச்சிவயப்பட்டு வாயை கோணலாக்கி அவன் ஆவேசமாக பேசும் மொழி புரிந்தும் புரியாததுமாக படுத்துகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மிக அதிக மார்க்குகள் வாங்கினானாம். 76ல் காலேஜ் விட்டு வந்தபோது இரண்டு பேப்பர்கள் ஃபெயிலாம். என்.டீ.சி. மில்லில் வேலை பார்த்தான். ஆறு மாசம். மனக்குமட்டல், மனநலத்திற்கு சிகிச்சை..

“எனக்கு எந்த ஜாப்புமே ஒத்து வரலைடா.. எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலை. தினம் தினம் ஒரே நேரத்தில் அதைச் செய்யறது, செயற்கையா ‘டாண்’னு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, ‘கன்’ டயத்துக்கு குளியல்.. தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.. இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே.. அதிகாரி உருட்டல்.. ஓவர் டைம்.. அப்பா!”

ஒரு கட்டத்தில் மனநோயாளி போல நடித்துக் கொண்டிருந்த காசிக்கு நிஜமாகவே மனநோய் தாக்கியிருக்கக் கூடும். “ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான் பைத்தியமில்லை. அவ்வளவுதான்!” என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித் திரிந்தான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும் அடிப்பதாக மனப்பிரமையில் பரிதவித்துப் போனான்.

பெரியப்பாவின் பேத்தியை கல்யாணத்துக்கு கேட்டான். “பைத்தியக்காரப் பயல் பெண் கேட்க என்ன தைரியம்?” என்று துரத்தி விட்டார்கள். தேங்காய் பருப்பியை கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில் டிக்-20ஐ காலி செய்தான். நாய்பீயை வாயில் கரைத்து ஊற்றி காப்பாற்றினார்கள். மீண்டும் மனநல மருத்துவம். மாத்திரைகள்.

அவனை ஒரு சாமியாரிடம் அழைத்துப் போனான் அவனுடைய நண்பன் குணா. “நாலு பேரு மாதிரி லைஃபிலே செட்டில் ஆவணும்கிறே ஆசையே அத்துப்போச்சி சாமி இவனுக்கு?”

“கடவுள் நம்பிக்கை உண்டா?” சாமி கேட்டாராம்.

“இல்லே சாமி. ஆனா ‘கடவுள்’னு ஒருத்தர் இருந்துட்டா கூட பரவாயில்லைன்னு படுது” காசி சொன்னானாம்.

தொடர்ச்சியாக காசியை சில நாட்கள் சாமியார் கண்காணித்திருக்கிறார். கடைசியில் தீர்வும் சொல்லியிருக்கிறார். “காசி உனக்கு செக்ஸ்தான் பிரச்சினை… யூ ஹாவ் டூ செக்ஸ் வித் ஹெர்” - சிஷ்யையை கை காட்டியிருக்கிறார். ரம்பை என்ற பெயருடைய அந்த சிஷ்யை, நம்ம காசிக்கு தங்கை மாதிரி தெரிந்திருக்கிறாள். தங்கையோடு புணர்ச்சியா? நோ வே.

எப்படியோ அவனுக்கு கல்யாணம் ஆனது. ஏற்கனவே திருமணம் ஆகி ‘டைவோர்ஸ்’ ஆன பெண். முதல் கணவனை ‘இம்பொட்டண்ட்’ என்று கூறி தாலியை வீசி எறிந்துவிட்டு வந்த பெண். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கச் சொல்லி மாமனார் வற்புறுத்தியிருக்கிறார். கதை, கவிதையெல்லாம் கட்டி எடைக்கு போடுங்க என்பது மாமனாரின் அன்பான அதிகார அட்வைஸ். ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்க்ரீம் பார், சினிமா, ரிலீஸ் ஆகாத தமிழ்ப்பட பாட்டு.. காசியின் மனைவியுடைய அன்றாட உலகம் இது.

தெனாலி கமல் மாதிரி மீண்டும் புலம்பினான் காசி. “ஒத்தயா பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னாலே முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சிடா. அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணிக்குவேன்”
இந்த காலக்கட்டத்தில் காசியிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. “காசுதான் சுதந்திரம், காசுதான் சுதந்திரம்” என்று ஒரு இன்லேண்டு லெட்டர் முழுக்க ஸ்ரீராமஜெயம் மாதிரி எழுதியிருந்தான்.

இப்படிப்பட்ட காசியோடுதான் இரண்டு நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.
காசியை ஒரு தறுதலை என்று ஒரு வார்த்தையில் நீங்கள் புறக்கணித்துவிட்டு போய்விட முடியும். ம்ஹூம். என்னால் முடியவில்லை. அவன் வாழ்க்கையை இயல்பாகவே அவன் வாழ்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு பெரிய மூட்டை.

சுலபமாக சுமப்பதாக நாமெல்லாம் பாவனை செய்துகொண்டு, வெளியில் சிரித்து, உள்ளுக்குள் அழுது, வாழ்நாள் முழுக்க துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காசி இப்படியில்லை அல்லவா?
அதுசரி. காசி இப்போது என்ன ஆனான் என்று கேட்கிறீர்களா? அவனும் பாவனை செய்ய கற்றுக் கொண்டான். எப்படி? எதனால்? என்று ‘எ, ஏ’வில் தொடங்கும் நூறு கேள்விகள் உங்கள் மனதுக்குள் எழும்பலாம்.

நான் ஒரு ‘ஆஃபர்’ கொடுக்கிறேன். நீங்களும் என்னைப்போல சில நாட்கள் காசியோடு வாழலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது...

நூல் : மீனுக்குள் கடல் (சிறுகதைகள், கவிதைகள்)
ஆசிரியர் : பாதசாரி
பதிப்பகம் : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
விலை : ரூ.15

இந்த நூலை கட்டாயம் வாங்கிப் படியுங்கள். நான் வாசித்த சிறுகதைகளில் (குறுநாவல் என்றும் சொல்லலாம். எட்டு பாயிண்ட் சைஸில் பத்தொன்பது பக்கங்கள்) மிகச்சிறந்த சிறுகதையாக பாதசாரி எழுதிய ‘காசி’யை சொல்லலாம். நீங்களும் வாசித்துப் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கும் இதே உணர்வு தோன்றக்கூடும்.

இலக்கியம் என்பது படைப்பாக்கம் மற்றும் வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் வாசித்த சிறந்த இலக்கியத்தை மற்றவர்களுக்கு பகிர்வது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். காசியை எனக்கு பைத்தியக்காரன் பகிர்ந்தார். நான் மற்றவர்களுக்கும் பகிர்கிறேன்.

குறிப்பு : 80களில் எழுதத் தொடங்கிய பாதசாரி இதுவரை இரண்டே இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். எழுத்தின் தரம் என்பது குவாண்டிட்டியில் அல்ல. குவாலிட்டியில் என்று பிடரியில் அடித்தது போல புரியவைக்கிறார் பாதசாரி.

29 டிசம்பர், 2011

இரு நிகழ்வுகள் - இரு குறுநாவல்கள்!


