16 நவம்பர், 2009

நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!

நக்சல்களை ஒரேயடியாக அரசாங்கம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நக்சல்பாரிகளும் மக்களுக்காக தான் போராடுகிறார்கள். ஆனால் அவர்களது அழித்தொழிப்பு வகையிலான வன்முறைகளை சட்டத்தின் பேரில் நாட்டை ஆளும் அரசாங்கத்தால் எந்நாளும் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தான் நக்சல்கள் மீது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. நக்சல் பிரச்சினையை முள் மீது விழுந்த சேலையாக அரசாங்கம் பார்க்கிறது.

நக்சல் குழுக்கள் குறிப்பாக நிலம் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டே தங்கள் வழியில் போராடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நக்சல்களின் கோரிக்கையான ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினாலும் கூட நக்சல்கள் அதை எதிர்பார்ப்பார்கள் என்று அரசு சொல்கிறது. அதாவது அரசு எதை செய்தாலும் அதை எதிர்ப்பதே நக்சல்பாரிகளின் கொள்கையாக மாறிவிட்டது என்பது அரசு தரப்பு பேசும் நியாயம்.

சமத்துவம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சுதந்திரம், வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று அரசு தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இத்துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால் ஒட்டுமொத்த நூற்றி இருபது கோடி இந்தியர்களையும் திருப்தி படுத்துவது மிகக்கடினம். இப்படிப்பட்ட நிலையில் நக்சல்களையும் சமாளிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

மக்கள் பணத்தை மக்களுக்காக செல்வழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரியாக பெறப்படும் பகுதியை ஏழைமக்களுக்கான திட்டங்களுக்காக தான் அரசு பெரும்பாலும் செலவழித்து வருகிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் கூட மத்திய அரசு ரூபாய் 2,475 கோடியை நக்சல்கள் ஆதிக்கத்திலிருக்கும் பின் தங்கிய 55 மாவட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. இப்பணம் ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக இம்மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 15 கோடி என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இது போன்ற திட்டங்கள் மூலமாக பின் தங்கிவிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே சமூகரீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறது. நக்சல்களின் வன்முறைப் போராட்டங்கள் இல்லாவிட்டால் எந்த இடையூறுமின்றி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடையச் செய்ய முடியும். நக்சல்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வன்முறை தான் ஆயுதம் என்று சட்டத்தை அவரவர் வசதிக்கு கையில் எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏறத்தாழ 76 மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இம்மாநிலங்களில் ஏழை மற்றும் பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்த வைக்கிறார்கள். எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள். அரசு மற்றும் சட்டங்களை மதிக்காமல் எதற்கெடுத்தாலும் ஆயுதங்களை தூக்குகிறார்கள். ஆயினும் அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இல்லை. நக்சல்பாரிகளின் தாக்குதல் பொதுவாக காவல்துறை மீதே அதிகமாக இருக்கிறது.

நக்சல்பாரிகளின் பிரச்சினைகளை அந்தந்த பிராந்திய சூழலுக்கேற்பவே கையாள வேண்டியிருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சரியான புரிந்துணர்வு இப்பிரச்சினையை வென்றெடுக்க அவசியமாகிறது. பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்கிவரும் நம் நாட்டில் சட்டத்தை காப்பது இன்றியமையாததாக இருக்கிறது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சட்டமீறல்கள் ஆங்காங்கே நடைபெறுமென்றால் இந்தியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தாகி விடும். நக்சல்பாரிகளை அடக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மாநில காவல்துறையை நவீனமயமாக்க வேண்டியது நக்சல்களை ஒடுக்க அவசியமாகிறது. கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, நவீனரக ஆயுதங்கள் என்று காவல்துறைக்கு அரசு வழங்கி வருகிறது.

2) உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அவ்வப்போது கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

3) மத்திய பாரா ராணுவவீரர்களை நக்சல் பாதிப்பு பகுதிகளில் ரோந்து சுற்ற வைக்கிறது.

