24 அக்டோபர், 2019

பழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்!

தனலட்சுமி தியேட்டர்
(மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை)

குமரன் தியேட்டர்
(புழுதிவாக்கம்)

ரங்கா தியேட்டர்
(நங்கைநல்லூர்)

ஜெயலட்சுமி தியேட்டர்
(ஆதம்பாக்கம்)

மதி தியேட்டர்
(ஆலந்தூர்)

ஜோதி தியேட்டர்
(பரங்கிமலை)

ராஜலட்சுமி தியேட்டர்
(வேளச்சேரி)

மற்றும்

என் பால்யத்தை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றிய
சென்னை மாநகர் – புறநகர், சுற்றுவட்டார
அனைத்து திரை அரங்கங்களுக்கும்…

இந்நூல் சமர்ப்பணம்!

மறக்க முடியுமா?

எண்பதுகளையும், தொண்ணூறுகளையும் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

2K கிட்ஸ் என்று சொல்லப்படுகிற இளைஞர்கள்தான் ஏராளமானோர் இன்று சமூக ஊடகங்களில் புழங்குகிறார்கள்.

80களிலும், 90களிலும் வெளிவந்த திரைப்படங்களையும், அக்கால நட்சத்திரங்களையும் ‘மீம்ஸ் மெட்டீரியல்’ என்கிற வகையில்தான் மிகவும் கிண்டலாகதான் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

நாமெல்லாம் வியந்து, வியந்து ஆராதித்த நட்சத்திரங்களை இப்படி பொசுக்கென்று ஒரே ஒரு மீமில் பாதாளத்துக்கு தூக்கிக் கடாசிவிடும் அவர்களின் அராஜகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ‘அவங்கள்லாம் யாரு தெரியுமா?’ என்று பதிலளிக்க ‘பழைய பேப்பர்’ என்கிற கட்டுரைத் தொடரையே ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பான ‘வெள்ளி மலர்’ இதழில் தொடங்கினேன்.

இத்தொடரை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாக அன்பும், ஆதரவும் தெரிவித்த மரியாதைக்குரிய தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க மறந்துவிட்டால் காலத்துக்கும் கடன் பட்டவன் ஆவேன்.

தொடர் தொடங்கியபிறகு எதிர்பாரா பக்கங்களில் இருந்து கிடைத்த வரவேற்புகள் சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் 6 மணியிலிருந்து தொடந்து என் கைப்பேசி ஒலிக்கத் தொடங்கிவிடும். வாசகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரும் தொடர்ச்சியாக இத்தொடரை வாசித்து, தங்கள் கருத்துகளை சொல்லி வந்தார்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குறித்த கட்டுரை வந்தபோது, அதை அப்படியே அவரது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதன் பிறகு பல்லாயிரக்கணக்கில் புதிய வாசகர்கள் இத்தொடருக்குக் கிடைத்தார்கள்.

‘பழைய பேப்பர்’, இப்போது சூரியன் பதிப்பகத்தால் நூல் வடிவமும் பெறுகிறது என்பது மகிழ்ச்சி. தொடருக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் நூலுக்கு கூடுதலான வரவேற்பு கிடைக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.

‘பழைய பேப்பர்’ என்று பெயர் வைத்திருந்தாலும், இந்நூலில் தொகுத்துள்ள தகவல்கள் பெரும்பாலும் அவ்வளவு பழசு அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், சிலர் பழைய பேப்பர்களில் இருந்து திரட்டிய தகவல்களா என்றும் கேட்டனர். அதுவும்தான் என்றாலும் முற்றிலும் அப்படியல்ல.

இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும்பாலும் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் சொல்லிக் கேட்டவை, அவர்களே எழுதிய தன்வரலாற்று நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை, பழைய பேட்டிகளில் கிடைத்த தகவல்கள் என்று அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தி முடிந்தவரை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன்.

பொதுவாக சினிமா குறித்த கட்டுரைகள் எழுதும்போது நக்கீரர்கள் சிலர் கருத்துப்பிழை, தகவல்பிழையென்று விளாசித் தள்ளிவிடுவார்கள். ‘பழைய பேப்பர்’ எழுதும்போது அத்தகைய அனுபவம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை.

ஓக்கே. மொக்கை போட்டது போதும்.

It is show time.

கால இயந்திரத்துக்குள் பயணிக்கத் தயாராகுங்கள்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

- ‘பழைய பேப்பர்’ நூலுக்கு எழுதிய முன்னுரை.


பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. தொலைபேசி : 044-42209191
மொபைல் : 7299027361

14 செப்டம்பர், 2019

கலைஞரும் சிறுகதைகளும்!

அரசியல்தான் தான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை என்று கலைஞர் அடிக்கடி சொன்னாலும், “அரசியல்/ஆட்சி அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் அவருடைய ஆர்வமான செயல்பாடு இருந்திருக்கிறது. தன்னை முதன்மையாக பத்திரிகையாளர் என்று அவர் பெருமையாக அடையாளப் படுத்திக் கொண்டாலும், இதழியல் மட்டுமின்றி சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைப்படம், தன்வரலாறு, பேச்சு என்று கிளைவிரித்து தமிழ் பரப்பியிருக்கிறார்.

கலைஞரின் தமிழ்ப் பணிகளில் அதிகம் பேசப்படாதவையாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

மிகச்சரியாக கலைஞர் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பாகதான் தமிழில் ‘சிறுகதை’ என்கிற வடிவமே உருவாகிறது. பாரதியாரின் ‘ஆறிலொரு பங்கு’ என்கிற சிறுகதையையே, தமிழ் சிறுகதை உலகின் முதல் கதையாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கலைஞர், தன்னுடைய 14வது வயதிலிருந்து வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக செயல்படுகிறார். அப்படியிருக்க தமிழில் அவரால் முதல் 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளைதான் தொடக்கத்தில் வாசித்திருக்க முடியும். ஒட்டுமொத்தமாக அப்போது இருநூறு, முன்னூறு சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலே கூட அது அபூர்வம்தான்.

தமிழ் சிறுகதைகள், நவீன வடிவத்தை எட்டாத சோதனைக்குழாயில் இருந்த காலக்கட்டத்தில் இயங்கியவர்களில் கலைஞரும் ஒருவர். எனவே, இன்றைய காலக்கட்டத்தில் சிறுகதைகளில் இலக்கிய வாசகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அழகியல், கச்சிதமான வடிவம் மற்றும் சிறுகதைகளுக்கான கறாரான இலக்கணம் போன்றவற்றை கலைஞரின் அந்தக் காலக்கட்டத்துப் படைப்புகளில் தேட முற்படுவது அபத்தம்.

மேலும், ‘திராவிட இலக்கியம் என்றாலே தீட்டு’ என்கிற தமிழ் நவீன இலக்கியப் பண்பும் கலைஞரின் சிறுகதைகள் அதிகம் பேசப்படாததற்கு கூடுதல் காரணம். திராவிட இயக்கச் சிந்தனைகளின் பரப்பியல் உத்திகள் குறித்த போதுமான ஆய்வுகள், தமிழ் இலக்கியத்தில் மிகவும் அரிது என்பதில் இருந்து இதில் புரிந்துக் கொள்ளலாம். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களை எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்பவர்களையே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நாட்டாமைத்தனமான பாசிஸம் இன்றும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் கலைஞரின் சிறுகதைகள் குறித்த துல்லியமான விமர்சனங்களை நாம் எதிர்ப்பார்ப்பதே வீண்தான்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர், இரா.அரங்கண்ணல், ஏவிபி ஆசைத்தம்பி, இளமைப்பித்தன், இரா.இளஞ்சேரன், கே.ஜி.இராதாமணாளன், தில்லை மறைமுதல்வன், எஸ்.எஸ்.தென்னரசு, டி.கே.சீனிவாசன், முரசொலி மாறன், ப.புகழேந்தி, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரின் நூற்றுக்கும் மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்று சீதை பதிப்பகம் கடந்த 2012ல் திராவிட இயக்க நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய நவீன தமிழ் எழுத்தாளர்களோ / விமர்சகர்களோ இப்படியொரு பெருந்தொகுப்பு வந்திருப்பதையாவது அறிந்திருப்பார்களேயானால் அது அதிசயமே. ‘திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இலக்கியம் வராது’ என்று மட்டையடி அடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்களோ அல்லது அவர்களை அடிவருடும் சூத்திர எழுத்தாளர்களோ இவற்றில் சில கதைகளையேனும் வாசித்திருந்தால் குறைந்தபட்சம் தங்கள் அறியாமையாவது உணர்ந்திருப்பார்கள்.

இன்றைய நவீன இலக்கியவாதிகளில் கலைஞரை அதிகம் வாசித்த மிக சிலரில் பிரபஞ்சனும் ஒருவர். வாசித்திருப்பதால் மட்டுமே அவரால் கலைஞரின் சிறுகதைகளுக்கு அடிநாதமாக இருக்கக்கூடிய சமுதாய உணர்வை கண்டுகொண்டு பாராட்ட முடிகிறது.

“ஒரு கருத்து, சிந்தனை அல்லது அனுபவத்தை சமூகம் சார்ந்து வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவே கலைஞர் தன்னுடைய சிறுகதைகளை பயன்படுத்தி இருக்கிறார். கருத்து இல்லாத, சமூக உணர்வு சற்றுமில்லாத ஒரே ஒரு கலைஞரின் சிறுகதையை கூட நான் வாசித்ததில்லை” என்று சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடா தமிழ்ப்பணி புரிந்த கலைஞர் அவர்கள், காலமாகி இருக்கும் இச்சூழலிலாவது அவரது எழுத்துகள் மீள்வாசிப்பு செய்யப்படுவதும், அவை குறித்த துல்லியமான ஆய்வுகள் நடத்தப்படுவதுமே நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும். காலம் கடந்தாவது இந்தச் செயலை நவீன இலக்கியவாதிகள் செய்வார்கள் என்று நம்புவோம்.

கலைஞரின் சிறுகதைகளுக்கு வருவோம்.

கலைஞரின் 21வது வயதில் ‘கிழவன் கனவு’ என்கிற சிறுகதைத் தொகுப்பை 1945ல் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள், எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. அடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து 1953ல் ‘நாடும் நாகமும்’, 1956ல் ‘தாய்மை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பின்னர் ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச்சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ உள்ளிட்டத் தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1971ல் பெரும் தொகுப்பாக முக்கியமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’ என்று வெளியிடப்பட்டது.

1940ல் தொடங்கி 1970களின் இறுதி வரையில் கலைஞர் ஆர்வத்தோடு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதன் பிறகு நாவல், ஆய்வுநூல்கள் என்று அவரது ஆர்வம் திசைமாறிய நிலையில் மிகவும் அரிதாகவே சிறுகதை எழுதியிருக்கிறார். இயக்கம் சார்ந்த இதழ்களிலேயே கலைஞரின் சிறுகதைகள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருக்கின்றன. அவை தவிர்த்து கொஞ்சம் அரிதாகவே வெகுஜன இதழ்களில் எழுதியிருக்கிறார்.