அவரது உடை அப்போதெல்லாம் ஒயிட் அண்ட் ஒயிட். அருகில் சென்றால் ஜவ்வாது மணக்கும். க்ளீன் ஷேவ். நிறம் கருப்பு. பல் கொஞ்சம் எடுப்பு. வாயில் ஸ்டைலாக புகையும் வில்ஸ் ஃபில்டர். எனக்கு ரொம்பவும் பிடித்த பாலகுமாரன். என்றைக்கு தாடி வைத்தாரோ, என்றைக்கு விசிறியின் விசிறி ஆனாரோ, அன்றே லவுகீகவாதிகளிடமிருந்து விலகிவிட்டார். ஞாநிகளும் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த காலத்து பாலகுமாரனை எப்போதாவது இரவுகளில் நெட்ரு பண்ணுவது சுகமான லாகிரி.


உயிர்ச்சுருள்

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைகிறது. ஆர்.எம்.வீரப்பன் கைப்பற்றிய அணி ஜா. நெடுஞ்செழியன் கைப்பற்றிய அணி ஜெ. சட்டமன்றத்தில் ஒருவருக்கொருவர் டவுசர் கிழித்துக்கொள்ள ஆட்சி கலைகிறது. இப்படிப்பட்ட சூழலில் ராயப்பேட்டை தலைமைக் கழகத்துக்காக இரு அணிகள் அடித்துக் கொள்கின்றன.

இது 1988ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு. இதன் பின்னணியில் இந்தியா டுடே பத்திரிகையில் பாலகுமாரன் எழுதிய தொடர் ‘உயிர்ச்சுருள்’. இக்கதையில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் உண்மையானவை. எங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பாலகுமாரனிடம் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தோம். அவர் அதை இந்தியாடுடேவுக்கு கதையாக்கி காசு பார்த்துவிட்டார் என்று பின்நாளில் ஒருமுறை நக்கீரன் கோபால் அலுத்துக் கொண்டார்.

கிரிதரன் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளன். காலபைரவன் பத்திரிகையில் பணிபுரிகிறான். நிறைய பாலகுமாரன் கதைகளில் வருவது போன்ற மனைவியுடனான அதிகாலைக்காதல், காதலால் முகிழ்ந்த கலவியில் அவனுக்கு நாள் தொடங்குகிறது. கொஞ்சம் சுமாரான காப்பியால் மனைவி வளர்மதியோடு சண்டை. வாய்வார்த்தை தடிக்கிறது. குழந்தையோடு அம்மா வீட்டுக்கு போய்விடுகிறாள்.

சிகப்பு அணியும், வெள்ளை அணியும் கட்சி ஆபிசுக்கு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற ரகசிய தகவல். போட்டோகிராபர் செல்லமுத்து, ஆசிரியர் கார்வண்ணனோடு கட்சி ஆபிஸ் வாசலுக்குப் போகிறான். எக்ஸ்க்ளூசிவ் போட்டோக்களோடு ரிப்போர்ட் அடிக்க வேண்டும். மீனுக்காக காத்து நிற்கும் கொக்குமாதிரி காத்திருக்கிறார்கள்.

எதிர்ப்பார்த்த சண்டையும் நடந்தது. ஒருவர் மண்டையை ஒருவர் உடைத்துக் கொள்கிறார்கள். செல்லமுத்து போட்டோவாக எடுத்துத் தள்ளுகிறான். என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கவனமாக குறிப்பெடுத்துக் கொள்கிறான் கிரிதரன். அய்யகோ. செல்லமுத்துவின் கேமிராவை ஒரு போலிஸ்காரன் பிடுங்கிக்கொள்ள...

அதைத்தொடர்ந்து நடக்கும் பரபரப்பு சம்பவங்கள். போட்டோவோடு காலபைரவனில் ரிப்போர்ட் வந்ததா? கோபித்துக்கொண்டு போன பொண்டாட்டியை கிரிதரன் சமாதானப்படுத்தினானா? என்பதெல்லாம் இறுதி அத்தியாயம். நொடிக்கு நொடி, சொல்லுக்கு சொல் பரபரப்பை ஏற்படுத்திய நாவல் இது. பாலகுமாரனின் ட்ரேட்மார்க் அட்வைஸ்கள் ரொம்ப ரொம்ப குறைவாக அமைந்தது இந்நாவலுக்கான வேகத்தை கூட்டியது எனலாம்.


தண்ணீர்த்துறை

1987ஆம் ஆண்டு நடந்த போராட்டம் அது. நிறைய பேருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. மரம் வெட்டி சாலையில் போட்ட போராட்டம் என்று சொன்னால்தான் தெரியும். இடஒதுக்கீடு கேட்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் அது. அதன் பின்னணியில் பாலகுமாரன் எழுதிய குறுநாவல் தண்ணீர்த்துறை. மிக நியாயமான அந்தப் போராட்டத்தின் மீது லேசான எள்ளலும், கடுமையான கோபமும் பாலகுமாரனுக்கு இருந்திருப்பதை இப்போது நாவலை வாசித்தால் புரிந்துகொள்ள முடிகிறது. என்ன இருந்தாலும் அது அதுதானே? பாலகுமாரனின் உள்நோக்கத்தை விட்டுவிடுவோம். கோழி குருடாக இருந்தாலென்ன? நொண்டியாக இருந்தாலென்ன? பிரியாணி ருசியாகத்தானிருக்கிறது.

திருப்போரூரிலிருந்து மயிலாப்பூர் தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்கு ஒரு கிழவனும், அவனது மருமகளும் கீரைக்கட்டு விற்க அதிகாலையில் கிளம்புகிறார்கள். கிழவனது மகன் சாலைமறியல், பஸ்களை தீவைத்துக் கொளுத்தியது, சட்டத்துக்கு புறம்பாக வன்முறையைத் தூண்டிவிட்டது போன்ற பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருப்பவன்.

கிழவனுக்கும், மகனுக்கும் நடக்கும் ஒரு சாம்பாஷணை!

“இனிமே பார்ப்பானுங்க காலம் போயிடிச்சி. இது நம்ம காலம். நம்ம ஆட்சி. நம்ம ஜாதி கோட்டைக்குப் போற வரைக்கும் நாங்க ஓயமாட்டோம். இப்பவே மூணு மந்திரிங்க. இது போதாது. முதல்வர்லேருந்து கடைசி மந்திரி வரைக்கும் நம்ம ஜாதி ஆளுதான் ஆட்சி பண்ணனும். நம்ம கொடி பறக்கணும். என்ன சொல்றப்பா நீ?”

“என்னாத்த சொல்ல. ஒரு தாய்ப் புள்ளைங்களா இருந்தது...”

“எப்ப இருந்தது? ஒரு தாய்ப்புள்ளைங்களா? இன்னிக்குக் கூட உன்னை வூட்டு உள்ள உடமாட்டான்!”

“அப்படி இல்லை”

“ஆமா அப்படித்தான்”

“கீரை சாப்புடறதே இப்போ ஐய்யருங்கதான். பசேல்னு கீரையப் பார்த்துட்டு ஒரு ஐயரும் தாண்டிப் போறதில்லை”

”இப்ப எதுக்கு சொல்ற அதை?”

“கீரை மதம் குறைக்கும். திமிர் அடக்கும். அவங்க அன்னிக்கும் சண்டைக்கு வந்ததில்லை. இன்னிக்கும் வரமாட்டாங்க”

மருமகள் சொன்னாள்.

