16 ஆகஸ்ட், 2016

23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்!

ஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...
“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக முடியாது. என்னை விட்டுடும்மா”, பதிமூன்று, பதினான்கு வயது மாணவனாக இருந்தபோது தங்கம், அவரது அம்மாவிடம் கதறி அழுதுக் கொண்டே சொன்னார்.

அப்போதுதான் ‘கல்கி’ இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை ஆரம்பித்திருந்தார் கல்கி. அத்தொடருக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் மக்களிடையே பிரபலமாகி இருந்தன.

நாடு விடுதலை ஆவதற்கு பத்து ஆண்டுகள் முன்பே தங்கம் பிறந்துவிட்டார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அப்பா காலமானார். இவரை வளர்க்க அம்மா ரொம்பவும் சிரமப்பட்டார். தங்கத்துக்கு நிறைய படிக்க விருப்பம். அவருடைய அம்மாவுக்கும் இவரை படிக்க வைக்க ஆசை இருந்தாலும், குடும்ப வறுமை அதை அனுமதிக்கவில்லை. எனவே தொழிற்கல்வி எதிலேனும் மகனை சேர்த்துவிட்டு சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

கும்பகோணம் நகராட்சி அப்போது சித்திரகலாசாலை என்கிற பெயரில் பள்ளி நடத்திக் கொண்டிருந்தது. தங்கம் அதில் சேர்ந்தார். இந்த ஓவியப்பள்ளிதான் பிற்பாடு புகழ்பெற்ற கும்பகோணம் ஓவியக்கல்லூரியாக மாறி, ஏராளமான ஓவியர்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியது.

பள்ளியில் சேரும்வரை வரைவதில் எவ்வித ஆர்வமோ, அனுபவமோ இல்லாத தங்கம், ஓவியப்பள்ளியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய அம்மாதான் குடும்ப வறுமைநிலையை எடுத்துக்கூறி தொடர்ந்து அங்கே தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஓவியம் பழகினால், தன் மகன் விளம்பரப் பலகைகள் எழுதி பிழைத்துக் கொள்வான் என்று தங்கத்தின் அம்மா கருதினார். 1950ல் தொடங்கி 1956 வரை அந்தப் பள்ளியில் படித்த தங்கத்துக்கு ஒருகட்டத்தில் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு உண்டானது. சித்திரமும் கைப்பழக்கம்தானே?
“அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எந்த ‘பொன்னியின் செல்வன்’ ஓவியங்களை என்னாலே வரையமுடியலைன்னு அழுதேனோ, இப்போ அதே ‘பொன்னியின் செல்வன்’ கதையை சித்திரக்கதை நூலாகவே வரைஞ்சி வெளியிட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இருந்திருந்தா ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்கிறார் ஓவியர் தங்கம்.

அமரர் கல்கியின் எழுத்தை ஓவியத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமம். அந்த கதையின் சம்பவங்களை நன்கு மனதுக்குள் உள்வாங்கி, சித்திரமாக சிந்தித்து பதினோரு அத்தியாயங்களை வரைந்து முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறார் தங்கம். தன்னுடைய பதின்ம வயது கனவினை, எண்பதாவது வயதை எட்டும் பருவத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.

வந்தியத்தேவன் அறிமுகமாகும் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் ஆகிய அத்தியாயங்களின் முக்கிய நிகழ்வுகளை சித்திர விருந்தாக படைத்திருக்கிறார்.

ஓவியப்பள்ளியில் பத்தொன்பது வயதில் படிப்பை முடித்துக் கொண்ட தங்கம், பாலு பிரதர்ஸ் என்கிற ஓவியர்களிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். இந்த பாலு பிரதர்ஸ், அந்த காலத்தில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு வரைந்த பேனர் ஓவியங்கள் மிகவும் பிரபலம். அந்நாளைய திமுக மாநாடுகளுக்கும் இவர்கள்தான் ஓவியர்கள். ‘கலை’ என்கிற சினிமாப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுமே தங்கத்துக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.

1958ல் தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்தார் தங்கம்.

“இப்போ சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நீங்க அமர்ந்து வேலை பார்க்கிற இதே ‘தினகரன்’ அலுவலகம்தான் அப்போ ‘தினத்தந்தி’ அலுவலகமா இருந்தது. அங்கேதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். சி.பா.ஆதித்தனாரிடம் நேரிடையாக வேலை கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தினத்தந்தியில் கார்ட்டூன் போடவும் வாய்ப்பு கொடுத்தாரு. நான் முதன் முதலில் வரைஞ்ச கார்ட்டூன் எதுக்குன்னா, சினிமா தியேட்டரில் சிகரெட் பிடிச்சா காவல்துறை கைது செய்யும்னு அப்போ அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்குதான்.