அவர் எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பதற்கு துல்லியமான கணக்கு வழக்கு இல்லை. தோராயமாக இருநூறு கதைகள் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது.

சினிமா, நாடகம், பேச்சு என்று தன்னுடைய மற்ற ஆற்றல்களை எல்லாம் எப்படி தான் ஏற்றுக் கொண்ட கொள்கை அரசியலுக்கு பயன்படத்தக்க வகையில் மாற்றிக் கொண்டாரோ, சிறுகதைகளையும் அப்படியேதான் உபயோகித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் கருத்துக் கூறுகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகதான் அவர் சிறுகதைகளையும் பார்த்திருக்கிறார்.

“இராமர் என்ன என்ஜினியரா?” என்று ராமர் பாலம் விவகாரத்தில் கலைஞர் செய்த கேலி, நாடு முழுக்கவே கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. இந்துத்துவ ஆதரவாளர்கள் கலைஞரின் மறைவுக்குப் பிறகும் இதற்காக அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ‘விஷம் இனிது’ கதையிலேயேகூட இராமர் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தி இருக்கிறார். “இராம பிரானை விட இந்த விஷம் இனிது” என்கிற கூரிய விமர்சனத்தோடு கூடிய வசனம் அந்த சிறுகதையில் வெளிப்படுகிறது. கடவுள் மறுப்பு என்கிற கலைஞரின் பண்பு, அவரது சிறுகதைகள் பலவற்றிலும் சம்பவங்களின் ஊடாகவும், வசனங்களின் வெளிப்பாடாகவும் பளிச்சென்றே அமைந்திருக்கிறது.

‘கண்ணடக்கம்’ என்கிற கதையில் பிளேக் நோய் பரவி, ஊரெல்லாம் பிணம். காளிபக்தன் மனசுடைந்துப் போய் காளிதேவியிடம் நியாயம் கேட்பான். “கருணைக்கடலா நீ? பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” இதை வாசிக்கும்போதே உணர்ந்திருப்பீர்கள். கலைஞரின் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ‘பராசக்தி’ குணசேகரன்களேதான். ‘நடுத்தெரு நாராயணி’ என்கிற சிறுகதையில் ‘பராசக்தி’ கல்யாணியைகூட நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

கலைஞரின் சிறுகதைகளில் தனித்துவமானதாக அவரது வாசகர்களால் என்று நினைவுகூறப்படுவது ‘குப்பைத்தொட்டி’ என்கிற அவரது சிறுகதை. சர்ரியலிஸம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம், மாந்திரீக யதார்த்தவாதம் போன்ற மேற்கத்திய கோட்பாட்டு முறைகள் தமிழ் நிலத்தில் பேசப்படுவதற்கு வெகுகாலம் முன்பே, ஒரு குப்பைத்தொட்டி மூலமாக சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் சிறப்பான வடிவ உத்தியை அச்சிறுகதையில் கலைஞர் பயன்படுத்தி இருக்கிறார்.

இடதுசாரி இலக்கிய இதழான ‘செம்மலர்’, இச்சிறுகதையை ‘சிகரம் தொட்ட சிறுகதை’ என்கிற வரிசையில் மறுபிரசுரம் செய்து கொண்டாடியது. கலைஞரின் இலக்கியத்தரம் குறித்து நவீன இலக்கியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கலைஞர் இந்தக் கதையைதான் தன்னுடைய இலக்கியத் திறனுக்கு சான்றாக முன்வைத்தார்.

இச்சிறுகதையைப் பற்றி கேள்விப்பட்டு குஷ்வந்த்சிங், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழில் வெளியிட்டார். அக்கதையில் வெளிப்பட்டிருந்த புராண எதிர்ப்புக் கருத்துகளுக்காக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ அலுவலகத்தை இந்துமத வெறியர்கள் முற்றுகையிட்டு பிரச்சினை செய்தார்கள். அப்போது, அக்கதையை பாராட்டி மூட்டை மூட்டையாக வந்திருந்த கடிதங்களை அவர்களுக்கு முன்பாகக் கொட்டி, “இக்கதையை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்” என்று மூக்குடைத்தார் குஷ்வந்த்சிங். பின்னர் ‘குப்பைத்தொட்டி’, ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. “குப்பைத்தொட்டி இங்கே குப்பையாக ஒதுக்கப்பட்டாலும் பிற மொழிகளில் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.

சிறுகதையின் வடிவங்களில் பரிசோதனை செய்துப் பார்ப்பது கலைஞருக்கு மிகவும் பிடித்தமானது. ‘நரியூர் நந்தியப்பன்’ என்கிற சிறுகதையை கடிதவடிவில் எழுதியிருப்பார். அவருடைய சிறுகதைகளில் சாமியார்களை தோலுரிக்கும் சம்பவங்கள் ஏகத்துக்கும் அமைந்திருக்கும். ‘நளாயினி’, புராண எதிர்ப்புப் பேசும். ‘சந்தனக் கிண்ணம்’, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் நியாயத்தை எடுத்துச் சொல்லும்.

‘எழுத்தாளர் ஏகலைவன்’ என்கிற சிறுகதையில், “சிறுகதை என்றால் வெறும் பொழுது போக்குக்காகப் படிப்பதற்காகவா எழுதப்படுவது? அதில் ஏதாவது ஒரு கருத்து, சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா?” என்று தான் ஏன் சிறுகதை எழுதுகிறார் என்பதற்கான நியாயத்தை கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பார்.

சிறுகதை என்றால் என்னவென்று இந்த பின்நவீனத்துவத்துவக் காலக்கட்டத்திலும் ஏதோ ஒரு வாசகனால் கேட்கப்படுகிறது. ஏதோ ஓர் எழுத்தாளர், தான் அறிந்ததை விளக்கிக் கொண்டிருக்கிறார்.

சிறுகதைக்கான கலைஞரின் இலக்கணம் மிகவும் எளிமையானது.

”ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும், விளக்குபவருக்கும், விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்படுவதுதான் சிறுகதை”

ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம்தான் இல்லையா?

30 ஆகஸ்ட், 2019

பூம்.. பூம்.. பும்ரா!

அகமதாபாத் நகரை கோடை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

உச்சி வேளை.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் தல்ஜீத் டீச்சர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

‘பூம்.. பூம்.. பூம்..’

சீரான இடைவெளியில் அந்த சப்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

தூக்கம் களைந்து, படுக்கையறையை விட்டு வெளியே வந்தார்.

ஹாலில் பத்து வயது மகன் பும்ரா, சுவரில் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தான்.

“பும்ரா, சத்தமில்லாமே விளையாட மாட்டியா?” லேசாக கண்டிப்பு தொனிக்கும் குரலில் கேட்டார் டீச்சர்.

தொனிக்கும் குரலில்தான். நிஜமான கண்டிப்பு அல்ல. மகனைப் பொறுத்தவரை எப்போதுமே தல்ஜீத் டீச்சர் கண்டிப்பு காட்ட மாட்டார்.

ஏனெனில், ஏழு வயதிலேயே தந்தையை இழந்த குழந்தை அவன்.

தொழில் நிமித்தமாக அகமதாபாத்துக்கு இடம் பெயர்ந்திருந்த பஞ்சாபி குடும்பம்.

சிறிய அளவில் கெமிக்கல் ஃபேக்டரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் ஜஸ்பீர் சிங். அன்பான மனைவி. அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள், ஒரு மகன்.

மகன் பும்ராவுக்கு ஏழு வயது இருக்கும்போதுதான், அந்தக் குடும்பம் தாங்கவொண்ணா துயர் இருளில் வீழ்ந்தது. குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த ஜஸ்பீர் சிங், மஞ்சக்காமாலை நோயால் திடீரென காலமானார்.

அதுநாள் வரை கணவரின் அரவணைப்பில் வெளியுலகம் பாராமல் இருந்த தல்ஜீத் மகனுக்காகவும், மகளுக்காகவும் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

நிர்மாண் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாக வேலையில் அமர்ந்தார்.

அதே பள்ளியில் தன் மகளையும், மகனையும் படிக்க வைத்தார்.

டீச்சரின் குழந்தைகள் என்பதால் இருவரும் நன்றாகவே படித்தார்கள்.

டாக்டர், என்ஜினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எல்லோரையும் போலவும் தல்ஜீத் டீச்சருக்கும் கனவுகள் இருந்தன.

தகப்பன் இல்லாத குறை தெரியாமல் அவர்களை வளர்த்து வந்தார்.

மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டார். வீட்டுக்குள்ளேயே விளையாடச் சொல்லுவார்.

பும்ராவுக்கு கிரிக்கெட்தான் பிடிக்கும்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், முகம்மது கைஃப், யுவராஜ்சிங், தினேஷ் மோங்கியா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஜவகல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சர்வதேச அளவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.

டிவியில் கிரிக்கெட் பார்ப்பதுதான் பும்ராவின் ஒரே சந்தோஷம். பேட்டிங்கைவிட பவுலிங்தான் அவனது விருப்பம். ஜாகீர்கான் யார்க்கர் போட்டு பேட்ஸ்மேனை திணறடிக்கும் காட்சியை கைத்தட்டி ரசிப்பான்.

கிரிக்கெட் போட்டி இல்லாதபோது டென்னிஸ் பந்தை சுவரில் அடித்து பவுலிங் செய்து விளையாடுவான்.

அப்படிதான் அன்று ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் வந்த சம்பவம்.

சப்தமில்லாமல் சுவரில் பந்துவீசி எப்படி பவுலிங் செய்ய முடியும்?

முடியும்.

சிறுவன் பும்ரா யதேச்சையாக அந்த டெக்னிக்கை கண்டுப்பிடித்தான்.

சுவரின் கீழ்ப்பகுதி, தரையோடு இணையும் இடத்தில் குறிபார்த்து பந்து வீசினால் ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் எழவில்லை. அம்மாவும் நிம்மதியாகத் தூங்கினார். தானும் விளையாடிய மாதிரி ஆயிற்று.

யதேச்சையாக அமைந்த அந்த பயிற்சிதான் இன்று உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலிங் பேரரசனாக பும்ராவை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்பமுடியாத ஆச்சரியமாகதான் இருக்கும். ஆச்சரியங்களும், அற்புதங்களும் பெரும்பாலும் இதுபோல யதேச்சையாக தோன்றுபவைதான்.

பள்ளியில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாகதான் (இந்தக் கட்டுரையில் இன்னும் எத்தனை யதேச்சை வருமோ) பும்ராவின் பவுலிங்கைப் பார்த்தார் விளையாட்டு ஆசிரியர்.

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் தொலைவில் இருந்து ஓடிவந்துதான் பந்து வீசுவார்கள். பும்ராவோ, ஸ்பின்னர்களைப் போல மிகக்குறைவான தூரம் ஓடிவந்து படுவேகமாக வீசினான். அதுவும் அடுத்தடுத்து துல்லியமான யார்க்கர்கள்.

விளையாட்டு ஆசிரியருக்கு ஆச்சரியம். இப்படியொரு பவுலிங்கை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட பார்த்ததில்லை.

”பும்ரா, உனக்கு யார் இப்படி பந்து வீசக் கற்றுக் கொடுத்தது?”

