28 நவம்பர், 2008

பெய்யெனப் பெய்திடும் மாமழை!

சென்னை முடங்கிக் கிடக்கிறது. ஒருநாள் மழையையே தாங்கமுடியாத லட்சணத்தில் இருக்கும் மாநகரத்தில் நான்கு நாட்கள் பேய்மழை பெய்தால் என்னவாகும்? வழக்கம்போல மடிப்பாக்கமும், வேளச்சேரியும் வெனிஸ் ஆகிவிட்டது. எப்போதும் அரசியல்வாதிகளை கண்டமேனிக்கு திட்டும் சென்னைவாசிகளுக்கு இப்போதுதான் அரசியல்வாதிகளின் அருமை புரிகிறது. குறிப்பாக திராவிட அரசியல்வாதிகள். அரசு எந்திரங்களை நம்பாமல் தன்னார்வலர்களாக மீட்புப்பணிகளில் அவர்கள் காட்டும் வேகம். இந்த மீட்புப்பணிகளுக்கு பின்னே அவர்களுக்கு ஆயிரம் அரசியல் ஆதாயங்கள் இருக்கட்டும். பசித்த வாய்க்கு சரியான நேரத்தில் சோறுபோடுகிறார்களே? வாழ்க. வாழ்க. வடசென்னையை அதிமுகவும், தென்சென்னையை திமுகவும் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மற்றநாட்களில் அரிவாளும், ஆசிட்டுமாக ஒருத்தரையொருத்தர் துரத்திக் கொள்பவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தளபதி எங்கே எப்போது திடீரென்று ரெயின்கோட்டில் பிரசன்னமாவார் என்று தெரியாமல் திமுகவினர் 24 மணிநேரமும் ஆக்‌ஷனில் இருக்க வேண்டிய நிலை. அம்மா வருவாரா வரமாட்டாரா என்று தெரியாவிட்டாலும் ‘அம்மா வெள்ளநிவாரணம்' என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டுகளோடு அதிமுகவினர். புறநகர் பகுதிகளில் காங்கிரஸாரும், பாஜகவினரும் குத்தும் கோமாளிக்கூத்து. தேசியக்கட்சிகளில் பதவி வாங்குவது மிக சுலபம். பேரிடர் காலங்களில் பத்திரிகையில் போட்டோ வந்தால் போதும். தேமுதிக சென்னையில் காணவே காணோம். கேப்டன் படப்பிடிப்பில் பிஸியோ? வாராவாரம் ஆனந்தவிகடனில் மட்டும் நாற்று நடுகிறார், நெசவு இயந்திரத்தை மிதிக்கிறார், காய்கறி கடையில் வியாபாரம் செய்கிறார். திருமாவேலரே நியாயம்தானா? கேப்டனை மடிப்பாக்கத்துக்கு படகில் கூப்பிட்டு வந்து போட்டோ எடுத்திருக்கக் கூடாதா? கோயம்பேடு - கத்திப்பாரா நூறடி சாலை இவ்வளவு வெள்ளத்தை இதுவரை கண்டதில்லை. ஜி.என்.செட்டி ரோடு ஸ்விம்மிங் பூலை விட ஆழமாக இருக்கிறது. நகரின் மழைநீர் வடிகால்கள் இரண்டுமாதங்களுக்கு முன்பு தான் தூர் வாரப்பட்டது. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு வெள்ளம்? கடல்நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் வெள்ளம் வடிவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். க்ளோபல் வார்மிங்? சில பெருசுகள் அமாவாசை நெருங்கும் நேரத்தில் கடல்நீர் மட்டம் உயர்வது சகஜம் என்று சால்ஜாப்பு சொன்னாலும் பயமாக இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டில் மாலத்தீவு இருக்காதாம். சென்னை இருக்குமா? * - * - * - * - * - * - * ஹாலிவுட் படங்களில் பார்த்தது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் இரண்டு மூன்று நாட்களாக பார்க்க முடிகிறது. மும்பை! போனவாரம் வாசித்த ‘என் பெயர் எஸ்கோபர்' நூலில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இந்தியாவிலேயே நடைபெறும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. தீவிரவாதம் ஏன்? தீர்வு என்ன? என்று பா.ராகவன் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது இந்தியில் மொழிபெயர்த்து டெல்லியில் விற்றால் தேவலை. நேற்று மும்பை மேரி ஜானும், வெட்னஸ்டேவும் டிவிடியில் பார்த்தேன். * - * - * - * - * - * - * சன் பிக்சர்ஸின் ‘தெனாவட்டு' படத்தில் ஒரு காட்சி. கைலாசம் சென்னையில் நெ.1 தாதா. அவரது மகன் சந்தோஷ் பார்க்கும் பெண்களையெல்லாம் பெண்டாளத் துடிப்பவன். ஹீரோ ஜீவாவின் ஃபிகர் மீதே கையை வைக்கும் சந்தோஷை கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் போட்டு மழையில் புரட்டியெடுக்கிறார் ஜீவா. நூற்றுக்கணக்கான பொதுமக்களோடு ஏ.சி.பி. சாய்குமாரும் வேடிக்கை பார்க்கிறார். ஒரு ஆட்டோக்காரர் ஏ.சி.பி.யை பார்த்து “இப்படி போட்டு ஒரு ஆளை புரட்டியெடுக்கிறானே? தடுக்கக்கூடாதா?” என்று கேட்கிறார். “தப்பு நடந்தா தட்டிக் கேட்குறது மட்டுமில்லை, நல்லது நடந்தா அதை தடுக்காம கண்டும், காணாமலும் போறது கூட போலிஸ்காரன் வேலைதான்!” என்கிறார் ஏ.சி.பி. :-))))) படத்தில் இதுபோல Current Affairsகளுடன் பொருத்திப் பார்க்க ஏராளமான காட்சிகள் உண்டு. எச்சரிக்கை : படம் செம மொக்கை. அரவாணிகளை நல்லவிதமாக காட்டுகிறேன் பேர்வழி என்று இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்திருக்கிறார் இயக்குனர். * - * - * - * - * - * - * முந்தாநாள் மாலை, வெள்ள மீட்புப்பணிகளில் (?) தீவிரமாக ஈடுபட்டு சோர்வாக வீட்டுக்கு வந்தேன். சோஃபாவில் அப்படியே விழுந்தபோது தாகம் எடுத்தது. மின்வெட்டு. அருகில் மிரண்டா பாட்டிலில் தண்ணீர் இருந்தது. மூடியை திறந்து அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டேன். இதுவரை என் நாக்கு சுவைத்திராத தீவிர உப்பு. அமில நெடி. மார்பெல்லாம் எரிந்தது. ஓடிச்சென்று பாத்ரூமில் வாந்தியெடுத்தேன். அமிலநெடி வயிற்றுக்குள் தீயாய் பரவியதை உணர்ந்ததால் கையை விட்டு அம்மாவிடம் குடித்த பால் உட்பட மொத்தமாக வாந்தியெடுத்தேன். தலையெல்லாம் கிறுகிறுத்தது. ஒரு ஃபுல் ஓல்டுமாங்கை அப்படியே கல்பாக அடித்தது போல போதை. முகம் கழுவிவிட்டு எதுவும் நடக்காதது போல வீட்டில் விசாரித்தேன். பாட்டிலில் வைத்து இருந்தது துணிதுவைக்க பயன்படுத்தும் ‘ஆலா' மாதிரியான ஏதோ ஒரு வஸ்துவாம். நல்லவேளை பாத்ரூம் கழுவப் பயன்படுத்தும் ஆசிட், கீசிட் எதையும் அங்கு வைத்திருக்கவில்லை.

26 நவம்பர், 2008

என் பெயர் எஸ்கோபர்!

