31 அக்டோபர், 2011

கார்ட் கூட கற்பு மாதிரி!

சில நாட்களாக செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். கூரியர் பாய்ஸ் உதவியோடு கிரெடிட்/டெபிட் கார்ட் தகவல்களை திருடும் கும்பலை கண்டுபிடித்து போலிஸார் முட்டிக்கு முட்டி தட்டிவருகிறார்கள். இந்த நூதன மோசடி நம்மூருக்குதான் புதுசு. டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனியொருவனால் நிகழ்த்தப்பட்டு, நாலு கோடி ரூபாய்க்கும் மேலாக ஆட்டை போடப்பட்டது.


குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘சைபர் க்ரைம்’ தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அதில் வெளிவந்த ஒரு அத்தியாயம் இது. பிற்பாடு இத்தொடர் கிழக்குப் பதிப்பகத்தில் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க : https://www.nhm.in/shop/978-81-8493-266-9.html


இளமை ஊஞ்சலாடும் இருபதுகளின் மத்தியில் தான் ரவிக்குமாருக்கு வயசு இருக்கும். ஜம்மென்று உடுத்திக் கொண்டு அசெண்ட் காரில் ஏறி எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவன் அணிந்த ஆடையை இன்னொரு முறை அணிவானா என்பது சந்தேகம். ரவி வருவதற்கு முன்பே தூரத்திலிருந்து பாரின் பர்ப்யூம் வாசம் ஆளை தூக்கும். வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஹோம் தியேட்டரை ஹைடெசிபலில் அலற விடுவான். ஒவ்வொரு அறையிலும் ஒரு எல்.சி.டி. டிவி. கழுத்தில், கையில், விரல்களில் தங்கமயம். மொத்தத்தில் டெல்லிக்கே ராஜா என்பது போல சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

இத்தனைக்கும் அவன் என்ன வேலை செய்துகொண்டிருந்தான் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது. கேட்பவர்களிடம் எல்லாம் சிட்டி பாங்க், பார்க்ளேஸ் பாங்க் போன்ற சில பெரிய வங்கிகளில் அதிகாரியாகப் பணியாற்றியதாக சொல்வான். ‘வேலையை ரிசைன் பண்ணிட்டு பைனான்ஸ் கன்சல்டண்டா ஒர்க் பண்ணுறேன். நல்ல சம்பாத்தியம் வருது’ என்றும் சொல்லி வைத்திருந்தான்.

ஒருநாள் அவனுடைய கழுத்தா மட்டையில் நாலு போடு போட்டு போலீஸ் இழுத்துக் கொண்டு போய், ஜீப்பில் ஏற்றியபோது தான் தெருவாசிகளுக்கு தெரிந்தது. ‘பையன் ஏதோ ஏடாகூடமா பிசினஸ் செஞ்சிருக்கான்!’. ஏதோ ஓரிரு லட்ச திருட்டு என்று நினைத்து ரவியை விசாரித்த டெல்லி போலீஸ் அசந்துப் போனது. யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் சுருட்டியிருக்கிறான். ‘கில்லாடிப் பய புள்ளடா நீ!’ என்று மனசுக்குள் பாராட்டிவிட்டு கோர்ட்டு முன்பாக ரவிக்குமாரை நிறுத்தியிருக்கிறார்கள். ரவியிடம் ஏமாந்தவர்கள் ஒவ்வொருவராக டெல்லி போலிஸை அணுகி புகார் கொடுத்துவிட்டு ஒப்பாரி வைத்து செல்கிறார்கள்.

அப்படி என்னதான் செய்து இந்த வயதிலேயே தனிமனிதனாக நாலு கோடி ரூபாய் சம்பாதித்திருப்பான்? கத்தியை காட்டி வழிப்பறி செய்தால் கூட ஐநூறு, ஆயிரம் தான் ஒரு தபா ஆட்டையில் இறங்கினால் தேறும். கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டினால் ஒழிய இவ்வளவு லம்பாக கிடைக்காது. ரவி கத்தியை தீட்டுவதற்குப் பதிலாக தன்னுடைய புத்தியைத் தீட்டினான்.

இந்த மோசடி போலிஸுக்கு புதுசு. ஏன் பிரபல திருட்டுப் பயல்களுக்கு கூட புத்தம்புதுசு. ‘ச்சே நமக்கு இது தோணாமப் போச்சே?’ என்று கேப்மாறிப் பயல்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். இந்தியாவே இதுவரை கண்டிராத நூதனவகை மோசடி இது.

ஏ.டி.எம். கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களில் ஏதாவது ஒன்றை கட்டாயம் உபயோகித்திருப்பீர்கள். இந்த கார்ட் வங்கியிலிருந்து உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று நினைவிருக்கிறதா? நிச்சயமாக வங்கி ஊழியர் உங்களிடம் நேரில் கையளித்திருக்க மாட்டார். வங்கியிலிருந்து கூரியர் மூலமாக உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து தனியார் வெளிநாட்டு வங்கிகள் வரை கூரியர் மூலமாக கார்டினை வீட்டுக்கு அனுப்புவதுதான் இன்றுவரை நடைமுறை.

சில வங்கிகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்றிருந்த ரவிக்குமாருக்கு இந்த கூரியர் மேட்டர் ரொம்பவும் பிடித்துப் போனது. திடீரென்று ஏதாவது ஏரியாவில் இருக்கும் கூரியர் ஆபிஸுக்கு போவான். தன்னை ஒரு வங்கி அதிகாரியாக கம்பீரமாக அறிமுகப்படுத்திக் கொள்வான்.
“இந்த ஏரியாவில் என்னோட கஸ்டமர்களுக்கு வரவேண்டிய கிரெடிட் கார்டெல்லாம் ஒழுங்கா வந்துசேரலைன்னு கம்ப்ளையண்ட் வந்திருக்கு. யார் யாருக்கெல்லாம் கார்ட் டெலிவரி பண்ணிங்கன்னு லிஸ்ட் காமிங்க. இல்லேன்னா போலிஸ்லே கம்ப்ளையண்ட் பண்ணி முட்டிக்குக்கு முட்டி தட்டிடுவேன்” என்று டெலிவரி பையன்களை மிரட்டலாக ஏய்ப்பான். டெலிவரி பயல்கள் பயந்துப் போய் கிரெடிட் / டெபிட் / ஏடிஎம் கார்ட்கள் டெலிவரி செய்த அட்ரஸ்களை எல்லாம் அட்சரம் பிசகாமல் ஒப்பித்து விடுவார்கள். எல்லா அட்ரஸையும் அய்யா ஒரு டயரியில் நோட் செய்துக் கொள்வார்.

அடுத்ததாக கோட்டு, டை காஸ்ட்யூமில் ஹூண்டாய் ஆக்சண்ட் கார் எடுத்துக் கொண்டு கார்ட் டெலிவரி ஆன வீடுகளுக்குப் போவார். “நான் பேங்கோட கஸ்டமர் சர்வீஸ்லே இருந்து வர்றேன். உங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெலிவரி ஆன கார்ட்லே கோட் ப்ராப்ளம் இருக்கு. சரியா ஒர்க் ஆகாது. வேற கார்ட் மாற்றி இரண்டு மணி நேரத்துலே எடுத்துக்கிட்டு வர்றேன்!” வெள்ளைக்காரன் கூட இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசமாட்டான். கார்ட் வந்த கவரோடு வாங்கிக் கொள்வான் ரவி. சிலரிடம் பின்நம்பர் கூட கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறான். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் நம் இந்திய மனப்பான்மை மோசடி ஆசாமிகளிடம் மட்டும் கன்னா பின்னாவென்று ஏமாந்துத் தொலைக்கிறது.

வங்கி அதிகாரியே வீட்டுக்கு வந்து கஸ்டமர் சர்வீஸ் செய்கிறாரே என்று புளங்காங்கிதப்பட்டு, எதுவும் யோசிக்காமல் கார்டை திக்கைத்தனமாக ரவியிடம் கொடுத்துவிடுவார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அந்த கார்ட் கன்னாபின்னாவென்று டெல்லி ஷாப்பிங் மால்களில் பல லட்சம் ரூபாய்களுக்கு தேய்க்கப்பட்டிருக்கும். ஏடிஎம்களில் அதிகபட்ச பணமும் எடுக்கப்பட்டிருக்கும். இரண்டு மணி நேரத்தில் மாற்றுக் கார்ட் வரும் என்று நம்பியவர்களுக்கு நாமம்தான் மிச்சம். அடுத்த மாதம் செய்யாத செலவுக்கு ஆயிரக்கணக்கில் வங்கியிடமிருந்து பில் வரும். இதுபோல ஏமாந்தவர்கள் கடந்த ஒரு வருட காலமாக போலிஸிடம் ஆங்காங்கே புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

குப்தா என்பவர் முன்ஜாக்கிரதை முத்தண்ணா. புதியதாக வங்கிக் கணக்கு தொடங்கிய உடனேயே வங்கிப் பரிமாற்றங்கள் அவ்வப்போது தன்னுடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் வகையில் காசு கட்டி எஸ்.எம்.எஸ். சர்வீஸ் செட் செய்து வைத்திருந்தார். அந்த வங்கியிலிருந்து அவருக்கு ஒரு கிரெடிட் கார்ட் வந்தது. கிரெடிட் கார்ட் வந்த இரண்டு மணி நேரத்தில் ஹூண்டாய் ஆக்செண்ட் காரில் நம்ம ரவியும் வந்தார்.

அதே டயலாக்.

“நான் பேங்கோட கஸ்டமர் சர்வீஸ்லே இருந்து வர்றேன். உங்களுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெலிவரி ஆன கார்ட்லே கோட் ப்ராப்ளம் இருக்கு. சரியா ஒர்க் ஆகாது. வேற கார்ட் மாற்றி இரண்டு மணி நேரத்துலே எடுத்துக்கிட்டு வர்றேன்!”

முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்தாலும் ரவியின் டிப்டாப் தோற்றத்தில் குப்தாவும் ஏமாந்துவிட்டார். கார்ட், ரசீது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் ரவியிடம் ஒப்படைத்தார். இரண்டு மணி நேரத்தில் மாற்று கார்ட் வரும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வடிவில் சுனாமி வ்ந்தது. “உங்கள் கார்டில் நாற்பதாயிரம் ரூபாய் இன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் செலவழிக்கப்பட்டிருக்கிறது”

“ஆஹா மாப்பு. வெச்சிட்டான்யா ஆப்பு” என்று அலறிவிட்ட குப்தா, சில நிமிடங்களில் பதட்டம் குறைந்து என்ன ஆகியிருக்கும் என்று பகுத்தறிவோடு யோசித்துப் புரிந்து கொண்டார். இது கூரியர் டெலிவரி செய்த பயலின் வேலையாகவே இருக்கும் என்று சந்தேகம் கொண்டு போலிஸில் புகார் செய்தார். ஒரு வருடமாக வலைவீசி கிரெடிட் கார்ட் கில்லாடியை தேடிக்கொண்டிருந்த போலிஸுக்கு குப்தா கூறிய இந்த ‘கூரியர் ரூட்டு’ புது ரூட்டை திறந்து வைத்தது. ஏற்கனவே புகார் செய்தவர்களையும் மீண்டும் விசாரித்து சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனங்களை அதட்டி, மிரட்டியதில் ரவியின் பக்கா மாஸ்டர் ப்ளான் தெரியவந்தது.

எலிக்கு மசால் வடை வைப்பது மாதிரி பொறியாக, அடுத்தடுத்து டெலிவரிக்கு தயாராக இருந்த கிரெடிட் கார்ட்களை வைத்து, ரவி என்ற பெருச்சாளியை டெல்லி போலீஸார் கையும், கார்டுமாக பிடித்தார்கள். பிடிபட்ட ரவியிடம் பல பேரின் கிரெடிட் கார்ட்கள், பல்வேறு வங்கிகளில் வேலை பார்ப்பதாக நிரூபிக்க ஏழு வங்கிகளின் அடையாள அட்டை மற்றும் போலி பிளாஸ்டிக் ஏடிஎம் அட்டைகள் என பலவும் கைப்பற்றப்பட்டன.

ரவியைப் போன்ற நூதன மோசடி ஆசாமிகளிடம் ஏமாறாமல் தப்பிப்பது மிகப்பெரிய விஷயம். இவனிடம் ஏமாந்தவர்கள் அனைவருமே படித்தவர்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள். இவர்களின் நிலைமையே இப்படியென்றால் படிக்காத கிராமத்து மனிதர்களிடம் எவ்வளவு மோசடி செய்யமுடியும்? மொபைல் போன் மாதிரி ஏடிஎம் / டெபிட் கார்ட்களும், கிரெடிட் கார்ட்களும் இன்றைய தேதியில் மானாவரியாக எல்லோருக்கும் விசிட்டிங் கார்ட் மாதிரி வங்கிகளால் அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன.

இந்த அட்டைகளையும், அதற்கான ரகசியக் குறியீட்டு எண்ணையும் அந்தரங்கத்தை காப்பது மாதிரி எண்ணிப் பாதுகாக்க வேண்டும். “இந்தா கார்ட். தெரு முனையிலே இருக்கிற ஏடிஎம்முலே நாலாயிரம் எடுத்தாந்துடு. பின்நம்பர் தெரியுமில்லே? ஜீரோ ஜீரோ ஜீரோ ஏழு” என்று பொது இடத்தில் கார்டை வைத்து கத்துபவரை மாதிரி முட்டாள் வேறு யாருமில்லை.

இந்தப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கார்டு உபயோகிக்கும் அவரவருக்கே நிச்சயம் தெரியும். தொடர் எழுதி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் ‘கார்டு பத்திரம். அதைவிட பின்நம்பர் ரொம்ப பத்திரம்!’. அசால்டா இருந்துக்காதீங்க. அவ்ளோதாம்பா.

நேரடிக் குற்றங்களை விட இண்டர்நெட் மூலமாக கார்டுகளை வைத்து ரம்மி மாதிரி விளையாடும் சைபர் குற்றங்கள் படா மோசம். மின்வர்த்தகம் இப்போது இந்தியாவில் பெரியளவில் வளர்ந்து வருகிறது. எல்லா மின்வர்த்தக தளங்களும் பாதுகாப்பானவையா என்று கேட்டால் இல்லையென்ற பதிலே வரும். கிரெடிட் / டெபிட் கார்டுகள் மூலமாக இண்டர்நெட்டில் ஏதாவது பொருள் வாங்கவோ, சினிமா டிக்கெட் புக் செய்யவோ நினைத்தால் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல், கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் நம்பர் என்று எல்லா எழவுகளையும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. நாம் இந்த தகவல்களை கொடுக்கும் இணையத்தளம் நம்பகத்தன்மை இல்லாததாக இருந்தால் நம் கதி அதோகதிதான்.

முடிந்தவரை இண்டர்நெட்டில் கார்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு வழியே இல்லை பயன்படுத்தி தொலைத்தே ஆகவேண்டும் என்றாலும் தகவல்களை தரும் படிவத்தில் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் (Save password மாதிரி) ஏதாவது இருந்தால் அதை மறக்காமல் முடக்கி விடுங்கள். மறந்து விடாமல் இருக்க கிரெடிட் கார்ட் எண் மற்றும் இண்டர்நெட் பாஸ்வேர்ட் போன்றவற்றை மெயிலில் வைத்துக் கொள்ளும் வழக்கம் சிலருக்கு உண்டு. அவ்வளவு ஞாபகமறதி இருப்பவர்கள் கிரெடிட் கார்டு மாதிரியான ஆபத்தான வஸ்துவை வைத்திருக்கவே தகுதியற்றவர்கள்.