”இப்போ ஜாதியா சோறு போடுது. சாப்பிட வாங்க”

“ஜாதி சோறு போடும்டி. ஒத்துமையா இருந்தா. நமக்குள்ளே நாப்பது பிரிவு. இப்பிடிப் பிரிச்சுப் போட்டது பாப்பானுங்க”

“சரி. அதான் இப்ப ஒன்னாயிட்டீங்களே? வாங்க”

- ஷங்கருக்கு வசனம் எழுத பாலகுமாரன் கிடைத்தது எவ்வளவு பெரிய வரம்?

கதை கிழவன், மகன், மருமகளை தாண்டி மார்க்கெட்டுக்கு ஓடுகிறது. வாட்ச்மேன் சண்முகம், புருஷன் ஓடிவிட்ட மதமதப்பான சிறுவியாபாரி வேணி, காய்கறி வேன் ஓட்டும் முகமது பாஷா, வேணியை ஒருமாதிரியாக பார்க்கும் பாஷாவின் இளவட்ட தம்பி அன்வர், சக மார்க்கெட்டுக் காரர்கள் என்று கதையின் களமும், மாந்தர்களும் வேறு தளம். ஐம்பத்துநாலு ரூபாய் எழுபது பைசாவுக்காக வேணி அன்வர்பாஷாவோடு பிள்ளையார் கோயில் பக்கமாக ஒருமுறை ஒதுங்குகிறாள்.

சட்டென்று, அந்த சாதி சங்கத்தைப் பற்றி பாலகுமாரன் இவ்வாறாக அறிமுகப்படுத்துகிறார். சென்னையில் அந்த சாதிசங்கம் வலுவானதாக இருந்தது. ஆனால் வேகமானதாக இல்லை. காசு புழக்கம் அதிகமில்லை. காசு புழங்குமளவுக்கு வளரவும் இல்லை. செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்தவர்கள் செயல்வீரர்களாக இருந்தார்கள். சென்னையில் இருப்பவர்கள் ஒன்று சேருகிறார்களே ஒழிய, செயல்திறன் இல்லை.

இந்த சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும், மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கும் போஸ்டர் ஒட்டுவதில் தகராறு ஏற்படுகிறது. மார்க்கெட்டில் சகலஜாதியினரும் கடைவைத்திருக்க ஒரு சாதிக்காரன் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என்று ஒட்டுமொத்தமாக பொங்கியெழுகிறார்கள். சாதிசங்கத்தினர் ஆட்களை திரட்டி வந்து மோதுகின்றனர். முடிவு?


- இந்த இரு குறுநாவல்களையும் ஒரே புத்தகமாக விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது. விசா பப்ளிகேஷன்ஸின் விசேஷம் என்னவென்றால் கார்ப்பரேட் பதிப்பகங்களிடம் அதிகவிலைக்கு சிறைப்பட்டிருக்கும் சுஜாதாவை ரொம்ப சீப்பாக விற்கிறார்கள். ஸ்ரீரங்கத்து தேவதைகளை கூட சல்லிசாக வாங்கலாம். ஏராளமான பாலகுமாரன் நாவல்களும் உண்டு.


நூலின் பெயர் : உயிர்ச்சுருள்

நூல் ஆசிரியர் : பாலகுமாரன்

விலை : ரூ.50/-

பக்கங்கள் : 160

வெளியீடு : விசா பப்ளிகேஷன்ஸ்,
புதிய எண்.16, பழைய எண்.55,
வெங்கட்நாராயணா ரோடு,
தியாகராய நகர், சென்னை-600017.
தொலைபேசி : 24342899, 24327696

28 டிசம்பர், 2011

செங்கடல்

சிங்கள அரசையும், இந்திய அரசையும் ஒரு தட்டில் வைத்து அம்பலப்படுத்துவதால் தணிக்கையில் பிரச்சினை. சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிட புறக்கணிப்பு என்று எப்போது கேள்விப்படும் போதும் ஏதேனும் சர்ச்சை கச்சை கட்டிக் கொள்வதால் ‘செங்கடல்’ இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எங்கே புறக்கணிக்கப்பட்டதோ, அதே படவிழாவில் அரங்கு நிறைந்த கூட்டத்துக்கு இடையே தரையில் அமர்ந்து செங்கடலை கண்டோம்.

லீனாவின் ‘டயரி’தான் ஒருவரி கதை. 2009 மே மாத வாக்கில் ராமேஸ்வரத்தில் இயக்குனர் லீனா, மீனவர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்துக்காக தங்கியிருக்கிறார். காவல்துறையினர் லீனாவை விசாரிக்கிறார்கள். அவர் எடுத்த வீடியோ காட்சிகளை போட்டுப் பார்க்கிறார்கள். கடைசியாக ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

முதல் காட்சியிலிருந்தே இது ஆவணப்படமா, திரைப்படமா என்கிற குழப்பம் ஏற்படுகிறது. இது இரண்டுமே இல்லை என்று உணரும்போது படம் எந்தவொரு குறிப்பிடத்தக்க உணர்வையும் உருவாக்காமல் முடிந்துவிடுகிறது. லீனா படத்தை இயக்கி மட்டும் இருக்கலாம். பொலிவான தோற்றம், ஆளுமையான குரல் இருந்தாலும் நடிப்பாற்றல் அவருக்கு கொஞ்சம் சுமார்தான். ஒரு சிலரைத் தவிர படத்தின் பாத்திரங்கள் பெரும்பாலும் தொழிற்முறை நடிகர்கள் அல்ல என தெரிகிறது. எனவே பல காட்சிகள் அமெச்சூர்த்தனமாய் அமைந்துவிடுகிறது. இத்தனைக்கும் கேமிரா, எடிட்டிங் உள்ளிட்ட விஷயங்கள் நல்ல தொழிற்நேர்த்தியுடன் அமைந்தும், ஏதோ விஸ்காம் மாணவர்களின் அறிமுக குறும்படத்தை பார்வையிடும் உணர்வுதான் வருகிறது.

எடுத்தாளப்பட்டிருக்கும் உள்ளடக்கமும் ஒன்றும் புதிதல்ல. ஓரளவு ஈழ, தமிழக அரசியல் அறிந்த எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள்தான். பத்திரிகைகளில் வாசித்தது, மேடைகளில் கேட்டது மாதிரியான தகவல்களை காட்சிகளாக்கி இருக்கிறார்கள். ஆனால் வாசித்தபோதும், கேட்டபோதும் ஏற்பட்ட கோபம், காட்சிகளாகப் பார்க்கும்போது இல்லை எனுமளவுக்கு மிக பலகீனமான உருவாக்கம்.

ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையோடு பின்னிப் பிணைந்ததுதான் என்றாலும்.. ஏதேனும் ஒரு தரப்பின் பார்வையில் ஃபோகஸ் செய்திருந்தால் திரைக்கதை குழப்பமில்லாமல் இருந்திருக்கும். பல காட்சிகளில் யார் மீனவர், யார் ஈழத்தமிழர்.. எது அகதிமுகாம், எது மீனவர் குப்பம் என்கிற குழப்பம் பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இடையிடையே வரும் கவிதைகள், ஏதோ ஒரு மணிபல்லவத்தீவு கனவுகாட்சி, சித்தார்த் என்கிற ஆமை என்று ஆடம்பரமாக சொருகப்பட்டிருக்கும் பின்நவீனத்துவக் காட்சிகள் எதுவுமே இந்தம் சாமானிய மரமண்டைக்கு ஏறவில்லை.

