சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட், 2020

விஜயகாந்த்

தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது.

பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார்.

நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம்.

அந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்கு போடும்.

பேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது.

இருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர்.

எடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

என்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.

கீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ’வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.

என்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ?

பேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள்.

சாலை மறியல்.

கூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.

இந்தி எதிர்ப்புப் போர்.

இந்தி ஒழிக. தமிழ் வாழ்க.

தேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.

“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.

ம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது.

போர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.

“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.

‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே?’ கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்…

யாரும் எதிர்பாரா வகையில்..

டிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது.

பல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது.

ங்கொய்யென்று ரீங்காரம்.

நிமிர்ந்துப் பார்த்தார்.

பார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. நெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.

திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..

“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” – சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

யாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.

“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.

ம்… நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

(‘விஜயகாந்த்’ புத்தகத்தின் முதல் அத்தியாயம்)

21 ஜூலை, 2020

கலையுலகச் சோழன்!



அப்பா, எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே, வாரிசு ரசனையாக எனக்கும் மக்கள் திலகத்தைதான் பிடிக்கும்.

அம்மாவோ நேரெதிர். சிவாஜி படங்கள்தான் பார்ப்பார். எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் ‘வெறும் சண்டை’ என்று ஒதுக்கிவிடுவார்.

ஆனால் -

கடைசிக் காலத்தில் அப்பாவும் சிவாஜியை ரசிக்க ஆரம்பித்தார். ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ மற்றும் ‘பா’ வரிசை படங்களை திரும்பத் திரும்ப விசிடியில் பார்த்துக் கொண்டிருந்தார். “சிவாஜியும் கூட நல்லாதான்யா ஸ்டைல்லா நடிச்சிருக்காரு” என்று கமெண்ட் செய்வார். எனக்குள் ஊறிப்போயிருந்த எம்.ஜி.ஆர் ரசனை ரத்தம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

2001, ஜூலை 21-க்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பத்து, பதினைந்து சிவாஜி படங்களைப் பார்த்திருந்தாலே அதிகம். அவையும் கூட பராசக்தி, மனோகரா, நான் வாழ வைப்பேன், விடுதலை, தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ்மோர் மாதிரி படங்கள்தான். டிவியில் சிவாஜி படமென்றாலே ஜூட்.

2000-ங்களின் தொடக்கத்தில் தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவிலிருந்த ஒரு விளம்பர ஏஜென்ஸியில் பணி. தினமும் போக் ரோடு சிவாஜி வீட்டைக் கடந்துதான் என் டிவிஎஸ் சேம்ப் செல்லும். அந்த வீட்டு வாசலில் சில முறை சிவாஜி, ராம்குமார், பிரபுவையெல்லாம் கண்டிருக்கிறேன். அங்கிருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் டிரைவர்களோடு அவ்வப்போது பிரபு பேசிக்கொண்டிருப்பார்.

மகத்தான நடிகர் வீடு வழியாக தினமும் சென்றுக் கொண்டிருந்தாலும், அந்த வீட்டுக்கு சற்றே எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஆற்காடு தெருதான் நமக்கு திருத்தலம். மக்கள் திலகம் வாழ்ந்த வீடாயிற்றே?

எம்.ஜி.ஆர் ரசனையின் ஒரு விபரீத அம்சம் என்பது சிவாஜி வெறுப்பு. கண்ணை மூடிக்கொண்டு சிவாஜியை மட்டம் தட்டுவது. அப்படிதான் தட்டிக் கொண்டிருந்தேன் அந்த 2001 ஜூலை 21 வரை.

‘கலைஞர் நீண்டகாலம் வாழ, என் வாழ்நாளின் மீத வருடங்களை தருவேன்’ என்று கூறியிருந்தார் சிவாஜி. பாசிஸ்ட் ஜெயலலிதாவால் படுமோசமான முறையில் மிருகத்தனமாக போலீஸாரால் கலைஞர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, தன் வாழ்நாளின் மீதி வருடங்களை தன் ஆருயிர் நண்பருக்குக் கொடுத்துவிட்டு மேலுலகம் சென்றார்.

சிவாஜியின் மறைவுச் செய்தியைக் கேட்டபோது அளவில்லா துக்கம் நெஞ்சைக் கவ்வியது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவரது பூவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்திய காட்சிகளை டிவியில் பார்த்துவிட்டு, உடனே போக் ரோடுக்கு கிளம்பினேன். நந்தனம் சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு போக் ரோடுக்குச் செல்லும்போது காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம். கதறியழுதவாறே அன்னை இல்லத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதர் ‘பராசக்தி’ வசனத்தை அழுதவாறே உரத்தக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். சிவாஜி யார் என்பதை உணர்ந்த தருணம் அது.

அன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, மறுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு, இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்று எத்தனையோ பிரபலங்களின் இறுதி ஊர்வலங்கள் இன்றும் சென்னை மாநகரில் நினைவுகூறப்படுகின்றன. சிவாஜி இறுதி ஊர்வலத்தை மட்டும் ஏனோ அதில் சேர்க்க மறந்துவிடுகிறார்கள்.

தி.நகரில் தொடங்கி பெசண்ட் நகர் வரை நடந்த சிவாஜியின் இறுதி ஊர்வலத்திலும் பல லட்சம் பேர் பங்கேற்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் சாதாரணர்களாக தங்களை மாற்றிக்கொண்டு பங்கேற்ற பிரும்மாண்டமான ஊர்வலம் அது. மக்கள் கடலில் மிதந்தவாறேதான் அவரை சுமந்த வாகனம் நகர் மத்தியில் சென்றது. செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும், போட்டோகிராஃபர்களும் கூட அழுதது எந்த இறுதி ஊர்வலத்திலும் நான் கண்டிராத காட்சி.

அன்றிலிருந்துதான் சிவாஜி படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களை டிவி, இணையம் மூலம் பார்த்தாகிவிட்டது. என்னுடன் சினிமா கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சம்பத் என்பவர் தீவிர சிவாஜி ரசிகர். அவருடனான உரையாடல்கள் சிவாஜியின் நடிப்பை எப்படி அணுக வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தது. உலகிலேயே இவ்வளவு வேடங்கள் ஏற்று, ஒவ்வொரு வேடத்துக்கும் வேறுபாடு காட்டி நடித்த நடிகர் வேறு எவராவது இருப்பாரா என்பது சந்தேகம்தான். சிவாஜியை ரசிக்க ‘செல்லுலாய்ட் சோழன்’ என்கிற பிரமாதமான ‘ரீடர்’ ஒன்றை பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் வேறெந்த நடிகருக்காவது இப்படியொரு நுணுக்கமான ரசனை சார்ந்த விரிவான நூல் இருப்பதாகத் தெரியவில்லை.

இருபது வயதுவரை நான் வெறுத்துக் கொண்டிருந்த சிவாஜி, கடந்த இருபதாண்டுகளில் மனதுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக ஆகிவிட்டார். இன்று, உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பது என் மனப்பதிவு.

24 அக்டோபர், 2019

பழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்!

தனலட்சுமி தியேட்டர்
(மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை)

குமரன் தியேட்டர்
(புழுதிவாக்கம்)

ரங்கா தியேட்டர்
(நங்கைநல்லூர்)

ஜெயலட்சுமி தியேட்டர்
(ஆதம்பாக்கம்)

மதி தியேட்டர்
(ஆலந்தூர்)

ஜோதி தியேட்டர்
(பரங்கிமலை)

ராஜலட்சுமி தியேட்டர்
(வேளச்சேரி)

மற்றும்

என் பால்யத்தை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றிய
சென்னை மாநகர் – புறநகர், சுற்றுவட்டார
அனைத்து திரை அரங்கங்களுக்கும்…

இந்நூல் சமர்ப்பணம்!

மறக்க முடியுமா?

எண்பதுகளையும், தொண்ணூறுகளையும் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

2K கிட்ஸ் என்று சொல்லப்படுகிற இளைஞர்கள்தான் ஏராளமானோர் இன்று சமூக ஊடகங்களில் புழங்குகிறார்கள்.

80களிலும், 90களிலும் வெளிவந்த திரைப்படங்களையும், அக்கால நட்சத்திரங்களையும் ‘மீம்ஸ் மெட்டீரியல்’ என்கிற வகையில்தான் மிகவும் கிண்டலாகதான் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

நாமெல்லாம் வியந்து, வியந்து ஆராதித்த நட்சத்திரங்களை இப்படி பொசுக்கென்று ஒரே ஒரு மீமில் பாதாளத்துக்கு தூக்கிக் கடாசிவிடும் அவர்களின் அராஜகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ‘அவங்கள்லாம் யாரு தெரியுமா?’ என்று பதிலளிக்க ‘பழைய பேப்பர்’ என்கிற கட்டுரைத் தொடரையே ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பான ‘வெள்ளி மலர்’ இதழில் தொடங்கினேன்.

இத்தொடரை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாக அன்பும், ஆதரவும் தெரிவித்த மரியாதைக்குரிய தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க மறந்துவிட்டால் காலத்துக்கும் கடன் பட்டவன் ஆவேன்.

தொடர் தொடங்கியபிறகு எதிர்பாரா பக்கங்களில் இருந்து கிடைத்த வரவேற்புகள் சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் 6 மணியிலிருந்து தொடந்து என் கைப்பேசி ஒலிக்கத் தொடங்கிவிடும். வாசகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரும் தொடர்ச்சியாக இத்தொடரை வாசித்து, தங்கள் கருத்துகளை சொல்லி வந்தார்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குறித்த கட்டுரை வந்தபோது, அதை அப்படியே அவரது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதன் பிறகு பல்லாயிரக்கணக்கில் புதிய வாசகர்கள் இத்தொடருக்குக் கிடைத்தார்கள்.

‘பழைய பேப்பர்’, இப்போது சூரியன் பதிப்பகத்தால் நூல் வடிவமும் பெறுகிறது என்பது மகிழ்ச்சி. தொடருக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் நூலுக்கு கூடுதலான வரவேற்பு கிடைக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.

‘பழைய பேப்பர்’ என்று பெயர் வைத்திருந்தாலும், இந்நூலில் தொகுத்துள்ள தகவல்கள் பெரும்பாலும் அவ்வளவு பழசு அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், சிலர் பழைய பேப்பர்களில் இருந்து திரட்டிய தகவல்களா என்றும் கேட்டனர். அதுவும்தான் என்றாலும் முற்றிலும் அப்படியல்ல.

இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும்பாலும் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் சொல்லிக் கேட்டவை, அவர்களே எழுதிய தன்வரலாற்று நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை, பழைய பேட்டிகளில் கிடைத்த தகவல்கள் என்று அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தி முடிந்தவரை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன்.

பொதுவாக சினிமா குறித்த கட்டுரைகள் எழுதும்போது நக்கீரர்கள் சிலர் கருத்துப்பிழை, தகவல்பிழையென்று விளாசித் தள்ளிவிடுவார்கள். ‘பழைய பேப்பர்’ எழுதும்போது அத்தகைய அனுபவம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை.

ஓக்கே. மொக்கை போட்டது போதும்.

It is show time.

கால இயந்திரத்துக்குள் பயணிக்கத் தயாராகுங்கள்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

- ‘பழைய பேப்பர்’ நூலுக்கு எழுதிய முன்னுரை.


பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. தொலைபேசி : 044-42209191
மொபைல் : 7299027361

8 மார்ச், 2019

பெண்ணியம் : ஒரு கட்டிங்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட பிரெஞ்சு சிந்தனையாளரான ஓர் ஆண்தான்.

நாடுகள் குடியரசாக ஆகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடியதே பரந்துப்பட்ட சமூக அளவில் முதல் பெண்ணிய உரிமைக்குரல் எனலாம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கநிலை.

உலகப்போர்கள் நடந்துக் கொண்டிருந்தபோது போரில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அப்போது போரில் ஈடுபட்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பெண்களே இருந்தார்கள். அதையடுத்து போர்களுக்குப் பின்னரான காலக்கட்டமான இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் குடும்பத்தில் தொடங்கி சமூகம், நாடு, உலகம் என்று எல்லைகளை வரையறுக்காமல் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

பெண்ணியம் என்பது குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஆணுக்கு இணையான இடத்தை பெண்ணுக்கும் கோருவது என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கலுக்குப் பின்னான பெண்ணியச் சிந்தனைகள் வேறு புதிய பரிமாணங்களை எட்டியது. இதை வார்த்தைகளில் வரையறை செய்ய இயலாது. தங்கள் உடையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் தொடங்கிய, இந்த பெண்ணிய அலை இப்போது தங்கள் உடல் குறித்த அரசியலை விவாதிப்பதைக் கடந்து வேறு வேறு அதீத எல்லைகளை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடிப்படையில் ‘இது நல்லது’, ‘இது கெட்டது’ என்றெல்லாம் நிகழ்வுகள் நடக்கக்கூட சமகாலத்தில் யாராலும் துல்லியமாக கூறிவிட முடியாது. எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரம் ‘90 ml’ என்கிற பெண்ணியம் பேசும் திரைப்படம், தமிழகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

’90 ml’ என்பது ‘குடி’மகன்களுக்கு கவர்ச்சிகரமான அளவு. மதுவிடுதிகளில் “ஒரு லார்ஜ், ஒரு ஸ்மால்” என்று ஆர்டர் கொடுப்பார்களே, அந்த அளவுதான் 90 ml. நம் டாஸ்மாக் கடைகளின் அளவீடுகளின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒரு கட்டிங்’.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சரக்கு’க்காக ராத்திரி முழுக்க தெருத்தெருவாக அலையும் ஓர் ஆணின் கதை ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தலைப்பில் வெளியானது. அதே போல ஐந்து பெண்கள் கூடி சரக்கு போடும் படத்துக்கு ’90 ml’ என்று தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானதுதான்.

தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் பெண்ணியம் என்ன பாடுபடுகிறது என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் ’90 ml’ஐ காட்டலாம்.

‘ஆண் சரக்கு அடிக்கும்போது, நாங்கள் அடிக்கக் கூடாதா?’ என்று பெண்கள் கேட்டால் அது சம உரிமை கோருவது மாதிரியான நியாயமான கேள்வியாகதான் இருக்கக்கூடும்.

ஆனால் –

போதைப்பழக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவ உண்மை.

’90 ml’ படத்தில் ஐந்து பெண்கள் அவ்வப்போது சரக்கு அடிக்கிறார்கள். அந்த ஐந்துப் பெண்களில் தலைவி மாதிரி இருக்கும் ஓவியாவின் ஆண் நண்பர், சைட் டிஷ்ஷாக ஹாஃப்பாயில் போட்டுக் கொடுக்கிறார்.

இம்மாதிரி குடியும் குடித்தனமுமான கூட்டங்களில் ஓவியாவும், அவரது குழுவினரும் முழுக்க பேசிக்கொள்வது ‘டபுள் மீனிங்’ அல்ல ‘டைரக்ட் மீனிங்’ வசனங்கள். குறிப்பாக பெண்களின் உடல் அங்கங்கள் குறித்த கேலியான வருணனை, பேச்சுலர் ரூம்களில் நடபெறும் டிரிங்ஸ் பார்ட்டிகளின் எல்லையையே கூட மீறுகிறது.

பெண்கள் தனியாக பேசும்போது இப்படித்தான் பேசுவார்களா என்று இந்தக் கட்டுரையை எழுதும் ஆணுக்குத் தெரியாது. எனினும், அவ்வாறுதான் பேசுவார்கள் என்றால் பெண்களுக்குள்ளேயே ‘ஆணாதிக்கம்’ இருப்பதாகதான் எண்ண வேண்டியிருக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட லெஸ்பியன் தம்பதியினர் காட்டப்படுகிறார்கள். ‘ஓரினச்சேர்க்கை சட்டத்துக்கு விரோதமானது அல்ல’ என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் –

படம் முழுக்கவே அத்தம்பதியினர் குறித்த கேலியான பார்வையையே மற்ற பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பாலியல்ரீதியான நகைச்சுவை அவர்களை வைத்து உருவாக்கப்படுகிறது எனும்போது அம்மாதிரியான ‘முற்போக்கு’ சித்தரிப்பின் நோக்கமே பழுதுபடுகிறது.

படத்தின் மையப்பாத்திரமாக ஓவியா வருகிறார். ‘திருமணம்’ உள்ளிட்ட சமூகத்தின் எவ்விதமான கட்டுமானங்களிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாது என்கிற சுதந்திர மனப்பான்மை கொண்டவர். அவர் அவராக இருப்பது பிரச்சினையில்லை. அவருடன் பழகும் மற்றப் பெண்களையும் அவராகவே மாற்றும் முயற்சியில் அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது நெருடல். குடிக்கத் தூண்டுகிறார், கஞ்சா புகைக்க அழைத்துச் செல்கிறார், குடும்பத்தாரோடு அவரவருக்கு இருக்கும் முரண்களை தீர்க்க உறவுகளையே வெட்டிவிடும் தீர்வினைதான் முன்வைக்கிறார்.

‘அவரவர் அவரவருக்கு விருப்பப்பட்டவர்களோடு இருந்துக் கொள்ளலாம்’ என்கிற ஓவியா கொடுக்கும் பாதைதான் நம்முடைய குடும்பப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக முடியுமா?

இக்கட்டுரையை எழுதுபவர் ஓர் ஆண் என்கிற அடிப்படையில் ஓவியா முன்வைக்கும் பெண்ணிய நியாயத்தை அவரால் முழுவதுமாக உணரமுடியாமல் கூட இருக்கலாம். எனினும், இப்படம் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை சுட்டிக் காட்டுவதற்கு அவர் ஆணாக இருப்பது நிச்சயமாக தகுதிக்குறைவு அல்ல.

பெண்ணியத்தை நாம் ‘90 ml’ ஓவியாவிடம் இருந்துதான் கற்க வேண்டுமா அல்லது அன்றாடம் நாம் காணும் பூக்கட்டி விற்பது, இட்லி சுட்டு விற்பது என்று குடும்பச்சுமைகளை சுகமாக கருதி தாங்கி, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றும் அமைப்புச்சாராத் தொழில் செய்யும் விளிம்புநிலை பெண்களிடமிருந்து கற்கவேண்டுமா?

(நன்றி : குங்குமம்)

25 பிப்ரவரி, 2019

அது ஒரு கொண்டாட்டமான காலம்!


“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்”

திரையில் நம்பியாரின் ‘பஞ்ச்’ டயலாக்குக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் கவுண்டர் கொடுக்கிறார்.

மக்கள் ‘ஓ’ வென்று கத்துகிறார்கள். விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

மணல் பரப்பப்பட்ட தரையில் ஓம்பிரகாஷ் மாமாவின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனான நான் அதிர்ந்து, முழித்து எதிரே வண்ணத்திரையில் கையில் வாளோடு ஜெயலலிதாவை நோக்கி புன்னகையும், நம்பியாரை நோக்கி ஆவேசமுமாக நின்றுக் கொண்டிருந்த வாத்யாரை கண்டு எல்லோரையும் போல ஆர்ப்பரித்தேன். சண்டைக்காட்சி முடிந்தவுடன் மீண்டும் மாமாவின் மடியில் தூக்கம்.

அதிகாலை ஒரு மணிக்கு படம் முடிய ஓம் பிரகாஷ் மாமா, பாலாஜி அண்ணா, செந்தில் அண்ணா, பிரபா அண்ணா என்று அனைவரும் மாறி மாறி என்னைத் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். வழிநெடுக வாத்யாரின் வாள்வீச்சு, நம்பியாரின் நரித்தந்திரம், ஆர்.எஸ்.மனோகரின் கம்பீரமான வில்லத்தனம், ஜெயலலிதாவின் அசரடிக்கும் பேரழகு என்று பேசிக்கொண்டே வந்தார்கள். அரைத்தூக்கத்தில் அவர்களது பேச்சு கொடுத்த ஆர்வம்தான், இன்றுவரை என்னை சினிமாப் பைத்தியமாக வைத்திருக்கிறது.

என்னைப் போன்று நாற்பதைத் தொட்டுவிட்டவர்களுக்கு இதுபோல நிறைய பால்யகால நினைவுகளை டூரிங் கொட்டாய்கள் வாழ்நாள் முழுக்க விதைத்திருக்கிறது. மறக்க முடியாத இரவு. என் நாடி, நரம்பு, ரத்தம், சதையில் எல்லாம் சினிமாவை குளுகோஸாக ஏற்றிய இரவு.

