27 அக்டோபர், 2014

பஞ்சாபி லஸ்ஸி

“சார் போஸ்ட்!” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்திருக்கும் பரிணாமம் பாராட்டத்தக்கது.

கே.என்.சிவராமன் தினகரன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் ‘தேங்க்ஸ்’ கதையின் தொடக்க வரியே இவ்வளவுதான் “காரணம். அம்மா”.

வர்ணனைகள் இல்லை. கதாசிரியரின் தத்துவ சிந்தனை கோட்பாட்டு அலசல் இல்லை. வாசகனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்யும் விளக்கங்கள் அறவே இல்லை. ‘நறுக்’கென்று கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து ஒரே ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

சுஜாதா செத்துப்போன பிறகுதான் அவர் சொல்லியபடி கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.

* * * * * * * * * *

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று அந்த ஆசை தோன்றியது. மொத்த ஷெல்ஃபையும் அலசிப் போட்டு அந்த புத்தகத்தை தேடியெடுத்து விடியும் வரை படித்தேன். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’. மறுநாள் இரவு ஒரு பிரஸ்மீட்டில் இருந்தபோது குறுஞ்செய்தி வந்தது. “சுஜாதா காலமானார்”.

போனவாரம் எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு, கடைக்கே வராத புத்தகம் வேண்டும் என்று நியூபுக்லேண்ட்ஸ் முன்பு தர்ணா செய்து, மேனேஜர் சீனிவாசன் எங்களுக்காக எப்படியோ புத்தகத்தை வரவழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் புத்தகத்தைப் புரட்டினேன். மறுநாள் முற்பகலில் வந்த செய்தி. “எஸ்.எஸ்.ஆர் இறந்துவிட்டார்”

பயமாக இருக்கிறது. எனக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி திடீரென்று ஏற்பட்டிருக்கிறது.

* * * * * * * * * *

‘ஃபெஸ்டிவல் மூட்’ என்றொரு ‘மாஸ் மெண்டாலிட்டி’ இருக்கிறது. சினிமா, பத்திரிகை என்று வெகுஜனத் தளங்களில் பணிபுரிபவர்கள், மக்களின் இந்த மனோபாவத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும். எம்.ஜி.ஆரும், ரஜினியும், குமுதமும், சரவணா ஸ்டோர்ஸும் அடைந்த மகத்தான வெற்றிகளுக்கு, மாஸ் மீதான அவர்களது ஆழ்ந்த புரிதலே காரணம்.

தீபாவளிக்கு ஷாருக் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை காணும்போது, வடஇந்தியாவில் மக்கள் கூட்ட கூட்டமாக ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ரிலாக்ஸான மனநிலையில் இருக்கும் மக்களின் மத்தியில் அன்பேசிவமோ, விவசாய சிறப்பிதழோ எடுபடாது. பர்ஸ்ட் நைட் ஸ்பெஷலாக எந்த மாப்பிள்ளையாவது நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரை வழிபடுவாரா?

* * * * * * * * * *

சேகுவேரா ஒரு டெர்ரர். இதயத்துடிப்பை நிறுத்திவிட்ட சே-வின் கண்கள் மட்டும் திறந்துக் கிடந்தன. அவரது உடலை கைப்பற்றப் போன அமெரிக்க வீரர்கள் சே-வின் உயிரோட்டமான பார்வையை பார்த்து மரணபயத்தை உணர்ந்தது வரலாறு. சே மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் அமெரிக்கர்கள் சே-வை பார்த்து பயந்து பயந்து சாகிறார்கள். இறந்த பின்னாலும் ஒரு மனிதன் தன்னுடைய எதிர்தரப்பினரை ஆயுளுக்கும் ராவில் பயத்தில் உச்சா போக வைக்க முடியுமா?

நம்மூரில் பெரியார் இன்னமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.

* * * * * * * * * *

“இந்தி திணிக்கப்பட்டால் மொழிப்போர் வெடிக்கும்” என்று ‘நாம் தமிழர்’ சீமான், மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.

இன்னமும் தமிழர்கள் மீது சீமானுக்கு இவ்வளவு நம்பிக்கை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் முதல்வருக்கு நீதி கிடைக்க அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை மொழியோ, இனமோ, ஊனோ, உறக்கமோ தமிழர்களுக்கு பொருட்டே அல்ல.

* * * * * * * * * *

ஸ்ருதிஹாசன், சமந்தாவையெல்லாம் மறந்துடுங்க. டோலிவுட்டே இப்போது ரகுல் ப்ரீத் சிங்கைதான் கொண்டாடுகிறது. இருபத்து நாலு வயசு இளமைப் பெட்டகம். திக்கான பஞ்சாபி லஸ்ஸி.

2009ல் ‘7ஜி ரெயின்போ காலனி’ கன்னடத்தில் ரீமேக்கப்பட்டபோது அனிதாவாக அறிமுகம். தமிழில் ‘தடையறத் தாக்க’வில் செகண்ட் ஹீரோயின், ‘புத்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் ஹீரோயின். இதுமாதிரி லோ மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களில் காமாசோமோவென்றுதான் நடித்துக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ஸில் இவரது கிளாமர் பச்சக்கென்று டாலடிக்க, “இந்த பொண்ணு கிட்டே ‘என்னமோ ஏதோ’ இருக்கு” என்று அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் இவரை புக் செய்தார்கள்.

லேட்டஸ்ட் ஹிட்டான கோபிசந்த் நடித்த ‘லவுகியம்’தான் ஜாக்பாட். படத்தில் இவர் தோன்றும் முதல் காட்சியே க்ளோஸ் அப்பில் ‘தொப்புள் தரிசனம்’தான். பத்து நொடிகள் தோன்றும் அந்த ஷாட்டை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கென்றே தெலுங்கு ரசிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட தடவை திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள்.

மனோஜ் மஞ்சுவின் ‘கரண்ட் தீகா’வில் சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு கவர்ச்சி விருந்து. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜாவின் கிக்-2 படத்திலும் ஹீரோயின். வருட தொடக்கத்தில் பாலிவுட்டிலும் ‘யாரியான்’ மூலம் கணக்கை தொடக்கியிருக்கிறார். அடுத்து ரமேஷ்சிப்பியின் ‘சிம்லா மிர்ச்சி’. பவன் கல்யாணின் கப்பார் சிங்-2விலும் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.

இந்தியத் திரையுலகை புரட்டிப்போட கிளம்பியிருக்கும் இந்த புயல், தமிழ்நாட்டை மீண்டும் எப்போது தாக்கும் என்று தெரியவில்லை. சிம்பு மாதிரி யாராவது மனசு வைக்கணும்.

* * * * * * * * * *

2006லிருந்து 2010 வரை. தமிழில் வலைப்பதிவுகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ட்விட்டர், ஃபேஸ்புக் என்று மைக்ரோப்ளாக்கிங் சிஸ்டம் வந்து வலைப்பதிவுகளை விழுங்கிவிட்டது. ஆனாலும் இன்னமும் ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் நடக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. எனக்கெல்லாம் ப்ளாக்கில்தான் வசதியாக ஆற, அமர ஆடமுடிகிறது. அதனால்தான் நேரமே இல்லையென்றாலும், மூளையில் சரக்கே இல்லையென்றாலும் வவ்வால் மாதிரி வலைப்பதிவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ப்ளாக் எழுதுபவர்கள் சிக்கன நடவடிக்கையாக 2000 – 3000 வார்த்தைகளில் எழுதாமல் 500 – 700 வார்த்தைகளில் சுவாரஸ்யமாக எழுதிப்பழக வேண்டும் என்று ஏதோ ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் ‘மூத்தப் பதிவர்’ என்கிற முறையில் அட்வைஸ் செய்திருந்தேன். வாசகர்களை (!) துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா? நிறைய இளம்பதிவர்கள் அப்போது எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிண்டல் அடித்தார்கள். அனேகமாக அந்த பதிவர்களும் இப்போது 50 – 100 வார்த்தைகளில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன். வலைப்பதிவுகள் முற்றிலுமாக பிராணனை விட்டுவிடக் கூடாது என்றால், மைக்ரோப்ளாக்கிங் தரும் சுவாரஸ்யத்தை மேக்ரோப்ளாக்குகளும் தரும் விதத்தில் எழுதவேண்டும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. கட்டுரைகளின் வடிவ நேர்த்தியும் அவசியம். கவிதை, சினிமா விமர்சனம், கதை, அரசியல், இலக்கியம் என்று எதை எழுதினாலும் லேசாக ‘மீறி’ பார்க்கலாம். நாலு தோசை சுட்டுப் பார்த்தால்தான் ஒரு தோசையாவது உருப்படியாக வரும்.

24 அக்டோபர், 2014

கத்தி கத்தி பேசும் கத்தி

கொல்கத்தா ஜெயிலில் இருந்து கத்தி தப்பிக்கும் முதல் காட்சி. சட்டென்று ‘முப்பது நிமிடங்களுக்கு முன்னால்’ போடும் ட்விஸ்ட் கொடுக்கும் லாவகம். ‘அடடே! துப்பாக்கியை மிஞ்சிடும் போலிருக்கே’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், மசமசவென்ற திரைக்கதையால் அப்படியே சரிய வைத்துவிட்டார் முருகதாஸ். ஜீவானந்தத்தை கதிரேசன் முதன்முதலாக பார்க்கும் காட்சி எப்படிப்பட்ட ப்ளாக். ஆனால் ரொம்ப சாதாரணமாக ‘அட என்னை மாதிரியே இருக்கானே?’ என்று 1965ல் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ டபுள் ஆக்‌ஷன் ரோல் சீன் மாதிரி ரொம்ப சப்பையான பிரசண்டேஷன். கத்தியும் ஹீரோயினும் முதன்முதலாக சந்திக்கும் காட்சிகள். கத்தியின் காமெடி போர்ஷன் எல்லாம் எவ்வளவு ஜவ்வென்று மனசாட்சியுள்ள நீதிபதி குன்ஹா படம் பார்த்தால் நேர்மையாக தீர்ப்பளிப்பார்.

