28 பிப்ரவரி, 2015

திராவிட வடுக வந்தேறிகளை முன்வைத்து தமிழ்தேசிய முற்போக்கு ஆய்வு!

முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நிலமான லெமூரியாவை முப்பாட்டன் முருகன் ஆண்டான். திராவிட வடுக வந்தேறியான விநாயகன், நம் முப்பாட்டனுக்கு கொடுத்த ஞானப்பழ அரசியல் நயவஞ்சகத் தொல்லைகளை தமிழ்தேசிய வரலாறான ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் தமிழ்தேசிய இயக்குனர் ஏ.பி.நாகராசன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இன்று இந்திய தேசிய ஆரிய வடுக கும்பல் புராணகாலத்திலேயே அவர்கள் விமானம் கண்டுபிடித்துவிட்டதாக கூறி புஷ்பகவிமானம், அது இதுவென்று கதை விடுகிறார்கள். உலகின் முதல் விமானத்தை ஓட்டியது முப்பாட்டன் முருகனே. மயில் வாகனம் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கி, விமானத்தில் உலகை ஒரு சுற்று சுற்றி முப்பாட்டன் முருகன் அன்றே உலகசாதனை படைத்துவிட்டான்.

* * * * * *

இன்று நாகரிக தொலைக்காட்சியில் (fashion tv) உடையலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உலகின் முதல் நாகரிக நடை நிகழ்வை (fashion walk) நடத்திக்காட்டியது நம் முப்பாட்டன் முருகனே என்கிற பேருண்மையை மேற்கத்திய வடுக வந்தேறிகள் உணரவேண்டும்.

இன்று இருகச்சை (two piece) ஆடைதான் நாகரிகம் என்று இந்த வந்தேறிகள் கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் நம் முப்பாட்டன் முருகனோ பழனி மலை மீதேறி ஒருகச்சை (single piece) ஆடை அணிந்து, தமிழனின் நாகரிகத்தை அன்றே குன்றிலிட்ட விளக்காக பறைசாற்றியிருக்கிறான். இன்று எதுவெல்லாம் நாகரிகம் என்று உலகம் நம்புகிறதோ, அதையெல்லாம் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லெமூரிய தமிழ் தேசிய பேரரசு, முப்பாட்டன் முருகனின் ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

* * * * * *

முப்பாட்டனின் வழித்தோன்றலான திப்பாட்டன் திருவள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுக வந்தேறிகளின் தமிழ்நில ஆக்கிரமிப்பை தமிழ்தேசிய நீதிநூலான திருக்குறளில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

அதாவது இந்த தமிழ்தேசிய கீதத்தின் இறுதியில் இடம்பெறும் ‘வடு’ என்கிற சொல், திராவிட வடுக வந்தேறிகளையே குறிக்கிறது. வடுகன் தீயினாலும் சுடுவான், நாவினாலும் சுடுவான் என்பதே திப்பாட்டன் திருவள்ளுவர் தமிழ் மறவருக்கு சொன்ன எச்சரிக்கை.

ஆனால், பிற்பாடு வந்தேறி வடுக திராவிட திம்மிகளின் தலைவரான கருணாநிதியோ, “நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது” என நெருப்பு வெறுப்பு வார்த்தை விளையாட்டு விளையாடி வடுகருக்கு ஆதரவான போக்கில் மாற்றி எழுதினார்.

திராவிட வடுக வந்தேறிகள், வரலாற்றை எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம் இந்த நிகழ்வு.

* * * * * *

‘தீரா விஷம்’ என்கிற ஆரிய சமஸ்கிருத வடுக வந்தேறிச் சொல்லையே தமிழில் ‘திராவிடம்’ என்று பொருள்மாறு மயக்க அணியை பயன்படுத்தி திராவிட வடுக வந்தேறி தான்தோன்றிகள் மாற்றிவிட்டதாக தமிழ் தேசிய மொழி ஆய்வாளரும், தீவிர உணர்வாளருமான மயில் மாணிக்கம் ‘திராவிட வடுக வந்தேறிகளின் திரிபுரசுந்தரி தீவிர விளையாட்டு’ என்கிற ஆய்வுநூலில் அம்மணப்படுத்தி இருக்கிறார்.

