23 பிப்ரவரி, 2015

உசேனி

தொண்ணூறுகளின் துவக்கத்தில் உசேனி சென்னையில் ரொம்ப ஃபேமஸ். கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு என்று கருப்பு சிவப்பு வண்ணங்களில் எல்லா சுவர்களிலும் போஸ்டர் ஒட்டியிருப்பார்.

அவ்வப்போது தலைமயிரில் கயிறு கட்டி ஆம்னி காரை இழுப்பது. சுத்தியால் மார்பை அடித்துக் கொள்வது மாதிரி ஏதேனும் சாதனைகள் (!) செய்வார். புறநகர்களில் உசேனியின் சீடர்கள் என்று சொல்லி நிறைய பேர் கராத்தே க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அம்மாதிரி சீடர்களில் ஓரிருவரும் பல்லால் ஜீப்பை இழுப்பது என்றெல்லாம் சாதனை செய்ய ஆரம்பித்தார்கள்.

உசேனியின் ஒரு சாதனையை நேரில் பார்க்க பெசண்ட் நகர் கடற்கரைக்கு போயிருந்தேன். காருக்குள் தீவைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்ள போவதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தார். மாலை நான்கு மணி அளவுக்கு போயிருந்தபோது தீப்பிடிக்காத ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு ஓட்டை அம்பாஸடருள் போய் அமர்ந்துக் கொண்டார். சீடர்கள் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஐந்து நிமிடம் கார் எரிந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த உசேனி, மூர்ச்சை ஆனதைபோல தரையில் படுத்துக் கொண்டார். உடனே உடைகளை கழட்டிவிட்டு சீடர்கள் அவருக்கு விசிறி விட்டார்கள். போலிஸ் கூட ஏதோ கேஸ் போட்டதாக ஞாபகம். தீப்பிடிக்காத உடை அணிந்துகொண்டு தீக்குள் போவதில் என்ன சாதனை என்று எனக்கு புரியவேயில்லை. சினிமாவில் ஸ்டண்ட்மேன்கள் தினம் தினம் செய்யும் சாதனைதானே இதுவென்று தோன்றியது.

இதுமாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் ஏதோ ‘சாதனை’ என்று இடம்பெறுவார். ஒரு கட்டத்தில் இவரது சாதனைகளை செய்தித்தாள்கள் போட மறுக்க, இவரே ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டினார். உசேனி ஒரிஜினல் கராத்தேகாரரோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரிஜினல் ஓவியர். சிற்பங்களும் செய்வார் என்பது மட்டும் உண்மை. பெசண்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு தொண்ணூறுகளின் இறுதியில் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். என்னுடன் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக சவுந்தர் என்றொரு மதுரைக்காரர் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர் மதுரை ஓவியர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்தவர். ஊரில் இருக்கும் போது உசேனி அவருக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு என்பார். புன்னகை மன்னன் படம் வந்தபோது, தியேட்டரில் கமல்ரசிகர்கள் உசேனியிடம் வம்பு செய்ததாகவும், உசேனி ஒரே செகண்டில் குங்ஃபூ கராத்தே அடி கொடுத்து பத்து பேரை வீழ்த்தியதாகவும் சவுந்தர் சொல்வார். உண்மையில் உசேனியின் ஆசை திரையுலகம்தான். சுத்தமாக இவருக்கு நடிப்பே வராது, சண்டையும் சுமார்தான் என்பதால் வேறு வழியில்லாமல் கராத்தே க்ளாஸ் ஆரம்பித்தார்.

த.மா.கா உருவானபோது அதன் சென்னை மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கராத்தே தியாகராஜன். இவர் நிஜமாகவே கராத்தே வீரர். உசேனி ஒரு டூப்ளிகேட், அவருக்கு கராத்தாவே தெரியாது என்பதை ஊரறிய வைத்தவர் இவர்தான். எந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போட்டிகளிலும் உசேனியோ, அவரது சீடர்களோ கலந்துக் கொள்வதில்லை. மாறாக ஜப்பானிலிருந்து நேரடி பட்டம் என்று இவர்களாக கொடுக்கும் பெல்ட்டுகள் போலி என்று தொடர்ச்சியாக தியாகராஜன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனால் உசேனியின் பிசினஸ் படுமோசமாக அடிபட ஆரம்பித்தது. அவரிடம் கராத்தே க்ளாசுக்கு சேர்ந்தவர்கள் விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் அவர் தன் பெயருக்கு முன்பாக ‘ஷீஹான்’ என்று பட்டம் போட்டுக் கொள்வார். கராத்தே தியாகராஜன், இவருடைய டவுசரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவிழ்க்க ஆரம்பிக்க ‘ஷீஹான்’ எங்கே போனதென்றே தெரியவில்லை.

இடையில் கிடைத்த குறுகியகால புகழை வைத்து உசேனி முயற்சித்த சில தொழிற்வாய்ப்புகள் படுதோல்வி அடைந்தன. அவரது தம்பியை சினிமா ஹீரோ ஆக்கும் முயற்சிக்கு மரண அடி. திருட்டு விசிடியை தடுக்க சிறப்பு படை என்று உசேனி தயாரிப்பாளர்களிடம் பல லட்சரூபாய் வாங்கினார். ஆனால் ‘முதல்வன்’ படம் ஊர் ஊராக கோயில் திருவிழாக்களில் கூட திரையிடப்பட, உசேனி ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு கூட லாயக்கற்றவர் என்று திரையுலகுக்கு தெரிந்தது. திருட்டு விசிடியை தடுப்பதற்கு மாறாக மாட்டிக் கொள்பவர்களிடம் ‘கட்டிங்’ வாங்கினார்கள் அவரது ஆட்கள் என்றுகூட செய்திகள் அப்போது வந்தன.

