ஜாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட், 2020

விஜயகாந்த்

தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது.

பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார்.

நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம்.

அந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்கு போடும்.

பேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது.

இருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர்.

எடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

என்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.

கீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ’வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.

என்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ?

பேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள்.

சாலை மறியல்.

கூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.

இந்தி எதிர்ப்புப் போர்.

இந்தி ஒழிக. தமிழ் வாழ்க.

தேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.

“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.

ம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது.

போர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.

“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.

‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே?’ கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்…

யாரும் எதிர்பாரா வகையில்..

டிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது.

பல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது.

ங்கொய்யென்று ரீங்காரம்.

நிமிர்ந்துப் பார்த்தார்.

பார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. நெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.

திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..

“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” – சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

யாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.

“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.

ம்… நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

(‘விஜயகாந்த்’ புத்தகத்தின் முதல் அத்தியாயம்)

29 டிசம்பர், 2018

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி!

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி  என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.

ப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.

அவ்வளவுதான் மேட்டர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.

மினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா?’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.

தப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.

ஓக்கே.

விஷயத்துக்கு வருவோம்.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.

அவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.

இலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில்  வியப்பேதுமில்லை.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.

புலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.

இலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா?” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.

கடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா?” என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.

அப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.

“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.

பாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.

இதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.

முன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.

1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.

அந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.
யாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.


அதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார். 
உப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.

என்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை?

ஒன்றுமில்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில்  கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

நினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

அந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.

நான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.

சூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.

கம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.

அந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.

உடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/?p=4169

லிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா?

எவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.

நாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் -

ஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

ஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.

வேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.

------

“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.

இருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.

ஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.

‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.

ரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.

இந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.

‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.
நூலின் பெயர் : பதிவுகள்
எழுதியவர் : கி.ராஜநாராயணன்
தேர்வும், தொகுப்பும் : கழனியூரன்
வெளியீடு : அன்னம், தஞ்சை.
மேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.

---

வாசித்து விட்டீர்களா? மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.

2 பிப்ரவரி, 2017

கமால் ஹாசன்

"என்ன ரங்கராஜன் சொல்றீங்க? கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”

“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”

“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க. அவரோட பேரு கமால் ஹாசன். சினிமாவுக்காக பாலச்சந்தர் கமல்ஹாசன்னு மாத்தியிருக்காரு. அவங்க அண்ணனுங்க பேரெல்லாம் கூட பாருங்க ஹாசன்னுதான் முடியும்”

ரா.கி.ரங்கராஜனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாம் தெரிந்த எடிட்டருக்கு ஏன் இந்த சின்ன விஷயம் போய் தெரியவில்லை. அதுவும் அவர் சொல்வதுதான் சரி என்று சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறாரே? இத்தனைக்கும் கமல் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் தமிழ்நாட்டுக்கே ரொம்ப வருஷமாக தெரியுமே?

ரா.கி.ரங்கராஜன் எடிட்டரிடம் சமரசத்துக்கு வருகிறார்.

“ஒண்ணு செய்யலாம் சார். நம்ம செல்லப்பாவை அனுப்பி கமலோட அப்பா கிட்டேயே பேசவைக்கிறேன்”

எடிட்டர் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள்கிறார். செல்லப்பா, குமுதம் இதழின் நிருபர்.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அப்போது சென்னையில்தான் இருந்தார். செல்லப்பா அவரை சந்தித்து பேசினார். ஹாசன் என்கிற பெயரில் தனக்கு ஒரு நண்பர் ஜெயிலில் (சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற காங்கிரஸ்காரர்) இருந்ததாகவும், அவரது நினைவாகவே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என்கிற பெயரை சூட்டியதாகவும் சொல்கிறார்.

“எம்புள்ளையை தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோன்னு சொல்லுறாங்க. ஆனா, ஒருநாள் கூட அவன் என்னை ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போனதே இல்லை”

“சார், நான் வேணும்னா உங்களை ஷூட்டிங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகட்டா?”

“ஓக்கேப்பா. ஆனா, எனக்கு கமல் ஷூட்டிங் பார்க்க ஆசையில்லை”

“ரஜினி ஷூட்டிங்?”

“அதுவும் வேணாம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. எனக்கு சிலுக்கு சுமிதாவை ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொண்ணு நடிக்கிற ஷூட்டிங்கைதான் பார்க்கணும்”

ஆபிசுக்கு திரும்பிய செல்லப்பா, கமலின் தந்தையை சந்தித்துப் பேசியதையும், அவர் அய்யங்கார்தான் என்பதையும் எடிட்டரிடம் உறுதிப்படுத்துகிறார். கூடவே, சிலுக்குவை அவர் பார்க்க ஆசைப்பட்டதையும்.

“அப்போன்னா நான்தான் இவ்ளோ நாளா தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேனா? சரி செல்லப்பா. அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே சிலுக்கு ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போங்க. அதை அப்படியே ஒரு ஸ்டோரியா எழுதிக் கொடுத்துடுங்க”

குமுதம் செல்லப்பா ஏற்பாட்டில் ஒரு ஷூட்டிங்கில் சிலுக்கை சந்திக்கிறார் சீனிவாசன். சில நாட்கள் கழித்து பரமக்குடிக்கு திரும்பியதும் சிலுக்கை தான் சந்தித்த நிகழ்வை ‘ஜில்’லென்று எழுதி குமுதத்துக்கு கடிதமாக அனுப்புகிறார். அதற்குள் செல்லப்பா எழுதிய கட்டுரை குமுதத்தில் அச்சாகி விட்டதால், சீனிவாசனின் சிலுக்கு கட்டுரையை பிரசுரிக்கவில்லை.

ரா.கி.ரங்கராஜன் மூலமாக பின்னர் சிலுக்கு குறித்து தன் தந்தை இப்படியொரு கடிதம் எழுதியதை அறிந்தார் கமல். அந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொண்டவர், பத்திரமாக இன்னும் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

12 மே, 2016

யமுடிக்கு மொகுடு டூ சுப்ரீம்

எனக்கு ஒரு பெரியப்பா இருக்கிறார். குட்டியும், புட்டியுமாக குஜாலாக இருந்தவர் என்பதால் கல்யாணம் காட்சியில் எல்லாம் ஆர்வமில்லாமல் மைனர் குஞ்சாக மடிப்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். நடுத்தர வயதை எட்டும் பருவத்தில் திடீரென ஞானோதயம் வந்து நெல்லூருக்கு போய் ஏதோ கம்பெனியில் செட்டில் ஆகி வடுக வந்தேறியாக மாறிவிட்டார். அங்கேயே கல்யாணம் செய்து (வடுக கலாச்சாரத்தின் படி ரெண்டு ஒய்ஃப் என்று கேள்வி) பிள்ளைகள் பெற்று சவுக்கியமாக வாழ்ந்து வந்தார்.

வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்னைக்கு வருவார். விஜிபி கோல்டன் பீச், கிண்டி பார்க், மெரீனா பீச், சுற்றுலாப் பொருட்காட்சி, எம்.ஜி.ஆர் - அண்ணா சமாதியை எல்லாம் சடங்கு மாதிரி சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புவார். வரும்போது கையோடு ஏகத்துக்கும் ஆடியோ கேசட்டுகளை அள்ளிக் கொண்டு வருவார். பெரும்பாலும் சிரஞ்சீவி படப்பாடல்கள்தான். பெரியப்பாவின் குழந்தைகள் இருவரும் புத்தி தெரியும்வரையை சிரஞ்சீவியை தங்கள் தாய்மாமன் என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

‘தொங்க மொகுடு’, ‘த்ரினேத்ருடு’, ‘கைதி நம்பர் 786’, ‘யமுடிக்கி மொகுடு’, ‘அத்தக்கி யமுடு அம்மாய்க்கி மொகுடு’, ‘கேங்க் லீடர்’, ‘முட்டா மேஸ்திரி’, ‘ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி’, ‘கர்ணா மொகுடு’, ‘கொண்டவீட்டி தொங்கா’ என்று தெலுங்குப் படங்களின் அறிமுகம் அப்போதுதான் கிடைத்தது. மொழி புரிகிறதோ இல்லையோ. துள்ளலான பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு படத்தின் கதையையும் அவர்கள் திரைக்கதை, வசனத்தோடு இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு ஃப்ரேமை கூட மிஸ் செய்யாமல் சொல்வார்கள். சிரஞ்சீவிப் படமென்றால் ஒன்றுக்கு மூன்று முறை பார்ப்பார்களாம். ‘கேங் லீடர்’, ஆந்திராவில் தினசரி ஏழு காட்சிகளாக (விடியற்காலை காட்சி மட்டும் கிடையாது) நூறு நாள் ஓடிய தியேட்டர்கள் ஏராளம்.