* * * * * *

‘சீமான்’ என்கிற தூயத்தமிழ் சொல்லையே ஆங்கில திராவிட வடுக வந்தேறிகள், வெட்கமே இல்லாமல் அப்படியே எடுத்துக்கொண்டு ‘see man’ என்கிற வார்த்தைத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவ்வாறே முப்பாட்டன் முருகனின் தமிழ்தேசிய ஆயுதமான ‘வேல்’ என்பதையே well என்று ‘நல்லது’ என்கிற பொருள்படும் வார்த்தையாகவும், கிணறு என்கிற அர்த்தத்தை தரும் வார்த்தையாகவும் வடுகர்கள் வெட்கமே இல்லாமல் திருடியிருக்கிறார்கள்

* * * * * *

சமீபமாக தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சாதியினருக்குமான மோதலை திராவிட வடுக வந்தேறிகளே திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்களோ என்கிற ஐயம் நமக்கு தோன்றுகிறது.

உதாரணமாக எழுத்தாளர் ‘புலியூர் முருகேசன்’ அவர்களது பெயரை வைத்தே நாம் ஆய்வு செய்து நிரூபிக்க முடியும். புலி என்பது தமிழ் தேசியப் பேரரசான சோழனின் கொடியில் இடம்பெற்ற தமிழ்தேசிய விலங்கு (பிற்பாடு இந்திய ஆரிய வடுக வந்தேறி கும்பல் புலியை நம்மிடமிருந்து அபகரித்து இந்திய தேசிய விலங்காக அறிவித்திருக்கிறார்கள்). மேலும் ‘புலி’ என்பது சமகாலத்தில் தமிழ்தேசிய வீரத்தின் அடையாளமும் கூட. முருகேசன் என்கிற பெயர் நம் முப்பாட்டன் முருகனை குறியீடாக உணர்த்துகிறது. இப்படி முழுக்க தமிழ் தேசிய தன்மையோடு ஒரு எழுத்தாளன் தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டால் திராவிட வடுக வந்தேறிகள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ்சாதியினரை தூண்டிவிட்டு தமிழனுக்கு தமிழனையே எதிரியாக்கி மோதிக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.

இதேதான் எழுத்தாளர் பெ.முருகன் விவகாரத்திலும் நடந்திருக்கிறது. முப்பாட்டன் முருகனின் பெயர்தான் அவர் பெயரும் என்றாலும் திராவிட வடுக வந்தேறிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்துக்கொண்டு திராவிட வடுக வந்தேறிகளின் தெய்வமான பெருமாளின் பெயரையும் தன் பெயருக்கு முன்பாக சூட்டிக்கொண்டதுதான் அவரது தவறு. அந்த தவறினை உணர்ந்து ‘பெருமாள்’ என்கிற வடுக வந்தேறி இடுபெயரினை துறந்து தமிழ்தேசியத்துக்கு அவர் மீண்டு வந்திருக்கிறார்.

* * * * * *

மக்கள் முதல்வர் நாமம் வாழ்க. மகத்தான தமிழ் தேசியம் ஓங்குக.

23 பிப்ரவரி, 2015

உசேனி

தொண்ணூறுகளின் துவக்கத்தில் உசேனி சென்னையில் ரொம்ப ஃபேமஸ். கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு என்று கருப்பு சிவப்பு வண்ணங்களில் எல்லா சுவர்களிலும் போஸ்டர் ஒட்டியிருப்பார்.

அவ்வப்போது தலைமயிரில் கயிறு கட்டி ஆம்னி காரை இழுப்பது. சுத்தியால் மார்பை அடித்துக் கொள்வது மாதிரி ஏதேனும் சாதனைகள் (!) செய்வார். புறநகர்களில் உசேனியின் சீடர்கள் என்று சொல்லி நிறைய பேர் கராத்தே க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அம்மாதிரி சீடர்களில் ஓரிருவரும் பல்லால் ஜீப்பை இழுப்பது என்றெல்லாம் சாதனை செய்ய ஆரம்பித்தார்கள்.

உசேனியின் ஒரு சாதனையை நேரில் பார்க்க பெசண்ட் நகர் கடற்கரைக்கு போயிருந்தேன். காருக்குள் தீவைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்ள போவதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தார். மாலை நான்கு மணி அளவுக்கு போயிருந்தபோது தீப்பிடிக்காத ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு ஓட்டை அம்பாஸடருள் போய் அமர்ந்துக் கொண்டார். சீடர்கள் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஐந்து நிமிடம் கார் எரிந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த உசேனி, மூர்ச்சை ஆனதைபோல தரையில் படுத்துக் கொண்டார். உடனே உடைகளை கழட்டிவிட்டு சீடர்கள் அவருக்கு விசிறி விட்டார்கள். போலிஸ் கூட ஏதோ கேஸ் போட்டதாக ஞாபகம். தீப்பிடிக்காத உடை அணிந்துகொண்டு தீக்குள் போவதில் என்ன சாதனை என்று எனக்கு புரியவேயில்லை. சினிமாவில் ஸ்டண்ட்மேன்கள் தினம் தினம் செய்யும் சாதனைதானே இதுவென்று தோன்றியது.

இதுமாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் ஏதோ ‘சாதனை’ என்று இடம்பெறுவார். ஒரு கட்டத்தில் இவரது சாதனைகளை செய்தித்தாள்கள் போட மறுக்க, இவரே ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டினார். உசேனி ஒரிஜினல் கராத்தேகாரரோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரிஜினல் ஓவியர். சிற்பங்களும் செய்வார் என்பது மட்டும் உண்மை. பெசண்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு தொண்ணூறுகளின் இறுதியில் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். என்னுடன் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக சவுந்தர் என்றொரு மதுரைக்காரர் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர் மதுரை ஓவியர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்தவர். ஊரில் இருக்கும் போது உசேனி அவருக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு என்பார். புன்னகை மன்னன் படம் வந்தபோது, தியேட்டரில் கமல்ரசிகர்கள் உசேனியிடம் வம்பு செய்ததாகவும், உசேனி ஒரே செகண்டில் குங்ஃபூ கராத்தே அடி கொடுத்து பத்து பேரை வீழ்த்தியதாகவும் சவுந்தர் சொல்வார். உண்மையில் உசேனியின் ஆசை திரையுலகம்தான். சுத்தமாக இவருக்கு நடிப்பே வராது, சண்டையும் சுமார்தான் என்பதால் வேறு வழியில்லாமல் கராத்தே க்ளாஸ் ஆரம்பித்தார்.

த.மா.கா உருவானபோது அதன் சென்னை மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கராத்தே தியாகராஜன். இவர் நிஜமாகவே கராத்தே வீரர். உசேனி ஒரு டூப்ளிகேட், அவருக்கு கராத்தாவே தெரியாது என்பதை ஊரறிய வைத்தவர் இவர்தான். எந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போட்டிகளிலும் உசேனியோ, அவரது சீடர்களோ கலந்துக் கொள்வதில்லை. மாறாக ஜப்பானிலிருந்து நேரடி பட்டம் என்று இவர்களாக கொடுக்கும் பெல்ட்டுகள் போலி என்று தொடர்ச்சியாக தியாகராஜன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனால் உசேனியின் பிசினஸ் படுமோசமாக அடிபட ஆரம்பித்தது. அவரிடம் கராத்தே க்ளாசுக்கு சேர்ந்தவர்கள் விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் அவர் தன் பெயருக்கு முன்பாக ‘ஷீஹான்’ என்று பட்டம் போட்டுக் கொள்வார். கராத்தே தியாகராஜன், இவருடைய டவுசரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவிழ்க்க ஆரம்பிக்க ‘ஷீஹான்’ எங்கே போனதென்றே தெரியவில்லை.

இடையில் கிடைத்த குறுகியகால புகழை வைத்து உசேனி முயற்சித்த சில தொழிற்வாய்ப்புகள் படுதோல்வி அடைந்தன. அவரது தம்பியை சினிமா ஹீரோ ஆக்கும் முயற்சிக்கு மரண அடி. திருட்டு விசிடியை தடுக்க சிறப்பு படை என்று உசேனி தயாரிப்பாளர்களிடம் பல லட்சரூபாய் வாங்கினார். ஆனால் ‘முதல்வன்’ படம் ஊர் ஊராக கோயில் திருவிழாக்களில் கூட திரையிடப்பட, உசேனி ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு கூட லாயக்கற்றவர் என்று திரையுலகுக்கு தெரிந்தது. திருட்டு விசிடியை தடுப்பதற்கு மாறாக மாட்டிக் கொள்பவர்களிடம் ‘கட்டிங்’ வாங்கினார்கள் அவரது ஆட்கள் என்றுகூட செய்திகள் அப்போது வந்தன.

கராத்தே தியாகராஜன் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்தவர். த.மா.கா, திமுக ஆட்சியின் ஆதரவோடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினாலேயே, அவரை சமாளிக்க தன்னை அதிமுககாரர் என்பது மாதிரி காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அம்மாவின் பிறந்தநாள் ஒன்றுக்கு தன்னுடைய ரத்தத்தாலேயே ஓவியம் வரைந்து அம்மாவிடம் கொடுத்து திடீரென்று அதிமுக வட்டாரங்களில் பிரபலம் ஆனார்.

