1 ஜூன், 2010

தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை!

சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம். எந்த அமைப்பின் பேரிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம்.

இந்நிகழ்வைத் திட்டமிட்டு நடத்த, உறுதி செய்ய தன்னார்வலர்கள் தேவை.

ஒரு நாளுக்கு குறைந்தது 6 பேராவது முழு நேரம் பயிற்சி அரங்கில் இருப்பது நல்லது. எனவே, 5 நாட்களுக்கும் 30 தலைகள் தேவை. ஒருவர் அனைத்து நாட்களும் இருக்கலாம். அல்லது, ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்ள இயன்றாலும் சரி. ஒருவர் குறைந்தது ஒரு நாள் முழுக்கவாவது இருக்க இயலும் என்றால் ஒருங்கிணைக்க இலகு.

நேரடியாக நிகழ்வில் பங்கு பெறுவது போக, நிகழ்வுக்குத் தேவையான கணினிகள், projectorகள் ஏற்பாடு, உதவிக் கையேடுகள், இறுவட்டுகள் தயாரிப்பு போன்றவற்றில் உதவி தேவை. எனவே, நேரில் வர இயலாதவர்களும் இம்முயற்சியில் உதவலாம்.

உங்களால் உதவ இயலும் என்றால் உங்கள் பெயர், கலந்து கொள்ளும் நாள், செய்யக்கூடிய வேறு உதவிகள் குறித்த விவரங்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

நன்றி.

11 கருத்துகள்:

  1. வணக்கம் யுவா, உங்கள் முயற்சிக்கு முதலில் என் வாழ்த்துக்கள். என்னால் முடிந்த வரை உதவ விழைகிறேன். நான் கணினி மென்பொருள் / வலையாக்கம் சார்ந்த நிறுவனம் நடத்தி வருகிறேன். எந்த வழியில் நான் உதவ முடியும் என்று தோன்றினாலும், கூறவும்.

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிய சம்மதம் தெரிவித்து தொடர்பு எண்ணையோ, மின்னஞ்சலையோ தந்த நண்பர்களுக்கு நன்றி. உங்களது விவரங்கள் தமிழ் இணைய அறிமுகப்பட்டறையின் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் தொலைபேசி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.

    அன்புடன்
    யுவகிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  3. ஓவியன் மற்றும் Li!

    உங்களை தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரியை சொன்னால் நலம்!

    பதிலளிநீக்கு
  4. புதிதாக பிளாக் தொடங்கியுள்ள எங்களைப் போன்றவர்களுக்கு, பிளாக்கின் நுட்பங்கள் குறித்து அறிவித்தால் பயனடைவோம்.

    பதிலளிநீக்கு
  5. லக்கிலுக்!
    நான் தயார். தேதி மற்றும் தலைப்பு நீங்கள் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. தன்னார்வலர் தேடும் பணியில் தான் நானும் இருக்கிறேன் லக்கி. நாளை எதேனும் கல்லூரியில் சென்று விசாரிக்கலாம் என்று திட்டம். 5 நாட்களும் இங்கு கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை தான். மாணவர்களை இதில் ஈடுபடுத்தலாம்.. வெளியூர்க்காரர்களை விட உள்ளூர்க்காரர்களாக இருந்தால் வசதியாக இருக்கும். உங்களுக்கும் உதவ முடிந்தால் தொடர்பு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல முயற்சி! 8000 பதிவுகளை தமிழ் இன்று கொண்டுள்ளது. இது 100 பங்கு பெருகி 8 லட்சம் பதிவுகள் ஆகவேண்டும்.

    எல்லா கூகுள் குழுவிலும் உங்கள் பதிவை அனுப்புகிறேன். பலர் முன்வருவார்கள் - இணைய மாநாட்டுப் பட்டறைக்கு.
    இண்பிட் வலைப்பக்கத்திலும் வெளியிட வேண்டுகோள் இண்பிட்.ஆர்க் பொதுக்குழுவில்
    இடுகிறேன்.

    கோவையில் சந்திப்போம்!

    நா. கணேசன்

    பதிலளிநீக்கு
  8. இன்றே விசாரித்தேன் லக்கி. 16ஆம் தேதி தான் கல்லூரிகள் திறக்கப் படுகின்றன. தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வர வேண்டும் என உத்தரவு போயிருக்கிறதாம். எப்படியும் மாணவர்கள் அனைவரும் வரத்தான் போகிறார்கள். அவர்களில் சிலரை தன்னார்வலர்களாக்குவது பெரிய வேலையாக இருக்காது. 16ஆம் தேதி வரை காத்திருக்கனும் போல.. பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
  9. சஞ்சய்!

    மாணவர்கள் அனைவரும் வருகிறார்கள் என்ற தகவலே ஆச்சரியமாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் அங்கே வருவதற்கே இங்கே செம கெடுபிடி! :-(

    பதிலளிநீக்கு
  10. இன்று காலையில் ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் பேசிய போது தான் எனக்கும் இது தெரியும் லக்கி. அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம். மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்பு கல்லூரி திறந்து பின் 5 நாட்கள் விடுமுறை விடுவதற்கு பதில் மாநாட்டுக்குப் பின்னரே கல்லூரி திறக்க முடிவெடுத்திருந்தார்களாம். ஆனால், மாணவர்களைத் திரட்ட முடியாது என்பதாலேயே 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப் படுகிறதாம். வெள்ளை சீருடையில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதும் உத்தரவாம். இது நடைமுறைப் படுத்தப்படுமா என தெரியவில்லை. ஆனால், மாணவர்கள் பங்கேற்பது உறுதியான தகவலாகவே அவர் சொன்னார்.

    பதிலளிநீக்கு