30 ஜூன், 2010

டிபன் பாக்ஸ் ரொம்ப சின்னது!

நான் டவுசர் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் வந்த படமது. ஊர்முழுக்க ஏதோ ஒரு படத்தைப் பற்றி பேச்சு. எங்கள் ஏரியா இளைஞர்கள் அந்தப் படத்தைப் பார்க்க மவுண்ட்ரோட்டுக்கு தினமும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தவர்கள் பரவசத்தோடு கண்கள் விரிய கண்டவர்களிடம் எல்லாம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு படம் இப்படிப்பட்ட சொல்லவியலா பரவச உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இப்போதும் கூட அப்படமோ, காட்சிகளோ தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் நாற்பதை தாண்டியவர்கள் அதே பரவசத்தோடு விழிகள் விரிய பார்ப்பதை காண்கிறேன். அவ்வியக்குனரின் அடுத்தப் படமும் அதே பரவச அலையை முன்பைவிட அதிக காத்திரத்தோடு ஏற்படுத்தியது. முதல் படம் கன்னிராசி. இரண்டாவது படம் ஆண்பாவம். டீனேஜுக்கு வந்த நேரத்தில் நானும் ஒரு படத்தைப் பார்த்து இதே பரவசத்தை அடைந்தேன், வைகாசி பொறந்தாச்சி. இளைஞன் ஆனபிறகு துள்ளுவதோ இளமை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் திரையில் கிடைத்த பரவசம் ‘களவாணி’. புதுமுக தொழில்நுட்பக்குழு, அவ்வளவாக பிரபலமில்லாத நாயகன் என்று, பெரிய பின்புலமோ, பலத்த எதிர்ப்பார்ப்போ இல்லாமல் அமைதியாக வெளிவந்து மனசை அள்ளித் திருடிச் செல்கிறான் இந்த களவாணி.

கதை ரொம்ப சாதாரணமானதுதான். ஒரு பொறுப்பற்ற வெட்டிப்பயல் ஒரு பெண்ணை காதலிக்கிறான். படத்தின் ஸ்பெஷல், தொய்வில்லாமல் பந்துக்கு பந்து ரன் அடித்துக் கொண்டேயிருக்கும் திரைக்கதைதான். கண்ணை உறுத்தாத இயல்பான ஒளிப்பதிவு. இசை மட்டும் மேன்மை நிலையை எட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி, மிகச்சரியாக துல்லியமாக ‘கோல்’ போட்டிருக்கிறது களவாணி படக்குழு.

“என்னடி உன்னோட டிஃபன் பாக்ஸ் இவ்ளோ சின்னதா இருக்கு?” (நிஜமாகவே கொஞ்சம் சின்னதுதான்)

“மாமா! நீ பாட்டுக்கு பாலிடாலை குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்துக்கிட்டே. அத்தையை வெச்சி நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா?”

சென்சாரின் கண்ணில் மண்ணைத்தூவி வந்திருக்கும் டைரக்ட் மீனிங் வசனங்கள் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட எஃபெக்ட்டை தருகிறது. இளவட்டங்கள் விசிலடித்து விசிலடித்து, வாய் வீங்கிப்போய் கிடக்கிறார்கள்.

ஹீரோ விமலின் இயல்பு. ஹீரோயின் ஓவியாவின் அழகு. மற்ற பாத்திரங்களின் அசலான கிராமத்தனம் என்று இயக்குனருக்கு பலம் சேர்க்க நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். தஞ்சையை ஒட்டிய பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய சிறுநகரங்களிலும், ஒட்டியிருக்கும் கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கும் கலாச்சார அதிர்வுகள் மிக நுணுக்கமாக இயக்குனரால் அவதானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரீட்டாவின் திருவிழா டேன்ஸ் காட்சிகள் அட்டகாசம். கிராமப்படமென்றால் மிகைப்படுத்தப்பட்ட கிராமமொழியினை பாத்திரங்கள் பேசுவது தமிழ்ப்படங்களின் சாபக்கேடு. இப்படம் அதற்கு விதிவிலக்கு.

படத்தின் கதையை ஒட்டியே வரும் காமெடி டிராக் விலாநோக சிரிக்க வைக்கிறது. சமீபத்தில் இதுபோல வயிறுகுலுங்க சிரித்து நிரம்ப நாளாகிறது. அபூர்வசகோதரர்கள், ஜனகராஜூக்கு எப்படி ஒரு உயரத்தைக் கொடுத்ததோ, அதைப்போல கஞ்சாகருப்புவுக்கு சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு கிடைத்திருக்கும் இன்னொரு மாஸ்டர்பீஸ் களவாணி.

படைப்பு அடிப்படையில் எல்லாவகையிலும் வென்றிருக்கும் இப்படம், வசூல்ரீதியாகவும் வெல்லுவது இன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு மிகவும் முக்கியமானது. பட்ஜெட் காரணமாக போதுமான விளம்பரம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் சிறுபடமிது. படம் பார்த்தவர்கள் வாய்மொழியாக பரப்புரை செய்துதான் பரவலாக்க வேண்டும். சினிமா ஆர்வலர்களின் கடமையும் கூட இது.

களவாணி - குமுதத்தனமான குறும்புப் படம்!

29 ஜூன், 2010

மே 18

இருதினங்களுக்கு முன்பு தமிழ்தேசிய நண்பரொருவர் என்னுடைய தமிழுணர்வு குறைபாடு குறித்து தொலைபேசியில் காரசாரமாக நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். செம்மொழி மாநாட்டுக்கு நான் சென்றிருந்தது குறித்து அவருக்கு வருத்தம். தொழில்நிமித்தமாக போகவேண்டியிருந்தது என்று நான் சப்பைக்கட்டு கட்டினாலும், புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் ஏசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக, நான் தமிழுணர்வற்றவன் என்று நிரூபிக்க “இந்த மே 18 அன்றைக்கு என்னடா செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றினையும் கேட்டார். கடந்த 2009ல் அதே தினத்தில் ஈழத்தில் கொத்து கொத்தாய் மனிதப் படுகொலை நிகழ்ந்ததையும், வெட்டப்பட்ட முகம் ஒன்று பிரபாகரன் என்று காட்டப்பட்டதையும் நினைவுறுத்தி, அந்நாளை நான் நினைவில் கொண்டிருந்தேனா என்று அறிவது அவரது நோக்கம். ”நினைவில்லை, பிறகு சொல்கிறேன்” என்று அப்போதைக்கு சமாளித்துவிட்டு லைனை ‘கட்’ செய்தேன்.

இந்த ஆண்டு மே 18 அன்று நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன்? யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. பின்னர் டயரியைப் புரட்டிப் பார்த்தபோது நிஜமாகவே கொஞ்சம் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. அன்று வெளியாகியிருந்த புதுப்படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஈவ்னிங் ஷோ பார்த்திருக்கிறேன். இரண்டரை மணி நேரம் வயிறுகுலுங்கச் சிரித்திருக்கிறேன். நண்பரின் பார்வையில் நான் தமிழுணர்வற்றவன் என்று பார்க்கப்பட நிஜமாகவே நியாயமான காரணம் இருக்கிறது என்றுதான் உணர்கிறேன்.

இப்போது என்னுடைய முறை. வேறு சில நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு, “கடந்த மே 18 அன்று என்ன செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழுணர்வு நிறைந்த தமிழர்கள் குறித்த ஒரு சின்ன கணிப்புக்காக. என்ன கொடுமை? பலரும் அதே நாளில் அதே படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். இதில் ஓரிரு ஈழத்தமிழர்களும், புலி ஆதரவாளர்களும் கூட அடக்கம். படம் பார்க்காத ஒரு சிலரும் வேறு ஏதோ கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் மூழ்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எனக்கு இது வரை ஒரே ஒரு ‘ஒரிஜினல் உணர்வாளன்’ கூட கிடைக்கவில்லை. எப்படியாவது ஒரு தமிழுணர்வாளராவது மாட்ட மாட்டாரா? அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். ப்ளீஸ் நீங்களாவது கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன். “கடந்த மே 18 அன்று நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?”

21 ஜூன், 2010

புலிகள் வாழ்த்து - இணையப் புலிகள் நிலை என்ன?

நம் ஐபாடு புகழ் நவீன இணையப் புலிகளின் செம்மொழி மாநாட்டு புறக்கணிப்புக்குப் பின்னான அரசியலை ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டிக் காட்டியிருந்தோம். இம்மாநாடு கருணாநிதியால் நடத்தப்படுவது மட்டுமே அவர்களுக்குப் பிரச்சினை. ஈழத்தமிழர் துயரமெல்லாம் வெறும் சாக்கு என்பதே அப்பதிவில் நாம் அடிநாதமாக சொல்லியிருந்த விஷயம்.

குறிப்பாக டாக்டர் ராமதாஸ் திமுக பக்கமாக சாயும் நிலை கடந்த மாதம் ஏற்பட்டது. நம் இணையப்புலிகளின் செம்மொழி மாநாட்டு புறக்கணிப்பு ஸ்ருதி அப்போதே கொஞ்சம் குறைந்து காணப்பட்டது என்பதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொண்டு இவர்களை இனம் காணவேண்டும்.

அடுத்ததாக மாநாட்டை வரவேற்று எழுதியவர்கள், பேசியவர்கள் அனைவரையும் பீட்ஸா, பர்கர் சாப்பிட்டபடியே ட்விட்டரிலும், பிளாக்கரிலும் தமிழின துரோகிகள் என்றும், பிரியாணி குஞ்சுகள் என்றும் முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தமிழர்களின் அத்தாரிட்டியான புலிகள் அமைப்பே வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கலைஞரும் இந்த அறிக்கையை மகிழ்ச்சியோடு வரவேற்று ‘உண்மை ஒரு நாள் வெளிவரும்’ என்று பஞ்ச் டயலாக் அடித்திருக்கிறார்.

புலிகளின் சம்பந்தப்பட்ட அறிவிக்கை வந்தபிறகு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழுணர்வாளர் ஒருவர், இவ்வமைப்பு கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் புதிய விடுதலைப்புலிகள் அமைப்பாக இருக்கலாம் என்று ஐயம் தெரிவித்தார். மேலும் இது ‘ரா’வின் சதியாகவும் இருக்கக்கூடும் என்று அச்சமும் தெரிவித்தார். எனக்கென்னவோ அவ்வாறு தெரியவில்லை. புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலும், இது புலிகளின் அறிக்கையென்று யூன் 19 செய்திகளில் உறுதி செய்கிறது.

இச்சூழலில் நம் இணையப் புலிகள், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் தமிழினத் துரோகிகளாக அறிவிப்பார்களா அல்லது செம்மொழி மாநாட்டை வரவேற்பார்களா என்று ஏமாந்த தமிழுணர்வு சோணகிரிகள் சங்கத்தின் சார்பில் கேள்வி எழுப்புகிறோம்.

எனவே இணையப்புலிகளும் லெக்பீஸோடு பிரியாணி சாப்பிட கோவைக்கு வருவார்களா அல்லது வழக்கம்போல இணையத்தில் கண்ணறாவியாக கவிதைகள் எழுதுவார்களா என்று தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்.

19 ஜூன், 2010

ராவணன்!

படம் முழுக்க மழை. அல்லது நசநசவென்று ஈரம். படம் பார்த்தவர்களுக்கே சளி பிடிக்கும்போது இரண்டு ஆண்டுகளாக நடித்தவர்களுக்கும், கேமிராமேனுக்கும், இயக்குனருக்கும், யூனிட்டுக்கும் காசநோயே வந்திருந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மணிரத்னம் இனி ஆங்கிலப் படங்களை ஹாலிவுட்டுக்கு போய் இயக்கலாம்.

இப்படிப்பட்ட லொகேஷன்களை எங்கேதான் இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்திருந்தார்களோ. படம் முழுக்க கருப்பு. நிறம் ஒரு குறியீடாக இருக்கலாம். பாறைகளில் விழுந்து, புரண்டு, உருண்டு, ஓடி, குதித்து நடித்த விக்ரமுக்கும், ஐஸ்வர்யாராய்பச்சனுக்குமே ஏராளமான சிராய்ப்புகள் என்றால், கேமிராவை முதுகில் தூக்கிக்கொண்டு படம்பிடித்த ஒளிப்பதிவாளர் என்ன கதி ஆகியிருப்பார்?