ஜெயிலுக்குள் ப்ளூப்ரிண்ட் பார்த்து கத்தி ஸ்கெட்ச் போடும் பர்ஸ்ட் சீன் செமை என்றால், அதே கத்தி செகண்ட் ஹாஃபில் மெட்ராஸின் ப்ளூப்ரிண்டை கேட்கும்போது தியேட்டரே வெடிச்சிரிப்பில் வெடிக்கிறது. அந்த ப்ளூபிரிண்ட் காமெடி முடிவதற்குள் அடுத்த காமெடி. மொத்தமாக போய் எல்லாரும் தண்ணீர் வரும் பிரும்மாண்ட குழாய்க்குள் அமரும் போராட்டத்தை தொடங்குகிறார்கள். இந்த ஐடியா மட்டும் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பே ‘லீக்’ ஆகியிருந்தால், மக்கள் முதல்வரை கர்நாடக அரசு விடுதலை செய்யக்கோரி இதே போராட்டத்தை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தலைமையில் திரையுலகினர் நடத்தியிருப்பார்கள்.

குழாய் போராட்டம் நடத்தி சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை உண்டாக்கி நாடெங்கும் டிவிகளில் இளையதளபதியின் படத்தை ஊடகங்கள் விடாமல் காட்டிக் கொண்டிருக்க, தெம்மாங்கு மேற்குவங்க போலிஸார் மட்டும் கர்மசிரத்தையாக டிவியே பார்க்காமல் கத்தியை சின்சியராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டையே உலுக்கும் இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும்போது போலிஸும், மக்கள் முதல்வரின் அரசாங்கமும் தேமேவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று பொருள்பட ஏ.ஆர்.முருகதாஸ் படமெடுத்திருப்பது கொஞ்சமும் நியாயமே அல்ல.

கூடுதலாக மேற்குவங்க போலிஸார் தமிழ்நாட்டுக்கு வந்தபிறகும் கூட விரைப்பாக மேற்குவங்க காவல்துறை யூனிஃபார்மையே அணிந்துக்கொண்டு அலைவார்கள் என்று காட்சிப்படுத்தியிருப்பது அம்மாநில காவல்துறையையே களங்கப்படுத்திய மாபெரும் குற்றமாகும்.

மாஸ் மாஸ் என்று அணில்குஞ்சுகள் வாள் வாளென்று கத்தும் அந்த காய்ன் – லைட் ஃபைட்… தேவுடா… “மொத்த காசையும் சீக்கிரம் கொட்டி தொலைடா சனியனே” என்று தியேட்டரில் ஒருவர் பொறுமை இழந்து கத்திக் கொண்டிருந்தார்.

‘சென்னைக்கு தண்ணீ கட்டு’ என்று முருகதாஸ் காட்சிப்படுத்திய காட்சிகளுக்கு ஆர்ப்பாட்டமாக சிரித்து கைத்தட்டிய ரசிகர்களுக்கு உட்லண்ட்ஸ் தியேட்டர்காரன் சூப்பராக தண்ணி காட்டினான். படம் முடிந்து டாய்லெட்டுக்கு போய்விட்டு கைகழுவ குழாயை திறந்தால் நோ வாட்டர். நல்லவேளை, நானெல்லாம் ஒண்ணுக்குதான். உள்ளே சில பேர் ரெண்டுக்கு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கதி என்னவாகியிருக்குமோ?

சரி. இந்த எழவையெல்லாம் விடுவோம். நாலு படம் நடித்தால் ஒரு படம்தான் தேறும் என்பது இளையதளபதியின் விதி. ஒரு படம் சூப்பர் என்றால், அடுத்த படம் படுமொக்கை என்பது ஏ.ஆர்.முருகதாஸின் ஜாதகம். அவங்களோட ப்ளூப்ரிண்டில் அப்படிதான் எழுதியிருக்கு. யாரென்ன செய்துவிட முடியும்?

ஆனால் மீடியாக்காரன் எல்லாம் கேனக்கொண்டையென்று நினைத்துக்கொண்டு செகண்ட் ஹாஃபில் முருகதாஸ் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே. அட.. அட.. உப்புப் போட்டு உணவு உண்ணக்கூடிய மீடியாக்காரன் இந்த படத்தை பார்த்தால் நியாயமாக காறித்துப்ப வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடந்துவிட வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. படம் பார்ப்பதற்கு முன்பே ‘கத்தி சூப்பர், கத்தி சூப்பர்’ என்று கத்தி கத்தி ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அதே மீடியாக்காரர்கள் போட்ட ஸ்டேட்டஸ்களை பார்த்தால் அவ்வளவு விரைவில் தமிழ் ஊடகவியலாளனுக்கு சுரணை வந்துவிடாது என்கிற நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படவில்லை. இதே கத்தி ஆதரவு ஆவேசம் விரைவில் பத்திரிகை விமர்சனங்களிலும், சேனல் டாப் 10 நிகழ்ச்சிகளிலும் உறுதியாக வெளிப்படும் என்று நம்பலாம்.

சினிமாக்காரனை பொறுத்தவரை மீடியாக்காரன் ஜோக்கர். ஜோல்னா பை போட்டுக்கொண்டு, பேனாவும் ஸ்க்ரிப்ளிங் பேடுமாக க்ளைமேக்ஸில் யாரையோ கேணைத்தனமாக கேள்வி கேட்பான். அல்லது மைக்கை நீட்டிக்கொண்டு ‘நீங்க பதில் சொல்லியே ஆகணும்’ என்பான். அல்லது வில்லனை பற்றி ஏதோ செய்தி போட்டு கொலை செய்யப்படுவான். தமிழ் சினிமாவில் PRESS என்பது அட்மாஸ்பியர் பிராப்பர்ட்டி. அவ்வளவுதான்.

இப்படி ஆபத்தில்லாத ஜந்துவாக சினிமாவில் வலம் வந்துக் கொண்டிருந்த பிரெஸ்காரனை எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கேவலப்படுத்தி ‘கத்தி’ எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தண்ணூத்து மக்கள் கொடுக்கும் ஃப்ளாஷ் நியூஸை செய்தித்தாள்களும், டிவிசேனல்களும் போட மறுக்கிறார்கள் என்பதற்கு முருகதாஸ் வைத்திருக்கும் வசனங்களும், காட்சிகளும் அவ்வளவு கேவலமானவை. மீடியா வெளிப்படுத்தாமல் எந்த செய்தியை தானாகவே புலனாய்வு செய்து முருகதாஸ் தெரிந்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த படத்தில் கொட்டாவி வரும் வரைக்கும் அவர் அள்ளி வைக்கும் புள்ளிவிவரங்களை மீடியா இல்லாமல் இவராகவே ஞானப்பால் குடித்து அறிந்துக் கொண்டாரா? விதர்பா விவசாயிகளின் தற்கொலையில் தொடங்கி, தஞ்சை விவசாயி எலிக்கறி சாப்பிட்டது, மீத்தேன் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு, காவிரி நீருக்கு விவசாயிகள் போராட்டம், முல்லை பெரியாறு போராட்டம் என்று எல்லா செய்திகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் மக்கள் முதல்வரின் அரசுக்கு பயந்து பயந்து எடுக்கும் சினிமாக்கள் கொண்டுச் சென்றதா அல்லது கத்தியில் கேவலப்படுத்தப்பட்ட ஊடகங்கள் கொண்டுச் சென்றதா?

எப்போதிலிருந்து முருகதாஸ் கார்ப்பரேட்டுகளை தீவிரமாக எதிர்க்கும் நக்சல்பாரியாக மாறினார் என்று தெரியவில்லை. அவரது கஜினி படத்தை ரிலையன்ஸ் ரிலீஸ் செய்ததே, அப்போதிலிருந்தா? அல்லது ஹாலிவுட் கார்ப்பரேட் சினிமா நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸோடு காண்ட்ராக்ட் போட்டாரே அப்போதிலிருந்தா? இல்லையேல், குடிசைத்தொழில் நிறுவனமான ‘லைக்கா’விடம் கத்தி படம் இயக்க கை நீட்டி அட்வான்ஸ் வாங்கினாரே, அப்போதா?

ஆனாலும் முருகதாஸுக்கு தில்லு ஜாஸ்திதான். கோகோ கோலா அம்பாஸடரை வைத்தே கோகோ கோலாவின் நிலத்தடி நீர் சுரண்டலை அம்பலப்படுத்தி இருக்கிறாரே. முருகதாஸும், விஜய்யும் நல்ல விஷயம்தானே பேசியிருக்கிறார்கள், அதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று வழக்கம்போல இணைய மங்குனிகள் ஆங்காங்கே கலகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அட மண்ணாந்தைகளே, இதைகூட காசு வசூல் பண்ணதான் பேசுகிறார்கள். ஒரு போராட்டத்துக்கு கூப்பிடுங்களேன். மக்கள் முதல்வருக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களை மக்களுக்காக அரைநாளாவது வந்து உட்காரச் சொல்லுங்களேன். அப்போது தெரியும் அவர்களது அக்கறை. இந்தியா சிமெண்ட்ஸின் சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் அம்பாஸடர், ஜாய் ஆலுக்காஸின் விளம்பரத் தூதர் சொல்லிதான் தெரியவேண்டுமா கார்ப்பரேட் சுரண்டல் என்றால் என்னவென்று. அந்த அளவுக்கா தமிழர்கள் அறிவுகெட்டு போயிருக்கிறீர்கள்?

