நக்சல்பாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நக்சல்பாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 நவம்பர், 2009

நக்சல்பாரிகள் - இன்றைய நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!
ஒன்பதாவது பாகம் :நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!


எமர்ஜென்ஸி யாரை பாதித்ததோ இல்லையோ, நக்சல்பாரிகளையும், அவர்கள் இயக்க வளர்ச்சிகளையும் மிகக்கடுமையாக மட்டுப்படுத்தியது. எமர்ஜென்ஸிக்கு பிறகான ஜனதா கட்சியின் கூட்டு அரசாங்கம் விசாரணையின்றி நாடெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நக்சல்பாரிகளை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்குப் பின்னணியில் பல்வேறு மனித உரிமை குழுக்களின் குரல் இருந்தது.

கடந்த கால கசப்பான அனுபவங்கள் நக்சல்பாரிகளை புடம் போட்டிருந்தது. பல்வேறு இயக்கங்களும், இயக்கத் தலைவர்களும் ஒன்று கூடி தாங்கள் ஏற்கனவே சென்று கொண்டிருந்த பாதையை மறுபரிசீலனை செய்தனர். ஒரு சில கட்சிகள் தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த அழித்தொழிப்பு முதலான நடவடிக்கைகளிலிருந்து தடம்மாறி பாராளுமன்றத்தில் மக்கள் ஆதரவோடு பிரதிநிதித்துவம் செய்ய முடிவெடுத்தார்கள். பீகாரில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) போன்றவர்கள் இவர்கள்.

இன்னொரு தரப்போ தங்களது வழக்கமான கொரில்லா போர்முறையை தொடர முடிவெடுத்தது. ஆந்திராவில் பிரபலமான மக்கள் போர்க்குழு, பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய குழுக்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நக்சல்பாரிகள் இருவேறு பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்புமே அவ்வப்போது அமையும் அரசுகளை எதிர்த்தே அரசியல் செய்து வந்தாலும், வழிமுறைகள் வேறு வேறு. இரு தரப்பும் கூட பல பிரச்சினைகளில் மூர்க்கமாக மோதிக்கொள்வதுண்டு.

ஆனாலும், கடந்த கால் நூற்றாண்டில் பார்க்கப் போனால் ஆயுதம் தாங்கிய நக்சல்பாரி குழுக்களே பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பது தான் யதார்த்தம். இந்த குழுக்கள் தான் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் தலைவலியை தந்து வருகிறார்கள். எழுபதுகளில் மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம் என்று சில மாநிலங்களில் மட்டுமே பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர்கள் இன்று ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும் அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக சுலபமாக நக்சல்பாரிகளால் காலூன்ற முடிகிறது. புதிய தொழில் திட்டங்களால் தங்கள் விளைநிலங்களை இழக்கும் விவசாயிகள், காடுகளை இழக்கும் பழங்குடியினரும் அடைக்கலமாகும் குழுக்கள் நக்சல்பாரி குழுக்களாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் நக்சல்பாரி குழுக்களின் தாய்வீடான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதில்லை. ஆனால் மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தயார் படுத்தும் விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவின் மக்கள் போர்க்குழு மற்றும் பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய நக்சல்பாரி குழுக்கள் தான் வலுவான ஆயுதவழிப் போராட்ட குழுக்களாக வளர்ந்திருக்கின்றன.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு பீகாரிலும், ஜார்க்கண்டிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே மக்கள் போர்க்குழு ஒரிஸ்ஸாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல பல மாநிலங்களிலும் பல நக்சல் குழுக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தடையை உடைத்தெறிய இக்குழுக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாநில அரசுகளின் தடையே கொரில்லா போர்க்குழுக்களை ஒன்றிணைய வைத்து விட்டது.

கட்சியாக உருவெடுத்தப் பின் முன்பை விட மூர்க்கமாக நக்சல் குழுக்கள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முழு பலத்தோடு இப்போது இருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காலூன்றும் பணிகளையும் சமீபகாலமாக செய்துவருகிறார்கள்.

நக்சல் குழுக்கள் அடிக்கடி தங்களது கட்சி பெயர்களை மாற்றியோ அல்லது குழுக்களை ஒன்றோடு ஒன்றாகவோ இணைத்துக் கொள்வது காவல்துறையையும், ஆட்சியாளர்களையும் குழப்பி வருகிறது. புதிய பெயர்களில், புதிய குழுக்களில் நக்சல் குழுக்களுக்கு போராளிகளை சேர்த்து மொத்தமாகப் போய் மீண்டும் பழைய குழுவில் இணைந்துகொள்வது அவர்கள் வழக்கம். நக்சல்குழுக்களுக்கு போராளிகளும், செய்தித் தொடர்பாளர்களும் மாதச்சம்பளம் வாங்கி பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு போராளிக்கு இப்போது ஆறாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை நக்சல் குழுவில் பணியாற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் எட்டாயிரம் முதல் ரூபாய் பதினாறாயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இணையான அல்லது உயர்ந்த சம்பளத்தையே நக்சல்பாரிகள் தங்கள் போராளிகளுக்கு வழங்குகிறார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கூட செய்தி சேகரிக்க இன்•பார்மர்களாக பணிக்கு அமர்த்துகிறார்கள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

நாடுகளுக்கிடையே இருக்கும் தீவிரவாதக் குழுக்களை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை நக்சல்பாரிகளின் வளர்ச்சி குறித்து கவலை தெரிவிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நிறைய பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்பதை அவ்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. இக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடமுடியவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம் 31,000 பேர் இருக்கலாம் என்று அவ்வறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை 2006ஆம் ஆண்டு வந்தது. அதன் பின்னர் இருமடங்காகவும் ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆயுதம் தாங்கிய நக்சல் குழுக்கள் ஒருங்கிணைந்து 2004ல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்த பிறகு, ஒரு அரசியல் கட்சிக்கேயுரிய கட்டமைப்போடு பிராந்திய கமிட்டிகளை உருவாக்கினார்கள். ஆந்திரா - ஒரிஸ்ஸா எல்லை சிறப்புக் கமிட்டி, ஜார்கண்ட் - பீகார் - ஒரிஸ்ஸா சிறப்புக் கமிட்டி, டாண்டகரன்யா சிறப்புக் கமிட்டி என்று தேசிய கட்சிகளுக்கு மாநில கமிட்டிகள் இருப்பது போல நக்சல்கள் செயல்படும் மாநிலங்களுக்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கமிட்டிகள் செயல்பட நிர்வாகிகளை நியமித்தார்கள். குழுக்களின் நிர்வாகம் சீர்பட்டது.

கட்சியின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதால் திட்டமிட்ட தாக்குதல்களை இப்போது மிகத்துல்லியமாக நிகழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த டிரெயின் ஹைஜாக்கிங்கையும் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது இந்தியாவின் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நக்சல்பாரி குழுக்கள் காலூன்றியிருக்கின்றன. இவைகளில் 62 மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்காடு இருக்கின்றனர். வெளிப்படையாகவே காவல்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் சவால் விடும் அளவுக்கு நக்சல்பாரிகளின் வளர்ச்சி இருக்கிறது.

(முற்றும்)


பின்குறிப்பு :

1. நக்சல்கள் குறித்து வாசிக்க நினைத்தபோது தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் கூட மிகக்குறைவான தரவுகளே வாசிக்க கிடைத்தது. அச்சுபாணி பிரச்சாரம் நக்சல்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தோன்றுகிறது.

2. இத்தொடரில் சிறுசிறு தகவல் பிழைகள் நிறைய இருக்கலாம். எனக்கு வாசிக்க கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். எப்பிழையும் என்னால் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்காது என்று நிச்சயமாக கூறமுடியும்.

3. நக்சல்கள் குறித்த விரிவான வாசிப்புக்கு போதுமான புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொடர் எழுதிய தினத்திலிருந்து இன்று வரை குறைந்தது பத்து தொலைபேசி அழைப்புகளாவது தொடர் குறித்து பேசும் நோக்கத்தோடே எனக்கு வந்துகொண்டே இருக்கிறது.

4. இந்த நிமிடம் வரை நான் நக்சல்களின் ஆதரவாளனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. வேண்டுமானால் அனுதாபி என்று சொல்லிக் கொள்ளலாம். இத்தொடர் என் பார்வையில் எழுதப்பட்டது என்பதால் அரைவேக்காடாகவும் சிலருக்கு தோன்றலாம்.

5. இறுதியாக, என் புரிதலில் பணக்காரர்களால் ஆனது தேசம் என்று அரசும், தேசமென்பது ஏழைகளுக்கானது என்று நக்சல்பாரிகளும் புரிந்துகொண்டதாலேயே இப்பிரச்சினைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக்கும் இடைப்பட்ட சிந்தனைகளோடு கூடிய ஒரு அமைப்பே இந்தியாவின் இன்றைய தேவை என்றும் கருதுகிறேன்.

16 நவம்பர், 2009

நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!

நக்சல்களை ஒரேயடியாக அரசாங்கம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நக்சல்பாரிகளும் மக்களுக்காக தான் போராடுகிறார்கள். ஆனால் அவர்களது அழித்தொழிப்பு வகையிலான வன்முறைகளை சட்டத்தின் பேரில் நாட்டை ஆளும் அரசாங்கத்தால் எந்நாளும் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தான் நக்சல்கள் மீது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. நக்சல் பிரச்சினையை முள் மீது விழுந்த சேலையாக அரசாங்கம் பார்க்கிறது.

நக்சல் குழுக்கள் குறிப்பாக நிலம் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டே தங்கள் வழியில் போராடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நக்சல்களின் கோரிக்கையான ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினாலும் கூட நக்சல்கள் அதை எதிர்பார்ப்பார்கள் என்று அரசு சொல்கிறது. அதாவது அரசு எதை செய்தாலும் அதை எதிர்ப்பதே நக்சல்பாரிகளின் கொள்கையாக மாறிவிட்டது என்பது அரசு தரப்பு பேசும் நியாயம்.

