31 ஜனவரி, 2011

Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail

Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy - http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman - http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for www.savetnfisherman.org

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com, tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

நாத்திகம் காத்தல் - உருப்படியான ஒரு வலைப்பதிவு!



தமிழ் சமூகத்தில் நாத்திகனாய் வாழ நேர்வது துரதிருஷ்டம். ஒரு நாத்திகன் தனது சொந்த குடும்பத்தினராலேயே கூட பைத்தியக்காரனாய் பார்க்கப் படுகிறான். தவிர்க்க இயலாத சூழல்களில் சனாதான சடங்குகளில் கலந்துகொண்டாக வேண்டிய கட்டாயங்களின்போது அவன் அடையும் சங்கடங்களுக்கு அளவேயில்லை. தான் சார்ந்த சமூகத்தோடேயே ஒட்டமுடியாத தனித்தீவாய் வாழ்வது அவனது சாபக்கேடு!

தமிழக நாத்திகன் குறித்த உளவியல்ரீதியான, அற்புதமான பதிவொன்றினை வாசிக்க நேர்ந்தது.

வாழ்த்துகள் ஆதிமூல கிருஷ்ணன்!

28 ஜனவரி, 2011

Save TN Fisherman!



Please support http://www.savetnfisherman.org/

25 ஜனவரி, 2011

ஜி.எஸ்.எல்.வி – சில தகவல்கள்!



ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?


Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), இன்சாட் வகை செயற்கைக் கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. செய்கிறது.

இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால், வீட்டிலிருந்து உங்களை அலுவலகத்துக்கு ஸ்கூட்டர் கொண்டு செல்கிறது இல்லையா? செயற்கைக் கோள்களுக்கு ஸ்கூட்டர் என்று ஜி.எஸ்.எல்.வி.யை புரிந்துகொள்ளலாம்.

நம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற முன்னேறிய நாடுகளின் ராக்கெட்டுகளை நாம் பயன்படுத்த வேண்டுமானால் பல்லாயிரம் கோடி செலவாகும். ஜி.எஸ்.எல்.வி. நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய நிபுணர்களால் செயல்படுத்தப்படுவது என்பதால் சிக்கனமானது. அதாவது சில நூறு கோடிகள்.

ஜி.எஸ்.எல்.வி பிறந்த கதை

உலகோடு உறவாடக்கூடிய (Geosynchronous satellites) செயற்கைக் கோள்கள், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தச் செயற்கைக் கோள்களை உருவாக்கிவிடக் கூடிய நாடுகளால், அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை சுலபமாக ஏற்படுத்திவிட முடிவதில்லை.'

1990ல் இந்தியா தனது செயற்கைக் கோள்களை தானே செலுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்தது. ஏனெனில் அதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை நமக்கு சோவியத் யூனியன் செய்து வந்தது. அந்நாடு சிதறுண்ட நிலையில் சொந்தக்காலில் நிற்கவேண்டிய அவசியத்தை இந்தியா உணர்ந்தது.

ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle) தொழில்நுட்பத்தில் நமது நிபுணர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால் ஜி.எஸ்.எல்.வி.யை வெற்றிகரமாக உருவாக்கிடும் தன்னம்பிக்கை நம்மவர்களுக்கு நிறையவே இருந்தது. ஜி.எஸ்.எல்.வி.யை இயக்கிடும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை நமக்கு மற்ற நாடுகள் நியாயமற்ற காரணங்களுக்காக மறுத்தன (இந்திய கிரையோஜெனிக் கதையை பெட்டிச் செய்தியாக காண்க). எனினும் ஏற்கனவே நாம் பெற்றிருந்த ரஷ்ய என்ஜின்களை வைத்து 18, ஏப்ரல் 2001 அன்று வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி.யை ஏவினோம்.

கட்டமைப்பு எப்படி?

பி.எஸ்.எல்.வியை மேம்படுத்தியே, மேலதிக நவீன தொழில்நுட்பத்தோடு ஜி.எஸ்.எல்.வி. உருவாகி இருக்கிறது. இது மொத்தம் மூன்று அடுக்குகளாக இருக்கும். கீழ் அடுக்கு முழுக்க திடப்பொருட்கள் அடங்கியது. இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்குகள் திரவங்கள் நிரம்பியது. மூன்று அடுக்குகளிலுமே விண்ணுக்கு உந்திச் செல்லும் (propelled) இயந்திரங்கள் நிரம்பியிருக்கும். முதல் இரண்டு அடுக்குகளும் பி.எஸ்.எல்.வி. மாதிரியே இருக்கும். மூன்றாவது அடுக்கில்தான் ஜி.எஸ்.எல்.வியின் சிறப்பம்சமான கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஏன் கிரையோஜினிக்?

பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை சுமந்தபடி மிக்ககுறுகிய காலம் மட்டுமே பயணிக்கும். அவையின் சக்தி அவ்வளவுதான். இதனால் சில நூறு கிலோ மீட்டர்கள் உயரத்தில்தான் செயற்கைக்கோள்களை நிறுவமுடியும்.

35,000 கி.மீ உயரத்தில் நிறுவக்கூடிய செயற்கைக்கோள்கள்தான் பன்முகப்பயன்களை தரக்கூடியவை. குறிப்பாக தகவல் தொடர்புக்கு ஏதுவான செயற்கைக்கோள்களை இந்த உயரத்தில்தான் நிறுத்தியாக வேண்டும். இதற்கு பி.எஸ்.எல்.வி சரிப்படாது. ஜி.எஸ்.எல்.வி. தான் ஒரே தீர்வு. மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களை பொருத்தினால் மட்டுமே இவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை அனுப்பமுடியும். அந்த இயந்திரம்தான் கிரையோஜெனிக்.

மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவைதான் கிரையோஜெனிக்கின் எரிபொருள். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் திரவநிலையில் இருக்கும். ராக்கெட் கிளம்புவதற்கு முன்பான 30 நொடி வரை இந்த எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஜி.எஸ்.எல்.வி. எத்தனை முறை ஏவப்பட்டது?

ஜி.எஸ்.எல்.வி. இதுமுறை ஏழு முறை ஏவப்பட்டிருக்கிறது. முறை ஏப்ரல் 2001லும், மே 2003லும் ஜி-சாட் 1, ஜி-சாட் 2 ஆகியவை ஏவப்பட்டது. EDUSAT தகவல் செயற்கைக்கோள் செப்டம்பர் 2004ல் வெற்றிகரமாக விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜூலை 2006ல் இன்சாட்-4சியை ஏவ நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இயந்திரக்கோளாறு ஏற்பட்டதின் காரணமாக வங்காள விரிகுடாவுக்கு மேலாக ராக்கெட்டும், செயற்கைக்கோளும் வெடித்துச் சிதறடிக்கப்பட்டன. முந்தைய தோல்வியை ஈடுகட்டும் வகையில், செப்டம்பர் 2007ல் இன்சாட் 4சிஆர் விண்ணில் நிறுவப்பட்டது.

ஏப்ரல் 2010ல் ஜிசாட்-4னை சுமந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தது. கிரையோஜெனிக் இயந்திரத்துக்கு செல்லவேண்டிய எரிபொருள் தடைபட்டதால் இம்முயற்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் ஜிசாட்-5பியை விண்ணில் நிறுவ நடந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இவ்வாண்டில் ஜி-சாட்6-ஐ விண்ணில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கிறது. 2003 மற்றும் 2004ல் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இடத்தில் விண்ணில் சரியாக நிறுவப்பட்டவை.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள், சென்னையில் இருந்து 80 கி.மீ தூரத்தில், ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது.

தோல்வி

வருட கடைசியில் ஜிசாட் -5பியை நிறுவும் முயற்சியில் இந்தியா தோல்வியடைந்திருப்பது நிச்சயமாக இஸ்ரோவுக்கு பெரிய பின்னடைவுதான். கடந்த ஏப்ரல் மாதம், முதன்முறையாக முழுக்க இந்திய தொழில்நுட்பத்தோடு கூடிய கிரையோஜெனிக் எந்திரத்தை உருவாக்கி ஜிசாட் -4ஐ ஏவும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கிறது. பி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தில் இன்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் மரியாதையை, நிச்சயமாக இந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்விகள் குலைக்கும். 2013ஆம் ஆண்டு நாம் ஜி.எஸ்.எல்.வி. மூலமாகதான் சந்திராயன்-2ஐ ஏவ இருக்கிறோம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் எழுச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு மகத்தானது. இந்நிறுவனத்தின் வெற்றிகளும், தோல்விகளும் இந்திய கவுரவத்தோடு சம்பந்தப்பட்டது. கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைதான் முதலில் சுற்றிப் பார்த்தார். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவோடு கைகோர்த்து செயல்பட அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தியாவும், சீனாவும்தான் எதிர்காலத்தில் ராக்கெட், செயற்கைக்கோள் தொடர்பான வான்வழி வர்த்தகத்தில் கோலோச்சப் போகிறார்கள் என்று பாரிஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கணக்கீடு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் கடந்த வருடத்தில் அடுத்தடுத்து பெற்றிருக்கும் இரு தோல்விகள் கொஞ்சம் சோர்வடையவே செய்கின்றன.