“நானேதான் கற்றுக் கொண்டேன்” என்றவன், வீட்டில் ‘பூம்.. பூம்’ சப்தம் வராமல் இருப்பதற்காக சுவரும், தரையும் இணையும் இடத்தில் குறிபார்த்து வீசி, வீசி பயிற்சி பெற்ற கதையை சொன்னான்.

பும்ராவின் அதிசயப் பந்துவீச்சு குறித்த தகவல் உள்ளூர் கிரிக்கெட் அகாடமிக்குப் போனது. அகாடமியில் இருந்த பயிற்சியாளர், “தம்பி, நீ சாதாரண ஆளு இல்லை. உலகத்தையே உன் பந்து வீச்சால் ஆளப்போறே. டெய்லி கரெக்டா பிராக்டிஸுக்கு வந்துடு” என்றார்.

அப்போது பும்ராவின் வயது பதினாலு.

நேராக அம்மாவிடம் போனார். இனிமேல் ‘ர்’தான். டீனேஜுக்கு வந்துவிட்டாரே?

“அம்மா, நான் ஜாகிர்கான் கிரிக்கெட் பிளேயர் ஆகப்போறேன்”

ஆச்சரியத்தோடு பார்த்தார் அம்மா.

“உனக்கென்ன கிரிக்கெட் தெரியும்?”

“மத்தவங்களுக்கு தெரியாததெல்லாம் எனக்குத் தெரியும்னு கிரிக்கெட் அகாடமியில் சொல்லுறாங்க அம்மா”

அம்மாவுக்கு கவலையாகப் போய்விட்டது. ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து பெரிய வேலைக்கு அனுப்புவதுதான் அவரது லட்சியம். மகனோ, விளையாடப் போகிறேன் என்று அடம் பிடிக்கிறார்.

”வேணாம் கண்ணா. கோடி பேருலே ஒருத்தருதான் டெண்டுல்கர் ஆகமுடியும். நீ அப்பா இல்லாத பையன். உன்னை வெச்சி நான் ரிஸ்க் எடுக்க முடியாது.”

“அம்மா. என்னை நம்பு. நானும் கோடிலே ஒருத்தன்தான்.”

“கண்ணா, நீ ஸ்பெஷல்னு அம்மாவுக்குத் தெரியும். இருந்தாலும்…”

“என்ன இருந்தாலும்? அம்மா, நீங்க ஸ்கூல் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் பேசுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளோட கனவை நனவாக்கிறது பெற்றோர்களின் கடமைன்னு பேசுவீங்க. நீங்களே கடமை தவறலாமா?”

வார்த்தைகளால் பும்ரா வீசிய யார்க்கருக்கு அம்மா தல்ஜீத், க்ளீன் பவுல்ட் ஆனார். தன் பேச்சை எடுத்துக்காட்டியே தன்னை மடக்கிய மகனின் சாமர்த்தியத்தை வியந்தார்.

”கண்ணா, நீ எது செஞ்சாலும் நல்லபடியா செய்வே. உன் கனவு நீ நினைச்சமாதிரி நடக்கலைன்னாலும் பரவாயில்லை. உடனே அம்மா கிட்டே ஓடி வந்துடு. வேற என்ன செய்ய முடியும்னு பார்த்துக்கலாம்.”

ஆனால் –

அப்படியொரு சந்தர்ப்பம் பும்ராவுக்கு ஏற்படவே இல்லை.

அதிகாலையில் எழுந்து பயிற்சிக்காக அகாடமிக்கு செல்வார். பயிற்சி முடிந்ததும் நல்ல பிள்ளையாக பள்ளிக்குச் செல்வார். மாலையில் மீண்டும் பயிற்சி.

அம்மாவுக்காக நன்றாகப் படித்தார். தனக்காக தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

குஜராத் கிரிக்கெட் அசோஷியேஷன் நடத்திய சம்மர் கேம்பில் கலந்துக் கொண்டார். பும்ராவின் வித்தியாசமான பவுலிங் அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து அவரை எம்.ஆர்.எஃப் பவுண்டேஷனுக்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மண்டலப் பயிற்சி முகாமுக்கும் அனுப்பினார்கள். சென்ற இடமெல்லாம் புதிய நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.

குஜராத் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி, முதல் போட்டி சவுராஷ்டிரா அணியுடன். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே பேட்டிங்குக்கு சாதகமான ராஜ்கோட் மைதானத்தில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

“பும்ரா எப்போது பவுன்ஸர் வீசுவான், எப்போது யார்க்கர் போடுவான் என்று எந்த பேட்ஸ்மேனுமே கணிக்க முடியாது. அவன் வீசுவது பந்தா அல்லது அணுகுண்டா என்றே தெரியாது” என்று இப்போதும் சிலிர்க்கிறார் குஜராத் ரஞ்சி அணியின் பயிற்சியாளரான ஹிதேஷ் மஜூம்தார்.

சயித் முஷ்டாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை கவனித்தார் அப்போதைய மும்பை ஐபிஎல் அணியின் பயிற்சியாளரான ஜான்ரைட்.

மும்பை அணி, பும்ராவோடு ஒப்பந்தம் செய்தது. மும்பை அணியில்தான் தன்னுடைய காட்ஃபாதரான யார்க்கர் மன்னன் லசித் மலிங்காவை சந்தித்தார் பும்ரா. தன்னைப் போலவே சலிக்காமல் யார்க்கர் வீசும் பும்ராவுக்கு, ஏகப்பட்ட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார் மலிங்கா.

அவ்வளவுதான்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு யார்க்கர் டான் ரெடி!

மீதியெல்லாம் சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதனை வரலாறு.

(நன்றி : குங்குமம்)

3 ஜூன், 2019

கலைஞரிடம் என்ன கற்க வேண்டும்?


கலைஞர் இல்லாத முதல் பொதுத்தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் சரித்திர வெற்றியை எட்டியிருக்கிறது. 

இந்த வெற்றியை கலைஞர் எப்படி கொண்டாடி இருப்பார்?

திமுகவின் மகத்தான வெற்றியைவிட மக்கள் சபையில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் இடதுசாரிகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது என்கிற கவலையைத்தான் அவர் அதிகம் வெளிப்படுத்தி இருப்பார்.

இடதுசாரிகளுக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்த ஐந்து இடங்களில் நான்கு இடங்கள் தமிழகத்தில் இருந்து கிடைத்தது குறித்த ஆறுதல் மட்டுமே அவருக்கு இருந்திருக்கும். இனி வரும் காலங்களில், தேசம் முழுக்க மதச்சார்பற்ற சக்திகள் வலிமை பெற வேண்டியதின் அவசியத்தைத்தான் அவர் எடுத்துரைத்திருப்பார்.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதுவரையில் இல்லாத அளவுக்கு எண்ணிக்கை அடிப்படையில் வலிமையான எதிர்க்கட்சியாக 89 இடங்களை திமுக பெற்றிருந்தது.

அப்போதும்கூட ஒரே ஒரு கம்யூனிஸ்டு எம்எல்ஏ கூட இல்லாத சட்டமன்றமாக இது அமைந்துவிட்டதே என்றுதான் கலைஞர் கவலை கொண்டார்.

கலைஞரைப் பொறுத்தவரை அரசியலிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி, ஒற்றுமையே வெற்றியைத் தேடித்தரும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டவர். வலியோர், எளியோரை மதிக்க வேண்டும் என்கிற பண்பு நிறைந்தவர்.

இந்திய ஜனநாயகத்தில் ‘எண்ணிக்கை’க்குத்தான் முக்கியத்துவம். கலைஞரோ எண்ணிக்கையைவிட எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்தவர். தமக்கு எதிரணியில் நின்றவர்களைக்கூட அவர்களின் கொள்கைப் பிடிப்பு காரணமாக மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருந்தவர்.

அவருடைய எண்பது ஆண்டு கால பொதுவாழ்வில் எவரையும் அவர் எதிரியாகக் கருதியதில்லை. எதிர்நிலையில் இருக்கிறார்கள் என்று மட்டுமே நினைப்பார்.

முதன்முறையாக குளித்தலை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இளம் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக சட்டமன்றத்தையே கலைஞர் அதிரச் செய்து

கொண்டிருந்தபோது, தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவர் சி.சுப்பிரமணியம். அப்போது காமராஜர் தலைமையிலான அமைச்சர்கள், சட்டமன்றத்தில் கலைஞரின் வாயில் விழுந்துவிடக் கூடாதே என்று அஞ்சுமளவுக்கு அவரது உரைவீச்சு வாள்முனையின் கூர்மைக்கு ஒப்பானதாக இருந்து வந்தது.

நிதியமைச்சர் என்கிற வகையில் சி.சுப்பிரமணியம், அடிக்கடி கலைஞரால் தாக்குதலுக்கு உள்ளாவது வழக்கம். பின்னாளில் திமுக ஆட்சிக்கு வந்து கலைஞர், பொதுப்பணித்துறை அமைச்சராக அண்ணா அரசில் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதலமைச்சராக ஐந்து முறை பணியாற்றினார். மிகச்சிறந்த நிர்வாகியாக நாடு முழுக்க பெயர் எடுத்தார்.

எனினும், நிர்வாகத்தில் தன்னுடைய குரு என்று தன்னால் அதிகமுறை சட்டமன்றத்தில் தாக்குதலுக்கு உள்ளான சி.சுப்பிரமணியத்தின் பெயரைத்தான் கலைஞர் குறிப்பிடுவார்!எதிர்க்கட்சி உறுப்பினராக தன்னுடைய தர்மத்தை கலைஞர் மேற்கொண்டார். அதற்காக அவர் சி.சுப்பிரமணியத்தை

எதிரியாகக் கருதியதில்லை. மனசுக்குள் மானசீகமாக குரு என்கிற நிலையில் வைத்துத்தான் மரியாதை செய்திருக்கிறார்.அரசியலில் கலைஞருடைய பல நிலைப்பாடுகள், அடுத்தடுத்த நகர்வுகளில் கடுமையான முரண்பாடாகத் தெரியும்.

ஆனால் -

நீண்டகால நோக்கில் பார்க்கப் போனால், அது திமுகவின் நன்மையை உத்தேசித்த முடிவாகவே இருந்திருக்கும். தனிப்பட்ட முறையில் தன்னுடைய பெயரும், இடமும் விமர்சிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இயக்கத்தின் இருப்பு குறித்த ஓர்மையோடுதான் ஒவ்வொரு அரசியல் முடிவையும் எடுத்திருக்கிறார்.
அண்ணாவின் தம்பியல்லவா? சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதை முழுமையாக உணர்ந்தவர்.‘இந்திராதான் இந்தியா’ முழக்கம் எழுந்த எழுபதுகளில், மத்திய ஆட்சியை அனுசரித்துப் போயிருந்தால் கலைஞர் தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால், பதவியைப் பற்றி கவலைப்படாமல் இந்திராகாந்தி ஆட்சியின் எமர்ஜென்ஸியை எதிர்த்து தீரத்தோடு போராடினார். ஆட்சியை இழந்தார். குடும்பத்தினர், கட்சியினர் அத்தனை பேரும் சிறைப்பட்டு, சித்திரவதைப் படுத்தப்பட்டபோதும் தனிமனிதராக ‘முரசொலி’ என்கிற எழுத்து ஆயுதம் கொண்டு அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்தார்.