‘திமுகவை தாக்கி டயலாக் வைத்துவிட்டார்’ என்று இணைய பார்ப்பனர்களும், திடீர் தமிழின இடிதாங்கிகளும் ஆவேசமாக ஆனந்தம் அடைகிறார்கள். அரசியல்வாதிகளை கிடுக்கிப்பிடி பிடித்திருப்பதாக புளங்காங்கிதம் அடைகிறார்கள். அட தொண்ணைகளா. அவ்வளவு தில்லு ஏ.ஆர். முருகதாசுக்கும், விஜய்க்கும் இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? அப்படி நெஞ்சிலே மஞ்சா சோறு இருந்திருந்தால் பட ரிலீஸுக்கு முந்தையநாள் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வந்திருக்குமா? இல்லையேல் நிஜமாகவே முருகதாஸுக்கு இந்த அறவுணர்ச்சியெல்லாம் இருந்திருந்தால் முன்னாள் முதல்வரின் – திமுக தலைவரின் பேரனிடம் சம்பளம் வாங்கி படம் இயக்கி இருந்திருப்பாரா?

சினிமாக்காரர்கள் பேசும் நியாயம் தர்மம் அறம் எல்லாம் வெறும் துட்டுக்காகதான். இந்த தலைமுறை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சதுரங்க வேட்டையில் கொஞ்சம் கத்திப் பேசி ‘ரைஸ் புல்லிங்’ செய்வாரே நட்ராஜ்? அதே டெக்னிக்கைதான் இதே கத்தியும் செய்திருக்கிறது. இங்கே எவனுக்கும் விவசாயியையும் தெரியாது. விவசாயத்தையும் தெரியாது. அதனால்தான் உள்ளே விசில் அடித்துவிட்டு வெளியே வந்து டாஸ்மாக்கில் சரக்கடிக்கிறான்.

நாளையே விவசாயத்துக்கு ஆபத்து விவசாயிக்கு பிரச்சினை என்றால் அட்டக்கத்தி வீரர்கள் விஜய்யோ, முருகதாஸோ எட்டிப் பார்க்கப் போவதில்லை. டேன்ஸுக்கு மார்க்கு போடுறவன், கள்ளக்காதல் நியூஸு போடுறவன் என்று கத்தியால் ஆபாசமாக விமர்சிக்கப்படும் பத்திரிகைக்காரன்தான் பஸ் புடிச்சி வரப்போகிறான். கடந்த இரண்டு  நாட்களாக மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற வயல்களை படம்பிடித்து அவன்தான் பத்திரிகையில் போட்டோ போட்டுக் கொண்டிருக்கிறான். கத்தி கதாநாயகனும், இயக்குனரும் எவ்வளவு கலெக்‌ஷன் என்று ஊர் ஊராக போன் போட்டு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய உண்மையான முகம்.

23 அக்டோபர், 2014

ஜீன்ஸ்

“தீபாவளிக்கு நிலா பாப்பாவுக்கு என்ன டிரெஸ் வேணும்?” கிருஷ்ணா அவள் பேசுவது போன்ற தொனியிலேயே இழுத்து இழுத்து கொஞ்சலாக கேட்டான். டிவியில் ஏதோ பாடாவதி படம் ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவு திருப்திகரமாக முடிந்ததால், குடும்பமே ரிலாக்ஸாக இருந்த நேரம் அது.
‘“ம்ம்ம்ம்…” என்று முப்பது நொடிக்கு யோசித்தவள் பட்டென்று சொன்னாள்.
“ஜீன்ஸ்”
“எப்போப் பார்த்தாலும் ஜீன்ஸுதானா? அங்கங்கே பொம்பளைக் கொழந்தைங்க அழகழகா கலர் கலரா பாவாடைச் சட்டை போட்டுக்கிட்டு போறதை பார்க்குறப்போ அவ்ளோ ஆசையா இருக்கு? இவ ஜீன்ஸைத் தவிர வேறெதையும் போட்டுக்க மாட்டேங்குறா” அனிதா நொடித்துக் கொண்டாள்.
“அவ இஷ்டத்துக்கு விடேன் அனிதா. பொண்ணுன்னா பாவாடை சட்டைதான் போடணுமா? அவ என்ன உன்னை மாதிரி பட்டிக்காட்டுலேயா பொறந்து வளர்றா?” கிருஷ்ணாவின் அம்மா, பேத்திக்கு சப்போர்ட் செய்தாள்.
“ஆமாம், நான் நைட்டியிலே இருந்தாலே உங்களுக்கு மூஞ்சி அப்படி போயிடும். ஆனா, பேத்தி மட்டும் ரொம்ப மாடர்னா இருக்கணுமோ?” வார்த்தைகளில் லேசாக அனல் காய்ச்சினாள் அனிதா. எப்போதுமே இப்படித்தான். ஜோவியலாக பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென சுள்ளென்று விழுவது அவள் சுபாவம்.
“அம்மா, இந்த தீபாவளிக்கு நீயும் என்னை மாதிரியே ஜீன்ஸ் வாங்கிக்கோ” நிலா மழலையில் சொன்னபோது, மூவருமே வாய்விட்டு சிரித்து விட்டார்கள். போன விஜயதசமிக்குதான் நிலாவை ப்ரீ கேஜியில் போட்டிருந்தார்கள். ஸ்கூலுக்கு போய் ஒரு மாசத்திலேயே நன்றாக வாயடிக்க கற்றுக் கொண்டாள்.
“ப்பா…. உங்கம்மாவை அந்த கோலத்துலே நினைச்சாலே பகீருங்குது” என்றான் கிருஷ்ணா.
“உன் ஆத்தாக்காரி என்னா அனுஷ்காவா?” வேண்டுமென்றே மருமகளை வம்புக்கு இழுத்தார் மாமியார்.
குழந்தை ஏதோ தெரியாத்தனமாக பேசுவதை வைத்து கணவனும், மாமியாரும் நக்கல் அடிப்பது அனிதாவின் ஈகோவை தொட்டது. இவனை கல்யாணம் செய்துக்கொள்ளும் வரை அவள் நைட்டி கூட அணிந்ததில்லை. பாவாடை-தாவணி, புடவை என்று சினிமாவில் வரும் அம்மன் பக்தைகள் மாதிரிதான் உடுத்துவாள். இந்த பண்பாட்டு விஷயத்தில் அனிதாவின் பிறந்தவீடு அவ்வளவு கண்டிப்பு. கணவன் வற்புத்தி அவன் வசதிக்காக முதன்முதலாக ஆசையோடு வாங்கிக் கொடுத்த நைட்டியை உடுத்தவே அவ்வளவு தயங்கினாள். சுடிதார் அணியும் விருப்பமெல்லாம் புகுந்த வீட்டில்தான் அவளுக்கு சாத்தியமானது. மாமியாரும் பழம் பஞ்சாங்கம்தான். ஆனாலும், நகரத்தில் வசிப்பவர் என்பதால் இந்தகால பெண்களுக்கு இதெல்லாம்தான் வசதி என்கிற பரந்த மனப்பான்மைக்கு வந்திருந்தார். இப்போது அனிதா பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே பெண்களுக்கான உடை கட்டுப்பாடெல்லாம் ரொம்ப வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. சுடிதார் அணிந்துக்கொண்டு களை பிடுங்குகிற இளம்பெண்களை எல்லாம் அங்கே அடிக்கடி காண முடிகிறது.
“ஏன் நான் ஜீன்ஸ் போட்டுக்கிட்டா என்ன… உங்கப்பன் டைவோர்ஸ் பண்ணிடுவாரா.. இல்லைன்னா உங்க பாட்டி என்னை எங்கப்பன் வீட்டுக்கு துரத்திடுவாங்களா.. தீபாவளிக்கு நானும் உன்னைமாதிரியே ஜீன்ஸ்தான் செல்லம் போட்டுக்கப் போறேன்” குழந்தையிடம் உறுதியான குரலில் சொன்னாள்.
“சூப்பர்மா” என்றது குழந்தை.
“ஏய் அனிதா, சும்மா விளையாட்டுக்கு கலாய்ச்சா சீரியஸா எடுத்துக்கிட்டியா?”
“இதுலே என்ன விளையாட்டு? ஏன் பொம்பளைங்களும் ஜீன்ஸ் போடுறது சகஜமாதானே ஆயிக்கிட்டிருக்கு. நானும் போட்டுக்கிட்டு போறேன். என்னிக்காவது உனக்கு என்ன பிடிக்கும், என்ன வேணும்னு என்னை கேட்டிருக்கீங்களா? இல்லேன்னா நான்தான் இதுதான் வேணும்னு அடம் புடிச்சிருக்கேனா? இந்த தீபாவளிக்கு நான் ஜீன்ஸ்தான் போட்டுக்கப் போறேன். யார் ஒத்துக்கிட்டாலும் சரி, ஒத்துக்கலைன்னாலும் சரி” நிஜமாகவே அவள் சீரியஸாகதான் பேசினாள்.
“நிறைய மெகாசீரியல் பார்த்து கெட்டுப்போறே நீ”
போர்மேகம் சூழ்ந்ததை அடுத்து, புருஷனும் பொண்டாட்டியும் எப்படியாவது போகட்டும். நம்ம தலை உருளாமல் இருந்தால் சரியென்று மாமியார் டிவி வால்யூமை கூட்டத் தொடங்கினார்.
அனிதா பிடிவாதக்காரி. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிப்பவள். அவளுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் இரவுகளில் தொடர்ச்சியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவாள் என்று கிருஷ்ணாவுக்கும் நன்றாகவே தெரியும். அரை மனதோடு சம்மதித்தான்.