யார் கேட்டாலும் கார்ட்களின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்துவிடாதீர்கள். கார்டை ஜெராக்ஸ் எடுக்கும் வேலையே வேண்டாம். உங்கள் கார்ட் எண்ணும் கார்டுக்கு பின்னால் இருக்கும் சி.வி.வி. (card verification value) எண்ணும் யாருக்கேனும் தெரிந்தால் போதும். உங்கள் அக்கவுண்டில் செமையாக கும்மு கும்முவென்று கும்மி விடலாம்.

“இந்த லிங்கை க்ளிக்குங்க. ஐநூறு ரூபாய் ப்ரீ” என்று மெயில் வந்தால் ஐநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஆப்பு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வங்கிகளிலிருந்து வரும் மெயில்கள் இதுபோல ப்ரீ ஆபர் எல்லாம் கொடுக்காது. எதுவாக இருந்தாலும் அவர்களது சைட்டுக்கே நேரடியாக வரச்சொல்லி விடுவார்கள். மெயில்களில் கண்டதை க்ளிக்கும் பழக்கம் இருந்தால் அதை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

போன் மூலமாக உங்கள் கிரெடிட் கார்ட் பற்றி யாராவது வங்கிப் பெயர் சொல்லிப் பேசினாலும் கூட உஷாராக இருங்கள். ஒன்றுக்கு இரண்டாக விசாரித்து விட்டே பேசுங்கள். வங்கி ஊழியராகவே கூட இருக்கும் பட்சத்தில் உங்கள் பின் நம்பர், சிவிவி நம்பர் போன்றவற்றை சொல்ல வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

மாதாமாதம் கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட் சரியாக வருகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டேட்மெண்டில் நீங்கள் செய்யாத செலவு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று பார்த்து உறுதி செய்துக் கொள்வது மிகவும் அவசியம். கார்ட் தொலைந்துப் போகும் பட்சத்தில் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை முடக்குதல் முக்கியமானது.

கார்ட் கூட கற்பு மாதிரி. கவனமாக இருந்தால் கவலைகள் இல்லை.

29 அக்டோபர், 2011

காணவில்லை!

பேரன்பும், பெருங்கோபமும் கொண்டு எரிமலையாய் போஸ் கொடுக்கும் மேற்கண்ட படத்தில் இருக்கும் நபரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. இந்த தேதிக்குப் பிறகு ஒரே ஒரு நாள் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய ஈழத்தாய் டாக்டர் புரட்சித்தலைவிக்கு பாராட்டுவிழா நடத்தியபோது மட்டும் மேடையில் கண்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.

மே 13க்கு முன்பாக ‘மீனவனை அடித்தால், மாணவனை அடிப்பேன்’ என்று இவர் அடித்த பஞ்ச் டயலாக் மிக பிரபலம். மே 13க்குப் பிறகாக மீனவனை சிங்களவன் அடித்தால், பதிலுக்கு கொசுவை மட்டுமே அடித்து, இவர் காலம் தள்ளுவதாக பி.டி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.

மூவர் தூக்குத்தண்டனை நேரத்தில் காஞ்சிபுரத்தில் செங்கொடி உயிர்த்தியாகம் செய்தபோது, ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள மேற்கண்ட நபர் காஞ்சிக்குச் சென்றார். அங்கே திடீரென்று காங்கிரஸ் கொடி எரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததும் ‘தள்ளு தள்ளு’ என்று கூட்டத்தை தள்ளிக்கொண்டு, எரியும் கொடிக்கு முன்பாக இந்திய தேசியத்தை சாடி வீரவசனம் பேசச் சென்றார். இவர் வேகமாக சென்றுக் கொண்டிருந்தபோதே, அடிபொடி ஒருவர் “அண்ணே அதிமுக கொடியையும் சேர்த்து எரிக்கிறாய்னுங்க...” என்று தகவல் கொடுத்த, அடுத்த நொடியே கோபத்தோடு, புயல்வேகத்தில் சென்னைக்குத் திரும்பினார் என்று நமது காஞ்சி மாநகர செய்தியாளர் காஞ்சனமாலா தெரிவித்திருக்கிறார். எனவே செங்கொடி இறுதி ஊர்வலத்திலும் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் யாரும் பார்த்ததாக சாட்சிகள் இல்லை.

இப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்று மத்திய அரசுடன் இணைந்து, மேற்கண்ட நபர் நித்தமும் வணங்கும் ஈழத்தாய் புரட்சித்தலைவியின் தமிழக அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் இந்த தமிழின ஈழநல புரட்சிக் கோரிக்கையை பாராட்டி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மீண்டும் நடத்தப்போகும் பாராட்டு விழாவில் மேற்படி நபர் மீண்டும் தென்படலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

28 அக்டோபர், 2011

வேலாயுதம்

இஸ்லாமியத் தீவிரவாதிகள். அவர்களுக்கு உதவும் அம்மாஞ்சி தமிழக உள்துறை அமைச்சர் என்று படத்தின் ஆரம்பம் காமாசோமாவென்று விஜயகாந்த், அர்ஜூன் படங்களின் பாதிப்பில் தொடங்கும்போதே வயிற்றிலிருந்து தொண்டைக்கு கிளம்புகிறது ஒரு கிலிப்பந்து. அடுத்து ஒரு நேர்மையான பத்திரிகையாளராக ஜெனிலியா. நேராகப் போய் அயோக்கியர்களின் கோடவுனில் நடக்கும் அட்டூழியங்களையெல்லாம் ஈஸியாக படம் பிடித்துவிடுகிறார் என்று அடுத்தடுத்து கிலி மேல் கிலி. சுறா பார்ட் டூ மாதிரியிருக்கே என்று நொந்துப்போய் சாயும் நேரத்தில், நல்லவேளையாக சீக்கிரமாகவே இளையதளபதியை அறிமுகப்படுத்தி கிலியை கிளுகிளுப்பாக்குகிறார்கள்.

நீண்டநாள் கழித்து விஜய்க்கு காமெடி செல்ஃப் எடுத்திருக்கிறது. கோழி பிடிப்பது, கிணற்றிலிருக்கும் நீரை காலி செய்வது, தியேட்டரில் பாசமலரின் ‘ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்’ சீனுக்கு ஒன்ஸ்மோர் அடித்துக் கொண்டேயிருப்பது என்று தங்கச்சிக்காக அவர் செய்யும் கோமாளித்தனங்கள் அத்தனையும் காமெடி கும்மி. ஆனால் இந்த சீன் ஒவ்வொன்றையும் ட்ரெயின் பயணத்தில் ஒருவர் தனித்தனி பிளாஷ்ஃபேக்காக சொல்லிக் கொண்டு வருவதுதான் மொக்கை.

சீட்டு பணம் வாங்க ஊரில் பாதி பேரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருவதும், இங்கே காமெடித் திருடன் சந்தானத்தோடு சேர்ந்து கும்மாளம் போடுவதுமாக விஜய் நீண்டநாள் கழித்து ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். விஜயை விட சந்தானத்துக்கு ரசிகர்கள் அதிகம் போலிருக்கிறது. அவர் முகத்தைக் காட்டினாலேயே சிரிக்கிறார்கள். பேசத் தொடங்கினாலேயே விசில் அடிக்கிறார்கள். கவுண்டமணி பாணி இரட்டை அர்த்த காமெடிகளில் கலக்குகிறார் மனிதர். குறிப்பாக ‘காமப் பிசாசு’ மேட்டர் செமை....

ஹன்சிகாவுக்கு கேரக்டர்தான் சப்பை. ஆளு கொழுக் மொழுக்கென்று வாட்டர்பெட் மாதிரி கிக்காக இருக்கிறார். விஜய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரேப் செய்ய நினைக்கும் காட்சியில் அவரது தொப்புள் சிறப்பாக நடித்திருக்கிறது. அது இயற்கையான தொப்புள் தானா அல்லது ஸ்பெஷலாக லண்டனில் ஆர்டர் செய்து செய்த மெழுகுத் தொப்புளா என்கிற சந்தேகம் வருகிறது. மற்றபடி ஹன்சிகாவின் ஹேர்ஸ்டைல் சூப்பர். உதடுகள் சூப்பரோ சூப்பர். நடிப்புதான் கொடுமை. வேறென்ன சொல்ல?

முதல் காட்சியில் தொடங்கிய மொக்கைக் கதையை அவ்வப்போது லேசுபாசாக காட்டினாலும், விஜய்யின் கொட்டம் தூள் கிளப்புவதால் இடைவேளை வரை பிரச்சினையில்லாமல் படம் பார்க்க முடிகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிக்குப் பிறகு இளையதளபதி ஒரு மாஸ் எண்டெர்டெயினர்.

இடைவேளைக்குப் பிறகு வழக்கமான சுறாத்தனம். விஜய் அடிக்கிறார். அனைவரும் அடிவாங்குகிறார்கள். மீண்டும் மீண்டும் அடிக்கிறார். மீண்டும் மீண்டும் அடிவாங்குகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் பத்து, பண்ணிரெண்டு ஃபைட்டு இருக்கும் போலிருக்கிறது. இந்த கொடூரங்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல க்ளைமேக்ஸ். பாடிகார்ட் சல்மான் பாணியில், தளபதி சட்டையைக் கழற்றிவிட்டு எதிரிகளை பந்தாடுகிறார். சிக்ஸ் பேக்குக்கு பதிலாக மார்புக்கு கீழே ஒன்றோ, இரண்டோ பேக்குதான் தளபதிக்கு இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் சிலர் ‘வாட் எ மேன்?’ என்று புல்லரிப்பதைப் பார்க்கும்போது படையப்பா ‘பேர் பாடி ஃபைட்’ நினைவுக்கு வருகிறது. முதல் பாதி முழுக்க காமெடியில் கலக்கி எடுத்தவர்கள், இரண்டாம் பாதியில் சீரியஸாக எதை செய்தாலும் அவல காமெடியாகவே முடிவது கொடுமை.

விஜய் திரைத்துறைக்கு வந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகிறது. சில படங்களில் திறமையான நடிப்பாற்றல் தனக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டவும் செய்திருக்கிறார். குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை அவருக்கென்று பெரிய ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வசூல் மன்னர் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படிப்பட்ட நடிகர் இன்னமும் இதுபோன்ற வீணாய்ப்போன ஸ்க்ரிப்டுகளிலேயே தன் திரையுலக வாழ்க்கையை ஏன் தொலைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த சூர்யா, ஜீவா என்று பல நடிகர்களும் வித்தியாசமான பாத்திரங்களில், வித்தியாசமான கதையமைப்புகளில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, இன்னமும் வேலாயுதம் மாதிரி பழைய ஃபார்முலா படங்களிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு என்ன? விஜய் தனது அடுத்தக் கட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

வேலாயுதம் – அணில் வெடி இடைவேளை வரை அபாரம்!

அப், டவுன்!

“அப்”

சீரான லயத்தோடு நாற்பத்தியெட்டு ஜோடி கரங்களும் உயர்ந்தன.

“டவுன்”

இம்முறை ராணுவ ஒழுங்கு வேகத்தில், அதே கரங்கள் இறங்கின.
மீண்டும் ‘அப்’, மீண்டும் ‘டவுன்’. மீண்டும் சீரான லயம், மீண்டும் ராணுவ ஒழுங்கு. இப்படியே ஏழெட்டு முறை.

ரேகா டீச்சருக்கு ‘அப், டவுன்’ சொல்லுவது பிடித்தமான விஷயம். மாணவ, மாணவியர் ஒரு சேர கையை தூக்குவதும், ஒரு சேர கையை இறக்குவதும் பார்ப்பதற்கு அழகான காட்சி. அதே நேரம் இவர்கள் தனது கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள் என்பதும் ஒருமாதிரியான குரூர மகிழ்ச்சியை டீச்சருக்கு தருகிறது.

இந்த வயதில் மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். ஆசிரியருக்கு கீழ்படிவது என்பது அவசியமான குணம் என்பதும் டீச்சரின் எண்ணம்.
‘அப், டவுன்’ சம்பிரதாயத்தால் ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை வளர்ப்பது ஒரு பலன். வகுப்பு ஆரம்பிக்கும்போது கலகலவென்று பேசிக்கொண்டிருக்கும் மாணவர்களின் சலசலப்பை அடக்க முடிவது இன்னொரு பலன். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

“என்ன டீச்சர், நர்சரி ஸ்கூல் டீச்சர் மாதிரி இன்னமும் ‘அப், டவுன்’ சொல்லிக்கிட்டிருக்கீங்க?” குழுவாக சாப்பிடும்போது ஒருமுறை கேட்டார் ட்ரில் மாஸ்டர் நடராசன்.

அப்போது ரேகா டீச்சர் சொன்ன விளக்கம்தான் போன பாராகிராப்பில் நீங்கள் படித்த ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் பலன்கள்.

“அதுக்குன்னு பத்தாங்கிளாஸ் பசங்களுக்கு கூட ‘அப், டவுன்’ சொல்லணுமா டீச்சர், அவங்கள்லாம் வளர்ந்துட்ட பசங்க இல்லையா.. பசங்களுக்கு மீசை வளர்ந்துடிச்சி. பொண்ணுங்க தாவணி போட்டுக்கிட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குன்னு சுயமரியாதை இருக்குமில்லே?”

“இல்லே சார். பசங்களை பசங்களா வெச்சிருக்கணும். இல்லேன்னா நம்ம தலைக்கு மேல ஏறி விளையாடுவாங்க”

இந்த நடராசன் மாஸ்டருக்கு இதே வேலையாகப் போகிறது. சுயமரியாதை, அது, இதுவென்று பள்ளியில் இவர் ஒரு கலகக்கார ஆசிரியர். பசங்களுக்கு ஓவராக செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கிறார். படிக்கிற பசங்களுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி, அது, இதுவென்று நாசமாக்கிக் கொண்டிருக்கிறார். ஒழுக்கம், படிப்பு – இது ரெண்டுமே இவருக்கு ஆகாது. எனவே ட்ரில் மாஸ்டரை மற்ற ஆசிரியர்களுக்கு பிடிக்காதது மாதிரி, ரேகா டீச்சருக்கும் பிடிக்காது.


ன்று ரேகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக ஏற்பாடு. காலை பள்ளிக்குச் சென்ற டீச்சர், தலைமை ஆசிரியர் அனுமதியோடு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டாள். அம்மாவும், அக்காக்களும் சமையலில் மும்முரமாக இருக்க.. அப்பா, அண்ணன், தம்பி மூவரும் வீட்டுக்கும், ரோட்டுக்குமாக பரபரப்பாக இருந்தார்கள். வீடு முழுக்க உறவுகள் மயம். ரேகாவை வழக்கத்துக்கும் மாறாக கூடுதல் மேக்கப் போட்டு சிங்காரித்துக் கொண்டிருந்தார்கள். இது நாலாவது வரன். இந்த இடமாவது அமையணும் என்று அப்பாவுக்கு டென்ஷன்.

ஐந்தரை மணிவாக்கில் மாப்பிள்ளை வீட்டார் பந்தாவாக காரில் வந்திறங்கினார்கள். சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ரேகா. மாப்பிள்ளை களையாகவே இருந்தார். கழுத்தில் தடியான செயின். கையில் பிரேஸ்லேட். விரல்களில் மோதிரங்கள். கொஞ்சம் வசதியான இடம்தான் போலிருக்கிறது.

இரு குடும்பத்தாரின் குசல விசாரிப்புகள் முடிந்தது.

“ரேகா, காப்பி எடுத்துக்கிட்டு வாம்மா” – அப்பாவின் அழைப்புக்காகவே காத்திருந்தவள், கையில் காப்பி டம்ப்ளர்கள் நிரம்பிய தட்டை எடுத்துக் கொண்டு, அன்னநடை நடந்து வந்தாள்.

“எல்லாருக்கும் கொடும்மா” – தலை குனிந்தவாறே ஒவ்வொரு டம்ப்ளராக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தாள்.