அதே நேரத்தில் கடந்த மாதம் ரஷ்யா, ஓராண்டுக்கு முன் நாசா (அமெரிக்கா), மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறிய நாடுகளும் கூட சமீபமாக சில தோல்விகளை கண்டிருக்கிறார்கள். ராக்கெட் அறிவியலுக்கே கொஞ்ச காலமாக சகுனம் சரியில்லை போலும்.

இந்திய-கிரையோஜெனிக் கதை!

2003 மார்ச் மாதம். பிரதமர் வாஜ்பாய் பாராளுமன்றத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அறிவித்தார். "நாமே கிரையோஜெனிக் எந்திரத்தை சொந்தமாக உருவாக்கும் தொழில்நுட்ப தன்னிறைவைப் பெற்றுவிட்டோம்!" – இந்தியா அன்று அடைந்த பெருமிதத்துக்கு பின்னால்தான் எவ்வளவு அரசியல் சூழ்ச்சிகள்?

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை நாம் 1993ல் இருந்து பயன்படுத்தி வருகிறோம். 1998ல் பொக்ரானில் செய்யப்பட்ட அணுசோதனை நம்மை உலகின் மற்றநாடுகளிடமிருந்து விலக்கி வைத்தது. மற்ற நாட்டு விஞ்ஞானிகளோடு நம் விஞ்ஞானிகளுக்கு இருந்த தொழில்நுட்ப ஆலோசனை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை சுமந்துச் செல்லும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு, நமக்கு தொழில்நுட்பம் மறுக்கப்பட்டது.

இதற்குப் பின்னால் உலகத்தின் பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டாலும், வணிகம் – மிகப்பெரிய வணிகம்தான் உண்மையான காரணம். அமெரிக்கா, ரஷ்யா, சைனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தார்கள். தகவல் தொடர்புக்கு ஏதுவான பெரிய செயற்கைக்கோள்களை ஒரு நாடு விண்ணில் நிலைநிறுத்த வேண்டுமானால் இவர்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டும். மிகப்பெரிய பணவர்த்தனை நடைபெறும். இந்தியா, இந்த தொழில்நுட்பத்தில் கைதேர்ந்துவிட்டால் மிக்க்குறைந்த காசுக்கு மற்றவர்களுக்கு செயற்கைக்கோளை ஏவித்தரும் என்று இந்நாடுகள் அஞ்சின. இதனால் தங்கள் பங்குக்கு பங்கம் வரும் என்பதாலேயே உலகப் பாதுகாப்பை காரணம் காட்டின.

இந்நிலையில் இந்தியா தனக்கான தொழில்நுட்பத்தை தாமே வடிவமைப்பது என்று அதிரடியாக முடிவெடுத்தது. தமிழகத்தின் மகேந்திரபுரியில் Liquid Propulsion System Centre என்கிற இந்திய நிறுவனம் இந்த எந்திரங்களை உருவாக்குவதில் முனைப்பாக இயங்கி வருகிறது. 2002 பிப்ரவரியிலேயே சில நொடிகளுக்கு விண்ணில் செயற்கைக்கோளை உந்திச்செல்லும் இயந்திரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். 2002 செப்டம்பரில் 1000 நொடிகளுக்கு உந்திச்செல்லுகிற இயந்திரம் தயார். எவ்வளவு நொடிகளுக்கு இது விண்ணைக் கிழித்துச் செல்லும் என்பது மிக முக்கியம். அதிக நொடிகளுக்கு இயங்கும் இயந்திரத்தால்தான் நல்ல உயரத்தில், திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிறுவமுடியும். அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றிகண்ட பின்னரே மார்ச் 12, 2003 அன்று கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

கிரையோஜெனிக் இயந்திரங்களை காசுகொடுத்து வாங்குவது வேறு. தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒப்பந்தங்கள் மூலமாக பெறுவது என்பது வேறு. ரஷ்யாவிடமிருந்து நாம் மொத்தம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் 6 எந்திரங்களை இப்போது பயன்படுத்தி விட்டோம். 2011 மத்தியில் மீதியிருக்கும் எந்திரமும் ஏவப்பட்டு விடும். அனேகமாக நான் பிரான்ஸையோ, ரஷ்யாவையோ மீண்டும் உதவிக்கு நாட வேண்டிய அவசியம் வரலாம். இது தற்காலிகமானது.

நாம் உருவாக்கும் இயந்திரங்களை வைத்து நமது செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைபெறும்போது, மற்ற நாடுகளில் இருந்து நமக்கு 'கிரையோஜெனிக் ஆர்டர்' நிறைய வரும். இவ்வளவு நாட்களாக இந்த தொழில்நுட்பத்தை பூதம் மாதிரி அடைகாத்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த நாடுகளுக்கு நம் மீது எரிச்சலும் வரும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தெரிந்தால், இந்தியா அழிவுகர ஏவுகணைகளை உருவாக்கும் என்று இந்நாடுகள் முன்பு பூச்சாண்டி காட்டியதில்லையா? கடந்த இருபது ஆண்டுகளில் நாம் அப்படிப்பட்ட ஒரு ஏவுகணையை கூட இதுவரை உருவாக்கவில்லை. இவ்வகையிலும் இந்தியா முன்னேறிய நாடுகளின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

19 ஜனவரி, 2011

சென்னைக்கு அருகே நெல்லை!

ஊரைச் சுற்றியும் பச்சை பசேல் மலைகள். நுழையும்போதே சில்லென்று முகத்தில் அறைகிறது குளிர் காற்று. தேநீர்க்கடை சட்டசபைகளில் 'எலேய், காந்தியை கூட சுட்டுட்டாங்களாமே?' என்று புராதன அரசியலை நெல்லைத் தமிழில் பேசும் வெள்ளந்தி மனிதர்கள். பள்ளி இடைவேளையில் 'பாண்டி' விளையாடும் மாணவிகள். ஆடு, மாடு, கோழி, டிராக்டர் என்று தமிழ் கலாச்சார கிராம அடையாளங்களை அச்சு அசலாக சுமந்து நிற்கும் இந்த ஊர், சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும். அதுவும் சென்னை விமான நிலையத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது திரிசூலம்.

விமான நிலையத்துக்கு நேரெதிரே, ரயில்நிலையத்தை கடந்து உள்ளே நுழைந்தால் நெல்லை மாவட்ட கிராமம் ஒன்றுக்குள் நுழைந்த அனுபவம் உங்களுக்கு சர்வ நிச்சயம். இருசக்கர வாகனங்கள், செல்போன் போன்ற அத்தியாவசிய நவீனங்களைத் தவிர்த்து பார்த்தால், நகருக்கு அருகிலிருக்கும் சுவடு இங்கே சற்றும் தெரியாது. அவ்வப்போது ரயில், விமானச் சத்தங்களைத் தவிர்த்து வேறெந்த சந்தடியும் இங்கில்லை.

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்ரயில் மார்க்கத்தில் பயணித்தவர்கள் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம். எல்லா ரயில் நிலையங்களுக்கும் அருகே கான்க்ரீட் காடுகளாய் 'அபார்ட்மெண்ட்கள்' ஏகத்துக்கும் முளைத்திருக்கும். திரிசூலம் ரயில் நிலையம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்னமும் அபார்ட்மெண்ட் கலாச்சாரம் எட்டிப் பார்க்காத இயற்கை எழில் மிகுந்த ஊர் இது.