ஈர்க்கக்கூடிய ஓரிரு விஷயங்களும் உண்டு. மனநிலை பிறழ்ந்த ஈழத்தமிழர் பாத்திரத்தில் நடித்திருப்பவரின் நடிப்பு அபாரம். அவரது பாத்திரம் மட்டுமே செதுக்கி, செதுக்கி கவனத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது கையில் எப்போதும் இடம்பெறும் ரேடியோவும் கதையில் தவிர்க்க இயலாத ஒரு பாத்திரமாகிறது. இறுதியில் அந்த ரேடியோ கூட செயலிழந்துப் போய்விடுவதாக காட்டுவது படுசோகம். மீனவர் ஒருவர் அவருக்கு வேறு ரேடியோ பரிசளிப்பது எதிர்கால நம்பிக்கை.

எந்தவகையில் செங்கடல் சிங்கள, இந்திய ஏகாதிபத்தியங்களை நடுநடுங்க வைக்கிறது என்பது கடைசிவரை புரியவேயில்லை. இதைவிட காத்திரமான எழுத்துகளும், கூட்டங்களும் கூட எந்த பெரிய ‘சர்ச்சை’யையும் ஏற்படுத்திவிடாத நிலையில், செங்கடலுக்கு ஏனிந்த கொலைவெறி ஆர்ப்பாட்டம் என்பது புரியவேயில்லை. அகதி முகாம்களில் காவல்துறையினரின் அத்துமீறலை எல்லாம் செங்கடலை விட சிறப்பாக, கேப்டன் நடித்த ‘சபரி’ திரைப்படத்திலேயே கண்டுவிட்டோம்.

அதுபோலவே ஈழத்தமிழருக்கான போராட்டங்கள் குறித்த காட்சிகளின்போது, டெல்லியில் கவிஞர்கள்-எழுத்தாளர்கள் நடத்திய போராட்டம்தான் ஐ.எஸ்.ஓ. 9001 விருதுபெற்ற ஒரிஜினல் போராட்டம் என்கிறரீதியில் வரும் காட்சிகள், கவுண்டமணி-செந்திலின் வாழைப்பழ நகைச்சுவைக்கு இணையான நகைச்சுவை உணர்வை தருகிறது. கொஞ்சமும் ஒட்டாத இந்த செல்ஃப் பிரமோஷனை லீனாமணிமேகலை தவிர்த்திருக்கலாம்.

‘இது விடுதலைப்புலிகளை எதிர்க்கும் படம்’ என்று தாங்களாகவே நினைத்துக்கொண்டு புலி ஆதரவாளர்கள் தேவையில்லாமல் செங்கடலை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். புலிகளை மட்டுமல்ல. இந்தியா, இலங்கை அரசுகளையும் கூட ஒன்றும் அவ்வளவு வலிமையாக ‘செங்கடல்’ எதிர்க்கவில்லை. திரைப்பட உருவாக்கத்துக்கான எந்தவொரு திட்டமிடலோ, தேவையான உழைப்போ இன்றி, ‘நம் பங்குக்கும் ஒரு படம்’ என்று கடனுக்கு எடுத்தமாதிரியாகதான் ஏனோதானோவாக எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ போதுமான சமாச்சாரங்கள் எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

26 டிசம்பர், 2011

சரிகாஷாவை மறக்க முடியுமா?

மிகச்சரியாக பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் பெண்களை பெற்ற வயிறுகளை கொடுங்கனவாய் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது அந்த சம்பவம்.

எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் சரிகாஷாவும், அவரது தோழிகளும் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய இளைஞர்கள் சிலர் ஆட்டோவில் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இளம்பெண்களை கண்டதுமே அவர்களுக்கு குஷி. பெண்கள் மீது தண்ணீர் பாக்கெட்டை பீய்ச்சியடித்து விளையாடினார்கள். ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறிய இளைஞர் ஒருவர் சரிகாஷா மீது விழுந்தார். இதனால் கீழே விழுந்த சரிகாஷாவின் தலையில் அடிபட்டு மரணமடைந்தார். அதே நாள்தான் சரிகாஷாவின் பிறந்தநாளும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெற்றோருக்கு அவர் ஒரே மகளும் கூட.

தமிழகத்தையே குலுக்கிப் போட்ட மரணம் இது. அதுவரை ஈவ்-டீசிங் கொடுமையை பொறுத்துக் கொண்டிருந்த மகளிர், பல்வேறு அமைப்புகளின் சார்பாக தெருவுக்கு வந்து போராடிய வரலாற்று நிகழ்வும் சரிகாஷா மரணத்தால் நிகழ்ந்தது. இதன் விளைவாக தமிழக அரசு ‘ஈவ்-டீசிங் ஆக்ட்’ என்கிற தனிச்சட்டத்தையே கொண்டுவந்தது.

சட்டம் மட்டும் போதுமா?

இன்றும் ஈவ்-டீசிங் கொடுமை ஆங்காங்கே தினமும் நடந்துதான் வருகிறது. பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் என்கிற ஒரே காரணத்துக்காக, அவள் மீது கேலியும், வன்முறையும் ஆண்களால் ஏவப்படுவது நாகரிகமான மனித சமூகத்துக்கு அழகல்ல.

ஈவ்-டீசிங் கொடுமை என்பது தமிழகத்துக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கூட தொடர்ச்சியாக நடைபெறும் அவமானம்.

சமீபத்தில் மகாராஷ்டிராவின் அம்போலி என்கிற பகுதியில் இரு பெண்கள் ஈவ்டீசிங்கால் கொல்லப்பட்டதையடுத்து, அங்கே கொதிப்பான ஒரு சூழல் நிலவிவருகிறது. இந்தக் கொடுமைகளை ஒடுக்குமாறு அரசை நோக்கி மக்கள் போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.

இதையடுத்து அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சர் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஈவ்-டீசிங்குக்கு உள்ளாகும் பெண்கள், அதுகுறித்த புகார்களை எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, பிரத்யேகமான ஹாட்லைனிலோ குரல் பதிவு செய்யலாம். மும்பை காவல்துறையின் இணையத்தளத்திலும் புகார் பதிவு செய்யும் வசதியை மகாராஷ்டிர அரசு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. புகார் பதிவு செய்யப்பட்டதுமே, உடனடியாக புயல்வேகத்தில் காவல்துறை செயல்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்துவிடும் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.

ஈவ்டீசிங்கால் பாதிக்கப்படும் பெண்கள் பலரும், அதுகுறித்து சொந்தத் தாயிடம் கூறக்கூட வெட்கப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள். இதனாலேயே பிரச்சினை பெரியதாகி மரணம் வரை கூடப்போகிறது. மகாராஷ்டிராவில் இப்போது அறிமுகமாகியிருக்கும் இந்த முறையில் தங்களது புகார் ரகசியமானது என்பதால் பெண்களுக்கு இருக்கக்கூடிய வழக்கமான மனத்தடை அகலும். எனவே ஈவ்டீசிங் குற்றங்களை கணிசமாக குறைக்கலாம்.