பரபரப்பான சென்னை மாநகராட்சியின் அங்கமாகிவிட்ட மடிப்பாக்கத்தில் தனலட்சுமி என்றொரு டெண்டு கொட்டாய் இயங்கியது என்று சொன்னால், அங்கே வசிக்கும் இன்றைய இளையதலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். அந்த கொட்டாய் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இப்போது டிடிஎஸ், க்யூப் டிஜிட்டல் புரொஜெக்ஷன், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளோடு குமரன் என்கிற தியேட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரை டிக்கெட் 50 காசு. பெஞ்ச் 75 காசு. இரும்பு சேர் 1 ரூபாய் என்பது கட்டண விவரம். சைக்கிள் டோக்கன் 25 காசு என்று நினைவு. எட்டணாவுக்கு ருசியான ரவி சோடா ஃபேக்டரின் ஜில்லென்ற சோடா கிடைக்கும். நிறைய வெங்காயம் போட்ட சமோசா நாலணாதான். முறுக்கு, அவித்த வேர்க்கடலை எல்லாம் ரொம்ப சல்லிசான ரேட்டு. ஒரு குடும்பமே வெறும் பத்து ரூபாயில் தனலட்சுமியில் சந்தோஷமாக படம் பார்க்கலாம்.

இன்று அங்கேயே இருக்கும் குமரன் தியேட்டரில் பார்க்க வேண்டுமானால் பார்க்கிங், டிக்கெட் கட்டணம், Food & beveragesக்கு எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாயாவது மொய் வைக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய அப்பா, வெறும் பத்து ரூபாயில் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்த சந்தோஷத்தை, நான் என் குடும்பத்துக்கு நூறு மடங்கு செலவழித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வெறும் முப்பத்தைந்து ஆண்டுகளில் இப்படியொரு விலையேற்றம் வேறு எந்தத் துறையிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மடிப்பக்கத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்கவே பெரிய நகரங்களின் புறநகர், சிறுநகர், கிராமங்களில் எல்லாம் டூரிங் கொட்டாய்கள் சக்கைப்போடு போட்ட காலம் ஒன்று உண்டு. பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களோடு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று எங்கள் கால ஹீரோக்களின் படங்களையெல்லாம் நாங்கள் நூற்றுக்கணக்கில் அங்கேதான் மகிழ்ச்சியாக குடும்பமாக கண்டுகளித்தோம். வாரத்துக்கு இரண்டு படம் மாற்றுவார்கள். ஒரு பழைய படம், வார இறுதிக்கு புதிய படம் என்று காம்பினேஷன். வாரத்தில் எல்லாக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு, இரவு 9 மணிக்கு என்று இரண்டு காட்சிகள். சனி, ஞாயிறு மட்டும் மதியம் 3 மணிக்கு சிறப்பு மேட்னி காட்சி உண்டு.

சினிமாவைத் தவிர்த்தால் எங்களுக்கெல்லாம் வேறென்ன பொழுதுபோக்கு இருந்தது?

அதே மடிப்பாக்கம் தனலட்சுமி, சில ஆண்டுகள் கழித்து கீழ்க்கட்டளை என்கிற ஊரில் இயங்கியது. டெண்டு கொட்டாய்களுக்கு, மற்ற நிரந்தர அரங்குகளுக்கு தருவதைப் போல பர்மணென்ட் லைசென்ஸ் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு டெம்பரவரி லைசென்ஸ்தான் தருவார்கள். லைசென்ஸ் முடிந்தபிறகு ஏற்கனவே இயங்கிய இடத்திலோ அல்லது அருகில் வேறேதும் புதிய வசதியான இடத்திலோ மீண்டும் குடிசை போட்டு ‘புதுப்பொலிவோடு’ படம் ஓட்டுவார்கள். கடைசியாக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கட்டளை தனலட்சுமி தியேட்டரில் சிம்பு நடித்த ‘தம்’ பார்த்ததாக நினைவு. இப்போது தனலட்சுமி, அங்கே இல்லை.


‘நியூஸ் மினிட்’ ஆங்கில இணைய இதழில் வந்திருக்கும் கட்டுரை ஒன்று மீண்டும் டூரிங் கொட்டாய் நினைவுகளில் என்னை உலவச் செய்திருக்கிறது.

இப்போது டூரிங் கொட்டாய்களே தமிழகத்தில் இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலூர் மாவட்டத்தின் புத்துக்காடு என்கிற ஊரில் கடந்த 1985ல் இருந்து இன்றுவரை ‘கணேஷ் திரை அரங்கம்’ என்கிற டூரிங் கொட்டாய் சிறப்பாக நடந்து வருகிறது என்று தகவல் கொடுக்கிறது ‘நியூஸ் மினிட்’.

பி.கே.கணேசன் என்பவர், இந்திய திரையரங்கை நடத்தி வருகிறார். புத்தூர், ‘பராசக்தி’யை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளின் சொந்த ஊர். பெருமாள், உயிரோடு இருந்தவரை சிவாஜி வருடாவருடம் இந்த ஊருக்கு வருவாராம். எனவே, ஊர் முழுக்க சிவாஜி ரசிகர்கள் என்கிறார்கள்.


பெரிய திரையரங்குகளில் இடம்பெற்றிருப்பதை போல சிறப்பான வெண்திரை, கியூப் புரொஜெக்ஷன், டிடிஎஸ் ஒலியமைப்பு (7.1 சேனல்) என்றெல்லாம் இருந்தும் இன்னமும் பழமை மாறாமல் மணல் தரை வசதியோடு இந்த அரங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது.

நகரங்களில் இருக்கும் நவீன தியேட்டர்களில் வாரநாட்களில் ரசிகர்கள் இல்லாமல் அரங்கங்கள் காற்றாட, இன்னமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு படங்கள் இங்கே திரையிடப் படுகின்றனவாம். விஜய், ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்களின் படங்கள் திரையிடப்படும் போதெல்லாம் 400, 500 டிக்கெட் கூட ஒரு காட்சிக்கு விற்கப்படுவதுண்டாம். தரை டிக்கெட் 25 ரூபாய், 30 ரூபாய் சேர் டிக்கெட், 40 ரூபாய் பாக்ஸ் டிக்கெட் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

புத்தூர் ‘கணேஷ் திரை அரங்கம்’ போல தமிழகம் முழுக்க மலிவு விலையில் படம் காட்டக்கூடிய டெண்ட் கொட்டாய்கள் மீண்டும் உருவாக்கப்படுவதே, ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற திரையுலகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும். ஒவ்வொரு படத்துக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு குறைவாக கிடைத்தாலும், நிறைவாக நீண்டகாலத்துக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

திரையுலகம் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப ‘சி’ சென்டர் தியேட்டர்கள் நிறைய பெருகுவதே ஒரே வழி.


(நன்றி : குங்குமம்)

5 ஜனவரி, 2019

சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?

“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”

உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?

முடியும்.

‘ஈ’யை வைத்தே ராஜமவுலி எடுத்திருக்கிறார். நரியை வைத்து நாம் எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?

சினிமாவுக்கு அது போதும்.

இதுமாதிரி கதையை எழுததான் இந்த நூலில் கற்றுக்கொள்ளப் போகிறோம். “இதை எழுதும் நீ எத்தனை படங்களுக்கு கதை எழுதியிருக்கிறாய், உன்னுடைய தகுதி என்ன?” என்கிற நியாயமான கேள்வியை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். அதற்கான முழுத்தகுதியும், உரிமையும் உங்களுக்கு உண்டு.

இதுவரை எந்தப் படத்துக்கும் நான் கதை எழுதியதில்லை. அதே நேரம், நான் எழுதி எந்தப் படமும் படுதோல்வி அடைந்ததில்லை என்று பாசிட்டிவ்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுதத் தெரிந்ததால் எழுதுகிறேன். வாசிக்கத் தெரிந்ததால் வாசிக்கிறீர்கள். எழுத்தோ, வாசிப்போ ஒன்றில் மற்றொன்று உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ‘சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?’ என்கிற சூத்திரத்தை நாம் இருவரும் இணைந்தேதான் கற்றுக்கொள்ளப் போகிறோம். வகுப்பறையில் உங்களோடு பெஞ்சில் அருகே அமர்ந்திருக்கும் மாணவன்தான் நானும்.

அப்படியெனில் ஆசிரியர்?

1906ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’கில் தொடங்கி, போன வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களின் கதாசிரியர்கள் வரை நமக்கு லட்சக்கணக்கிலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நாம் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொள்ளப் போகிறோம்.

உலகின் முதல் முழுநீளப் படத்தின் கதை ஏதேனும் சரித்திரக் கதையாகதான் இருக்குமென்று நீங்கள் கருதலாம். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி அதுவொரு போலிஸ் படமென்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும்.

1906ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான அந்த திரைப்படம் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய பவுண்டுகளை பட்ஜெட்டாக கொண்டு எடுக்கப்பட்டு, இருபத்தையாயிரம் பவுண்டுகளை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.

நெட்கெல்லி என்கிற கேங்ஸ்டர் அந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலம். அவனும் அவனுடைய குழுவினரும் செய்யாத அட்டூழியங்களே இல்லை. பிற்பாடு அவன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அவனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாடகமே, சினிமாவாக ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’ என்று எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தமே ஆறு காட்சிகள்தான். வன்முறையாளர்களை ஒடுக்க போலிஸ் திட்டமிடும் காட்சியில் தொடங்கும் படம், கிளைமேக்ஸில் நெட்கெல்லியோடு சண்டை நடந்து அவனை காலில் சுட்டு கைது செய்வதோடு முடிவடைகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட இந்த மவுனப்படம், பின்னர் நியூஸிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என்று நாடு விட்டு நாடு பயணித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இந்தப் படம் வெளிவரும் வரை சினிமா என்பது கதை சொல்லும் ஊடகமாக இருந்தது இல்லை. டிரெயின் ஓடுவது, குதிரைப் பந்தயம் மாதிரி துண்டுக் காட்சிகளையும் நியூஸ் ரீல்களையும் வைத்து அதுவரை ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்தை போலவே சினிமாவிலும் கதை சொல்லலாம். செமத்தியாக கல்லா கட்டலாம் என்பதை கண்டறிந்தார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகமாகவும் உருவெடுத்தது அப்போதுதான்.

அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே தாதாசாகேப் பால்கே தயாரித்து, இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது. இதிகாசங்கள், புராணங்கள் என்று பல நூற்றாண்டுகள் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த இந்தியர்கள் வெகுவிரைவிலேயே சினிமாவுக்கு அடிமை ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியப் பாரம்பரியப் பெருமையை சினிமாவில் கதையாக சொல்லியே வெள்ளையர்களின் அடிமைத்தளையை உடைக்கவும் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறு.