“ஜீன்ஸ் வேணுங்க”
அவன் தூக்கிவைத்திருந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே, “பாப்பாவுக்குதானே சார்?”
“ம்…. இந்த பீப்பாவுக்கும் சேர்த்துதான்” பக்கத்தில் நின்றிருந்த அனிதாவை காட்டினான்.
சேல்ஸ் கேர்ள் களுக்கென்று சிரித்தாள். இப்படிதான் பொது இடங்களில் திடீர் திடீரென ஏடாகூடமாக பேசுவான். எல்லா ஆண்களுமே மற்றவர்களை ஈர்க்க தங்கள் மனைவியை மட்டமடித்து ஜோக் அடிக்கும் அதே அரதப்பழசான டெக்னிக்கைதான் கையாளுகிறார்கள். இவன் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுவானா என்ன? கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டே சொன்னாள்.
“வாயிலே ஏதாவது வரப்போவுது. நீ துணி எடும்மா”
“துணியாதான் வேணுமா மேடம். ரெடிமேட் வேணாமா?” இவளது நாட்டுத் தோற்றத்தை பார்த்துவிட்டு சேல்ஸ்கேர்ளும் அவள் பங்குக்கு விளையாடினாள்.
அனிதா பதட்டமானாள். இந்த நகரத்துக்கு வந்து நாலு வருஷம் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவளுடைய கிராமவாசனை போகவேயில்லை. இங்கிருக்கும் மனிதர்கள் அதை கண்டுகொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேலி பேச தவறுவதேயில்லை. நகரங்களில் வசிப்பவர்கள்தான் நாகரிகமானவர்கள் என்கிறார்கள். ஆனால் இங்கே ஆண்-பெண், பணக்காரன்-ஏழை என்று வித்தியாசமில்லாமல் அத்தனை பேருமே அடுத்தவரின் மனசை புண்படுத்தாமல் பேச தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் அனிதாவை நோண்டவேண்டாமென்று முடிவெடுத்து சேல்ஸ் கேர்ள், “சைஸ் என்ன மேடம்?” என்றாள்.
அனிதாவுக்கு அவளது பிரா சைஸ் மட்டும்தான் தெரியும். இடுப்பு சைஸ் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இதுவரை ஏற்பட்டதில்லை. பரிதாபமாக கணவனை பார்த்தாள். கொஞ்சம் விட்டால் அழுதுவிடுபவள் போல இருந்த அவள்மீது கிருஷ்ணாவுக்கு பரிதாபம் தோன்றியது.
“கிராமத்துப் பொண்ணு. இப்போதாங்க முதன் முதலா பேண்ட் போடப்போறா. இஞ்ச் டேப் வெச்சி நீங்களே சைஸ் பார்த்துக்கங்களேன்”
அவ்வளவு பெரிய கடையில் சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாக அத்தனை பேர் இருக்க, சேல்ஸ் கேர்ள் இவளது இடுப்பைச் சுற்றி டேப் வைத்து அளவு பார்ப்பது அவளுக்கு கூச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் ஜீன்ஸ்தான் என்று பிடிவாதம் பிடித்தது தவறோ என்கிற எண்ணம் வந்தது.
மேஜை கண்ணாடியில் பரப்பப்பட்ட ஜீன்ஸ் பேண்ட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். எல்லாமே ஒரே மாதிரியாகதான் இருந்தது.
“வேற வேற கலர், வேற வேற டிசைன் இல்லையா?”
“மேடம், ஜீன்ஸ் பொதுவா ப்ளூ கலர்தான். வேணும்னா ப்ளாக் கிடைக்கும். பார்க்குறீங்களா?”
“அய்யய்யோ.. பண்டிகைக்கு எடுக்குற துணி. கருப்புலே இருந்தா அத்தை திட்டுவாங்க” என்றாள்.
ஒரு வழியாக பர்ச்சேஸ் முடிந்தது.

ஜீன்சும், டீஷர்ட்டும் அணிந்துக்கொண்டு வெளியே வருவதற்கு அனிதா ரொம்பவும் வெட்கப்பட்டாள். பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு வருவதற்குள்ளாகவே நாணத்தில் உயிர் போய்விட்டது.

“பாட்டி, அம்மா ஜீன்ஸ் போட்டிருக்கா பாரு” என்று கத்திக்கொண்டே ஓடினாள் நிலா. அவள் கையிலிருந்த துப்பாக்கி ‘டப், டப்’பென்று வெடித்துக் கொண்டிருந்தது.

தலையை துவட்டிக்கொண்டே வந்த கிருஷ்ணா அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். “ஹேய், நல்லா தாம்பா இருக்கு”
சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாமியார், “அனிதா, ஹேப்பி தீபாவளி” என்றாள். அடுத்து ஏதாவது சொல்வாளோ என்று மாமியார் முகத்தை கலவரமாகப் பார்த்தாள் அனிதா.
“டிரெஸ் நல்லாருக்கு. பூஜையறையிலே மல்லி வாங்கி வெச்சிருக்கேன் பாரு. தலையிலே வெச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
பெரிய நிம்மதி. புருஷனும், மாமியாரும் கிண்டலடித்தே சித்திரவதை செய்வார்களோ என்று பயந்துக் கொண்டிருந்தவளுக்கு அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டது திருப்தியாக இருந்தது. பீரோ கண்ணாடி முன்பாக போய் நின்றாள். அனுஷ்கா அளவுக்கு இல்லையென்றாலும் அவ்வளவு ஒன்றும் மோசமில்லையென்று அவளுக்கே தோன்றியது.
“அம்மா, பட்டாசு வெடிக்கலாம் வா” நிலா அழைத்தாள்.
“ஹேய். வேலை நிறைய இருக்கு. வரமுடியாது”
“அக்கம் பக்கத்திலே எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களோன்னு பயம், அதனாலேதான் வெளியே வரமாட்டேங்கிறா”
கிருஷ்ணா உசுப்பேற்றினான்.
“எனக்கென்ன பயம்? தாராளமா வெளியே வர்றேன்” தில்லாக சொன்னாலும், உள்ளுக்குள் கொஞ்சம் தயக்கம் இருந்தது. மூணாவது வீட்டு விஜயா மாமி ஏதாவது வம்புக்கு அலைந்துக் கொண்டே இருப்பாள். அவளது கழுகுக் கண்ணில் மாட்டிக் கொண்டால் போச்சு. தெரு முழுக்க தன்னுடைய தலை தான் உருளும்.
தெருவெங்கும் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். நிலா ஒரு சரத்தை எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்தாள். ஊதுபத்தி கொளுத்திவந்து அம்மாவிடம் நீட்டினாள்.
பக்கத்து வீட்டு அவினாஷ் பார்த்தான். கல்லூரி படிக்கும் பையன். அனிதாவுக்கு மீண்டும் வெட்கம். “ஆண்ட்டி. டிரெஸ் சூப்பர். காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரியே இருக்கீங்க”
அவினாஷின் அம்மாவும், அப்பாவும் கூட பார்த்தார்கள். “ஹேப்பி தீபாவளி. ஜீன்ஸும், டீஷர்ட்டும் உனக்கு ரொம்ப நல்லாருக்கு” என்று காம்ப்ளிமெண்ட் செய்தார்கள்.
விஜயா மாமி பட்டுப்புடவை சரசரக்க கையில் பூக்கூடையோடு கிளம்பினாள். அனேகமாக கோயிலுக்காக இருக்கும். யார் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தாளோ, அந்த மாமியே எதிரில் நிற்கிறாள்.
“அனிதா, பேண்ட் சர்ட் உனக்கு நல்லாதான் இருக்கு. பரவாயில்லையே, உன் மாமியார் இந்த டிரெஸ்ஸெல்லாம் போட அலவ் பண்ணுறா. நல்ல பிராட் மைண்ட் அவளுக்கு. அந்த கடைசி வீட்டு ஜான்ஸி இருக்காளே, கிறிஸ்டியனா இருந்தாலும் கூட தன் மருமகளை மாடர்னா டிரெஸ் பண்ண விட மாட்டா”
உஸ்ஸப்பா... மாமியிடமும் பாஸ் மார்க். இனி கவலையே இல்லை. அரை மணி நேரம் புருஷனோடும், குழந்தையோடும் பட்டாசு வெடித்து ஜாலியாக தீபாவளி கொண்டாடினாள். தெரு முழுக்க அவளது டிரெஸ்ஸை பாராட்டியது. யாருக்குமே உறுத்தவில்லை என்பது அனிதாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“டிவி பார்த்துக்கிட்டே தூங்கிட்டா” குழந்தையை தூக்கிவந்து பெட் மீது போட்டாள். படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்தான் கிருஷ்ணா.
அனிதா இன்று என்னவோ அவனுக்கு புதுசாகத் தெரிந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயது குறைந்துவிட்ட உற்சாகத்தோடு காலையில் இருந்து வலம் வந்துக் கொண்டிருக்கிறாள். நீல நிறப்புடவை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகை. குப்பென்று அறை முழுக்க வாசம் பரவியது. கதவை தாளிட்டுவிட்டு வந்து அவன் மீது சரிந்தாள்.
“எங்கம்மாவுக்கு உன் மேலே எவ்ளோ ஆசை பாரு. பூ விக்கிற விலையிலே இவ்ளோ முழம் வாங்கி தந்திருக்காங்க”
“ம்ம்ம்... மாமியாருங்க மருமகளுங்களுக்கு பூ வாங்கிக் கொடுக்குறது அவங்க மேலே இருக்குற ஆசையிலே இல்லை. புள்ளைங்களோட சந்தோஷத்துக்குதான்”
“அதிருக்கட்டும். ஜீன்ஸ் உனக்கு நல்லாதானே இருந்தது. ஏன் அரை மணி நேரம் கூட போடலை”
“அய்யே. அந்த டிரெஸ்ஸை யாரு போடுவா. டைட்டா உடம்பை புடிச்சிக்கிட்டு கொஞ்சம் கூட ஃப்ரீயாவே இல்லை. புடவைதான் பெஸ்ட்டு
“அப்போன்னா ரெண்டாயிரம் ரூபா வேஸ்ட் தானா?”
“அப்படியெல்லாம் இல்லை. கொஞ்ச நேரம் போட்டிருந்தாலும் ஜீன்ஸ் எனக்கு கொடுத்த கான்ஃபிடெண்ட்தான் முக்கியம். என்னோட பர்சனல் ஃப்ரீடமுக்கு நான் போடுற சண்டை அது. என்னோட டிரெஸ்ஸை, என்னோட ஃபுட்டை, எனக்கான விஷயங்களை நானே டிசைட் பண்ணிக்கற உரிமையை கேட்டு வாங்குற போராட்டம் அது. எனக்கு ஒண்ணு பிடிக்குது, பிடிக்கலைங்கிறது வேற விஷயம். ஆனா நான் எதை தேர்ந்தெடுக்கணும்னு மத்தவங்க வற்புறுத்தக் கூடாது. அது புருஷனா இருந்தாலும்” அவள் தலையை, கிருஷ்ணாவின் தலை மீது இடித்தவாறே சொன்னாள்.