சமூகம் தொடர்பான பல புரட்சித் திட்டங்களுக்கு தமிழகம்தான் முன்னோடி. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உடனடியாக இத்திட்டத்தினை தமிழக அரசும் காவல்துறையை முடுக்கிவிட்டு அமல்படுத்தினால், நம்மூர் பெண்களும் நிம்மதியாக பள்ளிக்கும், கல்லூரிக்கும், அலுவலகத்துக்கும் சென்றுவரலாம். பெண்கள் நலனில் பெரும் அக்கறை செலுத்தும் முதல்வர் இதை உடனே கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு சரிகாஷா சம்பவம் இங்கே நடைபெறவே வேண்டாம்.

23 டிசம்பர், 2011

ஏதாவது தலைப்பு போட்டு படித்துக் கொள்ளுங்கள்!

‘புதுவருஷத்தில் இருந்து தம் அடிக்கக் கூடாது, தண்ணி அடிக்கக் கூடாது’ என்கிற வழக்கமான லவுகீக சடங்குகள் ஒருபுறமிருக்க, பார்ப்பவனிடமெல்லாம் “உங்க ஆபிஸ் டயரி நல்லா பெருசா, வாட்டமா(?) இருக்குமாமே? ஒண்ணு கிடைக்குமா?” என்று பரக்காவெட்டி போல கேட்டுவைப்பதும், “ஜி.ஆர்.டி-லே ரெண்டு சீட்டு போட்டிருக்கீங்களே? அப்போன்னா ரெண்டு காலண்டர் கொடுத்திருப்பானே? ஒண்ணு உங்களுக்கு. இன்னொன்னு யாருக்கு?” என்று அல்பத்தனமாய் அலம்பல் பண்ணுவதுமாக, தன்னுடைய வாழ்க்கை முழுக்கவே கவுண்டமணியாக மட்டுமே வாழ்ந்து கழிப்பது என்பதனை ஒரு சபதமாகவே மேற்கொண்டு வாழ்ந்து வரும் தமிழன்....

யப்பா... எவ்ளோ நீட்டு வாக்கியம்...

ஆகையால் மக்களே, வருட கடைசியில் உங்களுக்கு ஆயிரம் சம்பிரதாயமும், சடங்குகளும் இருக்கலாம். பத்திரிகைகளுக்கும் இதுமாதிரி பாரம்பரிய சடங்குகள் உண்டு. ’கடந்தவை’, ‘நினைவில் நின்றவை’, ‘சென்ற வருடம்’ என்றெல்லாம் ஏராளமான தலைப்பில், எல்லா பத்திரிகையும் ஒரே மேட்டரையே நன்கு நைசாக மாவரைப்பது வழக்கம். படிப்பவர்களுக்கு இது அரைத்தமாவாக தெரிந்தாலும், இதையெல்லாம் தொகுப்பது என்பது தாலியறுக்கும் வேலை. இதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகைக்காரன் ரெண்டு, மூன்று நாள் கண்விழித்து நைட்டு வேலை பார்க்க நேரிடும். அதற்குப் பிறகு கண்ணு பூத்துப்போய் ரோட்டில் போகும்போது கூட அவனை கடக்கும் ஃபிகரை கூட கடந்த வருட ஃபிகராகதான் பார்ப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தினத்தந்தி மாதிரியான பத்திரிகைகள் இந்த கந்தாயத்துக்கெல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவை. உதாரணத்துக்கு அவர்களது 1950ஆம் ஆண்டு ஜனவரி 1 பேப்பரை எடுத்துப் பாருங்களேன். முகப்புப் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் இருக்கும். அதில் 1949 என்கிற கிழவன் ஃபிரேமை விட்டு வெளியே போவான். 1950 என்கிற குழந்தை ஃபிரேமுக்குள் வரும். இப்போது 2012க்கு வருவோம். அதே கார்ட்டூன்தான் இப்போதும் முகப்பை அலங்கரிக்கப் போகிறது. என்ன கிழவனுக்கு 2011 என்கிற எண்ணும், குழந்தைக்கு 2012 என்கிற எண்ணும் மட்டும் பலமாக சிந்திக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். தீபாவளி கார்ட்டூன், பொங்கல் கார்ட்டூன் என்றெல்லாம் எல்லா ஸ்பெஷலுமே இதே பாணியில்தான் தினத்தந்தியில் அமையும். என்ன 1958ல் சரோஜாதேவி புதுவருட வாழ்த்து சொல்லியிருப்பார். இப்போது ஹன்சிகா சொல்லுவார். இந்த வித்தியாசம் போதாதா?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் வேலைதான். இருந்தாலும் சொல்கிறேன். பத்திரிகைப் பணி என்பது பெரும்பாலும் இதுமாதிரி ‘ஜல்லி’ அடிக்கும் பணியாகவே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை எப்போதோ ஓரிரண்டு சுவாரஸ்யமான வேலைகள் வரக்கூடும். அதுவரைக்கும் இதுமாதிரி வழக்கமான மாவரைக்கும் மாவை எப்பாடுபட்டேனும் அரைத்தே ஆகவேண்டும். ஸ்பெஷல் என்றால் விருந்தினர் பக்கம் எல்லாம் வந்தாக வேண்டும் யார்தான் கண்டுபிடித்ததோ தெரியவில்லை. சாதாரணமாக ஈ ஓட்டிக் கொண்டும், ‘உங்க பத்திரிகையிலே என்னோட ஒரு பேட்டி போடுங்களேன்’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்த விருந்தினர்கள், எப்படித்தான் இந்த ஸ்பெஷல் போடும் காலத்தில் மட்டும் பிஸியாகித் தொலைக்கிறார்களோ? செய்வது புண்ணாக்குத் தொழில் என்றாலும், காட்டும் பந்தா மட்டும் இவர்களுக்கு குறைச்சல் இல்லை.

