26 நவம்பர், 2008

என் பெயர் எஸ்கோபர்!

எஸ்கோபரை உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளலாம். தில் - திகில் - திடுக்கிடலான ஆசாமி. சர்வதேச போதை நெட்வொர்க்கின் காட்ஃபாதர். சுண்டக்கஞ்சி காச்சப்படுவதிலும் அவருக்கு பங்கிருந்ததா என்று தெரியவில்லை. கொலம்பியா அவரது வேர். தென்னமெரிக்கா முழுவதும் அவரது விழுதுகள். அகில உலகத்துக்கும் ‘கோகெய்ன்' சப்ளை செய்த புண்ணியவான். உயிரோடிருந்திருந்தால் சந்திரயன் மூலமாக சந்திரனுக்கும் போதையை கடத்தியிருப்பார். மாஃபியாக்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தருவதாக இருந்தால் முதலில் இவருக்கு தந்திருக்க வேண்டும். நூலாசிரியர் பாரா நூல் முழுக்க 'அவன்', ‘இவன்' என்று ‘ன்' விகுதியிலேயே குறிப்பிடுகிறார். 'என் பெயர் எஸ்கோபர்' நூலை வாசித்த வாசகனுக்கோ எஸ்கோபர் மீது ஏற்படும் ப்ரேமையால் ‘ன்'னென்று விளித்த பாரா மீது பெருங்கோபம் ஏற்படுகிறது. பாருங்கள் எஸ்கோபர் என்ற பெயரில் கூட ‘ர்' விகுதி இயற்கையாகவே அமைந்திருக்கிறது. 1989ஆம் ஆண்டு உலகின் ஏழாவது பெரிய பணக்காரனாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அடையாளம் காட்டப்படுபவர் பாப்லோ எமிலியோ எஸ்கோபர். அப்போது அவருக்கு வயது ஐம்பதையெல்லாம் கடந்துவிடவில்லை ஜெண்டில்மேன். ஜஸ்ட் ஃபார்ட்டி. பில்கேட்ஸெல்லாம் கஷ்டப்பட்டு சாஃப்ட்வேர் விற்று சம்பாதித்தார். எஸ்கோபர் மிக எளிதாக போதையை விற்றார். பணம் சம்பாதித்தார். இன்றைய தேதியில் பல போதைபொருள் மாஃபியாக்கள் எஸ்கோபரை விட அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இந்த பிசினஸை இண்டர்நேஷனல் லெவலில் ஒரு கார்ப்பரேட் பிசினஸ் மாதிரி கட்டுக்கோப்புடன் நடத்திய முதல் ‘தொழில்' அதிபர் எஸ்கோபர் என்பதாலேயே அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம். கார்திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் எஸ்கோபர். திருட்டு அலுத்தது. சீக்கிரம் பணக்காரனாக துடித்தார். அப்போது கொலம்பியாவில் அறிவிக்கப்படாத தேசியத்தொழிலாக இருந்த கோகெய்ன் விற்பனையை கையில் எடுத்துக் கொண்டார். ஒரு மாஃபியாவிடம் அடியாளாக சேர்ந்தவர், குறுகிய காலத்தில் அமைதிப்படை அமாவாசை மாதிரி தடதடவென முன்னேறினார். முப்பது வயதுக்குள்ளாகவே உலகின் நெ.1 போதை மாஃபியா. நாற்பத்து மூன்று வயதிலேயே எல்லா புகழையும் தனக்குள் புதைத்துக்கொண்டு ஒரு துப்பாக்கித் தோட்டாவில் மண்டையைப் போட்டார். எஸ்கோபர் ஆட்டையில் இருந்த அந்த இருபது வருடங்களும் கொலம்பியாவின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத வருடங்கள். ”என் பெயர் எஸ்கோபர்” நூல் ஒரு க்ரைம் நாவலுக்கே உரித்தான த்ரில்லோடு தொடங்குகிறது. வரலாற்றை இதுபோல க்ரைம்நாவல் சுவாரஸ்யத்தோடு தொடங்கக் கூடாதென்று இ.பி.கோ.வில் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? கோழி குருடா இருந்தாலென்ன, முடமாயிருந்தாலென்ன? பிரியாணி டேஸ்ட்டா இருந்தால் போதாதா? 'கையிலே காசு, வாயிலே கோகெய்ன்' மாதிரியான பாராத்தன டயலக்குகள் மண்வாசனை தருகிறது. பிதாமகன் கஞ்சா வில்லனின் கதையை படிப்பதுபோல நேட்டிவிட்டி டச்சோடு நூலில் ஒன்றமுடிகிறது. த்ரில் மற்றும் திகிலோடு தொடங்கும் முதல் அத்தியாயம் சடக்கென்று கொலம்பியாவின் வரலாற்றைப் பேசும்போது திடுக்கிட வைக்கிறது. அமெரிக்காவுக்கு யாருமே ஆப்பு வைக்க வேண்டியதில்லை, அதுவே சி.ஐ.ஏ. மூலமாக வைத்துக்கொள்ளும். கொலம்பியாவின் போதை பிசினஸ் விவகாரத்திலும் அமெரிக்கா தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டதை புன்முறுவலோடு ரசிக்க முடிகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் முழுக்க நகைச்சுவை சுலபா புயல் மழை மாதிரி கொட்டோகொட்டுவென்று கொட்டி தீர்க்கிறது. நம்புங்கள். சத்தியமாக நூறு சதவிகிதம் எந்த கலப்புமில்லாத அக்மார்க் நகைச்சுவை. ஒருகட்டத்தில் நொந்துப்போன அமெரிக்க அதிபர் கொலம்பிய அரசுக்கு எழுதுவதாக பாரா சித்தரிக்கும் கடிதம் சரவெடி. ரீகன் எழுதும் அக்கடிதம் இப்படித் தொடங்குகிறது. “ஐயன்மீர்! உமக்கு சர்வமங்களம் உண்டாகட்டும்”. இப்படி முடிக்கிறார். “நமது நட்பு காலம் கடந்து நிற்க எல்லாம் வல்ல எம்பெருமான் இயேசுகிறிஸ்து அருள் பாலிப்பாராக. ஆமென்!” இம்சை அரசன் தனது வாயிற்காப்பாளனுக்கு தரும் தண்டனைகள் உங்களுக்கு அதிர்ச்சியை தந்ததா? இல்லை ரசிக்க வைத்ததா? எஸ்கோபர் செய்த கொலைகளை நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ரசிக்க செய்வான். நம் சட்டக்கல்லூரி சம்பவமெல்லாம் எஸ்கோபரை பொறுத்தமட்டில் ஜூஜூபி. வழிக்கு வந்தவரை வாழவைப்பதும், சரிபடாதவரை போட்டுத்தள்ளுவதும் எஸ்கோபரின் பாணி. எத்தனை பேரை சாகடித்திருப்பான் என்ற லிஸ்ட் சித்திரகுப்தனிடம் தான் இருக்கும். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனுபோட்டு, எமதர்மனிடம் அனுமதி வாங்கி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி மாதிரி போதை மாஃபியாக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து போதைக்கூட்டணி அமைத்தது, அரசியலில் குதித்து அதகளப்படுத்தியதெல்லாம் எஸ்கோபர் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள். எஸ்கோபருக்கு இருந்த மக்கள் செல்வாக்குக்கு அவர் அந்நாட்டின் அதிபராகவே ஆகியிருக்க முடியும். நாயகன், காட்ஃபாதர் மாதிரியான கேரக்டர். சின்னக்கவுண்டர் ரேஞ்சுக்கு அவரை அந்நாட்டு மக்கள் மதித்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் கொலம்பிய போலிசாரிடம் எஸ்கோபர் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே எஸ்கோபரை அரணாக சுற்றி நின்று பாதுகாத்தது என்பது வரலாற்றில் கட்டாயம் குறிப்பிட வேண்டிய பெட்டிச்செய்தி. மேலவை உறுப்பினராக வலுக்கட்டாயமாக மாறிய எஸ்கோபர் மேலவையில் பேசிய முதல் பேச்சில் “போதை வர்த்தகத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சம்பந்தமில்லாத கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்று பேசுவது டென் தவுசண்ட் வாலா. நம்மூரு மாதிரியே கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது மாதிரி 1970களில் துப்பாக்கியெடுத்த எஸ்கோபர் 1992ல் சுட்டுக்கொல்லப்படுகிறார். கிராதகன் ஒழிந்தான் என்று வாசகனின் மனம் துள்ளாது. மாறாக நேசித்த ஒரு சிநேகிதனை என்கவுண்டரில் இழந்த சோகம் மனதை கவ்வுகிறது. சம்பிரதாயமாக கொலம்பியாவின் இன்றைய நிலையை கொஞ்சம் சீரியஸாக சொல்லி நூல் முடிகிறது. இந்நூலுக்காக நூலாசிரியர் பா.ராகவன் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்? எத்தகைய உழைப்பை முதலாக்கியிருப்பார் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம். எப்போதோ ஒருமுறை ‘இன்று தமிழில் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்' என்று இவரைக் குறிப்பிட்டிருந்தேன். பாராவின் ஒவ்வொரு எழுத்தும், அதன் பின்னால் இருக்கும் உழைப்புக்காக கொண்டாடப்பட வேண்டியதும், விற்கப்பட வேண்டியதும் நியாயமானதே. கொலம்பியா மேப்பை இந்நூலில் அசால்ட்டாக போடிநாயக்கனூருக்கு வழிசொல்வது மாதிரி கையாண்டிருக்கிறார். போதை பிஸினஸில் புழங்கும் பணம், எந்தெந்த நாடுகளில் புழக்கம் அதிகம் போன்ற செய்திகள் அட்சரம் பிசகாத அபார புள்ளிவிவரங்கள். ஒரு திரைக்கதைக்கான சுவாரஸ்யம் நூலின் ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது. பின்னிணைப்பில் இப்புத்தகம் எழுத ரெஃபரென்ஸுக்கு பாரா எடுத்துக்கொண்ட புத்தகங்களையும், இணைப்புகளையும் நாம் யாராவது வாசித்திருந்தால் இன்னேரம் கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு தீவிர வாசிப்பாளரென்றால் மூன்றரை மணி நேரத்தில் ஒரே மூச்சாக இப்புத்தகத்தை வாசித்துவிடலாம். ஒவ்வொரு இல்ல நூலகத்திலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய நூல். அடாதமழை விடாது அடித்துக்கொண்டிருந்த நேற்றைய இரவை இந்நூல் எனக்கு சுவாரஸ்யமாக்கியது. தடங்கலின்றி நூலை வாசிக்க வகைசெய்த ஆற்காட்டாருக்கு கோடி நன்றி. நூலின் பெயர் : என் பெயர் எஸ்கோபர் நூல் ஆசிரியர் : பா.ராகவன் விலை : ரூ.90 பக்கங்கள் : 224 வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும். நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப்பி 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக