31 மே, 2011

நமீதா இட்லி ரெடி!

நேற்று ராமசேரி இட்லி பற்றி எழுதியதை வாசித்த நிறைய நண்பர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ’குஷ்பு இட்லி’ தயாரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பேசினார்கள். குஷ்பு இட்லி என்பது வேறொன்றுமல்ல. கொஞ்சம் புசுபுசுவென்று பெரிய சைஸில் உருவாக்கப்பட்ட இட்லி, அவ்ளோதான். நம் லோக்கல் ஆட்களின் Branding அறிவே அறிவு. தற்போது வடபழனியில் ‘சிம்ரன் ஆப்பக்கடை’ கூட சக்கைப்போடு போடுவதும் கூட வரலாற்றில் பதியப்பட வேண்டிய நிகழ்வு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தின் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக பணிபுரிந்து வந்தேன். அவர்களது சினிமா தொடர்பான இணையத்தள பணிகளுக்கு தொடர்ச்சியாக கண்டெண்ட் அளித்து வருவது என்னுடைய வேலை. ‘அழகிய தமிழ் மகன்’ ரிலீஸ் ஆகும் நேரத்தில், மக்கள் தொடர்புக்காக ஒரு ‘குபீர்’ மேட்டரை களத்தில் இறக்கினேன். அது ‘நமீதா இட்லி’. விடிகாலை கற்பனையில் உதித்த ‘நமீதா இட்லி’ நிஜத்தில் Branding செய்து விற்கப்பட்டதா என்பது இன்றுவரை தெரியாது. யாராவது நமீதா பெயரில் இட்லிக்கடை தொடங்க விரும்பினால், என்னிடம் காப்பிரைட் உரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நமீதாவிடம் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது.

அந்த மேட்டர் எக்ஸ்க்ளூஸிவ்வாக உங்களுக்காக...



பொருட்களை விற்பதற்காக திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெயரில் பிராண்டிங் செய்யப்படுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக நதியா கம்மல், நதியா வளையல் என்று கூறி கம்மல், வளையல் வகையறாக்களை விற்றார்கள். அதன்பின்னர் கவுதமி தாவணி, கவுதமி மிடி, கவுதமி ஸ்டப்ஸ் என்று சொல்லி விற்கப்பட்டது. பிரபலமான படங்களின் பெயர்களில் துணிவகைகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய கடைகளில் கூட வழக்கமானதுதான்.

குஷ்பு தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயர் சொல்லி பல பொருட்கள் விற்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் 'குஷ்பு இட்லி' என்று அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் இட்லிக்கடைகளில் 'குஷ்பு இட்லி' என்று சொல்லப்படுமளவுக்கு இட்லி பிராண்டிங் ஆனது.

அதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் MEALS READY என்றோ, TIFFEN READY என்றோ முகப்பில் போர்டு வைக்கப்பட்டிருக்கும். சில நாட்களாக சென்னையின் கையேந்தி பவன்களில் “நமீதா இட்லி ரெடி” என்று போர்டு வைக்கப்பட்டு வருகிறது. நமீதா இட்லி என்றதுமே இட்லியின் சைஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்று நினைத்து நாக்கில் யாருக்கும் நீர் ஊற வேண்டாம். அதே பழைய சிம்ரன் சைஸ் இட்லி தானாம்.

நமீதா ட்ரெண்டினை நன்கு புரிந்துகொண்ட சென்னையின் கையேந்திபவன் காரர்கள் சிலர் நூதனமான முறையில் “நமீதா இட்லி ரெடி” போர்டு மாட்டி விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதே பழைய இட்லி, காரச்சட்டினி, தேங்காய் சட்டினி தான். ஆனாலும் சாதாரண இட்லிக்கு கூட நமீதாவின் நாமகரணம் சூட்டப்படும் கடைகளில் எல்லாம் விற்பனை இரண்டு மடங்காக இருக்கிறதாம். மிக விரைவில் தமிழ்நாடெங்கும் இட்லி நமீதா மயமாகும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பு : மேலே படத்தில் நமீதா மட்டும் தானிருக்கிறார். இட்லி இல்லை. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் வெள்ளையாக காணப்படும் எல்லாமே இட்லி அல்ல.

30 மே, 2011

ராமசேரி இட்லி

நம்பினால் நம்புங்கள். நாலே நாலு இட்லி சாப்பிடுவதற்காகதான், ஐநூறு கிலோ மீட்டர் பயணித்து அந்த ஊருக்குப் போயிருந்தோம். தட்டு மீது வாழை இலை போடப்பட்டு, சுடச்சுட பரிமாறப்பட்டது இட்லி. ஒரு விள்ளலை பொடியில் தொட்டு வாயில் வைத்ததுமே, திருநெல்வேலி அல்வா மாதிரி தொண்டைக்குள் எந்த சிரமமுன்றி இறங்குகிறது. சுவையும் சூப்பர்.

இதுதான் ராமசேரி இட்லி.

மறைந்த தொழில் அதிபர் அம்பானிக்கு, நம்மூர் சரவணபவன் இட்லி-சாம்பார் என்றால் உயிராம். அவருக்கு இட்லி சாப்பிட வேண்டுமென்று தோன்றும் நாட்களில் எல்லாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளின் ஏற்பாட்டில், ஒரு தனி விமானம் மூலமாக சென்னையிலிருந்து, மும்பைக்கு ஒரு பார்சல் இட்லி மட்டும் ‘ஸ்பெஷலாக’ செல்லுமாம். சென்னையில் சகஜமாக உணவுப்பிரியர்கள் வட்டாரத்தில் கூறப்படும் இந்தச் செய்தி உண்மையா, வதந்தியா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் ‘இட்லி’யை விரும்பாதோர் வட இந்தியரோ, வெளிநாட்டுக்காரரோ யாருமே இருக்க முடியாது.

இட்லி பயன்பாட்டின் ஒரே பிரச்சினை, அது சீக்கிரமே கெட்டுவிடும் உணவுப்பண்டம் என்பதுதான். அதை பதப்படுத்தி பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கிறது ராமசேரி.
பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தூரத்தில் இருக்கும் குக்கிராமம் ராமசேரி (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியிலும் செல்லலாம்). தமிழக எல்லைக்கு வெகு அருகில் கேரளத்துக்குள் இருக்கிறது இக்கிராமம்.

இந்த ஊரைப் பற்றியும், இந்த ஊர் இட்லியைப் பற்றியும் கோவையிலும், பொள்ளாச்சியிலும் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடாவருடம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள், இட்லி சாப்பிடுவதற்காகவே ராமசேரி வருகிறார்கள். டூரிஸ்ட்டு கைடுகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ராமசேரி இட்லியை பரிந்துரைத்தும் அழைத்து வருகிறார்கள். சாப்பிட்டவர்கள் சும்மா செல்வதில்லை. நாலு பொட்டலம் கட்டி, பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள். ஏனெனில் ஒருவாரம் வரை ராமசேரி இட்லி கெடுவதேயில்லை. எப்போது பொட்டலத்தைப் பிரித்தாலும் ‘ப்ரெஷ்’ஷாகவே இருப்பது, இந்த ஊர் இட்டிலியின் ஸ்பெஷாலிட்டி.

மலபார் பிரியாணி மாதிரி ராமசேரி இட்லியும் கேரளாவில் ரொம்ப பிரபலம். ஒரு காலத்தில் ராமசேரி கிராமம் முழுக்க ஏராளமானவர்கள் இட்லி வியாபாரத்தில் இறங்கியிருந்தார்கள். கூடையில் இட்லி சுமந்து, பாலக்காடு நகருக்கு சென்று வீடு வீடாக விற்பார்கள். பிற்பாடு இவர்களில் பலரும் கோயமுத்தூர், திருப்பூர் என்று டெக்ஸ்டைல் வேலைக்கு சென்று விட்டார்கள். தற்போது ஆறு குடும்பங்கள் முழுக்க முழுக்க இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

“பொடி தவிர சட்னி ஏதேனும் உண்டோ சேச்சி”

“தப்பும், தவறுமா மலையாளம் பேசவேணாம். எங்களுக்கு தமிழே நல்லா தெரியும். என் பேரு செல்வி” பரிமாறுபவர் புன்னகையோடு சொல்கிறார்.

அட தமிழர்கள்!

இட்லிக்கு பெயர்போன காஞ்சிபுரம்தான் ராமசேரி இட்லியின் ரிஷிமூலம். ஒரு நூறாண்டு வரலாறே இதற்கு உண்டு. காஞ்சிபுரத்தில் இருந்து பிழைப்பு தேடி ஒரு முதலியார் கேரளா பக்கமாக அந்த காலத்தில் ஒதுங்கினாராம். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள்தான் இப்போது ராமசேரியில் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் என்கிறார்கள். இருநூற்றி ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்பே ராமசேரி இட்லி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.