சமத்துவம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சுதந்திரம், வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று அரசு தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இத்துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால் ஒட்டுமொத்த நூற்றி இருபது கோடி இந்தியர்களையும் திருப்தி படுத்துவது மிகக்கடினம். இப்படிப்பட்ட நிலையில் நக்சல்களையும் சமாளிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

மக்கள் பணத்தை மக்களுக்காக செல்வழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரியாக பெறப்படும் பகுதியை ஏழைமக்களுக்கான திட்டங்களுக்காக தான் அரசு பெரும்பாலும் செலவழித்து வருகிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் கூட மத்திய அரசு ரூபாய் 2,475 கோடியை நக்சல்கள் ஆதிக்கத்திலிருக்கும் பின் தங்கிய 55 மாவட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. இப்பணம் ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக இம்மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 15 கோடி என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இது போன்ற திட்டங்கள் மூலமாக பின் தங்கிவிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே சமூகரீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறது. நக்சல்களின் வன்முறைப் போராட்டங்கள் இல்லாவிட்டால் எந்த இடையூறுமின்றி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடையச் செய்ய முடியும். நக்சல்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வன்முறை தான் ஆயுதம் என்று சட்டத்தை அவரவர் வசதிக்கு கையில் எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏறத்தாழ 76 மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இம்மாநிலங்களில் ஏழை மற்றும் பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்த வைக்கிறார்கள். எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள். அரசு மற்றும் சட்டங்களை மதிக்காமல் எதற்கெடுத்தாலும் ஆயுதங்களை தூக்குகிறார்கள். ஆயினும் அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இல்லை. நக்சல்பாரிகளின் தாக்குதல் பொதுவாக காவல்துறை மீதே அதிகமாக இருக்கிறது.

நக்சல்பாரிகளின் பிரச்சினைகளை அந்தந்த பிராந்திய சூழலுக்கேற்பவே கையாள வேண்டியிருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சரியான புரிந்துணர்வு இப்பிரச்சினையை வென்றெடுக்க அவசியமாகிறது. பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்கிவரும் நம் நாட்டில் சட்டத்தை காப்பது இன்றியமையாததாக இருக்கிறது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சட்டமீறல்கள் ஆங்காங்கே நடைபெறுமென்றால் இந்தியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தாகி விடும். நக்சல்பாரிகளை அடக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மாநில காவல்துறையை நவீனமயமாக்க வேண்டியது நக்சல்களை ஒடுக்க அவசியமாகிறது. கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, நவீனரக ஆயுதங்கள் என்று காவல்துறைக்கு அரசு வழங்கி வருகிறது.

2) உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அவ்வப்போது கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

3) மத்திய பாரா ராணுவவீரர்களை நக்சல் பாதிப்பு பகுதிகளில் ரோந்து சுற்ற வைக்கிறது.

4) மத்திய ரிசர்வ் போலிசார் பணிக்கு நிறைய ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை நவீன ஆயுதங்களோடு நக்சல் பாதிப்பு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்புகிறது.

இவையெல்லாம் பாதுகாப்புரீதியாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள். சமூகநீதி, சமூக பொருளாதார வளர்ச்சி போன்ற ரீதியில் பார்க்கப் போனால் கீழ்க்கண்ட சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

1) நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல்

2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல்

3) உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஊழலற்ற, மக்கள்நல நிர்வாகம்

4) மத்திய - மாநில அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

மக்களை மட்டுமன்றி இல்லாமல் நக்சல்பாரிகளையும் கருணைப்பார்வையோடு தான் அரசுகள் பார்க்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் நக்சல்பாரி போராளிகளுக்காக அறிவித்திருக்கும் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டம் மூலமாக போராளிகளும் திருந்தி சராசரி குடிமகன்களாக வாழும் வாய்ப்பிருக்கிறது. இத்திட்டம் மாநில அரசுகள் மூலமாக நக்சல்பாரி குழுக்களில் இருந்து வெளிவருபவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநில அரசாங்கம் இத்திட்டத்தின் மூலமாக சில சலுகைகளை முன்னாள் நக்சல்பாரிகளுக்கு வழங்கியது. மாத உதவித்தொகை ரூ.2000, ரூ.10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு, இரண்டாண்டு தொழிற்கல்வி, ஒரு ஏக்கர் விவசாய நிலம், போராளிகளின் குடும்ப குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்று ஏராளமான சலுகைகள் குழுக்களில் இருந்து வெளிபவர்களுக்கு அள்ளித் தெளித்தது.

இதுபோன்ற திட்டங்கள் மூலமாக நக்சல் பிரச்சினையை அடக்கிவிட முடியும் என்று அரசு நம்புகிறது. நக்சல்களின் தீவிரம் குறைந்திருப்பதாகவே அரசு தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் நாடெங்கும் 510 காவல் நிலையங்கள் நக்சல் அபாயத்தில் இருந்ததாகவும், கடந்தாண்டு அது 372 ஆக குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரணடைய விரும்பும் நக்சல்பாரி போராளிகளை கருணையோடு நடத்துவதால் நக்சல் குழுக்கள் பலவீனமடைந்து போராளிகள் சராசரி வாழ்வுக்கு திரும்புவார்கள் என்று அரசு நம்புகிறது.

(அடுத்த பாகத்தோடு முடிகிறது)

12 நவம்பர், 2009

நக்சல் தரப்பு நியாயங்கள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!


ஒரு இயக்கம் திடீரென்று ஒரே நாளில் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளானைப் போல தோன்றிவிடுவதில்லை. நக்சல்பாரிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் 1960 காலக்கட்ட நாட்டு நடப்போடு பொருத்திப் பார்த்தோமானால் அந்த இயக்கம் தோன்றியிருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடியும்.

எந்த ஒரு நாட்டிலுமே அரசினை எதிர்க்கக் கூடிய மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அம்மக்களது அன்றாடத் தேவைகள் கூட அவர்களை ஆளும் அரசாங்கங்களால் நிறைவேற்றி வைக்கப்படாத நேரங்களில் அரசினை எதிர்த்து கலகக்குரல் எழுப்புகிறார்கள். முன்னேறிய பல நாடுகளில் கூட இதுபோன்ற புரட்சியாளர்களை காணமுடியும். எல்லாத் தரப்பு மக்களையுமே அரசாங்கங்களால் திருப்திபடுத்திவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது ஆராயக்கூடிய கேள்வி. வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் சில தரப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு கண்கூடாகவே தெரிகிறது. எனவே இங்கே புரட்சிக்குரல் எழுந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் புரட்சிகர சிந்தனைகளை வழிதொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சிந்தனைகளை தேடி, தேடி வாசிக்கிறார்கள். சமுதாய நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மனதளவில் தயாராகிறார்கள். கம்யூனிஸம் மக்கள் மனங்களில் ஒரு மதமாகிறது. இந்த மனப்பான்மை வியட்நாமில் எதிரொலித்து புரட்சி மலர்கிறது, அமெரிக்காவை வியட்நாமிய கொரில்லாக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

ஐரோப்பாவில் மாணவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர்போராட்டங்கள், பொலிவியக் காடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் தொடுத்து உயிரிழந்த சேகுவேரா, சீனாவில் மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று உலகளாவிய செய்திகளாலும், 1940களின் இறுதியில் ஆந்திராவில் நடந்த தெலுங்கானா போராட்டங்களாலும் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனதில் ‘புரட்சி' நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்தது. இவையெல்லாம் மனரீதியாக இந்திய விவசாயிகளையும், பாட்டாளிகளையும் புரட்சிக்கு தயார் செய்துவந்தன.

இமயம் முதல் குமரி வரை இந்தியாவில் சுரண்டப்பட்ட விவசாயிகளும், பாட்டாளிகளும் தங்களை காக்க ஒரு தேவமைந்தன் வரமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்களில் கதாநாயகன் விவசாயியாக, தொழிலாளியாக நடித்து வில்லன்களான பண்ணையார்களையும், தொழில் அதிபர்களையும் தட்டிக்கேட்டு, அடித்து உதைத்தபோது சந்தோஷமாக கைத்தட்டி ரசித்தார்கள். அதே வேலையை ஒரு அமைப்பு செய்கிறது என்றபோது ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி அந்த அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தனிமனிதனாக அதிகார வர்க்கத்தை யாரும் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நக்சல்பாரியாக மாறி அமைப்புரீதியாக இயங்கத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸம் - லெனினிஸம் - மாவோயிஸம், இந்த மூன்று முப்பெரும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நக்சல்பாரிகளின் கொள்கைகள் கட்டமைக்கப்படுகிறது. காரல்மார்க்ஸின் சிகப்புச் சிந்தனைகளை செயலாக்கிக் காட்டியவர் ரஷ்யாவின் லெனின். லெனினுக்கு பின்பாக இச்சிந்தனைகளை ஆயுதவழியிலும், ஏனைய வழிகளிலும் சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் மாவோ என்று கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்படுகிற மாசேதுங்க்.

மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் நக்சல்பாரிகள் பின்பற்ற விரும்புவது மாசேதுங்கையே. மாசேதுங் சீனாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய ‘மக்கள் போர்' தான் மாவோயிஸ்டுகளின் குறிக்கோள். மக்களுக்கான உரிமைகளை மக்களே ஆயுதம் தாங்கி, கொரில்லா போர் முறையில் வென்றெடுப்பது தான் மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் புரட்சி. இந்திய நக்சல்பாரிகளின் நதிமூலமாக போற்றப்படும் சாருமஜூம்தாரின் மொழியில் சொன்னால், “துப்பாக்கி முனையில் மக்களுக்கான அதிகாரம்!”