அரசியல் சூழல் மாறியபோது பழைய எமர்ஜென்ஸி விரோதத்தை அவர் இந்திராகாந்தி மீது காட்டியதில்லை. ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைத்து, தமிழகத்தில் பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் பெறுவதற்குக் காரணமாக இருந்தார். எமர்ஜென்ஸியின்போது சேதாரமான திமுகவின் கட்டமைப்பை சீர்படுத்துவதற்கும் அந்த பாராளுமன்ற வெற்றி கலைஞருக்கு உதவியது.

“எதிர்த்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி, இரண்டிலுமே முழுத் தீவிரமாக இருப்பார் கலைஞர்...” என்று அவரது அரசியலுக்கு சான்றிதழ் வழங்கினார் இந்திராகாந்தி. அந்தக் கூட்டணி முடிவினால் தனிப்பட்ட முறையில் கலைஞர் பலவாறாக விமர்சிக்கப்பட்டாலும், தான் சார்ந்த இயக்கத்தின் நலன் மட்டுமே அவரது முடிவுக்குக் காரணமாக அமைந்தது.

தன் மீது பல திசைகளிலிருந்தும் பாயும் விமர்சனக் கணைகளைப் பொருட்படுத்தாமல் திமுகவின் எதிர்காலத்தை மட்டுமே உத்தேசித்து அவர் எடுத்த முடிவுகளினால்தான் உலகளவிலேயே இல்லாத அதிசயமாக ஒரு பிராந்திய அரசியல் இயக்கம், எழுபது ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் செல்வாக்குள்ள வலிமையான அமைப்பாக இன்றும் செயல்பட முடிகிறது.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் கட்சியில் எத்தனையோ பிளவுகள்; எவ்வளவோ தலைவர்கள் பிரிந்து சென்றிருக்கிறார்கள்.

இருந்தும், திமுகவுக்குப் பிறகு தொடங்கப்பட்டு ஒரு காலத்தில் பிரபலமாக வலிமையாக இருந்த பல இயக்கங்களின் பெயர் கூட இன்று யாருக்கும் நினைவில் இல்லை. தனிப்பட்ட விரோதம் பாராமல் அனைவரையும் ஒருங்கிணைத்து, தேர்தலை பதவிக்கான பாதையாக மட்டும் கருதாமல், இயக்கத்தின் எதிர்காலத்தை ஒட்டியே முடிவுகளை எடுக்கும் கலைஞரின் தலைமைப் பண்புதான் திமுகவின் நீண்டகால இருப்புக்கு முழுமுதற் காரணம்.

தன் சுயலாபத்துக்காக, தான் சார்ந்த இயக்கத்தை எந்நாளும் அவர் விட்டுக் கொடுத்தவரில்லை என்பதே கலைஞரின் சிறப்புகளுக்கு எல்லாம் சிறப்பு.

சிறுவயதிலேயே அவருக்கு இந்தப் பண்பு இயல்பாக இருந்திருக்கிறது. அதுவே பின்னாளில் அரசியலுக்கும் உதவியிருக்கிறது.
டீன் ஏஜில் இருந்தபோது திருவாரூரில் கலைஞர், சீர்திருத்தச் சங்கம் என்கிற இளைஞர் அமைப்பை நிறுவி நடத்திக் கொண்டிருந்தார். சங்கத்தில் ஏதோ சலசலப்பு. கலைஞரின் நண்பராக இருந்த தியாகராஜன் என்பவர் சங்கத்தை உடைத்தார். ‘இளைஞர் சங்கம்’ என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் துவக்கினார்.

ஊரில் சீர்திருத்தச் சங்கமும், இளைஞர் சங்கமும் கருத்துரீதியில் மட்டுமில்லாமல், களரீதியிலும் அவ்வப்போது மோதிக்கொண்டார்கள். எது உண்மையான சங்கம் என்பதை முடிவு செய்ய தேர்தல் நடத்தலாம் என்று ஊர் முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டுக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டார்கள்.

தேர்தல் என்று வந்துவிட்டால் கலைஞர் சிங்கம் அல்லவா?பிரசாரம், பொதுக்கூட்டம், தேர்தல் நிதி, நிதி திரட்ட கலைநிகழ்ச்சிகள் என்று அட்டகாசப்படுத்தினார்.

இவர்களை எதிர்கொள்ள எதிர்த்தரப்பும் ஒரு நாடகம் போட்டு நிதி திரட்ட முற்பட்டார்கள். நாடகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, நுழைவுச் சீட்டுகளையும் விற்றுவிட்டார்கள். கடைசி நேரத்தில் நாடகத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் மாயமாகி விட்டார். நாடகத்தை நடத்தாவிட்டால் நுழைவுச்சீட்டை காசு கொடுத்து வாங்கிய ரசிகர்கள் ஒருவழியாக்கி விடுவார்கள்.

தியாகராஜனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று முடிவெடுத்தார். ஏனெனில், மாயமாகிவிட்ட நடிகரின் கதாபாத்திரத்தை நடிக்க முடிந்த ஒரே நடிகர் அப்போது கலைஞர்தான்! அவருக்குத்தான் வசனங்களும், காட்சியும் மனப்பாடமாகத் தெரியும்.தயங்கித் தயங்கி கலைஞரை அணுகினார்.

இதற்குத்தானே அவரும் காத்திருந்தார்?

“தியாகராஜா, நடிப்பதில் எனக்கு சம்மதமே. அது என் கடமையும்கூட. ஆனால், இந்த நாடகத்தை நான் சார்ந்திருக்கும் சீர்திருத்தச் சங்கத்துக்கு எதிராக நடத்துகிறாய். அதில் நான் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பதாக இருந்தால் அது என்னுடைய சங்கத்துக்கு எதிராக நான் செயல்படுவதற்கு ஒப்பாகும்...” என்று நிறுத்திவிட்டு தியாகராஜனைப் பார்த்தார்.

தியாகராஜனோ பரிதாபமாக, “நான் என்னதான் செய்யவேண்டும் என்பதையும் நீயே சொல்லிவிடு...” என்றார்.“நாடகம் தொடங்குவதற்கு முன்பாக, சீர்திருத்தச் சங்கத்தில், இளைஞர் சங்கம் இணைந்துவிட்டது என்று அறிவித்துவிடு! அப்போது நாம் ஒரே சங்கமாகிவிடுவோம். நான் நடிப்பது குறித்து யாரும் ஆட்சேபிக்க முடியாது. எனக்கும் தயக்கம் இருக்காது!” என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

தனிப்பட்ட முறையில் தன் பெயரைக் கெடுத்துக் கொள்வதைவிட சங்கத்தை இணைத்துவிட்டு நாடகத்தை நடத்தி, தப்பித்தால் போதும் என்கிற நிலையில் தியாகராஜனும் அவ்வாறே செய்தார்.

அப்போது கலைஞர் செய்த அதே சீர்திருத்தச் சங்க அரசியலைத்தான் காலம் முழுக்க செய்துவந்தார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து, தன்னுடைய இயக்க நலனையே பிரதானமாக முன்வைத்தார். அரசியலில் அவர் மகத்தான வெற்றிகளைக் குவிக்க அவரது இயக்கம் காரணமாக இருந்தது. படுமோசமான தோல்விகளின்போது இயக்கமே அவருக்கு பாதுகாப்புக் கேடயமாக இருந்து, அடுத்த போருக்கு தயார் செய்தது.

தனிமனிதர்கள் தற்காலிகமானவர்கள். அமைப்பே நிரந்தரம்!

கலைஞர் கற்றுக் கொடுத்திருக்கும் இந்தப் பாடம், அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானதும்தான். அமைப்பு என்கிற இடத்தில் குடும்பம், வீடு, தெரு, ஊர், சமுதாயம், நிறுவனம், மாநிலம், நாடு என்று அவரவருக்கான அமைப்பின் பெயரைப் போட்டு, அவரவருக்கான பாடமாக எடுத்துக் கொள்ளலாம்!



தந்தை வழியில் தனயன்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால், இப்போதைய சூழலில் முதல்வராகி இருக்க முடியாதா?

முடியும். முயற்சித்திருந்தால் ஜெயலலிதா மறைந்தபோதேகூட ஆகியிருப்பார்.அதற்காக நிறைய பின்வாசல்களை அவர் திறந்திருக்க வேண்டும். பின்வாசல் அரசியல் என்பது ராஜதந்திரமாக, அரசியல் தர்மமாக பார்க்கப்படும் இன்றைய சூழலில், அதை அவர் செய்திருந்தாலும் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.

பதவிக்கு வருவதுதான் முக்கியம். எந்த வழியாக வந்தார்கள் என்று யார் கவலைப்படப் போகிறார்கள்?
ஆனால் -

தான் முதல்வர் ஆவதைவிட, கலைஞருக்குப் பிறகு, தான் பொறுப்பேற்றிருக்கும் திமுக, மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றி பெறுவதையே ஸ்டாலின் விரும்பினார்.

கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தலில், கலைஞரின் உயிரான இயக்கம், நாடே திரும்பிப் பார்க்கும் மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதையே கலைஞரின் இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக அவர் நினைவிடத்தில் சமர்ப்பித்திருக்கிறார் ஸ்டாலின்!தன்னைவிட தன்னுடைய இயக்கம்தான் முக்கியம் என்கிற தந்தை வழியிலேயே தனயனும் பயணப்படுவது திமுகவின் தொண்டர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

(நன்றி : குங்குமம்)

21 மே, 2019

திமுக vs விடுதலைப்புலிகள்

திமுக எப்படியோ அப்படியேதான் எனக்கு விடுதலைப்புலிகளும். திமுக மீது சில கசப்பான விமர்சனங்கள் இருப்பதைப் போலவே விடுதலைப்புலிகள் மீதும் உண்டு.

ஒருக்கட்டத்தில் திமுகவை மிகக்கடுமையாக வெறுக்குமளவுக்கு விடுதலைப்புலிகள் மீது அளவுக்கதிகமான நம்பிக்கையும், பாசமும் இருந்தன (ஆம், இருந்தன. past tense)

எனினும் -

திமுக தன்னுடைய அமைப்புப் பலத்தில், சித்தாந்தப் பின்புலத்தில் 70 ஆண்டுகளாக தொய்வின்றி வலிமையாக செயல்படும் பிராந்திய இயக்கமாக இருக்கிறது. திமுகவின் அரசியலுக்கு inclusiveness தன்மை உண்டு. காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு தயாரான இயக்கம். இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்க அவசியமான சமரசங்களுக்கு உடன்படும் கட்சி. அடிப்படைக் கொள்கையான பிராந்திய நலன் மட்டுமே அவ்வியக்கத்தை நீண்டகாலமாக செலுத்தும் சக்தி. இயக்கம் இல்லையேல் தங்கள் இலட்சியங்களை ஈடேற்றிக் கொள்ள களம் இருக்காது என்கிற யதார்த்தத்தை உணர்ந்த இயக்கம்.