இவ்வளவு பேசுவாளா, அவளை ஏதாவது சீண்டலாமா என்று கிருஷ்ணாவுக்கு யோசனை வந்தது. இருந்தாலும் அந்த இரவு சண்டை இல்லாததாக, அப்புறம் ஏதோ சொன்னாளே, ஆங்.. அவள் ‘ஃப்ரீடம்’ உணருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே லைட்டை ஆஃப் செய்தான்.

(நன்றி : தமிழ்முரசு - தீபாவளி சிறப்பு மலர் 2014)

16 அக்டோபர், 2014

காமிக்ஸ் பெண் மீனு!

நான் யாருக்கும் குறைந்தவள் அல்ல. தெருமுனைகளில் சுற்றிக் கொண்டும், குட்டிச்சுவர்களில் அமர்ந்துக் கொண்டும் பெண்களை கேலியும் கிண்டலும் செய்யும் விடலைப் பையன்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்காகவும், என்னைப் போன்று டெல்லியில் வசிக்கும் மற்ற இளம்பெண்களுக்காகவும் உரத்து குரல் கொடுக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. டெல்லி, பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும் என்றால் நாங்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த நிலைமை வரும் வரை நாங்களேதான் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்தாக வேண்டும்” என்கிறார் டெல்லியில் வசிக்கும் இருபத்தோரு வயதான இளம்பெண் மீனு ராவத்.


நிர்பயா சம்பவம் நடந்த டெல்லியில் இம்மாதிரி குரல்கள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. சமூகவலைத்தளங்களில் முணுமுணுப்பான ஸ்டேட்டஸ்களாக தொடங்கிய இந்த பெண்ணியச் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக வலுபெறத் தொடங்கியிருக்கிறது.

உலகெங்கும் வாழும் பெண்களின் பிரச்சினைகளை அவர்கள் எப்படி கடந்துவர முடியும் என்கிற விழிப்புணர்வுக்காக ‘கிராஸ்ரூட்ஸ் கேர்ள்ஸ் புக் கிளப்’ என்கிற திட்டத்தை ஒரு தன்னார்வ அமைப்பு முன்னெடுத்தது. அந்த திட்டத்தில் வேறு வேறு ஆறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கதைகளை காமிக்ஸ் வடிவில் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து எழுதியிருப்பவர் மீனு ராவத்.

நிர்பயா சம்பவம் போன்ற தேசிய அவமானங்களால் பெண்கள் வாழ தகுதியற்ற நகரம் என்று டெல்லியின் மானம், சர்வதேச அளவில் கப்பல் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் மீனுவின் காமிக்ஸ் இந்தியப் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மீனு எதிர்கால கனவுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்திய இளம்பெண்களின் பிரதிநிதி. தன்னுடைய கனவுகளை எப்படி நனவாக்குவது என்பது குறித்த குழப்பம் அவருக்கு இருந்தது. ஃபெமினிஸ்ட் அப்ரோச் டூ டெக்னாலஜி என்கிற டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தை அணுகிய பிறகு அவரது மனோபாவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. தன்னுடைய கனவுகளை நிஜமாக்க என்னென்ன திறமைகளை தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவினைப் பெற்றார். தான் தன்னம்பிக்கை பெற்ற கதையைதான் ‘எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் கேர்ள் ஃபவர் இன் இண்டியா : மீனு’ என்கிற தலைப்பில் காமிக்ஸாக எழுதினார்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான மர்ஜானே சத்ரபி ஈரானில் நிகழ்ந்த தன்னுடைய சிறுவயது அனுபவங்களை ‘பெர்ஸேபோலிஸ்’ என்கிற பெயரில் கிராஃபிக்நாவலாக எழுதினார். பிரெஞ்சில் வெளியான இந்த சித்திரநாவல், பின்னர் பல்வேறு மொழிகளிலும் (தமிழிலும்கூட) வெளியிடப்பட்டு வாசகர்களின் பரவலான கவனத்தை பெற்றது. மீனுவின் காமிக்ஸும் கூட அத்தகைய ஒரு முயற்சிதான்.

“நான் இப்போது தன்னம்பிக்கை மிகுந்தவளாக இருக்கிறேன். ஆனாலும் டெல்லியிலும், இந்தியா முழுக்கவும் பெண்கள் நான் ஒரு காலத்தில் இருந்ததை போல பயந்தாங் கொள்ளிகளாகதான் பெரும்பாலும் இருக்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர்தான் உதவிக் கொள்ள வேண்டும். நமக்கு உதவ விண்ணிலிருந்தா தேவதை வரப்போகிறாள்?” என்று தன்னுடைய கதையை எழுதியதற்கான நியாயத்தை சொல்கிறார் மீனு.

மீனுவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை திடீரென மரணித்தார். மீனுவோடு சேர்த்து மொத்தம் ஆறு குழந்தைகள். நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள். அப்பா அரசு ஊழியராக இருந்ததால், அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த வீட்டில் தொடர்ந்து வசித்தார்கள். உறவினர்களின் உதவி எதுவும் கிடைக்காத நிலையில் சொற்ப சம்பளத்துக்கு மீனுவின் அம்மா வேலைக்கு போனார். ஆனால் உபதேசம் செய்ய மட்டும் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள்.

“இரண்டு பையன்களை மட்டும் படிக்கவை, போதும். அடுப்பு ஊதப்போகும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? அவர்களுக்கு வரதட்சணை கொடுப்பதற்கு நீ பணம் சேர்ப்பதே அதிகம். அப்படியிருக்க படிப்புக்கு வேறு வீணாக செலவழிக்கப் போகிறாயா?” என்று அடிக்கடி மந்திரம் ஓதிவிட்டு போவார்கள்.

அப்போதுதான் மீனு ஆறாவது வகுப்பில் சேர்ந்திருந்தார். பள்ளியை விட்டு அவரை நிறுத்தும்படி உறவினர்கள் நச்சரிக்கத் தொடங்கினார்கள். ஆனால் மீனுவின் அம்மா உறுதியாக இருந்தார். அவர்களிடம் சொன்னார்.

“நிச்சயமாக பெண்களுக்கு கல்வி தேவை. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு சொற்ப சம்பளத்துக்கு நான் மாடாய் உழைக்கவேண்டிய நிலைமை, எனக்கு கல்வி இல்லாததால்தான். என்னுடைய பெண்களுக்கு நல்ல கல்வியை தருவேன். சொந்த காலில் எப்படி நிற்பது என்பதை அவர்களே கற்றுக் கொள்வார்கள்”

படிக்காதவராக இருந்த போதிலும் அம்மா எடுத்த தைரியமான, முற்போக்கான இந்த முடிவால் மீனு தொடர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார். குழந்தை நிலையிலிருந்து டீனேஜில் நுழைந்தபோதுதான் உலகம் தான் நினைத்த மாதிரி இல்லை என்பது மீனுவுக்கு புரிந்தது. பள்ளியிலும், தெருக்களிலும் பெண்களை கிண்டல் செய்யவும், சீண்டவுமே ஏராளமான போக்கிரிகள் திரிகிறார்கள் என்பது தெரிந்தது. எனவே முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்த்தார். பக்கத்தில் இருந்த கடைக்கு போவதாக இருந்தால்கூட தம்பிகளைதான் அனுப்புவார். அல்லது அவர்களையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். தனியாக போவது என்றாலே அவ்வளவு பயம். பள்ளிக்கு போகும்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அவருக்கு இந்த அளவுகடந்த பயம் தோன்றியது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபிறகு பயம் பன்மடங்காக அதிகரித்தது. எப்போதும் முகத்தில் அச்சத்தை சுமந்துத் திரியும் தன்னுடைய மகளைப் பார்த்து வருத்தப்படத் தொடங்கினார் அம்மா.