பாரதிராஜா உச்சத்தில் இருந்தபோது ஒருமுறை பேட்டி கொடுத்தார். “மணிரத்னத்தைப் பார்த்தா பயமாயிருக்கு. மேக்கிங்லே மிரட்டுறாரு”. அப்போது மணிரத்னம் அக்னிநட்சத்திரம், நாயகன் எடுத்திருந்தார். பாரதிராஜா இராவணனை பார்த்தால் என்ன சொல்வாரோ? இந்திய சினிமா படைப்புத்திறனின் உச்சம் இப்படம். தி ஒன் அண்ட் ஒன்லி மணிரத்னம்.

இயக்கமும், கேமிராவும், நடிகர்களும் இராவணனில் பாராட்டுகளை சுலபமாக கூடை கூடையாக அள்ளிச்செல்வார்கள். உயிரோட்டமுள்ள செட்டுகளை அமைத்த கலை இயக்குனர் பாவம். ஓவர் ஒரிஜினாலிட்டியோடு செட் போட்டுவிட்டதால், அவையெல்லாம் செட்டுதானென்று கூட பார்வையாளனால் உணரமுடியாது.

சினிமா என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு பார்வையாளனை மிரட்டவைக்கும் ஊடகம் என்று நம்பும் நண்பர்கள் இத்தோடு இப்பக்கத்தை மூடிவிட்டு ‘மணிரத்னத்துக்கு ஆஸ்கர் கொடுக்கணும்’ என்று சிந்தித்துவிட்டு, வேறு வேலையை பார்க்கச் செல்லலாம். இல்லை இந்திய சினிமா கதை சொல்லும் ஊடகம் என்று சொல்பவர்கள், மேற்கொண்டு விமர்சனத்தை தொடரலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ஒரு இயக்குனர் இருந்தார். அவர் பெயர் மணிரத்னம். நடுத்தரக் குடும்ப உணர்வுகளை, சிக்கல்களை அழகாக படம்பிடிப்பார். இளையராஜா என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். அவரும், இவரும் இணைந்து தந்த படங்கள் இன்றுவரை சூப்பர்ஹிட்டு. மிகச்சரியாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென ஓரிரவில் அந்த தமிழ் இயக்குனர், இந்திய தேசிய இயக்குனர் ஆகிவிட்டார். அதற்குப் பின்னர் அவர் ’அலைபாயுதே’ என்று ஒரே ஒரு தமிழ்ப்படம் எடுத்ததாக தெரிகிறது. இந்திக்காரத் தோழர்களே! எங்கள் ஊர் மணிரத்னத்தை மும்பையிலோ, டெல்லியிலோ பார்த்தால் கொஞ்சம் நினைவுப்படுத்துங்கள். சென்னை என்று ஒரு ஊரும் இந்தியாவுக்குள் இருக்கிறது.

இராவணனின் பிரச்சினைகள் என்னென்ன?

முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமானால், நேட்டிவிட்டி. படத்தில் காட்டப்படும் பழங்குடியினர் ஒருவேளை சட்டீஸ்கரிலோ, உத்தரகாண்டிலோ, மேற்குவங்காளத்திலோ இருக்கலாம். திருநெல்வேலி என்று காதுகுத்துவது எந்த ஊர் ஞாயம்? அப்போகலிப்டோ படத்தை தமிழில் டப் செய்து டிவிடியில் பார்ப்பதைப் போன்ற ஃபீலிங்.

அடுத்ததாக கதை. போஸ்டரிலோ, டைட்டிலிலோ ‘கதை’ என்ற பதத்தை பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இல்லாத ஒரு சமாச்சாரத்தை யாராவது எழுதினார்கள் என்று வீணாக பொய் சொல்வானேன் என்று மணிரத்னம் நினைத்திருக்கலாம். பத்து தலைகளும் பல்லிளிக்கிறது.

வசனம் : சுஹாசினி மணிரத்னம். அய்யோ. அய்யோ. உப்புசப்பில்லாத ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ’லே’ போட்டுவிட்டால் திருநெல்வேலி பாஷையாம். இயக்குனர் ஹரிக்கு திருநெல்வேலி டவுனில் சிலை வைக்கலாம். திருடா திருடி ஹீரா மாதிரியே ஐஸ்வர்யா ராய்பச்சன் கத்துகிறார். பச்சன் மட்டுமா கத்துகிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ், ப்ரியாமணி என்று படத்தின் எல்லா பாத்திரங்களுமே கத்தி, கத்திதான் பேசுகிறார்கள். வன்முறையான படத்தில் கத்தியை சரியாக காட்டவில்லை என்பதால், ஆளாளுக்கு கத்தி தொலைக்க வேண்டுமா? கத்தி தொலைத்தாலும் பரவாயில்லை. புரியும்படியாகவாவது கத்தியிருக்கலாம். தமிழ்படத்துக்கு தமிழில் சப்டைட்டில் போடவேண்டிய அவலநிலை இராவணனால் ஏற்பட்டிருக்கிறது.

திரைக்கதை. முதல் காட்சியில் ஐஸ்வர்யா கடத்தப்படுகிறார். போலிஸ் தேடுகிறது. இந்தக் கட்டத்தை தாண்டி ஒரு காட்சிக்கூட முதல்பாதியில் இல்லவே இல்லை. இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் ஆறுதல். நீளமான, மெதுவான க்ளைமேக்ஸ். ஈரானியப் படங்கள் பார்ப்பதை தடைசெய்தால்தான் இந்திய திரைக்கதை ஆசிரியர்கள் உருப்படுவார்கள்.

இசை. வசனத்தைதான் கத்திப்பேசி காதுவலி ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால் இசையும் கூடசேர்ந்து ஒத்து ஊதியிருக்கிறது. பாடகர்கள் எல்லாருமே பல டெஸிபல்கள் சாரீரத்தை கூட்டிதான் கத்தித் தீர்த்திருக்கிறார்கள். அருவிச்சத்தம் அபாரமானதுதான். அதையே டி.டி.எஸ்.ஸில் பன்மடங்கு ஒலிகூட்டி படம் முழுக்க கொடுத்துக் கொண்டேயிருந்தால் ரசிகர்கள் பாவமில்லையா?

அட்டகாசமான மேக்கிங். மிக மோசமான உள்ளடக்கம். மணிரத்னம் இனி படமெடுக்காமலேயே இருக்கலாம். நாங்களும் நாயகன், தளபதி, மவுனராகம், அக்னிநட்சத்திரம் புகழ்பாடியே காலத்தை ஓட்டலாம்.

இராவணன் - பத்து மடங்கு தலைவலி!

18 ஜூன், 2010

அரயத்தி மகன் - டி.அருள் எழிலன்

தற்போது குங்குமத்தில் பணிபுரியும் அண்ணன் அருள் எழிலனின் ஆரம்பகால விகடன் கட்டுரைகள் பரவலாக வாசகர்களிடையே பேசப்பட்டவை. பெரும்பாலும் ஹ்யூமன் ஸ்டோரிகள். ஆனாலும் ஒவ்வொரு வார்த்தையும் துப்பாக்கி ரவைகள் மாதிரி படிப்பவனின் நெஞ்சை துளைக்கும். இவர் ஒரு முன்னாள் மாவோயிஸ்ட்டோ என்றுகூட நான் பலமுறை எண்ணியதுண்டு. கதைகளை வாசிப்பதில் சுவாரஸ்யம் குறைந்த காலக்கட்டத்தில் அருள் எழிலன் போன்ற பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் எனது வாசிப்பார்வம் குறையாமல் பார்த்துக் கொண்டன.


அவர் என்னை ஏமாற்றிய கதையையும் சொல்லியே ஆகவேண்டும். சிலரது எழுத்துகளை வாசிக்கும்போது அவர்களுக்கு ஒரு இமேஜை என் நெஞ்சில் ஏற்றி வைத்துக் கொள்வேன். அருள் எழிலனை தாடிவைத்து, உயரமாக, குண்டாக, கண்கள் சிகப்பாக, தலையில் சேகுவேரா தொப்பியோடு, மொத்தத்தில் ஒரு புரட்சியாளராக இமேஜ் செய்து வைத்திருந்தேன்.


முதன்முதலாக ஜி.என்.செட்டி சாலையில் ஒரு டீக்கடை வாசலில் சந்தித்தபோது கடுமையான ஏமாற்றத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். இம்சை அரசனின் தம்பி மாதிரி டொங்கலாக இருந்தார். அதற்கென்ன செய்வது? சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள் ஓங்குதாங்காக மேக்கப்போடு இருக்கிறார்கள். நிஜவாழ்வு ஹீரோக்களும் நம்மைப்போல சாமானியர்கள் என்பதுதான் யதார்த்தம்.


இனி ‘பத்திரிகையாளன் ஆனது எப்படி?’ என்று அண்ணன் எழிலன் அவரது வழக்கமான ’ரொமாண்டிசைஸ்’ பாணியில் பேசுகிறார். அவர் எழுதியிருக்கும் இக்கட்டுரை எழுதவிரும்பும் எவருக்கும் முக்கியமானது என்ற அடிப்படையில் இங்கே பதிந்து வைக்கிறேன்.




ஒரு பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எழுதியும் பேசியுமே தான் பள்ளிக்காலம் கழிந்தது. பள்ளி இறுதிக் கல்வியைக் கூட தாண்டியவனில்லை நான். எட்டாவது படிக்கும் போது இப்படி ஒரு ஜோக் எழுதியிருந்தேன்.

வாத்தியார்- "சுத்தம் சோறு போடும்"

மாணவன் - "அப்போ எதுசார் குழம்பு ஊற்றும்?

என்று ஒரு கடி ஜோக் எழுதியதாக நினைவு........... எட்டாவது வகுப்பிலும் இரண்டு வருடம்..... ஒவ்வொரு வகுப்பையும் இரண்டு இரண்டு வருடமாக நீள அகலமாக உழுதவன் நான், என்பதை மட்டுமே எனது கல்விப் பெருமையின் எல்லையாகச் சொல்லி விட முடியாது. ஏனென்றால் நான் பத்தாவது பாஸாக மூன்று சான்றிதழ் வைத்திருக்கிறேன். அப்படிக் கழிந்த பின்னர்தான் நான் சென்னை வந்தேன். எம்.எல்.ஏ ஹாஸ்டல், கோடம்பாக்கம், ஜோன்ஸ் சாலை, மேற்கு சைதாப்பேட்டை, வண்ணாரப்பாதை என கழிந்தது ஆரம்பகால சென்னை வாழ்வு............நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.


பத்திரிகை, ஊடகம் எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் சந்திரபாபு குறித்து ஒரு ஆவணத்தை தயாரிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். அவரின் உறவினர்கள், பழகியவர்கள், ஏராளமான பழைய நாளிதழ்கள், எனப் பலவற்றையும், பலரையும் பார்த்த போதும் எனக்கு சந்திரபாபுவின் குணம் குறித்த ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் சந்திரபாபுவின் ரத்த உறவுகள் தாம்பரத்தில் இருக்கிறார்கள்.நீண்ட தேடலுக்குப் பின்னர் அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடமிருந்து அபூர்வமான சந்திரபாபுவின் திருமண அழைப்பிதழ் ஒன்று கிடைக்க இன்று வரை அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அப்போது நான் எழுதியதுதான் "பாதியில் முடிந்த பயணம்" சந்திரபாபு பற்றி என் முதல் கட்டுரையான அதுதான் அநேகமாக நான் எழுதிய முதல் அதிகாரபூர்வக் கட்டுரையாக இருக்கும் என நினைக்கிறேன். 

சிறுபத்திரிகைகளில் நாம் எழுதியதை எல்லாம் வெளியிடுவார்களா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என் அண்ணனைப் பார்க்க அவனது அலுவலகம் சென்றேன். (செலவுக்குப் பணம் வாங்கத்தான்) அங்கே ஒருவர் இருந்தார் என்னோட அண்ணன் எனக்கு அவரை அறிமுகப்படுத்த வில்லை. ஆனால் வந்திருந்தவரிடம் சொன்னார் ""கண்ணா இது என் தம்பி........" " ஓ அப்படியா? " என்று தன் அக்மார்க் சிரிப்போடு என்னைப் பற்றி விசாரித்தார் அந்த நபர். அவர்தான் ஆனந்தவிகடனின் கண்ணன் என்பது தெரிந்ததும். என் பாக்கெட்டுலியே இருந்த சந்திரபாவுவை வெளியில் எடுத்து படிக்கக் கொடுத்தேன். என் அண்ணன் எப்போதுமே நான் எழுதுவேன் என்றோ, குறும்படம் இயக்குவேன் என்றோ நினைத்ததும் இல்லை நம்பியதும் இல்லை. ஒவ்வொரு முறையும் நான் எனது சில விருப்பங்களை, ஆசைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம் அவன் என்னை திட்டித்தான் அனுப்பினான். பல நேரங்களில் நான் அவனிடம் என்னை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கியதும் உண்டு. நான் கொடுத்த கட்டுரையைப் படித்த கண்ணன் "ஆபீஸ் வந்து பாருங்க " என்றார்.