எஸ்கோபரை உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளலாம். தில் - திகில் - திடுக்கிடலான ஆசாமி. சர்வதேச போதை நெட்வொர்க்கின் காட்ஃபாதர். சுண்டக்கஞ்சி காச்சப்படுவதிலும் அவருக்கு பங்கிருந்ததா என்று தெரியவில்லை. கொலம்பியா அவரது வேர். தென்னமெரிக்கா முழுவதும் அவரது விழுதுகள். அகில உலகத்துக்கும் ‘கோகெய்ன்' சப்ளை செய்த புண்ணியவான். உயிரோடிருந்திருந்தால் சந்திரயன் மூலமாக சந்திரனுக்கும் போதையை கடத்தியிருப்பார். மாஃபியாக்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தருவதாக இருந்தால் முதலில் இவருக்கு தந்திருக்க வேண்டும். நூலாசிரியர் பாரா நூல் முழுக்க 'அவன்', ‘இவன்' என்று ‘ன்' விகுதியிலேயே குறிப்பிடுகிறார். 'என் பெயர் எஸ்கோபர்' நூலை வாசித்த வாசகனுக்கோ எஸ்கோபர் மீது ஏற்படும் ப்ரேமையால் ‘ன்'னென்று விளித்த பாரா மீது பெருங்கோபம் ஏற்படுகிறது. பாருங்கள் எஸ்கோபர் என்ற பெயரில் கூட ‘ர்' விகுதி இயற்கையாகவே அமைந்திருக்கிறது. 1989ஆம் ஆண்டு உலகின் ஏழாவது பெரிய பணக்காரனாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அடையாளம் காட்டப்படுபவர் பாப்லோ எமிலியோ எஸ்கோபர். அப்போது அவருக்கு வயது ஐம்பதையெல்லாம் கடந்துவிடவில்லை ஜெண்டில்மேன். ஜஸ்ட் ஃபார்ட்டி. பில்கேட்ஸெல்லாம் கஷ்டப்பட்டு சாஃப்ட்வேர் விற்று சம்பாதித்தார். எஸ்கோபர் மிக எளிதாக போதையை விற்றார். பணம் சம்பாதித்தார். இன்றைய தேதியில் பல போதைபொருள் மாஃபியாக்கள் எஸ்கோபரை விட அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இந்த பிசினஸை இண்டர்நேஷனல் லெவலில் ஒரு கார்ப்பரேட் பிசினஸ் மாதிரி கட்டுக்கோப்புடன் நடத்திய முதல் ‘தொழில்' அதிபர் எஸ்கோபர் என்பதாலேயே அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம். கார்திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் எஸ்கோபர். திருட்டு அலுத்தது. சீக்கிரம் பணக்காரனாக துடித்தார். அப்போது கொலம்பியாவில் அறிவிக்கப்படாத தேசியத்தொழிலாக இருந்த கோகெய்ன் விற்பனையை கையில் எடுத்துக் கொண்டார். ஒரு மாஃபியாவிடம் அடியாளாக சேர்ந்தவர், குறுகிய காலத்தில் அமைதிப்படை அமாவாசை மாதிரி தடதடவென முன்னேறினார். முப்பது வயதுக்குள்ளாகவே உலகின் நெ.1 போதை மாஃபியா. நாற்பத்து மூன்று வயதிலேயே எல்லா புகழையும் தனக்குள் புதைத்துக்கொண்டு ஒரு துப்பாக்கித் தோட்டாவில் மண்டையைப் போட்டார். எஸ்கோபர் ஆட்டையில் இருந்த அந்த இருபது வருடங்களும் கொலம்பியாவின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத வருடங்கள். ”என் பெயர் எஸ்கோபர்” நூல் ஒரு க்ரைம் நாவலுக்கே உரித்தான த்ரில்லோடு தொடங்குகிறது. வரலாற்றை இதுபோல க்ரைம்நாவல் சுவாரஸ்யத்தோடு தொடங்கக் கூடாதென்று இ.பி.கோ.வில் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? கோழி குருடா இருந்தாலென்ன, முடமாயிருந்தாலென்ன? பிரியாணி டேஸ்ட்டா இருந்தால் போதாதா? 'கையிலே காசு, வாயிலே கோகெய்ன்' மாதிரியான பாராத்தன டயலக்குகள் மண்வாசனை தருகிறது. பிதாமகன் கஞ்சா வில்லனின் கதையை படிப்பதுபோல நேட்டிவிட்டி டச்சோடு நூலில் ஒன்றமுடிகிறது. த்ரில் மற்றும் திகிலோடு தொடங்கும் முதல் அத்தியாயம் சடக்கென்று கொலம்பியாவின் வரலாற்றைப் பேசும்போது திடுக்கிட வைக்கிறது. அமெரிக்காவுக்கு யாருமே ஆப்பு வைக்க வேண்டியதில்லை, அதுவே சி.ஐ.ஏ. மூலமாக வைத்துக்கொள்ளும். கொலம்பியாவின் போதை பிசினஸ் விவகாரத்திலும் அமெரிக்கா தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டதை புன்முறுவலோடு ரசிக்க முடிகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் முழுக்க நகைச்சுவை சுலபா புயல் மழை மாதிரி கொட்டோகொட்டுவென்று கொட்டி தீர்க்கிறது. நம்புங்கள். சத்தியமாக நூறு சதவிகிதம் எந்த கலப்புமில்லாத அக்மார்க் நகைச்சுவை. ஒருகட்டத்தில் நொந்துப்போன அமெரிக்க அதிபர் கொலம்பிய அரசுக்கு எழுதுவதாக பாரா சித்தரிக்கும் கடிதம் சரவெடி. ரீகன் எழுதும் அக்கடிதம் இப்படித் தொடங்குகிறது. “ஐயன்மீர்! உமக்கு சர்வமங்களம் உண்டாகட்டும்”. இப்படி முடிக்கிறார். “நமது நட்பு காலம் கடந்து நிற்க எல்லாம் வல்ல எம்பெருமான் இயேசுகிறிஸ்து அருள் பாலிப்பாராக. ஆமென்!” இம்சை அரசன் தனது வாயிற்காப்பாளனுக்கு தரும் தண்டனைகள் உங்களுக்கு அதிர்ச்சியை தந்ததா? இல்லை ரசிக்க வைத்ததா? எஸ்கோபர் செய்த கொலைகளை நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ரசிக்க செய்வான். நம் சட்டக்கல்லூரி சம்பவமெல்லாம் எஸ்கோபரை பொறுத்தமட்டில் ஜூஜூபி. வழிக்கு வந்தவரை வாழவைப்பதும், சரிபடாதவரை போட்டுத்தள்ளுவதும் எஸ்கோபரின் பாணி. எத்தனை பேரை சாகடித்திருப்பான் என்ற லிஸ்ட் சித்திரகுப்தனிடம் தான் இருக்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனுபோட்டு, எமதர்மனிடம் அனுமதி வாங்கி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி மாதிரி போதை மாஃபியாக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து போதைக்கூட்டணி அமைத்தது, அரசியலில் குதித்து அதகளப்படுத்தியதெல்லாம் எஸ்கோபர் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள். எஸ்கோபருக்கு இருந்த மக்கள் செல்வாக்குக்கு அவர் அந்நாட்டின் அதிபராகவே ஆகியிருக்க முடியும். நாயகன், காட்ஃபாதர் மாதிரியான கேரக்டர். சின்னக்கவுண்டர் ரேஞ்சுக்கு அவரை அந்நாட்டு மக்கள் மதித்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் கொலம்பிய போலிசாரிடம் எஸ்கோபர் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே எஸ்கோபரை அரணாக சுற்றி நின்று பாதுகாத்தது என்பது வரலாற்றில் கட்டாயம் குறிப்பிட வேண்டிய பெட்டிச்செய்தி. மேலவை உறுப்பினராக வலுக்கட்டாயமாக மாறிய எஸ்கோபர் மேலவையில் பேசிய முதல் பேச்சில் “போதை வர்த்தகத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சம்பந்தமில்லாத கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்று பேசுவது டென் தவுசண்ட் வாலா. நம்மூரு மாதிரியே கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது மாதிரி 1970களில் துப்பாக்கியெடுத்த எஸ்கோபர் 1992ல் சுட்டுக்கொல்லப்படுகிறார். கிராதகன் ஒழிந்தான் என்று வாசகனின் மனம் துள்ளாது. மாறாக நேசித்த ஒரு சிநேகிதனை என்கவுண்டரில் இழந்த சோகம் மனதை கவ்வுகிறது. சம்பிரதாயமாக கொலம்பியாவின் இன்றைய நிலையை கொஞ்சம் சீரியஸாக சொல்லி நூல் முடிகிறது. இந்நூலுக்காக நூலாசிரியர் பா.ராகவன் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்? எத்தகைய உழைப்பை முதலாக்கியிருப்பார் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம். எப்போதோ ஒருமுறை ‘இன்று தமிழில் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்' என்று இவரைக் குறிப்பிட்டிருந்தேன். பாராவின் ஒவ்வொரு எழுத்தும், அதன் பின்னால் இருக்கும் உழைப்புக்காக கொண்டாடப்பட வேண்டியதும், விற்கப்பட வேண்டியதும் நியாயமானதே. கொலம்பியா மேப்பை இந்நூலில் அசால்ட்டாக போடிநாயக்கனூருக்கு வழிசொல்வது மாதிரி கையாண்டிருக்கிறார். போதை பிஸினஸில் புழங்கும் பணம், எந்தெந்த நாடுகளில் புழக்கம் அதிகம் போன்ற செய்திகள் அட்சரம் பிசகாத அபார புள்ளிவிவரங்கள். ஒரு திரைக்கதைக்கான சுவாரஸ்யம் நூலின் ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது. பின்னிணைப்பில் இப்புத்தகம் எழுத ரெஃபரென்ஸுக்கு பாரா எடுத்துக்கொண்ட புத்தகங்களையும், இணைப்புகளையும் நாம் யாராவது வாசித்திருந்தால் இன்னேரம் கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு தீவிர வாசிப்பாளரென்றால் மூன்றரை மணி நேரத்தில் ஒரே மூச்சாக இப்புத்தகத்தை வாசித்துவிடலாம். ஒவ்வொரு இல்ல நூலகத்திலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய நூல். அடாதமழை விடாது அடித்துக்கொண்டிருந்த நேற்றைய இரவை இந்நூல் எனக்கு சுவாரஸ்யமாக்கியது. தடங்கலின்றி நூலை வாசிக்க வகைசெய்த ஆற்காட்டாருக்கு கோடி நன்றி. நூலின் பெயர் : என் பெயர் எஸ்கோபர் நூல் ஆசிரியர் : பா.ராகவன் விலை : ரூ.90 பக்கங்கள் : 224 வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும். நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப்பி 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

25 நவம்பர், 2008

இரும்பு குதிரைகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக இந்நாவலை வாசித்தபோது பாலகுமாரன் மீது செம கிறுகிறுப்பு இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை சிலாகித்து படித்தேன். காதலன், பாட்ஷா மாதிரியான சூப்பர்ஹிட் படங்களுக்கு வேறு வசனம் எழுதி பாலகுமாரன் என்னை ஆக்கிரமித்திருந்தார். ஒரு மனிதருக்கு ஒன்றுதான் மாஸ்டர்பீஸாக இருக்கமுடியும். பாலகுமாரனுக்கோ இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள் என்று இரண்டு மாஸ்டர்பீஸ்கள். என்னைப் பொறுத்தவரை 'பழமுதிர்க் குன்றம்' அவரது மாஸ்டர்பீஸ்களுக்கெல்லாம் மாஸ்டர்பீஸ். துரதிருஷ்டவசமாக அது சூப்பர்ஹிட் ஆகவில்லை. ஏதோ ஒரு ஆங்கிலநாவலை தழுவி எழுதியிருந்தார்.
பாலகுமாரனிடம் சிருங்கார வர்ணனைகள் குறைவு. எழுத்துக்கள் எளிமை. இந்த இரண்டையும் ப்ளஸ் பாயிண்டென்று சொன்னால், பெய்யெனப் பெய்யும் அவரது அட்வைஸ் மழையை மைனஸ் பாயிண்ட் என்று சொல்லலாம். கருத்து கந்தசாமி மாதிரி வாழ்க்கையைப் போதிக்க பாலகுமாரன் ஆரம்பித்தால் சரியாக இரண்டு பக்கங்களை இரக்கமேயின்றி திருப்பிவிடுவேன். டீனேஜில் இருந்தது போலவே இப்போது அட்வைஸ் என்றால் கசக்கிறது. ஏற்கனவே ஏதாவதொரு நாவலிலோ, தொடரிலோ சொன்னதை தான் வேறு வேறு வார்த்தைகளில் திரும்ப திரும்ப சொல்லுவார். திடீரென யோகா, ஆன்மீகம் என்று நியூஸ் ரீல் பாணியில் டாக்குமெண்டரியும் ஓட்டிவிடுவார்.
ஏனோ இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் பாலகுமாரனை வாசித்தேயாக வேண்டும் என்றொரு வெறிவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக கூட மெர்க்குரிப்பூக்களை மீள்வாசிப்பு செய்திருந்ததால் இம்முறை இரும்பு குதிரை. இரும்புக்கு பக்கத்தில் 'க்' இருக்காது. 'க்' போட்டால் ஸ்லோ ஆகிவிடுமாம். குதிரையென்றால் அசுரவேகத்தில் பறக்க வேண்டுமென்பதால் 'க்' மிஸ்ஸிங்.
கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்ட் தான் பாலகுமாரனின் பலம். நாயக்கர், முதலியார், ராவுத்தர், காந்திலால், விஸ்வநாதன், தாரிணி, கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய், வடிவேலு, நாணு அய்யர், காயத்ரி என்று ஏகப்பட்ட கேரக்டர்களை சரம் சரமாக இரும்புகுதிரைகளில் தொங்கவிட்டிருப்பார். ஒவ்வொரு கேரக்டரையும் சிற்பியின் நுணுக்கத்தோடு பேனாவால் செதுக்கு செதுக்கென்று செதுக்கியிருப்பார். விஸ்வநாதன் கேரக்டர் தான் பாலகுமாரன் என்பதை ஒரு சில அத்தியாயங்களிலேயே உணர்ந்துவிட முடியும்.
மனிதர் டாஃபேயில் இருந்தபோது நேர்ந்த அனுபவங்களை இரும்பு குதிரைகளாக ஓடவிட்டிருப்பார். லாரியும், லாரியை சார்ந்த மனிதர்களும், சம்பவங்களும் தான் கதை. இது கல்கியில் தொடராக வந்தது என்று அப்பா ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு. ஒரு தொடருக்குரிய அம்சங்கள், தொடரும் போடும்போது வைக்கவேண்டிய குட்டி சஸ்பென்ஸ் எதுவுமே இரும்பு குதிரைகளில் இல்லை. தொடர்கதை என்று சொல்ல இதில் தொடர்ச்சியான கதை கூட கிடையாது. ஒட்டுமொத்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட சாருவின் ராஸலீலா மாதிரி.
விஸ்வநாதன் கேரக்டரை ரொம்ப புனிதனாக காட்டியிருப்பார். விஸ்வநாதனுக்கு கிடைத்தமாதிரியான வாய்ப்புகள் கிடைத்தால் நான் கூட அயோக்கியனாகி விடுவேன். பாலியல் சேவகரான வசந்தாவோடு ஓரிரவில் பேசிக்கொண்டேயிருப்பார். நெற்றியில் லேசாக முத்தமிடுவார். 'இந்த குழந்தை வாழ்வில் எல்லா வளமும் பெறவேண்டும்' என்று இறையை வேண்டுவார். அடிக்கடி குதிரை கவிதை எழுதுவார். 'பனிவிழும் மலர்வனம்' பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பார். அலுவலகத்தில் நல்ல அதிகாரி. யோசித்துப் பார்த்தால் ஆர்ட்ஃபிலிம் ஹீரோ மாதிரியான கேரக்டர்.
நாவலில் அடிக்கடி வரும் குதிரைகவிதைகளை முதல்தடவை படித்தபோதே பொருள்புரியாமல் நொந்துவிட்டேன். அது மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற குழப்பம் வேறு. இம்முறை வாசிக்கும்போது கவனமாக குதிரைக்கவிதைகளை தவிர்த்தே வாசித்தேன். ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இத்தனைக்கும் குதிரைக்கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம்.
ஒரேநாளில் இரண்டு லாரிகளை இழந்துவிடும் ராவுத்தர், லாரித்தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் நஷ்டமடையும் காந்திலால், பாலியல் சேவகர் வசந்தா, இன்னொரு பாலியல் சேவகர் கவுசல்யா, வடிவேலு என்று எல்லா கேரக்டர்களையுமே லேசாக கோடுபோட்டுக் காட்டாமல் பின்னணிக் கதைகளை நேரில் பார்ப்பதுபோல படம்பிடித்துக் காட்டும் ஆற்றல் அப்போது பாலகுமாரனுக்கு இருந்திருக்கிறது. நாணு அய்யர் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவளது இரண்டாவது மகள் காயத்ரி அவருடைய ஜெராக்ஸ். கல்யாணம் வேணாம், எனக்கு குழந்தை மட்டும் குடு என்று விஸ்வநாதனை தைரியமாக கேட்பவள். மகளுடைய ஆசை நியாயமானதுதான் என்று நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். பாலச்சந்தர் ஏன் இந்த கேரக்டர்களை சினிமாவில் கொண்டுவராமல் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.
லாரி தொழிலின் தொழில்நுணுக்கங்களை எளிமையாக எழுதியிருப்பார். ஒரு லாரித் தொழிலாளி கூட இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம். பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகே இவ்வளவு நேர்த்தியைக் கொண்டுவந்திருக்க முடியும். இவ்விஷயத்தில் பாலகுமாரனின் உழைப்பு கொண்டாடப்பட வேண்டியது.
இரும்பு குதிரைகள் - வாசிப்பை நேசிப்பவர்களுக்கு எக்ஸ்பிரஸ்.