"முதன்முதலாக இங்கே நுழைபவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். நான் இந்த ஊருக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. இங்கேயே வசிப்பதால் முன்பை விட நிறைய மாற்றங்களை காண்கிறேன். துறைமுகப் பணியாளர் குடியிருப்பு வந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் நிறையப்பேர் புதியதாக குடியேறி இருக்கிறார்கள். பெண்கள் முன்பெல்லாம் வீட்டுக்குள் அடைந்திருப்பார்கள். அல்லது கல் உடைக்கும் பணிக்கு போவார்கள். இப்போது அவர்கள் ஊரைத்தாண்டி ஏற்றுமதி ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு வேலை செய்யப் போகிறார்கள். எங்கள் ஊரும் மாறிவருகிறது – அதேநேரம் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை" என்கிறார் திலகவதி ராமச்சந்திரன். இவர்தான் திரிசூலம் ஊராட்சிமன்றத் தலைவி. குடிநீர், கான்க்ரீட் சாலைகள், மின்விளக்குகள் என்று அடிப்படைத் தேவைகளில் 100 சதவிகிதம், இக்கிராமம் தன்னிறைவு பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

குவாரிகள் நிறைய இயங்குவதால் கிராமத்தவர்களில் நிறைய பேர் கல் உடைக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். இந்த வேலையை செய்யவே மூன்று தலைமுறைக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் இங்கு அதிகம். 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்கள்தான். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5997 பேர் திரிசூலத்தில் வசிக்கிறார்கள். இப்போது மக்கள்தொகை நான்கு, ஐந்து மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று ஊராட்சி உதவியாளர் சுப்பையா சொல்கிறார்.

ஊரின் மத்தியில் அமைந்திருக்கும் கோயில்தான் இந்த ஊரின் பெயருக்கே காரணம். திரிசூலநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட புராதனமான கோயில். ஊர்ப்பெரியவர்கள் சிலர், இக்கோயில் அதைவிடப் பழமையானது. 1500 வருடப் பாரம்பரியம் கொண்டது. குலோத்துங்கச் சோழனால் புனரமைப்புதான் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். 'வாழும் கலை' ரவிசங்கர் சென்னை வரும்போதெல்லாம், விமான நிலையத்திலிருந்து நேரே இக்கோயிலுக்கு வந்துவிடுவாராம்.

ஊரைத்தவிர்த்துப் பார்த்தால் திரிசூலம் ஒரு டூரிஸ்ட் பாயிண்ட். சென்னைவாசிகள் பணிச்சுமையில் இருந்து வார இறுதிகளில் 'ரிலாக்ஸ்' ஆக ஏதுவான இடம். பெரும்பாலான தமிழ்ப்பட க்ளைமேக்ஸ்களில் திரிசூலம் மலைகளை நீங்கள் கண்டிருக்கலாம். மலையிலிருந்து காரை உருட்டிவிட வேண்டுமா? மலைமுகட்டில் தொங்கும் நாயகியை, நாயகன் வில்லன்களோடு சண்டையிட்டு காப்பாற்ற வேண்டுமா? வேறு வழியே இல்லை. சினிமாக்காரர்கள் இங்குதான் வந்தாக வேண்டும்.

சினிமாக்காரர்கள் மட்டுமல்ல. பேச்சாளர்களும் திரிசூலம் மலைக்கு படையெடுக்கிறார்கள். 'மேடை பயம்' (Stage fear) போக்க இங்குதான் பயிற்சி எடுக்கிறார்கள். மலை உச்சிக்குச் சென்று ஏதேனும் பாறைமுகடுகளில் நின்று கொள்கிறார்கள். எதிரே 180 டிகிரி கோணத்தில் தெரியும் சென்னை மாநகரை, லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாய் நினைத்து, "கலைஞர் அவர்களே", "புரட்சித்தலைவி அவர்களே" என்று கத்திப்பேசி பேச்சுப்பயிற்சி பயில்கிறார்கள். டிரைனிங்கில் இருக்கும் மதப்பிரசங்கர்களும் இதே டெக்னிக்கை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சென்னையில் வசிக்கும் மலையேற்ற வீரர்களுக்கும் திரிசூலம் முக்கியமான பயிற்சி பாயிண்ட். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இங்கே மலையேற்றம் செய்ய வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.

மலை மீதிருந்து சென்னை விமான நிலையத்தை முழுமையாக பறவைப் பார்வையில் பார்த்து மகிழ முடியும். விமானங்கள் மேலெழும்புவதையும், கீழிறங்குவதையும் உயரமான ஓரிடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே அலாதியான அனுபவம். ரயில், சாலை, விமானம் என்று, சென்னையின் மூன்றுவித போக்குவரத்துப் பரிமாணங்களை இங்கிருந்தே காணலாம். நன்கு வெயில் அடிக்கும்போது கிழக்கு நோக்கி உற்றுப் பார்த்தால் கடல்கூட தெரியும்.

மலையுச்சியில் ஒரு மிகப்பழமையான மசூதி இடிபாடடைந்த நிலையில் இருக்கிறது. இருப்பினும் இங்கே மிலாதுநபி பெருவிழா விமரிசையாக நடைபெறுவதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு முருகர் கோயிலும் உண்டு. சுற்றுலாப் பயணிகள் சென்று வர வசதியாக மலையுச்சிக்கு கான்க்ரீட் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கார்களும், வேன்களும் கூட இப்பாதையில் செல்ல முடியும். மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை 5.00 மணிக்குப் பிறகு இம்மலை மீது இருப்பது பாதுகாப்பானதல்ல.

இது மாதிரியான 'மசாலா' அம்சங்களை தவிர்த்துப் பார்த்தால், பாதுகாப்பு அடிப்படையிலும் திரிசூலம் மலையின் பங்கு முக்கியமானது. ஸ்கை மார்ஷல் படையினர் சென்னை விமான நிலையத்தை இங்கிருந்து தொலைநோக்கி மூலமாக கண்காணிக்கிறார்கள். ஓடுபாதையில் ஏதேனும் விஷமம் செய்யப்பட்டிருந்தால் கூட இங்கிருந்தே கண்டுபிடித்து விட முடியுமாம்.

இன்னொரு வகையிலும் திரிசூலம் சென்னையின் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெறுகிறது. சென்னையின் மிக உயரமான இடம் திரிசூலம் மலை. தாழ்வான இடம் இங்கிருக்கும் குவாரி பகுதிகள். அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்ட செய்தி இது.

இனிமேல் சென்னையில் வசிக்கும் நெல்லைக்காரர்கள், ஊர் ஏக்கம் வந்தால் ஒரு நடை திரிசூலத்துக்கு போய்விட்டு வந்துவிடலாம். நெல்லையையே கண்ணால் பார்க்காதவர்களும் வந்துப் பார்க்கலாம். தவறில்லை. பாஸ்போர்ட், விசாவெல்லாம் கேட்கமாட்டார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

FLASH NEWS : நித்யானந்தாவின் மானநஷ்ட ஈடு வழக்கு

பிட்டு வீடியோ புகழ் நித்தியானந்தர்,  எழுத்தாளர் ஒருவருக்கும், பத்திரிகை ஒன்றுக்கும் 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்ததாக கேள்விப்பட்டோம். இன்னும் யார் யாருக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு இதுபோன்ற வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிற தகவல் முழுமையாக தெரியவில்லை.

நித்யானந்தாவுக்கு என்ன மானம் இருக்கிறது, அதற்கு இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்ற குழப்பம் ஏற்படுகிறது.

தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ துண்டுப்படம் உண்மையானது என்று தடய அறிவியல் துறையும் கூட உறுதி செய்துவிட்டதாகவே தெரிகிறது. மோசடியை வெளிக்கொணர்ந்தவர்களுக்கு மோசடியாளன் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பும் கொடூரம் இந்த நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும், ஊடகங்களுக்கும் தார்மீக ஆதரவு கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

நித்யானந்தரின் மோசடிகளை அறிந்துகொள்ள சாருநிவேதிதா எழுதிய 'சரசம், சல்லாபம், சாமியார்' நூலினை வாசிக்க பரிந்துரைக்கிறேன். வெளியீடு உயிர்மை. இணையம் மூலமாக இந்த நூலை இந்தச் சுட்டியை சொடுக்கி வாங்கலாம்.

18 ஜனவரி, 2011

அஜால் குஜால் Undie Party


ஐரோப்பாவே அரண்டு போய் கிடக்கிறது.

குளிர்காலம் இவ்வளவு சூடாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இதுவரை தொடங்கியதே இல்லை.

தேசிகுவல் என்பது ஸ்பெயினைச் சேர்ந்த ஓர் ஆயத்த ஆடை நிறுவனம். தேசிகுவல் என்ற ஸ்பானிய சொல்லுக்கு 'அது இது இல்லை' என்று பொருளாம். 1984ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உடை விஷயத்தில் கொஞ்சம் 'தாராளமான' வடிவமைப்புகளை வழங்குவதில் கில்லாடி.