“உட்காரும்மா” – கீழே விரிக்கப்பட்ட பாயில் உட்கார்ந்தாள்.
“என்னம்மா படிச்சிருக்கே?” – மாப்பிள்ளை வீட்டு பெருசு ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று ஆரம்பித்தது.

“பி.எஸ்.சி”

“என்ன வேலை பார்க்குறே?” – இது கொஞ்சம் வயதான பெண்குரல்.

“கவருமெண்டு ஸ்கூல்லே டீச்சர்”

“கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க அண்ணி. அண்ணன் பார்க்கணுமில்லே?” மாப்பிள்ளையின் தங்கை.

மெதுவாக நிமிர்ந்தாள்.

“இவன்தான் மாப்பிள்ளை. நல்லா பார்த்துக்கோம்மா” மாப்பிள்ளையின் அம்மாவாக இருக்க வேண்டும்.

ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“போதும். உள்ளே போம்மா”

மெதுவாக உள்ளறைக்கு நகர்ந்தாள்.

வெளியே பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.

“மாப்பிள்ளைக்கு சாண்ட்ரோ கார் வாங்கித் தரணும்”

“சரிங்க”

“பொண்ணுக்கு 75 சவரன் நகை போட்டுடுங்க. மாப்பிள்ளைக்கு 10”

“சரிங்க”

“கல்யாணம் நல்லா கிராண்டா இருக்கணும்”

”சரிங்க”

டிமாண்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, அப்பா ‘சரிங்க, சரிங்க’ என்று பூம்பூம் மாடாய் தலையாட்டிக் கொண்டே இருந்தார்.

ரேகா டீச்சருக்கு இப்போது ‘அப், டவுன்’ நினைவுக்கு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான், இப்போது அப்பா. எப்போதும் யாரோ ‘அப், டவுன்’ சொல்ல, எப்போதும் யாரோ கீழ்ப்படிந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

22 அக்டோபர், 2011

எம்.ஜி.ஆர். ரசிகன்

பொன்னுசாமியும், அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அப்பா திமுகவில் இருந்தபோதுகூட பொன்னுசாமியோடு நெருங்கிய நட்போடே இருந்துவந்தார். இருவரையும் இணைத்த விஷயம் எம்.ஜி.ஆர். வெறித்தனமான ‘வாத்யார்’ ரசிகர்கள் அவர்கள்.

திமுகவில் ஒன்றியப் பிரதிநிதியாக இருந்தபோதே கூட, அப்பாவின் எம்.ஜி.ஆர். வெறி எந்த அளவுக்கு இருந்தது என்றால், தீபாவளிக்கு தீபாவளி எனக்கு தலைவர் கெட்டப் செய்து அழகு பார்க்குமளவுக்கு இருந்தது. ஒரு தீபாவளிக்கு கவுபாய் டிரஸ் + தொப்பி (வேட்டைக்காரன்), மறு தீபாவளிக்கு பெரிய காலர் வைத்த சஃபாரி (நல்ல நேரம்), இன்னுமொரு தீபாவளிக்கு இன்ஸ்பெக்டர் டிரஸ் (காவல்காரன்) என்று குட்டி எம்.ஜி.ஆராகவே – கிட்டத்தட்ட குட்டிக் கோமாளி மாதிரி - ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். பெரிய சைஸ் கூலிங் கிளாஸ் போனஸ். கருமம். ஷூ கூட கருப்பு சிவப்பு என்று இருவண்ணத்தில்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவருக்கு பிடித்த பாட்டே ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்’தான். மகனுக்கு மட்டும் என்றில்லாமல், அவரும் கூடவே கூலிங் கிளாஸ், அரும்பு மீசை(?), ஃபுல் மேக்கப் என்று எம்.ஜி.ஆர் கெட்டப்பில்தான் திரிவார்.

அப்பா லெவலுக்கு கெட்டப் வெறியெல்லாம் பொன்னுசாமிக்கு இல்லையென்றாலும், அவருக்கு இணையான எம்.ஜி.ஆர் பக்தர்தான் இவரும். மடிப்பாக்கத்தில் இன்றிருக்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் சிலையை நிறுவியவர் பொன்னுசாமிதான்.

86 உள்ளாட்சி மன்றத் தேர்தல் அது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரே உள்ளாட்சித் தேர்தலும் அதுதான். எனக்கு நன்கு நினைவு தெரிந்து நடந்த தேர்தல். அப்பா ஒரு வில்லங்கப் பிரச்சினையால் அதிமுகவுக்கு வந்த புதிது.

எங்கள் ஊராட்சி மன்றத்துக்கு நின்ற முக்கிய வேட்பாளர்கள் ஈ.பொன்னுசாமி, தெய்வானை தெய்வசிகாமணி. மற்ற வேட்பாளர்கள் எல்லாம் உப்புமா.

மடிப்பாக்கத்தில் நீண்டகாலம் திமுக கிளைச்செயலாளராக இருந்த தெய்வசிகாமணியும் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்தான். இருந்தாலும் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை என்கிற காரணமே பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்க அப்பாவுக்கு போதுமானதாக இருந்தது. தெய்வசிகாமணி ஏதோ அரசுப் பணியில் இருந்தார். எனவே அவரது மனைவியை வேட்புமனு தாக்கல் செய்யவிட்டு ‘ப்ராக்ஸி’யாகப் போட்டியிட்டார்.

இப்போது மாதிரி ‘சப்பை’யாகவெல்லாம் அப்போது தேர்தல் நடக்காது. ஒரிஜினல் தேர்தல் ஃபீலிங்க்ஸ் எல்லாம் 91 தேர்தலிலேயே போயாச்சி. கிட்டத்தட்ட ஒரு மாத அனல் பறக்கும் பிரச்சாரம். மடிப்பாக்கத்தில் அப்போது 800, 900 ஓட்டு வாங்கினாலே ஜெயித்துவிடலாம். வாக்காளர்கள் சொற்பமான ஆயிரங்களில்தான் இருந்தார்கள்.

பிள்ளையார் கோயில் அருகில் பொன்னுசாமிக்கு எலெக்‌ஷன் ஆபிஸ். ஆபிஸ் என்றால் மேலே ஒரு கூரை. மூன்றுபுறமும் தென்னை ஓலை வேய்ந்த சுவர். சுவரொட்டிகளும், பிட்நோட்டீஸ்களுமாய் இறைந்துக் கிடக்கும். குட்டியாக ஒரு மேடை. அதில் ஒரு மைக். நான்கைந்து சேர்கள். அவ்வளவுதான்.

பிரச்சாரத்துக்கு நேரவரையறை எதுவும் கிடையாது. இரவு 12 மணி வரையில் கூட சத்தமாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கலாம். பொன்னுச்சாமிக்கு சரியாக பேசவராது. திமுகவின் முன்னாள் அதிரடிப் பேச்சாளர் என்பதால் அப்பா அவருக்கு ஒத்தாசையாக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தினமும் சாயங்காலம் ஆபிஸுக்கு பர்மிஷன் போட்டுவிட்டு அப்பா சீக்கிரமாக வந்துவிடுவார். நேராக எலெக்‌ஷன் ஆபிஸுக்கு போய் உட்கார்ந்துக் கொண்டு, நாக்குவறழ மைக்கில் பேசிக்கொண்டிருப்பார். “ஆகவே. ஊருக்கு உழைக்கும் உத்தமர் நண்பர் ஈ.பொன்னுசாமி அவர்களுக்கு அணில் சின்னத்தில் வாக்களிப்பீர்” என்று இரவு பத்து மணிக்கு கூட அப்பாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

பொன்னுச்சாமி எதிர்ப்பார்த்த அளவுக்கு தேர்தல் அவ்வளவு சுலபமாக இல்லை. தெய்வசிகாமணியின் பிரச்சாரம் தூள் பறந்தது. அவருக்கு தரப்பட்ட சின்னம் கத்தரிக்கோல். எல்லா குடும்பங்களுக்கும் தலா ஒவ்வொரு கத்தரிக்கோலை பரிசளித்து ஓட்டுக் கேட்டு அசத்திக் கொண்டிருந்தார். பொன்னுச்சாமி தன்னிடமிருந்த நகை, நட்டை எல்லாம் அடகுவைத்தே தேர்தல் செலவுகளை சமாளித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, பிரச்சாரத்துக்கு அப்பாவை அழைத்துச்செல்ல பொன்னுச்சாமி வீட்டுக்கு வந்திருந்தார். “அவங்க கத்தரிக்கோல் கொடுத்தாங்க. நீங்க எப்போ அணில் கொடுக்கப் போறீங்க மாமா?” என்று அவரிடம் கேட்டேன். சிரித்தவாறே, “ஜெயிச்சதும் உனக்கு ஒரு பெரிய அணில் பொம்மை வாங்கித் தர்றேண்டா செல்லம்” என்றார்.

மடிப்பாக்கத்துக்கு அப்போது படித்த பார்ப்பனக் குடும்பங்கள் குடியேறிக் கொண்டிருந்த காலம் அது. பெரும்பாலும் வங்கிகளில் பணிபுரிபவர்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள். பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்தவர்கள். இவர்களை குறிவைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் புற்றீசலாக உருவாகிக் கொண்டிருந்தன. இந்த கலாச்சார மாற்றத்தை உற்றுக் கவனித்த தெய்வசிகாமணி அதிரடியாக ஒரு பிரச்சாரமுறையை கையெடுத்தார். கான்வெண்ட் படிக்கும் குழந்தைகள் சிலரைப் பிடித்து, ஆங்கிலத்தில் அவர்களை ஓட்டு கேட்க வைத்தார். “வோட் ஃபார் தெய்வானை தெய்வசிகாமணி. தே வில் டூ....” என்று மடிப்பாக்கம் தெருக்களில் ஆங்கிலம் ஆறாய் ஓடத்தொடங்கியது.

இந்தப் பக்கம் இருந்தவர்களோ பாமரர்கள். இந்த அதிரடிப் பிரச்சார டெக்னிக்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. பதிலுக்கு குழந்தைப் பிரச்சாரப் பீரங்கிகளை இவர்களும் உருவாக்கத் தொடங்கினார்கள். முதல் பீரங்கி நான்தான். அப்பா எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து மைக்கில் பேசினேன். “அன்பார்ந்த மடிப்பாக்கம் வாழ் வாக்காளர்களே! வாரிக் கொடுக்கும் வள்ளல் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் அன்புத்தம்பியாம் ஈ.பொன்னுச்சாமி...” என்று தொடங்கி கிட்டத்தட்ட மூன்று நிமிடத்துக்கு உரை போகும்.

நெக்-டூ-நெக் தேர்தல் அது. ரிசல்ட் வரும் வரை எல்லோருக்குமே டென்ஷன்தான். இப்போது போல காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து அரை மணி நேரத்தில் முன்னணி நிலவரமெல்லாம் தெரியாது. மறுநாள் அதிகாலை ரெண்டு மணிக்குதான் ரிசல்ட் தெரிந்தது. பொன்னுசாமி அறுநூத்தி சொச்சம் ஓட்டு வாங்கி அமோகமாக ஜெயித்திருந்தார். அடுத்து வந்த வேட்பாளருடன் வாக்கு வித்தியாசம் இருநூற்று சொச்சம் என்பதாக நினைவு. காலையில் எழுந்தபோது ‘பொன்னுசாமி ஜெயிச்சிட்டாரு’ என்று அப்பா சொன்னபோது கிடைத்த மகிழ்ச்சியை எதனுடன் ஒப்பிடுவது?

அவர் தலைவர் ஆனதற்குப் பிறகு சுலபமாக அவரை அணுகுவது குறைந்தது. காலையில் டீக்கடையிலேயே அவரோடு அப்பா உள்ளிட்டவர்கள் உட்கார்ந்து அரசியல் பேசிவிடுவார்கள். அதற்குப் பிறகு அவரைப் பார்க்க முடியாது. நாளாக நாளாக தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதற்கு தலைவரை குறை சொல்லிப் பிரயோசனமில்லை. நகரமயமாகி வரும் எந்த கிராமத்திலும் இயல்பாக ஏற்படும் மாற்றம்தான் இது.

இடையில் எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, ஜானகி அணிக்குப் போனார் (அப்பாவும்). மீண்டும் அதிமுக இணைந்தபோது வேறு வழியின்றி, புரட்சித்தலைவியை ஏற்றுக்கொண்டார். இன்றும் கூட போஸ்டர்களில், சுவர் ஓவியங்களில் எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் தரும் டிபிக்கல் கட்சிக்காரர் பொன்னுசாமி. அதுவும் தொப்பி போட்ட எம்.ஜி.ஆர் அல்ல. டைட்டான அரைக்கைச் சட்டை போட்ட ‘தெய்வத்தாய்’ காலத்து எம்.ஜி.ஆர். பொன்னுசாமி சார்பாக வரையப்படும் சுவர் ஓவியங்களில் எம்.ஜி.ஆர் ஸ்டைலாக கீசெயின் கடிப்பார். பேனாவைப் பிடித்து சிந்திப்பார். இப்படியாக விதவிதமான கிரியேட்டிவ். எம்.ஜி.ஆரை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு ரசிக மனோபாவம் எத்தனை வயதானாலும் பொன்னுசாமிக்கு சற்றும் குறையவேயில்லை.

86ல் அதிமுக தமிழக அளவில் பல்பு வாங்கியதால், 91ல் அம்மா ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. 96ல் கலைஞர் மீண்டும் நடத்தினார். பத்து ஆண்டுகள் கழிந்து மீண்டும் பொன்னுசாமி போட்டியிட்டார். இம்முறை நேரடியாக அரசுப்பணியை துறந்து களமிறங்கினார். இம்முறை நகை நட்டெல்லாம் வைத்து போட்டியிடுமளவுக்கு நிலைமை மோசமில்லை. நல்ல வசதியாகவே இருந்தார் பொன்னுசாமி. கடந்த முறை போல இல்லாமல் எளிதாகவே வென்றார் பொன்னுசா. ஆனால் 2001, 2006 தேர்தல்களில் பொன்னுசாமி படுதோல்வி அடைய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இப்போது தெய்வசிகாமணி இல்லை, வேறு போட்டியாளர்கள். 2001லாவது இரண்டாவது இடம். 2006ல் மூன்றாவதுதான் வரமுடிந்தது.

அவர் அதிகாரத்திலிருந்து அன்னியப்பட்டு பத்து ஆண்டுகள். இப்போது மடிப்பாக்கம் ஊராட்சி, மாநகராட்சியோடு இணைந்து விட்டது. 187 மற்றும் 188 என இரண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டுவிட்டது. 188ல் அதே பொன்னுசாமி முதன்முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பொன்னுசாமி வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று பரவலாக பேசிக்கொண்டார்கள். ஏனெனில் அவர் போட்டியிட்டது சிட்டிங் டி.எம்.கே. பிரெசிடெண்ட் உடன்.

நேற்று 187வது வார்டு ரிசல்ட் காலையிலேயே வந்துவிட்டது. இதுதான் எங்கள் வார்டு. எதிர்ப்பார்த்த ரிசல்ட்தான். 188 மட்டும் இழுத்துக்கொண்டே போனது. திரும்ப திரும்ப நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருவழியாக மதியத்துக்கு மேல் தெரிந்தது. பொன்னுசாமி அமோகமாக இரண்டாயிரத்து ஐநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். முதுமை, உடல்நலிவு, மகனின் தற்கொலை என்று ஏகப்பட்ட அலுப்புகளோடு வாழும் அவருக்கு இந்நேரத்தில் இந்த வெற்றி அவசியமானதுதான். 86 ரிசல்ட்டு கேட்டபோது கிடைத்த அதே மகிழ்ச்சியும், நிம்மதியும் இப்போதும் கிடைத்தது. இத்தனைக்கும் இப்போது பொன்னுசாமியோடு எங்களுக்கு அவ்வளவு தொடர்பில்லை. அவர் இன்னமும் எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதே அவரது வெற்றியை விரும்ப எனக்கு போதுமான காரணமாக இருக்கிறது.