அதிலிருந்து வருடாவருடம் அம்மா கண்டுகொள்கிறாரோ இல்லையோ இவர் பாட்டுக்கு இரத்தத்தில் சிலை மாதிரி ஏதாவது ‘பயங்கரமான’ சாதனையை செய்துக்கொண்டே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக ஏதோ சிலை செய்து தருகிறேன் என்று (சசிகலா) நடராசனிடம் ஒரு கொழுத்த தொகையை ஆட்டை போட்டதும், அதை அவர் திருப்பிக் கேட்டபோது கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று கூப்பாடு போட்டதும் நினைவிருக்கலாம்.

கூட்டத்தில் வீறிட்டு அழுது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் குழந்தையை மாதிரியானவர் இவர். எனக்கென்னவோ இவருக்கு ஏதோ சீரியஸான சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதே பிராப்ளம்தான் சீமானுக்கும், உமாசங்கருக்கும்கூட இருக்கும் போல.

ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நடத்துவது மன்னார் & கம்பெனிதான் என்றாலும், அதைவைத்தே இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக ஒருவர் எப்போதும் ‘லைம்லைட்’டில் இருந்துக்கொண்டே இருப்பது மாபெரும் சாதனைதான்.

16 பிப்ரவரி, 2015

எம்.ஜி.ஆரின் வயது என்ன?

1987 டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் இறந்தார்.

டிவியில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முகத்தை குளோஸப்பில் காட்டும்போது, “எண்பது வயசு மாதிரியா இருக்காரு வாத்தியாரு” என்று பார்த்தசாரதி மாமா சொன்னார்.

எங்கப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. “சட்டுன்னு பத்து வயசு ஏத்திட்டியே மாமா” என்றார்.

“லச்சிம்பதி, உனக்கு விஷயம் தெரியாது. எம்.ஜி.ஆர் சினிமாவுலே ரொம்ப லேட்டாதான் பிக்கப் ஆனாரு. ஹீரோயினெல்லாம் சின்னப் பொண்ணுங்குறதாலே சங்கடப்பட்டுக்கிட்டு பத்து வயசு குறைச்சு சொல்லிட்டாரு”

அதாவது 1917, ஜனவரி 17 என்பது அஃபிஷியலாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். பார்த்தசாரதி மாமாவின் கணக்குப்படி பார்த்தால் அவர் பிறந்தது 1907. பழைய வாத்தியார் ரசிகர்கள் நிறையபேர் இந்த கூற்றினை ஒப்புக் கொள்கிறார்கள்.

உண்மையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அவருக்கே தெரியாது என்பார்கள். சினிமாவில் புகழ்பெற்ற பிறகு குன்ஸாக ஏதோ ஒரு வருடத்தை சொல்லவேண்டுமே என்று யோசித்தவர், இந்திராகாந்தி பிறந்த வருடத்தையே தன்னுடைய பிறந்தவருடமாக சொல்லிவிட்டார் என்றும் சிலர் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆருக்கு நிறைய மர்மங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவரது வயது.

எம்.ஜி.ஆரின் சாதி பற்றிகூட இதுமாதிரி ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் உலவுவது உண்டு.

பிறப்பால் ஈழத்தை சார்ந்தவர். அவரது அப்பா கோபாலமேனன் கேரளத்தில் பிறந்தவர். அந்த காலத்திலேயே தலித் பெண் ஒருவரை (அன்னை சத்யா) காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு ஊர்விலக்கத்துக்கு உள்ளானார். எனவே பிழைப்புக்காக இலங்கை சென்று, கண்டியில் அரசுப்பணி புரிந்தார் என்பது ஊரறிந்த வரலாறு.

அப்படியில்லை. ‘மேனன்’ என்பது கோபாலனுக்கு கொடுக்கப்பட்ட கவுரவப் பட்டம், சாதியல்ல. அவரது முன்னோர் பழனிக்கு அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ‘மன்றாயர்’ சாதி என்று சொல்வோரும் உண்டு. எம்.ஜி.ஆரை மலையாளி என்றுகூறி தமிழகத்தில் தமிழ் அரசியல் நடந்தபோது, தானும் தமிழன்தான் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர் உருவாக்கிய தியரி இதுவென்றும் சொல்வார்கள்.

கொங்கு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு உலகறிந்தது. அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் எம்.ஜி.ஆரை ‘கவுண்டர்’ என்று நிரூபிக்க மெனக்கெட்டதும் உண்டு.