இந்த கட்டத்தில்தான் ஃபெமினிஸ்ட் அப்ரோச் டூ டெக்னாலஜி (FAT) அமைப்பின் அறிமுகம் மீனுவுக்கு கிடைத்தது. அந்த அமைப்பில் பெண்களுக்காக நடத்தப்படும் ஆறுமாத இலவச கம்ப்யூட்டர் வகுப்பில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து தூரமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பதால் சேருவதற்கு அஞ்சினார்.

அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. “எவ்வளவு நாளைக்குதான் தனியாக போக பயந்து பயந்து சாவாய்? கூட யாராவது ஒரு தோழியையும் சேர்த்துக்கொண்டு போய்விட்டுதான் வாயேன்” என்றார். இப்படியாகதான் கம்ப்யூட்டர் வகுப்புக்கு கொஞ்சம் அச்சமான மனநிலையில் போய் சேர்ந்தார் மீனு. 

கம்ப்யூட்டரும், இண்டர்நெட்டும் மீனுவுக்கு கொடுத்த சுதந்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. வகுப்புக்கு வந்த வேறு வேறு பகுதியைச் சேர்ந்த சக தோழிகள் மூலமாக டெல்லி எவ்வளவு பெரியது என்று அவருக்கு புரிந்தது. பயந்துப்போய் வீட்டோடு முடங்கிக் கிடந்தால், எதிர்காலத்தில் இப்பெரு நகரத்தில் எப்படி வாழமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். FAT அமைப்பு கம்ப்யூட்டரை மட்டும் அப்பெண்களுக்கு கற்றுத்தரவில்லை. இந்திய சமூக அமைப்பில் பெண்களின் நிலை, அவர்கள் மீது விதிக்கப்படும் தடைகளும், அழுத்தங்களும், அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வது என்பதையும் சொல்லித் தந்தது.

சனிக்கிழமைகளில் அனைவரும் திரைப்படவிழா போன்ற நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார்கள். டெல்லியின் சேரிகளில் நாடகம் மாதிரியான கலைநிகழ்ச்சிகள் மூலமாக குழந்தை திருமணம், சிறுவயது கர்ப்பம், ஈவ்டீசிங், பெண்களுக்கான கல்வி குறித்த அவசியம் என்று பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இவை எல்லாவற்றிலும் மீனுவும் பங்குபெற்றார். இவற்றில் ஈடுபட அவரது அம்மாவும் மீனுவை ஊக்கப்படுத்தினார். இதன் மூலமாக குடும்பம் தவிர்த்து வெளிவட்டத்தில் பழக அவருக்கு இருந்த சங்கோஜமும், அச்சமும் சுத்தமாக அகன்றது.

மீனுவுக்கு படிப்பும் முடிந்தது. வேலை தேடத் தொடங்கினார். பத்திரிகையாளர், மாடல், ஒரு கிரிக்கெட் வீரரின் மனைவி என்று அவரது சிறுவயது கனவுகளின் ஆசைகள் ஏராளம். ஆனாலும் மீனு இப்போது யதார்த்தத்தை உணர்ந்த பெண். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ள தெரிந்த பெண். டெலிமார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்வாக நல்ல சம்பளத்தில் கிடைத்த பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தபிறகு அவருக்கு கிடைத்த வெளியுலக அனுபவங்கள் அத்தனையும் அவரை புடம் போட்டது. கூடுதலாக கிடைத்த பொருளாதார சுதந்திரம் மீனுவின் / அவரது குடும்பத்தாரின் வாழ்க்கைநிலையையும் உயர்த்தியது. தன்னுடைய சகோதரிக்கு ஊரும் உறவினரும் மெச்ச நல்லமுறையில் திருமணமும் நடத்தி காண்பித்தார். எந்த மீனுவை படிக்க வைக்க வேண்டாம் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்களோ, அதே மீனுவே குடும்பத்தை தாங்குமளவுக்கு உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்கள். 

இதுதான் மீனுவின் வெற்றிக்கதை. இந்த கதையைதான் அவர் எழுதி, சித்திரங்கள் வரைந்து காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தன்னுடைய கதையை சொல்லும்போதே, இடையிடையே ‘மானே தேனே’வென்று இந்தியப் பெண்களின் சமூகநிலை என்னவென்றும் சர்வதேச சமூகத்துக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் மீனு ராவத்.

உங்களிடமும் மீனுவிடம் இருப்பது மாதிரியான ஒரு வெற்றிக்கதை இருக்குமானால், இந்த கட்டுரையை வாசிக்கும் பெண்கள் யாரும் தங்களுடைய கதையையும் இம்மாதிரி பதிப்பிக்கலாம். நீங்கள் டேப்ளட் பயன்படுத்துபவராக இருந்தால் ‘காமிக் புக்’ அப்ளிகேஷனை நிறுவியோ அல்லது வெள்ளைப் பேப்பரில் ஓவியமாக வரைந்தோ உங்கள் சொந்தவாழ்க்கையை காமிக்ஸ் ஆக்கலாம். போட்டோக்களையும் பயன்படுத்தலாம்.

grassrootsgirls.tumblr.com என்கிற இணையத்தள முகவரியில் மேற்கொண்டு விவரங்களை பெறலாம். இதே இணையத்தளத்தில்தான் மீனு உள்ளிட்ட உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஆறு பெண்களின் வெற்றிக்கதைகள் மின்புத்தகமாக பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த கதைகளை வாசிக்க விரும்பினால் நீங்கள் இணையத்திலேயே இலவசமாகவும் வாசிக்க முடியும்.

* உங்கள் கதையை உருவாக்குவதற்கு முன்பாக நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:

* உங்கள் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் என்னென்ன?

* நீங்கள் அந்த சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

* பெண்கள் இம்மாதிரி சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக ஏதேனும் தன்னார்வ அமைப்புகள் உங்கள் பகுதிகளில் பணிபுரிகிறார்களா?

* நீங்கள் அடைந்த தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் மற்ற பெண்களுக்கும் கற்றுத்தர நீங்கள் என்ன செய்தீர்கள்?


இவ்வளவு போதும். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கதை உண்டு. அதை கேட்க உலகம் தயாராகதான் இருக்கிறது. நீங்கள் சொல்ல தயாரா?

(நன்றி : தினகரன் வசந்தம்)

14 அக்டோபர், 2014

மெட்ராஸ் சாதி

‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவந்தபிறகு, மெட்ராஸில் சாதி எப்படி இயங்குகிறது என்று மெட்ராஸுக்கு சமீபத்தில் குடியேறியவர்கள் பக்கம் பக்கமாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்ராஸ் எக்மோரில் நான் பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வளர்ந்ததெல்லாம் தென்சென்னைதான் என்றாலும், ஒட்டுமொத்த மெட்ராஸின் சுற்றளவே நூறு கி.மீ.க்குள்தான் எனும்போது மத்திய சென்னை, வடசென்னை எல்லாம் அந்நியமெல்லாம் இல்லை. கல்யாணம், காதுகுத்து, சாவு, எழவு என்று மேடவாக்கம் டூ திருவொற்றியூர் வரை நம் கால் படாத இடமேயில்லை.

இத்தனை ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி மெட்ராஸை விட்டு வெளியே சென்று தங்கியதே இல்லை. அதிகபட்சம் ஒருவாரம் ஒரே ஒரு முறை செம்மொழி மாநாட்டுக்காக கோயமுத்தூரில் தங்கியிருக்கிறேன். 1996 சட்டமன்றத் தேர்தலின் போது, சென்னையிலிருந்து மதுரைக்கு நண்பரோடு பைக்கில் சென்றேன். தேர்தல் எப்படி நடக்கிறது, மக்களின் மனோபாவம் என்ன என்பதை நேரிடையாக தெரிந்துக் கொள்ளும் பொருட்டு. முதன்முதலாக “நீங்க என்ன ஆளுங்க?” என்கிற கேள்வியை மேலூரில் ஒரு பெண்ணிடம் எதிர்கொண்டபோதுதான் தெரிந்தது, மெட்ராஸ் சாதீயத்தை எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறது என்பது.

மெட்ராஸில் சாதி என்பது இல்லவே இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ரொம்ப நுணுக்கமாக கவனித்தால் தெரியும். ஆனால், இங்கே பெரும்பாலும் பிளாக் & ஒயிட் மட்டும்தான். அதாவது ஒன்று நீங்கள் அய்யிரு (அய்யங்காரும் இங்கே அய்யிருதான்). அல்லது வேறு ஏதோ ஒரு சாதி.

நான் தேவரு, நான் பிள்ளைமாரு, நான் வன்னியரு, நான் நாயுடு என்றெல்லாம் சூத்திரசாதிகளில் தலித்துகளுக்கு மேற்பட்ட உயர்நிலை சாதியென்று நீங்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாது. பூணூல் இருந்தால் கொஞ்சம் உசரம். அது இல்லையென்றால் எல்லா சாதியும் ஒரே சாதிதான். நேரடியாக சாதிப்பெயரை சொல்லி திட்டுவது, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, கவுரவக் கொலை, தீண்டாமைச் சுவர், செருப்பில்லாமல் நடக்க வேண்டும் என்று தமிழகத்தின் மற்றைய மாவட்டங்களின் சாதிப்பாகுபாடு சென்னையில் நேரடியாக தெரியாது. மதமும் கூட இப்படித்தான். பாபர் மசூதி இடிப்பு, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவப் பாதிரிமார் எரிப்பு மாதிரி சம்பவங்களின் போது இந்தியா முழுக்கவே கணகணவென்று மதநெருப்பு பற்றியெரிந்தபோதெல்லாம், சென்னை தேமேவென்றுதான் கிடந்தது.