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!” என்பது நக்சல்பாரிகளின் இன்னொரு கோஷம். இது ஜனநாயகமுறையில் தேர்தல் நடக்கும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் கோஷம். தேர்தல் புறக்கணிப்பை நீண்டகாலமாக நக்சல்பாரிகள் பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தேர்தல் முறையால் நாட்டில் புரட்சி ஏற்படுவது தாமதமாகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஏழ்மை தான் ஒருவனை நக்சல்பாரியாக, புரட்சியாளனாக மாற்றியது, மாற்றுகிறது. இந்தியாவில் இன்றும் செல்வாக்கோடு நக்சல்பாரிகள் இருக்கும் மாவட்டங்களை சற்று கவனத்தோடு நோக்கினோமானால் ஒரு விஷயம் புரியும். எங்கெல்லாம் ஏழ்மை தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நக்சல்பாரிகள் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாபம் ஏழ்மை. இந்தியர்களின் ஏழ்மைக்கு ஆட்சியாளர்கள் காரணமா, அரசு அதிகாரிகள் காரணமா, நிலப்பிரபுக்கள் காரணமா, முதலாளிகள் காரணமா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய, விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் ஏழ்மை ஆயுதம் தூக்கவும் செய்யும் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நிலையைப் பாருங்கள். பழங்குடி கிராமத்தவர் அதிகம் வசிக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செல்வாக்காக இருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடல்ரீதியாக அதிகம் சுரண்டப்படும் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக மட்டுமே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரிஸ்ஸாவில் அசுரத்தனமாக காலூன்றி வருகிறார்கள்.

அடுத்ததாக கலாச்சாரத் திணிப்பும் கூட ஆயுதமேந்த செய்கிறது என்று சொல்லலாம். இந்தியா யாருக்கு சொந்தமோ இல்லையோ, இந்தியாவின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு சொந்தம் என்பதை நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டாக வேண்டும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீன பொருளாதாரத் திட்டங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், அவர்களது சொந்த நிலமான கிராமங்களையும், காடுகளையும் விட்டு துரத்தப்படுகிறார்கள். காடுகளை நகரமயமாக்கல் விழுங்குகிறது. கிராமங்களை தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்துவந்த பரம்பரைத் தொழில்கள் அந்நிய சந்தையாளர்களால் அழிக்கப்படுகிறது. “நீ வாழவேண்டுமா? நகரவாசியாக மாறு. உன் கலாச்சாரத்தை, தொழிலை மாற்றிக்கொள்” என்று மறைமுகமான அச்சுறுத்தல் அவர்களுக்கு விடப்படுகிறது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நகரவாசிகளால் நாட்டிலிருந்து காட்டுக்கு துரத்தப்பட்டவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வேரையும் விட்டுத்தர இயலாமல் நக்சல்பாரிகளாக மாறினார்கள். பழங்குடியின மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கங்கள் செல்வாக்காக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நக்சல்பாரி இயக்கங்களில் பணியாற்ற ஆதிவாசிகளும், தலித்துகளுமே அதிகமாக குறிவைக்கப் படுகிறார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கவும்.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஏழ்மை, வர்க்க வேறுபாடு, நிலப்பங்கீடு குறித்த அரசுகளின் முரட்டுத்தனமான அணுகுமுறை, சாதிய அடக்குமுறை, நீதிமறுப்பு என்று பல காரணிகள் நக்சல் இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பரவலாக கடைக்கோடி இந்தியனுக்கும் சரியாக கிடைத்திருந்தால், இன்று ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகளால் சரியான கட்டமைப்பும் - வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தால், நீதி அனைவருக்கும் சமமாக காவல்துறையாலும் - நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டிருந்தால், முதலாளிகள் - நிலப்பிரபுக்கள் மீது அரசுகள் காட்டும் முரட்டுத்தனமான பரிவை விவசாயிகள் - பாட்டாளிகள் மீது காட்டியிருந்தால்.. ஒருவேளை நக்சல்கள் உருவாகாமலேயே இருந்திருப்பார்கள்.

(அரசுத் தரப்பு நியாயங்கள் அடுத்த பாகத்தில்)

10 நவம்பர், 2009

தமிழ் நக்சலைட்டுகள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட இந்திய மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் இருந்த அளவுக்கு நக்சல்பாரிகளால் செல்வாக்கு பெற இயலவில்லை. இத்தனைக்கும் சாரு மஜூம்தார் கட்சி ஆரம்பித்தபோது தமிழ்நாட்டிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தலைவர்கள் இருந்தார்கள். 1970களின் இறுதியில் இங்கிருந்த நக்சல் இயக்கங்கள் தீவிரமாக இயங்கின. 70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் கடுமையான போலிசாரின் வேட்டைகள் காரணமாக நக்சல் இயக்கம் பெரிய அளவில் இன்றுவரை இங்கே வளர இயலவில்லை.

இருப்பினும் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லையோரமாக இருக்கும் வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நக்சல்பாரிகள் அவ்வப்போது ஊடுருவது உண்டு. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால் அங்கு நக்சல்பாரிகள் செல்வாக்கு பெறுவது சுலபம். தேனி, பெரியகுளம் பகுதிகளில் போர்ப்பயிற்சி வழங்கப்படுவதாகவும், போலிசார் தேடுதல் வேட்டையென்றும் அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற பெயரில் செயல்பட்ட குழு ஒன்று காவல்துறையால் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. அக்குழுவின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைபிடிக்கப்பட்டார்கள்.

70களின் இறுதியில் கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு காரணமான நிலமுதலாளி ஒருவரை நக்சல்பாரிகள் அழித்தொழிப்பு மூலமாக அப்புறப்படுத்தினார்கள். அழித்தொழிப்புப் பணிகளை மார்க்சிஸ்டு - லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஓரங்கட்ட நினைத்திருந்த நேரத்தில் நடந்த அழித்தொழிப்பு இது. அதிகாரப்பூர்வமாக நடந்த கடைசி அழித்தொழிப்பு என்றும் சொல்லலாம். கீழே சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘அழித்தொழிப்பு’க்கான சூழலே, நாடுமுழுவதும் அன்று இருந்தது. கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் தான் மாறியிருக்குமே தவிர, கொல்லப்பட்டதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் நிலமுதலாளிகள்!!

1968, டிசம்பர் 25. உலக மக்களின் பாவ பாரங்களை தன் முதுகில் சுமந்து பாவிகளை இரட்சிக்க தேவமைந்தன் அவதரிக்கப் போகும் கிறிஸ்துமஸ் தினம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுக்காவில் இருந்த அந்த குக்கிராமத்துக்கு மட்டும் இருள்நீங்கவேயில்லை. நீண்ட இருளுக்குப் பின்வந்த விடியல் தந்தது அதிர்ச்சி. ஒரே குடிசையில் போட்டு எரிக்கப்பட்டு, கருகிப்போன நாற்பத்தி நான்கு பிணங்களை தான் கிறிஸ்துமஸ் பரிசாக கீழ்வெண்மணி கிராமம் பெற்றது. பதினான்கு பேர் பெண்கள். இருபத்தி இரண்டு பேர் குழந்தைகள். மனித இனம் காட்டுமிராண்டி காலத்திலிருந்து முற்றிலுமாக நாகரிகமடைந்து விடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த ஒட்டுமொத்த படுகொலைகளால் நாடே அதிர்ந்தது. நாற்பத்தி நான்கு உயிர்களை பதற, பதற நெருப்பில் எரித்துக் கொன்றதற்கு என்ன காரணம்.. மதமா? சாதியா?

மதமும், சாதியும் கூட படுகொலைகளுக்கு சாக்குகளாக சொல்லப்படுபவை தான். உண்மையான காரணம் அவர்கள் உழைக்கும் வர்க்கம். தங்கள் உழைப்புக்கு தகுந்த கூலி கேட்கும் வர்க்கம். இந்த படுகொலைச் சம்பவத்தில் தன் உறவு, சுற்றத்தை இழந்தவர் ஒருவர் தெளிவாக சொன்னார், “இது ஜாதி, மதம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. வர்க்கப் பேதத்தால் நடந்த கொடிய சம்பவம்!”

தஞ்சை மண்ணில் அப்போது அதிகார வர்க்கம் ஆழமாய் வேரூன்றி இருந்த காலம். அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களுக்கு பெயர் பண்ணையார். கோயில்களுக்கும், மடங்களுக்கும் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கூட பண்ணையார்களின் மேற்பார்வையில், கட்டுப்பாட்டில் இயங்கின. பெருநிலம் கொண்ட இந்த நிலக்கிழார்களிடம் அநியாயமான கூலிக்கு தங்கள் வாழ்க்கையை விவசாயக் கூலிகள் அடகு வைத்திருந்தார்கள்.

சவுக்கால் அடித்தால் வலிக்கும் என்று நிலத்தில் உழும் மாடுகளுக்கு கூட பரிதாபம் பார்த்த பண்ணையார்கள் மனிதர்களுக்கு பார்க்கவில்லை. வேலையில் சுணங்கினால் சவுக்கடி, சாணிப்பால். உணவுக்காக உழைப்பை மூலதனமாக்கிய கூட்டம் பண்ணை அடிமைகளாய் தலைமுறை தலைமுறையாய் வாழ்க்கையை தொடர்ந்தது. எவ்வளவு நாட்களுக்கு தான் அரைவயிற்று கஞ்சியோடு காலம் தள்ள முடியும்?

உரிமைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு விவசாயக் கூலிகள் ஒரு அணியில் திரள தொடங்கினார்கள். செங்கொடி ஏந்தத் தொடங்கினார்கள். கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டு சங்கம் போராட்டக்களம் கண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. கூலிகளின் குடிசைகள் எரிக்கப்படுவதும் தொடர்கதையானது.

தங்கள் அதிகாரத்தை, ஆதிக்கத்தை நிலைநாட்ட பண்ணை உரிமையாளர்கள் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு எதிர்சங்கம் உருவாக்கினார்கள். செங்கொடிக்கு மாற்றாக இவர்கள் மஞ்சள் கொடியை உயர்த்திப் பிடித்தார்கள். இந்த சங்கத்தின் பெயரால் விவசாயக் கூலிகள் கிராமந்தோறும் மிரட்டப்பட்டார்கள், உயிரெடுக்கப்பட்டார்கள். அப்போதிருந்த ஒரு அதிமுக்கிய அரசியல் தலைவர் கூட “தஞ்சை மாவட்ட விவசாயிகளை பேய் பிடித்திருக்கிறது, கம்யூனிஸ்ட்டு என்ற பேய் பிடித்திருக்கிறது” என்று காட்டமாக சொன்னார். ஆளும் வர்க்கமென்றால் அரசும், அரசாள நினைக்கும் அரசியல்வாதிகளும் கூட உள்ளடக்கம் தானே?