எம்.ஜி.ஆர் மேனனா, மன்றாயரா, கவுண்டரா என்று உறுதிப்படுத்த இன்று ஆட்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். போலவே அவரது பிறந்த வருடமும் 1907-ஆ அல்லது 1917-ஆ என்று துல்லியமாக ஆதாரப்பூர்வமாக சொல்லக்கூடியவர்களும் இல்லை. எனவே அதிமுகவினர் வருடாவருடம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை 1917ல் கணக்கில் வைத்தே கொண்டாடுவதால், அதையே நாமும் ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயதான சோதிடரை மடிப்பாக்கம் ஐயப்பன் கோயில் அருகில் சந்தித்தேன். சொந்த பந்தங்களில் யாருக்காவது வரன் பார்ப்பதாக இருந்தால் இவரிடம்தான் அம்மா ஜோடிப்பொருத்தம் பார்ப்பார். இப்போது சோதிடர் எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில், எம்.ஜி.ஆருக்கு சோதிடம் பார்த்திருக்கிறேன் என்றார். ஆலந்தூர் மார்க்கெட் அருகில் அப்போது சோதிடர் இருந்திருக்கிறார். 1971 தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த எம்.ஜி.ஆர், அப்பகுதியில் பிரபலமான சோதிடராக அப்போது இருந்த இவரிடம், தன்னுடைய எதிர்காலம் குறித்து சோதிடம் கேட்டதாகவும், தான் மிகத்துல்லியமாக கணித்துச் சொன்னதாகவும் சொன்னார். “இன்னும் ஆறே வருஷத்தில் நீங்கதான் நாட்டை ஆளப் போறீங்க” என்று  சொன்னபோது எம்.ஜி.ஆர் நம்பாமல் புன்சிரிப்பு சிரித்தாராம். அவர் ஆட்சிக்கு வந்தபின் ஆள் விட்டு தன்னை தேடியதாகவும், அதற்குள்ளாக தான் இடம்மாறி விட்டதாகவும் கூடுதல் தகவல் தந்தார். “ஒருவேளை அப்போ எம்.ஜி.ஆர் ஆளுங்க என்னை கண்டுபிடிச்சி இருந்தாங்கன்னா, இப்போ என்னோட நிலைமையே வேற. நம்ம தலையில் அப்படி எழுதிவெச்சிருக்கு, நாமென்ன செய்யமுடியும்” என்று நொந்துக் கொண்டார்.

சட்டென்று எனக்குள் பல்பு எரிந்தது. “எம்.ஜி.ஆர் உங்களிடம் சோதிடம் பார்த்திருந்தால், அவருடைய பிறந்த வருடம் உங்களுக்கு சொல்லியிருப்பாரே?” என்று கேட்டேன்.

“ஆமாம், சொன்னாரு. அறுபத்தியாறாவது வயசுலே அவர் நாட்டை ஆளுவாருன்னுதான் கணிச்சேன். 1911தான் அவரோட பிறந்தவருஷம். ஏடிஎம்கே காரங்க தப்பா கொண்டாடுறாங்க” என்றார்.

ஜோதிடர்கள் அடித்துவிடுவார்கள்தான். இருந்தாலும் தேவுடா. இப்போது மூன்றாவதாக ஒரு வருடம் குதித்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் ரோலக்ஸ் வாட்ச் இன்னும் அவரது சமாதியில் ‘டிக் டிக்’கிக் கொண்டிருக்கிறது என்கிற மர்மத்தைபோல, அவர் பிறந்த வருடமும் மர்மத்துக்கு மேல் மர்மமாகிக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான (கிட்டத்தட்ட தமிழக அரசவை) ஜோதிடரான வித்வான் வே.லட்சுமணனும் கூட 1911ஐ கணக்கில் வைத்துதான் எம்.ஜி.ஆருக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார் என்று முன்னெப்போதோ கேள்விப்பட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழ் சினிமாவை முப்பதாண்டுகள் கட்டி ஆண்டவர். ஹாட்ரிக் தேர்தல் வெற்றியை அடைந்து தமிழகத்தை பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். அவருடைய பிறந்த வருடம் எதுவென்று இன்னமும் துல்லியமாக நமக்கு தெரியாது.

11 பிப்ரவரி, 2015

இந்தியா டுடே

இருபத்தைந்து ஆண்டுகள் என்பது வரலாற்றுக்கு வேண்டுமானால் மிகச்சிறிய காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிமனிதனின் வாழ்வில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் காலம். சமகாலத்தில் என் கண் முன்னே பிறந்து, தன்னுடைய இறுதியை ‘இந்தியா டுடே’ எட்டுகிறது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அருண்பூரி தன் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகால இந்தியா டுடே தமிழ் பதிப்பின் காலம் நிறைவடைகிறது.