‘கருப்புக் கண்ணாடி’ன்னு ஒரு சித்திரத் தொடரை தந்தியிலே ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் ‘இவள் இல்லை’ன்னு ஒரு தொடர். இதுவும் நல்லா பிரபலமாச்சி. அவங்களோட மாலை நாளிதழான ‘மாலை முரசு’வில் ‘பேசும் பிணம்’ அப்படிங்கிற சித்திரத் தொடர் வரைஞ்சு எழுத கூடுதலா வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்களோட வார இதழான ‘ராணி’யிலும் ‘முத்துத்தீவு மோகிணி’ங்கிற சித்திரத் தொடர் பண்ணினேன். அந்த இதழோட ஆசிரியர் அ.மா.சாமிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் அதிகம்”

“நீங்க ‘கன்னித்தீவு’ தொடருக்கும் படம் வரைஞ்சீங்க இல்லையா?”

“அது யதேச்சையா அமைஞ்ச வாய்ப்பு. ‘கன்னித்தீவு’ தொடங்கியபோது அதற்கு படம் வரைந்துக் கொண்டிருந்தவர் என்னுடைய சீனியரான கணேசன் என்கிற ஓவியர். ‘கணு’ என்கிற புனைபெயரில்தான் அவர் வரைவார். எனக்கும்கூட ‘அணில்’, ‘மின்மினி’ மாதிரி புனைபெயர்களை ஆதித்தனார் சூட்டியிருந்தார்.

திடீர்னு கணேசனுக்கு உடல்நலமில்லாம போயிடிச்சி. அவரை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. அவர்தான் என்னிடம், ‘தம்பி! கன்னித்தீவு எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்னுடக்கூடாது, தொடர்ச்சியா வரணும். நீ வரைஞ்சிக்கொடு’ன்னு கேட்டுக்கிட்டாரு.

அவர் உடல்நலம் பெற்று அலுவலகத்துக்கு திரும்ப ஒரு நாலஞ்சி மாசம் ஆயிடிச்சி. அதுவரைக்கும் நான்தான் ‘கன்னித்தீவு’க்கு வரைஞ்சிக்கிட்டிருந்தேன். அந்தத் தொடருக்கு அப்பவே நல்ல வரவேற்பு. ஆனாலும், ‘கன்னித்தீவு’ தமிழர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறப்போவுது, ஐம்பது வருஷத்தை தாண்டியும் முடிவே இல்லாம தொடர்ச்சியா வரப்போகுதுன்னுலாம் நாங்க நினைக்கவேயில்லை”
“டாக்டரோட மனைவி டாக்டர் என்பது மாதிரி ஓவியரான நீங்களும், இன்னொரு ஓவியரை திருமணம் செய்துக்கிட்டீங்க இல்லையா?”

“திட்டமிட்டெல்லாம் செய்யலை. யதேச்சையா அமைஞ்சது. அவங்களும் நான் படிச்ச அதே கும்பகோணம் பள்ளியில் ஓவியம் படிச்சவங்கதான். சந்திரோதயம்னு பேரு. தூரத்துச் சொந்தம். தஞ்சை கிறிஸ்தவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியரா பணியாற்றி ஓய்வு பெற்றிருக்காங்க. அவங்களும் ரொம்ப நல்ல ஓவியர். ‘மர்மவீரன் ராஜராஜ சோழன்’ என்கிற சித்திரநூலை வரைஞ்சி வெளியிட்டிருக்காங்க.

நாங்க ரெண்டு பேரும் ஓய்வு பெற்ற பிறகு ஓவியக் கலையில் தான் எங்க ஓய்வை கழிக்கிறோம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருவதில் என் துணைவியாருக்கு ஆர்வம் அதிகம். எங்களிடம் கற்ற குழந்தைகள் வரையும் ஓவியங்களை வெச்சு மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம்.

தஞ்சாவூரை சுற்றி இருக்கிற கோயில்களில் நாங்க வரைஞ்ச ஓவியங்களை நீங்க பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராகவேந்திரா கோயில் ஆகிய இடங்களில் நாங்க வரைஞ்ச தெய்வ திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கு. இருவருக்கும் ஒரே தொழில், ஒரே மாதிரியான கலைமனம் என்பதால் எங்க வாழ்வினை மனசு ஒருமிச்சு ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்”

“இடையிலே நீங்க பத்திரிகைகளில் பணிபுரியலை இல்லையா?”