நான் 757, அண்ணா சாலை விகடன் அலுவலகம் சென்றேன். பதட்டமாகத்தான் இருந்தது. " நீங்க எழுதியிருந்தது நல்லா இருந்தது பாஸ், எழுதணும்ணு ஆசைப்படுறீங்களா? விகடனுக்காக ஸ்டோரி பண்ணிக் கொடுங்க நல்லா இருந்தா இங்கே உங்களை சேர்த்து விடுகிறேன். என்றார். நான் சில ஸ்டோரிகளை உடனே சொன்னேன். அந்த வகையில் நான் முதன் முதலாகச் சொன்ன ஸ்டோரி ஏதுசாமி? ஏதுசாமி ஒரு டெய்லர். அவர் தன்னுடைய மகளுக்கு மூதேவி, சாத்தான் என்று பெயர் வைத்திருந்தார். ( உண்மையில் அவரது குழந்தைகளுக்கு அவர் அப்படி பெயர் வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை ஏனென்றால் பகுத்தறிவு பேசி அதிகாரம் பெற்றுக் கொண்ட பெருந்தலைகள் எல்லாம் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் வைத்துக் கொள்ளும் போது அவர்களையும் அந்தக் கொள்கையையும் பின் பற்றும் இம்மாதிரி அப்பாவிகள் புரட்சி செய்கிறோம் பேர் வழி என்று இப்படி பெயர் வைக்கிறார்கள். இவர் விருப்பத்துக்கு குழந்தைக்கு இப்படி பெயர் வைக்கிற அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது நாளை அந்தக் குழந்தை வருந்தினால் என்ன செய்வார் என்றெல்லாம் கேள்விகள்.)


பெயர் விஷயத்தில் அவரைப் பிடிக்காவிட்டாலும் எனக்கு ஏதுசாமியை பிடித்துப் போவதற்கான வேறு சில காரணங்கள் இருந்தது. அவர் பழைய துணிகளை, கிழிந்த மட்டுமே தைத்துக் கொடுப்பார். அல்லது கந்தல் துணிகளை தைத்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுப்பார். இங்கே கிழிந்த துணிகள் தைக்கப்படும் என்று போர்ட் வைத்திருப்பார் அதுதான் எனக்குப் பிடித்தது. தவிறவும் ஏதுசாமி ஏழைகளிடம் பணம் வாங்க மாட்டார். கொஞ்சம் வசதியானவர்களிடம் கொஞ்சம் அதிகமாக வாங்குவார் என நினைக்கிறேன்.


இது போக அவரிடம் ஒரு தனி நபர் போராட்ட மரபொன்றும் இருந்தது. இதுதான் என்னோட முதல் ஸ்டோரி.. கருப்பு வெள்ளையில் நான்கு பக்கங்கள் மட்டுமே விகடனில் வந்தது. அதுதான் நான் விகடனில் எழுதிய முதல் கட்டுரை. கட்டுரைக்குக் கீழே முதன் முதலாக டி.அருள் எழிலன். என்று இருந்தது. இந்தப் பெயரும் லட்சக்கணக்கான வாசகர்களிடம் சென்று விட்டது. முதல் கட்டுரைக்கு ஏகப்பட்ட வரவேற்புக் கிடைத்தது. அலுவலகத்திற்குள்ளும் வெளியிலும் யாரிடமும் பேசாமல் புதிதாக சேர்ந்த ஒருவர் எப்படி ஒதுங்கியே இருப்பாரோ அப்படி இருந்த என்னிடம் தனாக வந்து பலரும் பேசினார்கள். சூப்பர் பாஸ்...... ஆனா போதாது தொடர்ந்து எழுதணும்.. என்றார் கண்ணன். 

ஹ்யூமன் ஸ்டோரிகளுக்கு எப்போதுமே ஒரு தனித்த இடம் உண்டு ஊடகத்தில் ஸ்டோரியோடு கூடவே புகைப்படமும் கூடி வந்தால் அதன் அழகே தனி. விகடனில் போட்டோகிராஃபர்களுக்குள் இம்மாதிரி மேட்டர் செய்ய ஆர்வம் இருக்கும். அப்படியான புகைப்படக்காரர்கள் வித்தியாச ஸ்டோரி செய்கிறவர்களோடு வர ப்ரியப்படுவார்கள்... இரண்டாவது பேட்டியாக நான் எடுத்தது அப்போது எனக்குப் ப்ரியமான இயக்குநராக இருந்த மலையாள இயக்குநர் இயக்குநர் சிபி மலயிலை. சிபியின் படங்களைப் பார்த்து நான் துங்காமல் அலைந்த காலங்கள் உண்டு... இன்னமும் தூரே தூரே ஒரு கூடு (Doore Doore Oru Koodu Koottam) கூட்டாம் தனியார்த்தனம், பரதம், சதயம், என தொண்ணூறுகளுக்குப் பிற்பாதி வரை சிபி தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர். அவரை எப்போதேனும் சந்திக்கும் ஆசை இருந்தது.


ஆனால் அவருக்கு சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு வீடு இருக்கும் உண்மை தெரிந்தது. நானும் போட்டோகிராபர் விவேக்கும் போய் சந்தித்தோம் நல்ல பேட்டியாக வந்தது. மூன்றாவது ஸ்டோரி மெலுஞ்சி எனது சொந்த மீனவ கிராமத்தில் மணியடித்து வாழும் மைனாரிட்டியிலும் மைனாரிட்டி அவர்.... எனக்கு அவரைப் பார்க்கும் போதெல்லாம் அமரம் படத்தில் வரும் அநாதை மம்முட்டி ஞாபகம்தான் வரும்........ அந்த உண்ர்வுதான் விகடனில் எட்டு பக்கமாக வெளிவந்தது. இன்று வரை மெலுஞ்சிக்குள் ஒரு நல்ல சினிமா இருக்கிறது.

நான், ராஜுமுருகன், சிவக்குமார் மூன்று பேரும் ஒரே நாளில் விகடனில் இணைந்தோம். ரா. கண்ணன்தான் மூவரையும் இணைத்து விட்டார். அவர்கள் இருவரும் மாத ஊதியத்திற்குச் சேர்ந்தார்கள் நான் ப்ரீலான்ஸ் அல்லது சிறப்பு நிருபராக சேர்த்துக் கொள்ளப்பட்டேன். எம்.டி சீனிவாசன் கேட்ட போது எனக்கு சினிமாதான் ஆசை என்றேன். ஊடும் பாவுமாக பத்தாண்டுகள் கழிந்து விட்டது. சினிமாவுக்குச் சென்று மீண்டும் பத்திரிகைக்கே திரும்பி விட்டேன். இப்போது நானும் ஒரு மாத ஊதியக்காரனாகி விட்டேன். ராஜுமுருகன் சினிமா இயக்கிக் கொண்டிருக்கிறான். சிவக்குமார் சென்னைக்கு அவ்வப்போது வந்து செல்பவராக இருக்கிறார். துவக்கத்தில் ராஜுமுருகனை விட நான் சிறந்த கட்டுரைகளை எழுதினேன். அதிகமாக எழுதினேன். துவக்கத்தில் ராஜுமுருகன் நிறைய டோஸ் வாங்குவான். பின்னர் ராஜுமுருகன் உச்சக்கட்டத்திற்கு வந்தான். எனக்கும் ராஜுவிற்குமான உறவு....... அப்பழுக்கில்லாத நீண்ட கால உறவென நினைக்கிறேன். எங்கள் இருவருக்கிடையிலான பலங்களையும் பலவீனங்களையும் இருவருமே அறிவோம். என் சென்னை வாழ்வில் கடந்து சென்ற எல்லா நிகவுகளுக்கும் அவனும் ஒரு சாட்சி.


எங்கள் இருவரின் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்த இன்னொருவர் உண்டு அது ரா. கண்ணன். காதல், பசி, காமம், போராட்டம் என மனித வாழ்வின் எல்லா முக்கியமான போராட்டங்களிலும் அவர் எங்களுடன் இருந்திருக்கிறார். சில விஷயங்களை எழுத முடியாது. ஒரு நாள் ஒரு பெண் என்னை அடித்து விட்டார். நானும் அடிக்க கட்டிப்புரண்டு சண்டை...... பிரச்சனை கொஞ்ச நேரத்தில் கண்ணனின் காதுக்குச் சென்று விட்டது. அழைத்தார் வாங்கு வாங்கென்று வாங்கினார். நான் நினைக்கிறேன் என்னால் அந்தப் பெண்ணை மறக்கவே முடியாதென்று.....இனி எனக்கு வாழ்வே இல்லை இனி அவளில்லாமல் வாழவே முடியாதென்று.......லஸ் சர்ச்சில் போய் அப்பாடா என்று படுத்திருந்தேன்..........இப்போ நானில்லாமல் அவளும் அவளில்லாமல் நானும் சந்தோசமாகவே கழிகிறது வாழ்க்கை. நினைத்துப் பார்த்தால் அசிங்கமாகவும், அவமானமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. இதெல்லாம் கடந்துதான் எல்லா மனிதர்களின் வாழ்வும் வருகிறதோ............ இந்த இம்சைகளோடுதான் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்து வைக்க முடிந்தது. இது எனக்கும் பொறுந்தும் ராஜுமுருகனுக்கும் பொறுந்தும் .

ஆனால் அது சிறந்த பயணமாக இருந்தது. கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முறை சி.கே.ஜானு கைது செய்யப்பட்ட போது முத்தங்காவுக்குச் சென்றேன். அவர் ஜாமீனில் விடுதலையானதும் முத்தாங்காவில் அவரை காட்டில் சந்தித்தேன். வயநாட்டில் நபீஸா, ஷெல்லி, என விருப்பமான பல கட்டுரைகளை எழுத முடிந்தது. மூவாற்றுப்புழாவில் பவானியம்மா மறக்கவே முடியாது 52 வயதில் குழந்தை பெற்றுக் கொண்டார். நான் எழுதி விகடன் அட்டையில் அது வந்தது. ஆனால் 15 நாள் கழித்து அந்தக் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து இறந்து போனது. அவர்கள் அப்போது போன் பண்ணி குழந்தையின் போட்டோ கேட்டார்கள்.


நான் கொடுத்த புகைப்படங்களை அஞ்சலிப் படங்களாக வெளியிட்டிருந்தார்கள்........ என்னால் அதை இப்போதுவரை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எழுதும் ஒவ்வொரு ஸ்டோரியும் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து விடுகிறது. ஆனால் அது எழுதுவதிலோ, கட்டுரையைக் கொண்டு வந்து சேர்ப்பதிலோ அல்ல நமது கட்டுரைக்காக வழங்கப்படுகிற இடத்தில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது ஆமாம் அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை அதுதான் உண்மை. காட்சி ஊடகத்தை அன்றாட நிகழ்வுகள் தீர்மானிக்கிறது வார அச்சு ஊடகம் அப்படியல்ல? அது அந்த பத்திரிகையின் சாரதியின் கைகளில்தான் இருக்கிறது.எங்களுக்குச் சாரதியாக இருந்தவர் ரா.கண்ணன். 

அபி என்றொரு குழந்தையைப் பற்றி கேரளாவுக்குப் போய் எடுத்து வந்து விடிய விடிய அமர்ந்து எழுதினேன். ( அபி பற்றி தனியாக எழுதுகிறேன்) இந்த வாரத்தில் என் கட்டுரைதான் சிறப்பாகப் பேசப் படப் போகிறது என நினைத்தேன். ஆனால் நண்பர்களே! கருணாநிதி எல்லா தொலைக்காட்சிகளிலும் அலறிய அந்த இரவில் என் கட்டுரைக்கு இரண்டே இரண்டு பக்கம்தான் ஒதுக்கப்பட்டது. மெலுஞ்சியை விட சிறப்பாக சில பக்கங்கள் அதிகமாக என எதிர்ப்பார்த்த என் ஆசையில் நெருப்பை அள்ளிக் கொட்டியவர் கருணாநிதி என்றாலும் அதுதான் சரி. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கருணாநிதியை தமிழக போலீசார் நடத்திய விதம் பற்றிய பேச்சாகவே இருந்தது. நீதிபதி அசோக்குமார் வீட்டில் அப்போ போலீசிடம் அடி வாங்கி பேஜரை நான் தொலைத்திருந்தாலும் என் கவலை முழுக்க அபியிடமே இருந்தது.