இந்த கதையை எல்லாம் ஏன் உங்களுக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இதுமாதிரி நாம் நிறைய கதைவிட கத்துக்கணும். சினிமாவில் கதை எழுத இந்த ‘கதைவிடுற’ பண்புதான் அடிப்படை தகுதியே.

- ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து...

22 ஆகஸ்ட், 2018

ஏகலைவன்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.

‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.

‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.

‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.

பட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.

டைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.

கோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.

மயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.

‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.

‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா?”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.

“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”

கலைஞர் பிரித்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.

உடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.

சினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.

கலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்தகதை
இராமபிரான் வரலாரன்றோ?
கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும். பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

27 மார்ச், 2018

ராஜரதா!

ஓர் எழுத்தாளர் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். சில அரசியல் கட்சி இளைஞர்கள் (சாதிக்கட்சி மாதிரி காட்டுகிறார்கள்) அவரை சந்தித்து, அவர் எழுதிய நாவல் ஒன்று குறித்து மிரட்டுகிறார்கள். அந்த நாவலில் தங்கள் இனம் அவமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கடிதம் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் நிஜமாகவே நடந்த இந்த சம்பவத்தை கன்னடத்தில் ஒரு காட்சியாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ராஜரதா’.

கன்னட சினிமாவின் நியூவேவ் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக போற்றப்படும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, விமர்சகர்களால் ஆஹாஓஹோவென பாராட்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வசூலிலும் சாதனை படைத்தது. விருதுகளும் குவிந்தன.

‘ரங்கி தரங்கா’வில் தன்னுடைய தம்பியா நிரூப் பண்டாரியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டாவது படமான ‘ராஜரதா’விலும் அவர்தான் ஹீரோ. தம்பியுடையான் ஹீரோ கால்ஷீட்டுக்கு கவலைப்படான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்னையின் காரணமாக கே.பி.என். நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் கன்னட வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ராஜரதா’ எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைக்கு நேரடியாக சம்மந்தப்படாத வேறு பின்னணி பிரச்சினை இருந்திருக்கலாம் என்று இயக்குநர் கணிக்கிறார். அதாவது ‘முதல்வன்’ படத்தில் இடம்பெறும் வன்முறையை, வேறொரு பிரச்சினையை திசைமாற்ற முதல்வரே உருவாக்குவது மாதிரி.

கன்னடத்திலேயே கன்னடர்களின் வன்முறையை கண்டித்து படமெடுத்திருப்பது துணிச்சலான முயற்சிதான். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியின் வன்முறை பின்னணி இசையில் ‘தமிழண்டா’ என்றெல்லாம் கோஷம் ஒலிக்கிறது.

‘ராஜரதா’ என்பது பேருந்தின் பெயர். பேருந்தே கதை சொல்வதை போன்று (புனீத் ராஜ்குமார் குரலில்) திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாதிப்பும் இயக்குநருக்கு நிறைய இருக்கிறது.

கேட்பதற்கு சூப்பராக தெரியும் இந்த கதை, திரைக்கதையை ஐரோப்பிய ரொமான்ஸ் காமெடி பாணியில் ரொம்பவும் சுமாராகதான் எடுத்திருக்கிறார் பண்டாரி. ஒருவேளை உலகப்பட சூனாகானாக்கள், ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி மெச்சிக் கொள்ளலாம்.

வழக்கமாக கன்னட சினிமா ஹீரோக்கள்தான் சுமாராக இருப்பார்கள். ஆனால், இதிலோ ஹீரோயின் அவந்திகா ஷெட்டி, ‘தேவுடா’ என்று ரசிகர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் வகையில் ஆயா லுக்கில் இருக்கிறார். படம் முழுக்க லெக்பீஸ் தெரியும் வண்ணம் அவர் கவர்ச்சி காட்டியிருந்தாலும், ரசிகனுக்கு இந்த கவர்ச்சி இனம் தெரியா அமானுஷ்ய உணர்வையே முதுகுத்தண்டில் ஏற்படுத்துகிறது. குளோஸப்பில் காஞ்சனா பேய் கணக்காக பயமுறுத்துகிறார். கன்னட காஞ்சனாவான ‘கல்பனா’வின் ஹீரோயின் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக ஹீரோ நிரூப் பண்டாரி, அம்சமான அமுல் பேபி லுக்கில் ரசிகைகளின் கனவுகளை ஆளக்கூடிய தோற்றத்தில் சுறுசுறுவென்றிருக்கிறார்.

படத்தின் ஹைலைட்டே, ஆர்யாதான். தமிழில் நடிக்கத் தெரியாத ஹீரோ என்று பெயரெடுத்திருக்கும் இவர், கன்னடத்தில் அனாயசமான தாதாவாக நடிப்பில் பின்னுகிறார்.

அரசியல் படங்களை எடுக்க சினிமாவின் தொழில்நுட்பம் மட்டும் போதாது. அடிப்படை அரசியலும், கிராம கிளைக்கழகத்தின் வார்டு நிலவரம் வரை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘அரசியல்வாதிகள் என்றாலே மோசம்தான்’ என்று அமெச்சூராக ‘ராஜரதா’தான் எடுக்க முடியும், ‘அமைதிப்படை’கள் சாத்தியமாகாது போகும்.

18 ஜனவரி, 2018

முதலிரவே போய் வா!

எண்பதுகளின் இறுதியில் ராஜ் வீடியோ விஷனுக்கு போட்டியாக வீடியோ கேசட் துறையில் பெரும் போட்டியாளராக விளங்கியவர்கள் ஏக்நாத் வீடியோஸ்.

வீடியோ கேசட் துறையை சேர்ந்தவர்களும் (இப்போது சேட்டிலைட் சேனல்கள் செய்வது மாதிரி) நிறைய content தேவைக்காக சினிமாவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.

ஏக்நாத் வீடியோஸ், ஒரு கன்னடப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட பிரமாதமாக மார்க்கெட்டிங் செய்தார்கள். அந்த படம்தான் ‘முதலிரவே வா வா’

எண்பதுகளின் இறுதியில் இந்தப் படத்துக்காக மஜாவான ஹோர்டிங் ஒன்றை பிரும்மாண்டமாக மவுண்ட்ரோடில் வைத்திருந்தார்கள். மீசை வளராத அந்த வயதில் படத்தின் டைட்டிலும், மஜாவான ஸ்டில்களும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது இயல்புதான். படமும் ஓரளவுக்கு பரபரப்பாகவே ஓடியது. ஆனால், அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அப்பாவை கேட்க முடியாது.

பிற்பாடு மீசையெல்லாம் லேசாக முளைத்த காலத்தில் ‘முதலிரவே வா வா’ பார்த்தபோது, அப்படியொன்றும் ‘எதிர்ப்பார்த்த அளவு’ பிரமாதமில்லை என்று தோன்றியது. மாப்பிள்ளைக்கு ‘முதலிரவு’க்கு ‘முடியலை’ என்பதுதான் சப்ஜெக்ட். ஏன் ‘முடியலை’ என்பதற்கு பின் ஒரு கிளுகிளுப்பான சதி. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு வெற்றிகரமாக ‘முடிவது’தான் கிளைமேக்ஸ். டயலாக்கெல்லாம் டைரக்ட் மீனிங்.

அந்தப் படத்தின் ஹீரோ நம்மூர் நாகேஷ் மாதிரி வெடவெடவென்று இருக்கும் காசிநாத். அப்போதிலிருந்தே கன்னட சினிமா ஒரு விஷயத்தில் ஆச்சரியத்தை அள்ளித் தரும். ஹீரோவெல்லாம் ரொம்ப சுமாராக இருக்க, இந்திரலோகத்து சுந்தரிகள் கணக்கான ஹீரோயின்கள் எப்படி அவர்களை விரட்டி விரட்டி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியாத புதிர்.

இட்ஸ் ஓக்கே.

அடிப்படையில் இயக்குநரான காசிநாத், பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக ஒருக்கட்டத்தில் அவரே ஹீரோவாகி விட்டார். கன்னடத்து பாக்யராஜ் என்பார்கள். பெரும்பாலும் சில்மிஷமான சப்ஜெக்டுகளைதான் கையில் எடுத்துக் கொள்வார். சினிமாவில் மட்டுமல்ல, எல்லா ஏரியாவிலுமே Yes, sex always sells.

காசிநாத், இந்த ஏரியாவில் கில்லி. எண்பதுகளின் இந்திய நகர்ப்புற இளைஞர்களுக்கு sex கொஞ்சம் ‘இலைமறை காய்மறை’யாய்தான் கிடைத்தது. அந்த பாலியல் வறட்சியை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப தன்னுடைய படங்களுக்கு knot பிடிப்பார். ‘அனுபவா’ என்றொரு படம், காசிநாத்தின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்திருக்கிறது. எப்போதோ யூட்யூப்பில் பார்த்தேன். செம மஜாவாக இருக்கும். இவருடைய படங்கள் சிலவற்றை ரீமேக்கி தமிழில் பாண்டியராஜன் போன்றவர்கள் (உதா : ‘ஜாடிக்கேத்த மூடி’) இங்கே ஹிட்டடித்திருக்கிறார்கள். உபேந்திரா உள்ளிட்ட இன்றைய கன்னட சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், காசிநாத்தின் சிஷ்யர்கள்தான்.

கன்னட சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சகலகலா வல்லவன் காசிநாத், இன்று காலமாகி விட்டார். சுலபத்தில் இட்டு நிரப்பமுடியாத ஆளுமை அவர். கன்னட சினிமாவுக்கு நிஜமாகவே பேரிழப்புதான்.

16 ஜனவரி, 2018

பத்து வயசானா பங்காளி

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

14 நவம்பர், 2017

ஆலையில்லா ஊருக்கு அறம்!

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.

அப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

கோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.

ஆனால்-

இயக்கம்?

கிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்?) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்?

ப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும்? கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்?

படத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளைக் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.

ஆனால்-

படத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார்? பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.

படத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு?

இதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.

மாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

இயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத்தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.

ஆனால் –

ஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.

அடுத்து, தோழர்கள்.

இவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.

இப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.

‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

எந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா? மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.

சிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

காமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.
* * *

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.

பின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.