விடுதலைப்புலிகளுக்கு அத்தகைய தன்மை குறைவு. சாகஸவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த இயக்கமாகவே படுகிறது. மக்கள் ஆதரவு என்பதைவிட, போராளிகளின் வீரத்தின் மீதே அதிக சுமையை ஏற்றிவிட்டோம். 'பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்’ என்றாகி விட்டது. இயக்கத்தின் இதயமாக விளங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் வெற்றிடம், இயக்கத்தை மட்டுமின்றி அதன் நோக்கங்களையும் சூனியமாக்கி விட்டது. தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் தொடக்கத்திலும் இயக்கத்துக்கு கிடைத்த leverage, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் வீணாகிவிட்டது.

இருப்பினும் -

என் வாழ்நாளின் கணிசமான நாட்களில் நான் பெருமிதமாக எண்ணி மகிழக்கூடிய தருணங்களை வழங்கிய இயக்கம் விடுதலைப்புலிகளே. இதே மாதிரியான பெருமிதத்தை நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கங்களிலும் தமிழகத்தில் பிறந்தவர்களுக்கு திமுக கொடுத்திருக்கலாம்.

இன்று; திமுக vs விடுதலைப்புலிகள் என்கிற எதிர்நிலைப்பாடுகள் இணையத்தளங்களில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும், தமிழகத்தில் பிறந்த திமுக ஆதரவாளர்களாலும் எடுக்கப்படுவது அபத்தமானது. புலிகள் இல்லாத நிலையில் புலி ஆதரவு என்பது பணம் கொழிக்கும் தொழிலாக 2009க்கு பிறகு மாறிவிட்ட கொடுமையான சூழலில், தங்கள் சுயநலத்துக்கு திமுகவை வில்லனாக சுட்டும் துரோகிகளால் உருவாகியிருக்கும் நிலை இது. தங்கள் தலைவர்களும், இயக்கமும் அபாண்டமாக அவதூறு செய்யப்படும் நிலையில், அதற்கு நிஜமான காரணகர்த்தாக்களை சாடுவதை விட்டுவிட்டு, களத்திலேயே இல்லாத புலிகள் மீது பாய்வதும், அவர்களது வீரவரலாறு திமுகவினரால் கொச்சைப்படுத்தப்படுவதும் துரதிருஷ்டவசமானது.

உண்மையைச் சொல்லப்போனால் எண்ணற்ற துரோகிகள் தங்கள் தவறுகளை மறைக்கவே நிஜத்தில் இல்லாத ஒரு முரண்பாடாக ‘திமுக vs விடுதலைப்புலிகள்’ என்கிற conspiracy theoryயை உருவாக்கி, குளிர் காய்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகமே இது.

திமுகவைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழர்கள் ஒற்றுமையான சூழலில் தமிழீழம் பெறக்கூடிய அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்தது. எண்பதுகளின் மத்தியில் அவர்களுக்குள் உருவான முரண்பாடுகளை சங்கடத்தோடு பார்த்தது. ‘சகோதர யுத்தம் வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டது. திமுக எதை உத்தேசித்து எண்பதுகளில் கவலைப்பட்டதோ அதுவே கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் கழித்து 2009ல் நடந்தது. 60களின் தொடக்கத்தில் ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்கிற நிலைப்பாட்டை திமுக எடுத்திருக்கவில்லையென்றால், தமிழகத்துக்கும் எமர்ஜென்ஸியின்போது அதுவே நடந்திருக்கும்.

விடுதலைப்புலிகள் இன்று இல்லாத சூழலில் தமிழீழம் என்பது பகற்கனவே. இருக்கட்டுமே? என்றோ ஒருநாள் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாக இந்த கனவு மட்டுமாவது மிஞ்சியிருக்கட்டும். வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. வம்புச்சண்டைகளால் அந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது.

30 ஏப்ரல், 2019

ஊருக்குதான் உபதேசமா?

ரத்தன் டாட்டாவை தெரியாதவர்கள், இந்தியாவில் மிகவும் அரிதானவர்கள். டாட்டா என்பது இந்தியாவில் 150 வயது தொழில் சாம்ராஜ்ஜியம். இரும்பில் தொடங்கி உப்பு வரை அவர்கள் ஈடுபடாத தொழிலே இல்லை. அதன் தலைவராக இருந்த ரத்தன் டாட்டா வெறித்தனமான கார் பிரியர். பெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட்ரோவர், கேடிலாக், கிறிஸ்லெர் என்று அவரது காரேஜில் இல்லாத அயல்நாட்டு கார்வகைகளே இல்லை.

இருப்பினும் –

முக்கியமான நிகழ்வுகளுக்கு அவரது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘டாட்டா நிக்ஸான்’ காரில்தான் ஜம்மென்று வந்து இறங்குவார். அது மட்டுமின்றி தன்னுடைய குழுமத்தைச் சார்ந்தவர்களும் டாட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைதான் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பார்.

அவ்வளவு ஏன்?

ரத்தன் டாட்டா, கார் பிரியர் மட்டுமல்ல. நாய் பிரியரும் கூட. தன்னுடைய செல்லப் பிராணிகள் குதூகலமாக பயணிப்பதற்காகவே ஒரு கார் வைத்திருக்கிறார். நாய்கள் வசதியாக அமருவதற்கு ஏதுவாக அதில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் டாட்டா தயாரிப்பான ‘இண்டிகோ மரீனா’ கார்தான்.

இதற்குப் பெயர் எளிமை அல்ல. Brand Promotion. தன்னுடைய brandஐ தானே நம்பிப் பயன்படுத்தவில்லை எனில், வாடிக்கையாளர்களை எப்படி திருப்திப்படுத்த முடியும் என்கிற நியாயமான கவலையும் அவருக்கு உண்டு.

ரத்தன் டாட்டா ஒரு பக்கம் இருக்கட்டும்.

Brand Loyaltyக்கு வருவோம்.

ஒரு பொருளை வாங்கும் போதோ, ஒரு சேவையை பயன்படுத்தும் போதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த பொருளைதான் வாங்குவேன் / சேவையைதான் பயன்படுத்துவேன் என்று ஒரு வாடிக்கையாளர் தீர்க்கமான முடிவெடுத்து வைத்திருப்பதைதான் brand loyalty என்று விளம்பரத்துறை மொழியில் குறிப்பிடுகிறார்கள்.

அத்தகைய விசுவாசத்தை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குவதற்குதான் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விளம்பரம் செய்கிறார்கள். உங்கள் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் அவர்களது brand nameஐ நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஏனைய துறை பிரபலங்கள் ஏதாவது ஒரு தயாரிப்பையோ, சேவையையோ பயன்படுத்தும்படி பத்திரிகை மற்றும் டிவி விளம்பரங்களில் உங்களை வற்புறுத்திக் கொண்டே வருகிறார்கள்.

ஒரு நிறுவனம் நீண்டகாலமாக தொழில் செய்ய வேண்டுமெனில் தன்னுடைய வாடிக்கையாளர்களிடையே தன்னுடைய தயாரிப்பு குறித்த brand loyalty-ஐ உருவாக்கியே ஆகவேண்டும். நீங்கள் நீண்டகாலமாக ‘குங்குமம்’ வாசிக்கிறீர்கள் எனில், எங்கள் இதழ் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய brand loyalty-க்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

வெறுமனே ஒரு தயாரிப்பின் அருமை, பெருமைகளை பற்றி எடுத்துச் சொல்லி மட்டுமே ஒரு வாடிக்கையாளரை, விசுவாசியாக எந்த நிறுவனத்தாலும் மாற்றிவிட முடியாது.

இங்குதான் brand ambassador-களின் தேவை ஏற்படுகிறது. இப்போது நீங்கள் ‘லக்ஸ்’ சோப் பயன்படுத்துபவர் என்றால், அந்த சோப்பை விளம்பரங்களில் ஐஸ்வர்யா ராயோ, கரீனா கபூரோ, கத்ரினா கைஃபோ உங்களுக்கு பரிந்துரைத்திருப்பார் இல்லையா? அவர்தான் ‘லக்ஸ்’ சோப்பின் brand ambassador.

வணிகப் பொருட்களை / சேவைகளை விற்பதற்காக நியமிக்கப்படும் brand ambassador-களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களில் தோன்றுவதற்காக பெரும் பணம் வழங்குவது உண்டு. தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் தூதராக இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே ஒப்பந்தங்களும் போட்டுக் கொள்வது உண்டு.

‘என்னுடைய ஆற்றலுக்கு இந்த பானம்தான் காரணம்’ என்று டிவியில் சிரித்தவாறே சொல்லும் விளையாட்டு வீரர், அந்த பானத்தைதான் அருந்துகிறாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நமக்குப் பிடித்தமானவர் என்றால் அவர் பரிந்துரைக்கும் brand, நம்மை அறியாமலேயே நம்முடைய மனதுக்குள் நிரந்தர இடம் போட்டு அமர்ந்து விடுகிறது.

அதாவது நமக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை மற்றும் விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கும் brand-க்கு நம்மையறியாமலேயே நாம் brand loyalty கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.

அப்படியெனில், நமக்கு பரிந்துரைப்பவர்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும்? வெறுமனே காசுக்காகவோ, புகழுக்காகவோ ஒரு தப்பான தயாரிப்பையோ / சேவையையோ முன்னிறுத்தி அவர்கள் விளம்பரங்களில் நடிக்கக்கூடாதுதானே?

இது விளம்பரத்துறையின் அடிப்படை அறம் (basic ethics).

வணிகத் தயாரிப்பு / சேவைகளை விட்டுத் தள்ளுங்கள்.

விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு வருவோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆரம்பக் காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய விளம்பரங்களில் மட்டுமே இதுவரை தோன்றியிருக்கிறார். ஒருக்கட்டத்தில் விளம்பரங்களில் நடிப்பதற்காக தன்னை யாரும் அணுகவேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

அப்படிப்பட்டவர், ஒரு விளம்பரத்தில் தோன்றி, அது மக்கள் மத்தியில் பிரபலமாகி, அவரால் பெரும் விழிப்புணர்வு நம் தமிழகத்தில் ஏற்பட்டது.

ஆம்.

போலியோ தடுப்புக்காக சொட்டு மருந்து போடச்சொல்லிய ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில், தன்னுடைய தனிப்பட்ட விளம்பரக் கொள்கையை தவிர்த்துவிட்டு தோன்றினார் ரஜினிகாந்த்.

ரஜினி சொன்னதாலேயே, சொட்டு மருந்து குறித்து தயக்கம் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பாமரர்கள், தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து போடுவதற்கு கூட்டம் கூட்டமாக முன்வந்தனர். ஆச்சரியகரமான வகையில் தமிழகமெங்கும் போலியோ குறித்த விழிப்புணர்வு எல்லாத் தரப்புக்கும் வேகமாக பரவியது.

இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்காக ரஜினி, வெகுமதி எதுவும் பெறவில்லை. தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு நன்றிக்கடனாக செய்துக் கொடுத்தார்.

பொதுவாக லாபம்சாரா சேவைப்பணிகளுக்காக பிரபலங்கள் இதுபோன்ற விளம்பரங்களில் பங்கேற்கும்போது, அதை தங்களுடைய சமூகக்கடமைகளில் ஒன்றாகக் கருதியே செய்துத் தருகிறார்கள்.