மற்ற ஊர் இட்லிகளை மாதிரி இல்லாமல் சிறிய அளவு கல் தோசை வடிவில், ராமசேரி இட்லி இருக்கிறது. கேஸ் அடுப்பு மாதிரி நவீன வசதிகளை பயன்படுத்தினால், அச்சு அசலான ராமசேரி இட்லியின் சுவை கை கூடாது. விறகடுப்புதான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் புளிய மரத்து விறகுதான் எரிக்கிறார்கள் (இதற்கு பின்னிருக்கும் லாஜிக் என்னவென்று தெரியவில்லை). இட்லித்தட்டு, குக்கர் எதுவும் பயன்படுத்துவதில்லை.

இந்த இட்லியின் சுவை மாவு அடுப்பில் வேகும்போதே தொடங்குகிறது. அடுப்பு மீது நீர் நிரம்பிய ஒரு சாதாரண பாத்திரம். அதற்கு மேல் பானையின் கழுத்து மாதிரி தோற்றம் கொண்ட ஒரு மண் பாத்திரம். வாய்ப்பகுதி முழுக்க குறுக்கும் நெடுக்குமாக கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் ஒரு வெள்ளை துணி விரித்து, தோசை வார்ப்பதற்கு ஊற்றுவது மாதிரி இட்லிமாவை உள்ளங்கை அளவுக்கும் சற்று அதிகமான பரப்பளவில் ஊற்றுகிறார்கள். சூடாகும் பாத்திரத்தில் இருந்து மேலெழும்பும் நீராவியில்தான் இந்த இட்லி வேகுகிறது. ஒரு அடுப்பில் ஒரே நேரத்தில் நான்கு இட்லி மட்டுமே சுடமுடியும். இரண்டு மணி நேரத்தில் 100 இட்லிகளை உருவாக்கக்கூடிய கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.

மாவு உருவாக்க அரிசி, உளுந்தினை கலக்கும் விகிதம் ரொம்பவும் முக்கியமானது. 10 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ உளுந்து பயன்படுத்துகிறார்கள். மாவு புளிக்க நான்கு மணிநேர இடைவெளி கொடுக்கிறார்கள்.

சென்னை நட்சத்திர ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டிருந்தால், ‘இளநீர் இட்லி’ என்றொரு வகையினை நீங்கள் சுவைத்திருக்க முடியும். ராமசேரி இட்லி, மிருதுத் தன்மையிலும், சுவையிலும் இளநீர் இட்லியை ஒத்திருக்கிறது. ஒரு இட்லி மூன்றே மூன்று ரூபாய்தான். நான்கு இட்லி சாப்பிட்டாலே ‘திம்’மென்றிருக்கிறது.

திருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்கு இங்கே ‘ஆர்டர்’ செய்து 5,000 மற்றும் 10,000 எண்ணிக்கையில் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். பாலக்காடு, வாளையார், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருக்கும் ஓட்டல்காரர்களும் இங்கே வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.

“எந்த ஊர்லே எல்லாம் எங்க இட்லியை சாப்பிடறாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா ஒரு முறை கேரளாவோட தன (நிதி) மினிஸ்டர் வந்து எங்க கடையில் இட்லி சாப்பிட்டார். எப்படி செய்யுறீங்கன்னு கேட்டு, அடுப்படி வரைக்கும் வந்து பார்த்தார். மலையாள சினிமா நட்சத்திரங்களும் கூட எங்க கடைக்கு வந்திருக்காங்க” என்கிறார் சரஸ்வதி டீ ஸ்டாலின் உரிமையாளர் பாக்கியலட்சுமி அம்மாள்.

கடையின் பெயரில் டீ ஸ்டால் இருந்தாலும், இட்லிதான் பிரதான வியாபாரம். அதிகாலையில் இங்கே பற்றவைக்கும் அடுப்பு, நள்ளிரவானாலும் அணைக்கப் படுவதில்லை. தங்கள் இட்லிக்கு வெளியூர்களில் இருக்கும் அசாத்தியமான செல்வாக்கும், வணிக வாய்ப்பும் துரதிருஷ்டவசமாக இதுவரை ராமசேரி ஆட்களுக்கு தெரியவேயில்லை.

சில காலத்துக்கு முன்பு தஞ்சையில் ‘இட்லி மேளா’ என்கிற பெயரில் ஒரு நிகழ்வினை மத்திய உணவுப்பதப்படுத்தும் அமைச்சகம் நிகழ்த்தியது. இட்லியை உலகத் தரத்தில் உருவாக்கி, பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அன்னிய செலாவணி அதிகரிக்கும் என்கிற கருத்தினை அவ்வமைச்சகத்தின் செயலர் முன்மொழிந்தார். இட்லி ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியும் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டது. ராமசேரி இட்லியை, உணவுப் பதப்படுத்தும் அமைச்சகம் ஆராயும் பட்சத்தில் ‘இட்லி மேளா’வின் நோக்கம் நிறைவேறும்.

தமிழகமெங்கும் இருக்கும் பெரிய உணவு விடுதிகளும்கூட ராமசேரி இட்லியை வாங்கி தங்கள் வாடிக்கையாளர்களின் நாக்குக்கு சுவை சேர்க்கலாம். பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வணிக வாய்ப்பு ராமசேரி இட்லிக்கு உண்டு. உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் கூட, ராமசேரி இட்லியை முன்வைத்து பெரியளவில் தொழில் திட்டங்களை தீட்டலாம். ஏனெனில் அயல்நாடுகளில் பீட்சா சாப்பிட்டு நொந்துப் போயிருப்பவர்கள், இட்லிக்காக தங்கள் ஆவியையும் கொடுக்க சித்தமாக இருக்கிறார்கள்.

திருநெல்வேலி அல்வாவை நெல்லை தவிர, வேறு ஊர்களில் செய்தால் அதன் சுவை கைகூடுவதில்லை. இதே லாஜிக் ராமசேரி இட்லிக்கும் பொருந்துகிறது. இங்கே செய்முறை அறிந்துக்கொண்டு, தங்கள் ஊர்களில் சென்று ராமசேரி ஃபார்முலாவை அப்படியே பயன்படுத்தி, ‘இட்லி’ சுட்டவர்கள், முயற்சியில் கையை சுட்டுக் கொண்டார்கள். “இதென்ன அதிசயம் என்று புரியாமலேயே இருக்கிறது” என்று நொந்துக் கொண்டார் நம்மோடு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த திருப்பூர்க்காரர் ஒருவர்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 மே, 2011

சிலுக்கு

"சிலுக்கு" - பெயரை கேட்டாலே சிலிர்த்து கொள்வார்கள் காதோரம் நரைத்தவர்கள். 1979ல் வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான விஜயவாடா விஜயலஷ்மி என்ற சிலுக்கு சுமிதா பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று. ரஜினி, கமல் தமிழ் திரையுலகை ஆண்டு வந்த சகாப்தத்திலும் கூட சிலுக்குவின் பெயருக்கு தனி மவுசு இருந்தது.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஒரு லட்சரூபாய் வரைக்கும் விலைபோனது என்பது உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள். சிலுக்குவின் கண்ணசைவு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை திருடியது என்றால் மிகையில்லை.

90களின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகிகளே தாராளக்கவர்ச்சியை காட்டு காட்டுவென்று காட்ட தயாராக இருந்ததால் கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. அவ்வகையில் சிலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதை விட்டு விட்டு குணச்சித்திரப் பாத்திரங்களிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.


திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ‘தாடிக்காரர்’ என்கிற சொல் இக்காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமான சொல்.

சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது. அவர் கடைசியாக இடம்பெற்று வெளிவந்த திரைப்படம் அர்ஜூன் நடித்த சுபாஷ். அப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அர்ஜூனுடன் நடனமாடியிருந்தார். அப்பாடலின் கடைசியில் கூட சிலுக்கு தீக்கிரையாவது போல கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சோகம்.

பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்போது சிலுக்கு கதாநாயகியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஒன்று ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூசுதட்டப்பட்டது. திருப்பதி ராஜன் என்பவர் தயாரித்து இயக்கிய தங்கத்தாமரை என்கிற திரைப்படம் அது. தற்கால ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் படத்தில் சில மாற்றங்களை அமைத்து, பாடல் காட்சிகளை இணைத்து வெளியிட திருப்பதிராஜன் முன்வந்தார். விநியோகஸ்தர்கள் மத்தியில் இத்திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பும், எதிர்ப்பார்ப்பும் கூட இருந்தது.

பல ஆண்டுகள் கழித்து சிலுக்குவை திரையில் காணப்போகிறோம் என்று சிலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் ஆர்வத்துடன் தங்கத்தாமரையை எதிர்பார்த்து இன்னும் காத்திருக்கிறார்கள். தங்கத்தாமரையை சீக்கிரமா கண்ணுலே காட்டுங்க சாமீங்களா...

26 மே, 2011

ஜிரோநிமா

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாகரிக நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க கவுபாய்களின் கதைகள் நமக்கு உவப்பானவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்ததே நமக்கு தெரியவந்தது.

நாம் வாசிக்கும் கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா என்கிற கேள்வி எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்கிற மனநோய் நமக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் ஒரு கதையிலாவது வெல்லவேண்டும் என்றே சிறுவயதில் விரும்பியிருக்கிறேன். செவ்விந்தியர்களை வெறும் முரடர்களாகவும், மூளையில்லாத முட்டாள்களாகவும் கதை எழுதிய கதாசிரியனையும், கேலிச்சித்திரம் போல செவ்விந்தியர்களை வரையும் ஓவியனையும் மனதுக்குள் சபிப்பேன்.

அதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அக்கதைகள் உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நாம் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.

அவ்வாறாக இணையங்களில் தேடியபோது தான் பல புதிய விவரங்களை அறியமுடிந்தது. நாம் வாசித்த கதைகளில் வந்ததைப் போல வெள்ளையர்கள் மதியூகத்தாலும், வீரத்தாலும் செவ்விந்திய இனத்தை வீழ்த்திடவில்லை, கேவலமான தந்திரங்களை பயன்படுத்தி கோழைத்தனமான முறையிலேயே செவ்விந்திய கலாச்சாரத்தை அழித்தொழித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக்கொள்ள பயங்கர இனப்படுகொலைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இருப்பதைப் போன்ற தகவல் தொடர்பு அப்போதிருந்தால் உலகம் அன்றே அமெரிக்காவை காறித்துப்பியிருக்கும்.

என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

அவ்வாறான குடியிருப்புகளில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் நேரத்தில் கோழைகளான வெள்ளையர்கள் தாக்குதல் நடத்துவார்கள். குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை கொன்று அந்த கூட்டத்தையே அழித்ததைப் போல தலைநகருக்கு தகவல் சொல்லுவார்கள். செவ்விந்தியர்கள் தனித்தனியான கூட்டமாக வாழ்ந்ததால் அவர்களால் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு பெரிய போர்ப்படையை உருவாக்க இயலாமல் போய்விட்டது. பொதுவாக ஒரு செவ்விந்திய கூட்டம் அறுபது முதல் நூறு வீரர்கள் வரையே கொண்டிருக்கும். மாறாக வெள்ளையர்களோ தங்களது ஒரு படைப்பிரியில் ஐநூறு முதல் ஐயாயிரம் பேர் வரை வைத்திருப்பர்.

வெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை இவர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக சிறுசிறு போர்க்குழுக்களாக வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி சிறியளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.

ஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.

1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோய்ல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே, ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவ முறையையும் கற்று மருத்துவர் ஆனார். திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வழக்கமான இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.

1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.

பதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிகோ குடியிருப்புகள் மீதும், அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை மாதிரி) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.

நம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? இருபத்தெட்டு ஆண்டுகள்! கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.

ஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.

அதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் இயற்கையான முறையில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் கலாச்சார வேர்களை இழந்து...

23 மே, 2011

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா

தந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.

அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.

கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.

“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.

1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.

சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.

“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”

“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.

கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.

21 மே, 2011

துரோகிகளும், தியாகிகளும்

1991 மே 22. அதிகாலை. ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. பள்ளி விடுமுறை. குட்டிப்பையன் நான். மேல்சட்டையுடன், ஜட்டியை விட மேலான ஒரு டவுசர் மட்டுமே அணிந்திருந்த நான் ’ஆபத்து’ புரியாமல் குதூகலித்தேன். தேர்தல் நேரம். டீக்கடை வாசலில் அதிமுக-காங்கிரஸார் குவிந்து சோகமாகவும், விஷமமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.

பின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.

வட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை காப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.

ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.

ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்!

20 மே, 2011

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

புண்ணிய பூமியாம் பாரதத்தின் 110 கோடி ஹிந்து மகாஜனங்களுக்கு இருக்கும் மத அபிமானமும், சூடு, சொரணையும், அம்மாவின் தேசமாம் ஸ்ரீ தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்துக்களும் கூட இருக்கிறது என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. குஜராத்தில் நடந்து வரும் நல்லாட்சியைப் போன்றே தமிழகத்திலும் உலகின் ஒரே ஒப்பற்ற தங்கத் தாரகை அம்மாவின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. ராவணன் ஆட்சி ஒழிந்திருக்கிறது. ராமர் ஆட்சி விடிந்திருக்கிறது.

நடந்தது தேர்தல் அல்ல, இராமாயணம். புரட்சித்தலைவி அம்மா ஸ்ரீராமர். சின்னம்மா ஸ்ரீலட்சுமணர். துக்ளக் ஸ்ரீமான் ராமசாமி ஆஞ்சநேயர். திருக்குவளை தீயசக்தி ராவணன். அண்டோமேனியா சூர்ப்பனகை. இருட்டுக்கடை அல்வா புகழ் ஆற்காடு கும்பகர்ணன். இப்படியாக ஏகப்பட்ட ஒப்புமைகளை இராமாயணத்துக்கும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும்.

தர்மத்தின் வாழ்வுதனை 2006ல் சூது வென்றாலும், 2011ல் தர்மமே வெல்லும் என்பது உறுதியாயிற்று. குடிகார திம்மியாக ஆரம்பத்தில் அறியப்பட்டு, அம்மாவால் மனம் மாற்றமடைந்த முற்போக்கு திராவிட திம்மியும் கூட, இராமர் பாலம் கட்ட ஸ்ரீ அணில் உதவியது போல அம்மாவுக்கு கொஞ்சமாக உதவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதிபலனாக அந்த குடிகார கட்சிக்கு ஊருக்கு ஒரு டாஸ்மாக் பார் லைசென்ஸை அம்மா கொடுத்திருக்கலாம். அதுவே அதிகம். ஆனாலும் பரந்த மனதோடு, அருள்பாலித்து 29 எம்.எல்.ஏ.க்களை வழங்கி கவுரவித்திருக்கிறார். இனியாவது இவர்கள் திராவிடம், முற்போக்கு போன்ற பழம் பஞ்சாங்க வார்த்தைகளை மூட்டை கட்டிவிட்டு அ ஃபார் அம்மா, சி ஃபார் சின்னம்மா, மோ ஃபார் மோடி, ஹி ஃபார் ஹிந்து என்று புது பாடம் படித்து, வழி தவறிய ஆடுகளாய் அலையாமல் வாழ முற்பட வேண்டும்.

அம்மாவின் புனித பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் மோடி, ஸ்ரீமான் ராமசாமி, ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன் என்று நம்மவாளாக திரளானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி. அம்மா பதவியேற்க இருக்கிறார் என்பதை அறிந்து சங்கிலித் திருடர்கள், அண்டோமேனியா கட்சியினரின் அராஜக ஆட்சி நடக்கும் ஆந்திராவுக்கு ஓடிப் போய்விட்டார்கள் என்கிற பேருண்மையை அம்மாவே பத்திரிகை நண்பர்களிடம் வெளிப்படுத்தினார். அம்மாவுக்கே தெரியாத இன்னொரு உண்மையையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது. தகதகக்கும் ஆதிபராசக்தியாம் அம்மாவின் அருளாட்சி தரும் வெப்பம் சங்கிலித் திருடர்களுக்கு மட்டுமல்ல, சட்னித் திருடர்களையும் ஓட ஓட விரட்டும். அண்டோமேனியாவின் ஆட்சி அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏற்பட்டிருப்பதால், இனி தமிழகத்தின் தீயசக்திகள் ஆந்திரா மட்டுமின்றி, கேரளாவுக்கும் ஓட்டம் பிடிக்கும்.

ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை அனாவசியமாக கொட்டி திருக்குவளை தீயசக்தி கம்பெனியினர், மவுண்ட்ரோட்டில் கட்டிய இண்டியன் ஆயில் எண்ணெய் டேங்கை அம்மா புறக்கணித்திருக்கிறார். பாராட்டுகிறோம். அம்மா, கோட்டையே என் கோயில் என்று முழங்கியிருக்கிறார். சிலிர்த்துக் கொள்கிறோம். அகிலம் ஆளும் கருமாரியான அம்மாவுக்கு இங்கே ஓர் கோரிக்கையை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். மிஷினரிகள் செய்த சதி காரணமாக நமது அ.இ.அ.தி.மு.கழகத்துக்கு சொந்தமான கோட்டைக்கு புனித ஜார்ஜ்என்று அண்டோமேனியா வகையறாக்களின் மதப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பெயரை நீக்கி ஸ்ரீராமர் பெயரையோ, அல்லது ஸ்ரீராமருக்கு ஒப்பான சக்தியை பெற்றிருக்கும் புரட்சித்தலைவி அம்மா பெயரையோ கோட்டைக்கு சூட்ட வேண்டும். புனித புரட்சித்தலைவி அம்மா கோட்டைஎன்று பெயர் வைக்கப் படுமேயானால், நம் சந்ததி மட்டுமின்றி, நம் ஈரேழு சந்ததியும் அம்மா புகழ் பாடும். தீயசக்திக்கு இகழ் கூடும்.