ஊடக உலகம் போட்டி நிறைந்தது. காட்சி ஊடகத்திலாவது சன் தொலைக்காட்சிக்கு போட்டியே இல்லை.ஆனால் அச்சு ஊடகத்தில் போட்டிகள் உண்டு. ஆனந்த விகடனுக்கென்று தீர்மானிக்கப்பட்ட வாசகர்கள் இருந்தாலும் இடைவிடாது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதில்தான் அதன் இருத்தல் இருக்கிறது.ரா.கண்ணன் விகடனுக்கு பொறுப்பாசிரியராக வந்த போது நான் அங்கே நிருபராக இருந்தேன். நானும் ராஜுமுருகனும் விகடனின் வார்ப்புகள். இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் ரா.கண்ணனின் வார்ப்புகள். இப்போ இந்த வார்த்தையை எழுதுவது எளிதாக இருக்கிறது. ஆனால் வார்ப்பில் போட்டு வறுத்தெடுப்பார். அப்போது அது பெருந்துன்பமாக இருக்கும்.ஆனால் அந்தக் கட்டுரை வெளி வந்த பின்னர் அக்கட்டுரைக்குக் கிடைக்கும் வரவேற்பில் வறுத்தெடுத்த காயங்கள் ஆறிப் போகும்.

துவக்கத்தில் எனக்கு எழுதத் தெரியுமே தவிற எழுத்துப் பிழையில்லாமல் எழுதத் தெரியாது. றா, ர, ற்,ழ,ள போன்ற எழுத்துக்கள் உள்ளிட்ட சந்திப்பிழைகள் குறித்த இலக்கண அறிவு சுத்தமாக எனக்கு இல்லை. அந்த வார எடிட்டோயிரியல் கூட்டத்தில் தவறைச் சுட்டிக் காட்டி ஒரு மணி நேரம் இதை எப்படி சரி செய்யலாம் என்று விளக்குவார். விகடனில் மட்டுமல்ல இதே எழுத்துப் பிழைகளைத் தொடர்ந்தால் நீங்கள் வேறு எங்கும் போய் வேலை செய்ய முடியாது. என்பார். எழுத்தில் அவர் முக்கியமாக எனக்குச் சொன்ன இன்னொரு விஷயம். சொற்களைக் கையாள்வது.

ஒரு தீபாவளி ஸ்பெஷலுக்கு நடிகர் விஜய்யின் ஸ்பெஷல் பேட்டி.... விஜய் மோட்டு வளையைப் பார்த்த படி மே வாய் தடவி அமர்ந்திப்பார்..... அய்யோ அவர் பேசிக் கொண்டிருப்பார். அவர் என்ன பேசுகிறார்..... என்பதை எந்த பத்திரிகைக்காரனும் புரிந்து கொள்ளவும் முடியாது.. அதை எழுதி விடவும் முடியாது. அவங்க அப்பா விஜய்க்காக பேசுவார் ஆனால் அது போன்ற கொடுமையான தண்டனை எனக்கு வாய்த்ததில்லை. ஆக விஜய் பேசி எதையுமே நாம் எழுத முடியாது... ஆனால் நான் அலுவலகத்திற்கு வந்து "இருண்ம வெளிகளில் மூழ்கித் திளைத்த நட்சத்திரம்" என்று விஜய் பேட்டியை எழுதத் துவங்குவேன். ( இப்போ நினைச்சா அபத்தமா? இருக்கு) எழுதி முடித்து பெருமையாக கொண்டு போய் கண்ணன் சாரிடம் கொடுத்தால். மூஞ்சிலேயே விட்டெறியாத குறையாக பாய்ந்து குத்திக் குதறுவார் " இருண்ம வெளிகளில் என்று விஜய் உங்கிட்டே பேசினாரா? சொல்லு? என்பார் இல்லண்ணே பின்ன எதுக்குடா இப்படி எழுதினே? அவர் பேசினது என்னவோ அதை எழுது? இன்னும் அரை மணி நேரத்தில் மேட்டர் வேண்டும் என்பார்.


மண்டைகாய்ஞ்சுடும்.... நாமோ ஷங்கரை பேட்டி எடுத்தாலும், ராமநாராயணை பேட்டி எடுத்தாலும் சிபியை பேட்டி எடுத்தாலும் இப்படி மயக்கமான ஒரு மொழி நடையில் எழுதி பேட்டி எடுத்தவர்களுக்கும் அதை எழுதுகிற நமக்கும் பெருமை தேடலாம் என நினைத்துக் கொள்வேன். அவரோ மொழிக்கும் உரையாடல் வழக்கிற்குமிடையிலான துல்லியமான வேறு பாட்டைக் கணக்கிலெடுத்தே பேட்டி எழுதப்பட வேண்டும் என்பார். நானும் விஜய் பேசிய மாதிரிய எழுதிக் கொடுத்தேன். கண்ணன் சார் கொஞ்சம் ரீ ரைட் பண்ணினார். அட்டகாசமாக அது விகடனில் அட்டைப் படமாக வந்தது.


ஆனால் குமுதத்திலும் இதுதான் அட்டை. அங்கே நா.கதிர்வேலன் செய்திருந்தார். நான் விகடனில் செய்திருந்தேன். இப்போ கதிர் விகடனில்தான் இருக்கிறார். பேட்டிக்கு ஏற்பாடு செய்தவன் எனக்குத் தெரியாமல் குமுதத்திற்கும் குமுதத்திற்குத் தெரியாமல் எனக்கும் மேட்டரை விற்று விட்டார். இப்படியான எக்ளூசிவ் ஸ்டோரிகளில் ஏற்படும் சங்கடங்களை எதிர்கொள்ளக் கூட சில துணிச்சலான முடிவுகளை எடுத்தவர் கண்ணன். கட்டுரை என்றால் பிரச்சனை இல்லை. அது எழுதுகிறவர்களின் விருப்பம் சார்ந்தது. ஆக பேசுகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி நடை இருக்கிறது. அதைத்தான் எழுத வேண்டும் என்பார். தவிறவும் கூடுமானவரை பேட்டி கொடுப்பவரை நீங்கள் பேச வைத்து அவர்கள் பேசுவதை மட்டுமே எழுதிப் பழகுங்கள் என்பார். ஏனென்றால் அப்போது விகடனில் இருந்த எல்லோருமே இந்த மயக்கநடைக் கோஷ்டிகள்தான். விரைவில் சலித்த்து விடும் இவ்வகை எழுத்துக்களை பின்னர் நானும் நண்பர்களும் கைவிட்டோம்.

அப்போது மை.பா.நாராயணன், த.செ.ஞானவேல், ராஜுமுருகன், நான், கலீல்ராஜா( முத்த பத்திரிகையாளர்), செல்லப்பிள்ளை திலகவதி- என ஒரு டீம் இருந்தோம். விகடன் பல அசாத்தியங்களை சாத்தியங்களாக்கியது இந்தக் காலத்தில்தான். 300 பக்க விகடன் புக்கெல்லாம் போட்டது அப்போது எங்களுக்குள் போட்டி இருக்கும் சினிமா, அரசியல், சமூகம், எளிய ம்னிதர்களின் கதைகள் என ஆளுக்கொரு ஏரியா? ஆனாலும் நான் அப்போது அரசியல் தலைவர்களை பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தேன். முழுமையான மாற்றங்கள் வேகங்கள் என சூடு பிடித்து ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை என விகடன் சாதனை புரிந்தது. பெரிய பார்ட்டி எல்லாம் கொடுத்தாங்க. ஆனால் அது முழுக்க முழுக்க கண்ணனின் அசாத்தியமான ஊடக அறிவினால் சாத்தியமானது என்பதுதான் உண்மை.


ஒரு நல்ல டீம்......அதை வேலை வாங்குகிற விதம் என ஆளுக்கொரு திசையில் சென்று போட்டி போட்டு மேட்டர்களைக் கொண்டு வந்து ஆரோக்கியமாக மோதி ஒருவர் மற்றவரை மீறிச் சென்ற காலமது. ஆனால் அதுதான் மிகச் சிறந்த காலமாக இருந்தது. எங்களை மேய்த்தது மட்டுமல்ல முகமற்ற பல மனிதர்களை கை தூக்கி விட்டதில் ரா.கண்ணனுக்கு பங்குண்டு. இன்று அவர்கள் மிகப் பெரிய பிரபலங்களாகவும் இருக்கிறார்கள். கனவுகளுக்கும் வாழ்வுக்குமிடையே பெரும் ஊசலாட்டமாய் கழிந்த வாழ்வில் நான் நிற்கிற இடம் மிகப் பெரியது ஆமாம் நண்பர்களே என் கடந்த காலம் குறித்து நீங்கள் அறிவீர்கள் என்றால் இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பத்திரிகை பணி தொடர்பான இந்த சின்ன உயரத்தை உருவாக்கி அந்த ரத்தினக் கம்பளத்தை எனக்கு பரிசளித்தது கண்ணன்தான். அந்தக் கம்பளத்தைத்தான் நான் இன்று வரை போர்த்தியிருக்கிறேன். நிறைவேறாமல் போன கனவுகள் இன்னமும் எனது அறையில் சிதறிக் கிடக்கிறது. இடைவிடாமல் நான் இப்போதும் வாழ்வோடு மோதிக் கொண்டிருக்கிறேன்.

அம்மா இறந்த போது அவருக்கு சில கவலைகள் இருந்தது. எனக்குத் திருமணமானதோ, பொன்னிலா பிறந்ததோ, எதுவுமே அம்மாவுக்குத் தெரியாது. (நீலாவின் நிலையும் அப்படித்தான்) ராஜுமுருகனோடு கடந்த பதினைந்து வருடமாக நெருங்கிப் பழகுகிறேன். நீலா, பொன்னிலா, என சந்தோசமாக கழிகிறது வாழ்க்கை, 

தமிழைத் தவிற வேறு மொழி தெரியாத நான் பிற மொழி பேசுகிறவர்களையும் பேட்டி எடுத்திருக்கிறேன் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன்.காத்திரமாக புதிய நண்பர்கள் எழுதவும் பேசவும் வந்திருக்கிறார்கள். இந்த சமூகத்துடன் தொடர்பாடவும் இடைவிடாது மனிதர்களுடன் தொடபு கொள்வதும் சாத்தியாமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் மாறிக் கொண்டிருக்கிறது. எழுத்து எப்போதும் மாறுவதில்லை. பொன்மலர், ஆதிரை, இளவரசி, என குட்டி தேவதைகள் நண்பர்களுக்குப் பிறந்திருக்கிறார்கள். பெருந்துன்பமாய் ஈழப் போராட்டத்தின் தோல்வி முழுவதுமாக நம்மை சிதைத்துப் போட்டிருக்கிறது. ஆனால் மீண்டெழும் சாத்தியங்களோடு நண்பர்களும் நானும் எழுதுகிறோம். அரசியல் ரீதியாக நான் மாறிக் கொண்டிருக்கிறேன். காயங்களை அதிகமாகச் சுமந்தலைந்தாலும் காயங்கள் சோர்ந்து போக வைத்து விட வில்லை. அம்மா நான் மனிதனாக உருமாற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை உனக்குச் சொல்கிறேன். 

17 ஜூன், 2010

டீலா? நோ டீலா?

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் டிவி நிகழ்ச்சிகள் எதையும் குறிப்பாக பார்ப்பதில்லை. வீட்டுக்கு செல்வது என்பதே இரவு பத்து மணிக்கு மேல்தான் என்பது என்னுடைய சிறுவயது வாடிக்கை. இன்னமும் தொடர்கிறது. விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் டிவிடியில் ஏதாவது மொக்கைப் படங்கள் பார்ப்பதுண்டு. மற்றபடி இஸ்திரி செய்யும்போதோ, முகச்சவரம் செய்யும்போதோ சன் மியூசிக்கையோ, ஆதித்யாவையோ ஓட்டிக் கொண்டிருப்பேன். ஆனாலும் எனக்கு தொழில்நிமித்தமாகவும் தேவைப்படுவதால் தொடர்ச்சியாக டி.வி.க்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுண்டு.