24 நவம்பர், 2008

விளம்பர உலகம்!

"ங்கா.. ங்கா..' என்று ஒரு குழந்தை அழுகிறது. என்ன காரணம்? குழந்தைக்குப் பசிக்கிறது, பால்வேண்டும் என்பதுதானே? பேசத் தெரியாத குழந்தைகூட குறிப்பாகத் தன்னுடைய தேவையை உணர்த்தி விடுகிறது இல்லையா? இதற்குப் பெயர்தான் விளம்பரம்.

நூலின் பெயர் : சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா

பக்கங்கள் : 152

விலை : ரூ. 70/- வெளியீடு : கிழக்கு பதிப்பகம், எண் 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 மின்னஞ்சல் : support@nhm.in இணையம் : www.nhm.in சினிமாத்துறையைப் போலவே விளம்பரத்துறையும் பிரம்மாண்டமானது. பல கோடிகள் புழங்கும் துறை. பிரபலங்களை மேலும் பிரபலங்களாக்கும் துறை. இத்துறைக்குள் நுழைவது ஒன்றும் சக்கரவியூகத்துக்குள் நுழைவதுபோலக் கடினமானதல்ல. கொஞ்சம் முயற்சி செய்தால், விளம்பரங்கள் குறித்து கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும். எளிதாக நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிவிடலாம். இப்போதெல்லாம் சினிமாத்துறைக்குள் நுழைய விரும்புபவர்கள் முன்னோட்டமாகத் தேர்ந்தெடுப்பது, விளம்பரத்துறையைத்தான் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. விளம்பரத்துறை குறித்த போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை. பல விளம்பர முன்னோடிகள் தமிழர்களாக இருந்தும் இந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், ஆங்கிலப் புத்தகங்களைத்தான் நாடவேண்டிய நிலை. ஆங்கிலத்தில் இந்தத் துறையின் ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் விரிவான பல நூல்கள் இருக்கின்றன. விளம்பரத்துறையின் மொழியே ஆங்கிலம்தான். அமெரிக்கப் பாணியில் நடத்தப்படும் விளம்பர ஏஜென்ஸிகளில் பணிபுரிய ஆங்கிலம் அத்தியாவசியமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழில் வாசிக்கும் சுகானுபவத்தை மற்ற மொழிகள் நமக்கு தந்துவிடுமா என்ன? நான் ஒரு ஏஜென்ஸியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கே நேர்முகத்தேர்வுக்காக ஓர் இருபது வயது இளைஞன் வந்திருந்தான். அவனது சொந்த ஊர் சிவகாசி. அங்கே சில அச்சகங்களில் ஓவியனாகப் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு இருந்தது. அருமையான ஓவியன். அவனிடம் ஒரு தயாரிப்பைப் பற்றிய சில விவரங்களைச் சொல்லி தலைப்புக் கொடுத்து ஒரு விளம்பரத்தை வரைந்து காட்டச் சொல்லியிருந்தேன். ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை வரைந்து தலைப்பு எங்கே வரவேண்டும், மற்ற விஷயங்கள் எங்கெங்கே வரவேண்டும் என்று வரைந்து காட்டியிருந்தானான். அவன் வரைந்து காட்டிய லேஅவுட் மிக அருமையாக வந்திருந்தது. "இந்த விளம்பரத்துக்கு எதற்காக கிரிக்கெட் வீரரை மாடலாக வைத்தாய்?' என்று கேட்டதற்கு, அவனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. "இவர்தான் இப்போது நிறைய விளம்பரங்களில் வருகிறார். இவரை மாடலாக வைத்தால் விளம்பரம் நன்கு கவனிக்கப்படும்' என்று பதில் சொன்னான். அவனுக்கு நல்ல ஓவியத் திறமை இருந்தது. ஆனாலும் விளம்பர நிறுவனத்தில் பணியாற்ற அதுமட்டும் போதாது. விளம்பரத்துறை குறித்த போதுமான அறிவு இருக்க வேண்டும். அருமையாக லேஅவுட் செய்வதும், மார்க்கெட்டிங் செய்வதும், டி.வி. விளம்பரங்களை படம்பிடித்துக் கொடுப்பதும் மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல. சுருக்கமாகச் சொல்லப் போனால் விளம்பரம் வெளியிடுவது மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல, அதையும் தாண்டி பொருளின் விற்பனையைப் பெருக்க உதவவேண்டும். நம்மில் நிறையப் பேர் விளம்பரங்கள் என்றாலே மாடல்கள்தான் என்று அந்த சிவகாசி பையனைப்போல நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் சொல்லப் போனால் மாடலிங் என்பது தனித்துறை. விளம்பரத்துறையைச் சார்ந்த இன்னொரு பெரிய துறை. அப்படியென்றால் எது விளம்பரத்துறை,? விளம்பரத்துறையில் யார் யார் இருக்கிறார்கள்,? என்ன என்ன செய்கிறார்கள்? போன்ற சந்தேகங்கள் வரலாம். அந்தச் சந்தேகங்களை எல்லாம் இந்தப் புத்தகம் வாயிலாகத் தீர்த்துக்கொள்ளப்போகிறோம். விளம்பரத்துறையின் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் தனித்தனியாகவே புத்தகமாக எழுதமுடியும் என்றாலும், தமிழில் இந்தத் துறை குறித்து அறிந்துகொள்ளப் போதுமான புத்தகங்கள் இல்லாத நிலையில் இந்தத் துறை பற்றிய பறவைப் பார்வையைப் பார்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவும். - யுவ கிருஷ்ணா சென்னையைச் சேர்ந்த யுவகிருஷ்ணா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். விகடன் குழுமத்தின் இணையத்தளமான யூத்ஃபுல்.விகடன்.காமில் தொடர்ந்து எழுதிவரும் யுவகிருஷ்ணா, இணைய வலைப்பூக்களிலும், சஞ்சிகைகளிலும் ஏராளமாக எழுதிவருகிறார். இணையத்தில் இவரது பெயர் லக்கிலுக்.

விளம்பர உலகம் - ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும்!...

18 நவம்பர், 2008

பகல் வேஷம்!

வாழ்க்கையில் இரட்டை வேடம் போடுபவர்களை "பகல் வேஷம் போடுறாண்டா!" என்று நாம் சொல்வதுண்டு. பகல் வேஷம் ஒரு காலத்தில் உன்னதக் கலையாக, தொழிலாக தமிழகத்தில் இருந்ததுண்டு. உத்திரமேருரூக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களில் இன்னமும் பகல்வேடக் காரர்கள் உண்டு. என்ன தொழிலை தான் மாற்றிக் கொண்டார்கள். பல பேர் விவசாயக் கூலிகளாகவும், கல்லுடைப்பவர்களாகவும் உருமாறியிருக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் திருப்புலிவனம் செல்ல நேர்ந்தது. அங்கே சில முன்னாள் பகல்வேடக் காரர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. சினிமா வரும் காலத்திற்கு முன்பாக மக்களுக்கு பொழுதுபோக்க பயன்பட்ட கலை தெருக்கூத்து. பண்டிகைக் காலங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் இரவுவேளைகளில் தெருக்கூத்து நடத்துவார்கள். தெருக்கூத்தின் சப்ஜெக்ட் பொதுவாக இதிகாசக் கதைகளாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் அமைந்திருக்கும். ராஜா வேடம் போடுபவரை ராஜபார்ட் என்றும், ராணி வேடமோ அல்லது பெண்வேடமோ தரிப்பவரை ஸ்த்ரீபார்ட் என்றும் அழைப்பார்களாம். பெண்கள் யாரும் தெருக்கூத்தில் பங்கேற்க அப்போது அனுமதியில்லை என்பதால் ஆண்களே பெண் வேடமும் அணியவேண்டிய நிலை இருந்திருக்கிறது. தெருக்கூத்து கட்டுபவர்கள் நல்ல பாடகர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை தெருக்கூத்து கலைஞர்கள் மட்டுமல்லாமல் பார்ட் டைமாக விழாக்காலங்களில் மட்டும் கூத்து கட்டுபவர்களும் இருந்திருக்கிறார்கள். வருமானத்துக்கு என்றில்லாமல் புகழுக்காக இத்தொழிலை பகுதிநேரமாக செய்திருக்கிறார்கள். எனது தாய்வழி பாட்டனார் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் அகரம்தூளி என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் அவர். கோயில் திருவிழாக்களில் ராஜபார்ட் வேடம் கட்டுவாராம். அவரது உறவினர் ஒருவர் ஸ்த்ரீபார்ட் போடுவாராம். திருவிழா முடிந்ததுமே அவரவர் வேலையை (பொதுவாக விவசாயம்) கவனிக்கப் போய்விடுவார்கள். ஆனாலும் கூத்தையே தொழிலாக கொண்டவர்கள் தெருக்கூத்து இல்லாத காலங்களில் வருமானத்துக்காக பகல்வேடம் பூணுவார்கள். அதிகாலை நான்கு மணியளவில் எழுந்து முகம் முழுக்க அரிதாரம் பூசி சிவன், கிருஷ்ணன், ராமன், ராவணர், அசுரர், நாரதன் என்றெல்லாம் வேடம் பூண்டு அருகிலிருக்கும் கிராமங்களுக்கு செல்வார்கள். ஒவ்வொரு வீடாக சென்று பாட்டு பாடியோ, வசனம் பேசியோ பணமாகவோ, நெல்லாகவோ ஏதாவது பொருளாகவோ பெறுவார்கள். உணவும் ஏதோ ஒரு வீட்டில் விருந்தாக கிடைக்கும். அக்காலங்களில் பகல்வேடக் காரர்களுக்கு மக்களிடையே நல்ல மதிப்பும் இருந்திருக்கிறது. கடவுள் வேடம் போட்டவர்கள் ஆசீர்வதித்தால் தங்கள் குடும்பம் விளங்கும் என்ற நம்பிக்கையும் பலபேருக்கு இருந்திருக்கிறது. சில பகல்வேடக் காரர்கள் கூட்டமாக மற்ற மாவட்டங்களுக்கு ஓரிரு மாதங்கள் சுற்றுப்பயணமாக சென்றும் தங்கள் தொழிலை செய்வதுண்டு. அவ்வாறு வேடம் இட்டுவரும் பகல்வேடக் காரர்களிடமே அந்த வருட திருவிழாவுக்கு தெருக்கூத்து கட்ட பேரம் பேசி கிராமத்து முக்கியஸ்தர்கள் அட்வான்ஸும் கொடுத்து விடுவார்களாம். இதெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. சினிமாத் தொழில் வளர்ந்ததால் பாதிக்கப்பட்டது நாடகக்கலை மட்டுமன்று, இக்கலையும் தான். இன்றைய தேதியில் மிக மிக குறைவானவர்களே பகல் வேடம் கட்டுகிறார்கள். தெருக்கூத்துக்கும் இளைய சமுதாயத்திடம் அவ்வளவாக வரவேற்பில்லை. ஒரு உன்னத கலையை தொழிலாக கொண்டவர்கள் மாறிவரும் சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு தெரியாமலேயே மறைந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முறை சாலையில் எங்கேயாவது ராமன் வேடம் போட்டவரோ, ராவணர் வேடம் போட்டவரோ உங்களிடம் காசு கேட்டால் தயவுசெய்து எரிந்து விழாதீர்கள். நம் முன்னோர்கள் பொழுதுபோக்க உதவிய ஒரு பெரும் கலையின் மிச்சமாய் அவர்கள் மட்டுமாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

17 நவம்பர், 2008

செய்திகள் வாசிப்பது!

