21 செப்டம்பர், 2012

சிப்ஸ்


கடனுக்கா குடிக்கிறோம், கண்டு நடுங்கிட..
ஊத்திக் கொடுப்பவர்கள் உரிமைகள் கேட்கிறபொழுது
உயிரை பணயம் வைத்து குடிக்கும் நாம் உரிமைகள் கேட்கக்கூடாதா?

கேப்டன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு இந்த போஸ்டருக்கு வாசகம் எழுதியவரை வசனம் எழுத கூப்பிடலாம். லியாகத் அலிகான், பேரரசு மாதிரி ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக ஒரே போஸ்டரில் தூக்கியடித்திருக்கிறார்.


பொறுத்தார் ஆள்வார்


தோற்றப்பிழை என்பது காணும் காட்சிகளில் மட்டுமில்லை. கேள்விப்படும் செய்திகளிலும் உண்டு. ‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படம் தொடர்பாக உலகெங்கும் நடக்கும் இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்த ஊடகச் செய்திகளை வாசிப்பவர்கள், அந்த மதத்தையே மதவெறி கொண்ட வன்முறை கும்பலாக கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தோமானால் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக சீண்டப்படுவதை கடந்தகால வரலாறுகளில் இருந்து அறியலாம். ஓட்டு போடும் ஒவ்வொரு அமெரிக்கனையும் உசுப்ப நடத்தப்படும் நாடகங்களில் ஒன்றுதான் இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம். பனிப்போர் காலங்களில் அமெரிக்க அதிபர் ஹீரோ என்றால், வில்லனாக ரஷ்யா சுட்டிக் காட்டப்படும். சோவியத் கூட்டமைப்பு உடைந்தபிறகு வில்லனே இல்லாததால், அமெரிக்க அதிபரும் ஹீரோ ஆக வாய்ப்பில்லை. எனவே வலிந்து ஒரு வில்லனை உருவாக்கும் முயற்சியாகவே, கிறிஸ்தவ அமெரிக்கா இஸ்லாமியர்களை கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட படத்தில் காணப்படும் சமாச்சாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைத்தது சரியா என்று சரிபார்க்க படத்தை ரைட்க்ளிக் செய்து,
save image as ஆணை கொடுத்து ஃபைல் நேம் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


பெங்களூரில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது பரம்பரை பரம்பரையாக நாம் செவிவழியாகவும், அங்கு போய் பார்த்தவர்கள் கண்வழியாகவும் உணர்ந்த செய்தி. சிலமுறை பெங்களூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பையன்களும் கூட சென்னைப் பையன்களை மாதிரியே சுமாராக இருப்பதாகவே என்னால் கவனிக்க முடிந்தது. ஆனால் கன்னட சினிமா ஹீரோக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 360 டிகிரி பரப்பளவில் யோசித்தும் விடை கிடைக்கவில்லை.


இன்று காலை தினகரனில் ஒரு செய்தியை வாசித்ததுமே வசீகரப்பட்டு விட்டேன். வசீகரத்துக்கு காரணம் செய்தியல்ல. படம். ஊட்டியைச் சேர்ந்த நிஷாலி மஞ்சுபாஷினி கின்னஸ் சாதனைக்காக லட்சம் விநாயகர் சிலைகளை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம். இதுவரை நாலாயிரம் சிலைகளை சேகரித்திருக்கும் அவரது சாதனையைப் பாராட்டி தினகரன், கலர் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. என்னைப் போலவே ஏராளமான தமிழ் இயக்குனர்களும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். ‘அடுத்த படத்துக்கு ஹீரோயின் ரெடி’ என்று இன்னேரம் ஊட்டிக்கு டிக்கெட்டும் போட்டிருப்பார்கள். போட்டோவைப் பார்த்ததுமே அவசரமாக ‘சைட்’ அடித்தவன், செய்தியை வாசித்து பேஜாராகிப் போனேன். மஞ்சுவின் அப்பா போலிஸ் எஸ்.ஐ.யாம்.


பழையங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஏ.எஸ்.பாண்டியன் அவர்களைப் போலவே தமிழ்நாடு முழுக்க இருக்கும் எல்லா உள்ளாட்சித் தலைவர்களும் நல்லவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமான குடிவெறியர்கள் மீதுதான் எவ்வளவு கரிசனம் இவருக்கு?


வரும் ஞாயிறன்று பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் இப்போதிருக்கும் அளவுக்கு மதரீதியான பதட்டம் முன்னெப்போதும் இருந்ததாக நினைவில்லை. சாத்வீகமான போலிஸ் கமிஷனர் மாற்றப்பட்டு, அதிரடியான ஆணையாளர் சென்னை மாநகரத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிய விநாயகப் பெருமான்தான் அருள்புரிய வேண்டும்.

5 கருத்துகள்:

  1. செய்தி தொகுப்பும் அதற்க்கு உங்கள் கருத்துக்களும் அருமை...
    வாழ்த்துகள் நண்பா...

    பதிலளிநீக்கு
  2. இந்த மாதிரி எழுதி ரொம்ப நாளாச்சு போலிருக்கே !!!

    பதிலளிநீக்கு
  3. யுவா, மதரீதியான புன்படுத்தல்கள் எப்போதுமே தவறுதான். என்ன காரணமாக இருந்தாலும் சரி. அமெரிக்கா ஆனாலும் சரி ஆண்டிபட்டி ஆனாலும் சரி. தங்களின் கடைசி செய்தியையும் கடைசி படத்தையும் பார்த்தவுடன் இந்து மதத்தை என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் என்ன அளவிலும் கிண்டல் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த அளவு அல்லது இதைவிட குறைவாக ஒரு light hearted ஆக அல்லது ஒரு கிண்டல் தொனியோடு மற்ற மதத்தை சொல்லமுடியுமா தெரியவில்லை. நீங்களும் சொல்ல மாடீர்கள் என்று நினைக்கிறன். ஊருக்கு இளைத்தவன் பிளையார் கோவில் ஆண்டி என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  4. //கன்னட சினிமா ஹீரோக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 360 டிகிரி பரப்பளவில் யோசித்தும் விடை கிடைக்கவில்லை//

    me too same doubt ...

    பதிலளிநீக்கு