ஆங்காங்கே விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும், நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் கூலி உயர்வு விவகாரத்தில் முட்டல் மோதல் நடந்து கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. கூலியை உயர்த்திக் கொடு, சேற்றில் கால் வைக்கிறோம் என்றார்கள் விவசாயக் கூலிகள்.

இந்நிலையில் தான் விடிந்தால் கிறிஸ்துமஸ் என்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கீழ்வெண்மணி கிராமத்துக்குள் கையில் நாட்டுத் துப்பாக்கி ஏந்திய அடியாள்கள் டிராக்டரில் நுழைந்தார்கள். கண்ணில் கண்டவர்களை குருவியை சுடுவது போல சுட்டார்கள். குண்டடி பட்டவர்கள் சுருண்டு விழ எஞ்சியவர்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். அங்கே இருந்ததிலேயே பெரிய வீடு ராமையா என்பவரின் குடிசை வீடு. குழந்தைகளும், பெண்களும், வயோதிகர்களும் அந்த குடிசையில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது ஜீப்பில் வந்த நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணநாயுடு “ஒருத்தனையும் விடாதீங்கடா. தீ வெச்சு எரிச்சுக் கொல்லுங்கடா!” என்று வெறியோடு கத்துகிறார். குடிசை அடியாட்களால் இழுத்து பூட்டப்படுகிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்படுகிறது. தீயின் நாக்குகள் மேனியை சுட ஒட்டுமொத்த பரிதாபக்குரல் அந்தப் பகுதியை அலற வைத்தது. தீவைத்த கொடியவர்களுக்கு நெஞ்சு இரும்பால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயில் இருந்து தப்பி வந்த நான்கு பேரை மீண்டும் தீக்குள்ளேயே தள்ளிவிட்டார்கள். தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்கட்டும் என்று தீயில் இருந்து தன் குழந்தையை ஒரு தாய் தூக்கி வெளியே எறிந்தாள். அந்த குழந்தையை கூட ஒரு கொடூரமனதுக்காரன் மீண்டும் தீக்குள் தூக்கியெறிந்தான்.

மக்களுக்கு ஏதாவது கொடுமை நடக்கிறதென்றால் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கடவுள் வந்து காப்பார். சினிமாக்களில் கதாநாயகர்கள் வந்து வில்லன்களை புரட்டியெடுப்பார். கீழ்வெண்மணி விவசாயக் கூலிகள் தீயில் கருகும் நிலையில் எந்த கடவுளோ, கதாநாயகனோ அவர்களை காக்க வரவில்லை. காவல்துறை வந்தது, தீயில் நாற்பத்தி நான்கு பேர் கருகி முடித்தப்பிறகு. இருபத்தி ஐந்து குடிசைகள் எரிக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையாவது வெள்ளையர் ஆட்சியில் நடந்தது. கீழ்வெண்மணி படுகொலைகள் சுதந்திரம் வாங்கி இருபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘தேசத்தின் அவமானம்’ என்று தலைப்பிட்டு இந்தியத் தலைநகரிலேயே பத்திரிகைகள் அரசை தாக்கின. அவசர அவசரமாக நூற்றி ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையோ இது மக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சம்பவம் என்றது. அந்தப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள் கோர்ட்டில் சாட்சியம் சொன்னார்கள். ஏழைச்சொல் எந்த காலத்தில் அம்பலம் ஏறியிருக்கிறது?

1973ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. “அதிக நிலத்தை சொத்தாக வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட சம்பவத்தை செய்திருக்க முடியாது. அவர்கள் குற்றவாளிகள் அல்ல” அதிகார வர்க்கத்திடமிருந்து அரசோ, சட்டமோ தங்களை காக்கும் என்ற நம்பிக்கையை அம்மக்கள் முற்றிலுமாக இழக்கும் வண்ணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியும் அவர்களில் தவிர்க்கவே முடியாத பத்து பேருக்கு மட்டும் பெயருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. கீழ்வெண்மணி சம்பவத்தின் வில்லனாகிய கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவர்களில் ஒருவர்.

சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோபாலகிருஷ்ண நாயுடு பழைய செல்வாக்கோடு கீழத்தஞ்சையில் வலம் வருகிறார். பழைய அதிகாரத்தை கையில் எடுக்கிறார். முன்பை விட முனைப்பாக உழைப்பாளிகளை ஒடுக்கிறார். நீதித்துறையும் கூட பணத்துக்கும், அதிகாரத்துக்கும் வாலாட்டும் நிலையில் தங்களை காக்க, அயோக்கியர்களை ஒழிக்க யாராவது வரமாட்டார்களா என்று ஏழைக்கூலிகள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அணக்குடி என்ற பகுதியில் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டி சாய்க்கப்படுகிறார். கீழ்வெண்மணி சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் முகமாக செய்யப்பட்ட இக்கொலையை செய்தவர்கள் நக்சல்பாரிகள். நந்தன் என்பவரது தலைமையில் ஒரு குழு செயல்பட்டு கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது.

(தொடர்ந்து வெடிக்கும்)

7 நவம்பர், 2009

அழித்தொழிப்பு!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!


நக்சல்களை வாசிக்கும்போது அடிக்கடி வரும் இந்த ‘அழித்தொழிப்பு’ என்ற பதம் உங்களை அலைக்கழிக்கலாம். நீங்களோ, நானோ ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றால் அதன் பெயர் என்ன? கொலை தானே? இதையே காவல்துறை ஒருவரை சுட்டுக் கொன்றால் அது என்கவுண்டர். இராணுவத்தினர் துப்பாக்கியை முழக்கினால் அதற்குப் பெயர் போர். தங்களை ராணுவத்தினர், கொரில்லாப்படை என்று கூறிக்கொண்ட நக்சலைட்டுகள் தாங்கள் செய்த கொலைகளை ‘அழித்தொழிப்பு’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு அழித்தொழிப்புப் பணிகளுக்காக செல்லும் போராளிகளை ஏற்கனவே அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் அழைத்துச் செல்வார். பொதுவாக அந்த கிராமவாசி அக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்களில் ஒருவராக இருப்பார். அழித்தொழிப்பு குழுவினர் சில காலம் அக்கிராமத்தில் தங்கி ஏதாவது விவசாயக்கூலி வேலை செய்வார்கள். அங்கிருக்கும் மற்ற விவசாயக் கூலிகளோடும், ஒடுக்கப்பட்டோருடனும் பழகி அவர்களில் நம்பகமான சிலரையும் தங்களது அழித்தொழிப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

ஏற்கனவே இதுபோன்ற கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகள் காலூன்றியிருக்கும். அக்கட்சியைச் சேர்ந்தவர்களை நக்சல்பாரிகள் எதிரிகளாக பார்ப்பது வழக்கம். அக்கட்சிகள் ஊடுருவமுடியாத கிராமப்புறங்களையும் ஊடுருவியது தான் நக்சல்பாரிகளின் குறிப்பிடத்தக்க வெற்றி.

அழித்தொழிப்பை ஒரு போராட்ட வடிவமாக சாரு மஜூம்தார் பார்த்தார். மக்கள் விடுதலைக்கு அவசியமான ஒரு போராட்டம் இது என்று கருதினார். இதைத்தவிர்த்து வேறு திட்டங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி நக்சல்பாரிகளிடம் இல்லை. அழித்தொழிப்புக்கு தயாராக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை பேரை கொல்லப் போகிறார்கள்? எவ்வளவு காலம் பிடிக்கும்? - இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே நக்சல்பாரிகள் குறியாக இருந்ததால் அன்றாடம் மக்கள் காணக்கூடிய பிரச்சினைகளுக்கான போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அழித்தொழிப்புப் பணிகளுக்கு செல்லும் போராளிகளுக்கு தெளிவான வழிமுறைகளையோ, பண உதவியையோ இயக்கத்தலைமை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. பணிகளுக்கு செல்லும் போராளிகளே ஆங்காங்கே பணி செய்து தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டியிருந்தது. உண்மை நிலைக்கு மாறாக அந்தத பிராந்திய சூழல்களை கருத்தில் கொள்ளாமல் இயந்திரத்தனமான அழித்தொழிப்பு ஒரு கட்டத்தில் போராளிகளுக்கு அலுத்துப் போனது. இதுவரை போதிக்கப்பட்ட தர்ம, நியாயங்களுக்கு கட்டுப்படாத ஒரு செயல் அழித்தொழிப்பு என்பதால் பலபேருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டது.

“வர்க்க எதிரியின் இரத்தத்தில் கைநனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு, பத்து அழித்தொழிப்புகளை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்குமே அஞ்சவேண்டியதில்லை” போன்ற சாரு மஜூம்தாரின் கருத்துக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கே பீதியை வரவழைத்தது. தொழிற்சங்கங்களே தேவையில்லை என்பது சாரு மஜூம்தாரின் எண்ணம். அடிப்படையான கட்டமைப்பு, முறையான பயிற்சி மற்றும் முன் அனுபவம் இல்லாமல் அழித்தொழிப்பு பணிக்கு சென்ற பல போராளிகள் அரைகுறையாக பணியை முடித்து, காவல்துறையிடம் மாட்டி உயிரை விட்டார்கள், அல்லது சிறைகளில் கம்பி எண்ணினார்கள்.

ஆரம்பத்தில் அழித்தொழிப்பின் நோக்கம் வேறாக இருந்தது. ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலமுதலாளிகள் அஞ்சுவார்கள். தங்கள் பண்ணைகளில் வேலைபார்க்கும் தொழிலாளிகளை நல்ல முறையில் நடத்துவார்கள். மக்களுக்கும் மனமாற்றம் ஏற்படும். நிலச்சீர்த்திருத்தம் ஏற்படும். புரட்சிக்கு மிக சுலபமாக அவர்கள் தயாராவார்கள். ஆனால் அழித்தொழிப்பு நடந்த பல பகுதிகளிலோ அது சாதியப்போராட்டமாகவும், ஒரு சாதியினரின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.