அவர் முதன்முதலாக ஜெயித்து இந்த வருடத்தோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. ஜெயித்தவுடன் வாங்கித்தருகிறேன் என்று அன்று வாக்களித்த அணில் பொம்மையை இன்றுவரை வாங்கித்தரவேயில்லை. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சி என்பது மாதிரி, அரசியல்வாதியின் வாக்கும் அன்றோடு போச்சு போலிருக்கிறது.

20 அக்டோபர், 2011

பாம்பு புகுந்த காதை

“நான் ஆளான தாமரை” ரீமிக்ஸ் டூயட்டுக்கு ஹன்சிகா மோத்வானியோடு வளைந்து வளைந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தேன். இடையில் வந்த இசைக்கு வாகாக, தோளை குலுக்கியபடியே என்னுடைய உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, ஹன்சிகாவின் உதடுகளை நோக்கி வேட்கையோடு நெருங்க...

“எழுந்திருங்க. சீக்கிரம் எழுந்திருங்க” தோளை குலுக்கி எழுப்பினாள் இளவரசி. யாரோ ரிமோட்டை ஸ்விட்ச் ஆஃப் செய்தது மாதிரி கனவும் பட்டென்று ஆஃப் ஆனது.

இவளுக்கு இதே வேலையாகப் போகிறது. ஏழு மணி ஆனால் போதும். ‘எழுந்திரு அஞ்சலி, எழுந்திரு’ டைப்பில் அலாரம் அடிக்க ஆரம்பித்து விடுவாள். கண்விழித்து, இமைகளை கசக்கி உள்ளங்கைகளை விரித்துப் பார்த்தேன். தலையணைக்கு அடியில் இருந்த செல்போனை எடுத்து நேரம் பார்த்தபோது, ஏழு அடிக்க ஐந்து நிமிடம் பாக்கியிருந்தது. ‘அட, இன்று ஞாயிற்றுக்கிழமை’

“சனியனே. ஞாயித்துக்கிழமை அதுவுமா ஏண்டி காலங்காத்தாலே உயிரை எடுக்கறே?”

“அய்யோ. உங்களாண்டை பெரிய ரோதனையாப் போச்சி. நம்ம ஹால்லே சோபாவுக்கு அடியிலே பெரிய பாம்பு ஒண்ணு போச்சி. சீக்கிரமா எழுந்து வாங்க” அலறினாள்.

‘சட்’டென்று அடிவயிற்றுக்குள் எழுந்த அச்சப்பந்து தலைக்கு ஏறியது. வாரி சுருட்டி எழுந்தேன். கைலியை சரி செய்துக் கொண்டேன். ஹாலுக்கு ஓடினேன். தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன்.

அதற்குள்ளாக விஷயம் அறிந்த பக்கத்து பிளாட் மாமா, வினோத உணர்ச்சிகள் தாங்கிய முகத்தோடு நின்றிருந்தார். அவரிடம் குழந்தையை கொடுத்தேன். தோளில் சாய்த்துக் கொண்டார். குழந்தை லேசாக வாய் கோணி சிணுங்கி, மீண்டும் உறங்கத் தொடங்கினாள்.

தலைக்குள் பூச்சி பறந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி ரிலாக்ஸாக ரியாக்ட் செய்யவேண்டுமென்று மனநலப் பயிற்சிகளில் கற்றிருக்கிறேன். இருந்தாலும் பதட்டத்தை தணிக்க முடியவில்லை. லேசாக கைவிரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

இளவரசியும், அம்மாவும் கலவரத்தோடு வாசலுக்கு வந்தார்கள். “அப்பவே சொன்னேன். திருப்பதி பிரார்த்தனை பாக்கியிருக்குன்னு...” அம்மா புலம்ப ஆரம்பிக்க, கைகாட்டி நிறுத்தி கேட்டேன்.

“யாரு பாம்பை பார்த்தது? என்ன ஏதுன்னு தெளிவா சொல்லுங்க!”

“நான் தாங்க பார்த்தேன். வாசல்லே பால் பாக்கெட்டை எடுத்துட்டு திரும்புறப்போ, டிவி ஸ்டேண்டுக்கு அடியிலிருந்து கருப்பா, பெருசா நெளிஞ்சி, நெளிஞ்சி போய் சோபாவுக்கு அடியிலே புகுந்திடிச்சி!”

இளவரசி சொல்வதை முழுமையாக நம்பவும் முடியாது. அவள் மாயயதார்த்தவாத உலகில் வாழ்பவள். நேற்று சன் டிவியில் மதியம் ‘நீயா’ படம் பார்த்ததாக வேறு, முந்தைய பின்னிரவில் காதில் கிசுகிசுப்பாக சொல்லியிருந்தாள். ‘ரொமான்ஸ்’ மூடில் இருக்கும்போது சிலநேரங்களில் இப்படித்தான் அன்று பார்த்த மெகாசீரியல், மொன்னைப் படங்களைப் பற்றி ஏதாவது வளவளவென்று பேசி எரிச்சலைக் கிளப்புவாள்.

ஒருவேளை இவள் நிஜமாகவே பாம்பை பார்த்திருந்தால்?

தவழும் குழந்தை இருக்கும் வீடு. என் அச்சத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. கருப்புப் பாம்பு என்கிறாள். கருநாகமாக இருக்குமோ?

கறையான் புற்றெடுக்க, கருநாகம் வந்து குடியேறும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ பழமொழிகள் நினைவுக்கு வந்தது. எல்லா பாம்புக்கு விஷமில்லை என்று என்னுடைய அறிவியல்பூர்வமான மூளை சொல்கிறது. ஆனால் கருநாகத்துக்கு விஷம் இருப்பது நிச்சயம். அதுவாக கடிக்காது. அதை நோண்டினால் ஒரே போடாக போட்டுவிடுமாம். டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன். பாம்பை கையில் பிடித்து விளையாடும் வயதில்தான் இருக்கிறாள் குழந்தை. தெரியாத்தனமாக அவள் விளையாடி, ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விட்டால்..? ச்சே.. என்னென்னவோ கற்பனை ஏடாகூடமாக ஓடுகிறது.

அதிருக்கட்டும் இங்கே போய் பாம்பு எப்படி வரும், அது வன விலங்கு அல்லவா? ஹோம் லோன் போட்டு, சிட்டிக்கு நட்ட நடுவில், ஐம்பது லட்ச ரூபாய்க்கு டீலக்ஸ் ஃப்ளாட் வாங்கி, லம்பாக மாதாமாதம் வங்கிக்கு தவணை கட்டிக் கொண்டிருக்கிறேன். பாம்பாவது, கீம்பாவது. ஏதாவது கயிறு அல்லது நாடாவைப் பார்த்துத் தொலைத்திருப்பாள். லாஜிக்கலாக யோசித்தேன்.

“ஏண்டி லூசு. நாலாவது மாடிக்கு பாம்பு எப்படி வரும்? படிக்கட்டு ஏறியா, இல்லைன்னா லிஃப்ட் வழியாவா? காலங்காத்தாலே உசுரை எடுத்துக்கிட்டு. போய் வேலையைப் பாருடீ...”

“அட ஆக்கங்கெட்ட மனுஷா. நெசமாத்தான் சொல்றேன். கதவாண்ட இருந்து வீட்டுக்குள்ளே பாம்பு வளைஞ்சி, நெளிஞ்சு நுழையறதை என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன்” – இப்படித்தான் அவளுடைய நேர்மையை கேள்விக்கு உள்ளாக்கினால், பேச்சில் மரியாதையை குறைத்து விடுகிறாள்.

“அய்யோ, மாரியாத்தா. கடைசியிலே என் வூட்டுக்குள்ளேயே வந்துட்டியா? ஆடி மாசம் கூழு ஊத்தணும், கூழு ஊத்தணும்னு சொன்னா இந்த படுபாவிபய மவன் எங்கே கேக்குறான்? அதை நெனைவு படுத்தத்தான் வந்திருக்கியா?” அம்மாவின் புலம்பலும் எல்லை மீறத் தொடங்கியது.

கோவணம் உடுத்தும் ஊரில் வைகிங் உள்ளாடை அணிபவன் பைத்தியக்காரன். வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே போதும். வீதி முக்கில் இருக்கும் மாரியம்மன் கோயில் பாம்பு புற்றுக்கு ரெகுலராக பால் பாக்கெட் வாங்கி ஊற்றும் மனைவி. மாதம் ஒருமுறை சிகப்புச்சேலை கட்டி மருவத்தூருக்கு நடைப்பயணம் போகும் அம்மா. இப்படிப்பட்ட பக்தி பரவசக் குடும்பச் சூழலில் நாத்திகனாக வாழும் கொடுமை யாருக்கும் வாய்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக எனக்கு வாய்த்திருக்கிறது. ஊருக்கே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முடிந்தாலும், வீட்டுக்குள் தலைவிரித்து ஆடும் ஆன்மீக ஏகாதிபத்தியத்துக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது.

எனக்கென்னவோ அம்மாவுக்கு ‘அருள்’ வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. உண்மையில் அருள் வந்தது மாதிரி ஆடிக்கொண்டிருந்தவள் இளவரசிதான். ஏனெனில் உள்ளே நுழைந்து விட்டதாக கூறப்படும் பாம்பை பார்த்த பெருமை அவளுக்குதானே கிடைத்தது?

“நிஜமாவே பாம்பை பார்த்தியா இளவரசி?” இம்முறை பரிதாபமாகக் கேட்டேன்.

“அவ என்னடா பொய்யா சொல்லப் போறா? முன்னாடி நாம இருந்த தாம்பரம் வூட்டுலே எத்தனை வாட்டி மனைப்பாம்பை பார்த்திருப்பேன் தெரியுமா? உன்னை மாதிரியேதான் உங்கப்பனும் லூசு. சாவுற வரைக்கும் அந்தாளும் நம்பவேயில்லை” இம்முறை அம்மாதான் நாகப்பாம்பு மாதிரி சீறினாள்.

மனைப்பாம்பு என்பது ஒரு நம்பிக்கை. அதாவது பாம்பினை வணங்கும் பாம்பு பக்தைகள் வீட்டினைக் காக்க, அவர்களது ஒவ்வொரு வீட்டுக்கும் காவலாக ஒரு நாகப்பாம்பு இருக்குமாம். அது அந்த வீட்டின் சுத்த பத்தமான பாம்பு பக்தையின் கண்ணுக்கு மட்டும் அவ்வப்போது தட்டுப்படுமாம். இம்மாதிரி மூடநம்பிக்கைகள் வளர காரணமான, பாம்பை வைத்து படமெடுத்து சம்பாதிக்கும் தமிழ் இயக்குனர்களை தேடிப்பிடித்து உதைக்க வேண்டும்.

ஒருவழியாக என் வீட்டுக்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக இப்போது நானும் நம்பத் தொடங்கிவிட்டேன். சோபாவுக்கு அடியில் பாம்பு இருப்பதாக இளவரசியின் வெர்ஷன். எப்படி அதை துரத்துவது அல்லது கொல்வது?

இதற்கிடையே ‘விஷயத்தை’ கேள்விப்பட்டு, வீட்டு வாசலில் பெரிய கூட்டம் கூடிவிட்டது.

“என்ன சார், மலைப்பாம்பு உங்க வீட்டுக்குள்ளே புகுந்துவிட்டதா பேசிக்கறாங்களே?” பத்திரிகைக்காரன் பேட்டி எடுப்பது மாதிரி கேள்வி கேட்டான் பி-2 ஃப்ளாட் காலேஜ் பையன்.

“சென்னையிலே ஏதுய்யா மலை?”

“படிக்கட்டெல்லாம் ஏறி வரணும்னாம், அது நிச்சயம் கொம்பேறி மூக்கனா தான் இருக்கணும் சார்” கிரவுண்ட் ஃப்ளோர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த பெரியவர் டப்பென்று ஒரு போடு போட்டார்.

அவருடைய கருத்தால் உந்தப்பட்ட கூட்டம், பாம்பு பற்றிய பேரறிவு கொண்டவராக அவர் இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் மேற்கொண்டு தகவல்களைப் பெற அவரது முகத்தை ஏறிட்டார்கள். அவர் சாவகாசமாக ஆரம்பித்தார்.

“கொம்பேறி மூக்கன்னா தெரியுமில்லையா?”

“தியாகராஜன் படம். போன வாரம் கேடிவியிலே போட்டிருந்தான்” ஏதோ ஒரு அசடு பதில் சொன்னது.

“இல்லை. இது பாம்போட பேரு. புத்திசாலியான பாம்பு. சின்ன வயசுலே கிராமத்துலே இருந்தப்போ நிறைய பார்த்திருக்கேன். மரத்துலே சுளுவா ஏறும். இதை யாராவது கொல்ல முயற்சி பண்ணி, மிஸ் ஆயிடிச்சின்னு வெச்சிக்கோ.. கொல்ல நினைச்சவனை அடையாளம் வெச்சு எப்படியாவது போட்டுத் தள்ளிடும். அதுவுமில்லாமே சுடுகாட்டுக்குப் போயி தன்னாலே கொல்லப்பட்டவனோட உடம்பு முழுக்க எரியுதான்னு கன்ஃபார்மும் பண்ணிக்கும்” பெருசு கப்ஸாவாக அள்ளிவிட, கூட்டம் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாய் தலை ஆட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. வேகமாக கீழிறங்கி செக்யூரிட்டியை பார்த்து எகிற ஆரம்பித்தேன்.

“யோவ் என் வீட்டுக்குள்ளே பாம்பு புகுந்திடிச்சாம். என்னத்தய்யா வேலை பார்க்குறீங்க?”

“சார்! மனுஷன் வந்தா, யாரு என்னன்னு விசாரிச்சி அனுப்பலாம். மேற்படி சமாச்சாரம் வர்றதுன்னா யாருக்கும் தெரியாமதான் சார் வந்திருக்கும். என்னையப் புடிச்சி ஏறி என்னா பிரயோசனம்?” அவனும் பதிலுக்கு தர்க்கரீதியாக எகிற, என்னிடம் பதில் ஏதுமில்லை.

இவனிடம் பேசியும் பிரயோசனமில்லை. அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். இப்படியும் ஒரு அவலச்சூழல் என்னை மாதிரி மிடில் க்ளாஸ் மாதவனுக்கு வந்து சேரவேண்டுமா? இதை எப்படி எதிர்கொள்வது? பகுத்தறிவோடு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

இந்தச் சூழலை பெரியார் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அவர் வீட்டிலும் இதுமாதிரி பாம்பு வந்திருக்குமா? வந்திருந்தால் தடியெடுத்து அடித்திருப்பாரா அல்லது வேறு ஏதேனும் உபாயத்தை கையாண்டிருப்பாரா? சரி. பெரியாரிடம் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஜெயமோகனை வாசிக்க வேண்டும். அவர்தான் காடு என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். நிச்சயமாக பாம்பு வீட்டுக்குள் புகுந்தால், எப்படி சமாளிப்பது என்று இந்திய தத்துவ ஞானமரபின் படி ஏதேனும் வழியை சொல்லியிருப்பார்.

இப்படியே சில நிமிடங்கள் முட்டாள்த்தனமாக யோசித்தேன். இந்தச் சாதாரணப் பிரச்சினையைப் போய், பெரிய சமூகப் பிரச்சினையாக விரித்து சிந்திக்கும் என் மூளையை நானே நொந்துக் கொண்டேன்.