ஐரோப்பா முழுக்க நன்கு கால் விரித்துவிட்ட இந்நிறுவனம், ஆசியாவிலும் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. முன்னதாக சில காலம் முன்பு அமெரிக்காவில் காலூன்றத் திட்டமிட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்கள் ஏராளம். என்ன செய்து இளசுகளை கவரலாம் என்று நகம் கடித்து யோசிக்கத் தொடங்கினார்கள் தேசிகுவல் அதிகாரிகள்.

அஜால் குஜாலான ஆசாமி யாரோ ஒருவரது சிந்தையில் திடீரென பல்பு எரிந்தது. Undie Party என்றொரு ஆண்மீக ஐடியாவைப் பிடித்தார். Undies என்ற சொல்லுக்கு பெண்களின் கீழாடை என்று பொருள். அமெரிக்காவில் Undie Party சக்கைப்போடு போட, ஐரோப்பாவிலும் இக்கலாச்சாரம் திகுதிகுவென பரவி வருகிறது. அமெரிக்கர்கள் மறுபடியும் எப்போ பார்ட்டி? எப்போ பார்ட்டி? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரும் பார்ட்டி கோலாகலங்களில் தங்களையே மெய்மறந்துவிடுகிறார்கள். 

ஐரோப்பாவின் இளசுகள் இப்போது தங்கள் ஊரிலும் தேசிகுவல் கடை திறக்காதா? Undie party நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவுக்கு இக்கலாச்சாரம் வந்து, சரவணா ஸ்டோர்ஸில் இப்படி ஒரு பார்ட்டி நடந்துவிடுமோ என்று இனம்புரியாத இன்பமான பீதி இப்போதே நமக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. ரங்கநாதன் தெரு நல்ல நாளிலேயே நாயகம். இம்மாதிரி ஒரு பார்ட்டி நடந்தால் என்ன கதிக்கு ஆளாகும்? பாலியல் பசுமைக்கு பெயர்போன ஐரோப்பாவே Undie காய்ச்சலில் ஆடிப்போயிருக்கிறது. காய்ந்துபோன தேசமான இந்தியாவில் இது எடுபடாதா என்ன?

13 ஜனவரி, 2011

மானமுள்ள ஒரே கவிஞன்!

தோழர்களே!

கவிஞர் காத்துவாயன் (முன்பு குமுதத்தில் கவிதை எழுதியவரா என்று தெரியாது) அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக நமது லக்கிலுக் ஆன்லைன் டாட் காமுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு முன்பாக சி.என்.என். டாட் காம், பி.பி.சி. டாட் காம் என்று பல டாட் காம்களுக்கு இதே கடிதத்தை எழுதி அவர்கள் பிரசுரிக்காமல் துப்பி திருப்பி அனுப்பிவிட்டதால் கடைசியாக தூர்தர்ஷன் டாட் காமுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கும் இந்த கடிதத்தை ஒத்துக் கொள்ளாததால் கடைசியாக நமக்கு அனுப்பி பிரசுரிக்க சொல்லி கேட்டிருக்கிறார். கவிஞர் காத்துவாயனுக்கு லக்கிலுக் ஆன்லைன், அவரது விடா முயற்சியைப் பாராட்டி, தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

இனி காத்துவாயனின் கடிதம் :


அன்புக்குரியவர்களே!

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் கவிதை சங்கமம் ஒன்று நடக்கும். அவர்கள் கூப்பிடாமல் நானே போய் அங்கே யார் கையிலாவது காலிலாவது விழுந்து கவிதை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னை ஊர் உலகம் கவிஞன் என்று ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, நான் ஒப்புக் கொள்கிறேன். எனவே அதே இறுமாப்போடு அவர்கள் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும், கண்டாலும், கண்டுகொள்ளாவிட்டாலும் என் பணி கவிதை பாடி கிடப்பதே என்று பாடி வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டும் என்னை யாரும் அழைக்கவில்லை. கலந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் சென்னை வரை வந்து போக காசு இல்லை. எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதாய் நீங்கள் புரிந்துகொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் மக்களே. இதை நான் சுயவிளம்பரத்துக்காக செய்வதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இதை என் பதிவில் போட்டிருப்பதாலோ, ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கிடைக்கும் கேப்பில் எல்லாம் போட்டிருப்பதாலோ நீங்கள் அப்படி நினைத்துவிட வேண்டாம்.

நான் புறக்கணிப்பதால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் இல்லை. நான் புறக்கணிக்கா விட்டாலும் ஒன்றும் சீரும் சிறப்புமாக நடந்தேறிவிடப் போவதில்லை. வழக்கம்போல நான் கவிதை எழுதி என்னுடைய வலைப்பூவில் பதிந்து அதை நானேதான் படித்துக் கொண்டிருக்கப் போகிறேன். யாரும் என் கவிதைகளை படித்து புரிந்து பின்னூட்டம் போடப்போவதில்லை. இருந்தாலும் இதை ஒரு எதிர்ப்பாக நீங்களெல்லாம் பதிவு செய்துக்கொண்டு, என்னை மனச்சாட்சியும் மானமும் உள்ள தமிழனாக, கவிஞனாக போற்றவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்
மானமுள்ள கவிஞர் காத்துவாயன்


அன்பிற்குரிய கவிஞர் காத்துவாயர் அவர்களே!

இனி உங்கள் பெயரை 'வாயன்' என்று 'ன்' போட்டு எவனாவது மரியாதைக்குறைவாக எழுதினால் அவனுடைய மென்னியை முறிக்க லக்கிலுக் ஆன்லைன் கொலைவெறிப்படை தயாராக இருக்கிறது. நமது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் உருப்படியாக எதையும் இதுவரை பிரசுரித்ததில்லை. இனியும் பிரசுரிக்கும் எண்ணமும் இல்லை. உருப்படாத இந்த வலைப்பூவில் உங்களுடைய உருப்படாத கவிதைகளை இட சித்தமாக இருக்கிறோம். பின்னூட்டங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாமே வெவ்வேறு பெயர்களில் பாராட்டியும், திட்டியும் எழுதி கணக்கு காட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு கவிதை எழுத பணம் மட்டும் கொடுக்க இயலாது. உங்கள் கவிதைகளை படிக்கும் துன்பகரமான உணர்வுகளுக்கு நீங்கள்தான் லக்கிலுக் ஆன்லைனுக்கு ஏதோ பார்த்து போட்டு கொடுக்க வேண்டும்.

12 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள் யாது யாது' என்று கேட்டால் டக், டக்கென்று லிஸ்ட்டை எடுத்து விடலாம். எனக்குப் பிடித்த இலக்கியவாதி பதலக்கூர் சீனிவாசலு என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்குப் பிறகும் இதுமாதிரி ஆடம் டீஸிங் பண்ணிக் கொண்டிருந்தால் என்னத்தைச் செய்வது?

இருந்தாலும், நம் சிற்றறிவுக்கு எட்டிய சில பரிந்துரைகள் :

புத்தகக் காட்சிக்குள் நேரே நுழைந்து விடாதீர்கள். பச்சையப்பா கல்லூரியை ஒட்டிய பிளாட்பாரத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 'உள்ளே' நூறு, நூற்றி ஐம்பதுக்கு விற்கப்படும் புத்தகங்களை இங்கே வெறும் இருபது, முப்பதுக்கு புத்தம் புதுசாக வாங்க முடியும். உதா : அருளன் எழுதிய லங்காராணி. Haunted house என்கிற வித்தியாச வடிவமைப்பு கொண்ட ஐரோப்பிய குழந்தைகள் புத்தகம் ஒன்றினை வெறும் முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். லேண்ட்மார்க்கில் இதன் ரேட் ஐநூறுக்கும் மேலாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'பைண்டிங்' செய்யப்பட்ட பழைய காமிக்ஸ்கள் கூட கிடைக்கும். பிரேம்-ரமேஷின் நாவல் ஒன்று இங்கே சல்லிசாக கிடைத்தது. உள்ளே அதன் விலை நூற்றி இருபதோ, நூற்றி ஐம்பதோ. ஒரு முன்னூறு ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்ய முடிந்தால், குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் உங்கள் பையில் நிச்சயம்.