கராத்தே தியாகராஜன் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்தவர். த.மா.கா, திமுக ஆட்சியின் ஆதரவோடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினாலேயே, அவரை சமாளிக்க தன்னை அதிமுககாரர் என்பது மாதிரி காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அம்மாவின் பிறந்தநாள் ஒன்றுக்கு தன்னுடைய ரத்தத்தாலேயே ஓவியம் வரைந்து அம்மாவிடம் கொடுத்து திடீரென்று அதிமுக வட்டாரங்களில் பிரபலம் ஆனார்.

அதிலிருந்து வருடாவருடம் அம்மா கண்டுகொள்கிறாரோ இல்லையோ இவர் பாட்டுக்கு இரத்தத்தில் சிலை மாதிரி ஏதாவது ‘பயங்கரமான’ சாதனையை செய்துக்கொண்டே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக ஏதோ சிலை செய்து தருகிறேன் என்று (சசிகலா) நடராசனிடம் ஒரு கொழுத்த தொகையை ஆட்டை போட்டதும், அதை அவர் திருப்பிக் கேட்டபோது கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று கூப்பாடு போட்டதும் நினைவிருக்கலாம்.

கூட்டத்தில் வீறிட்டு அழுது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் குழந்தையை மாதிரியானவர் இவர். எனக்கென்னவோ இவருக்கு ஏதோ சீரியஸான சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதே பிராப்ளம்தான் சீமானுக்கும், உமாசங்கருக்கும்கூட இருக்கும் போல.

ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நடத்துவது மன்னார் & கம்பெனிதான் என்றாலும், அதைவைத்தே இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக ஒருவர் எப்போதும் ‘லைம்லைட்’டில் இருந்துக்கொண்டே இருப்பது மாபெரும் சாதனைதான்.

9 கருத்துகள்:

  1. .
    பணத்துக்காகவும் ,புகழுக்காகவும் சிலர் செய்யும் 'சிந்துபாத்' வேலைகள் .மக்களை மாக்களாக்க தன்னையே மடமையாக்கும் முயற்சி இந்த உசேனியின் செயல் .
    தங்கள் பதிவு ஒரு விளக்கமான பதிவு ,
    இதைவிட யாரும் விளக்கம் தர முடியாது .
    ஆட்டுத்தோல் உரிப்பது போல் உரித்து உண்மை வர செய்து விட்டீர்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நேற்று ரத்தச்சிலை, இன்று சிலுவை. எப்படி திட்டுவதென்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. முப்பது ஆண்டுகளாக ஏமாளிகள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. Semayaana post! Indha moodar koodathai velicham pottu kaatiyatharku nandri!

    பதிலளிநீக்கு
  5. //நடத்துவது மன்னார் & கம்பெனிதான் என்றாலும்//

    :-) :-)

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பதிவு ஏன் இட்டீர்கள் என்று தெரியவில்லை.



    ஒருவர் செய்த சாதனைப் பட்டியலை சொல்வது அவர் பிறருக்குச் செய்த உதவிகளைப் புகழ்வது சொன்ன அல்லது எழுத்துக்களை சுட்டி படிப்பவருக்கு பயன்பெற விழைவது வழமை.

    இங்கென்னவோ டுபாக்கூர் போஸ்டர்களுடன் காலம் கடத்தியவர் மன்னார் அண்ட் கம்பெனியை நடத்தியவர் என்று பதிவா? அவர் சமூகத்துக்கு ஏதாவது கெடுதல் செய்தாரா, தேர்தலில் நின்று, பதவியில் இருந்து தேன் எடுக்கும் போது புறங்கையில் ருசி பார்த்தாரா? மனைவி -- துணைவி என்ற சொற்களுக்கு புதிய சமூக அந்தஸ்து கொடுத்தாரா?

    எம் ஜி ஆர் பிறந்த தேதி போன்ற பதிவுகளே பரவாயில்லை என எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. சில வருடங்கள் தொலைகாட்சியில் "திடீர் சமையல்"னு ஒரு ப்ரோக்ராம் பன்னுனார் நம்ம உசேனி... காய்கறி எல்லாத்தையும் கையாலே பிச்சி போட்டுட்டு பின்னாடி சுடு வச்சமாதிரியே வேகமா செஞ்சுட்டு இதன் திடீர் சமையல்னு சொல்லுவப்ல .....இத ஒரு ப்ரோக்ராம்னு போட்டனுங்க .....

    பதிலளிநீக்கு
  8. நடுக்கடலில் சமையல், மின்னல் சமையல் , திடீர் சமையல் என சமையலில் பல வரைட்டி காட்டுகிறார் பரவாயில்லையே என்று நினைத்தேன்.
    விஜய் டிவி நடத்தும் கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியில் பரிதாபமாக கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். அந்த திராபை நிகழ்ச்சியில் கூட சோடை போகவில்லை போலும். சமையல் செய்யும்போது சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார். The Aviator படத்தில் வரும் ஹீரோ போல அவர் ஒரு OCD நோயாளிதான்.
    https://www.youtube.com/watch?v=EsI3LjhH95E

    பதிலளிநீக்கு