டிவியில் போடும் தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் அழுது வடிந்துக் கொண்டிருந்தது அல்லது என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் டைப் கிழட்டுப் படங்கள். பெரும் சிறப்புகள் வாய்ந்த சமகால சிரஞ்சீவியின் தெலுங்குப் படங்களை நம்மால் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்கிற என்னுடைய ஏக்கத்தை ரங்கா தியேட்டர் தீர்த்து வைத்தது. சனி, ஞாயிறு காலை காட்சிகளாக வாரந்தோறும் ஏதேனும் புதுப்படங்களை போட்டு குஷிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

அம்மாதிரி ஒருமுறை பார்த்த படம்தான் ‘யமுடிக்கு மொகுடு’. ‘எமனுக்கே புருஷன்’ என்பது மாதிரி ஏடாகூடமான மீனிங். நம்மூர் ‘அதிசயப்பிறவி’தான் அங்கே ‘யமுடிக்கு மொகுடு’. இதை பார்ப்பதற்கு முன்பே ‘அதிசயப்பிறவி’யை பார்த்துவிட்டேன் என்றாலும், ‘யமுடிக்கு மொகுடு’ ரொம்பவே கவர்ந்தது. காரணம், பாடல்களும், சிரஞ்சீவியின் அதிரடியான நடனமும். குறிப்பாக ராதாவோடு அவர் ஆடும் இந்த ஆட்டம் அபாரம். ‘அந்தம் இந்தோளம் ஆதாரம் தாம்பூலம்’ என்கிற இந்தப் பாட்டு முழுக்க சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவிக்கு செம பில்டப்பு. ‘அதிசயப்பிறவி’யிலும் இந்த சிச்சுவேஷனுக்கு ‘சிங்காரி பியாரி பியாரி’ என்று செம சாங்க். ‘அந்தநிதி அந்தாலநிதி அந்தகினி சந்தேலகதி’ என்கிற வரிகள் வரும்போது தியேட்டரே அலறும் (இந்த வரிகளின் மீனிங் ஏதாவது டபுளா?)
ராஜ் - கோட்டி என்று இரட்டை இசையமைப்பாளர்கள்தான் அப்போது நிறைய தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா அவர்களுக்கு கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்திருக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் நீண்டகாலம் ராஜ் - கோட்டிகளிடம்தான் கீபோர்ட் வாசித்துக் கொண்டிருந்தார். ‘யமுடிக்கு மொகுடு’, ராஜ்-கோட்டி கைவண்ணம்தான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘யமுடிக்கு மொகுடு’ பாடல்கள் தெலுங்கு பேசும் ஊர்களில் எல்லாம் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் வெளியான ‘சுப்ரீம்’ படத்தில் மீண்டும் ரீமிக்ஸில் ஒலிக்கும்போதும், ‘அந்தம் இந்தோளம்’ பாட்டுக்கு அந்த காலத்தில் கிடைத்த அதே வரவேற்பு இப்போதும் தியேட்டரில் கிடைக்கிறது. ‘சுப்ரீம்’ படத்தின் ஹீரோ சாய்தரம்தேஜ். சிரஞ்சீவியின் தங்கை மகன். இவரது முந்தையப் படமான ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’ படத்திலும் ‘குவ்வா கோரிங் கதோ’ என்று ‘கைதி நம்பர் 786’ படத்தின் பாடலை ரீமிக்ஸ் அடித்து ஆடியிருந்தார். தான் நடிக்கும் எல்லாப் படத்திலும் தாய்மாமன் சிரஞ்சீவியின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து ஆடியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாராம் சாய்.
‘சுப்ரீம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையில் இந்தப் பாடலை போட்டுக் காட்ட விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களே விசிலடித்து டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார்களாம். படம் சூப்பர் டூப்பர்ஹிட் என்பதை தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.

30 மார்ச், 2015

சரோஜாதேவி - ராஜபோதை!

சென்னை புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது, மற்ற புத்தகங்களை எல்லாம் காட்சிக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். ‘சரோஜாதேவி’ புத்தகத்தை மட்டும் கண்ணுக்குத் தெரியாதபடி ‘சொருகி’ வைத்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகம், மஞ்சள் கலர் அட்டையில் பொம்மைப் படம் போட்டிருக்கும் என்றெல்லாம் அடையாளம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், என் தோழிதான் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். இது தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பொதுவான மனநிலையை வெளிச்சம் போட்டு இது காட்டுவதாகவே தோன்றியது.

பாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம். ‘முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து முயன்றுன்னை நோக்குகிறோம் காமா’ என்றெல்லாம் பாலுணர்வை அப்பட்டமான மொழியில் வெளிப்படுத்துகிற செழுமையான மரபில் வந்த நாம் எப்போது இந்த ‘இலைமறை காய்’ போக்கிற்குத் தாவினோம்? பாலியல் சார்ந்த சாதாரணமான விஷயத்தைக்கூட பேசவே தயங்குகிறோம். அஞ்சுகிறோம். வேறு வழியில்லாமல் முற்றிப் போன கட்டத்தில், டாக்டர் காமராஜ் வகையறாக்களிடம் மட்டும் பேசித் தொலைக்கிறோம். இந்தியாடுடே வருடா வருடம் ‘செக்ஸ் சிறப்பிதழ்’ கொண்டு வரும் போது வக்கிரம், ஆபாசம் என வசைக் கடிதங்கள் குவியும். ஆனால் அதேசமயம் உள்ளே பணிபுரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், ஒரு காப்பிகூட மிச்சமில்லாமல் அந்தச் சிறப்பிதழ் விற்றுத் தீர்கிற ரகசியம்.

“சலவைத் தொழிலாளியிடம் அகப்பட்ட வாழைக்கறை படிந்த வேட்டியைப் போல வெளுத்துவிடத் துடிக்கும் ரகசிய உள்மனம் தனக்கான பாலியல் வேட்கையை நுகர இணைய பால்வெளியில் சஞ்சாரிக்கும் பொழுதுகளில்...”இப்படி ஒரு இறுக்கமான நடையில் ஒருவேளை இந்தப் புத்தகத்தில் இந்த விஷயத்தை அணுகியிருந்தால், நூலக அந்தஸ்து கிடைத்திருக்குமோ என்னவோ? ஆனால் விஷயம் ஒருத்தருக்கும் புரிந்திருக்காது. இறுக்கமும் தயக்கமும் தட்டிப் போன இந்த விஷயத்தை கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாட்டமான மொழிநடையில் இந்தப் புத்தகத்தில் யுவகிருஷ்ணா அணுகியதால்தான், கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறுக்கம் தளர்ந்திருக்கிறது.

இத்தனை வருட தொலைக்காட்சி அனுபவத்தில் சொல்கிறேன். நேஹா ஆண்ட்டி, சபிதா அண்ணி, அக்கதைகளில் உலவும் ஆண்களெல்லாம் வெறும் கற்பனை பாத்திரங்கள் இல்லை. நம்மோடு நிஜ வாழ்க்கையில் உலவிக் கொண்டிருப்பவர்கள்தான். காதலில் ஏது நல்ல காதல், கள்ளக் காதல் என தமிழர்கள் கேட்க ஆரம்பித்து ஒரு ’மாமா’ங்க காலம் ஆகிவிட்டது. வயது வந்தவர்களுக்கு மட்டும் போன்ற கதைகளையும் எழுதிய கி.ராவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான கவனம் யுவகிருஷ்ணாவிற்கும் கிடைக்க வேண்டும். புனித பிம்பங்களோடு எத்தனை காலம்தான் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? சன்னிலியோனுக்கு இருக்கிற தைரியம் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ?

இணையத்தில் இதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அதைவிட முக்கியம் தைரியமாக நூலகத்தில் அதற்கு இடம் கொடுத்து உங்களது சிந்தனை உயரத்தை விசாலமாக்குங்கள். தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு வேண்டுகோள். உங்களது ‘தீவிரத்’தன்மையை சற்றே தளர்த்தி, உங்களது கதவுகளைத் திறந்து வைப்பீர். அக்னி வெப்பப் புழுக்கம் தாளவில்லை. இது போன்ற புதிய காற்று உள்ளே வரட்டும். வாசக எல்லைகள் விரிவடைய வேண்டிய தருணம் இது. இறுதியாய் படிப்பவர்களுக்கு. ஒரு குவார்ட்டர் பிராந்தி, ஒரு பொட்டுக் கடலை பாக்கெட், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு டம்ளர்... இவற்றிற்கு 152 ரூபாய் ஆகிறது. ‘சரோஜாதேவி’ புத்தகத்தின் விலை வெறும் நூறு ரூபாய்தான். ஒரு குவார்ட்டர் பிராந்தி தருவதை விட ராஜபோதை நிச்சயம்.

நன்றி : சரவணன் (பத்திரிகையாளர், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்)

17 மார்ச், 2015

உல்லாசம்

‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

அஜித் நடித்த சினிமா?

ஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்?

அதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே இல்லை.

நமக்கு ‘உல்லாசம்’ என்றாலே தினத்தந்தி நினைவுக்கு வரும். அதில் உல்லாசம் என்கிற சொல்லை வாசிக்கும்போதே ‘உல்லாசமாக’ இருக்கும். செய்தி எழுதும் உதவி ஆசிரியர்கள், பேனாவில் ‘உல்லாசத்தை’ ஊற்றி எழுதுகிறார்கள்.

தந்தி, ‘உல்லாசம்’ என்கிற தமிழ்ச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பது தமிழர்கள் யாவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு நேற்று வாசித்த ‘உல்லாச’ செய்தி ஒன்று சாம்பிளுக்கு கீழே.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 34). அவருடைய மனைவிக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த என்ஜினியர் (வயது 28) ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம். அப்படியே அது ‘கள்ளக்காதலாக’ உருவெடுக்கிறது.

செல்போனில் அடிக்கடி ராமசாமியின் மனைவி, என்ஜினியருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ராமசாமி இந்த நடவடிக்கையை கண்டிக்கிறார். உடனே ராமசாமியின் மனைவி, என்ஜினியரிடம் தன் கணவர் இதுபோல திட்டுவதாக புகார் செய்கிறார்.

இதையடுத்து அந்த என்ஜினியர், ஆத்தூருக்கு வந்து ராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். “உங்கள் மனைவியோடு எனக்கு ‘தொடர்பு’ எதுவுமில்லை. சும்மா ‘பழக்கம்’ தான்”

“அப்படியா, அப்படியெனில் நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்று பெருந்தன்மையோடு அவரை நண்பராக்கிக் கொண்டார் ராமசாமி.