கண்காட்சிக்கே நுழைவுக் கட்டணம் ரூ.5 (இந்த வார புதிய தலைமுறையின் விலை ரூ.10. அதில் இலவச கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்). ஆனால் டூ-வீலர் பார்க்கிங்குக்கு ரூ.10. டூ-வீலர் விடும்போது டோக்கன் வாங்க வேண்டாம். ரிடர்னில் கேட்டால் பத்து ரூபாய் நோட்டு ஒன்றினைக் கொடுக்கலாம். கொஞ்சம் தில்லு இருப்பவர்கள் கைச்சின்னம் மாதிரி கை-யை காட்டினாலேயே போதும். ஏதோ பாஸ் இருக்கிறது என்று நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அல்லது 9 மணிக்கு மேல் வண்டியை எடுத்து வந்தால் டோக்கன் வாங்க ஆளே இருக்காது. இந்த 10 ரூபாயை மிச்சம் செய்தால், பாரதி புத்தகாலயத்தில் இரண்டு புத்தகம் கூடுதலாக வாங்க முடியும்.

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளை நுழைந்ததுமே வாங்கிவிடுவது உத்தமம். 375 ரூ மதிப்புள்ள புத்தகத்தை கலைஞர் புண்ணியத்தால் ரூ.300க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்து சதவிகித புத்தகக்காட்சி தள்ளுபடி போக ரூ.270/-க்கு கனமான, ஹார்ட் பவுண்டிங் அட்டை போடப்பட்ட பொக்கிஷம் கிடைக்கிறது. பிரேமா பிரசுரத்தில் மதனகாமராஜன் கதை, விக்கிரமாதித்யன் கதை போன்ற உருப்படியான நூல்கள் எளிமையான தமிழில் கிடைக்கும். இங்கே 1950களின் கிளாசிக் மர்மநாவல்களும் உண்டு. அரு.ராமநாதனின் நூல்கள் நிஜமாகவே முக்கியமானவை.

வானதியில் வாண்டுமாமா நூல்கள் நிறைய கிடைக்கும். மர்மமாளிகையில் பலே பாலு செமத்தியான காமிக்ஸ் கலெக்‌ஷன் (விலை ரூ.150). சாண்டில்யனின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மணிமேகலையிலும் கூட அப்புசாமி காமிக்ஸ் கிடைக்கும். பூம்புகாரில் பழைய புஷ்பாதங்கதுரை மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் நூல்கள் சல்லிசான விலையில் கிடைக்கிறது. உதாரணம் : சிறைக் கதைகள், ரூ.15.90. மீனாட்சி நிலையத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நூல்களை (உதா : விக்ரம்) பத்து, பண்ணிரெண்டு ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதே விலையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் அந்தக் காலத்து சிறுகதைத் தொகுப்புகளையும் இங்கே வாங்கலாம்.

சாகித்திய அகாதமியில் நிறைய இலக்கிய நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். வாசிக்க தம் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களை கூட (இந்த சைஸ் புத்தகங்கள் மற்ற பதிப்பகங்களில் மினிமம் ரூ.75) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் தள்ளி விடுகிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இராமாயணம், மகாபாரதம் வாங்கியே ஆகவேண்டுமென்றால் ராஜாஜி எழுதியவற்றை வாங்கலாம் (வானதி என்று நினைவு). மலிவு விலையில் வேண்டுமானால் விஜயபாரதத்தில் சித்பவானந்தர் எழுத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் (ஈச் ரூ.25 ஒன்லி). சத்திய சோதனை, அக்னிச் சிறகுகள் எல்லாம் ரூ.30 ரேஞ்சில் பல ஸ்டால்களில் கிடைக்கிறது.

எந்த ஒரு புத்தகத்தையுமே வாங்குமுன் ஒன்றுக்கு நான்கு முறை யோசியுங்கள். கடந்த பத்தாண்டுகளில் லட்ச ரூபாய்க்கு மேலாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அவற்றில் இருபத்தைந்து சதவிகித புத்தகங்களை முழுமையாக வாசித்திருந்தாலே அதிகம். தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலாவது வெடித்துத் தீர்க்கிறோம். புத்தகங்களை என்ன செய்வது? நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்று நினைக்கின்ற புத்தகங்களை வாங்கலாம். ஒரு எழுத்தாளர் ரொம்ப பிரபலமாக இருக்கிறார் என்று நினைத்து அவரது புத்தகங்களை வாங்குவது மடத்தனம். சாம்பிளாக அவரது ஓரிரு சிறுகதைகளை படித்துப் பார்த்து, உங்களுக்கு 'செட்' ஆனால் மட்டும், அவரது நூல்களை வாங்கலாம். துறைசார்ந்த நூல்கள் வாங்கும்போதும் கவனம் தேவை. நீங்கள் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில், யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' வாங்கினீர்களேயானால், உங்களைப் போன்ற அம்மாஞ்சி உலகத்திலேயே கிடையாது. நண்பர்கள் எழுதினார்கள், நண்பர்கள் பரிந்துரைத்தார்கள் என்று முகதாட்சண்யத்துக்காக புத்தகம் வாங்குவதை தவிருங்கள். வாசிப்பு முக்கியம்தான். அதைவிட உங்களுடைய ஒவ்வொரும் காசும், உங்களுக்கு ரொம்ப முக்கியம். நான் கவிதைகளையே படிப்பதில்லை. பாரதியார் கவிதைகளில் தொடங்கி, நிறைய கவிதைத் தொகுப்புகளை காரணமேயில்லாமல் கடந்தகாலங்களில் காசுகொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன். இது எனக்கு தேவையா? உங்களுக்கு எதை படிக்க முடியுமோ, அதை வாங்கினா போதும் சார்.

ஓக்கே, பத்து நூல்கள் பரிந்துரை. நான் சொல்வதற்காக இவற்றை நீங்கள் வாங்கியாக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. இந்த நூல்களை நான் வாசித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்புக் காரணமும் இந்தப் பரிந்துரைக்கு இல்லை. உங்கள் பர்ஸுக்கு பெரியதாக வேட்டு வைத்துவிடக்கூடாது என்கிற பாச உணர்வும் இந்த பரிந்துரையின் பின்னால் ஒளிந்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்சம் உருப்படியான புத்தகங்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் கூட. இந்தப் புத்தகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் வாசிக்க முடியும் என்பதால் 'துட்டுக்கேத்த தோசை' என்கிற வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

1. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதைய்யர்

2. பாரதியார் கதைகள், கட்டுரைகள்

3. என் கதை - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

4. எஸ்.ஏ.பி - ஜ.ரா.சு, புனிதன், ரா.கி.ர

5. ஜெயமோகன் குறுநாவல்கள்

6. கூனன் தோப்பு & சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

7. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் - சாரு நிவேதிதா

8. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்

9. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்

10. சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ்



11 ஜனவரி, 2011

சீமான்!

நாற்பது கோடியாரின் பாணியில் அம்மாவின் கூடாரத்துக்கு செந்தமிழன் சீமான் வந்திருக்கிறார். அம்மாவின் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் ஏற்கனவே அங்கிருப்பவர்களுக்கு தெரியும். ஆனானப்பட்ட தான்னா பான்னாவே ஒரு நாளைக்கு நூற்றியிட்டு முறை கொடநாடிருக்கும் திசை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்துக் கொண்டிருக்கிறாராம். செந்தமிழனுக்கும் யாராவது இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமில்லையா?

தினமும் 'தண்டால்' எடுத்துப் பழகுவது உத்தமம் செந்தமிழரே. டப்பென்று அம்மாவை எங்காவது பார்த்தால் விழுந்து எழ சிரமப்பட வேண்டியதில்லை அல்லவா? முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனைப் பாருங்கள். எவ்வளவு பெரிய மீசை வைத்திருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் சங்கோஜமா படுகிறார்?

திருப்பி அடிப்பேன், கையை முறுக்குவேன், காலை முறுக்குவேன் என்றெல்லாம் இனிமேல் சின்னப்பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கப்படாது. தப்பு. தப்பு. அம்மாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுப்பவர்கள் இனி சீமானுக்கும் அவ்வப்பொழுது எழுதிக் கொடுப்பார்கள். அதை மேடையிலோ, பத்திரிகையாளர் முன்னிலையிலோ அப்படியே ஒப்பித்தால் போதுமானது. என்றாவது திடீரென காலைச்செய்திகளில் 'தீயசக்திக்கு சீமான் எச்சரிக்கை!' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும். அதை நாம் தான் சொன்னோமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யப்படாது. ஏற்கனவே வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்டு கோஷ்டிகள் இதைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை. அந்த வேலையை எல்லாம் அம்மாவுக்கு அறிக்கை எழுதித்தருபவர் பார்த்துக் கொள்வார்.