டயர்ட்னஸ்ஸில் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன். ஸ்பெஷலுக்காக ரொம்ப காத்திரமாக(?) ஏதோ எழுதிக் கொண்டிக்கும் போது, ஒரு ரிலாக்சேஷனுக்காக, எந்த ஃபோகஸும் இல்லாமல், எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லாமல், எந்த சப்ஜெக்ட்டும் இல்லாமல் எதையாவது ஒரு ஐநூறு வார்த்தையை பைத்தியக்காரத்தனமான மனநிலையில் எழுதித் தொலைக்க முடியுமா என்று பார்ப்பதற்கே இதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த சலிப்பான வருடக் கடைசி, புதுவருட சம்பிரதாயங்களை சிலர் மட்டும் எப்படி சுவாரஸ்யமாக அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய தினகரன் வெள்ளிமலர் ஒரு பொக்கிஷம். சினிமா ரசிகர்கள் போற்றிப் பாதுக்காக்க வேண்டிய மலர். கடந்த ஆண்டு மலையாளம், இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் சினிமாவின் நிகழ்வுகளை, முக்கியமானது எதுவும் விடுபட்டு விடாமல் தலா ரெண்டு பக்க கேப்ஸ்யூல்களாக கொடுத்திருக்கிறார்கள். நான் வெள்ளிமலரின் ரெகுலர் ரசிகன். வெள்ளிக்கிழமை காலை எண்ணெய், சீயக்காய் வைத்து தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ (இது பெண்கள் வழக்கம்தானே? நான் எந்த கிழமையில் சீயக்காய் தேய்க்கிறேன் என்று மறந்துவிட்டது) வுட்டாலங்கடி, ஹாலிவுட் ட்ரைலர் ஆகியவற்றை வாசிக்கத் தவறுவதில்லை. இப்போது ரவிதேஜா, சுதீப், கரன் ஜோஹர், டாம் க்ரூஸ் மாதிரி பெயர்களை எங்காவது வாசிக்க நேர்ந்தால் ஜெயம் ரவி, சித்தார்த், ஹரி, சிங்கமுத்து மாதிரி பெயர்களை வாசிப்பதைப் போன்ற ஈஸியான அட்டாச்மெண்ட் வர இந்த வுட்டாலங்கடி, ஹாலிவுட் ட்ரைலர்கள் ஒரு முக்கியக் காரணம். இந்த மாதிரி வாரா வாரம் ஒரு படத்துக்கு ப்ரிவ்யூ கொடுப்பவர்கள், இந்த வாரம் கடந்த வருட முக்கிய சினிமா நிகழ்வுகளை அலசியிருக்கிறார்கள். இந்தியில் வசூல் சாதனை புரிந்த படங்கள், தெலுங்கில் டப்பாவுக்குள் முடங்கியவை, கன்னடத்தில் சாதனை, மலையாளத்தில் வேதனை என்று கலக்கல் காக்டெயில். தமிழ் சினிமா பற்றிய அலசல்கள் அடுத்த வாரமென்று நினைக்கிறேன். நிஜமாகவே இந்த கட்டுரைகளை எழுதுவது சவால்தான். அனேகமாக ஐநூறு வார்த்தைகளுக்குள் ஒரு வருட சரித்திரத்தை எழுதியாக வேண்டும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதையெல்லாம் ஐநூறுக்குள் அடக்குவது, அதையும் வறட்சியான கட்டுரைநடையில்லாமல் புனைவு மாதிரி சுவாரஸ்யப்படுத்துவது என்று தினகரன் அசத்தியிருக்கிறது. ஒரே ஒரு குறை. சிங்கம் நிஜமாகவே ஹிட்டுதான். ஒத்துக் கொள்கிறோம். அதை கலாநிதி மாறன் வழங்கும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. அதையும் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதையெல்லாம் சொல்லும்போது கூட ‘கலாநிதிமாறன் வழங்கும், சன் பிக்சர்ஸ் தயாரித்த’ என்கிற ஸ்லோகனை எல்லா இடத்திலும் மனப்பாடமாக ஒப்பித்தாக வேண்டுமா? கொஞ்சம் விட்டால் இனிமேல் காட்டுக்குள் இருக்கும் சிங்கத்தைப் பற்றி எழுதும்போது கூட ’கலாநிதிமாறன், சன்பிக்சர்ஸ்’ வார்த்தைகளை சேர்த்து எழுதுவார்கள் போலிருக்கிறதே?

எதையோ எழுதவந்து, எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது. டாட்டா. பை.. பை.. ஹேப்பி கிறிஸ்துமஸ்!

21 டிசம்பர், 2011

ஆண்பால் பெண்பால்

தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.

‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.

‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.

இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.

இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.

பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).

முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.

நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com

அழிக்கப் பிறந்தவன் - 6

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |    அழிக்கப் பிறந்தவன்-5

ருடான்உருவாவது அத்தனை சுலபமான விஷயமில்லை. கீழக்கரை அப்துல் காதர் என்கிற வாப்பா ஒரே இரவில்டான்ஆகிவிடவில்லை. வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ஒரு ஏஜெண்டு பதினேழு வயது அப்துல் காதரை ஏமாற்றி விட்டு பணத்தோடு ஓடினான். இவ்வளவு பெரிய மாநகரில் எங்கே போய் தான்அவனைத் தேடுவது?