1987 டிசம்பர் 24 அன்று தான் அந்த ஆசை எனக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சென்னை தொலைக்காட்சியின் செய்திகளில் கையில் கட்டோடு, ஷேவ் செய்யாத முகத்தோடு, கண்களில் தேங்கிய கண்ணீரோடு வரதராஜன் செய்தி வாசிக்கிறார். “தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் மரணம்” எங்களது பள்ளியில் தினமும் பிரார்த்தனைக் கூட்டம் காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன்பே நடக்கும். பிரார்த்தனை என்றால் தமிழ்த்தாய் வாழ்த்து, ஒருமைப்பாடு உறுதிமொழி, தலைமையாசிரியருக்கு சிறப்பு மரியாதை, தேசியகீதம் ஆகியவை இருக்கும். எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும். 9.30 மணிக்கு பள்ளி என்றால் 9 மணிக்கே எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் மைதானத்தில் குழுமிவிட வேண்டும். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது பிரார்த்தனையோடு “குறள் விளக்கம்” என்ற புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்றினை சேர்த்தார்கள். ஒரு குறள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லவேண்டும். பள்ளியில் யாருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருகிறது என்று கருப்பு தமிழய்யா தேடியபோது அதிர்ஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ என் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தினமும் பிரார்த்தனைக்கு வராமல் லேட்டாக வரும் மாணவன் என்பதால் என்னை சீக்கிரம் வரவைக்கும் யுக்தியும் இதில் இருந்திருக்கிறது. வீட்டில் அதிகாலையில் (ஆறரை மணி) எழுந்து “கற்க கசடறக் கற்பவை கற்றபின்” என்று கண்ணை மூடி மனப்பாடம் செய்து, மு.வ. எழுதிய விளக்கத்தையும் எழுதிக்கொண்டு அவசர அவசரமாக பள்ளிக்கு ஓடுவேன். தினமும் ஒரு குறள். காமத்துப்பால் தவிர்த்து ஒரு அறுநூறு, எழுநூறு குறள்களையாவது ஐந்து ஆண்டுகளில் மைக்கில் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஏழாவது படிக்கும்போதா, அல்லது எட்டாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தமிழய்யா பிரார்த்தனை கூட்டத்தின் போது 'செய்தி வாசித்தால்' வித்தியாசமாக இருக்கும் என்று தலைமையாசிரியரிடம் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியருக்கும் அந்த யோசனை பிடித்துப் போகவே “குறள் விளக்கம்” சொல்லும் பையனே அதையும் செய்யட்டும் என்று சொல்லிவிட்டார். கருப்பு தமிழய்யா உச்சரிப்புகள் குறித்து ஒரு வாரம் எனக்கு சிறப்பு வகுப்பு எடுத்தார். தினமும் இரவு ஏழரை மணிக்கு செய்திகள் ஓடும்போது, கூடவே நானும் சொல்லி பயிற்சி செய்தேன். எனக்கு செய்திகளை எழுதித்தர செந்தில் (என்னுடைய பெரியம்மா பையன்) என்ற மூத்த வகுப்பு மாணவருக்கு சொல்லப்பட்டிருந்தது. செந்தில் தினமும் மாநில செய்திகள் கேட்பார், தினமணி படிப்பார். பின்பு அவற்றிலிருந்து முக்கியச் செய்திகளை தலைப்பாக எழுதி வைத்துக் கொண்டு.. ஒவ்வொரு தலைப்புக்கும் நான்கு அல்லது ஐந்து லைனில் சுருக்கமாக செய்தி எழுதுவார். வாசிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக ரெண்டு, மூன்று முறை வாசித்துப் பார்ப்பேன். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும்போது பள்ளியில் அதிக ஒலியோடு ஆசிரியர் சொல்லுவதற்கு பின்பாட்டு பாடும் பாணியிலேயே ராகத்தோடு செய்தி வாசித்துக் கொண்டிருந்தேன். நாளாக, நாளாக கொஞ்சம் ஸ்டைலாக வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பாணியில் நிறுத்தி வாசிக்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்க தொடங்குவதற்கு முன்னால் “செய்திகள் வாசிப்பது உங்கள் லக்கிலுக்” என்று சேர்த்து சொல்ல ஆரம்பித்தேன். இதுபோல சொல்வதற்கு ஏதாவது ஆட்சேபணை வந்தால் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். நல்லவேளையாக தமிழய்யாவுக்கும் அது பிடித்திருந்ததால் தொடர்ந்தது. செய்திகள் வாசித்ததால் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தாலும் பள்ளியில் நல்ல பிரபலம் கிடைத்தது. பெரிய வகுப்பு மாணவர்கள், சிறிய வகுப்பு மாணவர்களை கிண்டல் செய்வார்கள். என்னை மட்டும் கொஞ்சம் மரியாதையோடு பார்க்க ”செய்திகள்” உதவியது. “செய்திகள்” புண்ணியத்தால் தமிழய்யாவின் அறிவிக்கப்படாத சீடனாகவும் கெத்தாக உலவ ஆரம்பித்தேன். எனக்கு செய்திகள் எழுதித்தந்த நியூஸ் எடிட்டரான செந்தில் பள்ளி இறுதி வகுப்புக்கு வந்து விட்டதால் காலையில் ட்யூஷன் செல்ல ஆரம்பித்தார். அவரை தொல்லை செய்யாமல், என்னையே செய்திகள் எழுதிக்கொள்ளும்படி தமிழய்யா சொன்னார். தயங்கியபோது அவ்வப்போது சில டிப்ஸ்களும் தந்து தன்னம்பிக்கையை அதிகரித்தார். நாளாக நாளாக நியூஸ் எடிட்டிங் கைவந்த கலை ஆகிப்போனது. தலைப்புகளை மட்டும் எழுதிக்கொண்டு வந்து என் சொந்த சொல்நடையோடு வாசிப்பது சுலபமாக இருந்தது. மிக கவனமாக ‘கலைஞர்' என்று சொல்லாமல் திரு.கருணாநிதி என்று சொல்வது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ”எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள்?” என்று பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேட்பது வழக்கம். ‘டாக்டர், இன்ஜீனியர், வக்கீல்' என்று என் வகுப்பு மாணவர்கள் சொல்லும்போது நான் மட்டும் ‘செய்தி வாசிப்பாளன், அரசியல்வாதி அல்லது லைப்ரேரியன்' என்று சொல்லி சொர்ணம் டீச்சரை ஒருமுறை ஆச்சரியப்படுத்தினேன். அவரை ஆச்சரியப்படுத்துவதற்காக அதை அப்போது சொல்லவில்லை. உண்மையில் நான் என்னவாக விரும்பினேனோ, அதை தான் சொன்னேன். செய்திவாசிப்பு பழக்கத்தால் ஒருமுறை பேச்சுப்போட்டியில் திடீரென்று கலந்துகொண்டு பரிசு வாங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆறாம் வகுப்பிலிருந்து கட்டுரை போட்டியில் மட்டுமே கலந்துகொள்வேன். மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்றவற்றில் கலந்துகொள்ள எனக்கு தயக்கம் இருந்தது. பத்தாம் வகுப்பு வந்தபோது என்னிடம் சொல்லாமலேயே என் பெயரை போட்டிக்கு தமிழய்யா சேர்த்து விட்டிருந்தார். ‘எனக்குப் பிடித்த தலைவர்' என்ற மொக்கை தலைப்பில் பேசவேண்டும். நானும் அவசர அவசரமாக வீட்டிலிருந்த சில புத்தகங்களைப் புரட்டி 'எனக்குப் பிடித்த தலைவர் கலைஞர்' என்று பேச ஸ்க்ரிப்ட் ரெடி செய்து தயாராகியிருந்தேன். பேச்சுப்போட்டியன்று நான் ‘எனக்கு பிடித்த தலைவர் டாக்டர் கலைஞர்' என்று சொன்னதுமே தண்டபாணி மாஸ்டர் ஆட்சேபித்தார். ”உயிரோடு இருக்கும் தலைவர்களை பற்றி பேசக்கூடாது” என்று ஒரு விதி இருப்பதாக சொன்னார். அவர் காங்கிரஸ்காரர். கலைஞரை அவருக்கு சுத்தமாக பிடிக்காது. சமூக அறிவியல் பாடம் நடத்தும்போது லைட்டாக கலைஞரை தாக்கி அரசியல் பேசுவார். நான் உட்பட சில திமுக சார்பு மாணவர்கள் உடனே எதிர்ப்பு தெரிவிப்போம். அந்த காண்டு அவருக்கு இருந்தது. எனக்கு முன்பு பேசியவர்களும் காந்தி, நேரு, காமராஜர் என்று தான் பேசியிருந்தார்கள். தமிழய்யாவை பரிதாபமாகப் பார்த்தேன். “அய்யாவைப் பற்றி என்ன தெரியுமோ, அதைப் பேசுடா” என்றார். நான் படித்த பள்ளியின் பெயரே ‘தந்தை பெரியார்' பெயரில் இருந்தது. தமிழய்யாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெரியார் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். இருப்பினும் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தட்டுத் தடுமாறி பேசி முடித்தேன். “பெரியார் வெறும் கடவுள் எதிர்ப்பாளர் மட்டுமே அல்ல. அவர் ஒரு சமுதாய சீர்த்திருத்த சிற்பி” என்பதை மட்டும் கொஞ்சம் முத்தாய்ப்பாக சொல்லி வைத்தேன். நானே எதிர்ப்பார்க்காத நிலையில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பத்தாம் வகுப்பு முடிந்த நிலையில் நான் மேல்நிலைக்கல்வி கற்க வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கே வாரம் ஒருமுறை தான் பிரார்த்தனை. குறள்விளக்கம், செய்திகள் எதுவும் அங்கே இல்லை. எனவே செய்திகளோடு எனக்கிருந்த தொடர்பு கொஞ்சம் அறுந்தது. பழைய பள்ளியிலும் எங்கள் 'செட்' வந்தப்பிறகு புது தலைமையாசிரியர் வந்து ”செய்திகளை” தூக்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். அதன்பின்னர் ஒரு ஐந்தாண்டு காலத்துக்குப் பிறகு தான் மீண்டும் செய்திவாசிப்பாளர் ஆகவேண்டுமென்ற எண்ணம் வந்தது. தூர்தர்ஷன் செய்திகளுக்கு மவுசு குறைந்து சன் செய்திகள் பிரபலமான நேரம் அது. உச்சரிப்பு மட்டுமல்லாமல் தோற்றமும் செய்தி வாசிப்புக்கு முக்கியம் ஆகிப்போனது. பல்லி மாதிரி இருந்த நான் செய்தி வாசித்தால் யார் பார்ப்பார்கள்? என்ற தாழ்வுமனப்பான்மை எனக்கு எழுந்ததால் நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்க ‘பட்டம்' பெற்றிருக்க வேண்டும் என்று சொன்னதால், வானில் மட்டுமே பட்டம் விடத்தெரிந்த நான் விரக்தி அடைந்துப் போயிருந்தேன். செய்தி வாசிப்பு ஆசையை எல்லாம் மறந்து ஏழெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இருமாதங்களுக்கு முன்பு ‘சன் நியூஸில்' என்னுடைய ஒரு பைட்டு காட்டப்பட்டதால் மீண்டும் அந்த ஆசை கிளர்த்தெழுந்திருக்கிறது. செய்திகள் சம்பந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் ”நான் செய்தி வாசிக்க இயலுமா?” என்று கேட்டபோது ”இன்னமும் உன் குரல் உடையவில்லையே தம்பி. ஆள் கொஞ்சம் பரவாயில்லை. குரல் தான் கம்பீரமா இல்லை” என்று சொன்னதுமே கொஞ்சம் அடங்கிவிட்டேன். நண்பர் சொல்வது உண்மை தான். க்ரெடிட்கார்டு, லோனுக்கு எனக்கு தொலைபேசும் கும்மிகள் சில நேரங்களில் “மேடம்” என்று கூட விளிப்பதுண்டு. சென்ற வாரம் தென்மாவட்டங்களுக்கு அலுவலகப் பணி காரணமாக போயிருந்தபோது அங்கிருந்த உள்ளூர் சேனல்களின் செய்தியைப் பார்த்தேன். குரல், உச்சரிப்பு, தோற்றம் எதையுமே கணக்கில் கொள்ளாமல் செய்திவாசிப்பாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் :-) அட்லீஸ்ட் அங்கிருக்கும் ஒரு சேனலிலாவது ஒரே ஒருநாளாவது செய்திகள் வாசித்துவிடவேண்டும் என்ற கொலைவெறி மீண்டும் வந்திருக்கிறது. பார்ப்போம்!