அதென்ன சார் அசிங்கமா கருப்புச்சட்டை? ஓ.பி.எஸ்.ஸோ, ஜெயக்குமாரோ, இப்படியா சட்டை போடுகிறார்கள்? வெள்ளை வெளேரென்று 'பளிச்'சுனு இருக்க வேண்டாமா? நீங்கள் சினிமாக்காரர் இரட்டை இலை சின்னம் பொறித்த பச்சை சட்டை போடலாம். சேகர்பாபு மாதிரி சபரிமலைக்கு மாலைகூட போட்டுக்கலாம்.

அசடு மாதிரி பெரியார், எம்.ஜி.ஆருன்னு முன்னைமாதிரி பேசிக்கிட்டு திரியாதிங்க. வைகோவை பாருங்க. அம்மாவை தவிர வேற யாரை பத்தியாவது பேசுறாரா?

முன்பெல்லாம் நீங்கள் வெறும் சினிமாக்காரர். யாராவது ஸ்டில் போட்டோகிராபரை வைத்து பிரபாகரன் மாதிரி, சேகுவேரா மாதிரி, அமெரிக்க சுதந்திரச்சிலை மாதிரியெல்லாம் போஸ் கொடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டினீர்கள். இனிமே அது மாதிரி ஒட்டுனீங்கன்னா உங்க வாலை அம்மா ஒட்ட நறுக்கிடுவாங்க. பவ்யமா அம்மாவுக்கு பின்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி கிராஃபிக்ஸில் ஒரு போட்டோவை உருவாக்கி வெச்சுக்கங்க. அம்மா பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கவும், விளம்பரம் கொடுக்கவும் உதவும். அம்மா பிறந்தநாள் என்றதுமே நினைவு வருகிறது. நீங்களும் அலகு குத்தி தேர் இழுக்கணும் சாமியோவ். பேக்கு பத்திரம்.

இனிமேல் மேடையில் பேசும்போது புலி, கிலியென்று தெரியாமல் கூட பேசி அம்மாவை சீற்றப்படுத்தி விடாதீர்கள் சீமான். ஈழத்தாய் இதையெல்லாம் விரும்புவதில்லை. உங்களுக்கும், வைகோ மற்றும் நெடுமாறனுக்கும் மட்டும் தெரிந்த "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" ரகசியத்தை அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ சொல்லிவிடாதீர்கள். மறுபடியும் இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் போடணும்னு ஈழத்தாய் தீர்மானம் போடவேண்டியிருக்கும். அம்மாவைப் பொறுத்தவரை "ஈழமா? அது எங்கே இருக்கு?". நீங்கபாட்டுக்கு ஈழம், கீழம்னு எதையாவது உளறி கிளறி தள்ளிடப் போறீங்க. அப்புறம் ஆத்தா 'ஆடிட்டர் ட்ரீட்மெண்ட்' எடுத்துடுவாங்க.

கடைசியா ஒண்ணு. தினமும் காலையில் எழுந்ததுமே 1008 வாட்டி 'அம்மாவே சரணம்' எழுதிடுங்க. ஆட்டம் பழகிடும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் கஷ்டமாதான் இருந்தது. இப்போ அடிச்சு ஆடுறதில்லையா?

புலியெல்லாம் பூனை ஆகிற காலமிது. நீங்கள் வெறும் எலிதானே? தேய்ந்து கட்டெறும்பாகிப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அம்மா காலில் விழும் உங்கள் தன்மான அரசியலுக்கு வாழ்த்துகள்.

10 ஜனவரி, 2011

கொண்டாட்டமான சமகாலம்!

நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வருகிறீர்கள். உங்களிடம் யாரும் கையெழுத்து வாங்குவதில்லை. உங்களைப் பார்க்க முட்டி மோதுவதில்லை. உங்கள் படைப்புகளை பாராட்டி ரத்தக் கையெழுத்திட்டு கடிதம் எழுதுவதில்லை.

ஏன்?

ஏனெனில் நீங்கள் பேயோன் இல்லை. பேயோனைப் போல பிரபலமில்லை.

பேயோனுக்கு மட்டும் ஏனித்தனை பிரபலம்?

இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் சமகால வேளையில், என்னுடைய கள்ளக்காதலியை நான் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம். சிகரெட் சாம்பலை தட்டிக் கொண்டிருக்கலாம். மதுக்கடையில் மதிமயங்கி கிடக்கலாம். இன்னும் இப்படியே சில இத்யாதி இத்யாதி 'லாம்'கள். பேயோனோ நோபல் பரிசுக்கான இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பார். குழந்தைகளுக்காக சிந்தித்துக் கொண்டிருப்பார். வண்ணத்துப்பூச்சிகளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் படைப்பது அனைத்துமே இலக்கியம்தான். குலதெய்வம் கோயிலில் கூட இலக்கியங்களைதான் படையலிடுகிறார்.

அசமகால இலக்கியவெளியில் திருவள்ளுவர் புகழ்பெற்ற துண்டிலக்கியவாதி. சமகாலத்தில் துண்டிலக்கியம் படைப்பதில் யாரும் விருப்பம் காட்டுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவள்ளுவருக்கு இலக்கிய வாரிசு யாரும் அமையவில்லை. சூனியமாக இருக்கும் இந்த வெளியில் தன்னுடைய இடத்தை துண்டு போட்டு பிடித்திருப்பவர் ஒசாகாவில் வசிக்கும் பேயோன். அவரது முதல் சமகால படைப்பான 'பேயோன் 1000' தமிழின் முக்கியமான நூல்களில் ஒன்று என பேயோனே எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் எனப்படும் சமூகவலைப்பதிவு இணையத்தளத்தில் பதியப்பட்ட துண்டிலக்கியங்கள் அச்சுவடிவம் பெறுவது முதன்முறையாக சாத்தியமானது 'பேயோன் 1000' மூலமாக மட்டுமே.

சிலபல நாவல்களை எழுதியிருப்பதாக சொல்கிறார். இதுவரை யாரும் வாசித்ததில்லை. பின்நவீனத்துவ சூழல் கோட்பாட்டின்படி ஆசிரியன் மட்டும் மரிப்பதில்லை. படைப்பும், படைப்பை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டோ வாசகர்களும் மரித்துவிடுகிறார்கள். பேயோனின் நாவல்களை கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். அவரது நாவல்களை இன்னமும் அவரே வாசிக்கவில்லை என்பதுதான் பேருண்மை. திரைப்பட வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் அவர் பணியாற்றுவதாக அவரது படைப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. ரஜினிசாரை எழுத்தில் குறிப்பிடும்போது ரஜினிசார் என்று குறிப்பிடுகிறார். எனவே நிச்சயமாக சினிமாக்காரராகதான் இவர் இருக்க முடியும். சமகால இலக்கியத்தையும், சமகால திரைப்படத்தையும் தனது இருதோள்களின் வழியாக ஹெர்குலிஸ் மாதிரி தூக்கி சுமப்பதால் சமகாலத்தில் தமிழின் தவிர்க்க முடியாத கலைஞர் ஆகிறார் பேயோன்.

ஆண்டு தொடக்கத்தில் ஒருமுறை பேயோன் சொன்னார் "இந்த ஆண்டிலும் தேதிகள் தவிர எதுவும் மாறப் போவதில்லை". ஆண்டு முடிவில் அவரது தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன்.

பேயோனின் படைப்புகள் உயர்தனித்துவம் கொண்டவை. தனித்துவம் கொண்ட படைப்புகள் என்பதால் தனியாக அமர்ந்து வாசிப்பது உசிதம். கூட்டமான இடத்தில் அமர்ந்து வாசித்தால் கூட்டத்தில் குழப்பம் வரலாம். வன்முறை வெடிக்கலாம். சமகால இலக்கிய தீவிர முன்னெடுப்புகளை முனையும் தீவிரவாதியின் படைப்புகளை வாசிப்பதால் இதுபோன்ற இயற்கை-செயற்கை சீற்றங்கள் நிகழலாம். சில பின்நவீனத்துவ எழுத்தாளர்களை வாசிக்க ஆணுறை அவசியம். பேயோனை வாசிக்க தலைக்கவசம் மட்டுமே போதுமானது.

பேயோனின் பத்திகள் சைக்கிள் அகர்பத்திகளை விட சிறந்தது. சமகால இதழியலின் சர்வநாடியையும் உணர்ந்தவர் பேயோன். அதனால்தான் சமகால பத்தி எழுத்தாளர்கள் பலரும் பேயோனைப் போன்ற பிரபலத்தை அனுபவிக்க முடிவதில்லை. குறைந்த உழைப்பில் நிரைந்த வருமானம் கிடைப்பதால் பேயோன் பத்தியும் எழுதுகிறார். க்ரியாவின் தமிழ் அகராதி என்ற நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரை வாசகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. 495 ரூபாய் விலையுள்ள 1328 பக்கங்கள் கொண்ட அந்நூலில் கதை இல்லை என்பதை கண்டறிந்து சொன்னவர் பேயோன் ஒருவர் மட்டுமே.