4) மத்திய ரிசர்வ் போலிசார் பணிக்கு நிறைய ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை நவீன ஆயுதங்களோடு நக்சல் பாதிப்பு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்புகிறது.

இவையெல்லாம் பாதுகாப்புரீதியாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள். சமூகநீதி, சமூக பொருளாதார வளர்ச்சி போன்ற ரீதியில் பார்க்கப் போனால் கீழ்க்கண்ட சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

1) நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல்

2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல்

3) உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஊழலற்ற, மக்கள்நல நிர்வாகம்

4) மத்திய - மாநில அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

மக்களை மட்டுமன்றி இல்லாமல் நக்சல்பாரிகளையும் கருணைப்பார்வையோடு தான் அரசுகள் பார்க்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் நக்சல்பாரி போராளிகளுக்காக அறிவித்திருக்கும் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டம் மூலமாக போராளிகளும் திருந்தி சராசரி குடிமகன்களாக வாழும் வாய்ப்பிருக்கிறது. இத்திட்டம் மாநில அரசுகள் மூலமாக நக்சல்பாரி குழுக்களில் இருந்து வெளிவருபவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநில அரசாங்கம் இத்திட்டத்தின் மூலமாக சில சலுகைகளை முன்னாள் நக்சல்பாரிகளுக்கு வழங்கியது. மாத உதவித்தொகை ரூ.2000, ரூ.10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு, இரண்டாண்டு தொழிற்கல்வி, ஒரு ஏக்கர் விவசாய நிலம், போராளிகளின் குடும்ப குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்று ஏராளமான சலுகைகள் குழுக்களில் இருந்து வெளிபவர்களுக்கு அள்ளித் தெளித்தது.

இதுபோன்ற திட்டங்கள் மூலமாக நக்சல் பிரச்சினையை அடக்கிவிட முடியும் என்று அரசு நம்புகிறது. நக்சல்களின் தீவிரம் குறைந்திருப்பதாகவே அரசு தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் நாடெங்கும் 510 காவல் நிலையங்கள் நக்சல் அபாயத்தில் இருந்ததாகவும், கடந்தாண்டு அது 372 ஆக குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரணடைய விரும்பும் நக்சல்பாரி போராளிகளை கருணையோடு நடத்துவதால் நக்சல் குழுக்கள் பலவீனமடைந்து போராளிகள் சராசரி வாழ்வுக்கு திரும்புவார்கள் என்று அரசு நம்புகிறது.

(அடுத்த பாகத்தோடு முடிகிறது)

7 கருத்துகள்:

  1. மக்களை மட்டுமன்றி இல்லாமல் நக்சல்பாரிகளையும் கருணைப்பார்வையோடு தான் அரசுகள் பார்க்கின்றன.///// எந்த அரசு யுவா..?? Good Joke...

    பதிலளிநீக்கு
  2. மத்திய அரசு சூர்யா!

    அடுத்த இரண்டு பத்திகள் அதைப்பற்றிதான் பேசியிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. //1) நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல் //
    நக்சல் பிரச்சனை இல்லாத தமிழகத்தில் எந்த அளவு நிலச்சீர்திருத்ததை அரசு செய்திருக்கிறது என்பதை விட இப்போதுள்ள சட்டங்கள் எந்த அளவு மக்களுக்கு நிலப்பகிர்வு செய்ய அனுமதிக்கும் என்பதற்கு தமிழகத்தில் உள்ள நில உச்ச வரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அதனை வைத்துக் கொண்டு எவ்வளவு பண்ணையார்கள் இன்றும் சுரண்டி வருகிறார்கள் என்பதுமே ஒரு சான்று ஆகும்.

    2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல் // உள்ளாட்சி அமைப்புகள் வட்டங்களையும் நகரங்களையும் 'திருப்தி' படுத்துவதற்குதான் - ஓட்டுக் கட்சிகளுடைய கீழ்மட்டத்தில் வைட்டமின் 'ப' பாய்ச்சதான் பயன்படும்.