அப்பத்திரிகையின் கொள்கைப்பாதையாக அடிநாதமாக தோன்றும் வலதுசாரிய தாராளமயவாத பார்வை நமக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், நவீனத்தமிழ் வாழ்வின் அடையாளங்களை, சிக்கல்களை, அருமை பெருமைகளை அவ்வப்போது பளிச்சென்று வெளிப்படுத்த இந்தியா டுடே தவறியதில்லை.

‘இண்டியா டுடே’ என்கிற பெயரை சண்டை போட்டு ‘இந்தியா டுடே’வாக மாலன் சார் மாற்றினார் என்பார்கள். ‘ரோஜா’ திரைப்படம் வருவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை (கால்பக்க அளவுக்குதான்) வெளியிட்ட பத்திரிகை. இந்தியா டுடே பரிந்துரைக்கும் புள்ளிகள், பிரபலங்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்கிற எண்ணம் உடனடியாக ஏற்படும். நினைவில் நிற்கக்கூடிய பல கவர்ஸ்டோரிகளை வெளியிட்ட இதழ். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்த முனைந்தபோது டெல்லி பல்கலைகழக மாணவர் ராஜீவ்கோஸ்வாமி, தன் உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்ட காட்சியை இந்தியா டுடே அட்டைப்படமாக வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு கொள்கைகளின் தாயகமான தமிழகத்தில் அது பெரிய சச்சரவினை உருவாக்கியது. ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையக்கூடிய கருத்தியல் பார்வைக்கும் அதுவே காரணம். நக்கீரன் பத்திரிகை வீரப்பனை முதன்முதலாக பேட்டி கண்டபோது, அதே படங்கள் இந்தியா டுடேவிலும் வெளியிடப்பட்டு ஏற்பட்ட சர்ச்சையும் நினைவுக்கு வருகிறது.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தை நெருக்கமாக்கிய முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா டுடே தொடர்ந்துக் கொண்டிருந்தது. பத்திரிகையுலகில் பிரபலமான ‘கதை’ ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

அது ஒரு புலனாய்வு வார இதழ் (இப்போது வாரமிருமுறை). இதழ் அச்சுக்கு போகவேண்டிய நாளில் பணியாளர்கள் எல்லோருக்கும் மூச்சு முட்டுமளவுக்கு வேலை இருக்கும். அதிரடியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த உதவி ஆசிரியர் ஒருவர் திடீரென மூர்ச்சை ஆனார்.

விஷயம் அறிந்த ஆசிரியர், முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து வெளிவந்து மலங்க மலங்க விழித்துக்கொண்ட உதவி ஆசிரியரை உடனே தன்னுடைய ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாராம். பரிசோதித்த மருத்துவர், பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து, “இதை ஒருவேளை சாப்பிடச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்” என்றிருக்கிறார். மருத்துவமனையிலேயே இருந்த பார்மஸிக்கு போய் பிரிஸ்கிரிப்ஷனை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பார்மஸி ஆள் சிரித்துக்கொண்டே, “என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்” என்று திருப்பிக் கொடுத்திருக்கிறார். ‘ஒரு ஃபுல் மீல்ஸ்’ என்று எழுதியிருக்கிறார் குறும்புக்கார டாக்டர். அதாவது உதவி ஆசிரியருக்கு ஏற்பட்டிருந்தது பசி மயக்கம். தன்னுடைய ஊழியன் ஒருவன் பசியால் மயங்கிய அவலத்தை ஆசிரியரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

எதுவும் பேசாமல் உதவி ஆசிரியரை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வயிறு நிரம்பச் சாப்பிட்டபிறகு ஆசிரியர் கேட்டாராம்.

“ஏன் தம்பி, சாப்பிடலை?”

“காசு இல்லை அண்ணாச்சி!”

“இஷ்யூ முடிக்கிற தேதி அன்னிக்கு எல்லாருக்கும் சாப்புட காசு கொடுக்கணும்னு அக்கவுண்டண்ட் கிட்டே சொல்லியிருக்கேனே? காசு கொடுக்கலையா?”

“அய்யோ. அப்படி இல்லைண்ணே. அவரு அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாரு”

“அப்போன்னா அந்த காசை என்ன பண்ணே?”