14 நவம்பர், 2008

வாரணம் ஆயிரம்

இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது. அப்பாவின் கல்லூரி காதலில் ஆரம்பித்து அவரது இறுதி மூச்சு வரைக்கான கதை என்று எடுத்துக் கொண்டாலும் இதில் மகன் வளர்வது, காதலிப்பது, மேட்டர் முடிப்பது, தண்ணியடிப்பது, டோபு அடிப்பது மாதிரியான கருமங்கள் எதற்காக? மகனின் பார்வையில் அப்பா என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டாலும் அப்பாவுக்கு நேரடி தொடர்பில்லாத மகனின் அந்தரங்கம் காட்சியாக்கப்பட்டிருப்பது எல்லாம் அனாவசியம். சுவாரஸ்யம் குறைவான ஒருவரின் வாழ்க்கை வரைபடம் இத்திரைப்படம். அனேகமாக இயக்குனர் கவுதமின் சொந்தக்கதையாக இருக்கலாம். மகன் சூர்யாவின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அனைத்திலும் அச்சு அசலாக கவுதம் வாசுதேவ் மேனன். இயக்குனருக்கு சினிமா சென்ஸ் ரொம்பவும் அதிகம். தனித்தனி காட்சிகளாக பார்த்தால் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது புலப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்கும்போது கொட்டாவிதான் வருகிறது. சாரி கவுதம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பா கேரக்டருக்கு ரகுவரன்; மகன் கேரக்டருக்கு கமல்ஹாசன் ஆகியோரின் உடல்மொழியை அப்பட்டமாக பின்பற்றுகிறார். இயக்குனர் கமல்ரசிகர் என்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'. அப்பா, மகன் இரண்டு கேரக்டரையும் சூர்யாவே எடுத்து நடித்தது ஏன் என்பதை அவராலும், இயக்குனராலும் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது. வேறொரு நடிகரை அப்பாவாக நடிக்க வைத்திருந்தால் தயாரிப்புச் செலவாவது குறைந்திருக்கும். ஆயினும் தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. வானில் ஹெலிகாப்டரில் மேஜர் சூர்யா பறக்கிறார் என்றால் அதை வானிலேயே சென்று படமாக்கும் மிஸ்டர் பர்ஃபெக்ட் இயக்குனர். அந்த ராணுவகாட்சிகளுக்கான டோன் அபாரம். திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டே பார்ப்பார்கள். அமெரிக்க காட்சிகளும், பாடல்களும் வாவ். படத்தைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆமையை விட மெதுவாக நகரும் காட்சிகள் ஏற்படுத்தும் கடுப்பின் எல்லைக்கு அளவேயில்லை. இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது. இறுதிக்காட்சிக்கு இடையே தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட இராணுவமீட்பு சண்டை சூப்பர் என்றாலும் தேவையே இல்லை. சமீரா ரெட்டி என்ற சப்பை ஃபிகரை எப்படித்தான் சூர்யாவுக்கு ஜோடியாக சேர்த்தார்களோ? காதலை சொல்லும் கட்டத்தில் பூ மாதிரி முகத்தை மலரவைக்க வேண்டாமா? ரியாக்‌ஷன் காட்டுவதில் கஞ்சத்தனம். நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு குத்து ரம்யா (எ) திவ்யாவின் எண்ட்ரி வருவதால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம். சிம்ரன் இளமையாக தோன்றும் காட்சிகள் நிறைவு. வயதான கெட்டப் மோசமென்றாலும், நடிப்பில் சோடைபோகவில்லை. கிராபிக்ஸில் பழைய சென்ட்ரல், அந்நாளைய ஸ்பென்ஸர் பிளாஸா ஆகியவற்றை பாடலில் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் 60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் அவை. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது, மேஜிக்கும் இருக்கிறது. சராசரி தமிழ் சினிமா ரசிகனால் பார்க்கவே முடியாத படமிது. தெலுங்கிலும் டப் செய்திருக்கிறார்களாம், அங்கே திரையை ரசிகர்கள் கிழிக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம். வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!

11 நவம்பர், 2008

யுவதா!

தெலுங்கில் அடிதடி, மசாலா, அஜால் குஜால் காலக்கட்டங்களை எல்லாம் தாண்டி காமெடிக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் பார்த்த 'யுவதா'வும் காமெடி மசாலா. காமெடி என்று இறங்கிவிட்டால் லாஜிக்கெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா? ஊரில் மாமா வீட்டில் இருந்து சிட்டிக்கு வரும் ஹீரோ பாபு. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கும்மாளம் - இதைத்தவிர அவனுக்கு வேறெதுவுமே தெரியாது. நட்புக்காக உயிரையும் கொடுப்பான். சிட்டியில் பட வாய்ப்பு தேடும் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர், காதலியை கைப்பிடிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு போக முயற்சிக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், வங்கிப் பணத்தை பாதுகாக்கும் ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் என்று அவனுக்கு மூன்று நண்பர்கள். நண்பர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே பாபுவின் வேலை. இடையில் எகனை மொகனை போன் கால் ஒன்றில் பேபி என்ற ஒரு அழகான காதலியும் பாபுவுக்கு கிடைக்கிறாள். மகிழ்ச்சியாக பயணப்படும் திரைக்கதையில் திடீரென்று ஒரு ஜெர்க் அடித்து அடிதடியை நுழைத்து படத்தை த்ரில்லர் ஆக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நண்பனின் உயிரைக் காக்க ஒரு வட்டிக்கார வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் மற்ற நண்பர்கள், வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து, யாரோ அடித்த இருபது கோடி கொள்ளைக்காக ஜெயிலுக்குப் போகிறார்கள். அதன் பின்னர் வரிசையாக தடாலடியாக இறக்கிவிடப்படும் கொடூர வில்லன்கள் ஒவ்வொருத்தராக காமெடியன்களாகி விட இறுதியில் ஒரிஜினல் வில்லன் ஜெயிலுக்குப் போகிறார். நண்பர்கள் மகிழ்ச்சியோடு தொடர்கிறார்கள். நட்பு தான் பெஸ்ட்டு என்று அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர். இடைவேளைக்கு முன்பு வேறுபடம், இடைவேளைக்குப் பின்பு வேறுபடம் என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் காட்சியமைப்புகள். நல்லவேளையாக ஹீரோ, ஹீரோயின் போன்றவர்கள் மாறாமல் இருப்பதால் ஒரே படம் தான் என்று நம்பமுடிகிறது. ஹீரோ நிகில் செம அசத்து அசத்தியிருக்கிறார். உங்கள் வீட்டருகில் பஸ் ஸ்டேண்டு பக்கத்தில் பொட்டிக்கடை இருந்தால் அங்கே யாராவது ஒரு பையனை அடிக்கடி பார்த்திருப்பீர்களே? அதுபோன்ற ஒரு சராசரி தோற்றம். தமிழில் மொழிமாற்றம் செய்தால் தனுஷ் நச்சென்று செட் ஆவார். சராசரித் தோற்றத்துக்கு அசாதாரண அழகியான அக்‌ஷா ஹீரோயின் -பாடல்களில் தாராளம். ரியாக்‌ஷன்களில் சிக்கனம். அடுத்தடுத்த தொடர்ச்சியான காட்சிகளாலேயே படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது அபாரம். தேவையில்லாமல் திணிக்கப்பட்ட சண்டைக்காட்சியோ என்று எண்ணும்போது, அந்த சண்டைக்காட்சியே கதையின் திருப்பத்துக்கு மூலகாரணமாக அமைகிறது. ஹாஸ்பிட்டலில் நடப்பதாக சொல்லப்படும் ஆள்மாறாட்டம் காதுல பூ! இரண்டு ஜோடி காதலர்கள் இருந்தாலே சாங்குகளாக போட்டு சாவடிப்பார்கள் தெலுங்கு இயக்குனர்கள். இந்தப் படத்தின் இயக்குனர் கவனமாக சதையை தவிர்த்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குனர், அவ்வளவாக அறிமுகமில்லாத கதாநாயகன் என்றாலும் கதை, திரைக்கதை, நகைச்சுவைக்காக குடும்பத்தோடு காணலாம். யுவதா - யூத்துடா!!

10 நவம்பர், 2008

காதை மட்டும் கொண்டாங்க!

