25 ஆகஸ்ட், 2020

விஜயகாந்த்

தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது.

பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார்.

நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம்.

அந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்கு போடும்.

பேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது.

இருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர்.

எடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

என்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.

கீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ’வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.

என்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ?

பேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள்.

சாலை மறியல்.

கூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.

இந்தி எதிர்ப்புப் போர்.

இந்தி ஒழிக. தமிழ் வாழ்க.

தேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.

“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.

ம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது.

போர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.

“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.

‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே?’ கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்…

யாரும் எதிர்பாரா வகையில்..

டிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது.

பல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது.

ங்கொய்யென்று ரீங்காரம்.

நிமிர்ந்துப் பார்த்தார்.

பார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. நெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.

திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..

“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” – சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

யாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.

“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.

ம்… நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

(‘விஜயகாந்த்’ புத்தகத்தின் முதல் அத்தியாயம்)

19 ஆகஸ்ட், 2020

டி20 யுகத்தின் காட்ஃபாதர்

(ஓவியம் : அரஸ்)

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்திய அணி என்பது பழைய ஸ்கூட்டர் மாதிரி.

லேட் பிக்கப்.

1932ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது இந்திய அணி.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஜாம்பவான் அணிகளோடு தொடர்ந்து ஆடியது.

தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக அது பெற்றது (நம்ம சென்னையில்தான்) 1952ல்.

அதாவது முதல் வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்துக் கொள்வதற்கே இந்திய அணிக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது.

போலவேதான் –

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும்.

1974ல் முதன்முறையாக இங்கிலாந்துடன் மோதியது.

தன்னுடைய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்தை எதிர்கொண்டு, மூன்று போட்டிகளிலுமே படுமோசமான தோல்வியை பெற்றது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்டிருந்தது.

இந்தியா தன்னுடைய நான்காவது போட்டியில்தான் கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமாகாத மொக்கை அணியான கிழக்கு ஆப்பிரிக்காவிடம் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலகக்கோப்பை விளையாடச் செல்வதற்கு முன்பாக 9 ஆண்டுகளில் மொத்தம் 40 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருந்தன.

அவற்றில் மொத்தம் 11 போட்டிகள் மட்டுமே வெற்றி. 29 போட்டிகளில் தோல்வி.

வெற்றி பெற்ற பல போட்டிகளிலும் கூட மயிரிழையில்தான் போராடி வென்றது.

அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையுடன்தான் சொல்லிக் கொள்ளும் வகையில் மூன்று போட்டிகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது.

எனவேதான் –

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முன்பாக வரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு இல்லை.

லிமிட்டெட் ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை தக்கவைப்பது முக்கியமல்ல.

களத்தில் இருக்கும் நேரத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேகரிப்பதே வெற்றிக்கான வாய்ப்பு.

அதே நேரம் –

நமது அணியால் எவ்வளவு ரன்களை அதிகபட்சம் சேகரிக்க முடியுமோ, அந்த ரன்களைவிட30, 40 ரன்கள் குறைவாக எதிரணியை வீழ்த்தக்கூடிய பவுலிங் வியூகமும் இருக்க வேண்டும்.

இந்த இரு விஷயங்களையும் மனதில் கொண்டு கபில்தேவ் தீட்டிய திட்டங்களின் பலன்தான் எவருமே எதிர்பாராத வகையில் இந்தியாவுக்கு கிடைத்த உலகக்கோப்பை.

1983 வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு கூடியது.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாம் பெரிய நாடான இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல், கொரோனா கணக்காக நான்குகால் பாய்ச்சலில் பரவியது.

அப்போது இந்தியாவில் டிவிக்கும் மவுசு கூடிக் கொண்டிருந்தது.

டிவியில் கிரிக்கெட் பார்க்கவும், ரேடியோவில் ஸ்கோர் கேட்கவும் பெரும் கூட்டம் காத்திருந்தது.

விளம்பரதாரர்கள் இச்சூழலைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை கிரிக்கெட் நட்சத்திரங்களை வைத்து விளம்பரப்படுத்தி வணிகத்தை பெருக்கிக் கொண்டார்கள்.