ரஜினியைப் போலவே கமல்ஹாசன், வருமானவரித்துறை விளம்பரங்களில் தோன்றி வருமானவரி கட்ட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். வரி கட்டாத பணம், கருப்புப் பணமாகி விடும் என்று அந்த விளம்பரங்களில் எச்சரித்திருக்கிறார்.

மக்களுக்கு விழிப்புணர்வுத் தூதர்களாக பணியாற்றிய இந்த இருவரை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.

ஒருவேளை ரஜினி தன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் இருந்திருந்தால், கமல்ஹாசன் முறையாக வருமானவரி கணக்கு காட்டாமல் இருந்திருந்தால்.. மற்றவர்களுக்கு டிவியில் தோன்றி உபதேசம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருந்திருக்குமா?

இல்லைதானே?

அதேதான். தாங்கள் பரிந்துரைக்கும் ஒரு விஷயத்துக்கு விசுவாசமாக பிரபலங்கள் நடந்துக் கொள்வதும் brand loyaltyதான். இப்போது ரத்தன்சிங் டாட்டா, தன்னுடைய சொந்தத் தயாரிப்பு கார்களை பயன்படுத்துவதின் நியாயம் புரியவந்திருக்குமே?

சில நேரங்களில் பிரபலங்கள், தங்களுடைய இந்தக் கடமையிலிருந்து விலகி விட நேர்வதுதான் அவலம்.

சிகரெட் குடிக்கும் ஒருவரே, சிகரெட் பிடிக்காதீர் என்று விளம்பரங்களில் தோன்றி உபதேசம் செய்தால் சரியாக இருக்குமா?

இப்போது கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டை எடுத்துக் கொள்வோம்.

‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று டிவியிலும், பத்திரிகையிலும், இண்டர்நெட்டிலும் தேர்தல் கமிஷன் சார்பாக விளம்பரத் தூதராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் பெரும் சுவர் என்று வர்ணிக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

ஜனநாயகக் கடமையை பல கோடி பேருக்கு நினைவுறுத்தும் தூதராக அவர் இருப்பதற்கு காரணம் அவரது பிரபலம்தான்.

அப்படிப்பட்டவரே, இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதுதான் வேதனை.

தன்னுடைய வீட்டை மாற்றும்போது பழைய முகவரியில் இருந்த தன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து படிவம் கொடுத்து நீக்கியுள்ளார்.

ஆனால் –

புதிய முகவரியில் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் படிவத்தை அவர் பூர்த்தி செய்துத் தராததால், வாக்களியுங்கள் என்று இந்தியாவுக்கே பாடம் நடத்தும் ராகுல்திராவிட்டால் வாக்களிக்க முடியவில்லை.

இதைதான் ஊருக்கு உபதேசம் என்பது.

சொல்லைவிட செயல்தான் முக்கியம் இல்லையா?

(நன்றி : குங்குமம்)

26 ஏப்ரல், 2019

காமிக்ஸாக ‘மெகா’பாரதம்!

“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.

உலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த அறிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.
குழந்தைகளுக்கு ஏன் மகாபாரதம்?

ஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

உங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.

* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.

* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.

* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.
* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.

* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.

* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.

வாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.
“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.

அப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை,  முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் கதையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.

மகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே?

(நன்றி : தினகரன் வசந்தம்)

8 மார்ச், 2019

பெண்ணியம் : ஒரு கட்டிங்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட பிரெஞ்சு சிந்தனையாளரான ஓர் ஆண்தான்.

நாடுகள் குடியரசாக ஆகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடியதே பரந்துப்பட்ட சமூக அளவில் முதல் பெண்ணிய உரிமைக்குரல் எனலாம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கநிலை.

உலகப்போர்கள் நடந்துக் கொண்டிருந்தபோது போரில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அப்போது போரில் ஈடுபட்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பெண்களே இருந்தார்கள். அதையடுத்து போர்களுக்குப் பின்னரான காலக்கட்டமான இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் குடும்பத்தில் தொடங்கி சமூகம், நாடு, உலகம் என்று எல்லைகளை வரையறுக்காமல் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

பெண்ணியம் என்பது குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஆணுக்கு இணையான இடத்தை பெண்ணுக்கும் கோருவது என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கலுக்குப் பின்னான பெண்ணியச் சிந்தனைகள் வேறு புதிய பரிமாணங்களை எட்டியது. இதை வார்த்தைகளில் வரையறை செய்ய இயலாது. தங்கள் உடையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் தொடங்கிய, இந்த பெண்ணிய அலை இப்போது தங்கள் உடல் குறித்த அரசியலை விவாதிப்பதைக் கடந்து வேறு வேறு அதீத எல்லைகளை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடிப்படையில் ‘இது நல்லது’, ‘இது கெட்டது’ என்றெல்லாம் நிகழ்வுகள் நடக்கக்கூட சமகாலத்தில் யாராலும் துல்லியமாக கூறிவிட முடியாது. எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரம் ‘90 ml’ என்கிற பெண்ணியம் பேசும் திரைப்படம், தமிழகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

’90 ml’ என்பது ‘குடி’மகன்களுக்கு கவர்ச்சிகரமான அளவு. மதுவிடுதிகளில் “ஒரு லார்ஜ், ஒரு ஸ்மால்” என்று ஆர்டர் கொடுப்பார்களே, அந்த அளவுதான் 90 ml. நம் டாஸ்மாக் கடைகளின் அளவீடுகளின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒரு கட்டிங்’.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சரக்கு’க்காக ராத்திரி முழுக்க தெருத்தெருவாக அலையும் ஓர் ஆணின் கதை ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தலைப்பில் வெளியானது. அதே போல ஐந்து பெண்கள் கூடி சரக்கு போடும் படத்துக்கு ’90 ml’ என்று தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானதுதான்.

தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் பெண்ணியம் என்ன பாடுபடுகிறது என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் ’90 ml’ஐ காட்டலாம்.

‘ஆண் சரக்கு அடிக்கும்போது, நாங்கள் அடிக்கக் கூடாதா?’ என்று பெண்கள் கேட்டால் அது சம உரிமை கோருவது மாதிரியான நியாயமான கேள்வியாகதான் இருக்கக்கூடும்.

ஆனால் –

போதைப்பழக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவ உண்மை.

’90 ml’ படத்தில் ஐந்து பெண்கள் அவ்வப்போது சரக்கு அடிக்கிறார்கள். அந்த ஐந்துப் பெண்களில் தலைவி மாதிரி இருக்கும் ஓவியாவின் ஆண் நண்பர், சைட் டிஷ்ஷாக ஹாஃப்பாயில் போட்டுக் கொடுக்கிறார்.

இம்மாதிரி குடியும் குடித்தனமுமான கூட்டங்களில் ஓவியாவும், அவரது குழுவினரும் முழுக்க பேசிக்கொள்வது ‘டபுள் மீனிங்’ அல்ல ‘டைரக்ட் மீனிங்’ வசனங்கள். குறிப்பாக பெண்களின் உடல் அங்கங்கள் குறித்த கேலியான வருணனை, பேச்சுலர் ரூம்களில் நடபெறும் டிரிங்ஸ் பார்ட்டிகளின் எல்லையையே கூட மீறுகிறது.

பெண்கள் தனியாக பேசும்போது இப்படித்தான் பேசுவார்களா என்று இந்தக் கட்டுரையை எழுதும் ஆணுக்குத் தெரியாது. எனினும், அவ்வாறுதான் பேசுவார்கள் என்றால் பெண்களுக்குள்ளேயே ‘ஆணாதிக்கம்’ இருப்பதாகதான் எண்ண வேண்டியிருக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட லெஸ்பியன் தம்பதியினர் காட்டப்படுகிறார்கள். ‘ஓரினச்சேர்க்கை சட்டத்துக்கு விரோதமானது அல்ல’ என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் –

படம் முழுக்கவே அத்தம்பதியினர் குறித்த கேலியான பார்வையையே மற்ற பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பாலியல்ரீதியான நகைச்சுவை அவர்களை வைத்து உருவாக்கப்படுகிறது எனும்போது அம்மாதிரியான ‘முற்போக்கு’ சித்தரிப்பின் நோக்கமே பழுதுபடுகிறது.

படத்தின் மையப்பாத்திரமாக ஓவியா வருகிறார். ‘திருமணம்’ உள்ளிட்ட சமூகத்தின் எவ்விதமான கட்டுமானங்களிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாது என்கிற சுதந்திர மனப்பான்மை கொண்டவர். அவர் அவராக இருப்பது பிரச்சினையில்லை. அவருடன் பழகும் மற்றப் பெண்களையும் அவராகவே மாற்றும் முயற்சியில் அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது நெருடல். குடிக்கத் தூண்டுகிறார், கஞ்சா புகைக்க அழைத்துச் செல்கிறார், குடும்பத்தாரோடு அவரவருக்கு இருக்கும் முரண்களை தீர்க்க உறவுகளையே வெட்டிவிடும் தீர்வினைதான் முன்வைக்கிறார்.

‘அவரவர் அவரவருக்கு விருப்பப்பட்டவர்களோடு இருந்துக் கொள்ளலாம்’ என்கிற ஓவியா கொடுக்கும் பாதைதான் நம்முடைய குடும்பப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக முடியுமா?

இக்கட்டுரையை எழுதுபவர் ஓர் ஆண் என்கிற அடிப்படையில் ஓவியா முன்வைக்கும் பெண்ணிய நியாயத்தை அவரால் முழுவதுமாக உணரமுடியாமல் கூட இருக்கலாம். எனினும், இப்படம் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை சுட்டிக் காட்டுவதற்கு அவர் ஆணாக இருப்பது நிச்சயமாக தகுதிக்குறைவு அல்ல.

பெண்ணியத்தை நாம் ‘90 ml’ ஓவியாவிடம் இருந்துதான் கற்க வேண்டுமா அல்லது அன்றாடம் நாம் காணும் பூக்கட்டி விற்பது, இட்லி சுட்டு விற்பது என்று குடும்பச்சுமைகளை சுகமாக கருதி தாங்கி, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றும் அமைப்புச்சாராத் தொழில் செய்யும் விளிம்புநிலை பெண்களிடமிருந்து கற்கவேண்டுமா?

(நன்றி : குங்குமம்)

25 பிப்ரவரி, 2019

அது ஒரு கொண்டாட்டமான காலம்!


“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்”

திரையில் நம்பியாரின் ‘பஞ்ச்’ டயலாக்குக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் கவுண்டர் கொடுக்கிறார்.

மக்கள் ‘ஓ’ வென்று கத்துகிறார்கள். விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

மணல் பரப்பப்பட்ட தரையில் ஓம்பிரகாஷ் மாமாவின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனான நான் அதிர்ந்து, முழித்து எதிரே வண்ணத்திரையில் கையில் வாளோடு ஜெயலலிதாவை நோக்கி புன்னகையும், நம்பியாரை நோக்கி ஆவேசமுமாக நின்றுக் கொண்டிருந்த வாத்யாரை கண்டு எல்லோரையும் போல ஆர்ப்பரித்தேன். சண்டைக்காட்சி முடிந்தவுடன் மீண்டும் மாமாவின் மடியில் தூக்கம்.