இரட்டை கும்மிப்பதிவர்கள் இருவரையும் அடிக்கடி பெரியார் திடல் பக்கம் பார்க்க முடிகிறதாம். அமாவாசைக்கும் அப்துல்காதர்களுக்கும் என்ன சம்பந்தம்? நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்... * - * - * - * - * - * - * - * - * - * - * அவர் பிரபல செய்தியாளர். அவ்வப்போது வலைப்பதிவும் செய்கிறார். எங்கு செல்ல வேண்டுமானாலும் அலுவலக மகிழுந்து தயாராக இருந்தாலும், ஒரு இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். "PRESS" என்று வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரும் சென்னையில் ஹெல்மெட் அணிவதில்லை. இருந்தாலும் நம்ம ஆளு கவசகுண்டலத்தோடு கர்ணனைப் போல எப்போதும் ஹெல்மெட் அணிந்தே காட்சியளிக்கிறாராம். வண்டி ஓட்டும் நேரம் தவிர்த்தும் கூட மற்ற எல்லா நேரமும், பாத்ரூமுக்கு போகும்போதும் கூட ஹெல்மெட்டோடே எச்சரிக்கையாக செல்கிறாராம். ”சிக்னல்ல ஹெல்மெட் இல்லாம போறவங்களை கமிஷனர் ஆபிஸ்லே இருந்துக்கிட்டே மானிட்டர்லே பார்க்குறாங்க. வேலை விஷயமா அங்கே போறப்போ நீங்கள்லாம் கூடவா சார்னு கேட்குறாங்க. அதுனாலே தான்” என்று ஹெல்மெட்டுக்குள் இருந்து காரணம் சொல்கிறார். மனிதர் எப்போதும் ஹெல்மெட்டுக்குள் தலையை கொடுத்து விடுவதால் அவரது கைப்பேசிக்கு ஒரு ரூபாய் போனில் இருந்து முயற்சி செய்யும் அப்பாவி புதுப்பதிவர்கள் லைன் கிடைக்காமல் கடுப்பாகி டாஸ்மாக்குக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சிங்காரி சரக்கு.. நல்ல சரக்கு.. * - * - * - * - * - * - * - * - * - * - * ஆசை ஆசையாக சினிமா ஃபீல்டுக்கு வந்த வலைப்பதிவர் அவர். சீனியர் போஸ்டில் இருப்பதால் தினம் தினம் மொக்கைப்படங்களாக ஓசியில் பார்த்து சினிமாவையே வெறுத்துவிட்டாராம். பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருக்கிறாராம். கமல் ரசிகரான அவரின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர் அவதாரமாக இருக்கக்கூடுமாம். புத்தாண்டில் புது அவதாரம் என்று காதைக்கடிக்கிறது அவருக்கு நெருக்கமான ஒரு சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... * - * - * - * - * - * - * - * - * - * - * பெண் பெயரில் ஆ(சா)பாசமாக களமிறங்கி பல 'பெருசு' பதிவர்களிடம் காதல் கடிதம் பெற்றவர் அந்தப் பதிவர். பிரம்மச்சாரி வேடம் அலுத்துவிட்டதாம். அடுத்தாண்டு ஆரம்பத்தில் மாமன் மகளை கைப்பிடிப்பார் என்று மருதமலையில் பேசிக்கொள்கிறார்கள். முன்னோட்டமாக 'தனி வீடு கூட பார்த்தாச்சு' என்று சரவணா ஸ்டோரில் அவர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தபோது சந்தித்த பதிவர் ஒருவரிடம் கிசுகிசுத்திருக்கிறார். ரகசியம் பரமரகசியம்! * - * - * - * - * - * - * - * - * - * - * வயது நாற்பதை நெருங்கினாலும் அஜித் கலரில், ஜே.கே.ரித்தீஷ் தோற்றத்தில் ‘நச்'சென்றிருக்கும் பதிவர் அவர். அவரை நாயகனாக்கி ஒரு படம் இயக்க இரட்டை இயக்குனர்கள் கதை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்களாம். குறைந்தபட்சம் ஒரு ‘மேட்டர்' படத்திலாவது அப்பதிவரை நாயகனாக்கி பார்க்க இரட்டை இயக்குனர்கள் தொடர் குண்டுவெடிப்பு தீவிரத்தோடு அலைகிறார்கள். தயாரிப்பாளர் தான் இதுவரை மாட்டவில்லை. பேசாமல் நாயகனையே தயாரிப்பாளராக்கி ‘அஜால் குஜால்' படத்தை அவசரமாக முடித்து ரிலீஸ் செய்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். சிம்மா.. நரசிம்மா.... * - * - * - * - * - * - * - * - * - * - * பதிவர் சந்திப்புகளில் மட்டும் முன்பெல்லாம் கலந்துகொண்டவர் அவர். அவருக்கென்று ஒரு வலைப்பதிவு கூட இருப்பதாக தெரியவில்லை. வெறுமனே வாசகர் என்று சொல்லிக் கொள்வார். குறிப்பாக 'மூத்த' வலைப்பதிவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கண்டிப்பாக ஆஜராவார். கடந்த ஒரு வருடமாக ஆளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்தாலாவது அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள். பூபாளம் இசைக்கும்.... * - * - * - * - * - * - * - * - * - * - * இரண்டாண்டுகளுக்கு முன்பாக பலமான ‘திராவக' சிந்தனையோடு களமிறங்கிய பதிவர். அடித்து ஆடுவதில் வல்லவர். இடையில் குடும்பம், குழந்தை, குட்டி, வேலை என்று பிஸியாகிவிட்டதால் வலைப்பதிவுக்கு நீண்ட லீவ் விட்டிருந்தார். இப்போது அழகிகள் நிறைந்த அயல்நாட்டில் பணியாற்றுபவருக்கு சமையல் வேலையெல்லாம் முடித்தபினி நிறைய நேரம் மிச்சமிருக்கிறதாம். மீண்டும் வலைப்பதிய தொடங்கியிருக்கிறார். மெதுவாக டொக்கு வைத்து ஆடிக்கொண்டிருப்பவர் சந்தர்ப்பம் கிடைத்ததுமே பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாச ஆரம்பிப்பாராம். முன்பெல்லாம் பார்ட்னர்ஷிப்பில் அசத்திக் கொண்டிருந்தவர் இந்த முறை தனியாகவே கொளுத்து கொளுத்துவென்று கொளுத்த திட்டமிட்டிருக்கிறார். ஆடுங்கடா என்னை சுத்தி... * - * - * - * - * - * - * - * - * - * - * மொழிவாசனைக்குப் பிறகு பதிவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரட்டி அது. மொழிவாசனை கொஞ்சநாட்களாக அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்வதால் இத்திரட்டிக்கு நாளுக்கு நாள் ஹிட்ஸ் டபுள் ஆகிறதாம். வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் திரட்டியின் உரிமையாளர் அடுத்ததாக ஆங்கிலத்தில் வலைப்பதியும் தமிழர்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறாராம். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்....

7 நவம்பர், 2008

குவாண்டம் ஆஃப் சோலஸ்!

முந்தைய பாகமான கேசினோ ராயலின் க்ளைமேக்ஸில் இருந்து அதிரடியாக தொடங்குகிறது குவாண்டம் ஆஃப் சோலஸ். படு பரபரப்பான கார் சேஸிங் ஓபனிங்கின் இறுதியில் வெற்றி வழக்கம்போல ஜேம்ஸுக்கே. முந்தைய பாகத்தில் கொல்லப்பட்ட ஜேம்ஸின் காதலி வெஸ்பரின் மரணத்துக்கு பழிதீர்க்க அடிபட்ட வேங்கையாய் குமுறிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ். அவரிடம் இருந்த ஒரே ஆதாரம் ஒயிட். ஒயிட்டை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் குழுவில் இருக்கும் சகா மிட்சல் என்பவர் ஒயிட்டை தப்புவிக்க விசாரணைக்குழுவை சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறார். பின்னணியில் இருக்கும் குழு எத்தகைய தந்திரமிக்கது, செல்வாக்கானது என்பதை ஜேம்ஸ் உணருகிறார். அந்த குழுவின் பெயர் குவாண்டம் என்பதைத் தவிர்த்து அப்போதைக்கு வேறு க்ளூ எதுவுமில்லை. வழக்கம்போல ஓரிரு அழகிகளோடும், இரவுப்பொழுது சல்லாபங்களோடும் கொஞ்சம் சீரியஸாகவே இந்தமுறை விசாரணையை மேற்கொள்கிறார் ஏஜெண்டு 007. விசாரணைக்கு அரசாங்கரீதியான முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ஒரு கட்டத்தில் தன் பாஸையே கூட முறைத்துக்கொண்டு, க்ளைமேக்ஸில் பாண்டுக்கு வெற்றி. படம் முழுக்க கண்களில் கொலைவெறியோடு அய்யனார் போல ஆவேசமாக அலையும் ஜேம்ஸ் தன்னுடைய தனிப்பட்ட பழி தீர்ந்தபிறகே மலையேறுகிறார். இவ்வளவு ஆக்ரோஷமாக ஜேம்ஸை இதற்கு முந்தைய படங்களில் பார்த்திருக்க முடியாது. கதாநாயகிக்கும் ஜேம்ஸ் போலவே பழிவாங்கும் வெறி. அழகான, அசத்தல் கட்டையான அவரது கண்கள் மட்டும் நாகப்பாம்பை நினைவுறுத்துகிறது. ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரேக்குக்கு ரெண்டாவது படம். இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட்களிலேயே கட்டுடல் இவருக்குத்தான். ரீட் & டைலர் கோட் சூட் போட்டாலும் கூட உடல் கட்டு தெறித்துக்கொண்டு தெரிகிறது. பாண்ட் படங்களுக்கு ஹீரோயின்களை எங்கிருந்து பிடிப்பார்களோ தெரியவில்லை. உலக அழகிகளை விடவும் அழகாக இருக்கிறார்கள். அதிலும் டேன் செய்து உடலை மாநிறமாக்கியிருக்கும் அழகி கேமில் செம பீஸ். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சொல்லவேண்டிய கதையை காட்டுத்தனமான எடிட்டிங் மூலமாக ரெண்டு மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை இசையமைப்பாளர்களுக்கு பாடம். காட்சிக்கு இசையால் மட்டுமே கூட பரபரப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை படத்தின் பல காட்சிகள் நிரூபிக்கிறது. கடந்த வாரம் ஐரோப்பியநாடுகளில் வெளியான படம் இவ்வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. ஜேம்ஸை தரிசிக்கும் பாக்கியம் அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் தானாம். உலகெங்கும் நல்லபடியான விமர்சனங்களோடு வசூல்சாதனைகளை ஜேம்ஸ் மீண்டும் முறியடித்திருக்கிறார். வெகுவேகமான காட்சியமைப்புகள் இந்தியாவில் இப்படத்தின் வெற்றியை பாதிக்கக்கூடும். கண்டிப்பாக காண வேண்டிய படம்!