உடனே, அந்த என்ஜினியரை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவரும் இணைந்து ‘சரக்கு’ சாப்பிட்டிருக்கிறார்கள். ராமசாமியின் மனைவி ‘சைட் டிஷ்’ ஏற்பாடு செய்திருக்கிறார். சரக்கு போதையில் ராமசாமி ராஜதந்திரமாக ஒருவேலை செய்தார்.

என்ஜினியரிடம், “என் மனைவியோடு ‘உல்லாசமாக’ இருக்க விரும்பினால் இருந்துக்கொள்” என்று சலுகை காட்டியிருக்கிறார்.

இதை கேட்டு மகிழ்ந்த இருவரும், நள்ளிரவில் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கையும், களவுமாக இருவரையும் பிடித்துவிட்ட ராமசாமி, என்ஜினியரை கடுமையாக தாக்கினார். கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். உடையை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசமற்ற நிலையில் பேண்ட், சட்டை, ஜட்டி உள்ளிட்ட உடைகளை கையில் எடுத்துக்கொண்டு என்ஜினியர் தப்பி ஓடினார். அவரை ராமசாமி விரட்டிச் சென்றும் போதை காரணமாக பிடிக்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு திரும்பியவர் நிர்வாண நிலையில் இருந்த தன் மனைவியை கத்தரிக்கோலால் குத்த முயன்றிருக்கிறார். அவரும் உயிருக்குப் பயந்து ‘அப்படியே’ தெருவில் ஓடியிருக்கிறார்.

ஒரு வாலிபரும், அழகியும் தெருவில் ‘இந்த’ கோலத்தில் ஓடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் தலையிட்டு அழகிக்கு நைட்டி கொடுத்து மாட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஒரு மரநிழலில் என்ஜினியரும் உடை மாற்றிக் கொண்டார். இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற ஆத்தூர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். விசாரணைக்குச் சென்ற போலிஸாரிடம் இருவரும் வழக்கு எதுவும் பதியவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். கீழே விழுந்து இருவருக்கும் அடிபட்டு விட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நேர்மையாளரான ராமசாமியோ நேராக காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ‘நீதி விசாரணை’ நடத்த இருக்கிறார்.

நேற்று (மார்ச் 17, 2015) வாசித்த செய்தியை அப்படியே என்னுடைய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன். தந்தி லெவல் மொழிப்புலமை நமக்கு வராது.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு லாஜிக் இடிப்பதாக தோன்றுகிறது. அனேகமாக இது உதவி கலெக்டரின் நீதிவிசாரணையில் தெளிவாகும்.

‘நிராயுதபாணியாக’ என்ஜினியர் தப்பி ஓடியபோது, ராமசாமி துரத்திக்கொண்டு சென்றிருக்கிறார். கிடைத்த அவகாசத்தில் அந்த அம்மணி உடை மாற்றிக் கொண்டிருக்கலாமே? ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார்? – நேற்றிலிருந்து மண்டையை குடைந்துக் கொண்டிருக்கும் சந்தேகம் இது.

3 நவம்பர், 2014

பினாமி ஆட்சி

முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன அரசியலில் இதுபோன்ற கவர்ச்சியான word coining ஒரு தலைவருக்கு எப்பவும் அவசியம். ஆனாலும் அதிமுக முன்வைக்கும் ‘மக்களின் முதல்வர்’ கான்செப்ட்தான் டாப்.

* * * * * * *
ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’ கடைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும் தொகுப்பாக வாசிக்கும்போது ஷோபாவின் வீச்சு இன்னும் வலிமையாக மூளையை தாக்குகிறது. விடுதலைப்புலிகள் vs சிங்கள ராணுவம்; இருவருக்குமிடையே சாண்ட்விச்சாக மாட்டிக்கொண்ட மக்களின் மனவியல்தான் அவரது ஏரியா.

சோகம் பிழியப்பிழிய ‘துலாபாரம்’ மாதிரி சொல்லவேண்டிய கதைகளை, ‘தெனாலி’ மாதிரி காமெடியாக எழுதுகிறார். உற்றுநோக்கினால், ஷோபாவின் கதைகளுக்கு ஒரே டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதைசொல்லியே தொணதொணவென்று (ஆனால் ரசிக்கும்படியாக) பேசிக்கொண்டு இருப்பார். நாம் பரிதாபப்பட்டு ‘உச்சு’ கொட்டவேண்டிய மனிதர்களை அபத்தமானவர்களாகதான் காட்டுவார். அதே நேரம் வில்லன்களான விடுதலைப்புலிகளையும், சிங்கள ராணுவத்தையும் டபுள் அபத்தமாய் முன்வைப்பார். முடிக்கும்போது கடைசி பாராவில் நீங்கள் அடையவேண்டிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புரட்சி, எழுச்சி, புட்டு, பொடலங்காய் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுவதில்தான் ஷோபாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லி ஷோபாசக்தி. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய அபாரமான சிறுகதைகளின் தொகுப்பு கண்டிவீரன்.

ஏற்கனவே கலைஞரை தமிழின விரோதியாக தமிழ் தேசியர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழின துரோகியான ஷோபாசக்தி, இந்த நூலை கலைஞருக்கு வேறு சமர்ப்பணம் செய்துத் தொலைத்திருக்கிறார். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று தமிழ் ஜோசியர்களுக்கு தெரியாதா என்ன. இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. அவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் போதாதா?

நூல் : கண்டிவீரன்

பக்கங்கள் : 192

விலை : ரூ.160

வெளியீடு : கருப்புப் பிரதிகள்
மொபைல் போன் – 9444272500
மின்னஞ்சல் : karuppupradhigal@gmail.com

* * * * * * *

நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லாத சம்பவங்கள் எப்படிதான் நடைபெறுகின்றனவோ என்று செய்தித்தாளை வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.

கோவையில் ஏதோ ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பத்தொன்பது வயது பெண் அவர். ஆந்திராவைச் சேர்ந்தவர். ஊருக்கு ஏதோ திருவிழாவென்று சொந்தக்காரர்கள் சிலரோடு ஆந்திரா நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். சேலத்துக்கு அருகில் ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க ரயில் நிற்கிறது. திடீரென அந்தப் பெண்ணுக்கு தலைசுற்ற, கதவுக்கு அருகில் வந்து குனிந்து வாந்தியெடுக்கிறார். கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுக்க இறங்குகிறார். ரயில் கிளம்பிவிடுகிறது.

இவரைப் போலவே அதே ரயிலில் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர். ரயிலில் ஏறும்போதே நன்கு ‘ஸ்ருதி’ ஏற்றிக் கொண்டிருக்கிறார். வாந்தி பிரச்சினையால், போதையில் ரயிலில் இருந்து இறங்கிவிட்டிருக்கிறார்.

அந்த அதிகாலையில் ஆளரவமற்ற அந்தப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டும். போதையில் இருக்கும் இளைஞர் அந்தப் பெண்ணை மிரட்டி, புதர்பக்கமாக அழைத்துச் சென்று…

அதிகாலையில் டிராக் வழியாக இருவரும் நடந்து அருகிலிருக்கும் ரயில்நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தப் பெண் அழுதுகொண்டே அத்தனையையும் சொல்லியிருக்கிறார். போலிஸை அழைத்து அந்த இளைஞரை கைது செய்யவைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அப்போதுதான் போதை தெளிந்த இளைஞன் சொல்லியிருக்கிறான். “போதையிலே என்ன நடந்துச்சின்னே தெரியல்லைங்க. அப்படி ஏதாவது தப்புதண்டா நடந்திருந்தா நானே அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்”

* * * * * * *

மரம் நடுவது குறித்த மானமுள்ள கவிஞர் நண்பர் வா.மணிகண்டன் அவர்களுடைய பதிவினைப் பார்த்தேன். அனேகமாக இன்னும் இரண்டு மாதத்தில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ’கத்தி’ ஜீவானந்தத்துக்கு ரோட்டரி க்ளப் பாராட்டு விழா நடத்தியதைப் போன்ற ஒரு பாராட்டுவிழாவை இவருக்கு நாம் நடத்த வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. மரம் நடுவிழா நடத்துகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இதையாவது நடத்தலாமே. என்ன சொல்லுகிறாய் தமிழ் அன்னையே?

கென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் இப்படிதான் சுற்றுச்சூழலுக்காக போராடி நோபல் பரிசெல்லாம் வென்றார். நம் இணைய, இலக்கிய உலகில் இருந்து அப்படியொருவர் நோபல் பெற்றால் நமக்கெல்லாம் பெருமைதானே?

நிசப்தமாக இருக்க வேண்டாம். அசப்தமாக இருப்போம். nobel causeக்கு கை கொடுக்கலாம் தோழர்களே!

* * * * * * *
‘நெருங்கி வா முத்தமிடாதே’ பார்த்தேன். லோபட்ஜெட் குறைகளையும் தாண்டி, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் intelligent படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஏற்கனவே ஓரிரு ரோட் ட்ரிப் ஸ்டோரி தமிழில் வந்திருக்கிறது. ஆனாலும் மசாலா கலக்காத அசலான ‘ரோட் ட்ரிப்’பாக இதை சொல்லலாம். ‘ஹைவே’ எல்லாம் வரும்போது வரட்டும்.

‘திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக எங்குமே பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்’ என்று தடாலடியாக படம் ஆரம்பிக்கிறது. நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்கிற பில்டப்போடு. இரண்டாம் பாதியில் அந்த பில்டப் படுமோசமாக பிசுபிசுத்துப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடையில் லாரி ஓட்டத்தின்போது செருகிய காட்சிகளும், பாத்திரங்களும் அபாரம். குறிப்பாக விஜிசந்திரசேகரின் கதை அட்டகாசம். நைசாக திவ்யா-இளவரசன் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடைசியில் “விளைவுகளைப் பற்றி யோசிக்காம நீங்க பாட்டுக்கும் காதலிச்சிடறீங்க” என்கிற கீறல்விழுந்த அட்வைஸ்தான்.