அழித்தொழிப்பில் மக்களுக்கு பங்கு எதுவுமே இல்லாத நிலையும் இருந்தது. மக்கள் பங்கில்லாத போராட்டங்களில் போராட போராளிகளுக்கு ஒரு கட்டத்தில் அலுப்பு தட்ட ஆரம்பித்தது. வெகுஜனப்போராட்டம் என்பதே சீனாவின் கொள்கையாக இருந்தது. நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் போராட்டத்தில் வெகுஜனத்துக்கு இடமில்லை. மாவோ தேர்தலில் போட்டியிட்டதில்லை, பாராளுமன்ற வாக்கெடுப்பு அரசியல் செய்ததில்லை. ஏனென்றால் சீனாவில் பாராளுமன்றமும் இல்லை, தேர்தலும் இல்லை. வன்முறைப்போராட்டம் என்றில்லாமல் அமைதிப்போராட்டத்துக்கு இடமிருந்தால் அதையும் செய்ய சீனா தயாராகவே இருந்திருக்கிறது. ஆனால் நக்சல்பாரிகள் இந்த விஷயங்களை கணக்கிலெடுக்க தவறிவிட்டார்கள். சீனாவின் பாதை தான் எம்பாதை என்று அவர்கள் முழக்கமிட்டாலும் சீனாவை முழுக்க முழுக்க உணராமலேயே பின் தொடர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் மற்ற கம்யூனிஸ்டு இயக்கங்களால் நக்சல்பாரிகள் மீது சாட்டப்பட்டது.

“எழுபதுகளை புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்” என்று சொல்லிய சாரு மஜும்தார் 72லேயே மரணமடைந்து விட்டார். 80ஆம் ஆண்டுவரை புரட்சி வருவதற்கான அறிகுறியே தெரியாததால் போராளிகள் மனமுடைந்தார்கள். தொடர்ந்து அழித்தொழிப்புப் பணிகளை செய்து மாட்டினால் தூக்குக்கு செல்வது அவர்களுக்கு தொடர்கதை ஆனது. எமர்ஜென்ஸிக்குப் பிறகு இயக்கத்துக்குள் ஏற்பட்ட சித்தாந்த வாதங்களால் 80களின் தொடக்கத்தில் நக்சல்பாரிகள் அதிகாரப்பூர்வமாக அழித்தொழிப்பு நடவடிக்கைகளை கைவிட்டார்கள். ஆனாலும் சாருவின் கட்சியான இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல குழுக்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இன்றும் கூட அழித்தொழிப்பு மூலம் புரட்சி மலரும் என்றும் நம்பிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

(அழித்தாலும் புரட்சி தொடர்ச்சியாக வெடிக்கும்)

5 நவம்பர், 2009

பீகார் ஜெயில் தகர்ப்பு!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!


ரன்வீர் சேனா


2005 நவம்பர் 13. பீகாரில் மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று நடந்து முடிந்திருந்தது. ஜெகன்னாபாத் கிளை சிறைச்சாலை. 140 பேரை மட்டுமே அடைக்க முடிந்த அந்த சிறைச்சாலையில் 650 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நக்சல்பாரிகள். அவர்களில் பல பேர் மீது முதல் தகவல் அறிக்கை கூட கிடையாது. சந்தேகத்தின் பேரில் அடைபட்டவர்கள் பல ஆண்டுகளாக கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பீகார் அப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தது. சாதி மற்றும் கிரிமினல் அரசியல் கொடிகட்டிப் பறந்தது. ராஜபுத்திரர், பூமிகார், பிராமணர், குர்மி ஆகிய சாதியினர் நிலமுதலாளிகளாக இருந்தார்கள். வழக்கம்போல அங்கும் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் இவர்களுக்கு அடிமைகளாக சேவகம் புரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவான ரன்வீர் சேனா என்றொரு உயர்சாதி அமைப்பு உண்டு. இந்த அமைப்பினர் துப்பாக்கியேந்தி விவசாயக் கூலித்தொழிலாளர்களை கொடுமைபடுத்தும் ஒரு அமைப்பினர். இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த காரண காரியமே தேவையில்லை.

ரன்வீர் சேனா பீகாரில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு. பெயருக்கு தான் தடையே தவிர அவர்களது செயல்பாடுகளுக்கு ஒன்றுமல்ல. 1994ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை மட்டுமே இந்த அமைப்பு பீகாரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது 27 முறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருந்தது. துப்பாக்கிகள் மட்டுமன்றி அதிநவீன அழிவு ஆயுதங்கள் அத்தனையும் இந்த அமைப்புக்கு மிக சுலபமாக கிடைக்கும். இந்த அமைப்பினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்திருக்கிறார்கள்.

1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பு ஜெகன்னாபாத் லட்சுமண்பூர்பதே கிராமத்தில் 61 தாழ்த்தப்பட்டோரை நள்ளிரவில் கோடாரி, கத்தி கொண்டு மண்டையை பிளந்து கொடூரமாக சாகடித்தது. 1999ல் சங்கர்பிகா என்ற கிராமத்தில் 58 தாழ்த்தப்பட்டோரை இதே அமைப்பு சுட்டுக் கொன்றது. “தாழ்த்தப்பட்டவனாக பிறக்கும் ஒவ்வொருவனும் நக்சலைட் ஆகிவிடுவான். அதனால் தான் இந்த கொலைகள்” என்று ரன்வீர்சேனா வெறியர்கள் பகிரங்கமாக கொக்கரித்தார்கள். இந்த அமைப்பினரோடு ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கு மோதல் இருந்தது.

2005 நவம்பர் 13ல் ஜெகன்னாபாத் சுமார் ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தால் முற்றுகையிடப்பட்டது. அந்த ஆயிரம் பேர் இருந்த கூட்டத்தில் 300 பேர் ஆயுதங்களோடு இருந்த நக்சல்பாரிகள். மற்றவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் வசித்த நக்சல்பாரி ஆதரவு கிராமப்புறத் தொழிலாளர்கள்.

ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது. “மக்களே யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்! நாங்கள் உங்களது நண்பர்கள், காவலர்கள். நீங்கள் எங்களது எதிரிகள் அல்ல. போலிசுக்கும், பண்ணையார்களுக்கும் பாடம் புகட்டப் போகிறோம். ஜெகன்னாபாத் சிறையை தாக்கப் போகிறோம். சிறையை காக்கும் போலிசாரே துப்பாக்கியை போட்டுவிட்டு உயிர் தப்பி ஓடுங்கள்” என்று நக்சல்பாரிகள் அறிவித்தார்கள். தேர்தல் நடந்த நேரம் என்பதால் போலிசார் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிறையை ஒன்பதே ஒன்பது காவலர்கள் மட்டுமே காத்து நின்றார்கள்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஆயிரம் பேரும் சிறையை முற்றுகையிட்டார்கள். சிறை தகர்க்கப்பட்டு சிறையில் இருந்த நக்சல்பாரி போராளிகள் 341 பேர் விடுவிக்கப்பட்டார்கள். சிறைக்கைதியாக இருந்த ரன்வீர் சேனாவின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான படேசர்மா என்பவர் அங்கேயே கொல்லப்பட்டார். ரன்வீர் சேனாவைச் சார்ந்த 20 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

சிறை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சில போலிஸார் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற நக்சல்பாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பதிலுக்கு நக்சல்பாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்த, இருதரப்பிலும் நான்கு பேர் பலியானார்கள். நக்சல்பாரிகள் வெற்றிகரமாக சிறைதகர்ப்பை நடத்தி வெளியேறினார்கள்.

தப்பிச் சென்ற நக்சல்பாரிகளை பிடிக்க மாநில போலிஸ் படை முடுக்கி விடப்பட்டது. பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ரன்வீர் சேனா அமைப்பினர் 8 பேரின் சடலங்கள் தான் போலிஸுக்கு கிடைத்தது. ரன்வீர் சேனா அமைப்பின் மீதி 12 பேர் எச்சரிக்கப்பட்டு நக்சல்பாரிகளால் விடுவிக்கப்பட்டனர்.

நக்சல்பாரி இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களிலேயே இந்திய அரசை அசைத்துப் பார்த்த சம்பவமாக ஜெகன்னாதபுரம் சிறைதகர்ப்பு சம்பவம் நடந்தது. இந்தியா முழுவதுமே அச்சப்பட்டு நின்ற நேரம் அது. இந்திய வரலாற்றிலேயே ஒரு சிறை போராளிகளால் தகர்க்கப்பட்டதும் அதுதான் முதல்முறை.

(தொடர்ந்து தகர்க்கப்படும்)

3 நவம்பர், 2009

மழைக்குப் பின் புயல்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!


1969-70களில் பிரபலமடைந்து பல வெற்றிகளை தங்களது ஆயுதப் போராட்டங்கள் மூலமாக குவித்த நக்சல்பாரிகளுக்கு அதன் பின்னர் தொடர் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. கட்சியின் முன்னணியினரும், தொண்டர்களும் காவல்துறையால் வேட்டையாடப்பட்டார்கள். சரணடைபவர்களுக்கு உயிர் மிச்சம், முரண்டு பிடிப்பவர்களுக்கு அதுவுமில்லை என்கிற நிலை.

ஆயினும் நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய அரசுக்கு ஒரு அபாயமணியை அடித்தது. நக்சல் குழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம், அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க என்ன காரணம் என்றறிய மத்திய அரசு ஒரு குழுவினை அமைத்தது. ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நம் தேசத்தில் சரிசமமாக நடத்தப்படவில்லை. சட்டமும் கூட அவர்களை காப்பாற்ற இயலவில்லை என்ற அவலநிலையை பட்டவர்த்தனமாக அந்த குழு போட்டுடைத்தது. குழுவின் பரிந்துரைகளைப் பார்த்த பின்னரும் கூட அரசு இந்த பிரச்சினை தோன்றுவதற்கான காரணத்தை முளையிலேயே கிள்ளி எறிவதை விட்டுவிட்டு நக்சல்களை அடக்குவதிலேயே முழுக்கவனத்தை செலுத்தியது.