    3) உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஊழலற்ற, மக்கள்நல நிர்வாகம்
    // எங்கு நடக்கிறது தமிழகத்தில் எதாவது ஒரு உதாரணம் //
    4) மத்திய - மாநில அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

    // மத்திய அரசு தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதி செய்யப் பயன்படுத்திய ஒரு சட்டம், ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம் ஆனால் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கூலியில் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்கு தினசரிகளை புரட்டிப்பாருங்கள் - அரசும் அதன் போலீசும் ஒரு ஒடுக்குமுறை கருவி என்பது தெரியும். இப்போது அரசு வங்கிக்கணக்குகளை ஆரம்பித்து அதில் பணம் போடுவது பற்றி ரொம்ப காலமாக ஆலோசித்து வருகிறது அல்லது இந்த முறை மிகக்குறைந்த அளவிற்கே செயல்படுத்தப்பட்டு வருகிறது.//

    பதிலளிநீக்கு
  4. திரு புரட்சிக்கவி!

    //நக்சல் பிரச்சனை இல்லாத தமிழகத்தில் எந்த அளவு நிலச்சீர்திருத்ததை அரசு செய்திருக்கிறது என்பதை விட இப்போதுள்ள சட்டங்கள் எந்த அளவு மக்களுக்கு நிலப்பகிர்வு செய்ய அனுமதிக்கும் என்பதற்கு தமிழகத்தில் உள்ள நில உச்ச வரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அதனை வைத்துக் கொண்டு எவ்வளவு பண்ணையார்கள் இன்றும் சுரண்டி வருகிறார்கள் என்பதுமே ஒரு சான்று ஆகும். //

    ஓட்டை இல்லாத திட்டங்களே உலகில் இல்லை எனலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பட்சத்தில் ஓரளவுக்கு நிலச்சீர்த்திருத்தம் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழ்நாட்டை சொல்லமுடியும்.


    //உள்ளாட்சி அமைப்புகள் வட்டங்களையும் நகரங்களையும் 'திருப்தி' படுத்துவதற்குதான் - ஓட்டுக் கட்சிகளுடைய கீழ்மட்டத்தில் வைட்டமின் 'ப' பாய்ச்சதான் பயன்படும். //

    சுயேச்சைகளாக நின்று வெல்லக்கூடிய வாய்ப்பு இந்திய ஜனநாயகத்தில் உள்ளாட்சிமன்றத் தேர்தல்களில் மட்டுமே அதிகமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற செயல்பாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் சிறப்பாக செயல்படும் அமைப்பாக உள்ளாட்சி அமைப்புகளையே கருதுகிறேன். ‘ப’ எல்லா விஷயத்திலும் தான் பாய்ச்சப் படுகிறது. உள்ளாட்சி மன்றங்களுக்கு பாய்ச்சப்படும் ‘ப’ வடிகட்டப் பட்டாவது ஓரளவுக்கு மக்களுக்கு வந்து சேர்கிறதே என்று நினைத்து திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    //எங்கு நடக்கிறது தமிழகத்தில் எதாவது ஒரு உதாரணம்//

    திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம், மேட்டூருக்கு அருகில் ஒரு கிராமம், நாகப்பட்டினம் அருகில் காமேஸ்வரம் என்று சில உதாரணங்களை நல்லவேளையாக அடுக்க முடிகிறது.