5 நவம்பர், 2008

சினிமா தீபாவளி 2008

எனக்கு நினைவு தெரிந்த ஒரு தீபாவளிக்கு மொத்தம் 19 படங்கள் வெளிவந்தது. அது 87 தீபாவளி. அவற்றில் 17 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடவேண்டிய பொட்டிச் செய்தி. அதெல்லாம் அந்தக் காலம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் இல்லாவிட்டால் அப்போதெல்லாம் தீபாவளியே இல்லை. மனிதன் - நாயகன், மாப்பிள்ளை - வெற்றிவிழா, தளபதி - குணா, பாண்டியன் - தேவர் மகன், முத்து - குருதிப்புனல் என்று தீபாவளிக்கு தீபாவளி சரவெடி தான். ரஜினி, கமல் படங்கள் மட்டுமன்றி விஜயகாந்த், சத்யராஜ் என்று அடுத்த நிலையில் இருப்பவர்களின் படங்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒப்புக்கு சப்பாணிகளின் படங்களும் அதிரடியாக களமிறங்கிய காலம். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த டர்ன் ஓவரில் நாற்பது, ஐம்பது சதவிகித வசூலை தீபாவளியிலேயே எடுத்துக் கொண்டிருந்த காலம். ம்ம்.. எல்லாம் இப்போது கானல் நீர்! தமிழின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஹரிதாஸ் கூட 1944 தீபாவளி ரிலீஸ் தான். தீபாவளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மாதங்கள் இரண்டு. ஒன்று தீபாவளி வரும் அக்டோபர் அல்லது நவம்பர். கூடுதலாக ஒரு மாத சம்பளத்தை போனஸ் வாங்கியிருப்பார்கள், தாராளமாக செலவழிப்பார்கள். அடுத்தது பள்ளிகள் திறக்கும் காலமான ஜூன் மாதம், இம்மாதத்தில் கடனோ, உடனோ வாங்கி பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு தாராளமாக செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டாவது பணப்புழக்க மாதத்தில் சினிமாவுக்கு நோ சான்ஸ். ஆனால் அதற்கு முன்பாக ஏப்ரல் - மே மாதங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை காலமென்பதால் ஏப்ரல் 14 ரிலீஸில் சினிமாக்காரர்கள் ஒரு காட்டு காட்ட முடியும். சினிமாக்காரர்களுக்கு ஏப்ரல் 14 சின்ன தீபாவளி. தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஷிப்டிங் முறையிலும் சக்கைபோடு போடும் என்பது ஸ்பெஷலுக்கு இன்னொரு காரணம். உதாரணத்துக்கு செங்கல்பட்டில் ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வெற்றிகரமாக ஐம்பது நாட்களை கடக்கும்போது பொங்கல் வந்து விடும். பொங்கலுக்கு புதுப்படம் ரிலீஸ் செய்யவேண்டும். அந்நேரத்தில் இங்கு ஐம்பது நாள் ஓடிய படம் உத்திரமேரூரில் இருக்கும் ‘பி' செண்டர் தியேட்டரில் செகண்ட் ரிலீஸ் செய்யப்படும். இதன் பெயர் தான் ஷிப்டிங். ரிலீஸின் போது நன்கு பேசப்பட்ட படமாக இருந்தால் ஷிப்டிங்கின் போதும் ஒரு அள்ளு அள்ளிவிடும் (87 தீபாவளிக்கு வெளியான மனிதன் 88 தீபாவளிக்கு நங்கநல்லூர் ரங்காவில் ஷிப்டிங்கில் ரிலீஸாகி ஹவுஸ்புல் ஆகி சாதனை படைத்தது). ஷிப்டிங் வசூல் முடிந்தப் பிறகும் கிராமங்களில் இருக்கும் ‘சி' செண்டர் தியேட்டர்களில் களமிறங்கி விநியோகஸ்தர்களின் பாக்கெட்டை நிரப்பும். இப்படியாக தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் சரக்கு கொஞ்சம் சுமாராக இருந்தாலே அடுத்த தீபாவளி வரை ஒரு வருடத்துக்கு அதை வைத்து வருமானம் பார்க்க முடியும். எனவே படவெளியீடுக்கு ஏற்ற சரியான தேதியாக தீபாவளி அமைந்திருக்கிறது. தீபாவளி தவிர்த்து மற்ற தேதிகளில் வெளியாகும் படங்கள் இந்த ரிலீஸ் - ஷிப்டிங் பிராசஸிங்கில் கொஞ்சம் அடிவாங்குவது உண்டு. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும். 2007 தீபாவளிக்காவது 7 படங்கள் வந்தது. 2008க்கு மூன்றே மூன்று படங்கள். ஏகன், சேவல், மேகம். என்ன கொடுமை சார் இது? மூன்றே மூன்று படங்கள் தான் வந்திருக்கிறது என்பதால் மூன்றுமே நியாயமாகப் பார்க்கப் போனால் சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டும். ஏகனும், சேவலும் ஓப்பனிங்கில் அசத்தி, படம் பார்த்தவர்களை அயர்ச்சியடைய வைத்து, போனால் போகட்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேகம் சொல்லவே தேவையில்லை. தமிழரசன், பி.ஏ., பி.எல்., என்பவர் தன்னை ஒரு ஹீரோவாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் சில லட்சங்களை வீணடித்திருக்கிறார். கிட்டத்தட்ட மேகம் ஒரு மேட்டர் படம். தமிழ் திரையுலக வரலாற்றுக்கே மிக மோசமான தீபாவளி இது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் துவண்டுப் போயிருக்கிறார்கள். ஈயடிக்கும் தியேட்டர்களில் 'காதலில் விழுந்தேன்' வேறு வழியின்றி ஷிப்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் முதலீடு செய்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கையைப் பிசைந்துக் கொண்டு நிற்கின்றன. முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? வழக்கம்போல இந்த சோகமான சூழ்நிலைக்கு சினிமாக்காரர்கள் திருட்டு டிவிடியை காரணம் சொல்கிறார்கள். உண்மையில் சினிமாக்காரர்களின் பேராசை திருட்டு டிவிடியை விட மோசமானது. சின்னப்பா தேவர், ஏவிஎம், வாசன் போன்ற அந்தக்காலத்து தயாரிப்பாளர்கள் சினிமாவை ஒரு தொழிலாக பார்த்தார்கள். இன்றோ சூப்பர்குட் பிலிம்ஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களை தவிர்த்து மீதமுள்ள தயாரிப்பாளர்கள் இத்தொழிலை குதிரைப் பந்தயமாக பார்க்கிறார்கள். அஜித்தை வைத்து பண்ணிரண்டு கோடி செலவழித்தால் இருபத்து ஐந்து கோடியை எடுத்துவிடலாம் என்று ஆதாரமேயில்லாமல் அபத்தமாக நம்புகிறார்கள். இவ்வளவு முதலீட்டுக்கு இவ்வளவு லாபம் போதுமென்ற மனம் இவர்களுக்கு இல்லை. ஓரிரு படங்களிலேயே அம்பானி ஆகிவிட முயற்சிக்கிறார்கள். இந்தியாவிலேயே ஊழலும், சுரண்டலும் பெரியளவில் இன்று நடைபெறும் தொழிலாக திரைத்தொழில் மாறிவிட்டது. தமிழ் திரையுலகம் இருப்பதிலேயே ரொம்பவும் மோசம். முதல் படத்துக்கு எழுபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கி சூப்பர்ஹிட் படத்தை ஒரு இயக்குனர் தந்துவிட்டால், உடனே அடுத்த படத்துக்கு அவசர அவசரமாக முப்பது, நாப்பது லட்சம் சம்பளம் பேசுகிறார்கள். கதை கூட கேட்க வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் படம் சுமாராக ஓடிவிட்டால் போதும், அவர் எவ்வளவு கேட்டாலும் தர தயாரிப்பாளர்கள் தயார். படம் ஓடுவது ஹீரோவுக்காக தான் என்று தயாரிப்பாளர்கள் நம்புவதை விட பெரிய காமெடி வேறு எதுவுமில்லை. சினிமா தயாரிக்க பணம் கூட இப்போது அவசியமில்லை. ஹீரோவின் கால்ஷீட் யாரிடம் இருக்கிறதோ அவர் தான் தயாரிப்பாளர். ”அந்த ஹீரோவோட கால்ஷீட் இருக்கு” என்று சொல்லியே பைனான்ஸ் வாங்கிவிடலாம். கதை இல்லாவிட்டால் பப்பு வேகாது என்ற உண்மை சராசரி சினிமா ரசிகனுக்கு கூட தெரிந்திருக்கும் நிலையில் இன்னமும் சினிமாவிலேயே பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட தெரியாதது ஆச்சரியமாக தானிருக்கிறது. 2008ல் நிஜமாகவே வெற்றிபெற்ற சில படங்களைப் பார்த்தாலே புரியும், எதனால் படங்கள் வெற்றியடைகின்றன என்று. அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், தசாவதாரம் - இவற்றில் அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் படங்களில் ஹீரோவின் பங்கு என்ன? அழகிய தமிழ்மகன், குருவி, குசேலன் என்று சமீபத்தில் ஹீரோவை நம்பி பப்படமான படங்கள் உணர்த்தும் பாடமென்ன? அப்பா தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இயக்குனராகிவிட்ட இயக்குனரின் சக்கரைக்கட்டி உணர்த்துவதென்ன? ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், என்று பிரபலங்கள் இருந்தாலே வெற்றி உறுதி என்று நினைப்பது மடத்தனமா இல்லையா? சிம்பு எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார்? அவருக்கு கோடிகளை கொட்டி கொடுப்பதால் என்ன பயன்? 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட திருடா திருடி பதினைந்து கோடி வசூலித்துக் கொடுத்தது என்றால் அந்த படம் நன்றாக இருந்தது, மக்களுக்குப் பிடித்தது என்று பொருள். அது தனுஷ் நடித்ததால் மட்டுமே ஓடிவிடவில்லை. இவர்கள் பங்குபெறும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே கடந்த காலங்களில் ஓடியிருக்கிறது என்பதை கூட அறியமுடியாத அளவுக்கு நம் சினிமாக்காரர்களுக்கு மூளை மழுங்கிவிட்டதா? இனியாவது சினிமாக்காரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். போடும் முதலீட்டுக்கேற்ப நியாயமான லாபம் கிடைத்தால் போதுமென்ற மனத்துக்கு தயாராக வேண்டும். நட்சத்திரங்களை நம்பி நட்டாற்றில் இறங்கக் கூடாது. குறைந்த முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க முயற்சிக்க வேண்டும். திரையரங்குகளில் கட்டணங்களை குறைத்தாலே திருட்டு விசிடியை ஒழித்துவிட முடியும். இன்னமும் தங்கள் தொடர்தோல்விக்கு திருட்டு விசிடி தான் காரணமென்று கூறி தங்கள் தரப்பு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்துக் கொண்டிருந்தால், பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகத்தை பார்த்த கதையாகிவிடும். அடுத்த தீபாவளியாவது தமிழ் சினிமாவுக்கு உருப்படியான தீபாவளியாக அமையுமென்று எதிர்பார்ப்போம்.

4 நவம்பர், 2008

சிந்தக்கைலா ரவி!

தெலுங்கில் கூட இதுமாதிரி படம் வருமா என்பது ஆச்சரியம். குத்துப்பாட்டு இல்லாமல், இரத்தம் தெறிக்கும் ஆக்சன் இல்லாமல் ஒரு ரொமாண்டிக் லவ் ஸ்டோரி. சில ஆண்டுகளுக்கு முன் தேசிக்களை (என்.ஆர்.ஐ) கவரும் வகையில் ஷாருக்கான் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தது. தெலுங்கு என்.ஆர்.ஐ.க்களை குறிவைத்து வந்திருக்கும் சிந்தக்கைலா ரவி அமெரிக்காவில் மட்டுமன்றி இந்தியாவிலும் சூப்பர் ஹிட். ஏகப்பட்ட இந்திப்படங்களை கலந்து காக்டெயில் அடித்திருக்கிறார்கள். சிந்தக்கைலா ரவி என்பது ஒரு பெயர். செந்தழல் ரவி மாதிரி. நம்ம செந்தழல் ரவியை பார்த்து தான் இந்த கேரக்டரையே டைரக்டர் உருவாக்கியிருப்பாரோ என்ற அளவுக்கு சிந்தக்கைலாவுக்கும், செந்தழலுக்கும் அவ்வளவு ஒற்றுமை. நியூயார்க்கில் இருக்கும் சைபர் வேவ் என்ற பாரில் சீஃப் பார் டெண்டராக சிந்தக்கைலா ரவி (வெங்கடேஷ்) பணிபுரிகிறார். அவரது அப்பா கடன் வாங்கி சாப்ட்வேர் படிக்க அமெரிக்காவுக்கு ரவியை அனுப்பி வைக்கிறார். தவிர்க்க இயலாத ஒரு சம்பவத்தால் மனிதநேயம் கொண்ட ரவி அப்பணத்தை ஒரு உயிரைக் காப்பாற்ற செலவழித்து விடுகிறார். பணமில்லாததால் பாரில் பார் டெண்டராக பணிபுரிகிறார். ஊரைப் பொறுத்தவரை அவர் அமெரிக்காவில் பில்கேட்ஸே மதிக்கும் பெரிய சாப்ட்வேர் என்ஜினியர். இவரது அம்மா சேஷாம்பாள் (லட்சுமி) தன் மகன் சாப்ட்வேர் என்ஜினியர் என்று பந்தா விட்டு பெரிய இடத்து பெண்களாக தன் மகனுக்கு தேடிக்கொண்டிருக்கிறார். தான் பாரில் பணிபுரிவதாக தெரிந்தால் அம்மா உயிரையே விட்டுவிடுவார் என்பதால் தனது பொய்முகத்தை தொடர்கிறார் ரவி. பெரிய வீட்டுப் பெண்ணான லாவண்யாவை (மம்தா) ரவிக்கு பெண்பார்க்கிறார் சேஷாம்பாள். லாவண்யா அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பி சுனிதா (அனுஷ்கா) மூலமாக மணமகனைப் பற்றி விசாரிக்கிறாள். சில பல குழப்பங்களுக்கு பிறகு ரவி ஒரு பார்டெண்டர் என்று தெரிந்து கல்யாணம் நின்றுவிட இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு தன் திருமணத்தை நிறுத்தும் சுனிதாவை துரத்தி துரத்தி கலாய்க்கிறார் ரவி. சுனிதாவை பார்க்க வரும் மாப்பிள்ளைகளை பொய்சொல்லி விரட்டியடிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ரவியின் மனிதாபிமானமும், நல்ல குணங்களையும் உணரும் சுனிதா ரவியை காதலிக்கிறாள். ரவிக்கும் அவள் மீது ஈர்ப்பு வந்துவிடுகிறது. இதே நேரத்தில் ஊரில் இருக்கும் லாவண்யா குடும்பத்துக்கு ரவியைப் பற்றிய உண்மையான விவரங்கள் தெரிகிறது. ஒரு உயிரைக் காப்பாற்றிய அவரது மனிதாபிமானம் அவர்களை கவர மீண்டும் ரவி ‍- லாவண்யா திருமணம் ரவியின் அம்மா ஏற்பாட்டில் நடைபெறுகிறது. லாவண்யா ரவியை காதலிக்க, ரவி சுனிதாவையும், சுனிதா ரவியையும் காதலிக்க குழப்ப முடிச்சுகளை அழகாக‌ க்ளைமேக்ஸில் அவிழ்க்கிறார் இயக்குனர். படம் முழுக்க நொடிக்கொரு முறை சிரிக்க வைக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தமாதிரியே வெங்கடேஷ் இன்னமும் இளமையாக இருக்கிறார். "சுனிதா எம்.பி.ஏ., நேனோ பி.ஏ.ன்னியே மூடு முறை தெங்.." என்று வெங்கடேஷ் நிறுத்தும் போது தியேட்டர் அதிர்கிறது. ஆங்காங்கே லைட்டாக இதுபோல இரட்டை நெடி காமெடிகள் தூவப்பட்டிருந்தாலும் ரசிக்க வைக்கிறது. வெங்கடேஷும், அனுஷ்காவும் கணவன் மனைவியாக நடிக்கும் காட்சி ஹம் தும்மில் பார்த்தமாதிரி ஞாபகம். அந்த ஒரு நிமிட காட்சியின் இறுதியில் இருவருக்கும் மவுனமாக காதல் பூப்பது அழகு. க்ளைமேக்ஸ் காட்சிகள் ஹம் ஆப்கே ஹைன் கோன்‍-ஐ நினைவுபடுத்துகிறது. இரட்டை கதாநாயகிகள் மம்தா ‍- அனுஷ்கா என்று தீபாவளி டபுள் ஷாட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறைவான ஒரு தெலுங்குப் படம்!

