7 அக்டோபர், 2014

பாரு மீது சொத்து குவிப்பு வழக்கு!

பாரிஸ், அக். 7 : உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பாருசிவேதிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பான தீர்ப்பினை பாரிஸ் இலக்கிய நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதனால் பதினெட்டு ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

சுமோ வழக்கு

பாருசிவேதிதாவின் சக போட்டி எழுத்தாளரான சுயமோகன் இந்த வழக்கினை தொடர்ந்து இருந்தார். ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கி அக்கவுண்டு எண் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாருசிவேதிதா வாங்கிக் குவித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பாருவுக்கு பரிசாக வந்த செமிமார்ட்டின் மதுபாட்டில்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது அல்ல என்கிற வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.

தீர்ப்பு விவரம்

முதல் குற்றவாளியான பாருசிவேதிதாவுக்கு நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், கூடுதலாக அவர் எழுதிய சாமபேத கதைகளை நூறு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்று அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை மிகக்கடுமையானது என்று பாரு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தபோது, சாமபேத கதைகளை நூறு முறை வாசிக்கும் கொடூரமான தண்டனை குறைக்கப்பட்டது. பதிலாக ‘ஓ என் கடவுளே’ என்று ஒரு லட்சம் முறை பாருசிவேதிதா இம்போசிஸன் எழுதவேண்டும்.

அடுத்தடுத்த குற்றவாளிகளான சராத்து, வணேஷ் கொம்பு, பெல்பம் ஆகியோருக்கு தலா நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், ‘சக்ஸைல்’ நாவலை நானூறு முறை வாய்விட்டு வாசிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறைத்தண்டனை கூட ஓக்கே, ஆனால் சக்ஸைல் நாவலை வாசிக்கும் மரணத்தண்டனை மட்டும் வேண்டாம் என்று நீதிபதி முன்பாக குற்றவாளிகள் கதறினார்கள். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கியையே இழுத்து மூடவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கோர்ட் வாசலில் பரபரப்பு

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்த இலக்கிய வழக்கில் பாருசிவேதிதா எப்படியும் விடுதலை ஆகிவிடுவார் என்கிற நம்பிக்கையில் பாருவின் நண்பர் சாபாகத்தி தலைமையில் வாசகர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். தீர்ப்பை கேள்விப்பட்டதும் அவர்கள் சோகமாகி, கையோடு கொண்டுவந்த சரக்கை அங்கேயே தண்ணீர் கலக்காமல் கல்ப்பாக அடித்து வாந்தியெடுக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பாரிஸ் போலிஸார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாந்தியை எல்லாம் கழுவி வாசகர்கள் மீதே ஊற்றி, அவர்கள் மீது சாகஸலீலா புத்தகத்தை வீசியெறிந்து துரத்தினார்கள். ஒன்றரை கிலோ எடையில் கருங்கல் மாதிரி கனமாக இருந்த புத்தகம் மேலே விழுந்ததில் நான்கு பேருக்கு மண்டை உடைந்தது. கை கால் எலும்பு முறிவும் பலருக்கும் ஏற்பட்டது.

சுமோ விளக்கம்

இந்த தீர்ப்பு பற்றி வழக்கு தொடர்ந்த சுயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் கருத்து சொல்லியிருக்கிறார். இந்திய ஞானமரபிலும், வேதங்களிலும் ஜே.சி.ஜே.சி.ஐ. என்றொரு வங்கியே கிடையாது என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இல்லாத வங்கி மூலமாக பாரு சொத்து குவித்து வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவரது குரு பத்யநித்ய பூபதி கனவில் வந்து வலியுறுத்தியதாலேயே தான் வழக்கு தொடரவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் வழக்கின் தீர்ப்பு இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருப்பதால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கட்டுரையை கூகிள் ப்ளஸ்ஸில் ‘ஷேர்’ செய்து, ‘ஆசான் ராக்ஸ்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் தொழிலதிபர் பரங்கசாமி.