ஆந்திராவில் முன்நின்ற முன்னணியினரான பஞ்சாத்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆறு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து கட்சியின் முன்னணி தலைவர்களாகிய சுப்பாராவ் பாணிக்ரஹி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் இதுதான் கதி. கொல்கத்தாவில் இயங்கிய தேசப்ரதி பத்திரிகை அலுவலகம் காவல்துறையினரால் சூறையாடப்பட்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீகாகுளம் புரட்சியில் முன்நின்ற வெம்படாபு சத்யநாராயணா, அடிபாட்லா கைலாசம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள். இதையடுத்து ஸ்ரீகாகுளம் புரட்சி ஒடுக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்பாரிகளின் கட்சியை கட்டமைத்த அப்பு போலிசாரோடு நடந்த மோதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இவர் மரணமடைந்தது கூட மறைக்கப்பட்டு சில நாட்கள் கழித்தே இறந்த செய்தி வெளியானதாக சொல்கிறார்கள்.

வங்காளதேசப் போரில் வெற்றி கண்ட இந்திய ராணுவம் அதே வேகத்தில் நக்சல்களை நசுக்கவும் ஈடுபடுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் சண்டையிட்டு மாண்டார்கள். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டனர். சரோஜ் தத்தா என்ற கட்சியின் மத்திய குழு உறுப்பினர் போலிசாரால் ரகசியமாக கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. கொல்கத்தாவுக்கு அருகில் காசிப்பூர்-பாராநகர் பகுதியில் 150 நக்சலைட்டுகள் 1971 ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இருதேதிகளில் கொல்லப்பட்டனர்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நக்சல் நாயகன் சாரு மஜூம்தார் கொல்லப்பட்டது நக்சல்பாரி இயக்கத்தின் தலையில் பெரிய இடியாக இறங்கியது. ஜூலை 1972ல் கொல்கத்தாவில் போலிசாரால் பிடிக்கப்பட்ட சாரு மஜூம்தார் பண்ணிரண்டு நாட்கள் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் சட்டப்படி நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படாமல் கொல்லப்பட்டது நாடெங்கிலும் இருந்த சிந்தனையாளர்கள் மனங்களை கொதிக்க வைத்தது.

தலைவர்களையும், இயக்க முன்னணியினரையும் இழந்து வந்த நக்சல்பாரி இயக்கத்துக்கு 1975ல் எமர்ஜென்சி ரூபத்தில் தீர்க்கமுடியாத பிரச்சினை ஏற்பட்டது. ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கூட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நேரமது, நக்சல்பாரிகளை சும்மாவா விடுவார்கள்?

நக்சல்பாரி தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித்தேடி சிறைகளில் தள்ளினார்கள். காவல்துறையின் சித்திரவதைகளை அறிந்த பலரும் தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இதே காலக்கட்டத்தில் தான் பீகாரின் போஜ்பூர் மற்றும் பாட்னா மாவட்டங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டம் மும்முரமாக இருந்தது. போஜ்பூரில் காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் நக்சல்பாரி கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜவஹர் என்கிற சுப்ரதா தத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக காவல்துறை தெரிவித்தது. எமர்ஜென்ஸி இருந்த காலக்கட்டத்தில் நக்சல்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற தோற்றம் இருந்தது.

1977ல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசு மத்தியில் ஏற்பட்டது. தேசிய அளவில் பல மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியதின் பேரில் சிறையில் இருந்த நக்சல் தலைவர்களையும், தொண்டர்களையும் விடுதலை செய்தது. 80களின் ஆரம்பத்தில் இக்கட்சி அழித்தொழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட்டு கலாச்சார அமைப்பாகவும், மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகவும் மாற்றம் பெற்றது. இக்கட்சி நேரடியாக ஆயுதம் ஏந்துவதில் ஈடுபடாவிட்டாலும் மக்களை ஆயுதவழிப் போராட்டத்துக்கு ஆதரவாக மாற்றியது என்பதை மறுக்க இயலாது.

கருத்து வேறுபாடுகளாலும், சித்தாந்த மோதல்களாலும் பல குழுக்கள் பிற்பாடு தோன்றினாலும் அவை அனைத்திற்குமே வேர் 1967ல் மலர்ந்த நக்சல்பாரி புரட்சி தான். இப்போதும் கூட ஆந்திரப்பிரதேசத்தில் செல்வாக்காக இருக்கும் மக்கள் போர்க்குழு (People's War Group), பீகாரில் கோலோச்சும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு (Maoist Communist Centre) ஆகியவை இன்னமும் கொரில்லா போர்முறையை பின்பற்றி வருகின்றன. இவ்வமைப்புகள் அவரவர் செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் காவல்துறை, அரசுநிர்வாகம், நிலப்பிரபுக்கள், தொழில் முதலாளிகள் ஆகியோரை எதிர்த்து ஆயுதவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் அடிக்கடி செய்திகளில் தலைகாட்டிய நக்சல் குழுக்கள் இவை இரண்டும். இவை தவிர்த்து மக்கள் கொரில்லா படை, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) நவசக்தி என்று பல நக்சல் குழுக்களும் உண்டு.

கடந்த நாற்பதாண்டுகளில் நக்சல் குழுக்கள் பிராந்திய செல்வாக்கோடு இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இன்று வளர்ந்து நிற்கிறது. நக்சல் குழுக்கள் தீவிரவாதிகள் என்பதையும் தாண்டி புரட்சியாளர்களாக, மாவோயிஸ்ட் சிந்தனையாளர்களாக உலகளவில் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டனர். மக்கள் போர்க்குழு, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகியவை நேபாளம், வங்காளதேசம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கும் இவர்களது கருத்தினை ஒத்த கிளர்ச்சியாளர்களோடு ஒருங்கிணைந்து தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி சர்வதேச அளவில் செயல்படுகிறார்கள். அதுமட்டுமன்றி இந்த அமைப்புகள் எல்லாமே சர்வதேசப் புரட்சியாளர் இயக்கம் என்ற உலகளாவிய இயக்கத்திலும் உறுப்பினர்களாக இருக்கின்றன.

(புயலும், மழையும் புரட்சி வடிவில் தொடரும்)

30 அக்டோபர், 2009

இடியுடன் கூடிய மழை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!

1967ல் மார்ச்சில் தொடங்கிய நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்க மாநில காவல்துறை பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. புரட்சியை தூண்டிவிட்ட தலைவர்களை கைதுசெய்ய அதே ஆண்டு மே 23ஆம் தேதி சென்ற காவல்துறையினர் நக்சல்பாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்கள். காவல்துறையினரே தாக்கப்பட்டதால் உச்சபட்ச வலுவோடு நக்சல்பாரிகளை ஒடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது. நக்சல்பாரிகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை பச்சைவயல்களை செந்நிறமாக்கியது. மே 25ல் நக்சல்பாரி கிராமத்தில் ரத்த ஆறு ஓடியது. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினொன்று பேர் மாண்டார்கள். இரண்டு மாதங்கள் கடுமையாக போராடிய பின்னரே நக்சல்பாரி கிராமத்தை காவல்துறையினரால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

ஆனால் காவல்துறையால் நக்சல்பாரி கிராமத்தை மட்டுமே தற்காலிகமாக அடக்கமுடிந்தது. நக்சல்பாரி புரட்சி நாடு முழுவதும் பரவியது. தெற்கில் ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நக்சல்பாரிகள் காலூன்றினர். பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நக்சல்களின் செங்கொடி பறக்க ஆரம்பித்தது.

நக்சல்பாரி புரட்சியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. சாரு மஜும்தாரும், கானு சன்யாலும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட்டு புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினை தொடங்கினார்கள். நாடெங்கும் இருக்கும் கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்கள் சாருவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அணி திரளத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளின் போராட்டம் வெறுமனே விளைநிலங்களுக்கான போராட்டமல்ல, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்று அறிவித்து “உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம்!” என்ற கோஷத்தை நாடெங்கும் ஒலிக்கச் செய்தார்கள் நக்சல்பாரிகள். இவர்களது வர்க்கப் போராட்டம் காட்டுத்தீயாய் நாடெங்கும் பரவியது.

ரஷ்யப் புரட்சியாளரான லெனினின் நூறாவது பிறந்ததினமான ஏப்ரல் 22ஆம் நாளில் 1969ஆம் வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தார்கள். சாரு மஜூம்தார் கட்சியின் மத்திய அமைப்பினுடைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறித்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல கம்யூனிஸ்டுகளுக்கு மே 1. அதே ஆண்டு மே ஒன்றாம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கூடியது. கட்சியின் முன்னணித் தலைவரான கானு சன்யால் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மோதல் வெடித்தது. கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) தொண்டர்களுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரசல், ஆயுதங்களோடு மோதிக்கொள்ளும் அளவுக்கு உக்கிரமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடனான தொடர்மோதலுக்கு அச்சாரம் இட்ட சம்பவம் இது.

நிலங்களை தாண்டி நக்சல்பாரிகளின் போராட்டம் தொழிற்சாலைகளுக்கு பரவியது. பாட்டாளிகள் பலரும் அணிதிரண்டார்கள். வேலை நிறுத்தம் செய்தால் கதவடைப்போம் என்று மிரட்டிய ஆலை அதிபர்கள் வயிற்றில் புளியை கரைத்தார்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் என்பதையும் தாண்டி முதலாளிகளை நோக்கிய முற்றுகைப் போராட்ட வழிமுறைகளை கையாண்டார்கள். முதலாளியை ஒரு அறையில் அடைத்து சுற்றி முற்றுகை இடுவதே இந்தப் போராட்டம். கிட்டத்தட்ட சிறைப்படுத்துதல். விவசாயிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் அரசியல் கற்றுத் தந்தார்கள் நக்சல்பாரிகள்.