3 நவம்பர், 2008

சுண்டக்கஞ்சி வித் பானு!

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலைக்கு எதிரே அஞ்சப்பருக்கு அருகில் இருந்த பாடாவதி பாரில் ஓல்டுமாங்க் கட்டிங் விட்டுக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் ராவாக கல்ப் அடித்தவர் என்னிடமிருந்த ஊறுகாயை ஒரு நக்கு நக்கிக்கட்டுமா என்று கேட்டார். நக்கிக்கொள்ள அனுமதித்தேன். அதற்கு நன்றிக்கடனாக நீலாங்கரை பானு கடையில் இன்று இரவு 9.30 மணிக்கு சுண்டக்கஞ்சி பார்ட்டி நடப்பதாகவும் திருவாளர் தூ சரக்கடித்து போதையேற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடப்பதாகவும் தெரியப்படுத்தினார். நான் பானு கடைக்கு சாதாரணமாக செல்வதில்லை. பானு கடை சரக்கில் சல்பேட்டா குறைவாக இருப்பதால் போதை ஏறாது. இருப்பினும் தூ கலந்துகொண்டு மப்பு ஏத்துவதால் சல்பேட்டா தூக்கலாக இருக்கும் என்று நானும் நீலாங்கரைக்கு சென்று போதையேற்றிக் கொள்ள முடிவு செய்தேன். குடிகாரனாக, முடிச்சவிக்கியாக, மொள்ளமாறியாக, பிக்பாக்கெட் திருடனாக பல அவதாரங்கள் எடுத்துள்ள தூ அவர்கள் எவ்வாறு சரக்கடித்து மட்டையாவார் என்ற எதிர்பார்ப்போடு பானு அவர்கள் ஒரு சொம்பு சரக்கை எடுத்துக் கொடுத்தார். தொட்டுக்கொள்ள கடம்பா தொக்கு. தூ அவர்கள் அந்த சொம்பை ஒரே மூச்சில் கல்ப்பாக அடித்து தான் பரம்பரை குடிகாரன் என்று தன்னை வகைப்படுத்தினார். குடிகாரர்கள் மத்தியில் இவரை பேட்டை பிஸ்தாவாக பார்த்திருக்கிறார்கள். பேட்டைக்காரர்கள் இவரை பிக்பாக்கெட் திருடனாக பார்த்திருக்கிறார்கள். பிக்பாக்கெட் ஆட்களோ இவரை முடிச்சவிக்கியாக பார்த்திருக்கிறார்கள். ஆக இவர் ஒரு ஒட்டுமொத்த கம்முனாட்டி என்று பானு கூற அது தான் தனது தனித்தன்மை என்று தூ கூறினார். தூ அவர்கள் மேலும் சரக்கு அடிக்கையில் போதை தலைக்கேறி தன்னுடைய தந்தை சாராயம் குடிப்பதில் செய்த சாதனைகளுக்காக பெற்ற சிறந்த குடிகாரன் விருதைப் பற்றி உளறினார். அந்த விருது இந்தியாவிலேயே இதுவரை இருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்று சொன்னார். அவரை பேர் சொல்லி யாரும் அழைத்ததில்லை. கட்டிங் கபாலி என்றுதான் அவரை குறிப்பிடுவார்கள் என கூறினார். அவருடைய நெருங்கிய குடிகாரர்கள் வீட்டுக்கு வந்தால் கூட "கட்டிங் கபாலி நிதானத்தில் இருக்கானா" என்றுதான் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்தார். நிதானத்தில் அவர் இருந்தால் வந்த நண்பர்கள் கட்டிங் ஊற்றி மீண்டும் போதை ஏற்றுவார்கள் என்பதையும் தெரிவித்தார். மொத்தத்தில் அவர் ஒரு நடமாடும் சாராயக்கடை என்று முத்தாய்ப்பு வைத்தார். தூ அவர்கள் தான் முதலில் என்னவாக வரவேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார் என சரக்கு ஊற்றியவாறே பானு வினவ, அவர் தனது வாழ்க்கையே ஒரு இலக்கில்லாத சரக்கு தேடல் என்று கூறினார். குடிகாரன், மொள்ளமாறி, முடிச்சவிக்கி என்று எல்லா அவதாரங்களும் சரக்கு அடித்த போதையின் பயனாக வந்தன என்று குறிப்பிட்டார். எல்லாவற்றையும் சரக்கு ஏற்றிக்கொண்டு போதையோடு அணுகுவது பற்றி பேசும்போது பல தருணங்களில் இந்த போதையால் தான் செருப்படிப்பட்ட சங்கடமான தருணங்களையும் நினைவுகூறினார். ஒரு குடம் சுண்டக்கஞ்சியை லைட் அவுஸுக்கு அருகில் பீச்சு மணலில் புதைத்து வைத்திருப்பதாகவும் அது சில நூற்றாண்டுகள் கழித்து வெளியே வரும்போது செம கப்பையும், போதையையும் (பிரெஞ்சுக்காரர்கள் வைன் பதப்படுத்தி வைத்திருப்பதை போல) தருமென்றும் கூறினார். 300, 400 ஆண்டுகளுக்கு பிறகு சுண்டக்கஞ்சியை எல்லாம் தயார் செய்ய யாரால் இயலும் என்று போதை தலைக்கேறி குறிப்பிட்டார். பிறகு தான் சரக்கு உலகுக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். பனைமரத்தில் இறக்கி பதினைந்து நாளான கள்ளை யாரும் குடிக்க முன்வராத நிலையில் தான் குடித்ததாகவும் கூறினார். பின்னர் அதனால் போதை தலைக்கேறி ஒவ்வொரு பனைமரமாக ஏறி கள்பானையை ஆட்டை போட்டதையும் குறிப்பிட்டார். தூ பார்களில் சரக்கு அடிக்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வரை பாருக்கு வெளியே நின்று கேஷூவலாக கஞ்சா அடிப்பார் என்றும் கடம்பா மற்றும் நெத்திலி தொக்கு வாசனை பாருக்கு வெளியே வந்ததும் தானே உள்ளே போவார் என்றும் அங்கே சரக்கு அடித்துக் கொண்டிருந்த காவாலி குறிப்பிட்டார். தூ குறுக்கிட்டு தன்னுடைய இந்த சைட் டிஷ் வெறியே தன்னை பல பார்களில் சரக்கு அடிக்க விடாமல் செய்தது என குறிப்பிட்டார். தன்னுடைய ஆயா மண்டையைப் போட்ட சோகமான சந்தர்ப்பத்திலும் சரக்கு அடித்துவிட்டு மட்டையாகி, மீண்டும் போதை தெளிந்து தப்பாங்குத்து ஆடியது பற்றியும் குறிப்பிட்டார். இப்போது பானு அவர்கள் Sundakanji Award என்பதை பற்றி கூறினார். இந்த அவார்டு வழங்கப்படுபவருக்கு பானு கடையில் வாராவாரம் ஓசியில் சுண்டக்கஞ்சி குடிக்கலாம். தூ அவர்கள் அழுத்தம் திருத்தனமாக அந்த அவார்டை தனக்கே வழங்கிக் கொள்வேன் எனக் கூறினார். இந்த விஷயத்தில் தானே வாங்கி தானே சரக்கடிப்பது என்ற குடிகாரர்களின் கலாச்சாரத்தை பின்பற்றி, ஊரோடு ஒத்து குடித்து வாந்தியெடுப்பது கோட்பாட்டின்படி அவ்வாறு செய்வதாக கூறினார். தான் மட்டுமன்றி தன்னுடைய குடும்பமே குடிகார குடும்பம் என்பதையும் பெருமிதமாக குறிப்பிட்டார். இப்போது சுண்டக்கஞ்சி அவார்ட் தரும் நேரமும் வந்தது. பானு சுண்டக்கஞ்சி நிரம்பிய ஒரு குடத்தை எடுத்துவர, அதைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு தூ ஓடினார். அவர் அன்றைய இரவு முழுவதும் சுண்டக்கஞ்சி அடித்தே சுருண்டு படுத்துக் கொள்வார் என்பதை அறிந்து அனைவரும் தள்ளாடியபடியே நடந்து சென்றனர். இந்த சரக்கடிக்கும் நிகழ்ச்சி பற்றி எனக்கு தகவல் அளித்த ஊறுகாய் நக்கிக்கு (ஏம்பா, சரக்கடிக்க வரும்போது ஊறுகாய் கொண்டுவரமாட்டீங்களா என்பது புரளி மனோஹர்). சரக்கடிக்கும் பார்ட்டியின் நடுவில் என்றென்றும் போதையுடன் மாலாவிடமிருந்து ஃபோன். அவரும் என்னைப் போலவே காசிமேட்டில் சரக்கு அடித்துக் கொண்டிருப்பதாகவும், போதை பத்தவில்லை. ஒரு ஃபுல்லோடு சைட் டிஷ் கொண்டு வர இயலுமா என்று கேட்பதற்காக போன் செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே நான் சரக்கு தான் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அவரும் அயோத்தியாக் குப்பத்துக்குப் போய் சுண்டக்கஞ்சி அடிக்கப் போவதாய் சொன்னார். அளவில்லாத போதையுடன் காண்டு கஜேந்திரன்