“இந்தியா டுடே இலக்கிய மலர் வாங்கிட்டேண்ணே”

நிஜமாகவே நடந்த சம்பவம் இது. இந்தியா டுடேவின் இலக்கிய மலர்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

இந்தியா டுடே தமிழில் தொடங்கியபோது நான் பள்ளி மாணவன். அப்போது ஆசிரியர்கள் இந்த இதழை தொடர்ந்து வாசிக்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைப்பார்கள் (பிற்பாடு இதுமாதிரி ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகை ‘புதிய தலைமுறை’).

என்னுடைய அண்ணன் பாலாஜி, ஆரம்பகால இந்தியா டுடே இதழ்கள் அத்தனையையும் சேகரித்து தனித்தனியாக ‘பைண்ட்’ செய்து வைத்திருப்பார். அப்போதெல்லாம் அதுதான் எனக்கு இயர்புக். இன்றைய தலைமுறையினருக்கு இந்தியா டுடே, அதன் செக்ஸ் சர்வேக்களால் அடையாளம் காணப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமான நிலைமை. கமல்ஹாசனின் கலையுலகப் பொன்விழாவின் போது இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ் என்றென்றும் எனக்கு நினைவில் நிற்கும்.

லுங்கி கட்டிக்கொண்டு செல்பவர்கள் மால்களிலும், சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற சூழல் இருந்தபோது, அதுகுறித்த என்னுடைய கருத்து போட்டோவோடு இந்தியா டுடேவில் வெளியானது. எப்படியோ சின்ன துண்டு போட்டு பாஸ்போர்ட்சைஸ் படமாகவாவது வரலாற்றில் இடம்பெற்று விட்டோம்.

குட் பை இந்தியா டுடே!

9 பிப்ரவரி, 2015

கறுப்பர் நகரம்

‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.

இந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்சிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.

கறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.

இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

எழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.

பெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.

அக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செங்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.

கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.

தான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க?” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.

மனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.

வரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.

வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.

இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.

நூல் : கறுப்பர் நகரம்

எழுதியவர் : கரன் கார்க்கி

பக்கங்கள் : 352

விலை : ரூ.195

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
போன் : 24332424, 24332924, 24339024

3 பிப்ரவரி, 2015

இசை

SJ Surya came with bigbang back

இளமை துள்ளோ துள்ளுவென்று துள்ளுகிறது. கதாநாயகியின் தொப்புளை பியானோவாக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் இதயம் ஏகத்துக்கும் எகிறி குதிக்கிறது.
நாயகியின் பெயர் சாவித்ரியாம். இடுக்குப்பல். வட்டமான முகம். ரோஜா நிறம். கழுத்துவரை பக்கா ஃபேமிலி லுக். முகலாய இளவரசிகள் பயன்படுத்திய மஸ்லின் துணிதான் இடைவேளை வரை இவருக்கு தாவணி. டிரான்ஸ்பரண்டாக இரு கோடுகள் ஜெயராஜின் ஓவியம் போல அப்பட்டமாக கேமிராவில் பதிவாகிறது. இவரது இடுப்புக்கு ஸ்பெஷல் லைட்டிங் வைத்திருக்கிறார் கேமிராமேன். நடிப்புக்கு ஜோதிகாவையும், சிம்ரனையும் டிப்பி அடிக்கிறார்.

சூர்யாவுக்கு முகம் கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் சேட்டைகளுக்கு குறைவில்லை. பாரதிராஜா மாதிரி கம்பீர குரல். இவருடைய பாம்புகடிக்கு சாவித்ரி மருந்து கொடுக்கும் லாவகத்தை பார்க்கும்போது, நம்மை ஏதாவது தண்ணிப் பாம்பாவது கொத்தித் தொலைக்கக்கூடாதா என்று ஆதங்கம் ஏற்படுகிறது.

படத்தின் தொடக்க காட்சிகள் படைப்பாற்றலின் உச்சம். இசை என்பது கேட்கக் கடவ உருவான சமாச்சாரம். அதை விஷூவலாக மாற்றிக் காட்டமுடியுமா என்கிற சவாலை ஏற்று அனுபவித்து இழைத்திருக்கிறார். குறிப்பாக மலைமுகட்டில் நின்றவாறே நோட்ஸுக்கு கை ஆட்டும் காட்சி ‘ஏ’ க்ளாஸ். டைட்டானிக்தான் இன்ஸ்பிரேஷன். இருந்தாலும் அதை தமிழ்ப்படுத்தியிருப்பதில் சூர்யாவின் தனித்தன்மை பளீரென்று கவர்கிறது. வனத்துக்கு நடுவே அருவிக்கு அருகில் ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரியான ஐடியாக்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கூட வந்திருக்க வாய்ப்பில்லை.