இக்கட்சி நாடெங்கும் கொரில்லாக் குழுக்களை உருவாக்கியது. இந்த கொரில்லாக் குழுக்களின் முக்கியப் பணி ‘அழித்தொழிப்பு'. அழித்தொழிப்பு என்றால் என்னவென்று சாருவின் வார்த்தைகளிலேயே வாசித்தால் தான் புரியும். 1969ல் தமிழ்நாட்டுக்கு வந்த சாரு மஜூம்தார் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, “வர்க்க எதிரிகளை கொன்று குவித்து அவர்களது இரத்தத்தை மண்ணில் சிந்தச் செய்பவர்களே புரட்சியாளர்களாக வரலாற்றில் இடம்பெறுவார்கள். கிராமங்களில் கட்சியின் ரகசிய கொரில்லாக் குழுக்க அமைக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பவர்கள், கொடுங்கோல் மனப்பான்மை கொண்ட நிலமுதலாளிகள் மற்றும் பள்ளி, கோயில் நிலங்களை அபகரித்து வயிறு வளர்ப்பவர்களை நம் குழு அழித்தொழிக்க வேண்டும். அழித்தொழிப்பு பணிகளை மிக விரைவாகவும் செய்யவேண்டும்”.

அழித்தொழிப்பு என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தம் புரிகிறதா? சட்டப்பூர்வமான மொழியில் சொல்வதாக இருந்தால் ‘கொலை' என்றும் சொல்லலாம். ஆயுத வழியிலான போராட்டங்களில் ஈடுபட்ட இக்கட்சி பாராளுமன்ற - சட்டமன்ற ஓட்டுவங்கி அரசியலை முற்றிலுமாக புறக்கணித்தது.

நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் பணிகளை முடக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பீகார் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலப்பிரபுக்களை, இடைத்தரகர்களை கொன்று அடகுவைக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை மீட்டார்கள். பஞ்சாபில் போலிஸ் அதிகாரிகளும், பணக்கார நில உடமையாளர்களும் நக்சல்பாரிகளால் கொல்லப்படுவதற்காக குறிவைக்கப்பட்டனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியை தன்னாட்சி பெற்ற பகுதியாக நக்சல்பாரிகள் அறிவித்து ஆட்சி செய்தனர். மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினத்தவரின் ஆதரவு நக்சல்பாரிகளுக்கு பெருமளவில் இருந்தது.

போராட்டங்களை வடிவமைத்து வழிநடத்திய நக்சல்பாரிகள் நாடெங்கும் காவல்துறையினரால் வேட்டையாடப் பட்டார்கள். உயிர் பிழைத்தவர்கள் குற்றுயிரும், குலையுயிருமாக நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டார்கள். “வர்க்க எதிரிகளை மக்கள் நலனுக்காக அழித்தொழித்தோம். எங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுங்கள்” என்று நீதிமன்றங்களில் கலகக்குரல் எழுப்பினார்கள். மக்களுக்கு காவல்துறை மீதிருந்த அச்சம் அகன்றது. சட்ட, பாராளுமன்ற, நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருந்த புனிதமாயை அகன்றது.

(புரட்சி தொடர்ந்து வெடிக்கும்)

28 அக்டோபர், 2009

வசந்தத்தின் இடிமுழக்கம்

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!

“எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலற்ற எதுவுமே இந்த நாட்டில் இல்லை. நாட்டையே சுரண்டி கொள்ளையடிக்க தான் எல்லோருமே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு தீர்வாக சுரண்டல்வாதிகள் சிலரையாவது பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விடவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும்” உணர்ச்சிக் கொந்தளிப்போடு இந்த வார்த்தைகளை உச்சரித்தவர் ஒரு நக்சல்பாரி அல்ல. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜு. ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்ட பீகாரைச் சேர்ந்த பிராஜ் பூஷன் பிரசாத் என்பவர் பெயில் கேட்ட வழக்கின்போது காட்ஜு சொன்ன வார்த்தைகள் இவை. தன்னையே ஒரு கணம் மறந்துவிட்டு நீதிபதி சொன்ன கருத்தாக கூட இருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நியாயமானதா, இல்லையா என்பதை நம் ஒவ்வொருவர் மனச்சாட்சியையும் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டு சொன்ன இந்த கருத்தை தான் நக்சல்பாரிகள் சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் ஜன் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்) வலியுறுத்துவதும் இதுபோன்ற தீர்ப்பை தான்.

மேற்கு வங்கத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் மிகச்சிறிய கிராமம் நக்சல்பாரி. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டம். ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்களைப் போலவே இங்கும் விவசாயிகளிடம் நிலப் பிரபுக்கள் சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தார்கள். அடக்குமுறை கொடுமைகளை எதிர்த்து வாய் பேச இயலா ஊமைகளாக உழைப்பாளிகள் வாழ்ந்தார்கள்.

இரத்தத்தையும், தியாகத்தையும் தோய்த்தெடுத்து எழுதப்படும் செங்கொடியின் வீரவரலாறு தொடங்கியது இங்கேதான். ‘துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து நக்சல்பாரி உழவர்களின் ஆயுதமேந்திய புரட்சி வெடித்தது. உழவர்கள் மட்டுமன்றி சிலிகுரி மாவட்டத்தின் தேயிலைத் தொழிலாளர்களும் இந்தப் புரட்சியின் போது வீறுகொண்டு எழுந்தார்கள்.

1967ஆம் ஆண்டு ‘கிராமப்புற புரட்சியின் மூலமாக அதிகாரத்தை கையகப்படுத்துதல்' எனும் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து சாரு மஜூம்தார் என்ற நாற்பத்தொன்பது வயது கம்யூனிஸ்ட்டு தலைவர் தன்னுடைய நண்பரான கானு சன்யால் என்பவரோடு இணைந்து நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைக்கிறார். நக்சல்பாரி கிராமத்தில் இந்த எழுச்சிக்கான விதை விதைக்கப்பட்டதால் இவர்கள் பிற்பாடு நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெடித்த நக்சல்பாரிகளின் புரட்சி பல நிலைகளை தாண்டி நீறுபூத்த நெருப்பாக இன்று இந்திய மாநிலங்களில் கனன்று கொண்டிருக்கிறது. நக்சல்பாரிகளின் புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவினைக்கும் அடிகோலியது. மேற்கு வங்கத்தில் ஆண்டுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு கம்யூனிஸ்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தாமல் மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட புரட்சியாளர்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்கள். தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டினார்கள்.

“பெரும் நில முதலாளிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கி ஏழைகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஏழைகளே நேரடி நடவடிக்கைகளில் இறங்கி தங்களுக்கான நிலத்தை எடுத்துக் கொள்வார்கள்” என்று திடீரென சாரு மஜூம்தார் அறிவிக்க நாடே கலங்கிப் போனது. மேற்கு வங்காளத்தில் கூட்டணி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தன் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ஒருவர் இதுபோன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு சிக்கலை அளித்தாலும் தீவிர கம்யூனிஸ்டுகள் சாருவின் அறிவிப்பை வரவேற்றார்கள். நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய மக்கள் புரட்சியை வெடிக்கச் செய்யும் என்று நம்பினார்கள். மேற்கு வங்காளத்தில் இளையதலைமுறையினர் பலர் சாருவை பின்பற்றிச் செல்ல தங்கள் குடும்பங்களை துறந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது பலமாக இருந்த உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த திடீர் புரட்சியாளர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கலகக்காரர்களாக செயல்பட்டார்கள். கட்சியின் கொள்கைகளை விளக்க தேசப்ரதி, லிபரேஷன், லோக்யுத் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதமேந்திய கிராமக்குழுக்களை உருவாக்கினார்கள். நிலப்பிரபுக்களின் பட்டாக்களையும், அவர்களிடம் தாங்கள் அடகுவைத்திருந்த கடன்பத்திரங்களையும் கைப்பற்றி கொளுத்தினார்கள். ஜன் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து வர்க்க எதிரிகளை கூண்டிலேற்றி விசாரித்து கடுமையான தண்டனைகளை வழங்கினார்கள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலப்பிரபுக்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை மக்கள் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சாரு மஜூம்தாரின் அறிவிப்பினை கொண்டாடியது. ‘வசந்தத்தின் இடிமுழுக்கம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தது. சீன கம்யூனிஸ்டுகள் கொண்டாடினாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) வரவேற்கவில்லை. நக்சல்பாரிகளை அடக்கும் முயற்சியில் அங்கே ஆளும் கம்யூனிஸ்ட்டு கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தியது. நக்சல்பாரிகளை கண்டு ஆளும் கட்சிகள் “பயங்கரவாதம்” என்று குரலெழுப்பத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளோ தாங்கள் நடத்துவது தங்களது உரிமைப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் விவசாயிகளுக்கு சமமாக பங்கிடப்பட்டது. வயல்கள் தோறும் செங்கொடி பறந்தது.

(புரட்சி தொடர்ந்து மலரும்)

25 அக்டோபர், 2009

துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!


ரஷ்யாவில் 1917 அக்டோபரில் வெடித்த புரட்சி உலகளாவிய பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. உடனடியான பாதிப்பு மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயர்நீக்க மார்க்சியப் பாதை தான் சிறந்தது என்று எண்ண தலைப்பட்ட சிந்தனையாளர்கள் கம்யூனிஸக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்டு அமைப்புகளை 1920கள் வாக்கில் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

லெனினின் சிந்தனைகள் அடிப்படையிலான கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு முறை போல்ஷ்விஸம் என்று அழைக்கப்படும். போல்ஷ்விஸம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களை அன்றைய ஆட்சியாளர்களும் உணர்ந்திருந்தனர். கம்யூனிஸ்டு என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் வேட்டையாடப் பட்டனர். பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். பல நெருக்கடிகளை தாண்டியே பல்வேறு பொதுவுடைமை சிந்தனைக் குழுக்கள் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்தப்பட்டது.