நாடு ஸ்தம்பித்துவிட்டால் நாம் மட்டுமல்ல. ரோட்டோரத்தில் லாரிக்கு கைகாட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கூட வாழ்வாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றெல்லாம் யோசித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஷேக் ஹேண்ட். முதல் பாதிக்கு சீன் யோசித்த அளவுக்கு, இரண்டாம் பாதிக்கு யோசிக்க முடியாத அவரது சோம்பேறித்தனத்துக்கு தலையில் குட்டு. தம்பி ராமையா மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய மொக்கை காமெடியை எல்லாம் அப்படியே வைக்காமல் எடிட்டித் தள்ளியிருக்கலாம்.

இதைவிட நூறு மடங்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் அட்டக்கத்தியாக இருக்கும்போது, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ கொஞ்சம் ஷார்ப்பாகதான் இருக்கிறது. ஒருமுறை நெருங்கி முத்தமிடலாம் (படத்தை).

27 அக்டோபர், 2014

பஞ்சாபி லஸ்ஸி

“சார் போஸ்ட்!” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்திருக்கும் பரிணாமம் பாராட்டத்தக்கது.

கே.என்.சிவராமன் தினகரன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் ‘தேங்க்ஸ்’ கதையின் தொடக்க வரியே இவ்வளவுதான் “காரணம். அம்மா”.

வர்ணனைகள் இல்லை. கதாசிரியரின் தத்துவ சிந்தனை கோட்பாட்டு அலசல் இல்லை. வாசகனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்யும் விளக்கங்கள் அறவே இல்லை. ‘நறுக்’கென்று கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து ஒரே ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

சுஜாதா செத்துப்போன பிறகுதான் அவர் சொல்லியபடி கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.

* * * * * * * * * *

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று அந்த ஆசை தோன்றியது. மொத்த ஷெல்ஃபையும் அலசிப் போட்டு அந்த புத்தகத்தை தேடியெடுத்து விடியும் வரை படித்தேன். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’. மறுநாள் இரவு ஒரு பிரஸ்மீட்டில் இருந்தபோது குறுஞ்செய்தி வந்தது. “சுஜாதா காலமானார்”.

போனவாரம் எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு, கடைக்கே வராத புத்தகம் வேண்டும் என்று நியூபுக்லேண்ட்ஸ் முன்பு தர்ணா செய்து, மேனேஜர் சீனிவாசன் எங்களுக்காக எப்படியோ புத்தகத்தை வரவழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் புத்தகத்தைப் புரட்டினேன். மறுநாள் முற்பகலில் வந்த செய்தி. “எஸ்.எஸ்.ஆர் இறந்துவிட்டார்”

பயமாக இருக்கிறது. எனக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி திடீரென்று ஏற்பட்டிருக்கிறது.

* * * * * * * * * *

‘ஃபெஸ்டிவல் மூட்’ என்றொரு ‘மாஸ் மெண்டாலிட்டி’ இருக்கிறது. சினிமா, பத்திரிகை என்று வெகுஜனத் தளங்களில் பணிபுரிபவர்கள், மக்களின் இந்த மனோபாவத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும். எம்.ஜி.ஆரும், ரஜினியும், குமுதமும், சரவணா ஸ்டோர்ஸும் அடைந்த மகத்தான வெற்றிகளுக்கு, மாஸ் மீதான அவர்களது ஆழ்ந்த புரிதலே காரணம்.

தீபாவளிக்கு ஷாருக் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை காணும்போது, வடஇந்தியாவில் மக்கள் கூட்ட கூட்டமாக ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ரிலாக்ஸான மனநிலையில் இருக்கும் மக்களின் மத்தியில் அன்பேசிவமோ, விவசாய சிறப்பிதழோ எடுபடாது. பர்ஸ்ட் நைட் ஸ்பெஷலாக எந்த மாப்பிள்ளையாவது நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரை வழிபடுவாரா?

* * * * * * * * * *

சேகுவேரா ஒரு டெர்ரர். இதயத்துடிப்பை நிறுத்திவிட்ட சே-வின் கண்கள் மட்டும் திறந்துக் கிடந்தன. அவரது உடலை கைப்பற்றப் போன அமெரிக்க வீரர்கள் சே-வின் உயிரோட்டமான பார்வையை பார்த்து மரணபயத்தை உணர்ந்தது வரலாறு. சே மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் அமெரிக்கர்கள் சே-வை பார்த்து பயந்து பயந்து சாகிறார்கள். இறந்த பின்னாலும் ஒரு மனிதன் தன்னுடைய எதிர்தரப்பினரை ஆயுளுக்கும் ராவில் பயத்தில் உச்சா போக வைக்க முடியுமா?

நம்மூரில் பெரியார் இன்னமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.

* * * * * * * * * *

“இந்தி திணிக்கப்பட்டால் மொழிப்போர் வெடிக்கும்” என்று ‘நாம் தமிழர்’ சீமான், மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.

இன்னமும் தமிழர்கள் மீது சீமானுக்கு இவ்வளவு நம்பிக்கை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் முதல்வருக்கு நீதி கிடைக்க அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை மொழியோ, இனமோ, ஊனோ, உறக்கமோ தமிழர்களுக்கு பொருட்டே அல்ல.

* * * * * * * * * *

ஸ்ருதிஹாசன், சமந்தாவையெல்லாம் மறந்துடுங்க. டோலிவுட்டே இப்போது ரகுல் ப்ரீத் சிங்கைதான் கொண்டாடுகிறது. இருபத்து நாலு வயசு இளமைப் பெட்டகம். திக்கான பஞ்சாபி லஸ்ஸி.

2009ல் ‘7ஜி ரெயின்போ காலனி’ கன்னடத்தில் ரீமேக்கப்பட்டபோது அனிதாவாக அறிமுகம். தமிழில் ‘தடையறத் தாக்க’வில் செகண்ட் ஹீரோயின், ‘புத்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் ஹீரோயின். இதுமாதிரி லோ மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களில் காமாசோமோவென்றுதான் நடித்துக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ஸில் இவரது கிளாமர் பச்சக்கென்று டாலடிக்க, “இந்த பொண்ணு கிட்டே ‘என்னமோ ஏதோ’ இருக்கு” என்று அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் இவரை புக் செய்தார்கள்.

லேட்டஸ்ட் ஹிட்டான கோபிசந்த் நடித்த ‘லவுகியம்’தான் ஜாக்பாட். படத்தில் இவர் தோன்றும் முதல் காட்சியே க்ளோஸ் அப்பில் ‘தொப்புள் தரிசனம்’தான். பத்து நொடிகள் தோன்றும் அந்த ஷாட்டை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கென்றே தெலுங்கு ரசிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட தடவை திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள்.

மனோஜ் மஞ்சுவின் ‘கரண்ட் தீகா’வில் சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு கவர்ச்சி விருந்து. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜாவின் கிக்-2 படத்திலும் ஹீரோயின். வருட தொடக்கத்தில் பாலிவுட்டிலும் ‘யாரியான்’ மூலம் கணக்கை தொடக்கியிருக்கிறார். அடுத்து ரமேஷ்சிப்பியின் ‘சிம்லா மிர்ச்சி’. பவன் கல்யாணின் கப்பார் சிங்-2விலும் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.

இந்தியத் திரையுலகை புரட்டிப்போட கிளம்பியிருக்கும் இந்த புயல், தமிழ்நாட்டை மீண்டும் எப்போது தாக்கும் என்று தெரியவில்லை. சிம்பு மாதிரி யாராவது மனசு வைக்கணும்.

* * * * * * * * * *

2006லிருந்து 2010 வரை. தமிழில் வலைப்பதிவுகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ட்விட்டர், ஃபேஸ்புக் என்று மைக்ரோப்ளாக்கிங் சிஸ்டம் வந்து வலைப்பதிவுகளை விழுங்கிவிட்டது. ஆனாலும் இன்னமும் ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் நடக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. எனக்கெல்லாம் ப்ளாக்கில்தான் வசதியாக ஆற, அமர ஆடமுடிகிறது. அதனால்தான் நேரமே இல்லையென்றாலும், மூளையில் சரக்கே இல்லையென்றாலும் வவ்வால் மாதிரி வலைப்பதிவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ப்ளாக் எழுதுபவர்கள் சிக்கன நடவடிக்கையாக 2000 – 3000 வார்த்தைகளில் எழுதாமல் 500 – 700 வார்த்தைகளில் சுவாரஸ்யமாக எழுதிப்பழக வேண்டும் என்று ஏதோ ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் ‘மூத்தப் பதிவர்’ என்கிற முறையில் அட்வைஸ் செய்திருந்தேன். வாசகர்களை (!) துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா? நிறைய இளம்பதிவர்கள் அப்போது எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிண்டல் அடித்தார்கள். அனேகமாக அந்த பதிவர்களும் இப்போது 50 – 100 வார்த்தைகளில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன். வலைப்பதிவுகள் முற்றிலுமாக பிராணனை விட்டுவிடக் கூடாது என்றால், மைக்ரோப்ளாக்கிங் தரும் சுவாரஸ்யத்தை மேக்ரோப்ளாக்குகளும் தரும் விதத்தில் எழுதவேண்டும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. கட்டுரைகளின் வடிவ நேர்த்தியும் அவசியம். கவிதை, சினிமா விமர்சனம், கதை, அரசியல், இலக்கியம் என்று எதை எழுதினாலும் லேசாக ‘மீறி’ பார்க்கலாம். நாலு தோசை சுட்டுப் பார்த்தால்தான் ஒரு தோசையாவது உருப்படியாக வரும்.