திருக்குவளை தீயசக்தி மட்டுமே தீயது என்று தமிழகத்தின் ஹிந்துக்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தோம். பாண்டிச்சேரியில் ஒரு புதிய தீயசக்தி உருவாகி, அது நம் அம்மாவையே ஏமாற்றி ஆட்சியையும் பிடித்திருக்கிறது என்பதை அம்மா நேற்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழகத்து தீயசக்தியை அம்மா எப்படி வதம் செய்தாரோ, அதுபோலவே 2016 தேர்தலில் பாண்டிச்சேரி தீயசக்தியையும் வதம் செய்வார். அதற்காக தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்து பெருமக்களும் அம்மா பின் அணிவகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எது எப்படியோ, வாழும் ஸ்ரீராமராய் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அம்மாவுக்கே இறுதி ஜெயம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த ஜெயத்துக்கு பின்னால் ஜே ஜே என்று ஜால்ரா அடித்து பஜனை பாடிய தேர்தல் கமிஷனுக்கும், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த நேர்மையான அதிகாரிகளான பிரவீண்குமார், சகாயம் போன்றவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

வாழ்க அம்மா. வீழ்க திராவிட திம்மிகள்.


பின்குறிப்பு : இந்த பதிவுக்காக அம்மா பெயரிட்டு கூகிளில் படம் தேடினோம். கடந்த ஆட்சிக்கால தீய்சக்திகள் கூகிளில் ஏதோ தில்லுமுல்லு செய்து, அம்மா பெயரையிட்டு படம் தேடினால் ஆபாசப் படங்கள் நிறைய வருவதைப் போல செட்டிங்க்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க கணினி வல்லுனர்கள் மதுரை ரவுடிகளால் தொலைபேசியில் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஹிந்து தர்மத்தில் நம்பிக்கை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் தேவலை. அம்மா பெயரிட்டு படங்களை தேடினால் 1991க்குப் பின்னான அம்மா படங்கள் மட்டுமே கிடைக்குமாறு செய்யவேண்டும் என்று கூகிள், யாஹூ நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.

18 மே, 2011

ஹீரோ!

இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!


எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

17 மே, 2011

ஏலகிரி

கோடைக்காலம் வந்தாலே கசகசவென வெம்மை. எரிச்சலில் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறுகிறது. யாரைப் பார்த்தாலும் சீறிவிழத் தோன்றுகிறது. வாண்டுகளுக்கு வேறு விடுமுறை. சொல்லவும் வேண்டுமா வீடு ரெண்டு ஆவதை. போதாக்குறைக்கு பாழாய்ப்போன மின்வெட்டு. விசிறி விசிறி விரல்களில் வீக்கம்.

இந்தமாதிரியான உளவியல்-உடலியல் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், ‘சில்’லென்று நாலு நாளைக்கு குடும்பத்தோடு ஊட்டிக்குப் போய்வந்தால் நன்றாகதான் இருக்கும். உடலையும், மனதையும் ஃப்ரெஷ்ஷாக ரீ-சார்ஜ் செய்துக் கொள்ளலாம். ஆனால் செலவு எக்குத்தப்பாக எகிறுமே என்று கவலை கொள்கிற மிடில்க்ளாஸ் பட்ஜெட் பத்மநாபன் நீங்கள் என்றால்..?

கவலைப்படாதீர்கள் சார். உங்களை வரவேற்க மலைகளின் இளவரசி காத்திருக்கிறாள். பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைப்பது மாதிரி, ஊட்டிக்குப் பதிலாக ஏலகிரி. செலவும் குறைவு. குடும்பத்துக்கும் குதூகலம். உங்களுக்கும் வழக்கமான வேலைகளிலிருந்து தற்காலிக விடுமுறை.

வேலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில், திருப்பத்தூர் நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பொன்னேரி என்று ஒரு ஊர் வரும். இங்கிருந்து இடதுப்புறமாக பிரிந்துச் செல்லும் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் ‘குட்டி ஊட்டி’க்கு போய்ச்சேரலாம். திருப்பத்தூரில் இருந்து பொன்னேரிக்கு பத்து கிலோ மீட்டர் தூரம்தான். ரயில் மார்க்கமாக வருபவர்கள் ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு பயணிக்கலாம். சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.10 மணிக்கு ஒரு பேருந்து ஏலகிரிக்கு நேரிடையாக கிளம்புகிறது.

பொன்னேரியில் இருந்து ஏலகிரிக்கு செல்லும் மலைப்பாதை, மலைப்பாம்பின் உடலை ஒத்தது. வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மொத்தம் பதினான்கு கொண்டை ஊசி வளவுகள். ஒவ்வொரு வளைவுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்களில் தமிழ் கமகமக்கிறது. பாவேந்தர், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர் என்று தமிழ் கவிஞர்களின் பெயரும், கடையேழு வள்ளல்களின் பெயரும் ஒவ்வொரு கொண்டையூசி வளைவையும் சிறப்பு செய்கிறது.

வளைவுகளில் வாகனம் திரும்பும்போதெல்லாம் த்ரில்லிங்கான உணர்வு நிச்சயம். சன்னல் வழியாக கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது லேசாக வயிற்றையே கலக்கவே செய்கிறது. 1960ஆம் ஆண்டில் தொடங்கி 64ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்த 15 கி.மீ சாலை போடப்பட்டிருக்கிறது. இந்த மலைச்சாலையை நெடுஞ்சாலைத்துறை நன்றாகவே பராமரிக்கிறது என்பதால் கார், பைக் வாகனங்களிலும் அச்சமின்றி செல்லலாம்.

மலைச்சரிவுகளை கண்டுகளிக்க ஆங்காங்கே பாதையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பார்வை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பார்வை மையங்களில் இருந்து அந்திநேரத்தில் கதிரவன் மறைவதை காண்பது அலாதியான அனுபவம். இடையிடையே குரங்குக் கூட்டங்களின் சேஷ்டைகள் வேறு ஆனந்தத் தொல்லை.

பதிமூன்றாவது வளைவில் திருப்பத்தூர் வனச்சரகத்தால் ஒரு தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இயங்குவது ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்கி. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்களை சுற்றுலாப் பயணிகள் காண இதில் வசதி இருக்கிறது. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக கோடைவிழா மற்றும் வசந்தவிழா நடக்கும். அச்சமயங்களில் இந்த தொலைநோக்கியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொலைநோக்கி என்றதுமே நினைவுக்கு வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி காவலூரில் அமைந்திருக்கிறது என்று பாடப்புத்தகத்தில் படித்திருப்பீர்களே? இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்ட இந்த தொலைநோக்கி மையம் ஏலகிரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இதுபோன்ற தொலைநோக்கிகள் நிறுவப்படும் இடம் சிறிது உயரமாகவும், வருடத்தில் பல நாட்கள் மேகமூட்டமின்றியும், நகர வெளிச்சம் பாதிக்கப்படாத தூரத்திலும் இருந்தாக வேண்டும் என்பதாலேயே காவலூர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

பதினான்காவது வளைவு தாண்டியதுமே விண்ணை முட்டி நிற்கும் யூகலிப்டஸ் மரக்காடுகளை காணலாம். சினிமாக்காரர்களின் கண்களில் இந்த அடர்த்தியான காடுகள் இன்னமும் படாதது ஆச்சரியமே. மலை எற, ஏற நீங்கள் உணர்ந்துக் கொண்டிருக்கும் மெல்லிய சில்லிப்பின் தன்மைமாறி, இங்கே குளிர்காற்று சரேலென முகத்தில் அறையத் தொடங்குகிறது. காற்றில் ரம்மியமான தைல வாசனையும் கலந்து பயணச்சோர்வு முற்றிலுமாக நீங்குகிறது.

ஏலகிரியின் சமதளப் பகுதிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருப்பீர்கள். சாலையின் இருமங்கிலும் பலாமரங்களையும், அவற்றில் பழங்கள் காய்த்துத் தொங்குவதையும் பார்க்கலாம்.

உறைவிடப் பள்ளிகள், தங்கும் விடுதிகள் என்று ஓரளவு நாகரிக வாசனை அடித்தாலும், முழுக்க முழுக்க ஏலகிரி மலைவாழ் மக்களின் பூர்விக பூமி. முத்தனூர், கொட்டையூர், புங்கனூர், அத்தனாவூர், கோட்டூர், பள்ளக்கனியூர், மேட்டுக்கனியூர், நிலாவூர், இராயனேரி, பாடுவானூர், புத்தூர், தாயலூர், மங்களம், மஞ்சங்கொல்லிபுதூர் ஆகிய பதினான்கு மலைவாழ்விட மக்கள் வசிக்கும் கிராமங்கள் அடங்கியதுதான் ஏலகிரி. கடைகளிலும், சாலைகளிலும் எதிர்ப்படும் வெள்ளந்தி மக்கள் அனைவருமே பழங்குடியினர்தான்.