கை கொடுத்த சாட்சி

வழக்கில் பாருவுக்கு தண்டனை கிடைக்க ராஸ்கர் பாஜாவின் சாட்சியே பிரதானமாக இருந்தது. கி.பி.2011ஆம் ஆண்டு சென்னை பாமராஜா அரங்கில் நடந்த சக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா மிக ஆடம்பரமாக நடந்தது. லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்துக்கொண்ட அந்த விழாவில் பாருவின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தவர் ராஸ்கர் பாஜா. அந்த பீருக்கு காசு எப்படி வந்தது என்று தோண்டி துருவி விசாரிக்கப்பட்டதிலேயே நடந்த குற்றம் தெளிவாக தெரிந்தது. ராஸ்கர் பாஜா அரசுத்தரப்பு சாட்சியாக அப்ரூவர் ஆகி அளித்த சாட்சியமே வழக்கில் உறுதியாக நின்று, இன்று பாரு உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.

கருத்து மோதல்

பாருவுக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து இருவேறு நேரெதிர் கருத்துகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய எழுத்தாளர் பாநி, “சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது” என்றார். அவருக்கு பதிலடி கொடுத்த கவிஞர் கனுஷ்ய முத்திரன், “பாரதியாருக்கு வளைந்த சட்டம் பாருவுக்கு வளையாதது ஏன்?” என்று கிடுக்கிப்பிடி போட்டார். இதே விவாதத்தில் கலந்துக்கொண்ட சிந்தனையாளர் சத்ரி, “வழக்கின் தீர்ப்பு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி பக்கங்களுக்கு பிரெஞ்சில் இருக்கிறது. அதை மேற்கு பதிப்பக மொழிப்பெயர்ப்பாளர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முழுக்க படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்” என்று கருத்து சொல்லியிருக்கிறார். இந்த தீர்ப்பு பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் “மாங்கா காமிக்ஸ் : ஓர் அறிமுகம்!” என்று எழுத்தாளர் ரஸ்.ஏமகிருஷ்ணன் கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் எங்கே தீர்ப்பு பற்றிய கருத்து இருக்கிறது என்று வாசகர்கள் தேடித்தேடி அலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் மிமலாதித்த வாமல்லன் ‘இலக்கிய சிலுக்கு என்னாச்சி வழக்கு?’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று புரியாமல் விளக்கம் கேட்ட வாசகர்களிடம், “எழுதின எனக்கே புரியலை. உனக்கு புரிஞ்சு என்னாகப் போவுது?” என்று ட்விட்டரில் காட்டமாக பதிலளித்தார் வாமல்லன். மாலச்சுவடு இதழும் ‘அறம் மீறும் இலக்கியம்’ என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான மா.வணிகண்டன், “இப்படித்தான் 1979லே பாப்பநாயக்கன் பாளையத்திலே” என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

வலுக்கிறது போராட்டம்

பாருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அநீதியானது என்றுகூறி அவருடைய வாசகர்கள் சீலே, பிரஸீல், அர்ஜெந்தினா, கூபா, இந்தியா, தமிழ்நாடு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை வாசல் ஒன்றில் ச்யோவ்ராம் வேந்தர் எனும் பாரு அபிமானி மொட்டையடிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். டாஸ்மாக்கின் உள்ளே கணிஜி உள்ளிட்ட பாருவின் தீவிரவாத வாசகர்கள் சாகும்வரை குடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி பாட்டிலை ஓபன் செய்திருக்கிறார்கள். இவர்களது வசதிக்காக போராட்டம் நடக்கும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. சச்சைக்காரன், சவகிருஷ்ணா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பதினெட்டு பேர் பார்க்குவேஸ், மார்த்தர், ஷெமிங்வே, சுயமோகன், வலைஞர், மணிமொழி ஆகியோரின் கொடும்பாவியை பாரிஸ் கார்னரில் எரித்து போராட்டம் நடத்தி கைதானார்கள். பாருவின் வழக்கை சீலே நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் எழுத்தாளர் முருக விநாயகன் தலைமையில் “துக்கம் தொண்டையை அடைத்தது” என்று கோஷம்போட்டு பாரிஸ் நீதிபதியை கண்டித்து தொண்டையில் அடித்துக் கொண்டு கதறும் போராட்டம் நடந்தது.