இன்னொன்றையும் முன்னெச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். எனக்கு சன் குழுமத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. சன்னுக்கு சரியான போட்டி ஒன்று அமையாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். கலைஞர் டிவி சன்னுக்கு சரியான போட்டியாக உருவெடுத்த காலத்தில் மகிழ்ச்சியும் அடைந்தவன்.

இன்று காலை நண்பர் கேபிள்சங்கர் எழுதிய பதிவொன்றினை வாசிக்க நேர்ந்தது. இவ்வளவு தகவல் பிழைகளோடு, சொந்த அபிப்ராயத்தை உண்மைபோலவே ஒருவரால் எழுதமுடியுமா என்று பெருத்த ஆச்சரியம் ஏற்பட்டது. இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் டிவி ரேட்டிங் எந்த நிலையில் இருக்கிறது என்றாவது அவர் ஒரு எட்டுப் பார்த்துவிட்டிருக்கலாம். அல்லது விளம்பரத்துறையில் பணியாற்றும் தண்டோரா போன்ற நண்பர்களிடமாவது என்ன ஏதுவென்று விசாரித்து தகவல்களை சரிபார்த்திருக்கலாம். கேபிள்சங்கர் எழுதிய பதிவுதான் காமெடியென்றால், அங்கு போடப்படும் பின்னூட்டங்கள் அதைவிட காமெடியாக இருக்கிறது. இப்படித்தான் தமிழ்ப்பதிவுலகம் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது.

சரி, கேபிள் சங்கர் பதிவின் அபத்தங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டுப் பார்ப்போம்.

//ஆனால் அதே வேளையில் இவர்களது பேக் டோர் விஷயத்தை பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். வழக்கப்படி திடீரென விஜய் டிவி சேனல் செட்டாப்பாக்ஸில் தமிழ் தொகுப்பிலிருந்து காணாமல் போய், ஜீ தமிழுக்கு செய்தது போல தனியாக சம்மந்தமில்லாத ஒரு பொக்கேவுக்கு முன்னால் போடப்பட்டது. மக்களின் பல்ஸ் எனக்கு தெரியும் என்றேனே.. அது இப்படித்தான் ஒரே நாளில் ஏகப்பட்ட போன்கள் மக்கள் ஏன் விஜய் டிவி வரவில்லை என்று.. உடனடியாய் நாங்கள் தேடிப்பார்க்க, தள்ளிபோடப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாய எந்த சேனலி வருகிறது என்று போன் செய்யும் மக்களுக்கு தெரிய படுத்தினோம். இம்மாதிரியான முயற்சியெல்லாம் கல்யாணத்தின் போது சீப்பை ஒளித்து வைப்பதற்கு சமம் என்றாலும் இதையும் விடாது செய்யத்தான் செய்கிறார்கள்.
// - என்கிறார் கேபிள் சங்கர்.

மக்களின் பல்ஸ் தெரிந்தளவுக்கு (?) நமது நண்பருக்கு தொழில்நடப்பு தெரியவில்லை என்று தோன்றுகிறது. இவர் குறிப்பிடும் இச்சம்பவம் நடைபெறுவதற்கு சிலநாட்கள் முன்பு வேறொரு சம்பவமும் நடைபெற்றது. ஸ்டார் குழுமம், ஜாக் குழுமத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருந்தது. அதாவது கேபிள் ஒளிபரப்புக்கு தேவையான ’ஸ்டார் பாக்ஸ்’ என்று பெயரிடப்பட்ட ஒரு இண்ஸ்ட்ரூமெண்டை மிகக்குறைந்த விலைக்கு (அல்லது இலவசமாக) ஜாக் குழுமத்துக்கு வழங்கப்படும். இந்த இண்ஸ்ட்ரூமெண்டில் சன் டிவிக்கு அடுத்ததாக இரண்டாவது சானலாக விஜய் டிவி ப்ரீசெட் செய்யப்பட்டிருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதியையும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதியையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஜாக் மூலமாக இப்படியொரு ‘பொசிஸனிங் விளையாட்டு’ விளையாட விஜய் டிவி முடிவெடுத்திருந்தது எஸ்.சி.வி. நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. மும்பையில் எல்லாம் ஸ்டார் குழுமம் சேனல் வரிசையில் முன்னுரிமை பெற கோடி, கோடியாக செலவழித்து வருகிறது. மாறாக தமிழகத்தில்தான் குறைந்த செலவில் ப்ரைம்சேனல்களில் இடம்பெற்றிருக்கிறது. ஜாக்கோடு, ஸ்டார் விளையாடும் விளையாட்டை எஸ்.சி.வி. ரசிக்கவில்லை. என்னுடைய சேனல்களை உன்னுடைய இன்ஸ்ட்ரூமெண்டில் பின்னுக்கு தள்ளினால், நான் மட்டும் ஏன் என் இடத்தில் உனக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றுதான் பின்னுக்கு தள்ளியது. லட்சக்கணக்கானோர் கேபிள்சங்கருக்கு போன் செய்து ஏன் விஜய் டிவி வரவில்லை என்று கேட்டதற்கான பின்னணி இதுதான். இது முழுக்க முழுக்க தொழில் போட்டி அடிப்படையில் அமைந்ததே அன்றி, ரேட்டிங் பாயிண்ட் குறைந்தது மாதிரியான அச்சத்தினால் அல்ல.

ஓக்கே, அடுத்ததாக ரேட்டிங் பாயிண்டுக்கு வருவோம்.

கேபிள்சங்கருக்கு தமிழ்சேனல்களில் எது எது எந்த எந்த ரேட்டிங்கில் இருக்கிறதென்றே தெரியாது என்று தோன்றுகிறது. சன் டிவியின் சராசரி ரேட்டிங் பாயிண்ட் 1500. கலைஞர் டிவி அடுத்ததாக வரும், இதனுடைய ரேட்டிங் பாயிண்ட் சராசரியாக 200. விஜய் பொதுவாக 3 வது இடத்தில் இருக்கும். கலைஞரை விட பத்து, இருபது பாயிண்டுகள் குறைவாக வரும். கலைஞர் தொடங்கப் பட்டதிலிருந்தே 2வது இடத்தில்தான் இருக்கிறது. ஓரிரு வாரங்கள் விஜய் கலைஞரை நான்கைந்து பாயிண்டுகள் வித்தியாசத்தில் முந்தியதுண்டு. கலைஞர் - விஜய் போட்டியை விடுங்கள். இரண்டாவது இடத்துக்கும், முதலிடத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்று பாருங்கள். கிட்டத்தட்ட 8 மடங்கு வித்தியாசத்தில்தான் சன் முதலிடம் வகிக்கிறது. சன்னுக்கு போட்டி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய யோக்கியதை வேறு எந்த சேனலுக்குமே இல்லை. இத்தனைக்கும் கலைஞர் டிவி சமீபகாலங்களில் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களின் உரிமையை வாங்கி வைத்திருக்கிறது.

ரேட்டிங் பாயிண்டை பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே இரட்டை இலக்க பாயிண்டை பெறும் நிகழ்ச்சிகள் சன் டிவியில் மட்டும்தான் உண்டு. சன் தொலைக்காட்சியின் பிரைம் டைம் மெகா அழுவாச்சி சீரியல்கள் எல்லாம் மிகச்சுலபமாக 20 பாயிண்டுகளை பெறுகிறது. இந்தியாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஐ.பி.எல். ஒளிபரப்பின் ரேட்டிங் பாயிண்டே மூன்றிலிருந்து அதிகபட்சமாக ஆறு தான். 4 பாயிண்டு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டாலே வட இந்திய சானல்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடுவார்கள். இந்த அளவுகோலை வைத்து சன்னின் விஸ்வரூபம் என்னவென்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

சரி. இப்போது கேபிள் சங்கர் மிகப்பிரம்மாண்டமாக கட்டமைக்க நினைக்கும் ஜூனியர் சிங்கர் மக்கள் பல்ஸுக்கு வருவோம். அனேகமாக எனக்குத் தெரிந்து கேபிள் சங்கர் வசிக்கும் இல்லத்துக்கு எதிர்வீடு, பக்கத்து வீடு, பக்கத்துக்கு பக்கத்து வீடு ஆகிய மூன்று வீடுகளை வைத்து அவர் ஒரு ரேட்டிங் பாயிண்ட் தயாரித்து இருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட ரேட்டிங் பாயிண்ட் வேறு கதை சொல்கிறது.

கடந்த 10ஆம் தேதி ஜூனியர் சிங்கர் பெற்ற ரேட்டிங் பாயிண்ட் 4.14. இதுதான் அந்நிகழ்ச்சி பெற்ற அதிகபட்ச் ரேட்டிங் பாயிண்ட். இரண்டு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட டீலா நோ டீலாவின் ரேட்டிங் பாயிண்ட் 8.66. இந்நிகழ்ச்சி சராசரியாக பார்த்தோமானால் 9 பாயிண்டுகளை தொடர்ச்சியாக பெறுகிறது. சன்னின் ஸ்டேண்டர்டுக்கு இது குறைவுதான் என்றாலும், செல்ஃப் எடுக்கவில்லை என்று கேபிள் சங்கரால் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி, அவர் சூப்பர்ஹிட் என்று சொல்லும் நிகழ்ச்சியைவிட இருமடங்கு அதிக பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது என்பதுதான் புள்ளிவிவரம், மக்கள் பல்ஸ், இத்யாதியெல்லாம்.

அடுத்ததாக ஏதோ மார்க்கெட்டிங், விளம்பரமென்றெல்லாம் ஏதேதோ எழுதியிருக்கிறார். இதையெல்லாம் சன் ஆபிஸில் யாராவது படித்தால் வாயால் கூட சிரிக்க மாட்டார்கள். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகபட்ச விளம்பர வருவாய் கிடைப்பது செல்ஃப் எடுக்காத டீலா நோ டீலா நிகழ்ச்சிக்குதான். 10 வினாடிகள் 45,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரும் ஆரவாரத்தை, ஆர்வத்தை எழுப்பியிருப்பதாக கேபிள்சங்கரால் நம்பப்படும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 10 செகண்டுகளை அதிகபட்சமாக 10,000 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது, சில கிளையண்ட்களுக்கு 2,500 ரூபாய்க்கு கூட விஜய் மார்க்கெட்டிங் டீம் விற்றதாக தகவலுண்டு.

பரபரப்பாக எதையாவது எழுதுகிறோம் என்பதைவிட பக்காவாக எழுதுகிறோமா என்பதுதான் பதிவர்களுக்கு முக்கியம்!

15 ஜூன், 2010

கொடநாடு - திம்மிகள் பரப்பும் வதந்தீ!

திராவிட திம்மிகள் பல நூற்றாண்டுகளாக உலகின் ஒரே உத்தம அம்மாவை கொச்சைப்படுத்தியே பேசிவருவதும், எழுதிவருவதையும் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு, உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிய உவமைகளை கொண்டு நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அம்மா எங்கு போனாலும், எதை செய்தாலும் அதை தீவிரவாத கொலைவெறியோடு திம்மிகள் திரிக்கிறார்கள்.

சமீபத்தில் தங்கத்தாரகை விருதுபெற்ற நம் அம்மா காளஹஸ்தி கோயிலுக்கு சென்று, லோக ஷேமத்துக்காக யாகம் செய்தார். அடுத்தவாரமே நடந்தது என்ன? திம்மிகள் ஏதோ சதிவேலை செய்திருக்கிறார்கள். இண்டியன் ஆயில் டேங்கை போல கட்டப்பட்டிருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தை அழிக்க ஆண்டவனாக பார்த்து லைலா புயலை அனுப்பினான். அண்டோமேனியா அரசு அதிகாரிகளின் துணையோடு அந்த புயலை காளஹஸ்திக்கு அனுப்பி கோபுரத்தை தரைமட்டமாக்கியிருக்கிறார் மூத்த திம்மி. அம்மா போய்வந்த ஒரே பாவத்துக்காக அந்த கோயில் தரைமட்டமாக்கப்பட்டது எவ்வகையில் நியாயம்? இதை புண்ணிய பாரதத்தின் ஹிந்து பெருமக்கள் தட்டி கேட்க வேண்டும்.

’காளஹஸ்திக்கு போனால்தானே கோபுரத்தை இடிக்கிறார்கள். நான் கொடநாட்டுக்கு போகிறேன். எதை இடிக்கப் போகிறார்கள். பார்க்கலாம்!’ என்ற புரட்சி மனப்பான்மையோடு புரட்சித் தலைவி இப்போது கொடநாட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே இடிக்க கோபுரம் எதுவும் இல்லாததால் திம்மி அரசு குழம்பிப்போய் கிடக்கிறது. எனவே கொடநாட்டுக்கு அம்மா ஓய்வெடுக்க செல்வதாக பொய்ச்செய்தி பரப்புகிறார்கள்.