பேயோனைக் குறித்து நான் இவ்வளவு எழுதியும், "யார் பேயோன்?" என்கிற அபத்தமான கேள்வி உங்களுக்குள் எழலாம். மாசடைந்துப்போன கார்ப்பரேட் இலக்கியச் சூழலில், போலிகள் மிகுந்து புகழும், பணமும் குவிக்கும் காலக்கட்டத்தில் பேயோன் விளைவு தவிர்க்க இயலாதது. உங்களுக்குள்ளும், எனக்குள்ளும் கூட ஒரு பேயோன் உண்டு. பேயோன் என்பது தனிநபரல்ல. அது ஒரு இலக்கிய இயக்கம்.

அமரத்துவம் பெற்ற தனித்துவ பேயோனின் சமகால படைப்புகள் :

1. பேயோன் 1000 (ரூ. 60)
2. திசை காட்டிப் பறவை (ரூ.100)

இருநூல்களும் சமகால பதிப்பகமான 'ஆழி'யில் கிடைக்கும். சமகால முகவரி : 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி : 044-23722939. வலை : www.aazhipublishers.com

பேயோனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிமுகம் வேண்டுவோர் சமகால சமூக வலைப்பின்னல் இணையத்தளமான ட்விட்டரில் அவரை தொடரலாம் : http://twitter.com/writerpayon. பேயோனின் சமகால மின்னஞ்சல் முகவரி : writerpayon@gmail.com  சமகால இணையத்தளம் : www.writerpayon.com

சமகால சென்னை புத்தகக்காட்சியிலும் பேயோனின் சமகால படைப்புகளை ஸ்டால் எண் 340, 341-ல் வாங்கலாம்.

4 ஜனவரி, 2011

எழுத்தாளர்களை மதிக்காத தமிழ்ச் சமூகம்!

முன்பெல்லாம் சாருநிவேதிதா மட்டுமே கூவிக்கொண்டிருந்த வாசகம் "தமிழ்ச்சமூகம் எழுத்தாளர்களை மதிப்பதில்லை".

இந்தச் சரக்கு நன்கு விலைபோகிறது என்பதால், இப்போதெல்லாம் பிறந்தபோதே பேனாவோடு பிறந்த எழுத்தாளனாகட்டும், கக்கூஸ் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு எழுதிய ஒரே தகுதியால் திடீர் எழுத்தாளன் ஆகிவிட்டவனாகட்டும், ஆளுக்கு ஆள் கூவுகிறார்கள். கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்கள் ஒருபடி மேலே போய் எழுத்தாளனை சட்டமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர்களுக்கும், ச.ம.உ.க்களுக்கும் ஆலோசனை சொல்ல வைக்க வேண்டும் என்று அதிரடி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மரியாதை ராமன்களாகிய எழுத்தாளர்களுக்கு, தமிழ்ச்சமூகம் இன்னும் என்னென்ன சிறப்புகளை செய்யலாம் என்று ஒரு சின்ன ஆலோசனைப் பட்டியல் :

  • கோயில் திருவிழாக்களில் எழுத்தாளர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யலாம்.
  • தங்களது அபிமான எழுத்தாளர்களுக்கு ஞானபீடம், சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட பிரார்த்தித்து, வாசகர்கள் அலகு குத்திக்கொண்டு முப்பாத்தம்மன் கோயிலுக்கு தேர் இழுக்கலாம்.
  • இலக்கிய நிகழ்ச்சிகளில் எழுத்தாள தரிசனம் வாசகர்களுக்கு கிடைக்கும்போது, ஒரு சேவகன் முன்வந்து "எழுத்தாதி எழுத்த.. எழுத்த மார்த்தாண்ட.." என்று ஆரம்பித்து, 'பராக், பராக்' சொல்ல வைக்கலாம்.
  • சினிமாக்காரர்களுக்கு ஆஸ்கர் என்பது மாதிரி தமிழ் எழுத்தாளர்களுக்கு நோபல் ஆசை இருப்பதாக தெரிகிறது. இன்னும் எனக்கு மீதமிருக்கும் எழுபதாண்டு ஆயுட்காலத்தில் அந்த அதிசயம் நடந்தேற வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. எனவே தினகரன் சினிமா விருதுகள், விஜய் அவார்ட்ஸ் என்பது மாதிரி இவர்களுக்கு ஏதேனும் உள்ளூர் ஏற்பாடுகளை தற்காலிகமாகச் செய்யலாம்.
  • ஆலமரத்துப் பஞ்சாயத்துகளில் எழுத்தாளர்களை கவுரவ நாட்டாமைகளாக்கி தீர்ப்பு சொல்ல சொல்லலாம். எதிர் எழுத்தாளர்களும், அவரது வாசகர்களும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்து' என்று ரப்ஸர் செய்வார்கள். இது ஒன்றுதான் பிரச்சினை.
  • தேர்தலுக்காக வேட்பாளர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்வதைப்போல, எழுத்தாளர்களின் புதுப்புத்தகம் வெளிவரும்போது அழைத்துச் சென்று 'வாங்குங்கம்மா புக்கு' கோஷம் போடலாம். ஒரு லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் நன்றியறிவிப்புக் கூட்டமும் நடத்தி விடலாம்.
இதையெல்லாம் செய்துவிட்டால், எழுத்தாளனை தமிழ்ச்சமூகம் மதித்துவிட்டதாக கருதிவிடலாம். ஒரு உழவனோ, தச்சு வேலை செய்பவனோ, ஆலைத் தொழிலாளியோ, வேறு எவரோ தன்னை இச்சமூகம் மதிப்பதில்லை என்று புலம்பித் திரிவதில்லை. அன்று சினிமாக்காரர்கள் புலம்பினார்கள். இன்று எழுத்தாளர்கள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கும், இவர்களுக்கும் அடிப்படையான ஆறு வித்தியாசங்கள் கூட மறைந்துவிடும் போலிருக்கிறது.

தொழில்/வேலை என்பது அவரவர் தேர்வு. ஒழுங்காக வேலை பார்த்தவர்கள் சமூகத்தால் மதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள், எழுத்தாளர்கள் உட்பட. லட்சக்கணக்கில் ராயல்டி வாங்கும் எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் எழுத்தாளர் சொன்னார். "நான் எழுதவந்தபோது எழுத்தாளன் வீட்டு அடுப்பில் பூனை தூங்கும் என்றார்கள். மாறாக என்னுடைய எழுத்து எனக்கு தலைவாழை இலை விரித்து சோறு போடுகிறது. சோறு மட்டுமல்ல. கறிக்குழம்பு ஊற்றி பொறியல் தொடங்கி ஊறுகாய் வரை வைக்கிறது". எழுத்து அதிகபட்சம் சோறுதான் போடும். சரக்கு எல்லாம் ஊற்றாது.

யாருமே யாராலும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதால் மட்டுமே மதிக்கப்படுவதில்லை. இது நீதியானதா/அநீதியானதா என்பது வேறு விவாதம். ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா சமூகமுமே இப்படியானதாகதான் இருக்கிறது.

"எங்களால்தான் தமிழ் வாழுகிறது!" என்கிறார்கள் இவர்கள். எப்படிப்பட்ட அறியாமை இது? இப்படி மார் தட்டிக்கொள்ள இன்றைய தேதியில் முழுமையாக தகுதியானவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் மட்டுமே.

1 ஜனவரி, 2011

சரோஜா தேவி!

சில நாட்களுக்கு முன்பாக அந்த நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். "எல்லோரும் சரோஜாதேவி, சரோஜாதேவி என்று பேசிக்கொள்கிறார்களே? அப்படியென்றால் என்ன?"

எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? நமக்கு முந்தைய ஒரு தலைமுறை பீடத்தில் ஏற்றிவைத்திருந்த உயர்ந்த மதிப்பீடுகளை, அதன் மதிப்பு புரியாமல் காலுக்கு கீழே போட்டு நசுக்குகிறோமே? எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி இது? இருப்பினும் பொறுமையாக அவருக்கு விளக்கி பதில் அனுப்பினேன்.