    //மத்திய அரசு தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதி செய்யப் பயன்படுத்திய ஒரு சட்டம், ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம் ஆனால் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கூலியில் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்கு தினசரிகளை புரட்டிப்பாருங்கள் - அரசும் அதன் போலீசும் ஒரு ஒடுக்குமுறை கருவி என்பது தெரியும். இப்போது அரசு வங்கிக்கணக்குகளை ஆரம்பித்து அதில் பணம் போடுவது பற்றி ரொம்ப காலமாக ஆலோசித்து வருகிறது அல்லது இந்த முறை மிகக்குறைந்த அளவிற்கே செயல்படுத்தப்பட்டு வருகிறது.//

    ஒரேயடியாக இதற்கு நான் அரசினை மட்டுமே குற்றம் சாட்டமாட்டேன். மக்களுக்கும் இந்த ஊழலில் பங்குண்டு. ஆண்டுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தில் காண்ட்ராக்டர்களோடு கூட்டுக் கொள்ளை அடிப்பவர்கள் பயனாளிகள் :-)

    பதிலளிநீக்கு
  5. //மக்கள் பணத்தை மக்களுக்காக செல்வழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரியாக பெறப்படும் பகுதியை ஏழைமக்களுக்கான திட்டங்களுக்காக தான் அரசு பெரும்பாலும் செலவழித்து வருகிறது.//
    மக்களுக்கு?? அரசாங்கம்??!! என்ன சார் தெளிவாத்தான் இருக்கீங்களா?

    //நக்சல்களின் வன்முறைப் போராட்டங்கள் இல்லாவிட்டால் எந்த இடையூறுமின்றி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடையச் செய்ய முடியும்.//

    வேதனை கலந்த சிரிப்புத்தான் வருகிறது உங்கள் புரிதல் கண்டு.

    //எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.//

    பாட்டாளி வர்க்கச் சர்வதேசியம் கம்யூனிஸ்ல்களின் அடிப்படை. இந்தத்தெளிவு கூட இல்லாமல் கம்யூனிஸ்ட்களைப் பற்றி எழுத வேண்டாமே, ப்ளீஸ்!

    //தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சட்டமீறல்கள் ஆங்காங்கே நடைபெறுமென்றால் இந்தியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தாகி விடும்.//

    மணிப்பூரிலும், நாகாலாந்திலும், கஷ்மீரிலும் ஏனைய வடகிழக்கு மாகாணங்களிலும் நடப்பது வெறும் சட்டமீறல் என்பதுதான் உங்கள் நிலைப்பாடு! இல்லையா, யுவா?

    //நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல்//

    மேற்கு வங்கத்தைத் தவிர வேறெங்கு நிலச்சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது என்பதை லிஸ்ட் போட முடியுமா, ப்ளீஸ்!
    அங்கும்கூட ‘கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி’ கதைதான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    பி.கு: இந்தப் பின்னூட்டத்தைக் கண்டிப்பாக வெளியிடுவதோடல்லாமல் விளக்கமும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. விந்தை மனிதன்!

    இப்பதிவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் அரசுத் தரப்பு நிலை என்று தெளிவாக தலைப்பிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்பதை விடுத்துவிட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அரசிடம் ஏன் நீங்கள் விளக்கத்தை கோரக்கூடாது?

    பதிலளிநீக்கு
  7. நில சீர்திருத்த சட்டத்தில் ஓட்டைகள் நிறைய உண்டு...

    அரசு நிலங்களை வேண்டுமானால் அரசு ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாமே தவிர...

    காவிரி டெல்டாவில் இருக்கும் மூப்பனார், துளசிய்யா வாண்டையார், குன்னியூர் ஐயர் போன்றவர்கள்... உச்ச வரம்பு சட்டத்தின் ஓட்டைகளையும்... சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டதும் உண்டு...

    இந்திய அரசின் ஒடுக்குமுறைகளுக்கும், காவல்துறை நடத்தும் அடாவடிகளுக்கும், கேடு கெட்ட போன நீதி துறையும் இருக்கும் போது நக்சல் போராளிகளின் நியாயம் எடுபட போவதில்லை...

    நக்சல் போராளிகளும் ஆயுதம் மட்டுமே தீர்வு என இல்லாமல்... அரசியல் ரீதியாகவும் செயல்பட்டால், இந்திய அரசுக்கு சரியான பாடல் சொல்ல முடியும்...

    பதிலளிநீக்கு