சத்யராஜை இப்படியும் ஓர் இயக்குனர் பயன்படுத்த முடியுமா என்று காட்சிக்கு காட்சி ஆச்சரியம். அவருடைய நடிப்புலக வாழ்வின் மைல்கல்.

எஸ்.ஜே.சூர்யா, தமிழ் நிலம் தன்னகத்தே உருவாக்கியிருக்கும் மாபெரும் இண்டெலெக்ச்சுவல். யாருடைய தாக்கத்தாலும் பாதிக்கப்படாமல் உருவாகியிருக்கும் சுயம்பு.

‘இசை’ வணிகரீதியாக வெல்லுகிறதோ இல்லையோ, படைப்பாற்றல் ரீதியாக தமிழ் சினிமாவின் புலிப்பாய்ச்சல். சினிமா என்பது டைரக்டர்களின் மீடியம் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம்.

ஓக்கே. படம் பற்றிய உள்ளடக்கரீதியான விமர்சனம் ஓவர்.

* * * * * * *

இசை, இன்னொரு மாதொருபாகன்.

தமிழ்-இந்திய பிரபலங்கள் குறித்து இதுவரை நாம் வாய்மொழிவரலாறாக கேள்விப்பட்ட அத்தனை வக்கிரங்களையும் காட்சியாக்கி இருக்கிறது. மொத்த கேஸையும் தூக்கி சத்யராஜ் கதாபாத்திரத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

இது புனைவு. கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. படைப்பாளிக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது மாதிரி பஜனை கோஷங்கள் வேலைக்கு ஆகாது.

சூர்யா, ஏ.கே.சிவாவாக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அவர் கொடுக்கும் போஸ் வாழும் இளம் இசையமைப்பாளரை (தமிழ்ச்சூழலில் இன்றைய தேதிக்கு 62 வயது வரைக்கும் ‘இளம்’தான்) நினைவுபடுத்துகிறது. அந்த பாத்திரத்தின் ஒர்க்கிங் ஸ்டைல், தனிப்பட்ட பண்புகள் அனைத்துமே அவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக ‘இசைக்கடல்’ என்கிற பட்டம் வேறு.

இசைக்கடலுக்கு வில்லன் இசைதேவனாம். தமிழில் இசைக்கு யார் தேவன் என்று கேட்டால் பிறந்த குழந்தை கூட ‘ங்கா..ங்காஜா’ என்று மழலைமொழியில் சொல்லிவிடும்.

தான் துப்புவது கூட இசை. அனைவரும் தன் காலில் விழுந்து அதை பொறுக்கிக் கொண்டு போகவேண்டும் மாதிரி தன்னகங்காரம் என்பதெல்லாம் அப்படியே அவருக்கு பொருந்துவது மாதிரி காட்சியமைப்புகள். அதுவும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் ஒருவரே முகத்தில் காறித்துப்பப்பட்டு போவது மாதிரி ஒரு காட்சி…

படம் நெடுக இதுமாதிரி காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் இசைதேவன் மீதான இயக்குனரின் விமர்சனமாக இருக்கலாம். பிரச்சினை இல்லை.

இசைக்கடலை நிலைகுலைக்க வைக்க இசைத்தேவன் செய்யும் கற்பனைக்கும் எட்டாத வக்கிரமான செயல்பாடுகள்?

இது கற்பனை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் படம் பார்க்கும் ரசிகன், நிஜத்தையும் நிழலையும் ஒப்பிட்டுப் பார்த்து அவரை ‘கதாபாத்திர படுகொலை’ (நன்றி : யாரோ ஒரு தமிழிலக்கியவாதி) செய்துவிட மாட்டானா?

தமிழிலக்கியம்தான் வக்கிரம் நிறைந்து வன்மமான இரத்த பூமியாகி இருக்கிறது. அந்த போக்கினை சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறார் சூர்யா. இனி வேண்டாதவர்களை போட்டுத்தள்ள சினிமாவை ஆயுதமாக பயன்படுத்துவார்கள் படைப்பாளிகள். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்னவாக வேண்டுமென்றாலும் சித்தரித்து கருத்து சுதந்திரத்தை காத்துக் கொள்வார்கள்.

ஏன் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேச முடியாமல் வாயை இறுக தைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டஸ்ட்ரிகாரர்கள் என்பது புரிகிறது. படம் இத்தனை ஆண்டுகளாக பிசினஸ் ஆகாததின் ரகசியமும் அதுவாகதான் இருக்கக்கூடும்.