அபார்ட்மெண்டில் இருக்கும் வீரதீர இளைஞர்களை கூட்டி, ஒரு தனிப்படை அமைத்து பாம்பினை வெளியேற்றுவதுதான் சரியென்ற முடிவுக்கு வந்தேன். முதலில் அபார்ட்மெண்ட் செக்ரட்டரியை பிடிக்க வேண்டும். அவர் மூலமாகதான் இளைஞர்களை அழைக்க வேண்டும். நேராக ‘பி’ பிலாக்கில் இருக்கும் அவரது ஃப்ளாட்டுக்குப் போனேன்.

“சார்! வீட்டுலே சின்ன ப்ராப்ளம்?”

“வீடே சின்னது. அதுக்குள்ளேயும் ஒரு சின்ன ப்ராப்ளமா? புருஷன் – பொண்டாட்டின்னா அப்பப்போ பிரச்சினை வரத்தான்யா செய்யும். இதுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணுறதா செக்ரட்ரியோட வேலை?” பெரியதாக ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து, தன் மொக்கை ஜோக்குக்கு அவரே குலுங்கி, குலுங்கிச் சிரித்தார்.

பல் கூட விளக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலையில் அலைந்துக் கொண்டிருக்கும் என்னுடைய நிலைமையை நினைத்து எனக்கே சுயப்பச்சாதாபம் ஏற்பட்டது. இப்படி ஒரு தேங்காய் மண்டையோடு கூடிய மாங்காய் மண்டையன் எங்களுக்கு செக்ரட்டரியாக வந்து வாய்த்ததற்கு போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ?

பின்னர் விஷயத்தை சுருக்கமாக கூறினேன். அவசரமாக அவரது புராதன டயரியை எடுத்து பக்கம், பக்கமாக புரட்டி “ஆஹா கிடைச்சிடுச்சி” என்றார்.

“என்ன சார் கிடைச்சிடிச்சி?”

“இது பாம்பு பண்ணை நம்பர். இங்கே போன் போட்டு விஷயத்தைச் சொல்லு. அவங்களே வந்து பாம்பை புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க”

போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். “சார் எங்க வீட்டுக்குள்ளே பாம்பு புகுந்திடிச்சி. அடிக்கறதுக்கு மனசு வரலை. நீங்க வந்து புடிச்சிக்கிட்டு போயிடுவீங்களா?”

எதிர்முனையில் இருந்த வன அலுவலர் மிரட்டும் தொனியில் சொன்னார். “கதவை மூடிட்டு எல்லாரும் வெளியே வந்துடுங்க. பாம்பை கீம்பை யாராவது அடிச்சி கிடிச்சி கொன்னுட்டீங்கன்னு வெச்சிக்கோங்க. உங்க மேலே வனவிலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலே கேஸை போட்டு உள்ளே தள்ளிடுவோம். இன்னும் ஒன் அவர்லே எங்க ஆளு வந்துடுவாரு”

வீட்டு முன்பாக கூடியிருந்த கூட்டத்திடம் இந்த நற்செய்தியைச் சொன்னேன். எல்லோருமே பாம்பை பிடிக்க வரும் மாவீரனுக்காக ஆவலோடு காத்திருந்தோம்.

கொம்பேறி மூக்கன் பெருசு மறுபடியும் பாம்பு குறித்த தனது அறிவினை பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். “நல்ல ஐடியா பண்ணியிருக்கீங்க. அவங்க ஒரு மிஷின் மாதிரி வெச்சிருப்பாங்க. அதை எடுத்தாந்து வூட்டு நடுவுலே ஒரு ரவுண்டு போட்டு, வாசிக்க ஆரம்பிச்சாங்கன்னா, ஒரு ம்யூசிக் வரும். நம்ம ஏரியாவுலே இருக்குற எல்லா பாம்பும் அந்த ரவுண்டுக்குள்ளாற வந்து உட்காந்துடும்”“. ஏதோ இங்கிலீஷ் படத்தில் இப்படியொரு காட்சியை அவர் பார்த்திருந்தாராம்.

‘இயேசு வருகிறார்’ மாதிரி வன அலுவலர் வந்தார். முதுகில் ஒரு கருப்பு பேக் மாட்டியிருந்தார். அந்த பேக்குக்குள்தான் பெருசு சொன்ன இன்ஸ்ட்ரூமெண்ட் இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தோம். “எல்லாம் எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க இல்லே?”

“என்ன எல்லாம் எடுத்துக்கிட்டு வந்திருக்கீங்க?” வடிவேலு பாணியில் திருப்பிக் கேட்டார்.

“இல்லை சார். பாம்பு புடிக்கிற இன்ஸ்ட்ரூமெண்ட்”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை. கையாலேதான் புடிக்கணும். உங்களை மாதிரிதான் நானும். பாம்பு கண்ணுக்கு அகப்பட்டா புடிப்பேன். இல்லேன்னா அவ்ளோதான்” ஒருமாதிரியாக வயிற்றுவலிக்காரர் மாதிரியே பேசினார்.

கதவை மெதுவாக திறந்தார்.

“பாம்பு எவ்ளோ பெருசு?”

பூவை முழம் போடுவது மாதிரி, ரெண்டு மூணு முழம் போட்டுக் காட்டினாள் இளவரசி.

“என்னா கலரு?”

“நாகப்பளம் கலரு”

“சரியா டீடெயில் சொல்லணும். ஏன்னா மூணு, நாலு அடி சைஸு இருந்தாதான் பாம்பு படியெல்லாம் ஏறும். சின்ன பாம்புங்க சமதளத்துலேதான் உலாவும்” ஹாலில் அங்குமிங்குமாக மெதுவாக பார்வையை ஓட்டியபடியே பேசினார்.

“சார்! இந்தியாவுலே நாகப்பாம்புக்கு மட்டும்தான் விஷமிருக்கு. மத்தப் பாம்புகளுக்கு விஷமில்லை. அதனாலே ஆபத்தில்லைன்னு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். நெசம்தானே?” கேட்டேன்.

“அப்படில்லாம் இல்லே சார். நிறைய விஷப்பாம்பு வகையிருக்கு. உங்க வீட்டுக்குள்ளே வந்தது கூட விஷப்பாம்பா இருக்கலாம்” அந்த ஆள் காப்ரா கிளப்புவதிலேயே குறியாக இருந்தார்.

பாம்பு நுழைந்ததாக சொல்லப்பட்ட சோபாவை மெதுவாக நகர்த்தி அடியில் பார்த்தார். சோபாவை மூன்று பேர் உதவியோடு மெதுமெதுவாக மல்லாக்கப் போட்டு ஆராய்ந்தார். ஷெல்ப், பீரோ, டிவி ஸ்டேண்ட், கிச்சன் சிங்க் ஒரு இடம் விடவில்லை. எல்லா இடமும் தீவிரமாக ஆராய்ந்தார். பெட்ரூமில் இருந்த கப்போர்டுகளை கூட விட்டு வைக்கவில்லை. வீட்டையே தலைகீழாக இரண்டு, மூன்று மணி நேரத்தில் புரட்டிப் போட்டார்.

கடைசியாக கைவிரித்தார். “சார்! என் கண்ணுக்கு பாம்பு ஆப்புடலை. உங்க கண்ணுக்கு திரும்பவும் தெரிஞ்சதுன்னா என் செல்போனுக்கு போன் பண்ணுங்க... முடிஞ்சா உங்க ஒய்ஃப், அம்மா, குழந்தைகளை வேற யாராவது சொந்தக்காருங்க வீட்டுலே ஒரு வாரத்துக்கு தங்க வெச்சிடுங்க.. நீங்க மட்டும் வீட்டுலே இருங்க. சுவர் ஓரமாதான் பாம்பு பொதுவா போவும். ஒன் அவருக்கு ஒருமுறை செக் பண்ணிக்கிட்டே இருங்க. பார்த்தீங்கன்னா உடனே போன் அடிங்க” அவர் எதை சொல்லக்கூடாது என்று விரும்பினேனோ, அதையே சொன்னார்.

ஐம்பது ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து அனுப்பி வைத்தேன். அவர் சொன்னபடியே வீட்டில் இருந்த எல்லாரையும் தங்கச்சி வீட்டுக்கு ‘பார்சல்’ செய்துவிட்டு, தனியே வீட்டில் இருக்க ஆரம்பித்தேன். ஆபிஸுக்கும் ஒரு வாரம் லீவு சொன்னேன். ‘வீட்டில் பாம்பு புகுந்தது’ என்கிற காரணத்தைச் சொல்லி, இதுவரை யாருமே லீவ் அப்ளை செய்ததில்லை என்றும், இந்த புதுமையான ஐடியா எனக்கு வந்ததற்காகவும் எம்.டி. ரொம்பவே பாராட்டினார்.

அந்த ஒருவார இரவு கொடுமையானது. பாம்பு பீதியால் தூக்கம் வராமல் நான் பட்ட அவதியை சொல்ல வார்த்தைகள் காணாது. விடியற்காலையில் தூக்கம் வரும். கனவும் வரும். கனவில் ஹன்சிகா வருவதில்லை. மாறாக ‘நீயா’ ஸ்ரீப்ரியா வந்து திகிலூட்டினார். இராம நாராயணன் படக்காட்சிகளாக வந்து துன்புறுத்தியது.

எல்லாமே ஒரு வாரம்தான். பாம்பு வசிப்பதற்கான எந்த அறிகுறியும் என் வீட்டில் இல்லை. எனக்கு இப்போது பாம்பு குறித்த எந்த பயமும் இல்லை. இந்த ஒரு வாரத்தில் வீட்டை முழுக்க நானே பார்த்து, பார்த்து அலங்கரித்தேன் (எங்காவது பாம்பு தட்டுப்படுமா என்று பார்ப்பதுதான் இதன் நிஜமான ஐடியா).

ஒரு நல்ல நாள் பார்த்து, மீண்டும் குடும்பத்தை மீள்குடியேற்றம் செய்தேன். அம்மாவின் ஏற்பாட்டில் ஏதோ நாகயாகம் எல்லாம் நடந்தது. எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் கனவுகளில் ஹன்சிகா வருகிறார். டூயட் பாடுகிறேன்.

“எழுந்திருங்க. சீக்கிரம் எழுந்திருங்க. பாம்பு இன்னும் நம்மளை விட்டு போகலை” தோளை குலுக்கி எழுப்பினாள் இளவரசி. பதறிக்கொண்டு எழுந்தேன்.

“கதவாண்ட இருந்து வளைஞ்சி, நெளிஞ்சி.. சோபாவுக்கு அடியிலே போனதை பார்த்தேன். நல்லா கருப்பா, நீளமா...” அவள் சொல்லிக்கொண்டே போக, “அட தேவுடா. மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா?” என்று வாய்விட்டு முணகிவிட்டு, அந்த பாம்பு புடிக்கும் வனஅலுவலரை போனில் பிடித்தேன்.

“சார். நான் நாகராஜன் பேசறேன்...”

19 அக்டோபர், 2011

யானையை காக்கும் வானம்பாடி!

அம்மா வாழ்க!

அம்மா என்றால் அதிரடி. அதிரடி என்றால் அம்மா. திரும்ப திரும்ப எத்தனை முறைதான் ‘அம்மா வாழ்க’ என்று கோஷம் போட்டுக் கொண்டே இருப்பதோ தெரியவில்லை. வாய்தான் வலிக்கிறது. பேசாமல் ‘தங்கத்தாரகை புரட்சித்தலைவி ஆதிபராசக்தி டாக்டர் அம்மா வாழ்க’ என்று நூற்றியெட்டு முறை சொல்லி, அதை ஒலிப்பதிவுச் செய்து, ஒரு டேப்ரிக்கார்டரை கழுத்தில் மாட்டி, தொடர்ச்சியாக ஒலிக்க வைக்கச் செய்துக்கொண்டே இருக்கலாமோ என்று யோசிக்கிறோம். இன்று காலை ஒரு நாளிதழின் சுவரொட்டியைக் கண்டதிலிருந்தே இந்த சிந்தனை நமக்குள் வலுபெற்று வருகிறது.

“கோயில் யானைகளுக்கு லாரி ஏற பயிற்சி!”

உலகத்திலேயே எந்த அரசியல் தலைவருக்காவது இப்படி ஒரு ஜீவகாருண்ய சிந்தனை தோன்றியிருக்குமா என்பது சந்தேகமே. தலைவர்களுக்கு மனிதாபிமானம்தான் இருக்குமே தவிர, யானாபிமானம் யாருக்கும் இருந்ததில்லை. மகாத்மா தொடங்கி அன்னாஹசாரே வரை கூட இதற்கு உதாரணமாக எடுத்துச் சொல்லலாம். தலைவர்களை விடுங்கள். சிந்தனையாளர்கள் சாக்ரடிஸில் தொடங்கி, நம்மூர் பெரியார் வரை யாருக்குமே தோன்றாதவை புரட்சித்தலைவி அம்மாவுக்கு மட்டும் எப்படித்தான் தோன்றுகிறதோ என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் சிந்தித்தால் அம்மா பயணிக்கும் வேனின் டயர் தடத்தைக்கூட தரையில் குப்புற விழுந்து ஓ.பி.எஸ். கும்பிடுவதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

‘யானை டாக்டர்’ என்று ஜெயமோகனால் கதைதான் எழுத முடிந்தது. யானைகளை பாதுகாப்பது குறித்து ஊடகங்கள் அட்டைப்படக் கட்டுரைதான் எழுத முடிந்தது. நடிகர் ஜெயராமால் ஒரு யானையை வாங்கி வளர்க்கத்தான் முடிந்தது. ஜெமினி சர்க்கஸ் ஓனரால் யானையை வைத்து வித்தைதான் காட்ட முடிந்தது. தேவரால் யானையை வைத்து படம்தான் எடுக்க முடிந்தது. புரட்சித்தலைவரால் யானையோடு பாட்டுபாடி நடிக்கத்தான் முடிந்தது. ப்ளூகிராஸால் ‘யானைகளை பாதுகாப்போம்’ என்று பிரச்சாரம்தான் செய்ய முடிந்தது. ஆனால் யாராலுமே செய்ய முடியாததை செய்பவர்தான் நம் முதல்வர் அம்மா என்பது மேற்கண்ட பத்திரிகைச் செய்தியில் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

‘அம்மாவும், யானைகளும்’ என்கிற தலைப்பில் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற அளவில் அம்மா ஆட்சியின் போதெல்லாம் யானைகளுக்கு சலுகைகளும், பயிற்சிகளும், திட்டங்களும் ஏராளமாக வழங்கப்பட்டு வருகிறது. அம்மாவே தனிப்பட்ட முறையிலும் கூட குருவாயூர் கோயிலுக்கு யானை வாங்கிக் கொடுத்ததை இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் நடைமுறைக்கு வந்திருக்கும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தும் திட்டமெல்லாம் இதுவரை உலகம் காணாதது.

இதையெல்லாம் புரட்சித்தலைவி அம்மா ஓட்டுக்காக செய்கிறார் என்று யாராவது நாக்குமேல் ஓட்டைப்பல்லைப் போட்டு பேசிவிட முடியாது. ஏனென்றால் யானைகளுக்குதான் ஓட்டே இல்லையே?

அம்மாவைத் தொழுவோம். யானைகளைக் காப்போம்.

18 அக்டோபர், 2011

உங்கள் வலைப்பூவை பிரபலப்படுத்த...