29 ஜனவரி, 2014

நடுப்பக்கம்

‘ராணி’யைத் தவிர வேறெந்த பத்திரிகையும் தன்னை குடும்பப் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் குமுதம் நிஜமாகவே குடும்பப் பத்திரிகையாகதான் ஒரு காலத்தில் இருந்தது. எண்பதுகளின் குடும்பங்களை ‘குமுதம் குடும்பம்’ என்றே சொல்லலாம். குமுதம் வாங்காத குடும்பங்களே இல்லை என்ற நிலை. அட்டை டூ அட்டை பக்கா மிக்ஸர். லேசாக அரசியல். பல்சுவை அரசு பதில்கள். குழந்தைகளுக்கு ஆறு வித்தியாசங்கள். அவ்வப்போது சித்திரக் கதைகள். ஆன்மீக வாதிகளுக்கு பிரார்த்தனை க்ளப். இல்லத்தரசிகளுக்கு ஏராளமான சிறுகதைகள் மற்றும் தொடர்கதை. கன்னித்தீவு ரேஞ்சுக்கு எப்போதும் குமுதத்தில் ‘சாண்டில்யன்’. சினிமா நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி. கிசுகிசு. ‘லைட்ஸ் ஆன்’ வினோத் என்று எல்லாமே குமுதத்தில் இருக்கும்.

குறிப்பாக கதைகள். எல்லா genre (செக்ஸ் உட்பட) கதைகளும் வருமாறு இதழ் வடிவமைக்கப்படும். “நல்ல கதையை படிக்கும் வாசகன் அதை ‘நல்ல கதை’ என்று சொல்லக்கூடாது. ‘குமுதமான கதை’ என்று சொல்ல வேண்டும்” என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆணையிட்ட அளவுக்கு நிலைமை இருந்தது.

குமுதத்தில் எல்லாமே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு ‘சீக்ரட் வெப்பன்’ இருந்தது. ‘நடுப்பக்கம்’. குமுதத்தின் ‘இளமை இமேஜ்’ இந்த ஒரு பகுதியால்தான் கொடிகட்டிப் பறந்தது. எந்த ஒரு பத்திரிகையை வாங்கினாலும், அதில் முதலில் பார்க்க வேண்டிய பகுதி என்று ஒவ்வொரு வாசகருக்கும் ஏதோ ஒரு பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிலர் கார்ட்டூனை முதலில் பார்ப்பார்கள். தலையங்கம், தொடர்கதை, கடைசிப்பக்கம் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவமான ரசனை இருக்கும். சொல்லி வைத்தாற்போல குமுதம் வாசகர்கள் வாங்கியதுமே பிரித்துப் பார்ப்பது நடுப்பக்கத்தைதான். பெண்களும் கூட நடுப்பக்கத்தைதான் முதலில் பார்ப்பார்கள். நடுப்பக்க படத்துக்கு ஜாடிக்கேத்த மூடியாய் கச்சிதமாக எழுதப்பட்ட கமெண்டை படித்துவிட்டு, “நாசமாப் போறவன் இந்த குமுதம்காரன்” என்று வெளிப்படையாக திட்டுவார்கள். ஆனால் முகத்தில் கோபமோ, கடுகடுப்போ இருக்காது. நாணத்தால் முகம் சிவந்திருப்பார்கள். ஜெயப்ரதா ரேஞ்சுக்கு அழகாக இருந்த ரோகிணி அக்கா அம்மாதிரி முகம் சிவந்ததை நிறையமுறை பார்த்திருக்கிறேன்.

நான் குழந்தைப் பருவத்தில் குமுதத்தில் பொம்மை பார்க்க ஆரம்பித்து (பெரும்பாலும் சிலுக்கு, அனுராதா பொம்மைகள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்), ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்து வெகுவிரைவிலேயே –அதாவது எட்டு, ஒன்பது வயது வாக்கில்- நடுப்பக்கத்துக்கு வந்துவிட்டேன். அப்பா ஆன்மீகவாதியாக இருந்தாலும், முதலில் நடுப்பக்கத்தை தரிசித்துவிட்டுதான் ‘பிரார்த்தனை க்ளப்’புக்கே வருவார். தனக்கு போட்டியாக குடும்பத்தில் இன்னொருவனும் நடுப்பக்கத்தை ஆராதிப்பவனாக வளர்வது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த குமுதம் இதழில் நடுப்பக்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்துநின்ற அந்த இதழ்களை வாசிக்கும் ஆர்வமே எனக்கு போய்விட்டது. ஆரம்பத்தில் குமுதமே நடுப்பக்கத்தை வாசகர்களின் பாசாங்கு கண்டனங்களுக்கு பயந்து நிறுத்திவிட்டதோ என்று நினைத்திருந்தேன். பிற்பாடு கால்குலேட் செய்து பார்த்ததில் பக்க எண் இடித்ததில், இது அப்பாவுடைய சதியென்று அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி உணர்ந்துகொண்டேன். அதனாலென்ன அக்கம் பக்கம் வீட்டு இதழ்களுக்குப் போய் குமுதத்தின் நடுப்பக்கத்தை வாசித்து, என் இலக்கிய அறிவு நாளொரு ‘மேனி’யும், பொழுதொரு நடிகையுமாக வளர ஆரம்பித்தது.

இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ‘நடுப்பக்கம்’ எப்போதிலிருந்து குமுதத்தில் காணாமல் போனது என்று சரியாக நினைவில்லை. அந்த ‘சேவை’யை குமுதம் நிறுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. இதனால் இளைஞர்களின் எழுச்சி தாமதப்பட்டு, புரட்சி தேவையில்லாமல் சில நூற்றாண்டுகள் தள்ளிபோடப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை. எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி?

இந்த வார குமுதம் நடுப்பக்கத்தை பார்த்தேன். என் மகள் தமிழ்மொழி போட்டோவை போட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாளில் குமுதம், ‘பூந்தளிர்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘ரத்னபாலா’, ‘அம்புலிமாமா’, 'பாலர் மலர்’ ரேஞ்சுக்கு குழந்தைகள் இதழாக பரிணமித்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் என்னை ஆட்டிப் படைக்கிறது.

9 நவம்பர், 2013

தன்வி வியாஸ்

எப்படி மனசுக்குள் வந்தாரென்றே தெரியவில்லை. வசதியாக சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டார் தன்வி வியாஸ். குஜராத்தி பெண்களுக்கே உரிய உயரமும், உடற்கட்டும் அசலாக அமைந்திருக்கிறது. கிராஃபிக் டிசைனரான தன்வி, வதோதரா என்கிற சிறுநகரில் பிறந்து அடித்துப் பிடித்து எப்படியோ குறிப்பிடத்தக்க அழகிப்போட்டியான மிஸ் ஃபெமினாவில் முடிசூட்டிக் கொண்டார்.

தமன்னா கலர். ஆரம்பகால நமீதா உடல். சராசரி இந்தியப் பெண்களுக்கே உரிய மங்களகரமான முகம். சிரிக்கும்போது கன்னத்தில் கிளாமராக குழி விழுகிறது. உதடுகள் ஹாட்டின் வடிவம். சாராயத்தில் ஊறவைத்த கண்கள். பார்த்ததுமே டக்கீலாவை கல்ப் அடித்தது மாதிரி உடலெல்லாம் கிறுகிறுக்கிறது. கிட்டத்தட்ட 'கொமரம்புலி’ நிகேஷா பட்டேல் லுக். நமீதா, நிகேஷா, தன்வி என்று அடுத்தடுத்து குஜராத்தி அழகிகள் தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக கவர்ச்சி சுனாமி கிளப்பிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இங்கே மோடி அலை அடிக்குமோவென்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.

ஆர்.எம்.கே.வி., ஹீரோ சைக்கிள்ஸ், பேண்டலூன்ஸ், ஜேபி சிமெண்ட்ஸ் என்று குறிப்பிடத்தக்க டிவி கமர்சியல்களில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ அவருக்கு போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது.

’டைரக்டர் ஆஃப் காதலில் விழுந்தேன்’ பி.வி.பிரசாத்தின் எப்படி மனசுக்குள் வந்தாய்?’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ படத்தில் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஸ்கோப் இருக்கும் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஃபேமிலி டிராமா மொக்கைதானென்றாலும் தன்வி தனியாக கவனிக்கப்படுமளவுக்கு செம பெர்ஃபார்மண்ஸ் கொடுத்திருக்கிறார். தாவணி, சேலை, சுடிதார், மாடர்ன் ட்ரெஸ் என்று எந்த அலங்காரத்திலும் எடுப்பாக இருக்கிறார்.

‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா?’ என்று அர்த்தம். தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சேலை, ஜாக்கெட்டை துறந்து டூ-பீஸில் தன்வி தோன்றும் அதிரடிக் காட்சியில் ரசிகர்கள் கோரஸாக ‘நூவ்வு சின்னப் பிள்ளா லேது’ (நீ சின்னப் பொண்ணு கிடையாது) என்று கத்துகிறார்கள்.

தென்னிந்தியாவில் ஒரு ‘ரவுண்டு’ கட்ட வாய்ப்பிருக்கிறது. தெலுங்கின் மஞ்சு சகோதர்கள், தமிழின் சிம்புகள் க்ரூப்பில் சிக்காமல் இருக்கும் பட்சத்தில்.

6 நவம்பர், 2013

எங்க சின்ன ராசா

போனவாரம் ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ்.

பாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட்டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.

ரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.
முதன்முதலாக இந்தப் படத்தை பார்த்தபோது (அப்போ பத்து வயசு தான்), ராதாவின் இளமைக் கொந்தளிப்பை கண்டு வியந்து அசந்து விட்ட ஜொள்ளின் ஈரம் இன்னமும் காயவில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது அதே அளவிலான ஜொள்ளு வடிகிறது எனும்போது என் இளமை மீதான தன்னம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லும்போது புரியாமல், சின்ன வயசில் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. பின்னாளில் அனுபவப்பூர்வமாக அதே சூழலை எதிர்கொள்ள நேரிட்டபோதுதான், பாக்யராஜ் ஏன் எண்பதுகளில் தமிழ்ப்பெண்களின் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஆக பார்க்கப்பட்டார் என்பது புரிகிறது.

வயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”

யதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.
1981ல் ஜீதேந்திரா – ஹேமமாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத் திக்கும் வெற்றிமுரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரிதீக்‌ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது (‘தக்கு தக்கு கர்னே லகா’ மார்பை தூக்கி தூக்கி மாதுரி பாடும் பாட்டு நினைவிருக்கிறதா? அப்போதெல்லாம் சூப்பர்ஹிட் முக்காப்புலாவில் எப்பவுமே டாப்பில் இருக்கும்). தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா நடித்து ’அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன்-மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ’சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தேய தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். ஒரே ஸ்க்ரிப்ட் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எடுக்கப்பட்டபோதெல்லாம் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.

மிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால்,  மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.

28 மார்ச், 2013

மக்கள் ஃபீலிங்ஸ் – அதிரடி சர்வே

மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி ஆட்சி நடத்துகிறார்?
  • நன்றாக 
  • மிக நன்றாக
  • மிக மிக நன்றாக 

தமிழின துரோகியான கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி? 
  • மோசம் 
  • படுமோசம் 
  • படுபடுமோசம் 

ஈழத்தமிழர், இந்தியத்தமிழர், மலேசியத்தமிழர், சிங்கப்பூர் தமிழர், தென்னாப்பிரிக்க தமிழர் மற்றும் உலகத்தமிழர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக காணப்படும் தமிழர் யார்?
  • வை. கோபால்சாமி 
  • வைக்கோ 
  • கலிங்கப்பட்டி வையாபுரி கோபால்சாமி 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா?
  • மாட்டேன் 
  • மாட்டவே மாட்டேன் 
  • கண்டிப்பாக மாட்டேன் 

அரசியல்சாரா தலைவர்களில் யார் தேர்தல் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 
  • இயக்குனர் சீமான் 
  • நடிகர் சீமான் 
  • செந்தமிழன் சீமான் 

இந்த சர்வேயில் பங்குபெற உங்களது வாக்குகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம். வாக்களித்தவர்களின் பெயரை சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு பரிசாக “நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடல் காலர்ட்யூனாக வைத்துக்கொள்ள ‘ஏர்டெல்’லில் லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் சார்பாக காசு கட்டப்படும். ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு அதே பாடல் ரிங்டோனாக அனுப்பி வைக்கப்படும்.

28 செப்டம்பர், 2012

துரத்துதலும், ஓட்டமும்!


புலிகள் துரத்துகின்றன. கனவில் அல்ல. எருமைமாடு அளவில் ஒன்பது புலிகள். மஞ்சள் உடலில் கறுப்பு கோடுகள். ஒன்பதுமே அச்சு அசலாக ஒரே மாதிரி. நேற்று துரத்திய புலி இன்றைய கூட்டத்தில் இருக்கிறதா என்று அடையாளம் தெரியவில்லை. பெண் புலி தன் கணவனையும், மகனையும் எப்படி பிரித்தறிந்து அடையாளம் காணும்? ஓடுவதிலோ, துரத்துவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் ஒரு தரப்புக்கு வெற்றி. ஒரு தரப்புக்கு தோல்வி. வெற்றி, தோல்வி இரண்டுமே தவிர்க்க முடியாதது.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன். ஸ்பார்ட்டாவிலிருந்து ஒலிம்பியாவுக்கு ஓடிய கிரேக்க வீரனை போல். அடர்கானகத்தில் நான் மட்டும் மனிதன். என்னை துரத்துவது ஒன்பது புலிகள். என்னுடைய பூட்ஸ் சத்தம் நாராசமாக கேட்கிறது. கீச் கீச்சென்று அசந்தர்ப்பமாக கத்தும் பட்சிகள் எங்கே போனது. புலிகளின் குளம்புச் சத்தம் துளியும் கேட்கவில்லை. குதிரை ஓடினால் மட்டும் எப்படி டக் டக்கென்று சத்தம் வருகிறது? குதிரைக்கு லாடம் அடிக்கலாம். புலிகளுக்கு யார் அடிப்பது?

நான் ஓடுவதின் நோக்கம் உயிர்வாழ்வது. துரத்தும் புலிகளின் நோக்கமும் அதுதான். அடுத்த சில நாட்கள் உயிர்வாழ நான் மட்டுமே அவற்றுக்கு இரை. ஒளிபுகமுடியா கானகத்தில் நான் மட்டுமே மனிதன். எஞ்சியிருந்த மான்களையும், காட்டெருமைகளையும் இந்த அடாத புலிகள் ஏற்கனவே புசித்து விட்டது. புதர்களுக்குள் ஒளிந்திருந்த நான்கைந்து நரிகளும் நாட்டுக்கு போய்விட்டது. மிஞ்சியிருப்பது நானும், ஒரு சில முயல்களும். புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, முயலையும் தின்னாது. புலிப்பசிக்கு சோளப்பொறி போல முயல்கறி. கட்டுப்படியாகுமா?

உயிர்வேட்கையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்னை துரத்துவது போல நான் புலிகளை துரத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யோசித்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புலிகள் போல எனக்கு கூரிய பற்களும், நகங்களும் இல்லையே? ஒரு நரியை கூட துரத்திப் பிடிக்க என்னால் ஆகாது. ஆயினும் இன்று புலிகளை விட வேகமாய் ஓடுகிறேன். துரத்துதலும், ஓடுதலும் தவிர்க்க முடியாதது. துரத்தும்போது இருப்பதை காட்டிலும் ஓடும்போது உடலில் சக்தி அபரிதமாக அதிகரிக்கிறது.

பிறந்ததிலிருந்து ஓடிக்கொண்டு தானிருக்கிறேன். இப்போது ஓடுவதை விட முன்னெப்போதும் வேகமாக ஓடியதில்லை. காடதிர, நிலம் குலுங்க உறுமும் புலிகள் இன்று சத்தமில்லாமல் ஏன் துரத்துகிறது? உறுமி நேரத்தை வீணடிப்பானேன்? துரத்துவதில் உன்னிப்பாக இருக்கலாம், வேட்டையை விரைவில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கலாமோ? என் பூட்ஸ் ஒலி மட்டும் எனக்கு கேட்கிறது. புலிகளின் வேகத்தால் காற்று தடைபடும் விஸ்ஸென்ற மெல்லிய ஓசை மட்டுமே புலிகள் என்னை துரத்துவதற்கு அடையாளம். இரண்டு புலிகள் நெருங்கி விட்டிருக்கலாம். நான்கு புலிகள் பரவி ஓடி என்னை மடக்க முயற்சிக்கலாம். மூன்று புலிகள் பின் தங்கியிருக்கலாம். கிழட்டுப் புலிகள்.

பிறந்த மேனியாய் ஓடுவது அசவுகரியம். குளிர் காற்று உடலை ஊடுருவுகிறது. இடுப்பு வரை வளர்ந்த மயிர் அவ்வப்போது முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கிறது. தாவரங்களின் முள் மார்பையும், இடையையும், இடைக்கு கீழான பகுதிகளையும் இரக்கமின்றி குத்தி ரணமாக்குகிறது. இந்த பூட்ஸ் கூட எனக்கு எங்கேயோ மலைப்பிரதேசத்தில் எப்போதோ கிடைத்தது. ஒரு எலும்புக்கூட்டின் காலெலும்பில் கண்டெடுத்தேன். இதன் பெயர் பூட்ஸ் என்று கூட எனக்குத் தெரியாது. இடதுபூட்ஸை இடது காலுக்கும், வலது பூட்ஸை வலது காலுக்கும் போடவேண்டும் எனுமளவுக்கும் எனக்கு அறிவு கிடையாது. நகர மனிதனுக்கும், காட்டுமிராண்டிக்கும் இதுதான் வித்தியாசம். ஆனால் காடு சொர்க்கம், நகரம் நரகம் என்றே எண்ணுகிறேன்.

நகரத்திலும் ஓடுவார்களா? அவர்களை புலி துரத்துமா? புலிகள் வசிக்க நகரத்தில் குகையுண்டா? அங்கு முயல்கள் இருக்குமா? மரங்கள் இருக்குமா? மரத்தில் பழங்கள் காய்க்குமா? நீரருந்த குளங்கள் இருக்குமா? நகரம் எப்படியிருக்கும்? அங்கு யார் ஓடுவார்கள்? யார் துரத்துவார்கள்? ஓடுவதும், துரத்துவதும் உயிர்கள் பிறந்ததிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் யாராவது ஓடுவார்கள். அல்லது விரைவாக நடப்பார்கள். யாராவது துரத்துவார்கள். அல்லது மெதுவாக துரத்துவார்கள். காட்டு மனிதனாகட்டும், நாட்டு மனிதனாகட்டும். உயிர் வாழ்வது அவசியம் தானே?

புலிகள் துரத்துகின்றன. நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

21 செப்டம்பர், 2012

சிப்ஸ்


கடனுக்கா குடிக்கிறோம், கண்டு நடுங்கிட..
ஊத்திக் கொடுப்பவர்கள் உரிமைகள் கேட்கிறபொழுது
உயிரை பணயம் வைத்து குடிக்கும் நாம் உரிமைகள் கேட்கக்கூடாதா?