அதிகாலை ஒரு மணிக்கு படம் முடிய ஓம் பிரகாஷ் மாமா, பாலாஜி அண்ணா, செந்தில் அண்ணா, பிரபா அண்ணா என்று அனைவரும் மாறி மாறி என்னைத் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். வழிநெடுக வாத்யாரின் வாள்வீச்சு, நம்பியாரின் நரித்தந்திரம், ஆர்.எஸ்.மனோகரின் கம்பீரமான வில்லத்தனம், ஜெயலலிதாவின் அசரடிக்கும் பேரழகு என்று பேசிக்கொண்டே வந்தார்கள். அரைத்தூக்கத்தில் அவர்களது பேச்சு கொடுத்த ஆர்வம்தான், இன்றுவரை என்னை சினிமாப் பைத்தியமாக வைத்திருக்கிறது.

என்னைப் போன்று நாற்பதைத் தொட்டுவிட்டவர்களுக்கு இதுபோல நிறைய பால்யகால நினைவுகளை டூரிங் கொட்டாய்கள் வாழ்நாள் முழுக்க விதைத்திருக்கிறது. மறக்க முடியாத இரவு. என் நாடி, நரம்பு, ரத்தம், சதையில் எல்லாம் சினிமாவை குளுகோஸாக ஏற்றிய இரவு.

பரபரப்பான சென்னை மாநகராட்சியின் அங்கமாகிவிட்ட மடிப்பாக்கத்தில் தனலட்சுமி என்றொரு டெண்டு கொட்டாய் இயங்கியது என்று சொன்னால், அங்கே வசிக்கும் இன்றைய இளையதலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். அந்த கொட்டாய் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இப்போது டிடிஎஸ், க்யூப் டிஜிட்டல் புரொஜெக்ஷன், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளோடு குமரன் என்கிற தியேட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரை டிக்கெட் 50 காசு. பெஞ்ச் 75 காசு. இரும்பு சேர் 1 ரூபாய் என்பது கட்டண விவரம். சைக்கிள் டோக்கன் 25 காசு என்று நினைவு. எட்டணாவுக்கு ருசியான ரவி சோடா ஃபேக்டரின் ஜில்லென்ற சோடா கிடைக்கும். நிறைய வெங்காயம் போட்ட சமோசா நாலணாதான். முறுக்கு, அவித்த வேர்க்கடலை எல்லாம் ரொம்ப சல்லிசான ரேட்டு. ஒரு குடும்பமே வெறும் பத்து ரூபாயில் தனலட்சுமியில் சந்தோஷமாக படம் பார்க்கலாம்.

இன்று அங்கேயே இருக்கும் குமரன் தியேட்டரில் பார்க்க வேண்டுமானால் பார்க்கிங், டிக்கெட் கட்டணம், Food & beveragesக்கு எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாயாவது மொய் வைக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய அப்பா, வெறும் பத்து ரூபாயில் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்த சந்தோஷத்தை, நான் என் குடும்பத்துக்கு நூறு மடங்கு செலவழித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வெறும் முப்பத்தைந்து ஆண்டுகளில் இப்படியொரு விலையேற்றம் வேறு எந்தத் துறையிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மடிப்பக்கத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்கவே பெரிய நகரங்களின் புறநகர், சிறுநகர், கிராமங்களில் எல்லாம் டூரிங் கொட்டாய்கள் சக்கைப்போடு போட்ட காலம் ஒன்று உண்டு. பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களோடு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று எங்கள் கால ஹீரோக்களின் படங்களையெல்லாம் நாங்கள் நூற்றுக்கணக்கில் அங்கேதான் மகிழ்ச்சியாக குடும்பமாக கண்டுகளித்தோம். வாரத்துக்கு இரண்டு படம் மாற்றுவார்கள். ஒரு பழைய படம், வார இறுதிக்கு புதிய படம் என்று காம்பினேஷன். வாரத்தில் எல்லாக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு, இரவு 9 மணிக்கு என்று இரண்டு காட்சிகள். சனி, ஞாயிறு மட்டும் மதியம் 3 மணிக்கு சிறப்பு மேட்னி காட்சி உண்டு.

சினிமாவைத் தவிர்த்தால் எங்களுக்கெல்லாம் வேறென்ன பொழுதுபோக்கு இருந்தது?

அதே மடிப்பாக்கம் தனலட்சுமி, சில ஆண்டுகள் கழித்து கீழ்க்கட்டளை என்கிற ஊரில் இயங்கியது. டெண்டு கொட்டாய்களுக்கு, மற்ற நிரந்தர அரங்குகளுக்கு தருவதைப் போல பர்மணென்ட் லைசென்ஸ் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு டெம்பரவரி லைசென்ஸ்தான் தருவார்கள். லைசென்ஸ் முடிந்தபிறகு ஏற்கனவே இயங்கிய இடத்திலோ அல்லது அருகில் வேறேதும் புதிய வசதியான இடத்திலோ மீண்டும் குடிசை போட்டு ‘புதுப்பொலிவோடு’ படம் ஓட்டுவார்கள். கடைசியாக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கட்டளை தனலட்சுமி தியேட்டரில் சிம்பு நடித்த ‘தம்’ பார்த்ததாக நினைவு. இப்போது தனலட்சுமி, அங்கே இல்லை.


‘நியூஸ் மினிட்’ ஆங்கில இணைய இதழில் வந்திருக்கும் கட்டுரை ஒன்று மீண்டும் டூரிங் கொட்டாய் நினைவுகளில் என்னை உலவச் செய்திருக்கிறது.

இப்போது டூரிங் கொட்டாய்களே தமிழகத்தில் இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலூர் மாவட்டத்தின் புத்துக்காடு என்கிற ஊரில் கடந்த 1985ல் இருந்து இன்றுவரை ‘கணேஷ் திரை அரங்கம்’ என்கிற டூரிங் கொட்டாய் சிறப்பாக நடந்து வருகிறது என்று தகவல் கொடுக்கிறது ‘நியூஸ் மினிட்’.

பி.கே.கணேசன் என்பவர், இந்திய திரையரங்கை நடத்தி வருகிறார். புத்தூர், ‘பராசக்தி’யை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளின் சொந்த ஊர். பெருமாள், உயிரோடு இருந்தவரை சிவாஜி வருடாவருடம் இந்த ஊருக்கு வருவாராம். எனவே, ஊர் முழுக்க சிவாஜி ரசிகர்கள் என்கிறார்கள்.


பெரிய திரையரங்குகளில் இடம்பெற்றிருப்பதை போல சிறப்பான வெண்திரை, கியூப் புரொஜெக்ஷன், டிடிஎஸ் ஒலியமைப்பு (7.1 சேனல்) என்றெல்லாம் இருந்தும் இன்னமும் பழமை மாறாமல் மணல் தரை வசதியோடு இந்த அரங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது.

நகரங்களில் இருக்கும் நவீன தியேட்டர்களில் வாரநாட்களில் ரசிகர்கள் இல்லாமல் அரங்கங்கள் காற்றாட, இன்னமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு படங்கள் இங்கே திரையிடப் படுகின்றனவாம். விஜய், ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்களின் படங்கள் திரையிடப்படும் போதெல்லாம் 400, 500 டிக்கெட் கூட ஒரு காட்சிக்கு விற்கப்படுவதுண்டாம். தரை டிக்கெட் 25 ரூபாய், 30 ரூபாய் சேர் டிக்கெட், 40 ரூபாய் பாக்ஸ் டிக்கெட் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

புத்தூர் ‘கணேஷ் திரை அரங்கம்’ போல தமிழகம் முழுக்க மலிவு விலையில் படம் காட்டக்கூடிய டெண்ட் கொட்டாய்கள் மீண்டும் உருவாக்கப்படுவதே, ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற திரையுலகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும். ஒவ்வொரு படத்துக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு குறைவாக கிடைத்தாலும், நிறைவாக நீண்டகாலத்துக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

திரையுலகம் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப ‘சி’ சென்டர் தியேட்டர்கள் நிறைய பெருகுவதே ஒரே வழி.


(நன்றி : குங்குமம்)

7 ஜனவரி, 2019

போதையேறிப் போச்சி…

வரலாற்றுக்கு நல்லவர், கெட்டவர் பாகுபாடெல்லாம் இல்லை. அந்தந்த காலக்கட்டத்து சம்பவங்களை அது தன்னியல்பாகவே, எதிர்காலங்களுக்கான வரலாற்றுப் பெட்டகமாக பதிவு செய்துக் கொள்கிறது. அச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை காலம் முடிவு செய்துக் கொள்ளும்.

போதை உலகின் பேரரசனாக எண்பதுகளில் உலகை அச்சுறுத்திய பாப்லோ எஸ்கோபார், நல்லவனா, கெட்டவனா?

‘நாயகன்’ படத்தின் நாயகன் வேலுநாயக்கர் சொன்னதுமாதிரி, “தெரியலியேப்பா” என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

போதை கெட்டதுதான். மனிதகுலத்தை சிந்திக்க விடாமல் செயலிழக்கச் செய்வதுதான். குறைவான போதை, அதிகமான போதை என்றெல்லாம் இதில் பாகுபாடு பிரிப்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டே.

சட்டவிரோதம் என்று அந்தக் காலத்தில் அமெரிக்கா சுட்டிக் காட்டிய எஸ்கோபாரின் செயல்பாடுகளை, பின்னாளில் அரசாங்கங்களே சட்டப்பூர்வமான வரையறைகளை செய்து நடத்திக் கொண்டிருக்கும் கூத்தை எங்கே போய் அடித்துக் கொள்வது?

அரசாங்கமே மது விற்கிற மாநிலத்தில் இருந்துக்கொண்டு, பாப்லோ எஸ்கோபாரை கெட்டவன் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திட முடியவில்லை.

உலகப்போர்கள், மனிதக்குலத்தின் சாபக்கேடு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் உலகப்போரும் சரி, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடந்த இரண்டாம் உலகப்போரும் சரி. இன்றுவரையில் அவற்றுக்கு தொடர்பே இல்லாத மனிதர்களிடம்கூட அவர்களே அறியாதவகையில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும்கூட அந்த தாக்கம் இருக்கத்தான் போகிறது.

குறிப்பாக இரண்டாம் உலகப்போரை சொல்லலாம். அந்தப் போரின் இறுதியில் பெரும்பாலும் அரசர்கள் இல்லாமல் போனார்கள். பல நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்தது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டுமென மக்களே முடிவெடுக்கக்கூடிய சுதந்திரம் கிடைத்தது என்றெல்லாம் ஆயிரத்துச் சொச்சம் நற்பலன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இதே அளவுக்கு எதிர்பலன்களும் உண்டு என்பதுதான் கொடுமை.

போதை என்பது மனிதன் தோன்றிய நாளிலிருந்தே இருந்துக்கொண்டுதான் இருந்தது. மறுக்கவில்லை.