இது முழுக்க முழுக்க திம்மிகளின் திருகுவேலை என்பதை அம்மா தெளிவாகவே அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அம்மா கொடநாடு சென்றாலே ஓய்வெடுக்க செல்வதாக பத்திரிகைகள் புழுதி வாரி தூற்றுகின்றன. அவ்வாறு தூற்ற திம்மி அரசாங்கம் பின்னணியில் செயல்படும் என்பதை அம்மா சொல்லாமலேயே நாம் அறிந்துகொள்ள வேண்டும். ”கொடநாடு அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசம். இங்கே இருப்பவர்கள் சதா சர்வகாலமும் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா?” என்று லாஜிக்கான கேள்வியை கேட்டு திம்மிக்களை திக்குமுக்காட செய்திருக்கிறார் நமது புரட்சி அம்மா. அம்மாவின் இந்த அறிக்கையை கண்டு நீலகிரி மாவட்டத்து மக்கள் ஆனந்தக்கூத்து ஆடுகிறார்கள். அம்மா அங்கிருக்கும் ஒவ்வொரு நாளையும் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

மேலும் அந்த அறிக்கையில் அம்மா பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நம் புண்ணிய கட்சியாம் அம்மா திமுகவுக்கு 17.5 லட்சம் தொண்டர்கள்தான் இருந்தார்களாம். அம்மாவின் ஏகோபித்த பணிகளையடுத்து இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் இப்போது இருக்கிறார்களாம். தமிழ்நாட்டின் ஆறரை கோடி பேரில் ஒன்றரை கோடி பேர் சார்ந்திருக்கும் ஒரே கழகம் நமது கழகம்தான். எனவே இதற்காக மூத்த திம்மிக்கு அடிக்கடி நடத்தப்படும் பாராட்டுவிழாவை போல பிரம்மாண்டமான பாராட்டுவிழா ஒன்றினை கொடநாட்டில் கோலாகலமாக நடத்திட வைகோ, நெடுமாறன் போன்றோர் முன்வந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

“மக்கள் பணி ஆற்றிடத்தான் கொடநாட்டுக்கு வந்திருக்கிறேன்” என்று அம்மா அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ‘ஈழத்துக்கு ராணுவம் அனுப்புவேன்’ என்று ஈழத்தாய் சொல்லியிருந்தார். ஆனால் அண்டோமேனியா அரசாங்கம் ஏற்கனவே அங்கே இரகசியமாக ராணுவத்தை அனுப்பியிருந்தது அம்மாவுக்கு தெரியாது. அந்த ராணுவத்தால்தான் தமிழர்களுக்கு தொல்லை என்பதை அம்மாவுக்கு யாரோ இப்போது ரொம்பவும் தாமதமாக தெரிவித்திருக்கிறார்கள். எனவேதான் அதை திரும்பப் பெறுவது தொடர்பான ஆலோசனைகளை நடத்த புரட்சித்தாய் கொடநாடு சென்றிருப்பார் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

14 ஜூன், 2010

வெட்டுப்புலி!


இந்நாவல் மாதிரியாக என்னை அலைக்கழித்த, சுவாரஸ்யப்படுத்திய, சோகப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய, கடுப்பூட்டிய, களிக்கவைத்த எழுத்தை இதுவரை நான் வாசித்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம். மொத்தத்தில் பன்முகத்தன்மையோடு கூடிய உணர்வுகளால் படுத்தி எடுத்து விட்டது. என்னோடு சேர்த்து என் அப்பா, பெரியப்பா, மாமா, அண்ணாவென்று பரம்பரையே கண்ணாடி முன்நின்று தனக்குத்தானே கதை சொல்லிக் கொண்டதை போன்ற உணர்வினைத் தந்தது. இந்நாவலின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் என் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமாக இன்னமும் உயிர்வாழ்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
So called திராவிடப் பாரம்பரிய குடும்பங்களின் வயது மிகச்சரியாக முக்கால் நூற்றாண்டு. திராவிட அரசியல் மற்றும் தமிழ் சினிமாவின் வயதும்கூட இதேதான். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இருக்கும் நம்மை, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளுக்கும், நாற்பதுகளுக்கும் அனாயசமாக ஆட்டோவின் பின்சீட்டில் நம்மை உட்காரவைத்து சவாரி செய்கிறார் தமிழ்மகன். காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால் கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது.
சிறுத்தையை வெட்டிய தாத்தாவின் கதையை தேடிச்செல்வது என்பது நொண்டிச்சாக்கு. முக்கால் நூற்றாண்டு வரலாற்றை முன்னூற்றி ஐம்பது பக்க கேப்ஸ்யூலாக தருவதுதான் நாவலின் முக்கிய நோக்கம். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அழகிரி – மொத்தமே இவ்வளவுதான். வேண்டுமானால் இடையிடையே ராஜாஜி, ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்று பெயர்களை போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் இப்போது 75 ஆண்டுக்கால வரலாறு ரெடி. வெட்டுப்புலி செய்திருப்பது இதைத்தான். ஆந்திராவை ஒட்டிய தமிழகத்தின் வடமாவட்ட அரசியல்போக்கு இவ்வளவு நுணுக்கமாக ஒரு புனைவில் பதிவு செய்யப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.
முப்பதில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டு நிகழ்வுகளையும் பாத்திரங்களின் போக்கில் கொண்டுசெல்கிறார். முப்பதுகள் மிக நீண்டது. நாற்பதுகள் நீண்டது. ஐம்பதுகள் இயல்பான நீளம். அறுபதுகள் கொஞ்சம் குறைவு. எழுபதுகள் குறைவு. எண்பதுகள் வேகம். தொண்ணூறுகள் வேகமோ வேகம். புத்தாயிரம் மின்னல் வேகம். நாவல் இந்த உத்தியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்கள் இயல்பாகவே இப்படித்தான் இயங்கியிருக்கிறது என்பதை குறியீடாக உணர்த்துகிறார். நாம்கூட சிறுவயதில் ஓராண்டு கடந்த வேகத்தையும், இப்போதைய அதிவேகத்தையும் உணரும்போது இந்த உத்தியின் லாவகத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
தசரத ரெட்டியில் தொடங்கி லட்சுமண ரெட்டி, நடராஜன், தமிழ்செல்வன் என்றொரு குடும்ப பாரம்பரியம். ஆறுமுக முதலி, அவரது மகன் சிவகுரு, சகோதரர் கணேசன், கணேசனின் மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இன்னொரு குடும்பம். இரண்டு குடும்பங்களின் பார்வையில் விரிகிறது திராவிட இயக்க வரலாறு. பெரியாரின் சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்கள் பலவற்றையும், அவற்றை தவறாக உள்வாங்கிக் கொண்டு நாசமாகப் போன சிலரையும் எந்த சமரசமுமின்றி நடுநிலையாக பதிவு செய்கிறது வெட்டுப்புலி.
லட்சுமண ரெட்டி அனுபவப்பூர்வமான நிகழ்வுகளால் திராவிட இயக்கத்தின் சார்புள்ளவராக மாறுகிறார். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு சமரசங்களுக்கும் உடன்பட்டு வாழ்வதில் அவருக்கு பெரியதாக பிரச்சினை எதுவுமில்லை. மாறாக கணேசன், தியாகராசன், நடராஜன் போன்றோர் மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக சித்தாந்தங்களை குடும்பங்களிலும் நிறுவமுயன்று தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்கிறார்கள்.
இன்றும் கூட திராவிட இயக்கத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒருவன் அவ்வளவு எளிதாக சாதிமறுப்புத் திருமணம் செய்துவிட முடியாது. அவனுக்கு மனைவியாக வரக்கூடியவள் வெள்ளிக்கிழமைகளில் சிகப்புப்புடவை அணிந்துகொண்டு அம்மன் கோயிலுக்கு போவாள். விரதம் இருப்பாள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு இருக்கும். இதெல்லாம் அவனுடைய வாழ்வியல் சிக்கல்கள். சித்தாந்தங்களும், யதார்த்தமும் இருவேறு முனைகளில் நிற்கும் கந்தாயங்கள். நாம் விரும்புகிறோமே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு புள்ளியில் சந்தித்துவிடாது. இரண்டுக்கும் இடையே இயந்திரமாக மனவுளைச்சலோடு வாழ்ந்து தீர்த்துத்தான் தொலைக்க வேண்டும். இதுதான் இயல்பானது. இல்லை சித்தாந்தங்கள் காட்டிய வழியில்தான் வாழ்வேன். எச்சூழலிலும் கைவிடமாட்டேன் என்பவர்கள், முதலில் குடும்பம் என்ற ஒருமுறையிலிருந்து வெளிவந்து, சமூகத்தை புறந்தள்ளி தனிமனிதனாக வாழ திராணி உள்ளவனாக இருக்க வேண்டும்.
வெட்டுப்புலி போதிப்பது இதைத்தான். தியாகராசனின் மனைவி ஹேமலதா தாலி அணிந்துக் கொள்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறாள். எம்.ஜி.ஆர் படம் பார்க்கிறாள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறாள். இதெல்லாம் ஒரு பிராசஸாக / தியாகராசனுக்கு எதிர்வினையாக அமையும் சூழல். இடைப்பட்ட காலத்தில் இயந்திரத்தன வறட்டு சித்தாந்த உணர்வால் அவனுக்கு வேலை போகிறது. குடிகாரனாகிறான். குடும்பம் பிளவுபடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்வின் எல்லைக்கே இருவரும் ஓடி களைப்படைந்து மீண்டும் இணைகிறார்கள். இப்போது தியாகராசனுக்கு அரசியல் முக்கியமல்ல. கொள்கைகள் முக்கியமல்ல. புதுவை அரவிந்தர் ஆசிரம அன்னையின் தீவிர பக்தனாகிறான். வேலைக்கு ஒழுங்காக போகிறான். வாழ்வு அவன் போக்குக்கு வருகிறது. தியாகராசனது வாழ்க்கை ஒரு சோறு பதம்.
தமிழகத்தில் சினிமாவின் ஆளுமை குறித்து விஸ்தாரமான அலசல் கிடைக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்க திட்டமிட்டு சென்னைக்கு வந்து ஸ்டுடியோக்களை நோட்டமிடுகிறார். பிற்பாடு ஒரு டெண்டு கொட்டாய் கட்டியதோடு திருப்தியடைந்து விடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா மோகத்தில் சொத்தினை அழித்து, பிச்சைக்காரனாகி மடிகிறான்.
பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை குறித்த காரசார விவாதம் ஆங்காங்கே முன்வைக்கப் படுகிறது. நடராஜனுக்கும், அவன் காதலிக்க விரும்பும் பார்ப்பனப் பெண் ப்ரியாவுக்கும் இடையில் கன்னிமாரா வாசலில் நடைபெறும் விவாதம் முக்கியமானது. பார்ப்பனர்களுக்கும் வர்க்கப்பேதம் உண்டு என்பதை ப்ரியா அழுத்தமாக முன்வைக்கிறாள். முதலாளி வர்க்க பார்ப்பனன், ஒட்டுமொத்த சமூகத்தையும் காலில் போட்டு நசுக்குகிறான் என்று நடராஜன் எதிர்வாதம் வைக்கிறான்.
வர்க்க அடிப்படையில் பின் தங்கியிருக்கும் பார்ப்பனர்களுக்கான நியாயம் ஒன்றும் இருக்கத்தானே செய்யும்? ‘சோபோன்ற பிரபல பார்ப்பனர்கள் இன்றைய நிலையில் அதை பேசுவதில்லை என்றாலும், எஸ்.வி.சேகர் மாதிரியான ஆட்கள் ‘பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடுஎன்று பேசுகிறார்கள். மிகச்சிறுபான்மை வாதமான அது பெரியளவில் பேசப்படாததற்கு, வர்க்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களே காரணமாக இருக்கக்கூடும்.
பார்ப்பன மேலாதிக்க விவாதங்களுக்கு இன்றுவரை திட்டவட்டமான விடை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாவலின் கடைசி அத்தியாயங்களில் நியூயார்க்வாழ் பார்ப்பனரான பிரபாஸின் அப்பா சொல்கிறார் “சட்டசபை எங்க கையில இல்ல, நீதித்துறை எங்க கையில இல்ல, நிர்வாகமும் எங்க கையில இல்ல.. பாப்பான் ஒக்காந்திருக்கிருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையில.. ராஜாஜி இல்ல, வக்கீல் வரதாச்சாரி இல்ல, கலெக்டர் காமேஷ்வரன் இல்ல.. ஆமாவா இல்லையா?
எங்களைத்தான் நாட்டைவுட்டே வெரட்டி அடிச்சிட்டாங்களே இந்த கோட்டா, அந்த கோட்டா, ரிஸர்வேஷன்னு.. செரி அதவுடு.. ஷேம்மாத்தான் இருக்கோம். இல்லாட்டி போனா அங்கே கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு இருக்கணும்..
வைதீக பார்ப்பனராகிய அவரது மகன் சொல்கிறான். “ஐ லைக் பெரியார் யூ நோ.. புரோகிரஸிவ் மேன். என்ன கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரு.. அவர் இறந்து இத்தனை வருஷம் ஆகியும் அவரை நம்மால பீட் பண்ணமுடியலையே? எங்களைத் திட்டுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு.. இப்ப இருந்திருந்தாருனா.. எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு.. உங்களைத்தான் திட்டியிருப்பாரு.. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிறாங்க.. என் ஜாதிதான் பெருசு.. உன் ஜாதிதான் பெருசுன்னு.
முன்பாகவே ஒரு கதாபாத்திரம் சுட்டிக் காட்டுகிறது. பெரியார் சொன்ன பெண்களுக்கான சீர்த்திருத்தத்தை முதலில் ஏற்றுக் கொண்டது பார்ப்பனர்கள்தான். தமிழக சமூக சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் தான் முதன்முதலாக பணியாற்ற படிதாண்டு வருகிறார்கள். அக்காலக் கட்டத்தில் பெரியாரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது குறித்தே தயக்கத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரைவிட எப்போதும் பத்து/இருபது ஆண்டுகள் எல்லாவற்றிலும் முன்பாகதானிருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு.
தமிழ்மகனின் நடை மிக முக்கியமானது. அந்தந்த காலக்கட்டத்தை கண்முண் கொண்டுவந்து நிறுத்துவதில் அவரது உழைப்பு அலாதியானது. பீரியட் நாவல் என்பதுகுறித்த வறட்சித்தன்மை ஏதுமில்லாத மசாலா விவரிப்பு. புனைவு என்றாலும் நடந்த சம்பவங்கள் நறுக்குத் தெறித்தாற்போல ஆங்காங்கே சுவைக்காக தூவப்பட்டிருக்கிறது.
அண்ணாசாலை கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர் மரணமடைந்த அன்று ஒரு இளைஞனால் கடப்பாரை கொண்டு இடிக்கப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அது படச்செய்தியாக வந்திருந்ததாக நினைவு. கலைஞர் அந்தப் படத்தை எடுத்து முரசொலியில் போட்டு படக்குறிப்பு எழுதியிருந்தார். ஏவியோர் எள்ளி நகையாட அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்தினான். வாழ்க.. வாழ்க! இச்சம்பவம் நாவலின் போக்கிலே கொண்டுவரப் படுகையில் என் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை.
1991 ராஜீவ்காந்தி கொலை, 1998 திமுக – பாஜக உறவு, 2001 கலைஞர் கைது போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் விரிவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது எனக்கு நாவலில் படும் சிறு குறை. ஏனெனில் மேற்கண்ட சம்பவங்கள் என் குடும்பத்தில் ஏற்படுத்திய பாதிப்பை நேரிடையாக கண்டிருக்கிறேன். திமுக – பாஜக உறவு மலர்ந்தபோது என்னுடைய பெரியப்பாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. கலைஞர் கைதின்போது சன் டிவியில் கண்களில் நீர்கசிய பராசக்தி பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல்நலிவுக்கு ஆளானார். பிழைப்புக்காக சினிமா பத்திரிகையாளராகி விட்ட நடேசனின் மகன் ரவி கதாபாத்திரம் என்னை எனக்கே நினைவுபடுத்துகிறது.
கலைஞருக்கு கலைஞர் பட்டம் கொடுத்த எலெக்ட்ரீஷியன் பாஸ்கர், முரசொலி அலுவகத்தை கண்டு ஆச்சரியப்படுகிறார். “இது கருணாநிதிக்குச் சொந்தக் கட்டடமா?
பதினைந்து ஆண்டுக்காலமாக கிட்டத்த கோமா நிலையிலிருந்த நடராஜன் வெட்டுப்பட்ட முகமொன்றை டிவி சானலில் கண்டு, ஞாபக வெடிப்புகளில் மீள்கிறான். கால்களில் நடுக்கத்தோடு, கண்களில் நீர்வழிந்து கட்டிலில் விழுகிறான். அழகிரி மத்திய மந்திரி ஆகிறார். வைகோ பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்என்ற ஆதங்கத்தோடு நாவல் முடிகிறது.
வெட்டுப்புலி – சமகால தமிழ் சமூகத்தின் கண்ணாடி!