கேப்டன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு இந்த போஸ்டருக்கு வாசகம் எழுதியவரை வசனம் எழுத கூப்பிடலாம். லியாகத் அலிகான், பேரரசு மாதிரி ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக ஒரே போஸ்டரில் தூக்கியடித்திருக்கிறார்.


பொறுத்தார் ஆள்வார்


தோற்றப்பிழை என்பது காணும் காட்சிகளில் மட்டுமில்லை. கேள்விப்படும் செய்திகளிலும் உண்டு. ‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படம் தொடர்பாக உலகெங்கும் நடக்கும் இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்த ஊடகச் செய்திகளை வாசிப்பவர்கள், அந்த மதத்தையே மதவெறி கொண்ட வன்முறை கும்பலாக கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தோமானால் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக சீண்டப்படுவதை கடந்தகால வரலாறுகளில் இருந்து அறியலாம். ஓட்டு போடும் ஒவ்வொரு அமெரிக்கனையும் உசுப்ப நடத்தப்படும் நாடகங்களில் ஒன்றுதான் இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம். பனிப்போர் காலங்களில் அமெரிக்க அதிபர் ஹீரோ என்றால், வில்லனாக ரஷ்யா சுட்டிக் காட்டப்படும். சோவியத் கூட்டமைப்பு உடைந்தபிறகு வில்லனே இல்லாததால், அமெரிக்க அதிபரும் ஹீரோ ஆக வாய்ப்பில்லை. எனவே வலிந்து ஒரு வில்லனை உருவாக்கும் முயற்சியாகவே, கிறிஸ்தவ அமெரிக்கா இஸ்லாமியர்களை கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட படத்தில் காணப்படும் சமாச்சாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைத்தது சரியா என்று சரிபார்க்க படத்தை ரைட்க்ளிக் செய்து,
save image as ஆணை கொடுத்து ஃபைல் நேம் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


பெங்களூரில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது பரம்பரை பரம்பரையாக நாம் செவிவழியாகவும், அங்கு போய் பார்த்தவர்கள் கண்வழியாகவும் உணர்ந்த செய்தி. சிலமுறை பெங்களூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பையன்களும் கூட சென்னைப் பையன்களை மாதிரியே சுமாராக இருப்பதாகவே என்னால் கவனிக்க முடிந்தது. ஆனால் கன்னட சினிமா ஹீரோக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 360 டிகிரி பரப்பளவில் யோசித்தும் விடை கிடைக்கவில்லை.


இன்று காலை தினகரனில் ஒரு செய்தியை வாசித்ததுமே வசீகரப்பட்டு விட்டேன். வசீகரத்துக்கு காரணம் செய்தியல்ல. படம். ஊட்டியைச் சேர்ந்த நிஷாலி மஞ்சுபாஷினி கின்னஸ் சாதனைக்காக லட்சம் விநாயகர் சிலைகளை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம். இதுவரை நாலாயிரம் சிலைகளை சேகரித்திருக்கும் அவரது சாதனையைப் பாராட்டி தினகரன், கலர் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. என்னைப் போலவே ஏராளமான தமிழ் இயக்குனர்களும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். ‘அடுத்த படத்துக்கு ஹீரோயின் ரெடி’ என்று இன்னேரம் ஊட்டிக்கு டிக்கெட்டும் போட்டிருப்பார்கள். போட்டோவைப் பார்த்ததுமே அவசரமாக ‘சைட்’ அடித்தவன், செய்தியை வாசித்து பேஜாராகிப் போனேன். மஞ்சுவின் அப்பா போலிஸ் எஸ்.ஐ.யாம்.


பழையங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஏ.எஸ்.பாண்டியன் அவர்களைப் போலவே தமிழ்நாடு முழுக்க இருக்கும் எல்லா உள்ளாட்சித் தலைவர்களும் நல்லவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமான குடிவெறியர்கள் மீதுதான் எவ்வளவு கரிசனம் இவருக்கு?


வரும் ஞாயிறன்று பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் இப்போதிருக்கும் அளவுக்கு மதரீதியான பதட்டம் முன்னெப்போதும் இருந்ததாக நினைவில்லை. சாத்வீகமான போலிஸ் கமிஷனர் மாற்றப்பட்டு, அதிரடியான ஆணையாளர் சென்னை மாநகரத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிய விநாயகப் பெருமான்தான் அருள்புரிய வேண்டும்.

22 ஆகஸ்ட், 2012

ஜாக்கியா? கேபிளா?


இரண்டாயிரங்களின் மத்தியில் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் ஓட்டலில் போண்டாக்களை பிரதானப்படுத்தி தொடங்கிய பதிவர் சந்திப்புகள் இப்போது கல்யாண மண்டபத்தில் மாநாடு நடத்தக்கூடிய அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆரம்பத்தில் நடந்த சந்திப்புகளில் போலி டோண்டுவை ஒழிப்பது எப்படி, இந்தியா வல்லரசு ஆவது எப்படி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பேசப்பட்டன. பிற்பாடு தி.நகர் பூங்காக்களிலும், கடற்கரையிலும், சாந்தோம் டீக்கடையிலுமாக நடந்த சந்திப்புகளும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, எல்லாருமாக ஒன்றுசேர்ந்து ‘எங்கள் பிளாக்கில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று குழுவாக பாடுமளவுக்கு உறுதிபெற்றது. யார் கண்பட்டதோ, அந்த சந்திப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போதெல்லாம் ஏதாவது புத்தக வெளியீடு, புதுப்படம் ரிலீஸ் போன்ற இடங்களில்தான் பதிவர்கள் சந்தித்துக்கொள்ள முடிகிறது. அந்த குறையைப் போக்கும் வகையில்தான் சென்னையில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டு நிகழ்ச்சிகளில் ‘கவியரங்கம்’ மாதிரியான கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஒருவழியாக தமிழ்வலைப்பதிவர் சந்திப்புகள் தமிழரது மரபார்ந்த மேடைகலாச்சாரத்துக்கு திரும்புவது என்பது தமிழன் என்கிற வகையில் பெருமிதத்தையும், பெரும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. குறிப்பாக குடிவெறிக்கு ஆதரவான பதிவுகளை பதிவர்கள் இடக்கூடாது என்கிறரீதியில் உருப்படியான ஒரு தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்படலாம் என்கிற சேதி காதில் தேனாய் பாய்கிறது. தோழர் மணிஜியோடு இணைந்து இந்த தீர்மானத்தை கண்மூடித்தனமாக வரவேற்கிறோம். சீயர்ஸ்!

இக்கலாச்சாரம் இத்தோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தில் ‘பட்டிமன்றம்’ மாதிரியான தமிழரின் பாரம்பரிய கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு அடிகோல் நாட்டவேண்டும் என்பதே நம் விருப்பம். அவ்வாறு நடத்தப்படும் பட்டிமன்றம் எவ்வகையில் அமையலாம் என்கிற நமது ஆசையை இங்கே ட்ரைலர் ஓட்டுகிறோம். இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் டிஸ்க்ளைமர் போட விரும்பவில்லை. எனவே யார் மனதாவது புண்பட்டு விட்டால், புண்பட்ட இடத்துக்கு டிஞ்சர் தடவவும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

பட்டிமன்றத்தின் தலைப்பு : ஜாக்கியா? கேபிளா?

நடுவர் : வடகரை வேலன்

ஜாக்கி அணியில் வாதாடுபவர் : மணிஜி

கேபிள் அணியில் வாதாடுபவர் : அப்துல்லா

பலத்த கரகோஷத்துடன் பட்டிமன்றம் தொடங்குகிறது.

நடுவர் வடகரை : ‘ஜாக்கியா? கேபிளா?’ என்கிற இந்த புதுமையான தலைப்பில் தமிழ் வலைப்பதிவுலகில் தொன்றுதொட்டு வரும் பிரச்னைகளை குறித்து இருதரப்பு காரசாரமாக மோதிக்கொள்ள இருக்கிறார்கள். முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா இல்லை மொட்டையா என்று கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலத்த கைத்தட்டல்)

ஜாக்கி இல்லாமல் காருக்கு பஞ்சர் போட முடியாது. கேபிள் இல்லாமல் டிவியிலே படம் பார்க்க முடியாது. ரெண்டுமே நமக்கு அவசியம்தான். எனவே டஃப் ஃபைட்டுதான். வா முனிம்மா வா.. வா முனிம்மா வா.. நீயும் நானும் ஜோடி.. சும்மா பீச்சு பக்கம் வாடி என்று பாடினான் அந்தகால கவிஞன். அதே பாடலை பாடி ஜாக்கி அணிக்காக வாதாட அணியின் தலைவர் நாவுக்கரசர் மணிஜியை அழைக்கிறோம்.

மணிஜி : நடுவர் அவர்களே, எதிரே என் பேச்சை கேட்க குவிந்திருக்கும் வாசக நண்பர்களே, இந்நிகழ்ச்சியை வலைத்தளத்தில் வாசிக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான ரத்தத்தின் ரத்தமான என் வாசகப்பெருங்‘குடி’மக்களே! உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ‘ஒத்தா’

(ஜாக்கியின் மந்திரகோஷத்தை மணிஜி உச்சரிக்க, பார்வையாளர் மத்தியில் பலத்த கரகோஷத்துடன், விசில் சத்தமும் கூரையைப் பிளக்கிறது)


நடுவர் வடகரை : தேவையாய்யா நமக்கு?

(அரங்கில் சிரிப்பு)

மணிஜி : நடுவர் அவர்கள் ஜாக்கியை வைத்து காருக்கு பஞ்சர் ஒட்டமுடியுமென்று மட்டும்தான் சொன்னார். ஜாக்கி இல்லாமல் குதிரைகூட பந்தயத்தில் ஓடாது என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குங்ஃபூ மன்னனின் பெயரும் ஜாக்கி. அது மட்டுமின்றி ஜட்டிகளில் சிறந்தது ஜாக்கி


நடுவர் வடகரை (அவசரமாக குறுக்கிட்டு சிரித்துக்கொண்டே) : நாங்கள்லாம் அந்த காலத்து ஆளுங்கய்யா.. கோவணம் பார்ட்டி!


(பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு)

மணிஜி : நடுவர் அவர்களே! கோவணம் மட்டும் இளப்பமா என்ன? ஒரு கவிஞன் பாடினான். ‘எங்கோ மனம் பறக்குது.. எங்கோ மனம் பறக்குது’. இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு டாஸ்மாக்குக்கு தண்ணியடிக்கப் போன மூதேவி ஒருத்தன் வேகமா போதையில் இதே பாட்டை பாடினான் ‘என் கோமணம் பறக்குது.. என் கோமணம் பறக்குது’

(பலத்த கைத்தட்டல்)

ஆகையால் நடுவரே! (ராகத்துடன்) நாட்டாமை பாதம் பட்டா, இங்கே வெள்ளாமை வெளையுமடி. நாட்டாமை கை அசைச்சா அந்த சூரியனும் மறையுமடி (ராகத்தை நிறுத்தி, தீவிரமான குரலில்) என்றுகூறி ஜாக்கிதான் சிறந்தவர். ஜாக்கிதான் நல்லவர். ஜாக்கிதான் வல்லவர் என்கிற தீர்ப்பினை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

(பலத்த கைத்தட்டல்)

நடுவர் வடகரை : அபாரம்யா.. அபாரம்.. அதுவும் கடைசியா வெச்சீங்க பாருங்கய்யா ஒரு பஞ்ச். என் மனசு பஞ்சு பஞ்சா பறந்துடிச்சி. பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி பட்டுவண்ண லவிக்கை போட்டு, கஞ்சிகொண்டு போறபுள்ளே என்று கூறி, வெள்ளை மனசுக்காரர், வெள்ளை உடுப்புக்காரர், சுருக்கமாக வெள்ளைக்காரர் அப்துல்லா அவர்களே வருக, வருக.. கேபிள் பற்றிய உங்கள் வாதங்களை வறுத்து வறுகடலையாக தருக, தருகவென அழைக்கிறேன்.

(பலத்த கைத்தட்டல்)

முழுக்க வெள்ளையாக ஜெகன்மோகிணி, நவமோகிணி படங்களில் வரும் வெள்ளைக்கலர் குட்டிச்சாத்தான் மாதிரி (ஆனால் கொஞ்சம் உயரமாக) கருப்பு, சிவப்பு கரைவேட்டியோடு கைகூப்பியபடியே, கைகூப்பி முடித்ததும் வலதுகையால் உதயசூரியனை காட்டியவாறே வருகிறார் அப்துல்லா.

அப்துல்லா : நடுவர் அண்ணே, எம்பேச்சை கேட்குற பார்வையாளர் அண்ணே எல்லாத்துக்கும் வணக்கம் அண்ணே!

நடுவர் வடகரை : பொம்மனாட்டிகளை கூட அப்துல்லாண்ணே அக்கா, தங்கச்சின்னு ன்னு கூப்பிடாம அண்ணேன்னுதான் கூப்பிடுவாருன்னா பார்த்துக்கங்களேன்

(மொக்கை ஜோக்காக இருந்தாலும் பார்வையாளர்கள் தலையெழுத்தே என்று சிரித்துத் தொலைக்கிறார்கள்)

அப்துல்லா : எல்டாம்ஸ் ரோடு முனையிலே சிக்னல் கிட்டே ஒரு சின்னப் பையன் அண்ணன் மூத்திரம் போயிக்கிட்டிருந்தான். நான் போயி அவங்கிட்டே சொன்னேன். தம்பியண்ணே! இங்கிட்டு மூத்திரம் போவக்கூடாது. பக்கத்துலேதான் போலிஸ் ஸ்டேஷன். அவங்க பார்த்தாங்கன்னா பிடிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு. அவன் சொன்னான். வீணா வேஸ்டாப் போறதுதானே, வேணும்னா அவங்க புடிச்சிக்கிட்டுப் போவட்டும்..


(சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்க்கிறார். அண்ணன் கைத்தட்டலை எதிர்ப்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்ட கூட்டம் பலத்த கைத்தட்டலோடு, ஆயிரம் முறை கேட்டுவிட்ட இந்த ஜோக்குக்கு இன்னொருமுறையும் தலையெழுத்தே என்று சிரிக்கிறது)

இப்படித்தான் ஒருவாட்டி கேபிளண்ணன் சொன்னார். என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான், ஊர்லே நாலு பேரு சிரிக்கிற மாதிரி எந்த காரியத்தையும் அவன் பண்ணவே மாட்டான்.

நடுவர் வடகரை : ஊரு சிரிக்கலேன்னா என்னய்யா, நான் சிரிக்கறேன். நானும் ஊர்லே ஒருத்தன்தான்

(நடுவர் பலமாக சிரிக்கிறார். வேறு யாரும் சிரிக்கவில்லை)

அப்துல்லா : அப்படி என்ன வேலையை அண்ணே உங்க ஃப்ரெண்டண்ணன் செய்யுறாருன்னு கேட்டேன். அதுக்கு கேபிளண்ணே சொன்னார். அவன் மெகாசீரியல் டைரக்டரா இருக்கானுன்னு...

(பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு)

நீங்கள்லாம் சிரிக்கறீங்கண்ணே. ஆனா நான் இந்த ஜோக்கை கேட்டதும் அழுதுட்டேன். அதான் கேபிளண்ணன். ஒரு முறை அண்ணன், ’கேட்டால் கிடைக்கும்’னார். நான் என்னத்தை கேட்டா என்னத்தை கிடைக்கும்ணேன். உன் எண்ணத்தை கேட்டா, உனக்கு என்னென்னவோ கிடைக்கும்னார்.

(பலத்த கைத்தட்டல்)

ஆகவே, நடுவர் அண்ணன் அவர்களே! நடுவர் என்பவர் நடுவில் இருக்க வேண்டும். காவிரியில் நடுவர் மன்றம் அமைய காரணமாக இருந்தது கழக அரசு. எனவே நீங்கள் செசன்ஸ் நீதிமன்ற நடுவராக இல்லாமல், ஐ.நா.மன்ற நடுவராக நினைத்து கேட்கிறேன். ஜாக்கியண்ணனை விட கேபிளண்ணன் சிறந்தவர் என்று தீர்ப்பளித்து, தேர்தலில் எனக்கு டெபாசிட்டு மட்டுமின்றி வெற்றியையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


(கரகோஷம்)


நடுவர் வடகரை : கடைசி பத்தியிலே அண்ணன் வெச்சாரு பாருய்யா ஐஸூ. உள்ளூர் நாட்டாமையை உலக நாட்டாமையாக்கிட்டாரே. இதுக்காகவே இவருக்கு தீர்ப்பை மாத்தி தந்துடலாமான்னு தோணுது. ஆனாலும் சொம்பு, ஜமக்காளம் சகிதமா உட்கார்ந்திருக்கிற பொறுப்பான நாட்டாமைங்கிறதாலே பொருத்தமான தீர்ப்பு சொல்றதுதான் முறை.


ரெண்டு தரப்பும் முட்டையாவோ, மொட்டையாவோ, கொட்டையாவோ இல்லாம பட்டையாவே மோதிக்கிட்டாங்க. அவங்களோட வார்த்தைச் சாட்டையில் பட்டை பட்டையா வீங்கிடுச்சி என் மூளை.


சக்தி இல்லாமல் சிவனில்லைம்பான். சிவனில்லாம சக்தி இல்லைம்பான். அம்மாதிரி ஜாக்கி இல்லாம கேபிளில்லை. கேபிளில்லாம ஜாக்கி இல்லைன்னு சொல்லி இந்த பட்டிமன்றத்தை முடிச்சிக்கறேன்.

(சிரிப்பு. கைத்தட்டல். கரகோஷம் என்று கலவையான சத்தம்)

தீர்ப்புக்காக காத்திருந்த ஜாக்கியின் வாசக நண்பர்களும், கேபிளின் ஐம்பத்து ஐந்து லட்ச ஹிட்ஸ் வாசகர்களும் ஆனந்தத்தால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ‘உம்மா’ கொடுத்துக் கொள்கிறார்கள்.

நடுவர் வடகரை மேடையிலிருந்து கம்பீரமாக இறங்க ‘ஹோ.. ஹோ... ஹோஹோஹோ’ என்று கோரஸைத் தொடர்ந்து, ‘நாட்டாமை பாதம் பட்டா’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.


நாட்டாமையை இடைமறித்து யாரோ ஒரு புதுப்பதிவர் : நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு.

(அரங்கம் முழுக்க நிசப்தம்)


ஒற்றுமையாக கும்மியடித்துக் கொண்டிருந்த கேபிள்-ஜாக்கி ரசிகர்கள் ஆக்ரோஷமாக அந்தப் பதிவரை முற்றுகையிடுகிறார்கள்.

நாட்டாமை வடகரை (குறுக்கிட்டு) : அவனை அப்படியே விடுங்க. இவ்ளோ நேரம் இந்த மொக்கை போஸ்ட்டை படிச்சானே, இதுதான் அவனோட முந்திரிக்கொட்டைத் தனத்துக்கு நான் அவனுக்கு கொடுக்குற தண்டனை...

‘நல்ல தீர்ப்பு, நல்ல தீர்ப்பு’ என்று நாடகத்தனமாக சொல்லியவாறே பார்வையாளர்கள் அரங்கத்தைவிட்டு வெளியேறி, எதிரே இருக்கும் டாஸ்மாக்குக்கு கும்பல், கும்பலாகச் செல்கிறார்கள்.