தெருத் தெருவாக அலைந்து திரிந்து நடந்து கொண்டிருந்தார். கையில் அஞ்சு காசில்லை. டீக்கடைகளில் தண்ணீர் குடித்து, வயிற்றுப் பசியாற்றிக் கொண்டிருந்தார்அந்தக் காலத்தில் வீட்டுக்கு தகவல் தெரிவிக்க போன் வசதியுமில்லை. சென்னையில் தெருத் தெருவாக அலைவதாக ஒரு போஸ்ட் கார்டில் கடுதாசி போட்டிருந்தார். அந்த கடிதம் கிடைத்து, ஊரிலிருந்து ஆட்கள் சென்னைக்கு வந்தாலும் இவரை எங்கே தான் பிடிக்க முடியும்?
என் விதியை நானே தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வீட்டின் முதல் பையன் துபாய் போய் சம்பாதித்து, தம்பி தங்கைகளை கரை சேர்ப்பான் என்று குடும்பம் நம்பிக் கொண்டிருக்கிறது. இங்கே அனாதையாய், பிச்சைக்காரன் மாதிரி திரிந்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முதலில் தேவை, உடனடியாக ஒரு வேலை. பிறகு, பணம். பணம். பணம். பணத்தைத் தவிர வேறொன்றும் இலட்சியமில்லை. பணம் இருந்தால் பத்தும் செய்யலாம். இந்த நகரத்தில் எல்லாரும் பணத்தைத் தேடித்தானே அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்? பணம்தான் உலகம். பணம்தான் மகிழ்ச்சி. பணம்தான் வாழ்க்கைபணம் குறித்த வைராக்கியம் காதருக்கு அப்போது தான்வந்தது.
கடை கடையாக ஏறி இறங்கி வேலைக்கு முயற்சித்தான். இவனது அழுக்கான உடையை கண்டு, பிச்சைக்காரன் என்று நினைத்து கழுத்தைப் பிடித்து சிலர் தள்ளினார்கள். அதுவொரு தீபாவளி சீஸன். மும்முரமாக வியாபாரம் ஆகிக்கொண்டிருந்த கடைகளில் போய்வேலை ஏதாவது இருந்தா கொடுங்கஎன்று  தலையைச் சொறிந்துக்கொண்டு ஒருவன் நின்றுக் கொண்டிருந்தால் கடை முதலாளிகளுக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. துரத்தி அடித்தார்கள். ஒரு சிலர் மட்டும் ‘தீபாவளி முடிஞ்சி வந்துப்பாரு’ என்று ஆறுதல் அளித்தார்கள்.
சோர்வாக அந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்தான். அன்றுதான்தீபாவளி. ஊரே வெடி வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. தன்னைத் தவிர இந்த மாநகரில் எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதாக அவனுக்குப் பட்டது.
அவன் நடந்துகொண்டிருந்தது சவுகார்பேட்டையின் ஒரு தெரு. ராஜஸ்தான், குஜராத்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அடகுக்கடைதான். சிலர் எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்தார்கள். எல்லா வீடுகளுமே இரண்டு, மூன்று மாடிகள் கொண்டது. கீழே கடை அல்லது அலுவலகம். மேலே வீடு.
ஒவ்வொரு வீட்டுப் பால்கனியிலும், கொழுத்த உடலமைப்பு கொண்ட நடுத்தர வயது பெண்ணோ அல்லது ஆணோ கட்டாயம் இருந்தார்கள். சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு ஸ்வீட்டை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்கள். தர்ப்பூசணி சைஸில் முகம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம். தமிழன் எல்லாம் வற்றிப்போய் கொத்தவரங்காய் மாதிரி கிடக்கிறான்.
பொழுது சாயும் நேரம். எல்லா வாசலிலும் சொல்லி வைத்தாற்போல அடுக்கடுக்காகதீபம் ஏற்றப்பட்டிருந்தது. முக்காடு போட்ட பெண்கள் சிலர் கையில் பூக்கூடையுடன் ஏதோ கோயிலுக்கு போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். சிவந்த அல்லது வெளுத்த புஷ்டியான பளபளவென்று இடுப்பும், ஆழமான தொப்புளும் அப்பட்டமாக தெரிய சேலை கட்டும் இவர்கள் வினோதமானவர்களாக காதருக்கு தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஊரில் முகத்தைத் தவிர வேறெதையும் வெளியாட்களுக்கு காட்டாத உடையணியும் பெண்களை மட்டுமே அதுவரை ஊரில் கண்டிருந்தவன் அவன்.
மெட்ராஸ் ஒரு மாதிரியாக தானிருக்கிறது. இங்கு வந்த முதல்நாளே முழங்கால் தெரிய கவுன் அணிந்த வெள்ளை வெளேர் பெண்கள் நிறையபேரை பார்த்து வெட்கப்பட்டான். காற்றடிக்கும்போது கவுன் தூக்கி அவர்களது வாளிப்பான தொடையும் கூட சில நேரங்களில் (நமக்கு அதிர்ஷ்டமிருந்தால்) தெரியும். அதைப்பற்றி இந்தப் பெண்கள் பெரியதாக சட்டை செய்வதாக தெரியவில்லை. அவர்களை வெள்ளைக்காரப் பெண்கள் என்று ஆரம்பத்தில் நினைத்தான். இல்லையாம். ஆங்கில இந்திய கலப்பின பெண்களாம். கூட்டம் கூட்டமாக நிறையப் பேர் சென்னையில் இருந்தார்கள்.
சிகப்புச் சேலையணிந்த அந்தப் பெண்ணை தூரத்திலேயே கவனித்தான் காதர். தலையில் முக்காடிட்டு அடக்க ஒடுக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்புறமாக அந்த எருது வேகமாக ஓடிவருவதை யாருமே கவனிக்கவில்லை. காதர் மட்டும் தான் கவனித்தான். சிகப்புச்சேலை அணிந்திருக்கிறாள். அதைக்கண்டு எருது மிரட்சியடைந்திருக்கலாம். இன்னும் சில வினாடிகளில் தனது கொம்பினை அவளது உடலுக்குள் சேர்த்து, தூக்கி கிழித்தெறியப்போகிறது. எருதுக்கு வெகுபின்னால், அதன் உரிமையாளன் தலைதெறிக்க ஓடி வந்துக் கொண்டிருந்தான்.
காதருக்குள் இருந்த வீர தீரமான அசல் ஹீரோ விழித்துக் கொண்டான். அழகான ஒரு பெண்ணுக்கு முன்பாக சாகசம் செய்யும் வாய்ப்பு. ஊரில் ஆடு, மாடு, எருது எல்லோவற்றுடனும் புழங்கியவன் தான். தபதபவென்று சிகப்புச்சேலைக்கு முன்பாக ஓடினான். அவளுக்கு தனக்குப் பின்னால் எருது முட்ட வருவது தெரியாது. முன்னால் காதர் ஓடிவருவதுதான் தெரிந்தது. காதரைக் கண்டு மிரட்சியடைந்தாள். ஓடிவந்த காதர், இவளையும் தாண்டிச் சென்று எருதுக்கு முன்பாக நின்றான்.
தனக்கும், தனது டார்கெட்டுக்கும் இடையே புதுசாக ஒருஆப்ஜெக்ட். எருது ஒரு நிமிடம் குழம்பி நின்றது. இவனை முட்டலாமா வேண்டாமா. அவளைதானே முட்டப் போய்க் கொண்டிருந்தோம். இந்த முட்டாள் ஏன் இடையில் புகுந்து நிற்கிறான். காதரை அச்சுறுத்தும் விதமாக முன்னங்கால்களை தரையில் தேய்த்துக் காட்டியது எருது. புழுதி பறந்தது. நம் ஹீரோ காதர் அசரவே இல்லை.
எருதுவுக்கு ஏற்பட்ட இந்த சில நொடி குழப்பம், எருதுவின் எஜமானனுக்கு போதுமானதாக இருந்தது. பின்னாடியே துரத்தி வந்தவன், பாய்ந்து வந்து மூக்கணாங்கயிறைப் பிடித்துகண்ட்ரோல்செய்தான். அதற்குள்ளாக கூட்டம் கூடிவிட்டது.
மாட்டை கட்டிப்போட்டு வளர்க்கக் கூடாதா? உசுரு போயிருந்தா யாரு பொறுப்பு?”
இல்லே சாமி. கட்டிதான் பொட்டு வெச்சுருந்தேன். நம்ம மாடு சாதுவானது தான். இன்னிக்கு தீவாளி பட்டாசு சத்தத்துலே கொஞ்சம் மிரண்டுப் போயி கட்டை அவுத்துட்டு வந்துடிச்சி. அம்மா வேற செவப்பு சேலை கட்டி இருந்தாங்களா? துரத்திட்டு வர ஆரம்பிச்சிடிச்சி!”
அந்த சிவப்புப் புடவைப் பெண் பயந்துப் போயிருந்தாள். இருபத்தாறிலிருந்து முப்பது வயதுக்குள் அவளுக்கு இருக்கலாம். படபடவென்ற பயத்தில் பெரிய மார்புகள் ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. முன்வழுக்கையோடு சிகப்பாக இருந்த ஒரு நடுத்தர வயது மனிதரிடம், காதரைக் காட்டி அவள் தூரத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மனிதர் இவனை நோக்கி நடந்து வந்தார்.