நாட்டில் அப்போதிருந்த முக்கியப் பிரச்சினை ஏகாதிபத்தியம். காங்கிரஸ் கட்சியோ ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி மும்முரமாக போராடிக் கொண்டிருக்க, கம்யூனிஸ்டு இயக்கங்கள் வர்க்க விடுதலைக்கு தீவிரமாக போராடின. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னால் வர்க்க விடுதலை மக்களுக்கு பெரியதாக தோன்றவில்லை. விவசாய தொழிலாளர்களின் உரிமையை ஒருபுறம் வலியுறுத்தி, இன்னொரு புறம் தேசவிடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்குமேயானால் காங்கிரஸ் இயக்கத்துக்கு கிடைத்த செல்வாக்கு ஒருவேளை அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் முதலாளி வர்க்க எதிரிகள் என்ற அடிப்படையில் தான் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களே தவிர அவர்கள் அந்நியர்கள் என்ற அடிப்படையில் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே தேச விடுதலையில் காங்கிரஸ் அளவுக்கான பங்கினை, செல்வாக்கினை கம்யூனிஸ்டுகள் பெற இயலாமல் போனது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளியக்க கருத்து வேறுபாடுகள் தோன்றின. போர் எதிர்ப்பு நிலையை கம்யூனிஸ்டு இயக்கங்கள் மேற்கொண்டதால் பல தலைவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியதாகியது. ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்தபோது சிறைபடாமல் தலைமறைவாகியிருந்த கட்சியினர் சோவியத் யூனியனுக்கு உதவி செய்ய ஒரே வழி, தேசிய விடுதலைக்கு தீவிரமாக போராடுவதே என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போரால் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் பலவீனமடையும், அது சோசலிஷ ரஷ்யாவுக்கு பிற்பாடு வலிமை சேர்க்கும் என்பது அவர்களது கணிப்பு.

ஆனால் சிறையிலிருந்த கம்யூனிஸ்டு தலைவர்களின் சிந்தனையோட்டம் வேறுமாதிரியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் போர் தயாரிப்புகளுக்கு முழுமூச்சான ஆதரவு தரவேண்டும் என்றும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என்றும் சொன்னார்கள். இதற்கு பிரதியுபகாரமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலக வரைப்படத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் போர் முடிவில் பலவீனமாக காட்சியளித்தனர். இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மக்கள் ஆயுதம் மூலமாக ஆங்காங்கே கலகம் செய்தனர். இச்சந்தர்ப்பத்தையும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலகக்காரர்களை ஆங்கிலேயர்கள் காங்கிரசோடு கூட்டு அமைத்து காலி செய்தார்கள். திடீரென்று விழித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தங்கள் தரப்பு தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்தது. மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தந்திரத்தில் கரைகண்ட வெள்ளையர்கள் காங்கிரஸிடம், முஸ்லீம் லீக்கிடமும் சரணடைந்தனர். விவகாரமான சுதந்திரமும், ஆங்கிலேயர்களை கொண்ட அரசியல் நிர்ணயசபையும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுக்களுக்கான பின்வாசல் எப்போதும் திறந்தே வைத்திருக்கும்படியான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போதும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்கள் காங்கிரஸை நம்பின. நேரு, காந்தி போன்ற காங்கிரஸின் முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னும் தொடர்ந்த தொழிலாளர் துயரத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

பி.டி.ரணவேதி என்ற கம்யூனிஸ்டு தலைவர் கலகக்காரரானார். தன்னைப் போன்ற தீவிர ஒத்த சிந்தனை கொண்டவர்களின் துணையோடு கட்சியின் தலைமையை கைப்பற்றினார். நேருவின் அரசு ஆங்கிலேயர்களின் கைப்பாவை அரசு என்று இந்த கலகக்கார கம்யூனிஸ்டுகள் அறிவித்தனர். வர்க்க சமரசத்திற்கு எதிரான புரட்சியை நடத்த வன்முறைப்பாதையையும் மேற்கொள்ள தயாராயினர். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தமும், மக்களின் கிளர்ச்சியும் தான் தங்கள் பாதை என்றனர்.

இதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானாவில் வன்முறைப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நிலமுதலாளிகளுக்கும் அவர்களது வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் தெலுங்கானா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் அங்கிருந்த பிரதேச கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. இங்கே போராடிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் புரட்சியாளர் மாவோவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தவர்கள். எனவே இவர்கள் பி.டி.ரணவேதியின் போராட்டத்தை மாவோ கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்த்தார்கள்.

நிலமுதலாளித்துவத்துக்கும், நகர்ப்புற முதலாளி வர்க்கத்துக்கும் எதிரான போராட்டங்கள் ஒரே சமயத்தில் நடந்தால், போராட்டங்களின் வீரியம் நீர்த்துப் போகும் என்பது தெலுங்கானா புரட்சியாளர்களின் கணிப்பு. அவர்களது மொழியில் சொல்வதானால் ஜனநாயகப் புரட்சியையும், சோஷலிசப் புரட்சியையும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது. கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் முறையான விவசாயத் திட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே புரட்சியை வெடிக்கச் செய்யமுடியும் என்பது அவர்களது நிலைபாடாக இருந்தது. கிராமப்புறங்களில் ஏற்படும் புரட்சி நகரத்தை சுற்றி வளைத்து இறுதியில் கைப்பற்றும். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியைக் காட்டிலும் சீனப்புரட்சியைப் போன்ற செயல்பாடு தான் இந்தியச்சூழலுக்கு தகுந்ததாக இருக்கும் என்றும் தெலுங்கானா போராளிகள் நினைத்தனர். இன்றைய நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு முன்னோடிகளாக தெலுங்கானா போராளிகளை குறிப்பிடலாம்.

பி.டி.ரணதிவே இந்த சிந்தனைகளை முற்றிலுமாக நிராகரித்தார். மாவோவை ஒரு போலி மருத்துவர் என்று காரமாக குற்றம் சாட்டினார். ஆயினும் 1950களின் ஆரம்பத்தில் தெலுங்கானா கிளர்ச்சியாளர்கள் ஆந்திராவில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்டனர். ஐதராபாத் இந்தியாவுக்குள் இணைந்தபோது அங்கே முற்றுகையிட்டிருந்த இந்திய ராணுவத்தின் மூலமாக தெலுங்கானா போராளிகளின் புரட்சி நசுக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு இயக்கங்களில் இன்று பிரபலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் சரி.. தெலுங்கானா போராட்டத்தை அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நிலமுதலாளிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ள நடந்த போராட்டம் தான் அது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்கிறது. தெலுங்கானாவில் நடந்தது முழுக்க முழுக்க அராஜகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஆனால் தெலுங்கானா போராட்டத்தை ஆதரித்துப் பேசுபவர்களோ அப்போராட்டம் ‘ஆந்திராவில் மக்கள் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தி நடந்தப் போராட்டம் என்கிறார்கள்.

ரஷ்யாவிலும் ஸ்டாலினுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களால் கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் அவரவர் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்த நேரமது. “ஏற்கனவே இருக்கும் அரசமைப்பை புரட்சி மூலமாக தூக்கியெறிய வேண்டியதில்லை. முதலாளிகளோடு தொழிலாளி வர்க்கம் சமரசமாகி அதிகாரத்தை பங்கிடுவதின் மூலமாகவே தேசிய ஜனநாயக அரசை ஏற்படுத்த முடியும்” என்று ரஷ்யாவில் ஆட்சிபுரிந்த குருசேவ் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர். இது லெனின் – மாவோ உள்ளிட்டோரின் கோட்பாடுகளுக்கு நேரிடையானதாக இருந்தது.

இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்டு இயக்கமோ ‘ரஷ்யா சொன்னா சரி’ என்று தலையாட்டியது. இந்திய - சீன எல்லைப்போர் தொடங்கிய நேரமது. கட்சித்தலைமையோ சீனாவை ஆதரித்தால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் சீன எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. கட்சியில் இருந்த தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் உட்கட்சி கிளர்ச்சி செய்து கட்சியை உடைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

கிளர்ச்சி செய்து புதுக்கட்சியை உருவாக்கியிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமரச வழியிலான சோஷலிஸத்தை நோக்கிதான் பயணம் செய்தது. சரியாக சொல்ல வேண்டுமானால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பதை நோக்கிய பயணமாக இருந்தது. மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலமானது. விவசாயிகள் - தொழிலாளர் போராட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கையோடு சேர்த்தே திட்டமிடப்பட்டது.

மார்க்சிஸ்டுகளின் திட்டங்களுக்கு நல்ல பலன் இருந்தது. 1967ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதே கட்சியிலிருந்து தேர்தல் பாதைக்கு எதிரான மனோபாவம் கொண்ட புரட்சியாளர்களின் தலைமையில் நக்சல்பாரி புரட்சி ஆயுதமேந்தி நடந்தது. தங்கள் இயக்கத்தில் இதுநாள் இருந்தவர்களையே போலிஸை விட்டு கண்மூடித்தனமாக தாக்கி புரட்சியை நசுக்கியது மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு. இதன் மூலமாக பாட்டாளிகள் தலைமையிலான மக்கள் ஆட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிற்பதாக நக்சல்பாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நக்சல்பாரிகளுக்கு இன்னொரு வேடிக்கையான பெயரும் தமிழகத்தில் உண்டு. தீ.கம்யூனிஸ்டுகள் என்று அவர்களை செய்தித்தாள்களில் எழுதுவார்கள். அதாவது தீவிர(வாதி) கம்யூனிஸ்டுகளாம். இந்த தீ.கம்யூனிஸ்டுகள் ‘நாடாளுமன்ற அரசியல் மூலமாகவோ, சமரச அரசியல் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற முடியாது’ என்று பிரகடனப்படுத்தி இயங்கி வருகிறார்கள்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக நான்கு விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். நிலமுதலாளித்துவம், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், குருசேவ் காலத்துக்கு பின்னரான ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் - இவை நான்குக்கும் எதிரான போராட்டங்களே உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்தும் என்பது நக்சல்பாரிகளின் நிலைப்பாடு.

சீனா மற்றும் வியட்நாமில் தோன்றிய மக்கள் போர் மூலமாகவே இந்திய உழைக்கும் மக்களுக்கான விடுதலையை ஏற்படுத்த இயலும். துப்பாக்கிக் குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று முழக்கமிட்டார்கள். கிராமப்புறங்களில் நிலமுதலாளிகளை பலவீனமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நிலப்பிரபுக்களை கொன்று குவிப்பதை ‘அழித்தொழிப்பு’ என்ற பெயரிலான கிளர்ச்சியாக குறிப்பிட்டார்கள். நகர்ப்புற இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளை ‘அழித்தொழிப்பு’ பணிகளுக்கு தயார்படுத்தினார்கள்.

(புரட்சி மலரும்)