நான் பிரபல பதிவராக(?) இருந்த காலத்தில் இந்த டிப்ஸ்களை எழுதினேன். இப்போதைய மாடர்ன் டேமில் பிலாக்கிங்குக்கு இவையெல்லாம் உதவுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து வலைப்பதிவு பெருசுகள் அவ்வப்போது இந்த டிப்ஸ்களை என்னிடம் இப்போதும் நினைவு கூர்வதுண்டு... ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்து, எதிர்பாராவிதமாக ‘லத்திகா’ மாதிரி உங்கள் பிலாக் ஹிட் அடித்தாலும் அடிக்கலாம்.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட் :

டைரக்ட் மார்க்கெட்டிங் :

தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து “அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!” என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவனோ ஒரு கம்முனாட்டி பாராட்டிவிட்டானே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் “ம திரட்டி” மொத்தத்தையும் உங்களது “அருமையாக சொன்னீர்கள்” என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.


டெலி-மார்க்கெட்டிங் :

சில கோயிந்து பதிவர்கள் தங்களது டெம்ப்ளேட்டில் கொடூரமான தங்கள் முகத்தை போட்டு கீழே போன் நம்பரையும் கொடுத்து “நிறைய பேசலாம், வாருங்கள்” என்று போட்டிருப்பார்கள். சும்மா டைம் பாஸுக்கு அவர்களுக்கு போன் செய்து, “உங்க பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்க சிந்தனைகளோடு ஒத்த சிந்தனை கொண்டவன் நான் என்று ஆரம்பியுங்கள். கொஞ்சம் அழுத்தமாகவே உங்கள் வலைப்பூவின் முகவரியையும் சொல்லிவிடுங்கள். உங்களது டெம்ப்ளேட்டிலும் உங்கள் போன் நம்பரை பிரசுரித்தால் எவனாவது வேலையத்தவன் போன் செய்து பேசுவான். இவ்வாறாக உங்கள் வலைப்பூவை தொலைபேசி வாயிலாகவும் மற்றவன் தலையில் கட்டமுடியும்.


அட்வெர்டைஸிங் :


ஒரு பதிவை போட்டுவிட்டு பின்னூட்டங்கள் வராமல் தேவுடு காத்திருப்பதை விட அனானிமஸாக நீங்களே உங்களை பாராட்டி ஒன்று, ரெண்டு பின்னூட்டங்களை போட்டுக் கொள்ளுங்கள். இந்த பின்னூட்டக்கயமை மூலமாக தமிழ்மணத்தின் முகப்பில் எப்போதும் நின்று கொண்டிருக்கலாம். ஏதோ பின்னூட்டம் வந்திருக்கிறதே, விஷயம் இருக்கிற பதிவு தான் போலிருக்கு என்று சில அப்பாவிகள் வந்து மிக சுலபமாக தூண்டிலில் மாட்டிவிடக்கூடும். அப்படியும் வேலைக்கு ஆகவில்லையென்றால் சம்பந்தப்பட்ட பதிவின் லிங்கை காப்பி செய்துகொண்டு, தமிழ்மணத்தில் வந்திருக்கும் எல்லாப் பதிவுகளுக்கு போய் “நல்ல பதிவு” என்று சொல்லிவிட்டு லிங்கை நைசாக சொருகிவிட்டு வந்துவிடுங்கள். டோண்டு சார் போன்றவர்களுக்கு இதுபோன்ற பின்னூட்டங்களை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மக்கள் தொடர்பு :


ஒரே ஒரு ஐடி மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் வலையுலகில் நாக்கு வழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். குறைந்தது பத்து ஐடிக்களாவது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐடியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூடான ஒரு பதிவு போடுங்கள். இன்னொரு ஐடியில் அதே பதிவை கடுமையாக தாக்கி முதலாளித்துவம் பேசுங்கள். இரண்டு ஐடியிலும் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டால் மற்ற பதிவர்கள் இடையே ஒரு சலசலப்பு ஏற்படும். ”என்ன பிரச்சினை?” என்று பிரச்சினைகளுக்கு ஆளாய் பறக்கும் மொக்கை மற்றும் கும்மிப் பதிவர்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். ஆளாளுக்கு அவரவர் சர்க்கிளில் உங்கள் ஐடிக்களை பிரபலப்படுத்துவார்கள். வலையுலகில் மிகப்பிரபலமாக இருக்கும் ‘லக்கிலுக்' மற்றும் ‘இலைக்காரன்' ஐடிக்கள் இப்படித்தான் பிரபலமடைந்ததாக வாத்ஸ்யாயனர் தன்னுடைய காமசூத்ரா புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம்.


ஈவண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் :

பொழப்பத்தவர்கள் சிலர் அவ்வப்போது போண்டாவோ, பஜ்ஜியோ வாங்கிக் கொடுத்து பதிவர் சந்திப்புகள் நடத்துவது வழக்கம். அதுபோலவே சில நாட்களாக சோறு போட்டு பதிவர் பட்டறையும் நடத்துகிறார்கள். இதுபோன்ற ஈவெண்ட்ஸ்களில் தவறாமல் கலந்துகொண்டால் அந்நிகழ்ச்சிகள் குறித்து சிலாகித்து போடப்படும் எல்லாப் பதிவுகளிலும் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். யாருக்கு தெரியும்? நாளைக்கே இதன்மூலமாக நீங்கள் சன்நியூஸிலும், ஆனந்தவிகடனிலும் கூட பேட்டி தர வாய்ப்பிருக்கிறது.


பிராண்டிங் :

இதை 'பிறாண்டிங்' என்று படிக்கவேண்டாம், Branding என்று படியுங்கள். படிக்கும் எல்லாப் பதிவர்களுக்கும் ”நல்ல பதிவு, சூப்பர்” என்று சொம்படித்துக் கொண்டிருந்தால் ‘நடுநிலை பதிவர்' என்ற பிராண்டிங் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அவ்வாறில்லாமல் டோண்டு சாரையோ, இட்லிவடையையோ எதிர்த்து ஒரு பதிவு போட்டாலோ அல்லது பின்னூட்டம் போட்டாலோ “பார்ப்பனீய எதிர்ப்பாளர்” என்ற பிராண்டிங் கிடைக்கும். அதுவும் வேண்டாமா? ‘கலைஞர் கருணாநிதி' வலைப்பூவுக்கு போய் கலைஞரை திட்டி ஒரு சின்ன பின்னூட்டம் போடுங்கள். உடனடியாக ‘பார்ப்பன அடிவருடி' பிராண்டிங் கிடைக்கும். இது எதுவுமே வேண்டாமென்றால் உங்கள் பதிவுகளில் நல்ல பிள்ளையாக ‘நான் பார்த்த முதல் படம்', ‘நான் சைட்டு அடித்த பிகர்', ‘நானும் பினாத்தல் சுரேஷும்' என்று பதிவு போட்டுக் கொண்டிருங்கள். சிறந்த மொக்கை மற்றும் கும்மிப் பதிவராக பிராண்டிங் செய்யப்படுவீர்கள்.

அப்படியில்லையேல் ஒம்மா, த்தா, யோனி போன்ற வார்த்தைகளை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் ஆங்காங்கே அள்ளித் தெளியுங்கள். உயிர்மை, கவிதாச்சரண், காலச்சுவடு ரேஞ்சு புத்தகங்களில் வரும் கட்டுரைகளில் சில பத்திகளை மனப்பாடம் செய்து வார்த்தைகளை ஆங்காங்கே மாற்றிப் போட்டு எல்லா இடத்திலும் கும்மியடியுங்கள். ‘பின்நவீனத்துவ' பிராண்டிங் நிச்சயம் கிடைக்கும்.


கஸ்டமர் Feedback :


உங்கள் பதிவுகள் சூப்பராக இருந்தாலும் சரி, மொக்கையாக இருந்தாலும் சரி. வந்து பின்னூட்டம் போட்டு உங்களை போற்றி புகழ்ந்து கொண்டிருக்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கப் போகிறது. ஆகையால் தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையிலும், நமக்கு நாமே திட்டத்திலுமாக சேர்ந்து வெவ்வேறு பெயர்களில் நீங்களே உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுக் கொள்ளுங்கள். பத்து பின்னூட்டங்கள் நல்ல பதிவு என்ற ரேஞ்சிலும் இடையிடையே ஒன்றிரண்டு மோசமான பதிவு, தட்டையான சிந்தனை என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கமெண்டுகள் வருவதாக காட்டிக் கொண்டால் வலையுலகில் கொஞ்சம் கெத்தாக வலம் வரமுடியும்.

ஓக்கே, ரொம்ப போரடிக்குது இல்லே. Bye for now.

17 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல்


ஓட்டு போடும் வயதுக்கு முன்பிருந்தே, எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி சார்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அவ்வகையில் பார்க்கப்போனால் மிக அமைதியான, ஓரளவு நியாயமான தேர்தலாக (இந்த நிமிடம் வரை) இத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சி அடையாளத்தைத் துறந்து முதன்முறை காமன்மேனாக வாக்களிக்கிறேன்.

பாதுகாப்புக்கு லோக்கல் போலிஸார் இல்லாததால், அவர்கள் உதவியோடு அரசியல்வாதிகளின் ’அலும்பு’ நடக்காத தேர்தல் இது. ஓட்டு போட வருபவர்களை “சார்” “மேடம்” என்று போலிஸார் ‘மரியாதையோடு’ விளிப்பது இதுவரை தமிழகம் காணாத அதிசயம். போதாக்குறைக்கு நட்சத்திர ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் மாதிரி காக்கிச்சட்டை முரட்டு உருவங்கள் புன்னகைப்பது இன்ப அதிர்ச்சி.

எங்கள் ஏரியாவில் கட்சியினர் சின்னம் போட்டு பூத்ஸ்லிப் வழங்க தடை. அதிமுக மட்டுமே இரட்டை இலை போட்ட பூத்ஸ்லிப் வழங்கிவிட்டு சென்றார்கள். தேர்தல் கமிஷனே களமிறங்கி வழங்கிய பூத்ஸ்லிப்தான் அனைவருக்கும் கிடைத்தது.

”இளைஞர்கள் எங்கள் பக்கம்தான்!” என்று அறைகூவல் விடுக்கும் வை.கோபாலசாமியின் மதிமுகவுக்கு பூத் ஏஜெண்ட் கூட எங்கள் வார்டில் இல்லை. மேயர் வேட்பாளர் பட்டியலில் ‘தாமரை’ இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி.

கடந்த உள்ளாட்சி வரை பஞ்சாயத்தாக இருந்த என் பகுதி, இம்முறை மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது, உள்ளாட்சியில் ஓட்டுப்பதிவு கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். ஆனால் கலாட்டா கூடுதலாக நடக்கும். ஆச்சரியமாக இம்முறை இரண்டுமே நேரெதிராக நடந்தது. இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று வாக்களித்தேன்.

வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர்கள் குறைவு என்பதால், அதற்கு ஒரே ஒரு மெஷின்தான். மேயர் பதவிக்கு ஏகப்பட்ட வேட்பாளர்கள் என்பதால் இரண்டு மெஷின் வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது மெஷினில் முதல் பெயர் ‘சைதை சா. துரைசாமி’. ஆனால் இரண்டாவது மெஷினை முதலில் வைத்து, வாக்காளர் பார்க்கும் முதல் பெயரே துரைசாமியாக வருமாறு அமைத்த தேர்தல் கமிஷனின் நடுநிலையை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.

வரிசையில் நின்றுக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு சூப்பர் காட்சி.

வெள்ளைச்சட்டை, கருப்புப் பேண்டோடு அந்த இளைஞர் வேகமாக நுழைந்தபோது, இடைமறித்தார் ஒரு போலிஸ் அதிகாரி.

“நான் கேண்டிடேட் சார்”

“அடிங்.. இது லேடீஸ் கேண்டிடேட் வார்டு. நீ எப்படி கேண்டிடேட்டா இருக்க முடியும்?”

“சாரி சார். நான் கேண்டிட்டோட ஹஸ்பண்ட்”

தேமுதிக அப்ரண்டிஸூகளா.. நீங்க இன்னும் நிறைய அரசியல் பாடம் படிக்கணும் :-)

14 அக்டோபர், 2011

தள்ளு தள்ளு

ஃபேஸ்புக், பஸ் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்களில் அடிக்கடி ‘தள்ளு தள்ளு’ தலைவர் என்று நாம் குறிப்பிடும்போது, அவர் யாரென்று புதுசு புதுசாக தினுசு தினுசாக யாராவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தத் தொல்லையில் இருந்து விடுபட தெளிவான விளக்கம் ஒன்றினை அளிக்க வேண்டியது நம் கடமையாகிறது.

ஆத்திகரோ, நாத்திகரோ நீங்கள் திருப்பதி சென்றிருந்தால் இந்த வசனத்தை கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. ’ஜருகண்டி, ஜருகண்டி’.

கிட்டத்தட்ட ‘ஜருகண்டி, ஜருகண்டி’ வாய்ஸ் மாடுலேஷனிலேயே கடந்த இரண்டு வருடங்களாக, சீமான் வரும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது தொண்டர்கள் குரல் கொடுத்துக்கொண்டே வருவார்கள். “தள்ளு தள்ளு” என்று வேகமாக குரல் கொடுப்பதோடு இல்லாமல், கூட்டத்தை கையால் இருபுறமாக தள்ளிவிட்டுக் கொண்டேவும் வருவார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல சீமான் வரும் இடமெல்லாம் இந்த ‘தள்ளு தள்ளு’ சத்தம் கேட்பது என்பது வழக்கமாகி போய்விட்டது. ஆளே இல்லாத டீக்கடைக்கு சீமான் வந்தாலும் ‘தள்ளு தள்ளு’ பந்தாவுக்கு மட்டும் எந்த குறைச்சலுமில்லை.

எனவேதான் தமிழுணர்வு வாய்த்த புலவர் பெருமக்கள் சிலர் அவரை ‘தள்ளு கொண்டான்’ என்று புகழ்ந்துரைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களோ இப்போதெல்லாம் வாழ்க கோஷம் போடுவதற்கு பதிலாக விண்ணதிர ‘தள்ளு தள்ளு’ கோஷம் போடுகிறார்கள். அரசியல் மட்டத்தில் ‘தள்ளு தள்ளு தலைவர்’ என்று அறியப்படுகிறார்.

மற்றப்படி இந்தப் பட்டத்தின் பின்னால் ஆபாசமான காரணம் எதுவுமில்லையென்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றோம்.

13 அக்டோபர், 2011

படித்தவர்களும், அரசியலும்!

அடிக்கடி இல்லாவிட்டாலும், தேர்தல் நேரங்களில் மட்டுமாவது இந்த கோஷம் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனிக்க முடிகிறது. “படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்”. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக இதென்ன அபத்தம் என்று குழம்பிப் போகிறோம். இப்போது என்னவோ அரசியலில் இருப்பவர்கள் அத்தனை பேரும் கைநாட்டுகள் என்பதுபோல ஒரு பொதுப்புத்தி மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக so called படித்தவர்களாலும் ஊடகங்களாலும் திணிக்கப்படுவது சர்வநிச்சயமாக ஜனநாயகத்தின் பண்புக்கு எதிரானது.

அதிலும் குறிப்பாக இந்த ஐஐடி, ஐஐஎம் பீட்டர் கோஷ்டிகளின் தொல்லை கொஞ்சமும் தாங்கமுடியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இட்லிக்கடை சரத்பாபுவை வைத்து கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது யாரோ கொட்டிவாக்கம் வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளராம். அதென்னவோ தெரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் மட்டுமே இவர்களுக்கு அரசியலில் குதிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆர்வம் வந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் மக்களை கொசு கடித்தாலென்ன, சாக்கடை ஓடினால் என்ன? ஒரு சாலை மறியல், ஒரு கோரிக்கை மனு.. ஏதாச்சும் உண்டா? பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டும்தான் மக்களுக்காக இந்த படித்தவர்கள் போராடுவார்களா?