சென்னை மே.மே.நகர் பிஸ்லெரி புக் பேலஸ் வளாகத்தில் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இலக்கியவாதி சமிர்தம் ஆர்யா தலைமையில் கண்டனக்கூட்டம் நடந்தது. இதில் கவிஞர் சுமா பக்தி, நத்மஜா பாராயணன், மஜய விகேந்திரன் உள்ளிட்டோர் காரசாரமாக பாரிஸ் நீதிபதியை பேசினார்கள்.

பாரு விடுதலை ஆகும்வரை புறநாழிகை புத்தக உலகத்தில், பாரு எழுதிய நூல்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று புறநாழிகை வெண். பாசுதேவன் அறிவித்திருக்கிறார். விஷயம் அறிந்த வாடிக்கையாளர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.

கருப்புச்சட்டை வழக்கு

போராட்டக்காரர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் தங்கள் யூனிஃபார்மை பயன்படுத்துவதா என்று திகவினர் கண்டன அறிக்கை விட்டதோடு இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி திகவினரை தவிர வேறு யாரும் கருப்பு உடை அணிய தடைவிதிக்குமாறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு 2027ஆம் ஆண்டு, அக்டோபர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தள்ளி வைத்திருக்கிறது.

கொண்டாட்டம்

ஒரு பக்கம் போராட்டம் என்றால், மறுபக்கம் கொண்டாட்டமும் நடக்கிறது. பாருசிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் அதன் ஆதரவாளர்கள் ஜாக்கி ஜட்டி அணிந்து வருவோர் போவோருக்கெல்லாம் ‘கட்டிங்’ வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். “இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” என்று அவ்வமைப்பின் தீவிர ஆதரவாளரான சுமாசகேஸ்வரன் லாவோ தாசு நம்மிடம் சொன்னார். “மற்றவர் சோகத்தை நாம் கொண்டாடுவது தவறு” என்று அவ்வமைப்பின் அமைப்பாளர் இந்த கொண்டாட்டங்களை கடிந்துக் கொண்டாலும், ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் அவரும் இந்த அவலமான தீர்ப்பை கொண்டாடி வரிசையாக ஸ்டேட்டஸ்கள் போட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : தினபிந்தி)

10 கருத்துகள்:

  1. Kalakkal Yuva. back to form
    rgds-Surya

    பதிலளிநீக்கு
  2. Gaandu Gajendran in full form :)

    பதிலளிநீக்கு
  3. மதிப்பிற்குரிய யுவகிருஷ்ணா,

    உங்களுடைய எழுத்துக்களை தாங்கள் வலைப்பதிவு எழுதிய நாள்முதல் வாசித்து வருபவன்... ஆனால் இந்த கட்டுரையை படித்த உடன் மனம் விட்டு சிரித்தேன். அசலான நகைச்சுவை மங்கிப் போய்விட்ட இந்நாட்களில் இந்த கட்டுரை கூடுதல் முக்கியத்துவம் பெற்றதாக கருதுகிறேன். சமகால எழுத்தாளர்களை உள்ளடக்கி எழுதப்பட்ட இதன் வடிவம், அதனாலலேய தனித்துவம் பெறுகிறது.. மகிழ்ச்சி...

    அரவிந்த் குமார்

    பதிலளிநீக்கு
  4. யுவ ராக்ஸ். எப்பலிருந்து இப்படி?

    தண்டனை கொஞ்சம் ஓவர்...
    யுவர் ஹானர் ப்ளீச் தண்டனையைக் குறையுங்க...

    //அடுத்தடுத்த குற்றவாளிகளான சராத்து, வணேஷ் கொம்பு, பெல்பம் ஆகியோருக்கு தலா நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், ‘சக்ஸைல்’ நாவலை நானூறு முறை வாய்விட்டு வாசிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறைத்தண்டனை கூட ஓக்கே, ஆனால் சக்ஸைல் நாவலை வாசிக்கும் மரணத்தண்டனை மட்டும் வேண்டாம் என்று நீதிபதி முன்பாக குற்றவாளிகள் கதறினார்கள். //

    பதிலளிநீக்கு
  5. How u r surviving as journalist with this mokkai writing style.

    பதிலளிநீக்கு
  6. இந்தக் காமெடி ஒரு பிரமாதமான காமெடி போங்கள். காமெடியே ஒரு காமெடியாவது இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  7. kalakkal...
    btw, congrats for ur new job @ Thinakaran.
    -Sam

    பதிலளிநீக்கு