16 ஆகஸ்ட், 2017

படம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும் தரிசனம் இது.

வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.

அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய  அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.

புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான்.  இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.

காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *

போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள்  பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *

‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.

முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.

22 ஜூலை, 2017

ரஜினி - கமல்


ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றார்கள்.

அவ்வப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது எழுதும். ரஜினியோ, கமலோ அதை கண்டுகொண்டதே இல்லை.

பிறவி கமல் ரசிகனான எனக்கு ரஜினியோடு அவர் சேர்ந்து நடிப்பதில் விருப்பமே இருந்ததில்லை. ஏனெனில், ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என்று உறுதியாக இருந்தேன். தொண்ணூறுகளில் கொஞ்சம் ரசனை மேம்பட்ட காலத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான நடிகராக மனசுக்குள் உட்கார்ந்தார். இருவரது ஸ்டைலும் வேறு வேறு. இருவரையும் தனித்தனியாக தனித்தனி மனநிலைகளில் ரசிக்க முடியும் என்கிற முதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் எழுபதுகளின் இறுதியில் இருவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த ஃபுல் மீல்ஸ் விருந்து கிடைக்குமே என்று மனசு ஏங்கத் தொடங்கியது.

என்னுடைய தலைமுறைக்கு கிட்டாத விருந்து அது. இன்றுவரை எட்டா விருந்தும்கூட.

போகட்டும்.

ஓரளவுக்கு ‘விக்ரம் வேதா’ அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கமல்ஹாசன் – விக்ரமாதித்தன், ரஜினிகாந்த் – வேதாளம் என்கிற ஐடியாவே பரவசப்படுத்துகிறது. ரஜினியும், கமலும் இப்போதைக்கு இணைய சாத்தியமில்லை என்பதால் – இணைந்தாலும் வயது காரணமாக இருவருக்குமான பழைய கெமிஸ்ட்ரி உருவாக வாய்ப்பில்லை என்பதாலும் - நடிப்புப் பாணியில் அவர்களை முடிந்தளவுக்கு பிரதிபலிக்கக்கூடிய விஜய் சேதுபதி – மாதவன் இணையை தேர்ந்தெடுத்ததும்கூட நுணுக்கமான தேர்வுதான்.

ஆனால்-

இந்த அட்டகாசமான ‘ஐடியா’வை, ரசிகன் conceive செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் புத்திசாலித்தனமாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எடுத்துவிட்டதால், ஆஹாஓஹோவென்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ‘விக்ரம் வேதா’, ஓக்கே என்கிற லெவலில் நின்றுவிட்டது.
மாதவன், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட அப்படியே கமலை உரித்து வைத்திருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் சைமன் இறந்துவிட்ட தகவலை, சைமனின் மனைவியிடம் சொல்லும் காட்சி. விஜய் சேதுபதி, நடையில் தொடங்கி சிரிப்பு வரை அச்சு அசல் ‘பைரவி’ காலத்து ரஜினியேதான். எனினும் இவர்கள் இருவரும் ரஜினி – கமலை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதை ரஜினி – கமல் ரசிகர்களே உணரமுடியாதபடி ஏன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ‘விக்ரம்’, ‘வேதா’ என்கிற பெயர்கள்கூட அந்த காலத்து கமல், ரஜினி கதாபாத்திரங்களின் பெயர்களை ஒட்டியே இருக்கின்றன. சின்ன சின்ன ரெஃபரன்ஸ் கொடுத்து ரசிகனுக்கு தங்கள் ஐடியா இதுதானென்று புஷ்கரும், காயத்ரியும் மெனக்கெட்டு புரிய வைத்திருந்தால் தியேட்டர்களில் திருவிழாவே நடந்திருக்கும். சிம்பிள். படத்துக்கு டைட்டிலேகூட ‘ரஜினி – கமல்’ என்று வைத்திருக்கலாம்.

படம் நெடுக விரவியிருக்கும் புத்திசாலித்தனமும், பர்ஃபெக்ட்னெஸ்சுமே வெகுஜன ரசிகர்களிடமிருந்து படத்தை அந்நியப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. ஷங்கர் மாதிரி வெற்றிகரமான இயக்குநர்கள் வேண்டுமென்றே படத்தில் சில faultகளை, லாஜிக் மிஸ்டேக்குகளை திணிப்பதுண்டு. அவற்றை ரசிகனே கண்டுபிடித்து, இயக்குநரைவிட தான் புத்திசாலி என்று அவனுடைய ஈகோவை அவனே திருப்திபடுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் குறும்பு விளையாட்டு அது. ‘விக்ரம் வேதா’, அதிகபட்ச சாத்திய மிலிட்டரி ஒழுங்குடன் இருப்பதே, படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.

இயக்குநர்கள் அடிப்படையில் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும். ரசிகர்களும் தங்களுடைய wave lengthக்கு இணையாக இருப்பார்கள் என்கிற அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதே. இருந்தாலும், ஓவியா ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அளவுக்கே தமிழனின் அறிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க ஏகத்துக்கும் இறைக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, தத்தமது பங்கை பக்காவாக செய்திருப்பதால் பிரதானப் பாத்திரங்களான விக்ரம் – வேதா மீது குவிய வேண்டிய ஈர்ப்பு சிதறுகிறது. உதாரணத்துக்கு வரலட்சுமி பாத்திரம். அவர் இல்லாமலேயே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். இருப்பினும் அந்த பாத்திரத்தை வைத்துவிட்டதாலேயே அவருக்கென்று வலிந்து சில காட்சிகளை உருவாக்கி, அதை கதையோடு ஒட்டவைக்க முயற்சித்திருப்பது போன்றவை, பார்வையாளனுக்கு ஒரே டிக்கெட்டில் ஒன்பது படத்தை பார்ப்பது போன்ற ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு குற்றவாளியை ஒரு போலிஸ் அதிகாரி பிடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை மாட்டும்போதும் ஒரு புதிரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறான் குற்றவாளி. அந்த புதிர் முடிச்சுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அந்த அதிகாரி அவிழ்த்துக் கொண்டே வருவதுதான் கிளைமேக்ஸ். இதுதான் ஐடியா. இதைதான் புஷ்கர்-காயத்ரி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையை சொல்வதற்கு காதை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.

நான்லீனியர் வகை கதை சொல்லல், கேட்பவனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய உத்தியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கதைக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. ‘விக்ரம் வேதா’வில் அப்படி அமைந்துவிட்டது.

எல்லாவற்றையும் மீறி இது நல்ல படம். Hardcore சினிமா ரசிகன் ரசித்து ரசித்து சுவைக்க ஏராளமான ஐட்டங்களை கொண்டிருக்கும் படம். ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஃபேஸ்புக்கில் நீண்டகாலத்துக்கு பேசப்படும்.

11 ஜூலை, 2017

திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!

அதிகாலை இரண்டு மணி.

பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.

திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.

“என்னய்யா இந்த நேரத்துலே?”

“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”

அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.

“நீங்க என்னை இன்னிக்கு ரொம்ப அசிங்கமா திட்டுனீங்க இல்லே?”

“ஆமாய்யா. எனக்கே மனசு கஷ்டமா போயிடிச்சி. நான்தான் திட்டுறேன்னு தெரியுது இல்லே. நான் திட்டாதமாதிரி வேலை பார்க்க வேணாமா?”

“இல்லைங்க சார். நீங்க திட்டுனதுக்காக உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்தேன்”

“திட்டுனதுக்கு தேங்க்ஸா? அதுவும் இந்த அகால வேளையிலே?” பாக்யராஜ், ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமாம் சார். நீங்க என்னை திட்டுனதை புரொடியூஸர்களான மாணிக்கவாசகமும், சண்முகராஜனும் பார்த்திருக்காங்க. இவன்தான் பாக்யராஜு கிட்டே நிறைய திட்டு வாங்கியிருக்கான். அப்போன்னா விஷயமுள்ள பையனாதான் இருக்கணும்னு சொல்லி, என்னை டைரக்ட் பண்ணச் சொல்லி காசு அட்வான்ஸ் கொடுத்திருக்காங்க சார்”

“ஆஹா. என் திட்டுலே இப்படியொரு நன்மை நடக்குதா? இனிமே எல்லாப் பயலையும் காச்சு மூச்சுன்னு திட்டி தீர்த்துடறேன். பாண்டி, உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ நல்லா வருவே” ஆசிர்வதித்து அனுப்பினார் பாக்யராஜ்.

மறுநாள் தயாரிப்பாளர்களிடம் ‘கன்னிராசி’ கதையை சொன்னார் பாண்டியராஜன். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, “ஹீரோவா பிரபுவை போட்டா நல்லாருக்கும்” என்று ஆலோசனையும் சொன்னார்கள்.

பிரபுவுக்கு கதை சொல்ல ‘அன்னை இல்லம்’ விரைந்தார் பாண்டியராஜன். அப்போது பிரபுவின் சித்தப்பா சண்முகம்தான் கால்ஷீட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கதை சொல்லாமல், பிரபுவின் கால்ஷீட்டை வாங்க முடியாது.

பாண்டியராஜன் குள்ளம் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். அப்போது மிகவும் ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபத்தைந்து ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு +2 படிக்கும் பையன் மாதிரிதான் இருப்பார்.

சண்முகம் இவரை ஏற இறங்க பார்த்தார். நடிகர் திலகம் பாணியிலேயே, “நீதான் டைரக்டரா? நீதான் கதை சொல்லப் போறீயா? சொல்லு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

பாண்டியராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே சண்முகம் தூங்கிவிட்ட மாதிரி தெரிந்தது. தூங்கிவிட்டார் போல என்று இவர் கதையை சொல்வதை நிறுத்தினால், சைகை செய்து மேலே சொல்லு என்கிறார். இவர் தர்மசங்கடத்துடன் தாலாட்டு பாடியதை போல கதை சொல்லி முடிக்கிறார்.

சண்முகத்திடம் நீண்ட அமைதி. பாண்டியராஜனோ, ‘இது வேலைக்கு ஆகாது. நிச்சயமாக பிரபுவோட கால்ஷீட் கிடைக்காது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.

சண்முகத்திடம் இருந்து குரல் வருகிறது. “அப்புறம்?”