ஆனால் –

அபரிதமான வளம் கொழிக்கும் போதைத்தொழில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்தான் கார்ப்பரேட் வழிமுறைக்கு வந்தது. உண்மையைச் சொல்லப்போனால் மற்றத் தொழில்கள் கார்ப்பரேட்மயமாவதற்கு ஒருவகையில் வழிகாட்டியதே போதைத்தொழில்தான். அதில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித்துறையை (R & D) எல்லாம் உருவாக்கி கச்சிதமாக தொழில் செய்தவர் பாப்லோ எஸ்கோபார்.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கெல்லாம் பின்னணியில் நிச்சயம் பெரிய தலைகள் இருப்பார்கள் என்பதை நாம் புதியதாக உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

அமெரிக்காவும், ரஷ்யாவும் குடுமிப்பிடிச்சண்டை போட்ட பனிப்போர் காலக்கட்டத்தில் அரசியல் நிலையற்ற நாடுகளில் ஏராளமான புரட்சிகர குறுங்குழுக்கள் தோன்றின. இவை இந்த பெரும் வல்லரசுகளின் ஜால்ராவுக்கு ஏற்றமாதிரி தாளம் தட்டின.

ஒருக்கட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் சில ஒப்பந்தங்களுக்கு உடன்படும் போதெல்லாம் அவர்கள் உருவாக்கிய குழுக்களை அப்படியே அனாதையாக விட்டன. இவர்களை நம்பி தொழிலுக்கு வந்தவர்கள், சொந்த அரசுகளை பகைத்துக்கொண்டு அமைப்பை தொடர்ந்து நடத்தமுடியாமல் கைவிட்டார்கள். அல்லது சட்டத்துக்கு விரோதமான தொழில்களில் இறங்கி, தங்கள் இலட்சியத் தாகத்தை கைவிட்டு சமூகவிரோதிகள் ஆனார்கள்.

அவ்வகையில் தென்னமெரிக்க நாடுகளில் கலகக்காரர்களில் கணிசமான பகுதியினர் பின்னாளில் போதைத்தொழில் செய்யத் தலைப்பட்டனர். அமெரிக்காவின் ஒரு தலைமுறையையே போதையால் சீரழித்தனர். ஒருகாலத்தில் தங்களுக்கு அல்லக்கையாக இருந்தவர்களே, தங்கள் நாட்டை சூறையாடத் தொடங்கிவிட்டனரே என்கிற கோபத்தில் அமெரிக்கா துப்பாக்கியை தூக்கியது. சிலர் அடங்கிப் போனார்கள். சிலர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் மாவீரர்களாக தங்களை கட்டமைத்துக் கொண்டார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் பாப்லோ எஸ்கோபாரை நாம் கவனிக்க வேண்டும். அவர், முக்கியத்துவம் பெறுவதும் இந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால்தான்.

தினகரன் குழுமத்தில் நான் பணிக்குச் சேர்ந்த சமயத்தில், வெவ்வேறு விதமான பணிகளை செய்ய என்னை பணிப்பார் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். அவர்கள். இதையெல்லாம் நமக்கு ஏன் கொடுக்கிறார் என்று நான் குழம்பியதுண்டு. பின்னாளில் எனக்கு சில பெரிய பொறுப்புகளை கொடுப்பதற்கான பயிற்சியாகதான் அவற்றையெல்லாம் தந்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளன், எல்லாத்துறை குறித்த அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

திடீரென ஒருநாள், “பாப்லோ எஸ்கோபார் பற்றி, ‘குங்குமம்’ வார இதழில் ஒரு தொடர் எழுது” என்று பணித்தார்.

“கொலம்பியா பற்றியோ, பாப்லோ எஸ்கோபார் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாதே?” என்று தயங்கினேன்.

“அதெல்லாம் தெரியாது. நீதான் எழுதுகிறாய்..” என்று சொல்லி பார்க்கவேண்டிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வாசிக்க வேண்டிய நூல்கள் ஆகியவற்றை அவரே எடுத்துச் சொன்னார்.

தொடர் எழுதுவதற்கு நான் தயாராவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அன்றிலிருந்து எஸ்கோபாருக்குள் மூழ்கினேன். stockholm syndrome என்பார்களே, அந்தப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டேன். அந்நாட்களில் பாப்லோ, எனக்கும் காட்ஃபாதர் ஆகிவிட்டார். அவருக்கு வெறித்தனமான ரசிகன் ஆகிப்போனேன். மூன்றே மாதங்களில் தயாராகி எம்.டி.யிடம், “ஆரம்பிக்கிறேன் சார்” என்றேன்.

பெரிய எழுத்தாளர்களுக்கு செய்வதைப் போல தமிழகமெங்கும் சினிமாப் படங்களுக்கு ஒட்டுவதை போல ‘காட்ஃபாதர் : போதை உலகின் பேரரசன்’ தொடரின் அறிவிப்புக்கு பிரும்மாண்டமான போஸ்டரெல்லாம் ஒட்டி, இந்த எளியப் பத்திரிகையாளனை கவுரவப் படுத்தினார் எங்கள் எம்.டி. அவருக்கு வெறுமனே நன்றி சொல்லியெல்லாம் நன்றிக்கடனை தீர்த்துவிட முடியாது.

ஏற்கனவே சில தொடர்களை பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் –

‘காட்ஃபாதர்’ ஸ்பெஷல். ஏனெனில் 70 வாரங்களுக்கு நீளக்கூடிய மெகாத்தொடரை என்னாலும் எழுதமுடியும் என்று என்னை நானே எனக்கு நிரூபித்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இது வழங்கியது.

தொடரின் முதல் அத்தியாயத்தில் தொடங்கி, கடைசி அத்தியாயம் வரை எனக்கு ஊக்கமும், தொடருக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதிலும் உற்றத்துணையாக இருந்தவர் ‘குங்குமம்’ வாரஇதழின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன். இத்தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதற்கு எழுத்து மட்டுமல்ல, அண்ணன் அரஸ் அவர்களுடைய உயிரோட்டமான ஓவியங்களும் காரணம். பல வாரங்கள் அவருடைய ஓவியத்தை பார்த்துவிட்டுதான் அந்தந்த வாரத்துக்கான அத்தியாயங்களையே எழுதுவேன். அன்பான அண்ணன்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லப்போவதில்லை. தம்பிக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை இது.

தொடராக வந்தபோது வாராவாரம் ‘குங்குமம்’ இதழில், அயல்நாட்டுப் பத்திரிகைத் தொடர்களுக்கு இணையாக அழகுசெய்த அண்ணன் வேதா அவர்களின் வடிவமைப்புக் குழுவினருக்கு நன்றி சொல்ல இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

‘குங்குமம்’ இதழில் வாராவாரம் வாசித்தவர்களுக்கு, ஒட்டுமொத்த நூலாக வாசிக்கும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். முதன்முறையாக இப்போது நூலாகதான் வாசிக்கப் போகிறீர்கள் என்றால் ஜெட் வேக பயணத்துக்குத் தயாராகுங்கள்.

Happy reading!

இந்நூலை என்னுடைய காட்ஃபாதர், எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

5 ஜனவரி, 2019

சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?

“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”

உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?

முடியும்.

‘ஈ’யை வைத்தே ராஜமவுலி எடுத்திருக்கிறார். நரியை வைத்து நாம் எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?

சினிமாவுக்கு அது போதும்.

இதுமாதிரி கதையை எழுததான் இந்த நூலில் கற்றுக்கொள்ளப் போகிறோம். “இதை எழுதும் நீ எத்தனை படங்களுக்கு கதை எழுதியிருக்கிறாய், உன்னுடைய தகுதி என்ன?” என்கிற நியாயமான கேள்வியை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். அதற்கான முழுத்தகுதியும், உரிமையும் உங்களுக்கு உண்டு.

இதுவரை எந்தப் படத்துக்கும் நான் கதை எழுதியதில்லை. அதே நேரம், நான் எழுதி எந்தப் படமும் படுதோல்வி அடைந்ததில்லை என்று பாசிட்டிவ்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுதத் தெரிந்ததால் எழுதுகிறேன். வாசிக்கத் தெரிந்ததால் வாசிக்கிறீர்கள். எழுத்தோ, வாசிப்போ ஒன்றில் மற்றொன்று உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ‘சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?’ என்கிற சூத்திரத்தை நாம் இருவரும் இணைந்தேதான் கற்றுக்கொள்ளப் போகிறோம். வகுப்பறையில் உங்களோடு பெஞ்சில் அருகே அமர்ந்திருக்கும் மாணவன்தான் நானும்.

அப்படியெனில் ஆசிரியர்?

1906ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’கில் தொடங்கி, போன வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களின் கதாசிரியர்கள் வரை நமக்கு லட்சக்கணக்கிலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நாம் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொள்ளப் போகிறோம்.

உலகின் முதல் முழுநீளப் படத்தின் கதை ஏதேனும் சரித்திரக் கதையாகதான் இருக்குமென்று நீங்கள் கருதலாம். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி அதுவொரு போலிஸ் படமென்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும்.

1906ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான அந்த திரைப்படம் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய பவுண்டுகளை பட்ஜெட்டாக கொண்டு எடுக்கப்பட்டு, இருபத்தையாயிரம் பவுண்டுகளை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.

நெட்கெல்லி என்கிற கேங்ஸ்டர் அந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலம். அவனும் அவனுடைய குழுவினரும் செய்யாத அட்டூழியங்களே இல்லை. பிற்பாடு அவன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அவனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாடகமே, சினிமாவாக ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’ என்று எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தமே ஆறு காட்சிகள்தான். வன்முறையாளர்களை ஒடுக்க போலிஸ் திட்டமிடும் காட்சியில் தொடங்கும் படம், கிளைமேக்ஸில் நெட்கெல்லியோடு சண்டை நடந்து அவனை காலில் சுட்டு கைது செய்வதோடு முடிவடைகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட இந்த மவுனப்படம், பின்னர் நியூஸிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என்று நாடு விட்டு நாடு பயணித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இந்தப் படம் வெளிவரும் வரை சினிமா என்பது கதை சொல்லும் ஊடகமாக இருந்தது இல்லை. டிரெயின் ஓடுவது, குதிரைப் பந்தயம் மாதிரி துண்டுக் காட்சிகளையும் நியூஸ் ரீல்களையும் வைத்து அதுவரை ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்தை போலவே சினிமாவிலும் கதை சொல்லலாம். செமத்தியாக கல்லா கட்டலாம் என்பதை கண்டறிந்தார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகமாகவும் உருவெடுத்தது அப்போதுதான்.

அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே தாதாசாகேப் பால்கே தயாரித்து, இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது. இதிகாசங்கள், புராணங்கள் என்று பல நூற்றாண்டுகள் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த இந்தியர்கள் வெகுவிரைவிலேயே சினிமாவுக்கு அடிமை ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியப் பாரம்பரியப் பெருமையை சினிமாவில் கதையாக சொல்லியே வெள்ளையர்களின் அடிமைத்தளையை உடைக்கவும் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறு.

இந்த கதையை எல்லாம் ஏன் உங்களுக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இதுமாதிரி நாம் நிறைய கதைவிட கத்துக்கணும். சினிமாவில் கதை எழுத இந்த ‘கதைவிடுற’ பண்புதான் அடிப்படை தகுதியே.

- ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து...