மூட்டை தூக்கிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் போகும் கருப்பான ஒருவரை கண்டதுமே ‘தலித்’தென்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அழைத்து விசாரித்துப் பாருங்கள். வந்தவாசி பக்கமாக இருந்து பஞ்சம் பிழைக்கவந்த வன்னியராக கூட இருப்பார். சென்னையின் சாதிகள் வர்க்கமாக பிரிந்திருக்கிறது. அதிகார வர்க்கம், பாட்டாளி வர்க்கம். அதிகார வர்க்கத்தில் தலித்துகளும் உண்டு. பாட்டாளி வர்க்கத்தில் அய்யிருகளும் உண்டு. என்ன அதிகார வர்க்கத்தில் பெரும்பான்மை இடத்தை அய்யிருகளும், பாட்டாளி வர்க்கத்தில் பெரும்பான்மை இடத்தை பார்ப்பனரல்லாதவரும் நிரப்பியிருப்பார்கள். உதிரிப் பாட்டாளிகள் இங்கே ஒரே வர்க்கமாக இணைந்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வலுவான தொழிற்சங்கங்களை சாதிவேறுபாடு இன்றிதான் கட்டமைத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அம்பத்தூர், கிண்டி பக்கமெல்லாம் அய்யிரு தொழிலாளர்களும், மற்ற சாதித் தொழிலாளர்களும் தோள் மேல் கைபோட்டு ஒன்றாக சாராயம் குடிக்கச் செல்லும் காட்சியை சகஜமாக காணலாம். இங்கு இயங்கும் அரசு மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களை உற்றுநோக்கினால் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதவர்களும் ஒரே சாதியாக (சில சம்பவங்களில், செயல்பாடுகளில் விதிவிலக்கு இருந்திருக்கலாம்) தங்களை பாட்டாளிகளாக மட்டுமே உணர்ந்து செயல்பட்டிருப்பது விளங்கும். பார்ப்பனரல்லாதவர்களிலும் தலித் vs இதரசாதியினர் முரண் அவ்வளவாக எழுந்ததில்லை.

இங்கே வெள்ளாள தேனாம்பேட்டை, வன்னிய தேனாம்பேட்டையெல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மெட்ராஸைப் பொறுத்தவரை சாதி இரண்டாம் பட்சம்தான். பணம் இருப்பதும், இல்லாததும்தான் இங்கே முதன்மையான பிரச்சினை. வெள்ளைக்காரன், மெட்ராஸை கோட்டை கட்டி ஆண்டதின் பாசிட்டிவ்வான விளைவுகளில் இதுவொன்று. சென்னையில் பிறந்து வளர்ந்த யாருமே மேற்கண்ட இந்த கருத்துகளோடு எளிதாக ஒத்துப்போக முடியும். சாதியைவிட ஏரியாதான் இங்கே கவுரவப் பிரச்சினை. பிற ஊர்களில் இரண்டு சமூகங்கள் மோதிக்கொள்கிறது என்றால், இங்கே இரண்டு ஏரியாக்கள் மோதிக்கொள்வது வழக்கம். அவ்வப்போது கல்லூரி மாணவர்கள் மோதல் என்று செய்தித்தாள்களில் நீங்கள் வாசிக்கும் செய்திகள் எல்லாம்கூட இம்மாதிரி ஏரியாப்பிரச்சினை தொடர்பானதுதான். இதெல்லாம் பரம்பரை சென்னைக்காரர்களுக்கும், சில தலைமுறைகளுக்கு முன்பாக இங்கே குடியேறியவர்களுக்கும் பொருந்தும்.

தொண்ணூறுகளில் ‘திடுப்’பென்று இந்தியா முழுக்க ஒரு பொருளாதார ‘ஜம்ப்’ நடந்ததில்லையா? அப்போதுதான் சாதியும், மதமும் இம்மாநகருக்குள், வெளிமாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் மூலமாக ஆழமாக ஊடுருவியது. தங்கள் ஊரை மாதிரியேதான் அவர்கள் சென்னையையும் பார்த்தார்கள். சரவணா ஸ்டோர்ஸை நாடார் கடையாக இருபது வருடங்களுக்கு முன்பாக யாருமே பார்த்ததில்லை. ஃபாத்திமா ஜீவல்லர்ஸில்தான் முஸ்லிம்கள் நகை வாங்க வேண்டும் என்று அப்போது யாருக்கும் தோன்றியதில்லை. இந்துக்கள் இந்து கடையில்தான் தீபாவளிக்கு துணிமணி வாங்கவேண்டும் என்கிற பிரச்சாரத்தை எல்லாம் இந்து அமைப்புகள் அப்போது செய்திருந்தால் சுளுக்கெடுக்கப்பட்டிருக்கும். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக நடக்காமல், சர்ரென்று ஜெட் வேகத்தில் சமீப வருடங்களில் நடந்திருக்கும் மாற்றம். முன்பெல்லாம் ஏதாவது பிரச்சினை என்றால் ஸ்டேஷன் எஸ்.ஐ. யாரென்று பெயரைதான் கேட்பார்கள். இப்போதுதான் தேவரா, முஸ்லீமா, கிறிஸ்டினா என்றெல்லாம் கூடுதலாக கேட்கிறார்கள். பரம்பரை சென்னைக்காரர்கள் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சி?” என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப்போய் கிடக்கிறோம்.

கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் பகுத்தறிவை கொடுக்கும் என்கிற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது. அவை முன்பைவிட தீவிரமாக சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடிக்கும் என்பதற்கு இன்றைய சென்னையே அத்தாட்சி. ஒரு பொதுநிகழ்வில் ஓர் இளைஞர் சாதாரணமாக மாட்டுக்கறி சாப்பிடுவதை பற்றி கவுரவக்குறைவு என்பது போன்ற தொனியில் இன்று உரையாடுகிறார். இருபது வருடங்களுக்கு முன்பு இங்கே அப்படி பேசியிருந்தால் செவுள் எகிறியிருக்கும்.

அப்புறம், மெட்ராஸ் படம் பார்த்துவிட்டு இங்கே குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் தலித்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள் என்பதாக நிறைய பேர் தாங்களாகவே கருதிக்கொண்டு பேசுகிறார்கள். கலைஞரின் பெரியார் நினைவு சமத்துவபுரங்களுக்கெல்லாம் முன்னோடி சென்னையின் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள்தான். இங்கே நீங்கள் எல்லா சாதியையும் கலந்துதான் பார்க்க முடியும் (சென்னை 600028 படத்தில் வெங்கட்பிரபு இதை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருந்தார்). போலவே குப்பம் என்பது ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புப் பகுதி என்றொரு மாயையும் இருக்கிறது. ஆதிதிராவிடர்களையும், மீனவர்களையும் போட்டு குழப்பிக் கொள்வதின் விளைவே இது. எல்லா இடத்திலும் எல்லாரும் கலந்திருக்கிறார்கள் என்றாலும் குப்பங்கள் மீனவசமூகத்தினரின் கோட்டை (சமீபமாக ஆந்திர மீனவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்). நீண்டகாலமாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் சாதியை அட்டவணை சாதியாக அறிவிக்கும்படி போராடி வருபவர்கள் இவர்கள். அதுபோலவே ‘கானா’ என்பது தலித்துகளுக்கு மட்டுமேயானது என்று ஒதுக்கிவைக்கப்படுவதும் தவறு. கானா இங்கே பாட்டாளிகளின் கலை. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மூலமாக கவுரவத்தை எட்டியது. சென்னையின் கானா பாடகர்கள் எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் உண்டு. எல்லாரும்தானே ஆட்டோ ஓட்டுகிறார்கள் (என்னுடைய அம்மாவழி உறவினர்களின் மரணத்தின்போது கானா கச்சேரி இடம்பெறுவது உண்டு, அப்பாவழி உறவுகளின் மரணத்தின்போது பஜனை மட்டும்தான்).

வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து சென்னையை பார்க்கிறார்கள். அதையே கலை இலக்கியமாகவோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாகவோ எழுதி வரலாறாக மாற்றுகிறார்கள். அதிலும் சென்னை பற்றி யாரோ மதுரைக்காரரோ, கோயமுத்தூர்காரரோ விவரமாக, இதுதான் சென்னை என்று எதையோ படமெடுத்துக் காட்டும்போது, சென்னைவாசிகளும் ‘நம்ம ஊரா இது? செமையா இருக்கே’ என்று வெறுமனே பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இங்கு பிறந்து வளர்ந்தவனால் சாதி, மதமென்று நுணுக்கமாக சித்தரிக்க முடியாது. அவனுக்கு அவ்வளவு விவரமும் பத்தாது.

7 அக்டோபர், 2014

பாரு மீது சொத்து குவிப்பு வழக்கு!

பாரிஸ், அக். 7 : உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பாருசிவேதிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பான தீர்ப்பினை பாரிஸ் இலக்கிய நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதனால் பதினெட்டு ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

சுமோ வழக்கு

பாருசிவேதிதாவின் சக போட்டி எழுத்தாளரான சுயமோகன் இந்த வழக்கினை தொடர்ந்து இருந்தார். ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கி அக்கவுண்டு எண் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாருசிவேதிதா வாங்கிக் குவித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பாருவுக்கு பரிசாக வந்த செமிமார்ட்டின் மதுபாட்டில்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது அல்ல என்கிற வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.