ரொம்ப தேங்க்ஸுப்பா. நம்ப சம்சாரத்தை நீதான் காப்பாத்துனேன்னு சொன்னாங்க
இருக்கட்டும் சார். ஆபத்துலே யாரிருந்தாலும் உசுரை காப்பாத்துறதுதான் மனுசனோட கடமை. இதுக்கு எதுக்கு தேங்க்ஸெல்லாம்?”
அழுக்கான காதரின் தோற்றத்தைக் கண்டவருக்கு ஏதோ நிரடியிருக்க வேண்டும். “மெட்ராஸா உன் வூரு. ட்ரிப்ளிகேணி ஏரியாவா?”
காதருக்கு தன்னுடைய கதையை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் போலிருந்தது. கீழக்கரையிலிருந்து பஸ் ஏறியது. ராயப்பேட்டையில் ஏஜெண்ட் ஏமாற்றியது. எழும்பூர் ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் பெட்டி, படுக்கையை கவனமில்லாமல் இழந்தது. பசியோடு வேலைக்காக தெருத்தெருவாக அலைந்து கொண்டிருப்பது.
மெட்ராஸ் வந்து சேர்ற எல்லாரு கதையும் இதுதாம்பா. எம்பேரு ரத்தன் லால். பாரிஸ் கார்னர்லே அடகுக்கடை பிசினஸ் பண்ணுறேன். எங்கிட்டே வேலைக்கு வர்றியா?” இதற்காகத்தானே காத்துக் கொண்டிருந்தான் காதர். தங்க இடமும், சாப்பிட சாப்பாடும், செலவுக்குப் பணமும் தாராளமாககிடைத்தது.
ரத்தன் லாலின் வியாபாரம் மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அடகுக் கடை வட்டி வியாபாரம் மாதிரி தெரியும். ஆனால் அந்த வியாபாரத்தைத் தவிர மத்த எல்லா வியாபாரமும் செய்துக் கொண்டிருந்தார். குறிப்பாக தங்கம். கணக்கில் இல்லாத பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் பலரும், தங்களது பணத்தை இவரிடம் கொடுத்து பதிலுக்கு தங்கமாக வாங்கிச் செல்வார்கள். அதாவது பிஸ்கட் வடிவில். விற்ற தங்கத்துக்கும், பெற்ற பணத்துக்கும் எல்லாம் முறையான கணக்கு வழக்கு எதுவுமில்லை. அரசாங்கத்தின் கண்களில் கண்ணைத்தூவி நடக்கும் பிசினஸ்களில் ஒன்றுஇது.
காதருக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கஷ்டப்பட்டு தொழில் செய்பவர்கள் எதற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும்? அரசாங்கம் என்ன மும்பைக்கு போய் தங்கத்தை வாரி வந்து சேட்டிடம் கொடுக்கிறதா அல்லது கருப்புப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் - அதாவது சேட்டுடைய வாடிக்கையாளர்கள் யார்  யாரென்று சேட்டுக்கு அடையாளம் காட்டிக் கொடுக்கிறதா? ஒன்றுமேயில்லை. எல்லா வேலையையும் சேடு தான் ஆட்களை வைத்து செய்ய வேண்டியிருக்கிறது. போலிஸ்காரர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வேலையில் எங்குமே தொடர்பில்லாத அரசாங்கம் அவ்வப்போது ஆட்களை அனுப்பி பணப்பரிமாற்றத்துக்கு கணக்கு கேட்குமாம். டாக்குமெண்ட் கேட்குமாம். எங்கேயாவது நடக்குமா இந்த அநியாயம்? ஏனோ அப்போதிருந்தே அரசாங்கம் என்கிற நிறுவனத்தை காதருக்கு பிடிக்காமல் போய்விட்டது. நல்லத் தொழிலோ, கள்ளத் தொழிலோ. கஷ்டப்பட்டு செய்பவன் ஏன் அரசாங்கத்துக்கு படியளக்க வேண்டும்? அரசாங்கம்தானே மக்களுக்கு படியளக்கணும்?
சின்னப் பையனாக இருந்தாலும் காதருக்கு தொழிலின் நேக்கு நன்றாக செட் ஆகிவிட்டது. எந்தச் சரக்காக இருந்தாலும் சரி. அசால்ட்டாக எடுத்து வருவான், எடுத்துப் போவான். காதரின் கண்களில் பயமோ, கள்ளமோ எந்த சூழலிலும் தெரியாது. இது ஒரு பலம். நிழல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு கண்கள் முக்கியம். கண்கள் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் இருப்பது ரொம்ப முக்கியம்.
ஒன்றரை வருடம் காதர் இங்கே வேலை பார்த்தான். ஒரு நாள் ரத்தன்லாலிடம் வந்து சொன்னான். “பீச்சுக்கு பக்கத்துலே வரிசையா கடை போடுறாங்க சேட்டு. நானும் சொந்தமா கடை போடலாம்னு இருக்கேன். ஊர்லே இருந்து கொஞ்சம் காசு கொடுத்து விட்டிருக்காங்க. ஒண்ணரை வருஷம் வேலை பார்த்ததுக்கு நீயும் ஏதாவது பார்த்து ஹெல்ப் பண்ணு!”
என்ன கடை, ஏது கடையென்று விசாரித்தார் லால். புதியதாக அமையப்போகும் பஜாரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது அவருடைய பழைய தொழில் அனுபவத்தில் அனுமானிக்க முடிந்தது. ஏற்கனவே அங்கிருந்த கடைகளில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் நன்கு விற்றுக் கொண்டிருந்தது. வெளியூர்களில் இருந்து வந்தெல்லாம் வாங்கிச் செல்கிறார்கள். தமிழர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது மோகம் அதிகரித்து வருகிறது. மெட்ராஸ்காரர்கள் கூட ரேடியோ பொட்டிகள் நிறைய வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். சின்ன ரிஸ்க். பெரிய லாபம். கோல்ட் பிசினஸ் மாதிரி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டாது என்றாலும், கொஞ்சம் டீசண்டான பிசினஸ். கவுரவமாக நடத்தலாம்.
நீயேண்டா கடை போடுறே? நானே அங்கே நாலு கடை போட்டுத் தாரேன். பார்த்துக்கோ. சம்பளம் வேணும்னா கூட கூட்டித்தாரேன்
இல்லை சேடு. சொந்தமா தொழில் பண்ணலாமுன்னு...”
சேடு இதை விரும்பவில்லை. தனக்குக் கீழே வேலைபார்ப்பவன், தனக்கு சமமாக கடை போட்டு வியாபாரம் செய்வதை அவர் ரசிக்கவில்லை. தொழிலாளி முதலாளி ஆவதா? எந்த ஊரு நியாயம் இது?
காதரு. நான் செய்யுற தொழில் என்னா மாதிரி தொழில்னு உனக்கே தெரியும். இதுலே நான் மட்டுமில்லே. என்னைப் பின்னாடி இருந்து இயக்குற ஆளுங்களும் இருக்காங்க. எங்கிட்டே வேலை பார்க்குறது நீ மட்டுமில்லே. உன்னை மாதிரி நிறைய பேரு. எங்கிட்டே வேலை பார்த்துட்டுப் போன பசங்க தனியா போனா சிக்கலு. நிறைய ரகசியம் கசியும். புரிஞ்சுக்கோ. இதையெல்லாம் என்னோட பார்ட்னருங்க விரும்பமாட்டாங்க. நான் நல்லவன். ஆனா அவங்களும் அப்படின்னு சொல்லமாட்டேன். தனியா போனவனுங்க எவனும் உசுரோட இல்லை காதரு. புரிஞ்சுக்கோ!” குரலில் தித்திப்புத் தடவி நேரடியாக மிரட்டினார் ரத்தன் லால். என்னிடம் வேலை பார். அல்லது இறந்து போ என்பதுதான் அவரது பேச்சின் சாரம்.
அன்றிரவு, ஒரே நேரத்தில் ரத்தன்லாலின் வீட்டிலும், அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கில் பணமும், நகையும், இன்னபிற சமாச்சாரங்களும் அடையாளம் தெரியாதவர்களால்கொள்ளை அடிக்கப்பட்டது. ரத்தன்லால் மார்பில் கத்தி செருகிய நிலையில் அவருடைய படுக்கை அறையில்பிணமாய் கிடந்தார். அன்று எருதுவின் கொம்புக்கு தப்பிய சேட்டின் மனைவி, இன்று ஒரு பிச்சுவா கத்தி வயிற்றில் சொருகப்பட்டு குடலை வெளியே சரித்தபடி பூஜையறையில் உயிர் இழந்திருந்தாள்.
ஆறு மாதம் கழிந்து அப்துல் காதர் பர்மா பஜாரில் கடைபோட்டான். பெரிய முதலீடு போட்டு சரக்குகளை கைமாற்றித் தந்தான். ஓயாமல் உழைத்தான். ஆயிரங்களாக, லட்சங்களாக லாபத்தைக் குவித்தான். பஜாரின் தவிர்க்க இயலாத முக்கியத் தலையாக உருவெடுத்தான்.

(தொடரும் - 6)