அவ்வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டுடன், நாட்டின் பொருளாதாரமே இணைக்கப்பட்டு விட்டது.

கிரிக்கெட் என்பது இங்கே வெறும் விளையாட்டல்ல.

மதம்.

83ல் கபில்தேவ் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்த அந்த அரிய சாதனையை, 24 ஆண்டுகள் கழித்து 2007ல் 20 ஓவர் டி20 கிரிக்கெட்டில் செய்தவர், ‘தல’ தோனி என்பதுதான் அவரது முக்கியத்துவமே.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்லாண்டுகள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது.

ஆனால் –

டி20ஐப் பொறுத்தவரை எடுத்தவுடனேயே உலக சாம்பியன்தான்.

இத்தனைக்கும் –

அப்போதைய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இடம்பெறவில்லை.

பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பெரும்பாலானவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்கள்.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் மிகக்கேவலமான வகையில் வெளியேறியிருந்தது இந்திய அணி.

எல்லாவற்றையும் விட கேப்டன் தோனிக்கும் பெரிய அனுபவமில்லை.

பேட்ஸ்மேனாக, விக்கெட்கீப்பராக அவர் சற்று பெயர் பெற்றிருந்தாலும் கேப்டனாக என்னத்தைக் கிழிப்பார் என்கிற அலட்சியமே பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது.

பொய் சொல்லி ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு, காய்ச்சல் என்று ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு டிவி பெட்டி முன்பாக தவம் கிடந்த தலைமுறைக்கு அப்போது சற்றே கிரிக்கெட் சலித்து விட்டிருந்தது.

அடுத்து வந்த தலைமுறையோ போனில் அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தால் போதும் என்கிற அளவுக்கு கிரிக்கெட் மேல் பெரிய பிடிப்பு கொள்ளாமல் இருந்தது.

எனவேதான் 2007ல் தோனி தலைமையிலான அணி பெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றியை, இன்னுமொரு வெற்றிக் கோப்பையாக மட்டுமே நம்மால் கருத முடியவில்லை.

அதுவொரு game changer.

மீண்டும் கிரிக்கெட்டை மதமாக இங்கே ஸ்தாபித்த பெருமை தல தோனியையும் அவரது தலைமையில் ஆடிய துடிப்பான இளம் வீரர்களையுமே சாரும்.

கிரிக்கெட் என்பது மெட்ரோ நகரங்களுக்கு உரியது என்கிற மாயையை முற்றிலுமாக உடைத்தெறிந்தது டி20.

கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை எனுமளவுக்கு குக்கிராமங்களும் கூட ஆர்வத்தோடு மீண்டும் டிவி பெட்டி முன்பாக தவம் கிடக்கக் காரணமானது டி20.

2007 டி20 உலகக் கோப்பையில் முக்கியமான போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பிடித்த கேட்ச், கவுதம் காம்பீரின் பெற்ற அபாரமான மேன் ஆஃப் த மேட்ச், யுவராஜ்சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர், பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான பவுல் அவுட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் கேட்ச், ஆர்.பி.சிங் மற்றும் இர்ஃபான் பதானின் துல்லியமான பவுலிங்….

என்று நாம் என்றென்றைக்கும் சிலிர்த்துக்கொள்ள கொள்ள ஏராளமான பசுமையான நினைவுகள் உண்டு.

இதையெல்லாம் தாண்டிய விஷயம் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட் அணியின் தலைமைப் பண்புகளுக்கு அவர் வகுத்த புதிய இலக்கணங்கள், அவ்விளையாட்டின் எதிர்காலத்தையே தாக்கப்படுத்தி இருக்கின்றன.

சந்தேகமே இல்லை.

டி20 யுகத்தின் காட்ஃபாதர் என்று அவரை நாம் உறுதியாகவே அழைக்கலாம்.

(‘குங்குமம்’ இதழில் வெளிவந்துக் கொண்டிருக்கும் ‘தல’ தொடரின் ஓர் அத்தியாயம்)