“அவ்ளோதான் சார். கதை முடிஞ்சிடிச்சி”

“சரி. நீ போ. நான் புரொடியூஸர் கிட்டே பேசிக்கறேன்”

தன்னுடைய கதை சண்முகத்துக்கு பிடிக்காமல்தான் தூங்கிவிட்டாரோ அல்லது அவருக்கு தூக்கம் வருமளவுக்கு நாம் கதை சொல்லியிருக்கிறோமோ என்று பாண்டியராஜனுக்கு குழப்பம்.

மறுநாள் புரொடியூஸர் பாண்டியராஜனை கூப்பிட்டார்.

“என்னய்யா செஞ்சிருக்கே?”

“சார்”

“நீ சொன்ன கதையை ஒரு சீன் கூட மாத்தாம அப்படியே படம் புடிக்கிறதா இருந்தா பிரபுவோட கால்ஷீட்டை கொடுக்கிறேன்னு சண்முகம் சார் சொல்லிட்டாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிப் போச்சி”

அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது. வேண்டுமென்றே தன்னை விளையாட்டுக்கு சீண்டியிருக்கிறார் சண்முகம் என்பதை புரிந்துக் கொண்டார் பாண்டியராஜன்.

பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ‘கன்னிராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டது.

இருந்தாலும் பாண்டியராஜனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அவருக்கு அட்வான்ஸ் தர வந்தவர்கள் எல்லாம் 101, 201 என்றே உப்புமா டைரக்டர்களுக்கு கொடுப்பது மாதிரி கொடுக்க வந்தார்கள். எப்படியோ சிரமப்பட்டு அடுத்த படத்துக்கு புரொடியூஸரை பிடித்துவிட்டார்.

ஒரு படம் ஓடினால்கூட டைரக்டருக்கு மரியாதை இல்லை. நடிகரைதான் மக்கள் மதிக்கிறார்கள் என்று அவருக்கு தோன்றியது. எனவே ‘ஆண் பாவம்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அவரே நடித்தார்.

1985. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு படம் ரிலீஸ். சென்னை நகரம் முழுக்க தன்னுடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டரை தானே நேரில் போய் ஒட்டிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன். உதயம் தியேட்டரில் முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது. தியேட்டர் வாசலில் கூலிங்கிளாஸெல்லாம் போட்டு பந்தாவாக வந்து நின்றார் இவர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு கூட இவர்தான் ஹீரோ என்பதே தெரியவில்லை. ‘கஷ்டப்பட்டு போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாப்போச்சி போலிருக்கே? கடைசிவரைக்கும் ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கலையே?’ என்று நொந்துப் போனார்.

முதல் காட்சி முடிந்து கூட்டம் வெளியே வந்தது. “ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” என்று கத்தியபடியே இவரை கூட்டம் சூழ்ந்தது. ஆளாளுக்கு கைகுலுக்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். இவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். பாண்டியராஜனால் இதை நம்பவே முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பாக தனிமரமாக அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது அவரை சுற்றி அவ்வளவு ரசிகர்கள். ஆர்வமிகுதியில் அவரை தோள்மீது தூக்கி தியேட்டர் வளாகத்தில் ஊர்வலமாக ஓடுகிறார்கள்.

உள்ளே ‘ஆண் பாவம்’ அடுத்த காட்சி ஆரம்பித்தது.

வைரமுத்துவின் வைரவரிகள் இளையராஜா குரலில் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.

“இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்
எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்த சினிமாதான்
கட்சி வளர்த்ததும்
ஆட்சி பிடிச்சதும்
இந்த சினிமாதான்...”

(நன்றி : ‘பழைய பேப்பர்’ தொடர் - தினகரன் வெள்ளிமலர்)

4 ஜூலை, 2017

சினிமா வீரன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘சினிமா வீரன்’ பார்த்தேன். நீங்கள் சினிமா ரசிகராக (குறிப்பாக ஆக்‌ஷன் ரசிகராக) இருக்கும் பட்சத்தில், இந்த ஆவணப்படத்தின் எண்ட்கார்ட் போடப்படும்போது இருதுளி கண்ணீரையாவது சிந்துவீர்கள்.

இந்தப் படத்தில் ஃபெப்சி விஜயன் சொல்கிறார்.

“எங்க ஸ்டண்ட் யூனியன் சுவத்துலே வால்பேப்பர் ஒட்டுறதுக்கு தேவையே ஏற்படலை. ஏன்னா, சினிமாவில் ஸ்டண்ட் பண்ணுறப்போ செத்துப்போனவங்க படங்களை மாட்டியே சுவரெல்லாம் நிறைஞ்சிடிச்சி”

ஜூடோ ரத்தினம், ஃபெப்சி விஜயன், பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா ஆகிய மாஸ்டர்களும் ஏராளமான ஃபைட்டர்களும் சொல்லும் அனுபவங்கள் நம் முதுகெலும்பையே முறிக்கக்கூடிய அளவுக்கு த்ரில்லானவை. குறிப்பாக ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனாக பீட்டர் ஹெய்ன் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரிந்தது, ‘அந்நியன்’ விக்ரமாக ஸ்டண்ட் சில்வா நந்தனம் டெம்பிள் டவர்ஸ் பில்டிங்கில் இருந்து தாவித்தாவி உயிரைப் பணயம் வைத்தது, ‘முரட்டுக்காளை’ இறுதிக்காட்சிக்கு ஜூடோரத்தினம் அமைத்த ரிஸ்க்கான ரயில் சண்டைக்காட்சி என்று ஏகத்துக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவங்கள்.

வீரமும், காதலும், கண்ணீரும்தான் ஸ்டண்ட் நடிகர்களின் சொத்து. இந்த ஆவணப் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்து அவர்களது குடும்பத்தாரின் பார்வையும் இடம்பெற்றிருப்பது சிறப்பானது. எந்த ஸ்டண்ட் கலைஞருக்குமே அரேஞ்ச்ட் மேரேஜ் அமைவதில்லை. யாராவது காதலித்தால் மட்டுமே கல்யாணவரம் கிடைக்குமாம்.

புலிகேசி புருஷோத்தம்மன் என்கிற ஸ்டண்ட் கலைஞர். ஷூட்டிங்கின்போது இவரை புலி மார்பில் அறைந்துவிடுகிறது. பத்து நாள் ஜி.எச்.சில் கவலைக்கிடமாக இருந்து மறைகிறார். இவரை அடக்கம் செய்யக்கூட யாரிடமும் காசில்லை. ஸ்டண்ட் நடிகர்கள் தங்களிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போட்டு காசு திரட்டுகிறார்கள். சுடுகாட்டில் ஒன்றுகூடி கதறுகிறார்கள். எத்தனை காலத்துக்குதான் செத்துக்கொண்டே இருப்பது என்று குமுறியவர்கள் 1966ல் ஸ்டண்ட் யூனியன் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்குகிறார்கள். சுடுகாட்டில் தொடங்கப்பட்ட யூனியன் என்கிற பெருமை கொண்டது நம் ஸ்டண்ட் கலைஞர்களின் யூனியன். இன்றும் கூட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தோராயமாக ஒரு நாள் ஊதியம் 400 ரூபாய்தான்.

ஸ்டண்ட் யூனியன் கட்டிடத்தை காட்டும்போது அந்த காலத்தில் இறந்துப் போனவர்களில் புலி பாஷா என்கிறவரின் படத்தைப் பார்த்தேன். அனேகமாக இவர்தான் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும்.

சினிமாவில் ஸ்டண்ட் வேலை செய்பவர்கள், லைஃப் இன்சூரன்ஸ் செய்துக்கொள்ள முடியாது. தேசிய, மாநில விருதுகளில் இவர்களுக்கு இடமில்லை. ஏன், நம்மூரை விடுங்கள். ஆஸ்கரிலேயேகூட இவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் காலை காட்சியாக மக்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். அல்லது ஸ்டண்ட் யூனியனே செலவு செய்து, இந்த திரையிடலை தமிழகமெங்கும் நடத்த வேண்டும். தாங்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோக்களை, முன்னாள் மற்றும் நாளைய முதல்வர்களை உருவாக்கியவர்கள் இன்னமும் மரணக்குழிகளுக்குள்தான் வசிக்கிறார்கள் என்பதை மக்களும் அறியவேண்டாமா?

ரஜினியின் மகளாய் பிறந்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. Hats off!

5 ஏப்ரல், 2017

குறும்பட உலகின் முன்னோடி!

நாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான பிறவிகள். இதுவரையிலான உலகின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே தங்களால் மாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்பியவர்கள்.

இந்தியாவை வளர்ந்த நாடுகளின் வரிசையில் நிலைநிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நேருவின் ஆவேசமான முயற்சிகள் இந்த தலைமுறையினருக்குள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி இருந்தது. தங்கள் வாழ்நாளிலேயே பொன்னுலகை கண்டுவிட முடியும் என்று நம்பினார்கள். அந்த பொன்னுலகை நிறுவப் போகிறவர்களே தாங்கள்தான் என்கிற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது.

நேரு காலமானதற்கு பிறகான நாட்டின் அரசியல் சூழல் அவர்களுக்குள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தது. இந்திராகாந்தியின் அரசியல் செயல்பாடுகள் ஒருக்கட்டத்தில் அவர்களை கோபக்கார இளைஞர்களாக உருமாற்றியது. எதற்கெடுத்தாலும் ஆவேசமான எதிர்வினை என்பது அவர்களது இயல்பானது. ஏழ்மையை வெறுத்தார்கள். நாட்டில் ஏழ்மையே இருக்கக்கூடாது, ஒரே ஒரு பிச்சைக்காரனைகூட கண்ணில் காணக்கூடாது என்பது அவர்களது இலட்சியமாக இருந்தது. அவர்கள் கண்ணால் காணாத தேசங்களில் பிச்சைக்காரர்களே இல்லை, அயல்நாடுகள் எல்லாம் சொர்க்கங்கள் என்கிற மூடநம்பிக்கையும் அவர்களுக்கு ஊடகங்களால் விதைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, எமர்ஜென்ஸி.

எழுபதுகளில் இளைஞர்களாக இருந்தவர்கள் லட்சியவேட்கையோடு இருந்தார்கள் என்றால், அவர்கள் எமர்ஜென்ஸியை நேருக்கு நேராக சந்தித்தவர்கள் என்பதே முக்கியமான காரணம். இந்திய ஜனநாயகத்தின் மோசமான இன்னொரு பக்கத்தை தரிசித்தவர்கள். ஜெயப்பிரகாஷ் நாராயனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் அவர்களுக்குள் கனன்றுக் கொண்டிருந்த நெருப்பை ஊதிப்பெருக்கியது.

இந்த மனோபாவம் கலை இலக்கியத் துறைகளிலும் வெளிப்பட்டது. சந்தத்தோடு மரபுக் கவிதைகள் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களை நிற்கவைத்து, இந்த கவிதைகளால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று கேள்வி கேட்டார்கள். நெஞ்சை நக்கும் சிறுகதைகளாலும், அழகியல் உணர்வோடு வரிக்கு வரி செதுக்கப்பட்ட நாவல்களாலும் புரட்சி எப்படி சாத்தியப்படும் என்று விமர்சனம் வைத்தார்கள்.

குறிப்பாக எழுபதுகளின் இறுதி இந்த இளைஞர்களின் அனல் கக்கும் விமர்சனங்களால் வெப்பமயமாய் இருந்தது. தமிழில் குறும்படம் எடுக்கக்கூடிய முயற்சி இந்த ஆவேச மனோபாவத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், மனோபாலா, ராபர்ட் - ராஜசேகரன், பி.வாசு, பி.சி.ஸ்ரீராம், ருத்ரைய்யா, ஸ்ரீப்ரியா, ஜெயபாரதி என்று கலகக்காரர்கள் சினிமாவை மாற்றியே ஆகவேண்டும் என்று வெறியோடு திரிந்தார்கள். மாற்ற முடிந்ததா என்பதற்கு சமீபத்தில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ போன்ற படங்களே பதில். இலக்கியம் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டாலே, அதைத் தொகுத்து இலக்கியமாக்கி புத்தகமாகக் கொண்டுவந்துவிடலாம்.

அப்போது, எழுத்துலகில் பாலகுமாரன், மாலன், சுப்பிரமணியராஜூ என்று மூவேந்தர்கள். இளைஞர்களான இவர்களுக்கு பதில் சொல்லியே பழம்பெருசுகளுக்கு தாவூ தீர்ந்தது. இலக்கியக் கூட்டங்களில் இந்த மூவரணியைப் பார்த்தாலே ‘ஏதோ கலாட்டா நடக்கப்போவுது’ என்று பயந்தார்கள். ‘நாங்கள்தான் உங்கள் மெசைய்யாக்கள். வாசகர்களே எங்களிடம் வாருங்கள்’ என்று இயேசுமாதிரி அழைப்பார்களாம். அசோகமித்திரனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கணையாழி’ இவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. ஜோல்னாப்பையை துறந்து ஸ்டைலான லுக்கில் வெளிப்பட்ட முதல் தலைமுறை இலக்கியவாதிகள் இவர்கள்தான் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

குமுதத்தில் ஒரு பக்கக் கதை எழுதினால் கூட அதில் சமூகத்துக்கு ஏதோ ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்கள். சிற்றிதழ் மரபுக்கும், வெகுஜன இலக்கிய கலாச்சாரத்துக்குமான இடைவெளியை சரிசெய்ய நினைத்தவர்கள். அர்த்தமற்ற அலங்கார போதனைகளை கடுமையாக வெறுத்தார்கள். ஒருவகையில் பார்க்கப் போனால் முந்தைய தலைமுறையின் அர்த்தமற்ற மதிப்பீடுகளை, நாசூக்கு பார்க்காமல் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்த தலைமுறையினர் இவர்கள்தான்.

‘எப்படி கதை எழுத வேண்டும்?’ என்று பழசுகளுக்கு கிளாஸ் எடுக்கும் விதமாக ‘ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள்’ என்கிற நூலை ‘மாலன்’ நடத்திய ‘வாசகன்’ சிற்றிதழ் கொண்டுவந்தது. இதில் அன்றைய இளைஞர்களான ஆதவன், பாலகுமாரன், வண்ணதாசன், சுப்பிரமணியராஜூ, ஜெயபாரதி, மாலன், இந்துமதி, சிந்துஜா, எம்.சுப்பிரமணியன், கலாஸ்ரீ, அக்ரிஷ் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றன. இந்தத் தொகுதியின் அட்டைப்படத்தை வரைந்தவர் பாலகுமாரன். யெஸ், அப்போது கலைஞன் என்றால் எழுத்து, ஓவியம், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றிலும் மாஸ்டராக இருந்தாக வேண்டும்.

இந்த நூலுக்கான வெளியீடு வித்தியாசமான முறையில் (ஏனெனில் இவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?) ஏற்பாடு செய்யப்பட்டது. மனோபாலா (இப்போது சினிமாக்களில் காமெடியனாக நடிக்கும் இயக்குநரேதான்) வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் புத்தகம் வெளியிடப்பட்டது. சுஜாதா, கமல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வித்தியாசமான இந்த விழா முயற்சியை பாராட்டினார்கள்.
இதோடு நின்றுவிடக் கூடாது என்று மாலனுக்கு தோன்றியது. அவருக்கு சினிமா என்கிற ஊடகத்தின் மீது எப்போதுமே கட்டுக்கடங்காத கோபம். காந்தி, ராஜாஜி, பெரியார் போன்றோர் சினிமாவை என்னச் சொல்லி விமர்சித்தார்களோ, அதே விமர்சனங்கள் மாலனுக்கும் உண்டு. தோற்றப்பொலிவு மிக்க இவருக்கு  நடிக்க நிறைய சான்ஸ் நிச்சயமாக கிடைத்திருக்கும். இவருடைய நண்பர்கள் ஏராளமானோர் சினிமாத்துறையில் பணியாற்றி இருந்தும், அத்துறை குறித்த ஒவ்வாமை இவருக்கு ஏனென்று தெரியவில்லை. ஒரே ஒரு படத்தில் மட்டும் மாலன் நடித்திருக்கிறார். அதுவும் அவரது நண்பர் கமலின் வற்புறுத்தலுக்கு இணங்க, மாலனாகவே அவர் நடித்த படம் ‘விருமாண்டி’.

மனோபாலா நடத்திய ‘வித்தியாசமான’ ஓவியங்கள் கணக்காக, வித்தியாசமான படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது மாலனின் கான்செப்ட். மூன்றிலிருந்து ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு ஒரு சிறுகதையை (ofcourse, with an strong social message) படமாக எடுப்பது என்று பேசினார்கள். இவரது முயற்சிக்கு நான்கைந்து பேர் ‘ஜே’ போட ஆளுக்கு ஒரு படம் எடுப்பதாக சபதம் செய்தார்கள்.

அப்போதெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதுண்டு. இதுபோல குறும்படங்களை யாரும் எடுத்ததில்லை. அந்த நாட்களில் வீடியோ கேமிராவே புழக்கத்துக்கு வரவில்லை. திரைப்படங்கள் 35 MM ஃபிலிமில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த ஃபிலிம் கொஞ்சம் காஸ்ட்லிதான். பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள் மட்டும் 8 MM ஃபிலிமில் ரெக்கார்ட் செய்யப்படுவது வழக்கம்.

கல்யாணப் படத்துக்கும், சினிமாப் படத்துக்கும் இடையிலான 16 MMல் படம் எடுக்க மாலன் திட்டமிட்டார்.

‘நகரவாழ்க்கையின் இயந்திரத்தனம், அதிலிருந்து விடுபட்டு ஓர் இளைஞன் இயற்கைத்தாயின் மடியில் இளைப்பாறுவது’ என்று ஒன்லைனர் பிடித்தார். இந்த இளைப்பாறுதலும் தற்காலிகமானதுதான், அவன் மீண்டும் இயந்திரமாவான் என்கிற மேசேஜை சொல்லும் திரைக்கதை. பரங்கிமலை ரயில் நிலையத்தில் தொடங்கி, கடற்கரை வரை படப்பிடிப்புக்கு லொக்கேஷன். ஹீரோ லுக்கில் இருந்த ஜெயபாரதிதான் இந்த குறும்படத்தின் நாயகன் (பின்னாளில் இவர்தான் ருத்ரைய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தின் ஹீரோவாக படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, பாதியில் கழட்டிவிடப்பட்டார். பாலச்சந்தர் ‘மூன்று முடிச்சு’ படத்தில் இவரைதான் ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்கவைக்க ஆசைப்பட்டார். ஞாநியின் ‘பரிக்‌ஷா’ குழு நடிகர்).

மாலன் எடுத்த அந்த குறும்படம் எங்கெங்கு திரையிடப்பட்டது, யார் யார் பார்த்தார்கள், என்னமாதிரியான விமர்சனங்கள் வந்தது என்பதை போன்ற தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் குறும்படங்கள் எடுத்தார்களா என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் மட்டுமே டிவியாக இருந்த காலக்கட்டத்தில் இந்த முயற்சிக்கு என்னமாதிரி வரவேற்பு கிடைத்திருக்கக் கூடும் என்று யூகிக்கவே முடியவில்லை. எனினும், விடாமுயற்சி வேந்தரான ஞாநி மட்டும் ஏதாவது ட்ரை செய்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

எனினும், எண்பதுகளின் மத்தியில் இயக்குநர் வாய்ப்பு தேடியவர்கள், தங்களுக்கு தொழில் தெரியும் என்று காட்டுவதற்காக showreel மாதிரி குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.  கமல்ஹாசனேகூட தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் புதுமுக இயக்குநர்களிடம் இதுமாதிரி ஏதேனும் சிறுகதையை showreel எடுத்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது உண்டாம்.

கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி நடந்து, அதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் நான், மாலனின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன். இந்த இளைஞர்களை குறித்து மிக ஆர்வமாகப் பேசுவார். அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் மூலம் சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்படலாம் என்கிற கோணத்தில் பேசியிருக்கிறார். எனினும், அவர் எடுத்த ஆரம்பகால குறும்பட முயற்சி பற்றி எங்களிடம்கூட ஏனோ சொன்னதே இல்லை.

21 பிப்ரவரி, 2017

மசால்வடைக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய பாகிஸ்தான்!


 டிசம்பர் 3, 1971.

விசாகப்பட்டினம் நகரமே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக ரேடியோ செய்திகளை கேட்காத காதுகளே நகரத்தில் இல்லை.

“பாகிஸ்தான் நமது நகரத்தை தாக்கப் போகிறதாமே?” என்று ஒருவருக்கு ஒருவர் கவலையோடு பேசிக் கொண்டார்கள். எப்படி தாக்கப் போகிறது, எங்கிருந்து தாக்கப் போகிறது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. எப்படியோ கசிந்த இந்த தகவலால், நகரை விட்டு பலர் வெளியேறியும் விட்டார்கள்.

