5 நவம்பர், 2009

பீகார் ஜெயில் தகர்ப்பு!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!


ரன்வீர் சேனா


2005 நவம்பர் 13. பீகாரில் மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று நடந்து முடிந்திருந்தது. ஜெகன்னாபாத் கிளை சிறைச்சாலை. 140 பேரை மட்டுமே அடைக்க முடிந்த அந்த சிறைச்சாலையில் 650 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நக்சல்பாரிகள். அவர்களில் பல பேர் மீது முதல் தகவல் அறிக்கை கூட கிடையாது. சந்தேகத்தின் பேரில் அடைபட்டவர்கள் பல ஆண்டுகளாக கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பீகார் அப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தது. சாதி மற்றும் கிரிமினல் அரசியல் கொடிகட்டிப் பறந்தது. ராஜபுத்திரர், பூமிகார், பிராமணர், குர்மி ஆகிய சாதியினர் நிலமுதலாளிகளாக இருந்தார்கள். வழக்கம்போல அங்கும் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் இவர்களுக்கு அடிமைகளாக சேவகம் புரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவான ரன்வீர் சேனா என்றொரு உயர்சாதி அமைப்பு உண்டு. இந்த அமைப்பினர் துப்பாக்கியேந்தி விவசாயக் கூலித்தொழிலாளர்களை கொடுமைபடுத்தும் ஒரு அமைப்பினர். இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த காரண காரியமே தேவையில்லை.

ரன்வீர் சேனா பீகாரில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு. பெயருக்கு தான் தடையே தவிர அவர்களது செயல்பாடுகளுக்கு ஒன்றுமல்ல. 1994ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை மட்டுமே இந்த அமைப்பு பீகாரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது 27 முறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருந்தது. துப்பாக்கிகள் மட்டுமன்றி அதிநவீன அழிவு ஆயுதங்கள் அத்தனையும் இந்த அமைப்புக்கு மிக சுலபமாக கிடைக்கும். இந்த அமைப்பினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்திருக்கிறார்கள்.

1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பு ஜெகன்னாபாத் லட்சுமண்பூர்பதே கிராமத்தில் 61 தாழ்த்தப்பட்டோரை நள்ளிரவில் கோடாரி, கத்தி கொண்டு மண்டையை பிளந்து கொடூரமாக சாகடித்தது. 1999ல் சங்கர்பிகா என்ற கிராமத்தில் 58 தாழ்த்தப்பட்டோரை இதே அமைப்பு சுட்டுக் கொன்றது. “தாழ்த்தப்பட்டவனாக பிறக்கும் ஒவ்வொருவனும் நக்சலைட் ஆகிவிடுவான். அதனால் தான் இந்த கொலைகள்” என்று ரன்வீர்சேனா வெறியர்கள் பகிரங்கமாக கொக்கரித்தார்கள். இந்த அமைப்பினரோடு ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கு மோதல் இருந்தது.

2005 நவம்பர் 13ல் ஜெகன்னாபாத் சுமார் ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தால் முற்றுகையிடப்பட்டது. அந்த ஆயிரம் பேர் இருந்த கூட்டத்தில் 300 பேர் ஆயுதங்களோடு இருந்த நக்சல்பாரிகள். மற்றவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் வசித்த நக்சல்பாரி ஆதரவு கிராமப்புறத் தொழிலாளர்கள்.

ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது. “மக்களே யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்! நாங்கள் உங்களது நண்பர்கள், காவலர்கள். நீங்கள் எங்களது எதிரிகள் அல்ல. போலிசுக்கும், பண்ணையார்களுக்கும் பாடம் புகட்டப் போகிறோம். ஜெகன்னாபாத் சிறையை தாக்கப் போகிறோம். சிறையை காக்கும் போலிசாரே துப்பாக்கியை போட்டுவிட்டு உயிர் தப்பி ஓடுங்கள்” என்று நக்சல்பாரிகள் அறிவித்தார்கள். தேர்தல் நடந்த நேரம் என்பதால் போலிசார் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிறையை ஒன்பதே ஒன்பது காவலர்கள் மட்டுமே காத்து நின்றார்கள்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஆயிரம் பேரும் சிறையை முற்றுகையிட்டார்கள். சிறை தகர்க்கப்பட்டு சிறையில் இருந்த நக்சல்பாரி போராளிகள் 341 பேர் விடுவிக்கப்பட்டார்கள். சிறைக்கைதியாக இருந்த ரன்வீர் சேனாவின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான படேசர்மா என்பவர் அங்கேயே கொல்லப்பட்டார். ரன்வீர் சேனாவைச் சார்ந்த 20 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

சிறை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சில போலிஸார் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற நக்சல்பாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பதிலுக்கு நக்சல்பாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்த, இருதரப்பிலும் நான்கு பேர் பலியானார்கள். நக்சல்பாரிகள் வெற்றிகரமாக சிறைதகர்ப்பை நடத்தி வெளியேறினார்கள்.

தப்பிச் சென்ற நக்சல்பாரிகளை பிடிக்க மாநில போலிஸ் படை முடுக்கி விடப்பட்டது. பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ரன்வீர் சேனா அமைப்பினர் 8 பேரின் சடலங்கள் தான் போலிஸுக்கு கிடைத்தது. ரன்வீர் சேனா அமைப்பின் மீதி 12 பேர் எச்சரிக்கப்பட்டு நக்சல்பாரிகளால் விடுவிக்கப்பட்டனர்.

நக்சல்பாரி இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களிலேயே இந்திய அரசை அசைத்துப் பார்த்த சம்பவமாக ஜெகன்னாதபுரம் சிறைதகர்ப்பு சம்பவம் நடந்தது. இந்தியா முழுவதுமே அச்சப்பட்டு நின்ற நேரம் அது. இந்திய வரலாற்றிலேயே ஒரு சிறை போராளிகளால் தகர்க்கப்பட்டதும் அதுதான் முதல்முறை.

(தொடர்ந்து தகர்க்கப்படும்)

1 கருத்து:

  1. //1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பு ஜெகன்னாபாத் லட்சுமண்பூர்பதே கிராமத்தில் 61 தாழ்த்தப்பட்டோரை நள்ளிரவில் கோடாரி, கத்தி கொண்டு மண்டையை பிளந்து கொடூரமாக சாகடித்தது. 1999ல் சங்கர்பிகா என்ற கிராமத்தில் 58 தாழ்த்தப்பட்டோரை இதே அமைப்பு சுட்டுக் கொன்றது.//


    நிஜம் எப்போதுமே கசக்கிறது..

    பதிலளிநீக்கு