நானூறு ரூபாயில் தொடங்கி தங்கும் அறைகள் வாடகைக்கு கிடைக்கிறது. ஏராளமான தனியார் தங்கும் விடுதிகளோடு, அரசு பயணியர் மாளிகை, வனத்துறையினரின் விருந்தினர் மாளிகை, ஒய்.எம்.சி.ஏ அமைப்பினரிடம் இடவசதி என்று தங்குவதற்கு பிரச்சினையே இல்லை. அரசு நடத்தும் யாத்திரை நிவாஸ் விடுதியில் தங்குவதற்கான கட்டணம் 250 ரூபாயிலிருந்து 700 வரைதான்.

ஏலகிரி மலை 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடைக்காலத்தில் 34 டிகிரி, குளிர்காலத்தில் 11 டிகிரி என்பதுதான் வெப்பநிலை.

இங்கே பசுமை, பசுமையைத் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வேறெதுவுமில்லை. ஊட்டிக்கு ஒரு பொட்டானிக்கல் கார்டன் என்றால், ஏலகிரிக்கு இயற்கைப் பூங்கா. இரவுகளில் வண்ணமய மின்னொளி வெளிச்சத்தில் இங்கே காட்டப்படும் இசை நீருற்று கண்காட்சி ரொம்ப பிரபலம். பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருவியில் கொட்டு கொட்டுவென்று நீர் கொட்டித் தீர்க்கிறது. வெறுமனே பார்ப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் குளிக்கவும் கூட செய்யலாம். குழந்தைகள் விளையாடி மகிழ, சிறப்பாக பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைகள் பூங்கா ஒன்று. காலாற பூங்காவை சுற்றி வருவது ஒரு ரம்மியமான அனுபவம். ஊட்டி குளிரைப்போல ஏலகிரியின் குளிர் உங்கள் உடலை அச்சுறுத்தாது. அளவான, உடலுக்கு இதமான குளிர்தான் இங்கே வீசுகிறது.

இயற்கைப் பூங்காவுக்கு எதிரே ஒரு செயற்கை ஏரிப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கேயும் குழந்தைகள் விளையாட தனியாக வசதி செய்துத் தரப்பட்டிருக்கிறது. 6 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைந்திருக்கிறது.

ஏரியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான நீளத்தில் கான்க்ரீட் கரை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரியில் படகுச்சவாரி செய்பவர்களை இந்த கரையில் வாக்கிங் செய்துக்கொண்டே பார்ப்பது குதூகலமான அனுபவம். இந்த ஏரியில் நீங்களே ‘பெடல்’ செய்து படகு ஓட்டலாம். இல்லையேல் துடுப்பு போடும் படகுகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. உங்களோடு, படகோட்டி துடுப்பு போட்டு வருவார். 56,706 சதுர மீட்டர் இந்த ஏரியின் பரப்பளவு. பரவசப்படுத்தும் படகுச்சவாரிதான் ஏலகிரியின் ஹைலைட். ஏரியை ஒட்டி வனத்துறை சார்பில் மூலிகைப் பண்ணை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் அரிய மூலிகைகள் இங்கே பயிரிடப்படுகிறது.

மலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி என்ற பெயரால் தமிழ்ப் பாரம்பரியத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது. குறிஞ்சியின் தெய்வம் முருகன் என்பதும் மரபு. எனவேதான் ஏலகிரி மலையை சுப்பிரமணிய சாமியின் திருக்கோயில் காத்துவருவதாக ஆன்மீக அன்பர்கள் கருதுகிறார்கள். சுற்றுலாவுக்கு வருபவர்கள் இக்கோயிலை தரிசிக்க தவறுவதேயில்லை.

மங்களம் கிராமத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சுவாமி மலை அமைந்திருக்கிறது. இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் வசித்து வந்ததற்கான அடையாளச் சின்னங்கள் காணக் கிடைக்கிறது. நவீன இந்தியாவின் பழமையான பாரம்பரியம் கொண்ட கிராமங்களில் ஒன்றாக இங்கிருக்கும் நிலாவூர் விளங்குகிறது. சிலைவழிபாடு இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது. மலைவாழ் மக்களின் குலதெய்வமான கதவநாச்சியம்மன் கோயில் இங்கேதான் அமைந்திருக்கிறது.

யூகலிப்டஸ், மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா, நாவல், ரோஸ் ஆப்பிள், காப்பிச்செடி, புளியமரம், கூந்தமரம், ரம்போட்டா, ஆலமரம் மற்றும் பிரிஞ்சி இலைமரங்கள் என்று இயற்கை ஏலகிரிக்கு அள்ளிக் கொடுத்த செல்வங்கள் ஏராளம். நிலாவூர் கிராமத்தில் அரசு பழத்தோட்டம் ஒன்றும் அமைந்திருக்கிறது.

உயிரினங்கள் வாழ ஏற்ற சீதோஷணம் இங்கே நிலவுவதால் பாம்பு வகைகள், கரடி, சிறுத்தை, மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இம்மலை காடுகளில் வாழ்வதாக சொல்கிறார்கள். யானைகள் கூட வருடத்தின் சில மாதங்களில் இங்கே இருக்குமாம். சிட்டுக்குருவி வகைகள், புறா வகைகள், கவுதாரி, காடை, காட்டுக்கோழி என்று மலைப்பிரதேசத்தில் வாழும் பறவையினங்களும் இங்கே ஏராளம். ஆனால் நம்மூரில் அனாயசமாக காணப்படும் காகம் மட்டும் இங்கே இல்லை (செந்நிற காகம் மட்டும் இருப்பதாக ஊர்க்காரர் ஒருவர் சொல்கிறார்). எனவே ‘கா.. கா’ என்கிற குரலை மட்டும் நீங்கள் ஏலகிரியில் கேட்கவே முடியாது.

மலை, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் தவிர்த்து ஏலகிரியில் வேறு என்ன ஸ்பெஷல்? அருவி. ஏலகிரியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் ஜலகாம்பாறை அருவி இருக்கிறது. மலைவழியாக பாயும் ‘அட்டாறு’ என்கிற ஆறு பள்ளத்தாக்கினை அடைந்து, மலையின் வடகிழக்குப் பகுதியில் ஜடையனூர் என்கிற குக்கிராமத்தில் வீழ்ச்சி அடைகிறது. இதுவே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி. மழைக்காலத்தில் – ஆண்டின் சில மாதங்களில் மட்டுமே – இங்கே குளிர்ந்த நீர் கொட்டும். கோடைக்காலத்தில் செல்லும் பயணிகளுக்கு இங்கே குளிக்கும் வாய்ப்பு கிடைக்காது.

ஏலகிரியில் சுற்றுலா தொடர்பான பணிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நுழைவுக்கட்டணம் வாங்குவதில் தொடங்கி, கடைகள் நடத்துவது வரை அவர்கள் பொறுப்பு. அரசின் அசத்தலான ஐடியா இது. மலைவாழ் மக்களின் பெண்களும் பொருளாதார வலிவு பெற இது உதவுகிறது.

சுற்றுலா தவிர்த்துப் பார்க்கப் போனால் சாகச விளையாட்டுப் பிரியர்களின் சொர்க்கமாகவும் இம்மலை விளங்குகிறது. தென்னிந்தியாவிலேயே பாரா-கிளைடிங் எனப்படும் ‘ரெக்கை’ கட்டி மனிதன் பறக்கும் விளையாட்டு இங்கேதான் நடத்தப்படுகிறது. ஏலகிரி சாகச விளையாட்டு கழகம் (YASA – Yelagiri Adventure Sports Association) இந்த விளையாட்டுக்கு பொறுப்பேற்கிறது. ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் பாரா-கிளைடிங் திருவிழா இங்கே நடக்கும். இது மட்டுமன்றி மலையேற்றம், பாறையேற்றம், இருசக்கர சாகச விளையாட்டு (Biking) என்று பல விளையாட்டுகள் யாசா-வால் நடத்தப்படுகிறது.

ஒரு நடை குடும்பத்தோடு போய் பார்த்துவிட்டுதான் வாருங்களேன்!


ஏலகிரி சுற்றுலாவுக்கு சில தொடர்புகள்..

ஒய்.எம்.சி.ஏ. கேம்ப் சென்டர்
போன் : 04179-245226, 295144, 295146

ஏலகிரிக்கான வனச்சரகர் (ஜோலார்ப்பேட்டை)
போன் : 04179-220185

ஏலகிரி அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (யாசா)
போன் : 9840593194, 9442357711, 9444449591, 9444033307

(நன்றி : புதிய தலைமுறை)

16 மே, 2011

எப்போ பூ பூக்கும்?



லுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. மஞ்சள் ரோஜா என்று சொல்லி விற்பான். பூக்கும்போது சிகப்பாய் பூக்கும். குறைந்தபட்சம் பூக்கவாவது செய்கிறதே என்று மகிழ்ந்தாலும், நாம் எதிர்ப்பார்த்த வண்ணத்தில் பூக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

தொட்டியில் பதியன் போடுவது மாதிரி வெறுப்பான வேலை எதுவுமில்லை. ஒரு தொட்டி வாங்கும் காசுக்கு நாலு பூச்செடிகளை நர்சரியில் வாங்கிவிடலாம். ம்ம்.. சொந்தவீடாக இருந்தால் பூந்தோட்டத்தையே உருவாக்கலாம். இருப்பது வாடகை வீடு. தொட்டியில் வளர்த்தால் தான் உண்டு. இதுபோன்ற நேரங்களில் ஊர்நினைவு வந்துவிடுகிறது.