இரவு ஒன்பது மணி இருக்கலாம்.

‘பூம்’

வானமே இடிந்து விசாகப்பட்டினம் நகரத்தின் மீது விழுந்து விட்டதோ என்று ஐயப்படுமளவுக்கு விபரீதமான சப்தம். பூமி அதிர்ந்ததை போல உணர்வு. அச்சத்தில் மக்கள் சிதறி ஆங்காங்கே ஓடுகிறார்கள். நடுங்கியவாறே தெருக்களில் திரளுகிறார்கள்.

அந்த சப்தத்துக்கு பிறகு நெடிய அமைதி. மயான அமைதி.

என்ன நடந்தது, ஏது நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.

அடுத்த நாள் இந்திய கடற்படை அறிவித்தது. பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலான PNS Ghazi, விசாகப்பட்டினம் கடல் எல்லையில், இந்திய நேவியால் வீழ்த்தப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கடலுக்கு அடியில் நடந்துக் கொண்டிருந்த போர் அப்போதுதான் எல்லோருக்கும் வெட்டவெளிச்சமானது. S21 என்கிற இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த வீரர்கள் பதினெட்டு நாட்கள் போராடி, விசாகப்பட்டினம் நகரை பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்கள். இந்த தாக்குதல்தான் 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கான வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது.

ஆயினும்-

இன்றுவரை என்னதான் நடந்தது என்பது பற்றிய விலாவரியான தகவல்கள் இல்லை. வங்கக் கடலின் ஆழத்தில் புதைந்துப் போன அந்த கதையைதான் ‘The Ghazi Attack’ திரைப்படம் காட்சிகளாக நமக்கு காட்டுகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில், ‘இந்தியாவின் முதல் கடற்போர் திரைப்படம்’ என்று அறிவிக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. முறையே இந்திக்கு அமிதாப் பச்சனும், தெலுங்குக்கு சிரஞ்சீவியும், தமிழ் வெர்ஷனுக்கு சூர்யாவும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ராணா, டாப்ஸி, கேகே மேனன், அதுல் குல்கர்னி, ஓம்பூரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த போர் வெற்றியின் பெருமையை இந்திக்காரர்களும், தெலுங்குக்காரர்களும் மட்டுமே பங்கிட்டுக் கொள்கிறார்களே என்று தமிழனாக உங்கள் ரத்தம் கொதிப்பது புரிகிறது.

ப்ளீஸ், வெயிட். முழுசாக சொல்ல விடுங்கள்.

தமிழனும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

படத்துக்கு இசையமைத்திருப்பது நம்ம கே. அவரேதான். ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ உள்ளிட்ட படங்களுக்கு மியூசிக் போட்டாரே, அதே கே-தான். கேமிராமேனும் ‘வெயில்’, ‘பையா’, ‘ஜீவா’வுக்கெல்லாம் வேலை பார்த்த அதே மதிதான். எடிட்டர், நம்ம ஆளு ஸ்ரீகர்பிரசாத். இந்தியாவின் முதல் கடற்போர் திரைப்படத்தில் தமிழ் டெக்னீஷியன்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

சரி, படத்தை விடுங்கள். கொஞ்சம் வரலாற்றைப் புரட்டுவோம்.

நவம்பர் 14, 1971. நேருவின் பிறந்தநாளில்தான் PNS Ghazi நீர்மூழ்கி ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக கராச்சி துறைமுகத்தில் இருந்து கிளம்புகிறது. இந்திய கப்பற்படையின் பெருமையான INS Vikrant, விமானம் தாங்கி போர்க்கப்பலை மூழ்கச்செய்து, இந்தியாவின் கடற்படை வலிமையையும், போர்விமானங்களின் எண்ணிக்கையையும் குறைப்பதுதான் அந்த ஆபரேஷனின் நோக்கம். அப்போது விக்ராந்த், விசாகப்பட்டினம் அருகே நிலைக்கொண்டிருந்தது என்று ரகசியத் தகவல் பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

எனவேதான் Ghazi, வங்கக்கடலுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் நோக்கி விரைந்து வந்தது. பாகிஸ்தானுக்கு கிடைத்த தகவல், பொறிக்காக வைக்கப்பட்ட மசால்வடை என்பதை அவர்கள் அறியவில்லை. அப்போது இந்திய கிழக்கு கடற்பரப்புக்கு பொறுப்பேற்றிருந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணன்தான் ரேடியோ சிக்னல்களை குழப்பி பாகிஸ்தானுக்கு தவறான தகவல் கிடைக்குமாறு செய்தார். உண்மையில் விக்ராந்த் போர்க்கப்பல், அந்தமான் தீவுகளுக்கு இடையே எங்கோ பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தது.

விக்ராந்த் இருப்பதாக பாகிஸ்தான் நீர்மூழ்கி Ghazi நம்பி வந்து சேர்ந்தபோது, விசாகப்பட்டினத்தில் அதை எதிர்கொண்டது INS Raput. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்திலிருந்து கடற்போரின் தாதாவாக, பெரும் அழிவுசக்தியாக செயல்பட்ட கப்பல் இது.

பாகிஸ்தான் எப்படி இந்த வலையில் மாட்டியது?

அங்கேதான் இந்திய போர்த் தந்திரம் எவ்வளவு சிறப்பானது என்பதை நாம் உணரமுடிகிறது. சில நாட்களுக்கு முன்பாக வேண்டுமென்றே விக்ராந்த், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலைநிறுத்தப் படுவதாக தகவல்கள் பரப்பப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த சுமார் ஆயிரம் நேவி வீரர்கள் நகரத்துக்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு நகரில் இருந்த மார்க்கெட்டுகளில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் ஒரு பொய்யான தோற்றத்தை இந்தியா உருவாக்கியது. மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ரேடியோ வாயிலாக பேசிய கடற்படை அதிகாரிகள் இந்தப் பொய்யான தகவல்களை உண்மை போன்ற தொனியில் ரொம்ப சீரியஸாகவே பேசினார்கள்.

விசாகப்பட்டினத்தில் இருந்த உளவாளிகள் மூலமாகவும், பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ரேடியோ அலைகளை மறித்து ஒட்டுக் கேட்டதின் காரணமாகவும் விக்ராந்த், விசாகப்பட்டினத்தில்தான் இருக்கிறது என்று பாகிஸ்தான் உறுதியாக நம்பியது. அதற்கேற்ப Ghazi attack நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே இரவுகளில் விசாகப்பட்டினம் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. மக்கள் தெருக்களில் நடமாட தடை செய்யப்பட்டார்கள். எனவே, மக்களும் கூட தங்கள் நகரில் போர் நடக்கப் போகிறது என்றே பதட்டமடையத் தொடங்கி இருந்தார்கள்.

Ghazi நீர்மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினத்தில் நிலைகொண்ட நிலையில் சிறுபடகுகள் மூலமாக பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் நகருக்குள் மாறுவேடத்தில் நுழைந்திருக்கிறார்கள். பதட்டமாக இருந்த மக்களையும், நகரில் அசாதாரணமாக நிலவிய நிலைமையையும் நேரிடை சாட்சியாக கண்டவர்கள், கண்டிப்பாக விக்ராந்த் போர்க்கப்பல் இங்கிருக்கும் துறைமுகத்தில்தான் இருக்கிறது என்று உறுதியாகவே நம்பினார்கள்.

இந்த நிலையில்தான் டிசம்பர் 3 அன்று, கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கேட்ட ‘பூம்’ சப்தம் கேட்டது.

இந்த ‘பூம்’ சப்தம், எதிரிகளை அழிக்கும் போர்க்கப்பலான ராஜ்புத்தின் சாதனையென்று இந்தியத் தரப்பு அறிவித்தது. ஆழ்கடல் தாக்குதலை நாங்கள் நடத்தி Ghaziயை மூழ்கடித்தோம் என்று கப்பற்படை அதிகாரிகள் சொன்னார்கள்.
ஆனால்-

பாகிஸ்தானோ இதை மறுத்தது. கடலுக்கு அடியில் இருந்த பாறைகளில் தெரியாத்தனமாக (?) தங்கள் நீர்மூழ்கி மோதி விபத்து ஏற்பட்டே Ghazi வீழ்ந்தது என்று சப்பைக்கட்டு கட்டியது.

விக்ராந்த் போர்க்கப்பல் அப்போது எப்படி Ghaziயின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வங்கக்கடலில் மறைந்தது என்பதை பற்றி வைஸ் அட்மிரல் கிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீர்மூழ்கி மூலமாக விக்ராந்த் தாக்கப்படலாம் என்கிற தகவல் கிடைத்ததுமே, அந்த கப்பலை சுற்றி நான்கு பாதுகாப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டு அந்தமானுக்கு அருகில் ஓர் மறைவிடத்தில் நிறுத்தினோம். பாதுகாப்பு கப்பல்களில் மூன்று கப்பல்கள் நீருக்கு அடியில் ஏதேனும் கப்பல் வருவதாக இருந்தால் sonar அலைகள் மூலமாக காட்டிக் கொடுத்துவிடும். அவ்வாறு எப்படியோ எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு ghazi, விக்ராந்தை நெருங்கியிருந்தாலும் போட்டுத்தள்ள அத்தனை ஏற்பாடுகளும் தயாராகவே இருந்தன. எனினும், நம் நாட்டின் பெருமையாக விளங்கிய விக்ராந்தின் விஷயத்தில் எந்தவொரு சின்ன ரிஸ்க்குமே எடுக்கக்கூடாது என்றுதான் விசாகப்பட்டினம் நாடகம் ஆடி, அவர்களை அலைக்கழித்து வீழ்த்தினோம் என்று அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

Ghaziயின் உடைந்து சிதறிய சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் மியூசியத்தில் இப்போதும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. விசாகப்பட்டினம் கடலுக்கு அடியில்தான் இன்னமும் Ghazi மூழ்கிக் கிடக்கிறதாம்.

நிஜத்தில் நடந்த இந்த கதையைதான் கற்பனை கலந்து நமக்கு படமாக கொடுத்திருக்கிறார்கள். சரி, விக்ராந்த்?

Ghazi மூழ்கடிக்கப்பட்ட மூன்றாவது நாள், விக்ராந்த் கம்பீரமாக வெளிவந்தது. கிழக்கு பாகிஸ்தானை நோக்கிச் சென்றது. தன்னுடைய விமானங்களை விண்ணில் ஏவி, பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தது.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)