நூல் : வெட்டுப்புலி

ஆசிரியர் : தமிழ்மகன்

விலை : ரூ.220/-

பக்கங்கள் : 376

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018. போன் : 24993448
மின்னஞ்சல் uyirmmai@gmail.com

இணையத்தில் நூலினை வாங்க : http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262

11 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?

முதலில் தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து?

‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக்கோட்பாடு.

இவ்விதிகள் அனைத்தும் பொருந்தி வருவதாலேயே தமிழ் செம்மொழி எனும் தகுதிநிலையை அடைகிறது.

திராவிட மொழி குடும்பத்தில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 22. இதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை மட்டுமே இலக்கியத் திறன் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி உள்ளிட்ட மொழிகள் இலக்கியத்திறனற்று பேச்சு பயன்பாட்டில் இருக்கும் இதர மொழிகளாகும்.

இம்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை ஏற்கனவே இத்தகுதியைப் பெற்றவை. இன்று வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழுக்கு போட்டியாக கருதப்படும் உயர்ந்த மொழிகளான பிரெஞ்சு (600 ஆண்டுகள்), மராத்தி (800 ஆண்டுகள்), வங்காள மொழி (1000 ஆண்டுகள்) ஆகியவற்றை ஒப்பிடும்போது, இவற்றைவிட 2000 ஆண்டுகள் கூடுதல் தொன்மை கொண்டதாக தமிழ் விளங்குகிறது.

தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக்காட்ட நம் வசமிருப்பது சங்க இலக்கியங்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இவ்விலக்கியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன.

ஆனால் சங்க இலக்கியங்கள் எவை எவை என்ற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்கிறதா என்பது ஐயமே. ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட ஆகியவையே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவை மட்டும்தான் சங்க இலக்கியங்கள் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது. சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவைகளில் இவை மட்டும்தான் நம்மிடம் இன்று எஞ்சி இருக்கிறது. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் :

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்.

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.

பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இலக்கியங்கள் இந்தளவுக்கு வேறேதேனும் மொழியில் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி பல்லாண்டுகளாக பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஓர் இயக்கமாகவே தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்கள். பரிதிமாற்கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை கலைஞரால் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ‘செம்மொழி’ என்றொரு தனி சிறப்புப் பிரிவை தோற்றுவித்து தமிழை செம்மொழி என்று அறிவித்தது.

இதையடுத்து விருதுகள், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழ்த் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழிலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள் மற்றும் நாணங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.

2007 ஆகஸ்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இதற்காக ரூ.76.32 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறது?

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவை தொடர்புடைய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள் ஆகியவற்றை திரட்டுதல் ஆகிய பெரிய பணிகள் முழுமூச்சோடு நடந்துவருகிறது. தொல்காப்பியம், இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்து, நூல்கள் வெளியிடப்பட்டு விடும்.

மணிப்பூரி, நேபாளி ஆகிய இருமொழிகளிலும் திருக்குறள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நற்றிணை, முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது ஆகியவற்றின் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முடிக்கப் பட்டிருக்கிறது.

பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள், நாணயங்கள் தொடர்பான 18 காட்சிப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் தொகுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகராதிகளில் இதுவரை இடம்பெறாத எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் (அளவைகள், ஆடு மாடுகள், நெல் வகைகள், மீன்பிடிப்புத் தொழில், நெசவுத்தொழில், மண்பாண்ட்த் தொழில், வேளாண்மை தொடர்பானவை) தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட பதினோராயிரம் நூல்களும், பல்வேறு ஓலைச்சுவடிகளின் மின்பதிப்புடன் கூடிய குறுந்தகடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களின் வசதிக்காக நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஐம்பது கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு பல்துறை சார்ந்த அறிஞர்களின் சுமார் 1500 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுகளும் 37 வட்டெழுத்து கல்வெட்டுகளும் HD Video & High Resolution Still Image முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் உதவியோடு பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் எனும் ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு அரிய சங்க காலத் தொல்லியல் சான்றுகள் (காசுகள், சூது பவள மணிகள், பளிங்கு மணிகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள், மண் பாண்டங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை) எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி செம்மொழி விருதுகள், ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதியுதவி என்று ஏராளமான விஷயங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்று செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் சிறுபான்மை கும்பலுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

இம்மாநாடு செம்மொழி தகுதி கிடைத்த மறுவருடமே நியாயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நடத்தப்படுவது என்பதே மிகவும் தாமதமானது. 1995ல் தஞ்சையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகான சர்வதேச மாநாடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படவேயில்லை. உலகத் தமிழ் ஆய்வுக் கழகமும் இதற்கான முன்னெடுப்பு எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.

கலைஞர் இம்மாநாட்டை அறிவித்தபோது, அது உலகத் தமிழ் ஆய்வுக் கழகம் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்றொரு சர்ச்சை எழுந்தது. முன்னதாக நடத்தப்பட்ட எட்டாம் உலகத் தமிழ் மாநாடு கூட தமிழக அரசால் – அதாவது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் - அறிவிக்கப்பட்டது என்பதை இங்கே நினைவுகூற வேண்டும். இம்மாநாட்டை உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா எதிர்ப்பதாக பரப்பப்படும் தகவலும் உண்மையல்ல. அவர் 2011ல் நடத்தவேண்டும் என்றே கேட்டுக் கொண்டார். இந்நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கும் 9 பேரில் 6 பேர் இம்மாநாட்டுக்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமானது.

2011ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அந்நேரத்தில் நடத்தப்படுவது உசிதமாக இருக்காது என்ற காரணத்தாலேயே 2010, சனவரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு ஜூன் மாதம் ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அனேகமாக இந்த தலைப்பில் நடத்தப்படும் ஒரே மாநாடாக இதுதானிருக்கும் என்று தெரிகிறது. அடுத்து நடத்தப்பட்டால் அது 9வது உலகத் தமிழ் மாநாடாக இருக்கும். எனவே இப்போது நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. ‘எங்கள் மொழியும் செம்மொழிதான்!’ என்று அழகுத்தமிழ் அரசாட்சி உலகுக்கு உரத்து தெரிவிக்கப் போகும் மாநாடு இது.

சங்க காலத்திலேயே உலகோடு பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாக விளங்கிய பகுதி கொங்குப் பகுதி என்பதால், அது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

நாளைய வரலாறு தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்ததையும், அதற்காக ஒரு மாநாடு பிரம்மாண்டமாக கோவையில் நடந்ததையும்தான் பதிவு செய்யப் போகிறதே தவிர, சில்லறை எதிர்ப்புகளை அல்ல. வரலாற்றில் இடம்பெற போகும் மாநாட்டை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இதனாலேயே இருக்கிறது.

அண்மைக்கால தொல்லியல், வரலாறு, மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளையொட்டி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தமிழிலக்கிய பண்பாடு தொடர்பான புதிய ஆய்வாளர்களை இனம் கண்டு ஒருங்கிணைப்பதற்கும் இம்மாநாடு அவசியமாகிறது. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்திருக்கும் கணினி தொழில்நுட்பம், அதில் தமிழ் இடம்பெற வேண்டியதின் அவசியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டவும் தமிழ் கணினி தொடர்பான அரங்கு தனியாக நடைபெறுகிறது. தமிழைப் பொறுத்தவரை முக்கியமாக கருதப்படும் அறிஞர்கள் 95 சதவிகிதம் பேர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க இசைவு தந்திருக்கிறார்கள்.