“ஆமாம். அரசு வேலையில் சேர்ந்தேன். மதுரை, திருச்சின்னு ஓவிய ஆசிரியரா பணியாற்றிட்டு, அதுக்கப்புறம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரா 1963ல் தொடங்கி 33 வருஷம் வேலை பார்த்துட்டு ஓய்வு பெற்றேன்.

மருத்துவத்துறையில் வித்தியாசமான பணி. ஆபரேஷன்களை எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோ எடுக்கணும். இந்த போட்டோக்கள்தான், மருத்துவர்களுக்கு கேஸ் ஸ்டடி பண்ணி, நோயாளிகளுக்கு மேலதிகமா சிறப்புச் சிகிச்சை கொடுக்க உதவும். மருத்துவர் ரங்கபாஷ்யம் அவர்கள் மேற்பார்வை பார்த்து இந்த வேலையை சிறப்பா செய்ய கற்றுக் கொடுத்தார்.

அப்புறம் மைக்ரோஸ்கோப் வெச்சி போட்டோ எடுக்கிற ஒரு கலையையும் இங்கேதான் கற்றேன். இம்மாதிரி எடுக்கப்படும் படங்களை வெச்சி கேன்சர் முதலான நோய்களை உறுதிப்படுத்துவார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஊக்குவிப்பில் இந்த வேலையை செய்தேன். ஓவியத்தில் தேர்ச்சி இருந்ததால், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த வேலைகளை திறம்பட செய்து நல்ல பெயர் வாங்க முடிந்தது. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் மாதிரி இதழ்களிலும், அமெரிக்க இராணுவம் கேன்சர் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ நூல் முதலிய சர்வதேச இதழ்களில் எல்லாம் நான் எடுத்த படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

என்னோட பணி அனுபவங்களை, கலைப்பணிகளையெல்லாம் ‘ஓவியனின் கதை’ என்று சுயவரலாற்று நூலா எழுதி வெளியிட்டிருக்கேன். அமெரிக்காவில் பிசியோதெரபிஸ்டா என் மகன் ராஜேந்திரன் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க நாங்க அமெரிக்காவுக்கு போனப்போ கண்ட, கேட்ட அனுபவங்களை ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்று நூலாக எழுதி வெளியிட்டேன். தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருது அந்த நூலுக்கு கிடைத்தது”
“ஆனாலும், சித்திரம் வரையுற தாகம் தணியலை இல்லையா?”

“அதெப்படி தணியும்? எண்பது வயசை நெருங்குறப்பவும் வரைஞ்சுக்கிட்டுதானே இருக்கேன்? தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகும் போதெல்லாம் ராஜராஜசோழனை சித்திரக்கதையா வரையணும்னு தோணும். அவரோட ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது சின்ன அளவிலே வரைஞ்சி வெளியிட்டேன். ஓய்வுக்கு பிறகு நிறைய இதழ்களில் வரையறேன்.

உங்களோட தினகரன் வசந்தம் இதழில்கூட ‘வீர சோழன்’ என்கிற சித்திரத் தொடரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியா வரைஞ்சி எழுதிக்கிட்டிருந்தேன். நெடுநாள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்தொடர் எழுதும்போதுதான் என் மகன் கோயமுத்தூரில் படிச்சிக்கிட்டிருந்தார். அவரோட கல்விச் செலவுக்கு நீங்க மாதாமாதம் அனுப்பற சன்மானம் உதவிச்சி. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்”
“உங்க நூல்கள் கடைகளில் கிடைக்கிறதில்லையே?”

“உண்மைதான். எனக்கு வரையத் தெரியுது. அதை அப்படியே அச்சிடவும் தெரியுது. எப்படி எல்லாருக்கும் விற்பனைக்கு கொண்டுபோறதுன்னு தெரியலை. எங்களோட நூல்களை தஞ்சாவூரில் நேரில் பெறணும்னா தங்கபதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501 (கைபேசி : 9159582467) என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளியிட்டிருக்கிறதை கேள்விப்பட்டு நிறையபேர் விசாரிக்கிறாங்க. எல்லாருக்கும் கொண்டு போகணும்னு ஆசையாதான் இருக்கு”

“உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்காரு. மகள்?”

“சென்னை ராணிமேரிக் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. அவங்க பேரை சொல்ல மறந்துட்டேனே? பொன்னியின் செல்வி!”

படங்கள் : பி.பரணிதரன்

(நன்றி : தினகரன் வசந்தம்)