‘இல்லை, நாங்களும் மக்களுக்காக போராடியிருக்கிறோம்’ என்று இந்த படித்தவர்கள் சொல்வார்களேயானால், அதிகபட்சம் ரத்ததானம் செய்திருப்பார்கள். மரம் நட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் ஏதோ ஒரு என்.ஜி.ஓ.வை நடத்திக் கொண்டு 30% சேவை, 70% லாபம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, அடிமட்டத்தில் இருந்து மக்களுக்கு அறிமுகமாகி படிப்படியாக மேலே வரும் ஒருவனுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமானது. பள்ளிப் பகுதியிலும், சமய வழிபாடுகள் நடக்கும் பகுதியிலும் இருக்கும் டாஸ்மாக்கை மூடவைக்க போராடி, மக்களைக் கூட்டி மறியல் செய்து, ரவுடிகளால் தாக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டு வெற்றி கண்ட குறைந்தபட்ச அனுபவம் கூட இவர்களுக்கு இருப்பதில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் ஐ.ஐ.எம். பட்டதாரி சரத்பாபு போட்டியிட்டபோது அதை கடுமையாக எதிர்த்தேன். ஏனெனில் அவர் அத்தொகுதியில் தீர்த்துவைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரச்சினைகள்தான். பிறந்ததிலிருந்தே தென்சென்னையில் வாழும் எனக்கு சரத்பாபுவை விடவே அதிகம் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும். உதாரணத்துக்கு அவர் தீர்த்து வைப்பதாக சொன்ன வேளச்சேரி – மடிப்பாக்கம் – பள்ளிக்கரணை பகுதி வெள்ளநீர் வடிகால். புவியியல் ரீதியாக இப்பிரச்சினையை தீர்க்கும் வாய்ப்புகள் இல்லை என்று எப்போதோ நிபுணர்கள் அறிவித்துவிட்டார்கள். ஏனெனில் சென்னையிலேயே கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதி இது. இங்கே பாதாள சாக்கடை கொண்டுவரும் திட்டமேகூட இந்த புவியியல் அமைப்பால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. +2 ஃபெயில் ஆன எனக்கு தெரியும் இந்தப் பிரச்சினை கூட, ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு வந்தவருக்கு தெரியவில்லை என்றால், அவருக்கு ஏன் நான் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி உளற வைக்க வேண்டும்? மேலும் அவர் கொடுத்த பல வாக்குறுதிகள் வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர் கொடுக்க வேண்டிய வாக்குறுதிகள்.

இப்படியிருந்தும் so called படித்தவர்கள் பலரும் புல்லரித்துப் போய் சரத்பாபுவுக்கு வாக்குப் போடுங்கள் என்று வாய்வழிப் பிரச்சாரம் செய்ததையும், ஊடகங்களெல்லாம் ஏதோ சென்னை மக்களை காக்க வந்த மாகானுபவர் என்றும் பரப்புரை செய்ததையும் விட பெரிய கேலிக்கூத்து வேறொன்றும் இருந்துவிட முடியாது. அவருடைய இட்லிக்கடைகள் மூலமாக ஏதோ 30-40 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்கிறார்கள். வருமான வரித்துறை இதை கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ந்து, உண்மையெனில் போதுமான வருமான வரியை அவர் செலுத்தியிருக்கிறாரா என்று தெளிவுப்படுத்த வேண்டும். ஏனெனில் நான் பார்த்த Food King Outletகளை விடவும் முனியாண்டி விலாஸ்கள் கொஞ்சம் சுமாரானவையே. சரத்பாபு பற்றி வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிம்பம் தவறானது எனில் தவறான தகவல்களை மக்களுக்கு தருவதாக சொல்லி, அவர் மீது இதுவரை அவரை ஆதரித்து வந்த படித்தவர்களே கேஸ் போட வேண்டும். அப்படி அவருக்கு நிஜமாகவே வருமானம் வரும் பட்சத்தில், அவர் ஏன் கல்லூரிகளில் தன்முனைப்புப் பேச்சுகளை பேசி 25000, 30000 என்று ஃபீஸ் வாங்கப் போகிறார்? (எனக்குத் தெரிந்து இப்போது அவருடைய மேஜர் வருமானம் இதுதான்) ஓசியிலேயே மாணவர்களுக்கு ‘ஊக்கம்’ கொடுப்பாரே? மக்கள்/சமூகம் குறித்த சரத்பாபுவின் புரிதல் எவ்வளவு மொக்கையானது என்பதை, அவர் பங்கேற்ற ‘நீயா நானா’ டிவி நிகழ்ச்சி மூலமாக அப்பட்டமாக பறைசாற்றியிருக்கிறார்.

ஐ.ஐ.எம் / ஐ.ஐ.டி ரேஞ்சுக்கு படித்தவர்களிடம் நாம் காணும் பிரச்சினை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தை நிலவரம் அவர்களுக்கு தெரியும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வரவுசெலவு அவர்களுக்கு அத்துபடி. ஆனால் பொண்டாட்டிக்கு வாங்கித்தர வேண்டிய மல்லிகைப்பூ முழம் பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் ஏகத்துக்கும் படித்த மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும் ஏழை என்பதற்கு உச்சவரம்பு ஒரு நாளைக்கு ரூ.32/- வருமானம் என்று நிர்ணயிப்பார்களா?

படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கார்ப்பரேட் துறைகளில் நடைபெறும் சுரண்டலுக்கும், எந்த படிக்காதவனுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

படித்தவர்களும் அரசியலுக்கு வரலாம் என்கிற வாதத்தை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுவது பாசிஸம். அப்படியெனில் அன்னா ஹசாரே க்ரூப்பு மட்டும்தான் அரசியலில் இருக்கமுடியும்.

இப்போதே கூட சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்தான். ஏராளமான மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பொருளாதாரம் படித்தவர்களும் நிரம்பிய அவைகள்தான் இவை. எனவேதான் சொல்லுகிறோம். படித்தவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் எல்லாம் மாறிவிடும் என்பது வெறும் யூகம். படித்தவர்களால்தான் மாற்றம் சாத்தியம் என்பது மாயை. படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?

12 அக்டோபர், 2011

விளம்பரம்

டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.

வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.

இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறோம், பொறாமை கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.

ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.

ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.

ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.

மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளானது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறோம்.

அடுத்து நாம் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.

கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு மோசமாக விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.

அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

11 அக்டோபர், 2011

உதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்!

ஏறுக்கு மாறாக பேசுவது என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

‘தமிழ் வலைப்பதிவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?’ என்று கலந்தாலோசிக்க முயற்சித்த பாவத்துக்காக indiblogger என்கிற அமைப்பினை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில வலைப்பதிவர்கள். இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், நாம் பார்த்துத் தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்துக்காக இந்தப் பதிவினை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

indiblogger.in என்பது இந்திய வலைப்பதிவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டும் ஒரு அமைப்பு. bloggingஐ passion ஆக கொண்ட வலைப்பதிவர்கள் சிலர், லாபநோக்கமின்றி தொடங்கிய இணைய அமைப்பு. ஆங்கிலம் மட்டுமன்றி, இந்திய மொழிகளில் வலைப்பதியும் யாரும் இந்த இணையத்தளத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். ஓரளவுக்கு நம்முடைய ‘தமிழ்மணம்’ திரட்டி மாதிரி என்றும் சொல்லலாம். ஆனால் தமிழ்மணத்தை விட சில கூடுதல் செயல்பாடுகள் கொண்டவர்கள். இந்திய நகரங்களில் ஆங்காங்கே அவ்வப்போது வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள். இந்தச் சந்திப்புகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான, மொக்கைப்பூர்வமான விஷயங்கள் நிகழும்.

கடந்த ஆண்டு சென்னையில் இண்டி பிளாக்கர் சந்திப்பு நடந்தபோது பாலபாரதி, உண்மைத்தமிழன் உள்ளிட்ட சீனியர் பதிவர்களோடு பல ஜூனியர் பதிவர்களும் கலந்துகொண்டோம். ஏழெட்டு தமிழ் வலைப்பதிவர்களை கண்டதுமே இண்டிபிளாக்கர் டீம் மகிழ்ச்சி அடைந்தது. தமிழின் மூத்த வலைப்பதிவரான பாலபாரதிக்கு பேச மேடை அமைத்துத் தந்து கவுரவித்தது. தமிழ் வலைப்பதிவுகளில் நடைபெறும் முயற்சிகள் குறித்து விரிவாக ‘தமிழிலேயே’ பேசினார் பாலபாரதி. ஆங்கில மற்றும் இந்தி வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் விளம்பர ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான வசதிகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைத்தால், இம்முயற்சிகள் மேலும் பரவலாகும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதியதாக வலைப்பதிய வரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு, போதுமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இல்லையென்றும், இவையெல்லாம் கிடைக்கும் பட்சத்தில் தமிழில் வலைபதிபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்றும் அவர் யோசனை சொன்னார்.

இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் வலைப்பதிவர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. “How we can help tamil bloggers?” என்று தனியாக ஒரு அமர்வினை இச்சந்திப்பில் இண்டிபிளாக்கர் அமைப்பினர் முன்னெடுத்ததற்கு காரணம், கடந்தாண்டு பாலபாரதி சந்திப்பில் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளின் விளைவே என்று கருதுகிறேன்.

“help” என்கிற சொல்லினை ‘உதவி’ என்பதாகவே புரிந்துக் கொள்கிறேன். “May I help you?” என்று யாராவது நம்மைப் பார்த்துக் கேட்கும் பட்சத்தில், “Yes, Please” என்று அங்கீகரிப்பதோ அல்லது “No, Thanks” என்று மறுதலிப்பதோதான் நாகரிகம். “எனக்கு உதவ நீ யாருடா?” என்று கேட்பது அநாகரிகம். ஒருவன் உதவ நினைப்பதை தவறு என்று சொல்லுவது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. தன்முனைப்புக்காக ஏதாவது ஸ்டண்ட் அடித்துவிட்டு, அதற்கு ‘தமிழ், தமிழன், தன்மானம்’ சாயம் பூசுவது சர்வநிச்சயமாக போலி தமிழுணர்வு, போலி சுயமரியாதை.

“ஈழத்தமிழர்களுக்கு உதவுவோம்” என்று அரசியல்வாதிகளோ, தமிழுணர்வாளர்களோ சொன்னால் அல்லது வலைப்பதிவர்கள் பதிவு போட்டால், அது ஈழத்தமிழர்களை அவமதிப்பது ஆகுமா? அவமதிப்பு என்று கருதுவதுதான் உணர்வினை கொச்சைப்படுத்தும் செயல்.

உதவுகிறார்களோ இல்லையா என்பது வேறு விஷயம். உதவி தேவைப்படுபவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். வேண்டாமென்பவர்கள் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் யாரும் ‘உதவுகிறோம்’ என்று சொல்வதையே ஆட்சேபித்து, ‘ஆ, ஊ’வென்று கும்மியடிப்பது அக்மார்க் பாசிஸம்.

‘உடான்ஸ்’ என்று ஒரு திரட்டி நடத்தப்படுகிறது? தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்வெளி என்று ஏற்கனவே ஏராளமான திரட்டிகள் இருக்கும்போது, புதியதாக இந்த ‘திரட்டி’யை யார் கேட்டது? இந்த திரட்டி இப்போது புதியதாக ஏதோ ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவர்களுக்கு சிறுகதையே எழுதத் தெரியாதா? இவர்கள் போட்டோவோடு Hint கொடுத்துதான் சிறுகதை எழுத வேண்டுமா? அவ்வளவு கற்பனை வறட்சியிலா தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்? இந்த சிறுகதைப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களின் புனைவாற்றலை கொச்சைப்படுத்துகிறது. உடான்ஸ் இந்தியிலோ, வங்காளத்திலோ இப்படி ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துமா? – இப்படியெல்லாம் கேள்விகளை அடுக்கினால் இது எவ்வளவு அபத்தம், எவ்வளவு முட்டாள்த்தனம்?

கடந்த ஆண்டு கூட ஏதோ ‘பதிவர் சங்கம்’ அது இதுவென்று பேச்சு அடிபட்டது. எத்தனை பதிவர்களை கலந்தாலோசித்து அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது? ‘தேவை’யென்று நினைத்த ஒரு சிலர் பேசி வைத்துக்கொண்டுதானே அம்முயற்சியை மேற்கொண்டோம். அம்மாதிரி இண்டிபிளாக்கர் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஏதோ உதவ முன்வந்தது எப்படி தமிழர்களை, தமிழை கொச்சைப்படுத்துவதாகும்?

ஏதோ உரிமையை கேட்பதாக பாவனை செய்துக்கொண்டு, நடந்து முடிந்த இண்டிபிளாக்கர் சந்திப்பில் நடந்தது வெற்று கலாட்டா. இதன் மூலமாக அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் மத்தியில், தமிழ் வலைப்பதிவாளர்கள் கோமாளிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இவ்வளவு கலாட்டா நடக்கும்போதும், இண்டிபிளாக்கர் அமைப்பாளர்கள் மிக அமைதியாகவே, பெருந்தன்மையாகவே இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். நல்லவேளையாக ‘எல்லோரும் வெளியே போங்க’ என்று ‘நிஜமான அவமானத்தை’ தமிழ் வலைப்பதிவர்களுக்கு நிகழ்த்திவிடவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான சமாச்சாரம்.

அங்கு கலந்துகொண்ட தமிழ் வலைப்பதிவர்களுக்கு தான் மட்டுமே அத்தாரிட்டி என்ற தோற்றத்தை உருவாக்கி கலாட்டா செய்த பதிவரின் விளம்பர வெறியை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறோம்.

கூகிள் ஆட்சென்ஸில் ஏதோ தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், அந்த டெக்னிக்கை சக பதிவர்களுக்கே சொல்லிக் கொடுக்காத அற்பத்தனத்தோடு இருக்கையில், எவனோ ஒருவன் எப்படியோ உதவ வருகிறேன் எனும்போது, அதையும் தடுத்து நிறுத்துவது அயோக்கியத்தனம் இல்லையா? உதாரணத்துக்கு ஜாக்கிசேகரை சொல்லுவோம். தமிழின் நெ.1 பதிவராக இப்போது இருக்கும் நிலையிலும், போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இண்டிபிளாக்கர் உதவுவதில் யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்கமுடியும்?

மேலும் தன்மானம் இழப்பு, சோறு போடுதல் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. ஜெண்டில்மேன்ஸ்... அங்கு சென்ற எல்லோருமே ‘கலாட்டாவுக்குப் பிறகும்’, அவர்கள் கொடுத்த டீ-ஷர்ட்டை க்யூவில் நின்று வாங்கி வந்தோம் என்பதை நினைவுபடுத்தவே விரும்புகிறேன். செஞ்சோற்றுக் கடனுக்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். அதற்காக அங்கே நாகரிகமாக அமைதி காத்த மற்ற வலைப்பதிவர்களை சிலர் கொச்சைப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் யாராவது மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மொக்கை கமெண்டுகள் அடிப்பது, குறுக்கீடு செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சமகால தமிழ் வலைப்பதிவு கலாச்சாரம் ஜெகஜ்ஜோதியாகவே இருக்கிறது. இதன் நீட்சியாகதான் இண்டிபிளாக்கர் சந்திப்பில் சலசலப்பும் நடந்தது.