இம்மாநாட்டை எதிர்க்கும் ஓரிருவரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால் அரசியல் மட்டுமே காரணமாகிறது. இது கலைஞரால் நடத்தப்படும் மாநாடு என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எதிர்க்கிறார்கள். இல்லையென்று அவர்கள் மறுத்தாலும் அடிநாதமான காரணம் இது மட்டுமே. கடந்த காலங்களில் இவர்கள் இணையங்களில் செய்துவரும் பரப்புரைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருவோர் இதை உணரலாம்.

“கடந்த ஆண்டு ஈழத்தில் பல்லாயிரம் பேர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ள துயரச்சூழலில் இந்த கொண்டாட்டம் தேவையா?” என்பதைப் போன்ற செண்டிமெண்டலான கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை முன்வைப்பவர்கள் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக தமிழ்விழா கொண்டாடுவார்களாம். இவர்கள் மொழியிலேயே சொன்னால் இழவு வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடுவார்களாம்.

அதுவும் எப்படி?

பிரியாமணி, லட்சுமிராய் போன்ற தமிழறிஞர்களை வைத்து எங்கள் விழாவுக்கு வாருங்கள் என்று இணையம் முழுக்க வீடியோ ஏற்றி பரப்புரை செய்வார்களாம். செம்மொழி மாநாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா என்று கிண்டல் அடிப்பவர்கள் தங்கள் விழாவுக்கு ஹாரிஸ் ஜெயராஜையும், சாதனாசார்க்கத்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்களாம். விக்ரம், திரிஷாவென்று இன்னும் கூடுதல் கவர்ச்சியும் உண்டு.

அதாவது பொருளாதார மேன்மையை எட்டிவிட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஈழப்படுகொலைத் துயரத்தை மறக்க(?) சினிமா நட்சத்திரங்களோடு கொண்டாட்டம் போடலாமாம். போராடி பெற்ற செம்மொழித் தகுதியை கொண்டாட நினைக்கும் தமிழகத்தில் இருக்கும் சாமானியத் தமிழன் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமாம்.

நல்லா இருக்கய்யா இவங்க நாயகம்!

புறக்கணிக்கப்பட வேண்டியது மாநாடல்ல. தமிழ் மீது பற்று கொண்டவர்களாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டு, அரசியல் காழ்ப்புணர்வோடு போலியாக செயல்படும் இதுபோன்ற கபடவேடதாரிகள்தாம்!

10 ஜூன், 2010

தமிழில் குழந்தைகளுக்கான சினிமா?

கடந்த பத்தாண்டுகளில் தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்று நீங்கள் நினைக்கும் படங்களை நினைவுபடுத்தி விரல்விட்டு எண்ணிக் கொண்டே வாருங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆர்ர்றூஊ, ஏழ்... முடியலை இல்லையா? விடுங்கள். இதே காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான ஆங்கிலப்படங்கள் என்னென்ன என்று நீங்கள் நினைவுப்படுத்தி எண்ண ஆரம்பித்தால் உங்கள் தெருவிலிருக்கும் மொத்தப்பேரின் கைவிரல்களும் போதாது.
இப்போது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் வெளிவந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் வெளியான படங்களின் எண்ணிக்கை வெறும் நூறுகளில்தான் இருக்கிறது.
சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இந்த நிலைமை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு ஒரு சுற்று, குளிர் விடுமுறைக்கு மற்றொரு சுற்று என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
குழந்தைகளுக்கான படம் எது என்பதை உணர்வதிலேயே நமக்கு கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. திரை ஆய்வாளரான விஸ்வாமித்ரன் இதை எளிமையாக வரையறுக்கிறார். “ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது.
ஹாலிவுட்டில் இந்த பேருண்மையை படைப்பாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக கடந்த ஆண்டு வெளியான அப் (Up) திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் குழந்தைகளை விட பெரியவர்களை அதிகமாக கவர்ந்தது. பெற்றோரும் தங்களை குழந்தைகளாக உணரும் இதுமாதிரியான தருணங்கள் எவ்வளவு அற்புதமானவை. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற கடைசி ஐந்து படங்களில் ‘அப்பும் இடம்பெற்றது. உலகின் தலைசிறந்த இயக்குனராக இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். “என்னுடைய படங்கள் குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்படுகின்றன
ஏன் குழந்தைகளுக்காக சினிமா எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சினிமா நம் எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாக்கியே வருகிறது. சினிமா ஒரு வணிகம் என்பதை தாண்டிப் பார்த்தோமானால் இசை, இலக்கியம், ஓவியம் என்று கலையின் எல்லா பரிமாணங்களையும் ஒருபுள்ளியில் நிறுத்தி பார்வையாளனுக்கு சாத்தியப்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருக்கிறது. இதனால்தான் ரஷ்யப் புரட்சியாளர் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, “எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலைஎன்பதாக குறிப்பிட்டார்.
இன்று ஒரு நாட்டின் சமூகம், பண்பாடு, கலை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி அந்நாடுகளில் இருந்து வெளிவரும் சினிமாக்கள் மூலமாக அயல்நாட்டவர்களால் அளவிடப்படுகிறது. நம் நாட்டு குழந்தைகளின் ரசனைத்தன்மையின் வெளிப்பாடாக குழந்தைகள் திரைப்படம் நிச்சயமாக அமையும்.
சினிமா என்றில்லை. குழந்தைகளுக்கான பத்திரிகைகள் கூட இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தளவில் இப்போது இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பாலரத்னா, பூந்தளிர் மற்றும் எண்ணற்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இப்போது பெட்டிக்கடைகளில் தொங்குவதில்லை. பெரியவர்களுக்கான பத்திரிகைகளாக பார்த்து குழந்தைகளுக்கு என்று சில பக்கங்களை இடஒதுக்கீடு செய்தாலே பெரியவிஷயம்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கோடைவிடுமுறை குழந்தைகளை குறிவைத்து தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. ரெட்டச்சுழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், குட்டிப்பிசாசு. இன்னும் சில படங்கள் தயாரிப்பிலும் இருக்கின்றன. தமிழ் சினிமா தனக்கான நுகர்வோராய் குழந்தைகளை அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறது என்பதாக இருந்தால் இம்மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம் இல்லையா?
நெடிய தமிழ் சினிமா வரலாற்றில் குழந்தை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரியவர்களையும் கவரும் படங்கள் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. வெறுமனே குழந்தைகளை மட்டும் குறிவைத்து எடுக்கப்படும் பல படங்கள் ஆவணப்படங்கள் மாதிரியான வறட்சித்தன்மையோடு வெகுஜன வரவேற்பை பெறத் தவறியிருக்கின்றன.
ஐம்பதை கடந்தவர்களிடம் கேட்டால் சட்டென்று பாமா விஜயம், ‘குழந்தையும் தெய்வமும், சாந்தி நிலையம், எங்க மாமாஎன்று ஒரு பெரிய பட்டியலை தரக்கூடும். இவையெல்லாம் முழுமையான குழந்தைகள் படமல்ல. ஆனால் குழந்தைகளை கவர்ந்த படங்கள்.
எழுபதுகளில் கவுபாய்கள் குதிரைகளில் வந்து துப்பாக்கியால் சுட்டு சுட்டீஸ்களை கவர்ந்தார்கள். அது ஆக்சன் யுகம். புரூஸ்லீ போன்ற அதிரடி நாயகர்களின் படங்கள் இங்கே சக்கைப்போடு போட்ட பாதிப்பில் ஆக்சன் படங்கள் நிறைய சிவப்பெறும்புகளாய் வரிசைகட்டி படமெடுத்தன. குழந்தைகளுக்கு ஆக்சன் பிடிக்கும் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தார்கள்.
எண்பதுகளின் தொடக்கத்தில் குழந்தைகள் சினிமா முயற்சி கொஞ்சம் சீரியஸாகவே சிந்திக்கப்பட்டது. 1984ல் வெளிவந்த இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் ஒரு மைல்கல் எனலாம். நவோதயா ஸ்டுடியோ அப்பச்சன் தயாரித்த இப்படத்தை அவரது மகன் ஜிஜோ இயக்கினார். இயக்குனரின் வயது அப்போது 21 மட்டுமே. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் பட்ஜெட் 22 கோடி என்று பரபரப்பாக பேசப்பட்டது. வசூலிலும் குறைவைக்கவில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. 3டி தந்த விசித்திர அனுபவத்தால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். 1997ல் இதே படம் டி.டி.எஸ். ஒலி சேர்க்கப்பட்டு வெளியாகி செகண்ட் இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்தது.
ஒரு திரைப்படம் வணிகரீதியான வெற்றியை அடைய குழந்தைகளையும் கவர்ந்தாகவேண்டும் என்ற சூழல் உருவானது. ரஜினிகாந்த் (ராஜா சின்ன ரோஜா), கமல்ஹாசன் (அபூர்வசகோதரர்கள்) போன்ற உச்சநடிகர்கள் கூட தங்களது இமேஜை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரியாக கட்டமைக்கத் தொடங்கினார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனராக இன்றளவும் போற்றப்படும் மணிரத்னம் அஞ்சலி (1990) திரைப்படம் எடுத்தார். பிறப்பிலேயே மனநிலை பிறழ்ந்த ஒன்றரை வயது குழந்தையை பற்றிய உருக்கமான கதை. அக்குழந்தை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்ற வாண்டுகளின் கலாட்டாவென்று மணிரத்னத்துக்கு உரிய கமர்சியல் டச்சும் இருந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து அவர்களது உளவியலை மணி அலசி ஆராய்ந்திருந்தார். படத்தில் நடித்த ஷாம்லிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
ம்.. இதெல்லாம் பழங்கதை!
தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் சினிமாவில் ‘பேண்டஸிரத்தம் பாய்ச்சப்பட்டது. குழந்தைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இளைஞர்களை கவரும் விதமாக கதை பண்ண ஆரம்பித்தார்கள். வசூலும் ஐப்பசிமாத அடைமழை மாதிரி கொட்டத் தொடங்கியது. சினிமா கலைவடிவமாக இன்னமும் முழு பரிமாணத்தை எட்டாத வகையில் வணிகமே பிரதானமானதாக இருக்கிறது. இதனால்தான் எங்குமே இல்லாத வகையில் சினிமாவை வணிகப்படம், கலைப்படம் என்று தரம்பிரித்து வைத்திருக்கிறார்கள்.
பெற்றோரும் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துவருவது குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். ‘படம் பார்த்து கெட்டுப்போய்விடக் கூடாதுஎன்பது அவர்கள் எண்ணம். குழந்தைகளுக்கு படமெடுத்துவிட்டு குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை என்றால் நாங்கள் எப்படி படமெடுக்க முடியும்? என்பது சினிமாக்காரர்களின் ஆதங்கம். ‘படம் பார்த்தால் கெட்டுப்போகும் வகையில் சினிமா வந்தால் எப்படி குழந்தைகளோடு பார்க்கமுடியும்?என்று பெற்றோர்கள் பதிலுக்கு எகிற.. கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா மாதிரியான விவாதம்தான் நடக்கிறது.
படத்தில் வரும் குழந்தைகள் குழந்தைகளாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது சினிமா மீது வைக்கப்படும் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு. அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையை நிஜத்தில் நான் கண்டதேயில்லை. வயதுக்கு மீறிய பேச்சும், நடத்தையும் எரிச்சலை தருகிறது.
லாபம் வருமென்றால் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க தமிழ் சினிமாக்காரர்களுக்கு அவர்களுக்கு மனத்தடை ஏதுமில்லை. வணிகத்துக்கு முதலிடம், மற்ற விஷயங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த இடம் என்பது சினிமாக்காரர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் குழந்தைகள் பட டிரெண்ட் தொடரவேண்டுமானால் பெற்றோர்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரவேண்டும். படம் குழந்தைகளை திருப்தி படுத்தும் முன்னர் அவர்களது பெற்றோர்களை திருப்தி படுத்த வேண்டும்.
இந்தியில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘தாரே ஜமீன் பர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் ஒரு குழந்தை முக்கிய பாத்திரத்தில் நடித்த படத்தில் தனது இமேஜை விட்டுக்கொடுத்து நடித்து இயக்கினார். இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. இதைப்போன்ற முயற்சிகள் தமிழில் செய்யப்பட்டால் மட்டுமே குழந்தைகள் படத்துக்கான தனியிடம் தமிழில் உருவாகும்.
முயற்சிப்பார்களா நம் படைப்பாளிகள்?