விசாலமான வீடு. வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம். ஜிகினா, சம்பங்கி, சாமந்தி, மைசூர் மல்லி, வாடாமல்லி என்று விருப்பப்பட்ட செடிகளை எல்லாம் வளர்க்க முடிந்தது. அண்ணா, தங்கை, அம்மா, அப்பாவென்று போட்டிப் போட்டு செடிவளர்ப்போம். தாத்தாவுக்கு மட்டும் வீட்டுக்கு முன்பாக இருந்த தென்னைமரத்தின் மீதுதான் பாசம். பாடுபட்டு வளர்க்கும் செடி பெரிய பலனை தரவேண்டுமாம்.

சீமந்தப் புத்திரன் ஸ்யாம் பிஸ்லெரி தண்ணீர் பாட்டிலோடு வந்தான். “அப்பா இந்தச் செடிக்கு மினரல் வாட்டர் ஊத்தலாம் இல்லை?” – எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. மாநகராட்சி தரும் மருந்தடித்த நீரை செடிகளுக்கு ஊற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அமிலத்தை வேரில் ஊற்றுவது மாதிரி உள்ளுக்குள் எரியும். குடிப்பதற்கே தினமும் இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து கேன் தண்ணீர் வாங்குகிறோம். செடிக்கு எங்கிருந்து நல்ல தண்ணீர் ஊற்றுவது? முதல்நாள் மட்டும் பிஸ்லரி வாட்டர் ஊற்றினேன். பையனுக்கு ரொம்ப மகிழ்ச்சி!

இந்தமாதிரியான கான்க்ரீட் காட்டில் மாட்டிக் கொள்வேன் என்று எந்தக் காலத்திலும் நினைத்ததில்லை. சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதத்தை வாடகை உள்ளிட்ட விவகாரங்களுக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. சாப்பாடு, உடை, மருத்துவம், கல்வி, எதிர்பாராத செலவு என்று மாதாமாதம் பட்ஜெட்டில் துண்டு. நகரத்துக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. சொந்தவீடு இன்னமும் கனவுதான்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மாற்றவேண்டியிருக்கிறது, ஆணி அடிக்க முடிவதில்லை, விரும்பிய வண்ணத்தில் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை தாண்டி, நினைத்தமாதிரி செடி வளர்க்க முடிவதில்லை. தாத்தா ஆசைப்பட்டது மாதிரி தென்னங்கன்று வைக்க முடிவதில்லை, பூச்செடிகள் வளர்த்து மகிழமுடிவதில்லை போன்ற விஷயங்கள் தான் உறுத்துகிறது. ஊரில் சொந்த வீடிருக்க, பிழைப்புக்கு வாடகை வீட்டில் வசிப்பது மாதிரியான துன்புறுத்தல் சகிக்க முடியாதது.

எடுத்து வந்த கிளையின் இருப்பக்கத்தையும் மண்ணில் ஊன்றி தொட்டியை தயார் செய்தேன். செம்மண் கூட இங்கே காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. தினமும் நீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பை பையனுக்கு தந்தேன். இதற்கு முன்பாக இருந்த வீட்டில் சாமந்தி வளர்த்தேன். வெள்ளை சாமந்தி.

“எப்போப்பா பூக்கும்” ஸ்யாம் கேட்டான்.

“நீ தினமும் ஒழுங்கா தண்ணி விட்டு வளர்த்தேனா, தினமும் ரெண்டு மணி நேரம் சூரிய ஒளியில் வெச்சேன்னா ஒன்றரை மாசத்துலே பூக்கும்!”


க்கவுண்ட்ஸ் மேனேஜர் அபூர்வமாக அழைத்தார்.

அனேகமாக வீட்டு லோன் விஷயமாக இருக்கலாம். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறேன். வட்டியில்லாக் கடன் ஆயிற்றே? பத்தாண்டுக்கு முன்பாகவே நகருக்கு வெளியே ஒரு அரைகிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறேன். கால்கிரவுண்டில் வீடுகட்டி, மீதியிருக்கும் இடத்தில் தோட்டம் போடவேண்டும். சிறுவயதில் நான் அனுபவித்த மகிழ்ச்சியை என் பையனுக்கும் உருவாக்கித்தர வேண்டும். எவ்வளவு நாளைக்குதான் தொட்டிச்செடி?

“வாங்க சார். கங்கிராட்ஸ்” முகம் முழுக்க மகிழ்ச்சி இருந்தது மேனேஜருக்கு.

“எதுக்கு சார் கங்கிராட்ஸ்?” யூகித்தமாதிரியே தானிருக்கிறது என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும், சும்மா மேலுக்கு கேட்டேன்.

“நெஜமாவே தெரியாது. எம்.டி. ரொம்ப ஹேப்பியா இருக்கார் உங்க பெர்பாமன்ஸ் பத்தி” – கவரை நீட்டினார்

“மகிழ்ச்சி சார்” – படபடப்போடு பிரித்தேன்.

ஆயிரம் ரூபாய் இன்க்ரிமெண்ட். ஒரு வருடம் கழித்து கிடைக்கவேண்டியது. இடையில் ஆறுமாதத்துக்குள்ளாகவே கிடைத்திருக்கிறது.

“சார் நான் எதிர்பார்த்தது வேற”

“தெரியும் செந்தில். ஹெட் ஆபிஸ்லே லோன் எல்லாம் அவ்வளவு சுளுவா இப்போ அப்ரூவ் பண்ணறதில்லை. இருந்தாலும் நான் உங்களுக்காக பர்சனலா ப்ரெஸ்ஸர் கொடுத்துக்கிட்டு தானிருக்கேன்!”

“நன்றி சார். இன்க்ரிமெண்ட் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா லோன் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்” நன்றிகூறி விடைபெற்றேன்.

மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. அப்படியே பேங்கில் சேமிக்கலாமா?


துள்ளலோடு மல்லிகைப்பூவும், இனிப்புப் பொட்டலமுமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.

சகதர்மிணி முகத்தில் வாட்டம்.

“என்னாச்சுப்பா?”

“ஹவுஸ் ஓனர் வந்துட்டுப் போனாரு. வீடு எப்போ காலி பண்ணப் போறீங்கன்னு கேட்டாரு”

“இங்கே வந்து ஒன்றரை வருஷம் கூட ஆகலியே? அதுக்குள்ளே ஏனாம்?” இன்க்ரிமெண்ட் கிடைத்த சந்தோஷம் புஸ்.

பையன் குதித்துக்கொண்டே ஓடிவந்தான். “அப்பா. ரோஜாச்செடி....”

“சும்மாயிர்ரா. அம்மாவோட பேசிக்கிட்டிருக்கேன் இல்ல... அப்புறமா வ்” பையன் வாட்டமாக கிளம்பினான்.

ச்சே.. இந்த வாடகைக் கலாச்சாரம் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துவிடுகிறது.

“வேற யாரோ அதிக வாடகைக்கு கேட்டிருக்காங்களாம். ரெண்டாயிரம் ரூபா அதிகமா கொடுத்தா நாமளே இருக்கலாமுன்னு சொல்றாரு”

“புறாக்கூண்டு மாதிரி இருக்குற இந்த வீட்டுக்கு ஆறாயிரம் கொடுக்கறதே அநியாயம். எட்டாயிரம் கேட்குறானுங்களா? வேற வீடு பார்த்துக்கலாம்”

சொல்லிவிட்டேனே தவிர, வேறு வீடு பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தெரியும். நகருக்கு மத்தியில் முதன்முதலாக மனைவியோடு குடியேறி, வீடு மாறி, மாறி, நகரத்தின் விளிம்புக்கு வந்துவிட்டேன். ஆபிஸுக்கு போய்வருவது மாதிரியான பிரச்சினை எனக்கும், பையனை பள்ளிக்கு கொண்டுசெல்வது மாதிரியான பிரச்சினை மனைவிக்கும் அலுப்பாக இருக்கிறது.


வுஸ் ஓனர் கொடுத்த ஒருமாத கெடு முடிவதற்குள், குரோம்பேட்டை தாண்டி ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிளாட் கிடைத்தது. தனிவீடு பார்த்தால் வாடகை எக்கச்சக்கம். இங்கிருந்ததை விட வாடகை ஆயிரம் ரூபாய் அதிகம். வாங்கிய இங்க்ரிமெண்ட் எனக்கு வழக்கம்போல செரிக்கப் போவதில்லை.

செடியை வேர்மண்ணோடு எடுத்து வைப்பது போல சுலபமானது அல்ல வீடு மாறுவது. ஒரு டெம்போ பிடித்து வந்தேன். இரண்டு பேரை கூலிக்கு அமர்த்தியிருந்தேன். முன்பு போல வெயிட்டெல்லாம் தூக்க முடிவதில்லை. மாமனார் வீட்டில் சீதனமாக வந்த கட்டிலும், பீரோவும் நல்ல வெயிட்டு.

ஸ்யாமுக்கு புதுவீட்டைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவனுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் பத்திரமாக சேகரித்து ஒரு பையில் அடைத்துக் கொண்டிருந்தான். அம்மாவைப் போலவே பையனும் உஷார்.

பீரோவைத் தூக்கிக் கொண்டுவர வேலையாட்கள் இருவரும் சிரமப்பட்டார்கள். ஹாலைத் தாண்டி வாசற்படிக்கு வருவதற்குள் ஒருவர் காலில் எதையோ இடித்துக் கொண்டார். பீங்கான் உடைந்ததைப் போல சத்தம். காலில் இடித்துக் கொண்டதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் வேகமாக பீரோவை எடுத்துச் செல்ல, “அய்யோ ரோஜா செடி உடைஞ்சிட்டிச்சி” என்று ஸ்யாம் அரற்றத் தொடங்கினான்.

அப்போதுதான் பார்த்தேன். தொட்டி உடைந்து செம்மண் சிதறிக்கிடந்தது. அழகாக மொட்டுவிடத் தொடங்கியிருந்த கிளையும் ஒடிந்திருந்தது. டெம்போவில் கடைசியாக ஏற்ற ஓரமாக தொட்டியை எடுத்து வைத்திருக்கிறான் ஸ்யாம். வெயிட்டை தூக்கிவந்தவர்கள் கீழே பார்க்காமல் காலில் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

ஸ்யாமைப் பார்க்க பாவமாக இருந்தது. அவனுக்கும் என்னைப் போலவே பூச்செடிகள் மீது அதிகப் பிரியம்.


ருவாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை புதுவீட்டில்....

அலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை...


(நன்றி : சூரியக்கதிர் - மாதமிருமுறை இதழ் : மே 15 - 31, 2011)

14 மே, 2011

16,00,000

16,00,000

வாயைப் பிளந்து பயந்துவிடாதீர்கள்.
ஊழலில் சம்பந்தப்பட்ட கோடிகள் அல்ல இந்த எண்ணிக்கை.

நல்ல விஷயம்தான். வரும் ஆண்டு, இதே எண்ணிக்கையில் புதியவேலைவாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு
கிடைக்கப் போகிறது.

வறுமையின் நிறம் சிகப்பு’, ‘பட்டம் பறக்கட்டும் இதெல்லாம் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பு. அந்த காலக்கட்டத்தில் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. மேற்கண்ட திரைப்படங்கள், ஊடகங்கள் அப்பிரச்சினையை அக்காலத்தில் பிரதிபலித்ததற்கு சாட்சி.
இன்று யாராவது எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொன்னால் அது சமூகத்தின், தேசத்தின் குற்றமல்ல. சம்பந்தப்பட்ட நபர் மீதுதான் பிரச்சினை இருக்கக்கூடும். வேலையில்லா பட்டதாரி என்கிற சொல்லே வழக்கொழிந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து எடுக்கப்பட்ட கணிப்பு ஒன்று இந்த கூற்றினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மனிதவளத் துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்று மாஃபா ராண்ட்ஸ்டாட். சென்னையை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் வருடா வருடம் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த துல்லியமான கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, வெளியிடுவது வழக்கம்.
கடந்த 2010ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பில் பத்து லட்சத்துக்கும் மேலான புதிய வேலைகள் உருவாகும் என்று கணித்திருந்தார்கள். 11,31,643 பேருக்கு வேலை கிடைத்தது. அதிகபட்சமாக, சுகாதாரத்துறையில் (Healthcare) 2,54,655 பேருக்கும், விருந்தோம்பல் (Hospitality) துறையில் 1,60,300 பேருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் 1,29,312 பேருக்கும் வேலை கிடைத்தது. மும்பை, டெல்லி, சென்னை நகரங்கள் மட்டுமே 2,55,797 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம்.
இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
சமீபத்தில் மாஃபா ராண்ட்ஸ்டாட் எடுத்திருக்கும் கணிப்பில் மொத்தமாக பதினாறு லட்சம் புதிய வேலைகள் அமைப்புரீதியான நிறுவனங்களில் உருவாக்கப்படும் என்று தெரியவந்திருக்கிறது. பதிமூன்று தொழில் வகைகள், 650 நிறுவனங்கள், எட்டு பெரிய நகரங்கள் என்று கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டும் சுகாதாரத்துறையே அதிக வேலைகளை தருவதில் முன்னணி வகிக்கும் என்று தெரிகிறது. இத்துறையில் மட்டுமே 2,48,500 புதிய வேலைகள் உருவாகலாம். விருந்தோம்பல் – 2,18,200, ரியல் எஸ்டேட் – 1,44,700, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு – 1,26,100, தயாரிப்புத்துறையும் (இயந்திரத் தயாரிப்பு தவிர்த்து) லட்சக்கணக்கில் புதிய வேலைகளை உருவாக்கித் தரும்.
வரும் கல்வியாண்டில் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில்சார்ந்த மேற்படிப்புகளை, மாணவர்கள் அடையாளம் காண ஏதுவாக மாஃபா ராண்ட்ஸ்டாட்டின் கணிப்புகளை துறைவாரியாக கீழே தருகிறோம். ஒவ்வொரு துறை குறித்தும் சுருக்கமான, தீர்க்கமான அறிதலை இதன் மூலம் அனைவரும் பெறலாம். (கீழே வளர்ச்சி என்று குறிப்பிடப் படுவதை, சம்பந்தப்பட்ட துறை வேலைவாய்ப்பில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் வளர்ச்சி என்பதாக அறிக)

வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் (Banking Financial Services & Insuranc)
தற்போதைய பணியாளர்கள் : 9,07,960
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 80,700
நிலையான, நேர்மறையான சிந்தனைகள் நிலவும் துறை. 2010ன் இறுதிக் காலாண்டில் இத்துறையின் சிறப்பான முன்னேற்றம் நம்பிக்கையை தருகிறது. குறுங்கடன், இன்சூரன்ஸ், வணிகத்துக்கு வங்கிக் கடன் என்று ஏறுமுகத்தில் இருக்கும் துறை. வரும் ஆண்டில் 8.9 சதவிகித வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுகிறது.

கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனை (Education, Training and Consultancy)
தற்போதைய பணியாளர்கள் : 97,94,000
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,07,500
கல்வித்துறை எப்போதுமே புதிய பணியாளர்கள் தேவைப்படக்கூடிய துறையாகவே விளங்குகிறது. வேலை தொடர்பான கல்வியை விரும்பும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். எனவே பயிற்சி மற்றும் ஆலோசனை துறையின் வளர்ச்சி நிச்சயம். இந்த்த் துறைகளில் 1.1 சதவிகித கூடுதல் வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எரிசக்தி (Energy)
தற்போதைய பணியாளர்கள் : 8,95,500
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 24,900
கடந்தாண்டு இந்த துறை பெரியவில் சோபித்ததாக தெரியவில்லை (நம்மூரில் கூட மின்வெட்டு மூலம் நீங்களே நேரடியாக உணர்ந்திருக்கலாம்). ஆனால் ஆண்டின் கடைசிக் காலாண்டில், இத்துறை திடீர் சுறுசுறுப்பு பெற்றது. ஆயினும் கடந்தாண்டு பெரும்பாலும் நீடித்த சோம்பல், இவ்வாண்டும் தொடரும் என்றே நிறுவனங்களில் விசாரித்த அளவில் தெரியவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை (Renewable energy) அரசு ஊக்குவித்து வருவதால், இனி வரும் ஆண்டுகளில் இத்துறை விஸ்வரூபம் எடுக்கலாம். இருக்கும் துறைகளிலேயே மிகக்குறைவான புதிய வேலைகளை இத்துறைதான் வரும் ஆண்டில் ஏற்படுத்தும். வளர்ச்சி சதவிகிதம் 2.8 சதவிகிதம்.

சுகாதாரத் துறை (Healthcare)
தற்போதைய பணியாளர்கள் : 33,77,652
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
2,48,500
நம் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையைப் பொறுத்தவரை சுகாதாரத்துறைதான் சூப்பர்ஸ்டார். கடந்தாண்டு நமக்கு கிடைத்த வேலைகளில் 16 சதவிகிதம் இத்துறையில் மட்டுமே கிடைத்தது. 2012 வாக்கில் 7500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான வர்த்தக அதிசயத்தை நிகழ்த்தப் போகும் துறை இது (இன்றைய மதிப்பில் 7500 கோடியை 50ஆல் பெருக்கிப் பாருங்கள்). சுகாதாரத் துறையோடு கூடவே மருத்துவக் காப்பீடும் பெருகி வருகிறது. மெட்ரோ நகரங்களை தவிர்த்து, அடுத்தடுத்த நகரங்களில், கிராமங்களிலும் கூட சுகாதாரத்துறையின் சேவை விரிவடைந்து வருவதால் தனியார் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இத்துறை மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மருத்துவ சுற்றுலா மற்றும் மருத்துவம் தொடர்பான மற்ற துறைகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 7.4 சதவிகித வளர்ச்சியை இத்துறை கூடுதலாக பெறக்கூடும்.