- இந்த கூட்டறிக்கை அதிஷா மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோரால் தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு கையளிக்கப்படுகிறது -

கோலம்


எனக்கு நினைவு தெரிந்தபோது எங்கள் தெருவில் கோலம் போட ஒரு கொலைவெறி டீமே உருவாகியிருந்தது. அம்மா தலைமையில் பக்கத்து வீட்டு பூசாரி ஆயா, பெரியம்மா, டீவி வீட்டுக்காரம்மா, கடைசி வீட்டு காஞ்சனா அக்கா என்று கோல வீராங்கனைகள் ஃபுல் ஃபிக்கப்பில் இருந்த காலம் அது. எங்கள் தெருவில் அப்போது பண்ணிரெண்டு அல்லது பதினைந்து வீடுகள் இருந்திருக்கலாம். ஒரு வீட்டில் போட்ட கோலம் இன்னொரு வீட்டில் ரிப்பீட்டு ஆகிவிடக்கூடாது என்பதற்காக முதல் நாள் இரவு டிஸ்கஷன் நடத்தி அவரவர் போட வேண்டிய கோலத்தை சீரியஸாக முடிவு செய்துவைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டிலும், காஞ்சனா அக்கா வீட்டிலும் தான் கோல நோட்டுபுக்கு இருக்கும். மற்றவர்கள் வீட்டிலெல்லாம் ப்ரிண்ட் செய்யப்பட்ட புக் தான் இருந்தது. அம்மாவும், காஞ்சனா அக்காவும் சிரத்தையாக பத்திரிகைகளில் வரும் கோலங்களையெல்லாம் தங்கள் நோட்டுகளில் வரைந்து வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கோல கலெக்‌ஷன் இருந்தது. மார்கழி மாதம் இந்த நோட்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் வந்துவிடும். அட்வான்ஸ் புக்கிங் செய்து அக்கம்பக்கங்களில் இரவல் வாங்கிச் செல்வார்கள்.

அப்போதெல்லாம் எல்லார் வீட்டு வாசலிலும் சாணம் தெளித்து (சிலர் வீடுகளில் மொழ மொழவென்று மெழுகி) அரிசு மாவுடன் சேர்க்கப்பட்ட கோலம் போடப்படும். கோலத்தில் அரிசி மாவு இருப்பதால் பகல் வேளைகளில் வாசலெல்லாம் சிகப்பு எறும்புகளாக காணப்படும். கோலமாவில் அரிசி மாவு சேர்ப்பதற்கு காரணம் புண்ணியம் என்று அம்மா சொல்வார். அதாவது கோலத்தில் இருக்கும் அரிசி மாவை உண்டு எறும்புகள் பசியாறுமாம். எனக்குத் தெரிந்து வெறும் கோலமாவில் கோலம் போட்டால் கை விரல்கள் எரியும். மாவு கொஞ்சம் சாஃப்டாக இருக்கவே அரிசிமாவு சேர்க்கிறார்கள்.

மார்கழி மாதம் மட்டும் வண்ணக்கோலம், மற்ற மாதங்களில் வெள்ளை மட்டும் தான். மார்கழி மாதம் சாணத்தை நடுவில் வைத்து பூசணிப்பூ வைக்கும் வழக்கம் இருந்தது. பூசணிப்பூவுக்கு மடிப்பாக்கத்தில் பஞ்சமே இல்லை. இப்போது பூசணிக்கொடியை காண்பது அரிதாகிவிட்டது.

அம்மா கோலம் போடும்போது நான் உதவியது உண்டு. அதை உதவி என்று சொல்லமுடியாது, உபத்திரவம் என்பது தான் சரி. அம்மா ஒரு பக்கமாக கோலம் போட்டுக் கொண்டு வரும்போது நான் இன்னொரு பக்கமாக கோலப்பொடியை வைத்து கிறுக்குவேன். நான் உருவாக்கிய கிறுக்கலையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் கோலம் போட அம்மாவுக்கு கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ எக்ஸ்ட்ரா பிடிக்கும். பொதுவாக அம்மா கோலம் போட்டால் அப்போதெல்லாம் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு பெரிய கோலம். அவ்வளவு பெரிய கோலம் போடுமளவுக்கு பெரிய வாசலும் இருந்தது.

எதற்கெடுத்தாலும் என் முதுகில் நாலு சாத்து சாத்தும் அம்மா, கோலத்தில் நான் விளையாடியதற்கு மட்டும் என்றுமே கோபப்பட்டதில்லை என்பது இதுவரை ஆச்சரியம் தான். அந்தக்காலத்திலிருந்தே இன்றுவரை ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து கோலம் போடுவது அம்மாவின் வழக்கம். சூரியன் உதிப்பதற்கு முன்பாக கோலம் போட்டுவிட வேண்டும் என்பது அவரது பர்மணெண்ட் டார்கெட். இப்போதெல்லாம் முறைவாசல் சிஸ்டம் வந்துவிட்டது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை தான் எங்கள் முறை. எங்கள் முறை வரும்போது மட்டும் அம்மா நாலரை மணிக்கே எழுந்து கோலம் போட்டுவிடுகிறார். அந்தக் காலத்தில் போட்டது போல பெரிய கோலம் இல்லை. அதில் நான்கில் ஒரு பங்கு போடுமளவுக்கு தான் இப்போது வாசல் இருக்கிறது. தெளிப்பதற்கு சாணியும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

கோலங்களிலேயே ரொம்பவும் கஷ்டமான கோலம் தேர்க்கோலம் என்று நினைக்கிறேன். தேர்க்கோலத்தில் ஏகப்பட்ட சங்கிலி இருக்கும். புள்ளிகளும் கோக்கு மாக்காக வைக்க வேண்டும். நினைவாற்றல் குறைந்தவர்களால் பெரிய தேர்க்கோலங்கள் போடமுடியாது. தேர்க்கோலம் பட்டையாகவும் போடக்கூடாது. மெலிதாக போட்டால் தான் லுக்கும், ஃபீலும் கிடைக்கும். தேர்க்கோலங்களுக்கு பொதுவாக வண்ணம் தீட்டமாட்டார்கள். இருப்பதிலேயே சுலபமான கோலம் பொங்கலுக்கு போடும் பானை கோலம் போலிருக்கிறது. கோலம் சுமாராக அமைந்துவிட்டாலும், வண்ணத்தில் அசத்தி விடலாம்.

கோலங்களுக்கு மதம் கிடையாது. மார்கழி மாதத்தில் கிறிஸ்துமசும், நியூ இயரும் வரும். எல்லார் வீட்டிலும் மெர்ரி கிறிஸ்துமஸ், ஹேப்பி நியூ இயர் என்று ஆங்கிலத்தில் வாழ்த்துகள் எழுதப்பட்டிருக்கும். காஞ்சனா அக்கா மட்டுமே கிறிஸ்துமஸ் தாத்தாவை தத்ரூபமாக கோலமாக்குவார். மற்ற வீடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடு படத்தில் வரும் தாத்தா மாதிரி சோணங்கியாக இருப்பார். கேரளா ஸ்டைலில் பூக்கோலம் போடுவதும் காஞ்சனா அக்காவின் ஸ்பெஷாலிட்டி. வீட்டுக்கு அருகில் கிடைக்கும் ஊதாநிற காட்டுப்பூக்களை வைத்தே கோலத்தை ஒப்பேற்றிவிடுவார்.

வீட்டு வாசலில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் கோலம் போடும் பழக்கம் அம்மாவுக்கு இருந்தது. சிமெண்ட் தரையில் வெள்ளை மற்றும் சிகப்பு பெயிண்டில் சிரத்தையாக கோலம் போடுவார். வீட்டின் ஓரங்களில் காவிக்கலர் அடித்து வைத்திருப்பார். வாசற்படியில் நிறைய பேர் பெயிண்டால் மஞ்சள் வண்ணம் அடித்து சிகப்பு பொட்டு வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒரிஜினல் மஞ்சளும், குங்குமமும் வாசற்படியில் வைத்தால் தான் நிம்மதி. இன்றும் இது மட்டும் தொடருகிறது. வீட்டில் மொசைக்கும், டைல்ஸும் வந்துவிட்டதால் வீட்டுக்குள் கோலம் போட முடியவில்லை என்பது அம்மாவுக்கு ஒரு குறைதான். அதனால் இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் ஹாலில் ஒரு தாம்பாளத் தட்டில் நீர்நிரப்பி தாமரை உள்ளிட்ட பூக்களை வைத்து அலங்கரித்து கோலமாவு இல்லாமலேயே நீர்க்கோலம் போடுகிறார்.

அம்மா வெளியே எங்காவது போயிருந்தால் நானும் கூட சிறுவயதில் கோலம் போடுவேன். வாசற்படிக்கு முன்னால் மட்டும் ஒரு நாளைக்கு இரு கோலங்கள். காலையில் ஒன்று, மாலையில் விளக்கு வைப்பதற்கு முன்பாக இன்னொன்று. எனக்கு தெரிந்தது ஸ்டார் கோலம் தான். புள்ளி வைக்காமலேயே சுலபமாக போடலாம். மாலை ஐந்து, ஐந்தரை மணியளவில் தங்கச்சி பாப்பாவுக்கு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு நான் பலமுறை போட்ட அந்த ஒரே ஒரு மாடல் அவசரக் கோலத்தை அம்மாவும், அப்பாவும் என்றுமே பாராட்டத் தவறியதில்லை.

முன்பெல்லாம் யார் வீட்டிலாவது கோலம் போடப்பட்டிருந்தால் சில நொடிகள் நின்று கோலத்தை ரசித்துவிட்டு செல்பவர்களை பார்க்க முடிந்தது. சைக்கிளிலோ, நடந்தோ செல்பவர்கள் கோலம் அழிந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள். இப்போது கோலத்தை ரசிக்க யாருக்கும் நேரமில்லை. கோலம் அழிவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை. கோலம் போட மண் தரை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. கான்கிரீட் தரையாக இருப்பதால் மிக லேசாக தண்ணீர் தெளித்து சின்னதாக ஸ்டார் கோலம் போடுகிறார்கள். அதன் ஆயுளே அதிகபட்சம் பத்து நிமிடம் தான்.

மயிலாப்பூரில் கோலப்போட்டி நடக்கும்போது பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது. வீடுகளில் கோலம் போட முடியாத மாமிகள் அந்நேரத்தில் ஒட்டுமொத்தமாக படையெடுத்து தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள். வடக்கு மாடவீதியில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் போடுவார் பாருங்கள் கோலம். என்ன வேகம்? என்ன நேர்த்தி? என்ன அழகு?

10 அக்டோபர், 2011

சதுரங்கம்

இத்தனை வருடங்கள் கழித்து வெளியாகியிருந்தாலும் ‘சதுரங்கம்’ காண விரும்பியதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று : அறிவுமதி எழுதிய ‘விழியும் விழியும் நெருங்கும்பொழுது’ பாடல்.

இரண்டு : நாயகன் ஒரு செய்தியாளன் என்று கேள்விப்பட்டதால்.

ஏற்கனவே ‘கோ’ குறித்து எழுதியிருந்தோம். பத்திரிகைத்துறை பணிகளை மிகைப்படுத்தி, ஃபேண்டஸைஸ் செய்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம். நல்லவேளையாக கரு.பழனியப்பன், ஓரளவுக்கு பத்திரிகை அலுவலகத்தை சரியாகவே காட்ட முயற்சித்திருக்கிறார். குறிப்பாக ‘போஸ்டரில் என்ன போடுவது?’ என்று ஒருவர் நாயகனிடம் ஆலோசனை கேட்பதும், அதற்கு அவர் சொல்லும் பதிலும் அட்டகாசம்.

இருப்பினும் அவர் பத்திரிகையாளராக இருந்தும் சில விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார். நாளிதழின் மூன்றாவது பக்கத்தை வாசகர்கள் யாரும் வாசிக்கமாட்டார்கள் என்கிறமாதிரி காட்சியமைப்புகள் இருக்கிறது. படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் விஷயம் இது.

மூன்றாவது பக்கத்தை ‘செகண்ட் ஃப்ரண்ட் பேஜ்’ என்பார்கள். வலதுபுற பக்கங்கள் எல்லாமே வாசகர்களை ஈர்க்கக் கூடியவை என்பது இதழியலின் பாலபாடம். விளம்பரதாரர்களும் 3, 5, 7 பக்கங்களில் தங்கள் விளம்பரங்கள் வெளிவரவேண்டும் என்பதை விரும்புவார்கள். அதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பார்கள்.

அப்புறம் ஒரு காட்சியில் பதவியிழந்த அமைச்சரை பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள். ஒரு கேள்வி : ‘திருப்பதிசாமி எழுதின கட்டுரையாலேதான் உங்களுக்கு அமைச்சர் பதவி போச்சுன்னு சொல்றாங்களே?’. இப்படி ஒரு கேள்விக்கு வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் இப்படி கேள்வி கேட்கப்பட்டிருக்கலாம் ‘திசைகள் பத்திரிகையில் வந்த கட்டுரையாலேதான் உங்க அமைச்சர் பதவி போயிடிச்சின்னு சொல்றாங்களே?’

மற்றபடி படம் ஓக்கே ரகம்தான். ஐந்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தாலும் நாட் பேட். உண்மையில் இடைவேளை காட்சியில்தான் படமே தொடங்குகிறது. இது முதல் காட்சியாக வைக்கப்பட்டு, மற்ற காட்சிகள் தெலுங்கு இயக்குனர் சுரேந்தர் ரெட்டி பாணியில் ஷார்ட் ஃப்ளாஷ்பேக் சீன்களாக வந்திருந்தால் படம் பட்டையைக் கிளப்பியிருக்கும்.

இந்தப் படத்தில் மட்டுமன்றி கரு.பழனியப்பனின் அனைத்துப் படங்களிலுமே நம்மை வெறுப்பேற்றும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களுமே இண்டெலெக்சுவல்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் ஏதோ ஒரு ‘மெசேஜ்’ சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால், வசனங்களில் நிறைய விஷயங்களை சொருகவேண்டுமென்கிற அவரது ஆவல் புரிகிறது. துரதிருஷ்டவசமாக படம் பார்க்கும் ரசிகர்களில் ஐந்து அல்லது ஆறு சதவிகிதத்தினர் மட்டுமே இண்டெலெக்சுவல்களாக இருக்கும் சூழலில், ‘படம் இழுத்துக்கிட்டே போவுது’ என்கிற கமெண்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் ஒரு தவறான தேர்வு என்று நினைக்கிறோம். அவர் ஜான் ஆப்ரகாம் மாதிரி. கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பது உண்மைதான். ஆயினும் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, காமாசோமோவென்று இருக்கிறார்.

‘விழியும் விழியும்’ பாடலுக்கான ‘லீட்’ காட்சியில், சோனியா அகர்வாலின் தொப்புள் அழகியல் உணர்வோடு படமாக்கப்பட்டிருக்கிறது. அவரது தொப்புளுக்கு கொடுக்கப்பட்ட ‘லைட்டிங்’, கேமிரா கோணங்கள் என்று அக்காட்சியில் கரு.பழனியப்பன் சதுரங்கம் ஆடாமல், மங்காத்தா ஆடியிருக்கிறார்.

ஹீரோவோடு, வில்லன் தான் சதுரங்கம் ஆடுகிறார். ஹீரோ திருப்பி ஆடவேயில்லை என்பதால் படத்தின் ‘தலைப்பு’க்கான நியாயம் எடுபடவேயில்லை. க்ளைமேக்ஸில் மட்டுமாவது ஹீரோ ஆடியிருக்கலாம். ஆனால் வழக்கமான தமிழ்ப்படங்களைப் போலவே அடிக்கிறார், அடிவாங்குகிறார், திருப்பி அடிக்கிறார், வெல்கிறார்.

பத்திரிகையாளனால் மறைமுகமாக பாதிக்கப்படும் வில்லன், தன் பாதிப்புக்கு ஆற்றும் எதிர்வினைகள் சுவாரஸ்யமானவை. செய்தியாளன் செய்திக்காக தேர்ந்தெடுக்கும் ‘ப்ரியாரிட்டி’ குறித்த வில்லனின் விவாதங்கள் முக்கியமானவையும் கூட.

சதுரங்கம் – ஒரு தடவை விளையாடலாம்.