நெஞ்சின் அடியாழத்தில் புதைந்துப்போன நினைவோடையை மீண்டும் ஒருமுறை சலசலக்க வைத்தேன். தொண்ணூறுகளுக்கு முன்பான தலைமுறை எவ்வளவு சீரும், சிறப்போடும் வாழ்ந்திருக்கிறது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' வராத அக்காலத்திலேயே, அதற்கு மாற்றாக எவ்வளவு அச்சு ஊடகங்கள் அவர்களுக்கு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது? விருந்து, மருதம், திரைச்சுவை, வெண்திரை, செக்ஸ் லைப், வாலிபம் என்று எத்தனை எத்தனை இதழ்கள்? எவ்வளவு கதைகள்? உயிர்ப்போடும், துடிப்போடும் வாழ்ந்த தமிழ் சமூகம், பாழாய்ப்போன உலகமயமாக்கலால் தனது பாரம்பரிய பாலியல் அடையாளங்களை இன்று இழந்துவருகிறது.

இன்றைய இளைஞன் பாலியல் புரிதலுக்காக இணையத்தை மேய்கிறான். பர்மாசந்தையில் குறுவட்டு வாங்குகிறான். இதைத்தவிர்த்து வேறென்ன வாய்ப்பு அவனுக்கு வழங்கப்படுகிறது? ஜோதி, பானு போன்ற திரையரங்குகளில் கூட இப்போது துண்டுப்படங்கள் போடப்படுவதில்லை. துண்டுக்குப் பேர் போன ஷகிலாவே, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அண்ணாசாலை சுரங்கப்பாதைக்கு அருகே 'சரோஜாதேவி' கிடைப்பதில்லை.

இணையத்திலும், குறுவட்டிலும் அப்பட்டமாக அனைத்தும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கு நம் மண்சார்ந்த தனித்தன்மை கிஞ்சித்தும் இல்லையே? கிளுகிளுப்புக்கு கூட அயல்நாடுகளை சார்ந்திருக்கும் அவலநிலை இன்றைய தமிழனுக்கு. அய்யகோ தமிழா. ஏனிப்படி தரம் தாழ்ந்தாய்? 'மண்சார்ந்த தனித்தன்மை' என்ற சொல், உங்களை குழப்பலாம். அது ஒன்றும் பெரிய காமசூத்திரமில்லை. "என் பெயர் ரமா. வயது 18. பார்ப்பதற்கு கடலோரக் கவிதைகள் ரேகா மாதிரி இருப்பேன்" என்று அந்தக் காலத்து 'மருதம்' கதைகள் தொடங்கும். இதற்கு நிகரான தமிழ்த்தன்மையை இன்றைய குறுவட்டுகளும், இணையமும் தருகிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று நாற்பதைத் தாண்டியவர்களுக்கு, அவர்களின் இளமைப் பருவத்தில் கிடைத்த வீரியம், அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா? மாறாக எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டிவிடும் அயல் கலாச்சாரம், நம் இளைஞர்களுக்கு முழுமையாக, படிப்படியாக கிடைக்கவேண்டிய கிளுகிளுப்பின் கிறுகிறுப்பை கிஞ்சித்தும் கிட்டாமல் செய்துவிடுகிறது. சிட்டுக்குருவி புகழ் டாக்டர் கூட செத்துப்போய் விட்டாராமே?

எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அக்காலத்தில் 'சரோஜா தேவி' தயார் ஆனது தெரியுமா?

'கர்னாடகா பதிப்பகம், பெங்களூர்' என்று அச்சிடப்பட்டிருந்தாலும் எல்டாம்ஸ் ரோடிலும், ராயப்பேட்டையிலும்தான் சரோஜாதேவி பெரும்பாலும் அச்சிடப்பட்டது. சரோஜாதேவி என்ற பெயர் ஒன்றே போதும், தரம் எளிதில் விளங்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர் என்றில்லாமல், இவ்வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல பதிப்பாளர்களும் 'சரோஜா தேவி' என்கிற பெயரை, அவரவர் படைப்புகளை தாங்கிவந்த புத்தகங்களுக்கு சூட்டினார்கள்.

ஏன் இந்த குறிப்பிட்ட பெயர்? பானுமதி என்றோ, டி.ஆர்.ராஜகுமாரி என்றோ இந்த செவ்விலக்கியப் பிரதிகளுக்கு ஏன் பெயர் சூட்டப்படவில்லை?

ஹரிதாஸ் காலத்தில் பாலியல் வறட்சியால் வறண்டுப்போன சமூகம் நம் சமூகம். படத்துக்கு 60 பாட்டுகள் இருந்தாலும், முதிர் கன்னிகளான கதாநாயகிகள் ஒரே ஒரு அங்குலம் இடுப்பை கூட காட்டாமல் (காட்டியிருந்தாலும் சகித்திருக்காது) சவுதிஅரேபியாத் தனத்தோடு திரைகளில் இயக்கப்பட்டார்கள். இந்த வரலாற்று பாலியல் சோகம் போக்கப்பட்ட காலத்தின் குறியீடுதான் 'சரோஜாதேவி'.

பழுப்பு வண்ண காகிதம். தேவைப்பட்டால் இடையிடையே படங்கள். கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட அந்த நிழற்படங்களில் என்னென்ன சமாச்சாரங்கள் ஒழுங்காக தெரிகிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே, பல பாக்யராஜ்கள் அந்தக் காலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டார்கள். 70களில் இருவண்ணத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள். 80களின் இறுதியில் கவர்ச்சிகரமான வண்ண அட்டைகளும் மட்டமான வழுவழு கண்ணாடி லேமினேஷனில் போடப்பட்டது உண்டு.

கதைகளை எழுதியவர்கள் ஒரே ஆளா பலரா, யார் யாரென்பது 20ஆம் நூற்றாண்டின் விடைத்தெரியா கேள்விகளில் ஒன்று. நமக்குத் தெரிந்து பலரும் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் சிலர் பிற்காலத்தில் சினிமாவில் கதையாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், பிரபல எழுத்தாளர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். எல்டாம்ஸ் ரோடு அச்சகத்துக்குப் போய் விறுவிறுவென்று ஒரு நாற்பது பக்க நோட்டில் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தால் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் சரக்கின் கிளுகிளுப்புத் தன்மைக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்குமாம். சுஜாதாவோ, பாலகுமாரனோ கூட அந்த காலத்தில் சம்பாதிக்காத பெருந்தொகையை சில சரோஜாதேவி எழுத்தாளர்கள் சம்பாதித்திருக்கிறார்கள்.

கதை பெரும்பாலும் பெண் எழுதுவதைப் போன்ற மொழிநடையில் இருக்கும். ஏனெனில் ஆண்களின் அனுபவங்களை வாசக ஆண்மனம் சகித்துக் கொள்ளாது. கதைக்கு எதுகை மோனையோடு கூடிய 'நச்'சென்ற தலைப்பு அவசியம். உதாரணம் : பாலைக் குடிச்சுக்கோ, பழத்தை உட்டுக்கோ.

இந்தப் புத்தகங்களின் வினியோகம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு உலக ஆச்சரியம். மருதம், விருந்து போன்ற இடைபாலியல் நிலை இதழ்களை பேருந்துநிலைய பெட்டிக்கடைகளில் விற்கலாம். ஆனால் சரோஜாதேவி போன்ற நேரடி கலகப் புத்தகங்களை விற்பவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையிருந்தும், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் இவை விற்கப்பட்டிருக்கின்றன. வாசிக்கப்பட்டிருக்கின்றன. சரோஜாதேவி வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம வலைப்பின்னல் இருந்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கூட அண்ணாசாலையில் பழைய சரோஜாதேவி புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. விலைதான் கொஞ்சம் அதிகம். 60 ரூபாய். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதாவது காமிக்ஸ் புக் இருக்காண்ணா?" என்று கேட்டோமானால் கடைக்காரர் புரிந்துகொள்வார். "படம் போட்டு ஓணுமா இல்லைன்னா வெறும் கதையா?" என்பார். வெறும் கதை என்றால் சரோஜாதேவி. படம் போட்டவை ஃபாரின் கந்தாயங்கள். அவை விலை இன்னும் கொஞ்சம் கூடுதல்.

இப்போதும் அண்ணாசாலையில் கடைகள் இருக்கின்றன. வாலிப நிலா, சினிக்கூத்து, வண்ணத்திரைதான் விற்கிறார்கள். சரோஜாதேவி இலக்கிய உற்பத்தி தேக்கநிலை அடைந்து, இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சரோஜாதேவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது.

எது எப்படியோ. ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் காலத்திலும் வாசக அனுபவ அடிப்படையில் சரோஜாதேவியை, சபீதாபாபி வென்றுவிடவே முடியாது.