விருந்தோம்பல் துறை (Hospitality)
தற்போதைய பணியாளர்கள் : 61,11,300
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
2,18,200
கடந்தாண்டு சக்கைப்போடு போட்ட துறைகளில் இதுவும் ஒன்று. தற்போது ஹோட்டல் கட்டமைப்புகளில் செய்யப்படும் பெரிய முதலீடுகளை வைத்து கணிக்கும்போது, வேலைவாய்ப்புச் சந்தையில் இத்துறை நல்ல அறுவடையை செய்யும் என்று தெரிகிறது. 3.6 சதவிகித வளர்ச்சியை எதிர்நோக்கலாம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச்சார்ந்த ஏனைய துறைகள் (IT & ITES)
தற்போதைய பணியாளர்கள் : 19,18,865
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,83,000
இந்தியாவில் வேலைவாய்ப்பை கொட்டித் தருவதில் அமைப்புரீதியாக வலுவான துறை இது. கடந்த ஆண்டும் நிறைய இளைஞர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பத்தை நம்பியோர், நிச்சயம் கைவிடப்படார். 2011ஆம் ஆண்டிலும் நிறைய பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பைத் தரும். கிராமப்புறங்களில் பெருகிவரும் BPO சேவை, பரவலான வேலைவாய்ப்பை பெருகவைக்கும். 9.5 சதவிகித வளர்ச்சியை காணும்.

உற்பத்தித் துறைஇயந்திரங்கள் மற்றும் கருவிகள் (Manufacturing – machinery & equipment)
தற்போதைய பணியாளர்கள் : 11,34,800
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
68,400
கடந்தாண்டின் இறுதிக் காலாண்டில் சிறப்பாக செயல்பட்ட இத்துறை, அதே செயல்பாட்டை இவ்வாண்டும் தொடர்ச்சியாக தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்துறையை சார்ந்திருக்கும் சார்பு நிறுவனங்களின் வளர்ச்சி நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது. எனினும் கூட நாட்டில் வீங்கிவரும் பணவீக்கம், இத்துறையின் நீண்டகால வளர்ச்சி அடிப்படையில் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இருப்பினும் வரும் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி நிச்சயம்.

உற்பத்தித் துறைஇயந்திரங்கள் தவிர்த்து (Manufacturing – non machinery)
தற்போதைய பணியாளர்கள் : 45,08,000
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
2,34,400
மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியச் சந்தையின் அபாரமான உள்நாட்டுத் தேவை, இத்துறையை பொருளாதார மந்த நெருக்கடியிலிருந்து  அதிவிரைவாக மீட்டிருக்கிறது. அரசின் பொருளாதார அடிப்படைகள் மற்றும் ஊக்கமும் இந்த மீள் எழுச்சிக்கு முக்கியமான காரணம். நுகர்வோர் பொருட்கள், உணவு, டெக்ஸ்டைல்ஸ், தோல் மற்றும் அதைச் சார்ந்தப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித்துறை ஆகியவை உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பலாம். வளர்ச்சி சதவிகிதம் 5 ஆக உயரும்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (Entertainment & Media)
தற்போதைய பணியாளர்கள் : 13,56,300
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,26,100
2011ன் கடைசி காலாண்டில் திடீரென ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்தது. அந்தப் போக்கு இவ்வாண்டும் தொடரும். அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள், பொருளாதார வளர்ச்சி, நகரமக்கள் பழகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் வாழ்க்கை, மக்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடப்படுவது என்று ஏராளமான காரணிகள் இத்துறையின் போக்கை நிர்ணயிக்கிறது. 9.3 சதவிகித வளர்ச்சியை இத்துறை காணக்கூடும்.

மருந்துத் துறை (Pharma)
தற்போதைய பணியாளர்கள் : 2,84,351
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
49,400
இந்திய மருந்து உற்பத்தித்துறை சமீப ஆண்டுகளில் சீரான வளர்ச்சியை கண்டுவருகிறது. வரும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிரடி வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஒப்பந்த உற்பத்தி மட்டுமே 3000 கோடி டாலராக உயரலாம். ஒப்பத ஆராய்ச்சித்துறை மட்டுமே 600 முதல் 1000 கோடி டாலர் வரையிலான வர்த்தகத்தை செய்யக்கூடும். இவ்வளவு பணம் புழங்குவதால் இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நிறைய தேவைப்படுவார்கள். 17.2 சதவிகித வளர்ச்சியை வருமாண்டில் இத்துறை பெறக்கூடும்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் (Real Estate & Construction)
தற்போதைய பணியாளர்கள் : 8,59,312
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,44,700
நாட்டில் நிலையாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியால் இத்துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்தாண்டு நல்ல வளர்ச்சியை அடைந்தபோதும் கூட, அது எதிர்ப்பார்ப்புக்கும் குறைவானதே. மத்திய, மாநில அரசுகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் பெருமளவு கவனம் செலுத்துவதால், கட்டுமானத்துறை கலக்கிக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறை தொடர்பான புதிய கட்டமைப்பு பணிகளும் அதிக வேலைவாய்ப்புக்கு கைகொடுக்கும். எதிர்ப்பார்க்கப்படும் வளர்ச்சி சதவிகிதம் 16.4
நுகர்வோர், சில்லறை வர்த்தகம் மற்றும் தொடர்பான மற்றைய சேவைகள் (Trade including Customer, Retail and Services)
தற்போதைய பணியாளர்கள் : 8,59,312
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,44,700
உலகப் பொருளாதார வளர்ச்சி, இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் உயர்வு, சர்வதேச வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகியவற்றால் வரும் ஆண்டில் சொல்லிக் கொள்ளும்படியான வேலைவாய்ப்புகளை இத்துறை உருவாக்கித் தரும். 2014ஆம் ஆண்டு வாக்கில் 674.37 பில்லியன் (இந்த தொகையை நூறு கோடியில் பெருக்கிப் பாருங்கள்) அளவுக்கு இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மட்டுமே இருக்குமாம். பெரிய நிறுவனங்கள், சிறு சிறு நகரங்களில் கூட சில்லறை வர்த்தக கடைகளை, புற்றீசல் மாதிரி உருவாக்கி வருகிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். 5.9 சதவிகித வளர்ச்சி வரும் ஆண்டில் கிடைக்கக் கூடும்.

போக்குவரத்து, சேகரிப்பு மற்றும் தொலைதொடர்பு (Transport, Storage & Communication)
தற்போதைய பணியாளர்கள் : 26,82,600
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
93,300
2010ஆம் ஆண்டு நன்றாக செயல்பட்ட துறைகள் இவை. துறைமுகத்துறை சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற இயலவில்லை. ஆனால் ரயில், சாலை, விமானம் ஆகிய போக்குவரத்துகள் பரவாயில்லை. எனவே போக்குவரத்துத் துறை கடந்தாண்டு ஒரு கலவையான வளர்ச்சியையே எட்டியது. தொழில் தொடர்பான சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருவது இத்துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம்.
3ஜி அறிமுகம், ஒரே மொபைல் நம்பரை எந்த சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் மாற்றிக்கொள்ளும் மொபைல் போர்ட்டபிள் வசதி போன்றவை தொலைதொடர்புத் துறையில் கூடுதல் பணிகளை உருவாக்கலாம்.
3.5 சதவிகித வளர்ச்சியை இத்துறைகளில் எதிர்நோக்கலாம்.
இந்தியாவின் பெருநகரவாரியாக, ஒவ்வொரு நகரத்திலும் எவ்வளவு புதிய பணியிடங்கள் வரும் ஆண்டில் உருவாகும்?
அஹமதாபாத் – 7,257
பெங்களூர் – 20,794
சென்னை – 68,134
புதுடெல்லி மற்றும் தேசிய தலைநகரகப் பகுதிகள் – 1,02,616
ஹைதராபாத் – 13,489
கொல்கத்தா – 31,759
மும்பை – 1,02,884
புனே – 14,720
“தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அமைப்பு சார்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்குமே மகிழ்ச்சியான விஷயம்தான். உலகெங்கும் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியா, சீனா ஆகிய வளர்ந்துவரும் நாடுகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்நாடுகளின் பொருளாதாரமும் ஏற்றமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஆனாலும் நம் நாட்டில் பணித்திறன் குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கிறது என்பதை நாட்டின் முன்னணி மனிதவள சேவை நிறுவனம் என்கிறவகையில் எங்களால் உணரமுடிகிறது. பணித்திறனை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனங்களும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்என்று இந்த கணிப்பு முடிவுகள் குறித்து பேசும்போது கூறுகிறார் ஈ.பாலாஜி. இவர்தான் மாஃபா ரா ராண்ட்ஸ்டாட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்.
(நன்றி : புதிய தலைமுறை)