தீர்ப்பு விவரம்

முதல் குற்றவாளியான பாருசிவேதிதாவுக்கு நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், கூடுதலாக அவர் எழுதிய சாமபேத கதைகளை நூறு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்று அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை மிகக்கடுமையானது என்று பாரு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தபோது, சாமபேத கதைகளை நூறு முறை வாசிக்கும் கொடூரமான தண்டனை குறைக்கப்பட்டது. பதிலாக ‘ஓ என் கடவுளே’ என்று ஒரு லட்சம் முறை பாருசிவேதிதா இம்போசிஸன் எழுதவேண்டும்.

அடுத்தடுத்த குற்றவாளிகளான சராத்து, வணேஷ் கொம்பு, பெல்பம் ஆகியோருக்கு தலா நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், ‘சக்ஸைல்’ நாவலை நானூறு முறை வாய்விட்டு வாசிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறைத்தண்டனை கூட ஓக்கே, ஆனால் சக்ஸைல் நாவலை வாசிக்கும் மரணத்தண்டனை மட்டும் வேண்டாம் என்று நீதிபதி முன்பாக குற்றவாளிகள் கதறினார்கள். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கியையே இழுத்து மூடவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கோர்ட் வாசலில் பரபரப்பு

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்த இலக்கிய வழக்கில் பாருசிவேதிதா எப்படியும் விடுதலை ஆகிவிடுவார் என்கிற நம்பிக்கையில் பாருவின் நண்பர் சாபாகத்தி தலைமையில் வாசகர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். தீர்ப்பை கேள்விப்பட்டதும் அவர்கள் சோகமாகி, கையோடு கொண்டுவந்த சரக்கை அங்கேயே தண்ணீர் கலக்காமல் கல்ப்பாக அடித்து வாந்தியெடுக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பாரிஸ் போலிஸார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாந்தியை எல்லாம் கழுவி வாசகர்கள் மீதே ஊற்றி, அவர்கள் மீது சாகஸலீலா புத்தகத்தை வீசியெறிந்து துரத்தினார்கள். ஒன்றரை கிலோ எடையில் கருங்கல் மாதிரி கனமாக இருந்த புத்தகம் மேலே விழுந்ததில் நான்கு பேருக்கு மண்டை உடைந்தது. கை கால் எலும்பு முறிவும் பலருக்கும் ஏற்பட்டது.

சுமோ விளக்கம்

இந்த தீர்ப்பு பற்றி வழக்கு தொடர்ந்த சுயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் கருத்து சொல்லியிருக்கிறார். இந்திய ஞானமரபிலும், வேதங்களிலும் ஜே.சி.ஜே.சி.ஐ. என்றொரு வங்கியே கிடையாது என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இல்லாத வங்கி மூலமாக பாரு சொத்து குவித்து வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவரது குரு பத்யநித்ய பூபதி கனவில் வந்து வலியுறுத்தியதாலேயே தான் வழக்கு தொடரவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் வழக்கின் தீர்ப்பு இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருப்பதால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கட்டுரையை கூகிள் ப்ளஸ்ஸில் ‘ஷேர்’ செய்து, ‘ஆசான் ராக்ஸ்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் தொழிலதிபர் பரங்கசாமி.

கை கொடுத்த சாட்சி

வழக்கில் பாருவுக்கு தண்டனை கிடைக்க ராஸ்கர் பாஜாவின் சாட்சியே பிரதானமாக இருந்தது. கி.பி.2011ஆம் ஆண்டு சென்னை பாமராஜா அரங்கில் நடந்த சக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா மிக ஆடம்பரமாக நடந்தது. லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்துக்கொண்ட அந்த விழாவில் பாருவின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தவர் ராஸ்கர் பாஜா. அந்த பீருக்கு காசு எப்படி வந்தது என்று தோண்டி துருவி விசாரிக்கப்பட்டதிலேயே நடந்த குற்றம் தெளிவாக தெரிந்தது. ராஸ்கர் பாஜா அரசுத்தரப்பு சாட்சியாக அப்ரூவர் ஆகி அளித்த சாட்சியமே வழக்கில் உறுதியாக நின்று, இன்று பாரு உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.

கருத்து மோதல்

பாருவுக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து இருவேறு நேரெதிர் கருத்துகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய எழுத்தாளர் பாநி, “சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது” என்றார். அவருக்கு பதிலடி கொடுத்த கவிஞர் கனுஷ்ய முத்திரன், “பாரதியாருக்கு வளைந்த சட்டம் பாருவுக்கு வளையாதது ஏன்?” என்று கிடுக்கிப்பிடி போட்டார். இதே விவாதத்தில் கலந்துக்கொண்ட சிந்தனையாளர் சத்ரி, “வழக்கின் தீர்ப்பு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி பக்கங்களுக்கு பிரெஞ்சில் இருக்கிறது. அதை மேற்கு பதிப்பக மொழிப்பெயர்ப்பாளர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முழுக்க படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்” என்று கருத்து சொல்லியிருக்கிறார். இந்த தீர்ப்பு பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் “மாங்கா காமிக்ஸ் : ஓர் அறிமுகம்!” என்று எழுத்தாளர் ரஸ்.ஏமகிருஷ்ணன் கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் எங்கே தீர்ப்பு பற்றிய கருத்து இருக்கிறது என்று வாசகர்கள் தேடித்தேடி அலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் மிமலாதித்த வாமல்லன் ‘இலக்கிய சிலுக்கு என்னாச்சி வழக்கு?’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று புரியாமல் விளக்கம் கேட்ட வாசகர்களிடம், “எழுதின எனக்கே புரியலை. உனக்கு புரிஞ்சு என்னாகப் போவுது?” என்று ட்விட்டரில் காட்டமாக பதிலளித்தார் வாமல்லன். மாலச்சுவடு இதழும் ‘அறம் மீறும் இலக்கியம்’ என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான மா.வணிகண்டன், “இப்படித்தான் 1979லே பாப்பநாயக்கன் பாளையத்திலே” என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

வலுக்கிறது போராட்டம்

பாருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அநீதியானது என்றுகூறி அவருடைய வாசகர்கள் சீலே, பிரஸீல், அர்ஜெந்தினா, கூபா, இந்தியா, தமிழ்நாடு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை வாசல் ஒன்றில் ச்யோவ்ராம் வேந்தர் எனும் பாரு அபிமானி மொட்டையடிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். டாஸ்மாக்கின் உள்ளே கணிஜி உள்ளிட்ட பாருவின் தீவிரவாத வாசகர்கள் சாகும்வரை குடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி பாட்டிலை ஓபன் செய்திருக்கிறார்கள். இவர்களது வசதிக்காக போராட்டம் நடக்கும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. சச்சைக்காரன், சவகிருஷ்ணா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பதினெட்டு பேர் பார்க்குவேஸ், மார்த்தர், ஷெமிங்வே, சுயமோகன், வலைஞர், மணிமொழி ஆகியோரின் கொடும்பாவியை பாரிஸ் கார்னரில் எரித்து போராட்டம் நடத்தி கைதானார்கள். பாருவின் வழக்கை சீலே நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் எழுத்தாளர் முருக விநாயகன் தலைமையில் “துக்கம் தொண்டையை அடைத்தது” என்று கோஷம்போட்டு பாரிஸ் நீதிபதியை கண்டித்து தொண்டையில் அடித்துக் கொண்டு கதறும் போராட்டம் நடந்தது.

சென்னை மே.மே.நகர் பிஸ்லெரி புக் பேலஸ் வளாகத்தில் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இலக்கியவாதி சமிர்தம் ஆர்யா தலைமையில் கண்டனக்கூட்டம் நடந்தது. இதில் கவிஞர் சுமா பக்தி, நத்மஜா பாராயணன், மஜய விகேந்திரன் உள்ளிட்டோர் காரசாரமாக பாரிஸ் நீதிபதியை பேசினார்கள்.

பாரு விடுதலை ஆகும்வரை புறநாழிகை புத்தக உலகத்தில், பாரு எழுதிய நூல்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று புறநாழிகை வெண். பாசுதேவன் அறிவித்திருக்கிறார். விஷயம் அறிந்த வாடிக்கையாளர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.

கருப்புச்சட்டை வழக்கு

போராட்டக்காரர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் தங்கள் யூனிஃபார்மை பயன்படுத்துவதா என்று திகவினர் கண்டன அறிக்கை விட்டதோடு இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி திகவினரை தவிர வேறு யாரும் கருப்பு உடை அணிய தடைவிதிக்குமாறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு 2027ஆம் ஆண்டு, அக்டோபர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தள்ளி வைத்திருக்கிறது.

கொண்டாட்டம்

ஒரு பக்கம் போராட்டம் என்றால், மறுபக்கம் கொண்டாட்டமும் நடக்கிறது. பாருசிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் அதன் ஆதரவாளர்கள் ஜாக்கி ஜட்டி அணிந்து வருவோர் போவோருக்கெல்லாம் ‘கட்டிங்’ வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். “இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” என்று அவ்வமைப்பின் தீவிர ஆதரவாளரான சுமாசகேஸ்வரன் லாவோ தாசு நம்மிடம் சொன்னார். “மற்றவர் சோகத்தை நாம் கொண்டாடுவது தவறு” என்று அவ்வமைப்பின் அமைப்பாளர் இந்த கொண்டாட்டங்களை கடிந்துக் கொண்டாலும், ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் அவரும் இந்த அவலமான தீர்ப்பை கொண்டாடி வரிசையாக ஸ்டேட்டஸ்கள் போட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : தினபிந்தி)